கீற்றில் தேட...
அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- பாண்டி
- பிரிவு: தொழில்நுட்பம்
போயிங் 737 MAX 8 வகையைச் சார்ந்த இரண்டு விமானங்கள், 5 மாத இடைவெளியில் விபத்துக்குள்ளாகி மொத்தம் 346 பேர் பலியானார்கள். முதல் விபத்து 2018 அக்டோபர் மாதம் 29ஆம் தேதி லயன் ஏர்லைன்ஸ் விமானம் எண் 610, இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து மேலெழும்பிய பதிமூன்றாவது நிமிடத்தில் ஜாவா கடல் பகுதியில் விழுந்தது.
அதில் பயனித்த 189 பேரும் பலியாகினர். இரண்டாவது விபத்து 2019 மார்ச் மாதம் 10ஆம் தேதி எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் விமானம் எண் 302, எத்தியோப்பியா தலைநகர் அடிஸ் அபாபாவில் இருந்து மேலெழும்பிய ஆறாவது நிமிடத்தில் தரையில் விழுந்தது. அதில் பயனித்த 157 பேரும் பலியாகினர். இந்த இரண்டு விமானங்களும் போயிங் நிறுவனத்திடமிருந்து புதிதாக வாங்கப்பட்டவை.
பல கட்ட விசாரணைக்குப் பிறகு (பதினெட்டு மாதங்கள் கழித்து) இரண்டு போயிங் 737 MAX 8 விமானங்கள் விபத்துகள் குறித்த 200 பக்கங்கள் கொண்ட அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளது, அமெரிக்கா மேலவையில் உள்ள போக்குவரத்துத் துறை கண்கானிப்பு குழு. அதில் போயிங் நிறுவனத்தின் தொழில்நுட்ப குறைபாடுகளே விபத்துக்கு காரணம் என்று குறிப்பிட்டுள்ளது. "horrific culmination” of design flaws, poor government oversight and lack of corrective action by Boeing." என்று காட்டமாகத் தெரிவித்தது.
மேலும் அவர்கள் இரண்டு விமானங்களின் கருப்பு பெட்டியின் தகவல்களை ஆராய்ந்து பார்த்ததில், லயன் ஏர்லைன்ஸ் விமான விபத்தும், எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் விமான விபத்து தகவல்களும் ஒரு மாதிரியாக இருக்கிறது என்றார்கள். போயிங் மற்றும் FAA என்று அழைக்கப்படும் Federal Aviation Administration இவ்விரு அமைப்பின் தோல்வியே என்று கூறியிருக்கிறது. "played instrumental and causative roles" விமானங்கள் பாதுகாப்பிற்குத் தேவையான வழிமுறைகளை அவர்கள் சரியாகக் கையாளப்படவில்லை என்கிறது அந்த அறிக்கை.
லயன் ஏர்லைன்ஸ் விபத்து:
2018 அக்டோபர் 28 ஆம் தேதி காலை 6;21 மணிக்கு ஜகார்த்தா விமான நிலையத்தில் இருந்து Pangkal Pinang என்ற ஊருக்கு சென்றுகொண்டிருந்தது லயன் ஏர்லைன்ஸின் விமானம் எண் JT610. விமான நிலையத்தில் உள்ள ரேடாரில் பதிவாகியத் தகவல்களை வைத்துப் பார்த்ததில், விமானம் மேல் எழும்பிய இரண்டாவது நிமிடத்தில் 2000 அடி உயரத்திற்கு எழும்பியது.
ஆனால் தொடர்ந்து மேலே செல்லாமல் அது 500 அடிக்கு கீழே இறங்கியது. இதுவே வழக்கமான விமான இயக்கம் கிடையாது. மீண்டும் அது இடது பக்கமாக வளைந்து 5000 அடிக்கு மேலே சென்றது. அப்போது விமானத்தின் வேகம் 397mph இருந்ததாகவும். விமானிகளும் தரையில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் கடைசியாக பேசியிருக்கிறார்கள் விமானத்தை கட்டுப்படுத்த (Flight control system) முடியவில்லை, "RTB" என தகவல் கொடுத்திருக்கிறார்கள் (return to base) அதற்கு கட்டுப்பாட்டு அறையிலிருந்து அனுமதி கிடைத்திருக்கிறது.
ஆனால், விமானம் 3650 அடியை எட்டியதும் அதன் தகவல்கள் முற்றிலுமாக இழந்துவிட்டது, அப்போது நேரம் சரியாக காலை 6;35 மணி. மொத்தம் பதிமூன்று நிமிடங்கள் மட்டுமே ஆகாயத்தில் பறந்து இருக்கிறது. ஜகார்த்தாவில் இருந்த ஒன்பது மைல்கள் தொலைவில் உள்ள கடல் பகுதியில் விழுந்துவிட்டது. இந்த புதிய விமானம் போயிங் நிறுவனத்திடமிருந்து வாங்கப்பட்டதிலிருந்து மொத்தம் 11,000 மணி நேரங்கள் ஆகாயத்தில் பறந்து இருக்கிறது.
முதல் விமான விபத்து நிகழ்ந்த உடனேயே, அதன் அது கருப்புப் பெட்டியை கண்டறிந்து அதில் பதிவாகிய தகவல்களை வைத்து, என்னக் காரணம் என ஆராயத் தொடங்கியது போயிங் நிறுவனம். போயிங் விமான விபத்துக்கள் எங்கு நிகழ்ந்தாலும் அதன் கூட்டு நிறுவனங்கள் உடனே அதைப் பற்றித்தான் ஆய்வறிக்கையும் தொழில்நுட்ப உதவிகளையும் வழங்க தாமாகவே முன்வர வேண்டும் என்ற சட்டத்திருத்தம் அமெரிக்காவில் இருக்கிறது.
எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் விபத்து:
இரண்டாவது விபத்து எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் இது கடல் பகுதியில் நிகழவில்லை. எத்தியோப்பியா தலைநகரில் இருந்து 35 மைல்கள் தொலைவில் உள்ள ஒரு பாலைவனப் பகுதியில் நிகழ்ந்தது. மார்ச் 8ஆம் தேதி காலை 8;38 மணிக்கு கென்யா தலைநகர் நைரோபிக்கு கிளம்பிய விமானம் அது. விமானம் மேலெழும்பிய ஆறாவது நிமிடத்தில் 8;44 மணிக்கு கட்டுப்பாட்டு அறையில் இருந்து அதன் தகவல்கள் துண்டிக்கப்பட்டது.
விமானத்தை இயக்கிய பைலட் கடைசியாக ஒரு தகவல் தெரிவித்தது கட்டுப்பாட்டு அறையில் பதிவாகியது "We have a difficulty we wanted to return" ஆனால், விமானம் கட்டுப்பாட்டை இழந்தது.
எத்தியோப்பியன் ஏர்லைன்ஸின் இந்த புதிய விமானம் 2018 நவம்பர் 15ஆம் தேதி போயிங்கிடம் இருந்து வாங்கப்பட்டது. இதுவரை சுமார் 12,000 மணி நேரங்கள் மட்டுமே அது ஆகாயத்தில் பறந்து இருக்கிறது.
விபத்து நிகழ்ந்து இரண்டு நாட்கள் கழித்து விமானத்தின் கருப்புப் பெட்டியில் இருந்து அதன் தகவல்கள் பெறப்பட்டன. முதற்கட்ட ஆய்வில் லயன் ஏர்லைன்ஸில் நிகழ்ந்த அதே சம்பவங்கள் இதிலும் நிகழ்ந்துள்ளது என தெரியவந்தது. மேலும் விமானம் தரையில் விழுந்த விதத்தைப் பார்க்கும் போது விமானத்தின் வால் பகுதி 'ஹரிசாண்டல் போசிஷன்' -ல் கிடந்தது. இது வழக்கத்திற்கு மாறானது என்றார்கள் அதனை சோதனையிட்ட வல்லுநர்கள். MCAS தானியங்கி மென்பொருள் அதற்கு காரணமாக இருக்கலாம் என்று கருதினார்கள்.
போயிங் 737 MAX கருப்பு பெட்டித் தகவல்கள் மற்றும் MCAS தானியங்கி மென்பொருள்:
போயிங் விமானங்களின் வேறு எந்த மாடல்களிலும் இல்லாத MCAS இதில் மட்டும் ஏன் இருக்கிறது என்ற கேள்வி எழுகிறது. MAX 8 விமானங்களின் எஞ்சின் (LEAP-1B, 176 cm) மிகவும் சக்கி வாய்ந்தது. விமானம் ஓடுதளத்தில் இருந்து மேலெலழும் போது an aerodynamic stall -ஐ தடுப்பதற்காக, தானியங்கியாக விமானத்தின் மூக்கு பகுதியைக் கீழே அசையும் படி வடிவமைக்கப்பட்டு உள்ளது. இதற்காகவே MAX விமானங்களில் MCAS தேவைப்படுகிறது என்கிறது போயிங்.
விபத்துக்குள்ளான விமானத்தின் மூக்கு பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் AOA Sensor (Angle of Attack) மூலம் தவறான தகவல்கள் பெறப்பட்டதால் விமானத்தின் MCAS (Maneuvering Characteristics Augmentation System) தானாகவே இயங்கியுள்ளது. முறையே தொடர்ச்சியாக AOA Sensor -ல் இருந்து வந்த தவறானத் தகவலால் பல முறை MCAS Software இயங்கியது பதிவாகியுள்ளது. விமானி தானியங்கி கட்டுப்பாட்டை தனக்குள் கொண்டு வருவதற்கு முன்னரே விபத்து நிகழ்ந்திருக்கலாம்.
விமானத்தின் மூக்கு பகுதி தலை கீழாகச் சென்றிருக்க வேண்டும். தகவல்களும் அப்படி தான் காட்டுகின்றன என்றார்கள். இதுகுறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றது அமெரிக்காவின் FAA (Federal Aviation Administration).
முதல் விபத்து நடந்து நான்கு மாதங்கள் காலமாகியும் MCAS software இதைப்பற்றி அதிகம் யாருக்கும் தெரியாது. இரண்டாவது விபத்து நிகழ்ந்த மறுநாள்தான் விமானத்தின் தானியங்கி சாப்ட்வேர் பிரச்சனை இருப்பதாகத் தெரிவித்தது FAA.
போயிங் 737 வகையைச் சேர்ந்த விமானங்கள் பரவலாகப் பல நாடுகளில் சேவையில் இருக்கிறது. உலகளவில் பரவலாக அனைத்து நாடுகளிலும் இந்த விமானங்கள் பாதுகாப்பாக இருக்கிறது. விமானச் சேவை நிறுவனங்களின் நம்பிக்கை வாய்ந்தது கூட என்றும் கூறலாம். ஆனால் அது விலை உயர்ந்தது. அதேவேளையில் எரிபொருள் சேமிப்பு இல்லாதது.
இதனை ஈடுகட்டவே MAX 8 வகையைச் சேர்ந்த விமானங்கள் உற்பத்தி செய்ய ஆரம்பித்தது. ஆனால் வர்த்தக விமானங்களைக் கண்காணித்து வரும் குழு ஏர்பஸ் நிறுவனத்தின் போட்டிக்காக போயிங் இந்த வகையான விமானங்களை உற்பத்திச் செய்தது என்றார்கள்.
உலகளவில் அதிகப்படியான பயணிகள் விமானத்தை வடிவமைத்து வர்த்தக ரீதியாக ஏற்றுமதி செய்துக் கொண்டிருக்கும் நிறுவனம் எது வென்றால் அது போயிங் மட்டுமே. விமானச் சேவை நிறுவனங்கள் ஒன்று போயிங் நிறுவனத்திடமிருந்து விமானத்தை வாங்க வேண்டும். இல்லை என்றால் ஏர்பஸ் நிறுவனத்திடம் இருந்து விமானத்தை வாங்க வேண்டும். இந்த இரண்டு நிறுவனங்கள் தான் உலகின் விமான உற்பத்தியின் முன்னோடிகள்.
வர்த்தக போட்டியைச் சமாளிக்கவே அதாவது ஏர்பஸ் நிறுவனத்தின் A320neo வகைச் சார்ந்த விமானத்திற்கு மாற்றாக வடிவமைக்கப்பட்டதே போயிங் 737 MAX ஆகும். விசாரணை அறிக்கையில் இதையும் குறிப்பிட்டிருந்தார்கள். அதாவது போயிங் நிறுவனம் தொடர்ச்சியாக Cost-effective தள்ளப்பட்டதாகவும் வடிவமைப்பு செய்வதற்கு போதிய காலம் அளிக்கவில்லை.
வாடிக்கையாளர்களுக்கு புதிய விமானங்களை குறித்த நேரத்தில் கொடுக்க வேண்டும் என்பதிலேயே போயிங் குறியாய் இருந்தது அதனால் பாதுகாப்பு குறித்து அதிகம் கவலை கொள்ளவில்லை என்கிறார்கள்.
எந்த ஒரு புதிய விமானத்தின் வடிவமைப்பு முடிந்தவுடன் அதனை FAA அமைப்பிடமிருந்து தரச்சான்றிதழ் பெறப்படவேண்டும். அதன்பின்னர் வாடிக்கையாளர்களுக்கு அந்த விமானங்களை விற்பனைச் செய்ய முடியும். MAX 8 விமானத்தில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட MCAS மென்பொருள் விளக்கங்கள் மற்றும் செய்முறைகள் எல்லாம் FAA -க்கு தெரிந்திருக்கின்றது.
ஆனால் இந்த அளவுக்கு தோல்வி அடையும் என்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை. போயிங் நிறுவனமும் இந்த மென்பொருள் குறித்து விமானிகளுக்கு முறையான பயிற்சியும் அளிக்கவில்லை. விமானத்தின் செய்முறை விளக்க புத்தகத்திலிருந்து எதனை நீக்கி இருக்கிறார்கள் என்று பின்னால் தெரிய வந்தது.
MAX 8 -ன் எதிர்காலம்:
எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் விபத்து நிகழ்ந்த பின்னர் பல நாடுகள் இந்த வகை விமானங்களை இயக்க மாட்டோம் என்று விமான நிலையத்திலேயே ஆங்காங்கே நிற்க வைத்து விட்டார்கள். ஆனால் அமெரிக்காவில் மேக்ஸ் 8 -ன் சேவையை உடனடியாக நிறுத்தவில்லை. பல நாடுகளும் சேவையை நிறுத்தியதைத் தொடர்ந்து அதிபரின் சிறப்பு கையொப்பம் மூலம் அதன் சேவைகளை நிறுத்தி விட்டார்கள்.
அதனைத் தொடர்ந்து அமெரிக்காவிலும் பல விமான சேவை நிறுவனங்கள் இவ்வகை விமானங்களை தரை இறக்கி விட்டது ஏர்லைன்ஸ் நிறுவனங்கள். இரண்டாவது விபத்து நிகழ்ந்த சமயத்தில் கிட்டத்தட்ட 300 விமானங்கள் சேவையில் இருந்தது. புதிதாக 5000 விமானங்களுக்கான ஒப்பந்தங்களை பெற்றிருந்தது போயிங். அந்நிறுவனத்தின் மிகப்பெரிய MAX 8 வர்த்தகம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டது.
எத்தியோப்பியா விபத்தை தொடர்ந்து பல நாடுகள் தங்களின் புதிய ஒப்பந்தங்களை ரத்து செய்து விட்டார்கள். அமெரிக்க நாடாளுமன்றத்தில் விசாரணைக்கு வந்த போயிங் நிறுவனத்தின் முதன்மை நிர்வாகி Dennis Muilenburg இரண்டு விபத்து சம்பவங்களும் எங்களை வெகுவாக பாதித்திருக்கிறது.
உயிர் இழந்த குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். போயிங் தொடர்ந்து பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் என்றார். கடந்த ஆண்டு டிசம்பரில் அவர் பதவியும் விலகிவிட்டார்.
இரண்டாவது விமான விபத்து நிகழ்ந்து 18 மாதங்கள் ஆகிறது. இதுவரையில் FAA அமைப்பு போய் எங்கின் புதிய சாஃப்ட்வேர் அனுமதி அளிக்கவில்லை. எனினும் போயிங் நிறுவனம் தொடர்ச்சியாக எங்களது சாஃப்ட்வேர் நம்பகத்தன்மை வாய்ந்தது என்கிறார்கள்.
விமானிகளுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க திட்டம் அமைந்திருக்கிறது போயிங் நிறுவனம். அமெரிக்காவில் இயங்கிவரும் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் தங்களது விமானிகளுக்கு இந்த பயிற்சியை அளிக்க ஆயத்தமாக இருக்கிறார்கள். முறையே போயிங் 737 MAX வைத்திருக்கும் அனைத்து விமான சேவை நிறுவனங்களும் தங்களது விமானிகளுக்கு இந்த பயிற்சியினை எடுக்க அனுமதி தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
MAX 8 விமானங்கள் போயிங் நிறுவனத்தின் கனவுத் திட்டமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேவேளையில் அமெரிக்காவின் மிகப்பெரிய ஏற்றுமதி நிறுவனமாக போயிங் இருக்கிறது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
தொழில்நுட்பத்தின் வளர்ச்சி மனிதர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதாக இருக்க வேண்டுமே தவிர, வர்த்தக போட்டியின் காரணமாக மனித உயிர்களை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட கூடாது. பிற போக்குவரத்து துறையை போல் விமான உற்பத்தியில் அதிகம் போட்டிகள் கிடையாது.
விமான சேவைகள் வழங்கும் நிறுவனங்கள் தங்களின் விமானங்களை ஒன்று அமெரிக்காவின் போயிங் நிறுவனத்திடம் வாங்க வேண்டும், இல்லையென்றால் பிரான்ஸ் நாட்டின் ஏர்பஸ் நிறுவனத்திடம் இருந்து வாங்க வேண்டும்.
போயிங்கின் புதிய சாஃப்ட்வேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு அது பாதுகாப்பானது என்று FAA அறிவித்தால் நாமும் மீண்டும் அதில் பயணிக்க தொடங்கலாம். வரும் 2021 முதல் காலாண்டில் தரையில் நிற்கும் MAX 8 விமானங்கள் எல்லாம் மீண்டும் பண்பாட்டுக்கு வந்துவிடும் என நம்புகிறது போயிங் நிறுவனம்.
- பாண்டி
- விவரங்கள்
- இரா.ஆறுமுகம்
- பிரிவு: தொழில்நுட்பம்
தகவல் தொழில்நுட்பத் துறையின் ஒரு முன்னேறிய தொழில்நுட்பமாக உருவாகி வளர்ந்து வருவதோடு மட்டுமல்லாது அனைத்து துறைகளிலும் செல்வாக்கு செலுத்தப் போகும் ஒன்று இருக்கிறதென்றால் அது பிளாக்செயின் தொழில்நுட்பம்தான். 2008ஆம் ஆண்டு குறியீட்டு நாணய முறையான (Cryptocurrency) பிட்காயின் (Bitcoin) தோன்றியபோது, அதனோடு உருவானதுதான் பிளாக்செயின் தொழில்நுட்பம்.
சடோஷி நாகமோட்டோ (Satoshi Nakamoto) என்ற பெயரில் ஒருவரோ அல்லது ஒரு குழுவோ இந்த பிளாக்செயின் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்து உருவாக்கி இருக்கிறார்கள். ஆனால் இதை உருவாக்கிய சடோஷி நாகமோட்டோ என்ற பெயருள்ளவரை யாரும் இதுவரை அடையாளம் காணவில்லை.
குறியீட்டு நாணயம் என்பது ஒரு டிஜிட்டல் சொத்து (Digital Asset) எனக்கொள்ளலாம். அதாவது ஏற்கெனவே புழங்கப்பட்டு வரும் காகித நாணயம் (Paper currency) போலன்றி, தரம் வாய்ந்த பாதுகாப்பு குறியீடுகளை பயன்படுத்தி (Cryptography) கணினியால் உருவாக்கப்பட்ட தரவுத்தொகுப்பினை (Database) அடிப்படையாகக் கொண்டு, பரிமாற்ற கணக்கு புத்தகத்தில் (Ledger) பதிவு செய்யப்படும் ஒரு வகை நாணயம்.
பிட்காயின் என்னும் குறியீட்டு நாணயம் 2009ஆம் ஆண்டு முதலில் வெளியிடப்பட்டது. தற்போது ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட இத்தகைய குறியீட்டு நாணயங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றோடு, இவற்றை மேலாண்மை செய்ய உதவும் பிளாக்செயின் தொழில் நுட்பமும் வளர்ந்திருக்கிறது.
பிளாக்செயின் என்பது என்ன?
பிளாக்செயின் தொழில்நுட்பத்தின் அடிப்படையே தகவல்கள் நகலெடுக்கப் படக்கூடாது - பகிரப்பட மட்டுமே வேண்டும் என்பதுதான். நேர முத்திரை இடப்பட்ட தொடர்களால் (Time stamped series) ஆன மாற்ற முடியாத தரவுகளின் பதிவுகள் தனிப்பட்ட ஒரு நிறுவனத்திற்கு சொந்தமில்லாத ஒரு கணினி தொகுப்பினால் நிர்வகிக்கப்படுவது பிளாக்செயின் என வரையறை செய்யலாம்.
தரவுகளின் ஒவ்வொரு தொகுதியும் (Block) மற்ற தொகுதிகளுடன் குறியீட்டு முறையை பயன்படுத்தி இணைக்கப்பட்டிருக்கும். அதனால்தான் இந்த தொழில்நுட்பம் பிளாக் செயின் அதாவது தொகுதிகளின் சங்கிலி இணைப்பு என்னும் பொருள்பட அழைக்கப்படுகிறது.
பிளாக்செயின் எப்படி செயல்படுகிறது?
பிளாக்செயின் தொழில்நுட்பம் ஒரு சனநாயக பூர்வமாக இயங்குகின்ற தொழில்நுட்பம். ஏற்கனவே பயன்படுத்திவரும் சர்வர்-கிளையன்ட் முறைக்கு நேர்மாறானது இது. சர்வர் கிளையண்ட் முறையில் உங்களுக்கு ஒரு தகவல் வேண்டும் என்றால் நீங்கள் சர்வருக்கு தகவல் அனுப்பி பின் பதிலைப் பெற்றுக்கொள்ள வேண்டும். இதைப்போல பலரும் தகவல் பெறவேண்டுமென்றால் ஒவ்வொருவரும் அந்த சர்வரோடு தனித்தனியாக தொடர்புகொண்டு பெற வேண்டியதிருக்கும்.
ஆனால் பிளாக்செயின் தொழில்நுட்பத்தில் அந்தத் தொகுப்பில் உள்ள அனைத்து கணினிகளும் ஒன்றுக்கொன்று தகவல் பரிமாற்றம் செய்து தேவையான தரவுகளை புதுப்பித்தல் (update) செய்து கொள்ளும்.
இதைப் புரிந்து கொள்வதற்கு நாம் கணினியில் அடிக்கடி பயன்படுத்தும் எக்சல் கோப்புகளை (Excel Files) எடுத்துக்கொள்ளலாம். அதை புதுப்பித்தல் செய்வதற்கான தரவுகள் பலரிடம் இருப்பதாக கொண்டால், நாம் அந்த கோப்பினை ஒருவருக்கு அனுப்பி அவர் புதுப்பித்த பிறகு மற்றவருக்கு அனுப்பி இதைப்போல தொடர்ச்சியாக பகிர்ந்து மட்டுமே அந்த கோப்பினை முழுமையாக புதுப்பிக்க இயலும்.
ஆனால் பிளாக்செயின் தொழில் நுட்பத்தைப் பொருத்தவரை அது ஒரே ஒரு எக்ஸெல் கோப்பு அனைவரிடமும் இருப்பதுபோன்ற ஒரு தொழில்நுட்பமாகும். இதன் காரணமாக யாரெல்லாம் அந்த இணைப்பில் இருக்கிறார்களோ அவர்கள் எல்லாம் அங்கங்கே அதில் தரவுகளை புதுப்பித்துக்கொள்ள முடியும்.
ஒரு பிளாக்செயின் வலைப்பின்னலுக்கு மூன்று முக்கிய பகுதிகள் அவசியமானவை.
1. கணினிகளின் அல்லது பங்கு பெறுபவர்களின் ஒரு வலைப்பின்னல் (Network)
2. வலைப்பின்னலுக்கான ஒரு நெறிமுறை (Protocol)
3. ஒருமித்த கருத்துக்கான பொறியமைவு (Consensus mechanism)
ஒருமித்தக் கருத்துக்கான சோதனையில் ஒருவர் தேறினால் மட்டுமே அவர் பிளாக்செயினில் பிளாக்குகளை இணைக்க முடியும். இப்படி தேறி வருவதை மைனிங் (Mining) என அழைக்கிறார்கள்.
பிளாக்செயினின் சிறப்பியல்புகள் என்ன?
பிளாக்செயினின் தரவு, தொகுதிகளில் ஒரு தனித்த இடத்தில் சேமித்து வைக்கப் படுவதால் அது அனைவருக்கும் பொதுவானதாகவும் எளிதில் சரிபார்க்கக் கூடியதாகவும் இருக்கிறது. இந்த தகவல்கள் மத்தியத்துவப் படுத்தப்படாத வடிவத்தில் இருப்பதால் ஹேக்கர்கள் (Hacker) அதை சிதைக்க (corrupt) முடிவதில்லை. இலட்சக்கணக்கான கணினிகளால் அந்தத் தரவுகள் பராமரிக்கப்படுவதால் இணையத்தில் உள்ள எவருக்கும் அது கிடைக்கக்கூடியதாக ஆகிவிடுகிறது.
வெளிப்படைத் தன்மை என்பது பிளாக்செயின் தொழில்நுட்பத்தின் ஒரு முக்கியமான சிறப்பியல்பு ஆகும். ஒரே நேரத்தில் தனிநபரின் தகவல்களை பாதுகாக்கவும், அதே நேரத்தில் வெளிப்படையாகவும் செயல்படுகிறது இந்த தொழில்நுட்பம். தனிநபரின் அடையாளம், ஒரு சிக்கலான கணிதக் குறியீடு மூலம் பாதுகாக்கப்பட்டு, அவர்களது பொது முகவரி வாயிலாக மட்டுமே வெளியில் அறிமுகப்படுத்தப்படுகிறது.
ஒருவரின் உண்மையான அடையாளம் பாதுகாப்பாக இருந்தாலும் அவர்களது பரிமாற்றங்களை பொது முகவரியின் மூலம் நீங்கள் பார்க்க முடியும். இது ஒருவகையில் பெரிய நிறுவனங்களை பொறுப்புள்ளவர்களாக ஆக்குவதற்கு கட்டாயப்படுத்தும்.
மற்றொரு சிறப்பியல்பு, தரவுகளை மாற்ற முடியாத தன்மை (immutability). இதற்கு காரணம் இது குறியீட்டு வடிவம் கொண்ட ஹேஷ் செயல்பாட்டினை (Hash function) பயன்படுத்துவதால்தான். பிளாக்செயின் என்பது தரவுகளும், இந்த ஹேஷ் குறியீடும் (Hash pointer) இணைந்து, தொகுதிகளின் ஒரு சங்கிலித்தொடராக உருவாகும் பட்டியல். இந்த ஹேஷ் குறியீடு இதற்கு முந்தைய தொகுதியோடு தொடர்பு கொண்டிருக்கும். அதாவது இதற்கு முந்தைய தொகுதியின் முகவரியை மட்டும் அல்லாது, முந்தைய தொகுதியின் தரவுகளின் ஹேஷ் குறியீட்டையும் கொண்டிருக்கும்.
இந்த ஒரு சிறு ஏற்பாடுதான், பிளாக் செயின்களை மிகவும் நம்பகத் தன்மை கொண்டதாகவும், புதுமையானதாகவும் மாற்றுகின்றது. ஏனெனில் ஒரு ஹேக்கர் ஒரு குறிப்பிட்ட தொகுதியை தாக்கும்போது அது அடுத்த தொகுதியையும் தாக்கி அப்படியே தொடர்ச்சியாக தாக்கிக் கொண்டே போகும். இப்படியாக அந்த தொடர் சங்கிலி முழுவதையும் பாதிக்கும் விஷயம் நடப்பது சாத்தியமில்லை. இதன்காரணமாக பிளாக் செயின்கள் மாற்ற முடியாததாக ஆகிவிடுகின்றன.
உடனடி பரிமாற்றம் என்பது பிளாக்செயின் பரிமாற்றத்தின் மிக முக்கியமான ஒரு சிறப்பம்சமாகும். அதற்கு இரண்டு காரணங்கள்: ஒன்று இடைத்தரகர்கள் இல்லாதது. மற்றொன்று அந்த பரிமாற்றத்தினை தானே சரி பார்த்துக் கொள்ளும் தன்மை.
ஒரே பணத்தை இரண்டு முறை செலவழிக்க வாய்ப்பு இருப்பதை வங்கிகள் கடுமையான பாதுகாப்பு அம்சங்கள் மூலம் தவிர்க்கின்றன. அதே விஷயத்தை பிளாக்செயின் வேறுமாதிரியாக மிகவும் திறமையாக சமாளிக்கிறது அனைத்து பரிமாற்றங்களும் வெளிப்படைத் தன்மை கொண்டிருப்பதால் இரட்டை பரிமாற்றம் எளிதில் கண்டுபிடிக்கப்பட்டு விடும்
மற்ற பரிமாற்றங்களைப்போலல்லாமல், பிளாக்செயின் பரிமாற்றங்கள் எந்த செலவையும் ஏற்படுத்துவதில்லை. அதை நிறுவுவதற்கு மட்டுமே செலவுகள் ஏற்படும்.
எந்த துறைகளில் பயன்படுகிறது?
இணையத்தை பயன்படுத்துவதற்கு இணைய தொழில்நுட்பம் அனைத்தையும் நாம் அறிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்பது போல், பிளாக்செயின் பற்றிய தொழில்நுட்பத்தையும் அதைப் பயன்படுத்துவதற்கு அறிந்திருக்க வேண்டியது இல்லை.
நிதித்துறைதான் (Financial Sector) தற்போது பிளாக்செயின் தொழில்நுட்பம் அதிகமாக பயன்படுத்தும் துறையாக இருக்கிறது. பிளாக்செயின் தொழில்நுட்பம் பயன்படுத்துவதால் மிகப்பெரிய நன்மை, அதில் இடைத் தரகர்கள் தவிர்க்கப்படுவதுதான்.
ஸ்மார்ட் ஒப்பந்தங்கள் (smart contracts): பகிர்ந்தளிக்கப்படும் கணக்கு புத்தக தொழில்நுட்பமானது (distributed ledger technology) சிறிய சிறிய ஒப்பந்தங்களை கணினி மயமாக்குவதில் உதவுகிறது. உதாரணத்திற்கு, ஒரு நிதி பத்திரம் (Financial instrument) ஒரு குறிப்பிட்ட அளவை அடையும் போது அதற்குண்டான வருமானத்தை (derivative) செலுத்த வேண்டும் என்பது போன்ற ஒப்பந்தங்களை பிளாக்செயின் தொழில்நுட்பத்தால் உருவாக்கலாம்.
பகிரப்படும் பொருளாதாரம் (shared economy): சமீபத்தில் தோன்றிய ஊபர் (Uber) போன்ற தொழில்கள் வெறுமனே தனி நபர்களையும் சேவையாளர்களையும் இணைக்கும் ஒரு ஊடகமாக மட்டுமே இருக்கிறது. அதற்கு பதிலாக நேரடியாக பயனரும் சேவையாளரும் இணையத்தில் இணையும் போது இதுபோன்ற நிறுவனங்களுக்கான கட்டண சேவை இல்லாமல் போய்விடும். உதாரணமாக, ஓபன் பஜார் (OpenBazaar), இதுபோன்ற பிளாக்செயின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வாங்குபவருக்கும், விற்பவருக்கும் இடையிலான நேரடி தொடர்பினை ஏற்படுத்தி பரிமாற்ற கட்டணத்தை முற்றிலும் தவிர்க்கிறது.
கூட்ட நிதியம் (Crowd funding): தொழில் தொடங்குவதற்கு தேவையான மூலதனத்தை மக்களிடம் இருந்து நேரடியாகப் பெறுவதற்கான ஒரு வழி முறையாக பிளாக்செயின் பயன்படும். 2016 ஆம் ஆண்டு டி.ஏ.ஓ என்னும் அமைப்பு 200 மில்லியன் டாலர்களை இரண்டு மாதத்தில் சேகரித்திருக்கிறது.
அரசு நிர்வாகத்திலும் இது பயன்படுத்தப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. தேர்தல்களில் முழு வெளிப்படைத் தன்மையை தனது தொடர்ந்து அளிக்கப்படும் தரவுத் தொகுப்பு தொழில்நுட்பத்தின் மூலமாக கொண்டுவரும். நிறுவனங்கள் முடிவுகள் மேற்கொள்வதையும் நடைமுறைப் படுத்துவதையும் வெளிப்படைத் தன்மையோடு செயல்படுத்த உதவும். நிறுவனங்கள் தங்களது டிஜிட்டல் சொத்துக்களையும், தகவல்களையும் மேலாண்மை செய்வதற்கு பயன்படும்.
நுகர்வோர்கள் எப்போதுமே தாங்கள் வாங்கும் பொருட்கள் தரமாக உள்ளவையா, உண்மையானவையா என்பதை உறுதிப்படுத்த பயன்படும். அதை இந்த பகிர்ந்தளிக்கப்பட்ட கணக்குப் பதிவுகள், ஒரு பொருளின் உண்மைத் தன்மைக்கு சான்று அளிக்கக்கூடிய தகுதி படைத்ததாக இருக்கும். அதற்கு காரணம், பிளாக்செயின் தொழில்நுட்பத்தில் ஒவ்வொரு பரிமாற்றத்தின் நேரமும், இடமும் ஒவ்வொரு தடவையும் அதில் இடப்பட்டு இருப்பதுதான். இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த புரொவெனன்ஸ் (Provenance) என்ற நிறுவனம் ஜப்பானின் சுஷி உணவகங்களில் இந்தோனேஷியாவிலிருந்து தருவித்து பயன்படுத்தப்படும் மீன்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் பிடிக்கப்பட்டதுதானா என்ற தரச் சான்றினை ஈதரியம் (Ethereum) என்னும் பிளாக்செயினை பயன்படுத்தி தருகிறார்கள்.
கோப்புகளின் சேமிப்பு: மையப்படுத்தப்பட்ட கிளையன்ட் - சர்வர் உறவினை மாற்றியமைத்து, ஒரு முற்றிலுமாக பரவலாக்கப்பட்ட இணையதளங்கள் மூலமாக கோப்புகள் பரிமாறப்படுவது அதன் வேகத்தை அதிகரிக்கும் தன்மை கொண்டதாக இருக்கும்.
ஊக சந்தையிலும் (Prediction market) பிளாக்செயின் தொழில்நுட்பம் பெரும்பாலானோரின் அறிவினைக் கொண்டு செயல்படும்போது ஓரளவு சரியான ஊகங்களை செய்ய முடிவதால் அதில் பங்கு பெறுபவர்களுக்கு அதிக வருமானத்தினை ஈட்டித்தரும்.
டிஜிட்டல் தகவல்கள் தற்போது உள்ள இணைய வசதியின் காரணமாக மறுபடி மறுபடி உருவாக்கப்பட்டு பகிரப்படுகிறது. இது இலவசமான தகவல் பொருட்களுக்கு நன்மை பயத்தாலும், காப்புரிமை பெற்றவர்களுக்கு உபயோகமானதாக இல்லை. அவர்கள் தங்களது அறிவுசார் சொத்துடமையின் மீது கட்டுப்பாட்டை இழந்து விடுகின்றனர். அதன்மூலம் அது தரும் நிதி வருமானத்தையும் இழந்து விடுகின்றனர்.
மைசிலியா (Mycelia) போன்ற நிறுவனம் பிளாக்செயின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இசையினை பகிரும் ஒரு முறையாக உருவாகியிருக்கிறது. இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பாடகர் இமோஜென் ஹீப் (Imogen Heap) அவர்களால் உருவாக்கப்பட்ட மைசீலியா, இசையமைப்பாளர்கள் தங்களது பாடல்களை நேரடியாக தங்களது பார்வையாளர்களுக்கு வினியோகிக்க வழிவகை செய்து கொடுக்கிறது. மின் புத்தகம் (Ebook) மற்றும் திரைப்படங்களும் பயனர்களின் நேரடித்தொடர்பில் பகிரப்படும் காலம் விரைவில் வந்துவிடும்.
பொருட்களின் இணையம் (Internet of Things) என்று சொல்லப்படும் புதிய தொழில் நுட்பத்திலும் ஸ்மார்ட் ஒப்பந்தங்கள் மூலமாக தொலைவு அமைப்புகளின் தானியங்கி தொழில் நுட்ப மேலாண்மையிலும் (Remote Systems Automation) பயனுள்ளதாக இருக்கும்
சிறு அளவில் தயாரிக்கப்படும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி (Renewable Energy) மின்சாரத்தை வாங்குவதற்கும் விற்பதற்கும் பிளாக்செயின் ஸ்மார்ட் ஒப்பந்தங்கள் மூலமாக எளிதாக செயல்படுத்த முடியும்.
அடையாள மேலாண்மை (Identity Management) இணையத்தில் மிக முக்கியமான ஒன்று. இதை உருவாக்குவதிலும் நிர்வகிப்பதிலும் பிளாக்செயின் தொழில்நுட்பம் மிகவும் அவசியமான ஒன்றாக ஆகிவிடும்.
தரவு மேலாண்மை: தற்போது நமது தனிப்பட்ட தரவுகளை நாமே தருவதன் மூலம் ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களின் பயன்கள் இலவசமாக பெறப்படுகிறது. எதிர்காலத்தில் பயனர்கள் இதுபோன்ற ஆன்லைன் செயல்பாடுகள் மூலம் உருவாக்கப்படும் தங்களது தரவுகளை மேலாண்மை செய்வதற்கும், விற்பதற்கும் வாய்ப்பு இருக்கும். ஏனெனில் அந்தத் தரவுகள் சிறிய அளவில் பிரித்து பகிர முடியும். இதுபோன்று தரவுகளை சிறிய அளவில் பிரித்து விற்பதற்கும் பிளாக்செயின் தொழில் நுட்பம் பயன்படும்.
சொத்துரிமை: பொதுவெளியில் எளிதில் அணுகக்கூடிய கணக்குப் பதிவுகளை கொண்டிருப்பதால் பிளாக்செயின்கள் பதிவுகளை பராமரிப்பதில் திறமை வாய்ந்தவையாக இருக்கின்றன. சொத்துரிமை அப்படிப்பட்ட ஒரு பதிவேடு தேவைப்படும் ஒரு துறையாகும். தற்போது அதை பராமரிப்பது செலவினம் கூடியதாகவும், மனித உழைப்பு அதிகம் தேவைப்படுவதாகவும், தவறுகள் நடக்க வாய்ப்பு உள்ளதாகவும் இருக்கின்றது.
பிளாக்செயின் அடிப்படையில் இந்த சொத்துரிமை மேலாண்மை செய்யப்படும்போது அத்தகைய இடர்பாடுகள் இல்லை. சில நாடுகள் அதை தற்போது பயன்படுத்த ஆரம்பித்து விட்டன. ஹோண்டுராஸ் நாடு 2015இலேயே இத்தகைய திட்டத்தை ஆறிமுகப்படுத்தி விட்டது. ஸ்வீடனும் இத்தகைய முயற்சியில் இறங்கியிருக்கிறது.
பங்குச் சந்தையில் இதன் நுழைவானது கிளியரிங் ஹவுஸ் (clearing House), தணிக்கையாளர்கள் போன்ற அனைத்து இடை நிலை செயல்பாட்டார்களையும் அந்த இயக்கப் போக்கிலிருந்து நீக்கிவிடும். இப்போது ஆஸ்திரேலியா, ஜப்பான், ஜெர்மனி போன்ற நாடுகளில் இத்தகைய பிளாக்செயின் தொழில்நுட்பத்தில் இயங்கும் பங்குச்சந்தைகள் சோதனை முறையில் வந்துவிட்டன.
காப்பீட்டுத்துறை, மருத்துவம், உணவு மற்றும் குளிர்பான தொழில் துறைகள் அனைத்திலும் கூட இதன் பயன்பாடு இருக்கின்றது.
பாதக அம்சங்கள் என்ன?
பிளாக்செயின் வலைப்பின்னலில் இணைய ஒவ்வொரு நிறுவனமும் தங்களது பாதுகாப்பு நெறிமுறைகளில் (protocols) சில தளர்வுகளை செய்ய வேண்டியதிருக்கும். பெரும்பகுதி பரிமாற்றங்கள் திறந்தவெளி தன்மையோடு இருப்பதற்கு அவர்கள் தயாராக இருக்க வேண்டும். பிளாக்செயின் ஒட்டுமொத்தமாக குறியீட்டு முறையில் இருப்பதால் அதைப் பாதுகாப்பது எளிது. ஆனாலும் அதில் ஒவ்வொரு தரவுத் தொகுதிக்குள்ளும் உள்ள பதிவுகள் குறியீட்டு தன்மையில் உருவாக்கப்படவில்லை.
பிளாக்செயின் இப்போது தான் வளர்ந்து வரும் ஒரு தொழில்நுட்பம். எனவே அரசாங்கங்கள் அதை எப்படிக் கையாள்வது என்ற ஒரு முடிவுக்கு இன்னும் வரவில்லை. அதற்கான ஒழுங்கு முறைகளும் (Regulations), சட்டங்களும் இதுவரை எழுதப்படவில்லை. எனினும் விரைவில் அவை வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
பிளாக்செயின் பாதுகாப்பானதாக இருந்தாலும், பாதுகாப்பான பரிமாற்றங்களை ஏற்படுத்துவதாக இருந்தாலும், ஹேக்கர்களால் தாக்கப்படும் வாய்ப்பு இருக்கிறது. ஒரு வங்கி தனிப்பட்ட முறையில் ஹேக்கர்களால் தாக்கப்பட்டால் அதன் வருமானம் மட்டுமே பாதிக்கப்படும். ஆனால் ஒரு பிளாக்செயின் ஹேக்கர்களால் தாக்கப்படும்போது 40 வங்கிகளின் கணக்குகள் கூட பாதிக்கப்படும் வாய்ப்பு இருக்கிறது.
பிளாக்செயின் தொழில்நுட்பத்தை எளிதில் விளக்க முடியாது. மிகவும் சிக்கலான தொழில்நுட்பம் என்பதால் அனைவரும் புரிந்து கொள்வது மிகவும் கடினமானது. இதனாலேயே பொதுவெளியில் பிளாக்செயின் தொழில்நுட்பம் பிரபலமாவது மிக மெதுவாக இருக்கிறது.
பிளாக்செயினின் எதிர்காலம் எப்படி இருக்கும்?
நிதி சார்ந்த சேவைகள் துறையில் ஏறக்குறைய பிளாக்செயின் தொழில்நுட்பம் அதிக அளவில் பரவியிருக்கிறது. பல நாடுகளில் மூன்றில் ஒரு நிறுவனம் விரைவில் பிளாக்செயின் தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்ளும் நிலையில் உள்ளன.
பிளாக்செயின் தொழில்நுட்பத்தின் சந்தை மதிப்பு மிக விரைவாக கூடிக்கொண்டு வருகிறது. அது 2023 வாக்கில் கிட்டத்தட்ட 23.3 பில்லியன் டாலர்களாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பெரும்பகுதி நிதி துறையிலிருந்து வரும் என கணிக்கப்படுகிறது. சிறு வணிகம் கூட அதை விரைவில் ஏற்றுக் கொள்ளும் காலம் விரைவில் வரும்.
தகவல் தொழில்நுட்பத்துறையில் பிளாக்செயின் தொழில்நுட்பத்திற்கான தேவையும் கண்டுபிடிப்புகளும், ஆராய்ச்சியும் அதற்கான மனித சக்தி தேவைகளும் பெருகி வளரும். தகவல் தொழில்நுட்பத்துறையில் ஒரு புரட்சிகர தொழில்நுட்பமாக பிளாக்செயின் தொழில்நுட்பம் மாறும் என்பதில் சந்தேகமில்லை.
(நன்றி: blockgeeks.com, theconversation.com, medium.com, fundera.com, en.wikipedia.org இணைய தளங்கள்)
- இரா. ஆறுமுகம்
- விவரங்கள்
- பாண்டி
- பிரிவு: தொழில்நுட்பம்
கடந்த 2015 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 200 நாடுகள் ஒன்றிணைந்து, புதைபடிவ எரிபொருள் தேவையைக் குறைப்பது குறித்தும், பசுமை இல்ல வாயுக்கள் (greenhouse gases) வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துவது குறித்தும், பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் ஒன்றுகூடி பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தில் (Paris Climate Accord) கையெழுத்திட்டார்கள்.
உலகளவில் கரியமில வாயு (CO2) அதிக அளவில் வெளியேற்றும் நாடுகளாக உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட சீனா (27.53%) முதல் இடத்திலும், முதலாவது மிகப் பெரிய பொருளாதாரத்தை கொண்ட அமெரிக்கா (14.81%) இரண்டாவது இடத்திலும், இதையடுத்து பொருளாதாரம் எந்த இடத்தில் இருக்கிறது என்பதே தெரியாத இந்தியா (7.26%) மூன்றாவது இடத்திலும் இருக்கிறது. பெருவாரியான நாடுகளும் ஒன்றிணைந்து காலநிலை மாற்றத்திற்கு எதிராக செயல்பட்டுக் கொண்டிருந்த சமயத்தில்தான் அமெரிக்க அதிரடியாக இந்த ஒப்பந்தத்தில் இருந்து 2017ஆம் ஆண்டில் வெளியேறியது.
ஐநா மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகள் இதற்கு கண்டனம் தெரிவித்தாலும் அமெரிக்க அதிபர் அதைப் புறக்கணித்தார். "எங்களுக்கு, எங்கள் நாட்டில் உள்ள பென்சில்வேனியாவில் இருக்கும் தொழிலாளர்களின் வேலை தான் முக்கியம். பாரிஸ் ஒப்பந்தம் முக்கியமல்ல" என்று அமெரிக்காவின் நிலைப்பாட்டைத் தெரிவித்தார். அப்போது அமெரிக்காவுக்கு உள்ளேயே அவருக்கு எதிர்ப்புக் குரல் எழுந்தது. எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி அவர் மீது கடும் கண்டனத்தைத் தெரிவித்தது.
மின்சார கனரக வாகனங்கள்:
நிலக்கரி மூலம் மின்சாரம் தயாரிப்பது கரியமில வாயுவை வெளியிடுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. தொழிற்சாலைகள், வாகனப் போக்குவரத்து போன்றவைகள் இதற்கு அடுத்த நிலையில் இடம் பெறுகின்றன. உலக அளவில் இயங்கும் வாகனங்களில் 97% போக்குவரத்து புதைபடிவ எரிபொருள் மூலமாகவே நடைபெறுகிறது. புதைபடிவ எரிபொருளுக்கு மாற்று சக்தியாக மின்சார ஆற்றலை பயன்படுத்தி இயங்கும் வாகனங்கள் பரவலாக வரத் தொடங்கி விட்டன. தற்சமயம் பயன்பாட்டில் இருப்பது ஏனோ நான்கு பேர் அமர்ந்து செல்லும் பயணிகள் வாகனம் மட்டுமே. இதில் வேடிக்கை என்னவென்றால் பெரும்பாலும் ஓட்டுநர் மட்டுமே அமர்ந்து சொல்வதாக அது இருக்கிறது. அதுவும் சாதாரண மக்கள் இந்த வாகனங்களை வாங்க முடியாத அளவிற்கு அதன் விலை அதிகமாக உள்ளது. சொல்லப் போனால் இதனை சொகுசு வாகனம் என்றே அழைக்கலாம். தற்சமயம் பயணிகளின் வாகனங்கள் மட்டுமல்லாமல் கனரக வாகனங்களையும் மின்சாரத்தைப் பயன்படுத்தி சக்தி வாய்ந்த மோட்டார் இயந்திரங்களை வடிவமைத்து, சோதனைகள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
அமெரிக்க ஒன்றியத்தில் இருக்கும் ஒவ்வொரு மாகாணத்திற்கு என்று தனி அங்கீகாரமும், சுதந்திரமாகச் செயல்படும் உரிமையும் சட்டத்தில் இருக்கிறது. காலநிலை மாற்றத்தை கருத்தில் கொண்டு மிக வேகமாக எதிர்காலத் திட்டங்களை வகுக்கக் கூடிய மாகாணங்களில் ஒன்றுதான் கலிஃபோர்னியா.
கனரக வாகனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், வருகிற 2024 ஆண்டுக்குப் பிறகு அதிகளவில் மின்சார கனரக வாகனங்களை விற்பனை செய்ய வேண்டும் என்று அந்நிறுவனங்களுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளது கலிபோர்னியா அரசாங்கம். அதேவேளையில் 2045 ஆண்டுக்குப் பிறகு அனைத்து கனரக வாகனங்களும் 'Zero Emissions' என்பதைப் பூர்த்தி செய்வதாக இருக்க வேண்டும் என்றது California Air Resources Force என்ற காற்று மாசுபடுதலைக் கண்காணிக்கும் ஆணையம்.
சில நிறுவனங்கள் இதனை ஏற்கனவே கருத்தில் கொண்டு களத்தில் இறங்க ஆரம்பித்து விட்டன. ஜெர்மனியைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் Daimler Trucks (Mercedes Benz) என்ற நிறுவனம், வட அமெரிக்காவில் முதன் முதலாக 38 பெரிய சற்றே நடுத்தரமான மின்சார கனரக வாகனங்களை உற்பத்தி செய்யத் திட்டமிட்டிருக்கிறது. இதற்கான சோதனை ஓட்டங்களும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
இந்நிறுவனத்தின் புதிய மின்சார கனரக வாகன வடிவமைப்பான 'heavy-duty Freightliner eCascadia trucks' என்ற வகையைச் சேர்ந்த வாகனங்கள், ஒரு முறை முழுவதுமாக சார்ஜ் செய்து விட்டால் மணிக்கு 250 மைல்கள் (400 கிலோமீட்டர்) பயணிக்கக் கூடிய ஆற்றலைப் பெற்றிருக்கும். இதில் இருக்கும் மின்கலத்தின் (பேட்டரிகள்) மொத்த கொள்ளளவு 554kWh ஆகும். ஒரு முறை இதனை முழுவதுமாக சார்ஜ் செய்ய தோராயமாக 120 நிமிடங்கள் எடுத்துக் கொள்ளும்.
அமெரிக்காவின் மிகப்பெரிய சரக்கு பெட்டகத் துறைமுகமான ஃபோர்ட் ஆஃப் லாங்ஃபோர்ட் - லாங் பீச்சில் (கலிபோர்னியா) இருந்து பிற பகுதிகளுக்கு சரக்குகள் கனரக வாகனங்கள் மூலம் எடுத்துச் செல்லப்படுகிறது. இதில் முக்கியமாக சரக்குகளை எடுத்துச் செல்லும் கனரக வாகனங்கள், துறைமுகத்தில் இருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் வரை இருக்கும் 24 மைல்கள் நீளம் கொண்ட '710 freeway' என்ற சாலையை 'diesel death zone' என்று அழைக்கின்றனர் உள்ளுர் வாசிகள். தொடர்ந்து இந்த சாலை வழியே பயணிக்கும் கனரக வாகனங்களால் காற்று மாசுபட்டு மேகமூட்டம் போல் சூழ்ந்திருக்கிறது. இந்த வழித்தடத்தில் தான் முதலாவது heavy-duty Freightliner eCascadia trucks -ஐ சோதனை நடத்துகிறார்கள் Daimler நிறுவனத்தினர். மின்சார கனரக வாகனங்கள் முழு அளவில் செயல்படுத்தப்படும் காலம் வரும்போது தான் எங்களுக்கு சுத்தமான காற்றை சுவாசிக்கும் காலம் வரும் என்கிறார்கள் இந்த சாலையை ஒட்டி அமைந்திருக்கும் நகரவாசிகள்.
ஜெர்மனியின் தொலைநோக்கு பார்வை:
வாகனத் தொழிற்சாலைகளின் முன்னோடி யார் என்றால் அதற்குப் பதில் ஜெர்மனி என்றே வரும். ஜெர்மனி அரசாங்கம் ஒரு படி மேலே சென்று, மின்சார கனரக வாகனங்கள் செல்வதற்கு பிரத்யேக 'மின்சார சாலை' (Electric highway) ஒன்றை வடிவமைத்து உள்ளது. பிராங்புரூட் மற்றும் டிராம்ஸ்டாட் என்ற இரண்டு பகுதிகளுக்கு இடையே, 10 கிலோமீட்டர் தொலைவுக்கு 'இ-ஹைவே' என்ற சாலைகளுக்கு மேலே உயரழுத்த மின் கம்பிகளை அமைத்து, (பார்ப்பதற்கு ரயில் தடம் போன்ற ஒரு வடிவமைப்பு) அதில் சோதனை ஓட்டத்தையும் வெற்றிகரமாக முடித்துள்ளார்கள். இதனால், அதிகளவில் காற்று மாசுபடுதல் CO2 மற்றும் நைட்ரஜன் ஆக்ஸைடு வெளியேறுவது தவிர்க்கப்படும். இந்தத் திட்டமானது சீமன்ஸ் நிறுவனத்தோடு இணைந்து ஒரு கூட்டு உடன்படிக்கையாக மின்சாரத்தில் ஓடும் இயந்திரம் மற்றும் சாதாரண சாலையில் செல்லும் இயந்திரம் (Hybrid Engine) பொருத்திய கனரக வாகனங்களை வடிவமைத்து இருக்கிறார்கள்.
இதற்காக ஜெர்மனி அரசாங்கம் €70 மில்லியன் யூரோ செலவிட்டு ஆராய்ச்சிகள் செய்துள்ளது.
கனரக வாகனங்களுக்கே அதிகபடியான புதைபடிவ எரிபொருள் தேவைப்படுகிறது. இந்த புதுமையான வடிவமைப்பில் கனரக வாகனங்கள் வடிவமைக்கப்பட்டு அது வர்த்தக ரீதியாக செயல்படுத்தப்படும் போது CO2 வெளியேறுவதை கட்டுப்படுத்த முடியும்.
காலநிலை மாற்றத்தை தடுக்க அதிக நிதி பங்களிப்பு
இன்னும் 4 மாதங்களில் அமெரிக்காவில் அதிபருக்கான தேர்தல் வரவிருக்கிறது. இந்த முறை ஜனநாயகக் கட்சியின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடன், அதிபர் பதவிக்காகப் போட்டியிடுகிறார். கடந்த வாரம் பென்சில்வேனியாவில் ஒரு கூட்டத்தில் கலந்து கொண்ட அவர், காலநிலை மாற்றத்தை கருத்தில் கொண்டு, தனது அரசு தேர்ந்தெடுக்கும் பட்சத்தில் 2 ட்ரில்லியன் டாலர்கள் ஒதுக்கப் போவதாக அறிவித்திருந்தார். வரும் 2050ஆம் ஆண்டுக்குள் 'net-zero carbon' என்பதை குறிக்கோளாக வைத்து திட்டங்களை வகுப்போம் என்றார்.
இந்த ஆண்டின் துவக்கத்தில் பிப்ரவரி மாதம் 17ஆம் தேதி அமேசான் நிறுவனத்தின் முதன்மை நிர்வாகி ஜெப் பெசோஸ், காலநிலை மாற்றத்தைக் கருத்தில் கொண்டு தன்னுடைய நிறுவனம் 10 பில்லியன் டாலர்களை அளிப்பதாக தெரிவித்திருந்தார். அவர் அளித்த நிதி அனைத்தும் Bezos Earth Fund என்ற அமைப்பை உருவாக்கி அதிலிருந்து காலநிலை குறித்த ஆராய்ச்சிகள் மற்றும் அதனை கட்டுப்படுத்த கூடிய புதிய தொழில்நுட்பத்திற்கு செலவிடப்படும் என்றார். "காலநிலை மாற்றம் நமது பூமிக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது. நாம் நமது பூமியைப் பாதுகாக்க முடியும். பெரிய நிறுவனங்கள் மட்டுமல்லாமல் சிறிய நிறுவனங்கள், மாகாணங்கள், நாடுகள், உலகளாவிய நிறுவனங்கள் எல்லோருடைய கூட்டு நடவடிக்கைகள் மூலமாக நாம் காலநிலை மாற்றத்தைத் தடுக்க முடியும். வாருங்கள் எல்லோரும் ஒன்றிணைவோம்" என்றார்.
பல வர்த்தகங்களைக் கையாளும் அமேசான் நிறுவனமும் ஏதோ ஒரு வகையில் காலநிலை மாற்றத்திற்கு காரணமாகத் தான் இருக்கிறது. இவர்களது 'கிளவுட் கம்ப்யூட்டிங் சிஸ்டம்' போன்ற சேவைகளுக்காக தகவல் சேமிப்பு நிலையங்கள் பல்வேறு இடங்களிலும் இயங்கிக் கொண்டிருக்கிறது. முக்கியமாக தங்களது இணையதளங்களின் மூலம் விற்பனை செய்யப்படும் பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு எடுத்துச் செல்ல பல்வேறு வகையான போக்குவரத்துகளையும், விமான சேவைகளையும் பயன்படுத்துகிறது அமேசான். இவைகள் எல்லாம் அடிப்படையில் புதைபடிவ எரிபொருள் மூலம் இயக்கப்படுகிறது. அவர் அளித்திருக்கும் நிதியிலிருந்து ஒரு பகுதியாக 'Rivian' என்ற நிறுவனத்தில் இருந்து 100,000 emission-free electric vehicles -களை வாங்கத் திட்டமிட்டு இருக்கிறார்கள்.
கடந்த ஜனவரி மாதம் 16ஆம் தேதி மைக்ரோசாஃப்ட் நிறுவனம் காலநிலை மாற்றம் குறித்து தங்களது நிலைப்பாட்டைத் தெரிவித்திருந்தது. என்னவென்றால் 'Carbon Negative by 2030' அவர்களின் அனைத்து டேட்டா சென்டர்கள் மற்றும் பிற சேவைகள் அனைத்தும் புதைபடிவ எரிபொருட்களைப் பயன்படுத்தாமல் அதற்கு மாற்று சக்தியைப் பயன்படுத்தி காலநிலை மாற்றம் ஏற்படாமல் இருக்க உதவி செய்வோம் என்றது மைக்ரோசாப்ட்.
அமெரிக்கா பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறினாலும், உள்நாட்டில் உள்ள சில மாகாணங்கள் காலநிலை மாற்றத்தைக் கருத்தில் கொண்டு செயல்படுவது வரவேற்கத் தக்கது. முதலாளித்துவ நாடுகளின் பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் செயல்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. ஆனால், இந்தியா போன்ற நாடுகள் காலநிலை மாற்றத்தைத் தடுக்கும் வகையில் சிறு துரும்பைக் கூட கிள்ளிப் போடாதது வருத்தமளிக்கும் செய்தி தான்.
அமேசான், மைக்ரோசாப்ட் போலவே வேறு நிறுவனங்களும், பல நாடுகளும் காலநிலை மாற்றத்தைக் குறித்து தங்களது எதிர்காலத் திட்டங்களை வகுத்து வருகிறார்கள். இவர்கள் அனைவரும் சொல்வதை நிறைவேற்றும் பட்சத்தில், காலநிலை மாற்றம் ஏற்படாமல் இருக்க கொஞ்சமாவது அது வழிவகுக்கும். இல்லையென்றால் வெறுமனே மக்களைத் தங்கள் பக்கம் திருப்புவதற்காக இனிப்பு தடவிய சொற்களை கூறியதாகவே இருக்கும்.
(நன்றி:https://www.npr.org/2020/06/26/883634480/californias-landmark-electric-truck-rule-targets-diesel-death-zone)
- பாண்டி
- விவரங்கள்
- இரா.ஆறுமுகம்
- பிரிவு: தொழில்நுட்பம்
மேசைக்கணினியோ, மடிக்கணினியோ எதுவாக இருந்தாலும், வாங்கும் போதே தவிர்க்கவியலாதவாறு நமக்கு அறிமுகமாவது விண்டோஸ் இயங்குதளம் (Operating System). வீடு, அலுவலகம், கல்லூரி எங்கனும் பயன்படுத்தப்படுகின்ற கணினிகளில் ஏறக்குறைய அனைத்திலும் பயன்படுத்தப் படுவதும் அதுதான். அதேபோல் அதனுடன் இணைந்த மைக்ரோஸாப்டின் (Microsoft) அலுவலகப் பயன்பாட்டிற்கான வேர்ட், எக்செல், பவர்பாயிண்ட் போன்ற பல மென்பொருட்கள் எந்தவிதப் போட்டியுமின்றி தேர்ந்தெடுக்கப்படுகின்றன. ஒரு சிலரைத் தவிர பலருக்கும் விண்டோஸிற்கு ஒரு மாற்று இருக்கலாம் என்பது கற்பனைக்கெட்டாத ஒரு விஷயம்.
ஒரு புதிய கணினி வாங்குபவருக்கு ஏறக்குறைய பத்து வகையான தயாரிப்பாளர்களின் தயாரிப்புகளில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால் அதன் இயங்குதளத்தினைத் தேர்ந்தெடுக்க பெரும்பாலும் வாய்ப்புகள் கொடுக்கப் படுவதில்லை. விண்டோஸ் அந்த அளவிற்கு முற்றுரிமை (Monopoly) பெற்றதாக இருக்கிறது. ஒவ்வொரு கணினி விற்கப்படும்போதும் அதன் விலையில் ஒரு பகுதி மைக்ரோஸாப்ட் நிறுவனத்திற்கு சென்று விடுகிறது.
விண்டோஸிற்கு மாற்றே இல்லையா? சிலர் ஆப்பிளின் மேசின்டோஷ் (Macintosh) இயங்குதளத்தினை ஒரு மாற்றாகக் கருதுவர். எனினும் அதுவும் தனக்கென்று ஒரு ஆளுகையை வைத்துக் கொண்டு தனியுரிமை (Properitariship) கொண்ட ஓர் இயங்குதளமே ஆகும்.
இவைகளைப் போல தனியுரிமையின்றி, முற்றிலும் விலையில்லாமல் ஒரு இயங்குதளம் சமூக ஆர்வலர்களால் உருவாக்கப்பட்டுக் கொண்டு நடைமுறையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பது ஆச்சரியம் ஊட்டுவதாக இருக்கலாம். எனினும் உண்மை. அந்த இயங்குதளம்தான் லினக்ஸ்.
இயங்குதளம் ஒரு கணினியில் என்னதான் செய்கிறது?
ஒரு இயங்குதளத்தின் வேலைதான் என்ன? கணினியின் உள்ளும் புறமும் அதனொடு தொடர்புடைய வன்பொருட்கள் (Hardware) அனைத்தின் தேவையினையும், மற்ற மென்பொருட்களுக்கு பகிர்ந்தளிப்பதே அதன் வேலை. கணினியின் மைய செயல்பாட்டுப் பகுதி (CPU - Central Processing Unit), நினைவகம் (Memory), கோப்புகளை சேமித்தல் (File Storage), உள்/புற சாதனங்கள் (Input / Output Devices), வலைப்பின்னல் தொடர்புகள் (Network) போன்றவையே அத்தகைய வன்பொருள்கள் அல்லது வன்பொருள் சார்ந்த விஷயங்கள். அதனால் கணினி இயங்கத் தொடங்கியதிலிருந்து துவங்கி, அது அணைக்கப்படும் வரை செயல்பட வேண்டியதிருப்பதுதான் இயங்குதளத்தின் பணி.
இயங்குதளத்தின் வரலாறு
கணக்கிடும் இயந்திரங்களைக் கணக்கில் எடுத்துக் கொண்டால், கணினியின் காலம் 1800களில் தொடங்குகிறது. 1950கள் வரை ஆராய்ச்சிக் கூடத்திலிருந்தது. 1960 ஆம் ஆண்டுகளில் தொழிலகங்களிலும், இராணுவத் தேவைகளிலும் பயன்படுத்தப்பட்ட மெயின்பிரேம் (Mainframe) கணினியினால் ஆராய்ச்சிக் கூடத்திலிருந்து கணினி வெளியில் வந்தது. அப்போது கண்டுபிடிக்கப்பட்ட மின்னணு சாதனங்களின் நுழைவு, 1980களில் கணினியை மேசைக்கணினியாக சாதாரண மனிதன் முன் நிறுத்தியது.
1960களில் கணினிகளில் பயன்படுத்தப்பட்ட இயங்குதள மென்பொருட்கள் எவ்வித காப்புரிமையும் பெற்றிருக்கவில்லை. அப்போது அவை பெரும்பாலும் பல்கலைக்கழகங்களில் கண்டுபிடிக்கப்பட்டது ஒரு காரணமாக இருக்கலாம். பின்னர் ஐபிஎம் (IBM) போன்ற பெரிய நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட மென்பொருட்கள் காப்புரிமை பெற்றிருந்தன. ஆனால் கிரகாம் பெல் ஆரம்பித்த நிறுவனமான பெல் லாபரடரிஸ் (Bell Laborotaries), யுனிக்ஸ் (UNIX) என்னும் இயங்குதளத்தினை உருவாக்கி அனைவரும் பயன்படுத்திக் கொள்ள அனுமதித்தது.
1980களில் ஐபிஎம்மின் வன்பொருளுடன், உருவான மேசைக்கணினிகளோடு அறிமுகமானதுதான் மைக்ரோசாப்ட்டின் மென்பொருளான எம்எஸ் டாஸ் (MS DOS). இந்த இரண்டின் ஒருங்கிணைப்பு கணினி உலகில் ஒரு புரட்சியாக அமைந்தது. 1985 இல் விண்டோஸ் இயங்குதளத்தை அறிமுகப்படுத்திய பின் மைக்ரோசாப்ட் நிறுவனம் இயங்குதள வளர்ச்சியைப் பொருத்தவரை தனது முன்னோக்கிய பாய்ச்சலை நிறுத்தவேயில்லை.
உலகின் எந்தவொரு மூலையில் ஒரு கணினி விற்கப்பட்டாலும், மைக்ரோஸாப்ட் நிறுவனத்திற்கு ஒரு தொகை வந்து சேர்ந்து விடும் என்ற நிலை, அதன் நிறுவனர் பில் கேட்ஸை உலகின் இரண்டாவது பணக்காரராக ஆக்கி விட்டிருக்கிறது. இதே நேரத்தில் துவக்கப்பட்ட ஆப்பிள் நிறுவனம், வன்பொருளையும், மென்பொருளையும் தனக்கே உரித்தான பண்புகளை வளர்த்துக் கொண்டு, ஆதரவாளர்களை திரட்டிக் கொண்டு தனியுரிமை இயங்குதளத்தையே முன்னிறுத்துகிறது.
கட்டற்ற, திறந்த மூல மென்பொருள் (Free and Open Source Software - FOSS)
கணினி மென்பொருள் தளத்தில், முற்றுரிமையும், தனியுரிமையுமாக விண்டோஸும், மேசிண்டோஷும் உருவான காலத்திலேயே, மென்பொருள் உருவாக்கப் போக்கில் வேறொரு கருத்தாக்கம் உருப்பெற்று வளர்ந்து வந்தது. அது கட்டற்ற மென் பொருள்.
கணினி நிரலியற்றியாக (computer programmer) பணியாற்றிய ரிச்சர்ட் ஸ்டால்மன் (Richard Stallman) என்னும் அமெரிக்கர், கட்டற்ற மென்பொருளுக்கான ஒரு அமைப்பினை 1985ல் உருவாக்குகிறார். இலாபநோக்கின்றி செயல்படும் இதன் முக்கிய நோக்கம் மென்பொருள்களை இலவசமாக உருவாக்குவது, வெளியிடுவது, பகிர்வது ஆகியவையே. மேலதிகமாக GNU (GNU Not Linux என்பதன் சுருக்கமே இது) உரிமம் என்ற கருத்தாக்கத்தையும் உருவாக்குகிறார். செயல்படுத்துகிறார்.
லினக்ஸின் உருவாக்கம்
ரிச்சர்ட் ஸ்டால்மன் அதுவரை பெரிய ஆராய்ச்சியில் பயன்படுத்தப்படும் கணினிகளுக்கு பயன்பட்டு வந்த யுனிக்ஸ் இயங்குதளத்தைப் போலவே, மேசைக்கணிகளுக்குப் பொருத்தமான ஒரு இயங்கு தளத்தை உருவாக்க முனைந்தார். ஆனால் அவர் உருவாக்கிய இயங்குதளத்தின் கெர்னல் (Kernel) பகுதி வலுவானதாக இருக்கவில்லை. கெர்னல் என்பது ஒரு இயங்குதளத்தின் பல அடுக்குகளில் மையமான அடுக்குப்பகுதி. அதே காலகட்டத்தில் கிட்டத்தட்ட அதே முனைப்புடன் செயல்பட்ட லினஸ் டோர்வால்ட்ஸ் (Linus Torvalds) என்னும் பின்லாந்து நாட்டைச் சார்ந்த மாணவர், யுனிக்ஸைத் தழுவிய ஒரு புதிய வலுவான கெர்னல் பகுதியை உருவாக்கியிருந்தார்.
ரிச்சர்ட் ஸ்டால்மானும், லினஸ் டோர்வால்டும் இணைந்து ஒரு புதிய இயங்குதளத்தை உருவாக்கி, பின்னவர் பெயரின் முன்பகுதியையும், யுனிக்ஸின் பின்பகுதியையும் இணைத்து, அந்த இயங்கு தளத்திற்கு லினக்ஸ் எனப் பெயரிட்டனர்.
காப்புரிமைக்கு எதிராக காப்பு சுதந்திரம்
லினக்ஸ் இயங்குதளம் GNU உரிமத்தின் கீழ் பதியப் பெற்றது. இந்த உரிமத்தின் விதி இதுதான். இந்த இயங்குதள மென்பொருளை - அதன் மூலக்குறியீடுகளை (source code) - எவர் வேண்டுமானாலும், பிரதியெடுக்கலாம், பகிரலாம், மாற்றலாம், ஏன் விலைக்கு கூட விற்கலாம். ஆனால் அப்படி பகிரப்பட்ட மென்பொருளும் இந்த GNU உரிம விதிகளையே அனுசரிக்க வேண்டும்.
தனியுரிமைக்குப் பாதுகாப்பளிக்கும் காப்பிரைட் உரிமைகளுக்கு மாற்றாக GNU போன்ற காபிலெப்ட் (copy left) உரிமைகளின் அடிப்படையில் பல உரிமங்கள் வந்து விட்டன. உதாரணமாக, நாம் அடிக்கடி பயன்படுத்தும் விக்கிபீடியா அப்படிப்பட்ட உரிமங்களுள் ஒன்றான கிரியேடிவ் காமன்ஸ் (creative commons) என்ற உரிமத்தைக் கொண்டிருக்கிறது.
லினக்ஸ் இயங்குதளம் பின்னர் சில வணிக ரீதியான நிறுவனங்களாலும், பல மென்பொருள் ஆர்வலர்களால் உருவாக்கப்பட்ட வணிக ரீதியில்லாத சமுதாயக் குழுக்களாலும் (Community) வளர்த்தெடுக்கப்பட்டு நூற்றுக்கணக்கான வடிவங்களில் வெளியிடப்பட்டு வருகிறது.
ரெட் ஹேட் நிறுவனம் வெளியிடும் ரெட் ஹேட் (Red Hat) மற்றும் பெடோரா (Fedora), சுசே நிறுவனத்தால் வெளியிடப்படும் ஓப்பன் சுசே (Open SUSE), கானோனிகல் (Canonical) நிறுவனத்தால் வெளியிடப்படும் உபுண்டு (Ubuntu), சமுதாயக் குழுக்களால் வெளியிடப்படும் டெபியன் (Debian), லினக்ஸ் மிண்ட் (Linux Mint) போன்றவை குறிப்பிடத் தக்கவை. இந்த பல்வேறு வகையான வெளியீடுகள் லினக்ஸ் டிஸ்ட்ரோக்கள் (Distros) என்று அழைக்கப்படுகின்றன.
லினக்ஸை கணினியில் எப்படி நிறுவ வேண்டும்?
முதலில் உங்களுக்குப் பிடித்தமான ஒரு லினக்ஸ் டிஸ்ட்ரோவின் ISO கோப்பினை தரவிறக்கம் (download) செய்து கொள்ள வேண்டும். ஒரு பென் டிரைவிலோ, சிடியிலோ அதை ஒரு bootable disk ஆக பதிந்து கொள்ள வேண்டும். இப்படி bootable disk ஆக உருவாக்க பல முறைகளும், மென் பொருட்களும் உள்ளன. பின் நீங்கள் தயாரித்த bootable disk ஐ கணினியில் இட்டு மறு துவக்கம் (Re-start) செய்தால் உங்களுக்கு தெரிவு செய்வதற்கான ஒரு திரை தோன்றும். அதில் நீங்கள் பதிவிறக்கிய லினக்ஸ் டிஸ்ட்ரோவை பரீட்சித்துப் பார்க்க விரும்புகிறீர்களா அல்லது நிறுவ விரும்புகிறீர்களா என்ற தெரிவினை கேட்கும். நிறுவ விரும்பும் தெரிவினைத் தேர்ந்தெடுத்தால் வரிசையாக சில கேள்விகளுடன் நிறுவ ஆரம்பிக்கும்.
அதில் முக்கியமான கேள்வி, ஏற்கெனவே இந்த கணினியில் விண்டோஸ் இயங்கு தளம் இருக்கிறது, அதை அழித்துவிட்டு நிறுவ வேண்டுமா அல்லது அதற்கு பக்கம் பக்கமாக நிறுவ வேண்டுமா என்பதுதான். லினக்ஸை பரீட்சித்துப் பார்க்காமல் விண்டோஸை விட முடியாது என்பதால், நீங்கள் இரண்டாவது தெரிவைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அடுத்த அரை மணி நேரத்திற்குள் உங்கள் கணினியில் லினக்ஸ் நிறுவப்பட்டு விடும். கணினியை மறு தொடக்கம் செய்யும் போது பூட் லோடர் (Boot loader ) என்ற திரை தோன்றும். நீங்கள் விண்டோஸ் இயங்குதளம் செல்ல வேண்டுமா, லினக்ஸ் இயங்குதளம் செல்ல வேண்டுமா என்று கேட்கும். லினக்ஸை தேர்ந்தெடுத்து கட்டற்ற மென்பொருள் தரும் சுதந்திரக் காற்றை சுவாசியுங்கள்.
லினக்ஸின் சிறப்பியல்புகள்
விலை: லினக்ஸ் முற்றிலும் விலையில்லாதது. ஆனாலும் அதை உருவாக்கியவர்கள் அது விலையற்றது என்பதை விட அதன் கட்டற்ற தன்மைக்கே முக்கியத்துவம் கொடுத்தனர். அதாவது அதைப் பயன்படுத்தி வளர்த்தெடுக்கும் எவரும் அதன் நிரல்களைப் பகிரும் வகையில் வெளிப்பாட்டுத் தன்மையோடு இருக்க வேண்டும் என்பதே அதன் சிறப்பு.
மென்பொருட்கள்: லினக்ஸை நிறுவும்போதே நாம் அடிக்கடி பயன்படுத்தும் பெரும்பாலான மென்பொருட்களும் அதனுடன் இணைந்து நிறுவப்பட்டு விடும். நீங்கள் விண்டோஸில் பயன்படுத்தும் அனைத்து விதமான மென்பொருட்களுக்கும், மாற்று லினக்ஸிலும் உண்டு. உதாரணத்திற்கு எம் எஸ் ஆபீஸ் ற்குப் பதிலாக லிபர் ஆபீஸ் (Libre Office). சில மென்பொருள்கள் உருவாக்கும் நிறுவனங்கள் இரண்டு இயங்கு தளத்திற்காகவும் தனித்தனியே மென்பொருளை உருவாக்குகின்றன. இது போன்ற மென்பொருள்கள் ஆயிரக்கணக்கில் இருக்கின்றன.
உறுதித்தன்மை: பெரும்பாலான லினக்ஸ் டிஸ்ட்ரோக்கள் சமுதாயக் குழுக்களால் வளர்க்கப்படுவதால் தொடர்ந்த வளர்மாற்றங்களை பெற்றுக் கொண்டே இருக்கின்றன. இதன் காரணமாக லினக்ஸ் ஒரு உறுதியான மென்பொருளாக உள்ளது. அதாவது இயங்கு தளத்தில் அடிக்கடி ஏற்படும் பிரச்சனைகளான தொங்கு நிலை (hanging), சரிவுகள் (crashes) போன்றவை லினக்ஸில் ஏற்படுவது அரிதிலும் அரிது. எனவேதான் உலகம் முழுவதிலும் பலவிதமான பயன்பாடுகளில் உள்ள செர்வர்கள் (server) லினக்ஸ் இயங்கு தளத்திலேயே செயல்படுகின்றன.
வன்பொருள் அனுசரிப்பு: லினக்ஸின் இன்னொரு சாதக அம்சம் அது பழைய பாகங்களைக் கொண்ட கணினிகளில் கூட செயல்படும். மற்ற இயங்கு தளங்கள் போலன்றி மிகக் குறைந்த நினைவகத்தையே பயன்படுத்திக் கொள்ளும். 11 எம்பி நினைவகத்தைக் கொண்ட லினக்ஸ் இயங்குதளம் கூட இருக்கிறது.
பன்முகத் தெரிவுகள் (multiple choices): நீங்கள் கணினியைப் பயன்படுத்தும் நோக்கத்திற்குத் தகுந்தபடி இயங்குதளம் கிடைக்கும். உதாரணத்திற்கு கல்விக்கான பயன்பாடு அதிகமென்றால் அதற்குப் பொருத்தமான இயங்கு தளம் இருக்கின்றது. இது போல லினக்ஸ் இயங்கு தளத்தில் நூற்றுக்கணக்கான வகைகள் இருக்கிறதென்றால், நமது டெஸ்க் டாப் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு Gnome, xfce, mate, cinnamon, kde என பல விதமான தெரிவுகள் உள்ளன. இந்த இரண்டும் பல கலவைகளில் இணைந்து உங்கள் தெரிவுகளை வண்ணமயமாக்கி விடும்.
பாதுகாப்பு: மற்ற இயங்குதளங்கள் போல உபயோகிப்பவர்களைப் பற்றிய தரவுகளை பயன்படுத்திக் கொள்வது என்பது லினக்ஸில் கிடையாது. அதேபோல் லினக்ஸ் இயங்குதளத்தின் நிரல்களின் உறுதித் தன்மையும், வெளிப்படைத் தன்மையும், தொடர்ச்சியான வளர் மாற்றமும் அதனை கணினி வைரஸ்களால் எளிதில் தாக்க முடியாததாக்கி விடுகிறது. எனவே வைரஸுக்கு எதிரான மென்பொருட்கள் எதுவும் லினக்ஸ் இயங்குதளத்திற்கு தேவைப்படுவதில்லை.
தொழில்நுட்பம்: அனைத்து விதமான நிரல் எழுதுபவர்களுக்கும் பொருத்தமான ஒரு இயங்கு தளம் லினக்ஸ். Python, C/C++, Java, Perl, Ruby போன்ற அனைத்து விதமான நிரல் மொழிகளையும் அது ஆதரிக்கின்றது.
விண்டோஸிற்கு ஒர் மாற்று
இப்போது நம் முன் ஒரு தெரிவு இருக்கிறது. ஒன்று முற்றுரிமையான இயங்குதளத்தை மட்டுமே இன்னும் சார்ந்து இருந்து, அதன் கட்டுப்பாடுகளுக்குள் மட்டுமே செயல்பட்டு, நமது தரவுகளை நமக்குத் தெரியாமலே இழந்து கொண்டிருக்கும் ஒரு சூழலில் நமது கணினி இயக்கத்தை வைத்திருப்பது, மற்றொன்று விலையில்லா இயங்குதளத்தினை ஆதரித்து, கட்டற்ற மென்பொருள் வளர்ச்சிக்கு பங்களித்து, சுதந்திரம் என்பதன் உண்மையான பொருளில் கணினியின் இயக்கத்தினை வைத்திருப்பது. முடிவை நாம்தான் எடுக்க வேண்டும்.
- இரா.ஆறுமுகம்,
உதவிப் பொது மேலாளர்,
தமிழ் நாடு செய்தித்தாள் காகித நிறுவனம்,
மணப்பாறை.
(நன்றி: லினக்ஸை எனக்கு அறிமுகம் செய்து வைத்த நண்பரும், கணித ஆசிரியருமான ஆத்தூர் திரு.முருகன் அவர்கள்)
- Facial Recognition தொழில்நுட்பமும் அதன் சர்ச்சைகளும்
- ஆன்லைன் தேர்வுகளை கண்காணிக்கும் Proctoring எனும் செயற்கை நுண்ணறிவு
- 'ZoomBombing' எனும் இணையதள வெறித்தனம்
- தகவல் தொழில்நுட்பத்தின் இதயம் - டேட்டா சென்டர்ஸ்
- எதிர்கால தகவல் தொழில்நுட்ப சந்தையை ஆக்கிரமிப்பு செய்யவிருக்கும் Quantum Computers
- அறிவியல் பிரச்சாரம் செய்வோம்...!
- இது யாரு பண்டிகூட்டா? - டிஜிட்டல் பெருச்சாளி
- நிறமுள்ள ஒளியால் வெண்ணிற ஒளியில் ஏற்படும் நிறமாற்றம்
- நுண் பாக்டீரியாக்களின் மூலம் கிராஃபைன் நானோ பொருட்கள் உற்பத்தி
- சூரிய மின்கலன் வெப்பத்தினால் நீரை சுத்தகரிக்கும் புதிய தொழில்நுட்பம்
- நீர்த்திவலையின் இயல்பை விளக்கும் புதிய அறிவியல் விதி
- கிலோகிராமின் வரையறை மாறுகிறது
- பாலினம் கண்டறியப்பட்ட விந்தணுக்கள்: எச்சரிக்கை தேவை
- கறவை மாட்டுப் பண்ணையத்தில் விந்தணுக்களின் பாலினம் கண்டறியும் தொழில்நுட்பம்
- பால் அருந்தாத வெர்கீஸ் குரியன் வெண்மை புரட்சியின் தந்தையாக உருவெடுத்த வரலாறு (1921-2012)
- கறவை மாட்டுப் பண்ணையத்தில் விந்தணுக்களின் பாலினம் கண்டறியும் தொழில்நுட்பம்: ஓர் அறிமுகம்
- பாலில் ஆக்ஸிடோசின் வர வாய்ப்புள்ளதா?
- ஈர்ப்பலைகள் – இயற்பியலுக்கான நோபல் பரிசு 2017
- கசிவு ரோபோ – நடமாடும் சுத்திகரிப்பு நிலையம் - நெகிழியில்லா நெகிழி
- பித்தாகரசு தேற்றமும் தொடுவானத்தின் தூரமும்