கீற்றில் தேட...
அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- மு.குருமூர்த்தி
- பிரிவு: சுற்றுச்சூழல்
தாவரங்களின் ஆண்பாகம் என்பது மகரந்தத்தூள்கள்.
பெண்பாகம் என்பது சூல்முடிகள்.
பறவைகள், காற்று இவற்றின் உதவியால் மகரந்தத்தூள்கள் சூல்முடியில் போய் ஒட்டிக் கொள்கின்றன. சூல்தண்டு வழியாக மகரந்தத்தூள் இறங்கி, ஒரே ஒரு மகரந்தம் மட்டும் சூலகத்திற்குள் போய்ச் சேருகிறது. இதைத்தான் தாவரங்களில் கருவுறுதல் என்கிறோம்.
மகரந்தத் தூள்களை ஏற்பதா, மறுப்பதா என்பதை சூல்முடிகள் ஆராய்ந்து முடிவு செய்கின்றனவாம். இந்த முடிவுகள் எப்படி செய்யப்படுகின்றன? புரத மூலக்கூறுகள்தான் இந்தப் பணியை செய்யுகின்றன என்கின்றனர் மிசெளரி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்.
மனிதர்களுக்கு கண்களும் காதுகளும் இருப்பதால் இனப்பெருக்கத்திற்கான துணையை தேர்வுசெய்வதிலும் புணர்ச்சி செய்வதிலும் சிக்கல் இருப்பதில்லை. இருந்தாலும் மனிதர்கள் பால்வினை நோய்களை தேடிக் கொள்ளத் தவறுவதில்லை.
தாவரங்களுக்கு கண்கள் இல்லை. காதுகளோ, மூக்கோ இல்லை. என்றாலும் மரபியல் பண்புகளை பாதிக்கும் இனப்பெருக்கத்திற்கு தாவரங்கள் இடம் கொடுப்பதில்லை. மனிதர்களைப்போல் இனப்பெருக்கத்திற்கான மகரந்தச் சேர்க்கை தாவரங்களில் அவ்வளவு எளிதாக நடைபெற்று விடுவதில்லை.
மகரந்தம் தான் யார் என்பதை மூலக்கூறுகள் வழியாக சூல்முடிக்கு தெரிவித்தல் வேண்டும். சூல்முடி இந்த அடையாளத்தை புரிந்து கொண்டபிறகு மகரந்தச் சேர்க்கையை ஏற்கலாம் அல்லது மறுக்கலாம்.
மகரந்தங்கள் சூல்முடியை அடைந்ததும் அங்கே ஆண்-பெண் அறிமுகம் நடைபெறுகிறது. வார்த்தைகளுக்கு பதிலாக புரத மூலக்கூறுகளே இந்தப் பணியை செய்கின்றன. இவ்வாறு தாவரங்களின் இனப்பெருக்க நடைமுறையில் கருத்தரித்தலுக்கு கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது. இதனால் தாவரங்களின் மரபுப் பண்புகள் காப்பாற்றப்படுகின்றன.
ஆராய்ச்சியாளர்கள் NaTTS மற்றும் 120K ஆகிய இரண்டு சூல்முடி புரதங்களை ஆய்விற்கு பயன்படுத்தினார்கள். இந்த இரண்டு சூல்முடி புரதங்களும் சூலகத்திற்கு மகரந்தத்தை எளிதில் கொண்டுசெல்லும் இயல்புடையவை.
மறுபுறம் S-RNase-binding protein (SBP1), the protein NaPCCP ஆகிய மூன்று புரதங்களும் ஒரு என்ஸைமும் சூல்முடியுடன் இணைத்து வைக்கப்பட்டன. எந்தெந்த மகரந்த புரதங்கள் எந்த சூல்முடி புரதங்களுடன் இணைந்தன என்பது கண்டறியப்பட்டதில் மேற்கண்ட முடிவுகள் தெரிய வந்துள்ளன.
- மு.குருமூர்த்தி
- விவரங்கள்
- மு.குருமூர்த்தி
- பிரிவு: சுற்றுச்சூழல்
சுவிட்சர்லாந்து விஞ்ஞானிகள் மனிதர்களின் வாயில் உள்ள சிலபாக்டீரியாக்கள்தான் உணவுகளின் சுவையையும் மணத்தையும் அறிய உதவுகின்றன என்கிறார்கள்.
சில காய்கறிகளிலும், பழங்களிலும் மணமற்ற 'தையோல்' என்னும் கந்தக கூட்டுப்பொருள் அடங்கியுள்ளது. இந்த மணமற்ற தையோல் என்னும் வேதிப்பொருளை மணமுள்ளதாக மாற்றி நம்முடைய நாக்கிற்கு சுவையையும், மணத்தையும் அளிக்கும் வேலையை வாயில் உள்ள சில பாக்டீரியாக்கள் செய்கின்றன.
திராட்சை, வெங்காயம், மிளகு போன்ற உணவுப்பொருட்களில் இந்த தையோல் என்னும் வேதிப்பொருள் உள்ளது. வெங்காயத்தை கடித்த சிறிது நேரத்திற்குப் பிறகுதான் அதற்குரிய சுவையையும் மணத்தையும் அறிய முடிகிறது இல்லையா? ஆவியாகக்கூடிய வேதிக்கூட்டுப் பொருட்கள் இதுபோன்ற உணவுப் பொருட்களில் இருப்பதாகவும், இதன் காரணமாகவே சுவையையும் மணத்தையும் அறிவதில் தாமதம் ஏற்படுவதாகவும் இதுவரை கருதப்பட்டது.
சுவையறிவதில் பயிற்சிபெற்ற 30 நபர்களுக்கு இந்த 'மணமற்ற தையோல்' வேதிப்பொருளை உண்ணக் கொடுத்து விவரங்களை சேகரித்தனர். இந்த நபர்கள் சுவையையும் மணத்தையும் அறிவதற்கு 20 முதல் 30 நிமிடங்கள் எடுத்துக் கொண்டனர். இவ்வாறு அறியப்பட்ட சுவையும் மணமும் மூன்று நிமிடங்களுக்கு நீடித்து இருந்தது.
மணமற்ற வேதிப்பொருட்களை மணமுள்ள தையோல்களாக மாற்றும்பணியை வாயில் உள்ள பாக்டீரியாக்கள் செய்வதாகவும், இதனால்தான் நமக்கு சுவையும் மணமும் அறிவதில் தாமதம் ஏற்படுவதாகவும் விஞ்ஞானிகள் முடிவு செய்தனர்.
மேலும், வாயில் சுரக்கும் உமிழ்நீர் காரணமாகத்தான் இந்த தையோல்களினால் எழுந்த சுவையும் மணமும் நீடித்த நேரத்திற்கு வாயில் நிலைபெற்று இருப்பதாகவும் விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
- மு.குருமூர்த்தி
- விவரங்கள்
- மு.குருமூர்த்தி
- பிரிவு: சுற்றுச்சூழல்
1800 களில் ஒரு வதந்தி உலவியது. மடகாஸ்கர் காடுகளில் சுற்றித்திரிந்த கார்ல் லிச்சி என்ற ஜெர்மானியர் ஒரு பெண்ணை மரம் விழுங்கியதைப் பார்த்ததாக கட்டுரை வெளியிட்டார்.
1950 களில் வெளியான கட்டுரையில் இதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது. கார்ல் லிச்சி என்கிற பெயரில் யாரும் மடகாஸ்கர் காடுகளை ஆராயவில்லை என்பதுதான் அந்த கட்டுரையின் உள்ளடக்கம்.
மனிதர்களைச் சாப்பிடும் மரம் இல்லாமல் போனாலும், சிறிய பூச்சிகளை விழுங்கும் பூக்களைக்கொண்ட பிட்சர் தாவரம் இருப்பது அந்தக்கட்டுரையில் உறுதி செய்யப்பட்டது. பிட்சர் தாவரங்கள் இந்தோனேசியா, ஆஸ்திரேலியா, மலேசியா ஆகிய வெப்ப மண்டல பகுதிகளில் காணப்படுகின்றன.
பிட்சர் தாவரத்தின் பூக்கள் ஒரு பெரிய ஜாடியின் வடிவத்தில் இருக்கும். இலைகளின் உதவியால் சுரக்கும் வாசனையான படலம் பூக்களின் உட்புறத்தில் படிந்து கொள்கிறது. வேர்களால் உறிஞ்சப்படும் நீரில் இந்த வாசனையுள்ள படலம் கரைந்து பூவின் அடியில் தங்கி விடுகிறது. சிறு பிராணிகள் வாசனையால் கவரப்பட்டு நீரைக் குடிப்பதற்காக ஜாடிவடிவப் பூவிற்குள் செல்லும்போது பூ மூடிக் கொள்கிறது. பிராணிகளின் உடல் சிதைக்கப்பட்டு பிட்சர் தாவரத்தால் உறிஞ்சிக் கொள்ளப்படுகிறது.
- மு.குருமூர்த்தி
- விவரங்கள்
- அ.வி. அஜிதா பாரதி
- பிரிவு: சுற்றுச்சூழல்
உலக தட்பவெப்ப நிலைகளில் மனிதன் அசைக்க முடியாத தெளிவான தாக்கத்தை ஏற்படுத்துகிறான் என்பது வெப்பநிலை ஆராய்ச்சியாளர்களின் கருத்து. தற்போது அதிகரித்துக் கொண்டுள்ள வெப்பநிலைக்கு தெரிந்தோ தெரியாமலோ மனிதனும் மனிதச் செயல்களும் காரணமாகிவிட்டன என்பதே உறுதியான உண்மை.
இத்தட்பவெப்பநிலை மாற்றங்களினால் பலவகை விலங்குகளும் செடிகளும் மறைந்து கொண்டு வருகின்றன. புவிவெப்பமடைதலே இம்மாற்றங்களுக்கு ஆணிவேராகக் கருதப்படுகின்றது. உலக தட்பவெப்ப மாற்றங்களுக்கு காரணம் பசுங்கூட (Green House) விளைவேயாகும். பசுங்ககூட விளைவு என்பது இயற்கையாக நிகழக்கூடிய ஒரு நிகழ்வு. இவ்விளைவினால் பூமியிலிருந்து பிரதிபலிக்கும் புற ஊதாக் கதிர்களும் அகச் சிவப்புக் கதிர்களும் வளி மண்டலத்தில் உள்ள பசுங்கூட வாயுக்களால் விழுங்கப்பட்டு மீண்டும் பூமிக்கு திரும்பவும் அனுப்பப்படுகின்றன. இதன் காரணமாக பூமி அதிக வெப்பமடைகிறது.
முன்பிருந்த தொழிற்சாலை கழிவுநீர்களில் இருந்து தற்கால தொழிற்சாலை கழிவுகளின் தன்மைகள் வேறாக மாறியுள்ளன. இதனால் ஒட்டுமொத்த ஹாலோ கார்பன் என்பவற்றின் அளவு அதிகரித்துள்ளது. இதன் விளைவாக புவி வெப்பமடைதல் ஒரு சதுர மீட்டருக்கு 2.450 சென்டிகிரேடு வெப்பம் என்ற விகிதத்தில் அதிகரித்துக் கொண்டேயுள்ளது. கரியமிலவாயு, மீத்தேன், குளோரா புளோரோ கார்பன், ப்ரியான், ஹாலஜன்ஸ், ஏரோசால் பிரப்பலெட்ஸ் போன்று பலவகையான குளிர் சாதனப் பெட்டிகளிலிருந்து வெளிவருகின்ற வாயுக்களே இந்த பசுங்கூட விளைவுக்கு காரணமாகின்றன. அறிவியல் அறிஞர்களின் கருத்துப்படி புவி 2.50 பாரன் ஹீட் வரை வெப்பமாகிக் கொண்டேயுள்ளது.
இது தொடர்ந்தால் இன்னும் நூறு ஆண்டுகளில்:
கடல் வெப்பமடைந்து கடல் நீர்மட்டம் உயரும்;
பனிமலைகள் உருகி மேலும் கடல் மட்டம் உயரும். இதனால் 21 ஆம் நூற்றாண்டிற்குள் கடல் மட்டம் 9 செ.மீ.இலிருந்து 88 சென்டி மீட்டருக்கு உயரும் என்பது ஆய்வாளர்கள் கருத்து.
பருவகாலங்கள் மாறலாம்
வெப்பம் அதிகரிப்பதால் நீராவி அதிகரித்து மழை அதிகரிக்கலாம். இதனால் உலகின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் வரலாம்.
இயற்கை சீற்றங்கள் புயல், சூறாவளி ஆகியன பல்வேறு பகுதிகளில் அதிகரிக்கலாம். அண்மையில் 2004 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் 562 முறை சூறாவளி வந்ததாக சான்றுகள் பல உள்ளன.
உலகின் பல இடங்கள் பாலைவனங்களாய் மாறலாம்.
பல்வேறு வகையான செடிகொடிகள் மற்றும் விலங்கினங்கள் கூட அழிந்து விடலாம்.
பருவகால மாற்றத்தினால் விவசாயத்தில் பல மாற்றங்கள் ஏற்படும்.
மலேரியா, டெங்குகாய்ச்சல், மஞ்சள் காய்ச்சல் போன்ற வெப்ப மண்டல நோய்கள் குளிர்பிரதேசங்களுக்கும், காலரா, வயிற்றுப் போக்கு போன்ற தண்ணீரால் வரும் நோய்கள் வெப்ப மண்டலங்களுக்கும் இடம் மாறும்.
கடல் மட்டம் உயர்வதால் நிலப்பரப்பு குறைந்து மக்கள் நெருக்கம் அதிகரிக்கும்.
பல வகையான காடுகள் குறிப்பாக அலையாத்திக் காடுகள் அழியக்கூடும்.
இவை, உயிரிகளிடத்தே ஏற்படுத்தக்கூடிய தாக்கங்கள் மனித இனம் எதிர்பாராத ஒன்றாய் இருக்கும் என்பதில் துளிகூட அய்யமில்லை. 1970களில் அமெரிக்கா மட்டுமே சுமார் 2,00,000 டன்னுக்கும் மேல் ஹாலோ கார்பன்களை வெளியேற்றியது. இதனை எதிர்த்து அய்க்கிய நாடுகள் அவை பல்வேறு ஒப்பந்தங்களைக் கொண்டு வந்தது.
நார்வே, ஸ்வீடன், கனடா போன்ற நாடுகளாலும் ஹாலோ கார்பன் வெளியேற்றம் தடை செய்யப்பட்டது. மேலும் நச்சுப் பொருள்களின் தடை ஆணையின் படி இவற்றின் உற்பத்தியும் பயன்பாடும் தடை செய்யப்பட்டன. அமெரிக்க வானியல் ஆராய்ச்சி மய்யமான ‘நாசா' 13.7.2004 அன்று பூமி வெப்பமடைதல் பற்றி ஆய்வு செய்ய செயற்கைக்கோள் ஒன்றை அனுப்பியது.
அமெரிக்காவில் மட்டும் இருந்து 25 சதவிகிதம் கரியமில வாயு (கார்பன் டை ஆக்சைடு) வெளியேறுவதால் அமெரிக்க அதிபர் புஷ், தம் நாட்டு மக்கள் இதன் பயன்பாட்டை குறைக்க நடவடிக்கை எடுப்பதாகவும், தாம் இது குறித்து தீவிர முடிவுகள் மேற்கொள்ளப் போவதாகவும் கூறியிருந்தார். இது போன்ற முடிவுகள் பிரிட்டனின் முதல் அமைச்சரான டோனி ப்ளேராலும் மேற்கொள்ளப்பட்டன.
‘நாசா'வின் கருத்துப்படி பனிப்பிரதேசங்களில், பனிமலைகளும், பனிப்பாறைகளும் பத்தாண்டுகளுக்கு 9 சதவிகிதம் எனும் அடிப்படையில் உருகி வருகின்றன. இதனால் 40 சதவிகித பனிப்பாறைகள் குறைந்துள்ளன. மேலும் வளிமண்டலத்தில் வெளியேற்றப்பட்ட கரியமிலவாயுவில் 50% கடல் நீரில் கரைந்து, கடல் நீரின் அமிலத்தன்மையை அதிகரிக்கச் செய்துள்ளது. இதனால் பவழப் பாறைகள் பெருமளவில் குறைந்தபடி உள்ளன. பல கடல் உயிரிகளும் அழிந்த வண்ணம் உள்ளன.
இத்தகைய மாற்றங்களையும், பேரழிவுகளையும் கண்டு நாம் அஞ்சினால், நமது இனம் மண்ணில் நீண்ட நாள் வாழ வேண்டும் என்ற ஆசை இருந்தால் நடைமுறையில் நாம் சில மாற்றங்களைக் கொண்டு வந்தாக வேண்டும். புவி வெப்பமடைதலை முழுவதுமாய் குறைக்க முடியாவிட்டாலும் நம்மால் இயன்றவரை அதன் வேகத்தையும் அளவையுமாவது கட்டுப்படுத்தலாம் அல்லவா? அதற்கு தனி மனிதர்களின் தனிப்பட்ட பல்வேறு பயன்பாடுகளை தவிர்த்தல் வேண்டும்.
அவசர அவசிய தேவைகளுக்கே தனியார் வாகனங்களைப் பயன்படுத்த வேண்டும். பிற நேரங்களில் பொது போக்குவரத்து வாகனங்களை நாடுவது அதிக அளவில் வெளியேறும் CO2, N2O ஆகியவற்றை குறைக்க வழி வகை செய்கிறது.
எரிவாயுவிற்கும் மின்சாரத்திற்கும் பதிலாக சூரியனில் இருந்து கிடைக்கும் சூரியச் சக்தி, காற்றுசக்தி, நீர் சக்தி போன்று பலவற்றை நாம் பயன்படுத்தலாம். மேலும் கிராமப்புறங்களில் மிகுதியாகக் கிடைக்கும் சாண எரிவாயு மற்றும் அழுகிய பொருள்களிலிருந்து கிடைக்கும் எரிவாயுவை நாம் பயன்படுத்தலாம்.
பசுங்கூட விளைவினை ஏற்படுத்தக்கூடிய வாயுக்களை வெளியேற்றும் பொருள்களை பயன்படுத்துவதைத் தவிர்த்தல் அல்லது குறைத்தல் வேண்டும்.
இவை பற்றிய விழிப்புணர்வினை உலகின் பட்டி தொட்டிகளுக்கும் சென்றடைய நாம் பல முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இன்றைய நிலையில் தீவிரவாதத்தைவிட அதிதீவிரமான பிரச்சினை புவி வெப்பமடைதல் ஆகும். இவற்றை எல்லோரும் உணரும் வகையில் செய்து பூமியில் ஏற்படும் மாற்றங்களை குறைக்க வழி வகுப்போம். இயற்கை அன்னையை காப்பாற்றுவோம்.
(கட்டுரையாளர், விழுப்புரம் இ.எஸ். மெட்ரிகுலேசன் பள்ளியில் 10ஆம் வகுப்பு படிக்கிறார்.)
(நன்றி : தலித் முரசு மே 2008)
- தாவரங்களின் தோள் கொடுக்கும் தோழர்கள்
- 'அப்பன் குதிருக்குள் இல்லை' பாதிப்புகளை மறைக்கும் மரபணு மாற்றப்பட்ட பயிர்கள்
- டாடா நானோ கார்: சின்னஞ்சிறு பயங்கரம்
- 'விளக்குகளை அணைப்போம்' - கவனம் பெறும் புதிய சூழல் விழிப்புணர்வு பிரச்சாரம்
- கடத்தலால் அழியும் காட்டுயிர்கள்
- பாயத் துடிக்கும் பன்னிரண்டு நோய்கள்
- சி.எஃப்.எல். பல்புகளோடு போராடும் குமிழ் பல்புகள்
- சூழலைக் காக்கும் பீமா மூங்கில்
- கரியமில வாயுவை கட்டுப்படுத்தும் வழிகள்
- வீட்டிற்குள்ளே சூழல் பாதுகாப்பு
- வானிலையை மாற்றும் காற்றாலைகள்
- கரியமில வாயுவை சேமித்து வைக்க முடியுமா?
- புவி வெப்பமயமாதலைத் தடுக்க புதிய வழிமுறை
- வட இந்தியா - வேகமாகக் குறையும் நிலத்தடிநீர்
- ஓசோன் மெலிவு மனிதருக்கு நலிவு
- புவி வெப்பமயமாதலும்..... மக்கள் நிலைமையும்
- கிளிஞ்சலுக்கு வந்த இடைஞ்சல்
- கடலை விஷமாக்கும் பிளாஸ்டிக் குப்பைகள்
- மரபு மாற்று விதைகள் – இயற்கையை விஞ்சுமா செயற்கை?
- வெப்பத்தை ஏற்று வளரும் பவளப்பாறைகள்