வரலாறு எம்மைச் சுற்றி தன்னை நிகழ்த்திக் கொண்டேயிருக்கிறது. அலையலையாய்ப் படிவுண்ட அதன் பக்கங்களுக்குள் ஒரு மீள முடியாத் துயரத்தின் சாட்சியாய் நாம் விசனித்திருக்கிறோம். ஒரு தேசம் தூர்ந்துகொண்டிருக்கிறது, எமதனைவரின் கனவுகளினூடு. தொடர்ந்தும் வரலாறு இந்தத் தருணத்தை எழுதிக்கொண்டிருக்கிறது. நாமனைவரும் எழுதிக்கொண்டிருக்கிறோம். இணையத்தின் மின்னதிர்வுகளின் வழி, பத்திரிகைகள், சஞ்சிகைகள், வானலைகள், தொலைக்காட்சிகளினூடு: சரி, பிழைகள் அலசப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஏமாற்றம், தோல்வி, கோபம், சந்தோஷம், கெக்கலிப்பு எல்லாவிதமான உணர்வுகளும் அரசியல் ஆய்வுகளினூடு வெளிப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இன்னும் சொல்வதற்கு ஏதேனும் மீதமிருக்கிறதா என்ன? அரசியற் கட்டுரைகள் ஒரு மர்மத்தைத் துப்பறியும் ஆர்வத்துடனும், சுவாரசியத்துடனும் இந்த வீழ்ச்சியை ஆராய்கின்றன, சம்பவங்களை பட்டியலிடுகின்றன. இறந்து, தொலைந்து போனவர்கள், காயப்பட்டவர்கள் முகாம்களிலிருப்பவர்களைக் கணக்கிடுகின்றன. துப்பறியும் தொடரொன்றின் தவிர்க்க முடியா வாசகர்கள் போல பிறிதனைவரும் படபடப்புடன் பின்தொடர்கின்றனர். இதொரு தீவிர நம்பிக்கையின் வீழ்ச்சி; எங்களுக்கானதொரு தேசம் பற்றிய கனவொன்று எங்கள் முன் கலைந்து கொண்டிருக்கிறது. வரலாறு அதன் மர்மங்களுடன் எப்போதும் போல கடந்து கொண்டிருக்கிறது மிக மிக அமைதியாக எந்த ஆர்ப்பாட்டமுமில்லாமல்.