கீற்றில் தேட...
அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- பூவுலகின் நண்பர்கள்
- பிரிவு: சுற்றுச்சூழல்
வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்
1. சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீடு (EIA-Environmental Impact Assessment) என்றால் என்ன?
இந்தியாவில் பெரு நிறுவனங்கள், தொழிற்சாலைகள் அல்லது வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்க வேண்டுமென்றால் சுற்றுச்சூழல் சட்டம் 1986ன் கீழ் அனுமதி பெற வேண்டும். ஒரு தொழிற்சாலைக்கோ, திட்டத்திற்கோ சூழலியல் அனுமதி வாங்க வேண்டும் என்றால், அந்தத் திட்டம் சுற்றுச்சூழலின் மீது ஏற்படுத்தும் தாக்கத்தை ஆராய்ந்து அதை அறிக்கையாக அரசுக்கு அந்த நிறுவனம் சமர்ப்பிக்க வேண்டும்.
இன்னும் எளிமையாகச் சொல்ல வேண்டும் என்றால், உங்கள் குடியிருப்புப் பகுதிக்கு அருகே ஒரு ரசாயன நிறுவனம் கட்டப்பட விருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அந்த தொழிற்சாலை அமையவுள்ள இடம், பரப்பளவு, அதிலிருந்து வெளியேறும் கழிவுகளின் அளவு மற்றும் கழிவின் தன்மை, அதனால் சுற்றுச் சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகள், அருகாமையில் வசிக்கும் மக்களின் உடல் நிலையில் அது ஏற்படுத்தப் போகும் பாதிப்புகள், மக்களின் வாழ்வாதாரத்தில் ஏற்படுத்தும் பாதிப்புகள், இவற்றோடு சூழலியல் பாதிப்புகளைக் களைய சூழலியல் மேலாண்மைத் திட்டம் (EMP-Environmental Management Plan), பாதிப்புகளைக் குறைக்க தணிப்பு நடவடிக்கைகள் (Mitigation Measures), போன்றவற்றை விரிவான ஆய்வு செய்து பின்னர் சம்பந்தப்பட்ட நிறுவனம் தனது சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீட்டில் சமர்ப்பிக்க வேண்டும்.
அரசு சார்பில் அமைக்கப் பெற்ற நிபுணர் குழு அதை ஆய்வு செய்து, சுற்றுச் சூழலுக்கு ஆபத்து இல்லாத திட்டமாக இருப்பின் அனுமதி வழங்கவோ, இல்லாத பட்சத்தில் அனுமதி மறுக்கவோ செய்யும்.
சூழலியல் அனுமதி பெற தற்பொழுது இருக்கும் EIA 2006 Notification இல் உள்ள நடைமுறைகள் பின்வருமாறு:
தற்பொழுது இருக்கும் 2006 EIA வழிகாட்டுதலின்படி தொழிற்சாலைகள் மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் A பிரிவு மற்றும் B பிரிவு என்று இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருக்கின்றன.
A – பிரிவுத் திட்டங்கள்: அணுமின் நிலையங்கள், பெட்ரோல் சுத்திகரிப்பு & பெட்ரோ கெமிகல் நிறுவனங்கள், இரசாயன உரம் மற்றும் பூச்சிக் கொல்லி தயாரிக்கும் நிறுவனங்கள், எரிவாயுக் குழாய் பதிப்பு, பெரிய அளவிலான சுரங்கப் பணிகள், நிலத்தடி எண்ணெய் - எரிவாயு - நிலக்கரிப் படுகை மீத்தேன் எடுக்கும் திட்டங்கள் உட்பட முக்கியத்துவம் வாய்ந்த, அதே நேரத்தில் சூழலுக்கு அதிகம் கேடு விளைவிக்கக் கூடிய திட்டங்கள் A பிரிவுத் திட்டங்களாக வகைப் படுத்தப்பட்டிருக்கின்றன.
B – பிரிவுத் திட்டங்கள்: 50 ஹெக்டேருக்குக் குறைவான சுரங்கப் பணிகள், 500MW திறனுக்கு உட்பட்ட அனல் மின் நிலையங்கள், சர்க்கரை ஆலைகள், சிமெண்ட் ஆலைகள், 500 ஹெக்டேர்கள் பரப்பளவிற்குள் இருக்கும் தொழில் மண்டலங்களில் இயங்கும் தொழிற்சாலைகள் முதலிய திட்டங்கள் B பிரிவுத் திட்டங்கள் என வரையறை செய்யப் பட்டிருக்கின்றன.
இவற்றில் A பிரிவுத் திட்டங்களுக்கு மத்திய நிபுணர் குழுவும் (EAC - Environmental Appraisal Committee) B பிரிவுத் திட்டங்களுக்கு மாநில நிபுணர் குழுவும் (SEAC-State Environmental Impact Assessment Committee) மதிப்பீடு செய்து அனுமதி வழங்கும்.
A, B எந்தப் பிரிவாக இருந்தாலும் சரி அனைத்துத் திட்டங்களுக்கும் சூழலியல் தாக்க மதிப்பீடும் (EIA) மற்றும் பொதுமக்கள் கருத்துக் கேட்பும் 2006 EIA வில் அவசியமாக இருக்கின்றன.
2. EIA 2020 புதிய வரைவில் திட்ட வகைப்பாட்டில் (Project Category) செய்யப்பட்டிருக்கும் மாற்றங்கள் என்ன?
தற்போது அரசு கொண்டு வந்திருக்கும் புதிய வரைவில் திட்டங்கள் A, B1, B2 என மூன்று பிரிவுத் திட்டங்களாகப் பிரிக்கப் பட்டுள்ளன. இதன் படி,
• A பிரிவுத் திட்டங்களை, மத்திய நிபுணர் குழு மதிப்பீடு செய்து அனுமதி வழங்கும். இதற்கு EIA ஆய்வறிக்கை மற்றும் மக்கள் கருத்துக் கேட்பு அவசியம்.
• B1 பிரிவுத் திட்டங்களுக்கு சூழல் தாக்க மதிப்பீடு (EIA) மற்றும் பொது மக்கள் கருத்துக் கேட்பு அவசியம். ஆனால் மாநில நிபுணர் குழு மதிப்பீடு செய்து அனுமதி வழங்கும்.
• B2 பிரிவுத் திட்டங்களை மாநில நிபுணர் குழு மதிப்பீடு செய்து அனுமதி வழங்கும். ஆனால் இதற்கு EIA ஆய்வறிக்கையோ, பொது மக்கள் கருத்துக் கேட்போ தேவையில்லை என்று வரையறை செய்யப்பட்டுள்ளது (பத்தி 5.6).
பொது மக்கள் கருத்துக் கேட்பும் சூழல் தாக்க அறிக்கையும் அவசியமில்லை:
முந்தைய சட்டத்தில் சூழலியல் தாக்க மதிப்பீடும், பொது மக்கள் கருத்துக் கேட்பும் அவசியமாக இருந்த 25 சிவப்பு மற்றும் ஆரஞ்சு வகை நிறுவனங்களை தற்பொழுது B2 பிரிவுக்கு மாற்றியிருப்பதன் மூலம் அவைகளைத் தொடங்குவதற்கு பொதுமக்கள் கருத்துக் கேட்போ, சூழலியல் தாக்க மதிப்பீடோ செய்ய வேண்டியதில்லை என்கிறது இந்த புதிய வரைவு.
இந்த புதிய வரையறையின் படி B2 பிரிவில் குறிப்பிடபட்டிருக்கும் கனிம சுரங்கப் பணிகள் (5 ஹெக்டேர்கள் வரை), 100KM வரையிலான சாலை விரிவாக்கப் பணிகள், உள்நாட்டு நீர் வழிகள், நீர்ப் பாசன நவீன மயமாக்கல் (Modernization), அனைத்துக் கட்டுமானம் மற்றும் நகரியத் திட்டங்கள் (Township projects), அமிலம் தயாரிக்கும் தொழிற்சாலைகள், சிமெண்ட் ஆலைகள், 25MW அளவிலான புனல் மின்சாரத் திட்டங்கள், தொழிற்பேட்டைகளில் (Industrial Estates) இயங்கும் தோல் தொழிற்சாலைகள் மற்றும் முக்கியமாக நீருக்கடியிலும் பூமிக்கடியிலும் இருக்கும் எரிவாயு - நிலக்கரி - எண்ணெய் வளங்கள் - நிலக்கரி படிம மீத்தேன் எடுத்தல் (off shore and onshore oil & gas including Coal bed methane and shale gas exploration) ஆகிய திட்டங்களுக்கு EIA வும் கருத்துக் கேட்பும் அவசியமில்லை (அட்டவணை பக்கம் 123).
தமிழ் நாட்டு மக்களுக்கு புரியும்படி சொல்ல வேண்டுமென்றால் கடலூரில் இருந்து ராமநாதபுரம் வரை காவிரிப் படுகையில் நிலத்தடியிலும் நீருக்கடியிலும் இவர்கள் போடப் போகும் ஆயிரக்கணக்கான ஹைட்ரோ கார்பன் கிணறுகளுக்கான அனுமதியைப் பெற பொது மக்கள் கருத்துக் கேட்போ, சூழலியல் தாக்க மதிப்பீடோ தேவையில்லை. கடந்த ஜனவரி மாதம் இவர்கள் கொண்டு வந்த சட்டத் திருத்தமும் தற்பொழுது கொண்டு வந்திருக்கும் EIA2020 வரைவும் இதையேதான் சொல்கிறது.
விலக்களிக்கப்பட்ட ஆபத்தான திட்டங்கள்:
நிலத்தடியிலிருந்து எடுக்கப்படும் ஹைட்ரோ கார்பனை சுத்திகரிக்கும் தொழிற்சாலையையும் (development production and transportation of gas including shale gas and Coal bed methane), எண்ணெய் வளங்களை சுத்திகரிக்கும் பெட்ரோ கெமிக்கல் தொழிற்சாலையையும் விட (Petroleum refining industries) அதை நிலத்தடியில் இருந்து எடுக்கும் (exploration) நீரியல் விரிசல் (Fracking) முறையே மிகவும் ஆபத்தானது. எடுக்கப்படும் எரிவாயு மற்றும் எண்ணெய் வளங்களைச் சுத்திகரிக்கும் நிறுவனங்களைத் துவங்க சூழலியல் தாக்க மதிப்பீடும், பொது மக்கள் கருத்துக் கேட்பும் அவசியம் என்று சொல்லி A பிரிவில் வைத்துவிட்டு, மிகவும் ஆபத்தான பூமிக்கடியில் இருந்து எரிவாயு - நிலக்கரி - எண்ணெய் வளங்கள் - நிலக்கரிப் படுகை மீத்தேன் எடுப்பதற்கு EIA & மக்கள் கருத்துக் கேட்பு தேவை இல்லை என்று B2 பிரிவில் சேர்த்திருப்பது முரண்பாட்டின் உச்சம்.
ஜனநாயக உரிமை மறுப்பு:
மக்கள் எவ்வளவு எதிர்ப்பு தெரிவித்தாலும் அதைப் பொருட்படுத்தாமல் EIA 2020 சட்டத்தின் அடிப்படையில் சட்டப்படி(!) திட்டத்தை அமல்படுத்தும் முழு அதிகாரத்தை அரசு பெறுகிறது. இத்திட்டங்களுக்கு சூழலியல் அனுமதி கொடுக்கக் கூடாது என்று வலியுறுத்தி தனி நபரோ அல்லது அமைப்புகளோ இயக்கங்களோ நீதிமன்றம் செல்ல முடியாதபடி புதிய வரைவில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
முக்கியமாக தேச நலன், பாதுகாப்பு சார்ந்த திட்டங்கள் (projects concerning national defense and security or involving other strategic considerations) மற்றும் கடலில் 12 நாட்டிக்கல் மைல் தொலைவில் செயல் படுத்தும் திட்டங்கள் ஆகியவற்றை மக்களுக்குத் தெரியப்படுத்தவோ, பொது மக்கள் கருத்துக் கேட்கவோ தேவையில்லை என்றும் சொல்கிறது புதிய வரைவு. இந்த வரையறையின் கீழ், கடல் வளத்தை அழிக்கும் சாகர்மாலா திட்டமும், நாட்டின் லட்சிய திட்டமாக பா.ஜ.க அரசால் கருதப்படும் பாரத்மாலா பரியோஜனா திட்டத்தின் கீழ் வரும் எட்டு வழி சாலைத் திட்டமும், தமிழகத்தை இராணுவ கேந்திரமாக்கும் திட்டமும், ஏன் நம் மலை வளத்தை நாசமாக்கத் துடிக்கும் நியூட்ரினோத் திட்டமும் கூட இதன் அடிப்படையில் மக்கள் கருத்துக் கேட்பு இல்லாமல் நடைமுறைப் படுத்தப்பட்ட வாய்ப்பிருக்கிறது.
இதே போன்று இந்திய எல்லைப் பகுதிகளில் இருந்து 100km வான் தூரம் (aerial distance) வரையிலான நிலப் பகுதிகளில் வர இருக்கும் தேசிய நெடுஞ்சாலை, குழாய் பதிப்புத் திட்டங்களுக்கு கருத்துக் கேட்பு தேவையில்லை என்று புதிய EIA வரைவில் பத்தி 14.2 இல் குறிப்பிட்டிருப்பது, குறிப்பாக வட கிழக்கு மாநிலங்களில் வாழும் மக்களுக்கு அவர்களின் இயற்கை வளங்களையும் வாழ்வாதாரத்தையும் கடுமையாக அச்சுறுத்தும் ஒன்றாகப் பார்க்க வேண்டியிருக்கிறது.
அதே போல் பெரிய அளவிலான சூரிய ஆற்றலில் மின்சாரம் உற்பத்தி செய்யும் சோலார் பூங்கா திட்டங்களுக்கு EIA வில் இருந்தும் மக்கள் கருத்துக் கேட்பில் இருந்து விலக்கு அளித்திருக்கிறது புதிய வரைவு (பத்தி 26.14). புதுப்பிக்கத் தக்க மின்சாரமாக இருப்பினும் மையப்படுத்தப்படாத மின் சக்தியே வேண்டுமென்று சூழலியலாளர்கள் கோரிக்கை வைத்துக் கொண்டிருக்கும் நிலையில், இது போன்ற பெரிய அளவிலான சூரிய மின்சாரத் திட்டங்களுக்கு அதிகப்படியான விவசாய நிலங்களே கையகப்படுத்தப்படும். ராமநாதபுரத்தில் அதானி துவங்க இருக்கும் 4500 கோடி ரூபாய் சூரிய ஆற்றல் மின்சார உற்பத்தி திட்டத்திற்காக விவசாய நிலங்கள் கையகப் படுத்துவதை எதிர்த்து அப்பகுதி விவசாயிகள் போராடி வருவது இங்கே குறிப்பிடத் தக்கது.
ஆபத்தான தொழிற் சாலைகளுக்கு வரவேற்பு:
பூச்சிக் கொல்லி தயாரிக்கும் தொழிற்சாலைகளை A பிரிவில் இருந்து B1 பிரிவுக்கு மாற்றியதன் மூலம் சூழலியல் பாதுகாப்பு முக்கியத்துவம் வெகுவாக குறைக்கப் பட்டிருக்கிறது. இந்தியாவின் மிக மோசமான தொழிற்சாலை விபத்தான போபால் விஷவாயு பேரிடர் நடந்த யூனியன் கார்பைடு நிறுவனம் ஒரு பூச்சிக் கொல்லி தயாரிக்கும் நிறுவனம் என்பதனை இங்கு குறிப்பிடுவது அவசியமாகிறது.
ஏற்கனவே செயல்பாட்டில் இருக்கும் தொழிற்சாலைகள் கூடுதல் விரிவாக்கம் செய்யவோ அல்லது தங்களது உற்பத்தி முறையினை நவீனப்படுத்துவதாக இருந்தாலோ அந்த மாறுதல் மொத்த உற்பத்தியில் 50% க்கு குறைவாக இருக்கும் பட்சத்தில் அந்த விரிவாக்கத்திற்கான சூழலியல் அனுமதி பெற மக்கள் கருத்துக் கேட்பு தேவையில்லை என்று புதிய வரைவின் பத்தி 16.1 சொல்கிறது. எளிமையாகச் சொல்ல வேண்டும் என்றால், ஏற்கனவே மக்களையும் சூழலையும் பாதித்துக் கொண்டிருக்கும் Sterlite ஆலை விரிவாக்கம் செய்து கூடுதலாக உற்பத்தி செய்வதாக இருந்தால் அதற்கு மக்கள் கருத்துக் கேட்பு இல்லாமலே விரிவாக்கத்திற்கான அனுமதி வழங்கப்படும்.
Draft EIA 2020 இருக்கும் மற்ற முக்கிய பிரச்சனைகள்:
1. நீர்த்துப் போகும் பொது மக்கள் கருத்து கேட்பு நடைமுறை:
i.) ஒரு திட்டத்தின் மீது மக்கள் கருத்து சொல்லும் கால அவகாசம் 30 நாட்களில் இருந்து 20 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.
ii.) மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்துவதற்கான கால அவகாசம் 45 நாட்களில் இருந்து 40 நாட்களாக குறைக்கப் பட்டுள்ளது. (Appendix-1 பத்தி 7.1)
மக்களின் கருத்துகளைக் கேட்டறிய உரிய கால அவகாசம் வழங்கப்படாமல் போனால் திட்டத்தினால் பாதிக்கப்படப் போகும் மக்கள் அதைப் பற்றித் தெரிந்து கொள்ளவும், தங்கள் சந்தேகங்களைக் கேட்கவும், பரிந்துரைகளை முன் வைக்கவும், பிரச்சனைகளைச் சொல்லவும் அவகாசம் கொடுக்காமலேயே கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்பட்டால் அதன் நோக்கமே முழுமை அடையாது. அரசு முன்னெடுக்கும் கனிமச் சுரங்கங்கள், நீர்ப்பாசனத் திட்டங்கள், வனங்களை அழிக்கும் நெடுஞ்சாலைத் திட்டங்களை செயல்படுத்தப் போகும் இடங்களில் வசிக்கும் மக்கள் (குறிப்பாகப் பழங்குடியினர்) தகவல் மற்றும் தொலைத் தொடர்பில் பின்தங்கி இருக்கும் நிலையில், கருத்துக் கேட்பின் கால அவகாசத்தைப் குறைப்பதென்பது இந்தியாவின் விளிம்பு நிலை மக்களின் ஜனநாயக உரிமையை முற்றிலும் மறுப்பதற்குச் சம்மாகும்.
2. வலுவிழக்கும் கண்காணிப்பு நடைமுறைகள் :
EIA வைப் பொருத்தவரை சூழலியல் அனுமதிக்குப் பிறகான கண்காணிப்பு நெறிமுறைகள் சூழலியல் பாதுகாப்பில் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை. ஒரு நிறுவனம் தான் சூழலியல் அனுமதி பெறும் பொழுது தனது சூழலியல் மேலாண்மைத் திட்த்தில் குறிப்பிட்டவாறு நடந்து கொள்கிறதா என்று மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கண்காணிக்க வேண்டும். ஆறு மாதங்களுக்கு ஒருமுறை தாங்கள் எந்த சூழலியல் சீர்கேடும் செய்யவில்லை என்பதை அறிக்கையாக மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடம் சம்பந்தப்பட்ட நிறுவனம் சமர்ப்பித்து ஒப்புதல் பெற வேண்டும்.
இப்படி 6 மாதங்களுக்கொரு முறை சூழலியல் இணக்க (Compliance) அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று இருந்ததை தற்பொழுது இந்த புதிய EIA 2020 வரைவின் மூலம் 1 வருடத்திற்கு ஒருமுறை என்று நீட்டித்துள்ளார்கள் (பத்தி 20.4). இதனால் ஒரு நிறுவனம் ஒரு வருடத்திற்கு தொடர்ந்து சூழல் சீர்கேட்டில் ஈடுபட்டாலும் அதிகாரிகளின் பார்வைக்கு அது வருடம் முடியும் வரை வராமல் போவதற்கான வாய்ப்புள்ளது. இங்கே கனிமச் சுரங்கம் போன்ற ஒரு செயல்பாட்டில் ஒரு வருடத்திற்கு விதிகளைப் பின்பற்றாமல் தொடர்ந்து இயங்கி வந்தால் அது திரும்பச் சரி செய்ய முடியாத சூழலியல் சீர்கேட்டிற்கு வழி வகுத்துவிடும் என்பதைக் குறிப்பிட வேண்டியிருக்கிறது.
3. சூழலியல் அனுமதி உரிமத்தின் கால அவகாசத்தை கூட்டுதல்:
சுற்றுச் சூழல் அனுமதி (EC) வாங்கிய பின்னர் திட்டப் பணிகளை நடை முறைப்படுத்துவதற்கான கால அவகாசம் புதிய வரைவில் நீட்டிக்கப்பட்டுள்ளது (பத்தி 19.1.I). உதாரணமாக, சுரங்கப் பணிகளின் கட்டுமானம் மற்றும் ஆரம்பக் கட்டப் பணிகளுக்கான 30 வருட கால அவகாசத்தை 50 வருடங்களாக உயர்த்தி இருக்கிறார்கள். அதே போன்று ஆற்றுப் படுகை மற்றும் அணுவுலைத் திட்டங்களை நடைமுறைப் படுத்த 5 வருடங்களாக இருக்கும் தற்போதைய கால அளவை 15 வருடங்களாக உயர்த்தி இருக்கிறார்கள். தற்பொழுது இருக்கும் சூழலியல் தன்மையை வைத்து கொடுக்கப்படும் சூழலியல் அனுமதி 15 வருடங்களுக்கு பின்பும் அப்படியே பொருந்தும் என்பது எவ்வளவு தவறானது? இது நிச்சயம் சூழலியலில் சரி செய்ய முடியாத பாதிப்பினை ஏற்படுத்தும்.
4. சூழலியல் தாக்க மதிப்பீட்டின் தரத்தை குறைத்தல்:
i.) A பிரிவுத் திட்டங்களுக்கான சூழலியல் தாக்க மதிப்பீடு செய்யும் பொழுது 10 கிமீ சுற்றளவில் ஆய்வுகள் செய்யவும், B பிரிவுத் திட்டங்களுக்கு 5 கிமீ சுற்றளவில் ஆய்வுகள் மேற்கொள்ளவும் புதிய வரைவு பரிந்துரைக்கிறது. சூழலியல் தாக்கம் என்பது ஒவ்வொரு திட்டத்தின் அளவு, கழிவின் தன்மை, திட்டம் செயல்படுத்தும் பகுதியின் சூழலியல் முக்கியத்துவம் ஆகியற்றைப் பொருத்து மாறுபடும் என்பதால் அனைத்துத் திட்டங்களுக்கும் ஒரே வரையறையினை வைப்பது சரியாகாது.
உதாரணமாக எண்ணூர் அனல் மின் நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்காக சூழலியல் தாக்க மதிப்பீடு செய்கிறார்கள் என்று எடுத்துக் கொள்ளுங்கள். உண்மையில் அனல் மின் நிலையத்தின் நுண் துகள்களினால் (Particulate matter) ஏற்படும் பாதிப்புகள் 25 கிமீ தாண்டியும் உணரப்படும் என்பதால், 10 கிமீக்கு மட்டும் சூழல் தாக்க மதிப்பீடு ஆய்வு மேற்கொண்டு அதன் அடிப்படையில் திட்டத்தை நடைமுறைப் படுத்துவது முற்றிலும் தவறாகி விடும்.
ii.) சூழலியல் தாக்க மதிப்பீடு ஆய்விற்கான அடிப்படைத் தகவல்களை (Base line data) சேகரிக்கும் போது வெறும் ஒரு பருவத்திற்கான (season) தகவல்கள் போதுமானது என்கிறது புதிய வரைவு. ஆனால் உண்மையில் கோடை காலம், குளிர் காலம், பருவமழைக் காலம் என அனைத்துப் பருவங்களிலும் ஆய்வுக்கு உட்படுத்திப் பார்க்கும் போதுதான் திட்டத்தினால் ஏற்பட இருக்கும் சூழலியல் தாக்கத்தினை முழுமையாகக் கணிக்க முடியும்.
iii.) முந்தைய சட்டத்தின் படி நிபுணர் குழுவானது திட்டம் எந்தப் பிரிவின் கீழ் வருகிறது என்பதனை ஆராய்ந்து பரிசீலித்து உறுதி செய்வார்கள். சில சமயம் B பிரிவில் வரையறை செய்யப்பட்டிருக்கும் திட்டங்கள் கூட தேர்வு செய்யப்படும் இடம், அதன் சூழலியல் தாக்கம் ஆகியவை கருத்தில் கொண்டு A பிரிவிற்கு மாற்றப்படும். ஆனால் தற்பொழுது திட்டத்தின் பிரிவுகளைப் பரிசீலித்து உறுதிப் படுத்தும் நடைமுறை நீக்கப்பட்டு அனைத்துத் திட்டங்களும் முன் கூட்டியே வரையறை செய்யப்பட்டு விடுகிறது. இந்த மேம்போக்கான சூழலியல் பார்வை நிச்சயம் சூழலியல் சீர்கேட்டிற்கே வழி வகுக்கும்.
iv.) தொழிற் பேட்டைகளுக்குள் அமைந்திருக்கும் MSME (சிறு மற்றும் குறும் தொழில்கள்) அளவுகோலிற்குள் வரும் தொழிற்சாலைகளை B2 பிரிவு எனப் புதிய EIA2020 வரைவு குறிப்பிடுவதின் மூலம் அந்தத் தொழிற்சாலைகளுக்கு சூழல் தாக்க மதிப்பீடு செய்ய வேண்டாம் என்கிறது. உண்மையில் MSME (Medium-Small-Micro-Enterprises) என்பது அந்தத் தொழிலின் முதலீட்டை மையமாக வைத்து வரையறை செய்யப்படுவது. முதலீடு குறைவாக இருப்பதனால் அந்த நிறுவனம் குறைவாக கழிவுகளை வெளிப்படுத்தும் என்பது கிடையாது. உதாரணத்திற்கு MSME வரையறைக்குள் வரும் சாயப்பட்டறைகள் நீர் நிலைக்கு அருகாமையில் அமைக்கப் பெற்றால் அது மோசமான சூழலியல் சீர்கேடு நடக்கக் காரணமாகி விடும்.
5. புகார் விதிமுறைகள் :
EIA 2020 வரைவில் தொழிற்சாலையின் சூழலியல் விதி மீறல்களை யார் யார் புகார் அளிக்கலாம் என்று விதிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் வந்த எந்த EIA சட்ட நடைமுறையிலும் இப்படி இல்லை.
i.) திட்டத்தை செயல்படுத்தக் கூடியவர்கள்
ii.) ஏதாவது அரசுத் துறையினர்
iii.) ஆய்வுக் குழுவோ மதிப்பீட்டுக் குழுவோ ஆய்வுகளை மேற்கொள்ளும் பொழுது.
iv.) ஏதாவது ஒரு ஒழுங்கு முறை விண்ணப்பத்தை செயலாக்க மேற்கொள்ளப்படும் ஆய்வுகளின் சமயத்தில் தெரிய வந்தால்..
இவர்கள் எல்லாம் இது குறித்து சொல்லலாம் என்று EIA 2020 வரைவின் பத்தி 22.1ல் “DEALING OF VIOLATION CASES” என்ற தலைப்பின் கீழ் குறிப்பிடப் பட்டுள்ளது. இதற்கு மற்ற சாமானியர்கள் புகார் அளிக்க முடியாது என்பது தான் அர்த்தம்.
6. தொழிற்சாலைகளின் விதி மீறல்களை தெரியப்படுத்துதல்:
திருடன் கையிலே சாவியைக் கொடுத்தது போல, தொழிற்சாலைகளில் நடந்த சீர்கேடுகளை சம்பந்தப்பட்ட நிறுவனமே மாசுக் கட்டுபாட்டு வாரியத்திடம் தெரியப் படுத்தினால் அபராதம் குறைப்பு செய்யப்படுவதாக புதிய EIA வரைவு சொல்கிறது (பத்தி 22.7). இதனால் விதிமீறல்களை தொழிற்சாலைகள் தெரிவிக்கும் பொழுது அதனைக் குறைத்து, கணக்குக் காட்டித் தப்பித்துக் கொள்ளவே இது வழிவகுக்கும். அரசாங்கத்தின் தீவிர கண்காணிப்பு மட்டுமே இதற்கான தீர்வாக அமையும்.
7. திட்டத்தின் சூழல் தாக்க மதிப்பீட்டிற்கான பிரத்யேக வழிமுறைகளை வகுத்தல் (SCOPING):
தற்பொழுதுள்ள 2006 EIA விதிமுரைகளின் படி சூழலியல் அனுமதிக்காக விண்ணப்பிக்கும் பொழுது, குறிப்பிட்ட திட்டத்திற்காக TOR-Terms Of Reference என்று சொல்லப்படக் கூடிய பிரத்தியேக ஆய்வு வரைமுறைகளை வழங்குவார்கள். இது ஒவ்வொரு திட்டத்தையும் தொழிற்சாலையையும் பொருத்து மாறுபடும். ஆனால் புதிய EIA 2020 வரைவிலோ அப்படி பிரத்தியேகமாக TOR விதிமுறைகளை வழங்காமல் மொத்தமாக அந்தப் பிரிவின் கீழ் வரும் அனைத்து தொழிற்சாலைகளுக்கும் சேர்த்து ஒரே முன்கூட்டியே வரையறை செய்யப்பட்ட TOR அறிக்கையை வெளியிடும். உதாரணமாக விண்ணப்பித்திருப்பது ஒரு இரசாயன ஆலை என்றால் மொத்தமாக எல்லா இரசாயன ஆலைகளுக்குமான TOR ஐ பயன்படுத்தி சூழலியல் தாக்க மதிப்பீடு செய்ய வேண்டியிருக்கும். இது சூழலியல் தாக்க மதிப்பீடு முறையை மேலும் வலுவிழக்கச் செய்யும்.
8. திட்ட செயல்பாட்டிற்கு பிந்தைய சூழலியல் அனுமதி (Post Facto Clearance):
முன்பெல்லாம் சூழலியல் அனுமதி பெற்ற பிறகு தான் ஒரு திட்டத்தையோ தொழிற்சாலையையோ துவக்க முடியும். ஆனால் தற்போதைய வரைவு ஒரு தொழிற்சாலை அதற்கான சூழலியல் அனுமதி பெறுவதற்காக காத்திருக்காமல் தொழிற்சாலையை துவங்கிவிட்டு அதற்கான அபராதத்தையும் கட்டிவிட்டு பின்னர் சூழலியல் அனுமதியைப் பெறும் நடைமுறையை அறிமுகப் படுத்தியுள்ளது. இதே போன்று முதலீடு செய்யும் முதலீட்டாளர்களை நீண்ட நாட்கள் காக்க வைக்கக் கூடாதென்பதற்காக சூழலியல் அனுமதி வழங்குவதற்கான கால அவகாசம் கணிசமாகக் குறைக்கப் பட்டுள்ளது. இவை EIA சட்டத்தின் அடிப்படை நோக்கத்தையே சீர்குலைக்கும் நடவடிக்கையாகும்.
இப்படியாகத் தொழில் நிறுவனங்கள் இலாபமீட்டவும், எளிமையாக தொழில் செய்வதற்காகவும் முதலாளிகளின் காத்திருப்பு காலத்தைக் குறைக்கவும் சூழலியல் பாதுகாப்பிலும் நாட்டின் நீடித்த வளர்ச்சிக் கொள்கையிலும் சமரசம் செய்யும் இந்த EIA 2020 வரைவு நிச்சயம் இந்த நாட்டின் இயற்கை வளத்திற்கும், மக்களின் நலத்திற்கும் பேராபத்து.
பிரச்சனைகளை வரும் முன்னர் நம்முடைய அரசுகள் செயல்பட்டதற்கான தரவுகள் இல்லை. 1984 ஆம் ஆண்டு போபால் விபத்திற்கு பிறகுதான் 'சுற்றுச் சூழல் பாதுகாப்புச் சட்டம்' 1986 ஆம் ஆண்டு இயற்றப்பட்டது. 2004 ஆம் ஆண்டில் சுனாமியால் ஏற்பட்ட அழிவிற்கு பிறகு 'பேரிடர் மேலாண்மை சட்டம்' இயற்றப்பட்டது.
கொரோனா போன்ற தொற்றுகள் அதிகமாவதற்குக் காரணம், காலநிலை மாற்றமும், காடுகள் அழிக்கப்படுவதும் தான் என உலகம் முழுவதிலும் வல்லுநர்கள் தெரிவித்த பிறகு உலக நாடுகள் தங்களுடைய சூழல் சட்டங்களையும், விதிகளையும் மேலும் கடுமையாக்கி வருகின்றன. ஆனால் இந்தியா தான் "தொழில்களை இலகுவாக நடத்த வேண்டும்" என்பதற்காக ஏற்கனவே நீர்த்துப் போய் உள்ள சட்டங்களை மேலும் நீர்த்துப் போகச் செய்ய #EIA2020 போன்ற அறிவிக்கைகளை வெளியிடுகின்றன.
#ScrapEAI2020
- பூவுலகின் நண்பர்கள்
- விவரங்கள்
- ப.தனஞ்ஜெயன்
- பிரிவு: சுற்றுச்சூழல்
இ.ஐ.ஏ என்பது சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு (Environment Impact Assessment 2020) ஆகும். இன்று இருக்கும் அசாதாரண நிலையில் இந்தியா சந்தித்து வரும் கடுமையான காலகட்டத்தில் இந்தத் திட்டத்தை நிறைவேற்றத் துடிப்பதன் பிண்ணணி என்ன என்கிற கேள்விகள் அனைவரிடத்திலும் எழுகிறது. இன்னும் கொரோனா தொற்றிலிருந்தே எந்த ஒரு மனிதருக்கும் உத்திரவாதம் இல்லாத நிலை, புலம்பெயர்ந்த மனிதர்களின் சீரமைக்கப்படாத வாழ்வாதரம், தினந்தோறும் அதிகரிக்கும் வேலையில்லாத் தீண்டாட்டம், அரசின் மீது அவநம்பிக்கை, பேரிடர் கால நிவாரணத் தேக்கம், குழந்தைகளின் கல்வி குறித்த அக்கறையின்மை மற்றும் அன்றாட உணவுக்கான சூழலே திண்டாட்டமாக இருக்கிறபோது எதற்கு இந்தக் கட்டவிழ்த்துவிடும் நிலை?
இந்த இ.ஐ.ஏ திட்டத்தின் மூலம் நமது நாட்டில் எந்த இடத்திலும், உதாரணமாக காஷ்மீர் முதல் கன்னியாகுமாரி வரையிலும் எங்கு வேண்டுமானாலும் எப்படிப்பட்ட தொழிற்சாலைகளை நிறுவிக் கொள்ளலாம், அதற்கு விதிகளைத் தளர்த்துவதுதான் இவர்களது இலக்கு. இன்றைய சூழலில் எவ்வாறு அத்தகைய திட்டங்களை நிறைவேற்றுவது என யோசித்து தனது சதுரங்க வேட்டையை மத்திய அரசு ஆரம்பித்த்உள்ளது.
நாம் அனைவரும் கொரோனா நோய் தொற்றுக்கான தடுப்பு மருந்தினை எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம் அல்லவா, இந்த நேரத்தில் மருந்து நிறுவனங்களை அனுமதிப்பது போன்று தன் வியூகத்தை அமைத்து, செயல்படுவதுதான் அரசின் நோக்கம். சில நாட்களுக்கு முன்பு வேடந்தாங்கலில் இப்படித்தான் பறவைகள் சரணாலயத்தை அழிக்கப் புறப்பட்டிருக்கும் மருந்து நிறுவனங்கள் பற்றிய செய்தி பெரும் அதிர்ச்சியைத் தந்தது. அவர்கள் இயற்கையைப் பற்றி கவலை கொள்வதே இல்லை.
1984 − ஆம் ஆண்டு போபால் விஷ வாயு சம்பவம் ஏற்படுத்திய அதிர்ச்சியையும், இன்றளவும் தொடரும் அதன் துயரங்களையும் யாரும் எளிதில் மறந்து விட முடியாது. தொழிற்சாலை கட்டமைப்புகளின் வரம்பு மீறிய செயலைக் கண்காணிக்க வேண்டும் என்கிற, பெயரளவில் ஏற்படுத்தப்பட்ட நடவடிக்கையாகத்தான் 1986-ல் சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் உருவாக்கப்பட்டது.
அதன் ஒரு அம்சமாக, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு என்கிற சட்ட நடைமுறை 1994-ம் ஆண்டு மத்திய அரசால் வெளியிடப்பட்டது. சுரங்கம், தொழிற்சாலை, அணை போன்ற வளர்ச்சித் திட்டங்களால் நாட்டின் சுற்றுச்சூழலும் வளங்களும் அழிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதுதான் அதன் நோக்கம். ஆனால் அந்த நோக்கத்தின் படிமுறைகள், எந்த ஒரு திட்டத்திலும் இன்று வரை சரியாகவும் துல்லியமாகவும் நடைமுறைப் படுத்தப்படவில்லை.
அண்மையில் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே கோபால்பட்டினத்தில் உள்ள பாலிமர் துறையைச் சார்ந்த ஆலை நிறுத்தி வைக்கப்பட்டு, திடீரென இயக்கும்போது ஏற்பட்ட பேரழிப்பையும், துயரங்களையும் அதற்குள் மறந்துவிட்டோம் அல்லவா? அதனால் தான் அவர்கள் இ.ஐ.ஏ 2020 சட்டத்தைத் துரிதப்படுத்துகிறார்கள்.
தற்போது, சூழலியல் தாக்க மதிப்பீடு - 2006 நடைமுறையில் உள்ளது. அதன் நோக்கமானது, சுற்றுச்சூழலில் ஏற்படுத்தக் கூடிய பாதிப்புகளை முன்கூட்டியே கணித்து, அதைத் தடுப்பது, குறைப்பது, ஒழுங்குபடுத்துவது என்பதுதான். இது மக்களிடம் கருத்து கேட்பது, வல்லுநர்கள் அறிக்கை, ஆய்வுகள் எனப் பல வழிமுறைகளை உள்ளடக்கியது. இத்தகைய வழிமுறைகள் இருந்ததால் தான் நாம் அண்மையில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராகப் போராடி தொழிற்சாலையை நிறுத்தி வைத்துள்ளோம்.
இவ்வளவு கடுமையாகப் போராடிக் கொண்டிருக்கும் இந்த சூழலில் மத்திய அரசின் சுற்றுச்சூழல், காடுகள் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகத்தால் கடந்த மார்ச் 12-ம் தேதி இ.ஐ.ஏ 2020 வெளியிடப்பட்டது. இந்தச் சட்ட வரையறையின் முக்கிய நோக்கம் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு −2006க்கு நேர் எதிரானது. மக்கள் கருத்து கேட்கும் நாட்கள் 60 லிருந்து 40 நாட்களாகக் குறைக்கப்பட்டது, ஆறு மாதத்திற்கு ஒரு முறை என்றிருந்த ஆய்வறிக்கையை அரசே ஓராண்டுக்கு ஒரு முறை சமர்பிக்கும் முறை மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளை விரிவாக்குதல், உள்நாட்டு நீர்த்தடங்கள், நீர்ப்பாசன நவீனமயமாக்கல், அனைத்துவிதமான கட்டுமானத் திட்டங்கள் போன்றவற்றுக்கு விலக்கு அளிப்பது ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளது. இவர்கள் பெரிய அளவில் கொள்ளை லாபம் ஈட்டுவதற்கு, இயற்கையை அழிக்கும் திட்டங்களைப் பயன்படுத்த அனுமதிப்பது சுற்றுச் சூழலுக்கு மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.
எப்பொழுதுமே அரசு மக்கள் நலனையும், சுற்றுச் சூழல் நலனையும் கருத்தில் கொள்ளமால் சட்டவரையறைகளை நடைமுறைப்படுத்தும், அதை எதிர்த்து நாம் குரல் எழுப்பவதும் கடமையாக உள்ள இந்த தேசத்தில், மீண்டும் இந்தத் திட்ட வரையரையை எதிர்த்து வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். அப்படி போராடத் தவறினால், அடுத்த தலைமுறையினர் உடலில் நிரந்தர நோய்ப் பிரச்சனையோடும், இயற்கை நிரந்தர ஊனமாகவும் மாறிவிடும் அளவிட முடியாத அபாயம் உள்ளது.
ஏற்கனவே தொழிற்சாலைக் கழிவுகளால் பெரும்பாலான மாநிலங்கள் பாதிக்கப்பட்டு இருப்பதையும், குடிப்பதற்குக் கூட நீர் இல்லாமல் இருப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். தற்போது தண்ணீர் விற்பனை நடப்பதுபோல், O2 காற்றுப்பைகள் விற்பனையாகும் நிலை வந்துவிடும்.
இந்தச் சட்டவரையறைக்கு எதிராகக் கருத்து கூறும் காலம் வரும் ஆகஸ்டு 11ம் தேதி−2020 வரை உள்ளதால் மக்கள் ஒன்று திரண்ட எதிர்ப்புக் குரலைப் பதிவு செய்ய வேண்டுமென்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், அறிவியலர், இடது சாரி சிந்தனையாளர்கள் மற்றும் பாமர மனிதர்களின் குரல் ஒலிக்க ஆரம்பித்து விட்டது.
இந்தியாவின் பொருளாதாரம் தொழிற்சாலையால் முன்னேறுவதை விட, நம் வாழ்வாதாரமான வேளாண்விளை பொருட்களால் முன்னேற்றமடையச் செய்யலாம். நம் நாட்டின் சுற்றுச் சூழலை அழித்துதான் பொருளாதாரம் மேம்பட வேண்டுமென்றால், அந்த வளர்ச்சி தேவையே இல்லை. வாழும் காலம்வரை மக்கள் ஆரோக்கியமாக வாழ்ந்து விட்டுச் செல்ல வழி விடுங்கள்.
- ப.தனஞ்ஜெயன்
- விவரங்கள்
- பாண்டி
- பிரிவு: சுற்றுச்சூழல்
அமெரிக்காவில் பெரும் சர்ச்சைகளுக்கு உள்ளாகியிருந்த Dakota Access Pipeline திட்டம் சுற்றுச்சூழல் காரணிகளை கருத்தில் கொள்ளாமல் கட்டி முடிக்கப்பட்டது. 2017ல் இந்த வழித்தடத்தில் எண்ணெய்க் குழாய்கள் மூலம் கச்சா எண்ணெய் கொண்டு செல்லப்பட்டது. இந்தத் திட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், இன்னும் முப்பது நாட்களுக்குள் திட்டத்தை மூடிவிட வேண்டும் என்றும் (வரும் ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதிக்குள்), மேலும், இதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் ஆர்மி கார்ப்ஸ் இன்ஜினியர் நிறுவனத்திற்கு அமெரிக்க நீதிமன்றம் (US District court) உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்றத்தின் இந்த உத்தரவை அமெரிக்க பூர்வ குடிமக்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கொண்டாடி வருகின்றனர். அதேவேளையில் கச்சா எண்ணெய்களை எடுத்துச் செல்வதற்கு மாற்று வழியைத் தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள். அதாவது, ரயில்கள் மூலம் கொண்டு செல்லத் திட்டமிட்டு இருக்கிறார்கள்.
Dakota Access Pipeline என்று அழைக்கப்படும் எண்ணெய்க் குழாய் திட்டமானது, அமெரிக்காவின் மேற்குப் பகுதியில் அமைந்திருக்கும் வடக்கு டகோட்டாவில் (North Dakota) ஆரம்பித்து தெற்கு டகோட்டா (South Dakota), அயோவா (Iowa) மாகாணங்களின் வழியே எண்ணெய்க் குழாய்கள் பதிக்கப்பட்டு கடைசியில் இல்லினாய்ஸ் (Illinois) மாகாணத்தில் முடிவதாக அமைக்கப்பட்டு இருந்தது. இதன் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கட்டுமானப் பணிகளை ஆர்மி காப்ஸ் இன்ஜினியர்ஸ் என்ற நிறுவனம் மேற்கொண்டது.
குழாய்கள் பதிக்கும் கட்டுமானப் பணிகள் முடிந்த பின்னர் அதில் எண்ணெய் கொண்டு செல்லும் பணி Energy transfer என்ற நிறுவனம் மூலம் மேற்கொள்ளப் பட்டது. இது வடக்கு டகோட்டாவின் வட மேற்கு பகுதியான டிக்கின்சன் நகரத்தில் இருந்து 100 மைல்கள் தொலைவில் உள்ள 'Bakken oil fields' என்ற எண்ணெய் வயல்களில் ஆரம்பித்து, கிட்டத்தட்ட 1200 மைல்கள் அளவில் அமைக்கப்பட்ட நீண்ட எண்ணெய்க் குழாய் வழித்தடம்.
இந்தத் திட்டத்தை ஆரம்பித்ததிலிருந்தே பூர்வகுடி மக்கள் இதற்கு எதிராகப் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தார்கள். பல தரப்பட்ட போராட்டங்களுக்கு மத்தியில் தான் 'ஆர்மி கார்ப்ஸ் இன்ஜினியர்' என்ற அமைப்பின் உதவியோடு 2017 ஆம் ஆண்டு இந்தத் திட்டம் நிறைவடைந்து, குழாய்களின் வழியாக எண்ணெய் ஓடத் தொடங்கியது. இந்தத் திட்டத்திற்கான மொத்த மதிப்பீடு 3.8 பில்லியன் டாலர்கள் ஆகும். ஒரு நாளைக்கு சுமார் 5,70,000 பீப்பாய் (barrel) எண்ணெய் இந்த வழித்தடத்தில் ஓடியது.
அமெரிக்காவில் வசித்து வரும் பூர்வகுடி மக்களின் நிலப்பரப்புகளையும், நீர்நிலைகளையும் பாதுகாக்க 'National Historic Preservation Act' போன்ற வழிகாட்டு நெறிமுறைகள் இருக்கின்றன. ஆனால், இதில் உள்ள விதிமுறைகள் எதையுமே சரியாகக் கருத்தில் கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு ஆர்மி காப்ஸ் இன்ஜினியர்ஸ் நிறுவனத்தின் மீது வைக்கப்பட்டது. ஒரு வகையில் பார்த்தால் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி முழு கட்டுமானப் பணிகளையும் முடித்தது இந்த நிறுவனம்.
இரண்டு டகோட்டா மாகாணங்களில் பரவலாக வசித்து வரும் Rock Sioux Tribes என்ற பழங்குடியினர் 'இந்த எண்ணெய் வழித்தடம் எங்கள் நிலப்பகுதிகளில் கடந்து சென்றால் நாங்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவோம்' என்று பல கட்ட போராட்டங்களை நடத்தினார்கள். குறிப்பாக எண்ணெய்க் குழாய் கடந்து செல்லும் மிசூரி ஆற்றின் குறுக்கே தண்ணீருக்கு அடியில் செல்வதாலும் பூர்வகுடிகளின் குடிநீர் ஆதாரமே பாழாகி விடுவதாக இருந்தது.
2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் அன்றைய ஜனநாயகக் கட்சியின் அமெரிக்க அரசாங்கத்தில் அதிபர் ஒபாமா, மிசூரி ஆற்றின் கீழே செல்லும் எண்ணெய்க் குழாய் திட்டத்திற்கு தடை விதித்திருந்தார். எனினும் அதற்குப் பிறகு ஆட்சியும் மாறியது, பின்னர் வந்த குடியரசுக் கட்சியின் அதிபர் டிரம்ப், ஒரு சிறப்பு உத்தரவு மூலம் (Excutive Order) அதே பாதையில் இந்தத் திட்டத்தைத் தொடர்ந்து நடைபெறுமாறு கட்டளையிட்டார். இந்த முடிவைக் கண்டு பூர்வகுடி மக்கள் கொதித்தெழுந்தனர். டிசம்பர் மாதத்தின் கடுங் குளிரிலும், கொட்டும் பனியிலும், குடும்ப உறுப்பினர்களோடு பூர்வ குடிகள் போராடினார்கள். தங்கள் தரப்பு வாதங்களை எடுத்து நீதிமன்றத்தின் கதவை நாடினார்கள். எனினும் நாட்டின் வளர்ச்சித் திட்டங்கள் தான் முக்கியம் என்று தீர்மானமாக 2017ல் இந்தத் திட்டம் நிறைவடைந்து, எண்ணெய் இந்தக் குழாய்களின் வழியே பாயத் தொடங்கி விட்டது.
"எங்களது பூர்வகுடி மக்களுக்காகவும் நிறத்திற்காகவும் ஆதரவாக நின்ற பொது மக்களுக்கும், இந்தத் திட்டத்தை ஆரம்பம் முதலே எங்களோடு எதிர்த்து கூடவே வந்த சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கும் இன்றைய தினம் (ஜூலை 6, 2020) ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நாள் ஆகும்" என்றார் Rock Sioux Tribe-ன் நிர்வாகத் தலைவர் Mike Faith.
பூர்வகுடி மக்களின் சார்பாக வாதாடிய 'Earth justice' என்ற அமைப்பின் வழக்குரைஞர் Jan Hasselman கூறுகையில், "இந்தத் திட்டம் பூர்வகுடி மக்கள் பகுதியில் எப்போதுமே நிறைவேற்றக் கூடாது. இன்றைய தீர்ப்புக்காக 4 ஆண்டு காலமாக காத்திருந்தோம். கடைசியில் நீதி நாட்டின் பூர்வகுடி மக்களின் பக்கமாகவே நின்றிருக்கிறது. இது எங்களுக்கு மகிழ்ச்சி" என்றார்.
கிட்டத்தட்ட நான்கு பில்லியன் டாலர் அளவுக்கு செலவுகள் செய்து, கடந்த மூன்று ஆண்டுகளாக இயங்கிக் கொண்டிருந்த திட்டத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என்ற உத்தரவு, இதை நடத்தி கொண்டு வந்த கூட்டு நிறுவனங்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எரிசக்தித் துறையில் இருக்கும் நிறுவனங்கள் என்னவிதமான அறிக்கைகளை விடுவார்களோ, அதேபோல் தான் இதிலிருக்கும் முக்கிய நிறுவனம் ஒன்றும் அறிக்கை வெளியிட்டது.
இந்தத் தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்திருந்த Energy transfer நிறுவனம். "நீதிபதி வழங்கியிருக்கும் இந்தத் தீர்ப்பு சட்டத்திற்குப் புறம்பானது, தனக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரத்துக்கு மாறாக செயல்பட்டிருக்கிறார் நீதிபதி. திட்டத்தை மூடச் சொல்வதன் மூலம் பல பில்லியன் டாலர்கள் மதிப்பிலான வருவாய் இழப்பு ஏற்படும். மத்திய மேற்கு மாகாணங்கள் வழியாக ரயிலில் எண்ணெய் எடுத்துச் செல்வதால் பருவகாலப் பயிர்களுக்கு பாதிப்பு ஏற்படலாம். நாட்டின் எண்ணெய் விற்பனை சங்கிலி மேலாண்மைக்குத் தட்டுப்பாடும், எண்ணெய் பற்றாக்குறைக்கும் இது வழி வகுக்கும். இந்த எண்ணெய்க் குழாய் திட்டம் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு ஏற்றவாறு தான் அமைக்கப்பட்டது. கடந்த மூன்று ஆண்டுகளாக எந்தவித சிக்கலும் இல்லாமல் எண்ணெய் ஓடிக் கொண்டிருக்கிறது" என்றது.
பெரும் மூலதனத்தை இறக்கி, அதில் வருவாய் இழப்பதாக இருக்குமாயின் முதலாளிகளுக்கு வருத்தத்தைத் தானே ஏற்படுத்தும். சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாமல் திட்டத்தை நடைமுறைப் படுத்துகிறோம் அவர்கள் கூறினாலும் நடைமுறையில் அவ்வாறு செயல்படுவது இல்லை. இதற்கு நீதிமன்றத்தின் தீர்ப்பு சான்றாக உள்ளது.
கடந்த மே மாதம் உலகளாவிய அளவில் புதைபடிவ எரிபொருள்களின் தேவை குறைந்தது. இதனை அடிப்படையாகக் கொண்டு பல பெட்ரோலிய நிறுவனங்கள் தங்களது சுத்திகரிப்பு ஆலையில் அதன் உற்பத்தியை குறைத்துக் கொண்டார்கள். அதேவேளையில் எண்ணெய் வயல்களில் இயங்கிக் கொண்டிருந்த கச்சா எண்ணெய் எடுக்கும் இயந்திரங்கள் நிறுத்தப்படவில்லை. மாறாக அவர்கள் குறைந்த விலைக்கு கச்சா எண்ணெய்யை விற்பனை செய்து கொண்டிருந்தார்கள். ஒரு பேரல் கச்சா எண்ணெய் ஒரு டாலருக்கும் குறைவாக சென்றது. கச்சா எண்ணெயின் விற்பனை குறைவாக இருப்பதால் அதன் உற்பத்தியை நிறுத்தி விடலாமே என்ற கேள்வி எழுந்தபோது, எண்ணெய் வயல்களில் இயங்கிக் கொண்டிருக்கும் இயந்திரங்களை ஒரு முறை நிறுத்தி விட்டால் மீண்டும் அதே இடத்தில் கச்சா எண்ணெய் கிடைக்கும் என்பதற்கு சாத்தியக் கூறுகள் குறைவாகவே இருக்கின்றன என்பதால், கச்சா எண்ணெய் கிணறுகள் மூடப்பட வில்லை.
கைவிடப்பட்ட Atlantic Coast Pipeline திட்டம்
டகோட்டா எண்ணெய்க் குழாய் திட்டம் குறித்து தீர்ப்பு வருவதற்கு ஒரு நாள் முன்னர், ஜூலை 5 ஆம் தேதி இன்னொரு சர்ச்சைக்குரிய எண்ணெய்க் குழாய் 'Atlantic Coast Pipeline' திட்டத்தை மேற்கொண்ட நிறுவனங்களே (Dominion energy and Duke Energy) சுற்றுச்சூழலை, மற்றும் சட்டச் சிக்கல்களைக் (legal uncertainty) காரணமாகக் கொண்டு திட்டத்தை நிறுத்தி விடுவதாக அறிவித்திருந்தார்கள்.
இந்த செய்தி உள்ளூர் மக்களுக்கும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கும் மகிழ்ச்சி அளித்திருக்கிறது. இந்தத் திட்டமானது மேற்கு வர்ஜீனியா, வெர்ஜீனியா, மற்றும் வடக்கு கரோலினா வழியாக சுமார் 600 மைல்கள் தொலைவிற்கு அமைக்கப்படுவதாக இருந்தது. 2014 ஆம் ஆண்டு இந்தத் திட்டத்திற்கான முழு வடிவமைப்பு வெளியிடப்பட்டு, அதோடு திட்டமும் ஆரம்பிப்பதாக இருந்தது. ஆனால், சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் தொடர் போராட்டத்தினால் திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. எனினும் 2017 ஆம் ஆண்டு முழுவீச்சில் அதனை நடைமுறைப்படுத்த அந்த நிறுவனம் வேலைகளை ஆரம்பித்து இருந்தது.
இந்த நிறுவனத்தின் சார்பாக வெளியிட்டிருந்த அறிக்கையில், "கடந்த ஆறு ஆண்டுகளாக இந்தத் திட்டத்தில் பணியாற்றிய ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இந்தத் திட்டம் குறித்தான பின்னூட்டங்கள்/ விமர்சனங்கள் அளித்த உள்ளூர் மக்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், சமூக நீதி நிறுவனங்கள் போன்றவர்களுக்கு மதிப்பளிக்கும் வகையில், சட்டச் சிக்கல் மற்றும் சுற்றுச்சூழல் காரணிகள் இருப்பதால் இந்தத் திட்டத்தை கைவிடுகிறோம். எனினும் நாட்டின் எரிசக்தி தேவை நாளுக்கு நாள் அதிகரிப்பதால் இவை சவாலான காரியமாக உள்ளது." என்று குறிப்பிடப் பட்டிருந்தது.
Atlantic coast pipeline எண்ணெய்க் குழாய் திட்டம் கைவிடப்பட்டுள்ளது என்ற செய்தியை அறிந்த அமெரிக்க எரிசக்தித் துறை செயலாளர் Dan Brouilette அவர்கள், "திட்டம் கைவிடப்படுவதற்கு அரசியல் செல்வாக்கு மிக்க சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தான் காரணம்" என்றார். மேலும் அவர், "இதனால் முழுக்க முழுக்க பாதிக்கப்படப் போவது கடைசி பயனாளிகளான பொது மக்கள் மட்டுமே. அவர்கள் பயன்படுத்தும் எரிவாயு/ எரிபொருளுக்கு அதிக செலவு செய்து தங்களது தேவையைப் பூர்த்தி செய்யும் நிலை ஏற்படும்" என்றார்.
எண்ணெய் வயல்களில் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய், மற்றும் எண்ணெய்க் கொள்முதல் நிலையங்களில் இருக்கும் எண்ணெய்களை ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு, பெரும்பாலும் கடல் மார்க்கமாகவும், உள்நாட்டில் என்றால் இரயில்கள் மூலமாகவும், அல்லது தரை வழியாகவும் எடுத்துச் செல்லப்படுகிறது. இதற்கு மாற்றாக வேகமாக எடுத்துச் சொல்வதற்காகத் தான் எண்ணெய்க் குழாய் போன்ற திட்டங்களை ஏற்படுத்துகிறார்கள். காலங்காலமாக கச்சா எண்ணெய்யை அல்லது இயற்கை எரிவாயுக்களை ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குக் கொண்டு செல்ல பயன்படுத்தும் போக்குவரத்து முறைகளினால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படாதா என்ற கேள்விகள் எழும். எல்லாப் போக்குவரத்து முறைகளிலும் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படத்தான் செய்கிறது. இருந்தாலும் எண்ணெய்க் குழாய்கள் திட்டத்தை மூடுவதன் மூலம் பெருமளவிற்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும், நீர் நிலைகளின் பாதுகாப்பிற்கும் வழி ஏற்படும் என்றே நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
(நன்றி: https://www.npr.org/tags/492631446/dakota-access-pipeline)
- பாண்டி
- விவரங்கள்
- பரிதி
- பிரிவு: சுற்றுச்சூழல்
இந்தியப் பொருளாதாரத்தை 2024-க்குள் ஐந்து லட்சங் கோடி டாலர் மதிப்புள்ளதாக மாற்றுவது தன் குறிக்கோள் என்று இந்தியத் தலைமை அமைச்சர் மோடி 2019 சூலையில் அறிவித்தார்.
இந்தியாவின் பொருளாதாரத்தை 'வளர்க்கும்' நோக்கில் மேலும் பன்னிரண்டு அணு மின் உலைகள், நிலக்கரியைப் பயன்படுத்தும் அனல் மின் நிலையங்கள், புதிய அணைகளைப் பயன்படுத்தும் புனல் மின் நிலையங்கள் ஆகியவற்றை நிறுவப் போவதாக 2018 பிப்ரவரியில் நடுவணரசு அறிவித்தது. புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தியை 2022-க்குள் 1,75,000 மெகாவாட் அளவுக்கு அதிகரிப்பதும் அரசின் குறிக்கோள்களில் ஒன்று.
1990-களில் தொடங்கி இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை (GDP) அதிகரிப்பதில் அரசுகள் முனைப்பு காட்டி வருகின்றன. அதற்குத் தேவையான பொருளாதார 'வளர்ச்சி'க்கும், சூழல் பாதுகாப்புக்கும் போட்டி இருப்பதைப் போன்ற தவறான கருத்தாக்கம் நீக்கமறப் பரப்பப்பட்டுள்ளது.
இப்போது நடைமுறையில் இருக்கும் பொருளாதார முறைமையில் தொடர்ந்து மொத்த உள்நாட்டு உற்பத்தியைப் பெருக்குதல் (அதாவது, 'பொருளாதார வளர்ச்சியைப்' பெருக்குதல்) என்பதில் பின்வரும் கூறுகள் அடங்கும்:
1) பெரும் எண்ணிக்கையில் தொழிற்சாலைகளை நிறுவுதல்;
2) இரும்பு, எஃகு, சிமென்ட், வேதிப் பொருள்கள் போன்றவற்றைப் பெருமளவு நுகர்தல் (பயன்படுத்துதல்);
3) நிலம், நீர், கனிமங்கள், மரம் உள்ளிட்ட கான் விளை பொருள்கள் ஆகியவற்றின் தேவை அளவுமீறி வளர்தல்;
4) விளை நிலங்களையும் காடுகளையும் வேறு நோக்கங்களுக்கு மாற்றித் தருமாறு பெரு நிறுவனங்கள் அரசுக்கு அழுத்தந் தருதல்;
5) பெட்ரோலியம், நிலக்கரி, மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு வகையான ஆற்றல்களின் தேவை பெருகுதல்;
6) நகர்மயமாதல் வேகம் அதிகரித்தல்;
7) வானூர்தி நிலையங்கள், விடுதிகள், பெரிய தொகுப்புக் கடைகள் (shopping malls), தனியார் ஊர்திகள், விரைவுச் சாலைகள் போன்றவற்றை அதிகரித்தல்.
இவற்றைச் செயல்படுத்தும்போது பசுங்குடில் வளி வெளியீடு, இயற்கை அழிப்பு, இயற்கைச் சூழல் கேடுகள், கழிவுகள் ஆகியவை பெருகும். 2019-இல் அரசு வெளியிட்ட தேசிய வளங்களின் [பயன்பாட்டுச்] செயல்திறன் திட்டக் கொள்கை (National Resource Efficiency Policy) முன்வரைவு பின்வரும் சிக்கல்களைக் குறிப்பிடுகிறது:
1) பல இன்றியமையாத மூலப் பொருள்களுக்கு இறக்குமதியைப் பெருமளவு சார்ந்திருக்கும் நிலை;
2) நிலப் பரப்பில் முப்பது விழுக்காடு தரங்குன்றி இருத்தல்;
3) உலகளவில் வேளாண்மைக்கென நிலத்தடி நீரைப் பயன்படுத்துவதில் முதலிடத்தில் இருத்தல்;
4) உலகக் கரியீருயிரகை வெளியீட்டில் 6.9% வெளியிட்டு மூன்றாமிடத்தில் இருத்தல்;
5) மறுசுழற்சியில் மிகக் கீழ் நிலையில் இருத்தல் (வளர்ந்த நாடுகள் 70%, இந்தியா 20-25%);
6) உலகச் சராசரியுடன் ஒப்பிடுகையில் உற்பத்தித் திறன் குறைவாக இருத்தல்;
7) சராசரியாக ஏக்கர் ஒன்றுக்கு 1,580 டன் வளங்களை அகழ்ந்தெடுத்தல் (உலகச் சராசரி 450 டன்கள்).
இயற்கையே நம் வாழ்வாதாரம் என்பது வெளிப்படை. இந்நிலையில், ஒரு சிலருடைய அளவு கடந்த சொத்துப் பெருக்கத்துக்காக இயற்கை வளங்களைப் பெருமளவு பயன்படுத்தி மாசுபடுத்தினால் பெரும்பான்மையினரான ஏழைகளும், 'நடுத்தர' மக்களுமே அதன் தீய விளைவுகளை எதிர்கொள்ள வேண்டும்.
வறுமை ஒழிப்பு, பொருளாதார 'வளர்ச்சி' ஆகியவற்றுக்கு அதிகத் தொடர்பில்லை; அதேபோல, பொருளாதார 'வளர்ச்சி' அதிகரிக்கும் வேகத்தைவிடச் சூழல் கேடுகள் பெருமளவு அதிகரிக்கின்றன. இந்தியா மட்டுமன்றி, பிற நாடுகளின் பட்டாங்கும் இதை உறுதிப்படுத்துகின்றன.
செல்வ வளம் மிக்க சில கோடி மக்களுடைய அளவுகடந்த நுகர்வு அனைத்து மக்களின் வாழ்வாதாரத்தையும் சிதைத்து வருகிறது. ஆகவே நாம் - குறிப்பாக பணக்காரர்கள் - நம் குறிக்கோள்களையும் நம் மேம்பாட்டுச் செயலுத்திகளையும் வாழ்க்கை முறைகளையும் மாற்றிக் கொள்ள வேண்டிய தருணம் இது.
வறுமையை ஒழிப்பதைப் பொருத்தவரை, வேளாண்மையில் ஒரு விழுக்காடு வளர்ச்சி என்பது பிற துறைகளில் அதே அளவு வளர்ச்சியைக் காட்டிலும் இரண்டு அல்லது மூன்று மடங்கு அதிகப் பயனளிப்பதாக சூழல் மாற்றம் தொடர்பான தமிழ்நாட்டுச் செயல்திட்டம் (Tamil Nadu State Action Plan on Climate Change) தெரிவிக்கிறது.
மூலக் கட்டுரை: Shankar Sharma, "A $5 trillion economy for India: At what cost?", 2020 January 14, https://www.ecologise.in/2020/01/14/a-5-trillion-economy-for-india-at-what-cost/
- பரிதி
- பிளாஸ்டிக்-ஐ உணவாக உண்டு கரிம உரமாக மாற்றும் காளான்கள்
- சுற்றுச்சூழல் - அறிவியல் அறிஞர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை!
- கனிம எரிபொருள் துறையும், சீரழியும் சுற்றுச்சூழலும்
- பேரழிவினால் நிலை குலைந்திருக்கும் ஆஸ்திரேலியா!
- கிரீன்லாந்தில் வேகமாக உருகும் பனிப் பாறைகள்
- சூழலியல் - நாய் விற்ற காசு குரைக்குமா?
- புவி வெப்பமடைதல் - ஓர் எச்சரிக்கை
- சூழலியல் பேரழிவுக்குத் தொழில்நுட்பத் தீர்வுகள் போதா!
- காஸாவின் பாதிப்புகளால் சுற்றுச்சூழல் ஆபத்துகளை எதிர்நோக்கும் இஸ்ரேல்!
- பருவநிலை மாற்றமும், பேரழிவு புயல்களும்
- பருவநிலை மாற்றத்தால் உலகிற்கு பேராபத்து
- பிளாஸ்டிக்கை ஒழிப்போம்! உயிரினங்களை காப்போம்!
- ஆற்றுநீர் கடலில் கலப்பது வீணானதா?
- அமெரிக்காவில் நீரியல் விரிசல் முறை ஏற்படுத்தியிருக்கும் பாதிப்புகளும், அறிவியல் வல்லுநர் குழுக்கள் கண்டறிந்த படிப்பினைகளும்!
- நதிகளை ஏன் இணைக்கக்கூடாது?
- இந்திய கிராமப்புறங்களில் திறந்தவெளி மலம் கழித்தலைப் புரிந்து கொள்ளல் - தீண்டாமை, மாசு, மலக்குழிகள்
- சூழல் அகதியா நாம்..?
- காலநிலையும், அரசியலும்
- செம்பரம்பாக்கம் ஏரி வரலாறும், திமுக - அதிமுக கட்சிகள் ஆட்சியும்
- நீலம் பாரித்துக் கிடக்கிறாள் மலைகளின் இளவரசி