செர்னோபிலில் தொடங்கி புகுஷிமா வரை அழிந்த மனிதர்களின் கதைகள் மூளைச்சலவை செய்யப்பட்ட இந்திய அணு விஞ்ஞானிகளுக்கு எந்தப் பாடமும் புகட்டவில்லை என்றால், பாவம் கூடங்குளத்து மக்கள். புகுஷிமா சுனாமியால் மட்டுமல்ல; சுனாமி ஏற்படாமலிருந்தாலும்கூட அணுமின் கழிவு மூலம் ஆபத்து என்றுமே உண்டென்று முன்பே எச்சரிக்கப்பட்டதாகவும் தகவல் உண்டு. செர்னோபில் விபத்தால் ஏற்பட்ட கதிர்வீச்சில் பலிகொண்ட உயிர்கள் 75,000 இருக்குமென்றும் உயிர் போகாவிட்டாலும் நடைப்பிணமாக வாழ்வோர் சுமார் 75,000 என்றும் நியூயார்க் விஞ்ஞான அகாதெமி கூறுகிறது. செர்னோபிலுக்கு முன்பு பென்சில்வேனியா மாநிலத்தில் த்ரீமைல் ஐலேண்டு விபத்து நிகழ்ந்துள்ளது. விஞ்ஞானத்தில் வல்லவர்கள் என்று பெருமைப்பட்டுக்கொள்ளும் அமெரிக்காவில் மூன்று மைல் தீவில் நிகழ்ந்த 1979 விபத்துக்குப்பின் அமெரிக்க அணுசக்தித்துறை எதுவும் புதிய அணுஉலை ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவில்லை.

உக்ரைனில் நிகழ்ந்த செர்னோபில் விபத்துக்குப் பின் ஐரோப்பிய அணுசக்தித் தொழில் நிறுவனங்கள் அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள் விஞ்ஞான வளர்ச்சியில் முன்னேறியுள்ள ஜப்பானின் புகுஷிமா விபத்தை சுனாமி மீது பழி சுமத்தி அணு விஞ்ஞானிகள் தப்பிக்க இயலாது.

தொழில்நுட்பக் கோளாறுகள் பற்றிய விஷயங்களையும் ஆராய்வது நன்று. புகுஷிமாவில் மிக அடிப்படையான அணுக்கருவின் சிதைவு - ஹைட்ரஜன் வெடித்து உயிரிழந்தவர் எத்தனை லட்சம் என்ற புள்ளிவிவரம் கிட்டவில்லை.

1979-ல் அமெரிக்காவில் மூன்று மைல் தீவு அணுமின் நிலைய விபத்துக்கு முன்பு 1967-ல் இங்கிலாந்தில் விண்ட்ஸ்கேல் விபத்து ஏற்பட்டுள்ளது. அதற்கு முன்பு 1952-ல் கனடாவில் சால்க் நதி விபத்துகள். அணுஉலைகளின் குளிர்நிலை இழப்பால் அணுக்கதிர் கசிவு ஏற்பட்டு மனித உயிர்களைப் பலி வாங்கிய எண்ணிக்கை எவ்வளவு ஆயிரங்களோ. உலகில் உள்ள அனைத்து அணுமின் நிலையங்களிலும் உள்ள அடிப்படைக் கோளாறு எதுவென்றால் அணுஎரிபொருள்களை நீர்வெப்ப - நீராவிச் சாதனங்கள் குறைவாக உட்கொண்டு குறைந்த ஆற்றலில் செயல்பட்டு அதிக மின்கழிவுகளை - கதிர்வீச்சு ஆபத்துக்குரியவற்றை வெளியேற்றுகின்றன. அத்துடன் உள்கட்டமைப்பில் உள்ள இயந்திரக் கோளாறுகள், அவசர சிகிச்சையின்மை, மின்வெட்டு - மின் அழுத்த ஏற்ற இறக்கம் இவ்வளவுக்கும் மேல், பூகம்ப - சுனாமி ஆபத்து என்று ஆயிரம் விஷயங்கள் விஞ்ஞான மூளைக்கும் அப்பாற்பட்டு விடை அறியப்படாமல் உள்ளன.

உலக அணுசக்தித் தொழில் நிறுவனங்கள் கதிர்வீச்சு அபாயத்தைப் பற்றிய மதிப்பீட்டை எச்சரிக்கை உணர்வுடனோ, சிரத்தையுடனோ, மனித உயிர்களை மனத்திற்கொண்டோ செய்யாதது துரதிருஷ்டவசமானது. 1975-ல் ராஸ்முஸ்ஸன் அறிக்கை மிகவும் நம்பகத்தன்மையுள்ள அணுசக்தித் தொழில்நுட்ப ஆய்வு அறிக்கையாக நம்பப்படுகிறது. இன்னமும் அந்த அறிக்கையைத்தான் மூளைச்சலவையான அணுமின் விஞ்ஞானிகள் நம்புகின்றனர். அந்த அறிக்கை அணுமின் நிலையங்களில் உள்ள பாதுகாப்புகளுக்கு 25,000 ஆண்டு உத்தரவாதம் வழங்கியுள்ளது. 25,000 ஆண்டுகளில் அணுஉலைகளில் ஒன்று மட்டும் பழுதுறலாம் என்று கூறியுள்ளது. ஆனால், நான்காவது ஆண்டில் த்ரீமைல் தீவு அணுமின் நிலையத்தில் விபத்து ஏற்பட்டது. பின்னர் செர்னோபில், புகுஷிமா உலகறிந்த கதை.

பெரிய அளவில் இல்லாவிடினும், இதுவரை 440 அணுஉலைகள் பழுதடைந்து விபத்துகள் நிகழ்ந்துள்ளன. புகுஷிமா விபத்துக்குப்பின் அமெரிக்காவில் கொதிநீர் அணுஉலைகள் ஜெனரல் எலக்ட்ரிக்குச் சொந்தமானவை. அதன்மீது கடுமையான பாதுகாப்பு நடைமுறைகளைக் கையாள்வதைக் கண்காணிக்க அரசு முன்வந்துள்ளது. 1990-க்குப்பின் 17 விபத்துகள் அமெரிக்காவில் நிகழ்ந்துள்ளன. ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, சீனா ஆகிய நாடுகள் ஒட்டுமொத்தமாக அணுமின் நிலையத் திட்டங்களைக் கைவிட்டுவிட்டன. ஜெர்மனியில் படிப்படியாக நாட்டில் உள்ள அனைத்து அணுமின் உலைகளை மூடுவிழா செய்ய முடிவு செய்துள்ளது. துருக்கி, சிரியா, ஜோர்டன், போலந்து, எகிப்து, இஸ்ரேல், சவூதி அரேபியா, நைஜீரியா, ஐக்கிய அரபுக் குடியரசு ஆகிய நாடுகள் அணுமின் நிலையத் திட்டத்தில் தலைவைத்துப் படுப்பதில்லை என்று முடிவு செய்துவிட்டன.

உலகிலேயே மிகப்பெரிய அணுசக்தி நிறுவனம் "அரீவா ஆஃப் பிரான்ஸ்''. புகுஷிமா விபத்து காரணமாக, பல்லாயிரம் கோடி டாலர் முதலீடுகள் கொண்ட ஐரோப்பிய அதிசக்தி அணுஉலைத் திட்டம் நீதிமன்ற வழக்கால் முடக்கப்பட்டுவிட்டது. யூரோப்பியன் பிரஷரைஸ்டு அணுஉலைத் திட்டம் பின்லாந்தில் செயல்படுவதாயிருந்தது. அரீவாவின் பிளேமன்வில்ய பிரெஞ்சு நாட்டுத் திட்டமும் அம்போவாகிவிட்டபோது. . . கூடங்குள முதலீடு பெரிய தொகை இல்லை. கூடங்குளத் திட்டத்தில் உள்ள ஆபத்தை மூளைச்சலவை செய்யப்பட்ட இந்திய அணுமின் துறை விஞ்ஞானிகள் ஒப்புக்கொள்ளாத சூழ்நிலை வந்துவிட்டால், தில்லி உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசை எதிர்த்துப் பொதுநல வழக்குத் தொடர்வது நன்று.

உலகில் உள்ள அனைத்து நாடுகளும் புகுஷிமா விபத்தை நல்ல பாடமாக உணர்ந்து புதிய திட்டங்களை ஒத்திவைத்தும், செயல்பாட்டில் உள்ள அணு உலைகளின் பாதுகாப்பு பற்றிய நடவடிக்கைகளில் மறுபரிசீலனைகளையும் செய்யும்போது இந்திய விஞ்ஞானிகள் மிகவும் பொறுப்பற்ற முறையில் பேசுவதுடன் "உலகில் இல்லாத பாதுகாப்புகள் இந்திய அணுஉலைகளில் உள்ளதாகத் தங்கள் முதுகைத் தாங்களே தட்டிக் கொள்கின்றனர்.

இந்திய அணுமின் நிலையத் தலைவர் எஸ். கே. ஜெயின் கூறும்போது, "எங்களிடம் அணுஉலைகள் பற்றிய அறிவு முழுமையாக உள்ளது. இந்தியாவில் நிறுவப்பட்ட அணுஉலைகள் அனைத்தும் எப்படிப்பட்ட பூகம்பத்தையும் எப்படிப்பட்ட சுனாமியையும் தாங்கும் சக்தி படைத்தது'' என்று கூறியுள்ளார். இந்தியாவில் எப்படி அணு உலைகள் பத்திரமாக இயங்கி வரும் லட்சணத்தை அறிவது நன்று. மொத்த மின்சார உற்பத்தியில் 3 சதவீதம் மட்டுமே வழங்கும் அணுசக்தித்துறை விஞ்ஞானிகளின் அலட்டலுக்கு ஒரு குறையுமில்லை. தாராப்பூரில் மட்டும் 1980-களில் தொடங்கி இன்றுவரை சுமார் 400 தொழிலாளர்கள் கதிர்வீச்சால் பாதிக்கப்பட்டுள்ளனர். தில்லியிலிருந்து 200 கி. மீ. தூரத்தில் உள்ள நாரோராவில் தீவிபத்து ஏற்பட்டு அணுஉலை கட்டடம் வரை தீ பரவியது. அப்போது அமைக்கப்பட்டிருந்த அவசரநிலை ஏற்பாடுகள் எதுவும் வேலை செய்யவில்லை. நல்லவேளையாக தீ தானாகவே அணைந்துவிட்டதால் மாபெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. கைகாவில் சோதனையின்போது தவறான வடிவமைப்பால், கட்டுமானம் சரிந்தது - நல்லவேளையாக அப்போது அணுஉலை வேலை செய்யாததால் மாபெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. அவ்வப்போது விஞ்ஞானம் காப்பாற்றாமல் தெய்வம் காப்பாற்றியுள்ளதாம்.

ராஜஸ்தான் அணுமின் நிலையத்தின் கதிர்வீச்சுக் கழிவுகள் 1995-ல் ஏரியில் விடப்பட்டதை மூன்று மாதம் கடந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 2003-ல் கல்பாக்கத்தில் ஆறு தொழிலாளர்கள் கூடுதல் கதிர்வீச்சுக்கு ஆளாகி மடிந்துள்ளனர். இந்திய அணு சக்தி வரலாற்றில் பணியாளர்கள் நேரிடையான கதிர்வீச்சுக்கு ஆளானது - அனுமதிக்கப்படும் அளவுக்குமேல் தாக்கப்பட்டதில் மோசமான ஒன்று.

கைகா அணுமின் நிலையத் தொழிலாளர்களின் சிறுநீர்ப் பரிசோதனையின்போது கூடுதல் அளவில் ட்ரைட்டியம் இருப்பது புலனானதைத் தொடர்ந்து 2009-ல் தொழிலாளர் போராட்டம் வெடித்தது. விசாரணையின்போது தெரியவந்த விவரம் குடிதண்ணீர்த் தொட்டியில் ட்ரைட்டியம் கலந்துள்ளதும் புலனாயிற்று. ட்ரைட்டியம் குருதியில் கலந்தால் புற்றுநோய் ஏற்படும்.

மேலே விவரிக்கப்பட்ட பல்வேறு அணுமின் நிலைய விபத்துகள் - தெய்வச் செயலால் தவிர்க்கப்பட்ட விபத்துகள் எல்லாமே இந்திய அணுமின்சக்தித் துறைச் செயலர் பெருமையுடன் கூறும் கதிர்வீச்சுப் பாதுகாப்பு - அவசரகால பாதுகாப்பின் லட்சணம். எந்த சுனாமியோ, பூகம்பமோ இல்லாத சூழ்நிலையில்கூட இந்தியாவின் அணுசக்தி நிலையக் கழிவுகளின் கதிர்வீச்சுகள் மனிதர்களின் உடற்கூறுகளுக்குச் சென்றவண்ணம் உள்ளன. இந்திய அணுசக்தித்துறை சுதந்திரமாகவும் தன்னிச்சையாகவும் செயல்படுகிறது.

1962-ல் இயற்றப்பட்ட அணு மின்சாரச் சட்டம், அணுசக்தித் துறைக்கு அவர்கள் விரும்பாத விஷயங்களைத் தெரியப்படுத்த வேண்டாம் என்ற சுதந்திரத்தை வழங்கியுள்ளது. உண்மையை மறைக்கும் அதிகாரம் - "நமது அணுசக்தி பலம் பாகிஸ்தானுக்கோ - சீனாவுக்கோ தெரிய வேண்டாம்'' என்பது சரி. ஆனால், இயந்திரக் கோளாறு - அவசரகால பாதுகாப்பு கோளாறு - கட்டுப்படுத்தப்படாத கதிர்வீச்சுக் கழிவு... பற்றிய செய்திகளை எப்படி மூடி மறைக்க முடியும்? எப்படியோ 2ஜி ஊழல்போல் கசிந்து விடுகிறது.

யுரேனியம் தோண்டி எடுப்பதிலிருந்து அணுஉலை செயல்படும்வரை நிகழ்த்தப்படும் அணு எரிசுழற்சியில் - ஒவ்வொரு கட்டத்திலும் கதிர்வீச்சுக் கழிவு ஏற்படுவதைத் தவிர்க்க இயலாது. மண்ணில் சேரும் இக்கழிவின் கதிர்வீச்சு சக்தியின் ஆபத்து ஆயிரம் ஆண்டுகள் நீடிக்கும். அணுமின் கழிவு பற்றிய ஆபத்தைப் பற்றி அணுமின் துறை ஒப்புக்கொள்ளவே மறுக்கிறது.

வங்காள விரிகுடாவில் எந்தவிதமான சுனாமியும் ஏற்படாது என்றோ - கடல்நீர் பெருக்கெடுத்து கடற்கரை நகரை அழிக்காது என்றோ என்ன உத்தரவாதம் உள்ளது? பாண்டியர் துறைமுகம் கொற்கை அழிந்தது. சோழர் துறைமுகம் பூம்புகார் அழிந்தது. பல்லவர் துறைமுகம் மாமல்லபுரமும் அழிந்தது. அப்படி இருக்கும்போது, கல்பாக்கமும், கூடங்குளமும் அழிக்க முடியாத ஆயிரங்காலத்துப் பயிரா என்ன? ஒருக்கால் அப்படி அழியுமானால்... மக்களோ, மரமோ, பயிரோ எஞ்சினால் நமது அதிர்ஷ்டம். இவ்வளவு மக்கள் எதிர்ப்புகளைப் புறந்தள்ளிக் கூடங்குள அணுமின் உலைகள் நிறுவப்படுமானால் வரலாறு நம்மை ஒருபோதும் மன்னிக்கப் போவதில்லை.

- ஆர்.எஸ்.நாராயணன்

(நன்றி: தினமணி)

Pin It