கீற்றில் தேட...
அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- ஜே.எம்.வெற்றிச்செல்வன்
- பிரிவு: சுற்றுச்சூழல்
நாம் எவ்வளவு தான் முன்னேறிச் சென்றாலும், அடிப்படைத் தேவைகளில் எந்த மாற்றமும் இல்லை. இன்னும் சொல்லப் போனால், உணவு, உடை, இருப்பிடம் என்ற இந்த வரிசையில் சுத்தமான காற்றும், தண்ணீரையும் சேர்த்த சுயநலமிக்க மனிதனின் வாழ்நாள் சாதனை. கட்டுமானத் துறையில் சமீபத்தில் முடிவடைந்த சில திட்டங்களையும், அவற்றின் முக்கியத்துவத்தையும் காண்போம்.
போஸ்கோ வெர்டிகல் (Bosco Verticale)
போஸ்கோ என்பது ஒடிசா மாநிலத்தில் இயற்கை வளங்களை சூறையாடத் துடிக்கும் ஒரு நிறுவனம் என்பது தெரியும். அது என்ன போஸ்கோ வெர்டிகல்?
”போஸ்கோ வெர்டிகல்” என்பது இத்தாலி நாட்டின், மிலன் நகரத்தில் இருக்கும் 110 மீ & 76 மீ உயரமுள்ள அடுக்குமாடி கட்டிடத்திற்குப் பெயர். பெயரில் என்ன இருக்கிறது என வினவத் தோன்றுகிறதா? கண்டிப்பாகத் தோன்றும். போஸ்கோ வெர்டிகல் என்றால் ”செங்குத்தான காடுகள்” என்று பொருள். ஓர் அடுக்குமாடி கட்டிடத்திற்கு ஏன் செங்குத்தான காடுகள் என பெயர் வைக்க வேண்டும்?
காரணம் இருக்கிறது. வெப்பத்தை தாங்கவும், சுற்றுச்சூழல் மாசுபாடுகளை குறைக்கவும், உயிர்வாயுவை அதிகரிக்கவும், ஒவ்வொரு தளத்திலும் நிறைய மரங்கள் இக்கட்டிடத்தில் பயிரிடப்பட்டுள்ளன. மொத்தம் உள்ள இரண்டு அடுக்கங்களில் 26 & 18 தளங்களில் 90க்கும் மேற்பட்ட, 13,000க்கும் அதிகமான முழுவளர்ச்சிப் பெற்ற மரம் மற்றும் செடிகள் பலகனியில் (façade) பயிரிடப்பட்டுள்ளன. இவற்றுள் 6 சுமார் மீ வரை உயரமுள்ள 700 மரங்களும் அடக்கம். இதனால் தான் இக்கட்டிடம் செங்குத்தான காடுகள் என அழைக்கப்படுகிறது. நாகரிகம் என்ற பெயரில் காடுகளை அழித்துவிட்டு, இப்போது கட்டிடத்திற்குள் காடுகளை வளர்ப்பது விந்தைதான்.
கட்டிடம் முடியும் தருவாயில்
(மரம் பயிரிடப்படுகிறது)
(மரங்களை வைத்த பின்)
கட்டிட மற்றும் காற்று பொறியாளர்கள், மற்றும் தாவரவியல் விஞ்ஞானிகளின் ஆலோசனைகளின் படி இக்காடுகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. காற்றினாலோ அல்லது மரத்தின் எடையினாலோ கட்டிடத்திற்கு எந்த பாதிப்பும் வராது என்பது சிறப்பம்சம். நம் நாட்டிலும் இயற்கை வளங்களை வளர்ச்சி என்ற பெயரில் அழிப்பதை தொடருவோமே ஆனால், நிறைய போஸ்கோ வெர்டிகல் நம் நாட்டிலும் உருவாக நேரிடும்.
சூரியசக்தி சாலை
உலகில் இருக்கும் எல்ல இடங்களிலும் வீட்டுக் கூரைகள் மீதோ அல்லது வெட்ட வெளியிலோ சோலார் தகடுகளைப் பொருத்தி சூரிய சக்தியில் இருந்து மின்சாரம் தயாரிக்கபடுகிறது. நெதர்லாந்து நாட்டில், இன்னும் ஒரு படி மேலே முன்னேறிச் சென்று, சாலையில் (Cycle Track) இருந்து ஒரு வீட்டிற்கு ஒரு வருடத்திற்குத் தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்திருக்கிறார்கள். ஆச்சரியம் தானே !
நெதர்லாந்து நாட்டில், ஆம்ஸ்டெர்டாம் நகரில், 70 மீ நீளமுள்ள மிதிவண்டிச் சாலையில் சோலர் தகடுகளைப் பொருத்தி உருவாக்கி இருக்கிறார்கள். 2014 நவம்பர் மாதம் முடிக்கப்பட்ட இச்சாலையில், ஆறே மாதத்தில் நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டிருக்கிறது. இம்மின்சாரமானது, ஒருவர் வாழும் ஒரு இல்லத்திற்கு ஒரு வருடத்திற்குத் தேவையான மின்சார தேவையைப் பூர்த்தி செய்யும்.
சூரிய சாலையின் தோற்றம்
வருங்காலங்களில், சாலைகளின் மூலமும் வணிக அளவில் சூரிய மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். அந்தாள் வெகு தொலைவில் இல்லை. வெட்பம் குறைவாக இருக்கும் நெதர்லாந்தில் முடியும் என்றால், ஆண்டுமுழுக்க வெயிலேயே வாழும் நம் நாட்டில் மட்டும் ஏன் முடியாது?
- விவரங்கள்
- மீத்தேன் எதிர்ப்பு கூட்டமைப்பு
- பிரிவு: சுற்றுச்சூழல்
தமிழகத்தில் மீத்தேன் வாயு குறித்து ஆய்வுப்பணிகள் எதிலும் ONGC நிறுவனம் ஈடுபடவில்லை என்று இந்நிறுவனத்தின் துணைப் பொது மேலாளர்(பொறுப்பு) சி. என். எஸ் குமார் கடந்த 29. 07. 2015 அன்று பத்திரிக்கைகளுக்கு வெளியிட்ட செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
திருவாரூர் மாவட்டத்தில் கொரடாச்சேரி, அம்மையப்பன் முகுந்தானூர், திருவாரூர், திருக்கன்னமங்கை, மணக்கால், அய்யம்பேட்டை, திருவாஞ்சியம், நன்னிலம் ஆகிய பகுதிகளில் ONGC நிறுவனம் மேற்கொண்ட ஆய்வுப்பணிகளை பொதுமக்கள் தடுத்து நிறுத்திவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேற்கண்ட இடங்களில் தங்கள் நிறுவனத்தின் சார்பில் புவியியல் ஆய்வுகளையே மேற்கொண்டு வருவதாகவும், இந்த ஆய்வுப்பணிகளுக்கு 25- லிருந்து 30 ஆடி ஆழம் வரை மட்டுமே துளையிட்டு ஆய்வுப்பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
புவியியல் ஆய்வுக்காக 25-30 அடி ஆழத்தில் மட்டுமே ஆய்வுப்பணிகளை மேற்கொள்வதாகவும், அது மீத்தேன் எடுப்பதற்கான ஆய்வுப்பணிகள் இல்லை என்றும், இவைகள் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பதற்கான ஆய்வுப்பணிகள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அதோடு இந்த அறிக்கையின் மூலம் இயற்கை எரிவாயு என்பதும், மீத்தேன் என்பதும் வெவ்வேறானவை என்பதை போன்று இதன் மூலம் நமக்கு உணர்த்த முற்படுகிறார்.
இதையே காவேரி பாதுகாப்பு இயக்கம் என்ற அமைப்பு பசுமைதீர்ப்பாயத்தில் வழக்கில் தான் அளித்துள்ள மனுவிலும் ONGC நிறுவனம் தெரிவித்துள்ளது.
உண்மையிலேயே இயற்கை எரிவாயு என்பதும், மீத்தேன் என்பதும் வெவ்வேறான பொருட்களா என்பதைப் பற்றி மக்களிடையே உள்ள அறியாமையை பயன்படுத்தி குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க முயலும் ONGC நிறுவனத்தின் அணுகுமுறையையே அவரின் பத்திரிக்கை செய்தி நிரூபிக்கிறது.
அதோடு மீத்தேன் என்பதும் இயற்கை எரிவாயு என்பதும் வெவ்வேறானது என்பதை காவிரி பாதுகாப்பு இயக்கம் பசுமை தீர்ப்பாயத்தில் தொடுத்துள்ள வழக்கிலும் ONGC நிறுவனம் பதில் மனுவாகவே அளித்துள்ளது. மீத்தேன் என்பதும், இயற்கை எரிவாயு என்பதும் வெவ்வேறானவை என்ற ONGC நிறுவனத்தின் விளக்கத்தை பசுமைத்தீர்ப்பாயம் ஏற்றுக்கொண்டு இந்நிறுவனத்திற்கும், கெயில் நிறுவனத்திற்கும் 05.08.2015 அன்று தான் வழங்கிய இடைக்கால தடையை நீக்கியும் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்கத்தின் காவிரி டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் எடுப்பதற்கான ஒப்பந்தத்தை GEECL என்ற பன்னாட்டு நிறுவனத்திற்கு 2010 ஆண்டு மத்திய அரசு வழங்கியது. இதற்கான ஒப்பதலை தமிழ்க அரசு 2011 ஆண்டு அளித்தது. இதன் பிறகு 2012-ம் ஆண்டு GEECL என்ற பன்னாட்டு நிறுவனம் டெல்டா மாவட்டங்களில் 50 இடங்களில் மீத்தேன் கிணறுகளை அமைப்பதற்கான பணிகளில் இறங்கியது. இத்திட்டத்திற்கு எதிராக விவசாயிகள் போராடியதால் இந்நிறுவனத்திற்கான அனுமதியை நிறுத்தி வைக்குமாறு தமிழகஅரசு மத்திய அரசை கேட்டுக்கொண்டது. அதோடு அந்நிறுவனம் தனது அலுவலகத்தை மூடிவிட்டு சென்றுவிட்டது. ஆனாலும் மீத்தேன் எடுக்கும் திட்டத்தை முற்றாக கைவிட்டுவிட்டதாக மத்திய, மாநில அரசுகள் இன்னும் அறிவிக்க வில்லை.
மேற்கண்ட விவரங்களில் இருந்து அதாவது GEECL என்ற பன்னாட்டு நிறுவனத்திற்கு மீத்தேன் எடுக்க வழங்கப்பட்ட ஒப்பந்தம் காலாவதியாகிவிட்டதால் தமிழகத்தில் மீத்தேன் எடுக்கும் செயல்பாடு எதுவும் நடைபெறவில்லை என்று சாதிக்கிறார்கள்.
காவிரி டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் எடுப்பதற்கு திட்டமிடப்பட்ட 50 கிணறுகளுக்கான பணிகள் நடைபெறவில்லை என்பது உண்மைதான்.
அதே நேரத்தில் மதிமுக தலைவர் வைகோ தலைமையில் செயல்படும் காவிரி பாதுகாப்பு இயக்கம் கடந்த 25.07.2015 அன்று பத்திரிக்கை செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.
காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் மீத்தேன் எடுக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த GEECL என்ற பன்னாட்டு நிறுவனத்தின் பணியை அதற்கு பதிலாக ONGC நிறுவனம் மறைமுகமாக நிறைவேற்ற முயற்சிக்கிறது என்றும் அதன்படி 35 இடங்களில் மீத்தேன் கிணறு அமைக்க திட்டமிட்டுள்ளதாகவும் காவிரி பாதுகாப்பு இயக்கம் குற்றம்சாட்டியுள்ளது. காவிரி பாதுகாப்பு இயக்கம் மட்டுமல்ல மார்க்சிய கம்யுனிச கட்சி Shale gas என்றும், பட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர். ராமதாசு பாறை எரிவாயு என்றும் குறிப்பிடுகின்றார். இந்த இருவருமே மீத்தேன் திட்டத்தைவிட இப்போது அறிவித்துள்ள திட்டம் ஆபத்தானது என்று தமது அறியாமையை வெளிப்படுத்தியுள்ளனர்.
எனவே மீத்தேன் குறித்த குழப்பத்தை தெளிவுப்படுத்த வேண்டியது தற்போதைய முக்கியமான பணியாக உள்ளது. மீத்தேன் எதிர்ப்பு அமைப்புகளிடமும், மக்களிடமும் நிலவும் குழப்பத்தை போக்கினால்தான் மீத்தேனுக்கு எதிரான நமது போராட்டங்களை சரியான இலக்கை நோக்கி நம்மால் கொண்டு செல்ல முடியும்.
நமது பூமியில் மீத்தேன், ஈத்தேன், ப்ரோபேன், ப்யூட்டோன், கார்பன் ஆக்சைடு, நைட்ரஜன், ஹைட்ரஜன் சல்பைடு போன்ற பல வாயுக்கள் உள்ளன.
இவற்றில் 90% அளவுக்கு மீத்தேன் எரிவாயுவாகும். எஞ்சியவை மிகக்குறைந்த அளவிலேயே உள்ளது. இதில் மீத்தேன் மட்டுமே உயர்வகையான எரிவாயுவாகும்.
இப்போது நமது வீடுகளில் பயன்படுத்துவது திரவ பெட்ரோலிய எரிவாயுவாகும். இதைத்தான் ஆங்கிலத்தில் LPG என்கிறோம். இது கச்சா எண்ணெயை சுத்திகரிக்கும் போது முதலில் கிடைப்பதாகும். இதில் ஒரு சிறிதும் மீத்தேன் எரிவாயு இருப்பதில்லை. மாறாக ப்ரோபேன் (அ) புயூட்டோன் அல்லது இரண்டும் கலந்த கலவையாகும்.
காவிரி டெல்டா மாவட்டங்களில் GEECL என்ற பன்னாட்டு நிறுவனத்தின் மூலம் நிலக்கரி படிம மீத்தேன் எடுப்பதற்கான பணிதான் வழங்கப்பட்டது. இந்த நிலக்கரி படிம மீத்தேன் எடுக்கும் பணியைத்தான் தற்போது மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது.
ஆனால் இதற்கு மாறாக மற்றொரு திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன்படி 39 கிணறுகள் தோண்டுவதற்கான அனுமதியை ONGC நிறுவனம் பெற்றுள்ளது. இந்த 39 கிணறும் எண்ணெய் , எரிவாயு கண்டுபிடிப்பதற்கானது என்று கூறுகிறது இந்நிறுவனம். இத்திட்டத்தில் மீத்தேன் என்ற வார்த்தையை பயன்படுத்தவில்லை என்பதாலேயே இது மீத்தேன் கிணறுகள் இல்லை என்கிறார்கள். இந்தக் கிணறுகள் எந்த வகையான மீத்தேன் எடுப்பதற்கானது என்பதில் காவிரி பாதுகாப்பு இயக்கத்திற்கு குழப்பம் நிலவுகிறது என்பதையே அதன் ஜீலை 25 அறிக்கையும், தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தொடுத்துள்ள வழக்கிலிருந்தும் தெரிகிறது. ONGC நிறுவனம் அமைக்க உத்தேசித்துள்ள 39 கிணறுகளும் தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் அமைக்க இருப்பதாக தவறான தகவலையும் பசுமைத் தீர்ப்பாயம் வரை கொண்டு சென்றுள்ளது.
ONGC நிறுவனம் 35 கிணறுகள் தோண்ட சுற்றுசூழல் மற்றும் வனத்துறை, பருவநிலை மாற்றம் தொடர்பான அமைச்சகத்தின் நிபுணர் குழுவுடம் தடையில்லா சான்று பெற்றுள்ளது. தாங்கள் தோண்ட உள்ள 39 கிணறுகளின் மாவட்ட பட்டியலும் வெளியிட்டுள்ளது. அதன் படி கடலூர் மாவட்டம் 14, அரியலூர் 10, தஞ்சை 5, நாகை 9, திருவாரூர் 1 என்று குறிப்பிட்டுள்ளது. இந்த கிணறுகளின் ஆழம் 3000-5200 மீட்டர் என்றும் குறிப்பிட்டுள்ளது.
இதே நிபுணர் குழு GEECL நிறுவனத்திற்கு நிலக்கரி படிம மீத்தேன் எடுப்பதற்கு திருவாரூர் மாவட்டத்தில் 38 கிணறுகள் , தஞ்சை மாவட்டத்தில் 12 கிணறுகள் என மொத்தம் 50 கிணறுகளை 600 மீட்டர் ஆழம் வரை அமைப்பதற்கு 12. 09. 2012 அன்று தடையில்லா சான்று வழங்கியுள்ளது.
அதாவது மேற்கண்ட இடங்களில் நிலக்கரி படிம மீத்தேன் 600 மீட்டர் ஆழத்தில் இருப்பதால் அதற்கான அனுமதியை வழங்கியுள்ளது.
தற்போது ONGC நிறுவனத்திற்கு வழங்கியுள்ள தடையில்லாச்சான்றில் 3000-5200 மீட்டர் ஆழம் வரை கிணறு தோண்ட அனுமதித்துள்ளது.
பூமியின் கீழ் 200-1000 மீட்டர் ஆழம் வரை மட்டுமே நிலக்கரி படிம மீத்தேன் இருக்கும்.
புதுவை பாகூர் படுகையில் 766. 37 MT, நெய்வேலி படுகையில் 6835. 45 MT , மன்னார்குடி படுகையில் 19788. 68 MT (மெட்ரிக் டன்) அளவுக்கு மீத்தேன் உள்ளது. இவை அனைத்துமே 600 மீட்டர் ஆழத்தில் மட்டுமே உள்ளது.
இந்த 600 மீட்டர் ஆழத்தில் உள்ள மீத்தேனை மரபுசாரா எரிவாயு எடுக்கும் முறைகளில் வாயு மற்றும் நீராவியை உட்செலுத்தல் மூலம் அழுத்தத்தை செயற்கையாக ஏற்படுத்தி பயன்படுத்த முடியும். அதையே செய்யப்போவதாக அறிவித்துள்ளனர்.
தற்போது அறிவித்துள்ள 39 கிணறுகளும் 10, 000 அடியிலிருந்து 17, 000 அடிவரை ஆழம் கொண்டவை. இந்த ஆழத்தில் கடினப்பாறைகளுக்கு இடையே உள்ள மீத்தேன் (Shale gas)வகையை சேர்ந்ததாகும். இந்த வகை மீத்தேனை நீரீயல் விரிசல் (Hydraclic Fracking) முறையை பயன்படுத்தி மட்டுமே எடுக்க முடியும்.
ஏனென்றால் பத்தாயிரம் அடி ஆழத்துக்கு கீழே முற்றாக அழுத்தம் ஏதும் இருக்காது. இந்த ஊடுருவா தன்மை உள்ள ஆழத்தில் முற்றிலும் செயற்கையான முறையிலேயே அழுத்தத்தை உருவாக்க வேண்டும்.
இதற்காக நீரியல் விரிசல் முறையை பயன்படுத்துகிறார்கள். 635 வகையான ரசாயன வேதிப்பொருட்கள் 360 டன், 400 டிப்பர் லாரி மணல், ஜல்லி, பீங்கான் துகள்கள் ஆகியவற்றை1 ½ கோடி லிட்டர் நீரில் கலந்து அதிவேகமாக ஐந்தரை கிலோ மீட்டர் ஆழகிணற்றில் பீய்ச்சி அடிப்பார்கள். இதன் மூலம் பூமிக்கு அடியில் உள்ள கடினப்பாறைகளை பிளந்து அவைகளுக்கு இடையே உள்ள மீத்தேனை கிணற்றில் சேகரித்து வெளியே கொண்டு வருவார்கள். இதனோடு உட்செலுத்திய 30% அளவுக்கு ரசாயன கலவையும் வெளியே வரும். இதை குட்டைகளில் சேமித்து ஆவியாக்குவார்கள். இதனால் காற்று மண்டலத்தில் ரசாயன கலவை கலக்கும்.
இந்த நீரியல் விரிசல் முறை அணுகுண்டைவிட ஆயிரம் மடங்கு அழிவை ஏற்படுத்தும் தன்மையுடையது. 635 வகையான ரசாயனங்களையும் ஒன்றாக கலக்கும் போது அது எப்படிபட்ட வேதி வினைபுரியும் என்பதற்கு அறிவியல் உலகில் இதுவரை ஆய்வுகளே இல்லை. இதை பயன்படுத்திய நாடுகளில் இந்த அழிவு தொழில்நுட்பம் ஏற்படுத்திய அழிவுகளுக்கு எதிராக மக்கள் போராடி வருகின்றனர்.
உலகிலேயே மக்களிடையேயும், அறிவியல் உலகிலும் மிகவும் சர்ச்சைக்குள்ளான ஒரு தொழில்நுட்பம் நீரியல் விரிசல் முறையே ஆகும்.
இதனால் ஆஸ்திரேலியா இந்த தொழில்நுட்பத்தை முற்றாக தடைசெய்துள்ளது. அமெரிக்கா மக்கள் வாழாத பகுதியில் மட்டுமே நீரியல் விரிசல் முறையை பயன்படுத்த வேண்டும் என்று கட்டுப்பாடு விதித்துள்ளது. ஆனால் நியூயார்க் மாகாண ஆளுநர் இம்முறைக்கு முற்றாக தடைவிதித்து கடந்த ஆண்டு உத்தரவிட்டுள்ளார்.
இந்த நீரியல் விரிசல் முறையால் காற்றுமண்டலம் முற்றாக நஞ்சாகி உயிரினங்கள் சுவாசிக்க முடியாததாக மாறிவிடும். இதனால் புல், பூண்டு கூட இப்பகுதிகளில் வாழமுடியாது. இந்த காற்றை சுவாசிக்கும் மனிதர்களும், மிருகங்களும் நுரையீரல் கோளாறுகள், புற்றுநோய் உட்பட அனைத்து வகையான நோய்களுக்கும் ஆட்படுவார்கள்.
காற்றில் பரவியுள்ள நஞ்சு, மழைக்காலத்தின் போது பூமிக்கு வந்து மண்ணை நஞ்சாக்கிவிடும். இதன் மூலம் நிலத்தடி நீரும் நஞ்சாகிப்போகும்.
பூமியின் அடியில் உள்ள கடினப்பாறைகளை உடைப்பதால் நிலநடுக்கம் மிகச் சாதாரணமாக இப்பகுதிகளை தாக்கி பேரழிவை ஏற்படுத்தும், பாறைகளை உடைப்பதால் வெளியே வரும் மீத்தேன் மற்றும் ரசாயனக் கலவை மேலே வந்து நிலத்தடி நீரில் கலக்கும்.
மொத்தமாக சொன்னால் கடினப்பாறைகளுக்கு நடுவில் உள்ள மீத்தேனை எடுப்பதற்காக பயன்படுத்தப்படும் நீரியல் விரிசல் முறை இந்தப்புவியையே அழிக்கும் தொழில்நுட்பமாகும்.
இது வரை நாம் பரிசிலித்த செய்திகளில் இருந்து ONGC நிறுவனம் அமைக்க உத்தேசித்துள்ள நீரியல் விரிசல் முறையை பயன்படுத்தி எடுக்கப்படும் மீத்தேன் கிணறுகளே ஆகும். தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் மட்டுமல்ல கடலூர், அரியலூர் மாவட்டங்களையும் உள்ளடக்கியதுதான் இத்திட்டம். அதிலும் 39 கிணறுகளில் 24 கிணறுகள் இவ்விரு மாவட்டங்களில்தான் அமையவுள்ளது.
எனவே தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் இத்திட்டத்தை தடுத்தால் மட்டும் போதாது, கடலூர், அரியலூர் மாவட்டங்களில் மீத்தேன் கிணறுகள் அமைந்தால் இந்த மாவட்டங்களில் மட்டுமல்ல தமிழகத்தின் பெரும்பான்மையான மாவட்டங்களும் அழிவின் பிடியில் தள்ளப்படும் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஊர்கள், மாவட்டங்கள், நாடுகள் என்று மனிதர்கள் எல்லைகளை உருவாக்கிக் கொள்ளலாம். ஏன் கடலிலும், ஆகாயத்திலும் கூட எல்லைகளை ஏற்படுத்திக் கொள்ளலாம். இதன் மூலம் மனிதர்களை வேண்டுமானால் கட்டுபடுத்தலாம். காற்றை ஒரு எல்லைகளிலிருந்து மற்றொரு எல்லைக்கு வராமல் தடுக்க முடியுமா?
கடலூர், அரியலூர் மாவட்டங்களின் காற்றுமண்டலம் நஞ்சானால் அது இந்த மாவட்டங்களையும், இங்கு வாழும் மனிதர்கள் உட்பட உயிரினங்களுக்கு மட்டுமே பாதிப்பை ஏற்படுத்துமா?
- மீத்தேன் எதிர்ப்பு கூட்டமைப்பு – கடலூர் மாவட்டம். தொடர்பு எண்: 9842529188
- விவரங்கள்
- முகிலன்
- பிரிவு: சுற்றுச்சூழல்
வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கத்துக்கு அருகில் நெமிலி ஒன்றியத்தில் உள்ளது, களத்தூர் கிராமம். பாலாற்றின் கரையில் உள்ள இந்தக் கிராமத்திற்க்கு அருகில்தான் புதிதாக சங்கரன்பாடி மணல்குவாரி அமைக்க ஓராண்டுக்கு முன்பு பொதுப்பணித் துறை அனுமதி வழங்கியது. மணல் குவாரியின் பாதிப்பை உணர்ந்த இப்பகுதி மக்கள் தமிழக அரசின் குவாரி அறிவிப்பு வெளியானதில் இருந்தே அதை எதிர்த்து ஒருங்கிணைந்து போராடத் தொடங்கினர்.
பாலாற்றின் சிறப்பு :
இந்தியாவில் உள்ள மூத்த ஆறுகளில் ஒன்று என்று பாலாற்றைச் பலரும் சொல்லுவதற்குக் காரணம் உண்டு. அதாவது பாலாற்றில் மட்டும்தான் சுமார் 100 அடி ஆழம் வரை கூட சில இடங்களில் மணல் சுரங்கம் போன்று இருக்கும். இந்த மணல் சுரங்கத்தைத்தான் களிமண் தெரியும் வரை அடிவரை தோண்டுகிறார்கள். ஒரு செ.மீ மணல் உருவாக 100 ஆண்டுகளும், ஒரு அடி மணல் உருவாவதற்கு பல நூற்றாண்டுகளும் ஆகின்றன என்கிறது அறிவியல் ஆய்வுகள்.
தமிழக ஆறுகளின் நிலைமை :
தமிழகத்தில் ஓடும் நதிகளில், பெரும்பாலானவற்றில் ஆற்றுமணல் வரைமுறையற்று இரக்கமில்லாமல் அள்ளப்படுகிறது. ஆறுகளில் மணல் என்பது ஏதோ வீணாகக் கிடப்பதல்ல. ஆற்றில் மணல் இருந்தால்தான் ஓடும் நதிநீரை பஞ்சுபோல பிடித்து ஈர்த்து வைத்திருக்கும். ஆற்று மணல்தான் தண்ணீரை தேக்கி வைத்து நிலத்தடி நீர்மட்டம் குறையாமல் பாதுகாக்கிறது. ஆறுகளில் தண்ணீர் ஓடாதபோதுகூட மணலுக்குக் கீழே தனியாக ஒரு நீரோட்டம் ஓடிக் கொண்டிருக்கும். இதனால்தான் ஆற்றில் எங்கே கைகளால் தோண்டினாலும் தண்ணீர் கிடைக்கிறது. இந்த மணலை முழுமையாக அகற்றினால் பழைய நிலைமைக்கு வருவதற்கு பல நூறு ஆண்டுகள் ஆகும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். ஆனால், மணல் கொள்ளையர்களோ அரசு அனுமதித்த 1 மீட்டர் ஆழம் (3½ அடி) வரை என்பதை மீறி 100 அடி ஆழம் கட்டாந்தரை வரை ஆற்று மணலை கணக்கில்லாமல் அள்ளிக்குவித்து பணமாக்கி விடுகிறார்கள்.
அண்டை மாநிலங்களில் ஆறுகளின் நிலைமை :
கேரளத்தில் ஓடும் 45 ஆறுகளில் எந்த ஓர் ஆற்றிலும் கேரள அரசு மணல் அள்ள அனுமதிக்கவில்லை. ஆந்திரத்தில் கிருஷ்ணா, கோதாவரி போன்ற மிகப் பெரிய ஆறுகளில்கூட இயந்திரங்களைப் பயன்படுத்தி மணல் அள்ளக்கூடாது என்ற அரசின் விதி கடுமையாக உள்ளது.
மணல்கொள்ளை:
மூலதனமே இல்லாமல் சமூக சொத்தை கொள்ளையடிக்கும் வழிகளில் ஒன்று மணல்கொள்ளை. மணல் கொள்ளையர்கள் -ஆளும் அரசியல்வாதிகள் -அதிகாரிகள் என்ற முக்கூட்டில் பலலட்சம் கோடி அளவில் ஆற்று மணல் கொள்ளை அடிப்பது என்பது ஊரறிந்த ரகசியமாக, எழுதப்படாத விதியாக கடந்த 20 ஆண்டுகளில் நடந்து வருகிறது.
ஆற்றுமணல் கொள்ளையை எதிர்த்து மக்களின் சட்டப் போராட்டமும் - நடந்ததும் :
ஆற்றுமணல் கொள்ளையை எதிர்த்து மக்களின் தொடர்ந்த போராட்டத்தாலும், சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்கு மூலமும் நீதிபதி சம்பத் அவர்கள் ஒரு நிபுணர் குழுவை அமைத்து அதனுடைய பரிந்துரைப்படி 1.10.2003 முதல் அரசு மட்டுமே மணல் குவாரியை நடத்த வேண்டுமென உத்தரவிட்டார். அதற்கு ஏற்ப, அரசு மணல் குவாரியை பொதுப்பணித்துறை மூலம் ஏற்று நடத்தத் தொடங்கியது.
முறைப்படுத்துகிறேன் என்ற பெயரில் அரசு, மணல் குவாரிகளை நடத்துவதாகக் கூறினாலும் ஆளும் அரசின் ஆசி பெற்றவர்களை மணலை லாரிகளின் ஏற்றும் ஒப்பந்தம் (லோடிங் கான்டிராக்ட்) என்ற பெயரிலும் இரண்டாம் விற்பனை (செகண்ட் சேல்ஸ்) என்ற பெயரிலும் ஆறுமுகசாமி, கே.சி.பழனிசாமி, படிக்காசு போன்ற மணல் கொள்ளையர்களிடம் மட்டுமே அனைத்து மணல் குவாரிகளும் இருந்தது. தற்போதைய ஆட்சியில் ஆறுமுகசாமி மட்டுமே அனைத்து மணல்குவாரிகளுக்கும் முற்றுரிமை பெற்றவராக வலம்வந்து தற்போது அவரும் மாற்றப்பட்டு ராமசந்திரன் என்பவர் எடுத்து வருகிறார். தற்போது பொதுப்பணித்துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் மைத்துனர் எனக் கூறிக் கொண்டு ஒரத்தநாடு பாசுகர் என்பவர் கரிகாலன் என்பவரை வைத்து மணல் கொள்ளையை நடத்தி வருகிறார்கள்.
அரசு 3 யூனிட் கொண்ட ஒரு லாரி மணல் 945 என விலை நிர்ணயித்திருந்தாலும் அதன் உண்மையான விற்பனை விலையாக ரூ.15 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை உள்ளது. இந்த விலையை தீர்மானிப்பவர்கள் மணல் கொள்ளையர்கள் மட்டுமே.
தமிழ்நாட்டில் எடுக்கப்படும் ஆற்றுமணல் அனைத்தும் தமிழகத்தின் கட்டட வேலைக்கு மட்டும் பயன்படுத்தப்படுவதில்லை. இவர்கள் சுரண்டும் ஆற்றுமணல் அளவிற்கும், தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் கட்டிட வேலைகளுக்கும் மிகப்பெரும் இடைவெளி உள்ளது. தமிழகத்தில் அள்ளப்படும் ஆற்றுமணல் வெளிமாநிலங்களுக்கும், வெளிநாட்டிற்கும் கூட கடத்தப்பட்டு வருகிறது.
கேரளத்தில் பல இடங்களில் காவிரி, அமராவதி, தாமிரபரணி ஆற்று மணல் கிடைக்குமென பெயர்ப்பலகைகள் தொங்குகிறது. மாலத்தீவு உட்பட பல வெளிநாடுகளுக்கு ஆற்று மணல் கடத்தப்படுகிறது. மாலத்தீவுக்கு கொண்டு செல்லப்படும் ஆற்று மணலின் அளவு ஆண்டிற்கு 11 லட்சம் டன்னாகும். இயற்கையின் மடியில் பாலைக் குடிப்பதற்கு பதிலாக இயற்கையின் மடியையே அறுத்து ரத்தம் குடிக்கும் இக்கொள்ளையர்களால் தமிழகத்தின் ஆற்று வளமே அழிந்துவிட்டது. ஆற்றின் நீர்மட்டமே தாழ்ந்துவிட்டது. ஆற்றில் எங்கு கைவைத்து தோண்டினாலே தண்ணீர் வரும் என்ற நிலை அழிந்தே போய்விட்டது. ஆறுகளில் ராட்சச இயந்திரங்களை வைத்து மணல் அள்ளக்கூடாது என உயர்நீதிமன்றம் 2010, 2012, 2013 ஆண்டுகளில் பல்வேறு தீர்ப்புகளை கொடுத்திருந்தாலும் அது எதுவும் மணல் கொள்ளையை தடுக்க உதவவில்லை. 10 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு ஆற்று மணல் அள்ளியதில் முறைகேடு நடைபெற்றுள்ளது.
கனிமவளக் கொள்ளையைப் பொறுத்தவரை இவர்களுக்கு குவாரி நடத்த அரசின் அனுமதி பெற்ற இடங்கள் என்பதெல்லாம் பெயர் அளவிற்குத்தான் சில இடங்களில் மட்டும் அனுமதி பெற்ற இவர்கள், கனிமங்கள் எங்கெல்லாம் இருக்கிறதோ, அவையனைத்தையும் தங்கள் விருப்பப்படி வெட்டி எடுத்து சூறையாடி இயற்கையை நாசமாக்கி வருகிறார்கள். ஆட்சிக்கு வந்த அனைத்து அரசியல்வாதிகளும் பெரும்பாலான அதிகாரிகளும் இவர்களின் சட்டைப் பைக்குள்ளேயே அடங்கி இருக்கின்றனர். தமிழகத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இவர்கள்தான் ஒரு நிழல் அரசாங்கமாகவே செயல்பட்டு வருகின்றனர். ஆறுமுகசாமி போன்ற மணல் கொள்ளையர்கள் அடுத்து அமையவிருக்கும் அரசை நான்தான் தீர்மானிப்பேன் என்று வெளிப்படையாக கூட்டங்களில் பேசும் அளவிற்கு இவர்களின் அசுர பலம் உள்ளது.
மணல்குவாரிகள் விதிமுறைகள் சில :
-காலை 7 முதல் மாலை 5 மணி வரைதான் மணல் எடுக்க வேண்டும்.
-தமிழக அரசின் சிறப்பு அனுமதி பெற்றுதான் பொக்கலைன் பயன்படுத்த வேண்டும்.
-நிலத்தடி நீர் பாதிப்பு ஏற்படுமா, மணல் அள்ள அனுமதிக்கலாமா, வேண்டாமா என பொதுப்பணித்துறை, சென்னையில் உள்ள சுற்றுச் சூழல் ஆணையத்திடம் அனுமதி பெற வேண்டும்.
-மணல் அள்ளுவதில் இரண்டு பொக்கலைன் எந்திரங்கள்தான் பயன்படுத்த வேண்டும்.
- வாரம் ஒரு நாள் ஞாயிறு அன்று மணல்குவாரி இயங்க கூடாது.
-ஒரு மீட்டர் ஆழம் மட்டுமே மணல் அள்ள வேண்டும்.
-ஆற்றின் கரை ஓரத்தில்தான் அள்ள வேண்டும்.
--அள்ளபடும் இடம் தெளிவாக தெரியும் வகையில் எல்லைக் கற்கள் நடப்பட்டு, கம்பிவேலி அமைக்கப்பட்டு இருக்க வேண்டும்.
-இதனால் உள்ளூர் மக்களுக்கு நிலத்தடி நீர், சாலை வசதி, விவசாயம் என எந்த பாதிப்புகளும் வரக்கூடாது.
-குவாரி மணல் கொட்டி வைக்கப்படும் இடத்திற்க்கு ஊராட்சி மன்றத்திற்கு வரி செழுத்த வேண்டும்.
-குவாரி மணல் கொட்டி வைக்கப்பட்டு எடுக்கப்படுவதால் அதற்க்கு வருமானவரி துறையிடம் செகண்ட் சேல்(second sals) வரி செழுத்த வேண்டும்.
- இதை கண்காணிப்பதற்காக 2006 -இல் உயர்நீதிமன்றம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்ட அளவில் சிறப்புக் குழு, தாசில்தார் தலைமையில் வட்ட அளவில் சிறப்புக் குழு என அமைத்து இயங்க வேண்டும் எனவும்,மாதம் ஒருமுறை இக்குழு கூடி கனிமவள முறைகேடு பற்றிய புகார்களை விசாரிக்க வேண்டும், எனவும் உத்தரவு இட்டு இருக்கிறது.
இவை அனைத்தும் சட்டமாக தாள்களில் மட்டும் உள்ளது.இதை அதிகாரிகள், அரசு யாரும், எங்கும் நடைமுறைப் படுத்துவதில்லை.
பாலாற்றின் நிலை:
பாலாற்றில் ஏற்கனவே தோல் தொழிற்சாலைகளின் ரசாயன கழிவு நீரை சுத்திகரிப்பு செய்யாமல் விட்டு வந்ததால், பாலாற்றில் இருந்த குடிநீர் ஆதரங்களும், விவசாயமும் கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்து வந்தது.
ஏற்கனவே காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல இடங்களில். அரசால் மணல்குவாரி அமைத்து, தொடர்ந்து களிமண் தெரிய அடிவரை மணலை ஒட்ட தோண்டி எடுத்ததால் அப்பகுதியில் எல்லாம் எண்ணற்ற பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாலாற்றில் பெரும்பாலான இடங்களில் மணலை ஒட்ட சுரண்டிய பின், வேலூர் மாவட்டத்தில் காலடி எடுத்து வைத்தனர். ஏற்கனவே வேலூர் மாவட்டத்தில் பூண்டி சுமைதாங்கி, குடிமல்லுர், சாத்தாம்பாக்கம், தேவதானம், வன்னிவேடு, தோட்டாளம், அனங்காநல்லூர், மோட்டூர் என பல இடங்களில் பாலாற்றில் மணல்குவாரி அமைத்து செயல்பட தமிழக அரசின் பொதுப்பணித்துறை அனுமதி கொடுத்து அதனால் எண்ணற்ற பாதிப்புகள் ஏற்பட்டது..
எனவே இதை எதிர்த்து மக்கள் கொதித்தனர். பல இடங்களில் மக்கள் போராட்டம் வெடித்தது. மணல்குவாரி ஆபத்து பற்றியும்,தொடர் விளைவுகள் பற்றியும் மக்கள் உணர்ந்து இருந்ததால் வேலூர் மாவட்டத்தில் மணல்குவாரி அமைப்பதை எதிர்த்து மக்கள் தொடர்ந்து போராடி வந்தனர். குறிப்பாக பாலாற்றில் வன்னிவேடு மணல்குவாரி அமைப்பதை எதிர்த்து வாலாஜாபேட்டை போன்ற ஊர்களில் மக்கள் அணிதிரண்டு கடையடைப்பு உட்பட எண்ணற்ற போராட்டங்களை மேற்கொண்டனர். அதே போல் தோட்டாளத்தில் மணல்குவாரி அமைத்ததை எதிர்த்து மக்கள் நீதிமன்றத்தில் தடை வாங்கியும், தொடர்ந்து மணல்குவாரியை முற்றுகை இட்டும் போராடி வந்தனர்.
மக்கள் போராட்டங்களை நசுக்கும் கலை:
மக்கள் போராட்டங்களை நசுக்கும் கலையை மணல்கொள்ளையர்கள் தெளிவாக வரைபடம் போல் வரையறுத்து வைத்து உள்ளனர். முதலில் அப்பகுதியில் உள்ள அனைத்து அரசியல்கட்சி தலைவர்களையும், அதிகாரிகளையும், மக்கள் பிரதிநிதிகளையும் தேவையானதைக் கொடுத்து விலைக்கு வாங்குவது. பின்பு அப்பகுதியில் பாதிப்புக்கு உள்ளாக இருக்கும் மக்களை நல்ல வேலைவாய்ப்பு என கூறி அழைத்து வேலை கொடுப்பது. பின்பு அவர்களை வேலைக்கு வர வேண்டாம் எனக் கூறிவிட்டு வீட்டில் சும்மா இருங்கள் உங்களுக்கு மாத மாதம் சம்பளம் வரும் எனக் கூறி ஜேசிபி, பொக்லைன், ஹிட்டாசி கருவிகளை வைத்து மணல் அள்ளத் தொடங்குவது. அப்பகுதியில் உள்ள மக்களிடம் எதிர்ப்பு வராமல் இருக்க ஒரு ரேஷன் அட்டைக்கு என சில மாதங்களுக்கு ஒருமுறை 5000, 10000 என பணம் கொடுப்பது. ஊரில் கோவில்கட்ட, கும்பாபிஷேகம் நடத்த, பள்ளி மராமத்து, விளையாட்டு போட்டிக்கு பணம் - பரிசுகள், ஊரில் நடக்கும் நாடகம் , தெருக்கூத்து , கலைநிகழ்சிகளுக்கு பணம் கொடுப்பது, முன்னணியில் நிற்பவர்களுக்கு பல லட்சம் பணம் என பணத்தை அருவி போல் கொட்டி அவர்களை விலைக்கு வாங்குவது என்பது நடக்கும்.
இதற்கும் மசியாமல் மக்களோ, தனிநபரோ, இயக்கமோ போராடினால் ஒவ்வொரு ஊரிலேயேயும் மக்களிடம் பிளவை உருவாக்கி சமூக பதட்டத்தை ஏற்படுத்துவது, ஊர் மோதல் ஏற்படுத்துவது, சாதி மோதல் ஏற்படுத்துவது, மாத மோதல் ஏற்படுத்துவது, மக்களையே ஒருவரை ஒருவர் தாக்க செய்வது, உள்ளூரில் விலைக்கு வாங்கிய தனது ஆதரவாளர் மூலம் தனக்கு எதிரானவர்கள் மீது பொய்வழக்குகளை தொடர்ந்து கொடுக்க வைப்பது என்பதை நடத்துவார்கள். மேலும் போராட்ட தலைவர்களை விலைக்கு வாங்க முடியாவிட்டால் அவர்களைப் பற்றி பல்வேறு பொய்யான அவதூறுகளை மக்களிடம் கட்டவிழ்த்து விடுவது அதன் மூலம் மக்களிடையே அவர்கள் மீது நம்பிக்கையின்மையை ஏற்படுத்துவது என்பதும்: சில நேர்மையான அதிகாரிகளுக்கு மேல் அதிகாரி மூலம் அச்சுறுத்தல், மிரட்டல், அதற்க்கும் அடிபணிய மறுத்தால் பணிமாற்றம் என்பதும் நடக்கும்.
மேலும் மணல்குவாரியை எதிர்ப்பவர்களுக்கு மறைமுக மிரட்டல், குடும்ப உறவுகள்-நட்பு வட்டம் மூலம் நெருக்கடி, குடும்ப உறவுகள்-நட்பு வட்டதிதிற்க்கு மணல் எடுக்க வாகன வாய்ப்பு, தொழில் ஏற்பாடு செய்து போராட்ட முன்னணியினரை செயலிழக்க செய்வது, அரசு பணியில் யாராவது உள்ளூரில் இருந்தால் போராட்டத்தில் தொடர்பு எனக் கூறி இடைநீக்கம் (சஸ்பெண்டு) செய்வது-இதன் மூலம் மக்களை மிரள வைப்பது, உள்ளூர் அதிகாரிகள் மூலம் மிரட்டல், பின்பு காவல்துறையினரே களத்தில் இறக்கப்படுவார்கள். சட்டத்தைக் காக்கிறேன் என்பதன் பெயரில் உன்னைப் பற்றி புகார் வந்துள்ளது எனக் கூறி மிரட்டல், காவல்துறை மூலம் பொய்வழக்கு , காவல்துறை மூலம் தாக்குதல், காவல்துறையின் பொய்வழக்கு மூலம் சிறை, சித்திரவதை, நீதிமன்ற விசாரணை என்பது தொடர்ந்து நடக்கும்.
சில நேரங்களில் மணல்குவாரியை எதிர்ப்பவர்களை கூலிப்படை வைத்து கொலை செய்வது, ஆளே இல்லாமல் செய்து விடுவது என்பதும் நடக்கும். இப்படி எண்ணற்ற சாம, பேத, தான, தண்ட முறையிலேதான் போராடும் மக்களையும், போராட்ட தலைவர்களையும், சில நேர்மையான அதிகாரிகளையும் மணல்குவாரி நடத்துபவர்களால் இப்படி கவனிக்கப்படுவார்கள்.
இதற்கு பல உதாரணங்கள் உண்டு. வருவாய்துறை தாசில்தார் காஞ்சிபுரம் வெங்கடேசன் , காவல்துறை ஏட்டு அரக்கோணம் கனகராசு , பல்வேறு சமூக சுற்றுசூழல் ஆர்வலர்கள் மானுர் தனிகாச்சலம், புதுக்கோட்டை கார்த்திக் மற்றும் ராஜேஷ், திசையன்விளை சதீஷ்குமார், திருவைகுண்டம் சாம் தேவசகாயம் போன்ற ஊர்தலைவர்கள், தோழர் நெல்லை வீரவநல்லுர் சுடலைமுத்து போன்ற அரசியல் இயக்கம் சார்ந்தவர்கள் என பலரும் மணல் கொள்ளையை தடுத்ததால் கொலை செய்யப்பட்டுள்ளனர். ஆட்சியர் சகாயம் போன்றவர்களே மணல்கொள்ளையர்களால் காஞ்சிபுரத்தில் பணியாற்றி வந்த போது கொலைவெறி தாக்குதலுக்கு உள்ளாகி உயிர் தப்பித்த நிகழ்வுகளும் உண்டு.
தாமிரபரணி மணல் கொள்ளை வழக்கு தீர்ப்பும் :
2010ம் ஆண்டில் சமூக ஆர்வலர் நெல்லை சுடலைக்கண்ணு, இந்திய பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர்.நல்லக்கண்ணு ஆகியோர் தாமிரபரணி ஆற்றில் 5 மணல் குவாரிக்களின் பெயரில் ஆறு முழுக்க நடக்கும் மணல் கொள்ளையை தடுக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதில் நீதிபதி பானுமதி, நீதிபதி நாகமுத்து ஆகியோர் அடங்கிய உயர்நீதிமன்ற அமர்வு தனது தீர்ப்பில் தமிழகத்தில் உள்ள 33 ஆறுகளிலும் மணல் அள்ளுவதில் முறைகேடு நடந்துள்ளது, நடந்து வருகிறது எனக் கூறி தமிழகம் முழுக்க உள்ள ஆற்றுமணல் குவாரிகளில் பின்பற்ற வேண்டிய பொது வழிகாட்டுதல் வழிமுறைகளை அளித்தது.
மேலும், ஆற்று மணல் அள்ளுவதைக் கண்காணிக்க, நீதிமன்ற உத்தரவை முறையாக பின்பற்றுகிறார்களா என கண்காணிக்க ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகளின் தலைமையில் மாநில அளவிலான கண்காணிப்பு குழுவையும், மாவட்ட நீதிபதி தலைமையிலான மண்டலக் கண்காணிப்புக் குழுவையும் அமைத்தனர்.
தமிழகத்தில் நடைபெறும் ஆற்றுமணல் கொள்ளையைப் பற்றி கண்காணிக்க மாநில கண்காணிப்புக் குழுவுக்கு ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதியை தலைமையாகக் கொண்டும் அரசு நியமிக்கும் உறுப்பினர் செயலர் மாநிலக் கண்காணிப்புக் குழுத் தலைவருக்கு தொழில்நுட்ப விசயங்களில் உதவி செய்வார் எனவும் தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களை நான்கு மண்டலமாகப் பிரித்து ஒவ்வொரு மண்டலத்திலும் ஒரு ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதியை தலைவராகவும் நீர்வளத்துறையிலிருந்து ஒருவரையும் சுற்றுப்புறவியலாளர் ஒருவரையும் கொண்ட மண்டல அமைப்புக் கமிட்டி அமைத்துச் செயல்பட வேண்டும் என்று கூறி 2.2.2010 அன்று ஆற்று மணல் முறைகேடு வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பானுமதி நீதிபதி நாகமுத்து ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்தது.
மேலே குறிப்பிட்ட கண்காணிப்புக் குழுக்கள் 2 ஆண்டுகள் பொறுப்பிலிருக்கும். குழுத் தலைவருக்கு மாதம் ரூ 75 ஆயிரமும் குழு உறுப்பினருக்கு மாதம் ரூ 25 ஆயிரமும் சம்பளமாகக் கொடுக்க வேண்டும் என்றும் ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர் அலுவகத்திலும் இந்தக் குழு செயல்பட ஒரு அலுவலக அறை ஒதுக்கியும், அலுவலக வேலைக்காக தட்டச்சர் ஒருவரையும் அலுவலக உதவியாளர் ஒருவரையும் ஒதுக்க வேண்டும் என்றது. மேலும் தமிழகம் முழுவது ஆற்றுமணல் அள்ளுவதில் பொதுவழிகாட்டும் நெறிமுறைகளைக் கூறும் 42 பக்க தீர்ப்பு ஒன்றை அளித்தது.
கண்காணிப்புக் குழு எடுக்கப்படும் மணலின் அளவு, கனிமவளச் சட்டத்தில் கூறப்பட்ட வழிமுறைகளின்படி அறிவியல்பூர்வமாக மணல் அள்ளப்படுவதைக் கண்காணிக்கும். பாதிக்கப்பட்ட மக்கள் இக்குழுவினரிடம் முறையிடலாம். பாதிப்புகளுக்கு எவ்வாறு இக்குழு தீர்வுகாண வேண்டும் என்பது உட்பட பல்வேறு நடைமுறை சார்ந்த செயல்பாடுகளை, தமிழகத்தில் நடைபெறும் ஆற்றுமணல் முறைகேடுகளை தடுத்து நிறுத்தி தீர்வுகாணும் வகையில் அமைத்தது.
ஆனால், இந்தத் தீர்ப்பு அன்றைக்கு தமிழகத்தை ஆண்டுவந்த கருணாநிதி அரசாலும் 2011ல் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா அரசாலும் பின்பற்றப்படவேயில்லை. ஒருவரையொருவர் குற்றம் சாட்டுவதில் தீவிரமாக இருந்தனரே தவிர, ஆற்றுமணல் தடுத்து நிறுத்துவதில் அக்கறை காட்டவேயில்லை. உயர்நீதிமன்றம் அமைத்த கண்காணிப்புப் குழுக்களை செயல்படுத்த தமிழக அரசு விடவேயில்லை. அவர்களுக்கு அலுவலகங்கள் அறைகூட ஒதுக்கவில்லை. மணல் கொள்ளை பற்றி கண்காணிக்க அமைக்கப்பட்ட குழுக்கள் செயல்படாமலேயே 2012 பிப்ரவரியில் இல்லாமல் போனது. ஆற்று மணல் கொள்ளை தமிழகம் முழுக்க நீதிமன்றம் உத்தரவிட்ட சில இடங்களைத் தவிர்த்து அனைத்து இடங்களிலும் அரசு அதிகாரிகளின் பாதுகாப்பான கூட்டணியோடு இன்று வரை கொடிகட்டிப் பறந்து வருகிறது.
மணல்கொலைக்கு கூட்டாளியாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் :
கடந்த ஆண்டு காஞ்சிபுரம் மாவட்டத்தில் பழைய சீவாரம் மணல் குவாரியில், எண்ணற்ற முறைகேடுகள் சமூக ஆர்வலர்களால் கண்டறியப்பட்டது. அதை பியூசிஎல்-பாலாறு பாதுகாப்பு இயக்கம் - காஞ்சி லாரி உரிமையாளர்கள் சங்கம் ஆகிய அமைப்புகளின் தொடர் முயற்சியில் மணல் கொள்ளைக்கு துணை நின்று, பொய்யான விபரங்களை உயர்நீதிமன்றத்தில் கொடுத்த காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் சித்திரசேனன் மீது, உயர்நீதிமன்றம் நடவடிக்கை எடுத்தது.
வேலூர் - களத்தூர் போராட்டம்:
கடந்த 2014 ஆம் ஆண்டு ஜூன்-ஜூலை மாதத்தில் களத்தூர் கிராமத்துக்கு அருகில் உள்ள சங்கரன்பாடி கிராமத்தில் புதிதாக மணல் குவாரி அமைக்க வேலைகளை தொடங்கி உள்ளனர். ஏற்கனவே பத்து ஆண்டுகளுக்கு முன்பு சங்கரன்பாடி கிராமத்தில் மணல் குவாரி அமைக்கப்பட்டு சில மாதம் இயங்கிய நிலையில் அதன் பாதிப்புகளை நேரடியாக மக்கள் உணர்ந்து அதை போராடி தடுத்து இருந்தனர் களத்தூர் மக்கள்.
மணல்குவாரி அமைப்பது என முடிவு செய்தவுடன் சங்கரன்பாடி கிராமத்தில் எதிர்ப்பு வராமல் இருக்க ஒரு குடும்பதிற்க்கு (திருமணமான ஒரு ஜோடி) ரூ.10,000/= என மணல்கொள்ளையர்கள் கொடுத்து உள்ளனர். மேலும் களத்தூரை சேர்ந்த பல கட்சி பிரமுகர்களையும், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளையும் முதலில் விலைக்கு வாங்கியுள்ளனர் மணல் கொள்ளையர்கள்.
மணல் கொள்ளையர்கள் சங்கரன்பாடி கிராமத்தில் புதிதாக மணல் குவாரி அமைக்கும் வேலைகளை தொடங்கினார்கள். சங்கரன்பாடி கிராமத்தில் எடுக்கும் மணலை களத்தூர் கிராமம் வழியாகத்தான் லாரிகள், டிராக்டர்களில் கொண்டு செல்ல முடியும். எனவே லாரி செல்லும் வழிப்பாதைக்கு எனவும், மணல் சேகரித்து வைக்க ஸ்டாக் யார்டுக்கு எனவும் களத்தூர் கிராம மக்களிடம் ஒரு ஏக்கர் நிலம் ரூ.60,000 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை சில ஆண்டுகள் பயன்படுத்த என வாங்க முயற்சித்தனர். இதற்கு உள்ளூரில் உள்ள அஇஅதிமுக ஒன்றிய கவுன்சிலரிடம் இந்த வேலையை ஒப்படைத்து உள்ளனர். மேலும் களத்தூர் ஊரில் உள்ள ஒவ்வொரு குடும்பதிற்க்கும் சங்கரன்பாடி போல் (திருமணமான ஒரு ஜோடி) ரூ.10,000/= வழங்க உள்ளனர்; மேலும் உள்ளுரை சேர்ந்த படித்த இளைஞர்களுக்கு மணல் குவாரி, ஸ்டாக் யார்ட் ஆகியவற்றில் கணக்கு எழுதும் வேலையும், டிராக்டர் இருந்தால் மணல்கொண்டு வரும் வேலையும் கொடுக்கப்படும் என மக்களிடம் ஆசை வார்த்தை காட்டினார்கள். ஏற்கனவே மணல்கொள்ளையால் பாதிக்கப்படும், போராடியும் சூடுபட்டு இருந்த களத்தூர் கிராம மக்கள், மணல் குவாரி அமைக்கப்பட்டால் நிலத்தடி நீராதாரமும், விவசாயமும் இப்பகுதியில் அழியும் என விழிப்புணர்வுடன் உடனே இதை எதிர்க்க தொடங்கினர்.
இந்த ஊரை சேர்ந்த விபரமுள்ள இளைஞர்கள் அனைத்து மக்களிடமும் இந்த செய்திகளை வீடுவீடாக எடுத்து சென்று அனைவரையும் ஒன்று திரட்டி இப்பிரட்சினையை கூடிப் பேசினார்கள். ஊரில் இருந்த 350 குடும்பத்தினரும் சங்கரன்பாடியில் மணல் குவாரி அமைக்கக் கூடாது என முடிவுசெய்தனர்., காரணம் சங்கரன்பாடியில் மணல்குவாரி அமைத்தால், அதை ஒட்டியுள்ள களத்தூர் வரை மணல்குவாரியை கொண்டு வந்து விடுவார்கள் எனவும், வேலூர் மாவட்டத்தில் அனைத்து மணல்குவாரியும் இப்படித்தான் சட்டவிரோதமாக நடக்கிறது என்பதையும், களத்துரில் யாரும் மணல்குவாரி வழிப்பாதைக்கும், ஸ்டாக் யார்ட்க்கும் நிலம்கொடுக்கக் கூடாது எனவும், மணல்குவாரி அமையுமானால் களத்தூர், சங்கரன்பாடி, சிறுநாவல்பட்டு, சிந்தனைக்கால், வடஇலுப்பை, புதூர், நல்லூர், பனப்பாக்கம், ஆகியுள்ள சுத்தியிருக்கிற கிராமங்களோட நிலத்தடி நீராதாரத்தையும் அழித்து குடிநீர், விவசாயம் அனைத்தும் அழிந்து விடும் என்பதையும் பேசி முடிவு செய்தனர்.
எனவே சங்கரன்பாடியில் மணல் குவாரிகள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 200 பெண்களும், ஆண்களும் வேலூர் மாவட்ட ஆட்சிதலைவரைப் பார்த்து மனு கொடுக்க சென்றனர். மாவட்ட ஆட்சிதலைவர் மணல் குவாரி பிரட்சினை என்றவுடன் களத்தூர் மக்களை நேரில் சந்திக்க மறுக்கவே, மக்கள் காரில் வந்த ஆட்சியரை முற்றுகையிட்டு போராடினர். மக்களிடம் மாவட்ட ஆட்சிதலைவர் நந்தகோபால் “மணல்குவாரி வராத இடத்திற்க்கு ஏன் வந்து போராடுகிறீர்கள்” என அப்பட்டமான பொய்யை புளுகி மக்களை ஏமாற்ற முயன்றார்.
ஊர் திரும்பிய மக்கள் அரசும், அதிகாரிகளும் நம்மை ஏமாற்றுகின்றனர் என்ற உணர்வுடன் இருந்தனர். இந்நிலையில் மணல் குவாரி அமைக்கும் இடத்தில் பொதுப்பணிதுறை அதிகாரிகள் வந்து ஆய்வு செய்யவும், அளக்கவும் முயன்றனர். மணல் குவாரி இங்கே இல்லை என மாவட்ட ஆட்சிதலைவர் ஒரு பக்கம் பொய் கூறி வருகிறார். இங்கே ஆற்றில் மணல் குவாரி அமைக்க உங்களை அளக்க விடமாட்டோம் எனப் போராடி பொதுப்பணிதுறை அதிகாரிகளை ஊரில் இருந்து மக்கள் வெளியேற்றினர்.
பாலாறு முழுக்க உள்ள அனைத்து மணல்குவாரிகளும் பொதுப்பணிதுறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் மைத்துனர் என சொல்லிக் கொள்ளும் ஒரத்தநாடு பாசுகர் என்பவரின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. இவருக்கு இங்கு முதன்மை ஏஜண்ட்டாக கரிகாலன் என்பவர் உள்ளார். இவர்தான் இப்போது பாலாறு முழுக்க உள்ள அனைத்து மணல்குவாரிகளின் ஏக சக்கர்வர்த்தி போல் செயல்பாடு வருபவர்.. இவரிடம் இப்பகுதியை சேர்ந்த மெய்யர், அவலூர் ரமேஷ் என்பவர்கள் பணி புரிந்து வருகின்றனர். பூண்டிசுமைதாங்கி மணல் குவாரிக்கு அவலூர் ரமேஷ் என்பவர்தான் பொறுப்பாளராக உள்ளார்.
அவலூர் ரமேஷ் என்பவன் போராட்ட முன்னனியினர் சிலரை தனக்கு தெரிந்த சிலரை வைத்து தனியாக அழைத்து,வரவைத்து “எல்லா ஊர்களிலும் ஒரு குடும்பத்திற்க்கு ரூ.10,000/= (பத்தாயிரம் மட்டும்) தருகிறோம். எனவே உங்கள் ஊருக்கு மட்டும் ஒவ்வொரு குடும்பத்திற்க்கு தனியாக தொகை அதிகம் தர முடியாது. போராட்ட பொறுப்பாளரான உங்களுக்கு வேண்டுமென்றால் தனியாக ரூ.50,00,000/= (ஐம்பது லட்சம்) தருகிறோம், ஊரில் வேலைவாய்ப்பு, மணல்குவாரியில் டிராக்டர் வைத்து ஓட்டுவது, புதிதாக கோவில் கட்டிக் கொடுப்பது, நீத்தேக்க தொட்டி கட்டிக் கொடுப்பது, பள்ளிக்கு தேவையானதை செய்வது என செய்கிறோம், மக்களை சமாளிக்க வேண்டியது உங்கள் பொறுப்பு” எனக் கூறி அனுப்பி உள்ளான்.
அவலூர் ரமேஷ், மெய்யர் ஆகியோரை சந்திக்க சென்றவர்கள் களத்தூர் ஊர்மக்களிடம் வந்து நடந்தவற்றை சொல்லியுள்ளனர். மக்கள் நலனில் அக்கறை உள்ள பொறுப்பாளர்கள் சிலர் ஊர்க்கூட்டத்தில் மக்களின் மனநிலையை, நாடித்துடிப்பை அறிய
“ -மணல்குவாரியை தொடர்ந்து எதிர்த்தால் அரசால் நமக்கு கடும் நெருக்கடி ஏற்படும். அதை நாம் துணிந்து எதிர் கொள்ள வேண்டும்
-ஊருக்கு வேலைவாய்ப்பு, மணல்குவாரியில் டிராக்டர் வைத்து ஓட்டுவது, புதிதாக கோவில் கட்டிக் கொடுப்பது, நீத்தேக்க தொட்டி கட்டிக் கொடுப்பது, பள்ளிக்கு தேவையானதை செய்வது என்கிறார்கள்
-மணல்குவாரிகாரனிடம் ஒரு குடும்பத்திற்க்கு ரூ.50,000/= (ஐய்ம்பதாயிரம் மட்டும்) எனக் கேட்கலாமா?”
என்றவுடன் மக்கள் உறுதியாக இதை எல்லாம் மறுத்து, எக்காரணம் கொண்டும் மணல்குவாரியை இயங்க விட்டுவிட்டு அகதியாக எங்கும் ஊரை விட்டு வெளியேற முடியாது. எது வந்தாலும், நடந்தாலும் சரி போராட்டத்தை தொடருவோம், மணல்குவாரி கொள்ளையர்களின் அச்சுசுறுத்தலுக்கோ, சலுகைக்கோ, அவன் வீசும் எச்சில் காசுக்கோ நாம் மயங்க கூடாது! மயங்க மாட்டோம்” என முடிவு செய்து உறுதியுடன் அறிவித்தனர்.
இந்த காலத்தில் வாலாஜாபேட்டையில் குமார் என்பவர் பாலாற்றில் குவாரி அமைக்க தடைகோரி உயர் நீதிமன்றத்துல மனு போட்டார்.. அந்த தீர்ப்பில் மணல் குவாரிக்குப் பக்கத்துல கிணறுகள் இருந்தா குவாரி அமைக்கக் கூடாது, ஆட்சியர் அடிக்கடி மணல் குவாரிகளை ஆராய்ந்து அறிக்கை தாக்கல் பண்ணணும்னு பல்வேறு விதிமுறைகளைக் கூறி உத்திரவிட்டது. இது போராடும் மக்களுக்கு ஊக்கமாக அமைந்தது. இந்த ஆண்டு தொடக்கம் முதல் களத்தூர் மக்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தினார்கள்
இப்பகுதி மக்களை தொடர்பு கொண்ட “பாலாறு விழிப்புணர்வு இயக்கத்”தினரின் வழிகாட்டலில் களத்தூரில் “தீச்சுடர் ஏந்தி போராட்டம்”, “மகளிர் குழுக்கள் எல்லாம் இணைந்து போராட்டம்” "ஆர்ப்பாட்டம்” என்பதுடன் “களத்தூர், சங்கரன்பாடி, சிறுநாவல்பட்டு, சிந்தனைக்கால், வடஇலுப்பை, புதூர், நல்லூர், பனப்பாக்கம்- கிராம மக்களுடன் இணைந்து ஆற்றில் இறங்கி கண்டன ஆர்ப்பாட்டம்” என நடத்தினர்.
வேலூர் மாவட்டத்தில் மணல்குவாரி அமைந்த அனைத்து இடங்களிலும் சாம,பேத,தான,தண்ட முறைகளில் மக்கள் போராட்டத்தை முறியடித்த மணல்கொள்ளையர்களால், தாழ்த்தப்பட்ட மக்கள் 350 குடும்பங்கள் ஒற்றுமையாக இருந்து நடத்தும் இப்போராட்டத்தை முறியடிக்க முடியவில்லை. ஆறு மாத காலம் பல்வேறு வழிகளை கையாண்டு பார்த்தும் ஏதும் நடக்கவில்லை. உள்ளூர் அரசியல் கட்சிக்காரர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகளை வைத்து பேசியும், மயக்கும் வார்த்தை பேசியும் களத்தூர் மக்கள் எவரையும் நம்பத் தயாராக இல்லை.
இக்காலத்தில் போராட்டத்தில் முன்னனியில் இருந்த ஒருவர் மணல்குவாரிகாரனின் கையாளாக மாறி மக்களின் துரோகியானான். இது கொஞ்சம் கொஞ்சமாக மக்களிடம் அம்பலமானது. அவனிடம் ஊரில் பலரும் வாய்சண்டை போட்டனர். இவன் ஊரில் வேலையில்லாமல் சுற்றுபவர்கள், குடிப்பழக்கம் உள்ளவர்கள் இவர்களை நைசாகப் பேசி அருகே உள்ள மணல்குவாரி ஏஜென்ட்டுகளிடம் அழைத்து சென்று களத்தூர்க்காரர் என்றால் தினசரி ரூ.1000/= என வாங்கி கொடுக்கும் வேலையை பல நாட்கள் செய்து ஊரில் குழப்பத்தை ஏற்படுத்தினான். ஊரில் இதனால் மக்களிடம் பல்வேறு சண்டைகள் ஏற்ப்பட்டது. மணல்குவாரிகாரனின் கையாளாக மாறியவன், மக்களில் சலுகைக்கு மயங்கியவர்களை தனித்தனியாக அழைத்து சென்று ஊரில் 30 குடும்பத்தினருக்கு “ஒரு குடும்பத்திற்க்கு ரூ.10,000/= (பத்தாயிரம்)” வாங்கி கொடுத்துள்ளான்.
சில குடும்பங்கள் பணம் வாங்கியது ஊரில் தெரிய வந்தவுடன், மக்கள் ஊரைக் கூட்டி வைத்து பேசினார்கள். மணல்குவாரி காரணிடம் பெற்ற தொகையை திரும்பி ஊருக்கே கொடுப்பது. இந்த தொகையை களத்தூர் மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கொண்டு சென்று ஒப்படைப்பது என மக்கள் முடிவு செய்தனர்.
இந்த பணத்தை திரும்ப பெறுவது என்ற வேலையை செய்ய தொடங்கியவுடன், காவல்துறை தனது கையாட்கள் மூலமாக மக்களின் தொடந்த போராட்டத்தினாலும், மணல்குவாரிகாரனின் கையாளாக இருப்பவன் கொடுத்த பல வழக்குகளுமாக களத்தூர் ஊரில் மட்டும் மக்கள் மேல் 15 வழக்குகள் உள்ளது, அனுமதி இன்றி கூடி போராடியது, அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தது, சிலரை தாக்கியது, மிரட்டியது என வழக்குகள் உள்ளது. எனவே அவர்களை உடனே கைது செய்யப் போகிறோம் என்ற செய்தியை பரப்பி விட்டனர். ஊரில் சிலர் அரசு பணியில் உள்ளனர், அவர்களை அவர்கள் வேலை செய்யும் அலுவலகத்தில் சென்று கைது செய்வோம் எனவும் கூறி மக்களிடையே பீதியை கிளப்பி விட முயற்சித்தனர்.
மக்கள் அஞ்சவில்லை. பொய்வழக்கை முறியடிக்க முன்பிணை எடுக்க முயற்சி செய்தனர். வழக்குப் பணிக்கு உதவியாக காஞ்சி மக்கள்மன்றம் அமைப்பினர் வந்தனர். காஞ்சி மக்கள்மன்றம் அமைப்பினர் பியூசிஎல் அமைப்பு உதவியுடன் வழக்கறிஞர்கள் ஏற்பாடு செய்து முன்பிணை எடுக்க ஏற்பாடு செய்தனர்.
இந்நிலையில் மணல்குவாரி காரனிடம் பெற்ற தொகையை ரூ.2,12,000/= ரூபாய் திருப்பிக் கொடுத்தனர் மக்கள். 18-03-2015 அன்று இத்தொகையை மாவட்ட ஆட்சிதலைவரிடம் ஒப்படைக்க மக்கள் தனி பேருந்து எடுத்து புறப்பட்டனர். இவர்களை காவேரிபாக்கம் டோல்கேட் ட்டில் காவல்துறை வழிமறித்தனர். மக்கள் தங்களை செல்ல விடும்படி கூறி சாலைமறியல் செய்தனர். அங்கு பெரும் பதட்டம் ஏற்பட்டது. மக்களில் பெரும்பாலானோர் மீது வழக்கு இருப்பதால் கைது நடந்தால் தேவையற்ற நெருக்கடி ஏற்படும் என்பதால் வழக்கு இல்லாத சிலர் மட்டும் மக்கள் மன்ற தோழர்களுடன் புறப்பட்டு வேலூர் சென்றனர். மாவட்ட ஆட்சிதலைவர் இவர்களை சந்திக்க மறுத்ததால் மாவட்ட வருவாய் அதிகாரியை சந்தித்தனர்.அவர் இந்த தொகையை பெற மறுத்து விட்டார்.
எனவே மறுநாள் 19-03-2015 அன்று முதல்அமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.2,12,000/= அய் தொகையை உள்ளூர் மகளீர் சுய உதவிக் குழுக்கள் மூலமாக வங்கியில் வரைவோலை (டிமாண்ட் டிராப்ட்) வழியாக அனுப்பப்பட்டது. தமிழகத்தில் நடந்த மிக முன்மாதிரியான நிகழ்வு இது.
மக்கள் விழிப்புணர்வு அடைவது இங்குள்ள கட்சியினருக்கும், அதிகார வர்க்கத்துக்கும், அரசுக்கும் பொறுக்குமா?. அதிலும் இங்குள்ள காவல்துறையினர் மணல்குவாரி கொள்ளையர்களின் அடியாளாகவே செயல்பாடு வருகின்றனர். கடந்த ஆண்டு பூண்டிசுமைதாங்கி மணல் குவாரிக்கு சென்ற லாரிகளை, முறைகேடாக செல்கிறது எனக்கூறி தடுத்ததற்காகவே பூவரசு என்பவரை காவேரிபாக்கம் போலீஸார் பொய் வழக்கில் கைது செய்து காவல்நிலையத்தில் வைத்து கடுமையாக தாக்கியுள்ளனர். பூவரசுவை தாக்கிய வழக்கில், உயர்நீதிமன்ற சென்று பெற்ற உத்தரவின்பேரில் காவேரிபாக்கம் காவல்நிலைய ஆய்வாளர் காண்டீபன், உதவி ஆய்வாளர் மோகன் மற்றும் இதர 3 போலீஸார் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்ய உத்திரவிட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், காவேரிபாக்கம் காவல்நிலைய ஆய்வாளர் காண்டீபன், உதவி ஆய்வாளர் மோகன் மற்றும் இதர 3 போலீஸார் இதுவரை கைது செய்யபடாமல் அங்கேயே பணியில் உள்ளனர்.
மேலும் காவேரிபாக்கம் காவல் ஆய்வாளர் காண்டீபன்தான் களத்தூர் ஊரைக் கட்டுப்படுத்தும் அவலூர் காவல்நிலைய அதிகாரி. களத்தூரை சேர்ந்த 50 பேர் பல வழக்குகளில் முன்பிணை பெற்று அவலூர் காவல்நிலையத்தில் நிபந்திணைபிணையில் மே மாதம் முதல் கையெழுத்து போட்டு வருகின்றனர்.
மக்களை என்ன செய்தும் அடக்க முடியாவில்லையே என தாங்கி கொள்ள முடியாமல், மணல்குவாரி கொள்ளையர்கள் உள்ளூரில் உள்ள தங்கள் கையாட்களை தூண்டி விட்டனர். அவர்கள் ஊரில் உள்ள சில முன்பிணை பெற்று கையெழுத்து போடும் பெண்களை வம்பு சண்டைக்கு இழுத்து அடித்துள்ளனர். தாக்கப்பட்ட பெண்கள் காவல்நிலையத்தில் சென்று புகார் கொடுக்க அவர்களை ஆஸ்பத்திரிக்கு அனுப்பிய காவல்துறை, தாக்கியவர்களிடமே புகார் பெற்று தாக்குதலுக்கு உள்ளான போராடும் மக்கள் மீது வழக்கு பதிவு செய்தனர். இது தெரியாமல் அடுத்த நாள் 03-06-2015 அன்று கையெழுத்து போட சென்றவர்களையும், உடன் இருந்தவர்களையும் ஒரு சிறுவன், 4 பெண்கள் உட்பட 19 பேரை காவல்துறை (இதச பிரிவு- 147,148, 294B, 323,324,506(II) மற்றும் section 3 of TNPPDL Act and section 4 of TN Women Haaresment Act) 8 பிரிவுகளில் கைது செய்தது. இதில் +2 படிக்கும் மாணவரான 16 வயது சின்னராசுவை 21 வயது என மருத்துவரின் பொய் சான்றிதழ் பெற்றும், நீதிபதியிடம் 21 வயது என சொல்ல சொல்லி அடித்து மிரட்டி கைது செய்து, மணல் கொள்ளையர்களிடம் தனது ராஜவிசுவாசம் காட்டியுள்ளது காவல்துறை.
காவல்துறை முன்பிணை பெற்று தைரியமாக இருந்த களத்தூர் மக்களை, பொய்வழக்கு மூலம் கைது செய்து மிரட்டியதுடன் மேலும் பல நெருக்கடிகளை மணல்கொள்ளையர்களுக்காக கொடுக்க தொடங்கியது. பிணை கேட்டு மனு விசாரணைக்கு வரும் போது காவல்துறை தரப்பில் எந்த பதிலும் நீதிமன்றத்தில் கொடுக்காமல் இருப்பது, அரசு வழக்கறிஞரை ஆஜர் ஆகாமல் இருக்க செய்வது என மூன்று முறை பிணைவழக்கு ஒத்தி வைக்கப்பட்டது. மக்கள் வழியேதும் இன்றி, மாவட்ட ஆட்சியர் நினைத்தால் கைது செய்தவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க முடியும் என்பதால், ஊரில் இருந்து தனி வாகனம் வந்தால் காவல்துறை தடுக்கும் என்பதால், கொஞ்சம் கொஞ்சம் பேராக அரசு பேருந்தில் கிளம்பி வேலூர் வந்தனர்.
கைது பண்ணவங்கள விடுவிக்க கோரி 11-ம் தேதி ராத்திரி 9 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்க்கு 100 பேருக்கு மேல் திரண்டு சென்று முழக்கம் போட்டு உள்ளனர். தகவல் கிடைச்சு வந்த போலீஸ்காரங்க அவர்களின் பிரட்சினையை கேட்காமல் அவர்களை கைது செய்து கல்யாண மண்டபத்தில நள்ளிரவு வரை அடைத்து வைத்துள்ளார்கள்.
அதன் பின்பு காவேரிப்பாக்கம் காவல் நிலையத்துக்குக் கீழ் களத்தூர் வருவதால் அந்த காவல் நிலைய இன்ஸ்பெக்டர் காண்டீபனுக்குத் தகவல் சொல்லி அழைச்சிட்டுப் போய் களத்தூரில் விடச்சொன்னார்கள் அதிகாரிகள்.
ஏற்கனவே களத்தூர் ஊர் மக்கள் மீது பொய்வழக்கு போட காரணமாக இருந்த, மக்களை பொய்வழக்கில் கைது செய்ய காரணமாக இருந்த, பூண்டி மணல்குவாரியை எதிர்ததற்க்காக தோழர்.பூவரசுவை கட்டி வைத்து அடித்து-உயர்நீதிமன்றத்தால் வன்கொடுமை சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்ட, மணல்கொள்ளையர்களின் அறிவிக்கப்படாத அடியாளாக செயல்படும் காவல் நிலைய ஆய்வாளர் காண்டீபனை வர வைத்து, அவர் பொறுப்பில் மக்களை இரவில் களத்தூறுக்கு அனுப்பியுள்ளனர் அதிகாரிகள்.
காவேரிபாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் காண்டீபன் வரும் வழியிலும், ஊரில் இறங்கும் போதும்.‘பொழப்புக்கே வழியில்ல... போராட்டமாடீ நடத்துறீங்க’ ன்னு வாய் கூசும் வார்த்தைகளை களத்தூர் பெண்களைப் பார்த்து சொல்லியுள்ளார். அவரோடு சேர்ந்து அவரது ஓட்டுனரும் பெண்களை இழிவாக பேசியுள்ளனர். ஊரில் இறங்கியவுடன் மக்கள் எவ்வாறு இப்படி அசிங்கமாக பேசலாம் என அதிகாரியிடம் சண்டை கட்டி உள்ளனர். அதற்க்கு காவல்துறை வழக்கம் போல் ஜீப் டிரைவர் வெங்கடேசனை களத்தூர் மக்கள் தாக்கியதாக சொல்லி நாடகமாடி மருத்துவமனையில் போய் அவரை படுக்க வைத்தனர். நள்ளிரவில் ஊரில் புகுந்த காவல்துறை மக்கள் மீது தடியடி நடத்தி, பேயாட்டம் போட்டு உள்ளது. காவல்துறையினரை மக்கள் தாக்கியதாக கூறி களத்தூரை சேர்ந்த 13 பேரை கைது செய்து சிறையில் அடைத்து உள்ளது காவல்துறை. ஊரில் மக்கள் எல்லாம் பயந்து ஓடி பல ஊர்களில் தஞ்சம் அடைந்து உள்ளனர்.
கோயிலில் தஞ்சம்:
தற்போது போலீஸாருக்கு பயந்து பெரும்பாலான ஆண்கள் கிராமத்தைவிட்டு வெளியேறிவிட்டனர். எஞ்சிய குழந்தைகளும்,பெண்களும் மட்டும் களத்தூர் பஜனை கோயிலில் தஞ்சமடைந்துள்ளனர். அவர்கள் அங்கேயே தங்கி சமைத்து சாப்பிட்டு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆண்கள் தற்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக ஊருக்கு திரும்பி வந்து கொண்டு உள்ளனர். இவ்வளவு அடக்குமுறைகளை மக்கள் மீது ஏவி விட்ட நிலையிலும், மணல் குவாரி மூடும் வரை எங்கள் போராட்டத்தை உறுதியுடன் தொடருவோம் என மக்கள் திட்டவட்டமாக உள்ளனர்.
03-06-2015 அன்று முதலில் கைதான 19 பேருக்கு 12-06-2015 அன்று பிணை கிடைத்தது. அவர்களுக்கு தர்மபுரியில் தங்கியிருந்து தினமும் நீதிமன்றத்தில் ஒரு மாதம் கையெழுத்து போட வேண்டும் என நீதிமன்றம் உத்திரவு இட்டு உள்ளது. உள்ளூரில் இருந்து சுமார் 200 கிலோ மீட்டர் தூரம் உள்ள ஊரில் தங்கி இருக்க சொல்வதன் மூலம் மக்களின் போராட்ட குணத்தை மழுங்க அடிக்க முயற்சிக்கிறது அரசு.
11-06-2015 இரவு கைதான 13 பேருக்கும் 24-06-2015 வரை பிணை கிடைக்கவில்லை.
23-06-2015 அன்று களத்தூர் கிராமத்தை சேர்ந்த பராங்குசன் (எ) மோகன் எனும் ஆசிரியரை, மக்களை மணல்குவாரிக்கு எதிரான போராட்டத்தை தூண்டி விட்டதாக கூறி 3 வழக்குகள் பதிவு செய்து அவரை பணி நீக்கம் செய்துள்ளது. இதன் மூலம் ஊரில் உள்ள மக்கள் மீண்டும், மீண்டும், அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு, மணல் குவாரியை எதிர்த்தால் படித்த இளைஞர்கள் யாருக்கும் அரசு வேலை கிடைக்காது, மற்றும் அரசு வேளையில் இருப்பவர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என மறைமுகமாக அச்சுறுத்தப்படுகின்றனர்.
நமது நாட்டில் கோடி கோடியாக மக்கள் சொத்தை கொள்ளையடிப்பவர்களுக்கு பெயர் “அதிகாரிகள் -மக்கள் பிரதிநிதிகள் - முதல்வர் -அமைச்சர்” ஆனால் தனது ஊரில் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது எனக் குரல் கொடுத்தால் வழக்கு, கைது, சிறை, பணி நீக்கம்” இதுதான் இன்றைய இந்திய ஜனநாயகமாக உள்ளது.
மக்கள் நலன் பேசும் ஆண்ட - ஆளும் கட்சிகள், மக்களை திரட்டி வைத்து ஊழியர் பலம் உள்ள அமைப்புகள் பலவும் காவல்துறையால் பாதிக்கப்பட்ட களத்தூர் சென்று மக்களை நேரில் சந்தித்தும், பத்திரிக்கை செய்தி வாயிலாகவும் அறிக்கை மட்டும் விட்டு உள்ளனர். (திமுக, தேமுதிக, நாம் தமிழர், பாஜக, சிபிஎம், சிபிஐ, சமத்துவ மக்கள் படை உட்பட பல அமைப்புகள்...)
இது மட்டும் போதாது. அனைத்து அரசியல் கட்சிகளும் களத்தூர் பிரட்சினையில் தலையிட்டு, பொறுப்போடு செயல்பட வேண்டும். இந்த அரசியல் கட்சிகள் செய்ய வேண்டிய வேலைகளை களத்துர் மக்கள் செய்து வருகின்றனர். அரசியல்கட்சிகள் வெறும் அடையாள நிகழ்வுகளை மட்டும் நடத்தி விட்டு செல்லக் கூடாது, அப்படி சென்றால் வருங்காலத்தில் வரலாற்றின் குப்பை தொட்டியில் இவர்கள் வீசப்படுவார்கள். கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டத்தில் பல கட்சிகள் வருகை தந்து மக்களை பாராட்டி விட்டு அவர்கள் எதுவும் செய்யாமல் இருந்து விட்டனர்.
களத்தூர் மக்கள் கூட அங்கு வரும் கட்சிகளை மணல்கொள்ளையை தடுக்க, இதுவரை என்ன செய்து உள்ளீர்கள், இனிமேல் உங்கள் அமைப்பு என்ன செய்யப் போகிறீர்கள் என்ற கேள்வியை அவர்கள் முன் வைத்து விளக்கம் கேட்க வேண்டும். களத்தூர் மக்களுக்கு இதைக் கேட்க எல்லாவித தார்மீக உரிமை உள்ளது. வரலாற்றில் அரசியல் கட்சிகள் செய்யாத ஒன்றை, ஓராண்டாக எண்ணற்ற நெருக்கடியையும், அடக்குமுறையையையும் சந்தித்து இவர்கள் மணல்குவாரியை தடுத்து நிறுத்த செய்து சாதித்து வருகிறார்கள்.
விடுதலை சிறுத்தைகள் அமைப்பு மட்டும் 19-06-2015 அன்று ராணிப்பேட்டையில் தோழர். திருமாவளவன் தலைமையில் 2000 மக்களை அணிதிரட்டி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது. இதில் நானும் கனிமவள முறைகேடு சகாயம் ஆய்வுக் குழு ஆதரவு இயக்கம் சார்பில் கலந்து கொண்டு உரையாற்றினேன். காஞ்சி மக்கள் மன்றம் சார்பில் 08-06-2015 அன்று 400 பேரை அணிதிரட்டி காவேரிபாக்கத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது. பாலாறு விழிப்புணர்வுர்வு இயக்கம் சார்பில் பல்வேறு அமைப்புகளை ஒருங்கிணைத்து 24-06-2015 அன்று காவேரிபாக்கத்தில் நடத்த இருந்த கண்டன ஆர்ப்பாட்டம் காவல்துறையால் தடை செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு சில நிகழ்வுகள் மட்டுமே நடந்து உள்ளது.
அரசுக்கு வைக்கும் கோரிக்கைகள்:
- வேலூர் மாவட்ட, காவேரிப்பாக்கம் அடுத்துள்ள களத்தூரியில் மணல் குவாரி அமைக்கப்படுவதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகின்றனர். எனவே அப்பகுதி மக்களின் நியாயமான உணர்வுக்கு மதிப்பளித்து, மணல் குவாரி அமைக்கப்படுவதை தடுத்து நிறுத்திட பொதுப்பணித்துறை, மாவட்ட நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ஆனால் அதற்கு மாறாக மணல் குவாரிக்கு எதிராக போராடிய மக்களை கைது செய்து சிறையில் அடைத்ததுடன், கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்திட கோரிய மக்கள் மீது காவல்துறை தடியடி நடத்தியது வன்மையாக கண்டிக்கதக்கது.
- கைது செய்யப்பட்டவர்கள் அனைவரையும் உடனே விடுதலை செய்ய வேண்டும்.
- களத்தூர் மக்கள் மீது போடப்பட்ட வழக்குகளை அனைத்தையும் உடனே திரும்ப பெற வேண்டும்.
- நியாயமான கோரிக்கைகளுக்காக போராடிய களத்தூர் மக்கள் மீது தடியடி நடத்திய காவல்துறை மீதும், இச்செயலுக்கு காரணமான அதிகாரிகள் மீதும் உடனே நடவடிக்கை எடுத்திட வேண்டும்
-இனி தமிழகத்தில் மணல்குவாரி அமைப்பது என்பதை குறிப்பிட்ட சில ஆண்டுகள் நிறுத்தி வைக்க வேண்டும்.
-மணலுக்கு மாற்றாக அருகே உள்ள கேரளமும், பல்வேறு நாடுகளும் பின்பற்றும் வழிமுறைகளை இங்கும் பின்பற்ற வேண்டும்.
-தமிழக்கத்தில் மணல் கொள்ளை மூலம் கொள்ளையடிக்கப்பட்ட அனைத்து சொத்துகளையும் உடனடியாக அரசு கைப்பற்ற வேண்டும்.
-மணல் கொள்ளையர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். மனல்ம் கொள்ளைக்கு துணை நின்ற அதிகாரிகளை கைது செய்ய வேண்டும்.
இன்று மணல்குவாரியின் மூலம் அரசுக்கு செல்லும் வருமானம் இல்லாமல், தினமும் எடுக்கும் 90,000 லாரிகள் மூலம் ஒரு லாரி லோடுக்கு 10,000/= வீதம் குறைந்தபட்சம் 90 கோடி ரூபாய் இந்த நாட்டை ஆளும் ஆளும்கட்சியினரும்- அதிகாரிகளும் - மணல் கொள்ளையர்களும் கொள்ளையடித்து பங்கு போட்டு வருகிறார்கள்.[(கணக்கு இதுதான்: ஒரு லாரி லோடு மணல் அரசு விலை 3 யூனிட்டுக்கு ரூ.945 /=;. லோடிங்க் அன்லோடிங்க் ஒரு லாரிக்கு 1000/=.; 100 கிலோமீட்டர் தூரம் லாரி வாடகை ரூ.5,000/=; அதிகபட்சம் ரூ.8,000/= என வைத்தால் கூட ஒரு லோடு லாரி மணல் மொத்தம் 10,000/= மட்டுமே ஆகும். ஆனால் ஒரு லாரி லோடு மணல் கோவையில் 25,000/=,, சென்னையில் 40,000/=. அண்டை மாநிலங்களில் 60,000/= வரை விற்கப்படுகிறது.
ஒரு லோடுக்கு சுமார் 10,000/= கூடுதலாக கிடைக்கிறது என்றாலே தினமும் 90,000 லோடுக்கு 90 கோடி கிடைக்கும்)]
ஓராண்டில் மணல் கொள்ளையில் மட்டும் தமிழகத்தில் சுமார் 33,000 கோடி ரூபாய் பகிரங்கமாக கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது. இது தமிழகத்தில் மது மூலம் கிடைக்கும் விற்பனை வருவாயை விட அதிகமானது.
மணல்கொள்ளை எங்கு தடுக்கப்பட்டு உள்ளது:
இன்றைய நிலையில் மணல்கொள்ளை என்பது யாருக்கும் தெரியாத ரகசியம் அல்ல. அரசோ, அதிகாரிகளோ. நீதிமன்றமோ, ஆண்ட -ஆளும் கட்சிகளோ இப்படி ஒரு பிரட்சினை இருப்பதையே கண்டு கொள்வதில்லை என்பதுடன் இவற்றின் நேரடி பங்குதாரராகவே செயல்பாடு வருகின்றனர்.
அரசியல் கட்சிகள் எதிர்க்கட்சியாக இருக்கும்போது இதை எதிர்ப்பதும், ஆளும் கட்சியாகியவுடன் தீவிர கூட்டாளி போல் செயல்படுவதும் என்பதுதான் நடைமுறை. அரசு- மணல்கொள்ளையர்-காவல்துறைக்கு அஞ்சாமல், எங்கே மக்கள் போராட்டம் வெடிக்கிறதோ, போராட்டம் தொடர்ந்து நடைபெறுகிறதோ, அரசுக்கு நெருக்கடி ஆகி அம்பலம் ஆகிறதோ அங்கு மட்டும் மணல்கொள்ளை இதுவரை தடுக்கப்படுகிறது, தடுக்கப்பட்டு உள்ளது. காவேரி கொள்ளிடத்தில் திருச்சி -இலால்குடி கூகூர், அன்பில் மங்கம்மாள்புரம் மணல்குவாரி; கடலூர் விருத்தாசலம் -கருவேப்பிலங்குறிச்சி வெள்ளாறு கார்மாங்குடி மணல்குவாரி ஆகியவைகளில் நடந்த மக்கள் போராட்டத்தின் விளைவில் அங்கு குவாரி இயங்காமல் மூடப்பட்டது.
இன்று களத்தூரில் நடக்கும் மணல்கொள்ளையை எதிர்த்த போராட்டம் என்பது, எளிய மக்களால் தனது வாழ்வாதாரம் அழிக்கபட்டு விடக்கூடாது என்பதற்காக நடக்கும் போராட்டம் ஆக இருந்தாலும், தமிழக மணல் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் போராட்டமாக சமூக அக்கறை உள்ளவர்களால் மாற்றப்பட வேண்டும். இதுவரை மணல்கொள்ளையர்களை எதிர்த்த போராட்டம் தமிழகத்தில் பலவகையில் சிதைக்கப்பட்டாலும் கூட , இந்த போராட்டம் தமிழகத்தின் வாழ்வாதாரம் காக்கும் போராட்டத்தின் அக்னிகுஞ்சாக கருதி நாட்டை, மக்களை நேசிப்பவர்களால் பாதுகாக்கப்பட்டு வளர்த்தப்பட வேண்டும். களத்தூர் போராட்டத்தின் நியாயத்தை நாட்டில் உள்ள ஒவ்வொருவரிடம் எடுத்து சென்று, அவர்களது மனசாட்சியை தட்டி எழுப்புவோம்.
மணல் கொள்ளையில் தொடங்கி தமிழகத்தின் அனைத்து கனிமவள கொள்ளைக்கும் முடிவு காட்டுவோம்...
யாராலும் உருவாக்க முடியாத இயற்கை வளத்தை பாதுகாப்போம்...
இயற்கையோடு இயைந்து வாழ்வோம்...
களத்தூர் போராட்டத்தை பாதுகாப்போம்...
- முகிலன், ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு சுற்றுசூழல் பாதுகாப்பு இயக்கம் & கனிமவள முறைகேடு சகாயம் ஆய்வுக் குழு ஆதரவு இயக்கம்
- விவரங்கள்
- முகிலன்
- பிரிவு: சுற்றுச்சூழல்
பெரம்பலூர் எம்.ஆர்.எப். டயர் தொழிற்சாலை தனது தேவைக்காக உள்நாட்டு, மற்றும் வெளிநாட்டு நிலக்கரி கொண்டு ரூ. 210 கோடி மதிப்பில், 2x25 50 மெகாவாட் திறனுள்ள அனல் மின் நிலையம் அமைப்பதற்க்கான கருத்துக் கேட்பு கூட்டம், பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் நாரணமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வளாகத்தில் கடந்த 20-05-2015 புதன்கிழமை அன்று பெரம்பலூர் மாவட்ட சார் ஆட்சியர் மதுசூதன ரெட்டி அவர்கள் தலைமையில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் நடத்தியது. ஆலையில் தினமும் 1100 டன் நிலக்கரியை பயன்படுத்தி 50 மெகாவாட் மின்உற்பத்தியை செய்வது, அதை எம்.ஆர்.எப். டயர் தொழிற்சாலை தனது தேவைக்காக மட்டுமே பயன்படுத்துவது என்பதற்கான மக்களின் கருத்தை அறியும் கருத்துக் கேட்பு கூட்டமாகும்.
முறையாக கூட்டப்படாத கருத்துக்கேட்பு கூட்டம்
* இந்த அனல்மின் நிலையம் அமைப்பது பற்றிய கருத்துக்கேட்பு கூட்டம் பற்றி அரசு விதிப்படி ஆலையை சுற்றி பாதிப்புக்கு உள்ளாகும் பகுதியில் உள்ள நகரம்/ கிராமத்தில் வசிக்கும் சுமார் 2 லட்சம் மக்களுக்கு தெரிவிக்கப்படாததால், யாருக்கும் இந்த கூட்டம் பற்றியே தெரியவில்லை.
* இக் கருத்துக்கேட்பு கூட்டம் பற்றி 17-04-2015 அன்று தினத்தந்தி, ஆங்கில இந்து பத்திரிக்கையில் செய்தியாக இல்லாமல், டெண்டர் விளம்பரம் போல் ஒரு விளம்பரம் கொடுக்கப்பட்டு உள்ளது. இது யாரின் பார்வைக்கும் செல்லவில்லை என்பதுதான் உண்மை நிலை. மேலும் அனல்மின் நிலையம் அமைப்பதற்க்கான சுற்று சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையின் சுருக்க நகல் ஊராட்சி/ பேரூராட்சி/ நகராட்சி மன்ற அலுவலகத்திற்க்கு, ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்க்கு எங்குமே மாசுக்கட்டுப்பாட்டு துறையால் அனுப்பி வைக்கப்படவில்லை.
* அரசு அதிகாரிகளால் பத்திரிக்கையாளர்களுக்கு கூட கருத்துக் கேட்பு கூட்டம் நடப்பது பற்றி யாருக்கும் முன்கூட்டியே தகவல் எதுவும் சொல்லப்படவில்லை.
· மேலும் கூட்டத்திற்க்கு வரும் முன்பே நாங்கள் விசாரித்ததில் ஆலைக்கு அருகில் உள்ள எந்த ஊராட்சி தலைவருக்கும் கருத்துக்கேட்பு கூட்டம் பற்றி அரசு விதிப்படி மாசுக்கட்டுப்பாடு வாரியத்தால் கூட்டம் பற்றிய தகவலும், சுற்று சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையின் சுருக்க அறிக்கை எதுவும் வழங்கப்படவில்லை எனவும் அறிந்து கொண்டோம்.
· கருத்துக்கேட்பு கூட்டத்தை முறையாக கூட்ட மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள்
· இதை நாங்கள் அறிந்து கொண்டவுடன் கருத்துக் கேட்பு கூட்டம் நடக்கும் செய்தியை அனைத்து மக்களுக்கும் தெரியப்படுத்தும் விதமாக திட்டமிட்டோம். ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை நடக்கும் மாவட்ட ஆட்சியரின் குறைதீர் கூட்டத்தில் (18.05.2015) அன்று, குறைதீர் மனுவாக கருத்துக் கேட்பு கூட்ட செய்தியே மக்களுக்கு தெரியப்படுத்தவில்லை எனவும் ; எனவே கருத்துக் கேட்பு கூட்டத்தை ரத்து செய்து அரசு விதிப்படி முறையாக அறிவித்து பின்பு அதைக் கூட்ட வேண்டும் எனவும்; இப்பகுதியில் அனல்மின்நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மனுவாக கொடுப்பது எனவும் முடிவு செய்தோம். இப்பணியை பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த சுற்றுசூழல் ஆர்வலர் தோழர்.ரமேஷ் கருப்பையா அவர்கள் ஒருங்கிணைப்பது என முடிவு செய்து, அவர் அனைவருக்கும் தகவல் கொடுத்தும், நேரில் சந்தித்தும் சிறப்பாக ஒருங்கிணைத்தார்.
· 18.05.2015 திங்கட்கிழமை அன்று பல்வேறு சுற்றுசூழல் ஆர்வலர்கள், இயற்கை விவசாயிகள், சமூக அக்கறையுள்ளவர்கள் , எம்.ஆர்.எப். டயர் தொழிற்சாலையை ஒட்டியுள்ள பகுதி மக்கள், மலையப்பன் நகர் நரிக்குறவர் சமூக மக்கள் என சுமார் 80 க்கும் மேற்பட்டோர் குறைதீர் கூட்டத்தில் கலந்து கொண்டு மனுவாக கொடுத்தனர்.
· இவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் இப்படி மனு கொடுத்ததால்தான், பல்வேறு பத்திரிக்கை/காட்சி ஊடக செய்தியாளர்களுக்கு இப்படி ஒரு கருத்துக் கேட்பு கூட்டம் நடக்கும் செய்தியே தெரிய வந்தது.
· இவர்கள் கொடுத்த மனுவால், அதிகாரிகளுக்கு “ திருடனுக்கு தேள் கொட்டியது போல்” ஆகியது. கருத்துக் கேட்பு கூட்டத்தை யாருக்கும் தெரியாமல் நடத்த முயற்சித்தது அம்பலமாகியது. குறைதீர் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தரேசு அகமது விடுப்பில் இருந்ததால் மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) மதுசூதன ரெட்டி இ.ஆ.ப. அவர்கள் மனுவை பெற்றுக் கொண்டு, “எங்களுக்கு எப்படி வேலை செய்ய வேண்டும் என நீங்கள் பாடம் நடத்த தேவையில்லை” என மனு கொடுத்த மக்களிடம் திமிராக, பொறுப்பற்று பேசினார்.
· ஆனால் சமூக ஆர்வலர்களின்/பொதுமக்களின் மனு கொடுத்தல் நிகழ்வு பல்வேறு நெருக்கடிகளை அதிகாரிகளுக்கு ஏற்படுத்தியது. மனு கொடுத்த நாளிலேயே அவசர, அவசரமாக மாவட்ட ஆட்சியர் அவர்கள் கருத்துக் கேட்பு கூட்டத்தில் சுற்றுசூழல் ஆர்வலர்களும், பொதுமக்கள் அனைவரும் பங்கு கொள்ளுமாறு ஒரு பத்திரிக்கை செய்தி வெளியிட்டார். பாதிக்கப்படும் பகுதிக்குள் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகங்களில் பத்திரிகையில் வெளிவந்த கருத்துக் கேட்புக் கூட்ட விளம்பரத்தை நகல் எடுத்து ஒட்ட வைத்தனர். கருத்துக் கேட்பு கூட்ட நாளுக்கு முந்தைய நாள் இது பற்றி ஒரு துண்டறிக்கை போட்டு ஊராட்சி மன்ற அலுவலகங்களில் ஒட்ட வைத்தனர்.
· அனைத்து நாளிதழ்களும்/காட்சி ஊடகத்தினரும் சமூக ஆர்வலர்களின்/பொதுமக்களின் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்த நிகழ்வுகளை விரிவான செய்தியாக வெளியிட்டனர்.
· தோழர். ரமேஷ் கருப்பையா உட்பட சுற்றுசூழல் ஆர்வலர்களின்/ சமூக ஆர்வலர்களின் முன்முயற்சியில் சுற்றியுள்ள பல்வேறு கிராமத்தினரையும், ஊராட்சி மன்ற தலைவர்கள், உறுப்பினர்களை நேரில் சந்தித்து கருத்துக் கேட்பு கூட்டத்தில் பங்கேற்க்க அழைத்தனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சி பொறுப்பாளர்களுக்கும், பெரம்பலூர் நகர பல்வேறு சங்க (ரோட்டரி/அரிமா போன்ற) பொறுப்பாளர்களுக்கும் அனல்மின் நிலைய பாதிப்பை கூறி கூட்டத்தில் பங்கேற்க அழைத்தனர்.
· 2x25 50 மெகாவாட் திறனுள்ள அனல் மின்நிலையம் அமைப்பதற்க்கான 207 பக்கம் கொண்ட சுற்றுசூழல் அறிக்கை தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் இணைய பக்கத்தில் வெளியிடப்படவில்லை. எனவே இதை பெறுவதற்க்கு மாவட்ட சுற்றுசூழல் பொறியாளர் அலுவலகத்திற்க்கு பலமுறை நேரில் சென்றும் கொடுக்காமல் அலைக்கழித்தனர். விடாப்பிடியாக நின்றுதான் அதைப் பெற முடிந்தது.
கருத்துக்கேட்பு கூட்ட வளாகத்தில் :
· பெரம்பலூர் மாவட்டம் எம்.ஆர்.எப். டயர் தொழிற்சாலை அமைந்துள்ள நாரணமங்கல ஊராட்சி ஒன்றிய பள்ளி வளாகத்தில் கருத்துக் கேட்பு கூட்டம் தொடங்கியது. காலை 10.00 மணிக்கு தொடங்குவதாக அறிவிக்கப்பட்ட கருத்துக் கேட்பு கூட்ட அரங்கத்திற்கு காலை 9.20 மணிக்கு நானும் தோழர்.ரமேஷ் கருபையாவும் நுழைந்தோம். அதற்குள் அங்கு 1996-இல் ஈழ தமிழினத்திற்க்காக தன்னையே தற்கொடையாக்கி இங்கு தமிழினஎழுச்சியை தூண்டிய முதல் தமிழகப்போராளி பெரம்பலூர் அப்துல்ரவூப் அவர்களின் தந்தையார் மரியாதைக்குரிய தோழர்.அசன் முகமது அவர்கள் முன்னரே வந்து இம்மண் காக்க காத்திருந்தார். அதன் பின் நரிக்குறவர் சமூக தலைவர்கள் தோழர்.சுப்பிரமணி, தோழர்.சிவக்குமார் ஆகியோர் தலைமையில் மலையப்பன் நகர் நரிக்குறவர் சமூக மக்கள் ஆண்களும், பெண்களுமாக சுமார் 250 பேர் வருகை தந்தனர்.
· பியூசிஎல்(PUCL) அமைப்பின் தமிழக பொருளாளர் தோழர்.சரவணன், தமிழ்நாடு பொதுவுடமைக் கட்சி தோழர். செல்வமணி, இந்திய பொதுவுடமைக் கட்சி மாவட்ட செயலாளர் தோழர். ஞானசேகரன், மதிமுக மாவட்ட செயலாளர் தோழர்.துரைராஜ் , நதிநீர் பாதுகாப்பு கூட்டமைப்பு தோழர்.தமிழகன், தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட தலைவர் தோழர். செல்லதுரை, இந்திய ஜனநாயக கட்சி மாநில இளைஞரணி பொறுப்பாளர் ரகுபதி, தமிழ் மாநில காங்கிரசு மாவட்ட தலைவர் பெரம்பலூர் ராஜா, பாஜக மாவட்ட தலைவர் திரு.சந்திரசேகர், கொளத்தூர் ஆவாரை நண்பர்கள் இயக்கம் இளைஞர்கள் உட்பட, மாவட்டம் முழுக்க இருந்து பல்வேறு முற்போக்கு அமைப்பு தோழர்களும், இயற்கை ஆர்வலர்களும்,தகவல் தெரிந்த ஆலையால் பாதிக்கப்பட்ட பல்வேறு கிராம விவசாயிகளும், பகுதி மக்களும் என சுமார் 400 க்கும் மேற்பட்டோர் கூட்டத்திற்க்கு வந்திருந்தனர்.
· உண்மையில் அனல்மின் நிலைய திட்டம் பற்றிய கருத்துக்கேட்பு கூட்டம் பற்றி அரசும், ஆலை நிர்வாகமும் யாருக்கும் தெரியாமல் நடத்தவே விரும்பினார்கள் என்பது அவர்களது நடவடிக்கையில் அப்பட்டமாக வெளிப்பட்டது. ஆனால், நம்மால் பலருக்கும் முகநூல் உட்பட பல்வேறு வகையில் கூட்ட செய்தி தெரிவிக்கப்பட்டு விட்டதால், ஊடகத்தினர், சுற்றுசூழல் & விவசாய செயல்பாட்டாளர்கள், பல்வேறு முற்போக்கு அமைப்பினர், அரசியல் கட்சியினர் என பலரும் வந்து விட்டதால் அரசுக்கும், ஆலை நிர்வாகத்திற்க்கும் கூட்ட தொடக்கத்திலேயே கடும் நெருக்கடி ஏற்பட்டது.
· பொதுவாகவே தமிழகம் முழுக்க பெரும்பாலான கருத்துக் கேட்பு கூட்டங்கள் இப்படித்தான் அதிகாரிகளால் ஆலைக்கு சாதகமாக நடத்துவது என்பது நடைமுறையாக இருக்கிறது.இதன் மூலம் பல அதிகாரிகள் மிகப்பெரும் பணப்பலன் உட்பட பல்வேறு பலன்கள் ஆலை நிர்வாகம் மூலம் அடைக்கின்றனர் என்பதும் அப்பட்டமான உண்மையாகும்.
· மேலும் கருத்துக்கேட்பு கூட்டத்தில் நாங்கள் பங்கேற்கும் செய்தி அறிந்து, கூட்ட அரங்குக்கு முன்புறம் நாங்கள் வரும் முன்பே காவல்துறையினரும், உளவுத்துறையினரும் குவித்து வைக்கப்பட்டனர். அவர்கள் நடுவே நீந்தியே ஒவ்வொருவரும் கூட்ட அரங்கிற்கு வர வேண்டியதாகியது. கிராமப் பகுதி மக்கள் இவர்களை மிரட்சியுடன் பார்த்தவாறே கூட்ட அரங்கிற்கு வந்து சேர்ந்தனர்.
· கருத்துக்கேட்பு கூட்டத்தில் நாங்கள் கலந்து கொள்வது என முடிவு எடுத்த பின் இணையத்தில் அனல்மின் நிலையத் திட்டம் பற்றி அதன் சுற்றுசூழல் தாக்க மதிப்பீட்டு சுருக்க அறிக்கை அச்சு எடுத்து அதில் உள்ள பல்வேறு தவறான விபரங்கள் பற்றி சேகரித்துக் கொண்டேன். கூட்ட அரங்கிற்க்கு நேரில் வந்தவுடன் அங்கு சுற்றுசூழல் தாக்க மதிப்பீட்டு விரிவான அறிக்கையை மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளிடம் பெற்று அதில் உள்ள தவறுகளையும், ஆலை அமைவதினால் ஏற்படவிருக்கும் பல்வேறு பாதிப்புகள் பற்றியும் தொகுத்துக் கொண்டு கூட்டத்தில் கலந்து கொண்டேன்.
· எங்களுக்கு ஏற்கனவே 2x800 மெகாவாட் திறனுள்ள இராமநாதபுரம் உப்பூர் அனல்மின் நிலையம் பற்றி கருத்துக் கேட்புக் கூட்டத்தில் அதன் பாதிப்பை தொகுத்து பேசி அத்திட்டதிற்க்கு நெருக்கடியை உருவாக்கியது; எங்கள் பகுதியில் பள்ளிபாளையம் சேசசாயி காகித ஆலை நிர்வாகம் தனது தேவைக்காக 40 மெகாவாட் மின்உற்பத்தியை 55 மெகாவாட் விரிவாக்க அனல்மின் நிலையம் அமைக்க நடந்த கருத்துக் கேட்புக் கூட்டத்திற்காக அப்பகுதியில் நேரில் சென்று மக்களிடம் பாதிப்பு விபரங்கள் சேகரித்து கூட்டத்தில் ஆதாரங்களுடன் பேசி முறியடித்தது; நாமக்கல் மாவட்டத்தில் கபிலர்மலை சரசுவதி காகிதஆலை அனல்மின் நிலையம் அமைக்க நடத்த இருந்த கருத்துக் கேட்புக் கூட்டத்தை எங்களின் பரப்புரையால் மக்களிடம் வலுவான எதிர்ப்பு இருக்கிறது என்பதற்காகவே, கூட்டதிற்க்கு முந்தைய கடைசி நாளில் அனல் மின்நிலையம் அமைக்க கொடுத்த விண்ணப்பத்தையே ஆலை நிர்வாகம் திரும்ப பெற்றது; நாமக்கல் மாவட்ட மாவுரெட்டிபட்டியில் ஸ்ரீராம் குழும நிறுவனங்கள் ஜப்பான் நிறுவனத்துடன் இணைந்து அனல்மின் நிலையம் அமைக்க முயற்சித்ததை அப்பகுதி மக்களுடன் சேர்ந்து முறியடித்தது; மேட்டூர் பகுதியில் அனல்மின் நிலைய பாதிப்புக்களை பலநாட்கள் உடன் இருந்து அனுபவித்தது; செய்யூர் அனல்மின் நிலையத்தை எதிர்த்து சுற்றுசூழல் செயல்பாட்டாளர் தோழர்.நித்யானந்த் ஜெயராம் போன்றோரின் தொடர்ந்த செயல்பாடுகள், அது குறித்த அவரிடம் பெற்ற விபரங்கள்; என அனல்மின் நிலையத்தில் நடக்கும் பெரும்பாலான சட்டமீறல் செயல்பாடுகள் குறித்து தொகுத்த விபரங்கள் எங்களிடம் இருந்தது.
தொடங்கியது கருத்துக்கேட்பு கூட்டம்:
· அரசின் அறிவிப்பின்படி காலை 10.00 மணிக்கு அனைவரும் வந்து காத்துக் கொண்டு இருக்க, பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் தாரேசு அகமது அவர்கள் கூட்டத்திற்க்கு வரவில்லை. அவர் ஏன் கருத்துக் கேட்புக் கூட்டதிற்க்கு வராமல் இருந்தார் எனத் தெரியவில்லை. அவருக்குப் பதிலாக மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) மதுசூதன ரெட்டி இ.ஆ.ப. அவர்கள் மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளருடன் காலை 10.50க்கு கூட்ட மேடைக்கு வந்து அமர்ந்தார்.
· முதலில் கூட்டத்திற்கு சுமார் ஒரு மணி நேரம் காலத்தாழ்வாக வந்தது பற்றி மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) மதுசூதன ரெட்டி இ.ஆ.ப. அவர்கள் எதுவும் கூறவில்லை. மக்கள் தங்கள் பணிகளை எல்லாம் விட்டுவிட்டு வந்து ஒரு மணி நேரம் காத்திருந்தாலும், அது பற்றி மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) அவர்கள் கிஞ்சித்தும் கவலைப்படவில்லை. மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கினாலும், அதிகாரிகளின் அடிமைகள்தான் மக்கள் எனக் கருதும் மனநிலையே பெரும்பாலான அதிகாரிகளின் நிலையாக இருந்து வருகிறது. இதே போல்தான் நாமக்கல் மாவட்ட சேசசாயி காகித ஆலை விரிவாக்க கருத்துக் கேட்புக் கூட்டத்திலும் நடந்தது.
· கூட்டத்தில் முதலில் மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) மதுசூதன ரெட்டி இ.ஆ.ப. அவர்கள் மேடையில் ஏறிநின்றவுடன் எத்தனை பேருக்கு இந்த கூட்டம் எதற்க்காக நடக்கிறது எனத் தெரியும்? கையை தூக்குங்கள் என்றவுடன், கூட்டத்தில் இருந்தவர்கள் கைகளைத் தூக்காமல் நீங்கள் எங்களுக்கு சொல்லி நாங்கள் வரவில்லை என சத்தம் போட்டனர். உடனே DRO “நீங்கள் விரும்பாவிட்டால் இத்திட்டம் இங்கு வராது” என சொல்லி மக்களுக்கு சார்பாக இருப்பது போல் காட்டிக் கொண்டு அமர்ந்து விட்டார்.
· மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் அனைவரையும் வரவேற்று அனல்மின் நிலைய திட்டம் பற்றி எம்.ஆர்.எப். டயர் தொழிற்சாலை நிர்வாகத்தினர் பேசுவார் என அறிவித்தார். ஆலையை சார்ந்தோர் சுற்றுசூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை சுருக்கத்தை பவர் பாயிண்டு முறையில் காட்டி பேசி அமர்ந்தனர். உடனே பெரம்பலூர் மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) மதுசூதன ரெட்டி இ.ஆ.ப. அவர்கள் வரிசையாக மக்கள் தனது கருத்துக்களை பதிவு செய்யக் கூறினார்.
உடனே நான்(முகிலன்) எழுந்து மேடைக்கு சென்று முதலில் பேசத் தொடங்கினேன்.
· முதலாவதாக, "சட்ட விரோதமான முறையில், மாசுகட்டுப்பாட்டு வாரியம் கருத்துக் கேட்பு கூட்டம் நடக்துகிறது. மாசுகட்டுப்பாட்டு வாரிய விதிப்பட்டி எந்த ஊராட்சியிலும் சுற்றுசூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை சுருக்கம் இன்று வரை அனுப்பப்பபட்டு அது அங்கு வைக்கப்படவில்லை. திட்டம் நிறைவேற்றும் பகுதியில், பாதிப்புக்கு உள்ளாகின்ற ஊராட்சி/பேரூராட்சி/நகராட்சி மன்ற தலைவர்களுக்கு கருத்துக் கேட்பு கூட்டம் பற்றிய தகவல் அரசால் அனுப்பப்படவே இல்லை. இதனால் கருத்துக்கேட்பு கூட்டம் பற்றி ஆலையை சுற்றி பாதிக்கப்பட இருக்கும் 10 கி.மீ தூரத்தில் உள்ள 2 லட்சம் மக்களில் யாருக்கும் தெரியவில்லை.
நேற்று மாவட்ட ஆட்சியரின் பெயரில் வெளியிட்ட அறிக்கையில் கூட ஊராட்சி மன்ற அலுவலகத்தில் அறிக்கை வைப்பது பற்றி எதுவும் குறிப்பிடவே இல்லை. இது மாசுகட்டுப்பாட்டு விதியை அப்பட்டமாக மீறுவதாகும். கருத்துக் கேட்புக் கூட்டத்திற்க்கு 30 நாட்களுக்கு முன்பே இது விதிப்படி அனைத்து அலுவலகத்திற்க்கும் அனுப்பப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு இருக்க வேண்டும். மக்கள் திட்ட அறிக்கை சுருக்கம் பற்றி அறிய பெரம்பலூர் வர முடியுமா? இவ்வாறு முறைப்படி, விதிப்படி எதுவும் செய்யாமல் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்துவது என்பது மிகவும் தவறானது ஆகும். இது பொதுமக்களும் , சமூக முன்னணியினரும் ஆலையின் செயல்பாட்டை தெரிந்து அதன் மீது கருத்து தெரிவிக்கும் உரிமையை மக்களிடம் பறிப்பது.
இது போல ஏற்கனவே முறையாக அறிவிப்பு செய்யாமல் கூட்டப்பட்ட திருவாரூர் 20 பெட்ரோலிய எரிகிணறு தோண்டுவதற்கான ஓ.என்.ஜி.சி. கருத்துக் கேட்புக் கூட்டம் (27-06-2014) மக்களின் எதிர்ப்பால் ஆட்சியர் மதிவாணன் அவர்களால் ரத்து செய்யப்பட்டது. உங்களுக்கு முன்மாதிரி இருப்பதால் முறையின்றி கூட்டப்பட்ட இக்கூட்டத்தையும் ரத்து செய்து, விதிப்படி மீண்டும் முறையாக அறிவித்து கருத்துக் கேட்புக் கூட்டத்தை நடத்த வேண்டும் எனக் கூறினேன். உடனே மக்கள் “ கூட்டத்தை நடத்தாதே, ரத்துசெய்! என அனைவரும் முழக்கமிட்டனர். சிறிது நேரம் அங்கு மக்கள் மிகுந்த உணர்வுமயப்பட்டு சத்தம் போட்டனர். உடனே DRO எழுந்து “நான்தான் ஏற்கனவே நீங்கள் விரும்பாவிட்டால் இத்திட்டம் இங்கு வராது என சொல்லியுள்ளேன். அமைதியாக உங்கள் கருத்தை கூறுங்கள்” என கூட்டத்தை பல்வேறு வகையில் கூறி அமைதிப்படுத்தினார்.
இந்த கருத்துக் கேட்பு கூட்டமே அரசு விதிப்படி தெரிவிக்காமல், பல்வேறு சமூக ஆர்வலர்களின் முயற்சியால் வெளியே கொண்டு வரப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. ஏன் அதிகாரிகளின் செயல்பாடு மக்களுக்காக இல்லாமல் ஆலை நிர்வாகத்திற்க்கு சாதகமாக இப்படி தவறாக உள்ளது. தொடக்கமே இவ்வாறு இருந்தால் நாளை செல்ல செல்ல எவ்வாறு இருக்கும். சுற்றுசூழல் தாக்க அறிக்கை பற்றி எதுவும் தெரியாமல், நாளை ஆலை இயங்க தொடங்கினால் என்னஎன்ன பாதிப்புகள் இங்கே வரும், ஆலை நிர்வாகம் இதை எவ்வாறு சரி செய்யும், உண்மையில் இவ்வாறு செய்ய சாத்தியமா? என எதுவும் தெரியாமல்தான் மக்கள் கூடியுள்ளனர். எங்களைப் போன்றவர்களின் முயற்சியால் இங்கே கூடியுள்ள மக்கள் பொதுவாக ஆலை வேண்டாம் அல்லது வேண்டும் எனக் கூறுவார்களே ஒழிய பிரச்சினைகளை உணர்ந்து எதுவும் கூறப் போவதில்லை. மாவட்ட நிர்வாகம் அதற்கான வாய்ப்பை மக்களுக்கு உருவாக்கி தரவில்லை. இது ஒரு மாபெரும் அநீதி?. மக்களின் ரத்தத்தை வேர்வையாகி சிந்தி கொடுக்கும் வரிப்பணத்தில் சம்பளம் பெறும் அதிகாரிகள் மக்களுக்கு பொறுப்பின்றி இருப்பது எவ்வாறு சரியாகும், நியாயமாகும்?
நாமக்கல் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியராக சகாயம் அவர்கள் இருந்த போது, நாங்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, 2010களில் கருத்துக் கேட்பு கூட்டம் நடப்பது பற்றி, ஆலையால் பாதிக்கப்படும் பகுதியில் உள்ள மக்கள் அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் அனைத்து ஊர்களிலும் பிளக்ஸ் தட்டி, சுவரொட்டி, துண்டறிக்கை ஆகியவை மூலம் போலியோ சொட்டு மருந்து கொடுப்பது பற்றி அரசு பரப்புரை செய்வது போல் பரப்புரை செய்யப்பட்டது.இராமநாதபுரம் அனல்மின் நிலையக் கூட்டம் அவ்வாறு நடந்தது. இங்கு கூட அரசு ஒலிபெருக்கி வைத்து பிரச்சாரம் செய்திருக்க முடியும். பல மாவட்டத்தில் இப்படி கூட்டங்கள் ஏற்கனவே நடத்தப்பட்ட முன்மாதிரி இருக்கிறது.
கருத்துக்கேட்பு கூட்டம் நடத்துவதற்கான செலவுக்கு, ஆலை நிர்வாகம் அரசுக்கு நிர்ணயிக்கப்பட்ட தொகையை முன்கூட்டியே செலுத்தி விடுகிறது. அப்படியிருக்க அதிகாரிகள் ஏன் மக்களுக்கு கூட்டம் பற்றி தெரியப்படுத்த எந்த முயற்சியும் எடுக்கவில்லை? எடுப்பதில்லை? வெறும் 2 பத்திரிக்கையில் ஒரு மாதம் முன்பு டெண்டர் நோட்டீஸ் போல் விளம்பரமாக கொடுக்கப்பட்டதை மட்டும் கூறி அதிகாரிகள் நியாப்படுத்துவது சரியா?. அன்றாடம் செய்திதாள் படிக்கிற, இம்மாவட்ட அதிகாரிகள் எத்தனை பேர் அந்த விளம்பரத்தை பார்த்து இருக்க முடியும்? வரும் காலத்தில் அதிகாரிகள் மக்களுக்கு விரோதமான போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் மக்கள் தகுந்த பாடம் கற்பிப்பார்கள்.
10 பக்கம் மட்டும் உள்ள சுற்றுசூழல் தாக்க மதிப்பீடு சுருக்க அறிக்கை மட்டுமே தமிழில் & ஆங்கிலத்தில் உள்ளது. சுற்றுசூழல் தாக்க மதிப்பீடு அறிக்கை 207 பக்கம் உள்ளது. இது முழுக்க, முழுக்க ஆங்கிலத்தில் மட்டுமே உள்ளது. இது எத்தனை பேருக்கு புரியும். இங்கு வந்துள்ளவர்கள் பெரும்பாலான பேர் படிப்பறிவு இல்லாதவர்கள். அதிலும் ஆங்கிலம் தெரிந்தவர்கள் விரல் விட்டு எண்ணக் கூடியவர்களே. ஆலை நிர்வாகம் கருத்து கேட்புக் கூட்டம் நடத்த பணம் கொடுக்கிறது. ஆலை நிர்வாகம் இந்த அறிக்கையை தமிழிலும் கொடுக்க வேண்டும் என ஏன் மாசு கட்டுபாடு வாரியம் கேட்பதில்லை. தமிழக அரசு மட்டும் அல்ல, இந்தியாவிலேயே தமிழகத்தில் உள்ள அனைத்து இந்திய அரசு நிறுவனங்களும் தமிழில்தான் அனைத்தையும் கையாள வேண்டும் என இந்திய அரசு ஆணை(1986) பிறப்பித்து உள்ளது. அரசு ஊழியர்களான நீங்களே இதை பின்பற்றாமல் இருப்பது எப்படி சரி?.உண்மை மக்களுக்கு போய் விடக் கூடாது என்பதில் அதிகாரிகள் கவனமாக உள்ளீர்கள் என நேரடியாகவே குற்றம் சாட்டுகிறேன்.
· இரண்டாவதாக, “திட்டதிற்கான சுற்றுசூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையில் ஆலை நிர்வாகம் எந்த ஒரு நிலையிலாவது ஒரு பகுதி தகவல்கள் பொய்யானதாகவோ, தவறான புள்ளிவிபரங்களோகொடுத்து இருந்தால் ஆலையின் திட்டம் நிராகரிக்கப்படும்” என மாசுகட்டுப்பாடு வாரியம் தனது விதியில் தெளிவாக கூறி உள்ளது.
ஆலையின் சுற்றுசூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையில் எண்ணற்ற தவறான தகவல்களும், புள்ளிவிபரங்களும் உள்ளது.
ஆலை வளாகத்தின் சுற்றுசூழல் நிலவரம் என்பதில் காகித ஆலையின் 10 கி.மீ தூர சுற்றளவு பகுதியில், தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடம்; சமய முக்கியத்துவம் வாய்ந்த இடம்; சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த இடம்; மலைகள் ஆகிய எதுவும் இல்லை என குறிப்பிடப்பட்டு உள்ளது.
ஆனால் தொல்பொருள் முக்கியத்துவமும், சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த சாத்தனூர் கல்மரம் 5 கி.மீ தூரத்தில் உள்ளது. சமய முக்கியத்துவம் வாய்ந்த சிறுவாச்சூர் மதுர காளியம்மன் கோவில் 2 கி.மீ தூரத்திலும் உள்ளது. ஆலையை சுற்றி 5 கி.மீ தூரத்தில் ரிசர்வ் ஃபாரஸ்ட் உள்ளது.
மேலும் நெடுஞ்சாலையில் இருந்து 500 மீட்டர் தொலைவில் அபாயகரமான சிகப்பு வகை ஆலை அமைக்கக் கூடாது என்ற விதி மீறப்பட்டு ஆலை தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியே உள்ளது.
மேலும் ஆலையை சுற்றியுள்ள பல ஊர்கள் காட்டப்படவே இல்லை. குறிப்பாக ஆலையை ஒட்டி உள்ள மலையப்ப நகர், நாரணமங்கலம் உட்பட பல ஊர்கள் இருப்பதும் அங்கு மக்கள் வசிப்பதும் காட்டப்படவில்லை. நாளை இந்த ஊர்கள் இல்லாமல் அழிந்து போய் விடும் என்பதற்க்காகவே குறிப்பிடப்படவில்லையா? ஆலையை சுற்றி எண்ணற்ற கல்லூரிகள் உள்ளன. அதில் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்கி படிக்கின்றனர், அது பற்றியும் குறிப்பிடப்படவில்லை.
ஆலை நிர்வாகம் இந்த அறிக்கையில் பல்வேறு தவறான தகவல்களை கொடுத்தும், தகவல்களை மறைத்தும் உள்ளது. எனவே அமைவிடம் பற்றி கொடுத்துள்ள தவறான தகவல்கள் அடிப்படையிலேயே ஆலையின் திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும்.
· மூன்றாவதாக, எம்.ஆர்.எப். டயர் தொழிற்சாலையின் அனல் மின் நிலையம் தனது நீர் தேவையான நாளொன்றுக்கு கிட்டத்தட்ட சுமார் 4,00,000 லிட்டர் (நான்கு லட்சம் லிட்டர்- 383 KLD) நீரை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் பெற்றுக் கொள்ளும் என தெரிவித்துள்ளது.
எம்.ஆர்.எப். டயர் தொழிற்சாலை ஏற்கனவே தனது தேவைக்கு தினமும் பத்து லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்க காவிரி - கொள்ளிடம் ஆற்றில் போர் போட்டு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் எடுத்து வருகிறது.
ஏற்கனவே காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு கர்நாடகத்தால் மதிக்கப்படாமல்தமிழகம் பல்வேறு நெருக்கடியில் உள்ளது. தற்போது கூட காவிரியின் குறுக்கே மேகதாது, ராசிமணல் என இரு இடங்களின் குறுக்கே கர்நாடகம் சட்ட விரோதமாக அணை கட்ட முயற்சிக்கிறது. இந்த அனல்மின் நிலைய திட்டத்துக்கான நீரை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் காவிரியில் இருந்து பெற்றுதான் பயன்படுத்த வேண்டியது இருக்கும். காவிரியில் விவசாயிகளுக்கே தண்ணீர் இல்லாத நிலை உள்ளது. காவிரியில் தண்ணீர் இல்லையென்றால் ஆலைக்கு அருகிலேயே ஆலை தரப்பினர் ராட்சச போர் போட்டு எடுப்பார்கள். பெரம்பலூர் மாவட்டத்தில் செல்லும் கூட்டு குடிநீர் திட்டத்தில் எங்கும் எடுப்பார்கள். யார் இதை கண்காணிக்க முடியும். பெரம்பலூரில் ஏற்கனவே வாரம் ஒருமுறை குடிநீர் கிடைப்பது இரு வாரத்திற்கு இருமுறையாக மாறும். ஒரு நாள் கூட அனல் மின்நிலையம் தண்ணீர் இன்றி இயங்காமல் இருக்காது. எப்படியானாலும் இந்த ஆலைக்கு அரசும், அதிகாரிகளும் ஆலைக்கு தண்ணீர் கொடுப்பதால் இப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும். இப்பகுதியில் மக்களுக்கு குடிநீர் கிடைக்காமல் போகும். ஆலையை யாரும் கட்டுப்படுத்த முடியாது. எனவே இந்த திட்டத்தை இங்கு தொடங்க அரசு அனுமதிக்கக் கூடாது.
· நான்காவதாக அனல்மின் நிலையம் தினமும் 2,80,000 கிலோ லிட்டர் ஆலைக்கழிவு நீரையும், பாய்லர் வீழ்படிவு 1,20,000 கிலோ லிட்டரும் வெளியிடும். ஆலையின் கழிவு நீரை ஆலை நிர்வாகம் என்ன செய்யப் போகிறது என்பது பற்றி எதுவும் சுற்றுசூழல் தாக்க அறிக்கையில் கூறப்படவில்லை. எனவே தினமும் லட்சக்கணக்கில் செலவு செய்து சுத்திகரிக்க வேண்டிய, இக் கழிவு நீரை எல்லா ஆலைகளையும் போல நிலத்திற்கு அடியிலேயோ, அல்லது ஆலையை சுற்றியுள்ள பகுதியில் ஏதாவது பொய்யை சொல்லி வெளியேற்றும்.
ஆலையின் கழிவு நீரை சுத்திகரிப்பு நிலையம்,ஆர்.ஓ. பிளாண்ட் மூலமும் சுத்தப்படுத்தி ஜீரோ சதவிகித டிஸ்சார்ஜ் மட்டுமே செய்வதாக சொல்லியிருப்பதால், ஆலை தனது கழிவு நீரை மீண்டும் ஆலையின் மறுபயன்பாட்டுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். கழிவு நீரை இயந்திர ஆவியாக்கல், சூரிய ஆவியாக்கல் மூலம் ஆவியாக்கும் என குறிப்பிட்டு இருப்பதால் தினமும் ஆவியாகும் அளவுக்கு மட்டுமே மீண்டும் ஆலை தண்ணீர் பெற அனுமதிக்க வேண்டும்.
கடந்த ஜனவரி’18-ஆம் தேதி தமிழக சுற்றுசூழல் அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் அவர்கள் ஈரோட்டில் பேசும் போது காவேரி ஆற்றில் இருந்து இனிமேல் பெருந்துறை சிப்காட்டிற்கு தண்ணீர் எடுக்க மாட்டோம். சிப்காட்டில் ஜீரோ சதவிகித டிஸ்சார்ஜ் அளவிற்கு தண்ணீர் சுத்திகரிப்பு நடப்பதால் இனிமேல் காவேரி ஆற்றில் ஆவியாகும் 10 சதவிகித தண்ணீர் மட்டுமே எடுக்கப்படும். சிப்காட் ஆலைகளுக்கு தனது கழிவுநீரை மட்டும் மறுசுழற்சி செய்து பயன்படுத்தும் என அமைச்சர் தெரிவித்து உள்ளார். எனவே சொந்தமாக சுத்திகரிப்பு ஆலை அமைத்துள்ள அனல்மின் நிலையமும், ஆவியாகும் நீரை மட்டும்தான் தினமும் பெற அரசு அனுமதிக்க வேண்டும்.
· அய்ந்தாவதாக ஆலையால் 50 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என கூறப்பட்டு உள்ளது. இது அப்பட்டமான மோசடியாகும். அனல்மின் நிலையத்தில் வேலை செய்ய தொழில்நுட்ப படிப்பு படித்தவர்கள் மட்டுமே தேவை. இப்பகுதி மக்களுக்கு உண்மையில் கழிப்பறை சுத்தம் செய்யும் ஒப்பந்தக்காரரிடம் மட்டுமே வேலை கிடைக்கும். ஏற்கனவே எம்.ஆர்.எப். டயர் தொழிற்சாலையில் இப்பகுதியை சேர்ந்த தகுதி உள்ள, டயர் தொழிற்சாலைக்காக தனது நிலத்தை ஆயிரக்கணக்கான ஏக்கரை இழந்த குடும்பத்தை சேர்ந்த சிலருக்கு கூட ஆலையில் நிரந்தர வேலை கொடுக்கப்படவில்லை. பெரும்பாலும் வெளிமாநிலங்களை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே வேலை கொடுக்கப்பட்டு உள்ளது. ஒப்பந்த தொழிலாளர்களாக மட்டுமே இப்பகுதியை சேர்ந்த சிலர் உள்ளனர்.
· ஆறாவதாக, அனல்மின் நிலைய பகுதியை சுற்றி மிகவும் குறைவான அடர்த்தியிலே மக்கள் வசித்து வருகின்றனர் எனக் குறிப்பிடப்பட்டு உள்ளது மிகவும் தவறான தகவலாகும்.
· ஏழாவதாக, அனல்மின் நிலையம் தினமும் 1100 டன் நிலக்கரியை எரித்து 88 டன் சாம்பலை மட்டுமே வெளியிடும் எனக் குறிப்பிடப்பட்டு உள்ளது. இது 8% மட்டுமேயாகும்.
உண்மையில் வெளிநாட்டு நிலக்கரியாக இருந்தால் 15%மும், உள்நாட்டு நிலக்கரியாக இருந்தால் 20% - 25%மும் சாம்பலை வெளிபடுத்தும் என்பதுதான் உண்மை நிலை. EIA அறிக்கையில் உள்ளது 8 % சாம்பல் என்பது மிகவும் தவறான தகவலாகும்.
மேலும் தினமும் 1100 டன் நிலக்கரியை எரித்து, அனல்மின் நிலையத்தால் வெளியேற்றும் 88 டன் சாம்பலை (சுமார் 20 லாரி லோடு), திருப்பூர் மாவட்டம், காங்கேயம் வட்டம், ஓலப்பாலயம் கிராமத்தில் உள்ள பச்சாம்பாளையத்தில்(S.F.No.1468/1) உள்ள ஸ்ரீ ஆண்டாள் அழகர் சிமெண்ட் பிரைவேட் லிமிடெட் என்ற சிமெண்ட் தொழிற்சாலைக்கு அனுப்பப்படும் என குறிப்பிடப்பட்டு உள்ளது. ஆனால் அந்த ஊரில் இப்படி ஒரு தொழிற்சாலையே இல்லை என்பதை அப்பகுதி மக்கள் தெரிவித்து உள்ளனர். எதற்க்காக ஆலை நிர்வாகம் இல்லாத ஒரு தொழிற்சாலையின் பெயரை குறிப்பிட்டு உள்ளது. அனல் மின்நிலைய சாம்பலை இப்பகுதியில் உள்ள ஏதாவது ஒரு இடத்தில், வாய்ப்பிருந்தால் ஏதாவது ஒரு பயன்பாடற்ற பாறைக்குழியில், பயன்பாடற்ற கிணற்றில் அல்லது ஏதாவது ஒரு காலி இடத்தில் கொட்டுவார்கள் என்பதுதான் நடைமுறை உண்மை. பல இடங்களில் இப்படி நடந்து உள்ளது. எனவே தொடக்கத்திலேயே இதுபோல் தவறான தகவலைக் கொடுத்து ஏமாற்றும் இந்த ஆலைக்கு அனுமதி கொடுக்கவே கூடாது.
· எட்டாவதாக, ஏற்கனவே எம்.ஆர்.எப். டயர் தொழிற்சாலையால், ஆலையை சுற்றியுள்ள பகுதியில் விவசாயம் பாதிக்கப்பட்டு வருகிறது. விளையும் பொருள்களின் மீது கரி படிந்து வருகிறது.கையில்செடியில் உள்ள தக்காளி உட்பட எதை தொட்டாலும் கை கரியாகி விடுகிறது. ஆலையை சுற்றியுள்ள பகுதியில் 45 அடி ஆழத்தில் தண்ணீர் தற்போது கிடைக்கிறது. கிணற்று பாசனத்தை வைத்தே நெல் உட்பட பல பல பயிர்கள் பயிரிடப்படுகிறது. அனல்மின் நிலையம் இயங்கத் தொடங்கினால் தினமும் வெளிப்படும் லட்சக்கணக்கான லிட்டர் கழிவு நீர், அபாயகரமான காற்று, நிலக்கரி எரிப்பதால் வெளியாகும் அபாயகரமான ரசாயனங்கள், ஆலையின் தேவைக்கு ரகசியமாக எடுக்கப்படும் நிலத்தடி நீர் இவைகள் அனைத்தும் விவசாயத்தை அழிக்கும். பெரம்பலூர் விவசாய மாவட்டம், இந்த நிலை அழிக்கபட்டு பாலைவனமாகும். இங்கு வரக் கூடிய தொழில்கள் விவசாயப் பொருட்களை வைத்து உற்பத்தி செய்யப்படும் தொழிலாக இருந்தால் பரவாயில்லை. நீரையும், காற்றையும், மண்ணையும் விசமாக்கும் எந்த தொழிலும் இங்கு வர வேண்டாம். வளர்ச்சி என்று சொல்லி எங்கள் வாழ்க்கையை அழிக்காதீர்கள்.·
· ஒன்பதாவதாக, ஏற்கனவே எம்.ஆர்.எப். டயர் தொழிற்சாலை பாதுகாப்பு சுவரை சுற்றியுள்ள பகுதியில்தான் மலையப்ப நகர் உட்பட பல்வேறு கிராமங்கள் உள்ளது. இதில் விளிம்பு நிலையில் உள்ள மக்களான நரிக்குறவர் மக்கள் ஆயிரக்கணக்கானோர் வசித்து வருகின்றனர். இவர்கள் 60 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மக்கள் நேயம் மிக்க அதிகாரியால் இங்கு குடிஅமர்த்தப்பட்டவர்கள். இங்கு தவிர இவர்கள் எங்கும் சென்று குடியிருக்க முடியாது. யாரும் இவர்களை அருகே வசிக்கவே விட மாட்டார்கள். இதுதான் சமூக எதார்த்தம்.
பழங்குடி மக்களான இவர்கள் குடியிருப்பு பகுதியில் ஆபத்தான விசத்தன்மை உள்ள ஆலை அமைப்பது என்பதும், ஆபத்தான கழிவுகளை வெளிவிடுவது என்பதும் 1989 SC/ST தாழ்த்தப்பட்டோர்/பழங்குடியினர் வன்கொடுமைதடுப்பு சட்டப்படி குற்றமாகும். இப்படியான சட்டத்தை எதிர் கொள்ள வேண்டிய நிலைமையை அதிகாரிகளான நீங்கள் உங்களுக்கு ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம் என எச்சரிக்கிறேன். வனவிலங்குகளுக்கான சரணாலயம் அமைக்க என பல்வேறு முயற்சி செய்யும் நீங்கள், மனிதர்களான இந்த விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கையை பாதுகாக்க உதவ வேண்டும்.
· பத்தாவதாக, அனல்மின் நிலையம் இங்கு அமையுமானால் காற்றின் மூலம் ஏற்படுத்த இருக்கும் பாதிப்பை நாம் அவசியம் பார்க்க வேண்டும். இந்த திட்டம் தொடங்கப்படுவதன் மூலம் நிலக்கரியை எரிப்பதால் குறிப்பாக கடும் விசத்தன்மையுள்ள மெர்குரி(பாதரசம்). ஆர்செனிக், காடியம், குரோமியம், ஆண்டிமணி, ஸ்ரோண்டியம், யுரோனியம், ஈயம் என பல்வேறு உலோகங்களான ரசாயனப் பொருட்கள் காற்றின் மூலம் பரவும். இதனால் காற்று, நிலம், நீர், ஆகியவை விசாமாவதுடன் பயிர்கள், நுண்ணுயிர்கள், ஆடு, மாடு, பறவைகள் மற்றும் மனிதர்கள் அனைவருக்கும் கடும் நோய் ஏற்படும்.
இந்த திட்டம் தொடங்கப்படுவதன் மூலம் நிலக்கரியில் இருந்து வெளியேறும் பல்வேறு நச்சுப்பொருள்களால் இந்தப் பகுதியைச் சேர்ந்த மக்களுக்கு புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், எலும்பு நோய், மூளைக் கோளாறு, ரத்த சோகை, இதய ரத்தக் குழாய் நோய், மூக்கில் புண், சுவாசக் கோளாறு(ஆஸ்துமா), தோல்நோய், பிறவிக் கோளாறு&ஊனம், சிறுநீரகம் பாதிப்பு , ஈரல் பாதிப்பு , கிட்னி பாதிப்பு, நுரையீரல் பாதிப்பு, குழந்தைகளின் நரம்பு-மூளையை தாக்கி குழந்தைகளின் அறிவு, கவனம் நடவடிக்கை கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு நோய்களும் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் பெரம்பலூரில் ஈரோடு, திருப்பூர் போல் திரும்பும் பக்கம் எல்லாம் மருத்துவமனையை பார்க்க நேரிடும். மகப்பேறு இன்மையால் மலடு நீக்கும் மருத்துவமனை பெருகும். சந்ததி இல்லாமல் பல குடும்பம் அழியும்.
இதில் குறிப்பாக, 40 டன் அனல் மின் நிலையத்தில் இருந்து ஆண்டு ஒன்றுக்கு சுமார் நாற்பது கிலோ கிராம் பாதரசம் (மெர்குரி) ஆவியாக வெளியேறும். பாதரசம் அடர்த்தி அதிகம் உள்ள தனிமம். இது உயரமான புகைபோக்கியில் இருந்து வெளியாகும் போது, அது கனமான உலோகமாக இருப்பதால் காற்றில் அதிக காலம் நீடிக்காமல் அதன் எடையின் காரணமாக நிலத்தில் அப்படியே படியும். 1கிராம் பாதரசம் சுமார் 25 ஏக்கர்பரப்பளவு நிலத்தை கடுமையாக பாதிக்கும். அப்படியே நிலத்தில் படியும் பாதரசம் மழை நீரின் மூலம் நீர் நிலைகளுக்கு சென்று கலந்து விடும். அதை உட்கொள்ளும் அனைவருக்கும் (கோழி உட்பட பறவைகள், நுண்ணுயிர்கள், ஆடு, மாடு உட்பட விலங்குகள், மீன், மனிதன் உட்பட) மெர்குரி உடனிலில் படியும். உயிரினங்களுக்கு உள்ளே செல்லும் மெர்குரி அளவு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கும். பல சிறிய உயிரினங்களை பெரிய உயிரினம் உட்கொள்ளும். அவ்வாறு உட்கொள்ளும் போது பெரிய உயிரினத்தின் உடலுக்குள் படியும் மெர்குரியின் அளவு பல மடங்கு அதிகரிக்கும். இது தொடந்தும் கொண்டே செல்லும் போது உணவுசங்கிலி தொடர்பின் உச்சத்தில் இருக்கும் உயிரினத்தின் உடலில், உயிரையே பறிக்கும் அளவு மெர்குரி படிந்து விடும். மேலும் இதனால் கர்ப்பிணி பெண்களுக்கும், கருவில் வளரும் சிசுவிற்க்கும் அதிக அபாயத்தை விளைவிக்கும்.
· பதினொன்றாவதாக இங்குள்ள உயரமான புகைபோக்கியில் இருந்து வெளியாகும் புகையில் சல்பர் டையாக்ஸைடு, நைட்ரஸ் ஆக்ஸைடு, கார்பன் டைஆக்சைடு ஆகியவை இருக்கும். நிலக்கரியில் உள்ள கந்தகம் எரிக்கப்பட்டு சல்பர் டையாக்ஸைடு வாயுவாக வெளியேறுவதால் இப்பகுதியில் முழுக்க அமில மழை பெய்ய சாத்தியம் அதிகம் உள்ளது. சல்பர் டையாக்ஸைடு ஒரு பயங்கர நச்சு ரசாயனம். நைட்ரஸ் ஆக்ஸைடு தாவரங்களையும் , அதன் இலைகளையும் கடுமையாக பாதித்து விளைச்சலை கடுமையாக பாதிக்கும். தினமும் இந்த ஆலையில் இருந்து மட்டும் நாளொன்றுக்கு 2.60டன்கள் நைட்ரஸ் ஆக்ஸைடு வெளியேறும். மேலும் நைட்ரஸ் ஆக்ஸைடு , சல்பர் டையாக்ஸைடு மற்றும் ஓசோனுடன் கலக்கும் போது இயற்கைக்கு ஏற்படும் பாதிப்புகள் மிகவும் அதிகமாக இருக்கும்.
நிலக்கரியை எரிப்பதால் காற்று வளி மண்டலத்தில் கார்பன்டை ஆக்சைடின் அளவு அதிகரிக்கும். கார்பன்டை ஆக்சைடு அளவு அதிகரிக்க, அதிகரிக்க உலகின் வெப்பமயமாகுதல் அதிகரிக்கும். தமிழக அரசு ஒருபுறம் வெப்பமயமாகுதலைக் குறைக்க தமிழகமெங்கும் 68 லட்சம் மரங்களை நடுவது என தீவிரமாக இயங்கி வருவதாக சொல்லும் நிலையில் இது போன்ற கார்பன்டை ஆக்சைடு அதிகமாக வெளியிடும் ஆலைகளை திறக்க அனுமதி வழங்கக் கூடாது. வெப்பமயமாகுதல் அதிகரித்தால் மழை,புயல்,வறட்சி போன்றவைகளில் அதீத காலநிலைகள் தீவிரமாகும். பருவநிலை மாற்றத்தால் கடல் நீரோட்டம் மாறும். உலக வெப்பநிலை அதிகரிப்பால் பனிமலைகள் உருகத் தொடங்கும். வரும் 2100 ஆம் ஆண்டில் இமயமலையில் உள்ள 70% பனிஉருகி விடும் என்ற செய்திகள் வந்துள்ளன. இதனால் கடல் நீர்மட்டம் உயர்ந்து பல நாடுகள் அழியவும், எண்ணற்ற பாதிப்புகளும் ஏற்படும்.
வெப்ப காற்றை, ஆலை வான்வெளியில் 85 மீட்டர் (சுமார் 300 அடி) உயரமான புகைபோக்கி(சிம்னி) மூலம் ஆலை வெளியிடும். இதனால் இப்பகுதியில் மேகங்கள் ஒன்றுகூட முடியாமல் மழை பொழிவது என்பது மிகவும் குறையும். ஏற்கனவே மழை குறைவால் பாதிக்கப்பட்டுள்ள இம்மாவட்டம் மிக கடுமையான பாதிப்புக்கு உள்ளாகும். விவசாய மாவட்டத்தில் விவசாயம் அழிந்தும், மக்கள் அகதியாக தனது நிலங்களை இழந்து வெளியேற வேண்டிய கொடுமை ஏற்படும். .
· பனிரண்டாவதாக, அனல்மின் நிலையத்தை எதிர்ப்பதால் நாங்கள் மின்சாரத்துக்கு எதிரியல்ல உலகம் முழுக்க அனல்மின்சாரம், அணுமின்சாரம் ஆகியன தவிர்த்து சூரிய மின்சாரம், காற்றாலை, கடலலை, இயற்கை கழிவுகளைக் கொண்டு மின்சாரம் என தனது நிலையை பல நாடுகள் மாற்றிக் கொண்டுள்ளது.
எனவே எம்.ஆர்.எப். டயர் தொழிற்சாலையானது தனது மின் உற்பத்தி தேவையை சூரிய மின்சாரம் மூலமும், காற்றாலை மூலமும் மட்டுமே நிறைவு செய்து கொள்ள வேண்டும். மக்களுக்காக, தமிழக அரசு 3000 மெகாவாட் சூரிய மின்சாரம் உற்பத்தி செய்ய தீவிரமாக பல்வேறு முயற்சி செய்வதாக சொல்லி வருகிறது. மேலும் குஜராத்தை சேர்ந்த அதானி குழுமம் சூரிய மின்சாரம் உற்பத்தி நிலையம் அமைக்க என தமிழகத்தின் சங்கரன் கோவில் பகுதியில் சுமார் 2000 ஏக்கர் நிலத்தை அரசு விவசாயிகளிடம் பிடுங்கி கொடுக்க முயற்சித்து வருகிறது. மேலும் நெல்லை கங்கைகொண்டான் சிப்காட் பகுதியில் சூரிய மின்சாரம் தயாரிக்க சிப்காட் விரிவாக்கம் என அரசு நிலத்தை எடுக்க முயற்சித்து வருகிறது. எனவே ஆண்டு முழுக்க நன்கு வெயில் கொளுத்தும் எம்.ஆர்.எப். ஆலையின் நிலம் நூற்றுக்கணக்கான ஏக்கர் இப்பகுதியில் பயன்பாடு இன்றி சும்மா இருப்பதாக ஆலை நிர்வாகமே கூறியுள்ளது. நாங்களும் நேரில் பார்த்தோம். இப்பகுதியில் சூரியமின்சாரம் வேண்டும் அளவு ஆலை தயாரிக்கட்டும். எனவே ஆலை தனது மின் தேவையை சூரிய மின்சாரம் மூலமும், காற்றாலை மூலமும் மட்டுமே மின்சாரம் தயாரித்துக் கொள்ள அரசு அனுமதிக்க வேண்டும். எம்.ஆர்.எப். ஆலை இயங்கும் கேரளா கோட்டயம் பகுதியில் அனல் மின் நிலையம் அமைக்க வேண்டும் என ஆலையால் முதலில் பேச கூட முடியுமா? இளித்தவாயர்கள் தமிழர்கள்தானா?
· பதிமூன்றாவதாவதாக, ஆலையை வைத்து உலகம் முழுக்க 65 நாடுகளுக்கு டயர் ஏற்றுமதி செய்து பல்லாயிரம் கோடி ருபாயை லாபம் ஈட்டியுள்ள இந்த எம்.ஆர்.எப்.நிறுவனம், ஏற்கனவே 5 ஆண்டுகளாக டயர் ஆலை இயங்கி வரும் இப்பகுதியில் மக்களுக்கு செய்த நன்மை என்ன? எண்ணற்ற அழிவுகள்தான் மிச்சம். மக்களுக்கு எண்ணற்ற புதிய நோய்களை, சூழல் பாதிப்புக்களை, ஏற்படுத்தி உள்ள கடுமையான மாசுபடுத்தலை, இனிமேலாவது ஒழுங்குபடுத்த மாவட்ட நிர்வாகம் மிகுந்த கவனம் எடுத்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மக்களுக்கு ஏற்பட்டுள்ள நோய்களை ஊர் வாரியாக ஆய்வு செய்து, தகுந்த சிகிச்சையை ஆலையின் மூலம் அரசு செய்ய வைக்க வேண்டும்.
மேலும் டயர் ஆலையின் இருந்து வெளியேற்றப்படும் 4 லட்சம் லிட்டருக்கு மேலான கழிவு நீர் சுத்திகரிப்பில், வெளியேறும் ஆபத்து விளைவிக்கும் பல்வேறு வாயுக்களை கையாள்வதில், ஆலையில் வெளிவரும் திடக்கழிவுகளை கையாள்வதில் விதிப்படி இல்லாமல் பல்வேறு குளறுபடிகளும், அதனால் பல்வேறு பாதிப்புகளும் மக்களுக்கும், சுற்றுசூழலுக்கும் ஏற்பட்டு உள்ளது. டயர் ஆலையால் இப்பகுதியில் ஏற்கனவே காற்று, நீர், மண், ஆகியவை பாழ்பட்டு, மாசுபட்டு வருகிறது.
· பதினான்காவதாவதாக, இந்த மக்கள் விரோதமான, சட்ட விரோத அனல்மின் திட்டத்தை இங்கு கொண்டு வந்து, இங்கு அறிக்கையில் கூறி உள்ளது போல் சுற்றுசூழல் பாதிப்பின்றி இந்த ஆலை செயல்படும் என ஆலை நிர்வாகமும், அரசு அதிகாரிகளும் கூறுகின்றனர். இங்குள்ள மக்களுக்கு இந்த அனல்மின் திட்ட பாதிப்பு தெரியாது. எங்களுக்கு நன்கு தெரியும். இந்த பகுதி மக்களை தமிழகத்தில் அனல்மின் நிலையங்கள் இயங்கும் சுமார் 30 இடங்களில் ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்று இதோ பாதிப்பில்லாமல் ஆலை இயங்குகிறது பாருங்கள்... நாங்கள் இப்படிதான் இங்கு செயல்படப் போகிறோம் என சொல்லத் தயாரா? உங்களால் முடியாது என்பதுதான் அப்பட்டமான உண்மை. அப்படிக் நீங்கள் காட்டத் தயார் என்றால் நாங்கள் உங்களை ஆதரித்து இப்போதே கூட்டத்தில் இருந்து வெளியேறுகிறோம்.
இந்த மாசுக்கட்டுப்பாடு அதிகாரிகளின் கண்காணிப்பில் உள்ள சாயப்பட்டறையால்தான் காவிரியின் துணை நதி நொய்யல் ஆறு செத்த நதியாக மாறியது. வேலூர் தோல் ஆலை கழிவுகளால் பாலாறு பாலானது. தமிழகம் முழுக்க ஆலை இருக்கும் பகுதியெல்லாம் மக்களின் வாழ்வாதாரம் அழிக்கப்பட்டு வருகிறது. மக்களின் வரிப் பணத்தில் படித்து, மக்கள் உழைத்துக் கொடுக்கும் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கும் அதிகாரிகள், மக்களுக்கு நேர்மையாக இல்லாமல் ஆலை நிர்வாகத்திற்க்கு விசுவாசமாக இருப்பது அறமா? “படித்தவன் சூதும் வாதும் செய்தால் போவான், போவான், அய்யோவென்று போவான்” என சொல்வார்கள். பெரும்பாலான அரசு அதிகாரிகளின், ஆலை நிர்வாகத்தில் உள்ள அதிகாரிகளின் செயல்பாடு அப்படித்தான் உள்ளது.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் இன்று இங்கு கூட்டி நடத்திய கருத்துக் கேட்பு கூட்டம் என்பது முழுக்க, முழுக்க சட்டவிரோதமானதும், ஜனநாயக விரோதமானது ஆகும். ஆலைக்கு ஒரு பக்க சார்பாக செயல்பட எண்ணியே இக்கூட்டம் முறையற்று கூட்டப்பட்டு உள்ளது. இதற்காக சட்ட ரீதியான நடவடிக்கையை மாவட்ட ஆட்சியர் எங்கள் மூலம் எதிர்கொள்ள வேண்டியது இருக்கும் எனத் தெரிவித்துக் கொள்கிறேன்., இந்த கருத்துக் கேட்புக் கூட்டத்தை ரத்து செய்து, கூட்டம் குறித்து அனைத்துப் பகுதி மக்களுக்கும் கலந்து கொள்ளும் வகையில் அறிவிப்புக் கொடுத்து மீண்டும் கூட்டத்தை நடத்த முன்வர வேண்டும். இல்லாவிட்டால் மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும்
எக்காரணம் கொண்டும் அனல்மின் நிலைய ஆலைக்கு அனுமதி அளிக்காமல் இந்த திட்டத்தை முற்றிலும் தடைசெய்ய வேண்டும். காவிரியை போர் போட்டு சுரண்டாமல் பாதுகாக்க வேண்டும். ஆலைக்கு அனுமதி அளித்தால் எங்கள் உயிரைக் கொடுத்தாவது ஆலையை தடுப்போம்”. எனப் பேசி முடித்தேன்.
கருத்துக்கேட்பு கூட்டத்தில் சுற்றுச்சூழல் ஆர்வலர் பூவுலகு ரமேஷ் கருப்பையா பேசியது:
· இந்தத் திட்டத்தில் தற்போதுதொடங்கப்படும் 50 மெகாவாட் மின்சார உற்பத்தி என்பது படிப்படியாக 500 மெகாவாட் ஆக மாறும். இதனால் ஏற்படும் எண்ணற்ற பாதிப்புக்களை நாம்தான் அனுபவிக்க வேண்டியது இருக்கும். ஆலையின் உற்பத்தியில் ஒரு மெகாவாட் கூட மக்களுக்கு வராது. ஆலைக்கு மட்டுமே பயன்படும்
· இந்த திட்டத்திற்காக இந்தோனேஷியாவில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டு காரைக்கால் துறைமுகத்தில் இருந்து லாரிகள் மூலம் இங்கு கொண்டு வரப்படவுள்ளது. நாள் ஒன்றுக்கு 1,100 டன் நிலக்கரி தேவைப்படும் நிலையில், அதனை கொண்டுவருவதற்க்கு தினமும் நூற்றுக்கணக்கான லாரிகள் இரவு பகலாக வரும். நிலக்கரி லாரிகள் மூலம் கொண்டு வரப்படும் போதே அதில் உள்ள நச்சுப் பொருட்கள் காற்றில் கலந்து பல்வேறு பிரச்னைகள் ஏற்படுத்தும். இது பற்றி எதுவும் அறிக்கையில் கூறப்படவில்லை.
· நிலக்கரியை எரிக்கும் போது வெளியாகும் கதிர் வீச்சிற்கு மக்கள் தொடர்ந்து ஆளாக வேண்டிய சூழ்நிலை உள்ளது.
· ஆலையை சுற்றி 5 கி.மீ தொலைவில் மூன்று காப்புக்காடுகள் (Reserve Forest) உள்ளது. இது கிழக்கு தொடர்சிமலையை சேர்ந்தது. இதில் உற்பத்தியாகும் நீர்தான் மருதையாற்றுக்கு செல்லும். வரும் காலத்தில் இந்த நீர்வழிப் பாதையை ஆலை நிர்வாகம் அழிக்கும். இதுபற்றி எதுவும் அறிக்கையில் குறிப்பிடவில்லை.
· ஆலையை சுற்றி எண்ணற்ற ஏரி, குளங்கள் உள்ளது இது எது பற்றியும் அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை. இவை அனைத்தும் அழியும்.
· பல்வேறு கிராமங்களில் மக்களுக்கு குடிநீர் பற்றாக்குறை உள்ள நிலையில், ஒரு தனிப்பட்ட நிறுவனத்துக்காக 4 லட்சம் லிட்டர் தண்ணீர் வழங்குவது முறையல்ல.
· இந்த திட்டத்தின் மூலம் வெளியாகும் சாம்பலால் பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
· இந்த திட்டத்திற்காக வழங்கும் தண்ணீரை இந்தப் பகுதியைச் சேர்ந்த 20,000 பேருக்கு வழங்க முடியும். பல்வேறு கிராமங்களில் மக்களுக்கு குடிநீர் பற்றாக்குறை உள்ள நிலையில் பெரம்பலூரில் வாரம் ஒரு முறை தண்ணீர் கிடைக்கும் நிலையில் ஒரு தனிப்பட்ட நிறுவனத்திற்காக தண்ணீரை எப்படி வழங்கலாம். எனவே இந்த திட்டத்தை கைவிட வேண்டும்.
· ஏற்கனவே டயர் ஆலை அமைக்கும் போது, வரும் காலத்தில் சூரிய ஒளி மின்சாரம் தயாரித்து பயன்படுத்தும் திட்டம் உள்ளது என ஆலை நிர்வாகம் தெரிவித்தது. இப்போது வரை கோடி கோடியாக வருமானம் ஈட்டும் ஆலை சூரிய ஒளி மின்சாரம் தயாரிப்பதை நடைமுறைபடுத்தாமலேயே உள்ளது. எனவே ஆலை சூரிய ஒளி மின்சாரத்தை தயாரித்துகிக் கொள்ளட்டும்.
மேலும் அவர்களின் திட்ட அறிக்கையில் இங்கு உற்பத்தி செய்யும் மின்சாரம் 25 மெகாவாட் மின்சாரத்தை எம்.ஆர்.எப். ஆலையின் பிற யூனிட்டுகளான திருவெற்றியூர், அரக்கோணத்திற்கு கொண்டு செல்வோம் என கூறியுள்ளது. எந்த காரணம் கொண்டும் இந்த பகுதி மக்களின் வாழ்க்கையை அழித்து இங்கு உற்பத்தி செய்யும் மின்சாரத்தை , அவர்களின் திருவெற்றியூர், அரக்கோணத்தில் உள்ள எம்.ஆர்.எப். ஆலைக்கு தரும் முயற்சியை அனுமதிக்கவே கூடாது.
· இந்த டயர் தொழிற்சாலைக்கு தேவையான நிலங்களை வாங்கிய போது, இங்குள்ள விவசாயிகளின் குடும்ப நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை யாருக்கும் வேலை வழங்கவில்லை. ஒரு சிலருக்கு கூலி வேலை மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
தொழிற்சாலையை ஒட்டியுள்ள பகுதியான மலையப்பன் நகர் நரிக்குறவர் சமூக மக்கள்இரண்டு பெண்கள் உட்பட 8 பேர் பேசினார்கள்.எங்களுக்கு ஆலையின் எந்த பாதிப்பும் தெரியாது. ராமேசு கருப்பையா போன்றவர்கள் எங்கள் ஊரில் தெரிவித்ததால்தான் இந்தக் கூட்டத்திற்க்கு வந்தோம். இங்கு வந்து எங்களுக்கு முன்னாள் பேசிய முகிலன் போன்றவர்களின் பேச்சால்தான் ஆலையினால் ஏற்படும் பாதிப்புகளை அறிந்து கொண்டோம். நாங்கள் இதுவரை நோய் என்னவென்றே தெரியாமல் வாழ்ந்து வந்தோம். மருந்து சாப்பிடுவதோ, ஆசுபத்திரிக்கோ போனதில்லை. டயர் கம்பனி வந்ததில் இருந்துதான் எங்களுக்கு நோய் வரத் தொடங்கி விட்டது. பலரும் நோய் வந்து சாகத் தொடங்கி விட்டனர். ஊரூராய் நாடோடி வாழ்க்கை வாழ்ந்த நாங்கள் இப்போதுதான் நிலையாக மற்றவர்களைப் போல வாழ்ந்து வருகிறோம். எங்கள் வாழ்க்கையை அழிக்கும் இந்த ஆலை வந்தால் நாங்கள்தான் முதலில் பாதிப்போம். இதை விரட்ட எந்தவகையான போராட்டமும் நடத்துவோம். சாவைப் பற்றி எங்களுக்கு கவலை இல்லை என ஆவேசமாக பேசினர்.
அதன் பின்பு பலரும் பல்வேறு பாதிப்புக்களை முன் வைத்து கருத்துக் கேட்பு கூட்டத்தில் பேசினார்கள். பேசிய அனைவரும் ஆலை இங்கு வரக்கூடாது என ஆணித்தரமாக முன் வைத்தனர். ஆலையை ஆதரித்து ஒருவர் கூட பேசவில்லை காலை10,50 மணிக்கு தொடங்கிய கூட்டம் சுமார் 03.00 மணியளவில் முடிந்தது.
முடிவில் உதவி கலெக்டர் மதுசூதனன் ரெட்டி பேசுகையில், “இந்த அனல்மின் ஆலை திட்டத்தின் தீமைகள் குறித்து பொதுமக்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி பொறுப்பாளர்களும் தெரிவித்த கருத்துகள் மத்திய,மாநில அரசுகளுக்கு அனுப்பி வைக்கப்படும். மாசு கட்டுப்பாடு வாரியம் அனுமதி அளித்தால் மட்டுமே இந்த திட்டம் தொடங்க முடியும். திட்டம் தொடர்பாக மறு கூட்டம் நடத்துவது தொடர்பாக பின்னர் பரிசீலனை செய்யப்படும்” என தெரிவித்து முடித்தார்.
சட்டவிரோதமான முறையில் கருத்து கேட்புக் கூட்டம் ஒன்று நடந்து முடிந்தது. இந்த கூட்டத்தில் நடந்த முறைகேடுகளை எதிர்த்தும், அனல் மின் நிலைய பாதிப்புகளை விளக்கியும் மக்கள் மத்தியில் தொடர்ந்து பரப்புரை செய்யவும், சட்டரீதியாக ஆலைக்கு ஆதரவாக செயல்பட்ட பெரம்பலூர் மாவட்ட நிர்வாகத்தின் மீதும் நடவடிக்கை எடுப்பதற்கான சட்டரீதியான வேலைகளும் தற்போது நடைபெற்று வருகிறது.
இயற்கையை பாதுகாப்போம்! மனிதகுலத்தை விடுவிப்போம் !!
- அறிவாளிகளும், அப்பாவிகளும் - நியூட்ரினோ ஆய்வகம் - ஓர் அலசல்
- நியூட்ரினோ - அமெரிக்காவுக்கா? இந்தியாவுக்கா?
- கொலைக்கூடங்களாக உள்ள தோல் தொழிற்சாலைகளும்... சாவுப்பட்டறைகளாக உள்ள சாயப்பட்டறைகளும்...
- தமிழகத்தின் இயற்கையை, வளங்களை அழிக்கும் திட்டங்கள்
- அறிவியலை ஓரங்கட்டும் அரசியல்
- ஏன் மரபணு மாற்றுப் பயிர்கள் கள பரிசோதனைகள் தடை செய்யப்பட வேண்டும்?
- பிரச்சினை அறிவியலில்; தீர்வு அரசியலில்
- மீத்தேன் எரிவாயுத் திட்டத்தால் காவிரிப் படுகை பாலைவனமாகும்!
- மேற்குத் தொடர்ச்சி மலையை பாதுகாப்போம்
- அணுத் தீமையற்ற தமிழக நாள் - டிசம்பர் 21, 2013
- மேற்கு மலைத் தொடரின் அடிவயிற்றில்... பிரபஞ்சம் பற்றிய ஆய்வா? அணு ஆயுதத் திட்டமா?
- மீத்தேன் எரிவாயு திட்டத்தின் முழு அபாயம்
- கொல்லத் துளை(டி)க்கும் அரசு
- வேதாந்தாவின் ஸ்டெர்லைட் ஆலை ஏன் விரட்டப்பட வேண்டும்?
- உலக மயமாக்கலும், சுற்றுச்சூழல் பாதிப்புகளும்
- தாவரங்களின் எதிரி - பார்த்தீனியம்
- ஆபத்தை விளைவிக்கும் ஆஸ்பெஸ்டாஸ்!
- ஞெகிழியினால் ஏற்படும் சமுதாயக் கேடுகள்!
- மின்னணுக் கழிவுகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடுகள்!
- வெறும் தண்ணீருக்கோ வரப்போகுது பஞ்சம்!