கீற்றில் தேட...
அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: சுற்றுச்சூழல்
வீட்டின் உள் மற்றும் வெளிப்புறங்களில் நிலவும் ஒளி மாசு, இரவு நேரங்களில் குறிப்பாக 65 வயதுக்குட்பட்டவர்களின் அல்சைமர்ஸ் நோயை அதிகரிக்கிறது. இந்த ஆய்வுகள் அமெரிக்க தேசிய ஆரோக்கியம் குறித்த ஆய்வுகளுக்கான நிதியத்தின் உதவியுடன் நடந்தது. இந்த ஆய்வுகள் இரவு நேர செயற்கை ஒளிக்கும் அல்சைமர்ஸ் நோய்க்கும் இடையில் நெருங்கிய தொடர்பு உள்ளதை எடுத்துக் காட்டுகிறது. இது பற்றிய ஆய்வுக் கட்டுரை நியூரோ அறிவியல் முன்னேற்றங்கள் (Frontiers in Neuroscience) என்ற இதழில் வெளிவந்துள்ளது.உள்ளுக்குள் இயங்கும் உயிர் கடிகாரம்
அமெரிக்காவில் 19 மாகாணங்களில் ஒளி மாசு கட்டுப்பாட்டு சட்டங்கள் நடைமுறையில் உள்ள போதிலும் பல இடங்களிலும் இது அதிகமாக உள்ளது. தெரு விளக்குகள், சாலை விளக்குகள், ஒளியூட்டப்பட்ட விளம்பரப் பலகைகள் போன்றவை சாலைகளை பாதுகாப்பானதாகவும் நிலப்பரப்பை தெளிவாகக் காட்ட உதவும் வகையில் அமைக்கப்பட்டிருந்தாலும், தடங்கள் இரவு முழுவதும் எரியும் இவ்விளக்குகளின் ஒளி சூழலியல், நடத்தையியல் மற்றும் ஆரோக்கியத்தில் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
அமெரிக்காவின் பல்வேறு இடங்களில் 2012 முதல் 2018 வரை செயற்கைக்கோள்கள் மூலம் பெறப்பட்ட ஒளி மாசின் அளவுகள், அல்சைமர்ஸ் நோய் விவரங்கள் ஆராயப்பட்டன. சர்க்கரை நோய், உயர்ந்த இரத்த அழுத்தம் போன்றவற்றுடன் ஒப்பிடும்போது இரவு நேர ஒளி மாசு குறைவான அல்சைமர்ஸ் பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஆனால் ஆல்கஹால், தீவிர நாட்பட்ட சிறுநீரக நோய்கள், மன அழுத்தம், இதய செயலிழப்பு, உடற்பருமன் ஆகியவற்றை விட இரவு நேர ஒளி மாசு அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது.
65 வயதுக்கும் குறைவானவர்களில் வேறெந்த நோயை விட இரவு நேர ஒளி மாசு அல்சைமர்ஸ் நோய்க்கு அதிக காரணமாகிறது. இளம் வயதினர் இந்த மாசினால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
“சில வகை மரபணுக்கள் உள்ளவர்கள் உயிரியல் ரீதியான அழுத்தங்கள் காரணமாக அல்சைமர்ஸ் நோயால் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இதனால் இவர்கள் இரவு நேர ஒளி மாசை எதிர்கொள்ள பலவீனமானவர்களாக வாழ்கின்றனர். நகரப்பகுதிகளில் இளம் வயதினர் அதிகமாக வாழ்வதால் அவர்கள் இரவு நேர ஒளி மாசுக்கு அதிகம் ஆளாக நேரிடுகிறது. நம் உடலுக்குள் இயங்கும் உயிர் கடிகாரத்தை சரி வர இயக்குவதில் இரவு நேர ஒளி முக்கிய பங்கு வகிக்கிறது. சுற்றுப்புற சூழலில் ஏற்படும் ஒளியளவில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப நம் மூளையில் செயல்படும் இந்த கடிகாரம் நாம் தூங்குவதையும் விழித்தெழுவதையும் சமிஞ்ஞைகள் மூலம் ஒழுங்குபடுத்துகிறது. இந்த கடிகாரத்தின் சீரிசையை இரவு நேர ஒளி பாதிக்கிறது. இதனால் இளம் வயதினரிடையில் இந்நோய் ஏற்படும் வாய்ப்பு அதிகமாக உள்ளது” என்று ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்களில் ஒருவரும் ரஷ் (Rush) பல்கலைக்கழக மருத்துவ மையத்தின் இணை பேராசிரியருமான டாக்டர் ராபின் வாய்க்ட்-ஸ்யுவாலா (Dr Robin Voigt-Zuwala) கூறுகிறார்.
“உறக்கம் மற்றும் உயிர் கடிகாரத்தின் இயக்கத்தை ஒளி கட்டுப்படுத்துகிறது. மோசமான தூக்கத்தால் இந்த நோய் அதிகமாக வர வாய்ப்புள்ளது. இரவு நேரம் தீவிரமான ஒளியுள்ள இடத்தில் வாழ்வது, குறைவான தூக்கம், பகல் நேரத்தில் அதிக உறக்கநிலை பாதிப்பு, தரமற்ற தூக்கம் பற்றிய அதிருப்தி போன்றவற்றை ஏற்படுத்துகிறது” என்று நியூயார்க் மவுண்ட் சைனாய் (Mount Sinai) அல்சைமர்ஸ் மைய நிபுணர் சாமுயெல் காந்தி (Samuel Gandy) கூறுகிறார்.
“தரமான நல்ல தூக்கம் ஆரோக்கியத்திற்கு அவசியம். இரவு நேர ஒளி மாசு மூளையின் செயல்பாட்டில் குறுக்கிடுகிறது. மூளையின் ஆரோக்கியத்துக்கு உதவும் தூண்களில் ஒன்றான உறக்கம் பற்றிய இந்த ஆய்வு முக்கியமானது” என்று பென்சில்வேனியா பல்கலைக்கழக பென் நினைவாற்றல் ஆய்வு மையத்தின் இணை இயக்குனர் டாக்டர் ஜேய்சன் காலாவிஷ் (Dr Jason Karlawish) கூறுகிறார்.
“சாளரங்கள் வழியாக வரும் ஒளி, சூரிய ஒளி, சமூக, ஆரோக்கியத் துறையில் வேறுபாடுகள், வீட்டுக்குள் இருக்கும் ஒளியால் ஏற்படக்கூடிய பாதிப்பு, கிராம, நகர்ப்புற ஒளி மாசு வேறுபாடு போன்றவற்றை மேலும் தீவிரமாக ஆராய வேண்டும்” என்று அமெரிக்காவில் உள்ள மேயோ (Mayo) க்ளினிக்கல் நரம்பியல் நிபுணர் டேவிட் நாக்மேன் (David Knopman) கூறுகிறார்.
ஒளி மாசால் உருவாகும் தீமைகளை தடுக்க கறுப்பு நிறத் திரைச்சீலைகளைப் பயன்படுத்துதல், முகக்கவசங்களை பயன்படுத்தி கண்களை மூடிக் கொள்வது போன்ற எளிய வாழ்க்கை முறை மாற்றங்களை மக்கள் அனைவரும் பின்பற்ற இந்த ஆய்வுகள் உதவும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
மேற்கோள்: https://www.theguardian.com/us-news/article/2024/sep/06/light-pollution-alzheimers-study?
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: சுற்றுச்சூழல்
உலக உணவு முறையை நீடித்த நிலையான வளர்ச்சி உடையதாக மாற்றினால் ஆண்டிற்கு பத்து டிரில்லியன் டாலர் அளவு பொருளாதார நன்மை ஏற்படும். மனித ஆரோக்கியம் மேம்படும். காலநிலை மாற்றத்தின் தீவிரம் குறையும். இதனால் சிறு மற்றும் குறு விவசாயிகள் பயிர் நிலங்களை வன உயிரினங்கள் கூடுதலாக வாழும் இடங்களாக மாற்றுவர். பயிர் நிலங்கள் கார்பனை உறிஞ்சும் தொட்டிகளாக (Carbon sinks) மாறும் என்று புதிய ஆய்வு கூறுகிறது.
அழிவை உண்டாக்கும் உணவு முறைகள்
இப்போது உள்ள உற்பத்தி முறைகள் நன்மைகளை விட ஆரோக்கியம், சூழல் வள இழப்புகளை ஏற்படுத்துகிறது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். உணவு முறைகளால் ஏற்படும் இழப்புகள் பற்றிய முதல் விரிவான ஆய்வு இதுவே. இன்று நடைமுறையில் இருக்கும் உணவு முறை மருத்துவம் மற்றும் சூழலில் மறைந்திருக்கும் செலவுகளை (hidden costs) ஏற்படுத்துகின்றன.மறைந்திருக்கும் செலவுகள் என்பவை ஏற்கனவே நேரத்தையும் முயற்சியையும் முதலீடு செய்துள்ள பயனர் வாங்குதல் அல்லது பதிவு பெறுதல் செயல்முறைக்கு வரும்வரை அவரிடம் இருந்து மறைக்கப்படும் கட்டணங்கள் அல்லது செலவுகளைக் குறிக்கிறது. இதனால் கூடுதல் மதிப்பை உருவாக்குவதைக் காட்டிலும் இன்று உள்ள உணவு முறைகள் அதிக இழப்பையே உண்டாக்குகிறது.
இதனால் வருங்கால இயற்கை வளங்களை நாம் இன்று கடனாக வாங்கி செலவிடுகிறோம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
உலகின் மூன்றில் ஒரு பங்கு பசுமைக் குடில் வாயுக்களின் உமிழ்விற்கு உணவு முறைகளே காரணம். இது இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் 2.7 டிகிரி செல்சியர்ஸ் வெப்ப உயர்வை ஏற்படுத்தும். வேளாண்மையில் இது தீயவிளைவை உண்டாக்கும் சுழற்சிக்கு காரணமாகும்.
உயர் வெப்பநிலை மேலும் அதி தீவிர காலநிலை மாற்றங்களை உண்டாக்கும். அறுவடையில் இது பெரும் சேதத்தை ஏற்படுத்தும். உணவுப் பாதுகாப்பின்மை மருத்துவ முறைகளின் சுமையை அதிகரிக்கும். இந்த உண்மைகளைப் பொருட்படுத்தாமல் மனித குலம் இப்போது செயல்படுவதைப் போல தொடர்ந்தும் செயல்பட்டால் 2050ம் ஆண்டிற்குள் 640 மில்லியன் பேர் எடைக் குறைவால் பாதிக்கப்படுவர். உடற்பருமன் 70% அதிகரிக்கும்.
“உணவு முறைகளில் மாற்றங்களை ஏற்படுத்துவது, மறுசீரமைப்பது போன்றவை அரசியல்ரீதியாக சவாலானது என்றாலும் அது மிகப்பெரிய பொருளாதார மற்றும் ஆரோக்கிய நன்மைகளைத் தரும்” என்று இது பற்றி ஆராய்ந்த பன்னாட்டு ஆய்வாளர் குழு கூறுகிறது. 2006ல் பிரிட்டிஷ் அரசால் முன்னாள் உலக வங்கி பொருளாதார நிபுணர் சர் நிக்கோலஸ் ஸ்டேர்ன் தலைமையில் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் செலவுகள் பற்றி ஆராய்ந்த குழு அறிக்கை (Stern review) இதையே வலியுறுத்தியது.
“உலக உணவு முறையே வருங்காலத்தில் பூமியில் மனிதனின் வாழ்வைப் பிடித்து வைத்திருக்கிறது. உரங்கள், பூச்சிக்கொல்லிகள், பெருமளவில் மரங்களை வெட்டி காடுகளை அழித்து விவசாயம் செய்யும் ஒற்றைப் பயிர் வளர்ப்பு முறைக்கு கொடுக்கப்படும் மான்ய உதவிகள் பயிர் நிலங்களை கார்பனை உறிஞ்சும் இடங்களாகவும், வன உயிரினங்கள் வாழத் தகுதியான இடங்களாகவும் மாற்றும் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு திசை திருப்பிவிடப்பட வேண்டும். உண்ணும் உணவில் மாற்றம் ஏற்படுத்துவது மற்றொரு முக்கிய அம்சம்.
தீமை தரும் உமிழ்வுகளைக் குறைக்க உதவும், திறனை மேம்படுத்தும் புதிய தொழில்நுட்பங்களில் அதிக முதலீடு செய்யப்பட வேண்டும். 2050ம் ஆண்டிற்குள் உணவுப் பாதுகாப்பின்மை குறையும்போது உலகில் இன்று பல உடல் நலப் பிரச்சனைகளுக்கு காரணமாக இருக்கும் சத்துப் பற்றாக்குறை முற்றிலும் நீங்கும். 174 மில்லியன் குறைப் பிரசவங்கள் தடுக்கப்படும். 400 மில்லியன் விவசாயிகள் வேளாண்மையின் மூலம் போதுமான வருமானத்தைப் பெற முடியும்.
இதனால் தொழிற்புரட்சி காலத்திற்கு முன்பிருந்தது போல புவி வெப்ப உயர்வு 1.5 டிகிரியாக கட்டுப்படுத்தப்படும். பயிர் நிலங்களில் வளம் மிக்க நைட்ரஜன் சத்து இழக்கப்படுவது (Nitrogen run-off) தடுக்கப்படும்” என்று பாட்ஸ்டம் காலநிலை ஆய்வுக்கழகத்தின் (Potsdam Institute for Climate Impact Research ) ஆய்வாளரும் ஆய்வுக் கட்டுரையின் ஆசிரியர்களில் ஒருவருமான ஜோஹன் ராக்ஸ்டெர்ம் (Johan Rockström) கூறுகிறார்.
உணவு முறை மாற்றங்களுக்கு ஆண்டிற்கு உலக உள்நாட்டு உற்பத்தியில் 0.2 முதல் 0.4% வரை செலவாகும் என்று ஆய்வுக்குழு கணித்துள்ளது. பொருளாதாரத்தில் உணவுத் துறையே மிகப் பெரிய பங்கு வகிக்கிறது என்று முந்தைய ஆய்வுகளில் ராக்ஸ்டெர்ம் மற்றும் அவரது ஆய்வுக் குழுவினர் கண்டறிந்திருந்தனர். பூமியால் தாங்கக்கூடிய வரையறையை உடைத்தெறிந்து காலநிலை மாற்றத்தின் தாக்கத்தால் நிலப்பகுதி பயன்பாட்டில் மாற்றம், உயிர்ப் பன்மயத்தன்மை அழிவு, 70% நந்நீர் வளம் குறைய உணவுத் துறையே முக்கியக் காரணியாக அமைகிறது.
இந்த ஆய்வறிக்கை பாட்ஸ்டம் கழகம், உணவு மற்றும் நிலப் பயன்பாட்டிற்கான கூட்டமைப்பு (The Food&Land use Coaalition), ஈட் எனப்படும் ஸ்டாக்ஹோம் உணவு முறை ஆய்வு கூட்டமைப்பு (EAT, a holistic food-system coalition of the Stockholm Resilience Centre), வரவேற்பு அறக்கட்டளை (the Wellcome Trust), ஸ்ட்ராபெரி அமைப்பு (Strawberry Foundation) மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், லண்டன் பொருளாதாரப் பள்ளி உள்ளிட்ட கல்விக்கூடங்களின் நிபுணர்கள் இணைந்து தோற்றுவித்த உணவு முறைகள் மற்றும் பொருளாதார கமிஷனால் ((Food systems Economics commission) தயாரிக்கப்பட்டுள்ளது.
காலநிலை மாற்றம், மனித ஆரோக்கியம், சத்துகள் மற்றும் இயற்கை வள மூலங்களால் உணவுத்துறையில் மறைக்கப்படும் செலவுகளின் மதிப்பு 15 டிரில்லியன் டாலர்களாக இருக்கும் என்று ஆய்வாளர்கள் மதிப்பிட்டுள்ளனர். மாற்றத்தை ஏற்றுக் கொள்ளும் மனித குலத்தின் திறனைப் பொறுத்து காலப்போக்கில் இந்த செலவுகள் எவ்வாறு மாறலாம் என்பதை கணித்துக் கூற ஆய்வாளர்கள் புதிய மாதிரியை உருவாக்கியுள்ளனர்.
2023ல் அதிகாரப்பூர்வ பதிவேடுகளின் கணக்கீடுகளுக்கு அப்பால் உலகளவிலான உணவுப்பொருட்களின் மதிப்பு பத்து டிரில்லியன் டாலர்களுக்கும் கூடுதலாக இருக்கும் என்று கூறிய ஐநா உலக உணவுக் கழக அறிக்கையின் தொடர்ச்சியே இந்த ஆய்வறிக்கை.
“உணவு முறை மாற்றத்திற்கான பிராந்திய மற்றும் உலகளவிலான பொருளாதார வாய்ப்புகளை இந்த ஆய்வு முதல்முறையாக எடுத்துக் கூறுகிறது. உணவு முறைக்கான மாற்றம் சுலபமானதில்லை. ஆனால் உலகளவில் மாற்றம் நிகழவில்லை என்றால் அதனால் அதிகரிக்கும் செலவுகள் வருங்காலத்தில் பொருளாதாரத்தில் பெரும் சுமையை ஏற்படுத்தும். இது நாளை மனிதகுல நன்மைக்கு பெரும் ஆபத்து” என்று ஆக்ஸ்போர்டு சுற்றுச்சூழலியல் மாற்றத்திற்கான ஆய்வுக் கழகத்தின் நிபுணர் டாக்டர் ஸ்டீபன் லார்ட்உ (Dr Steven Lord) கூறுகிறார்.
மனிதன் மாறவில்லை என்றால் உயிர் வாழ அவன் உற்பத்தி செய்யும் உணவு முறைகளால் உருவாகும் இழப்புகளே எதிர்காலத்தில் அவனை அழிக்கும் ஆயுதமாக மாறும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- த.செயராமன்
- பிரிவு: சுற்றுச்சூழல்
புவி வெப்பமடைதலால், பனிப்பாறைகள் உருகி கடல் மட்டம் உயர்வது குறித்து, பல நாடுகள் கவலை அடைந்துள்ளன. கிரீன்லாந்து மற்றும் அண்டார்டிகாவில் உள்ள பனிப்பாறைகள் இப்போது உருகி வருகின்றன. மெல்ல மெல்ல கடல் மட்டும் உயர்ந்து கொண்டே வருகிறது. மாலத்தீவு விரைவில் கடலுள் மூழ்கும் அபாயம் தோன்றியிருக்கிறது. மாலத்தீவு தன் மக்களைக் குடியேற்றிப் பாதுகாக்க வெளிநாட்டில் இடம் வாங்குகிறது. 2050- க்குள் இந்தியாவில் மும்பை உள்ளிட்ட நகரங்கள் கடலுள் மூழ்கும் என்று சூழலியலாளர்கள் எச்சரித்துள்ளனர். உலகில் பல நாடுகளின் நிலப்பகுதிகள் கடலுள் மூழ்குவதால் 150 மில்லியன் மக்கள் பாதிப்புக்கு உள்ளார்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் தலைநகரம் ஜகார்த்தா இடம் மாற்றப்பட இருக்கிறது. அதை ஒட்டிய கடற் பகுதியில் ஓராண்டுக்கு 1.5 சென்டிமீட்டர் கடல் மட்டம் உயர்ந்து வருகிறது. 2050 இல் ஜகார்த்தா கடலில் மூழ்கும் என்று ஆய்வாளர் ஹென்றி ஆண்ட்ரியாஸ் கணித்துள்ளார்.இந்தோனேசியாவின் சில பகுதிகளில் ஆண்டுக்கு 25 சென்டிமீட்டர் அளவிற்கு கடல் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. அதன் அடிப்படையில் கணக்கிட்டால், 10 ஆண்டுகளில் 2.5 மீட்டர் கடல் மட்டம் உயர்ந்து,250 அளவில் ஜகாத் தான் முற்றிலுமாக காணாமல் போகும். அவ்வாறெனில், ஜகார்தாவில் ஒரு கோடி மக்கள் பாதிப்புக்கு உள்ளாவார்கள். இந்தியாவில் மும்பை, கொல்கத்தா, கொச்சி போன்ற நகரங்கள் ஒன்பது ஆண்டுகளில் குறிப்பிட்ட அளவிற்கு கடலில் மூழ்கும் என்று தினமலர் ஏடு 7 நவம்பர் 2021 அன்று செய்தி வெளியிட்டுள்ளது. கடல் மட்ட நீர் உயர்வால் 50 பெரிய கடற்கரை நகரங்கள் கடலில் மூழ்கும் என்ற செய்தி வெளியாகி உள்ளது. 2030-க்குள் மும்பை, கொல்கத்தாவுக்கு தெற்கே உள்ள சுந்தரவனக் காடுகள், கொல்கத்தா, ஒடிசாவில் கட்டாக், குஜராத் கடற்கரையோர நகரங்கள் ஆகியவை குறிப்பிடத்தக்க அளவிற்குக் கடலுக்குள் மூழ்கும். 2100-ல் கடற்கரை நகரங்கள் அனைத்துமே கடலுள் மூழ்கும் அபாயம் காத்திருக்கிறது.
இன்றிலிருந்து 30 ஆண்டுகளுக்குள் ஆயிரக்கணக்கான குட்டித் தீவுகள் கடலுள் மூழ்கி விடும். ஏனெனில், ஒரு வருடத்திற்கு 270 பில்லியன் டன் பனிப்பாறைகள் உருகி கடலில் கலக்கின்றன. கிரீன்லாந்தில் உள்ள பனிப்பாறைகள் உருகினால் கடல் மட்டம் 7 மீட்டர் உயர்ந்துவிடும். ஆஸ்திரேலியாவுக்கும் ஹவாய்க்கும் நடுவில் பசிபிக் கடலில் உள்ள துவாலு (Tuvalu) என்ற தீவு -நாடு மிகப்பெரும் அச்சத்தில் இருக்கிறது. அதிலிருந்த ஒன்பது தீவுகளில் இரண்டு தீவுகள் மூழ்கி விட்டன. மீதி உள்ளவை கடல் மட்டத்திலிருந்து மூன்று மீட்டர் உயரத்தில் உள்ளன. மாலத்தீவுகள், மார்ஷல் தீவுகள், ஃபிஜி தீவுகள், சமோவா தீவுகள் - அனைத்தும் கடலுக்குள் மூழ்கிவிடும் அபாயம் தூரத்தில் இல்லை.
இந்திய நகரங்கள் குறித்து அமெரிக்காவின் நாசா (National Aeronautics and Space Administration) ஓர் எச்சரிக்கையை அளித்துள்ளது. 2050-இல் 12 இந்திய நகரங்கள் கடலுள் மூழ்கும் என்று கூறியுள்ளது. அதுவும் 2.7 மீட்டர் அளவு ஆழத்துக்கும் கீழ் மூழ்கும் என்று தெரிவித்துள்ளது. அந்த அறிவிப்பின்படி, சென்னை, விசாகப்பட்டினம், தூத்துக்குடி, மங்களூர், கொச்சின், மும்பை உள்ளிட்ட நகரங்கள் கடலில் மூழ்கும் அபாயம் உள்ளது.
2024 ஆகஸ்ட் 4 அன்று மாலைமலர் இதழ் ஒரு செய்தியை வெளியிட்டது. 2040-ல் சென்னையின் நிலப்பரப்பில் 7% கடலுள் மூழ்கும் என்று தெரிவிக்கிறது.
1987 - 2021 க்கு இடைப்பட்ட காலக்கடடத்தில், சென்னை கடல் மட்டம் 6.79 மில்லி மீட்டர் உயர்ந்து இருக்கிறது. கன்னியாகுமரி பகுதியில் 2,100-ஆம் ஆண்டளவில் 74. 7 செ.மீ அளவிற்குக் கடல் மட்டம் உயரும் என்று கணக்கிட்டுள்ளனர்.
பெங்களூரில் செயல்படும் அறிவியல் -தொழில்நுட்பம் -மற்றும் கொள்கை ஆய்வு மையம் (CSTEP - The Centre for Study of Science, Technology and Policy) , சென்னை தீவுத்திடல், மயிலாப்பூர், தமிழ்நாடு அரசின் நினைவுச் சின்னம், பள்ளிக்கரணை சதுப்பு நிலம், சென்னை துறைமுகம் உள்ளிட்டவை கடலுள் மூழ்கும் என்று எச்சரித்துள்ளது. சென்னையில் மூழ்க இருப்பதாகக் கூறப்படும் 7.29% நிலப்பகுதி என்பது 86.6 சதுர கிலோமீட்டர் ஆகும். 2060 இல் சென்னை நிலப்பரப்பில் 9.65% , அதாவது சென்னையின் 114.31 சதுர கிலோமீட்டர் கடலில் மூழ்கும்.
இவ்வாறு கடல் மட்டம் உயரும் வேகம் புவி வெப்பமயமாதல் காரணமாக இப்போது அதிகரித்து வருகிறது. 2040-ல் தூத்துக்குடியில் 10% மூழ்கும் என்று தெரிகிறது.
தமிழ்நாட்டில் எண்ணூர் முதல் மகாபலிபுரம் வரை 3029.33 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கடலுள் மூழ்கும் என்று கணித்துள்ளனர்.
காவிரிப் படுகையின் நிலை என்ன?
காவிரிப் படுகையின் அழிவு இரண்டு பங்கு வேகத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. ஒருபுறம், காவிரிப் படுகையின் நிலப்பரப்பு மேலும் மேலும் கீழ்நோக்கி தாழ்ந்து கொண்டிருக்கிறது (subsidence ); அதே நேரம், கடல் மட்டம் உயர்ந்து கொண்டிருக்கிறது. இந்தியாவில் நகரங்களைப் பற்றி பேசும் ஆய்வாளர்களும், அறிவியல் அறிஞர்களும், அரசியல் தலைவர்களும், ஒரு மூலையில் ஒதுங்கி இருக்கும் காவிரிப் படுகை பற்றிப் பேசுவதில்லை. இதில் வியப்பு என்னவென்றால், காவிரிப்படுகை மக்களும், காவிரி படுகையைச் சேர்ந்த அரசியல் ஆளுமைகளும் இது குறித்து சிந்திப்பதில்லை.
காவிரிப்படுகையின் பெரும் பகுதி கடல் மட்டத்தை விட ஒரு மீட்டர் அல்லது மூன்று அடி உயரத்திலேயே இருக்கிறது. இந்த மூன்று அடி உயரம் என்பது விரைவில் கடல் மட்டத்தை விடத் தாழ்ந்து போகும். காவிரிப்படுகையில் ஓஎன்ஜிசியின் எண்ணெய் -எரிவாயுத் திட்டங்களால் நிலம் தாழ்ந்திருக்கிறது என்பது உண்மை. ஓஎன்ஜிசி யின் எண்ணெய் - எரிவாயுத் திட்டங்கள் இன்றளவும் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. எண்ணெய் -எரிவாயு பெருமளவு நீருடன் தொடர்ந்து வெளியேறிக் கொண்டிருப்பதால், நிலத்தின் கீழே ஏற்படும் வெற்றிடத்தைச்சரி செய்ய நிலம் கீழ்நோக்கித் தாழ்கிறது.
வேளாண் மண்டல பாதுகாப்புச் சட்டம் (2020) புதிய கிணறுகளை அமைக்க அனுமதிக்காத நிலையில், பழைய கிணறுகளை மராமத்து செய்யப் போவதாகக் கூறிக்கொண்டு ஒவ்வொரு கிணற்றிலும் 45 முதல் 60 நாட்களுக்கு ஓ.என்.ஜி.சி. வேலை செய்கிறது. பழைய எண்ணெய்க் கிணற்றின் வாய்க்குள் சற்றே சிறிய குழாய்களைச் செலுத்தி, 1500 மீட்டர் ஆழத்தில் பக்கவாட்டில் திருப்பி, பக்கவாட்டுக் கிணறுகளை அமைக்கிறது. அக்கிணறுகள் 3 கிலோ மீட்டர் ஆழம் வரை செலுத்தப்படுகின்றன. ஷேல் அல்லது களிப்பறையில் அக்கிணறுகள் அமைக்கப்படுகின்றன.
காவிரிப் படுகைக்கு அருகாமையில் உள்ள ஆழமற்ற கடற்பகுதி, ஆழமான கடற் பகுதியில் வேதாந்த நிறுவனமும், ஓ எம் ஜி சி நிறுவனமும் பல நூறு எண்ணெய் - எரிவாயுக் கிணறுகள் அமைக்க முன்னமே உரிமங்களைப் பெற்றிருக்கிறார்கள். கடலுக்குள் கிணறுகளை அமைத்தாலும் அது காவிரிப் படுகையை மிகப்பெரும் அளவிற்குப் பாதிக்கும்.
நிலத்தைக் குடைந்து எண்ணெயையும், எரிவாயுவையும் தண்ணீரோடு சேர்த்து பெருமளவுக்கு தொடர்ந்து வெளியேற்றிக் கொண்டிருப்பதால் முன்னமே காவிரிப் படுகையின் நிலப்பரப்பு தாழ்ந்து போயிருக்கிறது. ஓ என் ஜி சி நிறுவனம் எண்ணெய் - எரிவாயு மற்றும் தண்ணீரை தொடர்ந்து உறிஞ்சி எடுக்குமானால், காவிரிப்படுகையில் நிலம் உள்வாங்குதல் விரைவு படுத்தப்படும்.
இதுபோன்றே ஆந்திராவில் கிருஷ்ணா கோதாவரி ஆற்றுப் படுகைப் பகுதிகள் எண்ணெய் - எரிவாயுத் திட்டங்களால் 3 அடி முதல் 6 அடி வரை நிலப் பகுதிகள் தாழ்ந்து போயிருக்கின்றன. இது மிகப்பெரும் கவலையை அப்பகுதி சூழலியலாளர்களுக்கு உருவாக்கி இருக்கிறது. ஜி கிருஷ்ணராவ் என்ற ஆந்திர பிரதேச பல்கலைக்கழகத்தை சேர்ந்த பூகோளவியலாளர், கிருஷ்ணா - கோதாவரிப் படுகையின் உயரம் தாழ்ந்து போவது குறித்து ஆய்வு செய்தார். ஜி. கிருஷ்ணராவ் கிழக்குக் கோதாவரி பகுதி 1.5 அடி முதல் 5.4 அடி வரை நிலப்பகுதி உள்வாங்கி இருக்கிறது என்று அறிவித்திருக்கிறார் ( The Hindu, 23 July 2017 ) . இதை ஆய்வு செய்த ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள படுகை ஆய்வுகள் நிறுவனம் (Delta Studies Institute) தெளிவாக காணக்கூடிய அளவில் நிலத்தில் மாற்றங்கள் ( noticeable land changes) இருப்பதாக அறிக்கை அளித்தது. கிருஷ்ணா - கோதாவரி படுகையில் என்ன நிகழ்ந்திருக்கிறதோ அது காவிரிப் படுகையிலும் நிகழ்ந்திருக்கிறது.
சான்றாக, மயிலாடுதுறை உள்ளிட்ட பழைய நாகப்பட்டினம் மாவட்டத்தின் 165 கிலோமீட்டர் தூரம் உள்ள கடற்கரையின் நிலவியலை ஆய்வு செய்து, அதன் புவியியல் அமைப்பு குறித்து, அது ஒரு "தாழ்வான கடற்கரை மண்டலம்" (the low elevation coastal zone) என்றும், சில பகுதிகள் கடல் மட்டத்தை விடவும் தாழ்வாக இருக்கிறது (below sea level) என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர் (Times of India, 19 July 2023). காவிரிப் படுகையில் பல கிராமங்கள் கடல் மட்டத்திற்கும் கீழே இருக்கின்றன என்பதை அறிய பலருக்கும் வியப்பாக இருக்கும். சில பகுதிகள் மட்டும் 5 மீட்டர் உயரத்தில் இருக்கின்றன. காவிரி படுகையில் 75% நிலப்பரப்பு நிலம் தாழ்ந்து கடலுள் மூழ்கும் நிலையை அடைந்திருக்கிறது என்று டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கில இதழ் ஓர் ஆய்வு கட்டுரையில் தெரிவிக்கிறது ("submergence due to land subsidence" Times of India, 19 July 2023). அது மட்டுமின்றி, படுகையின் பல இடங்கள் கடல் மட்ட அளவிற்கே, சமமாக இருக்கின்றன ( 0 m level).
இந்நிலையில் நம் முன் உள்ள கேள்வி இதுதான். கடல் மட்டத்தை விட அதிக உயரத்தில் இல்லாத காவிரிப் படுகையில், மேலும் நிலம் உள் வாங்கினால், அதே நேரம் கடல் மட்டமும் உயர்ந்து வந்தால், காவிரிப் படுகை என்னவாகும்? காவிரிப் படுகையின் பெரும்பகுதி கடலுக்குள் போய்விடும் என்பதை எவராவது நமக்கு உணர்த்த வேண்டுமா? இப்படி ஓர் அபாயம் இருக்கிறது என்பதை இன்னமும் நாம் உணரவில்லை.
பேரழிவும், பெருந்துயரும் எந்த வடிவத்தில் வேண்டுமானாலும் வரலாம். இன்று நிலச்சரிவு ஏற்பட்டு வயநாடு மண்ணால் மூடப்பட்டிருக்கிறது. நாளை காவிரிப்படுகை பேரழிவுத் திட்டத்தால் நிலம் உள்வாங்கப்பட்டு கடல் நீரால் மூடப்படும். இரண்டிற்கும் இடையில் என்ன வேறுபாடு இருக்கிறது? வரலாற்றுப் புகழ் மிக்க, தமிழர்களின் பண்பாடு செழித்த , ஏராளமான தொல்லியல் சான்றுகளைத் தன் வயிற்றுக்குள் உள்ளடக்கி வைத்திருக்கக் கூடிய, இன்றளவும் தமிழ்நாட்டு மக்களுக்கு சோறு போட்டுக் கொண்டிருக்கும் உணவுக்கலமாக இருக்கக்கூடிய, தமிழ்நாட்டின் பல பகுதிகளுக்குக் கூட்டுக் குடிநீர் திட்டங்களின் மூலம் குடிநீரை வழங்கிக் கொண்டிருக்கக் கூடிய, இந்த காவிரிப்படுகையை இழந்து விட்டால் தமிழினம் வாழுமா?
இன்று வயநாடு, நாளை காவிரிப்படுகை! காவிரிப்படுகையின் இருப்பு தமிழினத்தின் இருப்புக்கு அவசியம்!
- பேராசிரியர் த.செயராமன், தலைமை ஒருங்கிணைப்பாளர் மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு & நெறியாளர், தமிழ்மண் தன்னுரிமை இயக்கம்.
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: சுற்றுச்சூழல்
பூநாரைக்கும் மின் வாகனங்களில் மின்கலங்கள் தயாரிக்க உதவும் லித்தியத்திற்கும் இடையில் என்ன தொடர்பு என்று நீங்கள் நினைக்கலாம். தொடர்பு இருக்கிறது. சிலி ஆண்டர்ஸ் மலைப்பகுதியில் இது பற்றி ராயல் சொசைட்டி (Journal proceedings of the Royal society) ஆய்விதழில் வெளிவந்த கட்டுரை நிரூபித்துள்ளது. இப்பகுதியில் உள்ள உப்புநீர் ஏரிகளில் நடக்கும் லித்தியம் சுரங்கம் தோண்டி எடுக்கும் செயல்களும், காலநிலை மாற்றமும் பூநாரைகளுக்கு ஏற்படுத்தும் பாதிப்புகள் பற்றி இந்த ஆய்வுக்கட்டுரை விரிவாகக் கூறுகிறது.
இப்பகுதியில் வாழும் இரண்டு வகை பூநாரைகளின் எண்ணிக்கையில் கடந்த 11 ஆண்டுகளில் 10 முதல் 12% வரை குறைவு ஏற்பட்டுள்ளதை இந்த ஆய்வு கண்டுபிடித்தது. லித்தியம் தோண்டப்பட்ட ஏரிகளில் மட்டுமே இந்த இரண்டு இனப் பூநாரைகள் இனப்பெருக்கம் செய்து வாழ்ந்து வந்தன. லித்தியம் என்ற தனிமத்தின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது தோண்டி எடுக்கப்படும் இடங்களில் ஏற்படும் உயிர்ப் பன்மயத்தன்மை பாதிப்புகள் பற்றி தீவிரமாக சிந்திக்க வேண்டும் என்று ஆய்வுக்கட்டுரையின் இணை ஆசிரியரும், தெற்கு கரோலினா பல்கலைக்கழக மக்கட்தொகை உயிரியலாளருமான நாதன் சென்னர் கூறுகிறார்.காலநிலை மாற்றத்தினால் உப்புநீர் ஏரிகளில் நீர்மட்டம் குறைவது இப்பறவைகளுக்கு ஏற்பட்டுள்ள மற்றொரு அச்சுறுத்தல். இதன் மூலம் அவற்றிற்குக் கிடைக்கும் உணவின் அளவு குறைகிறது. இது இனப்பெருக்கத்தையும் பாதிக்கிறது. சிலியில் 3000 கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள மிகப் பெரிய அட்டகாமா சால்ட் ப்ளாட்ஸ் என்ற உப்பு ஏரியில் இனப்பெருக்கம் குறைந்ததால் அங்கு இவற்றின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. பொலிவியா பொட்டோசி மாகாணத்தில் உள்ள யுனியுனி உப்பு ஏரியிலேயே உலகின் மிகப்பெரிய லித்தியம் சேகரம் உள்ளது.
இப்பறவைகளை சார்ந்து நடைபெறும் சூழல் சுற்றுலா இப்பகுதியில் சாதாரண மக்களின் முக்கிய வயிற்றுப் பிழைப்பு.
பூநாரைகளின் வாழ்வு கேள்விக்குறியானால் இந்த மக்களே முதலில் பாதிக்கப்படுவர். இப்போது உலகில் உற்பத்தி செய்யப்படும் மொத்த லித்தியத்தில் 29% சிலி நாடே உற்பத்தி செய்கிறது. 2025ல் இதை இரு மடங்காக உயர்த்த அந்நாடு திட்டமிட்டுள்ளது.
இயற்கைப் பாதுகாப்பும் வளர்ச்சித் திட்டங்களும் ஒன்றுக்கு ஒன்று எதிராக செல்வதே பிரச்சனை. உலகில் இன்று வரை கண்டுபிடிக்கப்பட்டதிலேயே மிகப்பெரிய அளவு இந்த தனிமத்தின் சேகரம் உள்ள இடம் பொலிவியா, அர்ஜெண்டினா, சிலி ஆகிய மூன்று நாடுகள் சேர்ந்து உள்ள லித்தியம் முக்கோணப் பகுதியே (Lithium triangle).
லித்தியம் தேடி அலையும் உலகம்
இப்பகுதி ஆங்கில எழுத்து எஸ் வடிவத்தில் கழுத்தும் பிங் நிறமும் உடைய ஆண்டியன், ஜேம்ஸ் மற்றும் சிலியன் என்னும் மூன்று பூநாரை இனங்கள் வாழும் இடம். 2035ல் பெட்ரோல் மற்றும் டீசலைக் கொண்டு இயங்கும் வாகனங்களின் விற்பனையைத் தடை செய்ய ஐரோப்பிய யூனியன் முடிவு செய்துள்ளது. இனி வருங்காலம் மின்சார வாகனங்களின் காலம்.
மின்சார கார்களின் தேவையைப் பொறுத்து அதற்கு உள்ள மின்கலங்களைக் கூடுதலாகத் தயாரிக்க லித்தியத்தின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். இதனால் உலக நாடுகள் லித்தியத்தைத் தேடி அலைந்து கொண்டிருக்கின்றன. இலாபத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு லித்தியத்தை எடுக்கும் சுரங்க நிறுவனங்கள் லித்தியம் சேகரம் உள்ள இடங்கள் எல்லாவற்றிலும் அதைத் தோண்டி எடுக்க அலைகின்றன.
இன்றுள்ள நிலையில் அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா, சீனா, சிலி ஆகிய நாடுகளே இதை அதிகம் உற்பத்தி செய்கின்றன. ஐரோப்பிய நாடுகள் இதுவரை இதன் உற்பத்தியைத் தொடங்கவில்லை. இம்ரைஸ் என்ற பிரான்சின் சுரங்க நிறுவனம் அதற்கு சொந்தமான களிமண் சுரங்கத்தில் லித்தியத்தின் சேகரம் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளது.
அதனால் இதன் உற்பத்தி 2028ல் ஆரம்பிக்கும் என்று நம்பப்படுகிறது. இந்நிறுவனம் ஏழு லட்சம் வாகனங்களை இயக்கத் தேவையான 34,000 டன் லித்தியத்தை இங்கிருந்து உற்பத்தி செய்யத் திட்டமிட்டுள்ளது. இதேபோன்ற ஒரு திட்டம் செர்பியாவில் தொடங்கப்பட்டபோது மக்கள் எதிர்ப்பினால் நிறுத்தப்பட்டது.
இந்தியாவில் ஜம்மு காஷ்மீர் ரியாசி மாவட்டத்தில் 59 லட்சம் டன் அளவு லித்தியத்தின் சேகரம் இருப்பதாக இந்திய புவியியல் ஆய்வுக்கழகம் சமீபத்தில் கண்டுபிடித்துள்ளது. சுழிநிலைக் கார்பனைக் குறிக்கோளாகக் கொண்டுதான் லித்தியம் தோண்டி எடுக்கப்படுகிறது என்றாலும் அதனால் ஏற்படும் சூழல் பாதிப்புகளைக் கண்டுகொள்ளாமல் இருக்க முடியாது என்று சூழல் ஆர்வலர்கள் விஞ்ஞானிகள் கருதுகின்றனர். ஜம்முவிற்கும் காஷ்மீருக்கும் இடையில் இருக்கும் இமாலய பூமி சூழல்ரீதியாக பலவீனமானது.
சுரங்கம் தோண்டுவதால் உயிர்ப் பன்மயத் தன்மை நாசமடையும். காஷ்மீரில் இருந்து 144 கிலோமீட்டர் தூரத்தில் கர்வால் பகுதியில் கடந்த 2022ல் மண் பூமிக்கடியில் புதையுண்டதால் பெருநாசம் நிகழ்ந்த ஜோஷிமட் உள்ளது. ஆய்வாளர்களின் இடைவிடாத முன்னெச்சரிக்கைகளுக்கு இடையிலும் தொடர்ந்து நடந்த விவேகமற்ற வளர்ச்சித் திட்டங்களே ஜோஷிமட் துயர பூமியாக மாறக் காரணம்.
ஒரு டன் லித்தியத்தை உற்பத்தி செய்ய ஏறக்குறைய 2.2 மில்லியன் நீர் தேவைப்படுகிறது. பூமியைத் தோண்டும் சுரங்கங்கள் அணைத்தும் உயிர்ப் பன்மயத் தன்மையை அழிக்கின்றன. நீர் மாசு, நீர்ப் பற்றாக்குறை, காற்று மாசு, நிலத்தடி நீர்மட்டத்தில் குறைவு போன்ற சூழல் நாசங்களை இது ஏற்படுத்துகிறது. சுரங்கம் தோண்டுவதற்கு முன்பும் பின்பும் உயிரினங்கள் மற்றும் சூழல் பாதுகாப்பை உறுதி செய்வதே இப்பிரச்சனைகளுக்கு உள்ள ஒரே தீர்வு.
பூமியின் நண்பர்கள் (Friends of Earth) அமைப்பின் ஆய்வுகள் சுரங்க நோக்கங்களுக்காக பூமியைத் தோண்டுதல் சமூகங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று கூறுகிறது. சிலியில் பழங்குடியின மக்களின் வாழ்க்கை முறை, விவசாய முறை மற்றும் சூழல் வளம் மிக்க பூமியை சுரங்கங்கள் அழித்து விட்டன. இது பற்றிய முதல் ஆய்வு 2022ல் புவியின் எதிர்காலம் (Journal Earth’s future) என்ற ஆய்விதழில் வெளிவந்தது.
அலாஸ்கா ஆங்கரேஜ் பல்கலைக்கழக ஆய்வாளர்களுடன் இணைந்து மாசிசூசெட்ஸ் ஆர்ம்ஹெஸ்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் சிலியில் லித்தியம் சுரங்கங்கள் பற்றி ஆய்வுகளை மேற்கொண்டனர். இவை பயன்படுத்திய நன்னீரின் அளவு 10% என்றாலும் இது நீரின் மறு உற்பத்தியை (water resupply) விட அதிகம்.
லித்தியம் வேண்டுமா, இல்லை அழிவின் விளிம்பில் இருக்கும் ஒரு தாவரம் காப்பாற்றப்பட வேண்டுமா? அமெரிக்கா நவாடா மாகாணம் இந்த இரண்டு கேள்விகளுக்கு இடையில் சிக்கித் தவிக்கிறது. இங்கு மட்டுமே எஞ்சியிருக்கும் டியம்ஸ் பக்வீட் என்ற ஒரு காட்டுப்பூ முற்றிலும் அழியும் நிலையில் உள்ளது.
அமெரிக்காவில் லித்தியம் கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஒரே இடம் இதுதான். லித்தியம் தோண்டி எடுக்கப்பட்டால் இந்த அபூர்வ தாவரமே முதலில் அழிந்து போகும். இச்செடியை பூமியில் இருந்தே முற்றிலும் இல்லாமல் செய்ய ஒரு புல்டோசரும் அரை மணி நேரமும் போதும்! உண்மையில் லித்தியத்தை விட அபூர்வமானதே இந்தத் தாவரம். பூமியில் இது தென்மேற்கு நவாடாவில் ரியோலைட் ரிட்ஜ் என்ற இடத்தில் வெறும் பத்து ஏக்கரில் மட்டுமே மிஞ்சியிருக்கிறது!
அதனால் லித்தியத்தை விட இதுவே விலைமதிப்பு மிக்கது என்று உயிரியல் பன்மயத்தன்மை மையத்தின் (Centre for Biological Diversity) கிரேட் பேசின் இயக்குனர் டாக்டர் பாட்ரிக் டோன்னலி கூறுகிறார். இதனால் இப்பகுதி ஒரே நேரத்தில் இரண்டு சூழல் சவால்களை எதிர்கொள்கிறது. ஒரு பக்கம் புவி வெப்ப உயர்வு. மற்றொரு பக்கம் உயிர் உலகின் ஒரு கன்னியின் இன அழிவு.
இதே நிலையில்தான் இன்று உலகம் உழன்று கொண்டிருக்கிறது. சுய லாபத்திற்காக வளர்ச்சி என்ற பெயரில் நடத்தப்படும் அழிவு வேலைகளா? இல்லை நம்மையும் வருங்காலத் தலைமுறைகளையும் இன்றும் என்றும் அழியாமல் காக்க உதவும் சூழல் வளமா? எது தேவை? யார் முடிவு செய்வது? மக்களாகிய நாம்தான்! கண்ணெதிரே நடக்கும் அழிவு வேலைகளை கைகட்டி வேடிக்கைப் பார்க்காமல் தெருவில் இறங்கிப் போராடத் தயாராவோம்!
** ** **
மேற்கோள்கள்: https://www.mathrubhumi.com/environment/columns/nature-future-column-on-climate-change-and-lithium-mining-influence-in-flamingo-birds-life-span-1.8338741
&
https://www.vox.com/22965660/electric-vehicles-lithium-ion-batteries-flamingos
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- எதிர்பார்ப்புகளுடன் தொடங்கிய ஓர் உச்சி மாநாடு
- உயிர்ப் பன்மயத் தன்மையைக் காக்க ஓர் உச்சி மாநாடு
- மீத்தேனை உண்ணும் பாக்டீரியாக்கள்
- ஒவ்வொரு நாளும் ஒரு மில்லியன் லாரி கடல் மணல்
- பிளாஸ்டிக் கட்டுப்பாட்டை நோக்கி முன்னேறும் உலகம்
- நிலை தடுமாறும் நீலகிரி
- வெப்பத் தாக்குதலுக்கான உலகின் முதல் மாநாடு
- சர்க்கரை நோயை ஏற்படுத்தும் காற்று மாசு
- ஒவ்வொரு மணி நேரத்திற்கும் பதினாறு மில்லியன் டாலர் இழப்பு
- கப்பல்கள் உடைக்கப்படும்போது...
- மாண்ட்ரீல் மாநாடு முடிந்து ஓராண்டிற்குப் பிறகு...?
- காலநிலை மாநாடு - வெற்றியா தோல்வியா? துபாயில் நடந்ததென்ன?
- உணவுப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாகும் புவி வெப்ப உயர்வு
- மழைக் காடுகளைக் காக்க ஓர் உச்சி மாநாடு
- பிளாஸ்டிக் கட்டுப்பாட்டில் ஒரு புதிய நம்பிக்கை
- புவி வெப்ப உயர்வைக் குறைக்க உதவும் மண்
- சூழலுக்காக உயிர் கொடுத்தோர்
- சூடாகும் நகரங்கள்
- எர்த்ஷாட் விருது இந்தியாவிற்கும்
- மரம்