கீற்றில் தேட...
அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: புவி அறிவியல்
காலநிலை மாற்றத்தால் பூமியில் கடல்களின் நிறம் மாறிக் கொண்டிருக்கிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன. ஒரு கடல் பசுமை நிறமாக மாறக் காரணம், அதில் உள்ள தாவர மிதவை உயிரினங்களின் எண்ணிக்கையில் மாற்றம் ஏற்படுவதே என்று நாசா நிறுவனத்தின் பகுப்பாய்வுப் படங்கள் கூறுகின்றன. ஆழ்ந்த நீல நிறத்தில் இருக்கும் ஒரு கடல் காலப்போக்கில் பச்சை நிறத்திற்கு மாறுகிறது. பூமத்திய ரேகைக்கு கீழுள்ள பகுதியில் அமைந்துள்ள கடற்பகுதிகளில் இந்த பாதிப்பு அதிகம் காணப்படுகிறது.
"கடல் நீர் நிறம் மாறுவது பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை. ஆனால் சூழல் மண்டலத்தில் நிகழும் மாற்றங்களையே இது அடையாளப்படுத்துகிறது" என்று நேச்சர் (Nature) ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வுக் கட்டுரையின் ஆசிரியர் மற்றும் சவுத்தாம்ப்டன் (Southampton) பல்கலைக்கழகத்தின் தேசிய கடல்சார் ஆய்வு மைய விஞ்ஞானி பிபி கேல் (BB Cael) கூறுகிறார்.
காலநிலை மாற்றத்தின் தற்போதைய போக்கை அறிய கடல் நீரின் நிறம் பற்றி நடத்தப்பட்ட இந்த முன்னோடி ஆய்வில் மிதவை உயிரினங்களில் உள்ள பசுமையான க்ளோரோபில் அல்லது பச்சைய செல்கள் பற்றி முக்கியமாக ஆராயப்பட்டது. மிகச் சிறந்த தரவுகளின் களஞ்சியமான நாசாவின் மோடீஸ் நீரியல் (Modis-Aqua) செயற்கைக்கோளின் உதவியுடன் இந்த ஆய்வுகள் நடத்தப்பட்டன.நாசாவின் செயற்கைக்கோள்
இந்த செயற்கைக்கோள் டெரா (Terra) மற்றும் அக்வா (Aqua) என்ற இரு விண்கலங்களில் செயல்படுகிறது. 2330 கிலோமீட்டர் அகலத்தில் இது பூமியின் நிலம் மற்றும் நீர்ப்பரப்பு முழுவதையும் ஆராயும் திறன் பெற்றது. கடல் நீரில் ஏற்படும் சிவப்பு, நீலம் உள்ளிட்ட நிறங்களின் மாற்றங்களை இதில் உள்ள நிறமானி முழுமையாக ஆராய்ந்து கூறியுள்ளது. வெவ்வேறு அளவுள்ள மிதவை உயிரினங்கள் ஒளியை வெவ்வேறு அளவுகளில் சிதறடிக்கின்றன. வேறுபட்ட நிறமிகளைக் கொண்ட மிதவை உயிரினங்கள் ஒளியை வேறுபட்ட அளவில் உறிஞ்சுகின்றன.
நிறங்களில் ஏற்படும் மாற்றங்களை ஆராய்வதன் மூலம் உலகம் முழுவதும் கடல்களில் வாழும் தாவர மிதவை உயிரினங்களின் எண்ணிக்கையில் ஏற்படும் மாற்றங்களைப் பற்றி விஞ்ஞானிகளால் துல்லியமாக அறிய முடியும். ஒளிச்சேர்க்கை செய்யும் திறன் பெற்ற ஒற்றை செல்லுடன் கடலில் வாழும் உயிரினங்களே தாவர மிதவை உயிரினங்கள் (phytoplanktons) என்று அழைக்கப்படுகின்றன.
கடற்சூழல் மண்டலத்தில் உணவுச்சங்கிலியின் அடிப்படை இந்த உயிரினங்களே என்பதால் இவை ஆரோக்கியமான கடற்சூழலுக்கு முக்கியமானவை. இந்த நிற மாற்றங்கள் கணினி மாதிரிகளுடன் ஒப்பிடப்பட்டு மனிதனால் புவி வெப்ப உயர்வு ஏற்படுத்தப்படாமல் இருந்தால் கடல்கள் எவ்வாறு இருக்கும் என்று ஆராயப்பட்டபோது இப்போது நிகழ்ந்து வரும் மாற்றங்களைப் பற்றி தெளிவாக அறிய முடிந்தது.
உலகக் கடல்களில் 56%
இந்த மாற்றங்களை வெப்ப மண்டல மற்றும் துணை வெப்ப மண்டலப் பகுதிகளில் உள்ள கடல்களில் குறிப்பிடத்தக்க அளவில் காணமுடிந்தது என்று கேல் கூறுகிறார். பூமியில் இருக்கும் கடல்களில் 56% கடல்களிலும் இந்த மாற்றங்கள் நிகழ்கிறது. இது பூமியின் ஒட்டுமொத்த நிலப்பரப்பின் அளவை விட அதிகம்.
பெரும்பான்மையான கடற்பகுதிகளிலும் இந்த பசுமை விளைவு (Greening effect) நிகழ்கிறது. ஆனால் நீல நிறம் மற்றும் சிவப்பு நிறத்தின் அளவுகள் ஒரு சில பகுதிகளில் சில சமயங்களில் அதிகமாவதையும் வேறு சில சமயங்களில் குறைவதையும் காண முடிகிறது என்று அவர் கூறுகிறார். ஒட்டுமொத்த சூழல் மண்டலத்தையும் அழிக்கக் கூடியதோ அல்லது மாற்றக் கூடியதோ இல்லை என்றாலும் இவை மிக நுட்பமானவை. மனித அறிவினால் இன்னும் முழுமையாகப் புரிந்து கொள்ளப்பட முடியாதவை.
மனிதக் குறுக்கீட்டின் மற்றொரு எடுத்துக்காட்டு
நம்மால் இன்னமும் முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாமல் இந்த மாற்றங்கள் கடல்களில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. மனிதக் குறுக்கீட்டால் பூமியின் உயிர்க்கோளத்திற்கு ஏற்பட்டு வரும் மோசமான பாதிப்புகளுக்கு இது மற்றொரு சிறந்த எடுத்துக்காட்டு. இந்த ஆய்வுகள் காலநிலை மாற்றத்தின் இன்னுமொரு விளைவை தெளிவாக ஆவணப்படுத்தியுள்ளன.
என்றாலும் கடல்களுக்குள் எதனால் இந்த மாற்றங்கள் நிகழ்கின்றன, இந்த மாற்றங்கள் எந்த அளவு வலிமையானவை என்பது பற்றி ஆய்வாளர்களுக்கு இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்று ஆரிகன் ஸ்டேட் பல்கலைக்கழகத்தின் கடல் வளம் (Ocean Productivity) ஆய்வு மையத்தின் விஞ்ஞானி மைக்கேல் ஜே பேரன்ஃபெல்டு (Michael J Behrenfeld) கூறுகிறார்.
கடல்களில் நுண் பிளாஸ்டிக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது மற்ற எந்த ஒரு பொருளையும் போல ஒளியைச் சிதறடிக்கச் செய்யும். இது போன்ற பல காரணங்களால் இந்த மாற்றங்கள் ஏற்படலாம். இது பற்றி மேலும் தெளிவாக புரிந்து கொள்ளப்படும்போது கடலில் நிகழும் சூழலியல், உயிரி புவி வேதியியல் மாற்றங்கள் ஏற்படுத்தும் தாக்கங்கள் பற்றி நம்மால் புரிந்து கொள்ள முடியும் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
நாசாவின் புதிய செயற்கைக்கோள்
நாசா ஜனவரி 2024ல் பேஸ் (PACE - Plankton, Aerosol, Cloud, Ocean Ecosystem) என்று பெயரிடப்பட்டுள்ள அதி நவீன செயற்கைக்கோளை செலுத்துகிறது. இந்த அதிநவீன செயற்கைக்கோள் இப்போது ஆராயப்பட்டுள்ள ஒரு சில நிறங்களைத் தவிர கடல்களில் உள்ள நூற்றுக்கணக்கான நிறங்களையும் ஆராயும் திறன் பெற்றது. இதன் மூலம் கடற்சூழலில் உண்மையில் என்ன நடக்கிறது என்பதை நம்மால் தெளிவாக அனுமானிக்க முடியும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இது கடற்சூழலை நாம் முழுமையாகப் புரிந்துகொள்ள உதவும் மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும் என்று நம்பப்படுகிறது.
** ** **
&
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: புவி அறிவியல்
உயரும் புவி வெப்பத்திற்கு இடையிலும் உயிர்த்துடிப்புடன் வாழும் புதிய ஆழ்கடல் பவளப்பாறைக் கூட்டத்தை இதுவரை ஆராயப்படாத காலப்பெகோஸ் (Galapagos) கடல்வளப் பாதுகாப்பு பகுதியில் (Marine Protection Area MPA) ஆழ்கடலில் மூழ்கி பயணம் செய்யும் வசதியுடைய வாகனத்தில் (Human Occupied Vehicle HOV) பயணம் செய்து விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இதுவரை வரைபட வசதி ஏற்படுத்தப்படாத வளைகுடாவின் மத்திய பகுதியில் உள்ள கடல் மலைகளின் சிகரங்களை 6500 மீட்டர்/1970 அடி ஆழத்தில் ஆராய்ந்து கொண்டிருந்தபோது பல உயிரினங்கள் ஒன்று சேர்ந்து வாழும் புதிய பவளப்பாறைத் திட்டுகளை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
சாதனையளவு புவி வெப்ப உயர்வு மற்றும் அதிகரிக்கும் கடல் அமிலத் தன்மையால் உலகில் மற்ற இடங்களில் பவளப் பாறைகள் அழிந்து கொண்டிருக்கும்போது ஆரோக்கியமான பவளப் பாறைகள் பாதகமான சூழ்நிலையை சமாளித்து வாழ முடியும் என்ற புதிய நம்பிக்கையை இக்கண்டுபிடிப்பு விஞ்ஞானிகளுக்கு ஏற்படுத்தியுள்ளது.அரிய உயிரினங்களின் வியக்க வைக்கும் காட்சி
சூழல் பாதுகாப்புத் திட்டங்களின் திறம்பட்ட செயல்பாடு, பலன் தரும் மேலாண்மையால் அழியும் உயிரினங்களைப் பாதுகாக்கலாம் என்பதை இது எடுத்துக் காட்டுகிறது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இங்கு பிங்க் நிற நீராளிகள், வௌவால் மீன்கள் (bat fish), குந்து இரால் (Squat lobster), பல இன ஆழ்கடல் மீன்கள், சுறாக்கள், கதிர் மீன்கள் மற்றும் பல உயிரினங்கள் வாழ்கின்றன என்று இந்த ஆழ்கடல் ஆய்வுப் பயணத்தின் இணைத் தலைவர் மற்றும் எசெக்ஸ் பல்கலைக்கழக கடல் உயிரியலாளர் டாக்டர் மிஷைல் டைலர் (Dr Michell Taylor) கூறுகிறார்.
இருவர் மட்டுமே பயணம் செய்யும் வசதியுடைய ஆல்வின் (HOV Alvin) என்ற இந்த ஆழ்கடல் மூழ்கு ஆய்வு வாகனம் 600 மீட்டர் ஆழம் வரை பயணம் செய்யக் கூடியது.
இந்த வாகனத்தின் தானியங்கிக் கைகள் பவளப்பாறைகளில் குளிர்ந்த நீரால் சூழப்பட்ட கூடை நட்சத்திர வகை (basket star) உயிரினங்கள், கடல் முள் எலிகள் (seayuchins), குந்து இறால், கடின ஓடற்ற பாலிப்ஸ் (polyps) என்ற பூ போலத் தோன்றும் பவளப் பாறைகளில் காணப்படும் உயிரினங்களான அனெமனிஸ் (anemones) போன்ற பல ஆழ்கடல்வாழ் உயிரினங்களின் மாதிரிகளை சேகரித்தது. இது ஊக்கமளிக்கும் செய்தி என்று ஈகுவேடார் நாட்டின் சூழல் அமைச்சர் ஹோசே அண்டோனியோ டாவலோஸ் (Jose Antonio Davalos) கூறுகிறார். காலப்பெகோஸ் தீவுக் கூட்டம் ஈகுவேடார் நாட்டிற்குச் சொந்தமானது.
புதிய கடல்வளப் பாதுகாப்பு பகுதி
வடபகுதியில் உள்ள பனாமா, கோஸ்ட்டரிக்கா, கொலம்பியா நாடுகளுடன் இணைந்து புதிய பிராந்திய கடல் பாதுகாப்புப் பகுதியை உருவாக்கும் முயற்சியில் ஈகுவெடோர் இப்போது ஈடுபட்டுள்ளது. டைலர் மற்றும் ஈகுவெடோர் சார்ல்ஸ் டார்வின் அறக்கட்டளையைச் சேர்ந்த விஞ்ஞானி டாக்டர் ஸ்டூவர்ட் பேங்க்ஸ் (Dr Stuart Banks) ஆகியோரால் இயக்கப்பட்ட இந்த வாகனம் உயர் தொழில்நுட்பத்திறன் பெற்ற மாதிரி சேகரிக்கும் ஆற்றல் மற்றும் உயர் 4K காணொளி பிம்பமாக்கும் திறன் (4K video imaging system) உள்ளிட்ட படமெடுக்கும் நவீன தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டது.
இந்த ஆய்விற்கு முன்பு காலப்பேகோஸ் வளைகுடாவின் வட கோடியில் இருக்கும் டார்வின் தீவின் வடக்கில் உள்ள வெலிங்டன் தீவில் மட்டுமே 1982-83ல் ஏற்பட்ட எல் நினோ என்னும் கடல் நீரோட்ட மாறுதல் நிகழ்வால் பாதிக்கப்படாத ஆழ்கடலில் தேங்கியிருக்கும் நீரில் வாழும் பவளப் பாறை உயிரினங்கள் வாழ்கின்றன என்று கருதப்பட்டது.
பல ஆண்டு பழமை
காலப்பெகோசின் கடல் பாதுகாப்பு பகுதியில் ஆழ்கடலில் இங்கு மட்டுமே காணப்படக் கூடிய செழுமை மிக்க பல ஆழ்கடல் உயிரினங்களை வாழ வைக்கும் இந்தப் பவளப் பாறைத் திட்டுகள் பல நூறாண்டுகளாக இங்கு இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
சுரங்கத்திற்குள் வழிகாட்டும் கனெரிப் பறவை போல (a canary in the mine) இங்கு வாழும் பவளப் பாறைகள் உலகளவில் முக்கியத்துவம் வாய்ந்தவை. காலநிலை மாற்றத்தை சமாளித்து வாழும் இவற்றின் திறன் சூழல் சீர்கேட்டிற்கு எதிரான மனித குலத்தின் போராட்டத்திற்கு உதவும். இது கடல் பாதுகாப்பு பகுதிகளில் நடைபெறும் கார்பன் சுழற்சி மற்றும் மீன் வளம் குறித்து புரிந்து கொள்ள உதவியாக இருக்கும். உலகின் மற்ற பகுதிகளில் ஆழ்கடல் பவளப்பாறை திட்டுகள் மனிதனால் இன்னும் ஆராயப்படாமல் இருக்கலாம்.
எல்லைகள் தாண்டி கடல்வளப் பாதுகாப்பு பகுதி
ஹெர்மென்டாட் (Hermandad) என்ற புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள கடல்வளப் பாதுகாப்புப் பகுதி ஈகுவெடோர் கடற்பகுதியில் இருக்கும் கடல் மலைத்தொடர்களையும் கோஸ்ட்டரிக்காவில் உள்ள கோகோ (Coco) தீவில் உள்ள தேசியப் பூங்காவையும் இணைக்கிறது. இது இப்பகுதியின் கடல் உயிர்ப்பன்மயத் தன்மையை பாதுகாக்க உதவும் என்று நம்பப்படுகிறது.
வலசை செல்லும் பாதைகள்
கடலுக்கு அடியில் இருக்கும் மலைகள், கடல்வாழ் உயிரினங்களுக்கு வலசை செல்லும் பாதைகள். இவை அழியாமல் பாதுகாக்கப்பட வேண்டும். ஆழ்கடல் பகுதி எண்ணற்ற கடல் உயிரினங்களின் தீவனப் பகுதி. இவை மிதமிஞ்சிய மீன் பிடித்தலால் அழிந்து விடக்கூடாது என்று விஞ்ஞானிகள் வலியுறுத்துகின்றனர். 2030ம் ஆண்டிற்குள் 30% கடற்பரப்பை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கும் சமீபத்திய மாண்ட்ரீல் உலக கடல் சார் உயிர்ப் பன்மயத்தன்மை மாநாட்டில் எடுக்கப்பட்ட 30x30 என்ற திட்டத்தின் மற்றொரு திருப்புமுனை இது என்று கருதப்படுகிறது.
ஆர்வி அட்லாண்டிஸ்
ஆல்வின் என்ற இந்த வாகனம் அமெரிக்கக் கடற்படைக்குச் சொந்தமானது. தேசிய ஆழ்கடல் ஆய்வுத்திட்ட அமைப்பினா நிதியுதவி செய்யப்படும் இது யு எஸ் அறிவியல் அறக்கட்டளையின் ஒரு பகுதி. இந்த வாகனம் வுட்ஸ் ஹோல் கடல் ஆய்வுக் கழகத்தால் (Woods Hole Oceanographic Institution WHOI) இயக்கப்படுகிறது. யு கே இயற்கைச்சூழல் ஆய்வுக் கவுன்சில் அமைப்பும் இதற்கு நிதியுதவி செய்கிறது. அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான வுட்ஸ் ஹோல் கழகம் இயக்கும் ஆர்வி அட்லாண்டிஸ் (RV Atlantis) என்ற மற்றொரு ஆழ்கடல் மூழ்கு கலனில் நடைபெறும் 2023 பன்னாட்டு விஞ்ஞானிகளின் காலப்பெகோஸ் ஆழ்கடல் ஆய்வுப்பயணத் திட்டக் குழுவில் டைலர் மற்றும் பேங்க்ஸ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகள் உறுதியுடன் செயல்படுத்தப்பட்டால் கடலின் மழைக்காடுகள் என்று அறியப்படும் பவளப் பாறைகள் காப்பாற்றப்படும் என்பதற்கு இந்த கண்டுபிடிப்பு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. ஆழ்கடல் ஆய்வுகளை இன்னும் தீவிரமாக மேற்கொள்ள விஞ்ஞானிகளுக்கு இக்கண்டுபிடிப்பு புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: புவி அறிவியல்
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பூஞ்சைத் தொற்றுகள் மனித குலத்தின் ஆரோக்கியத்திற்குப் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். இது நாளைய உலகின் உணவு உற்பத்தி மற்றும் விநியோகத்தைப் பாதிக்கும். உலகில் பயிர் செய்யப்படும் ஐந்து முக்கிய பயிர்களின் விளைச்சல் இதனால் குறையும். பெரும்பாலான கட்டுப்பாட்டு முறைகளுக்கு எதிரான ஆற்றல் பெற்று வரும் பூஞ்சைகள், காற்றின் மூலம் மிக நீண்ட தூரம் பயணம் செய்து, ஒற்றைப் பயிர் (mono crop) விளைவிக்கப்படும் வயல்களை ஆக்ரமிக்கின்றன.
எங்கும் வாழ்பவை
இந்த உயிரினங்கள் உலகின் எந்த ஒரு இடத்திலும் அங்கு உள்ள சூழ்நிலையை சமாளித்து வாழும் தகவமைப்பைப் பெற்றவை. இன்று பொதுவாக பயன்படுத்தப்படும் பூஞ்சைக்கொல்லிகளுக்கு எதிராக வாழ்பவை. காலநிலை மாற்றத்தால் புவி வெப்பநிலை உயர்ந்து கொண்டிருப்பதால் இவற்றால் ஏற்படும் தொற்றுகள் அதிகரிக்கின்றன. 1990களில் இருந்து இக்கிருமிகள் ஒவ்வொரு ஆண்டும் முன்பை விட 7 கி மீட்டர் அதிக உயரமான இடங்களுக்குப் பரவுகின்றன.
முன்பு வெப்பமண்டலப் பகுதிகளில் மட்டுமே வழக்கமாகக் காணப்பட்ட பூஞ்சைகளால் கோதுமையில் ஏற்படும் தண்டு அழுகல் (Wheat stem rust) நோய் இப்போது இங்கிலாந்து மற்றும் அயர்லாந்தில் காணப்படுகிறது. உயர் வெப்பநிலையால் இக்கிருமிகளில் மரபணு வேறுபாடுகள் கூடுதளாக ஏற்படுகின்றன. அதிதீவிரப் புயல்கள் இவற்றின் ஸ்போர்களை வெகுதொலைவிற்குப் பரவச் செய்கின்றன.உலக மக்களிடையில் இவை பற்றிய அதிக விழிப்புணர்வு சமீபத்தில் வெளிவந்த “கடைசியில் நாம்” (The last of Us) என்ற புகழ் பெற்ற தொலைக்காட்சித் தொடர் மூலம் ஏற்பட்டுள்ளது.
மனித மூளையைத் தாக்கும் பூஞ்சை பற்றி சொல்லப்பவது ஒரு அறிவியல் புனைக்கதையே என்றாலும், இதனால் பூஞ்சைகள் பற்றி அதிக அக்கறையுள்ளவர்களாக மக்கள் மாறியுள்ளனர் என்று யு.கே. எக்சிடர் (Exeter) பல்கலைக்கழக ஆய்வாளர் மற்றும் ஆய்வுக்கட்டுரையின் இணை ஆசிரியர் பேராசிரியர் சேரா கர் (Prof Sarah gurr) கூறுகிறார்.
சாம்பிகளும் பூஞ்சைகளும்
சோம்பிகள் (Zombies) போல அச்சுறுத்தாவிட்டாலும் பூஞ்சைகள் பூமியில் பசி பட்டினியை தலைவிரித்தாடச் செய்யும். சோம்பி என்பது இறவா வரம் பெற்ற பயங்கரத்தைக் கட்டவிழ்த்துவிடும் புராண கால கற்பனை கதாபாத்திரம். ஹேட்டி நாட்டின் நாட்டுபுறக் கலைகளில் இந்த கற்பனை உயிரினங்கள் பற்றிப் பேசப்பட்டுள்ளது. புவி வெப்ப உயர்வு, பூஞ்சைகள் அதிக வெப்பத்தைத் தாங்கும் ஆற்றலை அதிகரிக்கச் செய்யும். இதனால் இந்த உயிரினங்கள் மனிதன் உட்பட உள்ள வெப்ப இரத்த விலங்குகளில் நோய்த்தொற்றை மிக அதிக அளவிற்கு ஏற்படுத்தும்.
மக்கட்தொகைப் பெருக்கம்
அதிகரித்து வரும் மக்கட்தொகைப் பெருக்கத்தால் ஏற்கனவே மனித குலம் உணவு உற்பத்தியில் சவால்களை எதிர்நோக்கியுள்ளது. பூஞ்சைத் தொற்றால் பெருமளவு பயிர் இழப்பு ஏற்படுகிறது. இதனால் ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கான மக்கள் பட்டினிக்கு ஆளாகின்றனர். உயரும் வெப்பநிலை இந்த நிலைமையை இன்னும் மோசமாக்கவே செய்யும் என்று ஜெற்மனி கீல் (Kiel) பல்கலைக்கழக ஆய்வாளர் பேராசிரியர் ஈவா ஸ்டூக்கன்ப்ராக் (Prof Eva Stukenbrock) கூறுகிறார்.
பூஞ்சைத் தொற்றுகளால் விவசாயிகள் ஏற்கனவே 10 முதல் 23% உற்பத்தி இழப்பிற்கு ஆளாகின்றனர். இந்த ஆய்வுக்கட்டுரை நேச்சர் (Nature) என்ற ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ளது. அரிசி, கோதுமை, சோளம், சோயா பீன்ஸ் மற்றும் உருளைக்கிழங்கு ஆகிய உலகின் ஐந்து முக்கிய பயிர்களில் தொற்றுகளால் ஏற்படும் இழப்பு ஆயிரமாயிரம் மில்லியன் மக்களின் உணவைப் பறிக்கிறது. இவை அதிக பாதிப்பை ஏற்படுத்தும் கிருமிகளின் வரிசையில் ஆறாவது இடத்தில் உள்ளன என்று சமீபத்தில் வெளியிடப்பட்ட ஓர் ஆய்வு கூறுகிறது.
கண்டம் விட்டு கண்டம் செல்லும் ஸ்போர்கள்
இவை மண்ணில் 40 ஆண்டு உயிர் வாழக் கூடியவை. இவற்றின் காற்றினால் சுலபமாகப் பரவக்கூடிய ஸ்போர்கள் கண்டம் விட்டு கண்டம் பயணிக்கக் கூடியவை. அமெரிக்காவில் டோர்னேடோ (tornadoe) புயல்கள் ஏற்படும் சமயத்தில் வீசும் காற்றின் மூலம் ஸ்போர்கள் உறிஞ்சப்பட்டு வெகுதொலைவு பயணம் செய்வதைப் பார்க்கலாம். ஒரு செல் செயல்முறை (single cellular process) கட்டுப்பாட்டிற்கு எதிராக இவை வேகமாகப் பரிணாம மாற்றமடைகின்றன.
இப்போது நடைமுறையில் இருக்கும் பூஞ்சைக்கொல்லிகள் மற்றும் பாரம்பரிய நோய்க்கட்டுப்பாட்டு முறைகள் தொற்றுகளைக் குறைக்கப் போதுமானதாக இல்லை என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஒரு பயிர் முறையை விட பூஞ்சைகளுக்கு எதிரான ஆற்றலை உடைய மரபணுக்கள் கொண்ட பல விதைகளை ஒன்றாகக் கலந்து பயன்படுத்துதல் இப்பிரச்சனைக்கு ஒரு நல்ல தீர்வு. 2022ல் டென்மார்க்கில் விளைவிக்கப்பட்ட கோதுமையில் கால்பகுதியும் விதைக்கலவைப் பயிரிடல் முறையில் உற்பத்தி செய்யப்பட்டது.
கை கொடுக்கும் தொழில்நுட்பம்
ஆளில்லா பறக்கும் விமானங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் மூலம் பூஞ்சைத்தாக்குதல் ஏற்படுவதை முன்கூட்டியே கண்டுபிடித்து கட்டுப்படுத்தும் வழிமுறைகளை மேற்கொள்ளலாம். பூஞ்சைக்கொல்லிகளுக்கு எதிரான எதிர்ப்பாற்றலைப் பெறாமல் தடுக்கும் வகையில் பல வேதிப்பொருட்களை இவற்றின் உடலில் உருவாக்க உதவும் கூட்டுப்பொருட்களை எக்சிடர் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இப்பொருட்கள் அரிசி, கோதுமை, சோளம், வாழைப்பயிர்களில் பலனளிக்கக் கூடியதாக இருந்தது.
பூஞ்சைத்தொற்று குறித்த ஆய்வுகளுக்கு மிகக் குறைவாகவே நிதி ஒதுக்கப்படுகிறது. 2020-2022ல் யு.கே. ஆய்வு மற்றும் புதிய கண்டுபிடிப்பு கவுன்சில் கொரோனாவிற்கு எதிரான ஆய்வுகளுக்கு 550 மில்லியன் பவுண்டு நிதி ஒதுக்கியது. ஆனால் இதே காலத்தில் பூஞ்சைத்தொற்று ஆய்வுகளுக்கு வெறும் 24 மில்லியன் பவுண்டு நிதி மட்டுமே ஒதுக்கப்பட்டது.
உண்ண உணவில்லாமல் போனால் உயிர் வாழ்வது எப்படி?
போதிய உணவு உண்பதற்கு இல்லாமல் போகும்போது - சத்து பற்றாக்குறையாலேயே - கோவிட்19 போன்ற மற்றொரு கொள்ளைநோய் தாக்குவதற்கு முன்பே நாம் இறந்து விடுவோம். மற்ற மருத்துவ ஆய்வுகளுடன் ஒப்பிடும்போது இப்போதும் இந்த ஆய்வுகள் காசில்லாமலேயே நடந்து வருகின்றன என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்த நிலை தொடர்ந்தால் பூஞ்சைத்தொற்றுகளே நாளை மனிதனை அழிக்கும் ஆபத்தாக மாறிவிடலாம் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: புவி அறிவியல்
காலநிலை மாற்றம் கூடுதல் வானவில்களை உருவாக்கும் என்று புதிய ஆய்வுகள் கூறுகின்றன. பூமியின் மேற்பரப்பில் இருந்து முதன்மை வானவில்லை பகலில் மட்டுமே பார்க்க முடியும். அதற்கு சூரியனின் கோணம் 42 டிகிரிக்கும் குறைவாக இருக்க வேண்டும். நேராக விழும் சூரிய ஒளி மேகக்கூட்டங்களால் மறைக்கப்படக் கூடாது. அப்போது மழைநீர்த்துளி சூரிய ஒளியால் பிரதிபலிக்கப்பட்டு வானவில் தோன்றும்.
சூரியனின் கோணம் வானில் வானவில்லின் உயரத்தை தீர்மானிக்கிறது. 42 டிகிரிக்கும் கூடுதலாக இருந்தால், ஒளி பிரதிபலிப்பு அடிவானத்திற்குக் கீழிருந்தால், தரைமட்டத்தில் இருந்து வானவில்லைப் பார்க்க முடியாது. பார்ப்பவரின் பின்பக்கமாக 4 டிகிரி கோணத்தில் சூரியன் இருந்தால் வானவில்லைப் பார்க்கலாம். ஆனால் பார்ப்பவரின் தலை உச்சியில் சூரியன் 90 டிகிரியில் இருந்தால் வானவில் தெரியாது.
சூரியனின் உதயத்திற்கு முன் இந்த கோணம் சுழிக்கும் குறைவாக இருந்தால், பார்ப்பவருக்கு நேராக சூரியன் இருந்தால் வானவில் தெரியாது. இவை வானவில்லைப் பார்க்கத் தேவையான நிபந்தனைகள். மழை மற்றும் மேகங்களின் நிலை வானவில்லைக் காண உதவுகின்றன. மேகங்களின் நிலை, தூசுகளின் அளவு போன்ற மனிதக் குறுக்கீடுகளால் வானவில் தோன்றுவது பாதிக்கப்படுகிறது.சூழல் மாசினால் பாதிக்கப்படும் வானவில்
மனிதச் செயல்களால் வளி மண்டலத்தில் அதிகரிக்கும் பசுமைக்குடில் வாயுக்களின் அளவு வானவில் தோன்றுவதைப் பாதிக்கிறது. மனோவா (Manoa) ஹவாயி பல்கலைக்கழக விஞ்ஞானிகள் நடத்திய இந்த ஆய்வுகளில் இருந்து 21ம் நூற்றாண்டில் இருந்ததை விட 2100ல் வானவில்கள் தரையில் தோன்றுவது 5% அதிகரிக்கும் என்று தெரிய வந்துள்ளது.
எங்கு தோன்றும் புதிய வானவில்கள்?
வட அட்சரேகைப் பகுதிகள் மற்றும் உயரமான இடங்களில் புவி வெப்ப உயர்வினால் அதிக உறைபனி மற்றும் அதிக மழை ஏற்படும் என்பதால் அங்கு கூடுதல் வானவில்கள் தோன்றும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஆனால் மத்திய தரைக்கடல் போன்ற, காலநிலை மாற்றத்தினால் பாதிக்கப்பட்டு மழைக்குறைவு ஏற்படும் இடங்களில் இவை தோன்றும் எண்ணிக்கை குறையும்.
பசுமைக்குடில் வாயுக்களின் உமிழ்வு
சூரிய ஒளியை மழைத்துளிகள் பிரதிபலிக்கும்போதே இவை தோன்றுகின்றன. அதனால் சூரிய ஒளியும், மழைப்பொழிவும் இவை ஏற்பட அவசியம். பசுமைக்குடில் வாயுக்கள் வளி மண்டலத்தில் அதிகமாக உமிழப்படும்போது அது மேகங்கள் தோன்றுவதையும், மழைப்பொழிவையும் பாதிக்கிறது.
வருங்காலத்தில் வானவில்கள் வாழ்நாளின் அன்றாட சிறப்பாக மாறப்போகும் இயற்கையின் நன்மையை நினைத்து நான் மகிழ்கிறேன் என்று ஆய்வுக்கட்டுரையின் முன்னணி ஆசிரியரும், இப்போது நியூயார்க் பல்கலைக்கழக சூழலியல் துறை ஆய்வாளருமான கிம்பர்லி கார்ல்சன் (Kimberly Carlson) கூறுகிறார்.
சூழலின் அழகு சம்பவம் வானவில்லின் தோற்றம்
இவற்றிற்கும் காலநிலை மாற்றத்திற்கும் இடையில் இருக்கும் தொடர்பை ஆராயும் முதல் உலகளாவிய ஆய்வு இது. வெப்ப அதிர்ச்சி, வெப்ப அலைத்தாக்குதல்கள் போன்றவை மூலம் காலநிலை மாற்றம் மக்கள் வாழ்வு, உடல் நலத்தை எவ்வாறு நேரடியாகப் பாதிக்கிறது என்பது பற்றியே அதிகம் ஆராயப்படுகிறது. ஆனால் வெகு சில ஆய்வுகளே சூழலின் அழகு நிகழ்வான வானவில் போன்ற இயற்கையின் அற்புதங்களுக்கும் மனிதன் ஏற்படுத்தும் சூழல் சீரழிவுகளுக்கும் இடையில் இருக்கும் தொடர்பை ஆராயப்படுகிறது என்று மனோவா சூழலியல் துறை ஆய்வு மாணவர் கமிலோ மோரா (Camilo Mora) கூறுகிறார்.
வானவில் வரைபடங்கள்
காலநிலை மாற்றம் நிகழும் இவ்வேளையில் வானவில் வரைபடங்கள் உருவாக்கப்படவேண்டும் என்கிறார் மோரா. ப்ளிக்கர் (Flickr) என்ற சமூக ஊடகத்தில் உலகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கானோர் அனுப்பிய வானவில் படங்கள் மனோவா ஹவாயி பல்கலைக்கழக மாணவர்களால் பதிவேற்றப்பட்டு ஆராயப்பட்டது. ரைன்போ என்று லேபிளிடப்பட்டு அனுப்பப்பட்ட இந்த படங்கள் மூலம் அவை உருவான விதம், உருவான இடம் போன்ற விவரங்கள் தொகுக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது.
வானவில்களின் மாயாஜால உலகம்
கலைவடிவம், கொடி, யூகலிப்டஸ் மரம், விதவிதமான உணவு வகைகளாக வெவ்வேறு வடிவங்களில் படமெடுக்கப்பட்டிருந்த வானவில் படங்கள் ஆய்வு செய்யப்பட்டன என்று ஆய்வுக் கட்டுரையின் இணை ஆசிரியர்களில் ஒருவரும், மனோவா ஹவாயி பல்கலைக்கழக கடல், புவி அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பள்ளியின் (SOEST) முன்னாள் ஆய்வுமாணவருமான அமாண்டா வொங் (Amanda Wong) கூறுகிறார்.
வானவில் மாதிரி
மேக அடர்வு, படமெடுக்கப்பட்ட இடம், மேகங்களின் தோற்றம் மற்றும் நிலை, சூரிய கோணம் போன்றவற்றைப் பயன்படுத்தி விஞ்ஞானிகள் வருங்காலத்தில் வானவில் உருவாகக் கூடிய மாதிரியை (rainbow prediction model) உருவாக்கினர். உலக நிலப்பரப்பில் இன்றுள்ள நிலையுடன் ஒப்பிடப்பட்டு வருங்காலத்தில் வானவில்கள் எங்கு எந்த எண்ணிக்கையில் தோன்றும் என்று ஆய்வறிக்கை கூறுகிறது.
தீவு நாடுகள்
தீவு நாடுகளில் வானவில்கள் வருங்காலத்தில் அதிகம் தோன்றும் என்று இந்த ஆய்வு கூறுகிறது. வானவில்லைப் பார்க்க தீவு நாடுகளே சிறந்த இடங்கள் என்று மனோவ பள்ளி (SOEST) பேராசிரியர் ஸ்டீவன் ப்யூசிங்கர் (Steven Businger) கூறுகிறார். தீவுநாடுகளில் கடற்காற்று வீசும்போது மழைத்துளிகள் உயரமான இடத்தில் உருவாகி அந்தந்தப் பகுதியில் சாரலை ஏற்படுத்துகிறது. இதனால் தெளிந்த வானில் சூரியன் மகத்தான வானவில்லை உருவாக்குகிறது.
வானவில்லின் உலகத் தலைநகரம்
ஹவாய் தீவுகள் வானவில்கள் அதிகம் தோன்றும் இடம் என்பதால் சமீபத்தில் அது வானவில்லின் உலகத் தலைநகரம் என்று அறிவிக்கப்பட்டது. இங்கு வருங்காலத்தில் மேலும் சில நாட்கள் கூடுதலாக வானவில் தோன்றும். வானவில் ஏற்படுவதால் மனித உடல் நலத்திற்கு பாதிப்பு ஏற்படுமா என்பது பற்றி ஆய்வில் எதுவும் கூறப்படவில்லை.
ஒலியும் ஒளியும் வானவில்லும்
என்றாலும் வானவில் மனித வரலாறு, கலாச்சாரம், அழகியலில் முக்கிய அங்கம் வகிக்கிறது. ஆனால் காலநிலை மாற்றம் பூமியில் மனிதன் பெறும் இயற்கையின் அனுபவங்களில் சூழல் சீரழிவுகள் பெரும் மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்பதையே இது எடுத்துக் காட்டுகிறது. ஒலி, ஒளி போன்றவை சூழல் சீர்கேட்டினால் மாற்றமடைகிறது. இவை போன்றவற்றை பற்றி மேலும் அதிக ஆய்வுகள் தீவிரமாக நடத்தப்பட வேண்டும் என்று கார்ல்சன் கூறுகிறார்.
இந்த ஆய்வுக்கட்டுரை உலகளாவிய சூழல் மாற்றம் (Global Environmental Change) என்ற ஆய்விதழில் வெளிவந்துள்ளது.
** ** **
மேற்கோள்கள்:
https://www.mathrubhumi.com/environment/news/climate-change-may-increase-rainbows-1.8008937
&
https://thedailyguardian.com/more-rainbows-will-be-seen-due-to-climate-change-suggests-study/
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பூமியின் வட கோடியில் ஒரு புதிய தீவின் கண்டுபிடிப்பு
- சூரியனின் கதிர்களை திசை திருப்பி விட்டால் பூமியில் சூடு குறையுமா?
- புதையுண்ட பூமிக்குள் ஓர் அற்புதக் காடு
- 2050ல் உலகின் அணைக்கட்டுகள் எப்படி இருக்கும்?
- எரிமலைகள் வரமா? சாபமா?
- ஜெட் ஸ்ட்ரீம்
- அன்னை பூமியின் மடியில் அற்புத அமைப்புகள்
- கதை சொல்லும் காற்று
- ஆக்சிஜன் இல்லாமல் அழியப் போகும் பூமி?
- மூழ்கும் தீவு – மூழ்கப் போகும் உலகம்
- மண்ணிற்கடியில் புதையும் நாட்டின் தலைநகரம்
- அய்ந்தாம் விசை ஒன்றை கண்டுபிடிப்பதை நோக்கி நெருங்கி விட்டோமா?
- ஐன்ஸ்டினின் சார்பியல் தத்துவமும், ஆசீவக மதமும்
- கொள்ளை நோய் தோன்றுவது இயற்கை தன்னை சமனப்படுத்திக் கொள்ளும் ஒரு நிகழ்வா?
- உலகில் வேகமாக குறைந்து வரும் ஹீலியம்
- அதிக மழைப்பொழிவு தான் எரிமலைகள் வெடிக்க காரணமா?
- சுற்றுச்சூழலைப் பாதிக்கும் நுகர்வுப் பண்பாடு
- மனித குலத்தின் நிலைத்த வளர்ச்சி சாத்தியமா?
- ஒரு நூற்றாண்டு கால அறிவியல் புதிரை தீர்த்து வைத்த மாணவன்
- ஒரு கிராம் தங்கமும் ஒரு கிலோ ஆப்பிளும்