கீற்றில் தேட...
அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- பரிதி
- பிரிவு: சுற்றுச்சூழல்
இயற்கையையும் மனித வாழ்வையும் சிதைக்கும் முதலாண்மைப் பொருளாதார முறைமையைக் ('முதலாளித்துவம்' - capitalism) கைவிட்டு அனைவருடைய அடிப்படைத் தேவைகளையும் நிறைவு செய்யவல்ல பொதுவுடைமைப் பொருளாதார முறைமையை உலகம் முழுவதிலும் நடைமுறைப்படுத்துவதே சூழலியல் பேரழிவைத் தடுக்கும்.
முதலாண்மைப் பொருளாதாரத்தில் நிறுவனங்களுடைய உபரி ('லாப') வெறிக்காக இயற்கை வளங்களும் மனித உழைப்பும் சூறையாடப்படுகின்றன. மனிதருடைய தேவைகளைத் தொடர்ந்து பெருக்கிக் கொண்டே போனால்தான் நிறுவனங்கள் உபரி ஈட்ட முடியும். ஆகவே, தேவைகளைக் குறைப்பதற்கு மாற்றாகப் பிற 'தீர்வுகள்' முன்வைக்கப்படுகின்றன.
இது குறித்த ஆங்கிலக் கட்டுரையொன்றின் சுருக்கப்பட்ட தமிழாக்கம் வருமாறு:
------------
புவியின் இயற்கைச் சூழல் மிக, மிக மோசமாகக் கெட்டுவிட்டது. அதன் ஆபத்துகளைப் பற்றி நாள்தோறும் செய்திகள் வருகின்றன. அது குறித்து அரசாங்கங்கள் உடனடியாக 'ஏதாவது' செய்ய வேண்டும் என்கிற குரல்கள் அறிவியலாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்புகளில் இருந்தும் வலுக்கின்றன.
குறிப்பாக, சூழலைக் கெடுக்காத 'பசுமைத் தொழில்நுட்பத்தை' வரவர அதிகம் பயன்படுத்த வேண்டும் என்று கூறப்படுகிறது. (அப்படிச் செய்தால் நம் தேவைகளைக் குறைக்க வேண்டியதில்லை என்கிற நம்பிக்கை தொடர்ந்து நமக்கு ஊட்டப்படுகிறது. கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை!)
ஆனால், அந்தத் தொழில்நுட்பத்தைச் செயல்படுத்தும்போது (அ) இயற்கைச் சூழல் பெருமளவு கெடுகிறது; (ஆ) மனித உரிமைகள் மறுக்கப்படுகின்றன.
------------
‘பசுமைத் தொழில்நுட்பத்தின் சூழல் கேடுகள்’ குறித்த சில எடுத்துக்காட்டுகளை முதலில் பார்க்கலாம்.
- காற்றிலிருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்யும் காற்றாலை (wind turbine) ஒன்றை உற்பத்தி செய்வதற்கு 900 டன் எஃகு, 2,500 டன் கான்க்ரீட், 45 டன் நெகிழி (plastic) ஆகியன தேவைப்படுகின்றன.
- ஒரு டன் எஃகு உற்பத்தி செய்வதற்குத் தேவையான கனிமங்களை அகழ்ந்தெடுப்பதற்கு 780 கிலோ நிலக்கரி தேவைப்படுகிறது.
- ஒரு டன் கான்க்ரீட் உற்பத்தி செய்கையில் ஒன்றே கால் டன் கரி-ஈருயிரகை (carbon dioxide) வெளியாகிறது. (இது நம் புவியைச் சூடாக்கும் பசுங்குடில் வளிகளில் ஒன்று.)
- கதிரொளியில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்யும் தகடுகளை (solar panels) உற்பத்தி செய்வதற்கு வழக்கமாகப் பயன்படுத்தும் தொழில்நுட்பம் nitrogen trifluoride வளியை வெளியிடுகிறது. இது மிக மோசமான பசுங்குடில் வளிகளில் ஒன்று; கரி-ஈருயிரகையைவிட 17,200 மடங்கு வீரியமுள்ளது; எழுநூறு ஆண்டுகளுக்கு வளிமண்டலத்தில் தாக்குப் பிடிக்கக் கூடியது!
- உயர்மின் அழுத்தத்தில் மின்னுற்பத்தி மற்றும் தொடரமைப்பு மூலம் பரப்பி வழங்கும் தொழில்நுட்பத்தைச் செயல்படுத்துவதற்கு sulphur hexafluoride எனும் வளி தேவைப்படுகிறது. இது கரி-ஈருயிரகையை விட 23,500 மடங்கு வீரியமுள்ளது; வளி மண்டலத்தில் ஆயிரம் ஆண்டுகள் நிலைக்கக் கூடியது. 2017-ஆம் ஆண்டில் ஐரோப்பிய ஒன்றியத்திலும் (European Union) ஒன்றிய அரசியத்திலும் (The United Kingdom) ஆலைகளில் இருந்து கசிந்த இந்த வளியின் பசுங்குடில் தாக்கம் பதினேழு லட்சம் கார்கள் வெளியிடும் புகையின் பசுங்குடில் தாக்கத்துக்கு ஈடானது!
- நாம் பயன்படுத்தி வீணாக்கும் பொருள்களில் மிகச் சிறு பங்கு மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுகிறது; மறுசுழற்சி செய்வதற்கும் நிறைய ஆற்றல் தேவைப்படுகிறது. எ.கா. ஓராண்டில் உலகளவில் மொத்தம் சுமார் 36 கோடி டன் நெகிழி உற்பத்தியாகிறது; ஆனால், வெறும் ஒன்பது விழுக்காடு நெகிழி மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுகிறது.
ஆக, நம் ஆற்றல் தேவையைக் குறைக்காதிருத்தல், சூழல் மாசு தொடர்பான சட்டதிட்டங்களைச் சரியாக நடைமுறைப்படுத்தாதிருத்தல், பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் தொடர்தல் உள்ளிட்ட காரணங்களின் விளைவாக நம் இயற்கைச் சூழல் கேடுகள் தொடர்ந்து பெருகுமேயன்றி (பசுமைத் தொழில்நுட்பங்களைச் செயல்படுத்துவதால் மட்டும்) குறைந்துவிடப் போவதில்லை.
சூழலியல் கேடுகளுக்குப் பசுமைத் தொழில்நுட்பத்தைத் தீர்வாக முன்வைக்கும் தவறான போக்கின் விளைவாக மூன்று பெருஞ்சிக்கல்கள் தொடர்ந்து பெருகி வருகின்றன.
- புதுப்பிக்கக்கூடிய எரிபொருள் பயன்பாட்டைப் பெருக்குவதற்குப் பல பத்தாண்டு கால அவகாசம் தரப்படுகிறது. (அதாவது, குறைந்தது 2050-ஆம் ஆண்டு வரை இப்போதைய ஆற்றல் உற்பத்தி முறைகளைப் பயன்படுத்தலாம் என்கிற கோட்பாடு அனுமதிக்கப்படுகிறது.) நம் சூழலை மிக மோசமாகக் கெடுக்கும் பசுங்குடில் வளிகளைத் தொடர்ந்து வெளியிடுவதை இந்தப் போக்கு நியாயப்படுத்துகிறது.
- ஆற்றல் உற்பத்தி மற்றும் வழங்கும் துறைகளில் உள்ள மிகப் பெரும் நிறுவனங்கள் புது வகை ஆற்றல் உற்பத்தியில் கால் பதிப்பதற்கு இது வாய்ப்பளிக்கிறது. அதன் மூலம் அந்நிறுவனங்களின் வருமானமும் உபரியும் ('லாபம்') குறையாமல் இருப்பதற்கு இது உதவுகிறது.
- நிலக்கரி, பெட்ரோலியம் போன்ற புதைபடிவ ஆற்றல்களுக்கு மாறாகப் புதுப்பிக்கக்கூடிய ஆற்றல் வகைகளுக்கு மாறும்போது அதற்குத் தேவையான கனிமங்கள், மாழைகள் (minerals and metals) போன்றவற்றை அகழ்ந்தெடுத்துத் தூய்மைப்படுத்த வேண்டும். அந்தச் செயற்பாடுகள் இயற்கைச் சூழலை மிக மோசமாகப் பாதிக்கின்றன; மனிதர் உள்ளிட்ட பல கோடி உயிர்களுடைய வாழ்வாதாரத்தை அழித்தொழிக்கின்றன. இதற்குச் சில எடுத்துக்காட்டுகள் வருமாறு.
அ) கினிக் குடியரசு (The Republic of Guinea) ஆப்ரிக்கக் கண்டத்தின் நிலநடுக்கோட்டுப் பகுதியில் உள்ள நாடுகளில் ஒன்று. உலக பாக்சைட் (bauxite) கனிமத்தில் முப்பது விழுக்காடு அந்தச் சிறிய நாட்டிலுள்ளது. இரும்புக் கனிம வளமும் அந்நாட்டில் மிகுந்துள்ளது. அதே சமயம், நாட்டின் பரப்பளவில் 98 விழுக்காட்டில் இயற்கைக் காடுகள் உள்ளன. மின்னூர்திகள், மின் கம்பிவடங்கள் (cables) போன்றவைற்றை உற்பத்தி செய்வதற்கு அலுமினியம் தேவை. அதற்கு பாக்சைட் கனிமம் மூலப்பொருள். காற்றாலை உற்பத்திக்கும், சாலைகள், கட்டடங்கள் போன்ற நகர்ப்புறக் கட்டுமான வசதிகளை நிறுவுவதற்கும் எஃகு பெருமளவு தேவை. இவற்றுக்காக அலுமினியம், இரும்பு ஆகியவற்றின் தேவை பெருகும்போது கினி நாட்டின் இயற்கைக் காடுகள் என்ன ஆகும் என்பதைக் கற்பனை செய்து பாருங்கள்!
ஆ) உலக கோபால்ட் (cobalt) கனிமத்தில் அறுபது விழுக்காடு கினியின் அருகிலுள்ள காங்கோ நாட்டில் (The Congo) உள்ளது. கைப்பேசிகள், மின்னூர்திகள் உள்ளிட்ட பல மின்சாதனங்களில் இன்றியமையாத பங்கு வகிக்கும் மின்கலன்களைச் (batteries) செய்வதற்கு கோபால்ட் தேவை. காங்கோ நாட்டுக் கோபால்ட் சுரங்கங்களில் கொத்தடிமை நிலையில் சுமார் 35,000 குழந்தைத் தொழிலாளர்கள் உள்ளிட்ட பல்லாயிரம் தொழிலாளர்கள் உழல்கின்றனர். சுரங்கங்களின் விளைவாகப் பல்லாயிரக் கணக்கான பரப்பில் காடுகளும் வேளாண்மையும் ஒழிந்தன. இந்நிலை தொடர்ந்தால் காங்கோ நாட்டின் அடர்ந்த மழைக் காடுகள் ஒரேயடியாக அழிவது உறுதி.
ஆப்ரிக்கக் கண்டம் கனிம வளம் மிகுந்தது. ஆகவே, உலகின் பிற பகுதிகளில் உள்ள புதுப்பிக்கக்கூடிய ஆற்றல் தேவைக்கு பலியாகப் போவது ஆப்ரிக்கக் கண்டமே. (இது ஏற்கெனவே உள்ள நிலைமைதான்; இன்னமும் மோசமாகப் போகிறது.)
இ) உலக லித்தியத் தேவையில் (lithium) பாதியை நிறைவு செய்வதற்குப் போதுமான லித்தியக் கனிம வளம் தென்னமெரிக்காவின் பொலீவியா (Bolivia), சிலி (Chile) நாடுகளில் கடல் மட்டத்தில் இருந்து 3,600 மீட்டர் உயரத்திலுள்ள உப்புப் படுகைகளில் உள்ளது. (lithium-ion மின்கலத்தைக் கண்டுபிடித்தவர்களுக்கு இந்த ஆண்டு வேதியியல் நோபல் பரிசு கிடைத்தது நினைவிருக்கலாம்.) பொலீவியாவின் இயற்கை வளங்களைச் சுரண்டும் நோக்கில் அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசுகளின் ஆதரவுடன் அண்மையில் நடந்த சதிப் புரட்சியில் பொலீவியாவின் சோசலிச அரசு கவிழ்க்கப்பட்டுப் பன்னாட்டு முதலாளிகளுக்குச் சாதகமான அரசு ஆட்சியில் உட்காரவைக்கப்பட்டுள்ளது. லித்தியம், செம்பு போன்றவற்றை அகழ்ந்தெடுத்துத் தூய்மைப்படுத்தும் சுரங்கத் தொழிலால் மண்ணும் நீரும் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றன. மேலும், வறட்சிப் பகுதிகள் அதிகமுள்ள இந்த நாடுகளின் சில பகுதிகளில் முக்கால் பங்கு நன்னீர் சுரங்கத் தொழிலுக்கு மடை மாற்றிவிடப்படுகிறது.
மேற்கண்ட கனிமங்களைப் பயன்படுத்திப் பசுமைத் தொழில்நுட்பக் கருவிகள், இயந்திரங்கள் போன்றவற்றைச் செய்வதற்கும் பெட்ரோலிய ஆற்றல் பெருமளவு தேவைப்படுகிறது.
நம் தேவைகளைப் பெருமளவு குறைப்பதற்கேற்ற வாழ்முறையையும் வேலை முறையையும் செயல்படுத்துவது தான் சரியான தீர்வாகும்.
[மேற்கண்ட தகவல்கள், கருத்துகள் அடங்கிய மூலக் கட்டுரை: Godwin Vasanth Bosco, "The Idea That 'Green Technology' Can Help Save the Environment Is Dangerous", The Wire, 2019 Dec 02, https://thewire.in/environment/the-idea-that-green-technology-can-help-save-the-environment-is-dangerous
- 'பரிதி' (ராமகிருச்ணன்), சத்தியமங்கலம், ஈரோடு (மா)
- விவரங்கள்
- நெல்லை சலீம்
- பிரிவு: சுற்றுச்சூழல்
ஃபாலஸ்தீன் காஸாவில் ஏற்பட்டு வரும் மனிதர்கள் உயிர் வாழ்வதற்கான நெருக்கடியான நிலைமை, இஸ்ரேலில் உடனடியாக சில சீரமைப்புகளை செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தி உள்ளது. காஸா கிட்டத்தட்ட ஒரு திறந்தவெளி சிறைச்சாலை என்றே அழைக்கப்படுகிறது. இங்கு தினம் தினம் இஸ்ரேல் வீசும் குண்டுகளால் கட்டிடங்கள் இடிந்து விழுகின்றது. முற்றிலும் சுற்றுச்சூழல் பாதிப்புகளை எதிர்நோக்கியுள்ளது காஸா.
இஸ்ரேல் அரசு காஸாவில் மேற்கொண்ட சுற்றுச்சுழல் பாதிப்புகள் அனைத்தும், அதனுடைய தலைநகரான டெல் அவிவில் ஆபத்துக்கான எச்சரிக்கை மணியாக ஒலிக்கத் தொடங்கி விட்டது என்பது தான் தற்போதுள்ள செய்தியாக இருக்கிறது.
ஜுன் 3ம் தேதி இஸ்ரேலின் டெல் அவிவ் மற்றும் பென்குரியோன் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த சுற்றுச்சூழல் அறிஞர்கள் ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டனர். அந்த அறிக்கையில் “காஸாவில் இடிந்து விழும் கட்டிடங்கள், முறையின்றி வெளியாகும் கழிவுநீர், மின்சார பாதிப்புகள் அனைத்தும் இஸ்ரேலின் நிலத்தடி நீர், கடல்நீர், கடற்கரைப் பகுதியின் சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளங்களுக்குப் பாதிப்புகளை ஏற்படுத்துவதாகவும், உடனடியாக இதற்கு ஒரு தெளிவான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்" என்றும் கூறியுள்ளனர்.
கடந்த 12 ஆண்டுகளாக இஸ்ரேலிய இராணுவம் ஏற்படுத்திய தொடர்ச்சியான தாக்குதல்கள், முற்றுகையால் காஸா சிதைந்து போயுள்ளது. இதுவரை அதனுடைய பாதிப்புகள் எதையும் இஸ்ரேலிய அரசு வெளியிடுவதை தடுத்தே வந்துள்ளது. இதனால், அந்தப் பகுதி 2020ம் ஆண்டில் மக்கள் வாழ்வதற்கு தகுதியற்ற பகுதியாக இருக்கும் என்று காஸாவைப் பற்றி அறிந்த பலரும் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
இப்படியிருக்கையில், இஸ்ரேலின் வாழ்வு மற்றும் மரணம் காஸாவின் சுற்றுச்சூழலை மேம்படுத்துவதிலே இருக்கின்றது என்றும், காஸாவில் சுற்றுச்சூழல் மோசமானதற்கான முழு காரணமும் இஸ்ரேல் தான் என்றும், அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. இந்த அறிக்கை வெளியானதில் இருந்து, இஸ்ரேலின் அரசு பத்திரிகையான ஹெராட்ஸும் தேசிய பாதுகாப்பு பிரச்சனையாக விவாதத்தைக் கிளப்பி உள்ளது.
இஸ்ரேல் அரசு ஃபாலஸ்தீன் காஸாவில் மேற்கொண்ட ஆக்கிரமிப்புகள், ராக்கெட்டு மற்றும் குண்டுவீச்சுகள், முற்றுகைகள் அனைத்தும் ஃபாலஸ்தீன் மற்றும் ஃபாலஸ்தீனியர்களுக்குத்தான் ஆபத்தாகவும், அச்சுறுத்தலாகவும் இருந்து வந்தது.
இப்போது, அந்த பாதிப்பை இஸ்ரேலிய நாடும், இஸ்ரேலிய மக்களும் அனுபவிக்கத் துவங்கியுள்ளனர். இதுகுறித்து சீக்கிரமாக ஒரு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று இஸ்ரேல் அரசுக்கு நாட்டு மக்களும், பத்திரிகை ஊடகங்களும் வலியுறுத்தத் தொடங்கி உள்ளனர். இதனால், இஸ்ரேலில் ஓர் அச்சம் உருவாகி உள்ளது என்பது மட்டும் உண்மையாகும்.
- நெல்லை சலீம்
- விவரங்கள்
- செந்தூவல்
- பிரிவு: சுற்றுச்சூழல்
பானி புயல் வங்கக் கடலில் மையங்கொண்டு தீவிர சூறாவளியாக மாறி ஒடிசாவைத் தாக்கியுள்ளது. புயல் கரையைக் கடக்கும்போது காற்றின் வேகம் 170 கிலோமீட்டரில் இருந்து 180 கிலோமீட்டர் வரை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியது. இப்புயல் ஒடிசாவின் பூரி மற்றும் பாலசபூர் இடையே கரையை கடக்கும் என அறிவித்தது வானிலை ஆய்வு மையம். கடந்த 118 ஆண்டுகளில் ஏற்பட்ட புயல்களில் மிக வலிமையான புயல் பானி புயல்தான் என்று கூறியுள்ளார் புவி அறிவியல் அமைச்சகத்தின் செயலர் ராஜீவன்.
2010 ஆம் ஆண்டுக்குப் பின்னர் கிழக்கு கடற்கரையை அதிகமான புயல்கள் தாக்கி உள்ளது. அவற்றின் விவரங்கள் பின்வருமாறு:
1.ஜல் 2010
2. தானே 2011
3.நீலம் 2012
4.மடி 2013
5.ரோனி 2016
6.கியான்ட் 2016
7.நாட 2016
8. வர்தா 2016
9.ஒக்கி 2017
10.கஜா 2018
11.பானி 2019
கடந்த 10 ஆண்டுகளில் மொத்தமாக 11 புயல்கள் கிழக்கு கடற்கரையைத் தாக்கி உள்ளன. இவற்றில் நான்கு புயல்கள் தமிழகத்தைத் தாக்கி உள்ளன. அதாவது வங்கக்கடலில் ஏற்படும் மொத்த புயல்களில் மூன்றில் ஒரு புயல் தமிழகத்தைத் தாக்குகிறது. இயற்கை நிகழ்வுதானே என்று நாம் யோசிப்போம். ஆனால் புயல்கள் பின் உள்ள பருவநிலை மாற்றம்தான் முதன்மையான காரணம் ஆகும். இந்த பருவநிலை மாற்றத்தின் காரணமாகத்தான் புவியின் வெப்பநிலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகி, புயல்களாக மாறி கரையைத் தாக்குகிறது. இந்தப் புயல்கள் ஏற்படும்போது காற்றின் வேகம் அதிகரித்துள்ளது. இதுமட்டுமல்லாமல் அதிகளவிலான மழைப்பொழிவு ஏற்படுத்துகிறது.
புயல்கள் ஏற்படும் கால இடைவெளி குறைந்து கொண்டே வருகிறது. அதனாலதான் கடந்த 10 ஆண்டுகளில் மொத்தம் 11 புயல்கள் வங்கக் கடலில் ஏற்பட்டு உள்ளது. அதாவது 11 மாதங்களுக்கு ஒரு புயல் என்ற விகிதத்தில் வங்கக் கடற்கரை பகுதிகளை தாக்குகிறது. இது வெறுமனே வங்கக் கடற்கரை மட்டுமான பிரச்சனை அல்ல, உலகம் முழுவதும் பல நாடுகளில் இதுபோல தொடர்ச்சியாக புயல்கள் தாக்குகின்றன. அதுவும் குறிப்பாக பருவ காலங்களில் அல்லாமல், எந்த நேரத்தில் வேண்டுமானாலும் புயல்கள் கடற்கரையில் உள்ள பகுதிகளைத் தாக்குகிறது.
பருவநிலை மாற்றம் ஏற்படுவதற்கான அடிப்படைக் காரணம் என்ன? இதற்கு முதன்மையான காரணம் புதைபடிம எரிபொருட்கள் எரிப்பதனால் ஏற்படும் பசுமை இல்ல வாயுக்கள் நேரடியாக வளி மண்டலத்தைத் தாக்குவதால் தொடர்ந்து புவியின் வெப்பநிலை உயர்ந்து கொண்டே வருகின்றது. புதைபடிம எரிபொருட்களான டீசல், பெட்ரோல், நிலக்கரி மற்றும் மீத்தேன் போன்ற எரி வாயுக்கள் அதிகமாக உபயோகப்படுத்துவதன் காரணமாக பசுமை இல்ல வாயுக்கள் அதிகமாக வெளிப்படுகிறது. இதன் காரணமாக புவி வெப்பமயமாதல் ஏற்படுகிறது.
உலகம் முழுவதும் பல நாடுகள் புதைபடிவ எரிபொருட்களை குறைத்துக் கொண்டு, வேகமாக புதுப்பிக்கத்தக்க எரிபொருட்களை பயன்படுத்துவதை அதிகப்படுத்தியுள்ளன. அதுமட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பருவநிலை மாற்றத்திற்கான ஆய்வுகள் தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டுள்ளன. இந்த ஆய்வுகளின் அடிப்படையில் உலகில் உள்ள பல நாடுகள் மிக வேகமாக புதைபடிவ எரிபொருட்களை பயன்பாட்டை குறைத்துக் கொண்டுள்ளன. உலகம் முழுவதும் உள்ள பல நாட்டு மக்கள் தங்கள் நாட்டு அரசு, புதைபடிம எரிபொருட்களின் பயன்பாட்டு அளவை குறைக்கக் கோரி போராட்டம் நடத்திக் கொண்டுள்ளனர். ஆனால் தமிழகத்தில் அதிக அளவிலான அனல் மின் நிலையங்களை உருவாக்கிக் கொண்டுள்ளது இந்திய அரசு. இது போதாதென்று டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் திட்டத்தை செயல்படுத்த உள்ளது இந்திய அரசு. இது மட்டுமல்லாமல் பெட்ரோல், டீசல், நிலக்கரி மற்றும் எரிவாயுவின் பயன்பாட்டைக் குறைப்பதற்கு இந்திய அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக புதைபடிவ எரிபொருட்களின் பயன்பாட்டை அதிகப்படுத்திக் கொண்டு உள்ளது. இதே நிலை தொடர்ந்தால் பதினோரு மாதங்களுக்கு ஏற்படும் புயல் என்பது ஆறு மாதங்களுக்கு ஒரு புயல் என்ற நிலைக்கு மாறும். இது மட்டுமல்லாமல் தற்போது 150 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் புயல்களின் வேகத்தின் அளவு மேலும் அதிகமாகும்.
இந்தியாவின் அடிமைக் காலனியாக இருக்கும் தமிழகம் பருவநிலை மாற்றத்தினால் ஏற்படும் இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்வதற்குத் தயார் நிலையில் இல்லை. காரணம் தமிழகத்தின் இயற்கை வளங்கள் மட்டுமல்லாமல் ஜிஎஸ்டி போன்ற வரிகள் மூலம் இந்திய அரசு அனைத்தையும் கொள்ளை அடித்துச் செல்கிறது. பருவநிலை மாற்றத்தின் காரணமாக ஏற்படும் இயற்கைப் பேரிடர்களான புயல், பெருவெள்ளம், காட்டுத்தீ மற்றும் வறட்சி போன்றவற்றில் இருந்து மீள்வதற்கான நிதியை இந்திய அரசு கொடுப்பதில்லை. இதன் காரணமாக தமிழக மக்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் எதிர்காலத்தில் இதுபோன்ற பருவநிலை மாற்றத்தின் காரணமாக ஏற்படக்கூடிய இயற்கைப் பேரிடர்கள் ஏற்படாமல் தடுப்பதற்கான ஆய்வுகள் எதனையும் பெரிய அளவில் இந்திய அரசு செய்வது இல்லை.
தமிழ்த் தேசத்தை தொடர்ந்து வஞ்சித்து வரும் டெல்லி ஏகாதிபத்தியத்திற்கு எதிராக ஓரணியில் திரளுவதுதான் பருவநிலை மாற்றம் மற்றும் அதனால் ஏற்படக்கூடிய பேரழிவுகளில் இருந்து தமிழகத்தைப் பாதுகாப்பதற்கான வழியாகும்.
- செந்தூவல்
- விவரங்கள்
- அப்சர் சையத்
- பிரிவு: சுற்றுச்சூழல்
எச்சரிக்கும் போலந்து மாநாடு....!!!
போலாந்தின் கடோவைஸ் நகரில் பருவநிலை மாறுபாடு தொடர்பான மாநாடு நடைபெற்றது. இதில் பாரிஸ் பருவநிலை மாறுபாடு உடன்பாடு குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதில் பருவநிலை மாறுபாட்டால் உலகிற்கு பேராபத்து காத்திருப்பதாகவும், இப் பிரச்சனைக்கு உடனடி தீர்வு காணாவிட்டால், உலக நாடுகள் மிகப் பெரிய ஆபத்தை சந்திக்க நேரிடும் என்றும் இந்த மாநாட்டில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கான மூல காரணம் பூமி வெப்பமயமாதலாகும். இன்றைக்கு உலகம் முழுவதும் வெப்பமயமாதல் பிரச்னை பெரும் சவாலான பிரச்சனையாக உருவெடுத்துள்ளது என்பதை உலக நாடுகள் அனைத்தும் ஓப்புக்கொண்ட உண்மையாகும். அதனைக் கட்டுப்படுத்தும் விதமாக கரியமில வாயுவைக் குறைக்கும் நடவடிக்கைகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என பாரிஸில் வலியுறுத்தப்பட்டது.
இம்மாநாட்டிற்குத் தலைமை தாங்கிப் பங்கேற்ற ஐ.நா.வின் முன்னாள் தலைவர்கள் 4 பேரின் கலந்துரையாடலில், இந்த பருவநிலைப் பிரச்சனையை கட்டுப்படுத்தாவிட்டால் பாரிஸ் மட்டுமின்றி உலக நாடுகளின் நிலைமை மோசமடையும் என எச்சரித்ததுடன் அதற்கான
காலக்கெடுவாக அடுத்த இரு ஆண்டுகளில் பருவநிலை மாறுபாடு பிரச்னைக்குத் தீர்வு காணாவிட்டால், உலக நாடுகள் மிகப் பெரிய ஆபத்தை சந்திக்க நேரிடும் என்றும் இம்மாநாட்டில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இப்பிரச்சனையின் தீவிரத்தைப் புரிந்துகொண்ட உலக வங்கி பருவநிலை மாறுபாடு பிரச்னைக்கு உடனடி தீர்வு காண 14 லட்சம் கோடி ரூபாயை முதலீடு செய்யப் போவதாக வாக்குறுதி அளித்துள்ளதாம், இது போன்ற பருவநிலை மாற்றம் மற்றும் பூமி வெப்பமயமாதல் பிரச்சனையால் கடந்த சில வருடங்களாக உலகில் பல்வேறு இடங்களில் சுனாமி போன்ற பேராபத்துகளும், புயல்களும், நிலநடுக்கங்களும், காற்று மாசுபாடும் ஏற்பட்டு வருவதாக அண்மையில் சுற்றுச்சூழலில் அக்கறை கொண்ட தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று வெளியிட்ட ஆய்வறிக்கையில் கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஒரு நாட்டிற்கு பொருளாதார வளர்ச்சியைவிட முக்கியமானது இயற்கை வளங்களைக் காத்தல். நாம் வாழும் பூமியை வாழ்வதற்கு ஏற்றதாக அமைத்துக் கொள்ள வேண்டும். இயற்கையை அழித்து பொருளாதார வளம் பெருக்கிக் கொள்வது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல. இயற்கை வளத்தைப் பெருக்கி, பசுமையைக் காப்பது மட்டுமே எதிர்கால சந்ததிகளின் நலனுக்கு உகந்தாகும்.
நாட்டின் வளங்களில் மூன்றில் ஒரு பங்கு வன வளம் இருக்க வேண்டும். அதாவது 30 லிருந்து 35 சதவீதம் இருக்க வேண்டிய வனங்கள், இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் தற்போது 14 லிருந்து 19 சதவீதமாக உள்ளது. இதற்கான முழுமுதற் காரணம் மனிதனே ஆகும். மனிதன் தனது சுயலாபத்திற்காக வனங்களை அழித்துகொண்டு வருகின்றான். மரங்களை வெட்டுதல், காடுகளை விளைநிலங்களாக ஆக்கிரமித்தல் போன்ற நடவடிக்கையினால் இயற்கை வளங்களின் பரப்பளவு குறைந்து வருகின்றது..
இயற்கை வளங்களைப் பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் கடமை மட்டுமல்ல, பொறுப்பும் கூட. இயற்கை வளங்களின் அவசியம் குறித்தும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்தும் இன்றைய இளைஞர்கள் மற்றும் மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
நம் அரசுகளும் தொலைநோக்குப் பார்வையுடன், மனித குலத்திற்குப் பயன்படுவதுமான இயற்கை வளங்கள் பற்றிய படிப்பை பரவலாக்க வேண்டும். புவியியல், இயற்கை வளங்கள், காலநிலை, கடல், மனிதப் புவியியல், புவித் தகவல் தொழில்நுட்பம் போன்ற படிப்பு வகைகளை மாணவர்கள் மத்தியில் பரவலாக்கி அவர்களை இக்கல்வி கற்க ஊக்கப்படுத்த வேண்டும்.
தனி மனிதர்களாகிய நாமும் தனியாகவோ அல்லது குழுவாகவோ, தன்னார்வலர்களை இணைத்துக்கொண்டு, மக்களிடையே இயற்கை வளமிக்க பசுமையான சோலைகள், காடுகள், மரங்கள், உயிரினங்கள், புல்வெளிகள், விளைநிலங்கள், ஆறுகள், ஏரிகள், கடலோர நீர் வளம் போன்றவை மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத ஒன்று என்பதை விளங்கும் வகையில் விழிப்புணர்வுப் பேரணிகள் நடத்தி இயற்கை வளங்களைக் காத்து பூமி வெப்பமயமாக்கலைத் தடுத்தல் வேண்டும்,
இது நம் அனைவரின் கண் முன்னே நிற்கும் சவாலான பிரச்சனையாகும்...
- அப்சர் சையத்
- பிளாஸ்டிக்கை ஒழிப்போம்! உயிரினங்களை காப்போம்!
- ஆற்றுநீர் கடலில் கலப்பது வீணானதா?
- அமெரிக்காவில் நீரியல் விரிசல் முறை ஏற்படுத்தியிருக்கும் பாதிப்புகளும், அறிவியல் வல்லுநர் குழுக்கள் கண்டறிந்த படிப்பினைகளும்!
- நதிகளை ஏன் இணைக்கக்கூடாது?
- இந்திய கிராமப்புறங்களில் திறந்தவெளி மலம் கழித்தலைப் புரிந்து கொள்ளல் - தீண்டாமை, மாசு, மலக்குழிகள்
- சூழல் அகதியா நாம்..?
- காலநிலையும், அரசியலும்
- செம்பரம்பாக்கம் ஏரி வரலாறும், திமுக - அதிமுக கட்சிகள் ஆட்சியும்
- நீலம் பாரித்துக் கிடக்கிறாள் மலைகளின் இளவரசி
- போஸ்கோ வெர்டிகல் மற்றும் சூரியச் சாலை
- மீத்தேன் - குழம்பிய குட்டையாக தமிழகம்!
- களத்தூர் மணல் குவாரி எதிர்ப்பு போராட்டமும் - இன்றைய நிலையில் நாம் செய்ய வேண்டியதும்
- பெரம்பலூர் சட்டவிரோத அனல்மின் நிலையம் கருத்துக் கேட்புக் கூட்டம் முறியடிப்பு
- அறிவாளிகளும், அப்பாவிகளும் - நியூட்ரினோ ஆய்வகம் - ஓர் அலசல்
- நியூட்ரினோ - அமெரிக்காவுக்கா? இந்தியாவுக்கா?
- கொலைக்கூடங்களாக உள்ள தோல் தொழிற்சாலைகளும்... சாவுப்பட்டறைகளாக உள்ள சாயப்பட்டறைகளும்...
- தமிழகத்தின் இயற்கையை, வளங்களை அழிக்கும் திட்டங்கள்
- அறிவியலை ஓரங்கட்டும் அரசியல்
- ஏன் மரபணு மாற்றுப் பயிர்கள் கள பரிசோதனைகள் தடை செய்யப்பட வேண்டும்?
- பிரச்சினை அறிவியலில்; தீர்வு அரசியலில்