கீற்றில் தேட...
அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: சுற்றுச்சூழல்
கடந்த இருபது ஆண்டுகளில் அதி தீவிர காலநிலை ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 16 மில்லியன் டாலர் இழப்பை ஏற்படுத்தியுள்ளது என்று புதிய ஆய்வுகள் கூறுகின்றன. சமீப பத்தாண்டுகளில் புயல்கள், வெள்ளப்பெருக்கு, வெப்ப அலைத் தாக்குதல்கள், வறட்சி ஆகியவற்றால் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர்; உடைமைகளுக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.
மனித செயல்களால் உருவாகியுள்ள புவி வெப்ப உயர்வு ஏற்படுத்தும் சேதங்களைப் பற்றிய முதல் உலகளாவிய ஆய்வு இது. 2000 முதல் 2019 வரையுள்ள காலத்தில் மட்டும் சராசரியாக ஆண்டுக்கு 140 பில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளது. சேத மதிப்பு ஆண்டிற்கு ஆண்டு வேறுபடுகிறது. 2022ல் மட்டும் இதனால் 280 பில்லியன் டாலர் சேதம் ஏற்பட்டுள்ளது என்று சமீபத்திய தரவு விவரங்களில் இருந்து தெரிய வந்துள்ளது.
வருமானம் குறைந்த நாடுகளில்
வருமானம் குறைந்த நாடுகளில் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் சேதம் பற்றி மிகக் குறைவாகவே மதிப்பிடப்படுகிறது. தரவு விவரங்கள் குறைவாகவே உள்ளன. வெப்ப உயர்வினால் ஏற்படும் பயிர் இழப்பு, கடல் நீர் மட்ட உயர்வு போன்றவை இத்தகைய விவரங்களில் சேர்க்கப்படுவதில்லை. இழப்பு குறித்த பொருளாதார தரவுகளை அதி தீவிர காலநிலை சம்பவங்கள் புவி வெப்ப உயர்வை எந்த அளவு மோசமாகப் பாதிக்கிறது என்பது பற்றிய விவரங்களுடன் இணைத்து ஆய்வாளர்கள் ஆராய்ந்தனர்.கடந்த இருபது ஆண்டுகளில் மட்டும் காலநிலை மாற்றத்தால் உண்டாகும் அதி தீவிர வானிலையால் 1.2 பில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்றில் இரண்டு பகுதி உயிரிழப்புகள், மற்றொரு பகுதி சொத்துகள் இழப்பு மற்றும் பொருட்சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
ஹார்வி (Harvey) மற்றும் நார்கிஸ் (Nargis) சுழற்காற்று காலநிலை சேதங்களில் மூன்றில் இரண்டு பங்கு இழப்பிற்குக் காரணமாக இருந்தன.
இழப்பிற்கு காரணமான பேரிடர்கள்
16% சேதம் வெப்ப அலைத் தாக்குதல்கள், 10% இழப்புகள் வெள்ளப்பெருக்கு மற்றும் வறட்சியால் ஏற்பட்டன. ஐநாவின் சார்பில் 2022ல் நடந்த காலநிலை மாநாட்டில் ஒப்புக்கொள்ளப்பட்ட சேதம் மற்றும் இழப்பீட்டு உடன்படிக்கையின்படி ஏழை நாடுகளுக்கு வழங்கப்பட வேண்டிய நிதியுதவியைக் கணக்கிட, காலநிலை பாதிப்பால் ஏற்பட்டுள்ள தனிநபர் இழப்பை மதிப்பிட, நிதியுதவியின் விநியோகம் போன்றவற்றில் இந்த ஆய்வு உதவும் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
“தரவு விவரங்களை விட நிலைப்படுத்தப்பட்ட கணினி மாதிரி கணிப்புகள் பாதிப்புகளை குறைவாகவே மதிப்பிடுகின்றன. தீவிர காலநிலை சம்பவங்கள் ஏராளமாக நடக்கின்றன. இவற்றால் கொல்லப்பட்டவர்கள், பொருளாதாரச் சேதங்கள் பற்றிய தரவுகள் போதுமான அளவு இல்லை. இதனால் 16 மில்லியன் டாலர் இழப்பு என்பது குறைவான மதிப்பு. ஐரோப்பாவில் ஏற்பட்ட வெப்ப அலைத் தாக்குதல் குறித்த தரவுகள் மட்டுமே முழுமையாக உள்ளன. சஹாரா துணைக்கண்டத்தில் பேரிடரால் உயிரிழந்தவர்களைப் பற்றி விவரங்கள் இல்லை” என்று சக ஆய்வாளர் ரெபெக்கா நியூமேனுடன் (Rebecca Newman) இணைந்து இந்த ஆய்வை நடத்திய நியூசிலாந்து வெலிங்டன் விக்டோரியா பல்களைக்கழக ஆய்வாளர் மற்றும் ஆய்வுக்குழுவின் தலைவர் பேராசிரியர் இலான் நய் (Illan Noy) கூறுகிறார்.
ஏழு மடங்கு உயர்வு
1970களுக்குப் பிறகு மோசமான வானிலையால் உண்டான இழப்புகள் ஏழு மடங்கு அதிகரித்துள்ளது என்று உலக வானிலை ஆய்வு நிறுவனம் (WMO) கூறுகிறது. புவி வெப்ப உயர்வுடன் ஒப்பிடும்போது மக்கட்தொகைப் பெருக்கம், நகரங்களை நோக்கிய இடம்பெயர்வு, செய்தி வெளியிடுதலில் உண்மைத் தன்மை போன்றவற்றால் இழப்பின் அளவு மாறும் என்று நேச்சர் கம்யூனிகேஷன்ஸ் (Journal Nature Communications) ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ள இது பற்றிய ஆய்வுக்கட்டுரை கூறுகிறது.
மோசமான சூழல் பேரிடர்களை புவி வெப்ப உயர்வு எவ்வாறு அடிக்கடி ஏற்படுத்துகிறது என்பது பற்றி நூற்றுக்கணக்கான பல சிறிய ஆய்வுகள் நடந்துள்ளன. இது மனித செயல்கள் மூலம் உருவாகும் புவி வெப்ப உயர்வினால் ஏற்படும் சேதத்தின் மதிப்பை சிறிய அளவுகளில் கணக்கிடுகிறது. இத்தகைய சிறிய ஆய்வு முடிவுகளின் மதிப்புகளை ஆய்வாளர்கள் சர்வதேச பேரிடர் தரவு தளத்தில் (International disaster data base) பதிவு செய்து வைக்கப்பட்டுள்ள கோப்புகளுடன் இணைத்து ஆராய்ந்தனர்.
இந்த தளத்தில் பேரிடரால் 10 பேர் உயிரிழந்திருந்தாலும், 100 பேரின் உடைமைகள் சேதமடைந்திருந்தாலும், பாதிக்கப்பட்ட நாடுகளில் இதனால் அவசரநிலை அறிவிக்கப்பட்டாலும், பன்னாட்டு உதவி கோரப்பட்டிருந்தாலும் அது பற்றிய அனைத்து விவரங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. வேறுபட்ட இந்த புதிய அணுகுமுறையை ஆய்வாளர்கள் பயன்படுத்தி ஆராய்ந்தபோது காலநிலை பாதிப்பால் சராசரியாக ஆண்டிற்கு 140 பில்லியன் டாலர் இழப்பு ஏற்படுகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது.
60 முதல் 230 பில்லியன் டாலர் வரை இழப்பின் மதிப்பு உள்ளது. கணினி மாதிரிகள் கணித்துக் கூறிய மதிப்புகளை விட இது மிக அதிகம். உலகில் காணப்படும் மிக உயர்ந்த வெப்பநிலையை ஆதாரமாகக் கொண்டு இந்த புதிய ஆய்வுகள் நடந்தன. ஆனால் முந்தைய ஆய்வுகள் கணினி மாதிரிகள், உலகளாவிய சராசரி வெப்பநிலையை பயன்படுத்தி ஆராய்ந்தன.
அதிக இழப்பை ஏற்படுத்திய சம்பவங்கள்
2003ல் ஐரோப்பாவைத் தாக்கிய வெப்ப அலை, 2008ல் மியான்மாரை பாதித்த நார்கீஸ் சுழற்காற்று, 2010ல் சோமாலியாவில் ஏற்பட்ட கடும் வறட்சி மற்றும் ரஷ்யாவை பாதித்த வெப்ப அலை ஆகியவை இதுவரை நடந்தவற்றில் மிக அதிக இழப்பை ஏற்படுத்தியுள்ளன. 2005 மற்றும் 2017ல் ஹரிக்கேன் புயல்கள் அமெரிக்காவைத் தாக்கியபோது மிக அதிக பொருளாதார சேதம் ஏற்பட்டது. உயிரிழப்பின் மதிப்பைக் கணக்கிடுவது பலருக்கும் சங்கடத்தைத் தருகிறது. ஆனால் பல துறைகளில் நிதி ஒதுக்கீட்டிற்கு இது அவசியம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
“உலகளவில் காலநிலை மாற்றம் சேதங்களின் அளவை ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கிறது. பொருளாதார வளர்ச்சி, நகரமயமாக்குதல் போன்றவற்றுடன் ஒப்பிடும்போது இந்த சேதங்கள் புறக்கணிக்கத் தக்கவையே என்று பலர் கூறுவது தவறு என்பதை இந்த ஆய்வு நிரூபிக்கிறது. கண்ணெதிரில் நிகழும் சம்பவங்களின் அடிப்படையிலேயே இந்த ஆய்வுகள் அமைந்துள்ளன என்பதே இதற்குக் காரணம்” என்று உலக வங்கி ஆய்வாளர் டாக்டர் ஸ்டெஃபான் ஹாலிகார்ட் (Dr Stepaane Hallegatte) கூறுகிறார்.
பணக்கார நாடுகளில் காலநிலை ஆய்வு நிலையங்கள் அதிக அளவில் செயல்படுகின்றன. ஏழை நாடுகளில் என்ன நடக்கிறது என்பதை அறிய அங்கு அதிக ஆய்வு அமைப்புகள் தோற்றுவிக்கப்பட வேண்டும். புவி வெப்ப உயர்வை முற்றிலும் தடுத்து நிறுத்த முடியாத நிலையை நோக்கி பூமியை இழுத்துச் செல்லும் மனிதன் அதைக் குறைக்கவேனும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையே இந்த ஆய்வின் முடிவுகள் வலியுறுத்துகின்றன.
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: சுற்றுச்சூழல்
கப்பல் உடைப்பது இன்று ஒரு மிகப் பெரிய தொழில். ஆனால் இது கடுமையான சூழல், ஆரோக்கியப் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. கப்பலின் அடிப்பகுதியில் உடைப்பதற்குரிய அறைகளில் நச்சு வாயுக்கள் இருப்பதைக் கண்டறிய உயிருடன் இருக்கும் ஒரு கோழியின் காலில் கயிற்றைக் கட்டி கீழ்நோக்கி இறக்கி பார்க்கப்படுகிறது. கோழி சாகவில்லை என்றால் ஆபத்தில்லை என்று பொருள். உலகம் முழுவதும் ஒரு இலட்சம் அளவு கப்பல்கள் உள்ளன. ஒரு கப்பலின் ஆயுள் 20-25 ஆண்டுகள்.
ஒவ்வொரு ஆண்டும் 500 முதல் 700 கப்பல்கள் உடைக்கப்படுகின்றன. பலவகை கப்பல்களைக் கருத்தில் கொண்டால் இந்த எண்ணிக்கை மூவாயிரத்தைத் தாண்டும். இதில் 90% கப்பல்கள் இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான், துருக்கி ஆகிய நாடுகளில் உடைக்கப்படுகின்றன. பாகிஸ்தானில் உள்ள கப்பல் உடைக்கும் மையம் உலகில் மூன்றாவது பெரிய மையம்.
சுற்றுச்சூழல் நாசம்
இத்தொழிலில் வேலை செய்பவர்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதுடன் இது கடுமையான சூழல் நாசத்தை ஏற்படுத்துகிறது. புற்றுநோய் போன்ற மோசமான பாதிப்புகளுக்குக் காரணமாகும் பாதரசம், சல்புரிக் அமிலம், ஆஸ்பெட்டாஸ் போன்றவை உள்ளிட்ட நச்சு வேதிப்பொருட்கள் ஒவ்வொரு கப்பல் உடைக்கப்படும்போதும் அதில் வேலை செய்யும் தொழிலாளர்களையும் சுற்றுச்சூழலையும் பாதிக்கிறது.
ஒரு நடுத்தர கப்பல் உடைக்கப்படும்போது அதனால் 7 டன் ஆஸ்பெஸ்டாஸ் மாசு ஏற்படுகிறது. இது பிராந்திய சந்தைகளைச் சென்றடைகிறது. பெரும்பாலான மையங்களில் மாசு மேலாண்மை நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படுவதில்லை. இதனால் இந்த மாசுக்கள் விவசாயம் மற்றும் மீன் வளத்தை அழித்து எல்லா இடங்களிலும் பரவுகிறது. பயிற்சி வழங்கப்படாத தொழிலாளிகளே இந்த வேலையில் ஈடுபட்டுள்ளனர்.பாதுகாப்பு நடவடிக்கைகள்
நச்சுத்தன்மை அதிகமுள்ள வேதிப்பொருட்கள் கையாளப்பட வேண்டிய இத்தொழிலில் சரியான பாதுகாப்பு நடவடிக்கைகள் நடைமுறைப் படுத்தப்படுவதில்லை. உரிய பயிற்சி வழங்கப்படாததால் தொழிலாளர்கள் எளிதில் நோய்வாய்ப்படுகின்றனர்.
உடைக்கப்படும் கப்பலில் இருந்து அதிக அளவில் கிடைக்கும் எஃகு, தொழிற்சாலைகளுக்குக் கொண்டு செல்லப்படுகிறது. இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் எஃகில் 10% கப்பல் உடைக்கும் தொழிலில் இருந்தே பெறப்படுகிறது. பங்களாதேஷில் இது 20%. 1930களில் கப்பல் உடைக்கப் பயன்படுத்தப்பட்ட அதே தொழில்நுட்பங்களே இன்றும் ஆசிய நாடுகளில் கடைபிடிக்கப்படுகிறது.
அக்காலத்தில் ஐரோப்பாவிலேயே கப்பல்கள் அதிகமாக உடைக்கப்பட்டன. 1960ல் வீசிய ஒரு புயற்காற்றில் பங்களாதேஷ் சிட்டகாங் துறைமுகத்திற்கு கிரீஸ் நாட்டைச் சேர்ந்த ஒரு கப்பல் அடித்து வரப்பட்டது. கரை தட்டிய கப்பலை பலமுறை முயற்சி செய்தும் கடலில் இறக்க முடியவில்லை. இவ்வாறு நான்கைந்து ஆண்டுகள் கரையில் கிடந்த கப்பலை அங்கு இருந்த ஒரு எஃகு நிறுவனம் விலைக்கு வாங்கியது; உடைத்தது.
இதற்கு பல ஆண்டுகள் ஆயின என்றாலும் அந்நாட்டில் கப்பல் உடைக்கும் தொழிலிற்கு இந்த சம்பவம் காரணமாக அமைந்தது. சூழல் சட்டங்கள் கடுமையாக்கப்பட்டபோது உடைக்கப்பட வேண்டிய கப்பல்கள் ஐரோப்பாவில் இருந்து இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளுக்கு வரத் தொடங்கின. கடுமையான சூழல் சட்டங்கள் நடைமுறையில் இருக்கும் நாடுகளில் உடைந்த கப்பலுக்கு குறைந்த விலையே கிடைக்கிறது. பங்களாதேஷில் இதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் 69% புதிய கப்பல் வாங்கவே செலவிடப்படுகிறது.
ஆனால் அந்நாட்டில் தொழிலாளர்களுக்குக் கொடுக்கப்படும் சம்பளம் வருமானத்தில் வெறும் 2 சதவிகிதம் மட்டுமே. வளர்ந்த நாடுகளில் பின்பற்றப்படும் முறைகள் ஆசிய நாடுகளில் கடைபிடிக்கப்படுவது இல்லை. வளர்ந்த நாடுகளில் 2003ல் உருவாக்கப்பட்ட பேசில் உடன்படிக்கைபடி இத்தொழில் நடைபெறுகிறது. உடைக்கும்போது கிடைக்கும் 98% பொருட்கள் அங்கு மறுசுழற்சி செய்யப்படுகின்றன.
உடைக்கப்படுவதற்கு முன்
ஆபத்தான பொருட்களின் பட்டியல் உருவாக்கப்பட்ட பிறகே அங்கு கப்பல் உடைக்கும் வேலை ஆரம்பிக்கிறது. வாயுக்கள் வெளியேற கப்பலில் இருக்கும் எல்லா துளைகளும் திறந்து வைக்கப்பட வேண்டும். சில வேலைகள் பொருளாதார ரீதியாக நஷ்டத்தை ஏற்படுத்துபவை என்றாலும் கப்பலை முழுமையாக உடைக்க வேண்டும். தீங்கு விளைவிக்கக் கூடிய மற்றும் தீங்கற்ற பொருட்களை தனித்தனியாகப் பிரிக்க வேண்டும்.
ஆஸ்பெஸ்டாஸை பிளாஸ்டிக்கில் பொதிந்து எஃகால் ஆன பெட்டகங்களில் சேகரிக்கப்பட்டு அகற்றப்பட வேண்டும். ஒவ்வொரு பகுதியும் சரியான முறையில் முழுமையாக மறுசுழற்சி செய்யப்பட வேண்டும். ஐரோப்பாவில் கப்பல்கள் இந்த முறையில் உடைக்கப்படுகின்றன. ஆனால் கப்பல் உடைக்கும் தலைநகரங்கள் என்று வர்ணிக்கப்படும் இந்தியா மற்றும் பங்களாதேஷில் இதற்கு முற்றிலும் மாறான விதத்தில் இது நடைபெறுகிறது.
உடைக்கப்படும் கப்பலில் இருந்து கிடைக்கும் மின் கம்பிகள், இருக்கைகள், இயந்திரங்கள் உள்ளூர் சந்தைகளுக்குக் கொண்டு சென்று விற்கப்படுகின்றன. மின் கம்பிகள் எரிக்கப்பட்டு அதில் இருந்து செம்பு எடுக்கப்படுகிறது. தொழிலாளர்கள் பாதுகாப்பு ஆடைகள், முகக் கவசங்கள் மற்றும் காலணிகள் அணிவதில்லை. செலவு அதிகமாகும் என்று மின் தூக்கிகள் பயன்படுத்தப்படுவதில்லை.
கடற்கரையில் குவிக்கப்படும் கழிவுகள்
பிளாஸ்டிக் அடங்கிய வண்ணப்பூச்சு பூசப்பட்ட எஃகு பலகைகள், லாபம் தராத கழிவுகள் கடற்கரையில் போட்டு எரிக்கப்படுகின்றன. பங்களாதேஷில் கப்பல் உடைக்கும் மையங்களில் 79,000 டன் ஆஸ்பெஸ்டாஸ், மோசமான பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய 240,000 பாலி குளோரினேட்டட் பை பீனைல், ஓசோன் அடுக்கைப் பாதிக்கும் 210,000 மற்ற கழிவுகள் குவிக்கப்பட்டிருக்கின்றன.
1980களில் கப்பல்களில் ஆஸ்பெஸ்டாஸ் பயன்படுத்தப்படுவது பல வளர்ந்த நாடுகளில் தடை செய்யப்பட்டது. இப்பொருளைக் கையாள அங்கு கடுமையான சட்டதிட்டங்கள் உள்ளன. இதனால் அங்கு லாபகரமாக கப்பல்களை உடைக்க முடிவதில்லை. அதனால் முன்பு கட்டப்பட்ட பழைய கப்பல்கள் ஆசியாவிற்குக் கொண்டு வரப்பட்டு உடைக்கப்படுகின்றன.
ஆபத்தான நச்சுப்பொருட்களைக் கையாளுதல், காயங்கள், வெட்டுக்காயங்கள், ஆபத்தான வாயுக்களை சுவாசிப்பது, தீக்காயங்கள், மூச்சுத்திணறல், புற்றுநோய் உட்பட பல பாதிப்புகள் ஆசியா கப்பல் உடைக்கும் மையங்களில் காணப்படுகின்றன. ஆனால் ஐரோப்பாவில் தொழிலில் ஈடுபடும்போது ஏற்படும் விபத்துகளுக்கு மிகப்பெரிய அளவில் நஷ்ட ஈடு கொடுக்கப்பட வேண்டும். இது இத்தொழிலை அங்கு லாபம் இல்லாத ஒரு தொழிலாக மாற்றியது.
அங்கு கப்பலை உடைத்து விற்றால் கிடைக்கும் தொகையைவிட அதை உடைப்பதற்கு ஆகும் செலவு அதிகம். பங்களாதேஷில் ஒரு வாரத்தில் ஒரு தொழிலாளியேனும் இதில் ஈடுபடும்போது மரணமடைகிறார். ஏற்படும் காயங்கள் இதைவிட மிக அதிகம். அங்கு இதில் ஈடுபட்டுள்ளவர்களில் 20 சதவிகிதத்திற்கும் கூடுதலானவர்கள் 15 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களே.
அலாங்
குஜராத் அலாங் துறைமுகமே உலகில் மிகப்பெரிய கப்பல் உடைக்கும் மையம். இதன் மூலம் 15,000 முதல் 20,000 தொழிலாளர்களுக்கு நேரடியாகவும், பல லட்சக்கணக்கானவர்களுக்கு மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு கிடைக்கிறது. ஒரிசா, உத்தரப் பிரதேசத்தில் இருந்து வரும் வந்த தொழிலாளர்களே அதிகமாக வேலை செய்கின்றனர். இவர்கள் பரிதாபகரமான சூழலில் வாழ்கின்றனர். மருத்துவமனை வசதி பாவ்நகர் என்ற இடத்தில் 50 கி மீ தூரத்திலேயே உள்ளது.
அலையாத்திக் காடுகளின் அழிவு
பங்களாதேஷில் 2009ல் கப்பல்களை உடைக்கும் மையங்களில் கடலில் இருந்து கப்பல்களை கரைக்கு அருகில் கொண்டு வர வசதியாக அங்கிருந்த 40,000 அலையாத்திக் காடுகள் அழிக்கப்பட்டன. இந்தக் காடுகளே கடல் பேரிடர்களில் இருந்து இப்பகுதியை காப்பாற்றி வந்தன. கடலில் கலக்கும் நச்சுப்பொருட்கள் 21 வகை மீனினங்களை அழித்துள்ளன. ஆசியாவில் இந்த நச்சு மாசினால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி எந்த ஆய்வும் இதுவரை நடத்தப்படவில்லை.
தங்கள் சூழல் மற்றும் குடிமக்களை பாதுகாக்க வளர்ந்த நாடுகள் கப்பல்களை ஆசியாவிற்கு கொண்டு வருகின்றன. இந்தியா போன்ற நாடுகளில் இதற்கு ஆகும் செலவு மிகக் குறைவு. இது இங்கு உள்ள தொழிலாளர்கள் மற்றும் சூழலை அழிக்கிறது. இதையெல்லாம் ஆள்பவர்கள் எவ்வளவு காலம் கண்டு கொள்ளாமல் இருப்பார்கள்?
&
https://en.wikipedia.org/wiki/Alang_Ship_Breaking_Yard
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: சுற்றுச்சூழல்
2022 டிசம்பர் 19ல் கனடா, மாண்ட்ரீலில் நிறைவடைந்த காப்15 ஐநா உயிர்ப் பன்மயத்தன்மை மாநாட்டிற்குப் பிறகு இயற்கையைப் பாதுகாக்க உலக நாடுகள் வாக்களித்தது போல நடந்து கொண்டனவா? அடுத்த காப்16 மாநாடு கொலம்பியாவில் அக்டோபர் 21 முதல் நவம்பர் 1, 2024 வரை நடக்கவுள்ளது என்று அந்நாட்டின் சுற்றுச்சூழல் அமைச்சர் சுசானா முகம்மது (Susana Muhamad) அறிவித்துள்ளார். இந்நிலையில் காப்15 மாநாட்டின் தீர்மானங்களின் முன்னேற்றம் குறித்த கேள்விகள் எழுந்துள்ளன.
ஒப்புக் கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் அம்சங்களை முழுமையாக நிறைவேற்ற அரசுகள் தயாராகவில்லை என்றால், மீண்டும் அழிவிற்கான ஒரு பத்தாண்டு காலத்தை ஆட்சியாளர்கள் உலக மக்கள் மீது திணிக்க வேண்டியிருக்கும் என்று ஐநா உயிர்ப் பன்மயத் தன்மைக்கான செயல் தலைவர் டேவிட் கூப்பர் (David Cooper) எச்சரித்துள்ளார். அடுத்த மாநாட்டிற்கான எதிர்பார்ப்புகள் அதிகரிக்கும் போது, வரலாற்றுச் சாதனை என்று போற்றப்பட்ட மாண்ட்ரீல் கூட்டத்தின் உடன்படிக்கை இப்போது உறுதித் தன்மை இழந்துள்ளது.உலகிற்கு எடுத்துக்காட்டாகுமா கொலம்பியா மாநாடு?
கொலம்பியா மாநாடு, காலநிலை அவசர நிலையை சரிசெய்ய உடனடியாக செயலில் இறங்க வேண்டும் என்பதையும், உயிரினங்களின் வாழ்வு பாதுகாக்கப்பட வேண்டும் என்பதையும் உலகிற்கு எடுத்துச் சொல்லும் என்று சூசன் முகம்மது கூறுகிறார். புவியில் வாழ்வை நிலைநிறுத்தும் சூழல் மண்டலங்களின் பாதுகாப்பு பற்றி மாண்ட்ரீல் மாநாட்டிற்கு முன்பு எந்த ஐநா மாநாடும் எந்த உடன்படிக்கையையும் நிறைவேற்றவில்லை.
காப்15 மாநாட்டின் 23 இலக்குகளில் பூமியின் 30% நிலப்பகுதியை இயற்கை பாதுகாப்பிற்கு ஒதுக்குதல், சூழலை சேதப்படுத்தும் திட்டங்களுக்கு வழங்கப்படும் பில்லியன் கணக்கான மானிய சலுகைகளை மறுசீரமைத்தல் மற்றும் வளமிழந்த சூழல் மண்டலங்களை மீட்டெடுத்தல் போன்றவை அடங்கும். கன்மிங்-மாண்ட்ரீல் ஒப்பந்தம் (Kunming-Montreal framework) என்று அழைக்கப்படும் உடன்படிக்கை சமீபத்தில் துபாயில் முடிந்த காலநிலை மாநாட்டின் இறுதி அறிக்கையில் இடம் பெற்றதால் புது உத்வேகம் அடைந்துள்ளது.
2025 பிரேசில் காலநிலை மாநாட்டில்
2025 பிரேசில் காப்30 மாநாட்டிற்கு முன்னதாக, மாண்ட்ரீல் உடன்படிக்கையை கருத்தில் கொண்டே நாடுகள் தங்கள் வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்த முயற்சிக்க வேண்டும். 2025 பிரேசில் காப்30 மாநாட்டில் ஒவ்வொரு நாடும் அவை இயற்கைப் பாதுகாப்பிற்கு மேற்கொண்ட செயல்கள் பற்றிய விவரங்களை (NDC) சமர்ப்பிக்க வேண்டும். உயிர்ப் பன்மயத் தன்மையும் காலநிலையும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது என்பதை ஆட்சியாளர்கள் உணர இது ஓர் அரிய வாய்ப்பு.
துபாய் மாநாட்டின் இறுதி அறிக்கையில் 2030ம் ஆண்டிற்குள் வன அழிவை நிறுத்துதல், இயற்கைப் பாதுகாப்பில் ஆதிவாசி சமூகங்களின் முக்கியப் பங்கு ஆகிய அம்சங்கள் சேர்க்கப்பட்டன. தீமை தரும் மானிய உதவிகள், மாசுபடுதல் போன்றவற்றைத் தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல் பூமியின் 30% நிலப்பகுதியை இயற்கைக்காக ஒதுக்குதல் என்பது மீண்டும் ஒரு தோல்விக்கே வழிவகுக்கும் என்று டேவிட் கூப்பர் கூறுகிறார்.
அழியும் ஆபத்தில் இரண்டு மில்லியன் உயிரினங்கள்
வாழிட இழப்பு, மாசுபடுதல், ஆக்கிரமிப்பு உயிரினங்கள், காலநிலை மாற்றம் மற்றும் நேரடி சுரண்டலால் இரண்டு மில்லியன் உயிரினங்கள் அழியும் ஆபத்தில் உள்ளன என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பூமி தொடந்து சூடாவது உயிரினங்களின் வாழ்விற்கு முதன்மை அச்சுறுத்தலாக மாறியுள்ளது. வெப்ப உயர்வை 1.5 டிகிரிக்குள் கட்டுப்படுத்தவில்லை என்றால் இழந்த உயிர்ப் பன்மயத் தன்மையை மீட்டு அதன் அழிவைத் தடுத்து நிறுத்த முடியாது.
மண், தாவரங்கள், புல்வெளிப் பகுதிகள் மற்றும் காடுகளில் கார்பன் சேமிப்பு என்பது சூழல் மண்டலங்களின் ஆரோக்கியத்தைப் பொறுத்தே உள்ளது. 2023ல் பிரேசில் மற்றும் கொலம்பியாவில் அமேசான் காடுகள் அழிக்கப்படுவதும், மலேசியா மற்றும் இந்தோனேஷியாவில் வன அழிவின் வேகமும் முதல்முறையாகக் குறைந்துள்ளது.
நன்மைகளைப் பகிர்ந்து கொள்ளுதல்
காப்15 மாநாட்டில் இயற்கைப் பாதுகாப்பிற்காக நிதி ஒதுக்கப்பட்டது. இயற்கை வளங்கள் மூலம் மருந்துகள் கண்டுபிடிப்பு, தடுப்பூசிகள், உணவுப் பொருட்கள் உருவாக்கப்படுதல் போன்றவற்றால் கிடைக்கும் பொருளாதார நன்மைகளை நாடுகளுக்கு இடையில் பகிர்ந்து கொள்ளுதல் பற்றி காப்15ல் ஒப்பந்தம் ஏற்பட்டது. “நாகரீக மனித சமூகம் உருவாக வேண்டும் என்றால் இயற்கை பாதுகாக்கப்பட வேண்டும்.
"1.5 டிகிரிக்குள் வெப்ப உயர்வைக் கட்டுப்படுத்துவதற்கு சமமான உடன்படிக்கையே 30% நிலப்பகுதியை இயற்கைப் பாதுகாப்பிற்காக ஒதுக்க வேண்டும் என்ற மாண்ட்ரீல் ஒப்பந்தம்” என்று முன்னணி காலநிலை ஆய்வாளரும் பாட்ஸ்டம் (Potsdam) காலநிலை ஆய்வுக்கழகத்தின் இயக்குனருமான ஜோஹன் ராக்ஸ்ட்ரம் (Johan Rockström) கூறுகிறார்.
"படிப்படியாக நிலக்கரி, எண்ணை மற்றும் எரிவாயுவின் பயன்பாட்டைக் குறைப்பது மற்றும் புதைபடிவ எரிபொருட்களைத் தடை செய்யும் உடன்படிக்கைக்காக மற்ற நாடுகளுடன் இணைந்து கொலம்பியா வலியுறுத்துகிறது” என்று அதன் அதிபர் கஸ்ட்டாவோ பெட்ரோ (Gustavo Petro) காப் 28 மாநாட்டில் கூறினார்.
116 நாடுகள் தற்போது கையெழுத்திட்டுள்ள நிலையில் சீனா தன் கடல் மற்றும் நிலப்பகுதியின் 30 சதவிகிதத்தை இயற்கை பாதுகாப்பிற்காக ஒதுக்கியது. இதன் மூலம் இதற்கான குழுவில் சீனா புதிதாக சேர்ந்துள்ளது என்று இயற்கைப் பாதுகாப்பிற்கான உயர் குறிக்கோள் கூட்டமைப்பின் இயக்குனர் ரீடர் எல் சாக்ஃப்லாவ்ல் (Rita El Zaghloul) கூறுகிறார்.
எதிர்பார்ப்புகளுடன் கொலம்பியா மாநாடு
“போதுமான நிதியுதவி, உண்மையான அக்கறை மற்றும் உலகின் 80% உயிர்ப் பன்மயத்தன்மை செழுமையுள்ள இடங்களின் பாதுகாப்பில் முக்கியப் பங்காற்றும் ஆதிவாசி மக்களின் மேம்பாட்டுக்கு காப்16 மாநாட்டில் நல்ல முடிவுகள் ஏற்படும்” என்று பன்னாட்டு இயற்கை வளச்சங்கத்தின் (IUCN) தலைவரும் காப்28 மாநாட்டின் காலநிலை சாம்பியனுமான ராஸன் அல் முபாரக் (Razan Al Mubarak) நம்பிக்கை தெரிவிக்கிறார்.
நிலநடுக்கங்களால் பாதிக்கப்பட்டதால் 2023ல் துருக்கியில் நடைபெற வேண்டிய உயிர்ப் பன்மயத் தன்மை மாநாடு நடக்கவில்லை. சரியான இலக்கு, போதுமான கவனம், நடைமுறைப்படுத்துவதில் அரசியல்பூர்வமான அக்கறை, நிதி ஒதுக்கீடு போன்றவற்றின் மூலம் இயற்கையைப் பாதுகாக்க முடியும் என்பதை பிரேசில் அதிபர் லூலா (Lula ) நிரூபித்துள்ளார். இந்தோனேஷியா இதில் அர்ப்பணிப்புடன் செயல்படுகிறது. ஆள்வோர் தங்கள் சுய நல நோக்கங்களை கைவிட்டு இயற்கையைப் பாதுகாக்க இந்நாடுகளை முன்மாதிரியாகக் கொண்டு செயல்பட முன்வர வேண்டும் என்று ஆய்வாளர்கள் வலியுறுத்துகின்றனர்.
** ** **
மேற்கோள்கள்: https://www.theguardian.com/environment/2023/dec/18/cop15-montreal-has-world-lived-up-to-promises-aoe?
&
https://en.m.wikipedia.org/wiki/2024_United_Nations_Biodiversity_Conference
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: சுற்றுச்சூழல்
காலநிலை மாற்றத்தின் மோசமான விளைவுகளைத் தவிர்க்க, நவம்பர் 30 முதல் டிசம்பர் 12 வரை இரண்டு வார காலம் துபாயில் நடந்த காப்28 மாநாட்டில் புதைபடிவ எரிபொருட்களைப் பயன்படுத்துவதில் இருந்து மாறி, மற்ற ஆற்றல் எரிமூலங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வரலாற்று உடன்படிக்கை எட்டப்பட்டுள்ளது. விஞ்ஞானிகள், சூழல் போராளிகள், சூழல் இயக்க அமைப்புகள் கோரியபடி புதைபடிவ எரிபொருட்களைப் படிப்படியாகக் குறைப்பது அல்லது முற்றிலும் தடுப்பது பற்றி இந்த அறிக்கை எதுவும் குறிப்பிடவில்லை.
என்றாலும் ஆற்றல் செயல்முறைகளில் இருந்து புதைபடிவ எரிபொருட்களை நீதிப்பூர்வமாக, ஒழுங்குமுறையுடன் அகற்றுவதன் மூலம் அறிவியல்பூர்வமாக கார்பன் உமிழ்வை 2050ல் சுழிநிலைக்குக் கொண்டுவர இந்த அறிக்கை இலட்சியமிட்டுள்ளது. 2015 பாரிஸ் உடன்படிக்கையின்படி உலக நாடுகள் இதுவரை காலநிலை மாற்றத்தின் தீவிரத்தை குறைக்க தங்கள் நாடுகள் என்ன செய்தது என்பதை விவரிக்கும் உலகளவிலான ஒவ்வொரு நாட்டின் செயல்திட்டங்கள் (GST) பற்றி வரும் ஆண்டுகளில் நடைபெறவிருக்கும் காலநிலை மாநாட்டில் அறிக்கை சமர்ப்பிக்க ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. புவி வெப்ப உயர்வை 1.5 டிகிரிக்குள் குறைக்க இது வழிவகுக்கும்.
முப்பதாண்டு கனவு
கடந்த 30 ஆண்டுகளின் கனவாக இருந்து வரும் புதைபடிவ எரிபொருட்கள் பயன்பாட்டைத் தவிர்ப்பது பற்றிய சொல் இந்த மாநாட்டின் உடன்படிக்கையில்தான் முதல்முறையாக சேர்க்கப்பட்டுள்ளது. இது பற்றி பேச விரும்பாத சௌதி அரேபியா, அமெரிக்கா, எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் (OPEC) போன்றவை இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தாலும் பல நாடுகளின் வற்புறுத்தலால் இது குறித்து இறுதி உடன்பாடு எட்டப்பட்டது. நிறைவேற்றப்படுவதற்கு நான்கு மணி நேரம் முன்பு மட்டுமே வரைவு அறிக்கையின் நகல் பேச்சுவார்த்தைக் கூடத்தில் பிரதிநிதிகளுக்கு வழங்கப்பட்டது. 39 நாடுகளை உறுப்பினராகக் கொண்ட சிறிய தீவு நாடுகளின் கூட்டமைப்பு உடன்படிக்கை நிறைவேற்றப்படுவதை தாங்கள் தடுக்கவில்லை என்றாலும், இறுதி அறிக்கையின் அம்சங்கள் போதுமான அளவிற்கு வலுவாக இல்லை. உடன்படிக்கை பல ஓட்டைகளுடன் உள்ளது என்று கூட்டமைப்பின் தலைமைப் பேச்சாளரும், சமோவா (Samoa) நாட்டைச் சேர்ந்தவருமான ஆன் ராச்மசன் (Anne Rasmussen) கூறுகிறார். விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் புதைபடிவ எரிபொருட்களைத் தவிர்க்கும் காலம் வந்து விட்டது என்று ஐநா தலைமைச் செயலர் அண்டோனியோ குட்டரஸ் கூறுகிறார்.
அடுத்த மாநாட்டில் ஒவ்வொரு உலக நாடும் தங்களின் தேசிய பங்களிப்பில் 1.5 டிகிரிக்குள் புவி வெப்ப உயர்வை கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கைகள் பற்றி எடுத்துச் சொல்ல வேண்டும் என்று துபாய் மாநாட்டில் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. அமெரிக்கா சீனாவுடன் மாற்று எரிபொருட்கள் பற்றி ஒருங்கிணைந்து செயல்படத் திட்டமிட்டுள்ளது என்று அமெரிக்க காலநிலைப் பிரதிநிதி ஜான் கெரி (John Kerry) கூறுகிறார். பசுமைக்குடில் வாயுக்களின் உமிழ்வைக் குறைத்து உலகளாவிய புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பயன்பாட்டை 2030ல் மும்மடங்காக அதிகரிக்க உடன்படிக்கையில் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.
புதிய தொழில்நுட்பங்கள்
புதிய தொழில்நுட்பங்கள் ஊக்குவிக்கப்படுவது, கார்பன் ஹைடிரஜன் உற்பத்தியை ஒழுங்குபடுத்துவது பற்றி இறுதி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. எண்ணெய், எரிவாயு, நிலக்கரி பயன்பாட்டைத் தவிர்ப்பதால் ஏழை நாடுகளுக்கு ஏற்படும் இழப்பை ஈடுசெய்ய போதுமான நிதியுதவி செய்யப்பட வேண்டும் என்று காலநிலைப் போராளிகள் கோரினர். பல நாடுகள் எண்ணெய்ப் பயன்பாட்டை நிறுத்த வலியுறுத்தின.
“கடந்த 30 ஆண்டில் ஒரு காப் மாநாட்டின் இறுதி அறிக்கையில் புதைபடிவ எரிபொருட்கள் பற்றிப் பேசப்படுவது இதுவே முதல்முறை. பெட்ரோலியப் பொருட்கள் என்ற பூதம் பாட்டிலிற்குள் திரும்பிப் போகவில்லை. அதனால் வரும் மாநாடுகளில் இந்த அழுக்கு ஆற்றலை (dirty energy) நிறுத்த உதவும் திருகுகளைப் பயன்படுத்தி பாட்டிலை இறுக்க அடைத்து மூடவேண்டும். கார்பனைப் பிடித்து சேமித்துப் பயன்படுத்தல் போன்றவை அதிக செலவு பிடிக்கும் தோல்வியடைந்த திட்டங்கள்.
ஆனால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்புவரை இப்படிப்பட்ட ஒரு உடன்படிக்கை பெட்ரோல் உற்பத்தி செய்யும் ஒரு நாட்டில் இருந்து ஏற்படும் என்று நினைத்துப் பார்க்கவில்லை. புதைபடிவ எரிபொருட்கள் இல்லாத ஓர் உலகை நோக்கி நாம் செல்கிறோம் என்பதையே இது எடுத்துக் காட்டுகிறது" என்று ஆப்பிரிக்க சக்தி அமைப்பின் (Power Shift Africa) முகமது அடோ (Mohamed Adow) கூறுகிறார்.
ஏழை நாடுகளுக்கு இறப்பு சான்றிதழா?
காடுகள் அழிக்கப்படுவதை 2030ம் ஆண்டிற்குள் குறைப்பது பற்றி உடன்பாடு எட்டப்பட்டது. ஆதிவாசிகளின் பாரம்பரிய அறிவுகளை அழியாமல் பாதுகாத்து, பயன்படுத்த காப்28 உறுப்பு நாடுகள் ஒப்புக்கொண்டன. மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்ட முந்தைய மாதிரி அறிக்கை புதைபடிவ எரிபொருட்கள் பற்றிய சர்ச்சைகளை எழுப்பியது. அந்த வரைவறிக்கை சிறிய தீவு, பலவீனமான நாடுகளுக்கு பணக்கார நாடுகள் வழங்கும் இறப்பு சான்றிதழாகவே கருதப்பட்டது.
இந்த வரைவறிக்கைக்கு பல வளரும் நாடுகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. கடைசி நிமிடத்தில் காப்28 மாநாட்டின் தலைவர் சல்ட்டர்ன் அல் ஜேபர் (Sultan Al Jaber) பல நாடுகள், குழுக்களின் பிரதிநிதிகளை சந்தித்துப் பேசினார். புதிய அறிக்கை தயாரிக்கப்பட்டது. புதைபடிவ எரிபொருட்கள் தவிர்ப்பு பற்றிய அம்சம் சேர்க்கப்பட்டது. இதன் பலனாக தோல்வியடையுமோ என்ற அச்சத்தில் இருந்த மாநாடு இறுதியில் எண்ணெய்ப் பொருட்கள் பற்றிய உடன்பாட்டுடன் வரலாற்றின் பக்கங்களில் இடம்பெற்றது.
துபாய் காப் 28 மாநாட்டின் எட்டப்பட்ட இந்த உடன்படிக்கை புவி வெப்ப உயர்வைக் குறைக்க உதவுமா? மாநாட்டின் நோக்கம் வெற்றி அடையுமா? பொறுத்திருந்து பார்ப்போம்.
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- உணவுப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாகும் புவி வெப்ப உயர்வு
- மழைக் காடுகளைக் காக்க ஓர் உச்சி மாநாடு
- பிளாஸ்டிக் கட்டுப்பாட்டில் ஒரு புதிய நம்பிக்கை
- புவி வெப்ப உயர்வைக் குறைக்க உதவும் மண்
- சூழலுக்காக உயிர் கொடுத்தோர்
- சூடாகும் நகரங்கள்
- எர்த்ஷாட் விருது இந்தியாவிற்கும்
- மரம்
- சூழலியல் மேம்பாட்டில் திமுக அரசு
- மண்வளம் குறைந்தால் மனிதன் அழிவான்
- 2021 ஐந்தாவது வெட்பமான ஆண்டு
- திரைசீலை விழுந்த காலநிலை உச்சி மாநாடு
- புவி வெப்ப உயர்வு: அடைபடும் சாளரங்கள்
- Fukushima அணு உலை விபத்து - பத்தாண்டுகள் கடந்து அங்கு நிலவும் சூழல் என்ன?
- மரண பள்ளத்தாக்கில் பதியப்பட்ட பூமியின் அதிகபட்ச வெப்பமும், கலிபோர்னியாவின் காட்டுத் தீ காலமும்
- கடல் பகுதிகளை அச்சுறுத்தும் கச்சா எண்ணெய் - சுற்றுச்சூழல் பாதிப்பில் மொரிஷியஸ் தீவுகள்
- சுற்றுச் சூழல் தாக்க அறிக்கை 2020 (EIA 2020) ஏன் எதிர்க்கப்பட வேண்டியது?
- இ.ஐ.ஏ 2020 எதிர்ப்புகள் வலுப்பெறுமா?
- சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் போராட்டத்திற்கு மதிப்பளித்த அமெரிக்க நீதிமன்றம்
- 5 டிரில்லியன் பொருளாதாரம்: நாம் கொடுக்கப் போகும் விலை என்ன?