இந்தியாவை பொருத்தவரை அக்குபஞ்சர் மருத்துவம் நீண்ட காலமாக பயன்பாட்டில் இருந்து வருகிறது. எனினும் 2003 நவம்பர் 25ம் தேதி இந்திய அரசின் மக்கள் நல்வாழ்வு அமைச்சக ஆராய்ச்சிப் பிரிவிலிருந்து வெளிவந்த அரசாணை (எண் 14015 / 25 / 96 U & H (R). (Pt.)) தான் அக்குபஞ்சருக்கான சட்டத்தகுதியை வழங்குகிறது. இந்தத் தகுதியே கூட வேடிக்கையாக விளைந்த ஒன்று. அந்த கதையை சற்று விரிவாகப் பார்ப்போம்.
இந்திய அரசின் பார்வையில் மருத்துவங்களை வரையறுப்பதற்கு நாடாளுமன்றத்தில் சட்டங்கள் உள்ளன. இப்படி உருவான சட்டங்கள் ஆங்கில மருத்துவத்துக்கு The Indian medical degree act 1916, The Indian medical council act 1956t ஆகியன உள்ளன. ஹோமியயோபதி மருத்துவத்திற்கு The Indian Homeopathy Central council act 1973 உள்ளது. அதுபோல சித்தா, ஆயுர்வேதம், யுனானி ஆகிய மூன்று மருத்துவங்களுக்கு Indian Medicine Central act 1970 இயற்றப்பட்டுள்ளது. இந்த ஐந்து மருத்துவங்கள் நீங்கலாக மற்ற மருத்துவங்களை இந்திய அரசு சட்டபூர்வாமாக ஏற்கவுமுல்லை நிராகரிக்கவுமில்லை எனும் நிலை இருந்த காலத்தில் 1980களில் சுவாரசியமான வழக்கென்று கொல்கத்தா உயர் நீதிமன்றத்திற்கு வந்தது.





