கீற்றில் தேட...
அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- முனைவர் க.மணி
- பிரிவு: சுற்றுச்சூழல்
ஆண்டுதோறும் 150,000 டன் எடை பிளாஸ்ட்டிக் குப்பைகள் கடலில் வீசப்படுகின்றன. தி கிரேட் பசுபிக் கார்பேஜ் ப்பேட்ச் என்று குறிப்பிடுமளவுக்கு கலிபோர்னியா முதல் ஹவாய்த் தீவு வரை பிளாஸ்ட்டிக் குப்பைகள் நிரப்பியிருக்கின்றன. இது ஆகாயத்திலிருந்து சேட்டிலைட் மூலம் பார்த்தால் தெளிவாகத் தெரிகிறது.
கடலில் பிளாஸ்டிக் வீசினால் அது மூழ்காமல் மிதக்கும். பெரிய கடல் மிருகங்கள் அதை விழுங்கிவிட்டு செரிக்க முடியாமல் செத்துப் போகின்றன. கடலில் நிலவும் குளிர், வெப்பம், உப்பு மற்றும் வெயில் காரணமாக பிளாஸ்ட்டிக் சிதைகிறது என்றும் சிதைவிலிருந்து டன் டன்னாக நச்சுப் பொருள்கள் கடல் நீரில் கலந்து எல்லா உயிரினங்களையும் தாக்குகின்றன என்றும் செய்டோ என்ற ஜப்பான் அறிஞர் தன் ஆய்வின் மூலம் கண்டறிந்து தெரிவிக்கிறார்.
வழக்கமான பிளாஸ்ட்டிக்குகள், பிஸ்பீனால் மற்றும் பிஎஸ் ஒலிகோமெர் என்ற நச்சினை தருகின்றன. தெர்மாகோல் எனப்படும் ஸ்டைரோஃபோம் பொருள்கள் நசுக்கப்பட்டு பெரிய உருண்டைகளாக கடலில் மூழ்குகின்றன. அவற்றிலிருந்து ஸ்டைரோபோம் மோனோமர், டைமர் மற்றும் ட்டிரைமர் நச்சுகள் உற்பத்தியாகின்றன. இம்மூன்றுமே உடலில் புகுந்தால் உடனே கேன்சரை உருவாக்கக் கூடியன என்பது தெரிந்த விஷயம்.
பிளாஸ்டிக் கெடாது அதனால் கடலில் வீசிவிட்டால் தொந்தரவு விட்டது என்று பல நாடுகள் நினைக்கின்றன. நினைப்பு பிழைப்பைக் கெடுக்கும் என்பது இப்போது தெரிகிறது.
- முனைவர். க. மணி, பயிரியல்துறை. பி எஸ் ஜி கலை அறிவியல் கல்லூரி. கோயம்புத்தூர்
- விவரங்கள்
- முத்துக்குட்டி
- பிரிவு: சுற்றுச்சூழல்
'நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒரு கிலோ வெளிநாட்டு விதைகளை இரண்டே உரூபாய்க்கு தருவோம்' என்பது அரசியல் கட்சிகளின் தேர்தல் வாக்குறுதியாக இன்னும் சில ஆண்டுகளில் மாறலாம். அரிசி, பருப்பு ஆகியவற்றுடன் பயிர் விதைகளும் அரசின் பொது வழங்கல் பட்டியலில் வரலாம். 'ஒரு கிலோ நெல்லு கொடுங்க' என உழவர்கள் கடைகளில் சென்று கேட்கலாம். ‘தக்கன தழைத்தல்’ - டார்வினின் இந்தத் தத்துவம் இன்னும் சில நாட்களில் பொய்த்துப் போகலாம். மாற்றம் மட்டுமே மாறாதது என்னும் இவ்வுலகில் 'டார்வின்' மட்டும் விதிவிலக்கா என்ன?
சரி செய்திக்கு வருவோம்! மரபு மாற்று விதைகளுக்கு இந்திய அரசு உரம்போட்டுத் தண்ணீர் தெளித்திருக்கிறது! தக்காளி, கத்தரிக்காய், காலிபிளவர் ஆகிய காய்கள் இன்னும் மூன்று ஆண்டுகளில் மரபு மாற்றுத் தொழில்நுட்பம் மூலம் உற்பத்தி செய்யப்படும் என அறிவித்திருக்கிறது இந்தியா. மைய அரசின் மரபறிவியல் ஒப்புதல் குழு, மரபியல் மேலாய்வுக்குழு ஆகியவற்றின் ஒப்புதலுக்குப் பின் இந்தியாவில் அவை பயிரிடப்படும்.
அரசின் இம்முடிவு வேளாண்மை அறிஞர்களை மட்டுமல்லாது பல வெளிநாட்டு அறிஞர்களையும் வியப்படைய வைத்திருக்கிறது.
ஒரு பக்கம் மரபு மாற்று விதைகளை அமெரிக்கா முதலிய நாடுகள் தீவிரமாக ஆதரிக்கின்றன. பெருகி வரும் உணவுப்பற்றாக்குறையைச் சமாளிக்க இம்முறை உதவும் என்பது அந்நாடுகளின் வாதம். மரபுமாற்று முறையில் பயிர்களின் மரபுகளை மாற்றுவதால் பூச்சிக்கொல்லிகள் குறைந்த அளவிலேயே தேவைப்படும்; இதனால் மண்வளம் பாதுகாக்கப்படும். அருகி வரும் சில பயிரினங்களை மரபு மாற்று முறையில் காப்பாற்ற முடியும் எனப் பல வாதங்களை முன் வைக்கிறது அமெரிக்கா. நோபல் பரிசு பெற்ற 25 அறிவியலாளர்கள், 3400 அமெரிக்க வேளாண் அறிவியலாளர்கள் அமெரிக்காவின் இக்கருத்தை ஆதரிக்கிறார்கள்.
(கொசுறுச் செய்தி: பல நாட்கள் வைத்திருந்து விற்பதற்கு வசதியாக மெதுவாகப் பழுக்கும் 'பிளார் சாவர்' என்னும் மரபு மாற்றுத் தக்காளியை முதன்முதலில் கலிபோர்னிய நிறுவனம்தான் அறிமுகப்படுத்தியது)
வலுக்கும் எதிர்ப்புக்குரல்கள்
இத்தனை இருந்தாலும் எதிர்ப்புக்குரல்களும் பலமாகவே கேட்கின்றன. முழுமையான ஆராய்ச்சி முடிவுகள் இல்லாத நிலையில் ஐரோப்பிய ஒன்றியம் மரபு மாற்றுக் காய்கறிகளைத் தனியே வைத்திருக்கின்றன. இக்காய்களைச் சந்தை விற்பனைக்கு அனுமதித்தாலும் அவற்றின் மீது ஒட்டுத்தாள்கள் ஒட்டப்பட்டு அவை வேறுபடுத்தப்படுகின்றன.
வெனிசுலா நாடு கடந்த 2004ஆம் ஆண்டு ஏப்பிரல் முதல் மரபுமாற்றுப் பயிரிடலைத் தடுத்திருக்கிறது. அங்கேரி நாடு மரபுமாற்றுப் பயிரிடலையும் இறக்குமதியையும் சட்டம் போட்டு நிறுத்தியிருக்கிறது. அமெரிக்காவின் கருத்துகள் அனைத்தும் வடிகட்டிய பொய் என்கிறார் வேளாண் அறிவியலாளர் சார்லசு பென்புருகு. 'இம்முறையால் 5 - 7 விழுக்காடு நட்டம் கூடும்; 5 - 10 மடங்கு களைக்கொல்லி அதிகம் செலவாகும்' என்கிறார் இவர். "ஒட்டு மொத்த ஐரோப்பா கண்டமே புறக்கணித்த மரபுமாற்றுப் பயிர்களை இந்தியா ஆதரிக்கக் கூடாது. மீறி ஆதரித்தால் வட அமெரிக்காவின் சந்தையாக இந்தியா மாறி விடும். இந்தியர்கள் ஆய்வுக்கூட எலிகளாகப் பயன்படுத்தப் படுவார்கள்" என எச்சரிக்கிறார் பிரான்சைச் சேர்ந்த மரபணு ஆய்வாளர் செராலனி. "எலி, ஆடு, முயல் ஆகியவற்றிற்கு மரபு மாற்றுப் பயிர்களை உணவாகக் கொடுத்து ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. அவ்விலங்குகளின் இரத்த உறைதல், நுரையீரல், சிறுநீரகம் ஆகியவற்றின் செயல்பாடுகளில் மாற்றங்கள் காணப்பட்டன. எனவே மரபுமாற்றப்பயிர்களை ஏற்றுக்கொள்ளக் கூடாது" என்கிறார் இலண்டன் கிங் கல்லூரிப் பேராசிரியர் அந்தோனியோ.
“அரசின் அறிவிப்பே ஒரு மோசடி”
இயற்கையைப் பாதுகாக்கத் தொடர்ந்து போராடும் கிரீன் பீசு தன்னார்வ அமைப்பு மரபுமாற்றுப் பயிரிடலைத் தொடக்கம் முதலே எதிர்த்து வருகிறது. ‘காலம் காலமாக இருந்து வரும் உணவுச் சங்கிலியை மாற்றுவது தவறானது. வணிகத்தைப் பெருக்க வேண்டுமானால் மரபு மாற்று முறை உதவும். வாழ்க்கைக்கு உதவாது’ என்பது கிரீன் பீசின் கருத்து. இதைப் பற்றி, 'கிரீன்பீசு' அமைப்பைச் சேர்ந்த செய் கிருட்டினனைக் கேட்டபோது, " இந்திய அரசின் அறிவிப்பே ஒரு மோசடி! மரபு மாற்றுப்பயிர்கள் தொடர்பான முடிவுகளைச் சுற்றுச்சூழல் அமைச்சகம் தான் எடுக்க வேண்டும். ஏனென்றால் இது நிலம் தொடர்பான சிக்கல்! ஆனால் இப்போது வேளாண்துறை அமைச்சர் இவ்வறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதுவே தவறானது! " எனப் பொரிந்து தள்ளினார்.
“வடிகட்டிய பொய்”
"ஒரே ஒரு மரபணுவை மாற்றுவதன் மூலம் அதிக மகசூல் கிடைக்கும் என்பதே வடிகட்டிய பொய்! நம் நாட்டில் ஏற்கெனவே மரபுமாற்று முறையில் பருத்தி பயிரிடப்பட்டு வருகிறது. ஆனால் உழவர்களுக்கு அதனால் எவ்விதப் பயனும் இல்லை. சொல்லப்போனால் பருத்தி உழவர்கள் தற்கொலை இன்னும் அதிகமாகிக் கொண்டுதான் இருக்கிறது." என்றவர் "மரபு மாற்றுப் பயிர் நிறுவனங்கள் நெல்லையும் மரபு மாற்றுப் பயிரிடல் முறையில் திட்டமிட எண்ணியுள்ளன. இந்திய அரசு இப்போதே கவனமாகச் செயல்பட்டு அதைத் தடுத்து நிறுத்த வேண்டும். கனடா, அர்சென்டினா, வட அமெரிக்கா, இலத்தீன் அமெரிக்கா ஆகிய நான்கு நாடுகளில் மட்டும்தான் மரபுமாற்றுப் பயிரிடல் முறை நடைமுறையில் உள்ளது. வேறெந்த நாட்டிலும் இல்லை. மேலும் முதன்மைப் பயிர்களை மரபுமாற்று முறையில் பயிரிட எந்த நாடும் ஒப்புக்கொண்டதில்லை. அமெரிக்கா புளோரிடாவின் முதன்மைப் பயிர் பருத்தி. அங்கு 'பிடி' பருத்திக்குத் தடை உள்ளது. இதே போல் பெரு நாட்டில் உருளைக்கிழங்கும் சீனாவில் சோயாவும் மெக்சிகோவில் சோளமும் மரபுமாற்று முறையில் பயிரிடத் தடை விதித்துள்ளார்கள். நம்முடைய நாட்டிலும் மரபு மாற்றுப் பயிர்களுக்கு முழுமையாகத் தடைகள் வேண்டும்" என்று அவர் விலாவாரியாக விளாசித் தள்ளினார்.
'பிடி' (‘Bt’) என்றால் என்ன?
பேசில்லசுத் துரிசென்சி (‘Bacillus Thurigiensis’) என்பது ஒருவகை புரதம். அப்புரதத்தில் இருந்து பருத்திப் புழுக்களைக் கொல்லும் ஒருவகை மரபீனி பருத்திப் பயிர்களில் சேர்க்கப்படுகிறது. இம்மரபீனி சேர்க்கப்பட்ட பருத்தி வகைகள் 'பிடி' பருத்தி எனப்படுகின்றன.
இயற்கை வேளாண்மையை ஆதரிக்கும் நம்மூர்க்காரர்கள், "பல ஆண்டுகளாகக் கடைப்பிடித்து வந்த முறையை மாற்றுவது மண்வளத்தைப் பாதிக்கும்; உழவர்கள் விதைகளுக்காகப் பன்னாட்டு நிறுவனங்களைச் சார்ந்திருக்க வேண்டி வரும்" என்கிறார்கள். முதலாளித்துவத்தை வளர்ப்பதே இதன் நோக்கம் என்பது இவர்களின் குற்றச்சாட்டு.
மலட்டுத்தன்மை அடையும் நிலம்:
தமிழ்நாடு உழவர்கள் சங்க மாநிலத்தலைவர் வேட்டவலம் மணிகண்டனிடம் கேட்டபோது "மரபுமாற்றுப் பயிரிடலால் நிலம் மலட்டுத்தன்மை அடைந்துவிடும். மராட்டிய மாநிலத்தில் மரபுமாற்றுப் பயிர்களைப் பயிரிட்ட உழவர்கள் பலர் தற்கொலை செய்து கொண்டார்கள். தமிழ்நாட்டில் மரபுமாற்றுப் பயிர்களைப் பயன்படுத்திய உழவர்கள் பலருக்கு நட்டம் ஏற்பட்டுள்ளது. அவர்களுக்காகப் பலகட்டப் போராட்டங்கள் நடத்தி ஏக்கருக்கு ஐயாயிரம் பணத்தைப் பெற்றுக் கொடுத்தோம். எனவே மரபுமாற்றுப் பயிர்கள் அதிக மகசூல் தரும் என்பதெல்லாம் மக்களை ஏமாற்றும் வேலை" என முடித்துக்கொண்டார்.
தடை விதித்துள்ள நாடுகளில் சில : தாய்லாந்து, ஆசுதிரியா, அங்கேரி, வெனிசுலா , பிரான்சு, இரசியா, நியூசிலாந்து
"மரபு மாற்றுப் பயிரிடல் முறை பயிர்களில் பல வகைகள் அழியும் வாய்ப்பு அதிகம். இந்தியாவில் பழைய காலத்தில் 120000 அரிசி வகைகள் இருந்தன. 'பசுமைப் புரட்சி'யின் விளைவாகத் தற்போது வெறும் ஐம்பது அரிசி வகைகள் மட்டுமே உள்ளன. இன்னும் மரபு மாற்றுப் பயிரிடலைக் கொண்டு வந்தால் இருக்கும் அரிசி வகைகளும் அழிந்து போகும். சொல்லப்போனால் அன்றாடம் நாம் சாப்பிடும் கத்தரிக்காயில் மட்டுமே இரண்டாயிரத்திற்கும் அதிகமான வகைகள் உள்ளன. அரசின் இவ்வறிவிப்பால் இவை எல்லாம் அழிந்து போகும் நிலை ஏற்படும்" என எச்சரிக்கிறார் இயற்கைமுறை வேளாண்மை முறையைப் பின்பற்றும் செல்லையா.
“வழக்கமாக உழவர்கள் ஓராண்டு விளைச்சலில் இருந்து அடுத்த ஆண்டுக்கான விதைகளைப் பெறுவார்கள். ஆனால் மரபுமாற்றுவிதைகளை இப்படிப் பயிரிட முடியாது. மரபுமாற்று விதைகள் 'அறிவுசார் உரிமை'ச் சட்டத்தின் கீழ் வருகின்றன. மரபு மாற்று விதைகளைப் பன்னாட்டு நிறுவனங்கள் விற்கும். அவற்றிடம் இருந்து தான் உழவர்கள்
விதைகளைப் பெற வேண்டும். இல்லாவிட்டால் 'எங்களை ஏமாற்றி விதைகளைப் பயிரிட்டிருக்கிறார்கள்' என அந்நிறுவனங்கள் வழக்குத் தொடுக்கும். 1998 ஆம் ஆண்டு கனடாவைச் சேர்ந்த ஒரு விவசாயி மேல் இப்படி வழக்குத் தொடரப்பட்டது." எனப் புள்ளிவிவரங்களை அடுக்குகிறார்கள் சமூக ஆர்வலர்கள் சிலர்.
இன்னும் பிரான்சில் உள்ள கேன் பல்கலைக்கழகத்தின் மூலக்கூறு உயிரியல் துறைத் தலைவர் செராலனி, ஒரிசா மாநில ஓமியோபதி மருத்துவர்கள் சங்கத் தலைவர் தத்தா, இயற்கை வேளாண்மை ஆராய்ச்சியாளர் கவிதா குருகந்தி, மரபியல் துறை அறிஞர் பார்கவா, முன்னாள் அமைச்சர் அன்புமணி இராமதாசின் ‘பசுமைத்தாயகம்’ தன்னார்வ அமைப்பு, நடிகைகள் அமலா, உரோகிணி, இயக்குநர்கள் மிசுகின், வசந்து, மருத்துவர் கமலா செல்வராசு என மரபு மாற்றுப் பயிரிடல் முறையை எதிர்ப்போர் பட்டியல் நீளுகிறது.
இப்படிக் கிணறு வெட்டப் பூதம் கிளம்பிய கதையாகப் பல சிக்கல்கள் இருக்கின்றன. இவையெல்லாம் இருக்க, இந்திய அரசின் தடாலடி அறிவிப்புப் பலரைப் புருவம் உயர்த்த வைத்திருக்கிறது.
கடைசிச்செய்தி: இந்திய அரசின் அறிவிப்பு வெளியான அதே வாரத்தில் இந்தியா வந்த இலாரி கிளின்டன் மரபுமாற்றுப் பயிரிடலை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்றும் அதற்கு வேண்டிய உதவிகளை அமெரிக்கா செய்யும் என்றும் கூறிவிட்டுச் சென்றிருக்கிறார்.
- முத்துக்குட்டி
- விவரங்கள்
- மு.குருமூர்த்தி
- பிரிவு: சுற்றுச்சூழல்
புவிவெப்ப அதிகரிப்பால் கடல்நீரின் வெப்பநிலை உயர்ந்துகொண்டிருக்கிறது. வளிமண்டலத்தில் அதிகரித்துவரும் கார்பன்டைஆக்சைடு வாயு கடல்நீரில் கரைந்துபோவதால் கடல் நீரின் அமிலத்தன்மையும் அதிகரிக்கிறது. அடுத்த 50 ஆண்டுகளில் உலகில் பாதிக்குமேற்பட்ட பவளப்பாறைகள் அழிந்துபோய்விடும் என்பதே அறிவியல் அறிஞர்களின் கருத்து. ஆனால் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் வெப்பத்தை தாங்கிவளரும் தகவமைப்பை சிலவகை பவளப்பாறைகள் பெற்றிருப்பதால் அழிவின் வேகம் குறைவாக இருக்கும் என்று கண்டுபிடித்துள்ளனர்.
சுற்றுச்சூழல் மாறுபாடுகளால் பவளப்பாறைகள் அழிவை நோக்கி இருக்கின்றன என்பது உண்மைதான் என்றாலும் நாம் நினைப்பதைக் காட்டிலும் பவளப்பாறைகள் மிகவும் உறுதியானவை என்கிறார் ஸ்டீபன் பாலும்பி. இவர் ஸ்டான்ஃபோர்டைச் சேர்ந்த மூத்த சுற்றுச்சூழல் அறிஞர். 2006ம் ஆண்டு இவருடைய குழு பசிபிக் கடலில் அழிவிலிருந்து கிளைத்தெழுந்த பவளப்பாறைகளை ஆய்வு செய்தது. இன்னும் 100 ஆண்டுகளில் கடல்நீரின் வெப்பநிலை பெருமளவு உயரக்கூடும் இல்லையா? அந்த வெப்பநிலையிலும் வளமாகவும் உறுதியாகவும் வளரக்கூடிய பவளப்பாறைகளை இந்தக்குழு கண்டறிந்துள்ளது. இந்த பவளப்பாறைகளில் வெப்பத்தை தாங்கிவளரும் ஆல்காக்கள் வாழ்வதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்தக்குழுவைச் சேர்ந்த ஆராய்ச்சி மாணவர் டாம் ஆலிவர், ஓஃபு என்னும் அமெரிக்க தீவில் இந்த ஆய்வுகளை மேற்கொண்டார். இந்தத் தீவில் ஏராளமான பவளப்பாறைகள் இருக்கின்றன. இங்கு புவிவெப்பத்தால் அழியக்கூடிய ஆல்காக்களும், புவிவெப்பத்தை தாங்கிவாழும் ஆல்காக்களும் ஒருசேர இருப்பதால் மிக அருமையான ஒரு ஆய்வுக்கூடமாக இந்தத்தீவு அமைந்துபோனது.
வெப்பமண்டல நாடுகளின் ஆரோக்கியமான சுற்றுச்சூழலுக்கு பவளப்பாறைகள் அடிப்படையானவை. பவளப்பாறைகள் zooxanthellae என்னும் ஒருசெல் ஆல்காக்களை சார்ந்து வாழுகின்றன. ஆயிரக்கணக்கான கடல்வாழ் உயிரினங்களும் மீன்வகைகளும் பவளப்பாறைகளில் குடியிருக்கின்றன. கோடிக்கணக்கான மக்களுக்கு இந்த மீன்களே உணவாகின்றன. புவிவெப்ப உயர்வால் பவளப்பாறைகள் எவ்வாறு வெளுத்துப்போகின்றன என்பதை விளக்கும் கட்டுரை இதே பகுதியில் ஏற்கனவே வெளியாகி உள்ளது.
ஓஃபு தீவின் குளிர்ச்சியான கழிமுகங்களில் வெப்பத்தை தாங்கி வளரும் ஆல்காக்கள் மிகக்குறைந்த அளவில் இருந்தன. ஆனால், இதே தீவின் வெப்பமான பகுதிகளில் வெப்பத்தைத் தாங்கி வளரும் ஆல்காக்கள் அதிக அளவில் இருந்தன. அதாவது வெப்பத்தை தாங்க இயலாத ஆல்காக்கள், தாங்களாகவே ஒதுங்கிக்கொண்டு வெப்பத்தை தாங்கக்கூடிய ஆல்காக்கள் வாழ இடம் கொடுக்கின்றன என்பதுதான் ஆய்வுகளின் முடிவு.
உலகில் எங்கெல்லாம் ஒஃபு தீவைப்போல வெப்பத்தை ஏற்றுவாழும் ஆல்காக்கள் மிகுந்துள்ளன என்கிற விவரம் செயற்கைக்கோளைக் கொண்டு எடுக்கப்பட்ட படங்களில் இருந்து சேகரிக்கப்பட்டது. புவியில் எங்கெல்லாம் ஓர் ஆண்டின் அதிகபட்ச வெப்பநிலை 29 முதல் 31 செல்சியஸ் ஆக உள்ளதோ, அங்கெல்லாம் வெப்பத்தை தாங்க இயலாத ஆல்காக்கள், வெப்பத்தை தாங்கக்கூடிய ஆல்காக்களுக்கு வழிகொடுத்து ஒதுங்கிக்கொள்வதாக முடிவுகள் தெரிவிக்கின்றன. மேலும் கடல்நீரின் அமிலத்தன்மை அதிகரிப்பால்கூட இந்த ஆல்காக்கள் அழிவதில்லை என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகளின் சர்வதேச அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் புவிவெப்பம் 2100ஆம் ஆண்டில் 2 முதல் 4.5 செல்சியஸ் உயரக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் வெப்பத்தை தாங்கி வளரும் ஆல்காக்கள் வெறும் 1.5 செல்சியஸ் வெப்பஉயர்வை மட்டும் ஏற்று வாழக்கூடியவை. என்னதான் வெப்பத்தை ஏற்றுவாழும் ஆல்காக்களால் பவளப்பாறைகள் வெளுத்துப்போவது தடுக்கப்பட்டாலும் மனிதர்களின் தவறுகளால் பவளப்பாறைகளின் அழிவின் வேகம் சற்று தூக்கலாகவே இருக்கிறது. மனிதத் தவறுகளால் இன்னும் 50 ஆண்டுகளில் பலமில்லியன் ஆண்டுகள் பழமையான பவளப்பாறைகள் அழிந்துபோவது நிச்சயம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
தகவல்: மு.குருமூர்த்தி
இன்னும் படிக்க: http://www.sciencedaily.com/releases/2009/05/090520100515.htm
- விவரங்கள்
- ஆதி
- பிரிவு: சுற்றுச்சூழல்
ஷெல் பெட்ரோல் நிறுவனத்தை எதிர்த்த கென்ய கவிஞர் கென் சரோ விவா போல் உலகெங்கும் சூழலுக்காக போராடுபவர்கள் கொல்லப்படுகிறார்கள் அல்லது அரசின் உதவியுடன் நசுக்கி ஒடுக்கப்படுகிறார்கள். இந்தியாவிலும் அதுதான் நடக்கிறது. பொதுவாகவே சூழல் விழிப்புணர்வு அதிகமுள்ள கர்நாடகத்தில் சமீபத்தில் ஒரு கொடூரக் கொலை நடந்துள்ளது. வடிகால் தொழிற்சாலை, மணல் குவாரிகளை எதிர்த்த விவசாயி செல்ல கிருஷ்ணமூர்த்தி (57) அந்நிறுவன முதலாளிகளால் கொல்லப்பட்டிருக்கிறார். இயற்கை வேளாண் முறையில் வாழை பயிரிட்டு வந்த விவசாயி அவர்.
சிக்பல்லாபூர் கிராமப் பகுதியில் விவசாய நிலங்கள், பாசனக் குளங்கள், பினாகினி நதியில் உள்ளூர் வடிகால் தொழிற்சாலை தொடர்ந்து கழிவு நீரை வெளியேற்றி வந்துள்ளது. அந்த நிறுவனத்தின் அத்துமீறல் தொடர்பாக கிருஷ்ணமூர்த்தி வீடியோ பதிவு செய்துள்ளார். அந்த நிறுவனத்துக்கு எதிராக புகார் பதிவு செய்துள்ளார்.
இப்படிச் சென்று கொண்டிருந்த அவரது வாழ்க்கைக்கு கடந்த நவம்பர் 10ந் தேதி திடீரென்று முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. கௌரி டிஸ்டிலரி நிறுவனத்தின் அத்துமீறல்கள் பற்றி செய்தியாளர் கூட்டத்தில் பேட்டியளிக்க கிருஷ்ணமூர்த்தி தயாராகிக் கொண்டிருந்த நேரத்தில், கௌரிபித்தனூக் தாலுகாவில் அவர் கொல்லப்பட்டார்.
அவரது தொடர் போராட்டத்தால், கொல்லப்படுவதற்கு சில நாட்களுக்கு முன் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து தண்ணீர் மாதிரிகளை சோதனைக்காக எடுத்துச் சென்றிருந்தனர். வாரியத்தின் விதிமுறைகளை மீறியதன் காரணமாக டிசம்பர் 19ந் தேதி அந்த வடிகால் தொழிற்சாலை மூடப்பட்டிருக்கிறது. ஆனால் அரசு உரிய காலத்தில் செயல்படாததால், ஒரு சுற்றுச்சூழல் போராளியின் வாழ்க்கை வலிந்து முடிக்கப்பட்டிருக்கிறது.
- சுற்றுச்சூழல் செய்திகள்
- திட்டமிடப்பட்டு அழிக்கப்படும் இயற்கை மரபுசார் விவசாயம்
- மீன் இனத்தை அழிக்கும் CO2
- கரியமில வாயுவின் இன்னொரு முகம்
- புவி வெப்பம் அதிகரிப்பது ஏன்?
- பற்றி எரிகிறது பூமி
- முல்லை பெரியாறு அணை - ஓர் பார்வை
- பாழாகும் பாலாறு
- ஆடுகளுடன் போர் செய்த ஒரு நாட்டின் கதை
- நிறம் மாறும் அண்டார்டிகா
- ஆழ்கடலில் அதிசய எரிமலைகளின் கண்டுபிடிப்பு
- நஞ்சுள்ள பட்டாணி நாளைய உலகின் உணவாகுமா?
- பவளப் பாறைகளுக்கு மரங்களால் ஒரு புது வீடு
- இந்தியாவில் லித்தியம்
- உலகின் குப்பைத் தொட்டியா அட்டகாமா பாலைவனம்?
- குட்டையாகும் ஆல்ப்ஸ் மலை
- நிறம் மாறும் கடல்கள்
- ஆழ்கடலில் புதிய பவளப் பாறைகளின் கண்டுபிடிப்பு
- உலகை அச்சுறுத்தும் பூஞ்சைகள்
- அதிகரிக்கும் வானவில் நாட்கள்