கீற்றில் தேட...
அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: சுற்றுச்சூழல்
தொடர்ச்சியாக ஏற்பட்டு வரும் வெப்ப அலைத் தாக்குதல்கள் இயற்கை உயிரினங்களுக்கு உணவு தரும் திறனை அச்சுறுத்தலிற்கு உள்ளாக்கியுள்ளது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். வெப்ப அலை ஐரோப்பா, அமெரிக்கா, ஆசியாவில் இந்தியா உட்பட பல பகுதிகளையும் தொடர்ச்சியாக பாதித்து வருகிறது. அதிகபட்ச வெப்பநிலை ஒவ்வொரு நாளும் முதல் நாளை விட சாதனையளவாக உயர்கிறது.
நம் உணவுமுறை உலகளாவியது. உலகின் பல பகுதிகளிலும் ஒரே நேரத்தில் பல முக்கிய உணவுப் பயிர்களின் விளைச்சலில் இதனால் பாதிப்பு ஏற்படும். இது உணவுப் பற்றாக்குறைக்கும் அதன் மூலம் உணவுப் பொருட்களின் விலையேற்றத்திற்கும் வழிவகுக்கும். இது இப்போது உடனடியாக நிகழவில்லை என்றாலும் வரும் ஒரு சில பத்தாண்டுகளில் நிகழும் என்று லீட்ஸ் (Leeds) பல்கலைக்கழக வளி மண்டல அறிவியல் துறை பேராசிரியர் ஜான் மார்ஷம் (Prof John Marsham) கூறுகிறார்.
வசதி இருந்தால் கொளுத்தும் வெய்யிலில் இருந்து தப்ப வீட்டுக்குள் போய் நீங்கள் ஏசியைப் போட்டுக் கொள்ளலாம். ஆனால் இயற்கையான மற்றும் விவசாயம் சார்ந்த சூழல் மண்டலங்கள் இவ்வாறு செய்ய முடியுமா? ஐரோப்பாவில் 2018ல் ஏற்பட்ட வெப்ப அலைத் தாக்குதல் மத்திய மற்றும் வட ஐரோப்பாவில் பல பயிர்களைப் பாதித்தது. 50% பயிரிழப்பை ஏற்படுத்தியது.
2022ல் ஏற்பட்ட உயர் வெப்பம் இங்கிலாந்தில் விளைந்த எல்லா வகை காய், பழங்களையும் அழித்தது. முந்தைய பதிவுகளுடன் ஒப்பிடும்போது 2040ல் வெப்ப அலைத் தாக்குதல்கள் இப்போது உள்ளதை விட 12 மடங்கு அதிகமாக அடிக்கடி ஏற்படும். ஒரே ஒரு வெப்ப அலைத் தாக்குதல் ஒரு சூழல் மண்டலத்தையே அழித்துவிடாது.
ஆனால் நீண்ட காலம் நீடிக்கும், அடிக்கடி நிகழும் வெப்ப அலைகளை சரிசெய்ய இயற்கைக்குப் போதுமான அவகாசம் கிடைக்காது.
விவசாயிக்குத் தெரியும்
நாம் இயல்பாக வாழ உதவும் வானிலை பற்றி பொதுவாக மக்கள் கவலைப்படுவதில்லை. நமக்கு வேண்டியதை வாங்க நாம் கடைக்குச் செல்கிறோம். நமக்குத் தேவையான உணவை நாமே உற்பத்தி செய்வதில்லை. ஆனால் உலகில் எந்தப் பகுதியில் இருக்கும் எந்த ஒரு விவசாயிடம் நீங்கள் பேசினாலும் வானிலையும் காலநிலை மாற்றமும் அவர்களின் விவசாயத்திற்கு ஏற்படுத்தும் நன்மை, தீமைகள் பற்றி அவர்கள் விழிப்புணர்வு பெற்றவர்களாக உள்ளனர்.
காலநிலை மாற்றம் வளி மண்டல வெப்பநிலையை மட்டும் அதிகரிப்பதில்லை. கடல் வெப்பநிலையையும் அதிகரிக்கிறது. இது கடலோர சூழலைப் பாதிக்கிறது. மனித குலத்தின் மற்றொரு முக்கிய உணவு மூலத்தையும் அழிக்கிறது. மிக உயர் வெப்பநிலை உயிரினங்களை ஒட்டுமொத்தமாகக் கொல்கிறது. எடுத்துக்காட்டு ஒரு பில்லியன் கடல்வாழ் விலங்குகள் உயிரிழக்கக் காரணமாக இருந்த 2021 கனடிய பசுபிக் வெப்ப அலைத் தாக்குதல் நிகழ்வு மற்றும் இராக் அஷ்மான் (Ashman) நதியில் வெப்ப அலைத் தாக்குதலால் ஜூலை 2023ல் பெருமளவில் இறந்து கரையொதுங்கிய மீன் கூட்டம்.நிசப்த மரணங்கள்
சுலபமாகப் பார்க்க முடிகிறது என்பதால் நாம் நிலப்பகுதியில் நிகழும் மாற்றங்களையே காண்கிறோம். வெப்பம் அதிகரித்தால் தாவரங்கள் சூடாகின்றன, விலங்குகளும் பாதிக்கப்படுகின்றன. கடலில் ஏற்படும் வெப்ப அலைகள் பற்றி யாரும் நினைத்துப் பார்ப்பதில்லை. இதனால் கடல்வாழ் உயிரினங்கள் ஒட்டுமொத்தமாக அழிவது ஒருவகையில் நிசப்த மரணங்கள் என்று பிரிஸ்ட்டல் (Bristol) பல்கலைக்கழக புவி அறிவியல் பேராசிரியர் டானியல்லா ஸ்மிட் (Daniela Schmidt) கூறுகிறார்.
வெப்ப மண்டலம் போன்றவை ஒருகாலத்தில் ஆண்டு முழுவதும் நிலையான வெப்பநிலை நிலவும் கடல் சூழல் பகுதிகளாக இருந்தன. 2 டிகிரி செல்சியஸ் வெப்ப உயர்வு உலகில் இருக்கும் எல்லா பவளப் பாறைகளையும் அழித்துவிடும் என்று அஞ்சப்படுகிறது. உலகில் உள்ள மற்ற எல்லா சூழல் மண்டலங்களையும் விட இப்பகுதிகளில் அதிக எண்ணிக்கையில் அரியவகை உயிரினங்கள் வாழ்கின்றன.
இப்பகுதிகள் பெரும்பாலும் ஏழை நாடுகளைச் சேர்ந்த ஐநூறு மில்லியனுக்கும் அதிகமான மக்களின் வாழ்வாதாரமாக உள்ளது. நாம் உடனடியாக செயல்படாவிட்டால் இவை பூமியில் இருந்தே மறையும் அபாயம் உள்ளது என்று மார்ஷம் கூறுகிறார்.
தாவரங்கள் தரும் ஆக்சிஜனைதான் நாம் சுவாசிக்கிறோம்!
ஆள்பவர்களுக்கு பவளப்பாறைகள் அழிவது பற்றி கவலையில்லை. ஆனால் எந்த ஒரு சூழல் மண்டலமும் இவை இல்லாமல் அதிக நாட்கள் நீடித்து நிலைத்திருக்க முடியாது. இன்றுள்ள நிலையில் உலகின் எந்த ஒரு பகுதியும் காலநிலை மாற்றத்தால் நிகழ்ந்து வரும் பாதிப்புகளில் இருந்து தப்பமுடியாது. உலகில் எல்லாவற்றிற்கும் பணரீதியான மதிப்பு இல்லை. உள்ளிழுக்கும் ஒவ்வொரு மூச்சுக்காற்றுக்கும் தாவரங்கள் அவசியம். அவை தரும் ஆக்சிஜனையே நாம் சுவாசிக்கிறோம்! இதை நாம் மறந்து விடுகிறோம்.
நிலப்பகுதி வெப்பம் சூழல் மண்டலங்களைப் பாதிக்கிறது என்பது பற்றிய ஆய்வுகள் இப்போதே தொடங்கியுள்ளன. 4.4 டிகிரி செல்சியஸ் வெப்ப உயர்வில் பூமியில் இன்று வாழும் 41% நில வாழ் முதுகெலும்பிகள் 2099ல் அதி வெப்ப நிகழ்வுகளால் பாதிக்கப்படும் என்று சமீபத்தில் நேச்சர் (Nature) ஆய்விதழில் வெளிவந்த ஆய்வு எச்சரிக்கிறது. வெப்ப உயர்வு உயிரினங்களின் வளர்ச்சி, இனப்பெருக்கத் திறன், நோய் எதிர்ப்பாற்றல் மற்றும் நடத்தை போன்ற பலவற்றில் அச்சமூட்டும் பாதிப்புகளை ஏற்படுத்தும்.
குளிர்ச்சியான இடங்களை தேடிச் செல்லும் உயிரினங்கள்
இந்த நிலை தொடர்ந்தால் இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் 40% முதுகெலும்புள்ள உயிரினங்கள் அழிந்துவிடும். சகிக்க முடியாத வெப்பத்தில் இருந்து தப்ப உயிரினங்கள் மலைப்பகுதிகளுக்கும் துருவப் பகுதிகளுக்கும் இடம்பெயர்கின்றன. இதன் விளைவாக பல உயிரினங்கள் முற்றிலும் அழியும் அபாயம் ஏற்படும். வெப்பமான பூமியில் இயற்கை மெல்ல மெல்ல நிலப்பகுதிகளையும், ஏரி குளம் போன்ற நீர்நிலைகளையும் அந்த சூழ்நிலைக்கேற்ப தகவமைக்கும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.
நகரப்பகுதி வெப்ப உயர்வு 2 டிகிரி செல்சியஸ் அளவிற்குக் குறையக் காரணமாக இருந்த கொலம்பியாவில் மெடலின் (Medellin) பகுதியில் உள்ள பசுமை பெருவழிப்பாதை போன்ற திட்டங்கள் மூலம் வெப்பம் மிகுந்த வருங்கால உலகில் நிலம், நீர்நிலைகள், மரங்கள் போன்றவை பூமியைக் குளிரச் செய்ய உதவும் என்று 'பூமியின் வருங்காலக் குளிர்ச்சியடையும் போக்கு' பற்றி ஆராயும் ஆக்ஸ்போர்டு மார்ட்டின் திட்ட மூத்த ஆய்வாளர் பேராசிரியர் நிக்கோல் மிராண்டா (Prof Nicole Miranda) கூறுகிறார்.
பசுமைப் போர்வை போர்த்தப்பட்ட நிலப்பரப்பும் இயல்பான சூடுடைய கடலும் இருந்தால் மட்டுமே நாளை மனிதன் என்ற உயிரினமும் பூமியில் வாழ முடியும் என்று ஆய்வாளர்கள் வலியுறுத்துகின்றனர்.
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: சுற்றுச்சூழல்
அமேசான் நாடுகளின் தலைவர்கள் உலகின் மிகப் பெரிய மழைக்காடுகளைக் காப்பாற்ற தங்களுக்கு உதவுமாறு பணக்கார நாடுகளைக் கோரியுள்ளனர். பிலெம் (Belem) என்ற பிரேசில் நகரில் சமீபத்தில் இரண்டு நாட்கள் நடந்த உச்சிமாநாட்டின் முடிவில் வெளியிடப்பட்டுள்ள கூட்டறிக்கையில் அமேசான் காடுகளைத் தாயகமாகக் கொண்டுள்ள எட்டு தென்னமெரிக்க நாடுகளின் தலைவர்கள் காடுகளைக் காக்க வேண்டிய பொறுப்பு தங்களுக்கு மட்டுமே உரியது இல்லை. இந்த வன வளங்களை உலகம் முழுமையும் பயன்படுத்திக் கொள்கிறது என்று கூறியுள்ளனர்.
அமேசான் ஒத்துழைப்பு உடன்படிக்கை அமைப்பைச் (ACTO) சேர்ந்த இந்த எட்டு நாடுகள் காடுகளைக் காக்கும் பிரம்மாண்டமான சுமையை தாங்கள் மட்டும் சுமக்க முடியாது என்று கூறியுள்ளனர். இறைச்சிக்காக காடுகள் அழிக்கப்பட்டு மேய்ச்சல் நிலங்களாக மாற்றப்படுதல், எண்ணெய் மற்றும் சுரங்கத் தொழில் போன்றவை அமேசானை அழிக்கும் முக்கிய காரணிகள். 2030ம் ஆண்டிற்குள் வன அழிவை முழுவதுமாக தடுத்து நிறுத்துவது பற்றி எந்த உடன்படிக்கையும் இந்நாடுகளுக்கு இடையில் ஏற்படவில்லை.என்றாலும் அமேசானைக் காக்க நீடித்த நிலையான வளர்ச்சிக்கு உதவும் பொருளாதார நடவடிக்கைகள், தொழில் வளர்ச்சி அடைந்த நாடுகளில் இருந்து கூடுதல் நிதியுதவியைப் பெறுவதால் அமேசானைக் காப்பாற்ற முடியும் என்று நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது. பிரேசில் மற்றும் கொலம்பியாவில் புதிய ஆட்சியாளர்கள் பொறுப்பேற்றதில் இருந்து கடந்த ஆண்டில் காடுகள் அழிக்கப்படுவது குறைந்துள்ளது.
கடன் தள்ளுபடி, மனித உரிமை மீறல்களைக் குறைப்பது, சட்டவிரோத சுரங்கத் தொழில் மற்றும் மாசுக்கட்டுப்பாடு போன்றவற்றை மேற்கொள்ள உலக நாடுகள் உதவ வேண்டும் என்று மாநாடு வேண்டுகோள் விடுத்துள்ளது.
பணக்கார நாடுகள் ஏழை நாடுகளுக்கு சூழல் சீரழிவுகளால் ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடாக தருவதாகக் கூறிய நிதியுதவியை உடனடியாக வழங்கவும் இந்த நாடுகளின் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
காடுகள் எங்களை இணைக்கிறது. எங்கள் கண்டத்தின் இதயத்தை நாங்கள் வலுப்படுத்த வேண்டும். இன்றும் என்றும் அமேசானின் அடையாளத்தை நாங்கள் காப்பாற்ற வேண்டும். அமேசானே எங்கள் உலகத் தொடர்புகளுக்கான புதிய பாஸ்போர்ட். ஒரு சிலர் மட்டுமே பயனடையும் வகையில் அமேசானின் வளங்கள் சுரண்டப்படுவது தடுக்கப்பட வேண்டும். புதிய முறைமையில் இதன் வளங்கள், சேவைகள் ஒவ்வொரு மனிதரையும் சென்றடைய வேண்டும்.
புவி வெப்ப உயர்வுக்குக் காரணமாக இருக்கும் புதைபடிவ எரிபொருட்களை அமேசானில் தேடுவதை நிறுத்த வேண்டும் என்று கொலம்பிய அதிபப் கஸ்ட்ராவோ பெட்ரோ (Gustavo Petro) கூறுகிறார். ஆனால் பிரேசில், வெனிசுவேலா, மற்ற எண்ணெய் உற்பத்தி நாடுகள் இந்தக் கருத்தை ஏற்கவில்லை. அமேசான் ஆறு உற்பத்தியாகும் இடத்திற்கு அருகில் எண்ணெய் தேடுவதற்காக பிரேசில் அரசின் பெட்ராப்ரஸ் (Petrobras) எண்ணெய் நிறுவனம் அனுமதி கோரியுள்ளது. ஆனால் இது பற்றி பிரேசில் அரசு இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை.
வாழ்வுக்கான போராட்டத்தில் அமேசானின் காடுகள்
அமேசான் பிரதேசத்தில் உள்ள மற்றொரு நாடான கயானா, வரும் ஆண்டுகளில் இப்பிரதேசத்தின் அதிக எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடாக மாறத் திட்டமிட்டுள்ளது. மரணத்திற்கும் வாழ்வுக்கும் இடையில் எண்ணெய் வளம் மிக்க காட்டை அரசியல் எவ்வாறு காக்கப் போகிறது? இம்மாநாட்டில் எந்த உடன்படிக்கையும் ஏற்படாதது ஏமாற்றம் அளித்தாலும் வருங்கால நடவடிக்கைகளுக்கு இது ஒரு நல்ல தொடக்கம் என்று காலநிலை கண்காணிப்புக் குழுவின் செயலாளர் மார்ஸியோ அஸ்ட்ரினி (Marcio Astrini) கூறுகிறார்.
உருகும் பூமியில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். உயரும் வெப்பநிலையின் அளவுகள் தொடர்ந்து முறியடிக்கப்படுகிறது. இந்த நிலையில் அமேசானின் எட்டு நாடுகள் மட்டும் காடுகளை எவ்வாறு பாதுகாக்க முடியும் என்று பிரேசில் சுற்றுச்சூழல் அமைச்சர் மரைனா சில்வா (Marina Silva) கூறுகிறார். அமேசானைப் பகிர்ந்து கொள்ளும் நாடுகள் மீளமுடியாத அளவில் காடுகள் அழிவதைத் தடுத்து நிறுத்தும் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளன.
இப்போது இருக்கும் காடுகளின் பரப்பில் 20 முதல் 25% அழிந்தால் அது எப்போதும் மீட்கப்பட முடியாத நிலைக்கு அமேசானை இட்டுச் செல்லும். இந்த நிலை காட்டின் மரணத்தை குறிக்கிறது. அமேசானின் அழிவு என்பது பூமியின் மழைப்போக்கின் அழிவையே குறிக்கிறது. உலகம் இன்னும் பாலைவனமாக மாறாமல் இருக்க ஒரே காரணம் அமேசான் மட்டுமே.
அமேசான் முதலாளித்துவத்திற்கு பலிகடா ஆக்கப்பட்டது. தொழில் வளர்ச்சி அடைந்த நாடுகளே உலகில் உமிழப்படும் பசுமைக்குடில் வாயுக்களின் உமிழ்விற்கு முக்கிய காரணம்.
விவசாயத்திற்காக அமேசான் தொடர்ந்து அழிக்கப்படுகிறது. இதன் விளைவுகளை அமேசான் நாடுகள் மட்டும் அனுபவிக்கவில்லை. மாறாக உலகம் முழுவதும் அனுபவிக்கிறது.
மழைக்காடுகளைக் காக்கும் ஒபெக் உடன்படிக்கை
ஐநாவின் உயிர்ப் பன்மயத்தன்மை மற்றும் காலநிலை மாற்றத்திற்கான காப் (COP) திட்டத்தின் கீழ் பிரேசில் காங்கோ குடியரசு மற்றும் இந்தோனேஷியாவுடன் காடுகளைக் காக்கும் நோக்கத்துடனான ஓபெக் எனப்படும் ஒத்துழைப்பு உடன்படிக்கையில் கையெழுத்திட்டுள்ளது.
காடுகளை காப்பாற்றும் நோக்குடன் கூடிய இந்த உச்சிமாநாடு நாளை வரலாற்று ரீதியாக அமேசானைக் காக்கும் நல்லதொரு எதிர்காலத்தை ஏற்படுத்துவதில் முதல் படியாக அமையும் என்று சூழலியலாளர்கள் நம்புகின்றனர்.
** ** **
மேற்கோள்கள்:
&
https://www.bbc.co.uk/news/world-latin-america-66446449
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: சுற்றுச்சூழல்
ஓசோன் மண்டலத்தை ஒரு சர்வதேச உடன்படிக்கை மூலம் காப்பாற்றியது போல, பிளாஸ்டிக் பொருட்களைக் கட்டுப்படுத்த உலகளவில் ஓர் உடன்படிக்கை தயாராகிறது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். 1960களில் அறிமுகமானதில் இருந்து பிளாஸ்டிக் உற்பத்தி முப்பது மடங்கு அதிகரித்துள்ளது. ஆண்டுதோறும் 430 மில்லியன் டன் நெகிழிக் கழிவுகளை நாம் உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். இது இப்போதுள்ள 8 பில்லியன் என்ற உலக மக்கத்தொகையின் அளவை விட அதிகம்.
என்றாலும் இதன் உற்பத்தியும் பயன்பாடும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கிறது. 2050ல் இதன் நுகர்வு இரட்டிப்பாகும் என்று அஞ்சப்படுகிறது. இந்த அசுர வளர்ச்சி விரைவில் நிறுத்தப்பட, மீண்டும் நெகிழி இல்லா உலகம் உருவாக சமீபத்தில் பாரிஸில் நடந்த மாநாட்டில் உலக அரசுகள் ஒரு புதிய வரைவுத் திட்டத்தை ஒப்புக் கொண்டுள்ளன. ஆட்சியாளர்கள் மனது வைத்தால் 2040ற்குள் இதன் உற்பத்தியை 80% குறைக்க முடியும் என்று அண்மையில் ஐநா கூறியுள்ளது.
2024ல் நடைமுறைக்கு வரும் என நம்பப்படும் இத்தகைய உடன்படிக்கை, நினைப்பதுபோல அத்தனை சுலபமாக ஏற்படாது என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். 2040ல் கடலில் கொட்டப்படும் இப்பொருட்களின் அளவு இருமடங்காகும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஒரு முறை மட்டுமே பயன்படும் நெகிழிப் பொருட்கள் ஒட்டுமொத்த யுகே நாடு உமிழும் பசுமைக்குடில் வாயுக்களின் அளவைவிட அதிகம்.நுண் பிளாஸ்டிக்குகள் மனித இரத்தம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம் மற்றும் தாய்ப்பாலில் கலந்துள்ளது. கருவுற்ற தாயின் நஞ்சுக் கொடியிலும் காணப்படுகின்றன. இப்பொருட்களில் கலந்துள்ள தீங்கு செய்யக்கூடிய 3200 நச்சுப்பொருட்களால் பூமிக்கும் மனித ஆரோக்கியத்திற்கும் ஏற்படும் பாதிப்பு பற்றி பெரும்பாலானோர்க்கு இன்னும் முழுமையாகத் தெரியாது.
ஐநா சூழல் திட்ட அமைப்பின் (UNEP) 2022 கூட்டத்தில் இதற்கு ஒரு தீர்வு காண உலக அரசுகள் கூடின. இதையடுத்து தொடர் கூட்டங்கள், உடன்படிக்கைக்கான வாய்ப்பு இப்போது ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் பாரிஸில் இதன் இரண்டாவது அமர்வு நடந்தது. அடுத்த இரு கூட்டங்கள் நடைபெறவுள்ளன. கடின உழைப்பு மற்றும் அக்கறை இருந்தால் மாண்ட்ரீல் ஓசோன் உடன்படிக்கை போல வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஓர் உடன்படிக்கை இதிலும் ஏற்படலாம் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர். இத்தகைய ஒன்றிற்காக குப்பை முதல் கடல் வரை, மனித நலம் முதல் காலநிலை மாற்றம் வரை பல்வேறு துறைகளில் ஆர்வமுள்ள பொதுமக்கள் பெரும் ஆதரவு தெரிவிக்கின்றனர்.
இந்த ஆதரவு அரசியல் அழுத்தமாக மாறும் என்ற பெருத்த எதிர்பார்ப்பு இப்போது உருவாகியுள்ளது. இவற்றின் கட்டுப்பாட்டிற்கு புதிய தொழில்நுட்பங்கள் எவையும் தேவையில்லை. ஒரு முறை மட்டும் பயன்படும் நெகிழிகளைக் கொண்டு பொட்டலமிடுதலைத் தவிர்த்தல், மறுபயன்பாட்டை உறுதிப்படுத்துதல், வேதி நெகிழிகளை மக்கக் கூடிய உயிரி நெகிழிகளைக் கொண்டு பதிலீடு செய்தல் போன்ற நமக்குத் தெரிந்த வழிமுறைகளின் மூலம் இவற்றின் பயன்பாட்டை 80% குறைக்கலாம் என்று ஐநா சூழல் அமைப்பு கூறுகிறது.
பெரிய நிறுவனங்கள்
அரசுகள் புதிய நெகிழிகளின் உற்பத்தியைக் குறைக்க அதிக வரிவிதிப்பு, நெகிழித் தொழிற்ஸாலைகளுக்கு வழங்கப்படும் மானிய உதவியைக் குறைப்பது போன்ற நடவடிக்கைகளைத் திட்டமிட்டுள்ளன. ஓசோன் உடன்படிக்கையின் போது நடந்ததுபோல இப்பொருட்களை அதிகம் பயன்படுத்தும் யூனிலிவர் (Unilever), கோக்கோ கோலா (Coca-cola) உட்பட நூறு பெரிய தொழிற்துறையினர் அடங்கிய நெகிழி உடன்படிக்கைக்கான உலகக் கூட்டமைப்பின் வலுவான ஆதரவு இதற்கு உள்ளது.
இதற்கான உயர் குறிக்கோள் கூட்டமைப்பில் (High ambition coalition) இத்தாலி, அமெரிக்கா தவிர மற்ற வளர்ச்சியடைந்த ஏழு நாடுகளின் ஜி7 அமைப்பு உள்ளது. வலுவான ஒரு நெகிழிக் கட்டுப்பாட்டு உடன்படிக்கையை தொடக்கத்தில் எதிர்த்த ஜப்பான் இப்போது மனம் மாறி முழு உடன்படிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. ஐநா சூழல் அமைப்பு வன உயிரினங்கள் பாதுகாப்பு, நச்சுக் கழிவு கட்டுப்பாடு மற்றும் ஓசோன் உடன்படிக்கை போன்ற பல உலக உடன்படிக்கைகள் ஏற்படக் காரணமாக இருந்துள்ளது.
பூமியைக் காக்கும் ஓசோன் அடுக்கை அரிக்கும் நூறு நச்சுப் பொருட்களின் உமிழ்வைத் தடுக்க உலக நாடுகள் அனைத்தும் ஓசோன் உடன்படிக்கை மூலம் ஒரு மனதாக ஒப்புக் கொண்டன. வேறெந்த சர்வதேச உடன்படிக்கை ஏற்படுத்தியதைக் காட்டிலும் இதன் மூலம் பூமியை சூடாக்கி வந்த காலநிலை மாற்றத்தின் தீவிரம் குறைந்தது.
சுலபமானதில்லை எந்த உடன்படிக்கையும்
இதனால் மட்டும் நெகிழிக் கட்டுப்பாடு உடன்படிக்கை சுலபமாக ஏற்படும் என்று எதிர்பார்ப்பது கடினம். ஓசோன் உடன்படிக்கை ஏற்பட்டபோது ஆங்கிலத்தில் இருந்த அதன் உள்ளடக்கத்தின் அம்சங்கள் வலிமையான லாபநோக்குடன் செயல்படும் தனியார் நிறுவனங்களால் மாற்றப்படும் என்ற அச்சத்தினால் ஐநாவின் மற்ற ஐந்து அதிகாரப் பூர்வ மொழிகளில் உடனே மொழிபெயர்ப்பு செய்யப்படவில்லை. இந்த முயற்சிகளுக்கு தடை போட எந்த பன்னாட்டு விதிமுறையையும் பின்பற்றாத இந்தியா, அமெரிக்காவில் உள்ள உற்பத்தியாளர்கள் முயற்சி செய்து வருகின்றனர்.
வெப்ப உயர்வுக்கு முக்கிய காரணம்
99% புதைபடிவ எரிபொருட்களில் இருந்தே தயாரிக்கப்படும் நெகிழிகளே புவி வெப்பமயமாதலிற்கு முக்கிய காரணம். நெகிழி உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் மக்களிடம் பேராதரவை இழந்துள்ள நிலையிலும் இவர்கள் இப்பொருட்களின் கட்டுப்பாட்டுக்கு எதிரான செயல்களைத் தொடர்கின்றனர். பேச்சுவார்த்தைகளில் மூன்று வேறுபட்ட நிலைபாட்டை எடுத்துள்ள குழுக்கள் உள்ளன. பெரும்பான்மையான நாடுகள் உலகளாவிய கட்டுப்பாட்டு விதிமுறைகளையே விரும்புகின்றனர். இதற்கு எதிரானவர்கள் இந்த விதிமுறைகள் மனமுவந்து பின்பற்றக் கூடியவையாக இருக்க வேண்டும் என்று கோருகின்றனர்.
போலி வாதம்
பெரும்பாலான நாடுகள் நெகிழி உற்பத்தி கட்டுப்பாடு மற்றும் ஆபத்தான பொருட்களை தடை செய்ய வேண்டும் என்று விரும்புகின்றன. ஆனால் தயாரிப்பாளர்கள் மறுசுழற்சி மூலம் இப்பிரச்சனைக்குத் தீர்வு காணலாம் என்று போலியான வாதத்தை முன்வைக்கின்றன. பெரும்பாலானவர்கள் வாக்கெடுப்பு மூலம் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தும்போது பலர் வீட்டோ வாக்குரிமையை ஆதரிக்கின்றனர்.
ஒரு மனதான சம்மதத்திற்காக பாரிஸ் கூட்டத்தில் இரண்டு நாட்கள் தீவிர பேச்சுவார்த்தைகள் நடந்தன. ஆனால் இப்பிரச்சனை இன்னும் தீர்க்கப்படவில்லை. இதற்கு நடுவில் இந்த மாற்றங்களுக்கு ஆகும் பொருளாதாரச் சுமையை யார் சுமப்பது என்பது பெரும் கேள்விக்குறியாக எழுந்துள்ளது. எது எப்படி இருந்தாலும் உருப்படியான ஓர் உடன்பாடு ஏற்படும் என்ற நம்பிக்கையுடன் உலகம் காத்திருக்கிறது.
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: சுற்றுச்சூழல்
உலகம் முழுவதும் உள்ள வேளாண் மண்ணை சிறிதளவு மேம்படுத்தினால் அதிக கார்பனை மண்ணில் சேகரிக்கலாம் என்று புதிய ஆய்வுகள் கூறுகின்றன. இதன் மூலம் புவி வெப்ப உயர்வை 1.5 டிகிரிக்குள் கட்டுப்படுத்த முடியும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். மண்ணை வளமுடையதாக்கினால் விளைச்சல் அதிகரிக்கும்.
இதன் மூலம் மண்ணில் கார்பனை அதிக அளவு சேகரிக்கலாம். ஆனால் அதிக அளவு செயற்கை உரங்களைப் பயன்படுத்தி தீவிர விவசாயம் செய்யப்படுவதால் மண் வளம் புறக்கணிக்கப்படுகிறது. நிலத்தில் போடப்படும் பெரும்பாலான செயற்கை உரங்களும் வீணாகின்றன. இது பசுமைக்குடில் வாயுக்களின் உமிழ்வை அதிகரிக்கிறது.
உலகில் பாதி வேளாண் நிலத்தில் 1% கார்பனை கூடுதலாக சேகரிக்க இப்போது உள்ளதை விட சூழலுக்கு நட்புடைய விதத்தில் வேளாண்மையில் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த வேண்டும்.இது மண்ணிற்கு ஆண்டிற்கு 31 கிகாடன்கள் கார்பன் டை ஆக்சைடை உறிஞ்ச உதவும். இது உலகளவில் 2030ம் ஆண்டிற்குள் புவி வெப்ப உயர்வை 1.5 டிகிரிக்குள் கட்டுப்படுத்த இலட்சியமிடப்பட்டுள்ள, ஆண்டிற்கு 32 கிகா டன் கார்பன் டை ஆக்சைடு குறைப்பு என்ற அளவிற்கு நெருக்கமானதே. இந்த ஆய்வுகள் ஐநாவின் சூழல் திட்டத்தின் (UNEP) முன்னாள் தலைமை விஞ்ஞானியும் ஐரோப்பிய சூழல் முகமையின் (EEP)முன்னாள் செயல் இயக்குனருமான ஜாக்கிலேன் மக்லேட் (Jacqueline McGlade) அவர்களின் தலைமையில் நடத்தப்பட்டது.
இதன் மூலம் உலகில் இன்று வளமிழந்திருக்கும் விவசாய நிலங்களின் மேல் மண்ணில் 30% கூடுதல் கார்பனை சேகரிக்க முடியும். மக்லேட் தற்போது மண் வளம் குறித்த விவரங்களை விவசாயிகளுக்கு வழங்கும் டவுன்ஃபோர்ஸ் தொழில்நுட்பம் (Downforce technologies) என்ற நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பேற்று நடத்துகிறார்.
ஒவ்வொரு விவசாயியின் நிலத்திலும் கார்பனின் சேமிப்பு
இந்நிறுவனம் பொதுவெளியில் கிடைக்கும் உலகளாவிய தரவுகள், செயற்கைக்கோள் படங்கள், லைடார் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பெறப்படும் தகவல்களைக் கொண்டு மண்ணில் எவ்வளவு கார்பன் சேகரிக்கப்பட்டுள்ளது என்பதைக் கண்டறிந்து விவசாயிகளுக்குக் கூறுகிறது. இந்த நிறுவனம் ஒவ்வொரு விவசாயியும் பயிர் செய்யும் வேளாண் பரப்பில் சேகரிக்கப்பட்டுள்ள கார்பன் பற்றிய தகவல்களை அளிக்கிறது.
விவசாயிகளைத் தவிர மற்ற பொதுமக்கள் மண்ணின் முக்கியத்துவத்தைப் பற்றி இன்னும் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. காலநிலையில் மண்ணிற்கு ஒரு முக்கிய பங்கு உண்டு. இயற்கையாக பயிர் செய்யும் முறைகளை மாற்றுவது கார்பன் சேகரிப்பை எதிர்மறையானதாக்கி விடும். விவசாய மண்ணே கார்பனை அதிக அளவில் உறிஞ்சுகிறது. சூழலுக்கு நட்புடைய பயிர் முறை குறைந்த செலவில் விவசாயம் செய்யவும் உதவுகிறது.
நீடித்த வளர்ச்சிக்கு இயற்கை விவசாயம்
மிதமிஞ்சிய செயற்கை உரங்கள், வேதிப்பொருட்கள் பயன்பாடு போன்றவை அடங்கிய இன்றைய விவசாய முறையில் இருந்து சூழல் நட்புடைய விவசாய முறைக்கு மாற தொடக்கத்தில் சற்று கூடுதல் செலவாகும் என்றாலும் புதிய முறைக்கு மாறிய இரண்டு மூன்று ஆண்டுகளுக்குள் நல்ல விளைச்சலை எடுக்கலாம். இந்த மண் மற்றவற்றுடன் ஒப்பிடும்போது அதிக ஆரோக்கியம் உடையதாக இருக்கும்.
300,000 பேர் வாழ்ந்துவரும் கென்யாவின் வளமிழந்த 40,000 ஹெக்டேர் பரப்பில் அமைந்துள்ள வேளாண் நிலப்பகுதியை பயிர் செய்ய ஏற்றதாக மீட்டெடுக்க 1 மில்லியன் டாலர் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. நிலம் எவ்வளவு கார்பனை உறிஞ்சியது என்பதைப் பொறுத்து விவசாயிகள் சேகரிக்கப்பட்ட கூடுதல் கார்பனை கார்பன் கிரெடிட் என்ற முறையில் கணக்கிட்டு விற்கலாம்.
கார்பன் கிரெடிட் (Carbon credit) என்பது உமிழப்படும் கார்பன் டை ஆக்சைடை விட அதிகம் சேமிக்கப்பட்டு கார்பன் டை ஆக்சைடின் அளவைக் குறிக்கிறது. இதன் அளவைப் பொறுத்து இது சர்வதேச சந்தையில் மதிப்பிடப்படுகிறது. பின்னர் இது அதிகம் கார்பனை உமிழும் அமைப்புகளுக்கு விற்கப்படுகிறது.
வளமில்லாமல் போன 40% விவசாய மண்
மண் பூமியில் கார்பனை உறிஞ்சும் முக்கிய ஆதாரம். ஆனால் இதுவரை உலகின் குறிப்பிட்ட பகுதிகளில் இருக்கும் விவசாய நிலப்பகுதி மண் எவ்வளவு கார்பனை பிடித்து வைத்துக் கொள்கிறது, எவ்வளவு கார்பன் டை ஆக்சைடை உமிழ்கிறது என்பது பற்றி அறிய முடியாமல் இருந்தது. ஐநா புள்ளிவிவரங்களின்படி இன்று உலகில் உள்ள 40% வளமான மண் தரமிழந்துவிட்டது.
புவி வெப்ப உயர்வு தொழிற்புரட்சிக்கு முன்பிருந்ததைவிட 1.5 டிகிரி செல்சியஸ் என்ற வரையறையை கடந்து கொண்டிருக்கும் நிலையில் காற்றில் இருந்து கார்பன் டை ஆக்சைடைப் பிடித்து ஏதேனும் ஒரு முறையில் சேகரித்து வைக்க கார்பனைக் கைப்பற்றி சேகரித்தல் (Carbbon Capturing System CCS) பற்றி அதிகமாகப் பேசப்படுகிறது. ஆனால் இத்தொழில்நுட்பங்கள் எந்த அளவு பயன் தரக் கூடியவை என்பது பற்றி இன்னும் உறுதியாகத் தெரியவில்லை.
தீர்வு என்ன?
விவசாயிகள் பயிர் சுழற்சி முறையைப் பயன்படுத்தி பயிர் செய்தால் மண்ணில் அதிக கார்பனை சேகரித்து வைக்கலாம். க்ளோவர் (clover) போன்ற கால்நடைத் தீவனமாகப் பயன்படும் புல் போன்றவற்றை வேலியோரங்களில் அதிகமாக வளர்க்கலாம். மைக்ரோரைஸல் பூஞ்சைகள் மற்றும் நுண்ணுயிரிகளை அதிகம் பெற்ற, மண்ணில் பல மீட்டர் ஆழத்தில் வேர்களை ஊன்றி வளர்க்கும் புதர்வகைச் செடிகளை (hedgerows) வளர்ப்பதன் மூலம் அதிக கார்பன் மண்ணில் சேமிக்கப்படுகிறது.
ஆனால் தீவிர வேளாண்மைக்காக விவசாயிகள் இந்த வகைத் தாவரங்களை தங்கள் வயல்களில் இருந்து சுலபமாக அகற்றினர். மீண்டும் இவற்றை வளர்ப்பதன் மூலமும், இருக்கும் இவ்வகை செடிகளை அழியாமல் காப்பதன் மூலமும் உயிர்ப்பன்மயத் தன்மை மேம்படும். மேல் மண் அரிப்பு தடுக்கப்படும். நதிகளை மாசுபடுத்த முக்கிய காரணியாக இருக்கும் தீமை செய்யும் வேளாண் கழிவுகள் மண்ணை நஞ்சாக்காமல் பாதுகாக்கும்.
மண் இல்லாமல் மனிதன் இல்லை. மண் என்னும் மதிப்புமிக்க வளம் பூமியில் இருப்பதால்தான் மனிதன் இங்கு வாழ முடிகிறது. மண்ணை மரணமடையாமல் பார்த்துக் கொள்வது மனித குலத்தின் உணவுப் பாதுகாப்பிற்கு மட்டும் இல்லாமல் புவி வெப்ப உயர்வில் இருந்தும் பூமியைக் காப்பாற்ற உதவுகிறது என்பதை இந்த ஆய்வுகள் நிரூபிக்கின்றன.
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- சூழலுக்காக உயிர் கொடுத்தோர்
- சூடாகும் நகரங்கள்
- எர்த்ஷாட் விருது இந்தியாவிற்கும்
- மரம்
- சூழலியல் மேம்பாட்டில் திமுக அரசு
- மண்வளம் குறைந்தால் மனிதன் அழிவான்
- 2021 ஐந்தாவது வெட்பமான ஆண்டு
- திரைசீலை விழுந்த காலநிலை உச்சி மாநாடு
- புவி வெப்ப உயர்வு: அடைபடும் சாளரங்கள்
- Fukushima அணு உலை விபத்து - பத்தாண்டுகள் கடந்து அங்கு நிலவும் சூழல் என்ன?
- மரண பள்ளத்தாக்கில் பதியப்பட்ட பூமியின் அதிகபட்ச வெப்பமும், கலிபோர்னியாவின் காட்டுத் தீ காலமும்
- கடல் பகுதிகளை அச்சுறுத்தும் கச்சா எண்ணெய் - சுற்றுச்சூழல் பாதிப்பில் மொரிஷியஸ் தீவுகள்
- சுற்றுச் சூழல் தாக்க அறிக்கை 2020 (EIA 2020) ஏன் எதிர்க்கப்பட வேண்டியது?
- இ.ஐ.ஏ 2020 எதிர்ப்புகள் வலுப்பெறுமா?
- சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் போராட்டத்திற்கு மதிப்பளித்த அமெரிக்க நீதிமன்றம்
- 5 டிரில்லியன் பொருளாதாரம்: நாம் கொடுக்கப் போகும் விலை என்ன?
- பிளாஸ்டிக்-ஐ உணவாக உண்டு கரிம உரமாக மாற்றும் காளான்கள்
- சுற்றுச்சூழல் - அறிவியல் அறிஞர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை!
- கனிம எரிபொருள் துறையும், சீரழியும் சுற்றுச்சூழலும்
- பேரழிவினால் நிலை குலைந்திருக்கும் ஆஸ்திரேலியா!