கீற்றில் தேட...
அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- மு.குருமூர்த்தி
- பிரிவு: புவி அறிவியல்
“நரைத்தமுடி அறிவின் அடையாளம்” என்பதெல்லாம் பொய் என்கிறது ஐரோப்பிய விஞ்ஞானிகள் குழு. கறுத்தமுடி நரைத்துப் போவது ஏன் என்பதற்கும் இப்போது விடை காணப்பட்டுள்ளது.
நம்முடைய உரோம செல்களில் இயற்கையாகவே சிறிதளவு ஹைட்ரஜன் பெராக்சைடு என்னும் வேதிப்பொருள் சுரக்கிறது. வயது அதிகரிக்கும்போது இவ்வாறு சுரக்கப்படும் ஹைட்ரஜன் பெராக்சைடின் அளவும் அதிகரிக்கிறது. உரோமத்திற்குள்ளேயே ஏற்படும் இந்த மாற்றங்கள் முடியை சாம்பல் நிறத்திற்கு மாற்றி அதன் பிறகு வெள்ளையாக்கிவிடுகிறது என்கிறார்கள் இந்த ஐரோப்பிய விஞ்ஞானிகள்.
உரோமத்திற்கு இயற்கையாகவே நிறமூட்டுவது மெலனின் என்னும் வேதிப்பொருளாகும். உரோமம், கண்கள், தோல் இவற்றின் நிறத்தை தீர்மானிப்பது இந்த மெலனின் தான். மெலனின் சுரப்பதை ஹைட்ரஜன் பெராக்சைடு தடைசெய்துவிடுவதுதான் பிரச்சினையின் மூலவேர்.
மனிதர்களின் உரோமக்கால்களின் மாதிரிகளை பகுப்பாய்வு செய்து இந்த முடிவுகள் எட்டப்பட்டுள்ளன. உரோமக்கால்களில் சுரக்கும் ஹைட்ரஜன் பெராக்சைடை தண்ணீராகவும், ஹைட்ரஜன் வாயுவாகவும் சிதைவடையச் செய்யும் பணியை MSR A and B என்னும் என்சைம்கள் செய்கின்றன. MSR A and B என்சைம்கள் சுரப்பது குறைவடையும்போது ஹைட்ரஜன் பெராக்சைடு சிதைவடைவதும் குறைந்துபோகிறது. ஹைட்ரஜன் பெராக்சைடு அதிகரிப்பதால் tyrosinase என்னும் என்சைம் உற்பத்தியாவதும் நின்று போய்விடுகிறது. மயிர்க்கால்களில் மெலனின் சுரப்பதற்கு இந்த tyrosinase எனப்படும் என்சைம்தான் காரணம்.
அனுப்பி உதவியவர்: மு.குருமூர்த்தி
- விவரங்கள்
- மு.குருமூர்த்தி
- பிரிவு: புவி அறிவியல்
இரவெல்லாம் கண்விழித்துப் படித்துக்கொண்டிருகிறான் மகன். “கொஞ்சநேரம் தூங்குப்பா! அப்புறம் படிக்கலாம்” என்று தாய் சொல்வது இயற்கை. தற்கால பாடத்திட்டத்தில் அதை மகன் மறுப்பதும் இயற்கைதான். ஆனால் தாயின் வேண்டுகோள் அறிவியல் பூர்வமாக உண்மையானதும் நேர்மையானதும் என நிரூபிக்கப்பட்டுள்ளது.
பென்சில்வேனியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உறக்கத்திற்கும் நினைவாற்றலுக்கும் உள்ள தொடர்பை ஆராய்ந்து முடிவுகளை வெளியிட்டுள்ளார்கள். உறக்கநிலையில் உள்ள மூளைசெல்களில் எவ்வாறு நினைவாற்றலை மேம்படுத்தும் மாற்றங்கள் நிகழ்கின்றன என்பதை அந்த முடிவுகள் வெளிப்படுத்துகின்றன.
அதாவது, உறக்கத்தின் விளைவாக செல்கள் அளவில் மாற்றங்கள் ஏற்படுகின்றன என்பதும் செல்களுக்கிடையேயான பிணைப்பு உறக்கத்தின்போது வலிமைபெறுகின்றன என்பதும்தான் இந்த புதிய கண்டுபிடிப்பு.
விழிப்புநிலையில் உள்ள மூளையும் உறக்கநிலையில் உள்ள மூளையும் அடிப்படையில் வேறுபட்டது என்கிறார் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஃப்ராங்க். விலங்கினங்களில் செய்யப்பட்டுள்ள இந்த ஆய்வு மனிதனின் நினைவாற்றல் தொடர்பான புதிர்களை அவிழ்ப்பதற்கும் பயன்படும் என்கிறார் பேராசிரியர் ஃப்ராங்க்.
விழிப்புநிலையில் இருக்கும் ஒரு விலங்கின் மூளை நியூரான்களில் உயிரி-இரசாயன மாற்றங்கள் நிகழ்வது இல்லை என்றும், உறக்க நிலைக்கு மாறிய விலங்கின் மூளையில் நினைவாற்றலை மேம்படுத்துவதற்குத் தேவையான மாற்றங்கள் ஏற்படுவது வியப்பிற்குரிய செய்தி என்கிறார் பேராசிரியர் ஃப்ராங்க்.
இதே பொருள் குறித்து சிகாகோ பல்கலைக்கழக பேராசிரியர் நுஸ்பாம் என்பவரும் ஆராய்ந்துள்ளார். பிரச்சினை சிக்கலானதாகவும் தீர்வுகாண இயலாததாகவும் இருக்கும்போது கொஞ்சநேரம் தூங்கி எழுந்தால்போதும். தீர்வு தெளிவாகிவிடும். இரவின் ஆழ்ந்த உறக்கம் நினைவாற்றலை தேக்கிவைக்கும் திறனை மேம்படுத்துகிறது. இதுமட்டுமல்லாமல் பகல்நேரத்தில் மறந்துபோன செய்திகளைக்கூட மீண்டும் நினைவுக்கு கொண்டுவந்து விடுகிறது. உறக்கத்தின் மகிமை இதுதான். இதைத்தான் சிக்காகோ பல்கலைக்கழக அறிவியலாளர்கள் கூறுகிறார்கள்.
பேராசிரியர் ஹோவர்ட் நுஸ்பாம் அவர்களின் உறக்கம், நினைவைத் தேக்கிவைத்தல் இவற்றிற்கிடையே உள்ள உறவை மெய்ப்பிக்கும் சோதனை படிக்கச் சுவையானவை.
ஒலிநாடாவில் பதிவுசெய்யப்பட்ட உரையின் தெளிவற்ற ஒலிமீட்பை மூன்று குழுக்களாக இருந்த கல்லூரி மாணவர்களை கேட்கச் செய்தார். முதல் குழு முதன்முறையாக அந்த உரையின் 21 சதவீத சொற்களை மட்டுமே புரிந்துகொண்டனர். ஒரு மணிநேர பயிற்சிக்குப் பிறகு அதே குழு 54 சதவீத சொற்களை புரிந்துகொண்டது. இது சாதாரணமாக கற்றல் போன்ற ஒரு நிகழ்வுதான்.
இரண்டாவது குழுவினரை காலை 9 மணிக்கு ஒரு முறையும், இரவு 9 மணிக்கு மற்றொருமுறையும் அந்த உரையை கேட்கச் செய்தார். இந்த மாணவர் குழு 31 சதவீத சொற்களை நினைவில் வைத்திருந்தனர். ஒர் இரவின் நிம்மதியான உறக்கத்திற்குப் பின்னர் இந்தக் குழுவின் சொற்களை நினைவில் வைத்திருக்கும் திறன் 40 சதவீதமாக உயர்ந்தது. மூன்றாவது மாணவர் குழுவிடம் மாலை 9 மணிக்கும், மீண்டும் உறக்கத்திற்குப் பிறகு காலையிலும் இதே சோதனை நடத்தப்பட்டது. சொற்களைத் தேக்கி வைக்கும் திறன் இந்தக்குழுவிடம் அதே 40 சதவீதமாக இருந்தது. உறக்கம் நமக்குத் தேவையில்லாத செய்திகளை அழித்து தேவையான செய்திகளை வலுப்படுத்தி நினைவலைகளாக மூளையில் பதியச் செய்கிறது.
அனுப்பி உதவியவர்: மு.குருமூர்த்தி
- விவரங்கள்
- மு.குருமூர்த்தி
- பிரிவு: புவி அறிவியல்
ஐம்புலன்களில் இருந்து வரும் உணர்வுகள் மூளையை அடைகின்றன. மூளை அவற்றை வகைப்படுத்தி உணர்ந்து கொள்கிறது. இந்த உணர்வுகள் மூளையிலேயே தங்கி இருந்தால் அவை நினைவுகளாக மாறிவிடுகின்றன. தேவை ஏற்படும்போது இந்த நினைவுகளை மீட்டெடுக்கமுடியும்.
நினைவாற்றலை குறுகிய கால நினைவாற்றல், நீண்டகால நினைவாற்றல் என இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். நமது மூளை அன்றாடம் ஆயிரக்கணக்கான தகவல்களைப் பெறுகிறது. அத்தனை தகவல்களையும் மூளையிலேயே சேமித்து வைக்கவேண்டிய அவசியம் ஏற்படுவதில்லை. அவசியமான காலத்திற்கு மட்டுமே அந்த தகவல்கள் மூளையில் சேமித்துவைக்கப்படுகின்றன. பணி முடிந்ததும் அந்த தகவல்கள் மறக்கப்பட்டு விடுகின்றன. இதுவே குறுகியகால நினைவாற்றல் என்று வகைப்படுத்தப்படுகிறது.
நாம் செய்யும் தொழிலுக்குத்தேவையானவை, நம்முடைய மனதை மிகவும் கவர்ந்தவை அல்லது பாதித்தவை, மீண்டும் மீண்டும் சொல்லிப்பார்த்தவை ஆகிய தகவல்கள் நம்முடைய மூளையில் நீண்டகால நினைவுகளாக தங்கிவிடுகின்றன. நீண்டகால நினைவுகளில் இருந்து தகவல்களை மீட்டெடுப்பதற்கு மூளை சிலநேரங்களில் சிரமப்படுவதை நாம் உணரமுடியும்.
மூளை பலசெய்திகளை ஒன்றுடன் ஒன்று தொடர்பு படுத்தி ஏற்கனவே பாதுகாக்கப்பட்ட தகவல்களுடன், புதிய தகவல்களையும் சேர்த்து பாதுகாக்கிறது. பலவருடங்கள் அந்த தகவல்களை வெளிக்கொணராமல் போனால் கோடிக்கணக்கான தகவல்களுக்கிடையில் அவை புதைந்து போகின்றன. இதனால்தான் நாம் சந்திக்கும் சிறுவயதுத் தோழரிடம், “உங்களுடைய பெயர் நாக்கில் இருக்கிறது; வரமாட்டேன் என்கிறது” என்று சொல்ல வேண்டிய சந்தர்ப்பம் ஏற்படுகிறது.
குழந்தை பிறந்து மூன்று வயது வரையில் தான் பார்ப்பது, கேட்பது அனைத்தையும் புகைப்படங்களாக தனித்தனியே மூளையில் பதிவு செய்துகொள்கிறது. அவற்றின் முழுப் பொருளும் குழந்தைகளுக்குப் புரிவதில்லை. மூன்றுவயதிற்கு மேல்தான் நீண்டகால நினைவுகள் படிப்படியாக உருவாகின்றன.
நன்றி: கலைக்கதிர்
அனுப்பி உதவியவர்: மு.குருமூர்த்தி
- விவரங்கள்
- மு.குருமூர்த்தி
- பிரிவு: புவி அறிவியல்
நீரிலும் நிலத்திலும் வசிப்பதால் தவளைகளை இருவாழ்விகள் என்றழைக்கிறோம். தவளைகளின் வாழ்க்கை பெரும்பாலும் நீர்நிலைகளின் அருகிலேயே இருப்பது கவனிக்கத்தக்கது. நீரில் தோன்றிய தவளை நிலத்தில் வாழ்வதற்கு பரிணாம வளர்ச்சியில் பல மாற்றங்களைப்பெற வேண்டியிருந்தது. மீன்களைப்போல செவுள்களால் சுவாசிக்காமல் நுரையீரல்களால் சுவாசிக்க வேண்டியிருந்தது. மேலும் தவளைகளின் முட்டைகள் காற்றிலோ, வெய்யிலிலோ அதிக நேரம் இருந்தால் நீர்ச்சத்து ஆவியாகி முட்டையில் உள்ள கரு இறந்துவிடும். தவளையின் தோல் மெல்லியதாகவும், நீர் புகக்கூடியதாகவும் இருக்கிறது. எனவே தவளைகள் அதிக காற்று உள்ள இடங்களையும், வெய்யில்படும் இடங்களையும் தவிர்த்துவிடும். தவளைகள் கடல்நீரில் வாழ்வது இல்லை. கடல்நீரில் இருக்கும் அதிகப்படியான உப்பு தவளையின் உடலுக்குள் சென்றால் தவளை இறந்துவிடும். ஆனால் கடல் நடுவே இருக்கும் தீவுகளில் தவளைகள் காணப்படுவது எப்படி? இலட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு கடல்மட்டம் தாழ்வாக இருந்ததால் இரு சாத்தியமாகி இருக்கிறது.
தவளைகளுடன் ஒப்பிடும்போது பல்லிகள் சற்று முன்னேறிய இனம் என்பதை உணரலாம். காரணம் பல்லிகள் ஓடுடன் கூடிய முட்டைகளை இடுகின்றன. இதனால் நீர்நிலைகளின் அருகில்தான் முட்டையிடவேண்டும் என்கிற அவசியம் பல்லிகளுக்கு இல்லை. மேலும் பல்லிகள், ஓணான்கள் இவற்றின் உடல் செதில்களால் மூடப்பட்டுள்ளதால் நீர் இழப்பு தவிர்க்கப்படுகிறது. பல்லிகள் மற்றும் ஓணான்களின் கால்விரல்கள் மரக்கிளைகளைப் பற்றிக்கொள்ள முடியும். ஆனால் நீந்துவதற்கு ஏற்றவாறு கால்விரல்கள் இல்லை. ஆனால் தீவுகளில் பல்லிகளும், ஓணான்களும் காணப்படுவதற்குக் காரணம் பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பாக கடல் மட்டம் தாழ்வாக இருந்ததுதான்.
மனிதர்கள் மூலமாக பல்லிகளும், ஓணான்களும், தவளைகளும் தீவுகளைச் சென்றடைந்திருக்கலாம் என்று கருதுவதற்கு இடமில்லை. ஏனெனில் ஒன்றிலிருந்து மற்றொன்று வேறுபடக்கூடிய பல்லிகள் காணப்படுகின்றன.
எனவே, பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பாக கடல்மட்டம் தாழ்வாக இருந்திருக்க வேண்டும் என்று கருத இடமிருக்கிறது.
நன்றி: தினமணி/04/01/2009
தகவல்: மு.குருமூர்த்தி
- பூமி வெப்பமடைந்தால் மாரடைப்பு, சுவாசக் கோளாறுகளால் இறப்போர் எண்ணிக்கை கூடும்
- தாகம் - ஒரு அறிவியல் பார்வை
- சரகன் என்னும் மாமேதை
- அழ வைக்கும் வெங்காயம்.
- வயதானால் மூளை மழுங்குமா?
- இசை பயின்றால் அறிவுத் திறன் பெருகும்
- சிறிய பயணிகள், பெரிய பயணம்
- தெய்வங்களும், முரட்டு தெய்வங்களும்.
- கால்நடைகளுக்கும் அக்குபங்சர் மருத்துவம்
- விளையும் பயிர் முளையிலே
- நில அதிர்வுகளை உண்டாக்கும் எரிமலைகள்
- மிதக்கும் பன்னாட்டு ஆய்வகம்
- கற்கால மனிதர்கள் கடல் பயணம் செய்தார்களா?
- ராமேஸ்வரத்தில் நில நடுக்கம் ஏன்?
- ஈறுகெட்ட நாகரிகம்
- பூமிக்கு அடியில் ஆராய்ச்சி
- இந்த கடல் வாழ் ஜெண்டில்மேன்களை யார் காப்பாற்றுவார்!?
- ஒரு துப்பறியும் கதை போல அழியும் பறவைகளைத் தேடி
- இளம் மரங்களை காக்கும் பனித் துளிகள்
- இரும்புப் பூச்சு பற்களுடன் கமோடோ டிராகன்