கீற்றில் தேட...
அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- மு.குருமூர்த்தி
- பிரிவு: சுற்றுச்சூழல்
டிலாவேர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றுள்ள அண்மைக்கால ஆராய்ச்சியில் ஒரு முக்கியமான உண்மை வெளியாகி உள்ளது. தாவரங்களின் இலைகள் நோய்க்கிருமிகளால் தாக்கப்படும்போது, வேர்ப்பாகத்திற்கு உதவிகோரி ஓர் அவசர செய்தி போகிறதாம். இந்த செய்தியை வேர்கள் ஏற்றுக்கொண்டு மெலிக் என்னும் அமிலத்தை சுரக்கின்றனவாம். வேரிலிருக்கும் நன்மை செய்யக்கூடிய ஒரு பாக்டீரியா இந்த அமிலம் மூலம் பாதிக்கப்பட்ட பகுதிக்கு மேல்நோக்கி அனுப்பப்படுகிறதாம்.
தாவரங்கள் "குந்தித்தின்பவை" என்னும் கருத்து இதன்மூலம் தகர்க்கப்பட்டிருக்கிறது. மனிதர்களையும் விலங்குகளையும் போல தாவரங்களிலும் தூண்டல் துலங்கல் வினைகள் காணப்படுகின்றன என்பதையும் நாம் நினைப்பதை விட தாவரங்களுக்கு அதிகமான புத்திசாலித்தனம் இருக்கிறது என்பதையும் இந்த ஆய்வுகள் நிரூபித்திருக்கின்றன.
தாவரங்களின் வேர்கள் மண்ணிற்குள் புதையுண்டு இருப்பதால் அவைகளுக்கு நகரமுடியாது என்று நாம் நினைக்கிறோம். ஆனால் இருந்த இடத்தில் இருந்துகொண்டே தாவரங்கள் புற உலகிலிருந்து உதவியைக் கேட்டுப்பெறுவது இயற்கையின் விநோதமில்லையா?
Arabidopsis thaliana என்ற தாவரத்தின் இலைகளை Pseudomonas syringae என்னும் நோய்க்கிருமியால் தாக்கச் செய்தனர். கொஞ்ச நாட்களில் நோயின் தாக்கத்தால் இலைகள் மஞ்சளாகிப் போயின. நோயின் அறிகுறிகளும் தாவரத்தில் தெரிய ஆரம்பித்தன. ஆனால் Bacillus subtilis என்னும் நன்மை செய்யும் நுண்ணியிரியை வேர்ப்பகுதியில் செலுத்தப்பட்ட தாவரங்கள் மட்டும் நோய்க்குறிகள் இல்லாமல் ஆரோக்கியமாக இருந்ததை காண முடிந்தது. இது எப்படி?
Bacillus subtilis என்னும் நுண்ணியிரியை நம்முடைய விவசாயிகள் இப்போதும் தாவரங்களின் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்க பயன்படுத்துகிறார்கள். தாவரங்களின் வேர்களைச் சுற்றிலும் ஒரு படலமாக இந்த நுண்ணியிரி படர்ந்துகொள்கிறது. தாவரங்களின் இலைகள் அவசர உதவி கோரத் தொடங்கியதும் வேர்கள் மெலிக் என்னும் கரிம அமிலத்தை சுரக்கின்றன.
மெலிக் அமிலம் Bacillus subtilis நுண்ணியிரியை இலையை நோக்கி ஒருதிசையாக ஈர்ப்பதை ஒரு நவீன தொழில் நுட்பம் மூலமாக விஞ்ஞானிகள் நிரூபித்தனர். LSM 510 DUO என்னும் லேசர் சாதனம் இதற்காக பயன்படுத்தப்பட்டது. டிலாவேர் பல்கலைக்கழகத்தில் உள்ள இந்த சாதனம் பல மில்லியன் டாலர்கள் மதிப்பு வாய்ந்தது.
ஒரு தாவரத்தின் ஏறத்தாழ பாதிப்பகுதி மண்ணுக்குள் புதையுண்டு இருப்பதால் வேரினுள் ஏற்படும் மாற்றங்களை படமெடுப்பது ஒரு மிகப்பெரிய சவால் ஆகும். ஆனால் டிலாவேர் பல்கலைக்கழகம் இதற்கான வசதிகளைப் பெற்றிருக்கிறது. ஒளி ஊடுருவும் அறைகளில், ஒளியியல் கருவிகளை இதற்காக இந்த பல்கலைக்கழகத்தில் பயன்படுத்துகிறார்கள்.
தாவரங்கள் உதவி கோரி எழுப்பும் எச்சரிக்கைகளை அறியவும், தாவர நுண்ணியிரிகளின் உதவியால் எவ்வாறு தாவரங்கள் நோய்களை எதிர்கொள்கின்றன என்பதையும் இந்த ஆய்வுகள் நமக்கு வெளிச்சமாக்குகின்றன.
- மு.குருமூர்த்தி
- விவரங்கள்
- ஆதி
- பிரிவு: சுற்றுச்சூழல்
'மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்கள் அணுகுண்டுகளைப் போன்றவை, தலைமுறை தலைமுறையாக பாதிப்புகள் தொடரும். நமது நாட்டின் முதுகெலும்பான விவசாயத்தை அழித்துவிடும்' என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரித்து வருகின்றனர். இந்நிலையில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்கள் ஏற்படுத்தும் பாதிப்புகளை மறைக்கும் வகையில் களப் பரிசோதனை விவரங்களை வெளியிட அரசு நிறுவனம் மறுத்துள்ளது. 'எங்கள் அப்பன் குதிருக்குள் இல்லை' என்று சொல்வது போல, மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்கள் தொடர்பான அறிவியல்பூர்வமான தகவல்களை வெளியிட மறுப்பது அவற்றின் நம்பகத்தன்மையை பெருமளவு கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது.
பசுமைஅமைதி (கிரீன்பீஸ்) அமைப்பைச் சேர்ந்த திவ்யா ரகுநந்தன், நாட்டில் நடைபெறும் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்கள் தொடர்பான களப் பரிசோதனை விவரங்களை வெளியிட வேண்டும் என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கோரிக்கை விடுத்திருந்தார். மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் உள்ள உயிரிதொழில்நுட்ப பிரிவுக்கு இந்த மனு அனுப்பப்பட்டிருந்தது. இந்தியாவில் கத்தரிக்காய், கடுகு, நெல் உள்ளிட்ட மரபணு மாற்றப்பட்ட பயிர்களுக்கு களப் பரிசாதனைகள் நடத்தப்பட்டுள்ளன. களப் பரிசோதனைகள் நடத்தப்பட்ட இடங்கள், அந்தப் பயிர்களில் உள்ள நச்சுத்தன்மை, ஒவ்வாமைத்தன்மை அளவீடு தொடர்பான பரிசோதனைகள் மற்றும் மரபணு மாற்றங்கள் மறுஆய்வுக் குழுவின் கூட்ட நிகழ்ச்சி குறிப்பு போன்றவற்றை அளிக்குமாறு திவ்யா கோரியிருந்தார்.
இந்த கோரிக்கைக்கு எதிராக, மகாராஷ்டிரா கலப்பின விதை கழக நிறுவனம், மத்திய தகவல் கமிஷனுக்கு எதிராக தில்லி உயர் நீதிமன்றத்தில் 2007 டிசம்பரில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கில் நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால் நீதிமன்றம் வர்த்தக நலனுக்கே முக்கியத்துவம் தந்து வருகிறது. வர்த்தக நலன்கள்-பொது சுகாதாரம் ஆகிய இரண்டுக்கும் இடையில், எல்லா நேரமும் வர்த்தக நலன்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.
வர்த்தக நலன்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதன் மூலம் பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படைத் தகவல்கள் மறைக்கப்படும் ஆபத்து அதிகரித்து இருக்கிறது. மருந்து உற்பத்தி தொழிலில் இதுதான் பெருமளவு நடந்து வருகிறது. வர்த்தக நலன் பாதிக்கப்பட்டுவிடும் என்ற போர்வையில் களப் பரிசோதனை முடிவுகளை மருந்து நிறுவனங்கள் மறைக்கின்றன. ஆனால் பொது சுகாதாரமே முக்கியம் என்பதால், மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் உண்மைத் தகவல்களை வெளியிட வலியுறுத்த வேண்டும் என்கின்றனர் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.
இந்த பரிசோதனை முடிவுகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் எந்த வகையில் எதிர்வினை ஆற்றுகின்றன என்பதையும், மருந்துகள் எந்த வகை பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன என்று தெரிந்து கொள்வதும் பொது சுகாதாரத்துக்கு மிக முக்கியம். மனிதர்களிடம் அவை எந்தவிதமான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை அறிய, களப் பரிசோதனை விவரங்கள் முக்கிய ஆதாரம். ஆனால் இந்த விவரங்கள் வசதியாக மறைக்கப்படுகின்றன. மறைப்பதற்குத் தேவையான எல்லா நடவடிக்கைகளையும் மேற்கொள்ள அந்நிறுவனங்கள் தயாராக இருக்கின்றன. நிறுவனத்தின் வர்த்தக நலன்கள் பாதிக்கப்படுவதை தடுக்கும் வகையில் நிறைவேற்றப்பட்டுள்ள 'டிரிப்ஸ்' எனப்படும் உலக வர்த்தக நிறுவனத்தின் 'வர்த்தக அறிவுசார் சொத்து உரிமை ஒப்பந்தத்தை' மீறி தகவல்களை வெளியிட முடியாது என்று மாஹிகோ நிறுவனம் கூறியுள்ளது.
''இந்தத் தகவல்களுக்கு ஏற்கெனவே காப்புரிமை பெறப்பட்டு விட்டதால், அவை வெளியிடப்படுவது வர்த்தக நலன்களை பாதிக்கும் என்று கூறுவது அப்பட்டமான பொய்'' என்கிறார் கிரீன்பீஸ் அமைப்பின் வழக்குரைஞர் பிரசாந்த் பூஷன். உணவு பாதுகாப்பு தகவல்களை வெளியிட வேண்டும் என்றுதான் திவ்யாவின் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இது எந்த வகையிலும் வர்த்தக நலன்களை பாதிக்காது. பொது நலன் அடிப்படையில் மேற்கண்டது போன்ற தகவல்களை வெளியிடலாம் என்று தகவல் உரிமைச் சட்டம், டிரிப்ஸ் ஆகிய இரண்டின் கீழும் வழிவகை உண்டு. பொது சுகாதாரத்தை பாதிக்கக் கூடிய அனைத்தையும் பொது ஆய்வுக்கு உட்படுத்துவதே சரி என்கிறார்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள். இதற்கு எடுத்துக்கட்டாக அமெரிக்காவில் நடந்த ஒரு சம்பவத்தை அவர்கள் கூறுகிறார்கள்.
மனஅழுத்த பிரச்சினைக்கு அமெரிக்காவில் கொடுக்கப்படும் போர்சாக் என்ற மருந்து தொடர்பான களப் பரிசோதனை விவரங்கள், அது அளிக்கும் பலனை வெட்டவெளிச்சமாக்கியது. அதன் பிறகுதான் அரசு விதிமுறைகளில் உள்ள ஓட்டைகள் தெரிய வந்தன. போர்சாக் மருந்துக்கு நடத்தப்பட்ட களப் பரிசோதனை விவரங்களை ஆராய்ந்தபோது, அந்த மருந்து நோயாளிகளுக்கு போதுமான அளவு பலனை அளிப்பதில்லை என்று தெரியவந்தது.
இதேபோல ஜெர்மனியில் மரபணு மாற்றப்பட்ட மக்காச்சோளம் தொடர்பான களப் பரிசோதனை விவரங்களை வியாபார ரகசியம் என்று மான்சான்டோ நிறுவனம் மறைத்தது. அந்தத் தகவல்களை கிரீன்பீஸ் கோரிக்கை விடுத்து பெற்றது. பரிசோதனை விவரங்களின் அடிப்படையில், மக்காச்சோளத்தை சாப்பிட்ட எலிகளின் கல்லீரல், சிறுநீரகங்கள் பாதிக்கப்படும் என்பது தெரிய வந்தது. மரபணு மாற்றப்பட்ட பயிர்கள், அவை ஏற்படுத்தும் பாதிப்புகள், எதிர்விளைவுகள் பற்றி பதில் சொல்ல கடமைப்பட்டுள்ள மத்திய அரசு அதைப் பற்றி எந்தத் தகவலையும் வெளியிடவில்லை. பொதுமக்களுக்கு கிடைக்கும் அதிகபட்ச தகவல், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மரபணு பொறியியல் அங்கீகாரக் குழுவின் இணையதளத்தில் உள்ள சொற்ப தகவல்கள் மட்டுமே.
மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் இந்தியாவில் ஏற்கெனவே ரகசியமாக அறிமுகப்படுத்தப்பட்டு விட்டன. அதைச் செய்தது மான்சான்டோ நிறுவனம். சாதாரண விதைகளுடன், மரபணு மாற்றப்பட்ட பருத்தி விதைகளை மறைமுகமாக கலந்து கொடுத்து பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. மாஹிகோ நிறுவனம் சர்ச்சைக்குரிய மான்சான்டோ பன்னாட்டு பயிர் நிறுவனத்துடன் நேரடி தொடர்பு வைத்துள்ளது. திவ்யாவின் மனு 2006 பிப்ரவரி மாதம் அனுப்பப்பட்டிருந்தது. இரண்டு ஆண்டுகள் முடிந்தும் எந்த பதிலும் தரப்படவில்லை. தாமதப்படுத்துவதன் மூலம் களப் பரிசோதனைகள் தொடர்பான தகவலை மறைக்க மாஹிகோ முயற்சிக்கிறது. பொது சுகாதாரம் - வர்த்தக நலன்களுக்கு இடையிலான போரில் இந்த மனு முன்னுதாரணமாக திகழும். இதுவரை வர்த்தக நலன்களுக்கே முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. மக்கள் நலனை கருத்தில் கொண்டு அந்த நிறுவனங்களுக்கு நெருக்கடி கொடுத்து தகவலை வெளிக் கொண்டுவர வேண்டிய தேவை தற்போது எழுந்துள்ளது.
- ஆதி
- விவரங்கள்
- ஆதி
- பிரிவு: சுற்றுச்சூழல்
சிறிதினும் சிறிது என்று பொருள்படும் வகையில் டாடா நிறுவனம் 'நானோ' என்ற பெயரில் புதிய காரை அறிமுகப்படுத்தியுள்ளது. ஏற்கெனவே சிங்கூர் ஆலை பிரச்சினை, டைட்டானியம் ஆலை பிரச்சினை என மக்களுக்கு எதிரான பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வரும் டாடா நிறுவனம், இந்த ஆண்டின் தொடக்கம் முதல் பலராலும் போற்றி புகழப்பட்டு வருகிறது. நடுத்தர வர்க்க மக்களை காந்தம் போல் கவர்ந்திழுக்கும் கவர்ச்சி கொண்ட நானோ கார், நாட்டின் சமீபத்திய சாதனைகளில் ஒன்றாக முன்னிறுத்தப்படுகிறது.
நடுத்தர குடும்பத்தினர் இனி தனித்தனி வாகனங்களில் செல்ல வேண்டியதில்லை. கார் வாங்க அதிக செலவு செய்ய வேண்டியதில்லை. நடுத்தர வர்க்க மக்களின் கனவு நனவாகிவிட்டது. டாடா நிறுவனம் மக்களுக்கு பெரும் வரத்தை தந்துள்ளது என்றெல்லாம் வர்ணிக்கப்படுகிறது. டாடா நானோ கார் உண்மையில் வரமா, சாபமா?
நானோ கார் பெரும் சாபமாக மாறுவதற்கு அதிகபட்ச வாய்ப்புகள் இருப்பதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர். டாடா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள நானோ காருடன் சிறு கார்களின் வருகை நிற்கப் போவதில்லை. நானோ காரின் வருகை சந்தையில் பெரும் போட்டியை ஏற்படுத்தும். தகவல் தொழில்நுட்பத் துறை மூலம் இந்திய நடுத்தர வர்க்கத்தினருக்கு கிடைக்கும் பெருமளவு பணத்தை, பிடுங்கிக் கொள்ள சந்தைகள் குறி வைத்து செயல்படுகின்றன. அதன் ஒரு பகுதிதான் இந்த நானோ கார். டாடாவைத் தொடர்ந்து இதர கார் தயாரிப்பு நிறுவனங்களும் குறைந்த விலை காரை அறிமுகப்படுத்தும் பணிகளை முடுக்கி விட்டுள்ளன.
பெரும்பாலான நகரங்களில் இந்த கார்களுக்கு பெரும் சந்தை உள்ளது. அப்படி குறைந்த விலை கார்கள் சந்தையில் அதிகரிக்கும்போது பிரச்சினைகளும் கட்டுப்படுத்த முடியாத வகையில் அதிகரித்துவிடும். ''இந்தக் கார்களின் மாசு வெளியீட்டளவு, பாதுகாப்புத் தரம் குறித்து சம்பந்தப்பட்ட நிறுவனங்களோ, அரசோ கவலைப்படவில்லை'' என்று அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தின் தூய காற்று உரிமைக்கான பிரசார ஒருங்கிணைப்பாளர் அனுமிதா ராய்சௌத்ரி எச்சகரிக்கிறார்.
அதிகரிக்கும் நெருக்கடிகள்
குறைந்த விலை கார்களின் வருகை, எல்லோரது பயணத்தையும் (!) சௌகரியமாக்கிவிடும். எல்லோரும் வசதியாகவும், வேகமாகவும் கார்களில் செல்லலாம் என்று விளம்பரப்படுத்தப்படுகிறது. இது எல்லாமே மாயை என்று கணக்கெடுப்புகள் அடித்துக் கூறுகின்றன. குறைந்த விலை கார்கள் ஏற்படுத்தும் முதல் ஆபத்து போக்குவரத்து நெருக்கடி, இரண்டாவது ஆபத்து எரிபொருள் நுகர்வு அதிகரிப்பு, மூன்றாவது ஆபத்து காற்று மாசுபாட்டால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடு, நான்காவது மற்றும் முக்கிய ஆபத்து விபத்துகள் மற்றும் உயிரிழப்புகள்.
கார்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்கெனவே அதிகரித்து விட்டது. இந்திய சிறு, பெரு நகரங்களில் போக்குவரத்து நான்கு கால்களில் ஊர்ந்து செல்வது அன்றாட நிகழ்வாகிவிட்டது. தில்லியில் பயண வேகம் 1997ல் மணிக்கு 20-27 கி.மீ. இருந்தது, 2002ல் மணிக்கு 15 கி.மீ. ஆக குறைந்துவிட்டது. கோல்கத்தாவில் சராசரி பயண வேகம் மணிக்கு 15-20 கி.மீ.ல் இருந்து, 7 கி.மீ ஆக குறைந்துவிட்டது. சென்னை சாலைகளின் பயண வேகம் மணிக்கு 13 கி.மீ. ஆகக் குறைந்துள்ளது.
இதற்குத் தீர்வாக அதிக சாலைகளை அமைக்க வேண்டும் என கூறப்படுகிறது. ஆனால் இது நெருக்கடியை அதிகரிக்கவே செய்யும். 10 சதவிகித சாலைகள் அதிகரித்தால் 9 சதவிகித போக்கவரத்து நெருக்கடி அதிகரிக்கிறது என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. குறைந்த விலை கார்களின் எரிபொருள் செலவு திறன், தற்போது சந்தையில் உள்ள பெரிய கார்களைவிட சிறப்பாக இருக்கிறது என்றபோதும், குறைந்த விலை கார்களின் எண்ணிக்கை கட்டுமீறி அதிகரிக்கும் என்பதால், எரிபொருள் அதிகம் நுகரப்படும். அதற்கேற்ப மாசுபாடும் அதிகரிக்கும். பொதுப்போக்குவரத்து மூலம் கிடைத்து வரும் சுற்றுச்சூழல் லாபங்களை இந்தக் கார்கள் பறித்துவிடும்.
எரிபொருள் செலவுடன் ஒப்பிடும்போது, குறைந்த விலை கார்களின் திறன் இருசக்கர வாகனங்களைவிட சிறந்ததல்ல. எப்படிப் பார்த்தாலும் ஒரு காரில் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு அதிகபட்சம் 20 கி.மீ.தான் செல்ல முடியும். ஆனால் சிறந்த இருசக்கர வாகனத்தில் 60 கி.மீ. செல்லலாம். இந்தக் கார்கள் யுரோ 4 (பாரத் 4) என்ற வாயு வெளியீட்டு கட்டுப்பாடு அளவுகள் வருவதற்கு முன்னால் சந்தைக்கு வந்துள்ளன. 10 ஆண்டுகளுக்கு முன் வகுக்கப்பட்ட பாரத் 2 கட்டுப்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு இந்தக் கார்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் பெரும்பாலான நகரங்களில் யுரோ 3 (பாரத் 3) கட்டுப்பாடுகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதுவே ஐந்து ஆண்டு பழையது. சமீபகாலத்தில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளின்படி இந்தக் கார்கள் தயாரிக்கப்படவில்லை என்பதால் காற்று மாசுபாடு அதிகரிக்கும். இந்தியாவில் உள்ள 57 சதவிகித நகரங்களில் காற்று மாசுபாடு மிக மோசமாக இருக்கிறது. குறிப்பாக, தூசுப் புகை (பார்டிகுலேட்) அளவு மிக அதிகம். கொல்கத்தா, ஹெளராவில் நைட்ரஜன் டைஆக்சைடு, தூசுப் புகை (பார்டிகுலேட்) அளவு மிக அதிகம்.
இந்தக் கார்கள் டீசலில் இயக்கப்படுகின்றன. வாடிக்கையாளர்களை கவரும் அம்சங்களில் இதுவும் ஒன்று. தற்போதுள்ள கட்டுப்பாடுகளின்படி பெட்ரோல் கார்களைவிட, மூன்று மடங்கு நைட்ரஜன் ஆக்சைடு மற்றும் தூசு புகையை (பார்டிகுலேட்) டீசல் வெளியிடும். இந்த மாசு மிகவும் நச்சுத்தன்மை கொண்டது. டீசல் பயன்பாட்டுக்கு எதிராக தில்லி உயர்நீதிமன்றம் பல கேள்வி எழுப்பியுள்ளது. தில்லி பேருந்துகளில் இயற்கை எரிவாயுவுக்கு மாற்றியதால் கிடைத்த லாபம், டீசல் கார்களின் எண்ணிக்கை அதிகரிப்பால் பறிபோகும் என்று அஞ்சப்படுகிறது.
வேளாண் பயன்பாடு, சரக்குப் போக்குவரத்தை கருத்தில் கொண்டே டீசலுக்கு குறைவாக வரி விதிக்கிறது. ஆனால் இந்த வசதி தவறாக பயன்படுத்தப்படுகிறது. கந்தக அளவு 10 பிபிஎம் (கனஅளவில் பத்து லட்சத்தில் ஒரு பங்கு) கொண்ட தூய்மையான டீசலை பயன்படுத்தும் வகையில் அரசு கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும். டீசல்-பெட்ரோல் இடையே நிலவும் சமனற்ற விலை இடைவெளியை குறைக்க வேண்டும். டீசல் கார்கள் கட்டுப்படுத்தப்படாவிட்டால், சுற்றுச்சூழல் சீர்கேடு பயங்கர நிலையை எட்டும்.
கார்கள் அடிப்படை பாதுகாப்புத் தரத்தை கடைப்பிடிக்க வலியுறுத்தும் சட்டங்கள் இந்தியாவில் இயற்றப்படவில்லை. 'முழு சேத பரிசோதனை' மூலம் விபத்தில் ஒரு கார் மோதும்போது, நசுங்கும் தன்மையைப் பொறுத்து பயணிகள் மீது எந்த வகையில், எவ்வளவு காயம் ஏற்படும் என்று கண்டறியப்படுகிறது. இந்தச் சோதனை குறைந்த விலை காரில் நடத்தப்படவில்லை. விபத்தில் பயணிகள் பாதிக்கப்படுவதை குறைக்கும் காற்றுப் பைகள், எதிர்முனை பிரேக் அமைப்பு போன்றவை இந்தக் கார்களில் இல்லை. ஐரோப்பாவைப் போல கார்களின் பாதுகாப்பு உத்தரவாதம் பற்றி வாடிக்கையாளர்களுக்கு உண்மைகளைக் கூறாமல் இந்திய கார் உற்பத்தியாளர்கள் மறைக்கிறார்கள். பாதுகாப்புத் தேவைகளை பூர்த்தி செய்யததால்தான் இந்தக் கார்கள் குறைந்த விலையில் கிடைக்கின்றன. பாதுகாப்பு தரத்தை உறுதி செய்தால் குறைந்த விலைக்குத் தர முடியாது.
எல்லை மீறும் கார்கள்
நகர்ப்புறங்களின் பொது இடங்களை பயன்படுத்த கார்கள் எந்தவிதமான கட்டணத்தையும் செலவு செய்வதில்லை. பொதுப்பணத்தில் கட்டப்பட்ட சிறந்த பாலங்கள், சாலைகளை பெருமளவு ஆக்கிரமித்து கார்கள் பயன்படுத்திக் கொள்கின்றன. நகர்ப்புறத்தில் நிலவும் கடும் இடநெருக்கடிக்கு இடையே கார்களை சாலைகளில் நிறுத்தி இடம் ஆக்கிரமிக்கப்படுகிறது. இரவு நேரங்களில் குடியிருப்புப் பகுதிகளில் உள்ள உள்சாலைகளை ஆக்கிரமித்து வீட்டுக்கு வெளியே கார்கள் நிறுத்தப்படுகின்றன.
இந்தியாவில் கார்களைவிட பொதுப்போக்குவரத்தான பேருந்துகளுக்கு 2.3 மடங்கு அதிக வரி விதிக்கப்படுகிறது. இருந்தபோதும், கார்களுக்கு இன்னும் வரிக்குறைப்பு செய்ய வேண்டும் என்று கார் உற்பத்தியாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இது பின்னோக்கி இழுக்கும் மாற்றமாகும். குறைந்த விலையில் கிடைக்கும் தரமற்ற டீசலால் ஓடும் குறைந்தவிலை கார்கள், 'தேனீக்களை ஈர்க்கும் தேனடையைப் போன்று' நடுத்தர வர்க்கத்தினரை கவர்ந்து இழுக்கும். எனவே, இந்தக் கார்களை பெருமளவு விற்பனை செய்யப்படுவதற்கு முன் கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும்.
அப்படி மத்திய அரசு கட்டுப்பாடுகளை விதிக்காவிட்டால் பெரிய அளவில் பிரச்சினைகள் வர வாய்ப்பு உள்ளது. குறைந்த விலை கார்களின் வரவு பொருளாதார, சுற்றுச்சூழல், சுகாதார பிரச்சினைகளை ஏற்படுத்தும். சிறு கார்களின் வரவு பொதுப் போக்குவரத்து, இருசக்கர வாகனப் போக்குவரத்தை காவு வாங்கும். நகர்ப்புற போக்குவரத்து நெரிசல், சுற்றுச்சூழல் சீர்கேடுதான் அவை நமக்குத் தரும் பலன்கள் என்கிறது தில்லி அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம். சின்னஞ்சிறு கார்களுக்குள் இப்படி பயங்கரங்கள் புதைந்துள்ளன. நாம் எதை வாங்கப் போகிறோம்? வரத்தையா, சாபத்தையா?
வீதிகள் மக்களுக்கே : ஐரோப்பாவின் வழிகாட்டுதல் முயற்சி
காலை 9 மணி. பள்ளி செல்லும் குழந்தைகள், கல்லூரி செல்லும் இளவயதினர், வேலைக்குச் செல்லும் ஆண்கள் பெண்கள் என அனைவரும் கால்களில் சக்கரம் கட்டிக் கொள்ளாத குறையாக இருசக்கர வாகனங்கள், பேருந்துகள், மின்ரயில்கள் என்று கிடைத்த வாகனங்களில் பறக்கின்றனர்.
அதோ அந்தச் சாலை போக்குவரத்து நெருக்கடியில் சிக்கிக் கொண்டுவிட்டது. அனைவரும் பெருமூச்சு விடுகின்றனர். சிலர் சலித்துக் கொள்கின்றனர். சிலர் வெறுப்படைகின்றனர். என்ன செய்வது, இன்றும் போக்குவரத்து நெருக்கடியில் எங்கள் வாகனம் சிக்கிக் கொண்டுவிட்டதே. சிக்கிக் கொண்ட நூல் கண்டுபோல் எல்லாம் குழம்பிக் கிடக்கின்றன.
நம் ஊரில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் இதுதான் நிலைமை. சமீபத்தில் நாளிதழ்களில் ஒரு படம் வெளியானது. ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகர முக்கிய வீதியில் ஆடுகளை ஓட்டிக் கொண்டு வந்து இடையர்கள் எதிர்ப்பு தெரிவித்ததே அந்தப் படம். ஸ்பெயின் நாட்டின் வடக்கு, தெற்குப் பகுதிகளை இணைத்த இந்தப் பாதை 800 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது. அந்தச் சாலையை மாட்ரிட் நகரத்தில் ஏற்பட்ட வளர்ச்சி ஆக்கிரமித்துக் கொண்டதால் மேய்ச்சல் நிலமும், கால்நடைகளை ஓட்டிச் செல்வதற்கான பாதைகளும் பறிக்கப்பட்டன. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, வழக்கமாக கார்கள் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் பாதையில் ஆடுகளை ஓட்டிக் கொண்டு வந்து இடையர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர் இடையர்கள்.
ஐரோப்பா முழுவதும் இதுபோன்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் பெருகி வருகின்றன. நகரமயமாதலால் கிராமப்புறங்கள், கிராம மக்களின் வாழ்வு ஆதாரங்கள் பறிக்கப்படுகின்றன. நகரச் சாலைகளை மேட்டுக்குடியினரின் கார்கள் அடைத்துக் கொள்கின்றன. இதற்கு எதிர்ப்பு வலுத்து கார்களை குறைக்க வலியுறுத்தும் மக்கள் இயக்கங்கள் பெருகி வருகின்றன. ஐரோப்பாவில் கடந்த ஆண்டு செப். 16 முதல் செப். 22 வரை கார் பயண குறைப்பு வாரமாக அனுசரிக்கப்பட்டது. இந்த கொண்டாட்டத்தின் மையக்கரு 'வீதிகள் மக்களுக்கே' என்பதுதான்.
போக்குவரத்து பிரச்சினைகளைத் தீர்க்க கார்கள் உதவாது. அவை போக்குவரத்து நெருக்கடியை அதிகரிக்கவே செய்யும். கார்களை அதிகம் பயன்படுத்துவதால் காற்று, ஒலி மாசுபாடு, எரிபொருள்-பராமரிப்புச் செலவு, நிறுத்துமிட பிரச்சினைகள் போன்றவை பெருமளவு அதிகரித்து வருகின்றன. இது தொடர்பான விழிப்புணர்வு பல்வேறு நாடுகளில் அதிகரித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாகவே, கார் ஓட்டாத நாட்கள் அனுசரிக்கப்படுகின்றன.
கார்களக்குப் பதிலாக நிலைத்த, திறன்மிக்க பொதுப் போக்குவரத்து வசதிகளை பயன்படுத்துவது சுகாதாரமான வாழ்க்கையை தரும். அதை வலியுறுத்தும் வகையில் அந்த வாரம் முழுவதும் கச்சா எண்ணெய் எரிபொருள்கள் பயன்படுத்தாத நடை, சைக்கிள் போன்ற பயண முறைகள், பொது போக்குவரத்து வசதிகளைப் பயன்படுத்த ஊக்குவிக்கப்பட்டது.
- ஆதி
- விவரங்கள்
- ஆதி
- பிரிவு: சுற்றுச்சூழல்
சுற்றுச்சூழல் சீர்கேட்டின் எதிர்விளைவுகள், புவி வெப்பமடைதல் போன்ற பாதிப்புகளைத் தொடர்ந்து நுகர்வு பண்பாட்டின் தாயகங்களான மேற்கு நாடுகளில் வாழும் மக்கள் சமீபகாலமாக விழிப்புணர்வு பெற்று வருகின்றனர். ஒட்டுமொத்தமாக அனைவரும் சுற்றுச்சூழல் உணர்வு பெற்றுவிடுவார்கள் என்று சொல்வதற்கில்லை. இருந்தபோதும் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டு வருகிறது.
மக்கள்தொகை பெருமளவு அதிகரித்து விட்டதாலும், மனப்பான்மை மாற்றங்கள் மெதுவாகத்தான் ஏற்படும் என்பதாலும், சுற்றுச்சூழல் சீர்கேடுகளை உடனே தடுத்து நிறுத்துவது கடினம். அறிவியல் எவ்வளவோ வளர்ந்துவிட்ட போதிலும், அறிவியல் தந்த அனைத்து வசதிகளையும் அனுபவித்து வரும்போதும் மூடநம்பிக்கைகளின் ஆட்சி கடுமையாகவே உள்ளது. அறிவியல் பூர்வமாக சிந்திப்பது, பகுத்தறிவு போன்றவை இன்னும் ஆழ வேரோடவில்லை.
இந்நிலையில் புவிவெப்பமடைதல் தொடர்பான விழிப்புணர்வை அதிகரிக்கவும், புவிவெப்பமடைதலை குறைப்பதற்கான மாற்று முயற்சிகளும் அதிரித்து வருகின்றன. ஒவ்வோர் ஆண்டும் லண்டனில் ஒரு வாரத்துக்கு கார் பயன்பாட்டை குறைக்கும் பிரச்சாரம் நடத்தப்படுகிறது. ஐரோப்பிய நாடுகளில் கார் பயன்படுத்தாத நாட்கள் அனுசரிக்கப்படுகின்றன. எரிபொருள் பயன்பாட்டை குறைப்பது, மாசை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் இந்த பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. குறிப்பிட்ட சில மணி நேரங்களுக்கு நகரம் முழுவதும் மின்விளக்குகளை அணைத்துவிடும் விழிப்புணர்வு பிரசாரம் உலகெங்கும் பிரபலமடைந்து வருகிறது.
இங்கிலாந்து தலைநகர் லண்டன், பிரான்ஸ் தலைநகர் பாரிஸ், இந்தியாவில் மும்பை நகரங்களில் மின்விளைக்கை நிறுத்தும் பிரசாரம் நடந்துள்ளது. ஆஸ்திரேலிய துறைமுக நகரான சிட்னியில் இந்த பிரசாரம் நடைபெற்ற போது நகரின் பாதி மக்கள் பங்கேற்றது உலகை திரும்பிப் பார்க்கச் செய்தது.
இந்தப் பிரசாரத்தில் பங்கேற்க மின் சாதனங்களான விளக்குகள், மின்விசிறி, குளிர்சாதனப் பெட்டிகள் உள்ளிட்ட அனைத்து மின் சாதனங்களையும் ஒரு மணி நேரம் இயக்காமல் இருக்க வேண்டும். இந்தப் போராட்டம் அனைவருக்கும் வெளிப்படையாகத் தெரிய வேண்டும் என்பதால், இரவு நேரம் தேர்ந்தெடுக்கப்படுகிறது.
கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட பிரசாரத்தின்போது ஈபில் கோபுரம், சிட்னி ஓபரா ஹவுஸ், பக்கிங்ஹாம் அரண்மனை போன்ற முக்கிய கட்டடங்கள் மின் பயன்பாட்டை நிறுத்தின. மும்பையில் மேயர் வீடு, ஆளுநர் மாளிகை போன்றவை பிரசாரத்தில் பங்கேற்றன.
சிட்னியில் கடந்த ஆண்டு மார்ச் 31ம் தேதி புவி நேரம் என்ற பெயரில் நடத்தப்பட்ட பிரசாரத்தின்போது நகரின் 57 சதவிகித மக்கள் பங்கேற்றனர். ஒரு நாளின் 10 சதவிகித மின்செலவு குறைந்தது. லண்டனில் 20 லட்சம் விளக்குகள் அணைக்கப்பட்டு, 750 மெகாவாட் மின்செலவு குறைந்தது. பிரான்சில் நாடு முழுவதும் ஐந்து நிமிடங்களுக்கு மின்பயன்பாடு நிறுத்தப்பட்டதன் மூலம் 800 மெகாவாட் மின் பயன்பாடு குறைந்தது. பிரான்சின் ஒரு நாள் மின்தேவையில் இது ஒரு சதவிகிதம். மும்பையில் டிசம்பர் மாதம் நடந்த 'பட்டி பந்த்' பிரசாரத்தில் 105 மெகாவாட் மின்சாரம் சேமிக்கப்பட்டு, ஒரு நாள் மின்தேவையில் 5 சதவிகிதம் குறைந்தது.
சென்னையில் எக்ஸ்னோரா, 200 அமைப்புகளுடன் இணைந்து இந்த பிரச்சாரத்தை மே 1ம் தேதி நடத்த ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. அன்று மாலை 7 மணி முதல் 8 மணி வரை மின் பயன்பாட்டை முழுமையாக நிறுத்த வேண்டும் என்பதே பிரச்சாரத்தின் நோக்கம்.
இப்படிச் செய்வதால் என்ன பயன் ஏற்படுகிறது என்ற கேள்வி எழுலாம். தினசரி நாம் பயன்படுத்தும், விரயமாக்கும் மின்சாரத்துடன் ஒப்பிட்டால், ஒரு மணி நேரம் மட்டும் மின்பயன்பாட்டை நிறுத்துவதால் பெருமளவு மின்சாரம் சேமிக்கப்படுவதில்லை என்பது உண்மைதான். ஆனால் வெகுமக்களிடையே சில கோரிக்கைகளை முன்வைத்து பிரசாரம் நடத்தும்போது, இப்படிப்பட்ட அடையாள பிரசாரங்கள் அவசியத் தேவையாகின்றன.
இந்த பிரசாரம் மக்களிடையே ஒருமித்த உணர்வையும், சுற்றுச்சூழல் விழிப்புணர்வை தூண்டிவிட்டு சூழல் உணர்வுடன் செயல்படத் தூண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரசாரத்தின் அடுத்த கட்ட நோக்கம் மின்விரயத்தை குறைப்பது, இயன்றவரை மின்சாதனங்களின் பயன்பாட்டை குறைப்பது, தேவையற்ற மின்தேவைகளை கட்டுப்படுத்துவதாக இருக்க வேண்டும். அதற்கான தொடக்கமாக இந்த பிரசாரத்தை பயன்படுத்த வேண்டும்.
மின்விரயம் தொடர்பான விழிப்புணர்வு செய்திகள், நிலக்கரி மூலம் மின்சாரம் தயாரிப்பதால் ஏற்படும் புவி வெப்பமடைதல் விளைவு, தனியார் தொழில் நிறுவனங்களில் ஏற்படும் மின்விரயங்கள், மின்விரயம் செய்யாத சிறு புளூரசென்ட் விளக்குகள் (காம்பேக்ட் புளூரசன்ட் பல்ப்) உள்ளிட்ட செய்திகளை பரப்ப வேண்டும். எடுத்துக்காட்டாக, சென்னை கடற்கரை சாலையில் உள்ள தலைவர்களின் சிலைக்கு யாரும் வராத இரவு நேரங்களில்கூட விளக்குகள் பிரகாசிக்கின்றன. யாருக்காக இந்த விளக்குகள் எரிகின்றன. இரவு முழுக்க எரிவதால் யாருக்கு என்ன லாபம்?
அதேபோல விளம்பர பலகைகள், தனியார் நிறுவனங்களின் மின் பயன்பாட்டுக்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும். அல்லது தனியார் மின்பயன்பாட்டுக்கு தனி வரி விதிக்க வேண்டும். மக்கள் பணத்தில் அமைக்கப்படும் மின்நிலையங்களில் இருந்து குறைந்த விலையில் தனியார் நிறுவனங்கள் மின்சாரத்தை பெறுவதை அனுமதிக்கக்கூடாது.
புவி வெப்பமடைவதற்கு மேற்கு நாடுகளில் வாழும் அதிகமாக நுகரும் மக்கள்தான் முக்கிய காரணம். அதற்காக நாம் சும்மா இருக்க முடியாது. இந்தியாவில் 60 கோடி மக்களுக்கு மின் வசதியில்லை. அவர்களுக்கு மின் வசதி கொடுக்க வேண்டியது அவசியம். மின்சாரத்தை பயன்படுத்தும் வசதியைப் பெற்ற மேட்டுக்குடிகள், நடுத்தர வர்க்கத்தினர் அதிகமாக நுகர்கின்றனர், விரயம் செய்கின்றனர். இதை விடுத்து, எதையும் தேவைக்கு மட்டும் பயன்படுத்தும் நமது பாரம்பரிய பண்புக்குத் திரும்ப வேண்டும். அமெரிக்காவை பிரதி செய்வதை கைவிடத் தொடங்க வேண்டும்.
- ஆதி
- கடத்தலால் அழியும் காட்டுயிர்கள்
- பாயத் துடிக்கும் பன்னிரண்டு நோய்கள்
- சி.எஃப்.எல். பல்புகளோடு போராடும் குமிழ் பல்புகள்
- சூழலைக் காக்கும் பீமா மூங்கில்
- கரியமில வாயுவை கட்டுப்படுத்தும் வழிகள்
- வீட்டிற்குள்ளே சூழல் பாதுகாப்பு
- வானிலையை மாற்றும் காற்றாலைகள்
- கரியமில வாயுவை சேமித்து வைக்க முடியுமா?
- புவி வெப்பமயமாதலைத் தடுக்க புதிய வழிமுறை
- வட இந்தியா - வேகமாகக் குறையும் நிலத்தடிநீர்
- ஓசோன் மெலிவு மனிதருக்கு நலிவு
- புவி வெப்பமயமாதலும்..... மக்கள் நிலைமையும்
- கிளிஞ்சலுக்கு வந்த இடைஞ்சல்
- கடலை விஷமாக்கும் பிளாஸ்டிக் குப்பைகள்
- மரபு மாற்று விதைகள் – இயற்கையை விஞ்சுமா செயற்கை?
- வெப்பத்தை ஏற்று வளரும் பவளப்பாறைகள்
- கொல்லப்படும் சுற்றுச்சுழல் போராளிகள்
- சுற்றுச்சூழல் செய்திகள்
- திட்டமிடப்பட்டு அழிக்கப்படும் இயற்கை மரபுசார் விவசாயம்
- மீன் இனத்தை அழிக்கும் CO2