கீற்றில் தேட...
அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- த.அருண்குமார்
- பிரிவு: சுற்றுச்சூழல்
காவிரிக்கும், தஞ்சை தரணிக்கும் உள்ள உறவில் தான் தமிழகம் உணவு உண்கின்றது. இவ்வாறு தமிழக மக்களின் விவசாயத்திற்கு இன்றியமையாத இடமாக இருக்கும் தஞ்சையை சுற்றியுள்ள பகுதிகளை அதன் இயல்பை மாற்றக்கூடிய ஆபத்தாக இந்த மீத்தேன் எரிவாயு திட்டம் வரப்போகிறது.
கொஞ்சம் விளக்கமாக. . . . .
"இயற்கை எரிவாயு" என்பது நாம் எல்லோரும் அறிந்தவரை இயற்கையில் கிடைக்கும் வாயு நிலையில் உள்ள எரிபொருள. இந்த இயற்கை எரிவாயு தீப்பிடிக்கும் இயல்புள்ள நீர்கரிம வாயுக்களின் கலவை ( Combustible mixture of hydrocarbon gases). இந்த வாயுக்களின் கலவையில் மீத்தேன் வாயு என்பதே முதன்மையாக இருக்கின்றது மேலும் அதிகமான வெவ்வேறு நிலைகளில் மற்ற நீர்கரிம வாயுக்களும் மற்ற வாயுக்களும் கலந்து காணப்படும்.
இங்கு கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் இதில் இரண்டு வகை இருக்கின்றன. பெட்ரோலிய படுகைகளில் பெட்ரோல் எரிபொருள் எடுக்கும் பொது இயல்பாகவே வருவது ஒரு வகை. இது வழக்கமான வாயு (Conventional Gas)அல்லது இயல்பான வாயு என்று அழைக்கலாம். மற்றொரு வகை வழக்கத்திற்கு மாறான முறையில் எடுக்கப்படும் எரி வாயு (Unconventional Gas) என்று அழைக்கலாம். இந்த வகை "வழக்கத்திற்கு மாறான" எரிவாயு கடினமான பாறைகளிலும், நிலத்திற்கு அடியில் மிகுந்த இறுக்கம் கொண்ட மணல் படுகைகளிலும் மற்றும் நிலக்கரி படுகைகளிலும் எடுக்கப்படுகிறது.
வழக்கமான எரிவாயு முற்றிலும் வாயுவாகவோ அல்லது சிறிது நீர்ம நிலையிலோ கிடைக்கும். முதலாவதில் முற்றிலுமான மீத்தேன் மட்டுமே கிடைக்கும். நீர்ம நிலையில் சேகரிக்கப்படும் எரிவாயுவில் மீத்தேன், ப்யூடேன், ப்ரொப்பேன் ஆகியவை கலந்து இருக்கும். இந்த எரிவாயு பெட்ரோலிய கிணறுகளில் கச்சா எண்ணை எடுக்கும் போது அதிலேயே கச்சா எண்ணையுடன் கலந்து வரும்.
இந்த வழக்கத்திற்கு மாறான எரிவாயு எடுக்கும் முறைகள் மூன்று வகைகளாக அறியப்படுகின்றன. அவை
*Tight Gas எனப்படும் இறுக்கம் அதிகம் உள்ள இடங்களில் எடுக்கப்படும் எரிவாயு.
*Shale Gas எனப்படும் பூமிக்கு அடியில் உள்ள மிக கடினமான பாறையில் இருந்து எடுக்கப்படும் எரிவாயு.
*Coalbed Methane எனப்படும் பூமிக்கு அடியில் உள்ள நிலக்கரி படுகைகளில் இருந்து எடுக்கப்படும் எரிவாயு.
இதில் தஞ்சை மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் வரப்போகும் ஆபத்து என்பது Coalbed Methane என்று அழைக்கப்படும் CBM. நிலக்கரி படிமங்களில் உள்ள எரிவாயு CBM என்று அழைக்கப்படும். உயிரிகளின் இறந்த எச்சம் நிலக்கரியாக இயற்கையாக மாறும் நிலக்கரி மாற்றத்தில் நிலைகளில் இந்த இயற்கை எரிவாயு உருவாகின்றது. இவ்வாறு உருவாகும் எரிவாயு பாறைகள் மற்றும் நீரால் சூழப்பட்டு அவை நிலக்கரி படிமங்களிலும், பாறைகளில் உள்ளாகவும் வெளியேற வழி இல்லாமல் அங்கேயே தங்கிவிடுகின்றன. இவ்வாறு தங்கிவிடும் எரிவாயு பகுதிகளை பாறைகளில், நிலக்கரி படிமங்களில் செயற்கையாக விரிசல்களை ஏற்படுத்தி ஒன்றாக சேர்த்து வாயுக்களை மொத்தமாக எடுக்கும் முறையே எரிவாயு எடுக்கும் முறை.
நிலக்கரியானது அதிக நுண் துளைகள் கொண்ட இயல்பினையும் நீர் ஊடுருவும் தன்மையும் கொண்டதாக இருப்பது. நிலத்தில் இருந்து எடுக்கும்போது நீரை உறிஞ்சி ஈரமான தன்மைகொண்டிருக்கும். இந்த நிலக்கரி படிமங்களில் இருந்து இயற்கை எரிவாயுவை எடுக்கும்போது நீரை முற்றிலுமாக வெளியேற்றினால்தான் அங்கிருந்து இயற்கை எரிவாயுவை சேகரிக்க முடியும்.
இங்கு தான் விசயமே இருகின்றது. . ஆபத்தும் இருகின்றது. . . .
நீரை முற்றிலுமாக வெளியேற்றுவது என்பது நிலத்தடி நீரை. மேலும் மேலும் அதிக ஆழத்தில் துளையிட்டு அங்கிருந்து வெளியேற்றப்படும் நீரானது எதற்கும் உபயோகப்படாது. ஏனனெனில் அதிக ஆழத்தில் வெவ்வேறு வகையான குணங்கள் கொண்ட தனிமங்கள் நீரில் கலந்து மேலே வரும். நிலக்கரியின் நுண் கரி துகள்களும் கலந்து வரும். இந்த நீரை எந்த உபயோகத்திற்கும் பயன்படுத்த முடியாது.
தஞ்சாவூரில் வரும் CBM திட்டம் நிறைவேற வேண்டுமானால் நிலத்தடி நீரை முற்றிலுமாக அங்கிருந்து அப்புறப்படுத்த பட வேண்டும். இப்பொழுது இதன் ஆபத்தின் பரிமாணம் விளங்கும்.
மேலும் நிலக்கரியில் இருந்து எரிவாயு மற்றும் அதை எடுக்கும் முறையில் நீர்தான் அதிக அளவு பயன்படுத்தப்படும். நீரை பயன்படுத்தி எரிவாயு எடுத்து நீரை முற்றிலுமாக அழித்து சுற்றுசூழலை மாசுபடுத்தும் இந்த CBM முறை.
இது எடுக்கப்படும் முறைகளில் அதிக பாதிப்பு ஏற்படுத்தும் (Hydraulic fracturing) நீரியல் விரிசல் ஏற்படுத்தும் ஆபத்து பற்றி அடுத்த கட்டுரையில் எழுதுகிறேன். மிகுந்த தீமையை ஏற்படுத்தும் இந்த நீரியல் விரிசல் முறையை பற்றி நம் மக்களுக்கு எந்த அரசும் தெரிவிக்கப்போவதில்லை. நிறைய நாடுகள் இந்த முறையை தடை செய்துள்ளன. அமெரிக்க அரசாங்கம் தன்னுடைய நாட்டின் மக்கள் தொகை அதிகமான இடங்களில் இந்த முறையை தடை செய்துள்ளது அது போலவே ஆஸ்திரலியா சில இடங்களில் தடை செய்துள்ளது. இதை முற்றிலும் தடை செய்ய அங்கும் மக்கள் போராட்டங்கள் நடந்து கொண்டு இருக்கின்றன. மிக அதிகமான எண்ணிக்கையில் சிறிய நாடுகள் இதை முற்றிலுமாக தடை செய்தது கவனிக்க வேண்டிய விசயமாகும். இப்படிப்பட்ட ஆபத்தை நம் மண்ணுக்கு கொண்டுவர இந்திய் அரசு துடிக்கிறது.
இங்கு இந்த நீரியல் விரிசல் (Hydraulic fracturing) முறையில் ஏற்படும் தீமைகள் சிலவற்றை பார்ப்போம்.
# கழிவு கலந்து வெளிவரும் நீர்: மீத்தேன் நிலக்கரி படுகையில் இருந்து எடுக்க வேண்டுமானால் தொடர்ந்து நிலத்தடி நீரை வெளியேற்றிக்கொண்டே இருக்கவேண்டும். இந்த நீர் மிகுந்த மாசடைந்து வேதிப்பொருட்களான பென்சீன், டொலுவீன், ஈதைல்-பென்சீன் மற்றும் கடின தனிமங்களான ஆர்சனிக், காட்மியம், ஈயம் மற்றும் பாதரசம் கலந்து வரும். உலகின் இந்தமுறையை மேற்கொண்டு மீத்தேன் எடுத்த மிகுதியான இடங்களில் கதிரியக்க தனிமங்களும் நீரில் கலந்து வெளிவந்தது ஆய்வில் தெரியவந்துள்ளது.
# நீரை அப்புறப்படுத்தல் : தினந்தோறும் பல மில்லியன் லிட்டர் அளவில் ஒவ்வொரு எரிவாயு கிணற்றில் இருந்து மாசடைந்த நீர் வெளியேற்றப்படும். இந்த நீர் பாசனத்திற்கோ மக்களின் உபயோகத்திற்கோ சற்றும் உகந்தல்ல. எனவே இந்த நீரை ஒரு ஏரி போன்ற இடத்தில தேக்கி சூரிய ஒளியில் ஆவியாக மாற்ற முயன்றார்கள். இருந்தாலும் மிகுதியான நீர் மேலும் மேலும் சேரும் பட்சத்தில் அதை அருகில் உள்ள ஆற்றில் விடுவார்கள். காவரி முற்றிலும் கழிவு கலந்து கருப்பாக ஓடும் அவலத்தையும் பார்கப்போகிறோமா? ஸ்கட்லாந்து நாட்டில் அரித் (Arith) என்ற இடத்தில அமைந்துள்ள எரிவாயு கிணற்றில் இருந்து வெளிவரும் நீரை அங்கு ஓடும் Forth என்ற நதியின் முகத்துவாரத்தில் தனியாக ஒரு குழாய் வைத்து கலக்கிறார்கள். அங்கும் மக்கள் போராடுகிறார்கள்.
# நிலத்தடி நீர் குறைதல் : தொடர்ச்சியாக வெளியேற்றப்படும் நீரினால் நிலக்கரி படுகையில் உள்ள நீரானது முற்றிலுமாக வெளியேற்றப்படும். இதனால் நிலத்தடி நீர் இன்னும் கீழே சென்று நிலக்கரி படிமங்களில் கலக்க நேரிடும். இதனால் விவசாயிகள் மற்றும் மக்களின் தேவைக்காக போடப்படும் போர்வெல் மீத்தேன் வாயு கலந்த நீரை வெளியேற்றும் ஆபத்தும் உண்டு. ஆஸ்ட்ரேலியாவில் இத்தகைய ஆபத்து நிகழ்ந்தது.
# காற்று மாசடைதல் மற்றும் தீப்பிடிக்கும் ஆபத்துகள்: மீத்தேன், ஹைட்ரஜன் சல்பைடு, நைட்ரஜன் ஆக்ஸைடு மற்றும் நாற்றம் அடிக்கும் பல்வேறு வாயுக்கள் மீத்தேன் எரிவாயு கிணற்றில் இருந்து வெளியேறும். மேலும் பரவி கிடக்கும் அதன் குழாய்களில் இருந்து பல்வேறுவிதமான தூசிகளும் வெளியேறி காற்றை மாசுபடுத்தும். தீப்பிடிக்கும் இயல்புள்ள இத்தகைய இடங்களில் தீ விபத்துக்கள் ஏற்பட்டதற்கான உதாரணங்கள் உள்ளன. கரும்புகை வெளியேறும் இத்தகைய எரிவாயு குழாய்களின் நெருப்பை அணைப்பது மிக எளிதல்ல.
# மீத்தேன் வாயு நீர்நிலைகளில் கலக்கும் ஆபத்து : எரிவாயு கிணறுகளில் எரிவாயுவை எடுக்க நிலத்தில் மிக ஆழத்தில் (கிட்டதட்ட 10,000 மீட்டர்) செயற்கையான நீரியல் விரிசல்கள் ஏற்படுத்தப்படும். அதிலிருந்து மிக அதிக அழுத்தத்தில் வெளியேறும் மீத்தேன் வாயுவானது எரிவாயு குழாய்களில் ஏதாவது சிறிய விரிசல் இருந்தாலும் அதன் மூலமாக வெளியேறும் ஆபத்து உள்ளது. நீர்மட்டத்தை கடக்கும் இடத்தில குழாய்களில் ஏற்படும் விரிசல் மீத்தேன் வாயுவை நீராதரங்களுக்கு கொண்டு செல்லும் ஆபத்து உள்ளது. ஆஸ்திரிரேலியாவில் குயின்ஸ்லாந்து பகுதியில் உள்ள காண்டமைன் ஆற்றில் இப்படி நிகழ்ந்து உள்ளது. மேலும் சில வீட்டில் உள்ள குடிநீர் குழாய்களில் இப்படி மீத்தேன் கலந்தும் வந்துள்ளது.
# கசிவுள்ள எரிவாயு குழாய்கள் : ஆய்வின்படி சராசரியாக 6% குழாய்கள் உடனடியாக கசிவுகளை உண்டாக்குகின்றன 50% எரிவாயு குழாய்கள் 15 வருடங்களுக்கு பிறகு கசிவுகளை ஏற்படுத்துகின்றன. இந்த CBM எரிவாயு திட்டமானது நூற்றுக்கணக்கான எரிவாயு கிணறுகளை கொண்டதாகவே அமையும். இந்த எரிவாயு கிணறுகள் என்றுமே மறு உபயோகத்திற்காக சீர்செய்யப்படுவதில்லை. எரிவாயு கிணறுகளை தொடர்ந்து பராமரிக்கும் திட்டங்களும் செயல்படுத்தப்படுவதில்லை. கிணறுகளில் பதிக்கப்பெறுவதாக சொல்லப்படும் ஸ்டீல் குழாய்களும் காலபோக்கில் அவை கிணறுகளிலேயே விழுந்து கசிவுகளை நிரந்தரம் ஆக்குகின்றன.
எரிவாயு கிணறு அமைந்துள்ள இடத்தினால் ஏற்படும் சுற்றுசூழல் சீர்கேடு : இந்த CBM எரிவாயு எடுக்கும் கிணற்றினை சுற்றிலும் கண்டிப்பாக சாலைவசதி தேவைப்படும். ஒரு நாளைக்கு கிட்டதட்ட 70 லாரிகள் ஒவ்வொரு கிணற்றிக்கும் செல்லும் தேவை உண்டு. கனரக வாகனங்கள்,மிகபெரிய லாரிகள் என்று கிணறு இயங்கும் குறைந்தபட்ச காலமான 20 ஆண்டுகாலம் வரையும் இவ்வாறு சென்றுவந்தால் அந்த இடத்தின் சாலைகள் எவ்வாறு இருக்கும் என்றும், நூற்றுகணக்கான எரிவாயு கிணறுகள் இவ்வாறு சாலைகள் மூலம் ஒன்றை ஒன்று இணைத்து கொண்டு இயங்கும். இவை பிரத்தியேகமான சாலைகள். வயல்களை அழித்து இந்த சாலைகள் போடப்பெற்றால் வயல்வெளிகள் அனைத்தும் பாழாய்ப் போகும். மேலும் அதிக வெளிச்சத்தை உமிழும் விள்க்குகள், மிகுந்த சப்தத்தை எழுப்பும் கருவிகள் என்று ஒலி,ஒளி,வளி,நிலம் அனைத்தும் நாசமாகப் போகும்.
குழாய்கள் பதிப்பது: இந்த எரிவாயு கிணறுகளில் இருந்து பெறப்படும் எரிவாயு குழாய்கள் மூலம் வேறு ஒரு இடத்தில சேகரிக்கப்படும். இவ்வாறு செல்லும் குழாய்களில் ஏற்படும் கசிவு மிகப்பெரும் விபத்தினை ஏற்ப்படுத்தும் சாத்தியம் உள்ளது. மக்கள் வசிக்கும் இடங்களில் இந்த குழாய்கள் சென்றால் மக்கள் அருகில் செல்லாதவாறு குறிப்பட்ட அளவு இடம் எரிவாயு நிறுவனத்தாரால் ஆக்கிரமிக்கப்படும். இங்கு நீங்கள் GAIL திட்டத்தால் தருமபுரி, திருப்பூர் பகுதிகளில் விவசாயிகளின் வயல்களை ஆக்கிரமித்து பதித்த குழாய்களை நினைவில் வைக்கவும்.
சுத்திகரிப்பு நிலையங்களினால் ஏற்படும் சீர்கேடு : இந்த நூற்றுக்கணக்கான எரிவாயு கிணறுகள் அனைத்தும் குழாய்கள் மூலம் இணைக்கப்பட்டு ஒரு முதன்மையான சுத்தகரிப்பு நிலையத்திற்கு எடுத்து செல்லப்படும். அவ்வாறு அமைந்துள்ள சுத்தகரிப்பு நிலையங்கள், மீத்தேன் தவிர கிடைத்துள்ள தேவையில்லாத வாயுக்களை வெளியேற்றுவர். எளிதில் தீப்பிடிக்கும் இந்த வாயுக்கள் வளிமண்டலத்தில் கலப்பதை தடுக்கும் விதமாக நெருப்பில் பற்ற வைத்தே அவற்றை நீக்க முடியும். நீங்கள் எரிவாயு கிணறுகளில் அருகில் பார்ப்பதாக இருக்கும் நீண்ட நெருப்பு ஜுவாலைகள் வெளியேறும் குழாய் இந்த வகையை சேர்ந்ததே. இதன் மூலம் வளிமண்டலத்தில் மிகுந்த தீமையை ஏற்ப்படுத்தும் ஆர்சனிக் கழிவுகள் கலக்கும். சுவாசிக்கும் அனைத்து உயிர்களும் பாதிக்கப்படும்.
தொழிற்சாலை சூழலாகும் கிராமங்கள்: அமைதியான கிராம சுற்றுசூழல் இந்த எரிவாயு கிணறுகளினால் முற்றிலும் இயந்திரமயமான தொழிற்சாலை போன்ற சூழலுக்கு தள்ளப்படும். இதனால் அந்த மண்ணை சார்ந்து வாழும் உயிரிகள் முற்றிலுமாக அழிந்துவிடும் அல்லது பாதிப்படையும். முற்றிலும் கிராமங்களே அதிகமாக இருக்கும் தஞ்சை மற்றும் அதன் சுற்றுபுறங்கள் இதனால் மிகுந்த பாதிப்பு அடையும்.
நிறுவனங்களின் லாபத்திற்காக பலியாகும் சமூகங்கள்: இங்கிலாந்து குடியரசின் உள்ளே இந்த CBM நிறுவனங்கள் உள்ளே நுழைந்த பின்பு அங்கு வாழும் மக்களின் சமூகங்களுக்கு நாளுக்கு நாள் அச்சுறுத்தல்கள் பல்வேறு வடிவங்களில் வந்தன. இதனால் வேறு வழியில்லாமல் வேறு இடங்களுக்கு பெரும்பான்மையான மக்கள் குடிபெயர்ந்தார்கள். மற்றும் சில சமூகங்கள் எரிவாயு கிணறுகளின் அருகிலேயே மாசடைந்த சுற்றுசூழலில் வாழும் துர்பாக்கிய நிலைக்கு ஆளானார்கள். இந்த நிறுவனங்களின் முதலாளிகள் மட்டும் லாபத்தில் கொழிக்க மக்கள் பல்வேறு இன்னல்களை அனுபவித்தார்கள். இந்த நிலைதான் மற்ற நாடுகளுக்கு இதன் தீமைகளை எடுத்து சொல்லியது.
நிலத்தினுள் தீப்பிடிக்கும் அபாயம் : CBM எரிவாயு கிணறுகளில் தொடர்ந்து மீத்தேன் எரிவாயு எடுக்கவேண்டும் என்றால், அந்த கிணறுகளில் இருந்து தண்ணீர் வெளியேற்றிக் கொண்டே இருக்க வேண்டும். இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைவதால் நிலத்தின் மீது கட்டப்படிருக்கும் வீடுகள், மற்றும் அனைத்து கட்டுமானங்களும் பாதிப்படையும். இந்த எரிவாயு கிணறுகளில் இருந்து தொடர்ச்சியாக வெளியேறும் வாயுக்கள் தீ பிடிக்கும் வாய்ப்புகள் அமையும்போது பூமியின் உள்ளே இருக்கும் நிலக்கரி படுகைகளும் தீப்பிடிக்கும் ஆபத்து உண்டு. அப்படி தீப்பிடித்தால் அதை எளிதில் அணைக்க முடியாது இதற்க்கு உதாரணமாக இங்கேயே இந்தியாவில் ஜார்கண்ட் மாநிலத்தில் ஜஹாரியா என்ற இடத்தில நிலக்கரி படுகையில் தீப்பிடித்து அதை இன்று வரை அணைக்க முடியவில்லை. 1916ம் ஆண்டு தான் பூமிக்கு கீழ் நிலக்கரி படுகையில் தீப்பிடித்ததை கண்டறிந்தார்கள். கிட்டத்தட்ட 97 ஆண்டுகளாக அந்த தீ இன்றும் எரிந்து கொண்டு இருக்கிறது. அங்கு வாழும் மக்கள் பல்வேறு நோய்களின் பாதிப்பினால் சிரமப் படுகிறார்கள்.
நிலக்கரி எடுக்கும் மாற்றுமுறைகள் : இவ்வாறு மீத்தேன் எரிவாயு எடுத்து முடித்தபின் பூமிக்கு கீழே இருக்கும் நிலக்கரிகளின் மீது அவர்களின் கவனம் திரும்பும். சில இடங்களில் திறந்த நிலக்கரி சுரங்கங்களும் மற்ற இடங்களில் மாற்று வழியில் நிலக்கரியை இந்த எரிவாயு கிணறுகளில் இருந்து எடுக்கும் முயற்சிகளும் நடைபெறுகின்றன. இந்த நிலக்கரியானது உயிர்வேதி மாற்றத்தினால் கிடைக்கும் எரிபொருட்களிலேயே (Fossil Fuel)மிகுந்த மாசடைந்த எரிபொருள். இந்த நிலக்கரி எடுக்கும் முறைகளினால் நிலமும், சுற்றுச்சூழலும் மிகுந்த பாதிப்பு அடையும்.
பாதிப்புகளை சந்திக்கும் தற்போதைய தொழில்கள்: இந்த CBM எரிவாயு திட்டம் எங்கெங்கு எல்லாம் வருகிறதோ அங்கு இருக்கும் அனைத்து தொழில்களும் பாதிப்பு அடையும். விவசாயம், சுற்றுலா, சிறு மற்றும் குறு தொழிற்சாலைகள் முற்றிலுமாக மூடும் நிலையை அடையும்.
திடீர், தற்காலிக வளர்ச்சிகளும் நீண்டகால பாதிப்புகளும்: முந்தைய தொழிற் துறைகள் அனைத்தும் இதனால் பாதிப்பு அடையும். இந்த திட்டத்தினால் நீண்டகாலமாக மக்களின் பொருளாதாரமாக, வாழ்வாதாரமாக இருந்த அனைத்து வாய்ப்புகளும், வேலை வாய்ப்புகளும் நிரந்தர பாதிப்புக்கு உள்ளாக்கபடும். தற்காலிக மற்றும் குறுகியகால வளர்ச்சி மற்றும் லாபத்திற்காக நீண்டகால பாரம்பரிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும் தொழிற் துறைகள் மக்களால் கை கழுவப்படும்.
கன ரக வாகனங்களின் போக்குவரத்து: எரிவாயு குழாய்களை பதிக்க துளை போடும்போது வெளிவரும் மண் மற்றும் கல் கழிவுகள் பெருமளவில் மலை போல குவித்து வைக்கப்படும். இந்த மண் மற்றும் கல் குவியல்களை அங்கிருந்து அப்புறப் படுத்துதல் மிக அவசியம். ஒவ்வொரு எரிவாயு குழாய்களில் இருந்து தோண்டப் பெரும் மண் குவியல்களை அப்புறப் படுத்த பெருமளவில் கன ரக வாகனங்கள் பயன் படுத்தப்படும். இந்த வாகனங்கள் தொடர்ந்து வந்தும், போய் கொண்டும் இருப்பதால் சுற்றி இருக்கும் நிலம் பாதிக்கபடும். இது மட்டும் அல்லது துளை போடும் இயந்திரங்களை சுமந்துகொண்டு வரும் வாகனங்கள் எண்ணிலடங்காது.
சாலை பாதிப்பு மற்றும் நிலநடுக்க அபாயம்: எரிவாயு குழாய்களுக்கு பொருட்களை ஏற்றிக்கொண்டும், கழிவுகளை சுமந்து கொண்டு வெளியேறும் வாகனங்களால் சாலை முற்றிலும் சேதமடையும். மேலும் வழக்கமான முறையில் நிலக்கரி எடுக்கும் இடங்களிலும் மற்றும் CBM எடுக்கும் முறையில் பயன்படுத்தப் பெறும் நீரியல் விரிசல் முறையில் சில இடங்களில் நிலநடுக்கங்கள் வந்துள்ளது கவனிக்க படவேண்டிய அபாயம்.
வசிப்பிடத்தின் பாதிப்புகள் : எரிவாயு கிணறுகளில் அருகில் வசிக்கும் மக்கள் அவர்களின் நிலம் மற்றும் வீடுகளின் மதிப்பு முற்றிலுமாக குறைந்து விடும். அதை அவர்கள் மராமத்து பண்ணுவதோ மற்றும் அவற்றை விற்பனை செய்வதாலோ எந்த பயனும் ஏற்ப்படப் போவதில்லை. இந்த எரிவாயு கிணறுகள் அமையும் இடங்களில் எரிவாயு கிணறுக்கான உள் கட்டமைப்பு அதன் அமைப்பின் இயல்பால் ஏற்கனவே இருந்த தொழிற் சாலைகள் மிகுந்த நஷ்டங்களை எதிர்கொள்ளும். உதாரணமாக, இந்த எரிவாயு கிணறுகளை இணைக்கும் சாலைகள் குறுக்கும் நெடுக்குமாக செல்லும் வழி தஞ்சையை பொறுத்த வரை அதனை சுற்றியுள்ள வயல் வெளிகளில்தான் செல்லும். எனவே எப்படி பார்த்தாலும் தஞ்சை விவசாயம் என்பது இந்த CBM திட்டத்தினால் முற்றிலும் அழியப்போகும் என்பது உறுதி.
மாற்று எரிபொருள் திட்டத்திற்கான எதிரி இந்த CBM: மேலும் மேலும் இந்த மீத்தேன் திட்டத்தில் செய்யப்படும் முதலீடானது இப்போது மிகுந்த அறிவாற்றலுடன், செயல் திறனுடனும் செய்யப்படும் அனைத்து மாற்று எரிபொருள் உற்பத்தி திட்டங்களுக்கும் மாபெரும் எதிரியாக மாறப்போகிறது. சூரிய ஒளியின் மூலமாகமின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டங்களும், காற்றலை திட்டங்களும் இதனால் நேரடியாக பாதிக்கப்படும். மறு சுழற்சியின் மூலம் பெறப்படும் மின்சார திட்டங்கள் இப்பொழுதுதான் மிகுந்த வளர்ச்சியின் நிலையில் உள்ளன. அவற்றை அழித்துவிடக்கூடிய வல்லமை கொண்டது CBM.
காலநிலை மாற்றம் : எந்த வகையில் பார்த்தாலும் இந்த CBM மீத்தேன் வாயு எடுக்கும் முறையானது மற்ற உயிர்வேதி பொருட்களின் கால மாற்றத்தினால் தோன்றக்கூடிய மற்ற எரிபொருட்களுக்கு (Fossil Fuel) மாற்று அல்ல. ஏனெனில் ஏற்கனவே கண்டறியப்பட்ட நிலக்கரி, கச்சா எண்ணெய் ஆகியவற்றை இந்த மீத்தேன் எரிவாயுவில் கலந்தால் மட்டுமே இந்த மீத்தேன் வாயுவை பயன்படுத்த முடியும். மேலும் மேலும் விரிவுபடுத்தப்படும் இந்த தொழில்நுட்பமானது கரியமில பொருட்களை உற்பத்தி செய்யும் முறையை விரிவாக்குவதால் பூமி வெப்பமயமாதலுக்கே வழி வகுக்கும். இந்த பருவநிலையில் ஏற்படும் வேதி மாற்றமானது பஞ்சத்திற்கும், பெரு வெள்ளத்திற்கும் மற்றும் பட்டினி சாவுகளுக்கும் காரணமாகின்றது. ஆய்வுகளின் படி ஆண்டிற்கு 45,000 மக்களின் இறப்பிற்கு இந்த மீத்தேன் எரிவாயு எடுக்கும் CBM காரணமாகின்றது.
முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி
ஒல்லாது வானம் பெயல்
பொருள்: மன்னன் முறை தவறி ஆட்சி செய்வானாயின் அந்த நாட்டில் பருவ மழை தவறி, மேகம் மழை பெய்யாமல் போகும்.
- த.அருண்குமார், மே 17 இயக்கம் (
- விவரங்கள்
- ஜெ.பிரபாகர்
- பிரிவு: சுற்றுச்சூழல்
அனில் அகர்வால் என்ற லண்டனில் குடியேறிய இந்தியரின் 'வேதாந்தா' தொழிற்சாலைக்கு எதிராக இந்தியாவில் உழைக்கும் மக்கள் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கின்றனர்.
குஜராத், கோவா ஆகிய மாநிலங்களில் வேதாந்தாவின் தாமிர உருக்கு ஆலை அமைக்க முயன்று, தோற்றுப் போய் பின்னர் மராட்டிய மாநிலம் இரத்தினகிரியில் 12.12.1989இல் அடிக்கல் நாட்டப்பட்டது. அங்கு விவசாயிகள் கிளர்ந்து எழுந்து போராடியதால், அம்மாநில முதல்வர் சரத்பவார் ஆலை அமைக்க அனுமதி மறுத்து 1.5.1994இல் கட்டுமானப் பணிக்குத் தடை விதித்தார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா மக்களின் போராட்டத்தை கண்டு கொள்ளாமல், தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் 30.10.1994 அன்று ஸ்டெர்லைட் தொழிற்சாலை அமைக்க அனுமதித்து, கட்டுமானப் பணிக்கு அடிக்கல்லும் நாட்டினார். அதனால் 18.3.1996 அன்று தூத்துக்குடி வந்த ஜெயலலிதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு கருப்பு நாளாக அனுசரிக்கப்பட்டது.
தூத்துக்குடி துறைமுகத்துக்கு தாமிரத் தாது கொண்டு வந்த எம்.வி.ரீசா என்ற கப்பல் 20.3.1996 அன்று ஆழ்கடலில் தடுத்து மீனவர்களால் விரட்டியடிக்கப்பட்டது. கப்பல் கொச்சிக்கு சென்றது. 78 விசைப்படகுகள், 24 நாட்டுப்படகுகள் கொண்ட சுமார் 500 பேர் கொண்ட சிறிய மீனவர் படைதான் இதனை செய்தது.
பின்னர் 10.4.1996 முதல் இரு பெண்கள் உள்ளிட்ட 16 பேர் காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்தனர். அரசின் சார்பில் 18.4.1996 முதல் ஸ்டெர்லைட் நிறுவனத்தின் கழிவுகள் குழாய்கள் மூலம் கடலில் கலக்கப்படாது என்று உறுதியளிக்கப்பட்டது.
மக்களின் போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து 1996 இல் தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் பரதவர், நாடார் இடையே திட்டமிட்ட சாதி மோதல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டது. மாவட்டத்தின் பிற பகுதிகளில் பள்ளர், தேவர் இடையே சாதி மோதல்கள் வீரியமானது. இதன் பிண்ணனியில் பல்வேறு அரசியல் காரணங்கள் இருந்தன.
ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கம் என்ற - தமிழ்மாந்தன் தலைமையிலான - அமல்ராஜ் என்ற இறையரசு, ராஜேஸ் என்ற கடலரசன், செ.ரெ.வெனி இளங்குமரன், சி.சற்குணம், ம.சான்சன், ம.அன்வர், முத்துராஜ், அ.அருள்ராஜ் ஆகியோரைக் கொண்ட அமைப்பு 20.7.1996 அன்று நடத்திய ஸ்டெர்லைட் மாநாட்டில் திரளான மக்கள் கலந்து கொண்டு எதிர்ப்புகளை பதிவு செய்தனர்.
சாதியின் பெயரால் பிரிந்து கிடந்த மக்களின் ஒற்றுமையின்மையை பயன்படுத்தி கொச்சியில் இருந்து லாரிகள் மூலம் தாமிரத் தாதுக்கள் கொண்டு வரப்பட்டதோடு, 19.10.1996 இல் எம்.வி.பரங்கவி என்ற கப்பல் தூத்துக்குடி துறைமுகத்துக்கு நேரிடையாகவே தாமிரத்தாதுவை சுமந்து வந்து சேர்ந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து துறைமுகத் தொழிற்சங்கத் தலைவர் சி.பசுபதிபாண்டியன் தலைமையிலான தொழிலாளர்கள் 20.10.1996 முதல் துறைமுகத்தில் சரக்குகளை இறக்க மறுத்துப் போராடினர். 152 விசைப்படகுகள், 36 நாட்டுப் படகுகளில் ஒன்று திரண்ட மீனவர்கள் 24.10.1996 இல் அக்கப்பலை முற்றுகையிட்டு துறைமுகத்தை விட்டே வெளியேற்றினர்.
இதற்கிடையில் 1996 இறுதியில் தமிழக முதல்வரான கருணாநிதி அனுமதி கொடுத்ததால் 1997 முதல் ஸ்டெர்லைட் ஆலை இயங்க ஆரம்பித்தது.
தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் தடை இல்லா சான்றிதழை 1.8.1994ல் இரு கட்டுப்பாடுகளோடு கொடுத்தது. மன்னார் வளைகுடாவிலிருந்து 25 கிலோ மீட்டருக்கு அப்பால் தொழிற்சாலை நிறுவப்பட வேண்டும். தொழிற்சாலையைச் சுற்றி 250 மீட்டருக்கு பசுமை வளையம் உருவாக்க வேண்டும். ஆனால் ஆலை 14 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. பசுமை வளையம் குறிப்பிட்ட அளவில் அமைக்கவில்லை.
மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் தடையில்லாச் சான்று இல்லாமல் ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
14.10.1996ல் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் 40,000 டன் உற்பத்தி செய்ய அனுமதி வழங்கியது. ஆனால் ஸ்டெர்லைட் தொழிற் சாலையில் 1,70,000 டன் தாமிரம் உற்பத்தி செய்யப்பட்டது.
ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கத்தின் சார்பாக ‘தூய சுற்றுச் சூழலுக்கான தேசிய அறக் கட்டளை’ என்ற அமைப்பின் வழக்குரைஞர் வி.பிரகாஷ் 7.11.1996 இல் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். அவ்வழக்கில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, சி.பி.எம். கனகராஜ், சி.பி.ஐ.அப்பாத்துரை உள்ளிட்டோர் தங்களையும் இணைத்துக் கொண்டனர்.
இதற்கிடையில் 5.7.1997 அன்று ஸ்டெர்லைட் ஆலையில் ஏற்பட்ட நச்சு வாயுக் கசிவால் அருகிலுள்ள ரமேஷ் பிளவர்ஸ் நிறுவனத்தில் 165 பெண் தொழிலாளர்கள் மயங்கி விழுந்தனர். அதில் சிலருக்கு கருச்சிதைவு ஏற்பட்டது. அடுத்து 2.3.1999 அன்று அகில இந்திய வானொலி நிலையப் பணியாளர்கள் 11 பேர் ஸ்டெர்லைட் நச்சு வாயுக் கசிவால் மயங்கி விழுந்தனர்.
நீதிமன்ற வழிகாட்டுதலின்படி டாக்டர் கண்ணா தலைமையில் நீரி அமைப்பினர் 1998 இல் ஆய்வு செய்து நீதிமன்றத்தில் அறிக்கை கொடுத்தனர். அதனடிப்படையில் நடந்த விவாதத்தின் முடிவாக 23.11.1998 அன்று ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதியரசர்கள் லிபரான், பத்மநாபன் குழு உத்தரவிட்டது. அதன் பின்னர் நீதியரசர் அகர்வால் தலைமையிலான அமர்விற்கு வழக்கு மாற்றப்பட்டு 25.12.1998 அன்று ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் இயங்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
நாக்பூர் நீரி நிறுவனம், 1998-ஆம் ஆண்டு ஸ்டெர்லைட் நச்சு ஆலை சுற்றுப்புறச் சூழலுக்கும், நிலம், நீர், காற்று மண்டலத்திற்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஆய்வு அறிக்கை தந்து இருந்தது. 1999-ஆம் ஆண்டில் பல்டியடித்த நீரி நிறுவனம், 2003-ஆம் ஆண்டில் ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு ஆதரவாக ஆய்வு அறிக்கை தந்தது. இதற்கு காரணம் 1998 நவம்பர் அறிக்கைக்கு பின்னர் 1.22 கோடி ரூபாய் நீரி அமைப்பில் உள்ள அறிவியலாளர்களுக்கு ஆலோசனைக் கட்டணமாக ஸ்டெர்லைட் வழங்கியுள்ளது.
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதிக்கப்பட்ட விதிப்படி ஆண்டுக்கு 1,36,850 டன்னை மட்டுமே இந்த ஆலை உற்பத்தி செய்ய வேண்டும். ஆனால், 2003 டிசம்பரில் வேதாந்தா குழுமம் லண்டன் பங்குச் சந்தையில் தனது குழும நிறுவனங்களை பட்டியலிட்டபோது ஆண்டுக்கு 1,80,000 டன் உற்பத்தி செய்வதாக தெரிவித்தனர். இது விதியை மீறிய செயல் ஆகும்.
21.9.2004 இல் முனைவர் தியாகராசன் தலைமையிலான உச்ச நீதிமன்ற ஆய்வுக் குழு ஸ்டெர்லைட் தொழிற்சாலையை ஆய்வு செய்தது. அப்போது அனைத்து விதிகளும் மீறப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
தற்போது உள்ள உற்பத்தி திறனுக்கு ஏற்ற அளவு கழிவுகளை சுத்திகரிக்கவும், பராமரிக்கவும் தேவையான கட்டமைப்பு இந்த ஆலையில் இல்லை. ஆதலால் இந்த ஆலையின் விரிவாக்கப் பணிகளுக்கு சுற்றுச்சூழல் அமைச்சகம் இசைவு அளிக்கக்கூடாது என்றும், முன்னரே இசைவு அளித்திருப்பின் அதை திரும்பப் பெறுமாறும் உச்ச நீதிமன்றத்தின் குழு அறிவுறுத்தியது. ஆனால், மறுநாளே 22.9.2004 மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் விரிவாக்கத்திற்கு அனுமதி கொடுத்தது.
2004 நவம்பரில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அமைத்த குழு ஸ்டெர்லைட் ஆலையில் உரிமம் அளிக்கப்பட்டுள்ள 70,000 டன்கள் ஆனோடை விட அதிகமாக, அதாவது 1,64,236 டன்கள் ஆனோடை ஸ்டெர்லைட் ஆலை உற்பத்தி செய்துள்ளது. இரு உருளைவடிவ தாங்கு உலைகளையும், கழிவுகளை தூய்மை செய்யும் ஓர் உலையையும், ஒரு ஆனோடு உலையையும், ஒரு ஆக்சிஜன் பிரிவையும், ஒரு கந்தக அமிலப் பிரிவையும், ஒரு காஸ்டர் பிரிவையும், ஒரு கன்வெர்டரையும் எவ்வித அனுமதியும் பெறாமல் கட்டியுள்ளனர். இரண்டு பாஸ்பரஸ் அமில பிரிவுகளும், சுத்திகரிப்பு மற்றும் தொடர்ச்சியான காஸ்டர் ராட் உருவாக்கும் பிரிவும் கட்டப்பட்டு வருவதாகவும் அதற்கும் அனுமதி பெறவில்லை என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டது.
ஆனால், 2005 இல் உச்சநீதிமன்ற ஆய்வுக் குழு இதனையெல்லாம் குறைத்து மதிப்பிட்டு அறிக்கை தயார் செய்தது.
அனுமதியின்றி கட்டப்பட்ட கந்தக அமிலப் பிரிவு தனது உற்பத்தியை 2005 இல் துவக்கியது. அனுமதி அளிக்கப்பட்ட 3,71,000 டன் கந்தக அமில உற்பத்தியைவிட அதிகமாக 5,46,647 டன் கந்தக அமிலம் 2004 ஏப்ரல்- 2005 மார்ச் வரை உற்பத்தி செய்யப்பட்டது. இது உரிமம் வழங்கப்பட்டதை விட 47% அதிகம்.
உச்சநீதிமன்றத்தின் முனைவர் தியாகராசன் தலைமையிலான குழு சட்டத்திற்கு புறம்பாக கட்டப்பட்ட பகுதிகளுக்கு ஒப்புதல் அளிக்குமாறு ஆலோசனை கூறியது.
7.4.2005 இல் சுற்றுச்சூழல் அமைச்சக தலைமை இயக்குநரான முனைவர் இந்திராணி சந்திரசேகர் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு, "உச்ச நீதிமன்ற குழுவின் பரிந்துரைப்படி ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு ஒப்புதல் அளிப்பதற்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் முடிவெடுக்கலாம்” என்று ஆணை பிறப்பித்தார். அதன்படி, 19.4.2005 அன்று தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவரான முனைவர் கிரிஜா வைத்தியநாதன் விதிமுறையை மீறி கட்டப் பட்ட ஸ்டெர்லைட் ஆலையின் புதிய பிரிவுகளுக்கு அனுமதி அளித்தார்.
பல ஆயிரம் கோடி ரூபாய் வரி ஏய்ப்பு நடந்திருப்பதாக புகார் கூறப்பட்டு வந்த நிலையில் 24.7.2010 அன்று ஸ்டெர்லைட் நிறுவனத்தின் துணைத் தலைவர் வரதராஜன் ரூ.750 கோடி வரிஏய்ப்பு செய்ததாக கைது செய்யப்பட்டார். அப்போது மீண்டும் துவங்கிய போராட்டம் மனித உரிமை பாதுகாப்பு மையம், நாம் தமிழர் அமைப்பு உள்ளிட்ட வழக்குரைஞர்களால் முன்னெடுக்கப்பட்டு வரதராஜன் நீதிமன்ற வளாகத்தில் தாக்கப்பட்டார்.
மதிமுக மாவட்ட செயலாளர் ஜோயல், பேரா.பாத்திமா பாபு முன்னிலையில் தாமிரபரணி பாதுகாப்பு பேரவையின் அமைப்பாளர் நயினார் குலசேகரன் தலைமையில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக் குழுவினர் 26.7.2010 அன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை இழுத்து மூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் 28.9.2010 அன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதியரசர் எலிப் தர்மராவ், பால்வசந்தகுமார் தலைமையிலான அமர்வு ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலையை நிரந்தரமாக மூட ஆணை பிறப்பித்தது.
இதனை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. ஆனால், வழக்கை நடத்தாமல் வேதாந்தா குழுமம் இழுத்தடித்தது. 2012 இறுதியில் உச்ச நீதிமன்றத்தில் வாதங்கள் நடைபெற்றன. 2013 ஏப்ரல் முதல் வாரத்தில் இவ்வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வர இருக்கிறது.
தாமிரம் உற்பத்தி செய்யப்படும்போது சல்பர் டை ஆக்சைடுடன், ஆர்சின் போன்ற வாயுக்களும் வெளியிடப்படுகின்றன. 2000 கிலோ தாமிரம் உற்பத்தி செய்யப்படும் பொழுது 4 கிலோ சல்பர் டை ஆக்சைடு வெளியிடப்படுகிறது. 20 கிலோ தாமிரம் உற்பத்தி செய்யப்படும் பொழுது 0.1 கிலோ துகள்கள் வெளியிடப்படுகின்றன. இவை காற்றை கடுமையாக மாசுபடுத்துகின்றன. தாமிரம் உற்பத்தியின்போது வெளியிடப்படும் கழிவுநீரில் காரீயம், காட்மியம், துத்தநாகம், ஆர்செனிக், பாதரசம் போன்ற உலோகங்கள் உள்ளன. இவை நீரை நேரடியாக மாசுபடுத்துகின்றன. இந்த உலோகங்கள் நச்சுத் தன்மை வாய்ந்தவை. திடக்கழிவுகளில் 0.5-0.7 கிலோ வரை தாமிரம் உள்ளது, ஒரு டன் தாமிரம் உற்பத்தி செய்யப்படும்போது, மூன்று டன் திடக்கழிவு வெளியிடப்படுகிறது. இவை நல்ல நிலங்களில் கொட்டப்படுகின்றன. அதனால் நிலம் பாழாகிறது.
அமெரிக்காவில் வசிக்கும் உலகப் புகழ்பெற்ற சுற்றுச்சூழல் ஆய்வாளார், டாக்டர் மார்க் செர்னைக் என்பவர், ஸ்டெர்லைட் வளாகத்திலும், சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமங்களிலும் சேகரிக்கப்பட்ட மண், தண்ணீர், ஸ்டெர்லைட் கழிவுகள் இவற்றின் மாதிரிகளை, சோதனைச் சாலையில் ஆய்வு செய்து தந்த ஆய்வு அறிக்கையில், ”மண்ணும், நீரும் நச்சுத் தன்மை வாய்ந்த உலோகங்களின் தாக்கம் கொண்டு இருப்பதாகவும், கால்நடைகள் செத்துப்போகும், மனிதர்கள் புற்று நோய் போன்ற நோய்களால் பாதிக்கப்படுவார்கள், மனிதர்கள் ஆயுட்காலம் இவற்றால் குறையும்” என்று பல்வேறு புள்ளி விவரங்களுடன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில்தான், ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 2013 மார்ச் 23 அதிகாலையில் வெளியேறிய கந்தக டை ஆக்சைடு வாயு, காற்று மண்டலத்தில் கலந்து, தூத்துக்குடியில் பல்வேறு பகுதியில் உள்ள மக்கள் சுவாசிக்க முடியாமல், மூச்சுத் திணறலுக்கு ஆளாகினர். கதிர்வீச்சு கலந்து இருந்த இந்த நச்சுக் காற்றால், பனித்துளிகள் படர்ந்து இருந்த செடிகள்,மரங்களின் இலைகளும், பூக்களும், நிறம் மாறி, கருகி உதிர்ந்தன.
அதே நாளில் ஸ்டெர்லைட் ஆலையின் உள்ளே மயக்கமடைந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த கைலாஷ் மேத்தா என்பவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.
ஸ்டெர்லைட் ஆலை விபத்திற்கான பொறுப்பை ஏற்று, தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் 1997 மற்றும் 1998 இரு ஆண்டுகளில் மட்டும் நான்கு முறை மொத்தம் ஒன்பது லட்சத்து நாற்பதாயிரம் அபராதம் கட்டியுள்ளனர்.
1994 முதல், 2004 க்கு இடைப்பட்ட காலங்களில் நடந்த விபத்துகளில், 139 தொழிலாளர்கள் படுகாயமுற்று உள்ளனர். 13 பேர் இறந்து உள்ளனர். கடந்த இரண்டு வருடங்களில் மட்டும் பத்துக்கும் மேற்பட்ட நபர்கள் மர்மமாக இறந்துள்ளனர்.
அமெரிக்காவில், 1890 ஆம் ஆண்டு, வாஷிங்டனுக்கு அருகில் அமைக்கப்பட்ட அசார்கோ (Asarco) எனும் தாமிர ஆலை, மக்கள் எதிர்ப்பால், 1984 இல் மூடப்பட்டது. கொள்ளை இலாபம் இந்த ஆலையில் கிடைக்கிறது என்பதால், அமெரிக்காவிலும், சிலியிலும் பயனற்றது என்று தூக்கி எறியப்பட்ட பழைய இயந்திரங்களையும், 70 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழைய தொழில்நுட்பத்தையும் கொண்டு, தமிழ்நாட்டில் இந்த ஸ்டெர்லைட் ஆலை அமைக்கப்பட்டுள்ளது.
தாமிரபரணியில் இருந்து முறைகேடாக, திருவைகுண்டம் அணைக்கட்டிற்கு முன்னதாகவே ஸ்டெர்லைட் ஆலை குழாய் மூலம் தண்ணீர் எடுத்து வருகின்றது. தமிழகத்தில் புற்றுநோயால் பாதிக்கப்படும் நபர்கள் அதிகம் சிகிச்சை பெறுவது தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்தான். சிறுநீரக கோளாறால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கையிலும் தூத்துக்குடி மாவட்டம்தான் தமிழகத்தில் முதலிடம் வகிக்கின்றது.
தூத்துக்குடி மாநகரிலும், சுற்றியுள்ள பகுதியிலும் குழந்தைகளுக்கு நோய் தாக்குதல் அதிகரித்து வருகின்றது. சுவாசக் கோளாறு, புற்று நோய், கண் எரிச்சல், நுரையீரல் சார்ந்த வியாதிகள், மலட்டுத் தன்மை மற்றும் சிறுநீரகம் சார்ந்த நோய்கள் தூத்துக்குடியில் அதிகரித்து வருவதற்கு காரணகர்த்தாவாக ஸ்டெர்லைட் தொழிற்சாலைதான் உள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையின் ஸ்லாக் எனப்படும் கருப்பு கழிவுகள், வெள்ளைநிற ஜிப்சம் ஆகிய கழிவுகள் அகற்றப்படாமல் குவிக்கப்பட்டு வருவதோடு, கழிவுகளைக் கொண்டு சாலைகள் அமைத்து வருவது, கிராமங்களில் கொட்டுவது, நீர் நிலைகளில் கொட்டுவது என்று சூழல் சீர்கேட்டினை ஏற்படுத்தி வருகின்றது ஸ்டெர்லைட் ஆலை. இந்தக் கழிவுகளால் பொதுமக்கள் நேரடியாக பாதிக்கப்படுகின்றனர்.
தெற்கு வீரபாண்டியபுரம் மற்றும் அதைச் சார்ந்த அ.குமாரரெட்டியார்புரம், காயலூரணி ஆகிய கிராமங்களில் நிலத்தடிநீர் விஷ நீராக மாறிவிட்டது. இதுகுறித்து மஞ்சள் நீர் காயலில் உள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சான்றிதழ் மூலம் தெரியபடுத்தியுள்ளது.
மத்திய அரசின் நகர்புற மேம்பாட்டு அமைச்சகம் ஆய்வின்படி சுற்று சூழலிலும், நிலத்தடி நீர் மாசுபாட்டிலும் இந்தியாவில் தொழில் நகரமான தூத்துக்குடி மிக மோசமான நகரம் என்றும், ஆபத்தான நகரம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மூல காரணம் ஸ்டெர்லைட் தொழிற்சாலை. அதனால் தங்களது உயிர் காக்க, தலைமுறைகள் தழைக்க, மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட், சத்திஸ்கரில் பால்கோ, ஒரிசாவில் வேதாந்தா அலுமினியம் கோவாவில் சேசா கோவா என்று இந்தியாவையே வளைத்துப் போட்டிருக்கும் வேதாந்தா குழுமம் இந்திய அரசியல் கட்சிகளுக்கு 2011 ஆம் ஆண்டில் $2.01 மில்லியனும் (சுமார் ரூ 11 கோடி), கடந்த (2010 -2012) மூன்று ஆண்டுகளில் மொத்தம் $5.69 மில்லியனும் (சுமார் ரூ 28 கோடி) நன்கொடையாக கொடுத்திருக்கிறது. நாடாளுமன்ற தேர்தல் நடந்த 2009-10-ம் ஆண்டில் வேதாந்தாவிடமிருந்து $3.66 மில்லியன் பணத்தை பெற்றிருக்கின்றன இந்திய அரசியல் கட்சிகள்.
ஆளும் காங்கிரஸ் கட்சிக்கும், எதிர்க் கட்சியான பாரதீய ஜனதா கட்சிக்கும் வேதாந்தா தொடர்ந்து நன்கொடைகளை வழங்கி வந்திருக்கிறது. இந்துத்துவா குழுக்களால் நடத்தப்படும் லண்டனில் இருக்கும் கிருஷ்ணா அவந்தி தொடக்கப் பள்ளிக்கும் வேதாந்தா நிதி அளிக்கிறது. வேதாந்தாவின் ஸ்டெர்லைட் நிர்வாக இயக்குநராக கடந்த 2004 ஆம் ஆண்டு வரை ப.சிதம்பரம் பதவி வகித்து வந்தார். அதனால் பெரிய அளவில் அரசியல் நெருக்கடி ஏதுமின்றி தொடர்ந்து தப்பித்து வருகின்றது ஸ்டெர்லைட் ஆலை.
எனினும் மக்கள் மன்றத்தில் தீர்ப்புகள் எழுதப்படும் போது பதில் சொல்லித்தானே ஆக வேண்டும்.
- ஜெ.பிரபாகர் (
(நன்றி : ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கம், கடலோர மக்கள் கூட்டமைப்பு, ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக் குழு, பூவுலகின் நண்பர்கள்)
- விவரங்கள்
- பி.தயாளன்
- பிரிவு: சுற்றுச்சூழல்
உலக வங்கி பன்னாட்டு நிதி நிறுவனம், உலக வர்த்தக அமைப்பு ஆகிய மூன்று அமைப்புகளும், உலகமயம், தனியார் மயம், தாராளமயம் ஆகிய மூன்று முழக்கங்களும் இந்தியாவைச் சுரண்டும் நிலைக்குக் கொண்டு சென்றுள்ளது.
அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, ஜப்பான் போன்ற நாடுகள், ஆசியா, தென் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்காவில் உள்ள வளரும் நாடுகளில் தங்கள் வணிகத்தையும், மூலதனத்தையும் செலவிட்டுப் பெருவாரியாக இலாபம் ஈட்ட வழி வகை செய்யப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் மற்றும் வளர்ச்சிக்கான சபை 1992 ஆம் ஆண்டு சுற்றுச் சூழலுக்காக உலக நாடுகளின் தலைவர்களை அழைத்து நடத்திய உச்சி மாநாடு ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. உலகத்தைச் சுற்றுச் சூழல் சீரழிவிலிருந்து பாதுகாக்க இதுவே கடைசி வாய்ப்பு என்று உலக நாடுகள் ஆவலுடன், எதிர்பார்ப்புகளுடன் கலந்து கொண்டன. அந்த புவி உச்சி மாநாட்டில் மூன்று முக்கியமான சிக்கல்கள் ஆய்வு செய்யப்பட்டன.
புவி வெப்ப உயர்வுக்கு மூல காரணமாக இருப்பது காற்றின் மாசுபாடு ஆகம். குறிப்பாகக் கார்பன்-டை-ஆக்சைடு காற்று மண்டலத்தில் அதிகமாவதற்குத் தொழிற்சாலைகளும், வாகனங்கள் வெளியிடும் புகையும் முக்கிய காரணம். பணக்கார நாடுகள் காற்றின் மாசுபாட்டை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. எனவே மேலை நாடுகள் அதிலும் அமெரிக்கா தனது எரிபொருள் பயன்பாட்டைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்று புவி உச்சி மாநாட்டில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் அப்போதைய அமெரிக்கா ஜனாதிபதி பேசும்போது, அமெரிக்கர்களின் வாழ்க்கை முறையில் எரிபொருள்களைக் குறைத்துக் கொள்ளும் பேச்சுக்கே இடமில்லை என்று ஆணவமாக பதிலளித்தார்.
பல்லுயிர் பெருக்கம் தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, இந்தியா மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகளின் மிகப் பெரும் சொத்தாகும். உயிரினத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி வாணிபம் செய்யும் பல பன்னாட்டுக் கம்பெனிகளும், இந்தப் பகுதியில் உள்ள உயிரினங்கள், தாவர வகைகள் மீது தங்கள் கவனத்தைச் செலுத்தியுள்ளன.
உயிரித் தொழில் நுட்பத்துக்காக ஒரு நாட்டில் இருந்து உயிரின மாதிரியை இந்தக் கம்பெனிகள் பயன்படுத்தினால் அதன் வருமானம் அந்த நாட்டுடன் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும் என்ற முடிவு செய்யப்பட்டது. ஆனால் அமெரிக்கா உட்பட பல மேலை நாடுகள் இந்த முடிவுல் கையெழுத்து போட மறுத்துவிட்டன.
பசுமையான ஒரு உலகத்தைப் படைத்திட உலக நாடுகள் நடைமுறைப்படுத்த வேண்டிய செயல் திட்டத்தை அஜெண்டா 21 எடுத்துரைக்கிறது. இதனால் 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் சுற்றுச் சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கான சட்டங்கள் நடைமுறைபடுத்தப்பட்டன. ஏழை நாடுகள் மற்றும் வளரும் நாடுகள் தங்கள் நாட்டின் சுற்றுச் சூழலைப் பாதுகாக்க பணக்கார நாடுகள் நிதியுதவி செய்ய வேண்டுமென புவி உச்சி மாநாட்டில் விவாதித்து ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஆனால் சுற்றுச் சூழலைப் பாதுகாக்கும் திட்டத்திற்கான நிதியுதவி, தொழில் நுட்ப உதவி போன்றவைகளை மேலை நாடுகள் இன்றுவரை செய்யவில்லை.
மேலும் புவி உச்சி மாநாட்டின் மற்றொரு முக்கிய அம்சம் உலகின் இயற்கை வளங்களைப் பங்கிடுவதிலும், பயன்படுத்திக் கொள்வதிலும் சமத்துவ நிலை வேண்டும் என்பதாகும். உலகின் 80 விழுக்காடு இயற்கை வளங்களை மேலை நாடுகளே அனுபவித்து வருகின்றன. இயற்கை வளங்களை அனுபவிக்க அனைவருக்கும் சம உரிமை இருக்க வேண்டும். ஆனால் சம உரிமை மறுக்கப்படுகிறது. பொருளாதார வளாச்சி என்பதும், தொழில் வளர்ச்சி என்பதும், இயற்கைச் சூழலைப் பாதிக்காத வகையிலும், நிலைத்த நீடித்த வளர்ச்சிக் கொண்டதாகவும் இருக்க வேண்டும். ஆனால் உலக மயமாக்கலைத் தீவிரப்படுத்த நிர்பந்திக்கும் வளர்ந்த நாடுகள் சுற்றுச்சூழலைப் பொறுத்தவரை எதிர்மறையாகச் செயல்படுவதைக் கண்கூடாகப் பார்க்கிறோம்.
கார்பன் - டை-ஆக்சைடு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்சைடு, குளோரோ புளோரோ கார்பன்கள் ஆகிய வாயுக்கள் (இவை பசுமைக் குடில் வாயுக்கள் என்று அழைக்கப்படுவையாகும்) காற்று மண்டலத்தில் அதிகமாகும்போது காற்று மண்டலத்தின் வெப்பம் உயர்வடைகிறது. பெட்ரோல், டீசல் போன்ற எரிப் பொருட்களை எரிப்பதானது மனிதர்களின் வாழ்க்கை முறையோடு சம்பந்தப்பட்டது. இதனால் காற்று மண்டலத்தின் சராசரி வெப்ப நிலை 2100 ஆம் ஆண்டில் 1.47 டிகிரி சென்டிகிரேட் உயரும். இந்த உயர்வால் பங்களாதேஷ், சீனா, எகிப்து போன்ற நாடுகளின் தாழ்வான பகுதிகளில் கடல்நீர் புகுந்தது நிலப் பரப்பை அழிக்கும். மாலி போன்ற பல சிறு தீவுகளும், கடல் நீருக்குள் மூழ்கிவிடும் அபாயமும் உண்டு காற்று மண்டலத்தில் வெப்பம் உயர்வதைத் தடுக்க வளர்ந்த மேலை நாடுகள் பசுமைக் குடில் வாயுக்கள் வெளிப்படுத்தும் அளவைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.
1997 இல் ஜப்பான் நகரான கியோடோவில் மேற்கொண்டு நடத்திய விவாதங்களிலும், பேச்சுவார்த்தைகளிலும் 2008-2012க்குள் பசுமைக் குடில் வாயுக்கள் வெளியிடுவதை மேலை நாடுகள் குறைத்துக் கொள்ள வேண்டும். ஆனால் கியோடோ உடன்படிக்கை இன்னும் அமலுக்கு வரவில்லை.
வளர்ச்சியடைவதற்கும், இயற்கை வளங்களை அனுபவிப்பதற்கும் எல்லா மனிதர்களுக்கும் உள்ள சமத்துவ உரிமையை அடிப்படையாகக் கொண்டு வளரும் நாடுகள் வலியுறுத்தி வரும் இந்த உடன்படிக்கை நடைமுறையில் கேள்விக் குறியாக உள்ளது.
உயிரினத் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட பல பெரிய கம்பெணிகள் (மான்சான்டோ, கார்கில்) அமெரிக்காவில் உள்ளன. கீழை நாடுகள் தங்களின் உயிரின வகைகளைத் தங்கள் நாடுளில் பாதுகாத்து வந்தால், இதைப் பயன்படுத்தி வரும் தாவர வகைகள், உயிரியல் வகைகளின் மேல் அந்த நாடுகளுக்கு உள்ள உரிமையைக் கேள்விக் குறியாக்கி வருகின்றன.
ஓசோன் படலம் பாதிப்படைவது பற்றி உலகத்தில் பார்வை 1970-இல்தான் திரும்பியது. 1988 ஆம் ஆண்டில் 2600 மில்லியன் ஹெக்டேர் பரப்பளவுக்கு வாயு மண்டலத்தின் மேற்பரப்பில் ஓசோன் பரப்பு மெலிவடைந்துள்ளது. பில் ஒசோன் பரப்பு மெலிவடைந்துள்ளது கண்டறியப்பட்டது. இது பூமியின் வடக்குப் பகுதியிலேயேதான் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. சில வகையான இரசாயனங்கள் காற்று மண்டலத்தில் பரவி மேற்பரப்பை அடையும்போது ஓசோன் வாயுவை கரைத்துவிடும். துன்மைக் கொண்டுள்ளது. குளோரோ, புளோரோ கார்பன்கள் (ஊகுஊ) என்று அழைக்கப்படும் இந்த வாயுக்களின் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும் என்றும், அதற்கான செயல் திட்டத்தையும் 1987 இல் கையொப்பமிட்ட மான்ட்ரீஸ் உடன்படிக்கை வலியுறுத்துகிறது. ஆனால் டுபான்ட் போன்ற பன்னாட்டுக் கம்பெனிகள் குளோரோ புளோரோ கார்பன்கள் என்ற வாயுக்களைத் தங்கள் உற்பத்தியில் பயன்படுத்தி வருகின்றன. இதனால் ஓசோன் படலத்தின் ஓட்டை அதிகரிக்கும்.
அபாயகரமான கழிவுகள்
மேலை நாடுகள் அபாயகரமான கழிவுகளை வளரும் நாடுகளுக்கும், ஏழை நாடுகளுக்கும் விலைக்கு விற்றுவிடுகின்றன. இதைக் கட்டுப்படுத்த 1992 ஆம் ஆண்டில் பேசல் உடன்படிக்கை நிறைவேற்றப்பட்டது. இதில் 148 நாடுகள் கையொப்பமிட்டுள்ளன. இதன்படி அபாயகரமான கழிவுகளை ஏழை நாடுகளுக்கு ஏற்றுமதியை நியாயப்படுத்துவதாக உள்ளது எனச் சுற்றுச் சூழல் நிபுணர்கள் எதிர்ப்பு தெரிவித்ததன்பேரில் அபாயகரமான சில கழிவுகளை ஏற்றுமதி செய்வதை அறவே தடுக்கக்கூடிய திருத்தம் கொண்டு வரப்பட்டது. ஆனால் இந்தத் திருத்தத்தை இதுவரை 26 நாடுகள் மட்டுமே ஏற்றுக் கொண்டுள்ளன.
உலகமயமாக்கலின் மிக அபாயகரமான அம்சம் சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் பல்வேறு தொழிலகங்களை இந்தியா போன்ற ஏழை நாடுகளில் அமைப்பதாகும்.
கடந்த பத்தாண்டுகளில் உலகின் பல இடங்களில் போர் ஏற்பட்டுள்ளது. ஈராக் மீது அமெரிக்காவினர் நடத்தி வரும் போர், ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்காவின் தாக்குதல் ஆகியவற்றால் நீரும், நிலமும் மாசடைந்துள்ளன. இரசாயன மருந்துகளாலும், பெட்ரோலியப் பொருட்களாலும் மக்கள் கடுமையான உடல்நலப் பாதிப்புக்கு உள்ளாக்கப்படுகின்றனர். உலகின் வல்லரசு நாடுகளால் நடத்தப்படும் போர்களினால் சுற்றுச் சூழல் பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கப்படுகின்றனர். உலகின் வல்லரசு நாடுகளால் நடத்தப்படும் போர்களினால் சுற்றுச்சூழல் பெரும் பாதிப்புக்குள்ளாகிறது.
உலகம் முழுவதும் மக்கள் சுற்றுச் சூழலைப் பாதுகாக்கப் போராடி வருகின்றனர். பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு எதிராகப் போராட வேண்டிய அரசுகள் உலக வங்கியிடமும், அமெரிக்காவிடமும் மண்டியிட்டுக் கிடக்கின்றன. சுற்றுச் சூழலில் அக்கரை கொண்ட விஞ்ஞானிகள், அறிஞர்கள், கட்சிகள், மக்கள் இயக்கங்கள் பங்கு மிக முக்கியமானது. மக்கள் மத்தியில் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட வேண்டியதன் அவசியத்தைப் பிரச்சாரம் செய்து, விழிப்புணர்வை ஏற்படுத்திப் போராட வேண்டியது சமூகக் கடமையாகும்.
- விவரங்கள்
- பி.தயாளன்
- பிரிவு: சுற்றுச்சூழல்
அமெரிக்க நாட்டில் மெக்சிக்கோ வளைகுடாப் பகுதியில் தோன்றிய பார்த்தீனியச் செடியின் கொடிய விளைவுகள் ஆப்பிரிக்கா, ஆஸ்டிரேயா, ஆசியா கண்டங்களில் அதிகமாக உணரப்பட்டது.அமெரிக்காவிலிருந்து கோதுமைத் தானியங்களோடு பார்த்தீனியம் விதைகளும் கலந்து இந்தியாவிற்கு மும்பைத் துறைமுகத்தின் வழியாக 1956 ஆம் ஆண்டு வந்திறங்கின.
பார்த்தீனியம் பூண்டு, சீதேவியார் செங்கழுநீர் , செவ்வந்தி போன்ற தாவரங்களின் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு செடி ஆகும். ஒன்றரை மீட்டர் உயரத்துக்கும் மேலாக வளரக் கூடியது. பார்த்தீனியச் செடிகள் காலியிடங்கள், தரிசு நிலங்கள், பயிர் நிலங்கள் , குடியிருப்புப் பகுதிகள், பூங்காக்கள், பழத் தோட்டங்கள் , சாலையோரங்கள், கரையோரங்கள் என அனைத்து இடங்களிலும் வளர்ந்து வருகின்றன.
பார்த்தீனியச் செடிகள் மிகப்பெரும் எண்ணிக்கையில் பரவி,நெருக்கமாக முளைத்து, நிமர்ந்து சடைத்து விரைவிலேயே ‘ பச்சைக் கம்பளம் ’ விரித்தது போல நிலத்தை மூடிவிடுகின்றது.
பார்த்தீனியச் செடிகள்களைகளுக் கெல்லாம் தலைiயாயக் களையாகும்இதன் தண்டுகள், கிளைகள் மற்றும்இலைகள்உரோமங்களால் மூடப்பட்டிருக்கும். இச்செடியானது அதிக எண்ணிக்கையிலான பூக்களையும்,குறைந்த எடையுடைய விதைகளையும் உற்பத்தி செய்கிறது.அதன் விதைகள் குறைந்த எடை உள்ளதால்காற்றின்மூலம்மற்றஇடங்களுக்கு எளிதில் விரைவாகப் பரவுகிறது.
ஒரு பார்த்தீனியம் செடியானது 2500முதல் 5000வரையிலான விதைகளை உற்பத்தி செய்கிறது. மேலும்,பார்த்தீனிய விதைகள் முளைப்பதற்குத் தேவையான சூழ்நிலைகள் இல்லாத போது, சாதகமான சூழ்நிலை வரும் வரை 20ஆண்டுகள் கூட உறக்கத்தில் கிடந்து முளைக்கக் கூடிய தன்மை வாய்ந்தது.பார்த்தீனியம் செடியானது இந்தியாவில் 35மில்லியன் ஹெக்டேர் நிலங்களில் பரவியுள்ளது.
பார்த்தீனியம் செடிகளின் கீழ் செடி கொடிகள் எதுவும் முளைத்து வளர முடிவதில்லை. தண்ணீருக்காகவும், சூரிய ஒளிக்காகவும், வேர்ப்பிடி மண்ணுக்காகவும் செடிகள் போராடிச் சாகின்றன. இவற்றின் மீது பார்த்தீனியச் செடிகள் நஞ்சூட்டி அழிக்கிறது.
பார்த்தீனியம்- பார்த்தீனியன், அம்புரோசின் போன்ற நச்சு வேதிப்பொருள்களைச் சுரக்கிறது. இந்த நச்சுப் பொருட்களிடம் தாக்குப் பிடிக்க முடியாமல் நமது நாட்டுத் தாவரயினங்கள் அழிந்து விடுகின்றன. ‘எதற்கும் அடங்காமல் எதனையும் அடக்காமல் ’ பல நூறு ஆண்டு காலமாக இயற்கைச் சம நிலையில் பெரும் பங்காற்றி வந்த உள்ளூர் தாவர இனங்களின் சாம்பல் மீது நின்று கொண்டு பார்த்தீனியம் கோலோச்சுகிறது.
-
பார்த்தீனியச் செடியானது கால்நடை தீவனங்களுக்கு தட்டுப்பாட்டை ஏற்படுத்துகிறது.
-
வேளாண்மைப் பயிர்களின் வளர்ச்சியைப் பாதிக்கிறது. வேளாண்மை உற்பத்தியில் 30% ஐ குறைக்கிறது.
-
மண்ணில் கசிய விடும் நச்சுப் பொருட்களின் மூலம் பயிர்களின் வளர்ச்சியைத் தாக்குகிறது.
-
உளுந்து,பயறு போன்ற பயிர்களின் அருகாமையில் பார்த்தீனியம் செடிகள் வளரும் போது பயிர்களின் வளர்ச்சியை வெகுவாகப் பாதிக்கிறது.
-
அவரையினப் பயிர்களின்,சிறப்பாக அவற்றின் வேர்களில் ‘இரைசோபியம் ’ பாக்டீரியாக்களைக் கொண்ட வேர் முடிச்சுகள் காணப்படுகின்றன. இவை, நைட்ரஜன் வாயுவைத் தாவரங்கள் உறிஞ்சக் கூடிய அயனிநிலைக்கு மாற்றித் தருவதுடன், வளி மண்டபத்தில் நைட்ரஐனின் சமநிலையைப் பேணியும் வருகின்றன.பார்த்தீனியச் செடிகளின் நஞ்சுகள் இந்த வேர் முடிச்சுகளையும் விட்டு வைப்பதில்லை என தாவரவியல் அறிவியலாளர்கள் எச்சரிக்கின்றனர்.
-
பார்த்தீனியச் செடிகள் மனிதர்களுக்கும் ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது.
-
பார்த்தீனியம் செடிகள் பரவியுள்ள இடங்களில் காற்றில் மிதக்கும் மகரந்தங்களில், பார்த்தீனியச் செடிகளின் மகரந்தங்கள் தான் அதிகம் உள்ளது. இம்மகரந்தங்களும் தம்மீது நச்சுப் பொருட்களை பூசி வைத்துள்ளன. இதனைச் சுவாசிப்பவர்கள் ‘ஆஸ்த்மா' நோயால் பாதிக்கப் படுகின்றனர்.
-
பார்த்தீனியம் செடியைத் தொடர்ச்சியாகத் தொடுபவர்களுக்கு தோலில் அரிப்பு, தடிப்பு ஏற்படுகிறது.
-
பார்த்தீனியம் செடிகளால் ஏற்படும் நோய்கள் எவ்வித மருத்துவ சிகிச்சைகளுக்கும் கட்டுப்படுவதில்லை.
-
பார்த்தீனியம் செடிகள் கலந்த பசுந்தீவனங்களை உண்ணும் கால்நடைகளின் பால் கசப்புத் தன்மை பெறுகிறது.
-
பார்த்தீனியச் செடிகள் கரியமில வாயுவை அதிகமாக வெளிவிடுவதால் சுற்றுச் சூழலுக்கு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
-
பார்த்தீனியம் செடிகள் பல்லுயிர் பெருக்கத்தை அச்சுறுத்துகிறது.
இவ்வளவு தீமைகளை ஏற்படுத்தும் பார்த்தீனியம் செடிகளை இந்தியா முழுவதும் அழித்திட உடனடியாக நடுவண் அரசும்,மாநில அரசுகளும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பார்த்தீனியம் செடிகள் அழிப்பை இயக்கமாக நடத்திட வேண்டும். வேளாண்மைத்துறை, பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித் துறை வருவாய்த்துறை, சுகாதாரத்துறை முதலிய அரசுத்துறைகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு பார்த்தீனியம் செடிகள் அழிப்பில் ஈடுபடவேண்டும்.
பார்த்தீனியம் செடிகளை வேருடன் பிடுங்கி மண்ணுக்குள் புதைப்பதால் அவை மக்குரமாகிவிடுகிறது. உயிரியல் முறையில் பார்த்தீனியச் செடிகளின் இலைகளை விரும்பி உண்ணும் பூச்சிகளை விட்டும் கட்டுப்படுத்தலாம். பார்த்தீனியச் செடிகள் அதிகம் உள்ள இடங்களில் கேசியா இனத்தைச் சார்ந்த எதிரிச் செடிகளை வளரவிட்டும் இவை பரவாமல் தடுக்கலாம்.
நிலத்தை நன்கு உழுது களைகளின்றி பண்படுத்தும் போதும் பார்த்தீனியம் செடிகள் வளரவாய்ப்பு இல்லாமல் செய்யலாம். பார்த்தீனியம் செடிகளை கட்டுப் படுத்தும் எளிய வழி, சிக்கனமான வழி, அனைவரும் உடனடியாக செய்யக்கூடிய வழிமுறை என்ன வெனில் ஒரு கிலோ உப்பையும்,ஒரு லிட்டர் சோப்பு எண்ணைய்யும் 10 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிப்பதாகும். இதனால் மூன்று தினங்களுக்குள் பார்த்தீனியச் செடிகள் வாடி வதங்கி கரிந்து அழிந்து போகும்.
மக்களிடம் மார்த்தீனியச் செடிகளின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, அவற்றை அழிக்கும் பணியில் ஈடுபட்டு, பயிர்களையும், கால் நடைகளையும், மனிதர்களையும், சுற்றுச் சூழலையும் பாதுகாத்திட வேண்டும்.
- பி.தயாளன்
- ஆபத்தை விளைவிக்கும் ஆஸ்பெஸ்டாஸ்!
- ஞெகிழியினால் ஏற்படும் சமுதாயக் கேடுகள்!
- மின்னணுக் கழிவுகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடுகள்!
- வெறும் தண்ணீருக்கோ வரப்போகுது பஞ்சம்!
- அணுமின்சக்தி அழித்த உயிர்களின் வரலாறு
- புவி வெப்பமயமாதலும், முதலாளித்துவ அரசியலும்
- புவி வெப்பமயமும் தேசங்களின் இறையாண்மையும்
- இயற்கை வளங்களின் சூறையாடலும் ஆந்திர மக்களின் போராட்டமும்
- சுற்றுச்சூழல் வழக்குகள்/ஆராய்ச்சிகள் - நிபுணர்களும் விஞ்ஞானிகளும் யார் பக்கம்?
- பூமியைக் காப்பாற்றுவோம்!
- கூடங்குளம் அணுஉலை - ஆதரிப்பதா? எதிர்ப்பதா?
- பருவநிலை மாற்றம்
- உயிர் வாழும் உரிமைக்கு உலை வைக்கும் மரபணு தொழில்நுட்பம்
- ஞெகிழிக் குப்பைகளால் அழியும் மலை வனம்
- புவிவெப்ப உயர்வில் நமது பங்கு
- கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடக் கோருவதற்கான காரணங்கள்
- மக்களைப் பாழ்படுத்தும் புதிய அனல் மின் நிலையங்களை நிறுத்துக
- வேதிக் கழிவுகளால் வெறுமையாகும் கடலூர்!
- காற்றினிலே வரும் மாசு!
- ஞெகிழியா? காகிதமா? எந்தப் பை நல்லது?