கீற்றில் தேட...
அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- சு.தளபதி
- பிரிவு: சுற்றுச்சூழல்
இந்தியாவின் குப்பைத் தொட்டி எங்கு உள்ளது என்ற கேள்விக்கு டெல்லிக்காரர்களின் ஆட்சி கை காட்டும் மாநிலம் தமிழ்நாடு என்பதுதான். ஏற்கனவே தமிழகம் முழுக்க பிரச்சனைகளின் உச்சத்தில் இருக்க கூடங்குளம், கெயில், மீத்தேன், ஆற்று மணல் கொள்ளை, தேரிக்காடு கடற்மண் கொள்ளை என இந்த வரிசையில் சமீபத்தில் வர இருப்பதுதான் தேவாரம் நியூட்ரினோ ஆய்வுக்கூடம். இது தமிழ்நாடு குப்பைத் தொட்டியாக ஆக்கப்படுவது மட்டுமல்ல தமிழ்நாட்டு மக்கள் பரிசோதனை எலிகளாகவும் மாற்றப்படவிருக்கிறார்கள் என்பதையே உறுதி செய்கிறது.
உள்நாட்டு, பன்னாட்டு முதலாளிகளின் சுரண்டல்களால் எல்லா இயற்கை வளங்களையும் பறிகொடுத்து நிற்கும் தமிழ்நாடு, இனிமேல் கூடங்குளம் அணு உலை போன்று தேவாரம் நியூட்ரினோ ஆய்வுக்கூட ஆபத்துக்களையும் தாங்க வேண்டிய நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது.
ஒருபுறம் அறிவாளிகள் இந்த ஆய்வகத்தால் எந்த துன்பமும் ஏற்படாது என்று வீதிவீதியாக, கல்லூரிகள் தோறும் கூவிக்கொண்டிருக்க மறுபுறம் அப்பாவிகளான ஏழை விவசாயிகள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இந்த ஆய்வகத்தை வரவிடமாட்டோம் என்று கொடி உயர்த்த பிரச்சனை உச்சக்கட்டத்தை எட்டியிருக்கிறது. இவ்வளவுக்கும் அரசின் தரப்பிலிருந்து ஒரு சிறிய அசைவுகூட இல்லை. ஆனால் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துள்ள சிபிஎம்மின் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நியூட்ரினோ ஆய்வகத்திற்கு ஆதரவாக களத்தில் குதித்துள்ளது. ஆய்வக கட்டுமானப் பணிகள் துரித கதியில் நடந்து கொண்டிருக்கின்றன. எதிர்ப்புப் போராட்டம் நடத்திய 12 பேர் மீது அரசை எதிர்த்து பொய் பிரச்சாரம் செய்ததாக வழக்குப் போட்டிருக்கிறது காவல் துறை.
என்ன நடக்கிறது தேவாரம் பொட்டிபுரத்தில்? நியூட்ரினோ ஆய்வகம் அமைவதில் என்ன பிரச்சனை?
தேவாரம்… பொட்டிபுரம்.. மேற்குத் தொடர்ச்சிமலை அடிவாரத்தில் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் அமைந்துள்ள சிறிய ஊர். வனப்பகுதிகள், சுருளியாறு மற்றும் சுருளி அருவி ஆகியவை இவ்வூரைச் சுற்றி உள்ளன. போடி நாயக்கனூர், கம்பம் அருகில் முற்றிலும் விவசாயத்தை சார்ந்து வாழும் மலைப்பாங்கான, ஏலம், கிராம்பு, தேயிலை, காப்பி முதலான பயிர்களின் உற்பத்தியில் முக்கிய பங்கை வகிக்கக் கூடிய பகுதி.
இந்தப் பகுதியில் ஒரு மலையின் அடிவாரத்தில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கலாம் என்று 2010ல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் அறிவுறுத்தலின் பேரில் அறிவியயல் ஆராய்ச்சியாளர்களும் அரசும் முடிவு செய்ததிலிருந்து இந்தப் பிரச்சனை தொடங்குகிறது. இந்த ஆய்வகம் தேவாரம் பகுதியின் சுற்றுச்சூழலை தலை கீழாகப் புரட்டிப் போட்டுவிடும் என அப்பகுதிவாழ் மக்களும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் குற்றம் சாட்ட, இல்லவே இல்லை. அப்படியெல்லாம் ஒன்றும் நடக்காது என்று ஆராய்ச்சியாளர்களும், அறிவியல் கழகத்தின் விஞ்ஞானிகளும் கற்பூரம் அணைத்துச் சத்தியம் செய்யாத குறையாக மறுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
அறிவியல்
உண்மையில் நியூட்ரினோ என்றால் என்ன?
இதற்கு விளக்கம் சொல்ல அடிப்படையிலிருந்தே வருவோம்.
இந்த உலகில் உள்ள அனைத்துப் பொருள்களும் அணுக்கள் எனப்படும் மிகச் சிறிய துகள்களால் ஆனவை. ஒரு பொருளை சிறியதாக பகுத்துக் கொண்டே போனால் அதற்கு மேல் (உடைத்து) பகுக்க முடியாததே அணுவாகும். இது 19ம் நூற்றாண்டு விஞ்ஞானிகளின் அணுக்கொள்கை. ஆனால் அதற்குப் பின் ரூதர்போர்டு போன்ற அறிவியலாளர்கள் அணுவையும் பகுக்க முடியும் என்றும், அந்த அணு வெளிப்புறம் எலக்ட்ரான்(-) என்ற துகள்களாலும் உட்கருவில் புரோட்டான் (+) மற்றும் நியூட்ரான் என்ற துகளாலும் ஆனது எனக் கண்டறிந்தனர்.
பின்னர் வந்த அறிவியலாளர்கள் அணுக்களைப் பிளப்பதன் மூலமோ அல்லது இணைப்பதின் மூலமோ மாபெரும் சக்தி உண்டாகிறது எனக் கண்டறிந்தனர். அந்த சக்தி எக்ஸ்ரே, புற்றுநோயை குணப்படுத்த உதவும் கதிர்கள். மின் தயாரிப்பு முதலிய ஆக்க வேலைகளுக்கும், அணு குண்டு, நியூட்ரான் குண்டு தயாரிப்பு முதலிய அழிவு வேலைகளுக்கும் பயன்படுத்தப்பட்டன.
1930ஆம் ஆண்டு உல்ப் கேங் என்ற அறிவியலாளர், அணுவில் புரோட்டான், எலக்ட்ரான், நியூட்ரான் என்ற துகள்கள் மட்டுமல்லாது வேறு சில துகள்களும் இருக்கலாம் என ஊகித்தறிந்தார். இத்தகைய துகள்களுக்கு நியூட்ரினோ எனப் பெயரிடப்பட்டது. பெயரிடப்பட்ட 26 ஆண்டுகள் கழித்து 1956ல் நியூட்ரினோ துகள் உண்மையில் இருப்பதாகக் கண்டறியப்பட்டது. அதன்பின் நியூட்ரினோ அறிவியல் குறித்தும் புதிய ஆராய்ச்சி முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த நியூட்ரினோ துகளின் வேகம் ஒளியின் வேகத்தை ஒத்திருப்பதாலும் இதன் எடை மிகக் குறைவாகவும், இதன் வினையாற்றல் திறன் மிகவும் குறைவாக இருப்பதாலும், ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மிக வேகமாக ஊடுருவிச் செல்லும் என்று கண்டறியப்பட்டது. இன்னும் சொல்லப்போனால் பூமியின் ஒருபுறம் ஊடுருவும் இந்த நியூட்ரினோ துகள் எந்தப் பாதிப்புமின்றி மறுபுறம் வெளிவரத்தக்கது என்பதுவும் கண்டறியப்பட்டது.
பூமிக்கடியில் குறைந்த பட்சம் 2 கிலோ மீட்டர் ஆழத்தில் ஆய்வுக்கூடம் அமைக்கப்பட்டால் மற்ற துகள்களை வடிகட்டி இந்த நியூட்ரினோவை மட்டும் கண்டறிய முடியும்.
இத்தகைய சிறப்புத் தன்மைகள் கொண்ட நியூட்ரினோ துகளை மனித சக்திக்குள் வசப்படுத்த முடியுமா? என்ற நோக்கத்தில் குறைந்தபட்சம் அவற்றைக் கண்டுணர்ந்து, அவற்றின் பண்புகளை ஆராய முடியுமா என்ற ஆய்வுகளே தற்போது உலகெங்கும் நடந்து வருகின்றன. இந்த முயற்சியில் குறிப்பிடத்தக்க வெற்றி இதுவரை மனித குலத்திற்கு கிடைக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இத்தகைய ஒரு ஆய்வுக்கூடம் தான் தேவாரம் பகுதியில் அமைப்பதற்கான ஏற்பாட்டில் இருக்கிறது அரசு. அங்கு சூரிய ஒளியிலிருந்து வரும் காஸ்மிக் கதிர்களின் அணுக்களை பிளந்து அவற்றிலிருந்து வரக்கூடிய நியூட்ரினோ துகள்களை பூமிக்கடியில் உள்ள மின்காந்த ஏற்பிகள் மூலம் கண்டறிவதே இந்த ஆய்வகத்தின் செயல்பாடு.
சரி அதிலென்ன பிரச்சினை? அறிவியல் வளர்வதிலோ, ஆய்வகம் அமைப்பதிலோ, ஆராய்ச்சிகள் நடப்பதிலோ நமக்கு எதிர்க்கருத்து இல்லை. ஆனால் அந்த ஆராய்ச்சிக் கூடம் பூமியின் மேற்பகுதியிலிருந்து 2 கிலோ மீட்டர் ஆழத்தில் அமைக்கப்பட வேண்டும் என்பதில் தான் பிரச்சினை உருவாகிறது. இந்த நியூட்ரினோ ஆய்வுக்கூடம் அமைக்க தேவாரம் பகுதியில் உள்ள மலையைப் பக்கவாட்டில் கிட்டத்தட்ட 2 கிலோ மீட்டர் தொலைவிற்குக் குடைந்து ஒரு சுரங்கம் ஏற்படுத்தி அதற்குள் இதற்கான கருவிகளை அமைக்க ஏற்பாடுகள் நடக்கின்றன.
இதற்காக அமைக்கப்பட்ட ஒரு குழு INO (India based neutrino observatory) (ஆதாரம் : Indian based neutrino observatory, FAQ MINO, www. imsc.ves.in/ino/faq/ino.info.pdf)
இவ்வாறு மலையைக் குடைந்து சுரங்கம் உருவாக்கி அதில் ஆய்வுக்கூடம் அமைக்க வடக்கே இமயமலையில் டார்ஜிலிங், மணாலி, ரோத்தால் ஆகிய இடங்களில் திட்டமிடப்பட்டு பின் நீலகிரிக்கு தள்ளப்பட்டு அங்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் கடுமையான எதிர்ப்புக்குப் பின் சுருளிக்கு விரட்டப்பட்டு அங்கும் வனத்துறை எதிர்ப்புக்குப் பின் தேவாரம் பகுதிக்கு தள்ளப்பட்டுள்ளது.
1965ல் இம்மாதிரியான ஆய்வுகள் கோலார் தங்கவயலில் ஏற்கனவே தோண்டப்பட்ட சுரங்கத்தில் வைத்து நடத்தப்பட்டன. பின் சுரங்கம் மூடப்பட்ட பின் அப்படியே நின்று போய்விட்டன (project report – www.imsc.ves.in/ino Open report - interim report pdf)
உலகில் இது போன்ற ஆய்வுக்கூடங்கள் இந்தியா தவிர கனடா, அமெரிக்கா, ஜப்பான், இத்தாலி முதலிய இடங்களில் அமைந்துள்ளன. இவற்றில் கனடா, அமெரிக்காவில் ஏற்கனவே தோண்டப்பட்ட சுரங்கங்களைப் பயன்படுத்தினர். ஜப்பான், இத்தாலியில் பாலை மற்றும் மனித நடமாட்டமற்ற வனப்பகுதிகளைப் பயன்படுத்தினர்.
இந்த ஆய்வரங்கம் அமைவதில் மக்களுக்கு என்ன இடர்ப்பாடு ஏற்படும் என்பதை அறிய, அதன் கட்டுமானத்திட்டத்தை ஒருமுறை நாம் உற்று நோக்கினால் போதுமானது.
ஆய்வுக்கூட கட்டுமானத்திட்டம்
சுரங்கத்தின் விட்டம் - 20 அடி முதல் 100 அடி வரை
சுரங்கத்தின் நீளம் - 2 கிலோ மீட்டர்.
அறிவியல் கருவிகள் எடை - 50,000 டன் இரும்பு, மின் காந்தம். (உலகில் உள்ள மின்காந்த ஏற்பிகளில் இதுவே மிகப் பெரியதும் எடை அதிகமானதும் ஆகும்.)
வெட்டி எடுக்கப்படும் பாறைகளின் அளவு – 2,25,000 கன மீட்டர் அதாவது 7,50,000 கன அடி
தேவைப்படும் நீர் - ஒரு நாளைக்கு 3,50,000 காலன்கள்
மின்சாரத் தேவை – அறிவிக்கப்படவில்லை.
இக்கட்டுமானத்திற்குத் தேவையான சிமிண்ட், மணல் சுமார் - 37,000 டன்.
இந்த ஆய்வகத்திற்கான நீர்த்தேவை 30 கி.மீ. தள்ளியள்ள சுருளி ஆற்றிலிருந்து (முல்லைப் பெரியாறு) எடுத்து நிறைவு செய்யப்படும்.
இவை போக இந்தக் கட்டுமானப் பொருள்களை ஏற்றிச் செல்வதற்காக சுமார் 160 கனரக வாகனங்கள் அருகில் உள்ள ரயில் நிலையத்திலிருந்து தேவாரம் நகருக்குள் வந்து போக வேண்டும். வெட்டி எடுக்கப்பட்ட பாறைகள் நீண்ட நாள் அடிப்படையில் இந்தப் பகுதியை விட்டு வெளியேற்றப்படும். அதுவரை இப்பகுதியிலேயே அவை இருக்கும்.
ஆய்வுக் கூடத்தின் உள்ளே கதிரியக்கம் உருவாக்கக்கூடிய கனிமங்கள் ஏதும் இல்லை என்று சொல்லப்பட்டாலும் ஹீலியம், ஆர்கான் போன்ற எளிதில் தீப்பற்றக் கூடிய அபாயமான வளிகள் பயன்படுத்தப்படும்.
பக்கத்துவீட்டில் 6 அங்குல (அரை அடி) விட்ட போர் போடப்படும் போது ஏற்படும் அதிர்வால் நம்மால் தூங்க முடிவதில்லை என்பது நடைமுறை. ஆனால் இத்தகைய பெரிய கட்டுமானத்தால் எந்தவித சுற்றுச்சூழல் மாசுபடுதலோ, இடர்ப்பாடுகளோ அப்பகுதி மக்களுக்கு ஏற்படாது என்று அடித்துச் சொல்கிறார்கள் அறிவியலாளர்கள்.
நியூட்ரினோ ஆய்வுக்கூடத்தை நாம் ஏன் எதிர்க்கிறோம்.
கட்டுமானப் பணிகளின் போது:
காரணி 1 : சுற்றுச் சூழல் சீர்கேடு
இரண்டு கிலோ மீட்டர் தூரம் சுரங்கத்திற்காக பாறைகள் வெட்டி எடுக்கப்படும் போது ஏற்படும் தூசு, சுற்றுச் சூழல் மாசு. அதனால் ஏற்படும் அதிர்வுகள். இச்சுரங்கம் தோண்டுவதற்கு 1000 டன் ஜெலட்டின் வெடிபொருள் பயன்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் ஏற்படும் விளைவுகள்.
வெடி வைக்கப்படும் போது மிக அருகில் உள்ள இடுக்கி அணை மற்றும் பெரியாறு அணையில் ஏற்படும் விளைவுகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை.
இந்த ஆய்வகத்தை நிறுவ 37000 டன் சிமெண்ட் பயன்படுத்தப்பட இருக்கிறது. இதனால் ஏற்படும் சூழல் சீர்கேடு இந்த கட்டுமானப் பொருள்களை ஏற்றி இறக்கச் செல்லும் சுமார் 160 கனரக வாகனங்கள் ஏற்படுத்தும் ஒலி மாசு மற்றும் தூசு.
ஏற்கனவே நீலகிரிப் பகுதியில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் ஆய்வுக்கூடம் அமைப்பதை எதிர்த்ததின் காரணங்கள் அப்படியே தேவாரம் பகுதிக்கும் பொருந்தும்.
நீலகிரியைப் போலவே தேவாரம் பகுதியும் வனச்செறிவான பகுதியாகும். வன விலங்குகளான யானை, சிறுத்தை, மான், வரையாடு, காட்டுப் பன்றிகள் ஆகியவற்றின் உயிர்ச்சுழற்சி இதனால் பாதிக்கப்படும்.
காட்டு வளங்கள், மூலிகை வளங்கள், ஏல விவசாயம், அவற்றிற்கான நீராதாரங்கள் ஆகியவை பாதிப்பிற்குள்ளாகும்.
காரணி-2: நிலநடுக்கப்பகுதி
தேனி மாவட்டம் நிலநடுக்க வட்டத்திற்குள் இருக்கும் பகுதி. பொட்டிபுரம் மலை மேற்குத் தொடர்ச்சிமலையின் பிரிவு. ஏற்கனவே நூற்றுபத்து ஆண்டு பழமையான முல்லைப்பெரியாறு அணை நிலநடுக்கம் வந்து இடியும் என்று கேரளம் வாதாடிக் கொண்டிருக்க இச்சுரங்கம் அமையும் பகுதியில் நிலநடுக்கம் ஏற்படாது என்று ஐ.என்.ஒ. குழு அடித்துச் சொல்கிறது.
30 கிலோ மீட்டர் தொலைவில் இடுக்கி அணையும், முல்லைப் பெரியாறு அணையும் இருக்க இவ்வளவு பெரிய சுரங்கத் துளை அமைப்பதால் என்னென்ன இடர்கள் ஏற்படும் என்ற கேள்வி நமக்கும் எழுகிறது.
காரணி-3: நீரியல் பூகம்பம்
பெரிய பரப்பில் 7,50,000 கன அடி பாறைகள் பெயர்த்தெடுக்கப்படும்போது இப்பகுதியில் உள்ள நீர் அடுக்குப் பகுதிகள் நிலைகுலைந்து நீரியல் பூகம்பம் ஏற்படும் ஆபத்து உள்ளது என பல அறிவியலாளர்கள் எடுத்துக் கூறியுள்ளனர்.
இதற்கு முன் உதாரணமாக இத்தாலியின் இரன்காசோ ஆய்வகம், அப்பகுதியிலுள்ள நீரடுக்குகளை நிலைகுலையச் செய்து அப்பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறையும், நீர் மாசுபடும் நிலையையும் ஏற்படுத்தியது.
கட்டுமானம் முடிவடைந்தபின்
காரணி-4: நீர்ப்பயன்பாடு
இந்த ஆய்வுக்கூடத்திற்கு தினமும் 16 லட்சம் லிட்டர் தண்ணீர் பயன்படுத்தப்பட இருக்கிறது. சுருளி மற்றும் முல்லைப் பெரியாற்றிலிருந்து வரும் சொற்ப தண்ணீரையும் இவர்கள் உறிஞ்சிக் கொண்டால் மக்களுக்கு குடிதண்ணீருக்கும், விவசாயத்திற்கும் எங்கு போக?
காரணி-5: கதிரியக்கம்
எதிர்காலத்தில் அமெரிக்காவிலிருந்தும், சப்பானிலிருந்தும் செயற்கை நியூட்ரினோ கற்றைகள் இந்த ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு பரிசோதிக்கப்படும்.
இயற்கையான நியூட்ரினோக்களைவிட பன்மடங்கு அதிகமான ஆற்றலைக் கொண்ட இந்த செயற்கை நியூட்ரினோக்கள் மாபெரும் கதிர்வீச்சு அபாயமுடையவை. இவற்றை தேவாரத்திற்கு அனுப்பி வைக்கும்போது நிகழும் பாதிப்புகளுக்கு தேவாரம் மக்கள்தான் பலிகடாவா?
காரணி-6: அணுக்கழிவு புதைப்பு
இவையெல்லாம் போக இந்திய அணு உலைகளின் அணுக்கழிவுகளை இங்க பெற்று சேகரப்படுத்தும் வாய்ப்பும் இருக்கிறது என்பதையும் மறுக்க முடியாது. ஏற்கனவே இந்த ஆய்வகத்திற்கு தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் அனுமதி கோரிய போது அணுக்கழிவு மேலாண்மை என்றுதான் அனுமதி கேட்டுள்ளனர் எனபது இங்கு குறிப்பிடத்தக்கது.
காரணி-7: மக்கள் வாழ்க்கை முடக்கம்
ஆய்வுக்கூடம் அணு ஆய்வகமாக இருப்பதால் பாதுகாப்பிற்காக என்ற பெயரில், மக்களின் சுதந்திர நடமாட்டம் முடக்கப்பட்டு அவர்கள் வாழ்க்கை முறை முடமாக்கப்படும். இந்த ஆய்வுப்பணி வெற்றிபெற்றால் எதிர்காலத்தில் மேலும் 4 முதல் 5 கி.மீ. இந்தச் சுரங்கம் ஆழப்படுத்தப்படலாம். அதனால் ஏற்படும் இடர்ப்பாடுகளை மறுபடியும் மக்கள் எதிர்நோக்க வேண்டி வரும்.
இப்படி இவ்வளவு இடர்ப்பாடுகளை தேவாரம் பொட்டிபுரத்து மக்கள் ஏன் எதிர்கொள்ள வேண்டுமென்றால் அதற்கும் பதில் வைத்திருக்கிறார்கள் அறிவாளிகள். இந்தியாவின் விஞ்ஞான வளர்ச்சிக்கு சில தியாகங்களை மக்கள் செய்யத்தான் வேண்டுமாம். ஆனால் அதுவும் உண்மையில்லை என்று அறிய வரும் போதுதான் வேதனை பலமடங்கு அதிகரிக்கிறது.
உண்மையில் இது இந்தியாவின் சுதேசித்திட்டம் அல்ல. Indian Neutrino Observatory அல்ல. India based Neutrino observatory. அதாவது அமெரிக்காவின் நியூட்ரினோ ஆய்வகமான பெர்மி லேப் (Fermi lab) நிறுவனத்தின் சோதனைகளுக்கு உதவி செய்யும் ஓர் உணர் ஆய்வகம். இங்கு அமெரிக்கா மட்டுமின்றி ஜப்பான், இத்தாலி போன்ற நாடுகளின் ஆய்வுக் கூடங்களிலிருந்து நியூட்ரினோ கற்றைகள் தேவாரத்திற்கு அனுப்பப்படும் இந்த உண்மைகளை மறைக்கும் அறிவாளிகள் தம் சொந்த மக்களை பன்னாட்டு பரிசோதனைகளுக்கு பலி கொடுக்கத் துடிக்கிறார்கள்.
அறிவியல் எல்லாரும் வரவேற்கும் ஒரு துறைதான். யாரும் அறிவியலுக்கு எதிரிகள் அல்ல. ஆனால் அந்த அறிவியலின் பெயரால் நாட்டை அன்னியருக்கு விற்கும், மக்களை பரிசோதனை எலிகளாக மாற்றும் ஒரு திட்டத்தை ஒரு போதும் நாம் ஒப்புக்கொள்ள முடியாது.
சரி, இந்த ஆய்வகம் அந்தப் பகுதியில் அமைவதால் மக்களுக்கு ஏதேனும் பயன் கிடைக்குமா என்ற கேள்விக்கும் அவர்களே பதில் தருகிறார்கள்.
இதனால் மொத்தமே 20 முதல் 200 வரையிலான பேர்கள் அங்கு வேலை செய்வார்கள். அதிகமான வேலைவாய்ப்பு கிடைக்காது, வேண்டுமானால் கட்டுமானப் பணிக்கான கூலிகளாக முதல் நான்கு ஆண்டுகளுக்கு சிலருக்கு வேலை கிடைக்கலாம்.
மனித குலத்திற்கு இதுவரை எந்தப் பயனும் தராத, இந்த ஆய்வுப்பணி, தற்போது இந்தியா எதிர் நோக்கியுள்ள பொருளாதாரப் பின்னடைவுகளின் மத்தியில் சுமார் ஆயிரத்து நானூறு கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெறுவதாக அறிகிறோம். 65 சதவீதத்திற்கும் மேற்பட்ட மக்கள் ஒரு வேளை உணவுடன் வறுமைக்கோட்டிற்குக் கீழே துன்புறும் ஒரு நாட்டில் இத்தகைய தெரியாத ஊருக்குப் போகாத பாதை அவசியமா என்பது சிந்திக்கத்தக்கது.
மேலும் உள்@ர்வாசிகளுக்கு எந்தப்பயனும் அளிக்காத ஒரு திட்டத்திற்காக இவ்வளவு இடர்ப்பாடுகளை மக்கள் ஏன் தாங்க வேண்டும் என்ற கேள்வியும் நம் முன் எழுகிறது.
இந்த ஆராய்ச்சியை டாட்டா அடிப்படை ஆய்வகம் (TATA Institue of Fundamental research (TIFR), பாபா அணு ஆராய்ச்சி நிலையம், ஐஐடி சென்னை, ஐ.ஐ.டி. மும்பை, இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி நிலையம் கல்பாக்கம் உட்பட 7 முதல்நிலை நிறுவனங்கள் மற்றும் 13 பங்கு நிறுவனங்கள் நடத்த உள்ளன. குளிரூட்டப்பட்ட அறையில் கணிணி முன் அமர்ந்து நுனி நாக்கு ஆங்கிலத்தில் விவாதம் செய்யும் அந்த அறிவாளிகளுக்கு தேவாரம் மலையில் ஆடு, மாடு மேய்த்து வயிற்றைக் கழுவிக்கொண்டிருக்கும் வறிய படிக்காத அப்பாவிகளின் வாழ்க்கையின் வலி எப்படிப் புரியும்?
அறிவியலின் எதிர் வினைகளை ஏற்கெனவே இரஷ்யாவின் செர்னோபில் அணு உலையிலும், போபாலில் விஷவாயு விபத்திலும் ஜப்பான் இரோசிமா, நாகசாகியிலும், புகுசிமா அணு உலை விபத்திலும் நாம் போதுமான அளவு பார்த்தாகிவிட்டது.
காவிரிப் பிரச்சனையைக் கண்டு கொள்ளாத, சேதுசமுத்திரத்திட்டத்தை கிடப்பில் போட்ட, ஈழத்தமிழரை எதிரியாய் நடத்திய, மலட்டுக் கத்தரிக்காயை விவாசாயிகள் தலையில் கட்ட துடிக்கிற, விவசாயிகளின் தற்கொலையைத் தடுக்கத் துணியாத, முல்லைபெரியாற்றில் துரோகத்திற்கு துணை போகிற, மீன் வளத்தை முதலாளிகளுக்கு விற்கத் துடிக்கின்ற, நாட்டையே சுரண்டல் முதலாளகளுக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் பங்கு போடத் துடிக்கின்ற, ஓர் அரசு, இந்த நியூட்ரினோ ஆய்வகத்திட்டத்தில் காட்டும் ஆர்வத்தை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.
மக்களுக்கு துன்பங்களை மட்டுமே திட்டமிடும் ஓர் அரசு எப்படி அல்லது இன்னும் எவ்வளவு காலத்திற்கு இந்த மக்களின் அரசாக இருக்க முடியும்?
அறிவாளிகள் ஆயிரம் சமாதானம் சொன்னாலும் துயர்களை வாழ்வில் எதிர் கொள்ளப் போவது அப்பாவிகள் தான்.
நம் கடமை அந்த அறிவாளிகளின் பிடியிலிருந்து அப்பாவி மக்களைக் காப்பாற்றுவது மட்டுமே.
ஏனெனில் அறிவாளிகளுக்கோ இது இன்னுமொரு ஆராய்ச்சி. ஆனால் அப்பாவி மக்களுக்கோ இது தான் வாழ்க்கை. இங்கு தான் வாழ்க்கை.
- மதுரை சு.தளபதி
- விவரங்கள்
- மு.வெற்றிச் செல்வன்
- பிரிவு: சுற்றுச்சூழல்
கல்பாக்கம், கூடங்குளம் அணுவுலைகள், மீத்தேன் கெய்ல் திட்டம் இவற்றினைத் தொடர்ந்து தமிழகத்திற்கு வந்திருக்கும் புதிய தலைவலி தான் “இந்திய நியூட்ரினோ ஆய்வகத் திட்டம்”. 2011ம் ஆண்டில் இந்த நியூட்ரினோ திட்டத்திற்கான சுற்றுச்சூழல் அனுமதியினை (Environmental Clearance) அப்போதைய காங்கிரஸ் அரசு வழங்கியது. அதற்கு சற்றும் சளைக்காத மோடி அரசு, தற்பொழுது (05.01.2015) இத்திட்டத்திற்கான ஒப்புதலை அளித்ததோடு மட்டுமில்லாது, 1,500 கோடி ரூபாய்களை அள்ளி வழங்கியுள்ளது.
மேலும், நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க சுமார் 6,00,000 டன் பாறைகள் வெடிவைத்து தகர்க்கப்பட உள்ளதாக இத்திட்டத்தின் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளார்கள். எந்த ஒரு திட்டத்திற்கும் சுற்றுச்சூழல் அனுமதி வழங்கும் முன் அந்த திட்டத்தினால் சுற்றுச்சூழல் மற்றும் சமூகத்திற்கு உண்டாகும் பாதிப்புகள் ஆராயப்பட வேண்டும் என்பது சட்டம். இப்படி பாறைகளை வெடிவைத்து தகர்ப்பதால் உண்டாகும் சூழலியல் பாதிப்புகள் குறித்தும், அவ்விடத்திற்கு அருகில் உள்ள நீர்நிலைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் எவ்வித ஆய்வுகளையும் மேற்கொள்ள இந்த அரசுகள் விரும்பவில்லை.
மேற்கு தொடர்ச்சி மலை தான் பல நீர்நிலைக்கு அடிப்படையாக உள்ளது. மேலும் தென்னக நதிகளுக்கும் இதுவே ஆதாரமாக உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைகளில் சூழலியலுக்கு கேடு விளைவிக்கும் புதிய திட்டங்கள் அனுமதிக்க கூடாது என்று மத்திய அரசால் அமைக்கப்பட்ட காட்கில் குழுவும், கஸ்தூரிரங்கன் குழுவும் கூறியுள்ளன. ஆனால், நமது அரசிற்கு பசுமை மிகுந்த அவ்விடம் தான் மிகவும் பிடித்துள்ளது போலும்.
இப்படி விதிமுறைகளை மீறி கொண்டுவரப்படும் இத்திட்டத்திற்கு எதிராக வலுவான குரல் பதியப்பட வேண்டும். அதற்கான ஒரு சிறு முயற்சியாக, ”பூவுலகின் நண்பர்கள்” அமைப்பு சார்பாக பசுமைத்தீர்ப்பாயத்தின் கீழ், ”மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சம்” விதிமுறைகள் மீறி நீயூட்ரினோ ஆய்வகத் திட்டத்திற்கு வழங்கிய சுற்றுச்சூழல் அனுமதியினை எதிர்த்து வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
நியூட்ரினோ திட்டத்தின் மூலம் நியூட்ரினோவை இயற்கை மற்றும் செயற்கை என இருவழிகளில் ஆரயவுள்ளார்கள். இயற்கையாக நியூட்ரினோவை ஆராய்வதில் பெரும்பாதிப்பு இருப்பதாக கருதப்படவில்லை. ஆனால், செயற்கையாக ஆராய்வது எத்திட்டமாய் இருந்தாலும் சூழலியல் பாதிப்பிற்குரியது. இதில் நியூட்ரினோ என்ன விதிவிலக்கா?
நியூட்ரினோ திட்டத்தில் வெளிநாட்டு விஞ்ஞானிகளின் பங்கு பெருமளவில் உள்ளது என்பதை அத்திட்ட ஆய்வறிக்கையே கூறுகிறது. இது எவ்விதத்தில் உள்நாட்டு பாதுகாப்புக்கு உகந்தது எனும் கேள்வி எழுகிறது. மேலும், அமெரிக்காவின் பெர்மி ஆய்வகத்துடன் இந்தியா 2003 ஆம் ஆண்டிலிருந்தே பல ஒப்பந்தகளை மேற்கொண்டு வருகின்றது. அதில் நியூட்ரினோ திட்டமும் ஒன்று. மேலும், இத்திட்டத்திற்கு அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஐரோப்பா ஆய்வுக்கூடங்களிலிருந்து செயற்கை நியூட்ரினோ கதிர்களை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தொகுதியான தேனி மாவட்டத்திற்கு அனுப்பப்போகிறார்கள். 7000 கிலோமீட்டர் பயணிக்கும் இந்த செயற்கை நியூட்ரினோ, எவ்விதத்தில் பாதுகாப்பிற்கு உரியது என்னும் கேள்வியும் எழுகின்றது. இப்படி செயற்கை நியூட்ரினோ பயணிப்பது எத்தகைய பாதிப்புகளை உருவாக்கும் என்னும் ஆய்வினைக் கூட இவர்கள் செய்யவில்லை. செயற்கை நியூட்ரினோ ஆபத்திற்குரிய துகள் எனக் கருதப்படும் நிலையில், இந்த நியூட்ரினோவின் பயணம் இறுதியில் தமிழகத்திற்கு எத்தகைய பாதிப்புகளை உருவாக்கும் என்னும் ஆய்வினையாவது குறைந்தபட்சம் இந்திய அரசு மேற்கொண்டிருக்கலாம்.
வழக்கம்போல் கம்யூனிஸ்ட் கட்சிகளும் இத்திட்டத்தை ஆதரிக்கின்றனர். எப்படி கூடங்குளம் திட்டத்திற்கு முழு ஆதரவை அளித்து, மக்கள் எழுச்சிக்குப் பின், தங்கள் நிலைப்பாட்டினை மாற்றிக்கொண்டார்களோ, அப்படியே அவர்கள் இந்நிலைப்பாட்டினை மாற்றிக்கொள்ளும் காலமும் வரும்.
நியூட்ரினோ துகள்களைக் கொண்டு அணு உலைகளில் உள்ள ப்ளுட்டோனியத்தின் அளவை கணக்கிட முடியும் என்றும் கூறப்படுகிறது. அமெரிக்க பெரியண்ணனுக்கு இத்தகைய துகள் நிச்சயம் தேவை. இதில் இந்தியாவும் தன் பங்கை செலுத்த நினைக்கிறது. வாழ்க உலக அமைதி.
- விவரங்கள்
- முகிலன்
- பிரிவு: சுற்றுச்சூழல்
வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை சிட்கோ தோல் கழிவு பொது சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள ஒரு கழிவுநீர்த் தொட்டி கடந்த 30.01.2015 அன்று இரவு உடைந்தது. இந்த விபத்தில் 10 பேர் பலியாகியுள்ளனர். இல்லை, இல்லை, படுகொலை செய்யப்பட்டு உள்ளனர்.
இதே போல் கடந்த 18.03.2014 அன்று ஈரோடை மாவட்டம் பெருந்துறை தொழிற்பேட்டையில், சாய ஆலை கழிவுநீரை தூய்மைப்படுத்தும் ஆலையில் உள்ள தூய்மைப்படுத்தும் தொட்டியில் உள்ள குழாய் வாழ்வில் பழுது ஏற்பட்டதை சரிசெய்ய முயன்ற ஏழு தொழிலாளர்கள் கழிவுநீர்க் குழாய் மூலம் வெளியேறிய நச்சுவளியால் இறந்துள்ளனர். இல்லை, படுகொலை செய்யப்பட்டு உள்ளனர்.
இதுபோன்ற சாவுகள் (படுகொலைகள்) நடைபெறுவது இது முதல்முறையல்ல, ஏற்கனவே தமிழகத்தில் இதுபோல் பலமுறை நடந்துள்ளது. ஈரோடை மாவட்டத்தில் மட்டும் கடந்த சில ஆண்டுகளில் மட்டும் சாய ஆலை மற்றும் தோல் தொழிற்சாலைகளில் மட்டும் 100 பேர் வரை இறந்துள்ளனர்.
ஒருவர் இருவர் என சாவு இருந்தால் வெளியே தெரியாமலேயே மறைந்து விடுவதும், இடர்தொகை என்ற பெயரில் ஏதோ சிறிது தொகை கொடுத்து செய்தியே தெரியாமல் மறைத்து வருகின்றனர், இப்படுகொலை செய்யும் நிறுவனங்களின் உரிமையாளர்கள்.
இறப்புக்கு உள்ளான பலரும் வடமாநிலங்களைச் சார்ந்தவர்களாகவும் மற்றும் வெளி மாவட்டம் சார்ந்தவர்களாகவும் இருப்பதாலும், இவர்களுக்கான தொழிலாளர் அமைப்புகளும் வலுவாக இல்லாமல் இருப்பதாலும் இப்படுகொலைகள் யாரும் கேட்பாரின்றி இன்றுவரை தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் தமிழகமெங்கும் தோல் ஆலை, சாய ஆலை உட்பட பல்வேறு மிகப்பெரிய தொழில் நிறுவனங்களில் மட்டும் விசவாயு (நச்சுவளி) தாக்கி 800 பேர் கொல்லப்பட்டு உள்ளதாக ஒரு பட்டியல் தெரிவிக்கிறது.
நம் தாய் தமிழ்நாட்டில் ஏன் இந்த நிலை என நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டியுள்ளது.
மனிதன் எப்போது விலங்குகளை வேட்டையாடத் தொடங்கினானோ, அப்போது முதல் விலங்கின் இறைச்சியினை உணவாக உண்டுவிட்டு, தோலைப் பதப்படுத்தி, தனது பல்வேறு தேவைகளுக்குப் பயன்படுத்தி வந்தான்.
ஈரோடையில் இன்று செயல்பட்டு வரும் தோல் தொழிற்சாலைகள், 1990களுக்கு முன்பு தோலைப் பதப்படுத்த ஆவாரம்பட்டை, கடுக்காய் கொட்டை, பெருநெல்லி கொட்டை, சுண்ணாம்புக்கல் ஆகியவற்றை முதன்மையாக வைத்தே பயன்படுத்தினார்கள். இந்த முறையில் தோலைப் பதப்படுத்த 40 நாட்கள் வரை தேவைப்படும்.
தோலைப் பதப்படுத்திய பிறகு வரக்கூடிய கழிவுகள், வேளாண்மைக்கு எருவாக பயன்படுத்தப்பட்டு வந்தது.
'ஒன்றின் கழிவு மற்றொன்றின் உணவு' என்ற உணவு சுழற்சியாக உழவர்கள், தோல் கழிவுகளை எடுத்துச் சென்று தங்களது காட்டில், தோட்டத்தில் உள்ள மரங்களைச் சுற்றி எருவாக போடுவார்கள். தென்னை உட்பட அனைத்து மரங்களிலும் காய்பிடிப்பு (காய்ப்பு) மிக நன்றாக இருக்கும்.
ஆனால் இன்று ராணிப் பேட்டையில் தமிழக அரசால் மூடப்பட்ட தொழிற்சாலைகளில் மட்டும் சுமார் 1.30 லட்சம் டன் குரோமியக் கழிவு உள்ளது. மாவட்டத்தில் உள்ள பொதுக் கழிவு சுத்திகரிப்பு நிலையங்களில் பல ஆயிரம் டன் எடையுள்ள கழிவுகள் உள்ளன. இவற்றை அப்புறப்படுத்துவது எப்படி என்று தெரியாமல் மத்திய, மாநில மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் திணறி வருகின்றனர் என்பதுதான் எதார்த்தமான உண்மை.
வேலூர் மாவட்டத்தில் தோல் கழிவால் ஏற்படும் பாதிப்பைத் தவிர்க்க சுற்றுச்சூழல் மறு சீரமைப்புப் பணி தொடங்க வேண்டும் என கடந்த 2003-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை மாவட்ட நிர்வாகம் இதுவரை நடைமுறைப் படுத்தவில்லை. மாவட்ட நிர்வாகத்தின், மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின், அதன் காசுக்கு விலை போன அதிகாரிகளின் அலட்சியமே உண்மையில் விபத்துக்குக் காரணம்.
கழிவுநீர் சாக்கடையான நொய்யல் ஆறு
சாயத்தொழில், துணிகளுக்கு சாயம் ஏற்றுவது என்பது பல்லாயிரம் ஆண்டுகளாக நடைபெற்று வரும் தொழில்களாகும். ஆனால் 1990 வரை சாயப்பட்டறை கழிவுகளால், மனிதர்களுக்கு எவ்வித இடரும் ஏற்பட்டது இல்லை. நீர்நிலைகள் நாசமானது இல்லை. விவசாய விளைநிலங்கள் பாதிக்கப்பட்டது இல்லை. ஆறுகள், குளங்கள், ஏரிகள் செத்துப் போனது இல்லை. ஏனெனில் அப்பொழுதெல்லாம் சாயத்தொழிலுக்கு மரபு சார்ந்த பொருட்கள் குறிப்பாக மஞ்சள் போன்றவற்றை வைத்து பயன்படுத்தப்பட்டது. வேதியியல்(ரசாயனம்) வைத்து உருவாக்கப்பட்ட சாயப் பொருட்கள் பயன்பாடு என்பது அறவே இல்லை.
5000 ஆண்டுகளுக்கு மேலான நீண்ட, நெடிய நாகரீகத்திற்கு சொந்தக்காரர்கள் ஆன இயற்கையோடு இயைந்து வாழ்ந்த தமிழ்மக்கள், இயற்கையை கடவுளாக வணங்கும் தமிழகம் இன்று வெளிநாட்டுக் கழிவுகளின் குப்பைத் தொட்டியாக மாற்றப்பட்டுள்ளது.
1990ஆம் ஆண்டுகளில் கொண்டு வரப்பட்ட இந்திய ஒன்றிய அரசின் புதிய பொருளியல் கொள்கை என்ற பெயரால் போடப்பட்ட GATT (காட்) ஒப்பந்தப்படி கட்டற்ற முறையில் பன்னாட்டு நிறுவனங்களின் கொள்ளைக்காக நாடு திறந்து விடப்பட்டது.
இதன் விளைவாக சாய மற்றும் தோல் தொழிற்சாலைகளில் உள்நாட்டு தேவைக்கான உற்பத்தி என்பது மாற்றப்பட்டு ஏற்றுமதிக்கான உற்பத்தி என்பது முதன்மையாக மாற்றப்பட்டது. விரைவான உற்பத்திக்காக தோல் தொழிற்சாலைகளிலும், சாயத்தொழிலிலும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய வேதியியல் பொருட்களைப் பயன்படுத்தத் தொடங்கினர். இதன் விளைவாக இன்று எண்ணற்ற பாதிப்புகளை நாம் சந்தித்து வருகிறோம்.
திருப்பூர் சாயஆலைக் கழிவுகளால் வரலாற்றுப் புகழ்பெற்ற காவிரியின் துணைஆறான நொய்யல் ஆறு செத்தே போய் விட்டது. நொய்யல் ஆற்றின் குறுக்கே 1992ல் கட்டி முடிக்கப்பட்ட ஒரத்துப் பாளையம் அணையில் சாய ஆலையின் கழிவுநீர் தேங்கியது. இதனால் அணையில் இருந்து வாய்க்கால் மூலம் பாசனத்திற்கு திறந்து விடப்பட்ட நீரால் அனைத்து வேளாண் நிலங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டது. அப்பகுதியில் இருந்து அனைத்து கிணறுகளும், ஆழ்குழாய்க் கிணறுகளும் நச்சுத்தன்மை கொண்டதாக மாறியது. மேலும் நொய்யல் ஆற்றுநீர் செல்லும் வழித்தடத்தில் சாய ஆலை கழிவுநீர் செல்வதால் ஆற்றின் இருகரையிலும் உள்ள கிணறுகளும், ஆற்றில் நீர் செல்லும் போது பலகல் தொலைவு வரை உள்ள அனைத்து கிணறுகளும் நச்சுத்தன்மை கொண்டதாக மாறியது. இதனால் உழவர்கள் ஆற்றில் தண்ணீரைத் திறந்து விடாதே எனப் போராடி 1996 முதல் நொய்யல் ஒரத்துப்பாளையம் அணை திறக்கப்படாமலேயே இருந்தது.
அணை திறக்கப்படாததால் ஒரத்துப்பாளையம் அணையைச் சுற்றியுள்ள எண்ணற்ற சிற்றூர்களும், வேளாண் நிலங்களும் பாழாய்ப் போய்விட்டது. சாயச்சாலை கழிவுநீரால் நொய்யல் ஆறு காவேரி ஆற்றுடன் கலக்கும் கரூர் மாவட்டம் புகளூர் வரை ஆற்றின் இருபக்கம் உள்ள நிலத்தடி நீர் மாசடைதல், குளங்கள் மாசடைதல் என அனைத்து நீராதாரமும் கெட்டு விட்டது. இது எப்போது, எத்தனை ஆண்டுகளில் இயல்பான நிலை அடையும் என்பது தெரியாத நிலையே உள்ளது.
மக்களின் தொடர்ந்த போராட்டத்தால் அரசு தற்போது அறமன்றத் தீர்ப்புப்படி ஒரத்துப்பாளையம் அணையைச் சுற்றி உள்ள நிலங்களும், இந்த நீரைப் பயன்படுத்தி பாசனம் செய்த நிலங்களுக்கும் வேளாண் செய்ய முடியாததற்காக ஒரு சிறுதொகையை நட்ட ஈடு கொடுத்து வருகின்றது. சாய ஆலை கழிவுநீரால் ஒரு ஆறு செத்துப் போன வரலாற்றுக் கொடுமை இங்குதான் நடந்தது.
மிகப்பெரிய வளர்ச்சி, வேலைவாய்ப்பு எனக் கூறி சென்னிமலை, பெருந்துறை ஒன்றியத்தில் உழவர்களிடம் இருந்து 2700 குறுக்கம் (ஏக்கர்) நிலம் பிடுங்கி எடுக்கப்பட்டு, தொழிற்பேட்டை அமைக்கப்பட்டது. ஆனால் பெருந்துறை தொழிற்பேட்டை வளாகத்தில் அமைக்கப்பட்ட தொழிற்சாலைகளோ உலகில் முன்னேறிய நாடுகள் என அழைக்கப்படும் நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ள சிகப்பு வகை ஆலைகளான தோல் தொழிற்சாலை, சாய ஆலை, இரும்பு தொழிற்சாலை, கல்நார் (ஆஸ்பெக்டாஸ்) தொழிற்சாலை, வேதியியல் தொழிற்சாலை போன்ற மிகவும் நாசகரமான தொழிற்சாலைகளே.
பெருந்துறை தொழிற்பேட்டை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தோல், சாயத் தொழிற்சாலைகள் மூலம் சென்னிமலை ஒன்றியத்தின் பெரும்பகுதியும், பெருந்துறை ஒன்றியத்தில் பல ஊர்களின் நீராதாரமும் நச்சுத்தன்மை கொண்டதாக மாறி விட்டது. சென்னிமலை ஒன்றியத்தில் 400 குறுக்கம் (ஏக்கருக்கு) மேல் நேரடி பாசனம் கொண்ட பாலதொழுவு குளம் முழுக்க நஞ்சாகி விட்டது.
ஓடைக்காடு குளம், சுள்ளிமேடு குளம் உட்பட பல குளங்கள் சாயநீர் தேங்கும் இடமாக மாறிவிட்டன. மக்களுக்குப் புதிய புதிய நோய்கள் ஏற்பட்டு வருகின்றன.
பெருந்துறை தொழிற்பேட்டைச் சுற்றி உள்ள நீராதார அழிவால் மக்களுக்கு ஒரு சொட்டு குடிநீர் கூட உள்ளூரில் கிடைப்பதில்லை.
கரூர் சாய ஆலைகளால் அமராவதி ஆறும், ஈரோடு - பள்ளிபாளையம் - குமாரபாளையம் சாய ஆலைகளால் காவேரி ஆறும் நஞ்சுத்தன்மை கொண்டதாக மாறி வருகின்றது. தமிழகத்தின் 17 மாவட்டங்களின் குடிநீர்த் தேவையை நிறைவு செய்யும் காவேரி ஆறுகளில் சாய ஆலை கழிவுநீர் கலந்து வருகின்றது.
தோல் தொழிற்சாலைகள்...
தமிழ்நாட்டில் வேலூர், ஈரோடு, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில்தான் தோல் தொழிற்சாலைகள் இயங்குகின்றன. இதில் வேலூர் மாவட்டம்தான் அதிக எண்ணிக்கையிலான தொழிற்சாலைகளைக் கொண்டதும், மிகப் பெரும் அளவிலான தோல் ஏற்றுமதியைக் கொண்டதுமாகும்.
இந்தியாவிலேயே முதன்முதலாக இங்குதான் பெரிய அளவில் தோல் உற்பத்திக் கூடங்கள் தொடங்கப்பட்டன. கர்நாடக நவாபின் காலத்தில் இது தொடங்கப்பட்டது. ஆங்கிலேயருக்கு அதிகமான தோல் காலனிகள் (ஸூ) தேவைப்பட்டதால், 18-ம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் கிழக்கிந்திய கம்பெனியின் பிரதிநிதியான ராபர்ட் கிளைவ், கர்நாடக நவாபான சந்தா சாகிபுடன் இணைந்து வேலூர் மாவட்டத்தில் இதனைத் தொடங்கினார். தோல் உற்பத்திக்குத் தேவையான மாட்டுத் தோலை இப்பகுதி முஸ்லிம்கள் அதிகம் கைவசம் வைத்திருந்து தோல் வணிகம் பெரிய அளவில் செய்து வந்தனர். அவர்களுக்கு இதற்கான உற்பத்திச் சூத்திரங்களை ஆங்கிலேயர்கள் கற்பித்தும், நவாப் ஆங்கிலேயர்களுக்கு உறுதுணையாக இருந்ததால் இப்பகுதியில் தோல் பதப்படுத்தும் தொழில் வேகமாக வளர்ந்தது.
மேலும், மூலத் தோலை தொட்டிகளில் சுண்ணாம்புடன் நீறவைத்து அதனைப் பதனிடுவதற்காகத் அதிகமான தொழிலாளர்கள் தேவைப்பட்டனர். தண்ணீர் தேவையும் இருந்தது. தனது வாழ்வாதாரத்திற்காக எந்த சொத்தும் (நிலம் உட்பட) ஏதுமற்றவர்களாகவும் இப்பகுதி மக்கள் இருந்ததால் சுகாதாரமற்ற இந்தத் தொழிலில் ஈடுபட தாழ்த்தப்பட்ட உழைக்கும் மக்கள் தள்ளப்பட்டனர். வேலூர், ஈரோடு, திண்டுக்கல் ஆகிய பகுதிகள் இதற்கு சாதகமாக அமைந்தது. மற்றவர்கள் தொடத் தயங்கும், அருவறுப்பாக கருதப்படும் மாட்டுத் தோலை இவர்கள் குறைந்த கூலியைப் பெற்றுக்கொண்டு, பிரிட்டிஷாருக்குப் பதனிட்டுக் கொடுத்தனர். இந்த நிலை இங்கு இன்று வரை தொடர்கிறது.
1990களுக்குப் பின்பு உள்நாட்டு தோல் மட்டும் இன்றி ஆஸ்திரேலியா உட்பட உலகம் முழுக்க இருந்தும், இந்தியாவின் பல பகுதியில் இருந்தும் தோல் பதப்படுத்த தமிழகம் கொண்டு வரப்படுகிறது.
1990களுக்குப் பின்புதான் தோலைப் பதப்படுத்த வேதியியல் பொருட்களைப் பயன்படுத்தத் தொடங்கினர். இதன் மூலம் தோலைப் பதப்படுத்த 40 நாள் ஆகும் என்பதிலிருந்து 3 நாட்கள் (72 மணிநேரம்) போதுமானது என மாறியது. கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் நஞ்சுத்தன்மையுள்ள குரோமியம் போன்ற பல வேதியியல் பொருட்கள் பயன்படுத்தப்பட்டதன் மூலம் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டது.
இதனால் ஆண்டு முழுவதும் மூன்று பருவமும் சாகுபடி நடக்கும் பவானி ஆற்றின் குறுக்கே 730 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட (வருடம் 300 நாட்கள் பாசனத்திற்கு நீர் செல்லும்) காளிங்கராயன் கால்வாய் முழுக்க நஞ்சாக மாறி விட்டது.
காளிங்கராயன் கால்வாயில் தொடர்ந்து தோல் ஆலைகளின் கழிவுநீர் கலந்து வருவதால் இக்கால்வாயில் 11 வகை மீன்கள் இருந்தது மாறி தற்போது 1 வகை மீன் மட்டும் கிடைக்கின்றது. காளிங்கராயன் கால்வாய் பாசனப்பகுதியில் நெல்நடவு செய்யும் பெண்களின் தோல் கழிவு நீரால் நேரடியாக பாதிக்கப்படுவதால் கைகளில் மண் எண்ணெயைப் பூசிக்கொண்டு நடவு செய்கிறார்கள்.
காளிங்கராயன் கால்வாய் மூலம் கழிவுநீர் காவிரி ஆற்றில் நேரடியாகக் கலக்கின்றது. இதனால் கூட்டுகுடிநீர் திட்டம் மூலம் ஆற்றில் எடுக்கும் நீரால் மக்களுக்கு பல்வேறு நோய்கள் பரப்பப்படுகின்றது.
ஆம்பூர், வாணியம்பாடி தோல் ஆலை கழிவுகளால் பாலாறு பாழாகி விட்டது. பாலாற்றில் ஆற்றுமணலே தன்மை மாறிவிட்டதால் வேலூர் மாவட்ட ஆற்றுமணலை எடுத்துக் கட்டிடம் கட்டக் கூடாது என அரசு உத்திரவிட்டு இருந்தது.
பாழாகிய பாலாறு
திண்டுக்கல் தோல் தொழிற்சாலையால் திண்டுக்கல் நகரமே கழிவுநீர் நகரமாகி ஊரே நரகமாகி விட்டது.
தோல், சாய ஆலைகளால் யாருக்கு லாபம்...:
தோல் தொழிற்சாலை, சாய ஆலை மூலம் நாட்டிற்கு அன்னிய செலவாணி அளவற்று கிடைக்கின்றது. தொழில் வளர்ச்சி சிறப்பாக உள்ளது என்றெல்லாம் சொல்லப்படுகின்றது.
ஆனால் உண்மையில்
1. பாலாறு, நொய்யல் ஆறு, பவானி ஆறு, அமராவதி ஆறு (கரூர் சாயப்பட்டறையால்) காவிரி ஆறு, காளிங்கராயன் கால்வாய் என அனைத்தும் நஞ்சாகி வருகின்றது.
2. நொய்யல் ஆறு செத்த ஆறு என உலகிற்கு அறிவிக்கப்பட்டு விட்டது.
3. பல பாசனக் குளங்கள், கிணறுகள், ஆழ்குழாய் கிணறுகள் அழிந்து வருகின்றன.
4. ஈரோடை, திருப்பூர், கோவை மாவட்டங்களில் தடுக்கி விழுந்தால் மருத்துவமனை என சொல்லும் அளவுக்கு மக்களுக்கு பல்வேறு நோய்களால் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது.
5. இந்த ஆலை இயங்கும் மாவட்டத்தில் உள்ள மக்கள் மிக அதிக அளவு கேன்சர் நோயாளிகளாக மாற்றப்பட்டு உள்ளனர்.
6. ஈரோடை மாவட்டத்தில் உள்ள மக்கள் மிக அதிக அளவு மலட்டு தன்மை உள்ளவர்களாக மாற்றப்பட்டு ஈரோட்டில் எங்கு பார்த்தாலும் மலடு நீக்கும் மய்யங்களாக உள்ள நிலை ஏற்படுத்தப்பட்டு உள்ளது
7. சாயச்சாலை, தோல் தொழிற் சாலைகளில் பணியாற்றும் எண்ணற்ற வெளியூர்த் தொழிலாளர்கள் இங்கு வேலைக்கு வந்து இனம் புரியாத நோயை வாங்கிச் செல்கின்றனர். இது பற்றி முழு விவரம் இல்லை.
8. ராணிப்பேட்டை தோல் தொழிற் சாலைகளில் 10 பேர் இறந்துவிட்டதாலேயும், பெருந்துரை-சிப்காட் சாய ஆலைகளில் 7 பேர் இறந்துவிட்டதாலேயும், பலர் பாதிக்கப்பட்டதாலும் செய்தி வெளி வந்து உள்ளது. ஆனால் வெளியே வராத சாவுகள் ஏராளமாக உள்ளன.
9. தோல் ஆலை, சாய ஆலை தொழிலாளர்களுக்கு அமைப்பு ஏதும் இல்லை. வெளியூரைச் சேர்ந்தவர்கள் அதிகம். எனவே தனி ஆளாக இறக்கும் போது ஏதாவது காரணம் சொல்லி ஆலை நிர்வாகத்தால் மறைக்கப்பட்டு விடப்படுகின்றது.
10. இப்பகுதியில் வேளாண்மை முழுக்க அழிக்கப்பட்டு விட்டது.
நமது தமிழ்க் குமுகம் இவ்வளவு விலை கொடுத்து, அழிவைச் சந்தித்து தான் சாயஆலை, தோல்ஆலை மூலம் அயலகச் செலாவணி பெறப்படுகின்றது.
தூய்மைசெய் ஆலைகள்:
சாய ஆலை, தோல் தொழிற்சாலைகள் E.T.P., C.E.T.P., எனப்படும் தனியார் தூய்மைசெய் ஆலைகள், பொது தூய்மைசெய் நிலையம் அமைத்துக் கழிவுநீரை தூய்மை செய்வதாகக் கூறிக் கொள்கின்றன. ஆனால் இது உண்மையில்லை என்பதே பல்வேறு நடைமுறைகள் காட்டும் உண்மையாகும்.
1. 0% தூய்மைசெய் என்பதே முழுப் பொய்யாகும். உலகில் இதுபோன்ற தொழில்நுட்பம் எங்கும் இல்லை என்பதே உண்மை. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருப்பூர் சாய ஆலைகள் உச்சஅறமன்றத் தீர்ப்பு அடிப்படையில் மூடப்பட்டபோது அனைத்து ஆலைகளும் 0% கடைப்பிடிக்க முடியாது என வெளிப்படையாகவே அறிவித்தன.
2. தூய்மைசெய் ஆலைகளில் கழிவுநீரின் வாடை போக்குவது, நிறத்தை மாற்றுவது, கழிவுநீரின் உப்பின் தன்மையை குறைப்பது என்பது மட்டுமே நடைபெறுகிறதே ஒழிய, 0% தூய்மைசெய் என்பதே முழுப் பொய்யாகும்.
3. தூய்மைசெய் ஆலைகளை கண்காணிக்க வேண்டிய அதிகாரிகள் சாய ஆலை, தோல் தொழிற்சாலைகளுக்கு ஆதரவாக இருந்து பணப் பயன் (கையூட்டு) அடைந்து வருகின்றனர் என்பதே உண்மையாகும். ஈரோடு, திருப்பூர் மாசுகட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் பல இலக்க உருவாய் கையூட்டு பணம் கைப்பற்றப்பட்டதே இதற்குச் சான்று
4. மாசுபடுத்தும் ஆலைக்கு எதிராக நேர்மையாக செயல்பட்டால் அதிகாரிகள் அரசால் மாற்றத்துக்கு உள்ளாகின்றனர். ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஆர். ஆனந்தக்குமார் அவர்கள் கழிவுநீரை சுத்தம் செய்யாமல் வெளியேற்றியதற்காக தோல் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுத்ததால் 2011ஆம் ஆண்டு ஒரே நாளில் பணிமாற்றம் செய்யப்பட்டார். இதைக் கண்டித்து ஈரோட்டில் பல்வேறு விவசாய அமைப்புகளும், மக்கள் அமைப்புகளும் போராடின.
ஈரோடு மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைமைப் பொறியாளர் மலையாண்டி அவர்கள் சாய ஆலை, தோல் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுத்தார் என்பதற்காக தமிழக அரசால் 2011ல் பணிமாற்றப்பட்டார்.
கட்சிகளின் சுற்றுச்சூழல் கொள்கை:
தமிழகத்தில் செயல்படும் ஆண்ட, ஆளும் எந்த கட்சிக்கும் சுற்றுச்சூழல் சிக்கல் பற்றி எந்தக் கொள்கையும் கிடையாது. சிக்கல் வந்தால், மக்கள் போராடினால் ஓடிவந்து உடன் நின்று கொள்வது என்பது மட்டுமே அரசியல் கட்சிகளின் நடைமுறையாக உள்ளது. உண்மையில் இவர்களில் பெரும்பான்மையோர் இயற்கையை அழிக்கும் தொழிற்சாலைகளுக்கு ஆதரவாக உள்ளனர் என்பதே உண்மை.
தோல் மற்றும் சாய தொழிற்சாலை கழிவுநீரை பற்றியக் கொள்கையில் திருப்பூர், ஈரோடை, நாமக்கல், சேலம், கரூர் மாவட்டக் கழிவுகளை குழாய் மூலம் கடலில் கொண்டு சென்று விடுவது எனப் பல கட்சியினரும் பேசி வருகின்றனர். கடல் என்ன அனைத்து கழிவுகளையும் கொட்டும் குப்பைத்தொட்டியா என்பதை யாரும் உணரவில்லை.
கடல் மூலம் மக்களுக்கு உறுதி செய்யப்பட்டு கிடைத்து வரும் சத்தான குறைந்த விலையில் மீன் உணவும், எண்ணற்ற தேவைகளும் மனித குலத்திற்கு கிடைக்கின்றது என்பதைக் கூட உணராதவர்களாகவே இக்கட்சிகள் அடிப்படையில் உள்ளன.
நிறைவாக...
செவ்வாய் கோளுக்கும், சந்திரனுக்கும் மனிதன் குடியிருக்க முடியுமா என செயற்கைக்கோள் அனுப்பி ஆய்வு செய்யும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தனது கால்நடைகளின் தோலைப் பதப்படுத்தவும், இயல்பாக ஒரு துணிக்கு சாயம் போடவும் தெரியாமல் இருக்கிறார்களா...
அவர்களது மண், அவர்கள் நாட்டின் நீராதாரம், அவர்கள் நாட்டின் மக்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதில் மிகக் கவனமாக உள்ளன வளர்ச்சி பெற்ற நாடுகள்.
இதற்கு நமது நாட்டை பயன்படுத்திக் கொள்கின்றன. மலிவான மனித உழைப்பு, எதற்கும் உறுதி இல்லாத வகையில் தொழிற்சாலைகளில் தொழிலாளர்களிடம் வேலை வாங்குவது, தொழிலாளிக்கும், மக்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் என்ன பாதிப்பு ஏற்பட்டாலும் கண்டுகொள்ளாமல் இருக்கலாம் என்பது போன்றவற்றிற்காகவே இங்கே தொழில் தொடங்குகின்றனர்.
அறுக்கப்படும் ஆட்டிற்கு அகத்திக்கீரையை காட்டுவது போல வாழ்வியலை இழக்கும் மக்களுக்கு 'அயலகச் செலாவணி, வளர்ச்சி” என முழக்கங்கள் மூலம் அரசால் பொய்யான பிம்பம் காட்டப்படுகின்றது.
வெளிநாடுகளின் குப்பைத் தொட்டியாய் தமிழகமும், நமது நாடும் மாற்றப்பட்டு வருகின்றது என்பதே முழு உண்மையாகும்.
மேலும் இன்று அரசே 1 லிட்டர் குடிநீர் உருவாய். 10/- என விற்பனை செய்கின்றது. அப்படிக் கணக்கிடும் போது தமிழகத்தில் ஒரு டி.சட்டை(வண்ண பின்னலாடை) உருவாக்க 2700 லிட்டர் தண்ணீரும், ஒரு இணை தோல் மூலம் மூடணி(ஷு) உருவாக்க 8000 லிட்டர் தண்ணீரும் தேவைப்படுகின்றது. நமது நாட்டின் நீர்வளம் (மறைநீர் - Virtuval water) வெளிநாடுகளில் எவ்வாறு கொள்ளை அடிக்கப்படுகிறது என்பதை உணரலாம். இந்த நாட்டில் ஏழைகளின் உயிர் என்பது கிள்ளுக் கீரையாகவே கருதப்படுகின்றது.
தோல் ஆலைகள், சாய ஆலைகள் ஆகியவற்றின் கழிவுநீரை தூய்மை செய்ய எவ்வகை தொழில்நுட்பமும் இல்லாத இந்த அரசுதான், 48,000 ஆண்டுகள் வைத்துப் பாதுகாக்க வேண்டிய அணுக்கழிவை உற்பத்தி செய்யும் அணுஉலையை வைத்துப் பாதுகாக்கும் என சொல்லி வருகிறது.
1984ல் திசம்பர் 2 அன்று போபாலில் யூனியன் கார்பைட் ஆலையில் இருந்து வெளியேறிய நச்சுவளி மூலம் 25,000 பேர் இறந்தும் எண்ணற்றோர் இன்றுவரை பாதிப்புக்கு உள்ளாகியும் வருகின்றனர். ஆனால் போபால் நச்சுஆலைக் கழிவை 30 ஆண்டுகளாகி அரசால் இன்றுவரை அகற்ற முடியவில்லை.
நமது நாட்டின் நீராதாரங்களை, (கிணறு, குளம், ஆழ்குழாய் கிணறு) ஆறுகளை சாகச் செய்த கடுமையான நச்சுத்தன்மை கொண்ட வேதியியல் பொருட்களைப் பயன்படுத்திச் செயல்படும் தோல் தொழிற் சாலை, சாயச்சாலைகளை உடனடியாகத் தடை செய்ய வேண்டும்.
இந்தத் தோல் சுத்திகரிப்பு நிலையங்களை, அபாயகரமான சிகப்புவகை ஆலைகளை அதிகாரிகள் மாதம் ஒருமுறை ஆய்வு செய்ய வேண்டும் என மாசு கட்டுப்பாட்டு வாரிய விதி தெளிவாக கூறி உள்ளது. ஆனால் அந்த அதிகாரிகள் முறையாக ஆலையை சோதனை செய்தார்களா என்பதுதான் முதல் கேள்வி. ராணிப்பேட்டை தோல் தொழிற்சாலைக் கழிவுகள் பாலாறு நதியில் கலக்கவில்லை என்று மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் எழுத்து மூலம் உறுதியளித்து இருக்கிறார்களே, அது எப்படி நடந்தது? அதற்கு அவர்களுக்கு கொடுக்கப்பட்ட விலை என்ன?
ராணிப்பேட்டையில் சம்பவம் நடைபெற்ற பொது சுத்திகரிப்பு நிலையத்தில், அனுமதி பெறாமல் 1,000 கனமீட்டர் (பத்து லட்சம் லிட்டர்) கொள்ளளவு கொண்ட திடக்கழிவு சேமிப்புத் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கும், அதன் அதிகாரிகளுக்கும் தெரியாமல் இப்படியொரு தொட்டி கட்டாயம் கட்டப்பட்டிருக்கவே முடியாது. இதற்கு மாசுக் கட்டுப்பாட்டு வாரியமும், அதன் அதிகாரிகளும் உடந்தை என்பதுதான் அப்பட்டமாகத் தெரிகிறது. இதுபோல எத்தனை எத்தனையோ கேள்விகளை நமக்கு இருந்தாலும், அதற்கான பதிலும் நம் அனைவருக்குமே தெரியும். ஆனால், அதை வெளிப்படையாகச் சொல்ல மட்டும் நமது நாட்டில் யாரும் தயாராக இல்லை.
தமிழகத்தில் சாயக் கழிவுகளைவிட பல மடங்கு தீமை விளைவிக்கக்கூடியவை தோல் தொழிற்கூட ரசாயனக் கழிவுகள். இருந்தும், மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மெத்தனமாக இருந்ததற்கு காரணம்- சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளில் பெரும்பாலோனோர் ஆலை நிர்வாகத்தின் கையூட்டு பெறும் தாசர்களாகவும், வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசியல்வாதிகள் தலையீடு மட்டும் இன்றி ஆண்ட, ஆளும் கட்சிகளின் தலைமைகள் அனைத்தும் இந்த ஆலைக்கு துணைநின்று பணபயன் பெறுவதும், அதன் பங்குதாரராக வலம் வருவதேயாகும்.
இந்தத் தோல் கழிவுகள் தொடர்ந்து பல ஆண்டுகளாக பாலாறு நதியில் கலக்கப்பட்டுக் கொண்டிருந்த போதிலும், அவை அனுமதிக்கப்பட்ட அளவோடுதான் கலக்கப்படுகிறது என்று தொடர்ந்து கூறி வந்த வேலூர் மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளும், மாவட்ட நிர்வாகமும்தான் (சுரண்டல் அரசியல்வாதிகளும், அதிகாரிகளும்) இந்த மரணங்களுக்கு முழுமையான காரணமாகும். ஆனால், அவர்களிடம் எவ்வித கேள்வியும் கேட்கப்படாமலேயே, வெறும் தொழிற்சாலை உரிமையாளர்கள் மீது மட்டும் சட்டம் வெகு வேகமாகப் பாய்கிறது. இவர்களுடன் கூட்டணி அமைத்து இருந்த அனைவரும் தண்டிக்கப் பட வேண்டும்.
இப்படி பிரச்சினை வரும் நேரத்தில் அனைவரும் வேகவேகமாகப் பேசுவதும், பின்பு அது பற்றி மறந்து போவதும் என்பதே கடந்த கால வரலாறாக உள்ளது. மாவட்டத்தில் மாசுக்கட்டுப்பாடு பிரச்சினை பற்றி மாதம் ஒரு முறை நடைபெறும் மாவட்ட விவசாயிகள் கூட்டத்தில் தொடர்ந்து பேசி வரும் விவசாய அமைப்பினர், சுற்க்ச்சூழல் செயல்பாட்டாளர்கள், மக்கள் இயக்கங்களைச் சேர்ந்தவர்களை வெறும் அற்ப பதர்கள் போல, இவர்களுக்கு இதே வேலைதான், வேறு வேலையில்லை என்று மாவட்ட ஆட்சியர் உட்பட மாசுகட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் பார்க்கும் பார்வையாக உள்ளது. மாசுக்கட்டுப்பாடு பிரச்சினை இப்படிதான் இருக்கும், இதற்கெல்லாம் தீர்வு காண முடியாது என்பதும், கேட்கும் கேள்விக்கு சடங்குதனமாக ஒரு பதிலை சொல்லி தட்டிக் கழித்து விடுவது என்பதும்தான் அதிகாரிகளின் தற்போதைய நடைமுறையாக உள்ளது.
மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் பெற்று மக்களுக்கு பொறுப்பின்றி செயல்படும் அதிகாரிகள் மற்றும் அதிகாரத்தில் உள்ளவர்களை மக்கள் செயல்பாட்டாளர்கள் கண்காணிக்கும், நடவடிக்கை எடுக்கும் வகையில் புதிய முறைகள் உருவாக்கப்பட வேண்டும்.
மக்கள், சமூகத்தின் மீது அக்கறையற்று செயல்படும் நேர்மையற்ற அதிகாரிகள் மீது வெறும் கண் துடைப்பு நடவடிக்கை என இல்லாமல் உண்மையான நடவடிக்கை வேண்டும்.
இயற்கை வழியில், மண்ணுக்கும், மக்களுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் தோல் ஆலை, சாய ஆலைகளில் தொழில்நுட்பங்கள் பயன்படுத்த வேண்டும்.
நமது புவியும், மண்ணும், நீரும், நாடும், உலகமும் நமக்கு மட்டும் சொந்தமல்ல. நமது வருங்கால தலைமுறைக்கும் சொந்தமானது என உணருவோம், செயல்படுவோம்!
நமது நாட்டை பாதுகாப்போம்.!
- விவரங்கள்
- முகிலன்
- பிரிவு: சுற்றுச்சூழல்
பல லட்சம் ஆண்டுகளாய் நமது முன்னோர்கள் கட்டிக் காத்த இந்த மண்ணை, இந்த நாட்டை, இயற்கையை... சில பத்து ஆண்டுகளில் வளர்ச்சி என அழிக்கும் கூட்டத்திற்கு துணை நிற்கப் போகிறோமா?
அல்லது இடையறாது பல்வேறு உறுதியான செயல்பாடுகளை முன்னெடுத்து, நிலைமையை மாற்ற போகிறோமா என்ற கேள்வி நம் அனைவர் முன் பெருமலையாய் எழுந்து நிற்கிறது.
நாம் சிந்தித்து செயல்படவேண்டிய அவசியமான காலமிது.
திருவள்ளூர் மாவட்டம் : அனல்மின் நிலையம், வடசென்னையில் உள்ள எண்ணற்ற இரசாயன தொழிற்சாலைகள், மீஞ்சூர் கடல்நீரை குடிநீர் ஆக்கும் திட்டம்,
புழல் அருகே உள்ள போக்குவரத்து தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில் உள்ள அம்மா குடிநீர்த் திட்டம்.
காஞ்சிபுரம் மாவட்டம்: கல்பாக்கம் அணு உலைகள், மாமண்டூர் பெப்சி ஆலை, திருபெரும்புதூர் கொக்கோ-கோலா ஆலை, திருபெரும்புதூர் சிப்காட் ஆலை கழிவுகள், புதிதாக அமைக்கப்பட இருக்கும் 4000 மெகாவாட்-செய்யூர் அனல்மின் நிலையம், பாலூர் அருகே தடுப்பணை கட்டி எடுக்கப்பட்டு வரும் இந்திய அரசின் தென்னக ரயில்வேயின் ரயில் குடிநீர், நெமிலி கடல்நீரை குடிநீர் ஆக்கும் திட்டம்.
வேலூர் மாவட்டம்: தோல் தொழிற்சாலை கழிவுகள், ஆற்று மணல் கொள்ளை
திருவண்ணாமலை மாவட்டம்: கவுத்தி வேடியப்பன் மலை ஜிண்டால் திட்டம்
கடலூர் மாவட்டம்: இரசாயன தொழிற்சாலைகள் (வாழும் போபால்)
விழுப்புரம் மாவட்டம்: தென்பெண்ணை ஆறு ஆற்று மணல் கொள்ளை
கிழக்கு மாவட்டங்கள்- சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர், புதுசேரி(பாகூர் பகுதி) மாவட்டங்கள்: மீத்தேன், கடற்கரையோரம் அமைக்கப்பட்டு உள்ள இறால் பண்ணைகள்
தமிழக காவேரி டெல்டா படுகையை பாலைவனமாக்க, காவேரிக்கு குறுக்காக கர்நாடக அரசால் கட்டப்படும் புதிய அணைகள்(48- டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட மேகதாது அணை உட்பட இரு அணைகள்)
நாகப்பட்டினம் மாவட்டம்: அமைந்து, அமையவிருக்கும் 12 அனல் மின்நிலையங்கள்
ராமநாதபுரம் மாவட்டம்: அமையவிருக்கும் உப்பூர் அனல் மின்நிலையங்கள்
அரியலூர், பெரம்பலூர் : சிமெண்ட் ஆலைகள், நிலக்கரி சுரங்கங்கள்
திருச்சி: புதிதாக அமைக்கப்பட இருக்கும் டிஎன்பிஎல் (TNPL) காகித ஆலை, தினசரி 90,00,000 லட்சம் லிட்டர் எடுக்க அனுமதி பெற்றுள்ள சூரியூர் பெப்சி ஆலை, ஆற்றுமணல் கொள்ளை, தாது மணல் கொள்ளை
புதுக்கோட்டை மாவட்டம்: கிரானைட் கொள்ளை
மேற்கு மாவட்டங்கள்: கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி: கெயில் திட்டம்
கோவை மாவட்டம்: எவரெசுடு ஆஸ்பெட்டாசு ஆலை, மதுக்கரை சிமெண்ட் தொழிற்சாலை, பல்வேறு தொழிற்சாலை கழிவுகள்
தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டம்: கிரானைட் கொள்ளை
திருப்பூர் மாவட்டம்: சாயப்பட்டறை கழிவுகள்
ஈரோடு மாவட்டம்: சாயப்பட்டறை கழிவுகள், தோல் ஆலை கழிவுகள், பெருந்துறை சிப்காட்டில் உள்ள பல்வேறு தொழிற்சாலை கழிவுகள், பெருந்துறை கொக்கோ-கோலா ஆலை, பவானி சாகர் பகுதியில் உள்ளகாகித ஆலை கழிவுகள்
சேலம் மாவட்டம்: அனல்மின் நிலையம், மால்கோ தொழிற்சாலைகள், விதிமீறி வெட்டப்படும் பாக்சைட்.
நாமக்கல் மாவட்டம்: சாயப்பட்டறை கழிவுகள், காகித ஆலை கழிவுகள், ஆற்றுமணல் கொள்ளை, கிரானைட் கொள்ளை,
கரூர் மாவட்டம்: காகித ஆலை கழிவுகள், சாயப்பட்டறை கழிவுகள், ஆற்றுமணல் கொள்ளை, கிரானைட் கொள்ளை,
மதுரை மாவட்டம்: வடபழஞ்சி அணுக்கழிவு ஆராய்ச்சி, கிரானைட் கொள்ளை, அமையவிருக்கும் சிவரக்கோட்டை சிப்காட்
மதுரை- விருதுநகர்(அருப்புக்கோட்டை)- தூத்துக்குடி மாவட்டம்: இண்டஸ்ரியல் காரிடார் திட்டம்
திண்டுக்கல்: தோல் தொழிற்சாலை கழிவுகள்
தேனி மாவட்டம்: நியூட்ரினோ
நெல்லை மாவட்டம்: கூடங்குளம் அணு உலை, தாமிரபரணி ஓரம் அமைந்துள்ள காகித ஆலை கழிவுகள், புதிதாக அமைக்கப்பட இருக்கும் டிஎன்பிஎல்(TNPL) காகித ஆலை , கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் உள்ள கொக்கோ-கோலா ஆலை, கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட இருக்கும் பெப்சி ஆலை.
கன்னியாகுமரி, நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்கள்: தாது மணல் கொள்ளை
கன்னியாகுமரி மாவட்டம்: இந்திய அருமணல் ஆலை (IRE)
தூத்துக்குடி மாவட்டம்: ஸ்டெர்லைட், தாரங்கதாரா (வாழும் போபால்) சிப்காட் வளாக இரசாயன தொழிற்சாலைகள், தமிழ்நாட்டுக்கு ஒரு மெகாவாட் மின்சாரம் கூட கொடுக்காமல் தனி கிரீட் (மின்பாதை) அமைத்து அண்டையில் உள்ள கேரளா, கர்நாடக, ஆந்திரத்திற்க்கும், இலங்கை போன்ற வெளிநாட்டுக்கும் விற்பனை செய்ய அமைக்கப்பட்டுள்ள, அமைக்கப்பட இருக்கும் 14,000 மெகாவாட் திறன் உள்ள 15 அனல்மின் நிலயங்கள்
இது போக
- தமிழ்நாட்டில் உள்ள 33 ஆறுகளிலும் வரைமுறையற்ற ஆற்று மணல் கொள்ளை
- 20 மாவட்டங்களில் வரைமுறையற்று மலைகளை வெட்டி எடுக்கப்படும் கிரானைட் கொள்ளை
- வரைமுறையற்ற முறையில் அள்ளப்பட்டுவரும் தாது மணல் கொள்ளை
- வரைமுறையற்ற முறையில் அள்ளப்பட்டு வரும் பல்வேறு கனிமங்கள்
- நீர்வளக்கொள்ளையாய் அனைத்து இடங்களிலும் நீரை உறிஞ்சி கொள்ளை லாபம் சம்பாதிக்கும் கோகோ கோலா மற்றும் பெப்சி தொழிற்சாலைகள், பல்வேறு தனியார், அரசு(அம்மா குடிநீர், ரயில் குடிநீர்) தண்ணீர் தொழிற்சாலைகள்...
- தனிநபர்களின் கொள்ளைக்காகவும், அரசின் பொறுப்பற்ற கொள்கையால் அழிக்கப்பட்டு வரும் பல்லாயிரக்கணக்கான ஏரிகள், குளங்கள், கண்மாய்கள், ஆறுகள் போன்ற நீர்நிலைகள்.
- திட்டமிட்டு தமிழகத்திற்க்கு வரும் ஆறுகள் அண்டையில் உள்ள கேரளா, கர்நாடக, ஆந்திர அரசுகளால் மறிக்கப்படுதல்
-கடல்வளத்தை அழிக்கும் கடலோரங்களில், கடலில் அமைக்கும் எண்ணற்ற மாசுபடுத்தும் ஆலைகள், ஆய்வுகள். கடலில் அனுமதிக்கப்படும் பெரு நிறுவன கப்பல்கள்
- மலைகளில் உள்ள கனிமவளங்களைக் கொள்ளையடிக்க பாரம்பரிய பழங்குடிமக்களை வெளியேற்ற, தேன் தடவிய பெயரில் கொண்டுவரப்படும் இந்திய, தமிழக அரசின் பல்வேறு திட்டங்கள்
- தமிழகத்திற்கு கொண்டு வரப்படும் திட்டம் என்றாலோ, தொழில்கள் என்றாலோ அது அனைத்தும் உலகில் காலம்கடந்த(காலாவதியான) தொழில்நுட்பங்கள் திணிக்கப்படுவதாகவோ, உலகில் உள்ள கழிவுகளை கொண்டு வந்தோ அல்லது விசக்கழிவுகளை உண்டாக்கும் அழிவு திட்டங்களாகவோ மட்டும் உள்ளன.
நாம் நமது இயற்கையை, கனிமவளங்களை, நீர்வளங்களைக் காக்க ஒன்றுபட்டு செயல்படுவோம்.
பன்னாட்டு நிறுவனங்களின் சுரண்டலில் இருந்தும், இந்திய முதலாளிகளின் சுரண்டலில் இருந்தும் தமிழகத்தை மீட்போம்... தமிழ்நாட்டின் நிலைமையை மாற்றுவோம்...
- முகிலன், ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு சுற்றுசூழல் பாதுகாப்பு இயக்கம் & கனிமவள முறைகேடு சகாயம் ஆய்வுக் குழு ஆதரவு இயக்கம்
- அறிவியலை ஓரங்கட்டும் அரசியல்
- ஏன் மரபணு மாற்றுப் பயிர்கள் கள பரிசோதனைகள் தடை செய்யப்பட வேண்டும்?
- பிரச்சினை அறிவியலில்; தீர்வு அரசியலில்
- மீத்தேன் எரிவாயுத் திட்டத்தால் காவிரிப் படுகை பாலைவனமாகும்!
- மேற்குத் தொடர்ச்சி மலையை பாதுகாப்போம்
- அணுத் தீமையற்ற தமிழக நாள் - டிசம்பர் 21, 2013
- மேற்கு மலைத் தொடரின் அடிவயிற்றில்... பிரபஞ்சம் பற்றிய ஆய்வா? அணு ஆயுதத் திட்டமா?
- மீத்தேன் எரிவாயு திட்டத்தின் முழு அபாயம்
- கொல்லத் துளை(டி)க்கும் அரசு
- வேதாந்தாவின் ஸ்டெர்லைட் ஆலை ஏன் விரட்டப்பட வேண்டும்?
- உலக மயமாக்கலும், சுற்றுச்சூழல் பாதிப்புகளும்
- தாவரங்களின் எதிரி - பார்த்தீனியம்
- ஆபத்தை விளைவிக்கும் ஆஸ்பெஸ்டாஸ்!
- ஞெகிழியினால் ஏற்படும் சமுதாயக் கேடுகள்!
- மின்னணுக் கழிவுகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடுகள்!
- வெறும் தண்ணீருக்கோ வரப்போகுது பஞ்சம்!
- அணுமின்சக்தி அழித்த உயிர்களின் வரலாறு
- புவி வெப்பமயமாதலும், முதலாளித்துவ அரசியலும்
- புவி வெப்பமயமும் தேசங்களின் இறையாண்மையும்
- இயற்கை வளங்களின் சூறையாடலும் ஆந்திர மக்களின் போராட்டமும்