கீற்றில் தேட...
அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- ஜெயபாஸ்கரன்
- பிரிவு: சுற்றுச்சூழல்
இன்றைய தமிழக வேளாண் தொழிலாளர்களின் வாழ்க்கை நிலை மகிழத்தக்கதாக இல்லை. பாசனநீர்ப் பற்றாக்குறை, பருவமழை பொய்த்துப் போதல் போன்ற பல்வேறு சவால்களை எதிர் கொண்டு அவர்கள் வேளாண் தொழிலைச் செய்ய வேண்டியிருக்கின்றது. தற்போது அவர்கள் புதிதாக எதிர்கொண்டுள்ள முக்கிய சவால் வேலிக்காத்தான் என்னும் முள் மரமாகும்.பயிர்களுக்கு வேலியாகவும் சமையலுக்கு விறகாகவும் பயன்படும் என்ற நம்பிக்கையில், 1950களில் ஆஸ்திரேலியாவில் இருந்து சிறிதளவு விதையாக இது கொண்டுவரப்பட்டது. இந்த அறுபது ஆண்டுகளில் வளர்ந்து பெருகிப் பரவி இன்று தமிழகம் முழுவதையுமே ஆக்கிரமித்து விட்டது. Prosopis Juliflora எனும் அறிவியல் பெயர் சூட்டப் பெற்ற இந்த முள்மரம், அமெரிக்கா போன்ற பல வளர்ந்த நாடுகளில் வேளாண்மைக்கு எதிரான ஆபத்தான விஷத் தாவரமாக அறிவிக்கப்பட்டு வேளாண் கண்காட்சியில் மட்டும் வைக்கப்படுவதாகத் தெரிய வருகிறது.
வேலிக்காத்தானுக்கு இந்த மண்ணில் இடமில்லை என்பதை நமது அண்டை மாநிலமான கேரளம் அறிவிக்கப்படாத வேளாண் கொள்கையாகவே கடைப்பிடித்து வருகின்றது. எங்காவது வேலிக்காத்தான் தென்பட்டால் அதை முதலில் பிடுங்கி எறிந்துவிட்டே மறுவேலையைப் பார்க்கிறார்கள் அம்மண்ணின் மக்கள். ஏனெனில் வேலிக்காத்தான் தழைக்கின்ற இடத்தில் வேறு எதுவும் தழைக்காது என்பதை அறிவியல்பூர்வமாக அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள்.
ஆனால் நமது தமிழக மண்ணில் வேளாண்மைக்கு உகந்த பகுதிகளில் இருபத்தைந்து விழுக்காட்டுக்கு மேல் வேலிக்காத்தான் வளர்ந்து மண்டிக் கிடக்கின்றது. நிழல் மரமாகவோ, கனி மரமாகவோ, கதவு சன்னல் என்று பயன்பாட்டிற்குரிய பொருள்களைச் செய்வதற்கோ எவ்வளவு பசுமையான தழையாக இருந்தாலும் அடியுரமாக இடுவதற்கோ, குறைந்தபட்சம் பறவைகளாவது அமர்ந்து கூடு கட்டுவதற்கோ வேலிக்காத்தான் பயன்படுவதில்லை.
எந்த நோயினாலும் பூச்சிகளாலும் தாக்க முடியாத, எந்த இடத்திலும் மற்ற தாவரங்களை அழித்துவிட்டு தான் மட்டும் செழித்துப் படருகின்ற தன்மை வேலிக்காத்தானுக்கு மட்டுமே உண்டு. பல்லாயிரம் பறவைகளின் சரணாலயமாகத் திகழும் வேடந்தாங்கல் ஏரியிலேயே செழித்து வளர்ந்த வேலிக்காத்தான், பருவ காலத்திற்கு வந்து அந்த ஏரியில் நீந்த முனைந்த வெளிநாட்டுப் பறவைகளையெல்லாம் குத்திக் கிழித்துக் கொன்றதும், பின்பு வனத்துறையின் முயற்சியால் அந்த மரங்கள் பிடுங்கி எறியப்பட்டதும் ஒருமுறை நிகழ்ந்தது. அதன் முள் குத்தி இறந்துபோன விவசாயிகள் நிறையபேர்.
வேளாண்மைக்குப் பயன்படுத்தப்படாத இடம் வேலிக் காத்தானுக்குச் சொந்தம் என்றாகிவிட்டதால் பாசனப் பற்றாக்குறையால் தரிசாகப் போடப்பட்டுவிட்ட மண் பரப்புகளில் எல்லாம் இப்போது வேலிக்காத்தான் செடிகள் வேகமாக வளர்ந்து வருவதைக் காணலாம். அந்தச் செடி வேரூன்றிவிட்டால் அதை அகற்றுவது கடினம் என்பதோடு அதை அகற்றும் பணிக்குப் பணமும் செலவாகின்றது. பலமான பக்க வேர்களைக் கொண்டு வளருவதால் அந்தச் செடிகள் மழைநீரை நிலத்தடிக்குச் செலுத்துவதில்லை.
கிராமப்புற மக்களுக்கான விறகுத் தேவையைப் பூர்த்தி செய்வது மட்டுமே அம்மரத்தால் கிட்டுகிற ஒரே பயன். ஆனால் அரிசியைப் பறிகொடுத்துவிட்டு அதை வேக வைக்கும் விறகை மட்டும் வைத்துக் கொண்டு என்ன செய்வது?
வளமான வேளாண்மைக்கு எல்லா வகையிலும் தடையாக இருக்கின்ற வேலிக்காத்தானை முற்றிலுமாக நமது மண் பரப்புகளில் இருந்து வேரோடும் வேரடி மண்ணோடும் அப்புறப்படுத்துவதில்தான் வேளாண்மையின் எதிர்காலம் அடங்கியிருக்கின்றது. வேலிக்காத்தானிடமிருந்து மீட்கப்படும் வேளாண் நிலம் நமது இயல்பான வளத்திற்குத் திரும்ப ஒரு குறிப்பிட்ட கால அவகாசத்தை எடுத்துக்கொள்ளும் என்பது இன்னொரு வேதனையாகும்.
அறிவொளித் திட்டம் நடைமுறைக்கு வந்தபோது நூறு விழுக்காடு எழுத்தறிவு பெற்ற மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று ஒவ்வொரு மாவட்டத்திலும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. வேலிக்காத்தானை ஒழிப்பதற்கும் அப்படியொரு திட்டம் இன்றைய தமிழகத்திற்கு அவசியத் தேவை. நமது மாநில அரசும், மாவட்ட நிர்வாகங்களும், வேளாண் நலன் விரும்பும் அமைப்புக்களும் இதைக் கருத்திற்கொள்வது நல்லது.
- ஜெயபாஸ்கரன்
- விவரங்கள்
- மு.குருமூர்த்தி
- பிரிவு: சுற்றுச்சூழல்
தமிழன் எதையெதையோ இழந்தான். இழந்து கொண்டுமிருக்கிறான். ஏன் இழந்தான், எதற்காக இழந்தான், என்னென்ன சூழலில் இழப்புகள் ஏற்பட்டன என்பதையெல்லாம் மேடை போட்டு சோடா குடித்து பேசலாம். தமிழனே கைதட்டி விட்டு வேகமாக கலைந்து போய்விடுவான் அடுத்த இழப்பிற்கு தயாராவதற்கு.இலவசக்கல்வியை இழந்தது, பள்ளிகளில் தமிழை ஓரங்கட்டியது, காவிரியை காணாமற்போகச் செய்தது, நகரங்களை கிராமங்களுக்குள் திணித்தது, கிராமங்களை நகரங்களுக்கு விரட்டியடித்தது, ஆற்று மணலைப் பொன்னாக்கியது, நிலத்து மண்ணைப் பாழாக்கியது, கிராமத்து தொழில்களை நசுக்கியெறிந்தது, இதெல்லாம் அற்பமான இழப்புகள்.
இதற்கு ஈடாக தமிழன் இன்று பெற்றிருப்பது ஏராளம். குடும்பத்தை சிதைக்கும் கதைகள் நம்மூர் தொலைக்காட்சிகளில் செங்கோல் செலுத்துகின்றன. நமது பெண்கள் கண்ணீரைத் துடைத்துக் கொள்ளும் இடைவேளைகளில் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம், மானைப் போலவும் மயிலைப் போலவும்.
“படிக்கிறவனை நீங்களே படிக்க வைத்துக் கொள்ளுங்கள் குடிக்கிறவனை குடிக்கவைக்கிற வேலை எனக்கிருக்கிறது” என்று மார்தட்டும் அரசுகள்.
அரசாங்க ஆஸ்பத்திரியில் உயிரை இழக்க விரும்பாதவனை வாரியணைக்கும் கார்ப்பரேட் மருத்துவமனைகளும் சிண்டிகேட் மருத்துவமனைகளும். .டிஸ்சார்ஜ் ஆகும்போது ஒருஏக்கர் நிலத்தை விற்றால் தான் டவுன் பஸ்ஸுக்கு சில்லரை மீதமிருக்கும் உத்தரவாதம்.
அந்த வரிசையில் ஒரு புரட்சிவரவு “டிஜிட்டல் படுதாக்கள்”. தலைவனையும் தலைவியையும் விளம்பரப்படுத்தும் மோகம். அந்த விளம்பரத்தின் நிழலில் தானும் அறிமுகமாகும் வேகம். இன்றைய டிஜிட்டல் பேனர்கள் தமிழகத்தின் புதியவரவு. மரபு ஓவியர்களின் தொழிலை வேருடன் பிடுங்கி எறிந்த தொழில்நுட்பம் இன்று தமிழ்நாட்டின் நகரங்களிலும் கிராமங்களிலும் கைகால்களைப் பரப்பிக்கொண்டு ஆரவாரம் செய்து கொண்டிருக்கிறது.
நின்றுகொண்டும், நடந்து கொண்டும், கைகூப்பிக் கொண்டும், தலைசாய்த்து தோழருடன் பேசிக்கொண்டும், முற்றிப்போன சினிமா டைரக்டர்களின் கற்பனையில் கூட எட்டியிராத போஸ்களில், தமிழ்நாட்டின் தலைநரைக்காத மூத்தகுடிமக்கள் பளபளப்பான அந்த படுதாக்களில் குடியிருப்பார்கள். கையில் ஒரு துண்டு மடித்து வைத்திருப்பார். அல்லது செல்போன் வைத்திருப்பார். செல்போன் சும்மா இருந்தால் செல்போனுக்கு மரியாதையில்லை என்பதற்காக செல்போனை சொறிந்து கொண்டிருப்பார். நட்ட நடுரோட்டில் சிரித்துக்கொண்டு நிற்பார் அல்லது சிந்தனையில் ஆழ்ந்திருப்பார். படுதாவிற்கு காசுகொடுத்த தோழரின் தலை கால்மாட்டில் வேட்டியோரமாக அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கும்.
எந்த ஒரு கட்சிப்புள்ளியும் படுத்திருக்கிற கோணத்தில் டிஜிட்டல் படுதா யாரும் இன்னும் வைக்கவில்லை. அப்படியொரு படுதா வைத்தால் பிரமுகர் அரசியலில் படுத்துவிடுவார் என்கிற சென்டிமெண்ட் ஆகக்கூட இருக்கலாம். கட்சியில் முக்கியமான ஒரு புள்ளி தன்னுடைய ஊருக்கு வருகிறார் என்றால் அவரை வரவேற்பது என்ற பெயரில் டிஜிட்டல் படுதாக்களை வைப்பவர் யாராக இருக்கும்? இன்றைக்கு கட்சியில் தனக்கு இருக்கும் பதவியைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டுமா? அடுத்த தேர்தலில் தனக்கு சீட்வேண்டும் என்று அச்சாரம் போடவேண்டுமா? கட்சியில் தான் இன்னாருடைய ஆதரவாளர் என்பதை தலைமைக்கு எடுத்துக்கூறவேண்டுமா?
தனக்குப்பின்னால் இவரெல்லாம் அணிவகுத்து நிற்கிறார்கள் ஜாக்கிரதை என்று எச்சரிக்கை விட வேண்டுமா? இது தன்னுடைய ஏரியா என்பதை கட்சிக்கும் அன்றாடம் காய்ச்சிகளுக்கும் அறிவிக்க வேண்டுமா? தனக்குக்கிடைத்த காண்ட்ராக்ட்டுக்கும் சுருட்டிய பெரும்தொகைக்கும் நன்றி கூற வேண்டுமா? அடுத்து வரப் போகிற பெரிய டெண்டர் தனக்கு சாதகமாக இருக்க வேண்டுமா? கத்தியின்றி ரத்தமின்றி காரியம் முடிக்கும் ஆயுதம்தான் டிஜிட்டல் படுதாக்கள்.
இந்த டிஜிட்டல் படுதாக்களில் கட்சிப்புள்ளிகளை எப்படியெல்லாம் அழைக்கிறார்கள் என்பதைப்பார்த்தால் அந்த பிரமுகருக்கே முகம் சிவந்துபோகும் நாணத்தால். “இந்நாட்டு இங்கர்சாலே.....சேகுவாராவே........உலகத்து நாயகனே அல்லது நாயகியே........வீரத்தின் உருவே.....எங்கள் குல விளக்கே.......உலகத்தின் பெரியாரே.....திருக்குறளே.......கண்ணின் மணியே.........மணியின் ஒளியே.....”
இதெல்லாம் “டிஜிட்டல் படுதாக்களில் பேத்தல்கள்” என்ற தலைப்பில் ஆராய்ச்சிக் கட்டுரைக்கு உதவுகிற தலைப்புகள். கட்சிப்புள்ளிகளை விலங்குகளுக்கு ஒப்பிட்டு வரவேற்கும் டிஜிட்டல் படுதாக்களுக்கும் குறைவில்லை. சிங்கம், புலி, சிறுத்தை, களிறு, காளை, அரிமா, வேழம், கவரிமான், புள்ளிமான், கலைமான் இவற்றோடெல்லாம் ஒப்பிட்டு டிஜிட்டல் படுதாக்கள் வைத்தாயிற்று. என்ன காரணத்தினாலோ நரியோடு யாரும் ஒப்பிடுவது இல்லை.
ஆரம்பகாலத்தில் வைக்கப்பட்ட டிஜிட்டல் படுதாக்கள் காந்தி, நேரு, அம்பேத்கர் படங்களில் வரிசைகட்டம். அப்புறம் கற்பனை தமிழ்நாட்டுக்குள் நுழைந்து விடும். பெரியாரில் தொடங்கி காமராசர், அண்ணா இவர்களின் இதயத்திற்குள் பிரமுகர் சிரித்துக் கொண்டிருப்பார். இப்போதெல்லாம் பழையதலைவர்கள் மக்களின் நினைவில் இறந்துபோய்விட்டதால் அவர்களாகவே இப்போது பரணில் ஏறிக் கொண்டார்கள். இப்போதெல்லாம் பிரமுகரின் படம்தான் பிரதானம்.
பாவ்லோவ் என்ற ரஷ்ய நாட்டு விஞ்ஞானி அவருடைய நாய்க்கு சோறு வைக்கும்போதெல்லாம் ஒரு மணியை அடித்து ஓசைபடுத்தியபிறகு தான் சோறு வைப்பாராம். சில மாதங்கள் கழிந்ததும் மணி மட்டும் அடிப்பாராம். சாப்பாட்டுத்தட்டை வைக்கமாட்டாராம். மணி ஓசை கேட்டவுடனேயே நாய் சோற்றை நினைத்துக்கொண்டு நாக்கை தொங்கப்போடுமாம். நாய், மணிஓசை, சோற்றுத்தட்டு இதெல்லாம் யார்யாரென்று விரித்துரைக்க வேண்டியதில்லை.
டிஜிட்டல் படுதாக்களின் அதிர்வலைகள் பெருநகரங்களின் தொடங்கி, சிறுநகரங்கள், சிற்றூர்கள், கிராமங்கள் என்று அதிர்ச்சி அலைகளாக பரவிவருவதுதான் இன்றைய ரசனைக்குரிய செய்தி. டிஜிட்டல் படுதாக்களைத் தயாரிக்கும் தொழிலகங்கள் சிற்றூர்களில்கூட ஆல்போல்தழைத்து அருகுபோல் வேரூன்றி நிற்கின்றன. வேலை கிடைக்காத படித்த ஏழை இளைஞர் பட்டாளம் நாடி நரம்புகளைத் துளைக்கும் இரசாயனப் பொருள்களின் வாசனைக்கு நடுவே நாள்முழுவதும் பணியாற்றிவருவது கொடுமையிலும் கொடுமை.
இந்த படுதாக்கள் பாலிவினைல் குளேரைடு என்ற இரசாயனப் பொருட்களினால் ஆன பிவிசி வால்பேப்பர்களில் அச்சடிக்கப்படுகின்றன. பல்வேறு இரசாயனங்கள் சேர்க்கப்படாமல் பிவிசியை பயன்படுத்தமுடியாது. காட்மியம், பாதரசம், ஈயம், தாலேட்டுகள், டையாக்ஸின்கள் என்று மேலைநாடுகள் வெறுத்து ஒதுக்கத்தொடங்கியுள்ள இரசாயனங்களை நாம் வாரியணைக்கத் துடிக்கிறோம் இந்த படுதாக்களின் வடிவத்தில். இந்த படுதாக்கள் தயாரிப்பதில் பயன்படுத்தப்படும் இரசாயனப் பொருட்கள் புற்றுநோயின் பங்காளிகள். மலட்டுத்தன்மையின் சம்பந்திகள்.
“எங்க மாமாவுக்கு கல்யாணம்......வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்.” “அஞ்சாத சிங்கம் அம்மாக்கண்ணு வீட்டுத்திருமணத்திற்கு வருபவர்களை வருக வருக என்று வரவேற்கிறோம்.” என்பது போன்ற டிஜிட்டல் படுதாக்கள் கல்யாண மண்டபங்களின் வீதியின் இருபுறமும் காணப்படுவது இன்றைய சாதாரணம். கல்யாணம், காதுகுத்து, பூப்புநீராட்டு, மொய்விருந்து, பணிஓய்வு, வெளிநாட்டுப்பயணம், வெளிநாட்டிலிருந்து வெற்றிகரமாக திரும்புதல் என்று டிஜிட்டல் படுதாக்களின் பட்டியல் நீண்டு கொண்டிருக்கிறது.
இந்த படுதாக்களின் வேலை முடிந்தபிறகு அதனுடைய மிச்ச சொச்ச ஆயுள் எப்படி கழிகிறது என்பதுதான் இந்த கட்டுரை எழுதப்பட்டதன் நோக்கமம். புற்றுநோயாலும் மலட்டுத்தன்மையாலும் பாதிக்கப்படும் அபாயம் இந்தத் தொழிலில் இருப்பவர்களுக்கு அதிகமாக இருப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. எனவே டிஜிட்டல் படுதாக்களை தயார்செய்யும் தொழிலில் இருப்பவர்களை ஆபத்தான தொழில் செய்பவர்களாகத்தான் கருத வேண்டும். இந்த படுதாக்கள் நகராட்சியின் தலைவலிக்கு காரணமான பிளாஸ்டிக் குப்பைகளுக்கும், மருத்துவமனைக் கழிவுகளுக்கும் சமமானவை.
ஒரு கிராமத்திற்குள் ஐந்து கிலோமீட்டர் பயணம் செய்து பார்த்தால் பத்து அல்லது இருபது ஓய்வுபெற்ற டிஜிட்டல் படுதாக்கள் வீடுகளின் சுவர்களில் சாய்த்து வைக்கப்பட்டிருப்பதை இன்று பார்க்கலாம். காலம் நீளும்போது நிச்சயமாக இந்த எண்ணிக்கை நீளும். அவற்றை என்ன செய்வது என்பது வீட்டுக்காரர்களுக்கே தெரியவில்லை. காலப்போக்கில் அவை மழைச்சாரலை மறைக்கும் படுதாக்களாக மாறலாம். மாட்டுக் கொட்டகைக்கு கூரையாகலாம். ஏழைக்குடிசைக்கு சுவராகலாம். அரிசியும் பருப்பும் காயவைக்கும் படுதாவாக உருவெடுக்கலாம். டிஜிட்டல் படுதாக்களில் பயன்படுத்தப்படும் இரசாயனப்பொருள்கள் ஆபத்தானவை. முன்னேறிய நாடுகள் அவற்றை துரத்தியடிக்க முயற்சி செய்து கொண்டிக்கின்றன.
வந்தாரையெல்லாம் தமிழகமும் தமிழனும் வாழவைக்கலாம். அதில் தவறில்லை. டிஜிட்டல் படுதாக்கள் போன்ற நச்சுப் பொருட்களை வாழவைப்பது இமாலயத் தவறு. எதிர்கால சந்ததி இல்லாமல் போகும் என்பதுதான் அறிவியல் உலகம் தரும் எச்சரிக்கை. தமிழ்நாடு அரசு பிரச்சினையின் தீவிரத்தை உணர்ந்து டிஜிட்டல் படுதாக்களுக்கென சில கட்டுப்பாடுகளை விதித்திருப்பது ஆறுதலான செய்தி.
தற்போது ஒரு சதுர அடி டிஜிட்டல் படுதா தயாரித்து தருவதற்கு ஒரு சதுர அடிக்கு எட்டு ரூபாய் வாங்குவதாகத் தெரிகிறது. ஒரு பிரமுகரின் ஆளுயர படுதா தயாரிக்க எட்டடிக்கு இரண்டரை அடி என்ற அளவில் நூற்று அறுபது ரூபாய் செலவாகும். ஆள் கூலி எல்லாம் சேர்த்து இருநூறு ரூபாய் என்று கொண்டால்கூட வீதியெங்கும் ஐம்பது படுதா வைக்கும் கட்சிக்காரர் பத்தாயிரம் ரூபாய் செலவழிக்க வேண்டியிருக்கும். ஏதோ ஒரு காண்ட்ராக்டில் லட்சரூபாய் சம்பாதித்த கட்சிக்காரருக்கு பத்தாயிரம் சாதாரண தொகை. அரசாங்கம் டிஜிட்டல் படுதாக்களின் மீது நூறு சதவீதம் வரிவிதிப்பை ஏற்படுத்தினால் அரசின் பிடி இறுகும்.
இதனால் வருத்தப்படப்போவது டிஜிட்டல் படுதாக்களை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கும் அன்றாடம் காய்ச்சியல்ல. ஜில்லென்று சிரித்துக் கொண்டிருக்கும் சீமான்கள்தான்.
- மு.குருமூர்த்தி
- விவரங்கள்
- ஜெயபாஸ்கரன்
- பிரிவு: சுற்றுச்சூழல்
மலைகளின் ஆண்டாக தனியாக ஒரு ஆண்டை அறிவித்திருக்கிறது ஐக்கிய நாடுகளின் சபை. மக்களிடமிருந்து எப்படியாவது மலைகளைக் காப்பாற்றியாக வேண்டும் என்கிற அவசியத்தின் விளைவாகவே இத்தகைய அறிவிப்பு செய்யப்பட்டிருக்கிறது. மலைத் தொடர்களும், அவற்றின் அழகும் கம்பீரமும் நாள் கணக்கில் நின்று ரசிக்கத்தக்கவை. நீளமான கடற்கரையைப் போலவே, நீளமான மலைத் தொடர்களையும் கொண்ட சிறப்பு நமது தமிழகத்திற்கு உண்டு.
அழகும் வளமும் நிறைந்த ஏராளமான மலைப் பகுதிகளைப் பெற்றிருந்தாலும் அவற்றை எந்த அளவிற்குத் தக்க வைத்துக் கொள்ளப் போகிறோம் எனும் கேள்வி இன்று நம் முன்னே எழுந்துள்ளது. 19ஆம் நூற்றாண்டு வரை மலைகளையும், நிலப்பரப்புகளையும், கடல்களையும் காப்பாற்றியது ஒரு பெரிய காரியமே அல்ல. அது இயந்திரங்கள் இல்லாத காலம். இன்றைய காலமோ இயந்திரங்களின் காலம். மனிதகுலத்தின் நன்மைக்காகத் தான் இயந்திரங்கள் என்றாலும் அவை இயற்கைக்கு விரோதமாகவே பெரிதும் அரங்கேறி வருகின்றன.
தமிழகத்து மலைப்பகுதிகள் அனைத்தும் மிகவும் அடர்ந்த அல்லது ஓரளவு அடர்ந்த மரங்களைக் கொண்ட வனப்பகுதிகளாக இருக்கின்றன. அடர்ந்து உயர்ந்த மரங்கள் நிறைந்த மலைப் பகுதிகளில் யானைகள் மற்றும் காட்டெருமைகள் வாழ்கின்றன. சிறு சிறு மலைக் காடுகளிலும் பல்வேறு வகையான விலங்குகள் வாழ்கின்றன. விலங்குகளுக்குச் சொந்தமானவை காடுகள். ஆனால் பல்வேறு விதங்களில் நேரடியாகவும் மறைமுகமாகவும் அவற்றின் வாழ்வுரிமை மறுக்கப்படுகிறது. மலைப்பகுதிகளுக்கும் மனிதர்கள் புழங்கும் பகுதிகளுக்கும் இடையிலான மலையடிவாரப்பகுதி, மெல்ல மெல்ல ஆக்கிரமிக்கப்பட்டு, பயன்படுத்தப்பட்டு வருவதைத் தமிழகத்தின் பெரும்பாலான மலைப்பகுதிகளில் காணமுடிகிறது.
யானைகளின் காட்டிற்கும் மனிதர்களின் வயல்வெளிகளுக்கும் இடைவெளியின்றிப் போய்விட்டதன் விளைவாகவும் மலைப்பகுதிகளின் வறட்சி, தண்ணீர்ப்பற்றாக்குறை போன்றவற்றாலும் காட்டு விலங்குகள் - குறிப்பாக யானைகள் - காட்டைவிட்டு வெளியேறி வயல்வெளிகளைத் துவம்சம் செய்வதும் சில நேரங்களில் மின் கம்பிகளில் சிக்கி மாண்டு போவதும் நடந்து கொண்டிருக்கின்றன. அடர்ந்த காடுகளுக்கான மலையடிவாரப்பகுதிதான் அதிகமாகக் கவனம் செலுத்திப் பாதுகாக்க வேண்டிய, மரங்களையும் திட்டமிட்டு வளர்க்க வேண்டிய பகுதியாகும். ஆயினும், நமது மலையடிவாரங்களில் நடப்படும் மரங்களைவிட மலைப்பகுதிகளில் வெட்டப்படும் மரங்களின் எண்ணிக்கை அதிகம். இன்றைய இயந்திர உலகில் ஒரு மரம் இரண்டே நாளில் கதவாகவும், சன்னலாகவும் மாறி விடுகிறது. ஆனால் ஒரு விதையை மரமாக்க இயற்கை எத்தனை ஆண்டுகளை எடுத்துக் கொள்கிறது என்பதைக் கணக்கிட்டுப் பார்க்க நமக்கு நேரம் இருப்பதில்லை.
விளைய வைத்து அறுத்துக் கொள்ளும் அவகாசமும் திட்டமும் இல்லாமற் போய்விட்டதன் காரணமாகவே பலநூறு ஆண்டுகளாக விளைந்திருக்கும் காடுகளின் மீது நாம் கை வைக்க ஆரம்பித்து விட்டோம். மிகப் பெரிய மலைத் தொடர்களை நாம் பெற்றிருப்பது போல் தெரிந்தாலும் நமது அண்டை மாநிலங்களான கேரளம், கர்நாடகம் போன்றவற்றின் மலைப்பகுதிகளை விட நமது மலைவளப் பகுதி குறைவானதே யாகும். தொலைநோக்குப் பார்வையில், இந்தக் குறைவான மலைப் பகுதிகளை மிகக் கவனமாகப் பாதுகாக்க வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம்.
குளிர் மலைப்பகுதிகளான ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற இடங்களில் வசதி மிக்கவர்கள் நிலம் வாங்கிப் போடும் வேகத்தைப் பார்த்தால் இன்னும் கொஞ்ச காலத்தில் அப்பகுதிகள் மாளிகைகள் நிறைந்த மண் மேடுகளாகக் காட்சியளிக்குமோ என்று அஞ்சத் தோன்றுகிறது. இது ஒருபுறம் இருக்க சுற்றுலாப் பயணிகள் வீசியெறியும் கூளங்களால் - குறிப்பாக பிளாஸ்டிக் கழிவுகளால் - மேற்குறிப்பிட்ட மலைப்பகுதிகள் மாசடைந்து வருகின்றன. தன்னார்வ அமைப்புகளும் அரசும் எவ்வளவோ முயன்று பணி செய்தும், மலைப்பகுதிகளில் பிளாஸ்டிக் அதிக அளவு சென்றடைந்து கொண்டிருக்கிறது. கொடைக்கானல் ஏரியைச் சுற்றிலும் பிளாஸ்டிக் பைகள், பாட்டில்களே அதிக அளவில் கரை ஒதுங்கியிருப்பதைக் காணலாம்.
காலங்காலமாக மலைக்காடுகளில் வாழ்ந்து வரும் மக்களால் மலைகளுக்கும் அதன் காடுகளுக்கும் எந்த இடையூறும் நேர்ந்ததில்லை. காராளக் கவுண்டர்கள், முடுகர்கள், சோளகர்கள், இருளர்கள், புலையர்கள் போன்ற மலைவாழ்ப் பழங்குடி மக்கள் தமிழகத்தின் பல்வேறு மலைப் பகுதிகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். சுதந்திரத்தின் எந்தச் சுவடும் இன்று வரை அவர்களுக்குத் தெரியாது என்பது கசப்பான உண்மையாகும். கோவை மாவட்டத்தின் அட்டுக்கல் மலைப்பகுதி இருளர்களையும், கல்கொத்தி மலைப்பகுதி முடுகர்களையும், திருமூர்த்தி மலைப்பகுதி புலையர்களையும், தருமபுரி மாவட்டம் சித்தேரி மலைப்பகுதியின் தொங்கலூத்து, கலசப்பாடி, கருக்கம்பட்டி ஆகிய கிராமங்களின் காராளக் கவுண்டர்களையும் இவர்களைப் போன்ற இன்னும் பல்வேறு மலைவாழ் மக்களையும் பார்க்கிற எவருக்கும் இந்த உண்மை புரியவரும்.
தாம் வாழும் மலைகளே மலைவாழ் மக்களின் உலகமாக இருக்கிறது. பாறைகளும் மரங்களும் ஓடைகளுமாகப் பார்ப்பதற்கு ஒரே மாதிரியாக இருந்தாலும் கூட மலைமக்கள் அப்பகுதிகளுக்கு, கரட்டியூர் அம்மன் படுகை, கோம்புத்துறை, குமரிப்பாறை, தங்கவலச கருப்புசாமி கோயில், பூதநாச்சித் தேருமலை என்றெல்லாம் பெயர்களைச் சூட்டி தங்களுக்குள் அடையாளம் காட்டிக் குறிப்பிட்டு அங்கெல்லாம் புழங்கிக் கொண்டு இருக்கிறார்கள்.
அந்தந்த நாட்டின் எல்லைகளைப் பாதுகாப்பது, உலகின் தட்பவெப்ப நிலையைப் பாதுகாப்பது, அருகிக் கொண்டே வரும் வன உயிர்களைப் பாதுகாப்பது, வனங்களில் வாழ்ந்தே பழகிப் போன, வனங்களிலேயே வாழ விரும்புகிற மலைவாழ் மக்களின் வாழ்வுரிமையைப் பாதுகாப்பது, பல கோடிக்கணக்கான மரங்களைப் பாதுகாப்பது என்கிற கோணத்தில்தான் மலைகளைப் பாதுகாப்பது என்கிற ஐ.நா. சபையின் பிரகடனத்தை ஒவ்வோர் அரசும் ஒவ்வொரு மனிதனும் புரிந்துகொள்ள வேண்டும்.
- ஜெயபாஸ்கரன்
- விவரங்கள்
- ஜெயபாஸ்கரன்
- பிரிவு: சுற்றுச்சூழல்
தரைவாழ் உயிரினங்களில் மிகப் பெரியதும், பல்வேறு அல்லல்களுக்கு உள்ளாகி நாளுக்கு நாள் அழிந்து வருவதுமான யானைகளைப் பற்றிய செய்திகள் மனிதகுல வரலாறு நெடுகிலும் மண்டிக் கிடக்கின்றன. மன்னராட்சிக் காலங்களில் பல்லாயிரக்கணக்கில் போர்களுக்குப் பயன்படுத்தப்பட்டது முதல், இன்றைய கணிப்பொறி காலம் வரை யானைகள் மனித குலத்துக்குப் பல்வேறு வகையில் தொடர்ந்து உழைத்துக் கொண்டிருக்கின்றன.
யானைகளைப் பாதுகாப்பதைக் காட்டிலும் அவற்றை எப்படி எப்படியெல்லாம் பயன்படுத்திக் கொண்டு பிழைக்கலாம் என்பதே மனிதர்களின் சிந்தனையாக இருக்கிறது. ஆசி வழங்கும் கோயில் யானைகள்; வித்தை காட்டும் சர்க்கஸ் யானைகள்; வெட்டி வீழ்த்தப்பட்ட மரங்களைத் தூக்கிக் கொண்டு வந்து அதை லாரியில் ஏற்றிக் கொண்டிருக்கும் முகாம் யானைகள்; முகாம் யானைகளுக்குப் பயிற்சி கொடுக்கவும், அடங்காத யானைகளை அடக்கவும் பயன்படுத்தப்படுகிற ‘கும்கி’ யானைகள்; மனிதர்களின் கண்ணில் பட்டுவிடக் கூடாதே என்கிற கவலையோடு வாழ்ந்து கொண்டிருக்கும் காட்டு யானைகள் என்று யானைகளில் எத்தனையோ பிரிவுகள்!
மனிதர்களின் கைகளில் சிக்காத காட்டு யானைகள் எந்த அளவுக்கு நிம்மதியாக வாழ்கின்றன என்பது தெரியவில்லை. ஆனால் பல்வேறு விதங்களில் மனிதர்களுக்காக உழைத்துக் கொண்டிருக்கிற ஆயிரக்கணக்கான யானைகளில், எந்த யானையும் நிம்மதியாக இல்லை என்பது கண்கூடான உண்மை. முகாம்களில் உழைத்துக் கொண்டிருக்கும் ஒவ்வொரு யானைக்கும், ஒரு நாள் உணவாக 100 கிராம் வெல்லம், 5 கிலோ கொள்ளு, 15 கிலோ ராகி ஆகியன உணவாக வழங்கப்படுவதாக ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
இதில் பெண் யானைகள், கருவுற்ற யானைகள், மற்றும் குட்டி யானைகளின் உணவு தொடர்பான அளவு விவரங்கள் மாறுபடுகின்றன. ஆனால் முகாம்களில் இல்லாமல் மனிதர்களுக்கிடையில் பல்வேறு தொழில் செய்து ஒடுங்கிக் கிடக்கும் எல்லா யானைகளுக்கும் இந்த அளவு உணவு வழங்கப்படுகிறதா என்பது மிகப்பெரிய கேள்விக்குறி.
அடர்ந்த காடுகளில் விருப்பம்போல் கூட்டம் கூட்டமாக நடமாடி, மரங்களின் பசுந்தழைகளைத் தின்று, பெரிய பெரிய காட்டாறுகளில் நீர் குடித்து அங்கேயே விளையாடி மகிழும் உடல் அமைப்பு கொண்ட யானைகள், அருகம்புல்லும் முளைக்க வாய்ப்பில்லாத நகரத்துச் சூழலில் எப்படி வாழ முடியும் என்பது சமூகத்தின் கவலைக்கு அப்பாற்பட்ட விஷயமாக இருக்கிறது.
காடுகளில் வறட்சி, தண்ணீர்ப் பற்றாக்குறை போன்றவற்றால் பாதிக்கப்பட்டு காட்டைவிட்டு வெளியேறுகிற பல யானைகள் அருகில் உள்ள விளைநிலங்களைத் துவம்சம் செய்து பயிர்களைத் தின்று பசியாறிச் செல்கின்றன. காடுகள் அழிக்கப்படுவது; யானையின் வாழிடங்கள் காப்பி, தேயிலை போன்ற விளை நிலங்களாக மாற்றப்படுவது; தந்தங்களுக்காக வேட்டையாடப்படுவது போன்ற பல்வேறு காரணங்களால் காட்டு யானைகளின் வாழ்வுரிமை தற்போது கேள்விக்குறியாகிவிட்டது. ஆசிய யானைகளில் 50 விழுக்காடு தென்னிந்தியாவில் வாழ்கின்றன. இத்தகைய இயற்கையின் கொடை நமக்கு வாய்த்திருந்தாலும் இது குறித்து நாம் மகிழ்ச்சியடைய முடியவில்லை.
1998ஆம் ஆண்டு முதல் 2001 வரையிலான மூன்று ஆண்டுகளில் மட்டும் 28 யானைகள் ரயிலில் அடிப்பட்டுச் செத்துப் போயின. இவற்றில் 15-11-2001ஆம் நாள் அசாம் மாநிலம் தின்சூக்கியா மாவட்டத்தில் ஒரே ரயிலில் 7 யானைகள் அடிப்பட்டு மாண்டன; 1980 முதல் 1986 வரை ஆறு ஆண்டுகளில் 100 ஆண் யானைகள் தந்தங்களுக்காகக் கொல்லப்பட்டுள்ளன. கடந்த சில ஆண்டுகளில் 25க்கும் மேற்பட்ட யானைகள் விஷ உணவை உண்டு மாண்டுபோய் விட்டன என்று வனத்துறையின் ஆய்வறிக்கைகள் கூறுகின்றன. இது தவிர காடுகளின் ஓரம் அமைக்கப்படுகிற மின்சார வேலியில் சிக்கிப் பல யானைகள் மாண்டு கொண்டிருக்கின்றன. யானை வாழிடங்கள் பல்வேறு வகையில் ஆக்கிரமிக்கப்படுவதை வசதியாக மறந்துவிட்டு, யானைகளின் அட்டகாசம் பற்றியே மனிதர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
1972ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட இந்திய வனவிலங்குப் பாதுகாப்புச் சட்டம், 1977ஆம் ஆண்டு மேலும் திருத்தி அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, யானைகளை வேட்டையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆயினும் யானைகள் பல்வேறு வகையில் அழிக்கப்பட்டு வருவதைக் கருத்திற் கொண்டு 1992ஆம் ஆண்டு யானைகள் பாதுகாப்புத் திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. அத்திட்டத்தை உரிய வகையில் செயற்படுத்துமாறு மாநில அரசுகளைக் கேட்டுக் கொண்டுள்ளது. இப்பத்தாண்டுத் திட்டம் (1992 - 2002) நிறைவு பெற்றுள்ள நிலையில் தமிழ்நாட்டின் வனப்பகுதிகளில் கணக்கெடுப்பு நடத்தியபோது யானைகளின் எண்ணிக்கை கூடியுள்ளதாக வனத்துறை பட்டியலிட்டிருக்கிறது. அதன்படி 1991இல் 3260ஆக இருந்த தமிழக யானைகளின் எண்ணிக்கை 2001இல் 3635 ஆக உயர்ந்துள்ளது. முகாம் யானைகளும், சர்க்கஸ் மற்றும் கோயில் யானைகளும் காட்டு யானைகளின் கணக்கில் சேர்க்கப்படவில்லை.
யானைகள் பாதுகாப்பில் 1977ஆம் ஆண்டு சட்டம் மிகவும் குறிப்பிடத்தக்கதாகும்். ஆனால் எத்தனை சட்டங்கள் இயற்றினாலும் யதார்த்தம் அவ்வளவு நிறைவாக இல்லை. யானையை வைத்து மனிதர்கள் பல்வேறு விதங்களில் பிழைக்கும் நிலைக்கு முதலில் தடைவிதிக்கப்பட வேண்டும். யானைகள் பாதுகாப்புத் திட்டம் என்பது, மனிதர்களுக்காக உழைக்கும் யானைகளையும் உள்ளடக்கியதாக இருந்தால்தான் முழுமை பெறும். மனிதர்களால் கைது செய்யப்பட்டவை போல வாழ்ந்து கொண்டிருக்கும் யானைகளை விடுதலை செய்து மீண்டும் அவற்றை இயற்கையின் வனச் சூழலிலேயே வாழ வைப்பதுதான் உண்மையிலேயே யானை நலச் சட்டங்களை மதிப்பதாக அமையும்.
யானைகள் வாழ்வதற்கேற்ற வெப்ப மண்டலக்காடுகளை நாம் பெற்றுள்ளதால் அவற்றைப் பாதுகாக்கும் பொறுப்பையும் இயற்கை நமக்கு அளித்திருப்பதாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
யானை என்பது நமது இயற்கை வளத்தின் அடையாளமாகும். இயற்கையான வனவெளிகளில் யானைகளைப் பல்லாயிரக் கணக்கில் வளர்ப்பது எனத் திட்டமிட்டுச் செயலாற்றினால், அதன் விளைவாகக் காடுகள் செழிக்கும். வளமான காடுகள்தான் மழை உள்ளிட்ட இயற்கையின் பல்வேறு கொடைகளை நமக்கு வழங்கும்.
- ஜெயபாஸ்கரன்
- தாவரங்களின் இனப்பெருக்கம்
- சுவையறிய உதவும் வாயில் வாழும் பாக்டீரியாக்கள்
- பூச்சிகளை விழுங்கும் தாவரம்
- பூமி வெப்பம் அடைவது ஏன்?
- தாவரங்களின் தோள் கொடுக்கும் தோழர்கள்
- 'அப்பன் குதிருக்குள் இல்லை' பாதிப்புகளை மறைக்கும் மரபணு மாற்றப்பட்ட பயிர்கள்
- டாடா நானோ கார்: சின்னஞ்சிறு பயங்கரம்
- 'விளக்குகளை அணைப்போம்' - கவனம் பெறும் புதிய சூழல் விழிப்புணர்வு பிரச்சாரம்
- கடத்தலால் அழியும் காட்டுயிர்கள்
- பாயத் துடிக்கும் பன்னிரண்டு நோய்கள்
- சி.எஃப்.எல். பல்புகளோடு போராடும் குமிழ் பல்புகள்
- சூழலைக் காக்கும் பீமா மூங்கில்
- கரியமில வாயுவை கட்டுப்படுத்தும் வழிகள்
- வீட்டிற்குள்ளே சூழல் பாதுகாப்பு
- வானிலையை மாற்றும் காற்றாலைகள்
- கரியமில வாயுவை சேமித்து வைக்க முடியுமா?
- புவி வெப்பமயமாதலைத் தடுக்க புதிய வழிமுறை
- வட இந்தியா - வேகமாகக் குறையும் நிலத்தடிநீர்
- ஓசோன் மெலிவு மனிதருக்கு நலிவு
- புவி வெப்பமயமாதலும்..... மக்கள் நிலைமையும்