கீற்றில் தேட...
அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- செந்தமிழ்ச் செல்வன்
- பிரிவு: தொழில்நுட்பம்
கறவைப் பண்ணைகளில் கிடேரிக் கன்றுகளை மட்டும் பிறக்கச் செய்வதன் மூலம் காளைகளின் எண்ணிக்கை குறையலாம். இதன் மூலம் இனவிருத்திக்கு பயன்படுத்தப்படும் காளைகளில் மரபணு அடிப்படையிலான பன்முகத் தன்மை குறைய வாய்ப்புள்ளது. ஆகவே இதை சீர் தூக்கிப் பார்த்து இந்த தொழில்நுட்பத்தை வளர்த்தெடுக்க வேண்டும்.
‘விந்தணுக்களின் பாலினம் கண்டறியும் தொழில்நுட்பத்தின்’ நோக்கம் காளையின் விந்துவிலிருந்து “X” வகை விந்தணுக்களை மட்டும் தனியே சலித்தெடுத்து அவற்றை சினை ஊசி மூலம் பசுவின் கருவறைக்குள் செலுத்தி சினை முட்டையை கருவூட்டச் செய்து கிடேரிக் கன்றை மட்டுமே இப்பூமியில் பிறக்கச் செய்வதே ஆகும்.
இந்த கட்டுரையில் கிடேரி கன்றுகளின் பிறப்பு வீதத்தை அதிகரிப்பதாலும், கிடா கன்றுகளின் பிறப்பு வீதத்தைக் குறைப்பதாலும் எதிர் காலத்தில் துளிர் விட வாய்ப்புள்ள சவால்கள் என்னென்ன என்பதைப் பார்க்கலாம்.
கருத்தரிப்புக்காக ஆகும் செலவு அதிகரிக்கலாம். செலவு அதிகமாக இருப்பதால் இந்த வகையான விந்தணுக்களைக் கொண்டு கருவூட்டல் செய்யும் போது தக்க வல்லுநர்களை அழைக்க வேண்டியிருக்கும். அது மேலும் செலவுகளை அதிகரிக்கும். வல்லுநர்களுக்காக காத்திருக்க வேண்டிய சூழ்நிலையும் ஏற்படலாம்.
காளைகளின் எண்ணிக்கை குறைவதால் மரபணு பன்முகத் தன்மை குறையலாம். இதனால் உள்ளினச் சேர்க்கை ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் எதிர்கால சந்ததிகள் மரபணு சார்ந்த சில இன்னல்களுக்கு ஆளாகலாம். கிராமப்புறங்களில் காளைகள் குறைவதால் இனவிருத்திக்காக விவசாயிகள் தற்சார்பை இழக்க வேண்டியிருக்கும்.
காளைக் கன்றுகளை பிறப்பிலேயே கட்டுப்படுத்துவது என்பதை நாம் ஆழமாக சிந்திக்க வேண்டியுள்ளது. வணிகம் ஒரு பக்கம் அழுத்தத்தைக் கொடுத்தாலும் அறத்தையும் காக்க வேண்டியுள்ளது என்பதை மறக்கக் கூடாது.
ஆக இந்த தொழில்நுட்பத்தை பரிட்சார்த்த அடிப்படையில் அமல்படுத்தி அதன் சாதக பாதகங்களை சீர்தூக்கிப் பார்த்த பின்னரே களத்தில் முழுவதுமாக செயல்படுத்த வேண்டும் என்பதே அனைவரின் கருத்தாகும்.
- செந்தமிழ்ச் செல்வன்
- விவரங்கள்
- செந்தமிழ்ச் செல்வன்
- பிரிவு: தொழில்நுட்பம்
அறுவை சிகிச்சை வெற்றி ஆனால் நோயாளி காலி
(Sperm Sexing or Semen Sexing Technology in Dairy Cattle Farming: Surgery Success But Patient Died)
கிடேரிக் கன்றுகளை மட்டுமே பிறக்கச் செய்ய வேண்டும் எனும் நோக்கத்தின் அடிப்படையில் அமைந்த ஆராய்ச்சியில் பிறந்ததே இந்த “விந்தணுக்களின் பாலினத்தை கண்டறியும் தொழில்நுட்பம்” (Sperm Sexing / Semen Sexing Technology) என்பதை முந்தைய கட்டுரையில் அறிந்தோம். இயற்கை ஒரு கன்று கிடாவாக (ஆணாக) பிறப்பதற்கும், கிடேரியாக (பெண்) பிறப்பதற்கும் உள்ள சாத்தியக் கூற்றை சமமாகவே (50%-50%) வைத்திருக்கிறது. அப்படித்தான் இயற்கை இது வரை ஆண் மற்றும் பெண்ணின் எண்ணிக்கையை அல்லது விகிதாச்சாரத்தை (Gender Ratio) மனிதன் உள்ளிட்ட இதர பாலூட்டிகளில் முடிந்தவரை சமமாக வைத்துள்ளது. நிற்க!
ஆனால் இந்த “விந்தணுக்களின் பாலினத்தை கண்டறிதல்” எனும் தொழில்நுட்பத்தின் நோக்கமென்பது இப்பூமியில் பிறப்பெடுக்கும் ஒரு கன்று பெண்ணாயிருப்பதற்கான (கிடேரி) சாத்தியக்கூறை 50 சதவீதத்திலிருந்து 100 சதவீதத்தை நோக்கி உயர்த்துவதே ஆகும். இப்படி ஆண் மற்றும் பெண் பாலினத்தின் பிறப்பு விகிதத்தை அறிவியல் தொழில்நுட்பத்தைக் கொண்டு மாற்றுவதன் மூலம் மனிதன் தனக்கு வேண்டிய பாலினத்திற்கு ஆதரவாகவும், தனக்கு வேண்டாத பாலினத்திற்கு எதிராகவும் செயல்படுகிறான். இதற்கு அவன் பிரதானமாக விளிக்கும் காரணமென்னவென்றால் பொருளாதாரம்! பொருளாதாரம்!! பொருளாதாரம்!!!
பசுவின் கருப்பையில் உருப்பெறும் கருமுட்டையின் (Zygote) பாலினத்தை தீர்மானிப்பது அந்த கருமுட்டை உருவாக காரணமாயிருந்த விந்தணுவின் வகையை பொருத்தது என்பதையும் முந்தைய கட்டுரையின் வாயிலாக அறிந்தோம். காளையின் விந்துவில் ”X” மற்றும் “Y” என இரண்டு வகை விந்தணுக்கள் உள்ளதென்றும், கிடேரி கன்று உருவாக பசுவின் சினைமுட்டை (Ovum / Egg) காளையின் ”X” வகை விந்தணுவால் கருத்தரிக்கப்பட வேண்டும் என்பதையும் கண்டோம்.
ஆக நாம் செய்ய வேண்டியதெல்லாம் பொலிக்காளையின் விந்துவை லாவகமாக சேகரித்து அவற்றிலிருந்து ”X” மற்றும் “Y” வகை விந்தணுக்களை தனித்தனியாக பிரித்தெடுத்து பின்னர் அவ்வாறு பிரித்தெடுக்கப்பட்ட ”X” வகை விந்தணுக்களை மட்டும் சினை ஊசி மூலம் பசுவின் கருவறைக்குள் புகுத்தி சினைமுட்டையை கருவுறச் செய்து பெண் (கிடேரி) கருமுட்டையை (Female Zygote) உருவாக்குதலே ஆகும். அது பின்னர் பெண் கருவாக (Female Embryo) வளர்ந்து, பெண் கன்றாக (Female Calf) மண்ணில் பிறப்பெடுக்கும். இந்த நெடும் பயணத்தின் முக்கிய கூறு என்னவென்றால் கோடானுகோடி விந்தணுக்களைக் கொண்ட “காளையின் விந்துவிலிருந்து “X” வகை விந்தணுக்களை மட்டும்” சல்லடை போட்டு பிரித்தெடுப்பதே ஆகும். இங்கு தான் தொழில்நுட்பத்தின் உதவி தேவைப்படுகிறது! அந்த தொழில்நுட்பம் தான் என்ன?
”X” வகை விந்தணுக்களை ”லேசர்” சல்லடை கொண்டு சலித்தெடுத்தல்:
இரண்டு வகை விந்தணுக்களான “X” மற்றும் “Y” விந்தணுக்கள் தங்களுக்கிடையே தலை வடிவம் (Head Shape), மொத்த எடை (Sperm weight), தலையில் சுமந்துள்ள மொத்த ‘குரோமோசோம்களின்’ அளவு (Quantity of Chromosome Content), மின்னூட்ட பண்பு (Charging Property) உள்ளிட்ட பண்புகளில் வேறுபடுகிறது. இந்த வேறுபாடுகளை அடிப்படையாக கொண்டு “X” மற்றும் “Y” விந்தணுக்களானது ”மிதந்தோடும் செல்லின் பண்புகளை ஆராயும் கருவி” (Flow Cytometer) மூலம் தனித்தனியாக பிரிக்கப்படுகிறது.
இந்த முறையில் காளையிடமிருந்து லாவகமாக “கறக்கப்பட்ட” விந்துவானது ஒரு நுண்குழாய் வழியாக செலுத்தப்படுகிறது. அந்த நுண்குழாய் துளையின் அளவு (Diameter of the Hole) எப்படி இருக்கும் என்றால் அந்த குழாய் வழியாக கோடானுகோடி விந்தணுக்கள் அனைத்தும் ‘இரைபயணம்’ மேற்கொள்ளும் எறும்புகளை போல் ஒன்றன்பின் ஒன்றாக மட்டுமே செல்லமுடியும் எனும் வகையில் தான் வடிவமைக்கப்பட்டிருக்கும். அப்படியாக மேலிருந்து கீழிறங்கும் விந்தணுக்கள் ஒவ்வொன்றும் நுண்குழாயின் மூக்குத் துவாரத்தில் இருந்து செலுத்தப்படும் “லேசர்” ஒளியில் குளித்து ஒளியை பிரதிபலிக்கின்றது. அவ்வாறு பிரதிபலிக்கப்பட்ட ஒளியின் அளவானது விந்தணு கொண்டுள்ள குரோமோசோமின் அளவை பொருத்து அமைகிறது. இவ்வாறு (பால்)’இனம்’ கண்டறியப்பட்ட விந்தணுக்களை தனித்தனியாக எளிதாக சேகரிப்பதற்காக அவை ஒவ்வொன்றும் மின்னூட்டம் பெறச்செய்யப்படுகிறது. அப்படி மின்னூட்டம் பெறச் செய்யும் போது “X” வகை விந்தணுக்கள் நேர் மின்னூட்டத்தையும் (Positive Charge), “Y” வகை விந்தணுக்கள் எதிர் மின்னூட்டத்தையும் (Negative Charge) பெறுகிறது. இவ்வாறு மின்னூட்டம் பெற்ற விந்தணுக்கள் தனித்தனியாக வெவ்வேறு குப்பிகளில் சேகரிக்கப் படுகிறது. ஆக இந்த தொழில்நுட்பத்தில் ”X” மற்றும் “Y” விந்தணு கலவையை கொண்ட விந்துவிலிருந்து “லேசர்” சல்லடை மூலம் ”X” மற்றும் “Y” விந்தணுக்களானது தனித்தனியாக இரண்டு குப்பிகளில் பிரிக்கப்படுகிறது. சில சமயங்களில் ஏதொவொரு காரணத்தால் விந்தணுக்கள் சரிவர ‘இனம்’ கண்டறியப்படாமலும், அதனைத் தொடர்ந்து விந்தணுக்கள் எந்தவொரு மின்னூட்டத்தையும் பெறாமலும் வெளிவருவதுண்டு. இவ்வகை விந்தணுக்கள் மூன்றாவது குப்பியில் சேகரிக்கப்படுகிறது. இவற்றில் இறந்த விந்தணுக்களும் அடங்கும்.
தொழில்நுட்பத்தால் சோடைபோகும் விந்தணுக்கள்
இயற்கைமுறை கருவூட்டலில் (Natural Insemination) கோடானுகோடி விந்தணுக்கள் காளையின் ஆண்குறியிலிருந்து பசுவின் கருப்பை வாயில் (Os Cervix) பீச்சியடிகப்படுகிறது. அவை ஒவ்வொன்றின் வாழ்நாள் எவ்வளவு தெரியுமா? 24 மணி நேரம் மட்டுமே! அந்த 24 மணி நேரத்திற்குள்ளாகவே விந்தணுக்கள் பசுவின் கருப்பையில் நுழைந்து சினை முட்டையை கண்டு ஹாய் சொல்லி கருத்தரித்து விட வேண்டும். நேரம் செல்ல செல்ல விந்தணுவின் ஆற்றல் குறைந்துக் கொண்டே வரும். ஒரு வேளை கருத்தரிப்பிற்கு முன்னரே முழு ஆற்றலையும் விந்தணு இழந்துவிடுமானால் அந்த கணமே அந்த விந்தணுவும் இறக்க நேரிடும். ஆக விதையிலிருந்து விடுப்பட்ட விந்தணுக்களுக்கு ஒவ்வொரு நொடியும் முக்கியமானதாகும். “பசுவை காளைக்கு விடும்” போது இந்த விந்தணுக்கள் மனிதனின் பார்வைக்கு படுவதில்லை. சூரிய வெளிச்சமும் இவைகளின் மீது பாய்ச்சப்படுவதில்லை. இந்த விந்தணுக்கள் கூடு விட்டு கூடு மட்டுமே பாய்கிறது. இந்த வகை விந்தணுக்களின் ஆற்றல் முழுவதும் சினை முட்டையை கருத்தரிப்பதை நோக்கி மட்டுமே செலவிடப்படுவதால் இயற்கைமுறை கருவூட்டலில் கருத்தரிக்கும் திறன் அதிகமாக இருக்கும்.
மாறாக, செயற்கைமுறை கருவூட்டல் தொழில்நுட்பத்தில் காளையிடமிருந்து விந்தணுக்களை சேகரிக்கும் போதும், பின்னர் ஆய்வகத்தில் சோதனைக்கு உட்படுத்தி அவற்றின் தரம் நிர்ணயிக்கப்படும் போதும் பகுதியளவு ஆற்றல் வீணாக செலவிடப்படுவது தவிர்க்க முடியாததாகிறது. அதை தொடர்ந்து விந்தணுக்களின் தரம் உறுதி செய்யப்பட்டப் பின்னர் அவைகள் திரவ நைட்ரஜனில் (Liquid Nitrogen) உறை நிலையில் (Frozen Stage) பயன்பாட்டிற்காக பல வருடங்கள் சேமித்து வைக்கப்படுகிறது. இப்படி செய்யும் போது விந்தணுக்களிலுள்ள பயன்படுத்தப்படாத மீதியுள்ள உள்ளார்ந்த ஆற்றலும் அப்படியே உறங்கிய (Hibernation) நிலையில் தேக்கி வைக்கப்படுகிறது. எப்போது இந்த உறை விந்தணுக்கள் (Frozen Semen) சினை ஊசி மூலம் ஆய்வகத்திலிருந்து பசுவின் கருப்பையை வந்தடைகிறதோ அப்போது அவைகள் இந்த மீதமுள்ள பகுதியளவு ஆற்றலை பயன்படுத்தி சினைமுட்டையை கருத்தரிக்க வேண்டியுள்ளது. இப்படி அரைகுறை ஆற்றலை மட்டுமே கருத்தரிப்புக்காக பயன்படுத்த வேண்டியிருப்பதால் செயற்கைமுறை கருவூட்டலில் விந்தணுக்களின் கருத்தரிக்கும் திறன் (Fertility) இயற்கைமுறை கருவூட்டலை விட ஒப்பீட்டளவில் குறைவாக உள்ளது. கூடு விட்டு கூடு மட்டுமே பாய்ந்து கருத்தரிக்க வேண்டிய விந்தணுக்களை மனிதன் கையாளும் போது அவற்றை வெளிச் சூழலுக்கு அம்பலப்படுத்த வேண்டியது தவிர்க்க முடியாததாகிறது. விளைவு? விந்தணுக்களின் கரித்தரிக்கும் திறன் குறைந்து விடுகிறது. ’செயற்கைமுறை கருவூட்டலில் பசு சினை பிடிக்கவில்லை… பசுவை காளைக்கு விடும் போது உடனே சினை பிடிக்கிறது…’ என்றெல்லாம் புலம்புவது இதனால் தான்.
இயற்கைமுறை கருவூட்டலிலும், செயற்கைமுறை கருவூட்டலிலும் பசுவின் கருப்பையை வந்தடையும் விந்தணுக்களில் “X” மற்றும் “Y” என இரண்டு வகை விந்தணுக்களும் கலந்திருக்கும். பசுவின் சினை முட்டை இவ்விரண்டு வகை விந்தணுக்களில் எந்த வகை ஒன்றாலும் கருத்தரிக்கப் படலாம். ஆகவே தான் பிறக்கப் போகும் கன்று ஆணாக (கிடா) இருப்பதற்கும் பெண்ணாக (கிடேரி) இருப்பதற்குமான சாத்தியக் கூறு சம அளவில் (50%:50%) உள்ளது. ஆனால் ”பாலினம் கண்டறியப்பட்ட விந்தணுக்களை” பயன்படுத்தும் போது கருப்பையை வந்தடையும் விந்தணுக்களில் பெரும்பாலும் “X” வகை விந்தணுக்கள் மட்டுமே இருப்பதால் பிறக்கப் போகும் கன்று பெண்ணாக (கிடேரி) இருப்பதற்கான சாத்தியக் கூறு 50 சதவீதத்தைவிட அதிகமாகவும், ஆணாக (கிடா) இருப்பதற்கான சாத்தியக் கூறு 50 சதவீதத்தைவிட குறைவாகவும் இருக்கிறது.
இங்கு நாம் கூர்ந்து கவனிக்க வேண்டியது என்னவென்றால் பிறக்கப் போகும் கன்று பெண்ணாக பிறப்பதற்கான சாத்தியக் கூறு 70 சதவீதமாகவும் இருக்கலாம். 80 சதவீதமாகவும் இருக்கலாம். 90 சதவீதமாகவும் இருக்கலாம். அதாவது 50 சதவீததிற்கு மேல் 100 சதவீதத்திற்கு கீழ் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். கண்டிப்பாக 100 சதவீதமாக இருக்காது. இதற்கு காரணம் இன்றுள்ள தொழில்நுட்பத்தில் “X” வகை விந்தணுக்கள் என்று பிரித்தெடுக்கப்படும் விந்தணுக்கள் அனைத்தும் “X” வகையாக மட்டுமே இருப்பதில்லை. மாறாக “Y” வகை விந்தணுக்களும் கணிசமாக கலந்து உள்ளது என்பதே கள நிலவரம். இதற்கு காரணம் “X” வகை விந்தணுக்களை துல்லியமாக பிரித்தெடுப்பதிலுள்ள ’தொழில்நுட்ப’ சவால்களும், சிக்கல்களுமே ஆகும். இவைகளனைத்தும் காலப்போக்கில் களையப் படலாம். கூடவே வேறு சில புதிய சவால்களும் முளை விடலாம். ஆக இயற்கைக்கும் மனிதனுக்கும் இடையே நிகழும் இந்த மல்யுத்தம் ஒரு தொடர்கதை என்பதில் ஐயமில்லை.
இன்னொரு முக்கிய விடயம் என்னவென்றால் “X” வகை விந்தணுக்களை காளையின் விந்துவிலிருந்து “லேசர்” சல்லடை மூலம் பிரித்தெடுக்கும் போது விந்தணுக்கள் தங்களின் ஆற்றலை இழப்பதுடன் பல்வேறு வகையில் அயர்ச்சிக்கும் (Stress) உள்ளாகிறது. இத்துடன் நில்லாமல் பிரித்தெடுக்கப்பட்ட “X” வகை விந்தணுக்களை பயன்பாட்டிற்கு எடுத்துக்கொள்ளும் வரை அவற்றை உறை விந்தாக மட்டுமே சேமித்து வைக்கப்பட வேண்டியிருக்கிறது. இது மேலும் மேலும் விந்தணுக்களுக்கு அயர்ச்சியை கொடுக்கிறது. இவ்வாறு காளையிலிருந்து பீறிட்ட விந்தணுக்கள் பசுவின் கருப்பையில் சினை முட்டையை முத்தமிடும் முன்பே சக்தியிழந்து கண்ணயர்வதால் இவைகளின் கருத்தரிக்கும் திறன் வெகுவாக குறைந்தே காணப்படுகிறது. விளைவு? பிறக்கப்போகும் கன்று பெண்ணாக (கிடேரி) இருப்பதற்கான சாத்தியக் கூறு கருத்தளவில் (Theoretically) 50 சதவீதத்திற்கு மேல் இருந்தாலும் கள அனுபவம் சொல்வதென்னவென்றால் பாலினம் கண்டறியப்பட்ட விந்தணுக்களின் கருத்தரிக்கும் திறன் மிகவும் குறைந்து இருக்கிறது என்பதே ஆகும்.
“கிடேரி மோகத்திற்காக” மனிதன் காளையின் விந்துவை கையாள முற்படும் போது விந்தணுக்களின் கருத்தரிக்கும் திறன் குறைகிறது என்பதை நாம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். பெண் கன்றுக்கு ஆசைப்பட்டு சினை முட்டையின் கருத்தரிப்பிற்கே அல்லவா நாம் உலை வைக்கிறோம்? இப்படி விந்தணுக்களின் வீரியத்தை குறைத்து விட்டு வேறென்ன சாதனையை நாம் சாதிக்க எத்தனிக்கிறோம்?
இயற்கையாக உள்ள கிடா (ஆண்) – கிடேரி (பெண்) கன்றின் பிறப்பு விகித்தை மாற்றுவதால் ஏற்படும் விளைவுகள் என்னென்ன? இத்தொழில்நுட்பத்திலுள்ள அறம் மீறலுக்கான சாத்தியக்கூறு (Possibility of Violation of Ethics) என்னென்ன? என்பவை பற்றி அடுத்த கட்டுரையில் அறிவோம்! விவாதிப்போம்!!
- செந்தமிழ்ச் செல்வன்
- விவரங்கள்
- செந்தமிழ்ச் செல்வன்
- பிரிவு: தொழில்நுட்பம்
தேசிய பால் தினம்: நவம்பர், 26
டாக்டர் வெர்கீஸ் குரியன் அவர்கள் பிறந்த நாள்
இந்தியாவில் டாக்டர் வெர்கீஸ் குரியன் அவர்கள் வெண்மை புரட்சியின் தந்தை என்று அறியப்படுவது நாம் அறிந்ததே. இந்த புகழுக்குப் பின்னால் குரியன் அவர்களின் விசாலமான கனவும், கனவை மெய்ப்படுத்தும் திட்ட வரைவுகளும், அதை செயல்படுத்த தேவையான கடுமையான உழைப்பும் விடா முயற்சியும் உள்ளன என்பதை அவர்களின் வாழ்க்கை வரலாறிலிருந்து புரிந்து கொள்ள முடியும்.
பிறப்பும், இளமைக் கால கல்வியும்
டாக்டர் குரியன் அவர்கள் 1921ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் நாளன்று கேரள மாநிலத்தில் கள்ளிக்கோட்டை என்னும் இடத்தில் பிறந்தார். இவரின் தந்தை ஒரு மருத்துவர். தாயார் கற்றறிந்த சிறியன் கிறித்துவர். டாக்டர் குரியன் அவர்கள் பள்ளிக் கல்வியை தொடர்ந்து 1940ஆம் ஆண்டு சென்னையிலுள்ள லயோலா கல்லூரியில் இயற்பியல் துறையில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்தார். பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தில் பொறியியல் (இயந்திரவியல்) பட்டப்படிப்பை முடித்தார்.
டாக்டர் குரியன் அவர்கள் ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ஜாம்ஷெட்பூர் என்னும் இடத்தில் அமையப்பெற்ற டாட்டா இரும்பு தொழில் நிறுவனத்திலும், கர்நாடகத்திலுள்ள பெங்களுருவில் அமைந்திருந்த தேசிய பால்வள ஆராய்ச்சி நிறுவனத்திலும் சிறிது காலம் பயிற்சி பெற்றார். பின்னர் இந்திய அரசின் கல்வி உதவித் தொகைப் பெற்று அமெரிக்காவிலுள்ள மெச்சிகன் மாநில பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப்படிப்பினை பொறியியல் (இயந்திரவியல்) துறையில் கற்றார்.
வெண்மை புரட்சியின் (White Revolution) அடித்தளம்
அமெரிக்காவில் இருந்து தாய்திரு நாடு திரும்பிய டாக்டர் குரியன் அவர்கள் குஜராத் மாநிலத்தில் ஆனந்த் எனும் இடத்தில் அமையப்பெற்ற பால்மாவு உற்பத்தி தொழிற்சாலையில் பணியமர்த்தப்பட்டார். அங்கு அவரின் தலையாய கடமை என்னவென்றால் பம்பாய் மாகாண மக்களுக்கு தேவையான பாலை தங்கு தடையில்லாமல் விநியோகம் செய்வதே ஆகும். அந்த சமயத்தில் டாக்டர் குரியன் அவர்களுக்கு கிராமப் புறங்களில் வசிக்கும் பால் உற்பத்தியாளர்கள் மீது மிகுந்த மரியாதையும், அன்பும் ஏற்பட்டது. அதன் விளைவாக அவர் எண்ணத்தில் கிராமப்புற பால் உற்பத்தியாளர்களின் வாழ்க்கை மேம்பட ஏதுவான திட்ட வரைவுகளை ஏற்படுத்திக் கொண்டார்.
அந்த சூழ்நிலையில் தான் குஜராத்திலுள்ள கைரா மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்திற்கும் போல்சான் என்னும் தனியார் பால் நிறுவனத்திற்கும் சந்தையை பிடிப்பதில் கடும் போட்டி நிலவி வந்தது. இந்த சவாலை புரிந்துக் கொண்ட டாக்டர் குரியன் அவர்கள் அதை வாய்ப்பாக நினைத்து தான் பணிபுரிந்து வந்த அரசாங்க வேலையை ராஜினாமா செய்துவிட்டு கைரா மாவட்ட பால் உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவராக இருந்த திரு. திருபுவன்தாஸ் பாட்டீல் அவர்களை சந்தித்து உதவிகரம் நீட்டினார். அச்சங்கத்தில் குரியன் அவர்கள் மேலாளராக பணியமர்த்தப்பட்டார். அந்த காலகட்டத்தில் குரியன் அவர்கள் தொழில்நுட்பம் சார்ந்த பணிகளோடு நிர்வாக அலுவலக பணிகளையும் திறம்பட புரிந்தார். அதன் விளைவாக பம்பாய் மாகாணத்திற்கு பதப்படுத்தப்பட்ட பாலை வழங்குவதற்கான ஒப்பந்தத்தை பம்பாய் மாகாண அரசிடம் இருந்து வெற்றிகரமாக பெற்று தந்தார். இதன் தொடர்ச்சியாக அதிக எண்ணிக்கையில் புதிய பால் உற்பத்தியாளர்கள் தங்களை கூட்டுறவு சங்கத்தில் இணைத்துக் கொண்டனர். இதனால் கூட்டுறவு பால் உற்பத்திச் சங்கம் வலுப்பெற்று விரிவடைந்தது.
இவ்வாறு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தை திறம்பட முன்னெடுத்துக் கொண்டு சென்று கொண்டிருக்கும்போதே அமைதியாக வேறொரு சாதனையும் குரியன் அவர்களின் தலைமையில் நிகழ்த்தப்பட்டது. அது என்னவென்றால் உலகிலேயே முதன்முறையாக எருமை பாலிலிருந்து பால்மாவு தயாரிக்கும் தொழில்நுட்பத்தை கண்டுபடைத்ததாகும். அதுவரை பால்மாவானது பசும்பாலில் இருந்து மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. இங்கு குறிப்பிடத்தக்க முக்கிய அம்சம் என்னவென்றால் இந்தியாவின் மொத்த பால் உற்பத்தியில் பாதிக்கும் மேல் எருமை மாட்டிலிருந்து கிடைத்துக் கொண்டிருந்தது. அவ்வாறு கிடைக்கப்பெற்ற திரவ பால் குளிரூட்டப்பட்டு ஒரு சில நாட்களிலேயே நகரங்களில் விநியோகிக்கபட வேண்டும் என்னும் கட்டாயம் நிலவி வந்தது. இதனால் திரவ பாலை சேமித்து வைப்பதிலும், சேமித்து வைத்தலுக்கு தேவையான உள்கட்டமைப்புகளை நிறுவுவதிலும் சில நடைமுறை சிக்கல்கள் அந்த கால கட்டத்தில் இருந்தது.
இந்த சூழ்நிலையில் தான் டாக்டர் குரியன் அவர்களின் தலைமையில் எருமைப் பாலில் இருந்து பால் மாவு தயாரிக்கும் தொழில்நுட்பமானது கண்டுபடைக்கப்பட்டு வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது. இதன் விளைவாக தேவைக்கு அதிகமான திரவ பாலானது பால்மாவாக மதிப்புக் கூட்டப்பட்டு மக்களிடையே விநியோகம் செய்யப்பட்டது. இவ்வாறு மதிப்புக் கூட்டிய பால் பொருட்கள் அதிக லாபத்தை ஈட்டியதோடு மட்டுமல்லாமல் பால் உற்பத்தியாளர்களிடையே அதிக பால் உற்பத்தி செய்வதற்கு ஓர் உந்து சக்தியாகவும் விளங்கியது. இவ்வாறாக டாக்டர் குரியன் அவர்கள் கிராமப்புற மக்களுக்கு பால் உற்பத்தி மூலம் நிரந்தர சீரான வருமானம் கிடைப்பதற்கு ஒரு முக்கிய காரணியாக திகழ்ந்தார் என்றால் அது மிகையல்ல.
அமுல் - இந்தியாவின் சுவை (AMUL – The Taste of India)
டாக்டர் குரியன் அவர்கள் பால் உற்பத்தியை பெருக்குவதில் காட்டிய முனைப்பைவிட உற்பத்தி செய்யப்பட்ட பாலை விற்பனை செய்வதில் பெரும் பங்காற்றினார் என்பதில் இரு வேறு கருத்துகளுக்கு இடமில்லை. எனவே தான் டாக்டர் குரியன் அவர்கள் விற்பனை செய்யப்படும் பால் மற்றும் பால் பொருட்களுக்கு சந்தையில் ஒரு விற்பனை பெயர் அவசியம் என்று கருதினார். ஒரு விற்பனை பொருளின் விற்பனைப்பெயர் (Brand Name) மூலமே அந்த பொருளானது மக்களின் மனதில் நிலைத்து நிற்கிறது என்று நம்பினார். அது மட்டுமல்லாமல் அந்த விற்பனை பெயருக்கேற்றவாறு விலையும், தரமும் அமையும் பட்சத்தில் அந்த விற்பனை பொருளானது சந்தையில் உள்ள மற்ற பொருளிலிருந்து தனித்துவம் பெருகிறது என்றும் எண்ணினார். இப்படியாக பல்வேறு காரணங்களை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு விற்பனைப்பெயர் தான் இன்று இந்தியா முழுவதிலும் கோலோச்சும் “அமுல்” (AMUL) என்பது.
“அமுல்யா” என்பதற்கு சமஸ்கிருதத்தில் “விலைமதிப்பற்றது” என்று பொருள். இன்று அமுல் என்னும் விற்பனைப் பெயர் இந்திய மக்களிடையே பேராதரவை பெற்று பால் மற்றும் பால் பொருட்கள் சந்தையில் முதல் இடத்தில் கோலோச்சிகிறது. அமுல் என்ற விற்பனைப் பெயர் 1957ஆம் ஆண்டு முறையாக பதிவு செய்யப்பட்டது. இவை அனைத்திற்கும் மூல காரணமாக விளங்கியது டாக்டர் குரியன் அவர்களின் தொலை நோக்கு பார்வையும் அதனை ஒட்டிய திட்டங்களுமே ஆகும்.
ஆனந்தில் தேசிய பால் அபிவிருத்தி வாரியம் (National Dairy Development Board in Anand)
வெற்றிகரமாக நடந்து கொண்டிருந்த கூட்டுறவு முறை பால் உற்பத்தி, மதிப்புக் கூட்டப்பட்ட பால் பொருட்கள் விற்பனை, தனித்துவம் பெற்ற வியாபாரப்பெயர் மூலம் சந்தையை பிடித்தல், கிடைக்கப் பெற்ற லாபத்தை உற்பத்தியாளர்களுடன் பகிர்ந்து கொள்ளுதல், கிராமப்புற பால் உற்பத்தியாளர்களுக்கு நிரந்தர வருமானம், கிராமங்களுக்கும் நகரத்திற்கும் இணைப்பு பாலத்தை ஏற்படுத்துதல் போன்றவற்றை புரிந்து கொண்ட அன்றைய பாரதத்தின் பிரதமர் திரு. லால் பகதூர் சாஸ்திரி அவர்கள் தேசிய பால் அபிவிருத்தி வாரியம் (National Dairy Development Board) ஒன்றை அமைப்பதற்கு உத்தரவிட்டார். அதோடு மட்டுமல்லாமல் டாக்டர் குரியன் அவர்களையே அவ்வாரியத்தின் முதல் தலைவராகவும் நியமனம் செய்தார். டாக்டர் குரியன் அவர்கள் 1965ஆம் ஆண்டு முதல் 1998ஆம் ஆண்டு வரை இவ்வாரியத்தின் தலைவராக இருந்து இந்நாட்டின் பால் உற்பத்தி மற்றும் விற்பனையில் பல்வேறு திட்டங்களை வகுத்து அவற்றை வெற்றிகரமாக செயல்படுத்தினார். அவற்றுள் ஒன்றுதான் பால் பெருக்கு திட்டம் (Operation Flood) என்பதாகும்.
பால் பெருக்கு திட்டம் (Operation Flood)
உலகிலேயே மிகப்பெரிய கிராமப்புற மேம்பாட்டுத் திட்டங்களில் இது ஒரு முக்கியமான திட்டமாகும். இத்திட்டம் 1965ல் தொடங்கி 1998ல் முடிவுற்றது. இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்கள் பின்வருமாறு:
- இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலத்திலும் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தை ஏற்படுத்தி அதன் மூலம் பால் கொள்முதல் செய்து அருகில் இருக்கும் நகர வாழ் மக்களுக்கு தங்கு தடையற்ற பாலை விநியோகம் செய்தல்.
- கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் மூலம் பால் உற்பத்தியாளர்களுக்கு தேவையான வசதிகளான கறவை மாடுகளுக்கு செயற்கை முறை கருவூட்டல் செய்தல், கால்நடைகளுக்கு தேவையான தீவன பயிர் விதைகளை விநியோகம் செய்தல், கால்நடைகளுக்கு தேவையான மருத்துவ வசதிகளை ஏற்படுத்துதல், கால்நடை மேலாண்மையில் கண்டறியப்பட்ட புதிய உத்திகளை உற்பத்தியாளர்கிடையே கொண்டு சேர்த்தல், உற்பத்தியாளர்களுக்குத் தேவையான வங்கி கடன் பெற்று தருதல், கால்நடைகளை காப்பீடு செய்தல் போன்றவற்றை திறம்பட வழங்குதல்.
- கறவை மாடுகளின் உற்பத்தி திறனை கலப்பினச் சேர்க்கை இனவிருத்தி மூலம் மேம்படுத்துதல்.
- பால் உற்பத்தியின் சங்கிலித் தொடரில் உற்பத்தியாளர்கள் முதல் வாடிக்கையாளர் வரை உள்ள பல்வேறு நிலைகளில் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல்.
இவ்வாறாக பால் பெருக்கு திட்டம் மூலம் இந்தியாவிலுள்ள கிராமப்புற பால் உற்பத்தியாளர்களுக்கிடையே கூட்டுறவு முறையை அறிமுகப்படுத்தி அதன் விளைவாக கிராமப்புற மக்களின் வாழ்க்கை தரம் மேம்படுவதற்கு டாக்டர் குரியன் அவர்கள் ஒரு முக்கிய காரணகர்த்தாவாக விளங்கினார்.
மேலும் டாக்டர் குரியன் அவர்கள் குஜராத் கூட்டுறவு பால் வணிக கூட்டமைப்பு (Gujarat Cooperative Milk Marketing Federation) உருவாக்கத்திற்கும், ஆனந்த் கிராமப்புற மேலாண்மை நிறுவனம் (Institute of Rural Management, Anand) உருவாக்கத்திற்கும் ஒரு முக்கிய காரணமாக திகழ்ந்தார்.
சுருக்கமாக கூற வேண்டுமென்றால் இந்தியா இன்று பால் உற்பத்தியில் முதலிடத்தில் கோலோச்சுவதற்கு முக்கிய காரணம் வெண்மை புரட்சியாகும். வெண்மை புரட்சியில் கூட்டுறவு பால் உற்பத்தி முறை ஒரு முக்கிய அங்கமாகும். கூட்டுறவு பால் உற்பத்தி, அமுல் உருவாக்கம், பால் பெருக்கு திட்டம், தேசிய பால் அபிவிருத்தி வாரியம், இன்னும் பிற கூறுகள் வெண்மை புரட்சியின் அடித்தளமாகும். இந்த அடித்தளத்திற்கு வழி கோலியவர் டாக்டர் குரியன் ஆவார். டாக்டர் குரியன் அவர்களை வெண்மை புரட்சியின் தந்தை (Father of White Revolution) என்று புகழாரம் சூட்டுவதில் இந்தியா பெருமை கொள்கிறது. இதன் அடிப்படையில் தான் டாக்டர் குரியன் அவர்களின் பிறந்த தினமான நவம்பர் 26 ஐ தேசிய பால் தினமாக ஆண்டுதோறும் இந்தியா கொண்டாடி வருகிறது.
ஓங்குக டாக்டர். குரியன் புகழ்!
- செந்தமிழ்ச் செல்வன்
- விவரங்கள்
- செந்தமிழ்ச் செல்வன்
- பிரிவு: தொழில்நுட்பம்
கட்டுரைத் தொடர்
கட்டுரை எண் 1
ஒரு கிடேரி (பெட்டை) கன்று பிறக்கிறது. வளர்கிறது. ஒன்னரை முதல் இரண்டு வருட வயதில் உடலளவில் பாலின முதிர்ச்சியை (Sexual Maturity) அடைகிறது. அதன் பின்னர் ஒவ்வொரு 21 நாட்களுக்கு ஒருமுறை சினைப்பருவ அறிகுறிகளை (Oestrus Signs) வெளிப்படுத்துகிறது. இதனை நுகர்ந்துக் கொண்ட காளை கிளர்ச்சியுற்று பசுவை நெருங்கும். பசுவும் காளையிடம் மன்மத ராகம் பாடி இணக்கம் காட்டும். பின்னர் பசுவும் காளையும் கனநேரத்திலேயே கலவி (Mating) புரிந்து விடும். இதை தான் பசுவை ‘காளைக்கு விடுதல்’ (Allowing Cow to be Mounted) என கிராமங்களில் சொல்வார்கள். காளைக்கு விடுவதற்காகவே சாமானியர்கள் தங்களின் பசுக்களை பண்ணையார் வீட்டுக்கு ஓட்டிச்சென்று கொல்லை புறத்தில் காலையும், மாலையும் காத்துக் கிடப்பர். ஏனெனில் பண்ணையாரிடம் மட்டும் தான் வீரியமிக்க பொலிக்காளைகள் (Breeding Bulls) இருக்கும். இந்த நிலை தான் பல நூறு வருடங்களாக இருந்து வந்தது.
காலப்போக்கில் 20ஆம் நூற்றாண்டின் மத்தியில் அறிவியலின் வளர்ச்சியால் (?) இயற்கையாக நடைபெறும் “பசு-காளை” கலவி புரிதல் தடுக்கப்பட்டு பருவத்திலுள்ள பசுவிற்கு காளையின் விந்து (Semen) மட்டும் ஊசி மூலம் செலுத்தப்பட்டது. இந்த முறையில் காளையிலிருந்து “விந்து” முறையாக (?) சேகரிக்கப்பட்டு அவற்றை ஆய்வகங்களில் பல்வேறு சோதனைகளுக்குட்படுத்தி அவற்றின் தரத்தை (Quality) உறுதி செய்து பின்னர் பசுவின் கர்பப்பையில் வல்லுநர்களால் செலுத்தப்படுகிறது. இம்முறைக்கு “செயற்கைமுறை கருவூட்டல்” (Artificial Insemination) என்று பெயர். இந்த தொழில்நுட்பம் கறவை மாடு வளர்ப்போர்களை பண்ணையார் வீட்டிற்குப் பதிலாக கால்நடை மருத்துவமனைக்கு அழைத்து வந்தது. ஆண்டான் – அடிமை முறை காணப்பட்ட கிராமங்களில் இது ஒரு மிக முக்கியமான ஜனநாயக நிகழ்வாகும்.
பசுவை செயற்கைமுறை கருவூட்டல் செய்தல் (Artificial Insemination of Cow)
பசு ஒவ்வொரு முறை பருவத்திற்கு வரும்போதும் ஒரே ஒரு முட்டை (Ovum / Egg) அண்டகத்திலிருந்து (Ovary) வெளிப்படும். வெளிப்பட்ட அந்த ஒரு முட்டையும், வெளியிலிருந்து ஊசி மூலம் செலுத்தப்பட்ட காளையின் கோடானுகோடி விந்தணுக்களும் கருப்பையில் (Womb) சந்திக்கிறது. அங்கு பல கோடி விந்தணுக்கள் (Sperm) ஒற்றை முட்டையை மொய்த்துக் கொண்டு முட்டை சவ்வை (Egg Membrane) துளைத்தெடுக்கும் (Drilling). அப்படி பல கோடி விந்தணுக்கள் முட்டையை துளைத்தாலும் அவற்றில் ஒன்றுக்கு மட்டுமே உள்ளே தலையை நுழைக்க (Fertilization) அனுமதி கிடைக்கும். முட்டையினுள்ளே தலையை நுழைத்த அந்த ஒற்றை விந்தணு மட்டுமே தந்தை (Sire) எனும் உறவை அதை வழங்கிய காளைக்கு பெற்றுத்தருகிறது. ஆம்! முட்டையை துளைத்து உள்ளே எட்டிப்பார்த்த அந்த ஒற்றை விந்தணு காளையின் விதையிலிருந்து (Testicle) தான் சுமந்து வந்த முப்பது ‘குரோமோசோம்களை’ (Chromosomes) முட்டையினுள்ளே கொட்டுகிறது. விந்தணுவின் காணிக்கையை பெற்றுக்கொண்ட முட்டையும் தன் பங்கிற்கு பசுவின் அண்டகத்திலிருந்து கொண்டுவந்த முப்பது ‘குரோமோசோம்களை’ தன்னுள்ளேயே கட்டவிழ்த்து விடுகிறது. இப்போது முட்டையின் ‘குரோமோசோம்களும்’ விந்தணுவின் ‘குரோமோசோம்களும்’ நெருங்கி வந்து ஒன்றையொன்று அடையாளம் கண்டு இணை இணையாக ஜோடி சேருகின்றது (Pairing of Homologous Chromosomes).
இப்படி முட்டையும், விந்தணுவும் தனித்தனியாக வெளிப்பட்டு கருப்பை நோக்கி பயணித்து, ஒன்றையொன்று சந்தித்து தாங்கள் கொண்டுவந்த குரோமோசோம்களை எதிர்கால சந்ததிகளுக்கு கொடையாக்கி சாதாரண முட்டையை சகல வல்லமையும் (Totipotential) கொண்ட ’கருமுட்டையாக’ (Zygote) உருமாற்றமடைய செய்கிறது. எல்லாம் வல்ல கருமுட்டை இப்போது கருபையில் உருண்டோடி பதமான சதைப்பரப்பில் இதமாக புதையுண்டு வேரூன்றி (Implantation) கருவாக (Embryo) வளர்கிறது. கருமுட்டை வேரூன்றி கந்துவட்டிக் கணக்காய் வளர்ந்து (Exponential Cell Division) முதிர்ந்த கருவாகவும் (Matured Embryo), பின்னர் தொப்புள்கொடி (Umblical cord) கொண்ட சிசுவாகவும் (Foetus), இறுதியாக உரோமம் உடல் கொண்ட முழு கன்றாகவும் (Calf) உருமாறி பூமியை வந்தடைகிறது. முட்டையும், விந்தணுவும் சந்தித்து ஹாய் (Hai) சொல்லி கருமுட்டை உருவான நாளுக்கும் அது பின்னர் கன்றாய் உருவெடுத்து கருப்பைக்கு பாய் (Bye) சொல்லி பூமியை வந்தடைந்த நாளுக்கும் இடைப்பட்ட இருண்ட அந்த ஒன்பது மாத கருப்பைவாச காலமே (Womb Period) பசுவின் கர்பகாலம் (Gestation Period) எனப்படுவது.
கன்றின் பாலினம் (Gender) எப்படி தீர்மானிக்கப்படுகிறது?
கர்பக்காலத்தை கடந்து பூமியை வந்தடையும் கன்று கிடாவாக (ஆண்) இருப்பதும், கிடேரியாக (பெண்) இருப்பதும் எப்படி தீர்மானிக்கப்படுகிறது? யாரால் தீர்மானிக்கப்படுகிறது? பசுவின் அண்டகதிலிருந்து வெளிப்பட்ட முட்டையும், காளையின் விதையிலிருந்து விடுபட்டு கருவறை நுழைந்து எதிர் நீச்சலிட்டு வந்த விந்தணுவும் தலா முப்பது குரோமோசோம்களை முதலீடு செய்து மொத்தம் அறுபதாகிறது. இந்த அறுபதும் தங்களுக்குள் அடையாளங்கண்டு இணை இணையாக ஜோடி சேர்ந்து முப்பது ஜோடிகளாக ஒருங்கமைந்து முட்டையை கருமுட்டையாக உருப்பெறச் செய்கிறது. இது தான் பின்னர் வளர்ந்து கன்றாக உருவெடுக்கிறது.
பொதுவாக ஒவ்வொரு முறை பசு பருவத்திற்கு வரும் போதும் ஒரே ஒரு முட்டை தான் அண்டகத்திலிருந்து வெளிப்படும். அந்த முட்டையில் உள்ள முப்பது குரோமோசோம்களில் முப்பதாவது குரோமோசோம் எப்போதுமே “X” வடிவத்தில் மட்டும் தான் இருக்கும். இது இயற்கை. இது மாறாது. நிற்க!
ஆனால் காளையால் ஒருமுறை பீச்சியடிக்கப்படும் விந்துவில் ஒரே ஒரு விந்தணு மட்டும் இருப்பதில்லை. மாறாக கோடானகோடி விந்தணுக்கள் நீந்தி திளைக்கின்றன. இது இயற்கையின் பாரபட்சம் தான். ஆனால் ஏதோ ஒரு காரணம் இருக்கக் கூடும். விந்துவிலுள்ள கோடானகோடி விந்தணுக்களில் சரிபாதியில் முப்பதாவது குரோமோசோம் “X” வடிவிலும், மீதி பாதியில் முப்பதாவது குரோமோசோம் “Y” வடிவிலும் இருக்கும். இதுவும் இயற்கையே. முட்டையிலுள்ள முப்பதாவது குரோமோசோமுக்கும் விந்தணுக்களிலுள்ள முப்பதாவது குரோமோசோமுக்கும் இடையே உள்ள இந்த அடிப்படை வேறுபாட்டை புரிந்துக்கொள்ள வேண்டும். இது தான் கருமுட்டையின் (கன்றின்) பாலினத்தை தீர்மானிக்கும் ஓர் ஒற்றை காரணியாகும். எப்படி?
எப்பொழுதெல்லாம் முட்டை ”X” குரோமோசோமை கொண்ட விந்தணுவால் கருத்தரிக்கப்படுகிறதோ அப்போது உருப்பெறும் கருமுட்டை கிடேரி (பெண்) கன்றாகவும், எப்பொழுதெல்லாம் முட்டை ”Y” குரோமோசோமை கொண்ட விந்தணுவால் கருத்தரிக்கப்படுகிறதோ அப்போது உருப்பெறும் கருமுட்டை கிடா (காளை) கன்றாகவும் பிறப்பெடுக்கிறது. அதாவது கருமுட்டையின் முப்பதாவது ஜோடி குரோமோசோம்கள் “XX” என்றமையும் போது அது பெண்ணாகவும், கருமுட்டையின் முப்பதாவது ஜோடி குரோமோசோம்கள் “XY” என்றமையும் போது அது ஆணாகவும் நிர்ணயிக்கப்பட்டு, அவை முறையே கிடேரியாகவும், கிடாவாகவும் மண்ணில் பிறக்கிறது. சுருங்கச் சொல்வதென்றால் மண்ணில் பிறக்கும் கன்றின் பாலினம் என்பது அது கருப்பையில் கருமுட்டையாய் உருப்பெறும் போதே தீர்மானிக்கப்படுகிறது. கருமுட்டையின் பாலினத்தை தீர்மானிப்பது முட்டையை கருத்தரித்த ’அந்த’ ஒற்றை விந்தணு சுமந்து வரும் முப்பதாவது குரோமோசோமே ஆகும். இதே ’கதை’ தான் மன்னிக்கவும் இதே ’உண்மை’ தான் மனிதர்களிலும் நிகழ்கிறது. இப்படி கருவின் பாலினத்தை தீர்மானிப்பது விந்தணுவாக இருக்கும் போது பெண் பிள்ளையை பெற்றெடுத்ததற்காக தாயை கரித்துக் கொட்டுவது எவ்வகையில் நியாயம்? முறையாய் பார்த்தால் தந்தை தானே பொறுப்பேற்றிற்க வேண்டும்? இது தான் ஆணாதிக்க சமூகம் என்பதோ?
கறவை பண்ணையத்தில் கிடேரி மோகம் (Female Calf – The Most Wanted in Dairy Farm)
மனிதர்களில் “ஆண்” பிள்ளைக்காகவும், மாடுகளில் “கிடேரி” (பெண்) கன்றுக்காகவும் நாம் ஏங்குகிறோம். ஏன்? வெட்கத்தைவிட்டு அம்மனமான உண்மையை சொல்வதென்றால் எல்லாம் ’பொருளாதாரத்திற்காகத்’ தானே! குறிப்பாக மாடுகளில் கிடேரி கன்று தானே பிற்காலத்தில் பாலை சுரக்கும். வருமானத்தையும் கொடுக்கும். கிடாக் கன்று பிற்காலத்தில் வேளாண் வேலைக்கு பயன்பட்டாலும் அதை தான் இன்று இயந்திரங்கள் பிடுங்கிக் கொண்டனவே. இளங்கன்றுகளை அறுத்து சமைத்து சாப்பிடலாமென்றால் காலங்காலமாக நம்மோடு ஒட்டிவந்திருக்கும் கலாச்சார கவசகுண்டலத்தையும் கழற்றியெறிய முடியவில்லை. இக்கட்டான இந்தவொரு சூழ்நிலையில் காளைக் கன்றின் மேல் நாம் விருப்பம் கொள்ளாததை புரிந்துக் கொள்ள முடிகிறது.
”இன்னும் சரியாகச் சொல்வதென்றால் இன்றைய பொருளாதாரத்திற்கு ஒவ்வாத காளைக் கன்றுகளை பெற நாம் ஏன் சினை ஊசி போடுதல், சினையை உறுதி செய்தல், கர்பகால மேலாண்மை, பேறுகால மேலாண்மை, தேவைப்படும்போது சிகிச்சை, இத்தியாதி… இத்தியாதி… என செலவினங்களை ஒரு வருட காலம் ஏற்க வேண்டும்? இவையெல்லாம் வீணான செலவு தானே? பிறக்கப்போகும் கன்று கிடா தான் என்பதை சினை ஊசி போடும்போதே தெரிந்திருந்தால் நம்மால் இந்த மனித ஆற்றல் இழப்பு, கால விரயம், பொருளாதார இழப்பு போன்றவற்றையெல்லாம் தவிர்த்திருக்கலாம் தானே? பிறக்கப்போகும் கன்றின் பாலினத்தை மனிதர்களாகிய நாம் ஏன் தீர்மானிக்கக் கூடாது? அப்படி நம்மால் தீர்மானிக்க முடிந்தால் எதிர்காலத்தில் பாலை சுரக்கும் கிடேரி கன்றுகளை மட்டுமே பிறக்கச் செய்யலாம் தானே? அப்படி செய்தால் பசுக்களின் எண்ணிக்கையை மட்டும் அடுத்தடுத்த சந்ததிகளில் அதிகரித்து பால் உற்பத்தியை பெருக்கி இரண்டாம் வெண்மை புரட்சியை நனவாக்கலாம் தானே? பால் பொழிவை கிராமங்கள் தோறும் அதிகரிக்கலாம் தானே? வருமானத்தையும் பெருக்கலாம் தானே? கத்தரி, கொத்தவரை, பூசனி, புடலையை புறந்தள்ளி பன்னீர், பாலாடை (Cheese), வெண்ணெய், நெய் என இரவு பகல் பாராமல் சுவைத்து இன்புறலாம் தானே? கட்டவுட்டிற்கும், கோயில் கருவறைக்கும் குழாய் மூலம் பால் அபிஷேகம் நடத்தலாம் தானே? வாழ்க்கை தரத்தை உயர்த்தலாம் தானே?” இப்படியெல்லாம் கனாக்கண்ட அறிஞர்களின் எண்ணத்தில் பிறந்தது தான் “விந்தணுக்களின் பாலினம் கண்டறியும் தொழில்நுட்பம்” (Sperm Sexing Technology or Semen Sexing Technology) என்பது.
பெண் விந்தணுவும் (X Bearing Sperm), ஆண் விந்தணுவும் (Y Bearing Sperm)
பெண் விந்தணுவா? வாயை பிளக்காதீர்கள். காளையால் பீச்சியடிக்கப்படும் விந்தணுக்களில் “X” மற்றும் “Y” என இரண்டு வகைகள் உள்ளதென்பதை அறிவோம். பசுவின் முட்டை காளையின் “X” வகை விந்தணுவால் கருத்தரிக்கப்படும் போது கருமுட்டை பெண்ணாகவும் (கிடேரி), அதே போன்று பசுவின் முட்டை காளையின் “Y” வகை விந்தணுவால் கருத்தரிக்கப்படும் போது கருமுட்டை ஆணாகவும் (கிடா) தீர்மானிக்கப்படுகிறது. எனவே தான் “X” வகை விந்தணுக்களை “பெண் விந்தணு” என்றும், “Y” வகை விந்தணுக்களை “ஆண் விந்தணு” என்றும் அழைக்கிறோம்.
பருவத்திலுள்ள பசுவை இயற்கையாக காளைக்கு விடும் போதும் அல்லது பருவத்திலுள்ள பசுவை செயற்கைமுறை கருவூட்டலுக்கு உட்படுத்தும் போதும் இரண்டு வகையான (”X” மற்றும் “Y”) விந்தணுக்களையும் கருப்பை பெறுகிறது. ஆகையால் அண்டகத்திலிருந்து வெளிப்பட்ட முட்டை எந்தவகை விந்தணுவால் (”X” அல்லது “Y”) வெற்றிகரமாக கருத்தரிக்கப்பட்டு கருமுட்டையாக உருப்பெறும் என்பதை நம்மால் யூகிக்க முடிவதில்லை. ஆகவே தான் மேற்குறிப்பிட்ட இயற்கை மற்றும் செயற்கை முறை கருவூட்டல் மூலம் பிறக்கும் கன்று பெண்ணாகவும் (கிடேரி) இருக்கலாம் அல்லது ஆணாகவும் (கிடா) இருக்கலாம். அதாவது கன்று கிடேரியாக இருப்பதற்கு 50% சாத்தியக்கூறும், கன்று கிடாவாக இருப்பதற்கு 50% சாத்தியக்கூறும் உள்ளது. எளிதாக சொல்வதென்றால் பசுவிலிருந்து பிறக்கப்போகும் ஒரு கன்று கிடேரியாக இருப்பதற்கும், கிடாவாக இருப்பதற்கும் சமமான சாத்தியக்கூறையே (Equal Probablity) இயற்கை வகுத்துள்ளது. இயற்கையின் இந்த கோட்பாடு தான் மனிதன் உள்ளிட்ட அனைத்து விலங்குகளிலும் ஆண்களின் எண்ணிக்கையையும், பெண்களின் எண்ணிக்கையையும் கூடுமான வரையிலும் சமமாக வைத்துள்ளன. ஆனால் நாமோ எதிர்காலத்தைப் பற்றி எண்ணாமல் நிகழ்கால ’பொருளாதார’ காரணங்களுக்காக ஒரு குறிப்பிட்ட பாலினத்திற்கு ஆதரவாகவும், மற்றவைக்கு எதிராகவும் செயல்பட எத்தனிக்கிறோம்.
பெண் மற்றும் ஆண் விந்தணுக்களை பிரித்தெடுத்தல் (Separation of X and Y Bearing Sperm)
இப்போது நம் முன் உள்ள சவால் என்னவென்றால் பிறக்கப்போகும் கன்று கிடேரியாக இருப்பதற்கான சாத்தியக்கூறை 50%லிருந்து 100%ஐ நோக்கி உயர்த்துவதே ஆகும். இதனை எப்படி சாத்தியப்படுத்துவது? இதற்கான தீர்வு பெண் மற்றும் ஆண் விந்தணுக்களை பிரித்தெடுப்பதில் தான் உள்ளது. ஆம். நம்மால் ஏதோவொரு தொழில்நுட்பத்தால் பெண் விந்தணுக்களை ஆண் விந்தணுக்களின் கலவையிலிருந்து பிரிக்க முடியுமானால் அவ்வாறு பிரித்தெடுக்கப்பட்ட பெண் விந்தணுக்களை மட்டும் பசுவின் கருவறைக்குள் அனுமதித்து பெண் கருமுட்டைகளை உருவாக்க முடியும். இந்த பெண் கருமுட்டைகள் வளர்ந்து கிடேரி கன்றாக உருப்பெற்று மண்ணில் பிறப்பெடுக்கக் கூடும். இப்படி இயற்கை அருளிய ஆண் பெண் விந்தணுக்களின் கலவையை சல்லடை கொண்டு சலித்தெடுத்து பெண் விந்தணுக்களை மட்டுமே கருவறை நுழைய அனுமதித்து அதன் மூலம் கிடேரி கன்றின் பிறப்பை உறுதிசெய்யும் தொழில்நுட்பமே “விந்தணுக்களின் பாலினத்தை கண்டறிதல்” என்பது.
எப்படி விந்துவிலிருந்து ஆண், பெண் விந்தணுக்கள் பிரித்தெடுக்கப்படுகிறது? இதிலுள்ள சவால்கள் என்னென்ன? இயற்கையாக உள்ள கிடா (ஆண்) – கிடேரி (பெண்) கன்றின் பிறப்பு விகித்தை மாற்றுவதால் ஏற்படும் விளைவுகள் என்னென்ன? இத்தொழில்நுட்பத்திலுள்ள அறம் மீறலுக்கான சாத்தியக்கூறு (Possibility of Violation of Ethics) என்னென்ன? என்பவை பற்றியெல்லாம் அடுத்தடுத்த கட்டுரைகளில் அறிவோம்! விவாதிப்போம்!!
- செந்தமிழ்ச் செல்வன்
- பாலில் ஆக்ஸிடோசின் வர வாய்ப்புள்ளதா?
- ஈர்ப்பலைகள் – இயற்பியலுக்கான நோபல் பரிசு 2017
- கசிவு ரோபோ – நடமாடும் சுத்திகரிப்பு நிலையம் - நெகிழியில்லா நெகிழி
- பித்தாகரசு தேற்றமும் தொடுவானத்தின் தூரமும்
- பாக்டீரியாக்கள் – கழிவறைகள் – தொழிலாளர்கள்
- எரிபொருள் அறிவியல் அறிவோம்! ஏமாளிகளாக ஆகாமல் இருப்போம்!!
- நியூட்டனின் விதிகளும் கிணற்றின் ஆழமும்
- சூரிய சக்திச் சாலை (சோலர் சாலை) - பிரான்ஸ்
- பயர்பாக்ஸ் தரும் பயனுள்ள குறுஞ்செயலிகள்
- ஃபிரீ சாப்ட்வேர் – ஓர் அறிமுகம்
- வாட்சப்பை முந்தும் டெலிகிராம்
- Compression Test என்றால் என்ன? அது எப்படி செய்யப்படுகிறது?
- இணையத் திருவிழா
- ஸ்மார்ட் போனில் தகவல்களை ஸ்மார்ட்டாக வைத்திருக்க 8 கட்டளைகள்
- ஜெட் இன்ஜின் - மனிதனை பறக்க வைத்த இயந்திரம்
- ஸ்மார்ட் போன் வாங்கப் போகிறீர்களா?
- காரீய அமில இரண்டாம் நிலை சேமிப்பு மின்கலம்
- கியர் எப்படி வேலை செய்கிறது?
- சாட்பாட் – துணைக்கு வரும் தொழில்நுட்பம்
- கிளட்ச் (Clutch) - பயன்பாடும், செயல்முறையும்