கீற்றில் தேட...
அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- மு.குருமூர்த்தி
- பிரிவு: சுற்றுச்சூழல்
1800க்குப் பிறகு ஏற்பட்ட தொழிற்புரட்சியின் விளைவாக வளிமண்டலத்தில் கார்பன் டை ஆக்சைடின் அளவு 30 சதவீதம் அதிகரித்துவிட்டது. இயற்கை படிமங்களாகிய எண்ணெய், நிலக்கரி, இயற்கை வாயு இவற்றை எரிக்கும்போதும், காடுகளை அழிக்கும்போதும், தரிசு நிலங்களை விளைநிலங்களாக மாற்றும்போதும் அதிகமான அளவில் கார்பன் டை ஆக்சைடு வாயு வெளிப்பட்டு காற்று மண்டலத்தில் கலந்து விடுகிறது. உயிரினங்கள் சுவாசிப்பதாலும், எரிமலை புகை கக்குவதாலும் கூட காற்றில் கார்பன் டை ஆக்சைடு கலக்கிறது. இவையெல்லாம் இயற்கை நிகழ்வுகள் ஆகும்.
காற்று மண்டலத்தில் கலக்கும் கார்பன் டை ஆக்சைடு வாயுவை கைப்பற்றி சேமித்து வைக்க இயலும். ஆனால் இதற்காக 40 சதவீதம் கூடுதலாக எரிபொருள் செலவு செய்ய வேண்டியிருக்கும். மேலும் தொழிற்சாலைகளை இயக்க ஆகும் மொத்த செலவு 60 சதவீதம் அதிகரிக்கும். காற்று மண்டல கார்பனை மூன்று வழிகளில் கைப்பற்றி சேமிக்க இயலும்.
முதலாவது முறையில் படிம எரிபொருள்களாகிய எண்ணெய், நிலக்கரி இவற்றை எரிக்கும்போது வெளிப்படும் கார்பனை கைப்பற்றி சேமிக்கிறார்கள். சிறிய தொழிற்சாலைகள் சிலவற்றில் இந்த முறை தற்போது கையாளப்பட்டு வருகிறது. இரண்டாவது முறையில் எரிபொருள் முதலில் வாயுவாக மாற்றப்படுகிறது. இந்த வாயுவில் இருந்து கார்பனும், நீரும் பிரித்தெடுக்கப்பட்டு சேமிக்கப்படுகின்றன. மூன்றாவது முறைக்கு Chemical Looping Combustion என்று பெயர். எரிபொருளுடன் உலோகங்களை வினைபுரியச் செய்கிறார்கள். கார்பன் டை ஆக்சைடும், நீராவியும் பொதிந்திருக்கும் உலோகக் கட்டிகளாக அவை மாற்றப்பட்டு சேமிக்கப்படுகின்றன.
இவையெல்லாம் தும்பைவிட்டு வாலைப் பிடிக்கிற சங்கதிகள். மனிதகுலம் வெளிக்காற்றில் கலக்கச் செய்யும் கார்பனின் அளவை சுயக்கட்டுப்பாட்டு முறையில் குறைக்க வேண்டும். இயலக்கூடிய இடங்களில் புகைக்கும் எந்திரங்களைத் தவிர்க்க வேண்டும்.
- மு.குருமூர்த்தி
- விவரங்கள்
- வேணு சீனிவாசன்
- பிரிவு: சுற்றுச்சூழல்
சுற்றுப்புற சூழலில் மாசுபாடு என்றதுமே நாம் பொதுவாக வெளி உலகத்தை மட்டுமே கருத்தில் கொண்டு புரிந்து கொள்கிறோம். அதாவது நமது வீட்டிற்கு வெளியே உள்ள இடம், நமது தெரு, நமது ஊர் என்று. ஆனால் சுற்றுச்சூழல் என்பது நாம் வசிக்கின்ற வீட்டுக்குள்ளேயும் இருக்கிறது. அதில் மாசுக்குறைவு ஏற்பட்டால் விபரீத விளைவுகள் உண்டாகும் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். இந்த உணர்வு ஏற்படாத காரணத்தினால் வீட்டுக்குள்ளே இருக்கின்ற காற்று மாசுபட்டு அதனால் பலவிதமான நோய்த் தொல்லைகள் ஏற்படுகின்றன.
வீட்டுக்குள்ளே இருக்கின்ற காற்று மாசடைந்தால் கண் எரிச்சல், மூச்சு விடுவதில் சிரமம், உடலில் எரிச்சல், மயக்கம், வாந்தி, கண்பஞ்சடைதல் போன்றவை ஏற்படும். கட்டை, கரி, மண்ணெண்ணெய் ஆகியவற்றை சமையலுக்குப் பயன்படுத்துகின்ற கிராமத்து மக்கள் காற்று மாசுபாடு குறித்து அறிந்து கொள்ளவேண்டும். புகையும், கரியும் வெளியே செல்ல போதுமான ஜன்னல் வசதிகள் வீட்டில் இருக்க வேண்டும். இல்லை என்றால் அடுப்பில் இருந்து வெளிப்படும் புகை மூச்சடைப்பு, இருமல், கண் எரிச்சல் போன்றவற்றை ஏற்படுத்தும். நாளடைவில் ஆஸ்துமா, நுரையீரல் நோய்கள் ஆகியவை தோன்றும். எனவே இந்த விஷயத்தை அலட்சியப்படுத்தாமல், போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொள்வது அவசியம்.
நாம் வீட்டிற்குள்ளே இருக்கும் போது மிகவும் சுகமாக இருக்கிறோம், பாதுகாப்பாக இருக்கிறோம் என்ற உணர்வில் சிறிய மாறுதல்களை கவனிக்காமல் இருப்பது வழக்கம். ஆனால் முன்னெச்சரிக்கையோடு சில மாறுதல்களை கவனிக்க நாம் பழகிக் கொள்ள வேண்டும். இதன் மூலமாக பெரிய ஆபத்துக்களை தடுக்க முடியும். உதாரணமாக வீட்டிற்குள்ளே நாம் சுவாசிக்கும் காற்று அசுத்தம் அடைந்து உடலுக்கு தீங்கு விளைவிப்பதை உடனுக்குடன் அறிந்து கொள்ள சில எச்சரிக்கைகள் தேவை.
அவையாவன
1. வழக்கத்திற்கு மாறான, குறிப்பிடத்தக்க நாற்றம்
2. அழுகிய வாடை, அல்லது காற்றின் அடர்த்தி
3. காற்றின் சுற்றோட்டக்குறைவு
4. பழுதுபட்ட குளிர்பதனப் பெட்டி, குளிர்சாதன இயந்திரங்களின் இயக்கம்.
5. புகைபோக்கியில் ஓட்டை பெட்ரோல், டீசலை எரிக்கும் போது போதுமான அளவிற்கு காற்றோட்டம் இருந்து புகை வெளியே செல்லுகிறதா என்பதை கவனிப்பது.
6. வீட்டிற்குள்ளே இருக்கின்ற காற்றில் அதிக அளவு ஈரப்பதம்
7. வெளிச்சமோ அல்லது காற்றோ வராமல் கட்டப்பட்ட வீடுகள்
8. வீட்டில் எங்காவது பூஞ்சைக்காளான் மற்றும் ஸ்போர்கள் இருப்பது
9. புதுப்பிக்கப்பட்ட வீட்டிற்கோ அல்லது புதிய வீட்டிற்கோ சென்ற உடன் உடலில் ஏற்படும் மாறுதல்கள்.
10. வீட்டு உபயோகப் பொருட்களுக்கு புதிய வண்ணம் பூசிய உடன் அடிக்கடி ஏற்படும் தும்மல், கண் எரிச்சல்.
11. வீட்டிற்குள்ளே இருப்பதை விட வெளியே இருக்கும் போது உடல் ஆரோக்கியமாக இருத்தல்
இவற்றை சரியாக கவனிப்பதன் மூலமாக வீட்டிற்குள்ளே உண்டாகும் காற்றுமாசை கட்டுப்படுத்தவும், நமக்கு நோய் வராமல் தடுக்கவும் முடியும். நம்மைச் சுற்றியுள்ள இயற்கைச்சூழல் நமக்கு பலவிதமான நன்மைகளைச் செய்து வருகிறது. மரங்களும், செடிகொடிகளும் நாம் வெளிவிடும் ஏராளமான கரியமில வாயுவை கிரகித்துக்கொண்டு, பிராணவாயுவை வெளியிடுகின்றன. இதன் காரணமாக நம்மைச் சுற்றி உள்ள காற்று மண்டலத்தில் கரியமிலவாயுவின் அளவு பெருகுவது தடைசெய்யப்படுகிறது. சராசரி வெப்ப நிலை உயர்வு, சூழல் வெப்பநிலை உயர்வு போன்ற விரும்பத்தகாத விளைவுகள் ஏற்படுவது தாவரங்களின் சேவையினால் தடுத்து நிறுத்தப்படுகிறது.
சூரியனில் இருந்து வெளிப்படும் புறஊதாக் கதிர்கள் நமக்கு புற்றுநோயை ஏற்படுத்தும். இவ்வாறு நடக்காமல் காற்றுவெளியில் உள்ள ஓசோன் படலம் ஒரு கவசமாக இருந்து, புறஊதாக் கதிர்களை வடிகட்டி பூமிக்கு அனுப்பி வைக்கிறது. மண்புழுக்கள், சாணவண்டுகள், இன்னும் பெயர் தெரியாத நூற்றுக் கணக்கான உயிரினங்கள் மண்ணில் உள்ள கழிவுப்பொருட்களை உரமாக மாற்றுகின்றன. இதன் காரணமாக விவசாய நிலத்தின் சத்துக்கள் அதிகமாகின்றன. உற்பத்தி பெருகுகிறது.
பறவைகள், விலங்குகள், வண்டுகள், பூச்சிகள் ஆகிய உயிரினங்களைக் கொண்ட ஆரோக்கியமான சூழல், மனித வாழ்க்கைக்கு மிகவும் அவசியம். தாவரங்களில் மகரந்த சேர்க்கை ஏற்பட வண்டுகளும், பூச்சிகளும் உதவுகின்றன. பயிர்களை நாசம் செய்யும் வெட்டுக்கிளி, போன்ற பூச்சிகளை அழிக்க பறவைகள் பயன்படுகின்றன.
எரிபொருட்கள், கடல் உணவு, காட்டு விலங்குகள், கயிறுகள், ஆகியவற்றை காடுகள் மற்றும் கடல்கள் நமக்கு அளிக்கின்றன. இவை மட்டும் அல்லாமல், இயற்கையாக ஏற்படும் கழிவுகள், மனிதனால் ஏற்படும் குப்பைகள், கழிவுகள் ஆகியவற்றை அழிப்பதிலும் இயற்கை பெரும்பங்கு ஆற்றுகிறது. இவைகளை மனதில் கொண்டு நாம் சுற்றுச்சூழல் மாசுபடுவதை எல்லாவகையிலும் முழுமுயற்சி செய்து தடுப்பது அவசியம்.
- வேணு சீனிவாசன்
- விவரங்கள்
- மு.குருமூர்த்தி
- பிரிவு: சுற்றுச்சூழல்
நிலக்கரி, எண்ணெய் போன்ற படிம எரிபொருட்களில் இருந்து மனித குலம் விலகிப் போகும் நாள் வந்து கொண்டிருக்கிறது. மாற்று எரிசக்தியாக காற்றாலைகளை நம்பி நிற்கும் காலம் தொலைவில் இல்லை. வீசும் காற்றுக்கு காசு கொடுக்கவேண்டியதில்லைதான். ஆனால் காற்றாலைகளின் சுழலிகளினால் சுற்றுப்புற வானிலை பாதிக்கப்படுகிறது என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
சங்கிலித் தொடராக அமைக்கப்பட்ட காற்றாலைகளின் சுழலும் விசிறிகள் சுற்றுப்புற காற்றை மேலும் கீழுமாக அதிர்வடையச் செய்கின்றன. இந்த அதிர்வுகள் பல மைல் தூரத்திற்கு இருக்கும். சுழலும் விசிறிகளில் இருந்து வீசும் காற்று பூமியின் மேற்பரப்பை உலரச் செய்துவிடுகிறது. பல மைல் தூரம் வரை இந்த விளைவு இருக்கும். அக்கம் பக்கத்து வீடுகளில் குளிர்சாதனப் பெட்டிகளுக்கு அதிக மின்சக்தி செலவாகும். அந்தப் பகுதிகளில் உள்ள விளைநிலங்களுக்கு அதிகமான நீர் தேவைப்படும். காற்றாலைகளினால் ஏற்படும் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு எளிமையானது. சுழலிகளையும், விசிறிகளையும் திறமையாக வடிவமைக்க வேண்டும். இதனால் காற்றாலைகளின் திறன் கூடும். மின் சக்தியின் விலையும் குறையும்.
காற்றாலைகளினால் ஏற்படும் வானிலை மாற்றங்கள் இரவு நேரங்களில்தான் அதிகமாக இருக்கிறதாம். காற்றுவீசும் வேகம் இரவு நேரத்தில் அதிகமாக இருப்பதுதான் காரணம் என்கிறார்கள் விஞ்ஞானிகள். காற்றாலைகள் அதிகமாக தோன்றிக் கொண்டிருக்கின்றன. உள்ளூர் காலநிலையில் மாற்றம் ஏற்படவும் அதிகமாக வாய்ப்பு இருக்கிறது.
காற்றாலையின் பாகங்கள் பிளாஸ்டிக் மற்றும் உலோகங்களால் ஆனவை. எனவே கதிரியக்க ஆபத்து காற்றாலைகளில் இல்லை. தேவையற்ற இரைச்சல் இல்லை. வாயுமண்டலம் அழுக்கடைவதில்லை. ஆனால் காற்றாலைகளில் மின்சக்தி தொடர்ச்சியாக கிடைப்பதில்லை. காற்று வீசாத காலத்தில் மின் உற்பத்தி இருப்பதில்லை. காற்றாலை மின் ஆற்றல் மற்ற வகையான மின் உற்பத்திகளுடன் இணைந்து பயன்படுத்த வேண்டியதாகும். காற்றாலைகளை மட்டுமே நம்பியிருந்தால் தமிழ்நாட்டில் இப்போதுள்ள மின்வெட்டு போன்று அரசாங்கங்கள் அவதிப்பட வேண்டியிருக்கும்.
- மு.குருமூர்த்தி
- விவரங்கள்
- மு.குருமூர்த்தி
- பிரிவு: சுற்றுச்சூழல்
ஆமாம்... காற்று மண்டலத்தில் வாயு உருவத்தில் இருக்கும் அளவுக்கு அதிகமான கார்பன் டை ஆக்சைடை சிறைப்பிடித்து ஓர் இடத்தில் அடைத்து விட்டால் புவியின் வெப்பநிலையை குறைக்க முடியும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
நிலக்கரியும், கச்சா எண்ணையும் பூமியின் ஆழத்தில் இருக்கும் படுகையில் கிடைக்கிறது. கார்பன் டை ஆக்சைடு வாயுவை இந்த எண்ணெய் படுகைக்குள் செலுத்தி சேமிப்பது சாத்தியமே என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். எண்ணெய் படுகைக்குள் குழாய்கள் மூலம் கார்பன் டை ஆக்சைடு வாயுவை செலுத்தும்போது, எண்ணெய்க் கிணற்றில் இருந்து வெளியேறும் எண்ணையின் அளவு அதிகரிப்பதால் எண்ணையின் உற்பத்தி செலவு குறைகிறது. கார்பன் டை ஆக்சைடு வாயுவை சிறை பிடிப்பதற்கான செலவு இதனால் ஈடுசெய்யப்படுகிறது.
கடலுக்கடியிலும் கார்பன் டை ஆக்சைடு வாயுவை செலுத்தி சேமிக்கமுடியுமாம். ஆனால் கார்பன் டை ஆக்சைடு கடல்நீரில் கரையும்போது அடர்த்தி மிகுதியால் கடலுக்கடியில் கார்பன் டை ஆக்சைடு ஏரியாக உருவெடுக்கும் வாய்ப்பு இருக்கிறது. கடல் நீரின் அமிலத்தன்மை மிகுந்து கடல் உயிரினங்கள் அழிந்து போகவும் வாய்ப்பு இருக்கிறது. மூன்றாவதாக, சில தாது உப்புக்களுடன் கார்பன் டை ஆக்சைடை வினைபுரியச் செய்து உலோக ஆக்சைடுகளாக மாற்றியும் சேமிக்கலாம் என்கிறார்கள். ஆனால் இந்த வினை மெதுவாக நடைபெறக்கூடியது. வினையை விரைவுபடுத்த வேண்டுமென்றால் கூடுதலாக செலவு செய்ய வேண்டியிருக்கும். இதன் விளைவாக கச்சா எண்ணையின் விலை 180 சதவீதம் அதிகரிக்கவும் வாய்ப்பு இருக்கிறது.
பூமி வெப்பமடைவதை தடுக்க வேண்டுமென்றால் எந்த விலையும் கொடுக்கத்தானே வேண்டும்!
- மு.குருமூர்த்தி
- புவி வெப்பமயமாதலைத் தடுக்க புதிய வழிமுறை
- வட இந்தியா - வேகமாகக் குறையும் நிலத்தடிநீர்
- ஓசோன் மெலிவு மனிதருக்கு நலிவு
- புவி வெப்பமயமாதலும்..... மக்கள் நிலைமையும்
- கிளிஞ்சலுக்கு வந்த இடைஞ்சல்
- கடலை விஷமாக்கும் பிளாஸ்டிக் குப்பைகள்
- மரபு மாற்று விதைகள் – இயற்கையை விஞ்சுமா செயற்கை?
- வெப்பத்தை ஏற்று வளரும் பவளப்பாறைகள்
- கொல்லப்படும் சுற்றுச்சுழல் போராளிகள்
- சுற்றுச்சூழல் செய்திகள்
- திட்டமிடப்பட்டு அழிக்கப்படும் இயற்கை மரபுசார் விவசாயம்
- மீன் இனத்தை அழிக்கும் CO2
- கரியமில வாயுவின் இன்னொரு முகம்
- புவி வெப்பம் அதிகரிப்பது ஏன்?
- பற்றி எரிகிறது பூமி
- முல்லை பெரியாறு அணை - ஓர் பார்வை
- பாழாகும் பாலாறு
- ஆடுகளுடன் போர் செய்த ஒரு நாட்டின் கதை
- நிறம் மாறும் அண்டார்டிகா
- ஆழ்கடலில் அதிசய எரிமலைகளின் கண்டுபிடிப்பு