கீற்றில் தேட...
அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- ஆதி
- பிரிவு: சுற்றுச்சூழல்
ஷெல் பெட்ரோல் நிறுவனத்தை எதிர்த்த கென்ய கவிஞர் கென் சரோ விவா போல் உலகெங்கும் சூழலுக்காக போராடுபவர்கள் கொல்லப்படுகிறார்கள் அல்லது அரசின் உதவியுடன் நசுக்கி ஒடுக்கப்படுகிறார்கள். இந்தியாவிலும் அதுதான் நடக்கிறது. பொதுவாகவே சூழல் விழிப்புணர்வு அதிகமுள்ள கர்நாடகத்தில் சமீபத்தில் ஒரு கொடூரக் கொலை நடந்துள்ளது. வடிகால் தொழிற்சாலை, மணல் குவாரிகளை எதிர்த்த விவசாயி செல்ல கிருஷ்ணமூர்த்தி (57) அந்நிறுவன முதலாளிகளால் கொல்லப்பட்டிருக்கிறார். இயற்கை வேளாண் முறையில் வாழை பயிரிட்டு வந்த விவசாயி அவர்.
சிக்பல்லாபூர் கிராமப் பகுதியில் விவசாய நிலங்கள், பாசனக் குளங்கள், பினாகினி நதியில் உள்ளூர் வடிகால் தொழிற்சாலை தொடர்ந்து கழிவு நீரை வெளியேற்றி வந்துள்ளது. அந்த நிறுவனத்தின் அத்துமீறல் தொடர்பாக கிருஷ்ணமூர்த்தி வீடியோ பதிவு செய்துள்ளார். அந்த நிறுவனத்துக்கு எதிராக புகார் பதிவு செய்துள்ளார்.
இப்படிச் சென்று கொண்டிருந்த அவரது வாழ்க்கைக்கு கடந்த நவம்பர் 10ந் தேதி திடீரென்று முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. கௌரி டிஸ்டிலரி நிறுவனத்தின் அத்துமீறல்கள் பற்றி செய்தியாளர் கூட்டத்தில் பேட்டியளிக்க கிருஷ்ணமூர்த்தி தயாராகிக் கொண்டிருந்த நேரத்தில், கௌரிபித்தனூக் தாலுகாவில் அவர் கொல்லப்பட்டார்.
அவரது தொடர் போராட்டத்தால், கொல்லப்படுவதற்கு சில நாட்களுக்கு முன் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து தண்ணீர் மாதிரிகளை சோதனைக்காக எடுத்துச் சென்றிருந்தனர். வாரியத்தின் விதிமுறைகளை மீறியதன் காரணமாக டிசம்பர் 19ந் தேதி அந்த வடிகால் தொழிற்சாலை மூடப்பட்டிருக்கிறது. ஆனால் அரசு உரிய காலத்தில் செயல்படாததால், ஒரு சுற்றுச்சூழல் போராளியின் வாழ்க்கை வலிந்து முடிக்கப்பட்டிருக்கிறது.
- விவரங்கள்
- ஆதி
- பிரிவு: சுற்றுச்சூழல்
சமூகம், அரசியல், பொருளாதாரம், பண்பாடு ஆகிய நான்கு நிறுவனங்களும் உலகை கட்டுப்படுத்துவதாக அறிஞர்கள் கூறுகின்றனர். ஆனால் இந்த நான்கிலும் தாக்கத்தைச் செலுத்தக் கூடியது, மக்களின் வாழ்க்கையை மாற்றக் கூடியது சூழலியலும், சுற்றுச்சூழலும். ஆராய்ச்சி, கல்வித் துறையிலும் சுற்றுச்சூழல் அரசியல், சுற்றுச்சூழல் பொருளாதாரம் போன்ற சிந்தனைகள் தீவிரம் பெறத் தொடங்கியுள்ளன. பாரம்பரியமாகவே இயற்கை சார்ந்த நெறிமுறைகளை வகுத்துக் கொண்டு செயல்பட்டது தமிழ்ச் சமூகம். ஆனால் இன்று முற்றிலும் மாறுபட்ட சூழ்நிலையில் வாழ்கிறோம். உலகமயச் சூழலில் சுற்றுச்சூழல்-சூழலியல் நெருக்கடிகள் தீவிரமடைந்துவிட்டன. தேசிய அளவிலான சுற்றுச்சூழல் பிரச்சினைகளில் முக்கிய ஆக்கப்பூர்வமான, எதிர்மறையான செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன.
உணவுப் பாதுகாப்பு
பாதுகாப்புச் சோதனைகள் முழுமையாக மேற்கொள்ளப்படாத நிலையில் மரபணு மாற்றப்பட்ட (ஜெனிடிகலி மாடிஃபைட்) பி.டி. கத்தரிக்காயை வணிக ரீதியில் பயிரிட அனுமதிக்க முடியாது என்று மரபணுப் பொறியியல் அங்கீகாரக் குழுவில் உச்ச நீதிமன்றம் நியமித்த மூலக்கூறு உயிரியலாளர் புஷ்பா எம். பார்கவா கூறியுள்ளார். மிகப் பெரிய அளவில் திறந்தவெளி பரிசோதனை நடத்துவது தொடர்பாக மரபணு பொறியியல் அங்கீகாரக் குழுவுக்கு இது தொடர்பாக வந்த கருத்துரு பற்றி, ஜனவரி 14ந் தேதி நடந்த கூட்டத்தில் இது பற்றி மறுஆய்வு செய்ய வேண்டும் என்று கூறியதாக அவர் தெரிவிக்கிறார்.
பசுமைப் புரட்சி மூலம் நமது உணவு இறையாண்மையைக் கட்டுப்படுத்தி வரும் பன்னாட்டு நிறுவனங்கள், 40 ஆண்டுகளுக்குப் பின் அது செல்லுபடியாகாது என்று தெரிந்த பின், மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் என்ற புது தந்திரத்துடன் இந்தியாவில் நுழைய முயற்சிக்கின்றன. முதல் உணவுப் பயிராக மரபணு மாற்றப்பட்ட கத்தரியை இந்திய வேளாண் சந்தையில் நுழைக்க மான்சாண்டோ முயற்சித்து வருகிறது.
போக்குவரத்து
இந்தியாவில் முதன்முதலில் ரயில் ஓடித் தொடங்கிய தாணே நகரம், தற்போது மற்றொரு வகையிலும் முன்மாதிரியாக மாறுவதற்கு முயற்சித்து வருகிறது. நாட்டிலேயே முதன்முறையாக சைக்கிளில் செல்வதற்கான தனிப்பாதை அந்நகரில் அமைக்கப்பட உள்ளது.
வாகனங்கள் நகர்வதைவிட, மக்களின் நகர்வுக்கே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று தாணே நகராட்சி எடுத்த முடிவின் அடிப்படையில் இந்தப் பாதை அமைக்கப்படுகிறது. 82 கி.மீ. நீளம் கொண்ட இந்த சைக்கிள் பாதையில் 52 கி.மீ. பகுதியை அமைப்பதற்கு மாநில அரசு ஒப்புதல் அளித்துவிட்டது. இந்தப் பாதை மும்பை புறநகர் பகுதிகளில் உள்ள பெரும்பாலான குடியிருப்புப் பகுதிகளை இணைக்கிறது.
தாணே ரயில் நிலையம்-கிரீக் சாலை-சாகேத், சாகேத்-பால்கம், ஆனந்த்நகர்-ஓவாலே, மும்பை ரெதி பண்டர் ஆத்மராம் சௌக் முதல் கல்வா வரை இந்தப் பாதை அமைக்கப்பட உள்ளது. இரண்டு கி.மீ. அகலம் கொண்ட இந்த தனிப்பாதை ஏற்கெனவே உள்ள சாலைகள், சேவை சாலைகள், தனியாக பிரிக்கப்பட்ட சாலைகளைக் கொண்டு உருவாக்கப்பட உள்ளது.
சைக்கிள் பாதை மட்டுமின்றி போக்குவரத்துச் சிக்கலுக்குத் தீர்வு காண மோனோ ரயில், அதிவேக பஸ் போக்குவரத்து முறை (பஸ் ராபிட் டிரான்சிட் சிஸ்டம்), அதிக பேருந்துகள், மேம்பாலங்கள், சுரங்கப் பாதைகள், ஒரே விகிதத்தில் இயங்கும் சிக்னல்கள் ஆகிய மாற்றங்கள் முன்மொழியப்பட்டுள்ளன. ஒருங்கிணைந்த பயணத் திட்டம் என்றழைக்கப்படும் இந்தத் திட்டம் நான்கு கட்டங்களாக நிறைவேற்றப்பட உள்ளது. கனடாவை மையமாகக் கொண்ட லியா கன்சல்டிங் என்ற நிறுவனம் 2008-2032க்குள் ரூ. 9,419 கோடி மதிப்பீட்டில் இத்திட்டத்தை நிறைவேற்ற திட்டம் தயாரித்துள்ளது.
முதலாளிகளின் நெருக்குதலால் கார்கள் செல்வதற்காக சாலைகள் அமைக்கும் நகரங்கள் மத்தியில், மக்களின் பயணங்கள் மீது கவனம் செலுத்தும் தாணே நகரம் மேற்கொள்ளும் முயற்சிகள் நமக்கு முன்மாதிரி.
- போக்குவரத்து துறையில் மற்றொரு வரவேற்கத்தக்க மாற்றமும் சமீபத்தில் நிகழ்ந்துள்ளது. தங்களது காரின் எரிசக்தித் திறன் எவ்வளவு என்பதை கார் தயாரிப்பாளர்கள் அறிவிக்க வேண்டும் என்ற விதிமுறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய தர நிர்ணய வரையறைப்படி இந்த விவகாரத்தில் தன்னார்வ விதிமுறைகளே போதும், கட்டாயமாக்க வேண்டியதில்லை என்று கார் நிறுவனங்கள் இவ்வளவு காலம் வாதிட்டு வந்தன. இந்த விவகாரத்தில் எந்த முடிவை எடுப்பது என்பது தொடர்பாக அமைச்சகங்கள் இடையே பெரிய போரே நடந்தது. கடைசியாக குறைவாக எரிபொருள் செலவழிப்பதற்கான தரநிர்ணயம், எந்தக் கார் அதிக எரிசக்தித் திறன்மிக்கது, இது பற்றிய விவரங்களை கார் விற்கும்போதே தெரிவிக்கும் லேபிள்கள் ஒட்டுவது உள்ளிட்ட நடைமுறைகள் கட்டாயமாக்குவது என்று முடிவெடுக்கப்பட்டது. பிரதமர் அலுவலகம் தலையிட்ட பிறகே இந்த விவகாரத்தில் இணக்கமான உடன்பாடு எட்டப்பட்டது.
இதன்மூலம் ஒருங்கிணைந்த எரிசக்தி கொள்கையில் கூறப்பட்ட தொலைநோக்குப் படி, எரிபொருள் பயன்பாட்டுத் திறனை மேம்படுத்துவதன் மூலம் 2030-31ல் 50 சதவீத எரிபொருள் செலவைக் குறைக்கலாம். இதன்மூலம் தற்போது செலவிட்டு வரும் பெட்ரோலில் 65 சதவீதத்தை சேமிக்க முடியும். தற்போது கார்பன் டை ஆக்சைடை உமிழ்ந்து வரும் 70 லட்சம் கார்களை குறைப்பதற்குச் சமம் இது.
மாசுபடுதல்
இந்தியாவில் உள்ள நதிகள் சீர்கேடு அடைந்திருப்பதற்கு கோலிபார்ம் பாக்டீரியா நோய்த்தொற்றுதான் முக்கிய காரணம் என்பதை சுற்றுச்சூழல் அமைச்சகம் முதன்முறையாக ஒப்புக்கொண்டுள்ளது. அதிகம் மாசடைந்த நதி கங்கை. யமுனை, சபர்மதி உள்ளிட்ட நதிகளும் மோசமாக மாசடைந்துள்ளன. டிசம்பர் மாதம் (2008) வெளியிடப்பட்ட அறிக்கையில் இது பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.
தண்ணீரில் பாக்டீரியா மாசு என்பது கோலிபார்ம் பாக்டீரியாவின் அளவைக் கொண்டே கணக்கிடப்படுகிறது. இந்த மாசுபாட்டுக்கு முக்கிய காரணம் நன்னீருடன் சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் கலப்பதே. இதன் பலனாக நீர்மூலம் பரவும் நோய்த்தொற்று பெருகும்.
பாக்டீரியா கலப்பையும் மாசுபாடு என்று சுற்றுச்சூழல் அமைச்சகம் முதன்முறையாக ஒப்புக்கொள்ள ஆரம்பித்திருப்பதால், நீர் தரம் பற்றிய மதிப்பீடுகளில் இனிமேல் மாற்றம் ஏற்படும். மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் நாடு முழுவதும் உள்ள 282 நதிகளை கண்காணித்து மாசுபாட்டு அளவை மதிப்பிட்டு வந்தது. தற்போது ஏற்பட்டுள்ள மாற்றத்தால் மதிப்பிடும் முறையில், பெரிய மாற்றங்கள் நிகழும்.
பெரும்பாலான நகரங்களில் சுத்திகரிக்கப்படாத கழிவு நீர் நதிகளில்தான் கலக்கவிடப்படுகிறது. இதனால் நதிகள் சீர்கேடு அடைவது தெளிவு. நம் நாட்டின் பெரும்பாலான நதிகள் வெறும் சாக்கடைகளாக மாறிப்போவது இதனால்தான். நம்மிடம் தண்ணீர் வரி, கழிவுநீர் அகற்ற வரி என ஒரு பக்கம் கறந்து கொண்டு, மறுபக்கம் அரசு அமைப்புகளே இந்த மாசுபடுத்தும் பணியை சிரமேற் கொண்டு செவ்வனே செய்து முடிக்கின்றன.
ஒவ்வொரு நாளும் முக்கிய நகரங்களில் உற்பத்தியாகும் 33,000 கோடி லிட்டர் கழிவு நீரில் வெறும் 600 கோடி லிட்டர் கழிவு நீர் மட்டுமே சுத்திகரிக்கப்படுகிறது என்று மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியமே ஏற்றுக் கொள்கிறது. குறைந்த அளவு சுத்திகரிப்பு செய்யும் நிலையங்களும்கூட எந்தத் தரத்தையும் கடைப்பிடிப்பதில்லை. எனவே, நதிகள் மாசுபட்டுள்ள அளவை மறுஆய்வு செய்ய வேண்டும். அதன் அடிப்படையில் மத்திய அரசின் நதிகள் பாதுகாப்புத் திட்டத்தை ஒட்டுமொத்தமாகவும் ஒருங்கிணைந்த நோக்கிலும் மாற்றியமைக்க வேண்டும்.
சுற்றுச்சூழல் பேரழிவு
நம் காலத்தின் பயங்கரமான சுற்றுச்சூழல் பேரழிவுகளில் ஒன்று போபால் விஷ வாயுக் கசிவு. அந்த விபத்து நடந்து வெள்ளி விழாக் காலம் நெருங்கிவிட்ட நிலையிலும், பழைய யூனியன் கார்பைடு நிறுவனத்தில் கைவிடப்பட்ட ஆபத்தான வேதிப்பொருட்கள் இன்னும் அகற்றப்படாமல் அங்கேயே பத்திரமாகப் பாதுகாக்கப்படுகின்றன!
இதற்கிடையில் இந்த விவகாரம் தொடர்பாக குஜராத்-மத்தியப் பிரதேச அரசுகள் இடையே மோதல் நிலவுகிறது. இது தொடர்பாக இரு மாநில தலைமைச் செயலர்கள், மத்திய வர்த்தக அமைச்சகம் இணைந்து வேதிப்பொருட்களை அகற்றுவதற்கான வழிமுறைகளைக் கண்டறிய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் நவம்பர் 8ந் தேதி (2008) உத்தரவிட்டிருந்தது. யூனியன் கார்பைடு நிறுவனத்தில் எஞ்சியுள்ள வேதிப்பொருட்களை ஜனவரி 31ந் தேதிக்குள் குஜராத் அகற்ற வேண்டும் என்று மத்திய பிரதேச உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. குஜராத்தில் உள்ள அங்கலேஸ்வர் தொழிற்பேட்டையில் உள்ள இன்சினரேட்டரில் பாருக் என்விரோ இன்ப்ரா ஸ்டிரக்சர் லிமிடட் (பி.இ.ஐ.எல்) நிறுவனத்தால் அந்த வேதிப் பொருட்கள் எரிக்கப்பட இருந்தன.
இந்த நீதிமன்றப் போராட்டத்தால் 1984ம் ஆண்டு தொடங்கி தற்போது வரை 350 மெட்ரிக் டன் (டன்=1000 கிலோ) வேதிப் பொருட்கள் அங்கேயே இருந்தன. அணுகுண்டுகளுக்குச் சமமான வேதிப்பொருட்களை இப்படி ஓரிடத்தில் இருந்து வேறிடத்துக்கு கடத்தும் வேலையையே மத்திய அரசு இவ்வளவு காலமாகச் செய்து வருகிறது. எங்கு எரித்தாலும் பாதிக்கப்படப் போவது சுற்றுப்பகுதிகளில் வாழும் மக்கள்தான். விஷ வாயுக் கசிவுக்குக் காரணமாக இருந்த நிறுவனத் தலைவர் வாரன் ஆண்டர்சனையும் இன்னமும் கைது செய்யவில்லை, நிறுவனத்தில் கொட்டிக் கிடக்கும் வேதிப் பொருட்களையும் வெளியேற்றவில்லை. இதுதான் முதலாளிகளும் ஏகாதிபத்தியமும் சேர்ந்து நடத்தும் சுற்றுச்சூழல் பயங்கரங்களுக்கு நம் நாட்டில் கிடைக்கும் நீதி.
புவி வெப்பமடைதல்-காலநிலை மாற்றம்
உத்தராகண்டில் மிக அதிக வெப்பநிலை நிலவுவதால் வசந்தகால மலர்கள் முன்பே பூத்துவிட, வசந்த கால கொண்டாட்டங்கள் பாதிக்கப்பட ஆரம்பித்துள்ளன. கோகா என்றழைக்கப்படும் வசந்தத்தை வரவேற்கும் இந்த விழா, ஜனவரி மாத இறுதியில் நடைபெறும். வசந்த காலத்தை வரவேற்கும் விழாவின்போது குழந்தைகள் அதிகாலையிலேயே எழுந்து புரன், பெய்ன்யா, பையுன்லி போன்ற மலர்களைப் பறித்து வருவது வழக்கம். "காலநிலை மாற்றம் காரணமாக ஏற்படும் வெப்பநிலை அதிகரிப்பால், கடந்த ஐந்து ஆண்டுகளாக மலர்கள் கிடைப்பதில்லை. மலர்கள் இல்லாமல்தான் விழாவைக் கொண்டாடி வருகிறோம்" என்கிறார் இப்பகுதியிலுள்ள ஷெர்சி கிராமத்தின் ஆஷா கந்தூரி. ஒரு சிலர் கடுகுப் பூக்களை வைத்து விழாவைக் கொண்டாடியுள்ளனர்.
காடுகள், மரங்களுடன் குழந்தைகள் நேரிடையாக உறவாட இந்த விழா வாய்ப்பு தருகிறது. சூரியன் உதிக்கும் முன்பே மலர்களைப் பறித்து வரும் சிறுவர்கள் அவற்றை வீட்டு வாசலுக்கு முன்பே கொட்டுவார்கள். நல்ல பயிர்விளைச்சல், பருவமழை, குடும்பச் செழிப்பு போன்றவற்றுக்காக வேண்டிக் கொள்வார்கள். இது மட்டுமின்றி, வளிமண்டல வெப்பநிலை அதிகரிப்பது நிற்கவில்லை என்றால் கால்நடைகள், வேளாண்மை என இப்பகுதியிலுள்ள அனைத்து இயற்கை வளங்களும் கடுமையாக பாதிக்கப்படும் என்று ஆராய்ச்சியாள்கள் தெரிவிக்கிறார்கள்.
- ஆதி வள்ளியப்பன், பூவுலகின் நண்பர்கள்
- விவரங்கள்
- அ.இளஞாயிறு
- பிரிவு: சுற்றுச்சூழல்
இன்றைக்கு விவசாயம் திட்டமிடப்பட்டு மைய மாநில அரசுகளால் அழிக்கப்படுகிறது
1. தொடர்வண்டி இருவழிச்சாலைக்காக கையகப்படுத்தப்பட்ட விவசாய நிலங்கள்
2. நாடெங்கும் நான்குவழி ஆறுவழி சாலைக்காக கையகப்படுத்தப்பட்ட விவசாய நிலங்கள்
3.அன்னிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக அன்னியன் விரும்பும் நீர் வசதி கொண்ட விவசாய நிலங்களை கையகப்படுத்திக் கொடுத்தல்
4.தொழில் பூங்காக்கள் அமைப்பதற்காக கையகப்படுத்திய நீர் வசதி கொண்ட நிலங்கள்
5.மேற்கூறிய காரணங்களுக்காக அழிக்கப்பட்ட ஏரிகள் குளங்கள் சிற்றாறுகள்
6.மேற்கூறிய காரணங்களுக்கு இடைஞ்சலாக இருந்ததால் வெட்டப்பட்ட இலட்சக்கணக்கான மரங்கள்
7. மழைக்குறைவினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முறையாக அரசு உதவாமல் போனதால் வாழ்க்கைக்காக வேண்டி வந்தவிலைக்கு நிலங்களை விற்றுவிட்டு நகரம் நோக்கி இடம் பெயர்ந்த நிலைக்கு தீர்வு காணாமல் அரசுகள் கண்ணை மூடிக்கொண்ட நிலை
8.காய்ந்துபோன நிலங்களை வாங்கி வீட்டு மனைகளாக விற்பனை செய்யும் ரியல் எஸ்டேட் வியாபாரத்தை ஊக்கப்படுத்தி வங்கி கடன்கள்
9.உலகமயமாக்கல் என்றபேரில் மேல்நாட்டு மலட்டு விதைகளை விவசாயிகளுக்கு பரிந்துரைத்து இருக்கும் விவசாய நிலங்களை மலடாக்கியது
10.உள்நாட்டு தொழில் வளர்ச்சி என்ற பெயரில் தோல் பனியன் மற்றும் சில தொழில்களால் நாசமாகும் நதிகளைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்காமல் அந்த தொழில்களையே ஊக்கப்படுத்துதல்.
11.சுற்றுலாத்துறையை ஊக்கப்படுத்துதல் என்ற பேரில் காடுகளை அழித்தல் அதனால் காட்டுமிருகங்கள் தங்கள் உணவு தேவைக்காக விவசாய நிலங்களை நாசப்படுத்தல்.
போன்ற பல காரணங்கள் விவசாயம் அழிவை நோக்கி போய்க்கொண்டிருக்க தற்போது தமிழக அரசு சத்தமில்லாமல் சட்டமன்ற விவாதம் இல்லாமல் கொண்டு வந்திருக்கும் கருப்புச் சட்டம். தற்போது சில எதிர்ப்புகளால் செயல்படுத்தப்படாமல் இருக்கும் இச் சட்டம் எப்போது வேண்டுமானாலும் நடைமுறைக்கு வரலாம்.
அதுதான் மரபுசார் இயற்கை வேளாண்முறையை ஒரு விவசாயி மற்ற விவசாயிகளுக்கோ அல்லது அது சம்பந்தமாக எல்லா விவசாயிகளும் கூடியோ பேசுவது தவறு. அப்படிச் செய்தால் ரூபாய் 5000 முதல் கூடுதல் தொகை தண்டமாக வசூலிக்கப்படும் அல்லது பல ஆண்டுகள் சிறை தண்டனை கூட உண்டு.
அந்தந்த நாட்டு மக்களின் உணவுத் தேவையை அந்தந்த பகுதி இயற்கை விவசாயத்தால் பூர்த்தி செய்தால்தான் அப்பகுதி மக்கள் நோயின்றியும் நோய் வந்தால் கூட அந்தந்த பகுதியில் விளையும் மூலிகைகளைக் கொண்டு தீர்த்துக் கொள்ள முடியும். இயற்கை விவசாயத்துக்கு அப்பால் வெள்ளையர்களின் தேவைக்காக நமது உணவு முறைகள் மாற்றப்பட்டதால் நாம் இயற்கை மருத்துவத்தை விட்டுவிட்டு விலை கூடிய ஆங்கில மருத்துவத்துக்கு ஆளானோம்.
முற்றிலுமாக நமது மரபுசார் இயற்கை வேளாண்மையிலிருந்து நாம் வெளியேற்றப்படுவதை எதிர்க்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தால் வாழ்வின் பல துறைகளிலும் நாம் பாதிக்கப்படுவோம்
- அ.இளஞாயிறு
- விவரங்கள்
- மு.குருமூர்த்தி
- பிரிவு: சுற்றுச்சூழல்
பூமியின் காற்று மண்டலத்தில் பசுமை வாயுக்களில் ஒன்றான கார்பன் டை ஆக்சைடின் அளவு அதிகரிப்பதால் புவிவெப்பமடைகிறது என்பதுதான் மனிதகுலத்தின் இன்றைய தலைகாய்ந்த பிரச்சினை. சிக்கல் மனிதனுக்கு மட்டுமல்ல, நீரில் வாழும் மீனின் தலைக்குள்ளும் அதே பிரச்சினை வேர்விட்டு முளைத்திருக்கிறது என்பதுதான் இன்றைய கண்டுபிடிப்பு. ஸ்க்ரிப்ஸ் கடலியல் நிறுவனத்தைச் சேர்ந்த டாக்டர் டேவிட் செக்லே என்பவர் இது பற்றிய ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளார்.
காற்று மண்டலத்தில் கார்பன் டை ஆக்சைடின் அளவு அதிகரிக்கும்போது கடல் நீர் அதனை ஏற்றுக்கொள்கிறது. இதனால் கடல் நீரில் அமிலத்தன்மை கூடிப்போகிறது. அமிலத்தன்மை அதிகமாக உள்ள கடல்நீரில் வாழும் மீனின் உடற்கூறு மாற்றமடைந்து வருகிறது. மீன்களின் எலும்பு வளர்ச்சியில் இந்த மாற்றம் காணத் தொடங்கியிருப்பதுதான் இன்றைய புதிய சிக்கல்.
otoliths என்பவை மீன்களின் செவி எலும்புகள். இவை வெங்காயம் போன்று பல அடுக்குகளைக் கொண்டவை. இந்த அடுக்குகளைக்கொண்டு மீனின் வயதைக் கணக்கிடலாம். மேலும் இந்த otoliths உதவியால்தான் மீன் தன்னுடைய உடலை புவி ஈர்ப்பு விசைக்கு எதிராக நிலை நிறுத்திக்கொண்டு நீந்துகிறது. அமிலத்தன்மை அதிகமாக உள்ள கடல்நீரில் வாழும் young white seabass இன மீன்களுடைய otoliths அளவிற்கு அதிகமாக பெருத்து இருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இதனால் மீன்களுக்கு நீந்துவதில் பிரச்சினை தொடங்க வாய்ப்பிருக்கிறது. சங்கிலித் தொடர்போன்ற புதிய சிக்கல்களும் எழக்கூடும். இதுபற்றிய ஆய்வுகள் தொடர்ந்துகொண்டிருக்கின்றன.
ஏற்கனவே கடல் நீரில் அமிலத்தன்மை கூடிப்போனதால் பவளப்பாறைகள் அழியத் தொடங்கிவிட்டன. எண்ணெய், நிலக்கரி போன்ற எரிபொருள்களை வரைமுறையின்றி மனிதன் எரிக்கத்தொடங்கியதால் அவனுடைய வாழ்வும் எரிந்துபோகும் காலம் வெகுதொலைவில் இல்லையோ என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.
தகவல்: மு.குருமூர்த்தி (
இன்னும் படிக்க: http://www.sciencedaily.com/releases/2009/06/090625141450.htm
- கரியமில வாயுவின் இன்னொரு முகம்
- புவி வெப்பம் அதிகரிப்பது ஏன்?
- பற்றி எரிகிறது பூமி
- முல்லை பெரியாறு அணை - ஓர் பார்வை
- பாழாகும் பாலாறு
- ஆடுகளுடன் போர் செய்த ஒரு நாட்டின் கதை
- நிறம் மாறும் அண்டார்டிகா
- ஆழ்கடலில் அதிசய எரிமலைகளின் கண்டுபிடிப்பு
- நஞ்சுள்ள பட்டாணி நாளைய உலகின் உணவாகுமா?
- பவளப் பாறைகளுக்கு மரங்களால் ஒரு புது வீடு
- இந்தியாவில் லித்தியம்
- உலகின் குப்பைத் தொட்டியா அட்டகாமா பாலைவனம்?
- குட்டையாகும் ஆல்ப்ஸ் மலை
- நிறம் மாறும் கடல்கள்
- ஆழ்கடலில் புதிய பவளப் பாறைகளின் கண்டுபிடிப்பு
- உலகை அச்சுறுத்தும் பூஞ்சைகள்
- அதிகரிக்கும் வானவில் நாட்கள்
- பூமியின் வட கோடியில் ஒரு புதிய தீவின் கண்டுபிடிப்பு
- சூரியனின் கதிர்களை திசை திருப்பி விட்டால் பூமியில் சூடு குறையுமா?
- புதையுண்ட பூமிக்குள் ஓர் அற்புதக் காடு