கீற்றில் தேட...
அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
ரேங்காடன் டைப்பஸ் (Rhincodon typus) எனப்படும் திமிங்கல சுறாக்களை (Whale shark) எல்லோரும் சுலபமாக அடையாளம் காண முடியும். ஏராளமான புள்ளிகள், வரிகள் உள்ள வேறு ஒரு சுறா இனம் உலகில் இல்லை என்றே கூறலாம். இவை மீனவத் தொழிலாளர்கள் கூறும் வார்த்தைகள். 36 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு கடலில் வாழ்ண்ட மெகலோடன் (Megalodon) சுறாக்களின் இன அழிவிற்குப் பிறகு உலகில் மிகப் பெரிய மீன் என்ற பதவியை அலங்கரிப்பது சாதுவான இந்த ராட்சத உயிரினங்களே.இதைக் கூறும்போது சிலரின் மனதில் இயல்பாக அப்படியென்றால் நீலத் திமிங்கலங்கள்தானே உலகின் மிகப் பெரிய மீனினம் என்று ஒரு சந்தேகம் ஏற்படும். ஆனால் திமிங்கல சுறாக்களுக்கும் நீலத் திமிங்கலங்களுக்கும் பல வெளிப்படையான வேறுபாடுகள் உள்ளன. நீலத் திமிங்கலங்களே உலகின் மிகப் பெரிய உயிரினங்கள். என்றாலும் இவற்றை மீன் இனத்தில் உட்படுத்துவதில்லை. பொதுவாக முட்டை போட்டு வாரிசுகளை உற்பத்தி செய்யும் உயிரினங்களே மீனினத்தில் உள்ளன.
மனிதர்கள் போல நீலத் திமிங்கலங்களும் பாலூட்டி இனத்தைச் சேர்ந்தவை. இவை கால்சியத்தால் ஆக்கப்பட்ட எலும்புகள் (Calcified bones) கொண்ட, பிரசவிக்கும், பாலூட்டும், வாயு மண்டலத்தில் இருந்து காற்றை உறிஞ்சி சுவாசிக்க உதவும் நுரையீரல் (Lungs) கொண்டவை. முழு வளர்ச்சியடைந்த ஒரு நீலத் திமிங்கலத்தின் எடை ஏறக்குறைய 136 டன். இவற்றின் நீளம் 80 முதல் 90 அடி.
திமிங்கல சுறாக்கள் முட்டையிட்டு குழந்தைகளைப் பெறுகின்றன. மற்ற மீனினங்களில் உள்ளது போல நீரில் கரைந்திருக்கும் காற்றை சுவாசிக்கும் திறன் பெற்ற செதில்கள் உள்ளன. முழு வளர்ச்சியடைந்த ஒரு திமிங்கல சுறாவின் உடல் எடை சுமார் 20 டன். நீளம் 40 முதல் 45 அடி.
பலரும் பழங்கால பாட்டி கதைகள், துப்பறியும் நாவல்களில் எப்போதும் பழி வாங்கும் குணத்துடன் மனித இரத்தம் குடிக்கும் உயிரினமாக இவற்றைக் காண்பதுண்டு. இரத்தத்தின் வாசனையை உணர்ந்து, பாய்ந்து வரும், பிரம்மாண்டமான கப்பல்களையும் படகுகளையும் தகர்த்து தவிடுபொடியாக்கும் உயிரினமாகவே இவை பலராலும் புரிந்து கொள்ளப்பட்டுள்ளன.
உலக மக்கள் மனதில் சுறாக்களை ஒரு குரூர விலங்காக சித்தரித்ததில் ஹாலிவுட் திரைப்பட இயக்குனர்களான ஸ்டீவன் ஸ்பீல்பர்க் (Steven Spielberg) மற்றும் ரென்னி ஹார்லிங் (Renny Harlin) ஆகியோரின் பங்கு மிகப்பெரியது. ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் ஜாஸ் (Jaws) திரைப்படம் பீட்டர் பெஞ்ச்லியின் (Peter Benchley) 1974 நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது.
சுறாக்களை கொலையாளிகளாக சித்தரித்த ஜாஸ் படத்தின் வெளியீட்டுக்குப் பின் பல பகுதிகளில் மனிதர்களால் இவை பெருவாரியாகக் கொல்லப்பட்டன. இதை அறிந்து ஸ்பீல்பெர்க் மனம் வருந்தி செய்தி வெளியிட்டார்.
அறிவியல் புனைக்கதை என்ற பெயரில் நீருக்கடியில் ஒரு காட்சிக்கூடத்தில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட சுறாக்களை கொலையாளிகளாக 1999ல் வெளிவந்த ஆழ்கடல் நீலம் (Deep Blue Sea) என்ற படம் சித்தரித்தது. ஆனால் உண்மையில் நாம் வெள்ளித் திரையில் பார்க்கும் திகிலூட்டும் காட்சிகளுக்கு எதிரானதே இவ்விலங்குகளின் சுபாவம்.
இவை மிக சாதுவானவை. பார்வைக்கு ராட்சத தோற்றத்துடன் இருந்தாலும் இவை பெரிய மீன்களைப் பிடித்து உண்னக்கூடிய திறன் பெற்றவை இல்லை. இவை வடிகட்டி உணவை உண்ணும் (filter feeder) வகையைச் சேர்ந்த விலங்குகள். கடலில் வாழும் சிறிய மீன்கள், செம்மீன்களே இவற்றிற்குப் பிடித்த உணவு. வாயைத் திறந்து இரையை உண்டு அதில் இருந்து உணவை வடிகட்டி நீரைப் பிரித்தெடுத்து வெளியில் விடுகின்றன.
வடிகட்டி உணவு உண்ணும் முறையைப் பின்பற்றுவதால் இவற்றிற்குப் பற்கள் இல்லை. மனிதர்கள் அருகில் இருப்பதை இவை பொருட்படுத்துவதில்லை. மனிதர்களைத் தாக்கியதாக இது வரை எந்த செய்தியும் இல்லை. இவற்றை நல்ல சுபாவத்துடன் சித்தரித்துள்ள ஹாலிவுட் படங்களும் உண்டு. சாகசத்திற்காக புறப்பட்டுச் செல்லும் மனிதர்களுக்கும் இந்த விலங்குகளுக்கும் இடையில் நிகழும் கதையை எஸ்பென்சாண்ட்பெர்க்கின் திரைப்படம் அழகாக எடுத்துக் கூறுகிறது. ஜோக்கிங் ரோனிங் எடுத்த படத்தில் இந்த உயிரினத்தின் சாந்தமான குணத்தை வெளிப்படுத்தும் அழகிய காட்சிகள் உள்ளன.
நீரை வடிகட்டி உணவு உண்ணும் இவை மற்ற உயிரினங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் கடற்பாசிகள், சயனோ பாக்டீரியாக்கள், டை ஆட்டம் (Diatom) போன்ற தீங்கு செய்யும் சிறு உயிரினங்களை உட்கொள்கின்றன. இதனால் கடலில் தீங்குயிரிகளின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்படுகிறது. கடல் சூழல் மண்டலம் பாதுகாக்கப்படுகிறது. மீன் வளம் பெருகுகிறது. கடலில் இவற்றைப் பார்த்தால் வலை நிறைய மீன் கிடைக்கும் என்று வயது முதிர்ந்த மீனவர்கள் சொல்வதுண்டு.
ஏன் திமிங்கல சுறாக்களைப் பாதுகாக்க வேண்டும்?
இன அழிவு ஏற்பட்டு பூமியில் இருந்து மறைந்த பல உயிரினங்களின் கதைகளுக்குப் பின்னால் மனிதனே காரணமாக இருக்கிறான். 1972ல் இந்தியாவில் வன உயிரினப் பாதுகாப்பு சட்டம் நடைமுறைக்கு வந்தது. இந்த சட்டம் கொண்டு வரப்படவில்லையென்றால் நாம் இன்று காணும் காடும், பல தாவர, விலங்குகளும் இல்லாமல் போயிருக்கும்.
1900 முதல் 1999 வரை மைசூரைத் தலைமையகமாகக் கொண்டு செயல்பட்ட van ingen and van ingen என்ற டாக்சிடெர்மி (taxidermy) விஞ்ஞானிகளின் ஆய்வகத்திற்கு இதில் முக்கியப் பங்கு உண்டு. இந்த நிறுவனம் 1890களில் யூஜின் வானின் ஜெண்ட் (Eugene Van Ingen) என்பவரால் தோற்றுவிக்கப்பட்டது. பிறகு இது அவருடைய மகன்கள் ஜான் டெ வெட் (John de Wet), ஹென்றி போத்தா(Henry Botha) மற்றும் எட்வின் ஜௌபர்ட் (Edwin Joubert) ஆகியோரால் நடத்தப்பட்டது.
டாக்சிடெர்மி என்பது மகத்தானவற்றின் பதப்படுத்தப்பட்ட வடிவங்கள் (Stuff of legends) என்று வர்ணிக்கப்படும் மிகப் பெரிய உயிரினங்களின் உடலை பாதுகாத்து வைப்பது. இறந்த விலங்குகளின் தோலையும் உடலையும் பதனிட்டு, அவற்றை இயல்பான தோற்றத்தில் காட்சிக்கு வைக்கும் ஒரு கலை இது. தமிழில் இதை "தோல் பதனிடுதல்" அல்லது "பதனிடுதல்" என்று அழைக்கப்படுகிறது.
இந்நிறுவனம் மைசூரில் செயல்பட்ட மொத்தம் 99 ஆண்டுகளில் ஆய்வாளர்கள் 43,000 சிறுத்தைப் புலிகள், புலிகள், யானைகள், மான்கள் போன்றவற்றை பதப்படுத்தி காட்சிப்படுத்தி வைத்தனர். இந்த வழக்கம் தொடர்ந்திருந்தால் இன்று இந்தியாவில் வன உயிரினங்கள் இல்லாமல் அழிந்து போயிருக்கும்.
சுவிட்சர்லாந்து க்ளாண்ட் என்ற இடத்தைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படும் பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கமே (IUCN) ஆண்டுதோறும் ஆபத்தில் இருக்கும் உயிரினங்களின் பெயர்களை சிவப்பு பட்டியலில் (Red list) வெளியிடுகிறது. இதில் இருந்து உலகில் வாழும் அனைத்து உயிரினங்களின் சூழல் பாதுகாப்பு நிலையைத் தெரிந்து கொள்ளலாம். 2006 முதல் இந்த விலங்குகள் இந்தப் பட்டியலில் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன.
வலசை செல்வதில் ஆர்வம் காட்டும் உயிரினங்கள்
கடந்த 75 ஆண்டுகளில் இந்த உயிரினங்களின் எண்ணிக்கையில் 50 சதவிகிதத்திற்கும் மேல் குறைவு ஏற்பட்டது. மிதமிஞ்சிய வளர்ச்சிப் பணிகள், கண்டுபிடிப்புகள் நடந்த ஒரு காலகட்டம் இது. இரண்டாம் உலகப்போர், அணு ஆயுதப் பரிசோதனைகளுக்கு கடல் சூழல் மண்டலங்களே பயன்படுத்தப்பட்டன. இது கடலில் வாழும் ஒட்டுமொத்த உயிரினங்களை நேரடியாகவோ மறைமுகமாகவோ பாதித்தது.
காலநிலை மாற்றம், விவேகமற்ற மீன் பிடித்தல், பெருகி வரும் சரக்குக் கப்பல் போக்குவரத்து, அறிவியல்பூர்வமற்ற கட்டுமானப் பணிகள், ஊக்குவிக்கப்படும் சுற்றுலாத் திட்டங்கள் போன்றவை திமிங்கல சுறாக்களின் எண்ணிக்கை குறையக் காரணமானது. பொதுவாக கடலின் மேற்பரப்பில் காணப்படும் இவை மெதுவாக பயணிப்பவை. இவற்றின் பிரம்மாண்டமான உடல் அளவும் இதற்கு ஒரு காரணம். சிறிய மீன்களைக் கூட நீரில் அதிவேகத்துடன் பாய்ந்து வந்து பிடித்துண்ணும் திறன் இந்த பாவப்பட்ட உயிரினங்களுக்கு இல்லை.
இதனால் பெரிய கப்பல்கள், மீன்பிடிப் படகுகள் இந்த உயிரினங்களின் மீது சுலபமாக மோதுகின்றன, கொல்கின்றன. இவை வடிகட்டி உணவு உண்ணும் உயிரினம் என்பதால் கடல் நீரில் கலந்துள்ள பிளாஸ்டிக், எண்ணெய் போன்ற நச்சு வேதிப்பொருட்கள் இவற்றின் வயிற்றிற்குள் சென்று மரணம் சம்பவிக்கிறது. இவையே இந்திய வன உயிரினச் சட்டப் பாதுகாப்பிற்குக் கீழ் கொண்டுவரப்பட்ட முதல் மீனினம். குஜராத் கடலோரப் பகுதிகளில் இவை அதி குரூரமாக வேட்டையாடப்பட்ட ஒரு காலம் இருந்தது.
இது பற்றி உலகிற்குத் தெரிவிக்க பிரபல சூழல் செயல்பாட்டாளரும் திரைப்படத் தயாரிப்பாளரும் 300க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றவரும் சூழல் மற்றும் வன உயிரினங்கள் பற்றி ஆவணப் படங்களை எடுப்பதில் நிபுணருமான மைக் ஹெச் பாண்டெ (Mike H Pandey) அமைதியின் கடற்கரைகள் (Shores of the Sea) என்ற ஆவணப் படத்தை எடுத்தார்.
இந்த ஆவணப் படம் பன்னாட்டு அளவில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தப் படம் 2001ல் மத்திய அரசை திமிங்கல சுறாக்களை பாதுகாக்கப்பட வேண்டிய உயிரினமாக அறிவிக்கத் தூண்டியது.
இந்த உயிரினங்கள் வலசை செல்வதில் ஆர்வம் மிகுந்தவை. நாடுகளின் கடல் எல்லைகளை இவை பொருட்படுத்துவதில்லை.
திமிங்கல சுறா பாதுகாப்புத் திட்டம்
அருகாமை நாடுகளின் கடல்கள் இவற்றிற்குப் பாதுகாப்பான இடங்கள் இல்லை என்று தோன்றினால் இவை இந்திய கடற்பகுதிகளுக்குள் வலசை வருகின்றன. சுமார் 8,000 கிலோமீட்டர் நீளமுள்ள இந்தியக் கடற்கரைப் பகுதிகளில் இவற்றைக் காணலாம். குஜராத் சௌராஷ்டிரா கடலோரப்பகுதிகளில் ஆகஸ்ட் முதல் மார்ச் வரை உள்ள காலத்தில் இவை அதிகமாக காணப்படுகின்றன.
டிசம்பர் முதல் மே வரையுள்ள காலத்தில் கேரளா, லஷத் தீவு பகுதிகளில் இவை அதிகம் காணப்படுகின்றன. இவற்றின் நடமாட்டத்தைக் கண்காணிக்க குஜராத் வன உயிரினங்கள் அறக்கட்டளை (Wildlife Trust of India WTI) நடத்திய செயற்கைக்கோள் கண்காணிப்பில் இருந்து இவை இந்தியாவின் மேற்குக் கடலோரப் பகுதிகளில் இருந்து பயணம் தொடங்கி ஆப்பிரிக்கக் கிழக்குப் பகுதி வரை வலசை சென்றது கண்டறியப்பட்டது.
நாட்டில் திமிங்கல சுறாக்களைப் பாதுகாக்க இந்த அறக்கட்டளை பெரும் பங்கு ஆற்றி வருகிறது. பாதுகாக்கப்பட வேண்டிய உயிரினமாக அறிவிக்கப்பட்டது என்றாலும், ஒரு கடல் வாழ் உயிரினத்தைப் பாதுகாப்பது மிகக் கடினம். மீன் பிடி தொழிலாளர் சமூகம் மட்டுமே இவற்றின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும்.
2004ல் இந்த அறக்கட்டளையும் குஜராத் வனத் துறையும் சேர்ந்து குஜராத் வெராவல் (veraval) கடற்பகுதியில் திமிங்கல சுறா பாதுகாப்புத் திட்டத்தை தொடங்கியது. விழிப்புணர்வு நடவடிக்கைகள் நடந்தன. இதன் பலனாக கார்வா (Kharva) மீன் பிடி சமூகம் உட்பட பல மீனவ சமூகங்களும் இந்த விலங்குகளைப் பாதுகாக்க உறுதி மொழி எடுத்து செயல்படுகின்றனர். இருபது ஆண்டுகளில் மீனவர்கள் வலையில் சிக்கிய 958 திமிங்கல சுறாக்களைப் பாதுகாத்துள்ளனர். இதே போன்ற திட்டம் கேரளாவில் 2017ல் தொடங்கியது.
இத்திட்டத்தின் கீழ் இது வரை கேரளாவில் எண்ணற்ற திமிங்கல சுறாக்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. குஜராத்தில் வனத் துறையின் மூலம் இந்த உயிரினங்களை மீட்கும்போது மீனவர்களின் வலைக்கு ஏற்படும் சேதங்களுக்கு நஷ்ட ஈடாக ரூ 25,000 வழங்கப்படுகிறது. கேரளாவில் இந்திய வன உயிரின அறக்கட்டளை இதற்காக ஆண்டுதோறும் ஒரு குறிப்பிட்ட நிதியை ஒதுக்கி மீனவர்களுக்கு வழங்கி வருகிறது. இவை வில்லன்கள் இல்லை என்பதை உணர்ந்து மகத்தான திமிங்கல சுறாக்களை அழியாமல் பாதுகாப்போம்.
மேற்கோள்: https://www.mathrubhumi.com/environment/features/international-whale-shark-day-feature-1.9857274
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
இது ஒரு துப்பறியும் கதை போல. இழக்கப்பட்ட 126 பறவை இனங்களை கண்டுபிடிக்க உதவ வேண்டும் என்று பறவையாளர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டனர். இப்பறவைகள் குறைந்த பட்சம் ஒரு பத்தாண்டு காலம் காணப்படாத இனங்கள். இவற்றில் ஒரு சில இனங்கள் நூறு ஆண்டுகளுக்கும் அதிகமாக காணப்படவில்லை.
இவை உயிருடன் உள்ளனவா என்பது உறுதியாகத் தெரியாத நிலையிலேயே இந்த முயற்சி. இன்னும் அழியவில்லை என்ற உறுதியுடன் இந்த பறவையினங்களின் பட்டியலை ஆய்வாளர்கள் ஓர் ஆய்வுக் கட்டுரையில் அண்மையில் வெளியிட்டுள்ளனர். மக்கள், பறவையியலாளர்களின் உதவியுடன் புதிய தேடல் தொடங்கப்பட்டுள்ளது.
தொலைந்து போன பறவையினங்களைத் தேடி
Coppery Thorntail மற்றும் நியூ கலிடோர்னியாவைச் சேர்ந்த லாரிகீட் (lorikeet) போன்றவை அறிவியலால் இன்னும் கண்டுபிடிக்க முடியாமல் இருக்கும் தொலைந்து போனவற்றில் அடங்கும். இது வரை தொகுக்கப்பட்டதில் இதுவே மிக விரிவான பட்டியல் என்று கருதப்படுகிறது. ஆர்வமுள்ள பறவையியலாளர்கள் மற்றும் அமெச்சூர் ஆய்வாளர்கள் பூமியின் தொலைதூரப் பகுதிகளில் வாழ்வதாக நம்பப்படும் இவை பற்றிய விவரங்களை ஆவணப்படுத்தப்பட்ட மில்லியன் கணக்கான பதிவுகளில் இருந்து தொகுத்தனர்.
கடந்த பத்தாண்டுகளாக காணப்படாத பறவையினங்கள் பற்றிய பதிவுகள் புதிய தரவுகளாக ஆராயப்படுகின்றன. இவை பன்னாட்டு இயற்கை வளப் பாதுகாப்பு சங்கத்தின் (IUCN) அழிந்த மற்றும் வனப்பகுதிகளில் அழிந்த உயிரினங்களாக கணிக்கப்பட்டவற்றின் சிவப்பு பட்டியலில் இடம் பெறாதவை.
“காணாமல் போகக் காரணம் என்ன என்பதை அறிந்து மீண்டும் இவற்றைத் தேடிக் கண்டுபிடிப்பது ஒரு துப்பறியும் கதையைப் போன்றது” என்று அமெரிக்க பறவைப் பாதுகாப்பு (American Bird Conservancy) சங்கத்தின் இழந்த பறவைகளைத் தேடுவதற்காக உருவாக்கப்பட்ட அமைப்பின் (Search for Lost Birds) இயக்குனர் ஜான் சி மிட்டமயர் (John C Mittermeier) கூறுகிறார்.
இந்த அமைப்பு பன்னாட்டு பறவை சங்கம் (BirdLife International), ரிவைல்டு (Re:wild) ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் செயல்படுகிறது.
இந்த பட்டியல் வெளியிடப்படுவதால் இழந்த இந்த உயிரினங்களை மீண்டும் பார்க்க நேரும்போது மக்கள் அது குறித்த தகவல்களைத் தர முடியும். இந்தப் பட்டியலில் இருக்கும் சில உயிரினங்களைக் கண்டுபிடிப்பது சவால்கள் நிறைந்தது. கண்டறியப்பட முடியாதவையாகவும் இவை இருக்கலாம். என்றாலும் சரியான இடத்தில் தேடினால் பல பறவையினங்களை கண்டுபிடிக்க முடியும் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
இவற்றில் பெரும்பாலானவை வெப்ப மண்டலப் பகுதிகளில் குறிப்பாக சிறிய தீவுகள் மற்றும் மலைப்பகுதிகளில் வாழ்கின்றன. ஓசியானா பகுதியில் 56, ஆப்பிரிக்காவில் 31 மற்றும் ஆசியாவில் இருந்து 27 பறவையினங்கள் தேடலுக்கான இந்த பட்டியலில் உள்ளன. வெள்ளை வாலுள்ள டிட்டைரா (white-tailed tityra) என்ற பறவையினம் 195 ஆண்டுகளாகக் காணப்படவில்லை. இது மிக நீண்ட காலமாக தேடப்பட்டு வரும் பறவையினம்.
எங்கோ வாழும் பறவைகள்
1829ல் இதன் ஒரே ஒரு மாதிரி பிரேசில் போர்ட்டோ வெல்ஹோ (Porto Velho) பகுதியில் இருந்து மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது. என்றாலும் 2006ல் இப்பறவை ஒரே ஒரு முறை நேரில் பார்க்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. பட்டியலில் இருக்கும் மற்ற பறவைகள் 150 ஆண்டுகளுக்கும் மேலாக காணப்படாத இனங்கள். இதில் Coppery Thorntail பறவை புதிரான ஹம்மிங் பறவை இனத்தைச் சேர்ந்தது. இதன் இரண்டு மாதிரிகள் 1852ம் ஆண்டுக்கு முன் கிடைத்தன.
இப்போது வாழும் இடம் உறுதியாகத் தெரியவில்லை என்றாலும் இந்த பறவையினம் பொலிவியாவில் எங்கோ ஒரு இடத்தில் வாழ்கிறது என்று நம்பப்படுகிறது. நியூ கலிடோர்னியா லாரிகீட் பறவையினம் கிளிகள் குடும்பத்தைச் சேர்ந்தவை. 1859ல் நன்கு பாதுகாக்கப்பட்ட இப்பறவையினத்தின் இரண்டு மாதிரிகள் கிடைத்தன. 65% பறவையினங்கள் ஆய்வாளர்களால் ஏற்கனவே அழியும் ஆபத்தில் உள்ளவையாக இருக்கக்கூடும் என்று பன்னாட்டு இயற்கை வளப் பாதுகாப்பு சங்கம் கருதுகிறது.
பறவையியலாளர்கள், மற்றும் குடிமக்கள் அறிவியலுக்கான (citizen science) இணைய தளத்தில் இருந்து பெறப்பட்ட 42 மில்லியன் புகைப்படங்கள், காணொளிகள் மற்றும் தரவுகளில் இருந்து கிடைத்த ஒலிப்பதிவு விவரங்களை ஆராய்ந்தனர். eBird இணையதளத்தில் கடந்த பத்தாண்டில் ஆவணப்படுத்தப்படாத பறவையினங்கள், அருங்காட்சியக சேகரங்கள், ஆய்வுக்கட்டுரைகளின் வாசிப்பில் இருந்து கிடைத்த தகவல்கள் மற்றும் உள்ளூர் நிபுணர்களின் ஆலோசனைகளைப் பயன்படுத்தி ஆய்வுகள் நடந்தன. இதில் சில இனங்கள் தொலைதூரப் பகுதிகளில் வாழ்பவை.
இதனால் இவை பற்றிய விவரங்கள் உள்ளூர் சமூகத்தினருக்கு நன்கு தெரிந்திருக்க வாய்ப்பு உண்டு என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். எடுத்துக்காட்டு பெரிய கறுப்பு நேப்டு பெதஸ்ன்ட் புறா (black-naped pheasant-pigeon). நூறாண்டுகளுக்கும் மேலாக காணப்படாத இந்த இனம் பாப்புவா நியூ கினியாவில் ஒரே ஒரு தீவில் மட்டுமே வாழ்வதாகக் கருதப்படுகிறது.
2022ல் இப்பறவையினத்தைப் பார்த்ததாக, இதன் அழைப்பைக் கேட்டதாக உள்ளூர் வேட்டைக்காரர்கள் கூறியபோது இது ஆய்வாளர்களால் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது. உள்ளூரில் இது ஆர்வோ (“Auwo”) என்று அழைக்கப்படுகிறது. 2021 முதல் நடந்த ஆரம்பப் பகுப்பாய்வுகளை அடிப்படையாகக் கொண்டு 144 பறவையினங்கள் இழக்கப்பட்டதாக பட்டியலிடப்பட்டுள்ளது.
இழந்த மனித குலத்தின் பெரும் செல்வம்
14 இனங்கள் சூழல் பாதுகாப்பாளர்கள் மற்றும் மக்களால் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இது வரை 126 இனங்கள் பற்றி உயிருடன் வாழ்வது மீண்டும் அறியப்பட்டுள்ளன. வேறு பல இனங்கள் சிறைபட்ட நிலையில் உள்ளன. சில இனங்கள் வகைப்பாட்டியல் ரீதியில் ஆராயப்படுகின்றன.
மக்கள் மற்றும் பறவையியலாளர்கள் இழந்த பறவைகளைக் கண்டுபிடிக்கும்போது அவற்றின் தேடலுக்கான அமைப்பில் புகைப்படங்கள், காணொளிகள் மற்றும் ஒலிப்பதிவுகளை அனுப்ப கோரப்பட்டுள்ளது.
“இந்த பறவையினங்கள் பூமியில் இன்னமும் உயிருடன் வாழ்கின்றன என்றே நம்பப்படுகிறது. அனைத்து வகையான தகவல்களைப் பயன்படுத்தி இதை நாம் நிரூபிக்க வேண்டும். பல அரிய பறவையினங்கள் அசாதாரணமான இடங்களில் வாழ்கின்றன. இவை பற்றி நாம் முன்பே பெற்ற அறிவைக் கொண்டு இவற்றை மீண்டும் கண்டறிந்து பாதுகாப்போம்” என்று சர்வதேச பறவையியல் அமைப்பின் ஆய்வாளர் ராஜர் சாஃப்ஃபர்டு (Roger Safford) கூறுகிறார்.
காணாமல் போன இந்த பறவைகள் கண்டுபிடிக்கப்பட்டால் அது மனித குலம் இழந்த பெரும் செல்வம் மீண்டும் கிடைத்தது போல ஆகும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
மேற்கோள்: https://www.theguardian.com/environment/article/2024/jun/17/birders-126-lost-bird-species-aoe?
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
மேகப் பால் தொழில்நுட்பம் (Cloud milking) என்றழைக்கப்படும் சுழிநிலை ஆற்றல் தொழில்நுட்பம் இளம் மரங்களை உயிர் வாழ வைக்கிறது. ஸ்பெயின் கனேரி (Canary) தீவில் கரஜோனே (Garajonay) தேசியப் பூங்காவில் உள்ள காடுகளில் தொடங்கப்பட்ட இத்திட்டம் இலைகள் மூடுபனியில் இருந்து நீர்த்துளிகளை பிடித்தெடுக்கும் அதே முறையில் செயல்படுகிறது.
காட்டுத் தீ, வறட்சியால் அழிந்த காடுகளை இத்திட்டம் புரட்சிகரமான முறையில் மீட்க உதவுகிறது.நீர் வழங்கும் மூடுபனி
கடல் போல உள்ள மேகங்களில் (Sea of clouds) இருந்து ஈரப்பதத்தை உறிஞ்சியெடுத்து காட்டை மீட்பதே இதன் நோக்கம். இம்முறை வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இத்திட்டம் பல நாடுகளில் குடி நீர், வேளாண்மைக்குத் தேவையான நீரைப் பெற விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. “கனேரி தீவுகள் சமீப காலத்தில் பெருமளவிலான பாலைவனப் பரவலால் வன அழிவை சந்தித்தது. வேளாண்மைக்காக நடந்த வன அழிப்பு, வழக்கமாக ஈரத் தன்மையுடன் இருக்கும் காடுகளில் காலநிலை மாற்றத்தால் 2007, 2009ல் பெரிய தீ விபத்துகள் ஏற்பட்டது போன்றவற்றால் இயற்கை வளங்கள் அழிந்தன. இதை சரி செய்ய தொலைதூர, மலைப்பகுதிகளுக்கு புதிய உட்கட்டமைப்பு, புதைபடிவ எரிபொருட்கள் இல்லாமல் ஆழ்குழாய்க் கிணறுகள் மூலம் நிலத்தடி நீர் வழங்கப்பட்டது” ” என்று கனேரி தீவில் உள்ள பொதுமக்கள் நிதியுதவியுடன் செயல்படும் அமைப்பின் தொழில்நுட்ப இயக்குனர் கஸ்ட்டாவோ வியரா (Gustavo Viera) கூறுகிறார்.
ஐரோப்பிய யூனியன் ஆதரிக்கும் இத்திட்டத்திற்கு மூடுபனி என்று ஸ்பானிஷ் மொழியில் பொருட்படும் நீப்லா (Niebla) என்பதை குறிக்கும் வகையில் லைஃப் நீப்லா (Life Niebla) என்று பெயரிடப்பட்டுள்ளது.
புன்னையின் உள்ளூர் இன இலைகள் இயற்கையில் பயன்படுத்தும் அதே முறையில் காற்றடிக்கும் பாதையில் பிளாஸ்டிக் வலைகள் விரிக்கப்பட்டு மூடுபனியில் இருந்து நீர்த்துளிகள் சேகரிக்கப்படுகின்றன.
வலையின் வழியாக சென்று காற்று மூடுபனியைக் கலைக்கும்போது நீர்த்துளிகள் கீழிருக்கும் கலன்களில் விழுகின்றன, சேகரிக்கப்படுகின்றன. இது புதிய இளம் கன்றுகளில் இலைகள் போதுமான அளவுக்கு வளர்ந்து சுயமாக நீரை சேகரிக்கும்வரை விநியோகிக்கப்படுகிறது. இதற்கு காற்று முக்கியமானது. ஆனால் இது போன்ற சிறிய அமைப்புகள் தவிர மற்ற பெரிய அமைப்புகளை இது அழிக்கிறது. இதற்கு தீர்வாக பைன் மர ஊசிகள் நீரை சேகரிக்கும் முறை பயன்படுத்தப்பட்டது.
காற்றை தன் வழியே செல்ல அனுமதிப்பதுடன் இந்த ஊசிகள் நீரையும் சேகரிக்கின்றன. இம்முறை மற்ற இடங்களில் எளிதாகப் பின்பற்றக் கூடியது. தேவைப்படும் இடங்களுக்கு எடுத்துச் செல்லக் கூடியது. புதிய மாதிரியில் மெல்லிய உலோக இலைகளில் நீர் சுருங்குகிறது. பின் இது விரிவடைந்து நீராக மாறி சேகரமாகிறது.
ஆற்றல் விநியோகம், கார்பன் டை ஆக்சைடு உமிழ்வு, இயந்திரங்கள் இல்லாமல் இம்முறையில் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு நீர் தானியங்கி முறையில் விநியோகிக்கப்படுகிறது. இதில் எந்த மின்னணு தொழில்நுட்பமும் பயன்படுத்தப்படுவதில்லை. நீர் நிலைகள், நதிகள் சுரண்டப்படாததால் இம்முறையில் ஏற்படும் கார்பன் கால்தடம் (Carbonfootprint) மிகக் குறைவு. சேகரிக்கும் கலன்களை உரிய இடங்களில் அமைப்பது மட்டுமே இதற்காகும் செலவு.
கார்பன் உமிழ்வற்ற காடு வளர்ப்பு
தெற்கு பார்சலோனாவில் காரஃப் (Garraf) என்ற கரடுமுரடான இடத்தில் உள்ள காடுகளை மீட்க இதே தொழில்நுட்பம் சிறிய மாற்றங்களுடன் நடைமுறைப் படுத்தப்படுகிறது.
“இங்கு தாவர உண்ணிகள் இளம் செடிகளை உண்ணும் முறையில் தனித்தனியான நீர் சேகரிப்பான்கள் பயன்படுகின்றன. கோடை காலத்தில் காலைவேளைகளில் மழை, கடும் மூடுபனியின்போது உருவாகும் நீரை தாவரங்களுக்கு நிழல் தரும் இந்த சேகரிப்பான்கள் ஒன்றுதிரட்டி சேகரித்து வழங்குகின்றன. சில மூடுபனிகள் போதுமான ஈரத்தன்மையுடன் இருப்பதில்லை. இதனால் எல்லா வகை மூடுபனிகளும் இம்முறையில் பயன்படுவதில்லை. பல மத்திய தரைக் கடற்பகுதிகள், வடக்கு போர்ச்சுகல்லில் காணப்படும் ஓரோகிராபிக் (Orographic ) என்ற மலைப் பனியே இதற்கு சிறந்தது” என்று பார்சலோனா தன்னாட்சி பல்கலைக்கழக சூழலியல் மற்றும் வன ஆய்வு அமைப்பின் (Centre for Ecological Research and Forestry Applications (CREAF) திட்ட தலைமை விஞ்ஞானி வைசன்ஸ் கரபாஸா (Vicenç Carabassa) கூறுகிறார்.
கனேரி தீவே இத்தகைய தொழில்நுட்பங்களை உருவாக்க மிகச் சிறந்த ஆய்வுக்கூடம். சிலி மற்றும் மொராக்கோவில் சூழ்நிலை சரியாக இருக்கும் இடங்களில் மூடுபனியில் இருந்து பாரம்பரிய முறைகளில் நீர் சேகரிக்கப்படுகிறது. இம்முறை சிலி கக்க்விம்போ (Coquimbo) மாகாணத்தின் (சங்கங்கோ (Chungungo) கடலோர கிராமத்தில் செயல்படுகிறது. கேப் வெர்ட் (Cape Verde) தீவுக்கூட்டத்தில் உள்ளூர் மர சேகரிப்பான்களில் இருந்து நாள்தோறும் சேகரிக்கப்படும் ஆயிரம் லிட்டர் நீர் பாசனம், கால்நடைகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது.
இது பற்றிய விவரங்கள் அனைத்தும் பொதுமக்களுக்கு திட்ட இணைய தளத்தில் வெளியிடப்படுகிறது. இதன் பலன்கள் தெளிவாக உள்ளன. கிராண்ட் கனேரியாவில் (Gran Canaria) உள்ள பாரங்கோ டெல் (Barranco del) மற்றும் யேன் ரவீன் (én ravine)ஆகிய இடங்களில் 15,000 புன்னையின் பல்வேறு இன மரங்கள் நட்டு வளர்க்கப்பட்டு 35.8 ஹெக்டேர்/96 ஏக்கர் பரப்பில் காடுகள் மறு உருவாக்கம் செய்யப்பட்டன. பாரம்பரிய காடு வளர்ப்பை விட இம்முறையில் 82% மரங்கள் கூடுதலாக உயிர் பிழைத்தன.
இதனால் ஆண்டுக்கு 175 டன்கள் கார்பன் பிடித்தெடுக்கப்பட்டுள்ளது. இம்முறை மலிவானது. பாரம்பரிய காடு வளர்ப்பை விட குறைவான அளவு நீரை பயன்படுத்துகிறது. “வறட்சியான காலத்திலேயே நாம் வாழ்கிறோம். அதனால் ஒவ்வொரு துளி நீரும் மதிப்புமிக்கது. அதனால் குறைந்த அளவு நீரைப் பயன்படுத்தி வாழ பழகிக் கொள்ள வேண்டும். உவர் நீரில் இருந்து நன்னீர் பெறும் முறைக்கு இது ஒரு மாற்று இல்லை. ஆனால் நீர் விநியோகம் செய்ய கடினமாக உள்ள, செலவு அதிகமாக ஆகும் இடங்களில் இம்முறை மிகப் பயனுடையது” என்று கரபாஸா கூறுகிறார்.
பாசனம், கால்நடைத் தேவை, குடி நீர் விநியோகத்திற்கும் மனிதனுக்கு இயற்கை கற்றுத் தரும் இந்த முறை பூமியை வாழ வைக்க பெரிதும் உதவும் என்று ஆய்வாளர்கள் உறுதியாக நம்புகின்றனர்.
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
மனிதன் இரும்பால் செய்யப்பட்ட ஆயுதத்தைப் பயன்படுத்தி இறைச்சியை வெட்டுவது போல கமோடோ டிராகன் (Komodo Dragon) என்ற ராட்சச பல்லியினத்தின் பற்கள் செயல்படுகின்றன. இவை மற்ற ஊர்வனவற்றை விட சுலபமாக தன் இரையைப் பிடித்து உண்கின்றன. இரையை இரண்டு கைகளாலும் இறுக்கமாகப் பிடித்து கடித்து இழுத்து பெரிய துண்டுகளாக்கி உணவு உண்ண இவற்றின் வாயில் இருக்கும் சுமார் அறுபது பற்கள் உதவுகின்றன. நீண்டு கூர்மையான இந்தப் பற்களின் கூர்மைக்கு அதன் முனையில் காணப்படும் இரும்புப் பூச்சே காரணம் என்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.உலகில் வாழும் மிகப் பெரிய பல்லியினம் இவையே. இவற்றின் நீளம் மூன்று மீட்டர். சராசரி எடை 80 கிலோகிராம். பாதுகாக்கப்பட்ட இந்த உயிரினங்கள் மிக மெதுவாக பரிணாம மாற்றம் அடைகின்றன.
மிகப் பெரிய உடலளவு, நச்சுத் தன்மையுள்ள கடி மற்றும் அனைவரையும் கவரும் வகையில் அமைந்துள்ள இந்த உயிரினத்தின் பெயர் கேட்பவர் மனதில் ஒரு ராட்சசனின் கம்பீரத்தை ஏற்படுத்துகிறது. இந்தக் கண்டுபிடிப்பால் கமோடோ டிராகனின் புகழ் மேலும் உயர்ந்துள்ளது. கூர் முனையுடைய பற்களின் கூர்மையை அதிகரிக்க இந்த இரும்புப் பூச்சு அவற்றிற்குப் பெரிதும் உதவுகிறது. இது போன்ற இரும்புப் பூச்சு ஒரு விலங்கின் பற்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறை.
ஏற்கனவே பல வினோதமான பண்புகளுடன் வாழும் இந்த உயிரினத்தைப் பற்றி ஆய்வுகள் பல நடந்துள்ளன என்றாலும் பற்களில் காணப்படும் இரும்புப் பூச்சு இந்த விலங்கைப் பற்றி அறியப்பட்டதில் பரவசமூட்டும் ஒன்று. கமோடோக்களின் இரை பிடிக்கும் முறை பற்றிய ஆய்வில் இது ஒரு முக்கிய திருப்புமுனை என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
ஆரஞ்சு வண்ண நிறமிகளால் இவற்றின் பற்களின் கூர் முனை காணப்படுகிறது. பல்லின் முனைப்பகுதிக்கு வரும்போது எனாமலுடன் இரும்பின் ஒரு அடுக்கும் சேர்ந்து வருகிறது. ஆழமாக ஆராய்ந்தபோது இரும்பு அடர்த்தியாகக் காணப்படுகிறது. பற்களுக்கு கடினத் தன்மையைக் கொடுக்கிறது. இரையைக் கிழித்து வெட்டி துண்டுகளாக்கி உண்ண இது உதவுகிறது. இருபது கிலோமீட்டர் வேகத்தில் ஓடக்கூடிய ஆற்றல் பெற்ற இவை நான்கு மீட்டர் உயரம் வரை தாவக்கூடியவை.
இந்த விலங்குகள் இந்தோனேஷியாவின் பல தீவுகளில் வாழ்கின்றன. எலிகள், சிறிய பறவைகள், முயல்கள், மான்கள், ஆடுகள், நீர் எருமைகள் மற்றும் இறந்த கமோடோ டிராகன்களை உணவாக உண்கின்றன. மனிதர்களும் இவற்றால் கொல்லப்பட்டுள்ளனர். 2007ல் கமோடோ தீவில் ஒரு குழந்தை ஒரு டிராகனால் கொல்லப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பழங்களை பொறுக்குபவர் ஒருவர் மரத்தில் இருந்து தவறி கீழே விழுந்தபோது இரண்டு கமோடாக்களால் கொல்லப்பட்டார்.
டைனசோரின் பல் அமைப்பு
2010ல் மற்றொரு இந்தோனேஷிய தொழிலாளி ஒரு கமோடாவால் தாக்கப்பட்டு அதிர்ஷ்டவசமாக அதன் தாடையின் அசுரப் பிடியில் இருந்து தன்னை விடுவித்து உயிர் தப்பினார். இந்தப் பற்கள் மாமிசம் உண்ணும் டைனசோர்களின் பல் அமைப்பை ஒத்துள்ளது. இவற்றின் இணை சேரும் செயல்கள் சுற்றுலா வருவோரால் பாதிக்கப்படுகிறது. வருவோர் சத்தமில்லாமல் உணவுகளைக் கொடுப்பது இவற்றின் ஆரோக்கியத்தை கேள்விக்குறியாக்குகிறது.
வாழிட இழப்பு மற்றும் சட்டவிரோத வேட்டையாடலால் இவை அழியும் ஆபத்தில் உள்ளன. இப்போது இந்தோனேஷிய வனங்களில் 3,500 கமோடோக்கள் மட்டுமே வாழ்கின்றன.
வேதியியல், இயந்திரவியல் பகுப்பாய்வுகளுடன் பிம்பமாக்கும் நவீன முறைகளைப் பயன்படுத்தி டிராகன்களின் மாதிரிகள், இப்போது வாழும் மற்றும் அழிந்த மானிட்டர் பல்லிகள், முதலைகள், முதலை இனத்தின் வேறு குடும்பத்தைச் சேர்ந்த அலிகேட்டர்கள் (alligators), டைனசோர்கள் போன்ற பல்லி இன ஊர்வன விலங்குகளின் பற்கள் ஆராயப்பட்டது. பிற ஊர்வனவற்றில் இதே போன்ற பல் அமைப்பு காணப்படுகிறது என்றாலும் டிராகன் பற்களில் இரும்புப் பூச்சு வெளிப்படையாகத் தெரியும் வகையில் காணப்படுகிறது.
"ஊர்வனவற்றின் பல் அமைப்பில் இது பரவலாக உள்ள ஒரு சிறப்புப் பண்பு என்றாலும், இந்த உயிரினத்தின் பல் அமைப்பு தனித்துவம் வாய்ந்தது” என்று ஆய்வுக்கட்டுரையின் முன்னணி ஆசிரியரும் லண்டன் கிங்ஸ் கல்லூரி பல் உயிரி அறிவியல் துறை பேராசிரியருமான டாக்டர் அரொன் லெஃப்லாங்க் (Dr Aaron LeBlanc) கூறுகிறார். இந்த விலங்கின் வளைந்த, கூர்மையான பல் அமைப்பு டிரனசோரஸ் லெக்ஸ் (Tyrannosaurus rex) என்ற மாமிச உண்ணி டைனசோரின் பல் அமைப்புடன் ஒத்துள்ளது.
இந்த ஆய்வுக்கட்டுரை Nature Ecology & Evolution என்ற இதழில் வெளிவந்துள்ளது. அழிவதற்கு முன்பு வரை டைனசோர்கள் பூமியில் வாழ்ந்த காலத்தில் இரும்புப் பூச்சுடன் கூடிய பற்களுடன் வாழ்ந்தன என்பது ஆய்வில் கண்டறியப்பட்டது. பல இனங்களைச் சேர்ந்த ஊர்வனவற்றில் இரும்புப் பூச்சுள்ள பல் அமைப்பு காணப்படுகிறது.
என்றாலும் இன்று கிடைத்துள்ள டைனசோர் மாதிரிகளில் இரும்புப் பூச்சு பல் அமைப்பு கண்டுபிடிக்கப்படவில்லை. விலங்குண்ணி டைனசோர்களில் பற்களில் இரும்புப் பூச்சு இருந்திருக்கலாம் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர். என்றாலும் இந்தப் பூச்சு கமோடோக்களின் நெருங்கிய உறவினர்களான ஊர்வனவற்றின் புதைபடிவ மாதிரிகளில் காணப்படவில்லை என்பதால் இது காலப்போக்கில் மறைந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
“மனிதர்களின் பல் ஆரோக்கியத்தில் புதிய தொழில்நுட்பங்களைக் கண்டறிய, மனிதப் பற்களில் எனாமலை மறு உருவாக்கம் செய்ய இது உதவும்” என்று லண்டன் கிங்ஸ் கல்லூரி வாய் ஆரோக்கியப் பிரிவு பேராசிரியரும் ஆய்வுக்கட்டுரையின் முன்னணி ஆசிரியர்களில் ஒருவருமான Owen Addison கூறுகிறார்.
உயிரினங்களின் உலகில் பயங்கர விலங்கு என்று பெயரெடுத்திருந்தாலும் இவற்றின் விசித்திர பல் அமைப்பு மனிதனின் பல் ஆரோக்கியத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் எனாமலில் புதிய வகையை உருவாக்க உதவும் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
மேற்கோள்கள்
https://www.theguardian.com/environment/article/2024/jul/24/komodo-dragons-iron-coated-teeth?
&
&
https://www.nature.com/articles/s41559-024-02477-7
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விலங்குகளின் வாழ்க்கையைப் பாதிக்கும் மருந்துப் பொருட்கள் மாசு
- அத்தி மரத்தின் அதிசய மகரந்தச் சேர்க்கை
- உயிர்ப் பன்மயத் தன்மையை அழிக்கும் ஆக்கிரமிப்பு உயிரினங்கள்
- மரம் நட்டால் உயிர்ப் பன்மயத் தன்மை அழிந்து போகுமா?
- தாவர, விலங்குகள் போல பூஞ்சைகளுக்கும் உரிய மரியாதை
- ஒளிரும் பாலூட்டிகள்
- ஆஹா ஹா
- அழியும் உரங்கோட்டான்களை யார் காப்பாற்றுவார்?
- கழிவு நீரை சுத்தப்படுத்தும் அதிசய உயிரினம்
- அழிந்த பறவைகள்
- பூச்சிகளின் அழிவால் மாறும் பூக்களின் மகரந்த சேர்க்கை
- காலத்திற்கேற்ப கோலம் மாறும் பறவைக் கூடுகள்
- பாதாளத் துயரம்
- மயான அமைதியில் இயற்கை
- இரயில்கள் ஏன் இவர்களின் வீடுகளை ஆக்ரமிக்கின்றன?
- மண் வண்டுகள்
- பாடத் துடிக்கும் நகரத்துப் பறவைகள்
- ஈ… பறக்க முடியாத ஈ
- சுரங்கப் பாதைகளில் தஞ்சமடைந்த கொசுக்கள்
- பாம்புகள்: பாயும் பகுத்தறிவும் பதுங்கும் மூடநம்பிக்கைகளும்