 |
கு.சித்ரா
விநாயகர் அகவல்
பிள்ளையார் பால் குடிக்கிறார் என்ற புரளியை நம்பி, 21ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஈடு இணையற்ற தமிழர்கள் கரண்டியும், பாலுமாக வீதிகளில் அலைந்து திரிந்த காட்சியைக் கண்டு மனம் கசிந்து, திகைத்து நின்ற இந் நவீன யுகத்து ஓளவையான யான் இயற்றியிருக்கும், இப்புதிய விநாயகர் அகவலை படிப்போரும், படிக்கக் கேட்போரும், அதள, விதள, சுதள, பாதாள, இன்ன பிற ஈரேழு பதினாலு கற்பித லோகங்களையும் தாண்டி, அழிவில்லா அறிவுலகத்தை இப்போதே அடைவது திண்ணம்.
கூட்டம்கூட்டமாக மக்கள் வாழ்ந்திருந்த காலத்தில், ஒவ்வொரு குழுவும் அல்லது கூட்டமும் கணம் என்றழைக்கப்பட்டது. அக் கூட்டத்தை காக்க கூடிய வல்லமை பொருந்திய ஒருவன் அவர்களுக்கு தலைவனாக்கப்பட்டான் அவனே கணபதி. அந்த கால கட்டத்தில் பல்வேறு கணங்களும், கணபதிகளும் இருந்துள்ளனர்.
கி.மு.200ல் உருவான மனுஸ்மிருதியும், கி.மு.500ல் வெளியானதாக கருதப்படும் மாளவ கிரக சூத்திரம் என்ற நூலும் கணபதியை கண்டபடி தூற்றுகிறது. கணபதியை வழிபடுவோரை சமுதாயத்தை விட்டு தள்ளிவைக்க வேண்டும் என்று யாக்ஞவல்லி சபித்திருக்கிறான். காது கொடுத்து கேட்க முடியாத வசவுகளும், சாபங்களும், வரலாற்றின் வழிநெடுக கணபதிக்கு கிடைத்திருக்கிறது.
மனிதனுக்கு மட்டுமன்றி, அவன் படைத்த கடவுளுக்கும் வாழ்க்கையில் ஏற்றத்தாழ்வு உண்டு போலும். கணங்கள் அழிந்து அல்லது உருமாறி மெல்ல மெல்ல அரச பரம்பரையாக மாறியபோது, இகழ்ந்துரைக்கப்பட்ட கணபதி முழுமுதற் கடவுளாகிவிட்டார். சமுதாயத்தில் ஏற்பட்ட மாற்றமே இதற்கு காரணம் என்கிறார், புகழ் மிக்க ஆய்வாளர் தேவிபிராசத் சட்டோபாத்யாய. பலம் பொருந்திய கணத்தலைவர்கள், சிறு சிறு கணங்களை அழித்தும், தம்மோடு இணைத்தும், அரசர்களாக மாறத் தொடங்கினர். அதுவரை அவர்களை இகழ்ந்து கொண்டிருந்த சுரண்டும் வர்க்கம், தங்கள் பிழைப்பிற்காக வேண்டி, துதிபாடத் துவங்கியது.
எப்படி ஒரு சின்னத்தை அல்லது கொடியை பார்த்தவுடன் அது சார்ந்திருக்கும் கட்சி, நாடு அல்லது ஸ்தாபனம் நினைவுக்கு வருகிறதோ அது போன்றே, யானயைத் தங்கள் சின்னமாக கொண்டிருந்த குழு, எலியை தங்கள் சின்னமாக கொண்டிருந்த குழுவை வென்றதால், யானைக்கு எலி வாகனமாக மாறிற்று என்கின்றனர் ஆய்வாளர்கள். அலெக்ஸாண்டரின் இந்திய படையெடுப்பின்போது உடன் வந்த கிரேக்க வரலாற்று ஆசிரியர்கள், முஷிகர்கள் என்று ஒரு இனம் இருந்ததாகவும், அவர்களது சின்னம் எலி என்றும் குறிப்பிட்டுள்ளனர். யானை கணத்திற்கு, எலி கணத்திற்குமிடையே கி.மு 160ல் போர் நடந்ததாக கல்வெட்டு குறிப்புகள் தெரிவிக்கின்றன.
விநாயகரின் பிறப்பை ஒவ்வொரு புராணமும் ஒவ்வொரு விதத்தில் விளக்குகின்றன. ஆனால் அவ்வளவும் அபத்தக் களஞ்சியம். வேதங்கள் சுட்டிக்காட்டும் கணபதி சாதரண மனிதனாகத்தான் உள்ளான். குப்தர்களின் காலம்முதல் தான், அவனுக்கு யானைத்தலையும், தொந்தியும் காணப்படுகிறது.
பழங்குடிகள் மற்றும் சூத்திரர்களின் கடவுளாக மட்டுமிருந்த கணபதி, மெள்ள மெள்ள பிராமண்யமாக மாற்றப்பட்டு, 1893ம் ஆண்டு முதல் இந்திய அரசியலிலும் நுழைந்தார். இதற்கு காரணகர்த்தா, காங்கிரசின் தொடக்க கால தலைவர்களில் ஒருவரான பால கங்காதர திலகர் ஆவார். தனிப்பட்ட மனிதர்களின் விருப்பம் மற்றும் நம்பிக்கையை சார்ந்து, சந்தடியின்றி வீடுகளில் மட்டுமே சிறிய அளவில் நடத்தப்பட்டு வந்த இந் நிகழ்ச்சியை, ஒரு பிரம்மாண்டமான மதவிழாவாக, மத ஊர்வலமாக மாற்றியவர் அவரே. ஊர்வலத்தில் பாடிக் கொண்டு செல்வதற்க்காக புதிய பஜனைப்பாடல்கள் உருவாக்கப்பட்டன. இப்பாடல்களில் இஸ்லாமியர்களை எதிர்த்து, மதவாத கருத்துக்கள் புகுத்தப்பட்டன. இப்பாடல்கள் அடங்கிய ஒலி, ஒளிப்பேழைகள் ஒவ்வொரு ஆண்டும் கோடிக்கணக்கில், பல வழிகளில் விநியோகிக்கப்பட்டு, மதவாதத்தை ஒலித்ததுக் கொண்டே இருக்கிறது. இவ்வியாபாரத்தில் புரளுவது பல கோடி.
இந்திய தேசிய விடுதலைப் போராட்டத்தில், மிக சாமர்த்தியமாக மதம் நுழைக்கப்பட்டுவிட்டது. தேசிய இயக்கத்திற்கு சொல்லொண்ணா தீமை பயக்கும் முறையில், அரசியல் தீவிரவாதத்தையும் சமூக பிற்போக்குத்தனத்தையும் நாசகாரமாய் இணைக்கும் கைங்கர்யம் இந்தக்காலத்திலிருந்துதான் துவங்கியது. அதன் பலனை நாம் இன்னும் அறுவடை செய்துகொண்டிருக்கிறோம்.
இஸ்லாமியர்களைப் போன்றோ, கிருஸ்துவர்களைப் போன்றோ, இந்துக்களுக்கு கூட்டு வழிப்பாட்டுமுறை கிடையாது. சைவம், வைணவம், சாக்தம், கௌமாரம், நாட்டார் தெய்வங்கள், குல தெய்வங்கள், என பல்லாயிரக்கணக்கான வழிபடு தெய்வங்களையும், வழிபாட்டு முறைகளையும் கொண்டு பிரிந்து கிடக்கும் இந்துக்களை ஒரே கடவுளின் பெயரால் ஒன்று திரட்டி, மதவெறியூட்டுவதே இதன் நோக்கம்..
ஆகமம், புராணம், சாத்திரம் என்று அலறிப் புலம்பும் இவர்களது விநாயகர்கள், தற்போது கால்பந்து விளையாடிக் கொண்டும், தொலைக்காட்சி பார்த்துக் கொண்டும், கம்ப்யூட்டர் மௌசை கையில் பிடித்துக் கொண்டும், மொபைலில் பேசிக் கொண்டும், பீரங்கி மேல் அமர்ந்து கொண்டும், ராணுவ உடையணிந்து அணுகுண்டை கையில் ஏந்திக் கொண்டும், வானளாவி காணப்படுகிறார்கள்.
அதைவிட கொடுமை இவர்களது விஸர்ஜனம் - அதாவது பிள்ளையார் கரைப்பு. கழுத்து அறுக்கப்பட்டும், கால் கை முறிக்கப்பட்டும், உள்ளிருக்கும் சவுக்கு கட்டைகள் உருவப்பட்டும், காலால் துவைத்து மிதிக்கப்பட்டும், சுற்றுச் சூழலுக்கு மாபெரும் கேட்டை விளைவிக்கின்றனர். கவுண்டமணியிடம் அடி வாங்கும் செந்தில் பாடே தேவலாம்.
பல ஆண்டுகளுக்கு முன் நம் ஈரோட்டுக் கிழவன் செய்த வேலையை நம் தத்துவ எதிரிகளே இப்போது கனகச்சிதமாக அவர்கள் செலவிலேயே நிகழ்த்திக் காட்டுகின்றனர். ஆனால் ஒன்று, பெரியார், இப்படியெல்லாம் ஒன்றும் விநாயகரை சிரமப்படுத்தவில்லை. ஒரே போடுதான். அதுவும் மக்களின் அறியாமையையும், அச்சத்தையும் போக்குவதற்காகவே. எப்படியோ, நம் வேலையை அவர்களே செய்து, மக்களின் கடவுள் “கண்குத்தும்” பயத்தை போக்கிவிட்டார்கள்,. அவர்களுக்கு எம் நன்றி உரித்தாகுக.
தமிழர்களே, தமிழச்சிகளே, புதுச்சேரியை சேர்ந்த கவிஞர் ஆதிராமின் “பிள்ளையார் புலம்பல்” படித்தால், தன, தான்ய, வெகுபுத்ர ப்ராப்தி படு நிச்சயம்.
குதிரை மேலே ஏத்திவிட்டவன் யாருடா - அணு
குண்டை கையிலே கொடுத்துவிட்டவன் யாருடா
பெருச்சாளி வாகனமே பெருசினு நினைச்சிருந்தேன்
பொரிகடலை கிடைச்சாலே போதுமின்னு நானிருந்தேன்
யுத்த வேஷம் போட்டுவிட்டவன் யாருடா - எனக்கு
ரத்தவெறியை கிளப்பிவிட்டவன் யாருடா
ஏ.கே 47 கொடுத்துவிட்டவன் யாருடா - என்னை
பீரங்கியில் ஏத்திவிட்டவன் யாருடா
அழுக்கு மண்ணு சாணியிலே, அரைச்ச மஞ்சள் சந்தனத்தில்
புடிச்சுவைச்சா புள்ளையாரு, அரசமரம் என் வீடு - என்னை
நடுத்தெருவில் நிக்க வச்சவன் யாருடா - அதயும்
நாப்பதடிக்கு உசத்திவிட்டவன் யாருடா
கரண்ட்கம்பி குறுக்காலே கழுத்தறுக்கக் காத்திருக்க
கடற்கரையில் கிரேன் ஒண்ணு எனைத்தூக்கிப்போட பாத்திருக்க
என் கைய காலை முறிச்சுப்போட்டவன் யாருடா
கழுத்துலே சுருக்கை மாட்டிவிட்டவன் யாருடா
புள்ளையார ஒடைப்போமின்ன பெரியாருக்கு பயப்படல
சாமியே இல்லயின்ன சங்கதிக்கும் பயப்படல - ஒங்க
பூசையைக் கண்டா என் கையும் காலும் நடுங்குது - ஒங்க
ஊர்வலத்துல என் தலைதான் உருளுது.
- கு.சித்ரா (chitraz06@yahoo.co.in)
|