கீற்றில் தேட...
அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: புவி அறிவியல்
உலகில் ஆடுகளுடன் போராடி தோற்றுப் போன ஒரு இடம் உண்டு... தென்னமெரிக்காவில். சார்ல்ஸ் டார்வினின் பரிணாமக் கோட்பாடு பிறந்த, ராட்சத ஆமைகள், கடல் இக்வானாக்களின் வாழிடமாக இருந்த ஈக்குவெடோரின் காலப்பகோஸ் தேசியப் பூங்காதான் அந்த இடம். ஆடுகள் முதலில் அங்கு விருந்தாளியாக சென்றன. பிறகு அவை தீவில் காலம் காலமாக வாழ்ந்தவற்றின் உணவு ஆதாரங்களை அழிக்கத் தொடங்கின. சூழல் நலத்திற்கு இது தீராத தலைவலியாக மாறியது.
போராடித் தோற்றபோது பூங்காவின் பாதுகாவலர்கள் நிரந்தரமாக ஆடுகளை இல்லாமல் செய்ய முடிவு செய்தனர். இதற்காக பல கோடிகள் செலவிடப்பட்டன. மிஷின் இசபெல்லா என்று பெயர் சூட்டப்பட்ட அந்த யுத்தத்தின் கதைதான் இது.மாயாஜாலக் கதைகளில் வரும் உயிரினங்கள் போல அதிசய உயிரினங்களின் வாழிடமே காலப்பகோஸ் தேசியப் பூங்கா! 400 கிலோ எடையுள்ள ஆமைகள், சுதந்திரமாக வாழும் ராட்சத கடல் இக்வானாக்கள், போர்ப்பறவைகள், கப்பற்பறவைகள் அல்லது கடற்கொள்ளைப் பறவைகள் இங்கு உள்ளன. தாடியுடன் உள்ள ப்ரிகேட் பறவைகள், அதி அபூர்வ தாவர இனங்கள் என்று பல அதிசயங்களின் தீவு இது. பரிணாமக் கோட்பாட்டின் தந்தை சார்ல்ஸ் டார்வின் தங்கி ஆய்வு செய்த இடம் இது. அந்த இடம் இப்போது உலகின் முக்கிய சுற்றுலா மையங்களில் ஒன்று.
டார்வின் கார்னர் என்று அது அழைக்கப்படுகிறது. 1850 முதல் 1860 வரையுள்ள காலத்தில் ஐரோப்பிய குடியேற்றக்காரர்கள், கப்பல் மாலுமிகளின் தலைமையில் ஆடுகள் இங்கு வந்து சேர்ந்தன. அவை இங்கு உணவுக்காக கொண்டு வரப்பட்டன. ஆனால் விருந்தாளியாக வந்த ஆடுகள் ஒரு சூழல் மண்டலத்தை அழிக்கும் ஆக்ரமிப்பு உயிரினங்களாக மாறின. இயற்கையான புல்வெளிப் பகுதிகளை இவை கூட்டம் கூட்டமாக மேய்ந்து முற்றிலும் அழித்தன.
இதனால் செடி கொடிகளைப் பார்ப்பதே அரிதானது. இந்த அழிவு அங்கு வாழ்ந்த உயிரினங்களின் நிலைநிற்பைப் பாதித்தது. 19ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் அங்கு வாழ்ந்த ஆடுகளின் எண்ணிக்கை சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமாக இருந்தது. ஆடுகளை உணவாக உண்ணும் வன விலங்குகளின் எண்ணிக்கை குறைவே இதற்கு முக்கிய காரணம். இயல்பான தாவரச்செழுமையின் பின்புலத்தில் இத்தீவு சூழல் பேரிடர்களை சமாளித்து வந்தது.
ஆனால் ஆடுகளின் வரவுடன் எதிர்பாராத மண் அரிப்பும் மண் சரிவுகளும் ஏற்பட்டன. இது ஆக்ரமிப்பு தாவரங்களின் வளர்ச்சிக்குக் காரணமானது. இயற்கைப் பசுமை இல்லாமல் போனதால் அதை நம்பி வாழ்ந்த எண்ணற்ற உயிரினங்கள், நுண்ணுயிரிகள் அழிந்து போயின. இவற்றை உணவாக உண்டு வாழ்ந்த ராட்சத ஆமைகளுக்கும் கடல் இக்வானாக்களுக்கும் இது பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. தீவு உயிரினங்கள் உணவு மற்றும் நீருக்காக ஆடுகளுடன் மோத வேண்டியதாயிற்று.
உணவுச் சங்கிலியை இது பெரிதும் பாதித்தது. இதனால் அதிகாரிகள் ஆடுகளைக் கொன்று குவிக்க வேண்டும் என்ற கடுமையான முடிவுக்கு வந்தனர். ஆடுகள் உட்பட உள்ள ஆக்ரமிப்பு விலங்குகளை அழித்தொழிக்க 1997ல் மிஷின் இசபெல்லா என்ற திட்டத்தை ஈக்குவெடார் அரசு தொடங்கியது.
மிஷின் இசபெல்லாவும் யூதாஸ் ஆடுகளும்
ஈக்குவெடோர் சூழல் அமைச்சரகம், காலப்பகோஸ் தேசியப் பூங்கா இயக்குனரகம், காலப்பகோஸ் சூழல் அமைப்பு, டார்வின் அறக்கட்டளை ஆகியவற்றின் ஒருங்கிணைப்பில் இத்திட்டம் தொடங்கப்பட்டது. இது 1997 முதல் 2006 வரை உள்ள ஒன்பது ஆண்டுகள் நீடித்தது.
தரைப்பகுதியில் இருந்து வேட்டையாடுதல், வான் வழி வெடி வைத்தல், ஆண் ஆடுகளை ஈர்த்து வரவழைக்க கருத்தடை செய்யப்பட்ட பெண் ஆடுகளுக்கு ரேடியோ காலர் பொருத்தி அனுப்பும் திட்டம், வேலி கட்டுதல், ஆடுகளின் வளர்ச்சியைத் தடுக்க சில ஈக்களைப் பயன்படுத்துதல் போன்ற பல வழிகள் ஆலோசிக்கப்பட்டன. 2006ல் 250,000 ஆடுகள் கொல்லப்பட்டன. இதனால் தீவின் இயற்கை சூழல் மண்டலம் மீட்கப்பட்டது.
2006ல் காலப்பகோஸ் தீவு ஆடுகள் இல்லாத தீவாக அறிவிக்கப்பட்டது. ஆடுகளைக் கொல்ல பயன்படுத்தப்பட்ட திட்டங்களில் பெண் ஆடுகளைப் பயன்படுத்தி சதி செய்து ஆண் ஆடுகளைக் கொல்லும் முறை அதிக பலனைத் தந்தது.
இந்த பெண் ஆடுகளுக்கு யூதாஸ் ஆடுகள் என்று சிறப்புப் பெயரிடப்பட்டது. தரை மற்றும் வான் வழியாக ஆடுகள் அதிகம் கொல்லப்பட்டன என்றாலும் அது முழுமையாக பலன் தரவில்லை என்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்தே யூதாஸ் ஆடுகள் தீட்டம் நடைமுறைக்கு வந்தது. கருத்தடை செய்து ரேடியோ காலர் பொருத்தப்பட்ட பெண் ஆடுகளை மற்ற ஆடுகளுடன் மேய விடுவதே இதன் நோக்கம். இவற்றைத் தேடி மீதியுள்ள ஆண் ஆடுகள் வரும் என்பது அதிகாரிகளின் நம்பிக்கை.
ஆண் ஆடுகளைக் கவர ரேடியோ காலர் பொருத்தப்பட்ட பெண் ஆடுகள் மீது ஹார்மோன் தெளிக்கப்பட்டது. இதனால் ஆண் ஆடுகள் பெண் ஆடுகளைத் தேடி வந்தன. தயாராகக் காத்திருந்த துப்பாக்கி வீரர்கள் அவற்றை சுட்டுக் கொன்றனர். ரேடியோ காலர் பொருத்தப்பட்ட பெண் ஆடுகள் பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்ளப்பட்டன. அவை மீண்டும் திட்டத்திற்காகப் பயன்படுத்தப்பட்டன. இதனுடன் ரேடியோ காலர் தொழில்நுட்பத்தின் மூலம் ஆடுகளுக்கு கருத்தடையும் செய்யப்பட்டது. ஒளிந்திருந்த ஆடுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
ஆடு வேட்டையில் பங்காளிகளான உள்ளூர் மக்கள்
காலப்பகோஸ் சாண்டியாகோ தீவில் மட்டும் 213 யூதாஸ் ஆடுகள் ஆடு வேட்டையில் ஈடுபடுத்தப்பட்டன. இதன் மூலம் 2004 முதல் 2005 வரை உள்ள காலத்தில் 1,174 ஆடுகள் கொல்லப்பட்டன. இசபெல்லா தீவில் 770 யூதாஸ் ஆடுகள் பயன்படுத்தப்பட்டன. 2006ல் இந்தத் தீவும் ஆடு இல்லாத பகுதியாக அறிவிக்கப்பட்டது.
வேட்டைக்காரர்களைத் தவிர ஆடுகளைக் கொல்ல உள்ளூர் மக்களையும் அதிகாரிகள் அனுமதித்தனர். ஒருபோதும் வேட்டைக்குப் போகாதவர்கள் கூட ஆடுகளைத் தேடி வந்தனர். வேட்டை நடந்தது. தயவுதாட்சண்யம் இல்லாமல் ஆடுகள் கொன்று குவிக்கப்பட்டன. கொல்லப்பட்ட ஆடுகளின் இறைச்சி, உரோமங்கள், தோல் ஆகியவை பயன்படுத்தப்பட்டன.
வேட்டைக்கு வருபவர்களுக்கு துப்பாக்கி, வேட்டை நாய்கள், தற்காலிக இருப்பிடம் அறியும் வசதி (GPS) போன்றவை ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டது. தொடர்ந்து நடந்த வேட்டை இரண்டாண்டு நீடித்தது. 53,782 ஆடுகள் கொல்லப்பட்டன. இரண்டாம் கட்டத்தில் ஹெலிகாப்டர் மூலம் வான் வழி வேட்டை நடந்தது. இது மூன்று மாதங்கள் நீடித்தது. இதற்காக தொழில்ரீதியான வேட்டைக்காரர்கள் தீவிற்கு வர வழைக்கப்பட்டனர்.
ஆடுகள் முற்றிலும் அழிக்கப்பட்டதால் உள்ளூர் தாவர விலங்குகள் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பின. இது ஆய்வாளர்களிடையில் வியப்பை ஏற்படுத்தியது. ஆடுகள் விட்டுச் சென்ற மரங்களின் தளிர் இலைகள் வெகு விரைவில் துளிர்த்தது. செடிகள் வேகமாக துளிர் விட்டு வளர்ந்தன. உள்ளூரில் வளரும் முட்செடிகள் முன்பை விட அதிக ஆற்றலுடன் வளர்ந்தன. உணவும் நீரும் கிடைக்கும் என்ற நம்பிக்கையால் அவற்றைச் சார்ந்து வாழ்ந்த மற்ற உயிரினங்களின் எண்ணிக்கை அதிகரித்தது.
தீவின் சூழல் மண்டலம் பழைய வடிவிற்கு வந்தது. மூவாயிரத்தில் இருந்து பத்தொன்பதாயிரமாக ஆமைகளின் எண்ணிக்கை உயர்ந்தது. இவ்வாறு இசபெல்லா திட்டம் ஆக்ரமிப்பு உயிரினங்களுக்கு எதிரான உலகின் மிகச்சிறந்த முன்மாதிரித் திட்டமாக மாறியது.
சார்ல்ஸ் டார்வினும் காலப்பகோஸும்
பரிணாமக் கோட்பாட்டின் தந்தை சார்ல்ஸ் டார்வின் வந்து தங்கிய பிறகே இத்தீவு உலகின் கவனத்தைக் கவந்தது. ஒற்றைப்பட்ட தீவுக்கூட்டம் என்ற நிலையில் இங்கு வாழும் தாவர விலங்கினங்கள் விசித்திரமானவையாக காணப்பட்டன. இது டார்வினைக் கவர்ந்தது. 1831 முதல் ஐந்தாண்டு காலம் கப்பல் பயணம் செய்து உலகின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று அவர் ஆய்வுகளை நடத்தினார்.
இந்தப் பயணத்திற்கு நடுவில்தான் அவர் காலப்பகோஸ் தீவில் வந்தார். இங்கு ஐந்து வார காலம் தங்கி ஆய்வுகளை நடத்தினார். பரிணாமக் கோட்பாட்டின் உருவாக்கத்தில் காலப்பகோஸ் தீவின் சூழல் பற்றிய ஆய்வு டார்வின் தன் கொள்கையை வகுக்க பெரிதும் உதவியது. அவர் இத்தீவு ஒற்றைப்பட்ட தீவாக இருந்ததால் இங்கு உள்ள ராட்சத ஆமைகள், கடல் இக்வானாக்கள், பெரிய தாடியுடன் இருந்த ஃப்ரிகேட் பறவைகள் போன்றவற்றின் இயல்பு, வடிவம், வளர்ச்சியை பற்றி விரிவாக ஆராய்ந்தார்.
அவர் இங்கு கண்டுபிடித்த 14 வகை பிஞ்ச் பறவைகளுக்கு அவரது நினைவாக டார்வினின் பிஞ்ச் பறவைகள் என்று பெயரிடப்பட்டன. 1831 டிசம்பர் 27 முதல் 1836 அக்டோபர் 2 வரை ஹெச் எம் எஸ் பீகில் என்ற கப்பலில் மேற்கொண்ட கடல் வழி பயணத்தின்போது 1835 செப்டம்பர் 15 அன்று டார்வின் காலப்பகோஸ் தீவிற்கு வந்து சேர்ந்தார். அங்கு ராட்சத ஆமைகள், அது வரை கண்டிராத பறவைகள் அத்தீவை வித்தியாசமான சூழல் பகுதியாக கருத வேண்டும் என்ற எண்ணத்தை அவருக்கு ஏற்படுத்தியது.
1878ல் யுனெச்கோ இத்தீவை உலகப் பாரம்பரிய சின்னமாக அறிவித்தது. தீவைச் சுற்றிலும் உள்ள கடலில் வாழும் 20% உயிரினங்கள் உலகில் வேறெங்கும் காணப்படாதவை. இது இத்தீவை வேறுபட்டதாக மாற்றியது. கடலில் வாழும் ஒரே ஒரு இக்வானா இனம் இங்கு மட்டுமே வாழ்கிறது. காலப்பகோஸ் பெங்குயின் இங்கு வாழும் மற்றொரு அதிசய உயிரினம். இது போன்ற பல அரிய சூழ்நிலைகளே டார்வினை உயிரினங்களின் தோற்றம் (On the origin of the species) என்ற புகழ்பெற்ற நூலை எழுதத் தூண்டியது.
பல உயிரினங்களும் பூமியில் இதர பகுதிகளில் உயிரினங்களுடன் ஏதாவது ஒரு விதத்தில் தொடர்பு கொண்டிருக்கும் என்றாலும் இத்தீவில் அவை வேறுபட்ட வடிவத்திலும் விசித்திர சுபாவத்துடனும் காணப்படுகின்றன என்பதை அவர் கண்டறிந்தார். மனிதனைப் பார்த்து பயப்படாத பறவைகள், பெரிய ஆமைகள், உதடுகளுடன் உள்ள பிஞ்ச் குருவிகள் என்று பல தரப்பட்ட உயிரினங்கள் அவற்றில் ஒரு சில.
ஒற்றைப்பட்ட இடங்களில் இத்தகைய உயிரினங்கள் எவ்வாறு தோன்றின என்று டார்வின் சிந்தித்தார். இதில் இருந்தே பாதகமான சூழ்நிலைகளை சமாளித்து வாழும் இயல்புடைய இது போன்ற உயிரினங்கள் தோன்றின என்பது அவருக்குப் புரிந்தது. இதுவே பூமியில் புதிய உயிரினங்கள் தோன்ற காரணம் என்று அவர் கண்டுபிடித்தார். இயற்கைத் தேர்வுக் கோட்பாட்டிற்கும் இத்தீவின் உயிரினங்களே வழிவகுத்தன. அவரது நினைவாக அங்கு டார்வின் ஆய்வு நிலையம் செயல்படுகிறது.
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: புவி அறிவியல்
புவி வெப்ப உயர்வினால் அண்டார்டிகா நிறம் மாறுகிறது. வெண்பனிக் கண்டம் வேகமாக பசுமை நிறமாகிறது. செயற்கைக்கோள் படங்களின் பகுப்பாய்வு கடந்த சில பத்தாண்டுகளாக அண்டார்டிகாவின் பசுமைப் போர்வை பல பத்துமடங்கு அதிகரித்து வருவதை எடுத்துக் காட்டுகிறது. 1986ல் ஒரு சதுர கிலோமீட்டருக்கும் குறைவான பரப்பில் இருந்த தாவரங்களின் வளர்ச்சி 2021ல் 12 சதுர கிலோமீட்டர் என்ற அளவில் பரவியது. 2016 முதல் பாசி வகை தாவரங்கள் கட்டுக்கடங்காமல் பெருகி வருகின்றன.
வெண்பனிக் கண்டத்தில் தாவரங்கள்
பனிக்கட்டிகளாலும் பாறைகளாலும் ஆக்கப்பட்ட இங்கு தாவரங்கள் வேகமாக வளர்வது உலகளவில் வெப்பம் அதிகரிப்பதையே காட்டுகிறது. தாவரங்களின் பரவல் தூய கண்டத்தில் அந்நிய ஆக்ரமிப்பு தாவரங்கள் காலூன்ற வழிவகுக்கும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.
(Photograph: Matt Amesbury)
ஆர்க்டிக் பகுதியிலும் பசுமைப் பரப்பு அதிகரிக்கிறது. 2021ல் ஐஸ்லாந்தில் பெரிய பனிமலையில் பனி பொழிவதற்குப் பதில் முதல்முறையாக சாதனையளவு மழை பெய்தது.
“அண்டார்டிகாவில் இப்போதும் ஒரு சிறு பகுதி தாவரங்களால் மூடப்பட்டுள்ளது. என்றாலும் அண்டார்டிகா பெரும்பாலும் பனிக்கட்டிகள் மற்றும் பாறைகளால் மூடப்பட்டுள்ளது” என்று ஆய்வுக் கட்டுரையின் இணை ஆசிரியரும் எக்ஸிட்டர் (Exeter) பல்கலைக்கழக ஆய்வாளருமான டாக்டர் தாமஸ் ரோலண்ட் (Dr Thomas Roland) கூறுகிறார். ஆனால் இச்சிறிய பசுமைப் பகுதி கூட ஆபத்தான நிலையில் வளர்கிறது. தனிமைப்படுத்தப்பட்ட, பரந்து விரிந்த இப்பகுதியை கூட மனிதச் செயல்பாடுகள் பாதிக்கிறது.
இதன் பரப்பு 13.66 மில்லியன் சதுர கிலோமீட்டர். கார்பன் உமிழ்வு தடுத்து நிறுத்தப் படாவிட்டால் வருங்காலத்தில் தொடரும் வெப்ப உயர்வு இந்த தனித்துவம் மிக்க, பலவீனமான இதன் உயிரியல் மற்றும் நில அமைப்பை மாற்றி விடும்.
லாண்ட் சாட் (Landsat) செயற்கைக்கோள் படங்களின் பகுப்பாய்வு மூலம் நடந்த இந்த ஆய்வு பற்றிய கட்டுரை நேச்சர் புவி அறிவியல் (Nature Geoscience) என்ற இதழில் வெளிவந்துள்ளது.
“இந்த ஆய்வுகள் சுவாரசியமானவை. கடந்த ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு இங்குள்ள லார்சன் இன் லிட் (Larsen Inlet) பகுதிக்குச் சென்றிருந்தோம். 1986-88 ஆண்டு காலத்தில் இப்பகுதியில் இருந்த லார்சன் பனிப்பாறை (Larsen Ice Shelf) உருகி உண்டான நிலப்பரப்பில் நாங்கள் தரையிறங்கினோம். இப்போது இங்கு ஆல்காக்கள் வளர்ந்து பெருகியுள்ள ஓர் ஆறு ஓடுகிறது! ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இப்பகுதி வளி மண்டல மாற்றங்களால் பாதிக்கப்படாத பகுதியாக இருந்தது.
ஆனால் பனிக்கட்டிகள் உருகியதால் வெறும் நிலமாக மாறிய இது கடந்த சில ஆண்டுகளில் தாவரங்கள் வளரும் பகுதியாக மாறிவிட்டது. இந்த மாற்றங்கள் காலநிலை அவசரநிலையைக் காட்டும் கருவி. இதனால் இப்பகுதியில் உயிருள்ளவை காலூன்றத் தொடங்கியுள்ளன” என்று இங்கிலாந்தின் நார்த்தம்ப்ரியா (Northumbria) பல்கலைக்கழக விஞ்ஞானி பேராசிரியர் ஆண்ட்ரூ ஷப்ஃபர்ட் (Prof Andrew Shepherd) கூறுகிறார்.
இப்பகுதியை சுற்றிய கடலில் இருந்த பனி உருகியதால் 2016ல் இங்கு பாசிகள் பெருகத் தொடங்கின. வெதுவெதுப்பான திறந்த நிலை கடல்கள் ஈரமான சூழலை ஏற்படுத்தி நிலப்பரப்பை அதிகரிக்கிறது. பாசிகள் வெறும் பாறைகளில் வளர்ந்து ஆக்ரமிக்கின்றன. இது மண் என்னும் உயிரூட்டமுள்ள பொருளை உருவாக்குகிறது. இதனால் மற்ற தாவரங்கள் வளர உகந்த சூழல் இங்கு உருவாகிறது.
“இங்கிருக்கும் பெரும்பாலான மணற்பரப்பு சத்துகள் அற்றது. பரவும் தாவர வாழ்க்கை அங்ககப் பொருட்களின் அளவை அதிகரிக்கச் செய்யும். கூடுதலான மண் உருவாகும் சூழ்நிலையை இது உண்டாக்கும். இதனால் சூழல் சுற்றுலாப் பயணிகள், விஞ்ஞானிகள் மற்றும் இதர வருகையாளர்களால் இப்பகுதிக்கு எடுத்து வரப்படும் அந்நியமான, ஆக்ரமிப்பு தாவரங்கள் வளரும் வாய்ப்பு அதிகமாகும். 2017ல் பாசிகளின் வளர்ச்சி வேகம் பற்றி ஆராயப்பட்டது. ஆனால் அது பகுதிவாரியாக நடைபெறவில்லை.
2022ல் நடந்த மற்றொரு ஆய்வு இப்பகுதிக்கு சொந்தமான இரண்டு பூக்கும் தாவரங்கள் இதன் வட பகுதியில் அமைந்துள்ள சிக்னி (Signy) தீவில் பரவுவதைக் கண்டறிந்தது. உருகும் பனிப்பரப்புகள் மீது பச்சைப் பாசியும் படர்ந்து வளர்கிறது. இன்றுள்ளது போல அன்று வளி மண்டல கார்பன் டை ஆக்சைடின் அளவு அதிகமாக இருந்ததால் தென் துருவத்திற்கு அருகில் சில மில்லியன் ஆண்டுகளுக்கு முன் மரங்கள் வளர்ந்திருந்தன.
பூமியில் மனிதக் குறுக்கீடுகள் இல்லாத பகுதி என்று பல காலங்களாக கருதப்பட்டு வந்த அண்டார்டிகா வெப்ப உயர்வால் கரைந்து உருகினால் அது நாம் வாழும் இந்த கோளின் அழிவுக்கே காரணமாக அமையும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: புவி அறிவியல்
ஆழ்கடலில் இத்தாலி சிசிலிக்கு அருகில் மூன்று புதிய எரிமலைகளை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். உலகம் முழுவதும் உள்ள ஆழ்கடல் பகுதிகளில் விஞ்ஞானிகளால் அறியப்படாத பல அதிசயங்கள் இன்னும் உள்ளன என்பதை இது எடுத்துக் காட்டுகிறது. இதனால் இந்த கண்டுபிடிப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்தது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இந்த ஆய்வுகள் ஒரு வார காலம் நடந்தன. முடிவில் உலகின் பல பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இணைந்து சிசிலிக்கு தென்மேற்குப் பகுதியில் கடலுக்கு அடியில் செயல்படும் இந்த மூன்று எரிமலைகளைக் கண்டுபிடித்துள்ளனர். இவை இன்னும் தீவிரமாக செயல்படுகின்றனவா என்பது பற்றி உறுதியாகத் தெரியவில்லை. இந்த எரிமலைகள் குறைந்தபட்சம் 6 கிலோமீட்டர் அகலம் உடையவை. சுற்றுப்புற கடற்படுகையில் இருந்து இவை 150 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளன.
புதிய கண்டுபிடிப்பும் பழைய எரிமலைக் கூம்புகளும்
இவை 2019ல் ட்ரெப்பானி (Trapani) என்ற சிசிலி பிரதேசத்தில் உள்ள மசார டெல் வாலோ (Mazara del Vallo) என்ற பகுதிக்கும், Agrigento என்ற பிரதேசத்தில் உள்ள சயக்கா (Sciacca) என்ற சிறிய நகரத்திற்கும் இடையில் தேசிய கடல்சார் ஆய்வுக்கழகம் மற்றும் புவி இயற்பியலுக்கான பரிசோதனை மையத்தைச் (National Institute of Oceanography & Experimental Geophysics OGS) சேர்ந்த விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்ட எரிமலைக் கூம்புகளுக்கு அருகில் உள்ளன.
The expedition onboard the Meteor was conducted by the University of Malta and OGS. Photograph: M191 (SUAVE)
மத்திய தரைக்கடல் பகுதி பல மில்லியன் ஆண்டுகளாக மனிதர்களால் ஆராயப்படுகிறது. என்றாலும் இப்பகுதியின் ஆழ்கடல் பரப்பு பற்றி மிகச் சிறிதளவு மட்டுமே இன்றும் நம்மால் அறிய முடிந்துள்ளது.
இதனால் இந்தக் கண்டுபிடிப்பு விஞ்ஞானிகளின் ஆழ்கடல் ஆய்வில் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது என்று கடல்சார் ஆய்வுக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி டாரியோ சிவைல் (Dario Civile) கூறுகிறார்.
இதுவரை ஆராயப்படாத சிசிலியின் ஆழ்கடற்பகுதியில் இந்த ஆய்வுகள் மீட்டியர் (Meteor) என்ற ஜெர்மன் ஆய்வு வாகனத்தில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்டது. ஆய்வின்போது எரிமலையில் இருந்து பாறை மாதிரிகள், லார்வா எரிமலைக்குழம்பு படிவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன. இந்த எரிமலைகளில் இப்போது நீரியல் வெப்ப வினைகள் (hydrothermal activities) நடைபெறவில்லை என்றாலும் இவற்றின் வெடிக்கும் இயல்பு பற்றி இப்போதே எதையும் உறுதியாக அறிய முடியாது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
பாறை மாதிரிகள் முதலில் பகுப்பாய்வு செய்யப்படும். எரிமலைகளின் புவி அதிர்வு விவரங்கள் சேகரிக்கப்பட்டு விரிவாக ஆராயப்படும். இந்த ஆய்வின்போது 100X17 மீட்டர் அளவுள்ள கப்பலின் உடைந்த பகுதியை ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர். இது கடலின் 110 மீட்டர் ஆழத்தில் லினோசா (Linosa) என்ற எரிமலையால் உருவான தீவிற்கும் சிசிலிக்கும் இடைப்பட்ட பாதி தொலைவில் பெயரில்லாத கரைப் பகுதி (nameless bank) என்று அழைக்கப்படும் (Banco Senza Nome) பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த உடைந்த பகுதி பற்றி இப்போது எதுவும் தெரியவில்லை. இதன் காலம் குறித்த விவரங்களை இப்போது அறிந்து கொள்வது கடினம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
பல உலகப் பல்கலைக்கழக விஞ்ஞானிகளின் ஒத்துழைப்பு
இந்த ஆழ்கடல் ஆய்வுகள் மால்ட்டா (Malta) பல்கலைக்கழகம், தேசிய கடல்சார் ஆய்வுக்கழகம் மற்றும் ஜெர்மனி கீல் (Kiel) ஜியோமார் ஹெல்ம்ஹோல்ட்ல்ஸ் கடல் ஆய்வு மையம் (Geomar Helmholtz Centre for Ocean Research;MBARI), அமெரிக்காவின் மாண்ட்டரே வளைகுடா நீரியல் ஆய்வுக்கழகம் (Monterey Bay Aquarium Research Institute), நியூசிலாந்து வெலிங்க்டன் விக்டோரியா பல்கலைக்கழகம், இங்கிலாந்தின் பர்மிங்ஹாம், ஆக்ஸ்போர்டு, எடின்பரோ பல்கலைக்கழகங்கள் மற்றும் ஜெர்மனி கீல் பல்கலைக்கழக ஆய்வாளர்களால் இணைந்து மேற்கொள்ளப்பட்டது.
கடலுக்கு அடியில் நிகழும் எரிமலை வெடிப்புகள் பற்றி அதிகம் அறியப்படுவதில்லை. என்றாலும் நீருக்கடியில் ஒரு மீட்டருக்கும் கூடுதலான உயரத்துடன் இருக்கும் எரிமலைகளின் வெடிப்புகள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இவையே உலகம் முழுவதும் நிகழும் 80% எரிமலை வெடிப்புகளுக்குக் காரணமாக உள்ளன.
இப்போது எரிமலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள பகுதியில் கடந்த காலத்தில் கடலுக்கு அடியில் இருக்கும் எரிமலைகள் சிறு தீவுகள் போல வெளிப்படும். சில சமயங்களில் இவை திடீரென்று கடலின் மேற்பகுதியில் தோன்றி குறுகிய காலத்திற்குள் மீண்டும் கடலுக்கு அடியில் மூழ்கி மறைந்து விடும். இந்த போக்கு இவற்றைத் தீவிரமாக ஆராய்வதில் சிக்கல்களை ஏற்படுத்துகிறது என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
எரிமலை ஏற்படுத்திய போர்ச்சூழல்
இப்போது எரிமலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மத்திய தரைக்கடலின் இந்த பகுதிக்கு அருகில் 1831 ஜூலை 18ல் சயக்கா (Sciacca) நகரிற்கு 30 மைல் தொலைவில் ஓர் எரிமலை தீவு ஏற்பட்டது. இதையறிந்த சர் ஹம்ப்ரி லெ ப்ளெமிங் செண்ஹவுஸ் (Sir Humphrey Le Fleming Senhouse) என்ற பிரிட்டிஷ் கடற்படைத் தலைவர் தலைமையில் ஒரு கப்பல் படை இங்கு படையெடுத்து வந்தது. இந்த எரிமலை இருந்த பகுதியைக் கைப்பற்றியது. இதற்கு சர் ஜேம்ஸ் ராபர்ட் ஜார்ஜ் க்ரெயம் (Sir James Robert George Graham) என்ற ப்ரிட்டிஷ் பிரபுவின் பெயரைச் சூட்டியது.
சிசிலியின் அரசராக அப்போது இருந்த இரண்டாவது பெர்டினாண்டு (Ferdinand II) இதை அறிந்து தங்கள் நாடு ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பகுதியை இழந்து விட்டதாக உணர்ந்தார். கோபம் கொண்ட அவர் பிரிட்டிஷார் கைப்பற்றிய பகுதியில் ஏற்றியிருந்த யூனியன் ஜாக் கொடியை அகற்ற ஒரு படையை அனுப்பினார். அதே நேரத்தில் பிரெஞ்சு படை ஒன்று அப்பகுதிக்கு வந்து அதற்கு ஜியூலியா (Giulia) என்று பெயர் வைத்தது.
இந்த நிகழ்வுகள் மூன்று நாடுகள் ஒரு எரிமலைத் தீவிற்காக போரிடும் சூழலை ஏற்படுத்தியது. ஆனால் இயற்கையே இந்த சச்சரவை சில மாதங்களுக்குள் தீர்த்து வைத்தது. 1831 டிசம்பரில் சிசிலியர்களால் ஐசோலா பெர்டினாண்டியா (Isola Ferdinandea) என்று இரண்டாம் பெர்டினாண்டு அரசரைப் போற்றும் வகையில் பெயரிட்டு அழைத்த இந்த தீவு கடலிற்குள் மூழ்கி காணாமல் போனது.
நவம்பர் 2000ம் ஆண்டில் சிசிலியர்கள் வருங்காலத்தில் பிரிட்டிஷார் இப்பகுதிக்கான இறையாண்மையைக் கோருவதில் இருந்து பாதுகாக்க நீருக்கடியில் மூழ்கிய இந்த எரிமலைப் பகுதியில் இதனுடன் தொடர்புடைய நேப்பிள் பர்பன் (Bourbon) அரச வம்சத்தினரை அழைத்து அவர்கள் முன்னிலையில் ஒரு நினைவுப் பட்டயத்தை நிறுவினர். அதில் “இந்த எரிமலை என்றும் சிசிலியர்களுக்கே சொந்தமானது” என்று பொறிக்கப்பட்டிருந்தது.
கடல் என்னும் அற்புத உலகின் ஆழ்பகுதியில் உயிரினங்கள் மட்டும் இல்லாமல் எரிமலைகள் போன்ற எத்தனையோ இயற்கையின் அதிசயப் படைப்புகள் உள்ளன. இவற்றின் கண்டுபிடிப்பு கடலையும் நிலத்தையும் மனிதன் அறிய, பாதுகாக்க உதவும் பல வியப்பூட்டும் தகவல்களைத் தரும் என்பதற்கு இந்த கண்டுபிடிப்பு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: புவி அறிவியல்
நஞ்சுள்ள புல்வகைப் பட்டாணி (Grass pea) காலநிலை மாற்றத்தின் கெடுதிகளைத் தாக்குப் பிடித்து நாளைய உலகின் உணவாகலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். மரபணு எடிட்டிங் அல்லது தேர்ந்தெடுத்த கலப்பின செயல்முறை மூலம் புரதம் நிறைந்த, வறட்சியை சமாளித்து வளரும் நஞ்சற்ற பட்டாணி ரகத்தை உருவாக்கலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் புவி வெப்ப உயர்வால் உலகில் ஏற்படும் பெரும் பட்டினியைத் தடுக்க முடியும் என்று நம்பப்படுகிறது.
லாத்திரஸ் சாட்டிவஸ் (Lathyrus sativus) என்ற அறிவியல் பெயருடைய இந்த செடி, உலகின் மிக மோசமான வறண்ட நிலப்பகுதிகளில் வளர்கிறது. கடினமானது , சத்துகள் நிறைந்தது என்றாலும் குணப்படுத்த முடியாத பக்கவாதத்தை குறிப்பாக பலவீனமானவர்களிடம் இந்தப் பயிர் ஏற்படுத்துகிறது. இதனால் இப்பயிர் மற்ற பயிர்களின் விளைச்சல் பாதிக்கப்படும்போது ஒரு தற்காப்புப் பயிராக மட்டுமே வளர்க்கப்படுகிறது. என்றாலும் இதன் நஞ்சினால் பங்களாதேஷ், இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், எத்தியோப்பியா மற்றும் அல்ஜீரியாவில் பாதிப்பு ஏற்படுகிறது.
ஆனால் இப்போது இப்பயிரை ஆராய்ந்து வரும் இங்கிலாந்து விஞ்ஞானிகள் குழுவால் இதன் நஞ்சிற்கான காரணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால், வெப்பமடைந்து வரும் பூமியில் சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ள உலக மக்களுக்கு பாதுகாப்பான மதிப்புமிக்க பயிரை நவீன தொழில்நுட்பங்கள் மூலம் இதில் இருந்து கொடுக்க முடியும் என்று நார்ஃபக் (Norfolk) ஜான் இன்னஸ் (John Innes) ஆய்வு மையத்தின் திட்ட விஞ்ஞானி டாக்டர் ஆன் எட்வர்ட்ஸ் (Anne Edwards) கூறுகிறார்.நஞ்சிற்குக் காரணமானவை
நஞ்சை ஏற்படுத்தும் முக்கிய உயிரி வேதிப்பொருட்கள் பல படிகள் மூலம் கண்டறியப்பட்டன. இதன் சிக்கலான மரபணு வரிசையில் உள்ள பொருட்கள் ஆராயப்பட்டது.
நச்சுத் தன்மையை உருவாக்கும் பொருட்களை அகற்றும் முறை கண்டுபிடிக்கப்பட்டது. தாவரத்தில் நஞ்சு உண்டாகும் வழிமுறைகள் எவை என்பது தெரிய வந்தது.
புதிய ரகம் நஞ்சு இல்லாமல் உருவாக்கப்பட்டால், அது வறட்சியைத் தாக்குப் பிடிக்க இயலாத பயிராக மாறிவிடக் கூடாது என்பதில் விஞ்ஞானிகள் கவனம் செலுத்துகின்றனர். உருவாக்கப்பட்ட புதிய ரகம் முற்றிலும் அல்லது மிகக் குறைந்த அளவு மட்டுமே நஞ்சு உடையவையாக இருந்தன. சரிவிகித உணவின் ஓர் அம்சமாக உண்ணப்படும்போது இப்பயிர் பாதுகாப்பானது. ஆனால் மற்ற பயிர்களின் விளைச்சல் குறையும்போது இது மட்டுமே நன்றாக வளர்கிறது. அப்போது இதை முக்கிய உணவாக எடுத்துக் கொண்டால் லாத்தரிஸம் (Lathyrism) என்ற நோய் ஏற்படுகிறது.
இந்த நோயைப் பற்றி முதல்முதலாக கிரேக்க மருத்துவர் ஹிப்பாக்கெரட்டிஸ் (Hippocrates) கூறினார். ஸ்பெயின் ஓவியர் கோயாவின் (Goya) அக்வாட்டின் (aquatin) படம் மாட்ரிட் நகரை நெப்போலியன் கைப்பற்றியபோது நிகழ்ந்த சம்பவங்களை விவரிக்கிறது. இதில் லாத்தரிஸத்தால் ஒரு பெண் நடக்க முடியாமல் அவதிப்படுவதையும், அவளைச் சுற்றி பசியால் வாடும் மக்கள் கூட்டம் நஞ்சுள்ள பட்டாணிக்காகக் காத்திருப்பதையும் காட்டுகிறது.
இருவித்திலை தாவரத்தின் பயன்கள்
இது ஒரு இருவித்திலை தாவரம். இதன் வேரில் வாழும் பாக்டீரியாக்கள் காற்று மண்டலத்தில் உள்ள நைட்ரஜனை உறிஞ்சி அம்மோனியம் கூட்டுப்பொருட்களாக மாற்றுகிறது. இது பிறகு மண்ணிற்கு அனுப்பப்படுகிறது. இதனால் மண்வளம் மேம்படுகிறது.
இப்பயிர்களின் எண்ணற்ற வேர்கள் அடங்கிய வேர்த்தொகுப்பு மண்ணை ஆழமாக ஊடுருவிச் செல்கின்றன. அதனால் இவற்றை மேற்கத்திய நாடுகள், ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் வறண்ட நிலப்பகுதிகளில் வளர்த்தால் பூமியில் மண்ணின் விளைச்சல் திறன் அதிகமாகும்.
நம்பிக்கையூட்டும் பயிர்
வரும் நாட்களில் காலநிலை இன்னும் மோசமாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் வறட்சி, வெள்ளப்பெருக்கு, உப்பு நீரில் பயிர்கள் மூழ்குதல் போன்ற பாதிப்புகளை எதிர்கொண்டு வளரும் புதிய ரகங்களை கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கும்போது, இந்தக் கண்டுபிடிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது என்று பாதுகாப்பான புல்வகை பட்டாணி ரகங்களை உருவாக்குவதில் ஈடுபட்டுள்ள நிபுணரும் நாரிஜ் (Norwich) நீடித்த நிலையான வளர்ச்சி மையத்தின் விஞ்ஞானியுமான டாக்டர் பீட்டர் எம்ரிச் (Dr Peter Emmrich) கூறுகிறார்.
வெப்ப உயர்வால் இயற்கைப் பேரிடர்கள் நாளுக்குநாள் அதிகரித்து வரும் பூமியில் பட்டாணியின் இந்த புதிய ரகம் நாளை உலக மக்களின் பசி போக்க உதவும் பயிராகலாம் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பவளப் பாறைகளுக்கு மரங்களால் ஒரு புது வீடு
- இந்தியாவில் லித்தியம்
- உலகின் குப்பைத் தொட்டியா அட்டகாமா பாலைவனம்?
- குட்டையாகும் ஆல்ப்ஸ் மலை
- நிறம் மாறும் கடல்கள்
- ஆழ்கடலில் புதிய பவளப் பாறைகளின் கண்டுபிடிப்பு
- உலகை அச்சுறுத்தும் பூஞ்சைகள்
- அதிகரிக்கும் வானவில் நாட்கள்
- பூமியின் வட கோடியில் ஒரு புதிய தீவின் கண்டுபிடிப்பு
- சூரியனின் கதிர்களை திசை திருப்பி விட்டால் பூமியில் சூடு குறையுமா?
- புதையுண்ட பூமிக்குள் ஓர் அற்புதக் காடு
- 2050ல் உலகின் அணைக்கட்டுகள் எப்படி இருக்கும்?
- எரிமலைகள் வரமா? சாபமா?
- ஜெட் ஸ்ட்ரீம்
- அன்னை பூமியின் மடியில் அற்புத அமைப்புகள்
- கதை சொல்லும் காற்று
- ஆக்சிஜன் இல்லாமல் அழியப் போகும் பூமி?
- மூழ்கும் தீவு – மூழ்கப் போகும் உலகம்
- மண்ணிற்கடியில் புதையும் நாட்டின் தலைநகரம்
- அய்ந்தாம் விசை ஒன்றை கண்டுபிடிப்பதை நோக்கி நெருங்கி விட்டோமா?