ஆர்எஸ்எஸ் - பாஜக பரிவாரத்தினால் 400 ஆண்டு கால பழமைமிக்க பாபர் மசூதி இடித்து தரைமட்டமாக்கப்பட்டு ஆயிற்று ஆண்டுகள் பதினேழு. இடதுசாரி கட்சிகளின் ஆதரவுடன் செயல்பட்டு வந்த வி.பி.சிங் தலைமையிலான தேசிய முன்னணி அரசு பிற்படுத்தப்பட்டோருக்கு மத்திய அரசு நிறுவனங்களில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கான மண்டல் குழு பரிந்துரையை செயல்படுத்த முயன்ற போது அதை திசை திருப்புவதற்காக பாபர் மசூதியை இடித்து அந்த இடத்தில் ராமர்கோவில் கட்டபோவதாக புறப்பட்டனர் 'மனு'வின் வாரிசுகள். ரதயாத்திரை என்ற பெயரில் நாடு முழுவதும் ரத்தக் களிறியை ஏற்படுத்தினர்.பாபர்மசூதியை இடிக்க அவர்கள் தேர்வு செய்த நாள் டிசம்பர் 6. இந்திய சமூக நீதி வானில் மங்கா ஒளி வீசும் டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கரின் நினைவுநாள் அது. சமூக நீதி போராட்டத்தை பின்னுக்கு தள்ள மதவெறி அரசியலை அவர்கள் முன்வைப்பதற்கான முன்னோட்டமாக இது அமைந்தது.







