கீற்றில் தேட...
அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- மு.குருமூர்த்தி
- பிரிவு: சுற்றுச்சூழல்
பூமியிலேயே ஆழமான பகுதியான சாக்கடலில் நீர்மட்டம் குறைந்து வருகிறது. இதனால் மேற்குக்கரை, ஜோர்டான், இஸ்ரேல் ஆகிய பகுதிகள் கடுமையான சுற்றுச்சூழல் சீர்கேடுகளை சந்திக்கவிருக்கின்றன. இதுபற்றிய ஆய்வு ஜெர்மனியின் டார்ம்ஸ்டாட் தொழில்நுட்பப் பல்கலைக்கழக ஆய்வாளர் Shahrazad Abu Ghazleh மற்றும் அவரது குழுவினரால் நடத்தப் பெற்று வருகிறது. தற்போது நடந்துவரும் சாக்கடல்-செங்கடல், மத்திய தரைக்கடல்- சாக்கடல் இவற்றிற்கிடையேயான கால்வாய்ப் பணிகள் மூலம் சாக்கடலின் நீர்மட்டத்தை முந்தைய அளவிற்கு உயர்த்தும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. மின் உற்பத்திக்காகவும், உப்புத்தன்மையை அகற்றி நன்னீராக மாற்றவும் இந்த கால்வாய் இணைப்புகள் உதவும். சாக்கடலின் நீர்மட்டம் குறைந்துபோனதற்கு புவி வெப்ப மாறுபாடு காரணமல்ல என்பதும், மனிதர்கள் தங்களுடைய தேவைகளுக்காக அதிக நீரை பயன்படுத்தியதும்தான் காரணம் என்கிறார்கள் இந்த ஆய்வாளர்கள்.ஜோர்டானிலும், யார்மோக் ஆறுகளின் மூலமாகவும் மனித பயன்பாட்டிற்காக அதிக அளவில் நீர் எடுத்தது ஒரு காரணமாக கூறப்படுகிறது. மேலும் இஸ்ரேலும் ஜோர்டானும் தங்களுடைய பொட்டாஷ் தொழிற்சாலைகளுக்கு தேவையான நீரை சாக்கடலில் இருந்து எடுத்துள்ளன.
கடந்த முப்பது வருடங்களில் சாக்கடலின் நீர்மட்டம் ஆண்டிற்கு 0.7 மீட்டர் குறைந்து வருகிறது. நீரின் கன அளவு ஆண்டிற்கு 0.47 கன கிமீ குறைந்து வருகிறது. நீர்ப்பரப்பின் அளவும் ஆண்டிற்கு 4 சதுர கிமீ அளவில் குறைந்து வருகிறது என்று இந்தக் குழுவின் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
தற்போது சாக்கடலை செங்கடலுடனும், மத்தியதரைக்கடலுடனும் இணைக்கும் கால்வாய்கள் வெட்டப்படுவதால் ஆண்டிற்கு 0.9 கன கிமீ அளவிற்கு சாக்கடல் மீட்கபடுமாம். இன்னும் 30 ஆண்டுகளில் சாக்கடல் முன்பிருந்த நிலைக்கு கொண்டுவரப்படும் என்கிறார்கள் இந்த ஆய்வாளர்கள். சாக்கடலைச்சுற்றி இயங்கும் பொட்டாஷ் தொழிற்சாலைகளும், சுற்றுலா தொழிலும் இன்னும் மேம்பட இந்த ஆய்வுகள் உதவுகின்றன.
முழுவதுமாக நிலத்தால் சூழப்பட்ட சாக்கடல் ஓர் உவர் நீர் ஏரி ஆகும். 330 மீட்டர் ஆழமுடைய சாக்கடல் பொதுவான கடல்நீரிலுள்ள உப்புத்தன்மையை விட 6 முதல் 8 மடங்கு அதிக உப்புத்தன்மையைக் கொண்டது. கடல் மட்டத்தில் இருந்து தற்போது 418 மீட்டர்கள் கீழே அமைந்திருக்கிற சாக்கடல் தொடர்ந்தும் கீழே இறங்குகிறது. பூமியின் மேல் ஓடுகளின் மீது ஏற்படும் விரிசல்களினால் இந்த நீர் இறக்கம் ஏற்படுவதாக ஒரு கருத்தும் இருக்கிறது.
பல கனிமங்களின் படிவுகள் சாக்கடலின் கரையில் காணப்படுதல், மாசுபடாத வளி, வளியழுத்தம் அதிகமாக இருத்தல், புற ஊதாக்கதிர்களின் வீச்சு குறைவாக இருத்தல் ஆகியவை உடல் நலத்தை மேம்படுத்தும் காரணிகளாக இருப்பதால் உடல் மற்றும் அழகு சிகிச்சைகளுக்கு சாக்கடல் பகுதி இன்றும் புகழ்பெற்று விளங்குகிறது.
இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு இந்த ஆய்வுகள் ஒரு எச்சரிக்கை மணியாகும். நீர்வளத்தை எச்சரிக்கையுடன் கையாளத் தேவையான திட்டங்களை நமது நாடு நடைமுறைப்படுத்த வேண்டும்.
தகவல்: மு.குருமூர்த்தி
- விவரங்கள்
- பூவுலகின் நண்பர்கள், சென்னை
- பிரிவு: சுற்றுச்சூழல்
நமது பாரம்பரியச் செல்வங்களான இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டியது சட்ட ரீதியாக அரசின் கடமையாகிறது. இந்த வளங்கள் அனைத்தும் பொதுச் சொத்து. எனவே, அவை மக்களின் பயன்பாட்டுக்கு உரியவையே ஒழிய இவற்றை தனியார் உரிமையாக மாற்றக் கூடாது. இந்த அம்சம் உலகின் பல நாடுகளில் பின்பற்றப்படும் நடைமுறை. ஆனால் நம் நாட்டில் நிலைமை தலைகீழாக இருக்கிறது.
தமிழகத்தில் தண்ணீரை தனியார் மயமாக்குவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தொடர்பாக நம்மிடையே இரண்டு முக்கிய உதாரணங்கள் இருக்கின்றன. முதலாவது கேரளாவில் உள்ள பிளாச்சிமாடாவில் உள்ளூர் நிர்வாகம், மக்களால் துரத்தியடிக்கப்பட்டு நெல்லை மாவட்டம் கங்கைகொண்டானில் நிலைகொண்ட கோக கோலா நிறுவனத் தொழிற்சாலை. இந்த ஆலை ஒரு லிட்டர் தண்ணீரை ஒரு ரூபாய்க்கும் குறைவான விலையில் தாமிரபரணியில் இருந்து உறிஞ்சி, ஒரு லிட்டர் தண்ணீரை 13 ரூபாய்க்கு திரும்ப நம்மிடம் விற்கிறது. வாயை மூடிக் கொண்டிருந்தால் எப்படியெல்லாம் கொள்ளை அடிக்க முடியும் என்பதற்கு இது உதாரணம்.
அடுத்ததாக சென்னை மாநகர மக்களின் (மேல்தட்டு, தொழிற்சாலைகள், மத்தியதர வர்க்கம் என்று வாசிக்கவும்) பகாசுர தண்ணீர் தேவையை கருத்தில் கொண்டு சுற்றுவட்டார மாவட்டங்களில் உள்ள வயல்களின் ஆழ்குழாய் கிணறுகளில் இருந்து தண்ணீர் உறிஞ்சப்படுகிறது. இதை சட்டப்படியாக்கினால் கோக கோலா ஆலையைப் போலவே தனியார் நிறுவனங்களும், லஞ்சமாக அரசியல்வாதிகளும் சம்பாதிக்கலாம் என்ற என்ற திட்டம் தீட்டப்பட்டு வருகிறது. இதற்கு பன்னாட்டு நிறுவனங்களின் மொத்த ஏஜென்டான உலக வங்கி திட்டம் தீட்டி மாநில அரசுக்கு அனுப்பியிருப்பதாகக் கேள்வி. இவை இரண்டும் தண்ணீரை கூறு போட்டு விற்பதற்கு நடந்த, நடக்கப் போகிற உதாரணங்கள்.
இத்துடன் ஒரு கேலிக்கூத்தையும் மாநில அரசு தற்போது அரங்கேற்றி வருகிறது. கடல் நீரை குடிநீராக்குகிறேன், ஆயிரம் கோடி ரூபாய் கொடுங்கள் என்று மத்திய அரசிடம் முதல் தவணை வாங்கி இருக்கிறது. இந்த நிறுவனத்தையும் தண்ணீர் சுத்திகரிப்பு நிறுவனமாக அல்லாமல், தண்ணீர் விற்பனை நிறுவனமாக பிற்காலத்தில் மாற்றிவிட திட்டம் தீட்டப்பட்டுள்ளது. ஆனால் மக்கள் வரிப்பணம் ஆயிரம் கோடி ரூபாயில் இந்த நாடகம் அரங்கேறுவதுதான் அவலம்.
நாட்டிலுள்ள நீர்நிலைகளில் உள்ள குடிப்பதற்கு உகந்த தண்ணீர்தான் கடலில் சென்று கலக்கிறது. இதை சேகரித்து பயன்படுத்துவதை விட்டுவிட்டு, அதை மாசுபடுத்தி கடலுக்குள் கலக்கவிட்டு, பின்னர் அதையே சுத்திகரித்து நமக்குத் தருகிறார்களாம். இந்த நிறுவனத்தால் நமக்கு எந்தப் பயனும் இல்லை. கட்டாயம் காண்ட்ராக்ட் எடுத்தவர்களுக்கும் அரசியல்வாதிக்கும் கொள்ளை லாபம் கிடைக்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் வேண்டாம்.
பொதுச் சொத்தான தண்ணீரை எப்படி அரசும் தனியாரும் கூட்டாக நம்மிடம் "விற்கிறார்கள்" என்பதற்கு இவை எல்லாம் தெளிவான உதாரணங்கள்.
தண்ணீர் விநியோகம்
இது மட்டுமில்லை. மாபெரும் தண்ணீரை மக்களுக்கு விநியோகிப்பதற்கு தீட்டப்படும் திட்டங்கள் எல்லாமே அதிகாரம் மிக்கவர்கள், வசதிமிக்கவர்களுக்காகத்தான் உருவாக்கப்படுகின்றன. ஆனால் ஏழைகள் தாகத்தில் தவித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இந்தத் திட்டங்கள் எல்லாமே வரிப்பணத்தில் மேற்கொள்ளப்பட்டு தொழிற்சாலைகள், கட்டுமான நிறுவனங்கள், பெரும் விவசாயிகளுக்கு பலனளிக்கின்றன.
இவ்வளவு காலம் வளங்குன்றும் வகையிலான பல்வேறு மறைமுகத் திட்டங்கள் அல்லது உள்ளூர் அரசுகளை ஊக்குவித்ததன் மூலம் தண்ணீர் பற்றாக்குறையையும், தண்ணீர் மாசுபாட்டையும் உலக வங்கி வெற்றிகரமாக உருவாக்கி இருக்கிறது. இன்றைக்கு தண்ணீர் பற்றாக்குறையை பன்னாட்டு தண்ணீர் நிறுவனங்களுக்கான சந்தை வாய்ப்பாக மாற்றும் வேலையில் உலக வங்கி ஈடுபட்டு வருகிறது. உலக தண்ணீர் சந்தையின் மதிப்பு ரூ. 40,000,00 கோடி என்று உலக வங்கி மதிப்பிட்டிருக்கிறது.
இதெல்லாம் எவ்வளவு தூரம் உண்மை என்று யோசிப்பவர்கள், கொஞ்சம் உட்கார்ந்து சிந்தித்தால் எல்லாம் புரிந்துவிடும். பத்தாண்டுகளுக்கு முன் பாட்டில் அல்லது கேன் குடிநீர் வாங்கிக் குடிப்பதைப் பற்றி யாராவது யோசித்திருப்போமா? போவோர் வருவோருக்கெல்லாம் தாகத்தைத் தீர்த்த, தண்ணீர் பந்தல் வைத்த பாரம்பரியத்தைச் சேர்ந்த நாம், இன்று காசு கொடுத்து தண்ணீர் வாங்கிக் குடிக்கிறோம். அந்த வகையிலேயே அரசு அடிப்படை உரிமைகளை மறுத்திருக்கிறது. குடிதண்ணீருக்காக ஒவ்வொருவரும் வரி செலுத்தும்போதும்கூட, குடிதண்ணீரை காசு கொடுத்தே வாங்கிக் கொண்டிருக்கிறோம் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்.
அடுத்த ஆண்டு வாக்கில் உலகில் 250 கோடி பேர் பாதுகாப்பான குடிநீர் இன்றித் தவிப்பார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதில் 30 சதவீதம் பேர் இந்தியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள். இந்த நிலையில் அரசு விநியோகிக்கும் தண்ணீரின் அளவு குறைந்துவிடும். அப்பொழுது உருவாகும் பற்றாக்குறையை பயன்படுத்தி லாபம் சேர்க்க தனியார் நிறுவனங்கள் திட்டமிட்டு வருகின்றன.
இப்படியாக தண்ணீர் மீதான உரிமையை தனியார் மயமாக்கி, அதை ஒரு விற்பனைப் பொருள் ஆக்குவது வாழ்வதற்கான உரிமையைப் பறிக்கும் அச்சுறுத்தல்களில் ஒன்று. ஏனென்றால் தண்ணீர் சுழற்சி என்பது வளங்குன்றாத வகையில் இருக்க வேண்டும் என்ற கடப்பாடுகளை மீறி, சந்தைத் தேவைக்கேற்ப சுரண்டப்படுவதால் தண்ணீருக்கான நெருக்கடி அதிகரிக்கவே செய்யும். பண்டைக் காலங்களில் இருந்தது போல தண்ணீரை பயன்படுத்துவதற்கும், சமஉரிமைப் படி பகிர்ந்து கொள்வதற்குமான உரிமை உள்ளூர் சமூகத்திடமே இருக்க வேண்டும்.
தமிழகத்தில் தண்ணீர் விநியோகத்தை தனியார்மயமாக்குவதன் தொடக்கமாக திருப்பூர் மாநகராட்சியில் தண்ணீர் விநியோகம் தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. சென்னையில் குப்பை அப்புறப்படுத்தும் பணியை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது போல, இந்த நடைமுறை உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக 2002 ஆம் ஆண்டு நியூ திருப்பூர் டெவலப்மென்ட் கார்பரேஷன் லிமிடெட் நிறுவனத்துக்கு ரூ. 1273 கோடி ரூபாய் ஒப்பந்தம் 30 ஆண்டுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தை மகிந்த்ரா-மகிந்த்ரா, யுனைடெட் இன்டர்நேஷனல், வெஸ்ட் வாட்டர், பெக்டெல் ஆகிய நிறுவனங்கள் பெற்றுள்ளன. இந்த நிறுவனங்களில் மகிந்த்ராவைத் தவிர மற்ற மூன்றும் பன்னாட்டு நிறுவனங்கள். காட் விதிமுறைப்படி, இந்த நிறுவனத்தின் செயல்பாட்டில் திருப்தியில்லாவிட்டாலும்கூட, ஒப்பந்தத்தை மாநகராட்சி திரும்பப் பெற முடியாது.
திருப்பூர் குடிநீர் விநியோகம் தனியார் மயமாகி உள்ளது முதல் கட்டம். ஓனிக்ஸ்-நீல் மெட்டல் பனால்கா போன்ற குப்பையள்ளும் வியாபாரத்தைப் போலவே, இந்த குடிநீர் விநியோக வியாபாரமும் மற்ற மாவட்டங்களுக்கும் தொற்றுவியாதி போல் விரைவில் பரவக்கூடும்.
தொழிற்சாலைகள் சுரண்டல்
இதுதவிர காலங்காலமாக மக்கள், விவசாயத்தைவிட தனியார் தொழிற்சாலைகளே தண்ணீரை சுரண்டிக் கொழுத்து வருகின்றன. தண்ணீர் பொதுச் சொத்து என்ற பெயரில், பெரும்பாலான நிறுவனங்கள் மிகக் குறைந்த கட்டணத்தில் தண்ணீரை பெற்று வருகின்றன. (ஆனால் பொதுமக்கள் கொட்டிக் கொடுத்துக் கொண்டு இருக்கிறோம்) நீர்வள ஆதார அமைச்சகத்தின் கணக்கீட்டின்படி, தொழிற்சாலைகள் பயன்படுத்தும் தண்ணீரின் அளவு இருபது ஆண்டுகளாக மாறவேயில்லை. ஆனால் மத்திய நீர்வள ஆதார அமைச்சகம் வசதியாக ஒரு விஷயத்தை மறைத்திருக்கிறது. தொழிற்சாலைகள் பயன்படுத்தும் தண்ணீர் என்றால், அவை உறிஞ்சும் தண்ணீரை மட்டும் கணக்கிடுவது முறையற்றது. தொழிற்சாலைகள் அனைத்தும் தண்ணீரை மாசுபடுத்துகின்றன. அந்தத் தண்ணீரை ஆறு, குளம், வாய்க்கால், ஏரி, குட்டை, கடல் என்று பார்க்கும் இடமெல்லாம் திறந்துவிட்டு "பொதுச் சேவை" செய்து கொண்டிருக்கின்றன.
சராசரியாக வெளியேற்றப்படும் ஒவ்வொரு லிட்டர் மாசுபட்ட தண்ணீருக்கு பதிலாகவும் 5-8 லிட்டர் மாசுபடாத தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது. இதன்படி நாட்டில் பயன்படுத்தப்படும் மொத்த தண்ணீரின் அளவில் 35-40 சதவீதம் தொழிற்சாலைகள் பயன்படுத்துவதாகவே இருக்கும். ஆனால் இதை மறைத்துவிட்டு மக்கள் பயன்படுத்துவது அதிகம், விவசாயம் பயன்படுத்துவது அதைவிட அதிகம் என்று பலரும் பட்டியல் இட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
தொழிற்சாலைகளுக்கும் சரி, தனிநபர்களுக்கும் சரி தண்ணீரை உரிய முறையில் சரியாகப் பயன்படுத்துவதை உறுதி செய்ய அரசு விதிமுறைகள் கடுமையாக இருக்க வேண்டும். முதலாவதாக, தண்ணீர் பயன்பாட்டுக் கொள்கை என்பது பொது சுகாதாரம், தண்ணீர் கிடைக்கும்தன்மை சார்ந்தது. இரண்டாவதாக, திறன்மிக்க வகையில் தண்ணீரை பயன்படுத்தும் தொழிற்சாலை, மக்களை ஊக்குவிக்க அரசு முன்வர வேண்டும். தொழிற்சாலைகள் பெறும் தண்ணீரின் அளவுக்கு ஏற்பவும், லாபத்தில் ஒரு பங்கையும் கட்டணமாகச் செலுத்த வேண்டும். அப்படியில்லாமல், மக்களின் வரிப்பணத்தை வாரி தனியார் முதலாளிகளுக்குத் தருவதை எந்தச் சமூகமும் எதிர்த்தே நிற்கும்.
தண்ணீர் உரிமைகளுக்காக போராடுவதுடன், தனிநபராக தண்ணீரை சேகரிப்பதில் நாம் நிறைய பங்காற்ற முடியும்.
- ஒவ்வொரு மாதத்துக்கான தண்ணீர் கட்டணத்தை பரிசோதனை செய்யுங்கள். குடிநீர் மீட்டர் சரியாக இயங்குகிறதா என்பதை பரிசோதியுங்கள்.
- நீங்கள் நல்ல தண்ணீரை வாட்டர் டேங்கில் ஏற்றுபவராக இருந்தால் எத்தனை முறை மோட்டார் போட்டீர்கள் என்றும், லாரி மூலம் தண்ணீர் வரவழைப்பவர் என்றால் எத்தனை டேங்க் என்றும் கணக்கெடுங்கள்.
- குடிநீரையும் காசு கொடுத்து வாங்குகிறீர்களா? அதற்கு ஆகும் கட்டணத்தை கணக்கிடுங்கள்.
இவற்றை எல்லாம் செய்த பிறகு, எப்படி தண்ணீரை குறைவாகப் பயன்படுத்த முடியும் என்று திட்டமிட்டு செயலாற்றுங்கள்.
அன்றாட வேலைகளில் தண்ணீர் சேகரிப்பு
- பல் விளக்கும்போது கப்பில் எடுத்து பயன்படுத்தலாம், குழாயைத் திறந்துவிட வேண்டாம்.
- குளிக்கும் போது வாளியில் குளியுங்கள், ஷவர் வேண்டாம்.
- பிளஷ் டாய்லெட்டில் தண்ணீரை குறைவாக பயன்படுத்தவும், அதிக தண்ணீரை சேகரிக்கும் தொட்டி வேண்டாம்.
- காய்கறிகளை சட்டியில் இட்டு கழுவுங்கள், அப்படியே கழுவ வேண்டாம்.
- நடைபாதை, படி, வண்டி ஓடுபாதைகளை விளக்குமாறால் கூட்டுகள். தண்ணீரால் கழுவ வேண்டாம்.
- செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற, வாகனங்களைக் கழுவ வாளியை பயன்படுத்துங்கள், ஹோஸ் பைப் வேண்டாம்.
(இன்று உலக நீர் நாள். இந்த நாளில் நீரை சேகரிப்பது பற்றிய விழிப்புணர்வுடன் நமது நீர் உரிமை, அதற்கு நாம் கொடுக்கும் விலை பற்றி சிந்திப்பது அவசியம். அந்த நோக்கத்தை மேம்படுத்தும் எண்ணத்துடன் இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது)
நன்றி: கோபர் டைம்ஸ், டவுன் டு எர்த், தர்ஸ்ட் ஃபார் பிராஃபிட், ம.க.இ.க.
- பூவுலகின் நண்பர்கள், சென்னை
- விவரங்கள்
- ஆதி
- பிரிவு: சுற்றுச்சூழல்
ம். க்கும். க்குக்கு க்கும். வணக்கம். நா கரிச்சான் பேசுறேன்.
பனிக்காலமில்லையா, தொண்டை கொஞ்சம் கரகரப்பா இருக்கு. உலகம் முழுக்க எத்தனையோ சூழல் நிகழ்வுகள் நடக்கின்றன. எல்லாவற்றையும் தெரிஞ்சுக்கணும்கிறதுதான் என்னோட ஆசை. ஆனா பாருங்க, அது ரொம்ப கஷ்டமா இருக்கு. என்னதான் இணையம், டிவி, ரேடியோ, நாளிதழ்னு வந்தாலும் மனுஷ அக்கறைகளை வெளிப்படுத்தும் சேதிக எல்லாம் எங்கோ மூலையில, பற்றாக்குறை இடத்தை நிரப்புறதுக்குத்தான் போடறாக. அதுக்காக அதையெல்லாம் தெரிஞ்சிக்காம இருக்கலாமா. அதான், கொஞ்சம் விசனப்பட்டு நானே தேடிட்டேன். வாருங்க, மேல படிப்போம்...
2004ம் ஆண்டு இந்தியாவைத் தாக்கிய ஆழிப் பேரலையை (சுனாமி) யாரும் மறந்திருக்க முடியாது. ஆனால் இது போன்ற பேரழிவுகளில் இருந்து நாம் பாடம் கற்றுக் கொண்டு, எதிர்காலத்தில் முன்னெச்சரிக்கையாகச் செயல்படுவதே வளர்ச்சிக்கு அடையாளம். இதை சிறப்பாக வெளிப்படுத்துகிறது கேரளாவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஆழிப் பேரலை அருங்காட்சியகம். ஆழிப் பேரலைக்கு இந்தியாவில் அமைக்கப்பட்டுள்ள முதல் அருங்காட்சியகம் இது. கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் உள்ள ஆலப்பாடு கிராமத்தில் ரூ. 10 லட்சம் செலவில் இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. 2004 ஆழிப் பேரலையில் அதிக மக்களை பலி கொடுத்தது ஆலப்பாடு கிராமம்தான்.
ஆழிப் பேரலையின் ஆபத்துகளை விளக்கும் இந்த அருங்காட்சியகம், ஆழிப்பேரலை மூன்றாவது நினைவு நாளை ஒட்டி (26 டிசம்பர் 2007) திறக்கப்பட்டது. ஆழிப் பேரலை எச்சரிக்கைகளுக்கு எப்படி எதிர்வினையாற்ற வேண்டும், சமிக்ஞைகள் மூலம் எதிர்வரும் ஆபத்தின் அளவை எப்படி உணர்ந்து கொள்வது என்று இங்கு விளக்கப்பட்டுள்ளது என்று அருங்காட்சியக ஒருங்கிணைப்பாளர் பிரீதா ஜார்ஜ் தெரிவிக்கிறார். கடலோர மண்டலங்கள் பற்றிய விவரம், கிராம வாழக்கை, ஆழிப் பேரலைக்கு முந்தைய ஆலப்பாடு ஊரின் தோற்றம் போன்றவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. டிசம்பர் 26 நிகழ்வுகளை காட்சிப்படுத்தும் தனிசுவர் பகுதி குழந்தைகளுக்காக சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. ஆழிப் பேரலையில் தப்பிய குழந்தைகளின் சாட்சியங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஆழிப் பேரலைக்கு முன் கடலில் ஏற்படும் மாற்றங்களை காட்சிப்படுத்தும் தொடுஉணர் திரைகள் அமைக்கப்பட்டுள்ளது, இந்த அருங்காட்சியகம் பார்வையாளர்களுக்கு மிக நெருக்கமானது என்று உணர்த்துகிறது. இது போன்ற முயற்சிகள் சமூகத்துக்கு பெரும் பயனளிக்கும். அருங்காட்சியகம் அமைக்க ரூ. 10 லட்சம் செலவு செய்யப்பட்டுள்ளது என்று சொன்னேன் இல்லையா, எந்தச் செலவும் இல்லாம, சுற்றுச்சூழலில் கலந்துள்ள நச்சைக் கண்டறிய இங்கிலாந்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஒரு புது முறையை கண்டுபிடித்திருக்கிறார்கள். அது என்ன?
ஆபத்தான டி.டி.ற்றி. நச்சு விவசாயத்தில் பயன்படுத்தப்படும் டி.டி.ற்றி. எனும் பூச்சி மருந்து உலகெங்கும் தடை செய்யப்பட்டுவிட்டது. ஆனால் இந்த டி.டி.ற்றி. நச்சு தாய்ப்பாலிலும் கலந்துவிட்டது. இன்னமும்கூaட உலகின் பல பகுதிகளில் இந்த பூச்சிக்கொல்லி நச்சு உலவி வருகிறது. குறிப்பிட்ட ஒரு பகுதியில் டி.டி.ற்றி. நச்சு கலந்திருக்கிறதா என்பதை அறிய இனிமேல் பெரிய ஆய்வுகள் செய்யத் தேவையில்லை. பறவைகளின் முட்டைகளைக் கண்காணித்தாலே போதும். பறவை முட்டை ஓடுகளில் வெள்ளைக்குப் பதிலாக சிவப்பு-பழுப்பு புள்ளிகள் காணப்பட்டால் அப்பறவைகளின் உணவில் டி.டி.ற்றி. கலந்துள்ளது என்பதை அறியலாம் என்கிறார்கள் விஞ்ஞானிகள். ராப்டர் எனப்படும் ஊனுண்ணி கழுகு இன பறவைகளிடம் ஆக்ஸ்போர்ட்-கார்டிப் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் நடத்திய ஆராய்ச்சியில் இது தெரிய வந்துள்ளது.
டி.டி.ற்றி. மற்றும் கால்சியம் குறைபாடு காரணமாகவே பறவை முட்டை ஓடுகளில் புள்ளிகள் தோன்றுகின்றன. முட்டை ஓடுகள் உருவாகக் காரணமாக இருக்கும் கால்சியத்தை இந்தப் பூச்சிக்கொல்லி தடைசெய்வதால், புள்ளிகள் தோன்றுகின்றன. சுற்றுச்சூழலில் டி.டி.ற்றி. மாசு எவ்வளவு கலந்துள்ளது என்பதை கண்காணிக்க பறவை முட்டை ஓடுகளை ஆராயும் இந்த முறை பாதுகாப்பானது, செலவு மிகக் குறைவு. ராப்டர் பறவைகள் இரையின் எலும்புகளையும் உண்பதால், அவற்றுக்கு கால்சியம் குறைபாடு ஏற்பட வாய்ப்பில்லை. எனவே, அவற்றின் உடலில் டி.டி.ற்றி. நச்சு சேர்ந்திருப்பதை இது உறுதிப்படுத்துகிறது.
ஏற்கெனவே, கால்நடைகளின் உடலில் கலந்துள்ள பூச்சி மருந்துகள் காரணமாகவே இந்தியாவில் பிணந்தின்னி கழுகுகள் இனம் அதிவேகமாக அழிந்து வருகிறது. இந்த மருந்துகள் கால்நடைகளின் உடலில் ஏற்படும் வீக்கத்தை குறைக்க பயன்படுத்தப்பட்டன. இப்போது டி.டி.ற்றி. நச்சு ராப்டர் பறவைகளின் உடலில் கலந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டி.டி.ற்றி. உள்ளிட்ட நச்சு பூச்சிக்கொல்லிகள் நாம் சாப்பிடும் தானியங்களின் மீது கொட்டப்படுகின்றன. அவை எந்த விளைவை ஏற்படுத்தும் என்பதை இந்த ஆராய்ச்சிகள் எடுத்துரைக்கின்றன. பூச்சிக்கொல்லிகள் நச்சு என்றால், நாம் சுவாசிக்கும் காற்றை டீசல் மாசுபடுத்துகிறது. அதன் பயன்பாட்டை குறைக்க என்ன செய்யலாம்?
சுற்றுச்சூழல் வரி
டீசல் பயன்பாட்டை குறைக்கும் வகையில் தில்லி மாநில அரசு டீசல் எரிபொருளுக்கு சுற்றுச்சூழல் வரி விதிக்க முடிவெடுத்துள்ளது. இதன்படி ஒரு லிட்டர் டீசலுக்கு 25 பைசா வரி விதிக்கப்படும். இந்த வரி மூலம் திரட்டப்படும் தொகை, தில்லியின் 'தூய்மை காற்று செயல்திட்ட'த்துக்கு நிதியாக பயன்படுத்தப்படும். இந்த வரி மூலம் ரூ. 48 கோடி திரட்ட முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தில்லி மாநிலத்தில் டீசல் வாகனங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதை கட்டுப்படுத்தவும், தில்லியின் காற்று தரத்தை டீசல் மாசுகள் பாதிக்கும் போக்கை குறைக்கும் வகையிலும் இந்த வரி விதிக்கப்பட்டுள்ளது.
தனி வரி விதிக்கப்பட்டாலும்கூட, டீசலின் விலை அதிகரிக்கவில்லை. பெட்ரோலைவிட டீசல் விலை 30 சதவிகிதம் குறைவாகத்தான் உள்ளது. வாகனங்களை கட்டுப்படுத்தும் நோக்கில் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் குறிப்பிட்ட சாலைகள், பகுதிகளை பயன்படுத்த வரி விதிக்கப்படுகிறது. சிங்கப்பூரில் காரில் குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு குறைவாகச் சென்றால் அபராதம் விதிக்கப்படுகிறது. நகரங்களில் பெருகி வரும் வாகன நெரிசல், மாசுபடுத்துதலைக் குறைக்க இது போன்ற கட்டுப்பாடுகள் அவசியம். இந்தியாவில் தில்லியில் முன்மொழியப்பட்டது போன்ற சிறு முயற்சிகள் அவ்வப்போது எடுக்கப்படுகின்றன. இது போதாது, இன்னும் பெருக வேண்டும். அப்படிப்பட்ட பெரும் முயற்சிகளில் ஒன்று மும்பையில் நடந்துள்ளது.
ஒரு மணி நேர மின்நிறுத்தம்
நிலக்கரியை எரித்து மின்சாரம் தயாரிப்பதால் புவி வெப்பமடைதல் அதிகரிப்பது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த மகாராஷ்டிரத் தலைநகர் மும்பையில் ஒரு மணி நேரம் மின்பயன்பாட்டை நிறுத்தும் பிரசாரம் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. டிசம்பர் 15ம் தேதி இரவு 7.30 மணி முதல் 8.30 மணி வரை இந்த பிரசார செயல்பாடு நடந்தது. பகல் நேரத்தில் நடந்தால் தெரியாது என்பதால், இரவு நேரம் தேர்ந்தெடுக்கப்பட்டு இந்தப் பிரசாரம் நடைபெற்றுள்ளது. இந்த பிரசாரத்துக்கு 'பட்டி பந்த்' என்று பெயர் சூட்டப்பட்டது. மும்பையைச் சேர்ந்த நான்கு இளைஞர்கள் புவி வெப்பமடைதல் விழிப்புணர்வுக்காக இப்பிரசாரத்தை மேற்கொண்டனர்.
இந்த பிரசாரத்தின் முக்கிய அம்சமாக வீட்டு மின்சார பயன்பாட்டை ஒரு மணி நேரம் நிறுத்த கோரிக்கை விடுக்கப்பட்டது. நவி மும்பை, கல்பாதேவி பகுதி மக்கள் இந்த பிரசாரத்துக்கு பெரும் ஆதரவு அளித்தனர். இதன்மூலம் சர்ச் சேட், போரிவிலிக்கு இடைப்பட்ட பகுதிகளில் 78 மெகாவாட் மின்சாரம் சேமிக்கப்பட்டது என்கிறார் பிரசாரத்தை ஒருங்கிணைத்த நீல் குரேஷி. கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய துறைமுக நகரான சிட்னியில் 'பூமி நேரம்' என்ற பெயரில் பிரசாரம் நடத்தப்பட்டது. அப்போது சிட்னி நகரில் 20 லட்சம் மக்கள் மின் பயன்பாட்டை நிறுத்தியதன் மூலம், 10 சதவிகித எரிசக்தி பயன்பாடு குறைந்தது. அதனால் ஈர்க்கப்பட்டு அதேபோன்ற பிரசாரத்தை மும்பையில் நடத்த நீல் குரேஷி, கெய்த் மேனன், ருஸ்தம் வார்டன், ஷிலாதித்ய சக்கரவர்த்தி ஆகிய நான்கு இளைஞர்கள் தீர்மானித்தனர்.
''ஒவ்வொரு தனி நபரும் மாற்றத்தை உருவாக்க முடியும்'' என்று வலியுறுத்தி மூன்று மாதங்களுக்குப் பிரசாரம் செய்தனர். மின் ரயில்கள், பேருந்துகள், சாலைகள் என மக்கள் கூடுமிடங்களில் பிரசாரம் நடத்தப்பட்டது. நாங்கள் நான்கு பேரும் தலா 10,000 பேரிடம் பேசியிருப்போம் என்கிறார் நீல் குரேஷி. மின் பயன்பாட்டை குறைப்பது மட்டுமின்றி மனிதச் சங்கிலி, மெழுகுவர்த்தி பேரணிகள் போன்றவற்றையும் அவர்கள் நடத்தினர். இந்த இளைஞர்களின் பிரசாரத்துக்கு ஆதரவு அளிக்குமாறு மும்பை மேயர் சுபா ரால், நகராட்சி ஆணையர், மும்பை காவல்துறை ஆணையர் ஆகியோரும் கோரிக்கை விடுத்து ஆதரித்தனர். அதிகார வர்க்கத்தினர் நடவடிக்கை எடுக்காவிட்டாலும், இதுபோன்ற விஷயங்களை ஆதரிக்கிறார்களே. அந்த வரை பாராட்ட வேண்டியதுதான்.
இப்போ நான் பூச்சி பிடிக்க போவணும். அதுக்குப் பெறவு சேதிகள பிடிச்சுக்கிட்டு அடுத்த மாசம் வாரேன்.
- ஆதி
- விவரங்கள்
- ஆதி
- பிரிவு: சுற்றுச்சூழல்
காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான உலகின் முதல் சர்வதேச உடன்படிக்கையான கியோட்டோ உடன்படிக்கை 2009 உடன் காலாவதி ஆகும் நிலையில், புதிய உடன்படிக்கை எப்படி அமைய வேண்டும் என்பதற்கான பேச்சுவார்த்தை இந்தோனேசியத் தீவான பாலியில் கடந்த டிசம்பர் மாதம் நடந்து முடிந்துள்ள நிலையில் நாம் இருக்கிறோம். கோபன்ஹேகனில் 2009ம் ஆண்டு நடைபெறும் மாநாட்டில் புதிய உடன்படிக்கை இறுதி செய்யப்படும்.
இந்த நிலையில் பாலி பேச்சுவார்த்தைகள் வெற்றி பெற்றதாக இந்திய பிரதிநிதிகளும், வளரும் நாட்டு பிரதிநிதிகள் சிலரும் தெரிவிக்கின்றனர். இது எந்த அளவு உண்மை?
காலநிலை மாற்றத்தை மட்டுப்படுத்துவதற்கான சர்வதேச கூட்டு முயற்சிகளை ஒருங்கிணைக்க ஐ.நா. காலநிலை மாற்ற பணித்திட்ட பேரவை 1990ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. மட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகளுக்கு இடையே பொதுவான அதேநேரம் வேறுபட்ட பொறுப்புகள் இருக்க வேண்டும் என்று ஏற்றுக் கொள்ளப்பட்டது.
ஆனால் இந்த நோக்கத்தை அடைவதில் அமெரிக்கா, கூட்டாளி நாடுகள் எப்பொழுதுமே தடையாக நிற்கின்றன. நோபல் பரிசு பெற்ற அமெரிக்க முன்னாள் துணை அதிபர் அல் கோர் கியோட்டோ உடன்படிக்கை அமெரிக்க பிரதிநிதிகள் குழுவுக்கு தலைமை வகித்துச் சென்றபோதிலும் மாற்றங்கள் ஏற்படவில்லை.
கியோட்டோ உடன்படிக்கையில் கையெழுத்திடாதது மட்டுமின்றி, வாயு வெளியீட்டு கட்டுப்பாடுகளை அமெரிக்கா எந்தக் காலத்திலும் ஏற்கவில்லை. பாலி பேச்சுவார்த்தையிலும் அதுதான் நடந்தது. வளரும் நாடுகளுக்கு வரையறுக்கப்பட்ட எந்தக் கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை. இது பற்றிய கருத்து பாலி தீவு வரைவு அறிக்கையில் இடம்பெற்ற போதும், இறுதி அறிக்கையில் அது ஒரு அடிக்குறிப்பாக மட்டுமே இடம்பெற்றுள்ளது. கட்டுப்பாடுகள் புறந்தள்ளப்பட்டுவிட்டன.
கியோட்டோ உடன்படிக்கையை ஏற்க மறுத்த அமெரிக்கா, இந்தியா, சீனா, பிரேசில், தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட வளரும் நாடுகள் அளவிடத்தக்க கட்டுப்பாடுகளை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அப்பொழுது வலியுறுத்தியது. பாலி பேச்சுவார்த்தையிலும் அமெரிக்க இதையே வலியுறுத்தியது. கடைசியாக, மட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் வளரும் நாடுகள் பங்கேற்கும், அது அளவிடத்தக்கதாக அமையத் தேவையில்லை என்று இந்தியா வலியுறுத்திய கருத்து ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது.
உலகை கடுமையாக மாசுபடுத்தி வரும் வளரும் நாடுகள், மட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் நேரடியாகப் பங்கேற்கத் தயாராக இல்லை. மாறாக, வளரும் நாடுகளில் மக்கள்தொகை அதிகமாக இருப்பதை போலிக் காரணமாகக் கூறி வருகின்றன. வளரும் நாடுகளின் மீது காலனி ஆதிக்கம் செலுத்தி இயற்கை வளங்களைச் சுரண்டி தங்களை வளர்த்துக் கொண்ட மேற்கு நாடுகள், 21ம் நூற்றாண்டிலும் அதைத் தொடர முயற்சிக்கின்றன.
பாலித் தீவு பேச்சுவார்த்தையும் அதையே பிரதிபலிக்கிறது. வளரும் நாடுகளின் பிடிவாதத்தால் கடந்த 17 ஆண்டுகளாக நடைபெற்று வரும் பேச்சுவார்த்தை தொடக்கப்புள்ளியில் நிற்பது போலவே தெரிகிறது. வளரும் நாடுகளின் இந்த ஆதிக்க உணர்வை ஜி 77 கூட்டமைப்பு என்ற குடையின் கீழ் இணைந்து வளரும் நாடுகள் எதிர்க்க வேண்டும்.
ஆனால் அமெரிக்க பிடிவாதத்தால் தெளிவான வரையறைகளை உருவாக்காமலேயே பாலி பேச்சுவார்த்தை நிறைவடைந்துள்ளது. இதை வெற்றி என்று கூறத் தோன்றவில்லை.
காலநிலை மாற்றத்தை மட்டுப்படுத்துவதில் வரையறுக்கப்பட்ட கட்டுப்பாடுகளை ஏற்றுக் கொள்ள அமெரிக்கா எல்லா காலமும் மறுத்து வருகிறது. இந்தியாவும் அந்த வழியையே பின்பற்றுகிறது. அதைத்தான் பாலி பேச்சுவார்த்தையிலும் இந்தியா வலியுறுத்தியுள்ளது. பேச்சுவார்த்தையின் முடிவுகள் அதையட்டியே அமைந்துள்ளன. இதை வெற்றி என்று கூற முடியுமா?
காலநிலை மாற்றம் தீவிரமடைந்து வருகிறது. ஆனால் அதை மட்டுப்படுத்த வரையறுக்கப்பட்ட நடவடிக்கைகள் தேவையில்லை. இயன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டால் போதும் என்பது உயிர் போகத்தான் போகிறது, மெதுவாக சிகிச்சை செய்து கொள்ளலாம் என்று கூறுவது போல இருக்கிறது.
இதுபோன்ற நமது மனப்பான்மைகள் மாறவேண்டும். காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்படப் போவது இந்தியா போன்ற வளரும் நாடுகள்தான். அதிலும் குறிப்பாக ஏழைகள், ஒடுக்கப்பட்டோர்தான் அதிகமும் பாதிப்பைச் சந்திப்பர். ஏற்கெனவே பல்வேறு ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாகிவரும் விளிம்புநிலையில் உள்ளோர், சுற்றுச்சூழல் ரீதியிலும் ஒடுக்கப்படுகின்றனர். இது பற்றி சொல்லாடலை உருவாக்கி, அரசுக்கு நெருக்கடியை ஏற்படுதத வேண்டும்.
(1992 ரியோடிஜெனிரோவில் நடைபெற்ற ரியோ பூமி மாநாடு என்றழைக்கப்பட்ட மாநாட்டில் ஐ.நா. காலநிலை மாற்ற பணித்திட்டப் பேரவை உருவாக்கப்பட்டது. அதன் அடிப்படையில் 1997ம் ஆண்டு கியோட்டோ உடன்படிக்கை உருவானது.)
இ.பி.டபிள்யு.
காலநிலை மாற்றத்தை மட்டுப்படுத்த உடனடியாகச் செயல்பட வேண்டும் என்று கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட ஐ.பி.சி.சி. நான்காவது மதிப்பீட்டு அறிக்கை எச்சரிக்கிறது. ஆனால் அதற்குப் பிறகு கூட்டப்பட்ட பாலி பேச்சுவார்த்தை 'எதைப் பற்றியும் கவலைப்படாத தன்மை'யையே வெளிப்படுத்துகிறது. ஐ.நா. காலநிலை மாற்ற பணித்திட்ட பேரவையின் 'வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளிடையே பொதுவான அதேநேரம் வேறுபட்ட பொறுப்புகளை ஏற்றுக் கொள்வது' என்ற அடிப்படைக் கொள்கை விட்டுக்கொடுக்கப்படவில்லை. காலநிலை மாற்ற மட்டுப்படுத்தும் சர்வதேச பேச்சுவார்த்தையில் கடந்த முறையைப் போல அமெரிக்கா விலகவில்லை.
ஆனால் இந்தியா இன்னமும் பொறுப்புகளை ஏற்றுக் கொள்ளத் தயாராகவில்லை. காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதில் வரலாற்று ரீதியிலும், நடப்பு ரீதியிலும் வளரும் நாடுகளுக்கு அதிக பொறுப்பு உள்ளது என்பது உண்மையே. சர்வதேச பேச்சுவார்த்தைகளில் இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகள் இதை வலியுறுத்த வேண்டும். ஆனால் அதேநேரம் மட்டுப்படுத்தும் முயற்சிகளில் வளரும் நாடுகள் நடவடிக்கை எடுக்கட்டும், பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்ற மனப்பான்மை பயன்தராது.
காலநிலை மாற்றம் 'பாயத் தயாராக இருக்கும் பிசாசைப் போன்றது'. தூண்டிவிடப்பட்ட பிறகு அதன் செயல்பாடுகளை கட்டுப்படுத்த முடியாது. எனவே, இந்தியாவும் மட்டுப்படுத்தும் முயற்சியில் அளவிடத்தக்க மேற்கொள்ள வேண்டும். இதற்காக தேசிய அளவில் கொள்கை மாற்றங்களை உருவாக்கி நடைமுறைப்படுத்துவதுடன், அவற்றை அடிப்படையாகக் கொண்டு சர்வதேச பேச்சுவார்த்தைகளில் தன் இடத்தை தெளிவுபடுத்த வேண்டும்.
காலநிலை மாற்றம் முக்கியத்துவம்
ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன், ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கெல் காலநிலை மாற்றத்துக்கு முக்கியத்துவம் அளித்து செயல்பட்டு வருகின்றனர். இவ்வளவு காலம் கியோட்டோ உடன்படிக்கையில் கையெழுத்திடாமல் இருந்து வந்த ஆஸ்திரேலியாவில், ஆட்சி மாற்றத்தை நிர்ணயிப்பதாக காலநிலை மாற்றப் பிரச்சினை உருவாகியுள்ளது.
அமெரிக்கா முன்னாள் அதிபர் அல் கோர், காலநிலை மாற்ற பன்னாட்டு அரசுகள் குழுவுக்காக அதன் தலைவர் ராஜேந்திர குமார் பச்சௌரி ஆகியோர் நோபல் அமைதிப் பரிசு பெற்றுள்ளனர்.
கியோட்டோ உடன்படிக்கை தொடர்பான விவாதத்தின்போது, அமெரிக்க வாழ்க்கை முறையை எதற்காகவும் விட்டுக்கொடுக்க முடியாது என்று அமெரிக்கா தெரிவித்தது. குளிரை எதிர்க்க அதிக புதைபடிம எரிபொருள் தேவை என்கிறது கனடா. பொருளாதார வளத்துக்கு எண்ணெய் ஏற்றுமதியை மட்டுமே சார்ந்திருப்பதால், கச்சா எண்ணெய்க்கு வரி விதித்து கட்டுப்படுத்தக் கூடாது என்கிறது சவுதி அரேபியா. தனித்தனியாகப் பார்க்கும்போது இந்த அக்கறைகள் சரியானவை போலத் தோன்றலாம். ஆனால் காலநிலை மாற்றத்தைப் பொருத்தவரை இவையெல்லாம் பயங்கர எதிர்விளைவுகளை உருவாக்கக் கூடியவை. காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள உடனடியாக மட்டுப்படுத்தும் முயற்சிகளை எடுக்க வேண்டும் என்று ஐரோப்பிய கூட்டமைப்பு, தென்னாப்பிரிக்கா, சீனா போன்றவை வலியுறுத்துகின்றன.
அடுத்த இரண்டு ஆண்டுகளில் புதிய சர்வதேச உடன்படிக்கையை உருவாக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகளில் ஆக்கப்பூர்வமான பங்கேற்பை இந்தியா உறுதி செய்ய வேண்டும். அதற்கு இப்பிரச்சினை குறித்து நாட்டில் விரிவான பொது விவாதம் நடத்தப்பட வேண்டும். புவி அதிவிரைவாக வெப்பமடைந்து வரும் நிலையில், அதன் எதிர்விளைவுகளை எதிர்கொள்ள ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை மட்டும் பெரும் பயன் தராது. அளவிடத்தக்க மாற்றங்களை இந்தியா ஏற்படுத்த வேண்டிய நேரம் வந்தாகிவிட்டது.
டவுன் டு எர்த்
வளரும் நாடுகளின் சுயநல முகம் மீண்டும் பாலியில் வெளிப்பட்டுள்ளது. காலநிலை மாற்றத்தை மட்டுப்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகள் 1990களில் தொடங்கி தற்போது வரை நீண்டாலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் உடன்படிக்கைகள் எதுவும் கையெழுத்தாகவில்லை. எல்லாம் தொடக்கப்புள்ளியிலேயே நிற்கிறது. இந்தக் காலத்தில் பசுமையில்ல வாயு வெளியீடு அதிகரித்திருக்கிறது. காலநிலை மாற்றம் விளைவுகள் பயங்கர நிலையை எட்டி வருகின்றன. உடனடி நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், இந்தப் பேரழிவை தடுக்க முடியாது.
இவ்வளவுக்கும் பாலி பேச்சுவார்த்தை சர்வதேச உடன்படிக்கையை தொடங்குவதற்கான பேச்சுவார்த்தை மட்டுமே, அந்தப் பேச்சுவார்த்தையிலும் அமெரிக்கா தன் பிடிவாதத்தை அரங்கேற்றியுள்ளது.
கார்பன் டை ஆக்சைடு வெளியீடு எப்பொழுது உச்சத்தை அடையும், எப்பொழுது சரியத் தொடங்கும் என்பதற்கான கால வரையறையை நிர்ணயிக்க இந்த ஒப்பந்தம் தவறிவிட்டது. கார்பன் டைஆக்சைடு வெளியீட்டை மட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்படும், குறிப்பிட்ட காலத்துக்குள் இந்த அளவு பொறுப்பை நிறைவேற்ற வேண்டும் என்ற கட்டாயம் இந்த பேச்சுவார்த்தையில் இறுதி செய்யப்படவில்லை. பணக்கார அல்லது கார்பன் கடன் நாடுகள் பசுமையில்ல வாயு வெளியீட்டு கட்டுப்பாட்டு இலக்குகளை சர்வதேச பேச்சுவார்த்தைகள் மூலம் கண்டடைவது. சட்டத்துக்கு கட்டுப்பட்ட, தண்டனை விதிக்கத்தக்கதாக இருக்க வேண்டும் என்று பேச்சுவார்த்தைகளின் தொடக்கத்தில் ஒப்புக்கொள்ளப்பட்டது
இதற்கு சர்வதேச உடன்படிக்கைகள் மூலம், கட்டுப்பாட்டு இலக்குகள் நிர்ணயித்து, வாழ்க்கை முறையில் அளவிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்பதே உலக நாடுகளின் விருப்பம். ஆனால், தொடக்கத்தில் இருந்தே அமெரிக்கா இதை ஏற்றுக் கொள்ளவில்லை. 30 கோடி மக்கள்தொகையைக் கொண்டுள்ள அமெரிக்கா வரலாற்று ரீதியிலும், நடப்பிலும் 25 சதவிகித பசுமையில்ல வாயுக்களை வெளியிட்டு வருகிறது. காலநிலை மாற்றத்தை மட்டுப்படுத்தும் முதல் சர்வதேச உடன்படிக்கையான கியோட்டோ உடன்படிக்கையில் கையெழுத்திடாமல் வெளியேறியது. எல்லா காலமும் தன்னார்வ நடவடிக்கைகள் எடுத்தால்போதும், காலநிலை மாற்றத்தை மட்டுப்படுத்தலாம் என்று வலியுறுத்தி வருகிறது. அந்த அம்சம் பாலி பேச்சுவார்த்தையிலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
வளரும் நாடுகளை அடக்க அமெரிக்கா பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. காலநிலை மாற்றப் பேச்சுவார்த்தையிலும் இதே ஆதிக்க போக்கை அமெரிக்கா நீட்டிக்க முயற்சித்து வருகிறது. ஆனால் வளரும் நாடுகள் இதை இணைந்து எதிர்க்க வேண்டும்.
கியோட்டோ உடன்படிக்கையில் விதிக்கப்பட்ட கட்டாய கட்டுப்பாடுகள் பலனளிக்கவில்லை. அதனால் அதுபோன்ற கட்டுப்பாடுகள் தேவையில்லை. பணக்கார நாடுகளை எதிர்ப்பது கடினம் என்று வளரும் நாடுகளும் கூறுவது ஆக்கப்பூர்வமான நடைமுறை அல்ல. இதுபோன்ற சமரசம் அமெரிக்காவுக்கே நன்மை பயக்கும். உலகுக்கு தீமை பயக்கும்.
பாலி பேச்சுவார்த்தைகளின் இறுதிக் கட்டத்தில் வளரும் நாடுகள் மீது சுமத்தப்பட்ட கட்டுப்பாடு என்னவென்றால், அளவிடத்தக்க, அறிவிக்கத்தக்க, பரிசோதனை செய்யத்தக்க மட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதாவது, வளரும் நாடுகள் கார்பன் டைஆக்சைடை மட்டுப்படுத்தும் நடவடிக்கையில் பங்கேற்க வேண்டும் என்று வளர்ந்த நாடுகள் வலியுறுத்தின. இந்தியாவின் வலியுறுத்தலை அடுத்து உகந்த மட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை வளரும் நாடுகள் எடுக்கும் என்று பாலி பேச்சுவார்த்தையில் ஒப்புக் கொள்ளப்பட்டது.
- ஆதி
- எலும்புகள்
- இணையத்தை துண்டித்த கேபிள் இணைப்பு
- உடல் பருமனாகிப் போவதற்கு காரணம் என்ன?
- நீரில் இருந்து நிலத்திற்கு.
- வேளாண்மையின் பகைவன்
- டிஜிட்டல் படுதாக்களில் ஜிலுஜிலுக்கும் சீமான்கள்
- நிலை குலைந்துவரும் மலைத் தொடர்கள்
- என்ன சொல்லப் போகிறோம் யானைகளுக்கு?
- தாவரங்களின் இனப்பெருக்கம்
- சுவையறிய உதவும் வாயில் வாழும் பாக்டீரியாக்கள்
- பூச்சிகளை விழுங்கும் தாவரம்
- பூமி வெப்பம் அடைவது ஏன்?
- தாவரங்களின் தோள் கொடுக்கும் தோழர்கள்
- 'அப்பன் குதிருக்குள் இல்லை' பாதிப்புகளை மறைக்கும் மரபணு மாற்றப்பட்ட பயிர்கள்
- டாடா நானோ கார்: சின்னஞ்சிறு பயங்கரம்
- 'விளக்குகளை அணைப்போம்' - கவனம் பெறும் புதிய சூழல் விழிப்புணர்வு பிரச்சாரம்
- கடத்தலால் அழியும் காட்டுயிர்கள்
- பாயத் துடிக்கும் பன்னிரண்டு நோய்கள்
- சி.எஃப்.எல். பல்புகளோடு போராடும் குமிழ் பல்புகள்
- சூழலைக் காக்கும் பீமா மூங்கில்