கீற்றில் தேட...
அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
மனிதன் பயன்படுத்தும் மருந்துகளால் விலங்குகளின் நடத்தை மற்றும் வாழ்க்கை முறை அதிர்ச்சி தரும் வகையில் மாற்றமடைகிறது. சூழல் மண்டலங்களை மாசுபடுத்தும் இவற்றால் அடிமையாதல், பதற்றம் மற்றும் பாலின மாறுபாடு போன்ற மாற்றங்கள் விலங்குகளிடம் ஏற்படுகின்றன என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
மெத்தம் பெட்டமீன் (methamphetamine) என்ற மருந்துப் பொருளுக்கு அடிமையான பழுப்பு நிற டிரவுட் (Brown drout) என்ற மீனினம் அந்த மருந்து அதன் உடலில் இருந்து நீக்கப்பட்டபோது இயல்பு நிலைக்குத் திரும்பியது.இனச்சேர்க்கையின்போது வன்முறையில் ஈடுபடும் ஸ்டார்லிங் (starling) என்ற சிறிய பறவையினம், மன அழுத்த சிகிச்சைக்கு மருந்துகளால் எதிரிகளைக் கண்டு அஞ்சும் பண்பை இழந்த ஐரோப்பிய பெர்ச் (European perch) என்ற நன்னீர் மீனினம், காபினுக்கு (Coffin) அடிமையான மினோஸ் (Minnows) என்ற நன்னீர் மீனினம் போன்ற விலங்குகள் மருந்துப் பொருள் கழிவுகளால் பாதிக்கப்படுகின்றன.
நவீன மற்றும் சட்ட விரோத மருந்துகளின் மாசு வன உயிரினங்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறி வருகிறது என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். இது குறிப்பிடத்தக்க, எதிர்பாராத மாற்றங்களை சில விலங்குகளின் நடத்தை மற்றும் உடல் உள்ளுறுப்பு அமைப்பில் ஏற்படுத்துகிறது.
ஸ்டார்லிங் பெண் பறவைகள் கழிவுநீரில் கலந்திருந்த மன அழுத்தத்திற்கு எதிரான ப்ரோசாகட் (Prozacat) என்ற மருந்துப் பொருளால் ஆண் இனத்துடன் இணை சேர்வதில் ஆர்வம் காட்டுவது குறைந்து விட்டது.
இதனால் சிறிய முதல் நடுத்தர அளவு உள்ள ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியாவின் வட பகுதி மற்றும் வட அமெரிக்காவில் வாழும் இந்தப் பறவைகளின் ஆணினம் இணை சேர்வதில் வன்முறையைப் பின்பற்றுகின்றன.
பெண் இனத்தைக் கவர குறைவான பாடல்களையே ஆண் பறவைகள் பாடுகின்றன. மனிதர் பயன்படுத்தும் கருத்தடை மாத்திரைகளால் சில மீனினங்களில் பாலின மாறுபாடுகள் ஏற்படுகின்றன. ஆண் மீனின் இனப்பெருக்க உறுப்பு பெண்ணின் இனப்பெருக்க உறுப்பாக மாறுகிறது. இது இந்த உயிரினங்களின் எண்ணிக்கை குறைய காரணமாகிறது, உள்ளூர் இனங்கள் அழிகின்றன.
இந்தியாவில் காணாமல் போன கழுகுகள்
இது மனித குலத்திற்கு விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்தும் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். “செயல் மிகு மருந்துப் பொருட்களில் சேர்க்கப்படும் செயல்மிகு உள்ளடக்கப் பொருட்கள் (Active pharmaceutical ingredients (Api)) உலகம் முழுவதும் உள்ள நீர் நிலைகளில் கலந்துள்ளன. இப்பொருட்களால் மாசடைந்த நீர் வாழ் உயிரினங்களையே நாம் உண்கிறோம். சமீபத்திய சில பத்தாண்டுகளில் இந்தப் போக்கு அதிகரித்துள்ளது.
"உயிர்ப் பன்முகத் தன்மையின் பாதுகாப்பிற்கு இது அச்சுறுத்தலாகிறது. இதுஉலகளாவிய பிரச்சனை” என்று ஸ்வீடன் வேளாண் அறிவியல் பல்கலைக்கழக ஆய்வாளரும் ஆய்வுக் கட்டுரையின் ஆசிரியர்களில் ஒருவருமான மைக்கேல் பேர்ட்ரம் (Michael Bertram) கூறுகிறார். இந்த ஆய்வுக்கட்டுரை நீடித்த நிலையான வளர்ச்சிக்கான இயற்கை (Nature Sustainability) என்ற இதழில் வெளிவந்துள்ளது.
மருந்துப் பொருள் உற்பத்தி நிறுவனங்கள் உடனடியாக பசுமை முறையுடன் அமைய வேண்டும். உற்பத்தியின் போது வெளியேற்றப்படும் இந்தப் பொருட்கள் மறு சுத்திகரிப்பு செய்யப்படாதபோது இவை நீருடன் கலக்கின்றன. மனிதன் உட்கொள்ளும் மருந்து அவனது உடலில் முழுமையாக சிதைவடைவதில்லை. அது கழிவாக வெளியேற்றப்படுகிறது. சூழலில் நேரடியாக சென்று சேர்கிறது.
கொக்கேன் (cocaine), காஃபின் போன்ற சட்ட விரோதப் பொருட்கள், மெத்தம்பெட்டமின் போன்ற மருந்துப் பொருட்கள், பதற்றம், மன அழுத்தம் மற்றும் மனநலப் பிறழ்வைக் குறைக்க உதவும் மருந்துகள் சூழலில் கலக்கின்றன. தெற்காசியாவில் கால்நடைகளுக்கு வீக்க நிவாரணியாக டிக்ளோஃபினாக் (Diclofenac) என்ற மருந்து கொடுக்கப்பட்டது.
நச்சு மருந்தை உட்கொண்டு பின் இறந்த கால்நடைகளின் உடல் எச்சங்களை கழுகுகள் உண்டு அதன் பாதிப்பால் உயிரிழந்தன. இதனால் இந்தியாவில் 1992-2007 காலத்தில் கழுகுகளின் எண்ணிக்கை 97% குறைந்தது. இறந்த கால்நடைகளின் உடல் எச்சங்களை உணவாக உட்கொள்ள போதிய எண்ணிக்கையில் கழுகுகள் இல்லாமல் போனது. ரேபிஸ் வெறி நாய்க்கடி நோய் பெருவாரியாகப் பரவியது.
செயல்மிகு உள்ளடக்கப் பொருட்கள்
குறைவான அளவே காஃபினை உட்கொண்டாலும் ஃபேட் தலை மினோஸ் (fathead minnows) என்ற வட அமெரிக்காவை தாயகமாகக் கொண்ட சிறிய அளவுடைய மீன்கள் போதையில் வாழ்ந்தன. நுண்ணுயிரி எதிர்ப்பொருட்கள் நுண்ணுயிரிகளையும் மனித உடல் நலத்தையும் பாதிக்கின்றன.
குறைந்த அளவில் கலந்திருந்தாலும் மருந்துகள் உயிரியல்ரீதியான பாதிப்புகளை உருவாக்கும் வகையிலேயே உற்பத்தி செய்யப்படுகின்றன. 104 நாடுகளில் 1052 இடங்களில் ஓடும் ஆறுகளில் குறைவான அளவுடன் 61 மருந்துகள் கலந்திருப்பது சமீபத்திய ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டது. இதில் 43.5 இடங்களில் சூழல் ஆரோக்கியத்திற்குப் பாதுகாப்பானது என்று வரையறை செய்யப்பட்ட அளவை விட ஒரு மருந்தேனும் இருப்பது தெரியவந்தது.
காலநிலை மாற்றம், வாழிட இழப்பு, மிதமிஞ்சிய பயன்பாடு போன்றவை ஏற்கனவே உயிர்ப் பன்மயத் தன்மையின் மீது அழுத்தம் செலுத்தும் நிலையில் மருந்துகளில் சேர்க்கப்படும் உள்ளடக்கப் பொருட்களால் ஏற்படும் மாசு தொடர்ந்து நிகழ்கிறது. சூழலில் இப்பொருட்களின் வாழ்க்கைச் சுழற்சி பசுமை நிறைந்ததாக மாற்றப்பட வேண்டும். இப்பொருட்களால் மருந்தியலாளர்கள், மருத்துவர்கள், தாதியர்கள், கால்நடை மருத்துவர்கள் சூழலில் உருவாகும் தாக்கத்தை அறிய வேண்டும்.
பயன்படுத்தப்பட்ட பின் மருந்துகள் சுலபமாக சிதையும் வகையில் வடிவமைக்கப்பட வேண்டும். சூழலில் இந்த மாசு கலப்பதைத் தடுக்க கழிவுநீர் சுத்திகரிப்பு விரிவாக்கப்பட வேண்டும். தொடர்ந்தும் இவ்வகை மாசு ஏற்படுவதைத் தடுக்க பசுமை மருந்துகளின் மூலக்கூறு வடிவமைப்பை சூழலுக்கு நட்புடையதாக மாற்ற வேண்டும்.
“இவ்வகை மருந்துகள் அவற்றின் வாழ்நாள் சுழற்சி முழுவதும் அவை ஏற்படுத்தும் சூழல் பாதிப்பைக் குறைக்க உதவுகிறது. மருந்துகள் பயனுள்ள விதத்தில், பாதுகாப்பானதாக உருவாக்கப்படுவதுடன் சூழலுக்கு ஏற்படுத்தும் ஆபத்தை குறைக்கும் வகையில் தயாரிக்கப்பட வேண்டும். இதனால் வன உயிரினங்களும் மனித நலமும் பாதுகாக்கப்படும்” என்று ஆய்வுக் கட்டுரையின் ஆசிரியர்களில் ஒருவரும் பாஸ்க் கண்ட்ரி (Basque Country) பல்கலைக்கழக மருத்துவப்பிரிவு பேராசிரியருமான கோர்க்கா ஆரி (Gorka Orive) கூறுகிறார்.
நவீன அறிவியல் தொழில்நுட்பம் நோய்களின் பிடியில் இருந்து மனிதர்களை காக்க உதவுவதற்கு பதில் சூழலையும் விலங்குகளையும் அழிக்கும் ஆயுதமாக மாறி விடக்கூடாது. அவ்வாறு நிகழ்ந்தால் அது மனிதன் தன்னைத்தானே அழித்துக் கொள்வதற்கு ஒப்பானது என்று ஆய்வாளர்கள் வலியுறுத்துகின்றனர்.
மேற்கோள்கள்: https://www.theguardian.com/environment/article/2024/jun/06/drug-pollution-wildlife-threat-aoe?
&
https://en.m.wikipedia.org/wiki/Fathead
&
https://en.m.wikipedia.org/wiki/Starling
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
ஆண் பூவும் பெண் பூவும் உள்ளபோது மகரந்த சேர்க்கைக்கு குளவிகளை எதற்காக அழைக்க வேண்டும்? அத்திப் பழம் பூவா? காயா? அத்தி மரத்தில் அத்திப் பழங்கள் எப்போதும் காய்களே. அப்படியென்றால் பூக்கள் இல்லையா? எங்கே அவை காணப்படுகின்றன? எவ்வாறு அவை மகரந்தச் சேர்க்கை செய்கின்றன? நம் நாட்டில் சுலபமாக எல்லா இடங்களிலும் வளரும் ஒரு மரமே அத்தி (Fig tree). சந்தையில் பல அமைப்பு, வடிவங்களில் பல வகை கலப்பின ரகங்கள் உள்ளன. இதன் பழங்கள் பல்வேறு தேவைகளுக்காக பயன்படுத்தப்படுகின்றன.ஹைப்பாந்தோடியம்
சாதாரண நாட்டு அத்தி ரகங்கள் ஐந்தாறு ஆண்டுகள் வளர்ந்த பிறகே காய்க்கின்றன. புதிய கலப்பின ரகங்கள் ஒன்றிரண்டு ஆண்டுகளுக்குள் வளர்ந்து குலை குலையாக காய்க்கின்றன. இதன் பூக்கள் எங்கே உள்ளன? இவை ஆல் குடும்பத்தைச் சேர்ந்த மரங்கள். ஆலின் காய் போலவேதான் இதன் இனப்பெருக்க சுழற்சியும் நடைபெறுகிறது. அத்தி உட்பட உள்ள ஆல் குடும்பத்தைச் சேர்ந்த மரங்களின் இனப்பெருக்கம் குறித்து சுவாரசியமான ஒரு கதை உண்டு.
உண்மையில் அத்திக் காய் சிறிதாக இருக்கும்போதே வளர்ச்சியடைந்த பூங்கொத்தை நாம் காணலாம். இதில் ஆல் மரத்தில் இருப்பது போல பார்ப்பதற்கு காய் போலத் தோன்றும் ஹைப்பாந்தோடியம் (Hypanthodium)) என்ற சிறப்பு மிக்க பூங்கொத்தில்தான் உள்ளன. பூவின் மேற்பகுதிகள் சேர்ந்தே காயின் மேலோடாக மாறுகிறது. இது ஒரு குடம் போல காணப்படுகிறது. இதனுள் ஏராளமான ஆண் பெண் பூக்கள் தோன்றுகின்றன.
இது அத்தியின் காய் பக்குவமடைவதற்கு முன்புள்ள நிலை. இவை உருண்டை முதல் முட்டை போன்ற வடிவங்களில் காணப்படுகின்றன. குடம் போன்ற அமைப்பை உடையது இது. இதன் உட்பகுதி வெறுமையாக இருக்கும். ஒரு சிறிய வாய்ப்பகுதி வெளிப்பக்கமாகத் திறந்து குடத்தின் மேற்பகுதியில் காணப்படும். உள் பக்கமாகத் திரும்பி நிற்கும் ஏராளமான உரோமங்கள் வாய்ப்பகுதியில் உள்ளன.
ஹைப்பாந்தோடியத்தின் உள்ளே அதன் அடியில் ஏராளமான பெண் பூக்களும் வாய்ப்பகுதியில் ஏராளமான ஆண் பூக்களும் காணப்படுகின்றன.
அத்தி உட்பட உள்ள ஆல் குடும்பத்தைச் சேர்ந்த தாவரங்களில் மகரந்தச் சேர்க்கை செய்ய ஃபிக் குளவிகளால் (Fig wasps) மட்டுமே முடியும். இந்த இனக் குளவிகள் மட்டுமே ஹைப்பாந்தோடியத்தின் வாய்ப்பகுதி வழியாக உள்ளே நுழைய பரிணாமம் அடைந்துள்ளன. ஒவ்வொரு ஆல் குடும்ப தாவரத்தின் மகரந்தச் சேர்க்கைக்கும் உதவ வெவ்வேறு குடும்பத்தைச் சேர்ந்த குளவி இனங்கள் உள்லன.
உள்ளே நுழையும் பெண் குளவி மற்றொரு மரத்தின் ஹைப்பாந்தோடியத்தில் இருந்து வருகிறது. வரும்போது அவை அந்த மரத்தின் ஆண் பூவின் மகரந்தத் தூளை கொண்டு வருகிறது. அப்போது ஹைப்பாந்தோடியத்தில் பெண் பூக்கள் மட்டுமே முழு வளர்ச்சி அடைந்திருக்கும். ஆண் பூக்கள் வளர் நிலையில் இருக்கும். வெளியில் இருந்து பெண் குளவியால் கொண்டு வரப்பட்ட மகரந்தத் தூளைப் பயன்படுத்தி அது சில பெண் பூக்களில் மகரந்தச் சேர்க்கை நடத்தும்.
கூட்டு வாழ்க்கை
பிறகு குளவி மீதி இருக்கும் பூக்களில் முட்டையிடும். ஒரு முறை உள்ளே நுழைந்தால் பிறகு பெண் குளவியால் வெளியில் வரமுடியாது. ஹைப்பாந்தோடியத்தின் வாய்ப்பகுதியில் பின்னோக்கி வளைந்து வளர்ந்திருக்கும் உரோமங்களே இதற்குக் காரணம். இதனால் முட்டையிட்டு முடிந்த பின் பெண் குளவிகள் ஹைப்பாந்தோடியத்திற்குள் இருந்து உயிரிழக்கின்றன.
சில பூக்களில் நடந்த மகரந்தச் சேர்க்கை மூலம் ஹைப்பாந்தோடியம் வேகமாக முதிர்ச்சியடைந்து பழுக்க உதவும் வேதிமாற்றங்கள் நிகழத் தொடங்கும். முட்டை விரிந்து உண்டாகும் இளம் புழுக்கள் மீதமிருக்கும் பெண் பூக்களைத் தின்று வளரும். ஹைப்பாந்தோடியம் பழுக்கும்போது முழு வளர்ச்சியடைந்த புழுக்கள் ஆண் பெண் குளவிகளாக மாறும். இதில் பெண் குளவிகளுக்கு மட்டுமே இறக்கைகள் உண்டு.
இறக்கைகள் இல்லாத ஆண் குளவிகள் பெண் குளவிகளுடன் இணை சேர்ந்த பிறகு ஹைப்பாந்தோடியத்திற்குள் இருந்து உயிரை விடுகின்றன. அப்போது ஹைப்பாந்தோடியத்தில் ஆண் பூக்கள் மலரும். அதன் மகரந்தத் தூள்கள் வெளிவரும். இணை சேர்ந்த பெண் குளவிகள் இந்த மகரந்தத் தூளை சேகரித்து காயைத் துளைத்து இன்னொரு மரத்தின் ஹைப்பாந்தோடியத்தை நோக்கிச் செல்லும். இந்த வாழ்க்கைச் சுழற்சி தொடர்ந்து கொண்டேயிருக்கும். மகரந்தச் சேர்க்கை நடந்த காயில் புதிய விதைகள் தோன்றும்.
வாழ்க்கைச் சுழற்சியை நிறைவு செய்ய மரத்திற்கும் குளவிக்கும் இடையில் நிலவும் இந்த கூட்டுயிரி வாழ்க்கை உதவுகிறது. மகரந்தச் சேர்க்கைக்குப் பிறகு பெண் பூக்கள் சிறிய விதைகளாக மாறுகின்றன. மேல் தோடு ஒரு பழமாக உருமாற்றம் அடையும். பழமாவதுடன் அதன் நிறம், சுவை, மணத்தில் பெரிய வேறுபாடுகள் ஏற்படும். பல சமயங்களிலும் நாம் பறித்து எடுக்கும் அத்திப் பழத்தில் ஆண் குளவிகளின் உடற்பகுதிகளும் குடத்தைவிட்டு வெளியேறாத பெண் குளவிகளின் உடற்பகுதிகளும் இருக்கலாம்.
இதனால்தான் அ த்திப் பழத்தை பறித்து சாப்பிடும்போது உட்பகுதியைப் பரிசோதித்த பிறகு சாப்பிட வேண்டும் என்று சொல்லப்படுகிறது. இயற்கையின் படைப்பில் எல்லா உயிரினங்களும் ஏதேனும் ஒரு வகையில் மற்றொன்றுடன் பிணைக்கப்பட்டுள்ளது. ஒரு துணியின் நூலிழைகள் போல இவை ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்துள்ளன. இதில் ஒரு கண்ணி அறுந்தால் நூலிழைகள் அறுந்து போவது போல அதனுடன் பிணைக்கப்பட்டுள்ள எல்லாம் தகர்ந்து போகும்.
அத்தியின் அற்புத மகரந்தச் சேர்க்கை
இதனால்தான் உயிரினங்கள் இன அழிவைக் கண்டு அறிவியல் உலகம் அஞ்சுகிறது. குளவியினம் ஏதாவது ஒரு காரணத்தால் அழிந்து போனால் அது மகரந்த சேர்க்கை செய்து கொண்டிருந்த தாவர இனமும் கூடவே அழிந்துபோகும். அப்போது அந்த தாவரத்தை வேறு தேவைகளுக்காக நம்பி வாழும் மற்ற உயிரினங்களும் அழிந்து போகும். இது ஒரு சங்கிலித்தொடர் போலத் தொடரும்.
அத்தி மரங்கள் எதற்காக இவ்வளவு ரிஸ்க் எடுத்து குளவிகளை மகரந்தச் சேர்க்கைக்கு நம்புகின்றன? அதுவும் ஒரு ஹைப்பாந்தோடியத்தில் ஆண் பூவும் பெண் பூவும் இருக்கும்போது இவை எதற்காக இவ்வளவு கஷ்டப்பட்டு குளவிகளை மகரந்தச் சேர்க்கைக்குப் பயன்படுத்துகின்றன? தன் மகரந்தச் சேர்க்கை என்பது ஒரு தாவரம் அதன் மகரந்தத் தூளை அதே தாவரத்தின் சூலகத்தைப் பயன்படுத்தி செய்யும் மகரந்தச் சேர்க்கை.
ஆனால் இதன் மூலம் உருவாகும் வாரிசுகளுக்கு புதிய பண்புகள் எதுவும் கிடைப்பதில்லை. ஒரு ஆண் பூவின் மகரந்தத் தூள் அதே இனத்தைச் சேர்ந்த மற்றொரு பெண் பூவின் சூலகத்தைச் சென்றடைகிறது. இது அயல் மகரந்தச் சேர்க்கை. இதனால் புதிய வாரிசுகளுக்கு பல சிறப்பு பண்புகள் கிடைக்கின்றன. பரிணாமத்தின் இயக்கு விசை (driving force) தாவரத்தில் உருவாகும் மாறுபாடுகளால் (variation) ஏற்படுகிறது.
தாய் தந்தையிடம் இருந்து வாரிசுகள் சிறப்புப் பண்புகளாக பெறுபவை மாறுபாடுகள் என்று அழைக்கப்படுகின்றன. இதற்கு பல வழிகள் உள்ளன. திடீர்மாற்றம் (mutation), மரபணுக்களின் மறு இணைப்பு genetic (recombination) போன்றவை இவற்றில் ஒரு சில. தாவரங்களில் மாறுபாடுகளை ஏற்படுத்த காரணமாக அமையும் வழியே அயல் மகரந்தச் சேர்க்கை.
இதனால் பெரும்பாலான தாவரங்கள் அயல் மகரந்தச் சேர்க்கைக்கு பல வழிகளைப் பின்பற்றுகின்றன, பூச்சிகளைப் பயன்படுத்துகின்றன. சில தாவரங்கள் முதலில் அயல் மகரந்த சேர்க்கை செய்ய முயற்சிக்கின்றன. அது இயலாவிட்டால் தன் மகரந்தச் சேர்க்கை செய்து இனம் அழியாமல் பாதுகாக்கின்றன. ஆனால் சில தாவரங்களில் அயல் மகரந்தச் சேர்க்கை மட்டுமே இனப்பெருக்கத்திற்கான ஒரே வழியாக உள்ளது.
இதற்கு எடுத்துக்காட்டு அலங்காரத் தாவரங்கள். இயற்கையின் படைப்பில் அத்தி மரத்தின் மகரந்தச் சேர்க்கை ஓர் அற்புதமே!
மேற்கோள்: https://www.mathrubhumi.com/environment/columns/fig-tree-flowers-pollination-symbiosis-1.10015893
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
உலகம் முழுவதும் ஆக்கிரமிப்பு உயிரினங்கள் ஆண்டிற்கு 423 பில்லியன் டாலர் இழப்பை ஏற்படுத்துகின்றன. பூமியின் உயிர்ப் பன்மயத் தன்மை மற்றும் உயிர்களின் வாழ்விற்கு இவை அச்சுறுத்தலாக மாறியுள்ளன என்று அண்மையில் வெளியிடப்பட்டுள்ள ஐநா ஆய்வறிக்கை கூறுகிறது.
புல்லினங்கள் முதல் சுண்டெலிகள் வரை
கடற்பறவைக் குஞ்சுகளை உண்ணும் சுண்டெலி முதல் அந்நிய நாட்டில் இருந்து ஹவாய் தீவிற்கு ஆக்கிரமிப்பு உயிரினமாக நுழைந்து அங்கு வரலாற்று காணாத கடும் காட்டுத்தீயை ஏற்படுத்திய புல்லினத் தாவரங்கள் வரை இந்த உயிரினங்கள் சூழல் மண்டலத்திற்கு பெருத்த நாசத்தை ஏற்படுத்தி வருகின்றன. மனிதக் குறுக்கீடுகள் மற்றும் வணிகத்தின் மூலம் உலகளவில் ஒவ்வொரு பிராந்தியத்திலும் 3500 தீமை தரும் ஆக்கிரமிப்பு உயிரினங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த உயிரினங்களின் தாக்கம் மனிதர்களுக்கும் வன உயிரிகளுக்கும் அழிவை ஏற்படுத்துகிறது. சில சமயங்களில் இது உயிரினத்தின் இன அழிவிற்கும் காரணமாகிறது. அந்த சூழல் மண்டலத்தின் ஆரோக்கியமான செயல்முறையில் நிரந்தரமான சேதத்தை ஏற்படுத்துகிறது. ஆக்கிரமிப்பு உயிரினங்கள் உருவாக்கியுள்ள அச்சுறுத்தல்கள் உலக மக்களால் இன்னும் சரிவர அங்கீகரிக்கப்படவில்லை, குறைவாக மதிப்பிடப்படுகிறது, உரிய முக்கியத்துவத்துடன் ஏற்கப்படுவதில்லை.
37 ஆயிரத்திற்கும் கூடுதலான அந்நிய உயிரினங்கள் இதுவரை உலகம் முழுவதும் மனிதச் செயல்களால் ஆக்கிரமிப்பு இனங்களாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதில் 200 இனங்கள் ஒவ்வொரு ஆண்டும் அவை புகுந்த இடங்களில் தங்களை நிலைநிறுத்திக் கொள்கின்றன.
இந்த உயிரினங்கள் அனைத்தும் ஆக்கிரமிப்பு உயிரினங்களாக மாறுவதில்லை என்றாலும் இவற்றில் பெரும்பாலானவை உள்ளூர் மற்றும் உலகளவிலான இனங்களின் நிரந்தரமான அழிவிற்குக் காரணமாகின்றன.
இவை மனிதர்களின் ஆரோக்கியத்தைப் பாதிக்கின்றன என்று ஆய்வுக் குழுவின் முன்னணி ஆசிரியர்கள் பேராசிரியர் ஹெலன் ராய் (Prof Helen Roy) பேராசிரியர் ஆனிபல் பாச்சார்டு Prof Anibal Pauchard) மற்றும் பேராசிரியர் பீட்டர் ஸ்டோட் (Prof Peter Stoett) ஆகியோர் கூறுகின்றனர். இதை வெறும் ஓர் உயிரி ஆக்கிரமிப்பாக மட்டும் கருதி யாரோ ஒருவரை மட்டும் பாதிக்கும் பிரச்சனையாக நினைப்பது மிக மோசமான விளைவை ஏற்படுத்தக்கூடிய ஒரு விலையுயர்ந்த தவறு என்று ராய் கூறுகிறார்.
இந்த உயிரினங்கள் இயற்கையில் மீளமுடியாத பெரும் நாசத்தை ஏற்படுத்துகின்றன. இதனால் உண்டாகும் சேதங்கள் இடத்திற்கு இடம் மாறுபடுகிறது. உயிர்ப் பன்மயத்தன்மை அறிவியல் தொடர்பான ஐநாவின் முன்னணி ஆய்வு அமைப்பான உயிர்ப் பன்மயத்தன்மை மற்றும் சூழல் மண்டல பாதுகாப்பிற்கான பன்னாட்டு அரசுகளுக்கு இடையிலான அறிவியல் கோட்பாட்டிற்கான தளத்தால் (IPBES) இந்த ஆய்வுகள் நடத்தப்பட்டது.
இந்த ஆய்வுகளில் விஞ்ஞானிகள், ஆதிவாசி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட 86 நிபுணர்கள் நான்கரை ஆண்டுகளுக்கும் மேலாக ஈடுபட்டனர். ஜெர்மனி பான் நகரில் சமீபத்தில் இவை குறித்து நடந்த பன்னாட்டு அரசுகளின் கூட்டத்தில் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டது.
மாசுபடுதல், காலநிலை மாற்றம், ஆக்கிரமிப்பு உயிரினங்கள், உயிரினங்களை நேரடியாக சுரண்டுதல், நிலப்பகுதி பயன்பாட்டில் மாற்றங்களால் ஒரு மில்லியன் உயிரினங்கள் அழியும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளன என்று 2019ல் வெளிவந்த எச்சரிக்கையைத் தொடந்து இந்த ஆய்வுகள் நடந்தன.
நீர்வாழ் தாவரம் முதல் எலிகள் வரை
மனிதனுக்குத் தெரிந்த அனைத்து வகை உயிரினங்களில் 40% உயிரினங்களின் அழிவிற்கு ஆக்கிரமிப்பு உயிரினங்களே காரணம். இது பற்றிய விரிவான ஆய்வுகள் தொடர்ந்து நடத்தப்படவுள்ளது. ஆக்கிரமிப்பு உயிரினங்களின் பட்டியலில் தென்னமெரிக்காவைத் தாயகமாகக் கொண்ட, நீர் நிலைகளில் நீரோட்டத்தை தடுத்து மீன் வளத்தை பாதிக்கும் நீர் வாழ் ஹையசிந்த் (water hyacinth) என்ற ஒருவகை பூங்கோரை தாவரம், லண்டானா (lantana) என்ற பூக்கும் புதர்த்தாவரம் மற்றும் கறுப்பு எலிகள் (Black rat) ஆகியவை முதலிடத்தில் இடம்பெற்றுள்ளன.
வெஸ்ட் நைல் வைரஸ் (West Nile) காய்ச்சலை ஏற்படுத்தும் ஏடிஸ் ஆல்பபிக்ட்டெஸ் (Aedes albopictus) மற்றும் ஜிகா வைரஸ் (Zika virus) காய்ச்சலை ஏற்படுத்தும் ஏடிஸ் எஜிப்டி (Aedes aegypti) ஆகிய கொசு இனங்கள் பிற எடுத்துக்காட்டுகள். உலகளவில் அமெரிக்காவில் 34%, ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியாவில் 31%, ஆசிய பசுபிக்கில் 25% மற்றும் ஆப்பிரிக்காவில் 7% ஆக்கிரமிப்பு உயிரினங்கள் உள்ளன.
இதில் மூன்றில் ஒரு பங்கு தரை மேற்பரப்பில் வாழ்கின்றன. இவற்றில் பெரும்பாலானவையும் மரங்கள் அடர்ந்த பகுதிகள் மற்றும் அதிக குளிருள்ள உயரமான இடங்களில் வளரும் காடுகளில் காணப்படுகின்றன. 1970கள் முதல் இந்த உயிரினங்களின் ஊடுருவல் ஒவ்வொரு பத்தாண்டிலும் 400 மடங்கு அதிகரிக்கிறது. வரும் ஆண்டுகளில் இது இப்போது உள்ளதைவிட அதிகமாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனால் ஒவ்வொரு சமூகத்திற்கே உரிய உயிரினங்களின் தனிச்சிறப்பு மிக்க வாழ்க்கை முறை அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
உலகில் இத்தகைய உயிரினங்கள் அதிகமாகப் பரவும்போது சமூகங்களின் தனி அடையாளம் மறைந்து போகும் ஆபத்து ஏற்படும். சூழல் மண்டலங்கள் சூழலை ஆக்கிரமிக்கும் உயிரினங்களுக்கு எதிராகப் போராடும் திறனை இழக்கும் நிலை உருவாகும். இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு ஹவாய் தீவில் ஏற்பட்ட பெரும் காட்டுத்தீ சம்பவம். இந்த உயிரினங்களைப் பரவாமல் தடுக்க வழிகள் உள்ளன. தீவுப்பகுதிகளில் இருந்து இத்தகையவற்றை ஒழிக்க எடுக்கப்பட்ட முயற்சிகள் 88% வெற்றி பெற்றுள்ளன.
எடுத்துக்காட்டு கரீபியன் பகுதியில் உள்ள ஆண்டிகுவா (Antigua) மற்றும் பார்புடாவிண் (Barbuda) பகுதியாக அமைந்துள்ள ஒரு மைல் நீளமுள்ள ரிடாண்டா (Redonda) என்ற பகுதி. இப்பகுதியை ஒரு காலத்தில் ஆக்கிரமித்திருந்த கறுப்பு எலிகள், காட்டு ஆடுகள் (feral goats) ஆகியவை 2017ல் நீக்கப்பட்டவுடன் இயற்கை தாவரங்கள், பறவைகள் மற்றும் ஊர்வன வகை விலங்குகள் இங்கு மீண்டும் வந்து வாழத் தொடங்கின. இதனால் தரிசாகக் கிடந்த இப்பகுதி மீண்டும் பசுமை எழில் கொஞ்சும் இடமாக மாறியது.
அதிக செலவு பிடிக்கும் ஆக்கிரமிப்பு உயிரினங்களைவிரட்டும் அல்லது ஒழிப்புத் திட்டங்களைக் காட்டிலும் இவை புதிய பகுதிகளுக்கு பரவாமல் தடுப்பதே இப்பிரச்சனைக்கு சிறந்த தீர்வு என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு சொந்தமில்லாத ஒரு உயிரினத்தை நுழையாமல் தடுக்க உயிரி பாதுகாப்பு (biosecurity) வழிமுறைகளை கையாள வேண்டும். எல்லைக் கட்டுப்பாடு, அந்நிய உயிரினங்களின் வரவால் உருவாகக்கூடிய பாதிப்புகள் பற்றி மதிப்பிடுதல் போன்ற வழிமுறைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
ஐநா இதற்கான உலகளாவிய இலக்கை நிர்ணயித்து வலியுறுத்திய போதிலும் இது பற்றிய எந்த தேசிய திட்டமிடலும் இல்லாமல் உலகில் 84% நாடுகள் உள்ளன. ஆனால் நியூசிலாந்து போன்ற ஒரு சில நாடுகள் இதில் சிறப்பாக செயல்படுகின்றன. நியூசிலாந்து இந்நூற்றாண்டின் பாதிக்குள் அந்நாட்டின் தீவுகளில் ஊடுருவியுள்ள அனைத்து உயிரினங்களையும் அப்புறப்படுத்தும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
இதை மற்ற உலக நாடுகள் முன் மாதிரியாகக் கொண்டு பின்பற்றினால் மட்டுமே உயிர்ப் பன்மயத் தன்மையும் மனிதன் உட்பட எல்லா உயிரினங்களும் வருங்காலத்தில் பூமியில் நீடித்து நிலையாக வாழ முடியும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
மரம் நடுதல் பூமி சூடாவதைத் தடுக்க உதவும் என்று கருதப்படுகிறது. ஆனால் இது வெப்ப மண்டலக் காடுகளில் உயிர்ப் பன்மயத் தன்மைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன. ஒரே இன மரங்கள் நடுவது அந்தந்த இடங்களுக்கே சொந்தமான பாரம்பரிய தாவர, விலங்கினங்களை அழிப்பதுடன் சூழல் பாதுகாப்பில் மிகக் குறைந்த பயன்களையே தருகிறது என்று இது பற்றி சமீபத்தில் சூழலியல் & பரிணாமம் இன்றைய போக்குகள் (Journal Trends in Ecology & Evolution) என்ற இதழில் வெளிவந்த ஆய்வுக் கட்டுரை கூறுகிறது.ஒற்றை இன மர வளர்ப்பு
ஒற்றை இன மரம் வளர்ப்பு (monoculture tree planting) திட்டங்கள் வெப்பமண்டல உயிர்ப் பன்மயத் தன்மையை அழிக்கிறது. இதனால் அமேசான், காங்கோ டெல்டா போன்ற சூழல் மண்டலங்களின் கார்பன் சேகரிப்பு மதிப்பு குறைகிறது. மரங்களை எரித்து கரித்தூள் உண்டாக்க காங்கோ டெல்டாவில் காடுகள் அழிக்கப்பட்டு பெரும் எண்ணிக்கையில் யூகலிப்ட்டஸ் மரத் தோட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
உமிழப்படும் மிதமிஞ்சிய கார்பனை வளிமண்டலத்தில் இருந்து பிரித்தெடுக்க ஒரே வகையான மரங்களை நட்டு வளர்க்கும் பிரம்மாண்ட மரம் நடுதல் திட்டங்களை அரசுகள் கைவிட்டுவிட்டு, இருக்கும் காடுகளை வணிக மயமாக்குதலில் இருந்து மீட்டு பாதுகாக்க வேண்டும்.
கார்பன் சேமிப்பிற்காக வணிகரீதியில் வெப்பமண்டலக் காடுகளில் பெருமளவில் உருவாக்கப்படும் பைன், யூக்கலிப்ட்டஸ் மற்றும் தேக்கு மரத் தோட்டங்கள் (tree plantations) உள்ளூர் தாவர சூழல் மண்டலத்தைப் பாதிக்கிறது. மண்ணை அமிலத் தன்மை உடையதாக்குகிறது, பாரம்பரிய தாவரங்களை மண்ணோடு மண்ணாக்குகிறது, காட்டுத்தீ சம்பவங்களுக்குக் காரணமாகிறது.
வெப்பமண்டல சூழல் மண்டலங்கள் கணக்கற்ற நன்மைகளை செய்து வருகின்றன. என்றாலும் சமூகம் அதன் மதிப்பை ஒரு மெட்ரிக் டன் கார்பன் சேகரிப்பு என்ற அளவில் குறைத்து விட்டது.
மரங்களை அதிக அளவில் நடுவது உயிர்ப் பன்மயத் தன்மை, சூழல் மண்டலச் செயல்பாடுகள், சமூகப் பொருளாதார நன்மைகளைத் தருகிறது என்று பொதுவாக கருதப்படுகிறது. ஆனால் இது உண்மையில்லை. சுழிநிலைக் கார்பன் உமிழ்வு (Zero Carbon emission) என்ற நோக்கத்துடன் உலகம் முழுவதும் தனிநபர், தனியார் மற்றும் பொதுத் துறைகளில் பசுமைப் போர்வை பரப்பை அதிகரிக்க மரம் நடுதல் பெருமளவில் நடைபெறுகிறது.
"காடுகள் ஒரே இனத்தைச் சேர்ந்த மரத்தோட்டங்களை விட 40 மடங்கு அதிக கார்பனை சேகரிப்பதற்கு உதவுகின்றன. வெப்ப மண்டலப் பகுதிகளில் ஒரே இனத்தைச் சேர்ந்த மரத் தோட்டங்கள் அதிகம் உருவாக்கப்படுவதால் விஞ்ஞானிகள் இது பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டனர்” என்று ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழக சூழலியலாளரும் ஆய்வுக் கட்டுரையின் முதன்மை ஆசிரியருமான ஜெஸ்வ அஃப்க்வெரா-குடியேரஸ் (Jesuas Aguirre-Gutiérrez) கூறுகிறார்.
“தேக்கு, யூக்கலிப்ட்டஸ், ஊசியிலைக் காடு மரங்கள் போன்றவை வளர்க்கப்படுவது உயிர்ப் பன்மயத் தன்மைக்கு எந்த நன்மையையும் செய்வதில்லை. மாறாக பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் சுயலாபத்திற்காகவே இவற்றை வளர்க்கின்றன. மரங்களை, கார்பனை சேகரிக்கும் வெறும் குச்சிகளாக நடத்துவது ஆபத்தானது” என்று லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரி உலகளாவிய மாற்றம் பற்றிய அறிவியல் துறை பேராசிரியர் சைமன் லூயிஸ் (Simon Lewis) கூறுகிறார்.
உயிர்ப் பன்மயத் தன்மையை அழித்த ஒற்றை மரக்காடுகள்
ஓர் ஆண்டு கார்பன் உமிழ்வை உறிஞ்ச அமெரிக்கா, சீனா, ரஷ்யா, இங்கிலாந்தின் பரப்பிற்கு சமமான பரப்பில் காடுகள் புதிதாக வளர்க்கப்பட வேண்டும். பொருளாதார ரீதியாக தோட்டங்கள் லாபம் தருபவை என்றாலும், அவை சூழலுக்கு நன்மை செய்வதில்லை. எடுத்துக்காட்டு பிரேசிலில் சராடோ சவானா (Cerrado savanna) என்ற பகுதியில் 40% கூடுதல் தோட்டங்கள் உருவாக்கப்பட்டது. இது, அங்கு இருந்த தாவரங்கள் மற்றும் எறும்புகள் போன்றவற்றின் 30% உயிர்ப் பன்மயத் தன்மையை அழித்து விட்டது.
காகிதங்கள், மரப் பொருட்களுக்கு தோட்டங்கள் அவசியம் என்றாலும், தொழில் ரீதியாக செய்யப்படும் மர வளர்ப்பு பிரச்சனையை மோசமாக்குகிறது. “மற்ற சூழல் மண்டலங்களால் ஏற்படும் நன்மைகளைப் புறக்கணித்து ஒரு சூழல் மண்டலத்தின் கார்பன் சேமிப்பு மதிப்பை மட்டும் பெரிதாகக் கருதுவது தவறு” என்று உலகில் நகரப் பகுதிகள், விவசாய நிலப் பகுதிகளுக்கு அப்பால் காடுகளை உருவாக்க 2.2 பில்லியன் ஏக்கர் பொருத்தமான இடம் உள்ளதைக் கண்டறிந்து மற்றொரு ஆய்வின் மூலம் கூறிய ஜூரிச் இ டி ஹெச் (ETH) ஆய்வு அமைப்பின் சூழலியல் பேராசிரியர் மற்றும் ஆய்வுக்குழுவின் இணை ஆசிரியர் தாமஸ் க்ரோதர் (Thomas Crowther) கூறுகிறார்.
இயற்கையின் ஒரு பகுதிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும்போது, நாம் மற்ற பகுதிகளை பலி கொடுத்தே அதைச் செய்கிறோம். வரலாற்றுக் காலம் முதல் மரங்களை நாம் மரங்களுக்காக மரங்களாக மதித்தோம். ஆனால் இப்போது இந்த நிலை மாறி விட்டது. சூழலைக் காப்பதற்கு என்று சொல்லி நட்டு வளர்க்கப்படும் பெரும் பரப்பு ஒற்றை மரக் காடுகள் சூழலை அழிக்கின்றன. இந்த நிலை மாறினால்தான் புவி வெப்ப உயர்வால் அழியும் மிச்சம் மீதி தாவர விலங்குகள் உயிர் பிழைக்கும்.
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- தாவர, விலங்குகள் போல பூஞ்சைகளுக்கும் உரிய மரியாதை
- ஒளிரும் பாலூட்டிகள்
- ஆஹா ஹா
- அழியும் உரங்கோட்டான்களை யார் காப்பாற்றுவார்?
- கழிவு நீரை சுத்தப்படுத்தும் அதிசய உயிரினம்
- அழிந்த பறவைகள்
- பூச்சிகளின் அழிவால் மாறும் பூக்களின் மகரந்த சேர்க்கை
- காலத்திற்கேற்ப கோலம் மாறும் பறவைக் கூடுகள்
- பாதாளத் துயரம்
- மயான அமைதியில் இயற்கை
- இரயில்கள் ஏன் இவர்களின் வீடுகளை ஆக்ரமிக்கின்றன?
- மண் வண்டுகள்
- பாடத் துடிக்கும் நகரத்துப் பறவைகள்
- ஈ… பறக்க முடியாத ஈ
- சுரங்கப் பாதைகளில் தஞ்சமடைந்த கொசுக்கள்
- பாம்புகள்: பாயும் பகுத்தறிவும் பதுங்கும் மூடநம்பிக்கைகளும்
- இலை வெட்டும் எறும்புகள்
- காடு காக்க உதவும் கறுப்பு மரங்கொத்தி
- மனிதனைக் கொல்ல வந்தவை அல்ல பாம்புகள்!
- காடு காக்கப் போராடும் பெண்கள்