 |
ஞாநி
அறிந்தும் அறியாமலும்..! (17)
நடைமுறையில் பல இளைஞர்கள் முதலில் வரையக் கற்றுக் கொள்வதே பிறப்புறுப்புகளின் ‘ஆபாச’ படங்களைத்தான். பள்ளிகள், கல்லூரி, பஸ் நிலைய, ரயில் பெட்டிக் கழிப்பறைகளில் காணப்படும் கிறுக்கல் படங்களே இதற்கு சாட்சி! ஏன் நடக்கிறது இந்தத் தவறு?
பேசத் தெரிந்துவிட்ட குழந்தையிடம் இது கண், இது காது, இது மூக்கு என்று சொல்லித் தருகிறோம். குழந்தை தானே கண்ணாடி முன் போய் நின்றுகொண்டு தன் கண், காது, மூக்கு, உதடு, நெற்றி, முகவாய் என எல்லாவற்றையும் பார்த்துக்கொள்கிறது. ஆனால், தன் முதுகை குழந்தையால் மட்டுமல்ல, யாராலும் கண்ணாடியில் பார்த்துக்கொள்ள முடியாது.
முடி திருத்தகங்களில் எல்லாப் பக்கமும் கண்ணாடி வைத்திருப்பார்கள். தலையின் பின் பக்கம் எப்படி முடி வெட்டப்பட்டிருக்கிறது என்பதை முன்னும் பின்னுமாக உள்ள அந்தக் கண்ணாடிகள் வழியே பார்த்துத் தெரிந்துகொள்ள முடியும். அதில் முதுகையும் பார்க்கலாம்.
இதே போலத்தான், உடலின் இன்னும் சில பாகங்களை முழுமையாக அறிய கண்ணாடி தேவை.
தோள் இடுக்கான அக்குள் பகுதியில் எரிச்சலோ நமைச்சலோ இருந்தால், அக்குள் பகுதியை நேராகப் பார்ப்பதைவிட அதனருகே கண்ணாடி வைத்துப் பார்த்தால் தான், ஏதேனும் சிறு கொப்புளம் இருந்தாலும்கூட அறிய முடியும்.
அதுபோலத்தான் ஆணுறுப்பு, பெண்ணுறுப்பு போன்றவையும்! கண்ணாடி கொண்டு பார்க்கும் போதுதான் அதை முழுமையாகத் தெரிந்துகொள்ள முடியும். இதை ஒன்பது, பத்து வயதிலேயே குழந்தைக்குக் கற்றுத் தரலாம். சிறுவனோ சிறுமியோ தான் மட்டும் தனியே இருக்கக் கூடிய ஓர் அறையில் உடைகளைக் களைந்துவிட்டுத் தரையில் உட்கார்ந்து, கால்களுக்கு இடையே கண்ணாடியை நிறுத்தி, தன் பிறப்புறுப்பு எப்படி இருக்கிறது என்று பார்க்க வேண்டும்.
தொப்புளுக்குக் கீழே இரு கால்கள் இணையும் பகுதியில் தொடை இடுக்குகள் வரை முடி முளைத்திருக்கிறது. அவற்றின் ஊடே, இருபுறமும் விரைப் பைகள் தொங்க, நடுவே லிங்கம்/குஞ்சு எனப்படும் குழாய்ப் பகுதி நீள்கிறது.
லிங்கத்தின் மேல் தோல் நுனியிலிருந்து சுருட்டினால் ஓரளவு சுருங்குகிறது. அதற்கு மேல் அது ஏன் சுருங்குவதில்லை என்று அறிய, கண்ணாடியை லிங்கத்தின் கீழ்ப்புறம் கொண்டுபோய்ப் பார்த்தால் புரியும். கீழ்ப்பகுதியில் ஓரளவுக்குமேல் தோல் பிரிய முடியாதபடி உடலுடன் இணைந்திருப்பது தெரியும். அதற்கும் மேல் தோலை இழுத்தால் வலிக்கும். காயம்கூட ஏற்படலாம்.
குளிக்கும்போது முன் தோலைநீக்கி எதுவரை சுத்தம் செய்ய வேண்டும் என்பது இப்போது புரிந்துவிடும். முன்தோலின் அடிப்பகுதி சுத்தம் செய்யப்படாமல் அழுக்கு சேர்ந்திருந்தால், தோலைப் பிரிப்பதே சிரமமாகி வலியை ஏற்படுத்தும். தொற்றுக் கிருமிகளால் நோய் உண்டாகும்.
விரைப்பைகள் வெளிப்புற தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப சுருங்கியோ, விரிந்தோ காணப்படுகின்றன. விரைப் பையை விரல்களால் உருட்டிப் பார்த்தால், உள்ளே விரைக் கொட்டை இருப்பதை உணரலாம். ஓடற்ற ஒரு கோழி முட்டையை உருட்டிப் பார்த்தது போல் இருக்கும். அதைச் சுற்றிலும் உட்புறம் இருக்கும் தசைகளில் ஏதேனும் கட்டிகள் இருந்தால், அதுவும் விரல்களுக்குப் புலப்படும். அப்படி எதுவும் தெரிந்தால் உடனடியாக மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும்.
கண்ணாடியின் உதவியுடன் தன்பிறப்புறுப்பைப் பார்க்கும் சிறுமி காண்பது என்ன?
அடிவயிற்றுக்குக் கீழே இரு தொடைகள் சேரும் பகுதியை நிதம்ப மேடு என்று தமிழிலும், ‘மவுன்ட் ஆஃப் வீனஸ்’ என்று ஆங்கிலத்திலும் சொல்கிறார்கள். இதற்குக் கீழே நெடுக்குவாட்டில் சில ஜோடி அடுக்குகளுடன் புறயோனி காட்சி தருகிறது. இதைச் சங்க இலக்கியம் மொத்தமாக ‘அல்குல்’ என்கிறது.
வெளிப்புறமாக இரு பக்கமும் பெரு உதடுகள் எனப்படும் ‘லேபியா மஜோரா’ உள்ளன. இந்த இரு பெரு உதடுகள் தொடங்கும் இடத்தில்மேற்புறத்தில் உள்ளே சிறு முத்து போல இருப்பது ‘கிளிட்டோரிஸ்’ எனப்படும் கந்து. இதன் இருபுறமும் உட்புறமாக கீழ் நோக்கிச் செல்பவை ‘சிறு உதடுகள்’ எனப்படும் ‘லேபியா மைனோரா’. இவற்றின் உள்ளே மேற்புறமாக சிறுநீர்த் துவாரமும், அதற்குச் சற்றுக் கீழே கருப்பைக்குச் செல்லும் யோனிக் குழாயின் வாசல் துவாரமும் உள்ளன.
யோனித் துவாரத்தை மூடிய சிறு படலமாக இருப்பது, கன்னித் திரை எனப்படும் ஹைமன். உடல் உறவின் போதுதான் இது கிழியும் என்றும், எனவே அது கிழிந்திருந்தால் அந்தப் பெண் கன்னித் தன்மையை இழந்தவள் என்றும் நம்பிய மரபுகள் உண்டு. முதல் இரவின்போது ஹைமன் கிழிந்து கசிந்த ரத்தம் படுக்கை விரிப்பில் இருந்தால்தான், அந்தப் பெண் ‘வர்ஜின்’ என்று கருதப்பட்ட காலமும் உண்டு.
ஆனால், அறிவியல் உண்மைகள் இதை நிராகரித்துவிட்டன. சைக்கிள் ஓட்டுவது முதல் ஓடிப் பிடித்து கிளித் தட்டு ஆடுவது வரை பல காரணங்களால் ‘ஹைமன்’ கிழியக்கூடும்.
யோனிப் பகுதி முழுவதும் பொதுவாக ஈரப்பசை இருக்கும். சிறுநீர் கழித்தபின் ஒழுங்காகக் கழுவி சுத்தம் செய்தாலும்கூட, இயல்பாகவே யோனிக் குழாயில் சுரக்கும் திரவத்தால் யோனிப் பகுதி முழுவதும் ஈரப்பசையாக இருக்கும். காம உணர்ச்சி ஏற்படும் போது சுரப்புகள் அதிகமாவதால், ஈரப்பசை அதிகரிக்கும்.
தன் யோனிப் பகுதியை தானே சோதித்துப் பார்க்கும் சிறுமி கவனிக்க வேண்டிய முக்கியமான அம்சங்கள் என்ன? புதிதாக ஏதேனும் மரு, மச்சம், கொப்புளம், சிறு வளர்ச்சி உருவாகியிருக்கிறதா? வழக்கமான நிறம் இல்லாமல் ஏதேனும் ஒரு பகுதியில் வெள்ளை, சிவப்பு நிறத்தில் தோல் நிற மாற்றம் அடைந்திருக்கிறதா? கட்டிகள், காயங்கள், புண்கள், எரிச்சல்கள், நமைச்சல்கள் ஏதேனும் உள்ளனவா? இவற்றைச் சோதித்து, தேவைப்பட்டால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.
கண்ணாடியில் பார்த்த தங்கள் உடல் உறுப்பை தானே பின்னர் காகிதத்தில் வரைந்தும் பார்க்கலாம். உடல் உறுப்பின் படம் ஆபாசமானது என்ற மன நிலையிலிருந்து விடுபட, இது மிகவும் அவசியம்.
செக்ஸைப் பற்றிக் கற்றுத் தரப்போவது யார்? பெற்றோரா, பள்ளிக்கூடமா? தொடர்ந்து இது சர்ச்சையில்தான் நம் சமூகத்தில் இருக்கிறது. இதற்கான அடிப்படைக் காரணம், செக்ஸ் எஜு கேஷன் என்பதை கொச்சையாகவும் தவறாகவும் புரிந்து வைத்திருப்பதுதான். செக்ஸ் எஜுகேஷன் என்றால், வகுப்பறையில் ஆணும் பெண்ணும் உடல் உறவுகொள்வதைச் செய்து காட்டி, இப்படித்தான் செய்ய வேண்டும் என்று சொல்லிக் கொடுப்பதுபோல ஒரு தவறான, விஷமமான பிரசாரம் எப்போதும் நடக்கிறது.
இப்படிப்பட்ட சூழலில், நாம் செக்ஸ் பற்றிக் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்துவது, முன்பே நாம் குறிப்பிட்டது போல உடலுறவு பற்றியல்ல. உடல் பற்றியும், உறவுகளைப் பற்றியுமே!
அவரவர் உடல்களைப் புரிந்துகொள்ளவும், அவரவர் உறவுகளைப் பற்றிப் புரிந்துகொள்ளவும் நம் குழந்தைகள் கற்றுக்கொண்டால்தான், நாளைய வாழ்க்கையில் அவர்க-ளுடைய உடலுறவு களும் ஆரோக்கியமாக இருக்கும்.
இந்தப் பொறுப்பை பெற்றோர், பள்ளிக்கூடம் இருவரும்தான் செய்ய வேண்டும். பல பெற்றோர்களுக்கு இது பற்றிய விருப்பம் இருந்தாலும், மனத் தடைகள் உள்ளன. அவற்றைக் கடக்க வேண்டும். அதற்கு முதலில் ஒவ்வொருவரும் ‘நான் எப்படிப்பட்ட பெற்றோர்’ என்று தன்னைப் பற்றித் தானே ஒரு முடிவுக்கு வர வேண்டும்.
நம்மை நாமே சில கேள்விகள் கேட்டுக்கொண்டு, அவற்றுக்கு நேர்மையான பதில்களையும் சொல்லிக்கொள்வோமா?
இந்த வார ஹோம் வொர்க்:
பொது:
1. முகம், பின் தலை, முதுகு தவிர வேறு உடல் பாகத்தைப் பார்க்கக் கண்ணாடியைப் பயன்படுத்தியது உண்டா?
2.கழிவறை சுவர் கிறுக்கல்களைப் பார்க்கும்போது என்ன தோன்றும்? நீங்களும் அப்படிக் கிறுக்கியதுண்டா?
ஆண்களுக்கு:
1. விரைப் பையைத் தொட்டுப் பார்த்து வீக்கமாக இருப்பதாக அறிந்து, மருத்துவரைச் சந்தித்த அனுபவம் உண்டா ?
2. அன்றாடம் குளிக்கும்போது லிங்கத்தின் மேல் தோலை நீக்கிச் சுத்தம் செய்யும் வழக்கம் உண்டா?
பெண்களுக்கு:
1. கன்னித் திரை கிழிந்திருந்தால், நாளைக்குத் திருமண வாழ்க்கையே சிக்கலாகிவிடும் என்று உங்களிடமோ உங்கள் சிநேகிதிகளிடமோ யாராவது சொல்லியிருக்கிறார்களா?
2. யோனிப் பகுதியின் பல்வேறு பாகங்களை முதன்முதலில் எப்போது நீங்களே பார்த்துத் தெரிந்து கொண்டீர்கள்?
பதில்கள் மற்றவர்களுக்காக அல்ல; உங்களுக்கானவை... உங்களுடையவை!
|