கீற்றில் தேட...
அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
தாவர விலங்குகள் (Florra & Foana) போல பூஞ்சைகளுளையும் தனிப்பிரிவாக அங்கீகரிக்க வேண்டும். இந்த இலட்சியத்திற்காக இங்கிலாந்து மற்றும் சிலி நாடுகள் தீவிரமாக முயன்று வருகின்றன. நாய்க்குடை, பூஞ்சை உருவாகும் நிலைக்கு முன்புள்ள மோல்டு (Mould), மில்ட்யூ (Mildew) , ஈஸ்ட் மற்றும் லைக்கன்கள் இந்த திட்டத்தினால் பூஞ்சைகள் என்னும் தனிப்பிரிவில் முக்கிய இடம் பெறும் என்று நம்பப்படுகிறது.சூழல் மண்டலத்தின் பொறியியலாளர்கள்
சட்டப்படி இவை கொள்கைகள், பன்னாட்டு உடன்படிக்கைகளில் ஒரு தனிப்பிரிவாக அங்கீகரிக்கப்படும்போது அது இவற்றின் பாதுகாப்பு, இன்று நிலவும் மும்மடங்கு மோசமான காலநிலையை சமாளிக்க உதவும். இதனால் சூழல் நலம் பெறும். மக்களுக்கு எண்ணற்ற நன்மைகள் ஏற்படும். மண் தூய்மை, புதைபடிம எரிபொருட்களின் கார்பன் உமிழ்வில் மூன்றில் ஒரு பகுதியை சேமிக்கும் திறன், பிளாஸ்டிக், வேதிப்பொருட்களை பகுப்படையச் செய்வதில் காளான்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
“பெரும்பாலான தாவரங்கள் பூஞ்சைகள் இல்லாமல் நீருக்கு வெளியில் உயிர் வாழ முடியாது. பூமியில் நாம் இப்போது பார்க்கும் உயிர்கள் எப்போதோ அழிந்து போயிருக்கும் என்று பூஞ்சையியலாளர்கள் கூறுகின்றனர். தாவர விலங்குகள் போல பூஞ்சைகளுக்கும் உரிய அங்கீகாரம் பெற 3எஃப் (3F) என்ற முன் முயற்சி தொடங்கப்பட்டுள்ளது. இது தாவர, விலங்குகளின் செழுமை போல பூஞ்சைகளின் செழுமையை அங்கீகரிப்பதை நோக்கமாகக் கொண்டது.
தாவர விலங்கு செழுமை என்பது ஒரு குறிப்பிட்ட பிரதேசம் அல்லது ஒரு குறிப்பிட்ட காலத்தில் வாழும் ஒட்டுமொத்த தாவர விலங்குகளைக் குறிக்கிறது. அறிவியலில் வழங்கப்பட்டு வரும் பல பெயர்கள் போல ஃபங்கி (Fungi) என்ற சொல் இலத்தீன் மொழிச்சொல் இல்லை” என்று சிலியன் பிரிட்டிஷ் பூஞ்சைகள் அறக்கட்டளையின் தலைமைச் செயல் அலுவலர் ஜுயூலியானா ஃபெர்சை (Giuliana Furci) கூறுகிறார்.
பூஞ்சைகள் இல்லாமல் இயற்கையை பார்ப்பது இரத்தப் பரிசோதனை செய்யாமல் ஒரு புதிய நோயைக் கண்டறிய முயல்வது போல. வாழ்வின் வான மண்டலத்திற்கு ஒப்பானவை இவை. சூழல் மண்டலங்களை உருவாக்குகின்றன.
உணவு மற்றும் மருந்துகளின் உற்பத்தியிலும் அவற்றை வீணாகாமல் பாதுகாப்பதிலும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மனிதன் பூஞ்சைகளையே பயன்படுத்தி வருகிறான்.
ரொட்டி, சோயா பொருட்கள், பாலாடைக்கட்டி, மதுபானங்கள், போன்ற பல பொருட்களின் தயாரிப்பில் இவற்றின் பங்கு தவிர்க்க முடியாதது. “பூஞ்சைகள் நம் வாழ்வின் உருவாக்கத்தில், மன மாற்றத்தில், வருங்கால வடிவமைப்பில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. வாழும் உலகின் மறு உருவாக்கத்தை எழுதும் இவை பெரும்பாலும் கண்ணுக்குப் புலப்படாத சூழல் மண்டலத்தின் பொறியியலாளர்கள்.
நீதிப்பூர்வமான அங்கீகாரம்
காலநிலையை ஒழுங்குபடுத்துவதிலும் நீடித்த நிலையான வளர்ச்சியுடன் கூடிய உயிர்ப் பன்மயத்தன்மை பாதுகாப்பிலும் இவற்றிற்கு முக்கிய பங்கு உண்டு. என்றாலும் பூஞ்சைகளுக்கு உரிய அங்கீகாரத்தை பல அரசுகள் கொடுக்காமல் உள்ளன. இவற்றின் இழப்பு உயிர்ப் பன்மயத்தன்மையின் இழப்பே என்று “சிக்கிய வாழ்வு” என்ற நூலின் ஆசிரியரும் உயிரியலாளருமான மெர்லின் ஷெல்ட்ரேக் (Merlin Sheldrake) கூறுகிறார்.
பூஞ்சைகளின் அங்கீகாரத்திலும் பாதுகாப்பிலும் சிலி முன்னணியில் உள்ள ஒரு நாடு. பூஞ்சைகளை அரசு அமைப்புகள், நிறுவனங்களின் சூழல் தாக்க மதிப்பீட்டு திட்டங்களில் உட்படுத்த வேண்டும் என்ற தேசிய சட்டம் அங்கு அமலில் உள்ளது. இத்தகைய ஆய்வுகளில் பூஞ்சைகளின் நிலைக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருந்தால் அதை பட்டியலிட்டு சரி செய்ய வேண்டும் என்று அந்த சட்டம் கூறுகிறது.
“பூஞ்சைகள் காலநிலை, இயற்கை, மாசுபடுதல் ஆகிய மூன்று முக்கிய அம்சங்களை ஒன்று சேர்த்து நம்மை காண வைக்கிறது. பூமியின் ஒட்டுமொத்த வாழ்வின் இயக்கத்தைப் புரிந்து கொள்ள இவை நமக்கு உதவுகின்றன. அதனால் இவை தேசிய சட்டங்களிலும் கொள்கைகள் வகுக்கப்படும்போதும் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும்” என்று சிலியின் சூழல் அமைச்சர் மைஸா ரோஹாஸ் (Maisa Rojas) கூறுகிறார்.
“பூஞ்சைகளை தாவர விலங்குகள் போல உரிய மரியாதை கொடுத்து அங்கீகரிப்பது நீதிப்பூர்வமானது” என்று மூன்றாண்டுகளுக்கு முன்பிருந்து 3எஃப் இயக்கத்தில் இணைந்து செயல்பட்டு வரும் நியூயார்க் பல்கலைக்கழக பூமியின் உரிமைகளுக்கான செயல்பாட்டு க்ளினிகின் கொலம்பிய சட்ட நிபுணர் சேஸாரோட்ரீகஸ்-கெரவீட்டோ (César Rodríguez-Garavito) கூறுகிறார். பன்னாட்டு இயற்கை வளப் பாதுகாப்பு சங்கம் (IUCN மற்றும் க்யூ (Kew) ராயல் தாவரவியல் பூங்கா ஆகியவை இவ்வியக்கத்தை ஆதரிக்கின்றன.
“பொதுமக்களின் உரிய கவனத்தை இவ்வுயிரினங்களின் பாதுகாப்பு பெறவில்லை. அதனால் இவற்றின் பாதுகாப்புக்கு எங்கும் நிதி ஒதுக்கப்படுவதில்லை. இது வரை வெறும் 0.4% பூஞ்சைகள் மட்டுமே பலவீனமானவை என்று மதிப்பிடப்பட்டுள்ளன. ஆனால் உணவுப் பாதுகாப்பு, மருத்துவம், சூழல் மண்டலங்களின் நிர்வாகம் மற்றும் பலவற்றில் இவற்றின் பங்கு முக்கியமானது. அறிவியல் தெளிவாக உள்ளது, ஆனால் சமூக அங்கீகாரம் மட்டுமே தேவை.
ஆண்டுக்கு இரண்டாயிரம் புதிய இனங்கள்
உலகின் மிகப் பெரிய பூஞ்சை மாதிரிகளின் சேகரம் இலண்டன் க்யூ பூங்காவில் உள்ளது. இங்கு உலகின் எல்லாப் பகுதிகளிலும் இருந்து சேகரித்து உலர வைக்கப்பட்ட 1.5 மில்லியன் மாதிரிகள் உள்ளன. இவற்றால் ஏற்படும் நஞ்சு பாதிப்புகள், கிடைக்கும் மருத்துவப் பயன்கள் பற்றி அறிய இவற்றின் டி என் ஏ வரிசைப்படுத்துதல் (DNA sequencing) நடைபெறுகிறது. இவற்றின் பகுப்பாய்வில் இருந்து தாவரங்களை விட, விலங்குகளுக்கு இவை நெருக்கமானவை என்பதும், உயிரினங்களில் ஒரு தனி சாம்ராஜ்யம் என்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
சூழல் பாதுகாப்பு கலந்துரையாடல்களில் பூஞ்சைகள் சேர்க்கப்பட வேண்டும். விஞ்ஞானிகள் இது வரை வெறும் 10 சதவிகிதத்துக்கும் குறைவான பூஞ்சைகளைப் பற்றி மட்டுமே விவரித்துள்ளனர். மேற்பரப்பை மட்டும் ஆராய்வது போலவே இது. பூஞ்சைகளே அறிவியலின் அடுத்த முக்கிய பிரிவாக வளரப் போகின்றன. அவை பற்பல மூலக்கூறுகளை உருவாக்குகின்றன. ஆனால் இவை பற்றி மிகக் குறைவாகவே ஆராயப்பட்டுள்ளது.
வருங்கால பெரும் தொற்றுகளுக்கு இவையே தீர்வாக அமையக்கூடும். அலெக்சாண்டர் ப்ளெமிங் பெனிசிலியத்தில் இருந்து மில்லியன் கணக்கானோரின் உயிரைக் காத்த பென்சிலின் என்ற முக்கிய நோய் எதிர்ப்புப் பொருளை கண்டுபிடிப்பதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே மனிதன் ரொட்டியை உண்கிறான்.
இழைத் தன்மையுடைய காளான்களே கொலஸ்ட்ரால், உயர் இரத்த அழுத்தம், இதயநோய் ஆபத்தைக் குறைக்க உதவும் ஸ்டேட்டின் (statin) என்ற மருந்துப் பொருளின் அடிப்படை என்று ராயல் தாவரவியல் பூங்காவின் அறிவியல் பிரிவு இயக்குனர் அலெக்சாண்டர் ஆண்டனெல்லி (Alexandre Antonelli) கூறுகிறார்.
உயிரின உலகில் பூஞ்சைகள் ஒரு தனிப்பிரிவாக அங்கீகரிக்கப்படும்போது தாவர விலங்குகள் மற்றும் பூஞ்சைகள் என்று உயிரினங்களின் வகைப்பாடு மாறும். உயிர் வாழும் இயற்கை இனங்களின் பாதுகாப்புக்கான பன்னாட்டு யூனியன் (International Union for the Conservation of Nature Species Survival Commission (IUCN SSC), பன்னாட்டு வனம் மற்றும் இயற்கை வள பாதுகாப்பு சங்கம் (IUCN Re:wild) ஆகிய அமைப்புகள் ஆகஸ்ட் 2021ல் பூஞ்சைகளை உயிரினங்களின் தனி வகையாக அங்கீகரித்தன.
பூஞ்சைகள் மேலோட்டமாக பார்க்கப்படுகின்றன. இதனால் இவை சூழல் பாதுகாப்புக் கோட்பாடுகளில் இருந்து புறக்கணிக்கப்படுகின்றன. அதனால் சூழல் சட்டங்களால் இவை பாதுகாக்கப்படுவதில்லை.
அங்ககப் பொருட்களை சிதைப்பதிலும் வன மறு உருவாக்கத்திலும் பூஞ்சைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. மரங்களின் வாழ்வு, பாலூட்டிகளின் செரிமானம், கார்பன் சேமிப்பு, உலக சத்துகள் சுழற்சியை நிலைநிறுத்த, பாக்டீரியா எதிர் மருந்துகள் உற்பத்தியில் பெரும் பங்கு வகிக்கின்றன.
ரொட்டி, மது பானங்கள், சாக்லெட் போன்றவற்றை பூஞ்சைகள் இன்றி தயார் செய்ய முடியாது. சூழலில் நொதிகளை உற்பத்தி செய்து இவை உடலுக்கு வெளியில் செரிமானம் அடையச் செய்கின்றன. அங்ககப் பொருட்களை செல்களுக்குள் மீண்டும் உறிஞ்சுகின்றன. 2.5 முதல் 3.8 மில்லியன் பூஞ்சைகளில் வெறும் 8% மட்டுமே இது வரை விஞ்ஞானிகளால் அறிவியல்பூர்வமாக அறியப்பட்டுள்ளன. உலகம் முழுவதும் ஆண்டுதோறும் 2,000 புதிய இனங்கள் கண்டுபிடிக்கப்படுகின்றன.
அங்கீகாரம் வேண்டி நிற்கும் அற்புத உயிரினங்கள்
அதிகமான பூஞ்சைக் கொல்லிகளின் பயன்பாடு, அளவுக்கு மீறிய அறுவடை, நைட்ரஜன் வளப்படுத்துதல் போன்றவை இவற்றில் எதிர்மறை பாதிப்பை ஏற்படுத்துகின்றன. பூமியின் வட கோடி முனையில் உள்ள உலகின் மிகப் பெரிய தரைப்பகுதி காடுகளில் (Boreal forests) தாவரங்களுடன் சேர்ந்து வாழும் கூட்டுயிரி வாழ்க்கையில் (symbiotic) பூஞ்சைகள் பெருமளவு கார்பனை உறிஞ்சுகின்றன.
சிதைப்பவை என்பதால் இவை மண்ணில் உள்ள மாசுக்களை தூய்மைப்படுத்துகின்றன. விலங்கு உணவுகளுக்குப் பதில் இந்த உயிரினங்கள் மாற்று உணவுகளைத் தரவல்லவை என்று பன்னாட்டு இயற்கை வளப் பாதுகாப்பு சங்கம் கூறுகிறது.
கோடை வெய்யிலில் ஒரு கோப்பை மோரை அருந்த நினைக்கும்போதும், உங்களுக்கு விருப்பமான சாக்லேட்டை சுவைக்கும்போதும் பூஞ்சைகள் என்ற இந்த அற்புத உயிரினங்களுக்கு நன்றி சொல்லுங்கள்!
மேற்கோள்கள்: https://www.theguardian.com/environment/2024/oct/16/fungi-status-boost-conservation-cop16-uk-chile-biodiversity-plan
&
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
பாலூட்டிகள் சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாமல் மின்னுகின்றன என்று ஆய்வுகள் கூறுகின்றன. 86% பாலூட்டி இனங்களின் உரோமம் புற ஊதாக்கதிர் (UV) பட்டு ஒளிர்வதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். பாலூட்டிகளில் ஒளிரும் பண்பு முன்பு நினைத்திருந்ததை விட பொதுவான ஒரு பண்பு என்று இந்த புதிய ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் வாழும் ப்ளாட்டிப்யூசஸ் (platypuses) வாம் வௌவால் என்ற வௌவால் இனம் (wombats), டாஸ்மேனியா டெவில்ஸ் Tasmanian devils), எச்சிட்னெஸ் (echidnas), ஆரஞ்சு இலை மூக்கு வௌவால் (orange leaf-nosed bat), பில்பிஸ் (Bilbis) மற்றும் பேண்டிகூட்ஸ் (Bandicoots) போன்ற மார்சுப்பியல் (marsupial) பாலூட்டி விலங்குகளில் ஒளிரும் பண்பு காணப்படுகிறது என்று முன்பே கண்டறியப்பட்டிருந்தது. மார்சுப்பியல் பாலூட்டிகளில் பெண் விலங்குகள் குட்டிகளைப் பராமரித்து வளர்க்க வயிற்றுப் பகுதியில் பை போன்ற அமைப்பை (pouch) பெற்றுள்ளன.
A glowing orange leaf-nosed bat. Photograph: Western Australian Museum
ஒளிர்தலுக்கு காரணமாகும் உரோமம்
பாலூட்டிகளில் ஒளிரும் பண்பு மிகப் பொதுவான ஒன்று என்று 125 வகையைச் சேர்ந்த வெவ்வேறு இனப் பாலூட்டிகளை ஆராய்ந்த பிறகு விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த உயிரினங்கள் அனைத்தும் ஏதோ ஒரு வகையில் ஒளிரும் பண்பை வெளிப்படுத்துகின்றன. ஆய்வு செய்யப்பட்ட 125 இனங்களில் 86% அல்லது 107 விலங்கினங்கள் புற ஊதாக்கதிர்களின் கீழ் மின்னும் பண்பை உடைய உரோமத்தைப் (fur) பெற்றுள்ளன.
ஆய்வு செய்யப்பட்ட 125 பாலூட்டியினங்கள் இன்று வாழும் அனைத்து 27 பாலூட்டி வரிசைகளையும் உட்படுத்தியது. இது இன்று பூமியில் வாழும் பாலூட்டி குடும்பங்களில் பாதியை பிரதிநிதித்துவப் படுத்துகிறது.
ஒளிர்தல் பண்பு இரவு நேர விலங்குகளில் (nocturnal animals) மிகப் பொதுவாகவும் மிகத் தீவிரமாகவும் காணப்படுகிறது என்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஆனால் இப்பண்பு மலை வரிக்குதிரை, துருவக்கரடி போன்ற பகலில் சுறுசுறுப்பாக செயல்படும் விலங்குகளிலும் (diurnal animals) காணப்படுகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது.
“அதிக எண்ணிக்கையிலான பாலூட்டிகள் ஒளிரும் தன்மையைப் பெற்றுள்ளது இதுவரை அறியப்படாமல் இருந்தது. இந்த ஆய்வின் மூலமே இது வெளியில் தெரிய வந்துள்ளது. இவை ஒளிரும் தன்மையுடைய தோல் அல்லது உரோமத்தைப் பெற்றுள்ளன என்று இவ்வளவு காலம் தெரியவில்லை. புற ஊதாக்கதிர்கள் ஒளிர்தல் பண்புடைய விலங்குகளின் தோல் அல்லது உரோமத்தின் மீது படும்போது அதில் உள்ள புரதங்கள் அந்த கதிரியக்கத்தை உறிஞ்சி அதை பார்க்கக்கூடிய ஒளியாக உமிழ்கிறது.
ரோமம் அல்லது தோல் மற்றும் புரதங்களின் மீது மோதி நமக்கு புலனாகக் கூடிய ஒளியாக இது மாற்றப்படுகிறது. அதனால்தான் ஒளிரும் உடற்பகுதிகள் நீலம், பச்சை அல்லது கறுப்பு நிறத்தில் ஒளிர்கின்றன. மனிதன் உட்பட எல்லா பாலூட்டிகளும் ஒளிரும் தன்மையுடைய பற்களைப் பெற்றுள்ளன. பல விலங்குகள் ஒளிரும் பண்புடைய நகங்களைப் பெற்றுள்ளன” என்று ஆய்வுக் கட்டுரையின் முன்னணி ஆசிரியரும் மேற்கு ஆஸ்திரேலியா பாலூட்டிகள் அருங்காட்சியகத்தின் மேற்பார்வையாளருமான டாக்டர் கெனி ட்ராவுயிலன் (Dr Kenny Travouillon) கூறுகிறார்.
டுவார்ஃப் ஸ்பின்னர் டால்பின் (dwarf spinner dolphin) என்ற வகை பாலூட்டி இனம் மட்டுமே அவற்றின் உடலில் ஒளிரும் தன்மையுடைய ஒரே உறுப்பாகப் பற்களை பெற்றுள்ளன. பதப்படுத்துதல் செயல்முறையினால் ஒளிர்தல் நிகழ்கிறதா என்பதை அறிய ஆய்வாளர்கள் பாதுகாக்கப்பட்ட மற்றும் உறை நிலையில் வைக்கப்பட்ட இறந்த விலங்குகளின் உடல் மாதிரிகளை குறிப்பாக மேற்கு ஆஸ்திரேலியா அருங்காட்சியகத்தில் இருந்த மாதிரிகளை ஆராய்ந்தனர்.
பதப்படுத்துதல் செயல்முறையால் ஒளிரும் பண்பில் தீவிரத் தன்மை சில மாதிரிகளில் வேறுபடுகிறது என்று ராயல் சங்கத்தின் (journal Royal Society Open Science) என்ற ஆய்விதழில் வெளிவந்த இது பற்றிய ஆய்வுக்கட்டுரை கூறுகிறது. பதப்படுத்தப்பட்ட பிளாட்டிபஸ் மாதிரிகளில் ஒளிர்தல் குறைவாக இருந்தது.
”போராக்ஸில் பதப்படுத்தப்பட்ட மாதிரி அதிகமாக ஒளிர்ந்தது. அதை விட அதிகமாக ஆர்சினிக்கில் பதப்படுத்தப்பட்ட மாதிரியில் ஒளிர்தல் காணப்பட்டது. ஆனால் வேறு உடல் மாதிரிகளில் இதே ஆய்வுகள் நடத்தப்பட்டபோது பலன் எதிர்மறையாக இருந்தது. பிரகாசமான ஒளிர்தல் உற்ற நிலையில் வைக்கப்பட்ட மாதிரிகளில் அதிகமாகக் காணப்பட்டது. இந்த மாதிரிகளில் பதப்படுத்துதல் மூலம் ஒளிர்தலின் தீவிரத் தன்மை குறைந்தது. கோ ஆலா (ko ala), டாஸ்மேனியா டெவில்ஸ், எட்ச்சிட்னெஸ் போன்றவை இதற்கு எடுத்துக்காட்டு” என்று டாக்டர் கெனி கூறுகிறார்.
“அருங்காட்சியகத்தின் சில மாதிரிகளில் பதப்படுத்துதலால் ஒளிர்தலில் வேறுபாடு ஏற்படுவது இந்த ஆய்வில் தடுமாற்றத்தை ஏற்படுத்துகிறது. இந்த விலங்குகள் அவற்றின் இயல்பான வனச்சூழலில் எவ்வாறு ஒளிர்கின்றன என்பது பற்றி மேலும் ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும். ஆராயப்பட்ட 86% வகை பாலூட்டிகளில் மட்டுமே ஒளிரும் தன்மையுடைய உரோமம் இருப்பது அறியப்பட்டுள்ளது என்றாலும் அவை அனைத்திற்கும் ஒளிரும் நகங்கள் அல்லது பற்கள் உள்ளன.
ஆராயப்பட்ட பல மாதிரிகளில் தூரிகை வால் பாசம்ஸ் (brushtail possums), கங்காருகள், கறுப்பு எலிகள், ஐரோப்பிய ஹெட்ஜ்காக்குகள் (European-hedgehogs) போன்றவற்றில் முந்தைய ஆய்வில் கூறப்பட்டதை விட ஒளிர்தல் குறைவாகவே உள்ளது என்று இந்த ஆய்வு கூறுகிறது. இந்த வேறுபாடு புவியியலால் ஏற்பட்டதா அல்லது பதப்படுத்துதலில் உள்ள செயல்முறை வேறுபாட்டால் நிகழ்ந்ததா என்பது தெரியவில்லை” என்று ஜேம்ஸ் குக் பல்கலைக்கழக விலங்கியல் ஆய்வாளர் லிண்டா ரைன்ஹோல்ட் (Linda Reinhold) கூறுகிறார்.
பாலூட்டிகள் ஏன் ஒளிர்கின்றன?
பாலூட்டிகளில் ஒளிர்தலின் உண்மையான பொருள் இன்னும் புதிராகவே உள்ளது. என்றாலும் விலங்குகள் குறிப்பாக இரவு நேரங்களில் சுறுசுறுப்புடன் செயல்படும் விலங்குகளில் அவை பளபளப்புடன் தோற்றமளிக்க, அதன் பார்வையின் மூலம் நடைபெறும் சமிக்ஞைப் பரிமாற்றங்களை மேம்படுத்த ஒளிர்தல் உதவலாம் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
”வழக்கமாக ஊண் உண்ணிகளின் முதுகுப்பகுதியில் வரிகள், புள்ளிகள் காணப்படுகின்றன. தங்கள் இனத்தைச் சேர்ந்த மற்ற விலங்குகளுக்கு தங்களை அடையாளம் காட்டுவதற்கு இது அவற்றிற்கு பயன்படுகிறது என்று கருதப்படுகிறது. ஆனால் பெரும்பாலான விலங்குகளில் எதிரிகளால் அவற்றை எளிதாகப் பார்க்க முடியாத வயிற்றுப் பகுதியிலேயே ஒளிர்தல் நிகழ்கிறது.
ஒரே இனத்தைச் சேர்ந்த விலங்குகள் ஒன்று மற்றொன்றின் அருகில் வரும்போது அவை ஒளிர்தல் மூலம் ஒன்றையொன்று அடையாளம் கண்டு கொள்கின்றன. ஆய்வாளர்கள் ஆராய்ந்தவற்றில் மிக அதிகமான ஒளிர்தல் பண்பை வெளிப்படுத்திய மஞ்சள் மற்றும் வெள்ளை நிற உரோமத்தால் மூடப்பட்ட, பார்வை தெரியாத, நிலத்திற்கடியில் வலைகளை அமைத்து வாழும் தகவமைப்பை உடைய சதர்ன் மார்சுப்பியல் சிற்றெலிகள் (Southern MarsupialMole) போன்ற சில இன விலங்குகளில் ஒளிர்தல் எந்த செயல்முறை பயனையும் தருவதில்லை.
இவற்றில் நிறமூட்டப்பட்ட உரோமங்கள் இல்லாததால் ஏற்பட்ட ஒரு பக்கவிளைவே இது என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். வெள்ளை தவிர மற்ற நிறத்தில் மனித தலைமுடி இருப்பதற்கு பிறவியிலேயே ஏற்படும் ஒளிர்தலே காரணம். இருக்கும் இடம், எதிரியின் இடம் அறிய இருப்பிடம் அறியும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் மைக்ரோ வௌவால்கல் (microbats) போன்ற சில வகை பறக்கும் பாலூட்டிகளில் ஒளிர்தல் அதிக முக்கியத்துவம் பெறவில்லை என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இரவு நேரங்களில் பூமிக்கு வரும் புற ஊதாக்கதிர்களின் அளவு குறைகிறது என்பதால் பாலூட்டிகளில் நிகழும் இந்த உயிரி ஒளிர்தல் (Bio Fluorescence) நிகழ்வின் முக்கியத்துவம் பற்றி இன்னும் அதிக ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும் என்று விஞ்ஞானிகள் வலியுறுத்துகின்றனர். மனிதரல்லாத பாலூட்டிகளில் இந்நிகழ்வு பற்றி முதல்முதலாக 1911ல் ஐரோப்பிய முயல்களில் நடத்தப்பட்ட ஆய்வுகள் பற்றிய செய்தி வெளிவந்தது.
“இந்த ஆய்வுக்கட்டுரையை வாசித்துவிட்டு செல்லப்பிராணி வளர்ப்பவர்கள் புற ஊதாக்கதிர்களை வெளியிடும் கருவிகளை வாங்கி செல்லப்பிராணிகள் மீது ஒளியைப் பாய்ச்சி ஆராய முற்படக் கூடாது. அவர்களுக்கு ஒரு எச்சரிக்கை! அவர்கள் புற ஊதாக்கதிர்களை கண்களில் பாய்ச்சக்கூடாது. அந்த கதிர்கள் அவற்றின் கண்களைப் பாதிக்கும்!” என்று கெனி கூறுகிறார்.
பாலூட்டிகளில் ஒளிர்தல் பற்றிய இந்த ஆய்வு இயற்கையின் படைப்பில் நமக்குத் தெரியாமலேயே நம்மைச் சுற்றிலும் நிகழ்ந்து வரும் அதிசயங்களில் ஒரு சிறு துளி மட்டுமே!
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
எப்போதும் நகைச்சுவையுடன் இருக்கும் அவருடைய மனதில் ஒரு எண்ணம் பளிச்சிட்டது. புதிதாக கண்டுபிடித்த குளவியைப் பார்த்தபோது ஆச்சரியத்தில் வாயில் இருந்து வெளியில் வந்த சத்தமே அதற்குப் பெயராக இருக்கட்டும் என்று அவர் நினைத்தார். இவ்வாறு புதிய குளவி இனத்தின் பெயர் ஆஹா (Aha) என்று ஆனது.
ஆஹா குளவியும் பெயரிட்ட ஆர்னால்டு மென்கேயும்
சாதாரண மனிதர்கள் போலவே விஞ்ஞானிகளும் நகைச்சுவை உணர்வுடையவர்கள். அதை ரசிக்கவும் செய்வர். சிலர் ஒரு படி மேலே போய் ஆய்வுகளில் நகைச்சுவையைக் கலந்து செயல்படுவர். அப்படிப்பட்ட ஒருவர்தான் பிரபல அமெரிக்க பூச்சியியல் நிபுணர் ஆர்னால்டு மென்க் (Arnold Menke). 1976ம் ஆண்டு. அன்று அவர் அமெரிக்க தலைநகரான வாஷிங்டனில் அமெரிக்க தேசிய அருங்காட்சியகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தார்.மற்றொரு உலகப் புகழ்பெற்ற பூச்சியியல் நிபுணர் ஹவர்டு எவ்வான்ஸ் (Howard Evans) ஆர்னால்டின் நெருங்கிய நண்பராக இருந்தார். இவரும் இவருடைய சக ஆய்வாளர் மாத்யூஸும் உலகம் முழுவதும் சுற்றி குளவிகளை சேகரித்து ஆராய்வதில் பிரபலமானவர். 1970களில் இவர்கள் ஆஸ்திரேலியாவில் இருந்து ஏராளமான குளவிகளை சேகரித்தனர். அதில் சிலவற்றை விரிவான ஆய்வுக்காக ஆர்னால்டுக்கு அவர் அனுப்பி வைத்தார்.
அந்த குளவிகள் கூட்டத்தில் ஒன்றைப் பார்த்தபோதே அது ஒரு புதிய பேரினம் என்று ஆர்னால்டுக்கு தோன்றியது. பட்டென்று அவரின் வாயில் இருந்து “ஆஹா! ஒரு புதிய பேரினம்!” (Aha, a new genus) என்ற சொற்கள் வெளிவந்தன. அந்த சமயத்தில் அவருக்கு அருகில் சக ஆய்வாளர் எரிக் க்க்ரிசெல் (Eric Grissel) நின்று கொண்டிருந்தார். ஆர்னால்டு கூறியதில் நம்பிக்கை இல்லாமல் க்ரிசெல் ஒரு சத்தத்தை ஏற்படுத்தினார். ”ஹா ஹா” (Ha Ha)!
மேலோட்டமாகப் பார்த்தால் ஒரே மாதிரி தோற்றத்துடன் எட்டு குளவிகள் அந்தக் கூட்டத்தில் இருந்தன. ஆனால் நுணுக்கமாக ஆராய்ந்தபோது அவை ஒரே பேரினத்தைச் சேர்ந்த இரண்டு இனங்கள் என்று தெரிந்தது.
பெயர்கள் பிறந்தன
புதிய உயிரினங்களுக்குப் பெயரிடுவது சுலபமான செயல் இல்லை. அந்தப் பெயர் அதுவரை பயன்படுத்தாததாக இருக்க வேண்டும். பல சட்டங்களைப் பின்பற்ற வேண்டும். நகைச்சுவை உணர்வுடைய ஆர்னால்டின் மனதில் ஒரு யோசனை தோன்றியது. புதிய இனத்தைப் பார்த்தபோது வாயில் இருந்து வந்த சத்தமே அதற்குப் பெயராக இருக்கட்டும் என்று நினைத்தார். இப்படி புதிய குளவி பேரினத்தின் பெயர் ஆஹா என்றானது. மற்றொரு பேரினத்திற்கு ஹா (Ha) என்று பெயரிட்டு தன் சக ஆய்வாளரின் பெயரையும் அதனுடன் இணைத்து வைத்தார்.
மிக விசித்திரமான பெயராக ஆஹா ஹா (Aha Ha) என்ற அறிவியல் பெயர் பிறந்தது. மற்றொரு பேரினத்திற்கு அவர் தன் நண்பரின் பெயரை சேர்த்து ஆஹா இவான்சி (Aha evansi) என்று வைத்தார். இது பற்றி பிறகு ஆர்னால்டு கூறியபோது “மது அருந்தி வீங்கிப்போன எவான்சின் வயிற்றைப் பார்த்தபோதுதான் இப்படி ஒரு பெயர் என் மனதில் தோன்றியது” என்றார்.
குழி தோண்டும் குளவிகள் வகையைச் சேர்ந்த இவை முன்பு ஸ்பெசிடே குடும்பத்தில் இருந்தன. இப்போது இவை ப்ராப்ரேயானிடே என்ற குடும்பத்தில் உள்ளன. க்ராஃபனிடி மிஸ்கபினி (Crabronidae Miscophini) என்ற இனத்தில் இவை வகைப்படுத்தப்பட்டுள்ளன. இவை மண்ணில் சிறிய குழிகளைத் தோண்டி முட்டையிடுகின்றன. இதனால் இவை மணலில் குழி தோண்டும் குளவிகள் (Sand wasps) என்று அழைக்கப்படுகின்றன. முட்டையிடுவதற்கு முன்பு பெண் குளவிகள் குழியில் குழந்தை உயிரினங்களுக்காக உணவு சேகரித்து வைக்கின்றன.
பிறந்த குளவிப் புழுக்களுக்கு கால்கள் கிடையாது. இவற்றின் உணவு சிறிய பூச்சிகள், சிலந்திகள். பெண் குளவிகள் உடலின் பின்பக்கம் இருக்கும் நஞ்சுள்ள முள்ளால் குத்தி இரைகளை நினைவிழக்கச் செய்து உயிருடன் கூட்டுக்கு கொண்டு வருகின்றன. மற்ற ஆண் குளவிகள், தேனீக்கள் போலவே இவற்றின் ஆண் இனத்தைச் சேர்ந்தவற்றுக்கு நஞ்சுடைய முட்கள் இல்லை. முதிர்ந்த ஆண் மற்றும் பெண் குளவிகளின் உணவு பூந்தேன் மற்றும் இனிப்பு சுவையுள்ள திரவங்கள்.
இவற்றின் நீளம் 7.5 மில்லி மீட்டர் மட்டுமே. உடல் கறுப்பு நிறம் என்றாலும் இறக்கைகள் ஸ்படிக நிறத்தில் காணப்படுகின்றன. தலை மற்றும் கால்களில் வெள்ளி நிறத்தில் பல சிறிய உரோமங்கள் உள்ளன. எவான்சி குளவி இனம் ஆஹாஹாவை விட பெரியது. இதன் நீளம் 10 மில்லி மீட்டர். இறக்கைகள் கறுப்பு நிறத்தில் உள்ளன.
ஆஹாவின் முகம்
பெம்பிக்ஸ் (Bembix) ராப்ரேயானிடே குடும்பத்தைச் சேர்ந்த மற்றொரு குளவி. சாதாரண அளவுடையவை. மிஸ்கோபினி குளவிகள் போன்ற இயல்புடையவை. 1972ல் எவான்ஸும் மாத்யூஸும் மேற்கு ஆஸ்திரேலியாவில் கனனர (Kununurra) என்ற இடத்தில் மட்டும் வாழும் ஒரு புதிய பெம்பிக்ஸ் குளவியை ஆராய்ந்தனர். இந்த இனம் பிற்காலத்தில் பெம்பிக்ஸ் மோமா (Bembix moma) என்று பெயரிடப்பட்டது. 1983ல் எவான்ஸ் முன்பு நடந்த ஆய்வு அனுபவங்கள் பற்றி எழுதினார்.
அது நடந்தது 1972 செப்டம்பர் 16 அன்று. ஆராய்ந்து கொண்டிருந்த குளவிகள் இருந்த கூட்டின் நம்பர் ஏ449. அதற்குள் இருந்தவற்றை எல்லாம் ஒரு காகிதத்தில் கொட்டி அவர்கள் அதை ஆராய்ந்தனர். நன்பகல் வெய்யில் மின்னும் நேரத்தில் அதில் ஏராளமான ஈக்கள், தேனீக்கள், குளவிகளுக்கு நடுவில் இந்த குளவிகள் இருந்தன. ஒரு பெண் பெம்பிக்ஸ் மோமா மற்ற குளவிகளை நினைவிழக்கச் செய்து தன் குழந்தைகளுக்கு உணவாக கொண்டு வந்திருந்தது. அந்த கூட்டத்தில் ஏழு குளவிகள் இருந்தன.
அவை அனைத்தும் ஆண் குளவிகளாகவே இருந்தன. எதிர்ப்பை காட்ட உதவும் நஞ்சுள்ள முட்கள் இல்லை என்பதால் பெம்பிக்ஸ் பெண் குளவி ஆண் குளவிகளையே பிடித்து வந்திருந்தது.
மீண்டும் தமாஷ்
பெயரிடுவதுடன் ஆர்னால்டின் நகைச்சுவை உணர்வு நிற்கவில்லை. அவர் தன் காரின் நம்பரை ஆஹா ஹா என்று மாற்றினார். அமெரிக்காவில் கூடுதல் கட்டணம் செலுத்தினால் நாம் விரும்பும் பெயர்களை நம்பர் தட்டுகளில் பயன்படுத்தலாம். காரின் நம்பர் தட்டில் பெயரைப் மாற்றியது பற்றி கேட்டபோது ஆர்னால்டு “புதிதாக கண்டுபிடிக்கும் உயிரினத்திற்கு நான் “ஓ நோ நோ” (Oh No) என்று பெயரிடுவேன்” என்றார்.
இந்த குளவியினத்தைப் பற்றி அதற்குப் பிறகு முழுமையாக எந்த ஆய்வும் நடைபெறவில்லை. அதனால் 1980ல் வெளியிடப்பட்ட ஆய்வுக் கட்டுரையில் இருந்த ஆஹா எவான்சியின் கறுப்பு வெள்ளையில் காணப்படும் ஒரு படம் மட்டுமே இப்போது உள்ளது. ஆஹா ஹா குளவியின் ஒரே ஒரு வண்ணப்படம் சயன்ஸ் 82 இதழில் வெளிவந்தது. இதன் மூலம் ஆர்னால்டின் புகழ் பரவியது.
சயன்ஸ் 82 என்பது உலகப் புகழ்பெற்ற அறிவியல் ஆய்வுக் கட்டுரைகள் வெளியிடப்படும் ஒரு இதழான சயன்ஸின் (Science) துணை இதழ். சயன்ஸ் இதழில் முழு அறிவியல் ஆய்வுக் கட்டுரைகள் மட்டுமே வெளியிடப்படும்போது சயன்ஸ் 82ல் மக்கள் அறிவியலுடன் தொடர்புடைய கட்டுரைகள் வெளிவந்து கொண்டிருந்தன. ஒவ்வொரு ஆண்டும் இதன் பெயர் மாறிக் கொண்டிருந்தது. சயன்ஸ் 1986 வரை வெளிவந்தது.
இன்று இவற்றில் ஒரு இதழ் கூட ஆன்லைன் நூலகங்களில் இல்லை. பல விருதுகளைப் பெற்ற பிரபல அமெரிக்க எழுத்தாளர் ரிச்சர்ட் கோனிஃப் (Richard Conniff) சயன்ஸ் 82ல் ஆய்வுக் கட்டுரைகளை தொடர்ந்து எழுதினார். அவருடைய கட்டுரையிலும் ஆஹா ஹாவின் முகம் மட்டுமே உள்ள படம் மட்டுமே இடம் பெற்றிருந்தது.
பூமியில் மனிதன் இன்று சுகமாக வாழ குளவிகள் உள்ளிட்ட எண்ணற்ற பூச்சிகள் பேருதவி செய்கின்றன. இந்த உயிரினங்களின் முக்கியத்துவத்தை உணராமல் நாம் அவற்றை அல்பமாக நினைக்கிறோம். ஒரு குளவிதான் என்றாலும் அது குறித்த விஞ்ஞானிகளின் ஆய்வுகள் இடர்களும் விசித்திரங்களும் நிறைந்தது என்பதை ஆஹா ஹாவின் கதை நமக்கு எடுத்துக் காட்டுகிறது.
மேற்கோள்: https://tinyurl.com/4bs7kx67
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
மனித இனத்தின் முன்னோர் என்று கருதப்படும் குரங்கினங்களில் அழியும் நிலையில் உள்ள உரங்கோட்டான்கள் சட்டப்படி பாதுகாக்கப்பட்டாலும், சட்டவிரோதமாக அவை போர்னியோ (Borneo) தீவில் அவை கொல்லப்படுவது அதிகரிக்கிறது என்று புதிய ஆய்வுகள் கூறுகின்றன. போர்னியோவில் கடந்த ஐந்து முதல் பத்தாண்டுகளில் 30% கிராமங்களில் இது தொடர்கிறது.ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு கொலைகாரர்
இந்த உயிரினங்களை பாதுகாக்க அருகாமைப் பகுதிகளிலேயே பல திட்டங்கள் செயல்படுகின்றன என்றாலும் இந்த அழிவு வேலை தொடர்கிறது. உரங்கோட்டான்கள் அதிக அளவில் வாழும் இந்தோனேஷியாவில் கலிமண்ட்டன் (Kalimantan) பகுதியில் உள்ள 79ல் 30 கிராமங்களில் குறைந்தபட்சம் ஒவ்வொரு கிராமத்தில் இருந்து ஒருவர் உரங்கோட்டானைக் கொல்கிறார் என்று இது பற்றி நடத்தப்பட்ட கள ஆய்வு கூறுகிறது. நானூறு கிராமங்களில் வாழும் மக்களிடம் இதற்கான நேர்முக ஆய்வுகள் நடந்தன.
கடந்த பத்தாண்டில் ஆண்டுதோறும் 2,000 முதல் 3,000 வரை உரங்கோட்டான்கள் கொல்லப்பட்டுள்ளன என்று முந்தைய ஆய்வுகள் கூறின. இப்போது வனப்பகுதிகளில் 100,000 என்ற எண்ணிக்கைக்கும் குறைவாகவே இந்த உயிரினங்கள் வாழ்கின்றன. பெண் உரங்கோட்டான்கள் ஒவ்வொரு ஆறு முதல் எட்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே ஒரு குட்டியை ஈணுகிறது.
போர்னியோ தீவு மலேசியா, புருனை (Brunei) மற்றும் இந்தோனேஷியாவிற்கு நடுவில் சிதறியிருக்கும் ஒரு தீவுப்பகுதி. தீவின் மூன்றில் ஒரு பகுதி இந்தோனேஷியாவின் கட்டுப்பாட்டில் உள்ளது.
2020-2021 காலத்தில் ஒரு சமூக வளர்ச்சி அமைப்பு இந்த நேர்முகங்களை நடத்தியது. “உங்கள் கிராமத்தில் ஒருவர் உரங்கோட்டானை கொல்வது பற்றி எப்போது உங்களுக்குத் தெரிந்தது?” போன்ற கேள்விகள் கேட்கப்பட்டன.
“இவை நேரடியாகக் கொல்லப்படுவதில் பல விதங்கள் உள்ளன. சமூகரீதியில் இது சிக்கலானது. இது அதிர்ச்சி தரும் செய்தி” என்று குயீன்ஸ்லாந்து பல்கலைக்கழக ஆய்வாளரும் ஆய்வுக்குழுவின் தலைவருமான எமிலி மாசிங்ஹாம் (Emily Massingham) கூறுகிறார். இவை பல்வேறு காரணங்களுக்காகக் கொல்லப்படுகின்றன என்று நிபுணர்கள் கூறுகின்றனர். மக்கள் பயத்தின் காரணமாக இவற்றைக் கொல்கின்றனர். தோட்டங்கள், வயல் பகுதிகளுக்குள் இவை நுழைவதால் கொல்லப்படுகின்றன.
கொல்லப்படும் தாய் அனாதையாக்கப்படும் குழந்தை
தாய் உரங்கோட்டான்கள் கொல்லப்படுகின்றன. இதனால் அனாதையாக்கப்படும் குட்டிகள் பிடிக்கப்பட்டு கள்ளச்சந்தையில் விற்கப்படுகின்றன. அல்லது காட்சிப்பொருளாக பயிற்சி அளிக்கப்பட்டு காட்சிக்கூடங்களில் பயன்படுத்தப்படுகின்றன. பணப்பயிர் தோட்டங்களுக்குள் இவை சில சமயங்களில் நுழைவதால் கொல்லப்படுகின்றன. இறைச்சி மற்றும் உடற்பகுதிகளுக்காகவும் கொல்லப்படுகின்றன.
எண்ணைப்பனை வளர்ப்புக்காக இவற்றின் வாழிடப்பகுதிகளான பாதுகாக்கப்பட்ட காடுகள் அழிக்கப்படுவது இவற்றை மனிதக் குடியேற்றங்களை நோக்கி விரட்டுகிறது. ”இவற்றைப் பாதுகாப்பதற்காக நடைமுறையில் உள்ள திட்டங்களின் செயல்பாடுகள் இவை கொல்லப்படுவது பற்றிய உண்மையான விவரங்களுக்கு முரணாக உள்ளது. பாதுகாப்பு செயல்திட்டங்கள் மக்களிடையில் எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை" என்று சூழல் பாதுகாப்பு அறிவியல் & செயல்முறை (journal Conservation Science and Practice) என்ற ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ள இது பற்றிய ஆய்வுக்கட்டுரை கூறுகிறது.
இத்தகைய திட்டங்களால் இவற்றைக் கொல்லும் மக்கள் மனப்போக்கில் எந்த மாற்றமும் நிகழ்ந்ததாகத் தெரியவில்லை என்று மாசிங்ஹாம் கூறுகிறார். இவை மெதுவாகவே இனப்பெருக்கம் செய்கின்றன, நீண்ட நாள் உயிர் வாழ்கின்றன. அதனால் ஒரு உரங்கோட்டான் கொல்லப்படுவது கூட இவற்றின் எண்ணிக்கையை வெகுவாகப் பாதிக்கிறது.
சமூக விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக கிராம மக்களிடையில் இந்த உயிரினங்களைப் பாதுகாக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் பற்றி கேட்கப்பட்டது. ஆனால் 40% கிராமத்தவர் மட்டுமே இந்த உயிரினங்களை அவற்றின் இயல்பான போக்கில் மனிதர்களின் குறுக்கீடுகள் இல்லாமல் வாழ விடுவதே சிறந்தது என்று கூறினர். 2000-2019 காலத்தில் ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் நிதி உலகில் வனச்சூழலில் போர்னியோ மற்றும் சுமத்ரா பகுதிகளில் மட்டுமே வாழும் இந்த இனக் குரங்குகளை அழிவில் இருந்து காக்க ஒதுக்கப்பட்டது.
புறக்கணிக்கப்படும் அல்லது முக்கியத்துவம் கொடுக்கப்படாமல் அலட்சியப்படுத்தப்படும் இவற்றின் நேரடிக் கொலைச் சம்பவங்களைக் குறைக்க அல்லது தடுக்க உருவாக்கப்படும் திட்டங்கள் மக்கள் சமூகங்களுடன் இணைந்த அனுகுமுறையில் நிறைவேற்றப்பட வேண்டும். இவற்றைப் பாதுகாக்க ஏராளமான நிதி ஒதுக்கப்படுகிறது. ஆனால் அந்த நிதி போதுமான அளவுக்கு சமூகங்களுக்குப் போய்ச் சேர்வதில்லை.
இந்த உயிரினங்கள் வாழும் பெரும்பாலான கிராமங்களும் வனச்சூழலை நம்பிய வாழ்வாதார அடிப்படையில் இயங்குகின்றன. இதனால் இங்கு எப்போதும் பதற்றம் நிலவுகிறது.
“இந்த ஆய்வு முடிவுகள் வேதனை அளிப்பவை. அதிர்ச்சி தருபவை. இன்னமும் நேரடிக் கொலைச்சம்பவங்கள் உரங்கோட்டான்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாக உள்ளதையே இது எடுத்துக் காட்டுகிறது” என்று டொரான்டோ யார்க் (York) பல்கலைக்கழகத்தின் உரங்கோட்டான் நிபுணர் டாக்டர் ஆண்ட் ரஸன் ( Dr Anne Russon) கூறுகிறார்.
மறைக்கப்படும் கொலைகள்
“வருத்தமளிப்பதாக இருந்தாலும் இந்த முடிவுகள் எதிர்பார்க்கப்பட்டவையே. சட்டப்படி பாதுகாக்கப்பட்டு அழியும் நிலையில் இருக்கும் உயிரினங்கள் வேட்டையாடப்படுவது பற்றிய விவரங்களைச் சேகரிப்பது கடினம். இவற்றின் கொலைகள் கட்டுக்கதைகளாக்கப்படுகின்றன. வெளியில் சொன்னால் பாதிக்கப்படுவோம் என்ற பயம் அல்லது வெளியில் உள்ளவர்களால் தவறாக நினைக்கப்படுவோம் என்ற எண்ணத்தால் கிராமவாசிகள் இவை கொல்லப்படுவது பற்றிய செய்திகளை வெளியுலகிற்கு மந்தகதியிலேயே சொல்கின்றனர்.
இதனால் இவற்றின் வேட்டையாடலால் ஏற்படும் அச்சுறுத்தல்கள் பற்றிய ஆய்வு முடிவுகள் உண்மை நிலையை வெளிப்படுத்த இயலவில்லை. உண்மையான கொலை பற்றிய எண்ணிக்கை விவரங்கள் அதிகமாக இருக்கலாம்” என்று கடந்த 27 ஆண்டுகளாக போர்னியோ உரங்கோட்டான்களைப் பற்றி ஆய்வுகளை நடத்தி வரும் மிஷிகன் பல்கலைக்கழக ஆய்வாளர் பேராசிரியர் ஆண்ட்ரூ மார்ஷல் (Prof Andrew Marshall) கூறுகிறார்.
இப்போதுள்ள நிலையில் உரங்கோட்டான்களின் நிலைமை மோசமாகவே உள்ளது. இதில் எந்த முன்னேற்றமும் உண்மையாக ஏற்படவில்லை என்றே ஆய்வாளர்கள் கருதுகின்றனர். புதிய பலனளிக்கக்கூடிய உரங்கோட்டான் பாதுகாப்புத் திட்டங்கள் உடனடியாக நடைமுறைப்படுத்தப் படாவிட்டால் இந்த அற்புத உயிரினங்கள் நம் வாழ்நாளிலேயே முற்றிலும் அழிந்து போய்விடும்!
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- கழிவு நீரை சுத்தப்படுத்தும் அதிசய உயிரினம்
- அழிந்த பறவைகள்
- பூச்சிகளின் அழிவால் மாறும் பூக்களின் மகரந்த சேர்க்கை
- காலத்திற்கேற்ப கோலம் மாறும் பறவைக் கூடுகள்
- பாதாளத் துயரம்
- மயான அமைதியில் இயற்கை
- இரயில்கள் ஏன் இவர்களின் வீடுகளை ஆக்ரமிக்கின்றன?
- மண் வண்டுகள்
- பாடத் துடிக்கும் நகரத்துப் பறவைகள்
- ஈ… பறக்க முடியாத ஈ
- சுரங்கப் பாதைகளில் தஞ்சமடைந்த கொசுக்கள்
- பாம்புகள்: பாயும் பகுத்தறிவும் பதுங்கும் மூடநம்பிக்கைகளும்
- இலை வெட்டும் எறும்புகள்
- காடு காக்க உதவும் கறுப்பு மரங்கொத்தி
- மனிதனைக் கொல்ல வந்தவை அல்ல பாம்புகள்!
- காடு காக்கப் போராடும் பெண்கள்
- காணாமல் போகும் கழுகுகள்
- இன்னும் இரண்டரை மில்லியன் பூஞ்சைகள்
- இந்தியாவின் வண்ணத்துப் பூச்சிக்கு அரேபியாவில் பாஸ்போர்ட்
- வௌவால்களுக்கு அடைக்கலம் தரும் தேவாலயங்கள்