 |
(மனிதன் பதில்கள் ஒவ்வொரு வாரமும் திங்கள் கிழமையன்று தளமேற்றப்படுகிறது. மனிதனின் மின்னஞ்சல் முகவரி: dheemtharikida@hotmail.com)
திண்ணை இணைய இதழில் மலர்மன்னன் எழுதிவரும் கட்டுரைகளைப் படிப்பதுண்டா? அவருடன் உங்களுக்குத் தொடர்பு உண்டா ?
செந்தில் குமார், சென்னை 78, மின்னஞ்சல்
மலர்மன்னன் (அறுபதுகளின் கடைசியிலோ எழுபதுகளின் தொடக்கத்திலோ) ஆனந்த விகடனில் எழுதிய ‘மெல்லத் திறந்தது கதவு’ என்ற தொடர்கதையும், எண்பதுகளில் கணையாழியில் எழுதிய காஃப்கா பாணியிலான கரப்பான் பூச்சிகள் சிறுகதையும் எனக்குப் பிடித்திருந்தன. அவர் ஒரு சில இதழ்கள் மட்டுமே நடத்திய 'கால்' சிற்றிதழில் ஓரிரு நல்ல இலக்கியப் படைப்புகளைப் படித்த ஞாபகம்.
1978-79ல் டெல்லியிலிருந்து கஸ்தூரிரங்கனும் சென்னையில் அசோகமித்திரனுமாக கணையாழி இதழை உருவாக்கி வெளியிட்டுக் கொண்டிருந்தபோது சென்னையில் அந்த இதழ் தயாரிப்பில் நானும் (வயது 24) சிறு பங்கெடுத்திருந்தேன். அதிலிருந்து நான் விலகிய தருணத்தில் மலர்மன்னன் பெரும் பொறுப்பேற்றிருந்தார். அப்போதுதான் எனக்கு அவரை நேரடிப் பரிச்சயம்.
பத்திரிகையின் லே-அவுட்டை மேலும் நேர்த்தியாக்கினதில் அப்போது அவர் பங்கு முக்கியமானது. பின்னர் பல வருடங்களாக அவருடன் தொடர்புமில்லை. சந்திக்கவும் இல்லை. அண்மைக்காலத்தில் சென்னையில் சில பொது நிகழ்ச்சிகளில் அவரைக் காண நேர்ந்தது. பழைய வசீகரமான தோற்றப் பொலிவை இழந்து முதுமையின் தளர்ச்சியுடன் காணப்பட்டார். பொதுவாகப் பழகுவதற்கு இனிமையானவர்.
கணையாழி தொடர்பு எனக்கு இருந்த 1978-79-80 காலகட்டத்தில், அவர் இந்துத்துவ சார்புக் கருத்துக்கள் எதையும் என்னுடனான பேச்சில் சொன்னதில்லை. 1982ல் நான் தீம்தரிகிட இதழைத் தொடங்கியபோது, அப்போது நடைபெற்ற மண்டைக்காடு கலவரம் பற்றி அதில் விரிவாக செய்திக் கட்டுரை வெளியிட்டேன். அந்தக் கட்டுரை ஆர்.எஸ்.எஸ்சின் பங்கை அம்பலப்படுத்தியிருக்கிறது. அந்த மண்டைக்காடு பிரச்சினையில் மலர் மன்னனுக்குப் பங்கிருந்த விஷயத்தை இப்போதுதான் முதன்முறையாக அவருடைய திண்ணைக் கட்டுரை வாயிலாக அறிந்தேன். அவருடைய சங்கப் பரிவார முகத்தையே திண்ணைக் கட்டுரைகள் வாயிலாகவே நான் முதன்முதலாக அறிகிறேன். அவருடைய இந்துத்துவாப் பிரசாரத்துடன் எனக்கு உடன்பாடில்லை. பல தமிழ் இணைய தளங்கள், சங்கப் பரிவாரப் பிரசாரத்துக்கு வெளிப்படையாகவும் நுட்பமாகவும் பயன்படுத்தப்படுகின்றன. அந்த வரிசையில் மலர்மன்னனின் கட்டுரைகளும் வருவதாகவே கருதுகிறேன். அவற்றுடன் எனக்கு துளியும் உடன்பாடில்லை.
எழுத்தாளர் திலகவதி நூல் வெளியீட்டு விழாவில் எழுத்தாளர் சுஜாதா தன்னையும் தலித் எழுத்தாளர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று கூறியதற்கு ஆதவன் தீட்சண்யா, அழகிய பெரியவன் தவிர வேறு எந்த தலித் எழுத்தாளரும் பதில் தரவில்லையே? நீங்கள் சுஜாதாவை தலித் எழுத்தாளராக ஏற்றுக் கொள்வீர்களா ?
ஜெயகண்ணன், மின்னஞ்சல்
ஒருவரை பெண் எழுத்தாளர் என்று குறிப்பிடும்போது பிறப்பின் அடிப்படையிலேயே சொல்லுகிறோம். அது போலவே தலித் எழுத்தாளர் என்ற அடையாளமும் பிறந்த சாதியின் அடிப்படையிலேயே சொல்லப்படுவதாகப் புரிந்து கொண்டால், நிச்சயம் சுஜாதாவை தலித் எழுத்தாளர் என்று வர்ணிக்க முடியாது. பெண்ணியம் சார்பான எழுத்தை பெண்ணல்லாதவர்களும் எழுதமுடியும் என்பது போல தலித் சார்பு இலக்கியத்தை தலித் அல்லாதவர்களும் படைக்க முடியும் என்பதே என் கருத்து. சுஜாதா அந்த வகைப்பாட்டில் வருவாரா என்று பார்த்தால், அவருடைய படைப்புகள் ஒன்றுக்கொன்று முரண்பட்ட பல கோட்பாடுகளுக்கும் சார்பாக எழுதப்பட்டிருப்பதைப் பார்க்கலாம்.
ஒரு கதை நாத்திகம் பேசும். இன்னொரு கதை கடவுள் பக்தியை வலியுறுத்தும். ஒரு கதை பெண்களை இழிவுபடுத்துவதை கடுமையாக விமர்சிக்கும். இன்னொரு கதை தானே அதைச் செய்யும். எனவே அவருடைய கதைகளிலிருந்து அவர் தலித் சார்பான கதைகள் என்று எடுத்துக் காட்டுவதைப் போலவே, தலித் விரோதக் கதைகளையும் எடுத்துக் காட்ட முடியும். இந்த நிலைமைக்குக் காரணம், அவர் எழுத்தின் தொழில் நுட்ப சாத்தியங்களிலும் வணிக சாத்தியங்களிலும் மட்டுமே அக்கறையுள்ளவர் என்பதுதான். பாடலாசிரியர்கள் வாலி, வைரமுத்து போன்றவர் அவர். இளையராஜா பார்ப்பனராவதற்குப் பட்டுவரும் (வீண்) பாட்டில் ஆயிரத்தில் ஒரு பங்கு கூட, சுஜாதா தலித் ஆவதற்குப் பட்டதில்லை. அவர் தன்னை தலித் எழுத்தாளர் என்று சொல்லிக் கொள்வதை ஒரு பெரிய ஜோக் என்று இதர தலித் எழுத்தாளர்கள் கருதியிருக்கலாம். அதே சமயத்தில் தலித் அரசியலை முன்வைக்க இந்த வாய்ப்பை ஆதவன் தீட்சண்யாவும் அழகிய பெரியவனும் சரியாகவே பயன்படுத்தியிருக்கிறார்கள்.
நம் நாடு 2020ம் ஆண்டில் வளர்ச்சி அடைந்த நாடுகளுக்கு இணையாக இருக்கும் என்று தொழிலதிபர்களும் கல்வியாளர்களும் கூறுகின்றனர். அப்படி நாம் வளர்ச்சி அடைந்தால், அந்த வளர்ச்சி எல்லாருக்கும் பயனுள்ளதாக இருக்குமா ?
திராவிடகுமார் மின்னஞ்சல்
இருக்காது. 2020 கிடக்கட்டும். 1960, 1980, 2000 என்று இதற்கு முன்பு ஒவ்வொரு இருபது ஆண்டுகளிலும் இந்தியா பல துறைகளிலும் அடைந்த வளர்ச்சிகளே எல்லாருக்கும் இன்னமும் கிட்டவில்லை என்பதுதானே யதார்த்தம். அதற்கு என்ன காரணமோ, அதே காரணம் 2020க்கும் பொருந்தும். தவிர வளர்ச்சி என்று நீங்கள் குறிப்பிடும் தொழிலதிபர்களும் கல்வியாளர்களும் எதைச் சொல்லுகிறார்கள் என்பதும் ஆராயப்படவேண்டும்.
வைகோ ஒரு தனிப்பட்ட குடும்பத்துக்கு எதிரான பிரசாரத்தில் இறங்கியிருப்பது தவறு என்று ராமதாஸ் கூறியிருக்கிறாரே?
எஸ். கிருஷ்ணமூர்த்தி கோவை
அவர் அப்படித்தான் சொல்லியாக வேண்டும். ஏனென்றால் அடுத்தபடியாக அரசியலில் விமர்சனத்துக்குள்ளாகக் கூடியது அவருடைய குடும்பம்தான். வைகோ வைத்து வரும் விமர்சனங்கள் தயாளு அம்மாள், ராஜாத்தி அம்மாள் போன்ற கலைஞர் குடும்ப உறுப்பினர்கள் மீது அல்ல. அரசு, அதிகாரம், கட்சி இவற்றை பயன்படுத்தி மீடியா வியாபாரத்தையும், மீடியா வியாபாரத்தை பயன்படுத்தி அரசியல் செல்வாக்கையும் வளர்த்துக் கொண்டு வருவதாக அவர் கருணாநிதி- மாறன் குடும்பத்தினர் மீது சொல்லும் குற்றச்சாட்டுகள் அரசியல் சார்ந்தவையே.
இந்தத் தேர்தல் பிரசாரத்தில் உங்களை வேதனைப்படுத்தும் அம்சம் என்ன ?
ஆர்.கே.கந்தசாமி, நெல்லை
கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சி கூட அடக்கி வாசிக்கும்போது, மார்க்சிஸ்ட் கட்சியும் கம்யூனிஸ்ட் கட்சியும் கருணாநிதியின் இலவச டி.வி அறிவிப்பை நியாயப்படுத்தி வாதாடி வருவதுதான். தனித்து 234 தொகுதிகளிலும் போட்டியிடுவதற்கு அரசியல் மழலையான விஜய்காந்த்துக்கு இருக்கும் துணிச்சல், இடதுசாரிகளுக்குக் கடந்த இருபதாண்டுகளில் இருந்திருக்குமானால், கூட்டணி சமரசத்தில் பெறும் சீட்டுகளைத் தனியாகவே ஜெயிக்கும் வலிமையை அடைந்திருப்பார்கள்.
ஜெயலலிதாவா, கருணாநிதியா, மனிதனின் ஆதரவு யாருக்கு ?
ஆர்.உமா, வேலூர்
இருவருக்கும் இல்லை. குடும்ப சுயநல உணர்ச்சியால் இயங்கும் ஊழல் அரசியல், கட்டுக்கடங்காத சுயமோக ஈகோவால் இயங்கும் அராஜக அரசியல் இரண்டுமே நிராகரிக்கப்படவேண்டியவை. மூன்றாவதாக மாற்று சக்திகள் தேர்தல் களத்தில் உருவாகும்வரை, என் ஆதரவு 49 ஓவுக்குத்தான்.
தேர்தல் புறக்கணிப்புக்கும் 49 ஓவுக்கும் என்ன வேறுபாடு?
எம்.அருண்குமார், சென்னை 15
தேர்தல் புறக்கணிப்பு என்பது நெருப்புக்கு அஞ்சி சமையல் செய்யாமல் பட்டினி கிடப்பது. 49 ஓ என்பது நெருப்பை அடுப்புக்குள் அடக்கிப் பயன்படுத்தும் வேலை. ஜனநாயகத்தை நிராகரிப்பது எனக்கு உடன்பாடு இல்லை. ஜனநாயகத்தை மக்கள் ஆதரவுடன் சீர்திருத்துவதே நமது நோக்கம்.
பிரதமர் மன்மோகன்சிங் ஓட்டு போடவில்லையாமே ?
கோவிந்தராஜன் மின்னஞ்சல்
கண்டனத்துக்குரியது. அசாம் மாநில தேர்தல் பிரசாரத்துக்கு இரு தினங்கள் ஒதுக்கியவர் அங்கே ஓட்டு போட ஒரு மணி நேரத்தை ஒதுக்கியிருக்க முடியாதா என்ன ? மாநிலங்கள் அவைக்கு அசாமிலிருந்து தேர்ந்தெடுக்கப்படுவதற்காக அவர் பெயர் அசாம் மாநில வீட்டு முகவரி கொடுத்து வாக்காளர் பட்டியலில் சேர்க்க்ப்பட்டிருக்கிறது. மன்மோகன்சிங் போன்ற உலக வங்கி சித்தாந்த நிர்வாகிகளின் அசல் முகம் இதுதான். இந்திய அரசியலில் பாமரர்களை ஏமாறச் செய்யும் அரசியல்வாதிகளைப் பற்றி தினசரி அங்கலாய்க்கும் படித்தவர்களைத் தங்களுடைய மென்மையான முகமூடிகளால், எளிதில் ஏமாறச் வைக்கும் பிரமுகர்கள் பட்டியலில், வாஜ்பாயி, அப்துல் கலாம் ஆகியோருடன் மன்மோகனருக்கும் இடம் உண்டு.
தங்களது கேள்விகளை மனிதனுக்கு அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: dheemtharikida@hotmail.com
|