அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: விண்வெளி
கனவு காணவும் அந்த கனவுகள் நனவாகவும் மனிதனை ஊக்குவிப்பது வானின் வர்ணஜாலங்களே. நட்சத்திரங்கள் தாலாட்டு பாடும் இரவில் பல அற்புதங்கள் ஒளிந்திருக்கும் வானம் ஒரு அதிசய உலகமே. சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் மனிதனின் கவனத்தை எப்போதும் ஈர்ப்பவை. நாள் தவறாமல் சூரியன் கிழக்கில் உதிக்கிறது; மேற்கில் மறைகிறது. சூரியன் பூமியைச் சுற்றுகிறது என்று ஆதிகால மனிதன் நம்பினான்.
பிரபஞ்சம் எந்த அளவிற்குப் பெரியது? அதற்கு எல்லைகள் உண்டா? அதற்கும் அப்பால் என்ன? அறிய வேண்டும் என்ற மனிதனின் ஆவலில் பிறந்ததே வானியல். நட்சத்திரக் கூட்டங்கள், சந்திரன் உட்பட்ட அன்றாட வான் காட்சிகளைத் தேதியிட்டுப் பதிவு செய்வதே வான் உற்றுநோக்கலில் ஆரம்பப் படி. படிப்படியாக புதிய நட்சத்திரங்களைக் காணும்போது அவற்றின் பெயர்களையும் பதிவு செய்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும். செய்தித்தாள்களில் வெளியிடப்படும் நட்சத்திர வரைபடங்கள், ஸ்டெல்லாரியம் (Stellarium), மொபைல் ஸ்டார் மேப் (Mobile Star Map), ஸ்கை வியூ (SkyView), ஐஎஸ்எஸ் டிடெக்டர் (ISS Detector) போன்ற மொபைல் போன் செயலிகள் இதற்கு உதவும்.
ஒவ்வொரு நாளும் நட்சத்திரங்களையும் சந்திரனையும் உற்றுநோக்குபவர்களுக்கு வானத்தைப் பார்த்தே சரியான நேரத்தைக் கண்டுபிடிக்க முடியும். மொபைல் போன் சிக்னல்கள் கிடைக்காத இடங்களில் கூட நேரமறிய வானத்தை உற்றுநோக்கி அறியலாம். சூரியனும் எட்டு கோள்களும் அடங்கிய சூரிய மண்டலமும், அதன் பகுதியாக உள்ள கோள்கள், குறுங்கோள்கள் (சிறிய கோள்கள்), வால் நட்சத்திரங்கள், விண்கற்கள் ஆகியவை அனைத்தும் சூரிய மண்டலத்தின் பகுதிகளே.
ஆகாய கங்கை அல்லது பால்வீதி (Milky Way) என்பது நாம் வாழும் பூமி இருக்கும் சூரிய மண்டலம் உட்பட கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் அடங்கும் வியூகமே. இதற்கு அருகில் ஏராளமான நட்சத்திர மண்டலங்களும் அவற்றில் கோடிக்கணக்கான நட்சத்திரங்களும் உள்ளன. நட்சத்திரங்களில் சில மங்கலானவை; வேறு சில பிரகாசமானவை. ஒளி வீசும் நட்சத்திரங்கள் எப்போதும் பெரியவையாக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை.
பிரகாசமான நட்சத்திரங்களுக்கு அருகில் அவை இருக்கக்கூடும்; கோடிக்கணக்கான கிலோமீட்டர்கள் தூரத்தில் உள்ளன. இந்த பிரம்மாண்டமான தூரத்தைக் கிலோமீட்டரைப் பயன்படுத்தி அளக்க முடியாது. அதனால் இது ஒரு ஆண்டில் ஒளி பயணிக்கும் தூரத்தைக் கொண்டு 'ஒளி ஆண்டு' (Light year) என்ற அலகினால் அளக்கப்படுகிறது. சூரியன் தவிர நமக்கு மிக அருகில் இருக்கும் இரண்டு நட்சத்திரங்கள் ஆல்ஃபா செண்டாரி (Alpha Centauri) மற்றும் பீட்டா செண்டாரி (Beta Centauri). இவை நான்கு ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் தொலைவில் உள்ளன.
நான்கு ஒளி ஆண்டுகள் என்பது ஒரு ஒளிக்கீற்று அங்கிருந்து பூமியை அடைய நான்கு ஆண்டுகள் எடுத்துக்கொள்ளும் என்று பொருள். பிரபஞ்சத்தில் பலதரப்பட்ட நட்சத்திரக் கூட்டங்கள் உள்ளன. இவற்றில் இருந்து வரும் பலவித சிக்னல்களை வைத்தே பிரபஞ்சத்தைப் பற்றி விஞ்ஞானிகள் ஆராய்கின்றனர். குவாசார்கள் (Quasars), பல்சார்கள் (Pulsars), நியூட்ரான் நட்சத்திரங்கள், ரேடியோ நட்சத்திரங்கள், கருந்துளைகள் (Black holes) போன்றவை இவற்றில் ஒரு சில. ஆனால் இவை எவற்றிலும் பூமியைப் போல மண்ணும் நீரும் இல்லை.
பெரும்பாலான நட்சத்திரங்கள் வாயுக்கோளங்களே. சூரியனே ஒரு பெரிய வாயுக் கோளம்தான். ஹைட்ரஜனும் ஹீலியமும் உள்ள சூரியனில் ஹைட்ரஜன், ஹீலியமாக மாறிக்கொண்டேயிருக்கிறது. அப்போது உருவாகும் ஆற்றலே சூரிய ஆற்றல். சூரியனில் எப்போதும் அணு இணைவு (Nuclear fusion) நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அதனால் இது ஒரு பிரம்மாண்டமான அணு உலை. இவ்வாறு ஹைட்ரஜன் ஹீலியமாக மாறிக்கொண்டே இருந்தால் என்றேனும் ஒரு நாள் சூரியன் மறைந்து விடாதா?
ஒரு காலத்தில் சூரியன் இல்லாமல் போய்விடும். ஆனால் இதற்கான சாத்தியம் நூறு கோடி ஆண்டுகளுக்குப் பிறகே நிகழும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். அதுவரை இந்த பூமியில் நாம் சுகமாக வாழலாம். சுமார் 10,000 கோடி கிலோமீட்டர் அளவுள்ள நம் பால்வீதி நட்சத்திர மண்டலம் நிற்காமல் சுழன்று கொண்டேயிருக்கிறது. மற்ற விண்மீன் மண்டலங்களிடம் இருந்து விலகிக்கொண்டிருக்கிறது. பிரபஞ்சம் விரிவடைந்துகொண்டிருக்கிறது. பிரபஞ்சத்தின் அளவு நாம் ஊகிப்பதைக் காட்டிலும் பல மடங்கு அதிகம்.
விண்மீன் மண்டலங்களில் நட்சத்திரங்கள் பிறந்துகொண்டும் மரணமடைந்தும் கொண்டிருக்கின்றன. இதனால் அவற்றில் இருந்து கிடைக்கும் அலைகளில் வேறுபாடு உருவாகிறது. இந்திய விஞ்ஞானி டாக்டர் எஸ். சந்திரசேகர் (சுப்பிரமணியன் சந்திரசேகர்) இதில் பெரும் பங்காற்றியுள்ளார். முதன்முதலாகத் தொலைநோக்கி மூலம் உற்றுநோக்கிச் சூரிய மண்டல கோள்களைப் பற்றிக் கூறியவர் இத்தாலியரான கலிலியோ கலிலி. வியாழன், யுரேனஸ், சனி ஆகியவற்றுடன் ஒப்பிடும்போது பூமி சிறிய ஒரு கோள் என்று அவர் கூறினார்.
அவரே வான் அறிவியலுக்கு அடித்தளம் அமைத்தவர். இங்கிலாந்தில் ஒரு தேவாலயத்தில் இசைக்கருவி வாசிப்பவராக இருந்த வில்லியம் ஹெர்ஷல் 1781-ல் யுரேனஸைக் கண்டுபிடித்தார். விண்மீன்களை உற்றுநோக்குவதே அவரது முதன்மைப் பொழுதுபோக்கு. யுரேனஸின் கண்டுபிடிப்பு தற்செயலான ஒன்று. தொலைநோக்கி மூலமே அதைக் காண முடியும். இக்கண்டுபிடிப்பினால் மகிழ்ந்த அரசர் அவருக்குப் பெரியதொரு தொகையைப் பரிசாகக் கொடுத்தார்.
தொடர்ந்து அவர் முழுநேரமும் வானை ஆராயத் தொடங்கினார். முன்பின் தெரியாத ஏதோ ஒரு கோள் யுரேனஸின் மீது தாக்கம் செலுத்துகிறது என்பதை விஞ்ஞானிகள் ஊகித்தனர். இது பற்றி மேலும் ஆராய்ந்தபோதே நெப்டியூன் கண்டுபிடிக்கப்பட்டது. 1846-ல் அர்பன் லேவேரியர் (Urbain Le Verrier) என்ற பிரெஞ்சு விஞ்ஞானி புதியதொரு கோளைக் கணக்கிட்டார். தொடர்ந்து நெப்டியூன் கண்டுபிடிக்கப்பட்டது. பெர்லின் உற்றுநோக்கல் மையத்தில் யோகான் காலே (Johann Galle) மற்றும் ஹெய்ன்ரிச் டாரஸ்ட் (Heinrich d'Arrest) ஆகியோர் நெப்டியூனைக் கண்டறிந்தனர்.
வான் அறிவியலின் வரலாற்றைப் பார்த்தால் கி.மு 624-ல் கிரேக்கப் பகுதியில் ஒன்றில் பிறந்த தாலீஸில் (Thales) இருந்து தொடங்கி கி.பி 180-ல் இறந்த தாலமியுடன் (Ptolemy) எட்டு நூற்றாண்டு காலம் நீடித்த புராதன கிரேக்க வானியலின் பொற்காலம் முடிவிற்குக் வந்தது. கி.மு 330-ல் பிறந்த ஆர்க்கிமிடிஸ் உட்பட்டவர்கள் சூரியன் பூமியைச் சுற்றுகிறது என்று நம்பினர். அரிஸ்டார்க்கஸ் (Aristarchus) என்ற கிரேக்க விஞ்ஞானி பூமியே சூரியனைச் சுற்றுகிறது என்று சொன்னார். ஆனால் அதை எவரும் நம்பவில்லை. பல நூறாண்டுகளுக்குப் பிறகே அறிவியல் உலகம் இந்த உண்மையை ஏற்றுக்கொண்டது.
சந்திரனையும் சூரியனையும் புரிந்துகொண்டு அவற்றின் அன்றாடப் பயணப் பாதையைக் கொண்டு பொழுது, நாள், மாதம், ஆண்டுகளைக் கணக்கிட்டனர். எகிப்தியர்கள் சிரியஸ் (Sirius) விண்மீனின் உதயத்தை வைத்தே நைல் நதியில் வெள்ளப்பெருக்கு எப்போது ஏற்படும் என்பதை அறிந்தனர். பூமி அதன் அச்சில் சுழல்வதாலேயே இரவு பகல் ஏற்படுகிறது என்று ஆரியபட்டர் கூறினார். ஆனால் இந்தச் சிந்தனைக்கு அன்று போதிய ஆதரவு கிடைக்கவில்லை. அன்று புகழ்பெற்றிருந்த வானியலாளர்கள் அவருடைய கொள்கையை ஏற்க மறுத்தனர்.
ஒரு வால் நட்சத்திரத்தின், ஒரு சந்திர கிரகணத்தின், ஒரு சூரிய கிரகணத்தின் வரவு அன்று மனிதரிடையில் பெரும் பரபரப்பையும் பீதியையும் ஏற்படுத்தியது. 1986-ல் பூமிக்கு வருகை தந்த ஹேலி வால் நட்சத்திரத்தைப் பார்த்த நினைவு இன்றும் நம்மில் பலர் மனதில் பசுமையாக இருக்கும். வால் நட்சத்திரங்களின் வரவு எப்போதும் அதிசயங்கள் நிறைந்த காட்சிகளைத் தந்து செல்கின்றன. ஹேலி பூமிக்கு வந்த காலம் உற்றுநோக்குபவர்களின் திருவிழாக் காலம்.
கேரளாவில் இந்த வால் நட்சத்திரத்தை வரவேற்று எல்லா இடங்களிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. எட்மண்ட் ஹேலி 1682-ல் ஒரு வால் நட்சத்திரத்தின் பயணப் பாதையை ஆராய்ந்தபோது அது சூரியனைச் சுற்றுவதை அறிந்தார். 1758-ல் அது மீண்டும் பூமிக்கு வரும் என்று ஊகித்தார். பிறகு அது 1835, 1910, 1986 ஆகிய ஆண்டுகளில் மீண்டும் பூமிக்கு வந்தது. இனி 2062-ல் அது பூமியைக் காண மறுபடியும் வருகை தரும்.
ரேடியோ வானியல், புறஊதாக் கதிர் வானியல், எக்ஸ்-கதிர் வானியல், ஆப்டிகல் வானியல், காமா வானியல் போன்றவை இன்று உருவாகியுள்ள சில பிரிவுகள். உலகின் பல பகுதிகளிலும் நிறுவப்பட்டுள்ள பெரிய தொலைநோக்கிகள் வாயு மண்டலத்தின் தடைகள் இல்லாமல், பிரபஞ்சத்தில் இருந்து வரும் சிக்னல்களைக் கண்டறிய உதவுகின்றன. 1990-ல் நிறுவப்பட்ட ஹப்பிள் (Hubble) தொலைநோக்கி இதில் முக்கியமானது.
அமெரிக்காவின் நாசா, ஐரோப்பிய விண்வெளி முகமை ஆகியவை இணைந்து இத்தொலைநோக்கியை ஏவின. ஒரு செயற்கைக்கோள் போல இது விண்வெளியைச் சுற்றிக் கொண்டிருக்கிறது. தொடர்ந்து 1999-ல் சந்திரா மற்றும் 2009-ல் கெப்லர் தொலைநோக்கிகள் விண்வெளிக்கு அனுப்பப்பட்டன. இந்திய விஞ்ஞானி சுப்பிரமணியன் சந்திரசேகரின் பெயரில் 'சந்திரா' தொலைநோக்கி ஏவப்பட்டது. 2021-ல் ஜேம்ஸ் வெப் (James Webb) தொலைநோக்கி அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய முகமையால் ஏவப்பட்டது.
2023-ல் யூக்ளிட் (Euclid) தொலைநோக்கி ஐரோப்பிய முகமையால் அனுப்பப்பட்டது. இத்தொலைநோக்கிகளில் இருந்து புதிய அறிவுகள் கிடைத்துக் கொண்டிருக்கின்றன. 1972-ல் அனுப்பப்பட்ட பயோனியர் (Pioneer) விண்கலம் வியாழன், சனியை அருகில் சென்று ஆராய்ந்த பிறகு இப்போது சூரிய மண்டலத்திற்கும் அப்பால் பயணம் செய்து கொண்டிருக்கிறது. 2003-ல் கூட இதில் இருந்து சிக்னல்கள் கிடைத்தன.
வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் கோள்களை ஆராய 1977-ல் வாயேஜர் 1 மற்றும் 2 (Voyager 1 & 2) விண்கலங்கள் ஏவப்பட்டன. இவற்றில் வாயேஜர் 2 யுரேனஸ் மற்றும் நெப்டியூனை ஆராய்ந்தது. இரண்டு விண்கலங்களும் முடிவில்லாத விண்வெளிப் பயணத்தில் ஈடுபட்டுள்ளன. பூமியில் இருந்து எந்த உயிரினம் இந்த விண்கலனை அனுப்பியது என்பதை அடையாளப்படுத்த படங்கள், அடையாளங்கள் வைத்து அனுப்பப்பட்டுள்ளன. இசை, பல மொழிகளில் வாழ்த்துகள், இயற்கையின் ஒலிகள், மனிதர் மற்றும் பூமியின் படங்கள் அதில் பதிக்கப்பட்டுள்ளன.
ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகும் இந்த வாகனங்களில் இருந்து சிக்னல்கள் மெல்லிய அளவில் கிடைக்கின்றன. எல்லையில்லாத தொலைவிற்குச் சென்று கொண்டிருக்கும் இவற்றின் பயணங்கள் வெற்றி பெற வாழ்த்துவோம். விண்கற்கள், எரிகற்கள் ஆகியவை வானில் நாம் காணும் வேறு சில அதிசயக் காட்சிகள். நட்சத்திரங்கள் வழிமாறி பூமியின் மீது வந்து விழுகின்றன என்று முன்பு நம்பப்பட்டது.
உண்மையில் இவை பூமியின் வளிமண்டலத்திற்கு வழிமாறி வந்துவிழும் பெரிய பாறைகள் மற்றும் வால் நட்சத்திரங்களின் மிச்சமீதிகளே. அதிவேகத்தில் வரும் இவை பூமியின் வளிமண்டலத்தின் வழியாகப் பயணிக்கும்போது தீ பிடித்து ஆவியாகிப்போகின்றன. அபூர்வமாக அவற்றில் சில பகுதிகள் பூமியில் வந்து விழுவதும் உண்டு. இவ்வாறு வந்து விழுந்தவற்றில் சில பல நாடுகளின் அருங்காட்சியகங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. 1947-ல் சைபீரியாவில் விழுந்த விண்கற்களில் 23 டன் எடையுள்ள ஒரு விண்கல்லின் பகுதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இவை அனைத்தும் பாறைகளே. இவற்றில் இரும்பு மற்றும் நிக்கல் அதிகம் உள்ளது. ஆகாயமே தேடலில் அடங்காத ஆர்வம் உடைய மனிதனை ஆதிகாலம் முதல் அற்புதப்படுத்தி வந்த ஒன்று. நட்சத்திரங்களை உற்றுநோக்குவது பிரபஞ்சத் தேடலின் முதல் படி. ஆகாயத்தில் ஒளிவீசும் பொருட்களைச் சிதறச் செய்தது போல காட்சி தருபவையே கோடிக்கணக்கான விண்மீன்கள். அவை ஒவ்வொரு நொடியிலும் மின்மினிப் பூச்சிகள் போல ஒளிவீசிக்கொண்டிருக்கின்றன.
ஐரோப்பியர்களே 17-ம் நூற்றாண்டில் தொலைநோக்கிகளை முதலில் கண்டுபிடித்தனர். ஜெய்பூர் மகாராஜா ஜெய் சிங் என்பவரே வான் உற்றுநோக்கலுக்காக முதலில் ஐரோப்பாவில் இருந்து இந்தியாவிற்குத் தொலைநோக்கிகளை இறக்குமதி செய்தார். உற்றுநோக்கும் மையங்களை டெல்லி உட்பட பல இடங்களில் நிறுவினார். ஐரோப்பாவில் இருந்து வந்த கருவிகளை வைத்தே டெல்லியில் ஜந்தர் மந்திர் உருவாக்கப்பட்டது. இந்தியாவின் பல நகரங்களிலும் இன்று கோளரங்கங்கள், அருங்காட்சியகங்கள், விண்வெளி காட்சிக்கூடங்கள் உள்ளன. இவற்றிற்குச் சென்று பார்த்தால் பல அறிவுகளை நாம் பெறலாம் என்பது உறுதி.
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- அ.தமிழ்ச்செல்வன்
- பிரிவு: விண்வெளி
“America Is Finally Taking Extraterrestrials Seriously” — அமெரிக்காவின் புகழ்பெற்ற TIME இதழில் 2026 ஆகஸ்ட் 6 அன்று வெளியான இந்தத் தலைப்பு, வேற்றுகிரகவாசிகள் பற்றிய ஆர்வம் கொண்டவர்களின் கவனத்தை ஈர்க்கக் கூடியது.
என்னைப் போன்ற “வேற்றுகிரகவாசிகள் இருக்கலாம்” என்று நம்புகிறவர்களுக்கு இது மகிழ்ச்சியான செய்தியாக இருக்கலாம். ஆனால் அமெரிக்கா வேற்றுகிரகவாசிகளைக் கண்டுபிடித்துவிட்டது என்பதல்ல இந்தச் செய்தியின் பொருள்.
அப்படியானால் உண்மையில் என்ன நடக்கிறது?
அடையாளம் காணப்படாத வான்வெளி நிகழ்வுகள் குறித்து முன்பைவிட அதிகமான தரவுகளைச் சேகரித்து, அவற்றை அறிவியல் முறையிலும், தேசியப் பாதுகாப்பு கோணத்திலும் ஆராய வேண்டும் என்ற எண்ணம் அமெரிக்காவில் வலுப்பெற்று வருகிறது.
முன்பு பொதுவாக UFO (Unidentified Flying Object) என்று அழைக்கப்பட்டவற்றை, தற்போது UAP (Unidentified Anomalous Phenomena) — அடையாளம் காணப்படாத அசாதாரண நிகழ்வுகள் — என்று குறிப்பிடுகின்றனர்.
ஆனால் இங்கே ஒரு முக்கியமான கேள்வி இருக்கிறது.
இருந்தால் என்ன? இல்லாவிட்டால் என்ன?
வேற்றுகிரகவாசிகள் இருந்தால் என்ன? இல்லாவிட்டால் என்ன?
இந்தக் கேள்விக்கான பதில், வேற்றுகிரகவாசிகளைத் தேடுவதைக் கடந்தும் செல்கிறது.
நாம் மட்டும் தனியாக இருக்கிறோமா?
நீண்ட நெடுங்காலமாகவே வானியல் விஞ்ஞானிகளைத் தொடர்ந்து வரும் கேள்வி:
இந்தப் பிரபஞ்சத்தில் நாம் மட்டும்தானா?
நாம் வாழும் பூமி, அளவிட முடியாத அளவுக்கு விரிந்துள்ள பிரபஞ்சத்தில் ஒரு சிறிய புள்ளி மட்டுமே. நம்மைச் சுற்றி கோடிக்கணக்கான நட்சத்திரங்கள்; அவற்றைச் சுற்றி எண்ணற்ற கோள்கள். அப்படியிருக்கும்போது, இந்தப் பிரபஞ்சத்தில் சிந்திக்கக்கூடிய உயிர்கள் பூமியில் மட்டுமே இருக்கின்றனவா?
நமக்குத் துணையாக வேறு அறிவார்ந்த உயிர்கள் எங்காவது இருக்கிறார்களா? இந்த ஆதங்கம்தான் வேற்றுகிரகவாசிகள் தேடலின் அடிப்படைக் கேள்வி.
மனித இனத்தின் எதிர்காலம் என்ன?
பூமிக்கு வயதாகிக்கொண்டே இருக்கிறது. அதைவிடக் கவலைக்குரியது, நாம் வாழும் இந்தப் பூமியையே மாசு, கழிவு, அளவுக்கு மீறிய வளச் சுரண்டல் ஆகியவற்றால் சீரழித்து வருகிறோம். எதிர்காலத்தில் மனித இனம் வேறு ஒரு உலகில் வாழ வேண்டிய சூழ்நிலை உருவாகுமா?
அதனால்தான் செவ்வாய், சனியின் டைட்டன், வியாழனின் யூரோப்பா போன்ற உலகங்கள் குறித்து விஞ்ஞானிகள் ஆராய்கின்றனர். ஆனால் ஒரு முக்கியமான வேறுபாடு இருக்கிறது.
மனிதர்கள் வாழத் தகுந்த உலகைத் தேடுவது வேறு; வேற்றுகிரகவாசிகளைத் தேடுவது வேறு.
ஆனால் இரண்டு தேடல்களும் ஒரே பெரிய கேள்விக்குள் வந்து சேர்கின்றன:
பூமிக்கு வெளியே உயிர் அல்லது அறிவார்ந்த வாழ்க்கை இருக்கிறதா?
வேற்றுகிரகவாசிகளைத் தேடுவது மட்டுமல்ல...
வேற்றுகிரகவாசிகள் குறித்த தேடுதல், “அவர்கள் இருக்கிறார்களா?” என்ற கேள்வியோடு முடிந்துவிடுவதில்லை.
“வேறு எங்காவது அறிவார்ந்த வாழ்க்கை இருக்கிறதா?”
“அந்த வாழ்க்கையின் தொழில்நுட்பச் சுவடுகளை நாம் கண்டுபிடிக்க முடியுமா?”
“நமது வான்வெளியில் இதுவரை அடையாளம் காண முடியாத நிகழ்வுகள் என்ன?”
என்ற கேள்விகளும் இணைந்துள்ளன. இதனால்தான் SETI (Search for Extraterrestrial Intelligence) போன்ற முயற்சிகள் வேறு நட்சத்திரங்களில் இருந்து வரும் சாத்தியமான தொழில்நுட்பச் சமிக்ஞைகளைத் தேடுகின்றன. அதே நேரத்தில் பூமியின் வான்வெளியில் தோன்றும் UAP நிகழ்வுகளும் ஆய்வு செய்யப்படுகின்றன.
சில சுவாரஸ்யமான தடயங்கள்
வேற்றுகிரகவாசிகள் இருப்பதற்கான நேரடி ஆதாரம் இதுவரை கிடைக்கவில்லை. ஆனால் சில சுவாரஸ்யமான அறிவியல் கருத்துகளும் மர்மமான சம்பவங்களும் தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வருகின்றன.
டிரேக் சமன்பாடு
அமெரிக்க வானியலாளர் ஃபிராங்க் டிரேக் 1961-இல் உருவாக்கிய Drake Equation, நமது பால்வீதியில் தொடர்புகொள்ளக்கூடிய அறிவார்ந்த நாகரிகங்களின் எண்ணிக்கையை மதிப்பிடுவதற்கான ஒரு முயற்சி.
நட்சத்திரங்கள் எத்தனை, அவற்றில் எத்தனை நட்சத்திரங்களுக்குக் கோள்கள் உள்ளன, அந்தக் கோள்களில் உயிர் தோன்றுவதற்கான வாய்ப்பு என்ன, உயிரிலிருந்து அறிவார்ந்த வாழ்க்கை உருவாகும் வாய்ப்பு என்ன போன்ற பல காரணிகள் இதில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன.
ஸ்டீபன் ஹாக்கிங்கின் எச்சரிக்கை
புகழ்பெற்ற இயற்பியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங், வேற்றுகிரக நாகரிகங்கள் இருந்தால் அவற்றுடன் தொடர்புகொள்வதில் மனிதர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கூறினார்.
அதாவது, வேற்றுகிரகவாசிகளைத் தேடுவது ஒரு சுவாரஸ்யமான அறிவியல் முயற்சி என்றாலும், அவர்கள் நம்மைவிட மேம்பட்ட நாகரிகமாக இருந்தால் அதன் விளைவுகள் என்னவாக இருக்கும் என்பதையும் சிந்திக்க வேண்டும்.
ஜில் டார்டரின் “கடல்–கோப்பை” ஒப்பீடு
வேற்றுகிரக நாகரிகங்களைத் தேடும் முயற்சியில் முன்னணி விஞ்ஞானிகளில் ஒருவரான ஜில் டார்டர் (Jill Tarter) ஒரு அழகான ஒப்பீட்டை முன்வைத்துள்ளார். பிரபஞ்சத்தில் நாம் இதுவரை தேடிய பகுதி, மிகப்பெரிய கடலில் இருந்து ஒரு சிறிய கண்ணாடிக் கோப்பை அளவு தண்ணீரை எடுத்து அதில் மீன் இல்லை என்று பார்த்துவிட்டு, “கடலில் மீன்களே இல்லை” என்று முடிவு செய்வதைப் போன்றது.
அதாவது, நாம் தேடியது பிரபஞ்சத்தின் மிகச் சிறிய பகுதி மட்டுமே.
அதனால், “இதுவரை எதுவும் கிடைக்கவில்லை” என்பது “எங்குமே எதுவும் இல்லை” என்பதற்கான நிரூபணம் அல்ல.
சில மர்மமான சம்பவங்கள்
1977 — “Wow!” Signal
1977-இல் அமெரிக்காவின் ஓஹியோவில் செயல்பட்ட Big Ear ரேடியோ தொலைநோக்கி, வானிலிருந்து வந்த ஒரு வலுவான, குறுகிய கால ரேடியோ சமிக்ஞையைப் பதிவு செய்தது. அதன் பதிவைக் கண்ட வானியலாளர் ஜெர்ரி எஹ்மான் அருகில் “Wow!” என்று எழுதினார். அதுவே பின்னர் “Wow! Signal” என்று புகழ்பெற்றது. அந்தச் சமிக்ஞை சுவாரஸ்யமானதாக இருந்தாலும், அது வேற்றுகிரக நாகரிகத்திலிருந்து வந்தது என்று நிரூபிக்கப்படவில்லை. அதே வகையான சமிக்ஞையும் மீண்டும் உறுதியாகப் பெறப்படவில்லை.
2004 — “Tic Tac” சம்பவம்
2004-இல் அமெரிக்கக் கடற்படை விமானிகள் வானில் வெள்ளை நிற “Tic Tac” வடிவத்தை ஒத்த ஒரு மர்மப் பொருளைக் கண்டதாகத் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் ராணுவ விமானிகள், விமான உணர்கருவிகள் மற்றும் பின்னர் வெளியான வீடியோ பதிவுகள் காரணமாகப் பெரும் கவனத்தைப் பெற்றது. ஆனால் இன்றுவரை அந்தப் பொருள் வேற்றுகிரகவாசிகளின் விண்கலம் என்று நிரூபிக்கப்படவில்லை.
சென்னை சம்பவம்
2023 ஜூலை 26 அன்று சென்னை அருகிலுள்ள முட்டுக்காடு கடல் பகுதியில் ஓய்வுபெற்ற சிபிசிஐடி டிஜிபி பிரதீப் வி. பிலிப், வானில் நான்கு ஒளிரும் மர்மப் பொருட்களைக் கண்டதாகவும், அவற்றைப் புகைப்படம் எடுத்ததாகவும் தெரிவித்தார். அவை சுமார் 20 முதல் 25 விநாடிகள் மட்டுமே தென்பட்டதாகக் கூறப்பட்டது. அவை பறக்கும் தட்டுகளா, ட்ரோன்களா அல்லது வேறு ஏதேனும் வானியல் நிகழ்வா என்ற விவாதம் எழுந்தது. ஆனால் அவை வேற்றுகிரகவாசிகளின் விண்கலங்கள் என்பதற்கான அறிவியல் ஆதாரம் இல்லை.
இம்பால் சம்பவம்
2023 நவம்பர் 19 அன்று மணிப்பூர் தலைநகர் இம்பால் விமான நிலையத்தின் வானில் அடையாளம் காணப்படாத வெள்ளை நிறப் பொருள் ஒன்று தென்பட்டதால் விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் கிடைத்ததும் இந்திய விமானப்படை இரண்டு Rafale போர் விமானங்களைத் தேட அனுப்பியது. ஆனால் அந்தப் பொருளைக் கண்டறிய முடியவில்லை. பின்னர் வான்வெளி பாதுகாப்பானது என உறுதி செய்யப்பட்டதும் விமானப் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது. அந்தப் பொருள் என்ன என்பது அதிகாரப்பூர்வமாகத் தெரியவில்லை. அது வேற்றுகிரகவாசிகளின் விண்கலம் என்பதற்கும் ஆதாரம் இல்லை.
பழங்காலத்திலிருந்தே வேற்றுகிரகவாசிகளா?
இன்றைய UAP சம்பவங்கள் ஒருபுறம் இருக்கட்டும். பல ஆயிரம் ஆண்டுகளாகவே மனிதர்களுக்கும் வேற்றுகிரகவாசிகளுக்கும் தொடர்பு இருந்ததாகக் கூறப்படும் கதைகள் உலகின் பல பகுதிகளில் உள்ளன. எகிப்திய பிரமிடுகள், துட்டன்காமனின் கத்தி, இந்தியாவின் பஸ்தார் பகுதியில் காணப்படும் பாறை ஓவியங்கள் போன்ற பல விஷயங்களும் வேற்றுகிரகவாசிகளுடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ளன.
ஆனால் இவற்றில் பெரும்பாலான விளக்கங்களுக்கு நேரடி அறிவியல் ஆதாரம் இல்லை. எனவே மர்மம் இருப்பது உண்மை என்றாலும், மர்மத்துக்கு நாம் விரும்பிய விளக்கத்தை உடனடியாகக் கொடுப்பது அறிவியல் அல்ல.
வேற்றுகிரகவாசிகள் இல்லை என்று கருதுவதற்கான காரணங்கள்
மறுபக்கத்தையும் பார்க்க வேண்டும். விஞ்ஞானிகள் “வேற்றுகிரகவாசிகள் இல்லை” என்று நிரூபித்துவிட்டதாகக் கூறவில்லை. அவர்கள் கூறுவது:
“இதுவரை நம்பகமான, மீண்டும் சரிபார்க்கக்கூடிய அறிவியல் ஆதாரம் கிடைக்கவில்லை.” என்பதுதான். மற்றொரு கோளில் உயிரினம் அல்லது அறிவார்ந்த நாகரிகம் இருப்பதற்கான உறுதியான ஆதாரம் இதுவரை கிடைக்கவில்லை. பல ஆண்டுகளாக SETI போன்ற முயற்சிகள் ரேடியோ அலைகள் உள்ளிட்ட தொழில்நுட்பச் சுவடுகளைத் தேடியும், வேற்றுகிரக நாகரிகத்திலிருந்து வந்தது என்று உறுதிப்படுத்தக்கூடிய செய்தி கிடைக்கவில்லை.
இதனுடன் தொடர்புடைய முக்கியமான கேள்விதான் Fermi Paradox — ஃபெர்மி முரண்பாடு.
பிரபஞ்சத்தில் அறிவார்ந்த நாகரிகங்கள் ஏராளமாக இருந்தால், அவற்றில் சில நமது ஆகாயகங்கையிலும் இருந்திருக்க வேண்டாமா? அவற்றின் தடயங்கள் எங்கே? இதுவரை தெளிவான பதில் இல்லை. மேலும், பூமியில் உயிர் தோன்றியுள்ளது என்பதால், பொருத்தமான சூழல் இருக்கும் ஒவ்வொரு கோளிலும் உயிர் தோன்றும் என்று கூற முடியாது. அதைவிட, நுண்ணுயிரிலிருந்து அறிவார்ந்த, தொழில்நுட்ப நாகரிகம் உருவாகுவது இன்னும் மிகப்பெரிய கேள்வி.
எனவே இன்றைய அறிவியல் நிலை மிகவும் எளிமையானது:
வேற்றுகிரகவாசிகள் இருக்கிறார்கள் என்று நிரூபிக்கப்படவில்லை.
அவர்கள் இல்லை என்றும் நிரூபிக்கப்படவில்லை.
இந்த நிலையில்தான் அமெரிக்காவின் புதிய அணுகுமுறை முக்கியத்துவம் பெறுகிறது.
2026-இல் TIME சொல்லும் புதிய செய்தி
இந்தப் பின்னணியில்தான் 2026 ஆகஸ்ட் 6-ஆம் தேதி TIME இதழ், “America Is Finally Taking Extraterrestrials Seriously” என்ற தலைப்பில் கட்டுரையை வெளியிட்டுள்ளது. இதன் செய்தி “அமெரிக்கா வேற்றுகிரகவாசிகளைக் கண்டுபிடித்துவிட்டது” என்பதல்ல.
பல ஆண்டுகளாகக் கேலி, கற்பனை, சதிக்கோட்பாடுகள் ஆகியவற்றுடன் இணைத்துப் பார்க்கப்பட்ட UFO சம்பவங்களை, இப்போது தேசியப் பாதுகாப்பு, அறிவியல் ஆய்வு, தொழில்நுட்பம், தரவுகள் மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகிய கோணங்களில் தீவிரமாக ஆராய வேண்டிய விஷயமாக அமெரிக்கா பார்க்கத் தொடங்கியுள்ளது என்பதுதான் இந்தக் கட்டுரையின் முக்கியச் செய்தி.
இதனால் கேள்வியும் சற்று மாறுகிறது.
“வேற்றுகிரகவாசிகள் இருக்கிறார்களா?” என்பது மட்டுமல்ல, “வானில் நாம் காணும் இந்த அடையாளம் காணப்படாத நிகழ்வுகள் உண்மையில் என்ன?” என்பதும் முக்கியமான அறிவியல் கேள்வியாகிறது. TIME கட்டுரையின் ஆச்சரியம் இதுதான்:
அமெரிக்கா வேற்றுகிரகவாசிகளைக் கண்டுபிடித்துவிட்டதாக TIME சொல்லவில்லை. ஆனால், “அவர்கள் இருக்கிறார்களா?” என்ற கேள்வியை இனி கேலியாக ஒதுக்காமல், ஆதாரங்களுடனும் அறிவியல் கருவிகளுடனும் ஆராய வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதைத்தான் அது சுட்டிக்காட்டுகிறது.
நான் வேற்றுகிரகவாசிகளைச் சந்திப்பேன்...
அமெரிக்காவின் தற்போதைய முயற்சிகள், வேற்றுகிரகவாசிகள் இருக்கிறார்களா இல்லையா என்ற கேள்விக்கு ஒருநாள் தெளிவான விடையைத் தரும் என்று நம்புகிறேன். அவர்கள் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி; இந்த விவாதம் மனிதர்களுக்கு ஒரு முக்கியமான உண்மையை உணர்த்த வேண்டும்.
இந்தப் பூமியின் மதிப்பை.
“அரிது... அரிது... மானிடராய்ப் பிறத்தல் அரிது” என்கிறார் அவ்வையார்.
அதேபோல நான் சொல்வேன்:
“அரிது... அரிது... பூமியைப் போல இன்னொரு கிரகம் இருப்பது அரிது.”
வேறு எங்காவது உயிர் இருக்கலாம். ஒருநாள் அவர்களை நாம் சந்திக்கவும் கூடும். மனித பரிணாமம் தொடர்ந்து செல்ல ஒருநாள் வேறு ஒரு பூமி நமக்குத் தேவைப்படலாம். அதேபோல, பிரபஞ்சத்தின் இன்னொரு மூலையில் இருக்கும் உயிர்களுடன் நட்பு பாராட்டும் நாளும் வரலாம்.
அந்த நாளை எதிர்பார்த்தபடியே, இன்றைக்கு நமக்குக் கிடைத்திருக்கும் இந்த ஒரே பூமியைப் பாதுகாப்போம்.
எனக்கு ஒரு நம்பிக்கை இருக்கிறது.
நான் வேற்றுகிரகவாசிகளைச் சந்திப்பேன் என்று.
உங்களுக்கு அந்த நம்பிக்கை இருக்கிறதா, நண்பர்களே?
- அ.தமிழ்ச்செல்வன்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: விண்வெளி
பிரதிபலிக்கும் தன்மையுடைய செயற்கைக்கோள் கண்ணாடிகள் தூக்கம் மற்றும் சூழலைப் பாதிக்கின்றன. இந்தக் கண்ணாடிகளைக் கொண்ட செயற்கைக் கோள்கள் மற்றும் தாழ் புவிச் சுற்றுப்பாதைகளில் ஒரு மில்லியன் வரை செயற்கைக் கோள்களைச் செலுத்துவதற்கான திட்டம், மனிதனின் ஆரோக்கியம் மற்றும் சூழலுக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று தூக்கம் மற்றும் உயிர்க்கடிகாரத்தின் செயல்பாடு பற்றி ஆராயும் முன்னணி நிபுணர்கள் கூறுகின்றனர்.
செயற்கைக்கோள் பிரதிபலிப்பு கண்ணாடிகள்
- பன்னாட்டு அறிவியல் சங்கங்களின் கடிதம்: ஐரோப்பிய சீரிசைகளுக்கான உயிரியல் சங்கம் (European Biological Rhythms Society - EBRS), சீரிசைகளுக்கான உயிரியல் ஆய்வு சங்கம் (Society for Research on Biological Rhythms), ஜப்பானிய கால உயிரியல் சங்கம் (Japanese Society for Chronobiology), கனடா கால உயிரியல் சங்கம் (Canadian Society for Chronobiology) ஆகிய நான்கு பன்னாட்டு அறிவியல் சங்கங்களின் தலைவர்கள் யு.எஸ். ஃபெடரல் தகவல் தொடர்பு கமிஷனுக்கு (Federal Communications Commission - FCC) இது பற்றிக் கடிதம் எழுதியுள்ளனர்.
- கால உயிரியல் ஆய்வு: கால உயிரியல் ஆய்வு என்பது விழிப்பு மற்றும் தூக்கத்தின் சுழற்சி, சீரிசைகள் பற்றி ஆராயும் அறிவியல் பிரிவாகும். முப்பதிற்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 2,500 விஞ்ஞானிகள் இந்தச் சங்கங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். அவர்கள் தங்கள் கவலையைக் கடிதம் மூலம் வெளியிட்டுள்ளனர்.
- ஒழுங்குமுறை அமைப்பின் முன் உள்ள திட்டங்கள்: ஒழுங்குமுறை அமைப்பிற்கு முன், பிரதிபலிக்கும் கண்ணாடிகளுடன் உள்ள செயற்கைக் கோள்களைப் பயன்படுத்தி பூமியின் பகுதிகளை இரவில் ஒளியூட்டத் திட்டமிட்டிருக்கும் 'ரிஃப்லெக்ட் ஆர்பிட்டல்' (Reflect Orbital) என்ற தொழில்முனைவோர் நிறுவனத்தின் முன்மொழிதல் மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) நிறுவனத்தின் எண்ணற்ற செயற்கைக்கோள்களைப் புவித் தாழ் சுற்றுவட்டப் பாதையில் அனுப்ப அனுமதி கோரும் மனுவும் உள்ள நிலையில் இந்தக் கடிதம் எழுதப்பட்டுள்ளது.
- உயிர்க்கடிகாரம் பாதிப்பு: எண்ணற்ற செயற்கைக்கோள் தொடர்களை விண்வெளிக்கு அனுப்புவதால், புவி முழுவதும் இயற்கையான இரவு நேரச் சூழலில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்படும் என்று இந்தச் சங்கங்களின் தலைவர்கள் கூறுகின்றனர். ஒளி-இருள் சுழற்சியை மாற்றினால் மனிதர்கள் மற்றும் விலங்குகளில் விழிப்பு, தூக்கம், ஹார்மோன்களின் சுரப்பு ஆகியவற்றை ஒழுங்குபடுத்தும் உயிர்க்கடிகாரத்தின் செயல்பாடுகள் பாதிக்கப்படும்.
- சூழலியல் மறுபரிசீலனை தேவை: மேலும், அது இரவு நேரத்தில் இரை தேடும் விலங்குகளின் வலசை, தாவரங்களின் பருவகாலச் சுழற்சிகள் மற்றும் கடல்சார் உணவு வலையில் தாவர மிதவைகளின் சீரிசைகளை மாற்றியமைக்கும். அதனால் இது குறித்த முழுமையான சூழலியல் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என்றும், செயற்கைக்கோள் கண்ணாடிகளின் பிரதிபலிப்பு மற்றும் அதிகரிக்கும் இரவு நேரப் பிரகாசத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். “ஒப்புதல் வழங்கப்படும் முன்பு தயவுசெய்து இது பற்றிச் சிந்திக்க வேண்டும்.”
அறிவியலின் புனைக்கதை இல்லை
- தாவரங்களுக்கும் இரவு தேவை: “உலக உணவுப் பாதுகாப்பையும் இது பாதிக்கும். தாவரங்களுக்கு இரவு நேர இருள் அவசியம். நம்மால் இதைத் தவிர்க்க முடியாது” என்று ஐரோப்பிய சீரிசைகளுக்கான உயிரியல் சங்கத்தின் (EBRS) தலைவரும் லெஸ்டர் (Leicester) பல்கலைக்கழகத்தின் மரபணுவியல் விஞ்ஞானியுமான பேராசிரியர் சாரலம்போஸ் கைரியாக்கு (Prof. Charalambos Kyriacou) கூறுகிறார். ஒளியின் பகல்-இரவு மாற்றம் என்பது பூமியில் மிகப் பழமையான வாழ்க்கைக்கோட்பாடு.
- ரிஃப்லெக்ட் ஆர்பிட்டல் திட்டம்: ரிஃப்லெக்ட் ஆர்பிட்டல், பூமியில் 5 முதல் 6 கிலோமீட்டர் அகலத்திற்குச் சூரிய ஒளியைப் பிரதிபலிக்கும் கண்ணாடிகளைச் செயற்கைக்கோள்களில் பொருத்தத் திட்டமிட்டுள்ளது. இந்தக் கண்ணாடிகளின் பிரகாசத்தை முழு நிலவு முதல் நண்பகல் வரை இருக்குமாறு மாற்றியமைக்கலாம். இதன் மூலம் மாலை நேரம் வரை சூரிய ஆற்றலை நீட்டிக்கலாம். கட்டுமானத் திட்டங்கள், பேரிடர் செயல்பாடுகள், வேளாண்மை போன்றவற்றிற்கு இதன் மூலம் ஒளி வழங்க முடியும்.
- ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் திட்டம்: உள்ளூர் கவுன்சில்களால் அங்கீகரிக்கப்பட்டுள்ள இடங்களுக்கு மட்டும் ஒளியூட்டல் செய்யப்படும் என்று அந்நிறுவனம் கூறியுள்ளது. சுற்றுப்பாதையில் செயற்கை நுண்ணறிவு அமைப்புகளின் கணினி வலைப்பின்னல்களுக்குப் பயன்படும் ராட்சச சூரிய ஆற்றலை உற்பத்தி செய்ய ஸ்பேஸ்எக்ஸ் ஒரு மில்லியன் செயற்கைக்கோள்கள் வரை ஏவத் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் தரைப்பகுதி தரவு மையங்களுக்கான ஆற்றல் சேமிப்பு மற்றும் குளிரூட்டும் தேவைகளைக் குறைக்க முடியும் என்று ஸ்பேஸ்எக்ஸ் கூறுகிறது.
- சாத்தியமான உண்மைகள்: “செயற்கைக்கோள் கண்ணாடிகள் சூரிய ஒளியைப் பூமியில் பாய்ச்சுதல் அல்லது பூமியில் உள்ள தரவு மையங்களின் பயன்பாட்டிற்காக ஒரு மில்லியன் வரை மிகப்பெரிய செயற்கைக்கோள் தொடர்களை ஏவுதல் போன்ற திட்டங்கள் அறிவியல் புனைக்கதைகள் போலத் தோன்றலாம். ஆனால் இவை அனைத்தும் நடைமுறையில் சாத்தியமான உண்மைகள்.
- டார்க்ஸ்கை நிறுவனத்தின் எச்சரிக்கை: இப்போது சுற்றுப்பாதைகளில் சுற்றிவரும் செயற்கைக்கோள்களே இரவு நேரப் பிரகாசத்தையும் வானத்தின் இயல்பான இருளையும் சுமார் 10% அளவிற்கு ஏற்கனவே குறைத்துவிட்டன என்று ஆய்வுகள் கூறுகின்றன” என்று டார்க்ஸ்கை இன்டர்நேஷனல் (DarkSky International) என்ற இரவு வானின் இயற்கையான இருளைப் பாதுகாக்கச் செயல்படும் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் தலைமை நிர்வாகியும் செயல் இயக்குநருமான ரஸ்கின் ஹார்ட்லி (Ruskin Hartley) கூறுகிறார்.
தொலைநோக்கிப் படங்களில் வண்ணக்கோடுகள்
- இரவு வானில் ஏற்படும் பாதிப்புகள்: “செயற்கைக் கோள்கள் இரவு வானத்தை இரண்டு முக்கிய வழிகளில் பாதிக்கின்றன. தனிச் செயற்கைக் கோள்கள் தொலைநோக்கிப் படங்களில் வண்ணக் கோடுகளை ஏற்படுத்துகின்றன. செயற்கைக் கோள்கள் பிரதிபலிக்கும் சூரிய ஒளி மற்றும் இடிபாடுகள் வானத்தைப் பிரகாசமாக்குகின்றன. இது இரவு வானத்தின் பிரகாசத்தை ஒரு சதுர மீட்டருக்கு மூன்று முதல் எட்டு மைக்ரோகேண்டெலா (Microcandela) வரை அதிகரிக்கிறது.
- அலகு விளக்கம்: cd () என்ற குறியீட்டுடன் அழைக்கப்படும் கேண்டெலாவின் (Candela) நுண் அலகான மைக்ரோகேண்டெலா என்பது ஒளியின் அடர்த்தியை அளக்கப் பயன்படும் அனைத்துலக அலகு ஆகும். மேலும் இது குறிப்பிட்ட திசையில் வெளிவிடப்படும் ஒளியின் ஆற்றலையும் குறிக்கிறது. 2035-இல் இது ஐந்து முதல் ஒன்பது மைக்ரோகேண்டெலா வரை அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது ஆரம்ப நிலை வானியலாளர்களுக்குப் பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
- உலகளாவிய பிரச்சினை: கூடுதலான இந்தப் பிரகாசம் நிலவொளியை விட மிகக் குறைவாக உள்ளது என்றாலும், இந்நிகழ்வு உண்மையானது என்பதை என்னால் உறுதியாகக் கூற முடியும். இது உலகளாவியது; மிகத் தொலைதூரத்திற்கு உள்ள இடத்திற்குச் சென்றாலும் இதிலிருந்து தப்ப முடியாது. செயற்கைக் கோள்களின் ஏவுதல் மற்றும் இடிபாடுகளை அதிகமாக ஏற்படுத்தும் இன்றைய நிலை தொடர்ந்தால் வரும் பத்தாண்டுகளில் இதன் அளவு அதிகமாகும்.
- மாதிரிகள் உறுதி செய்கின்றன: இதற்கான மாதிரிகள் இதை உறுதி செய்கின்றன” என்று பிராட்டிஸ்லாவா (Bratislava) ஸ்லோவாக் அறிவியல் அகாடமியின் (Slovak Academy of Sciences) டாக்டர் மிரோஸ்லாவ் காஸிஃபேஜ் (Dr. Miroslav Kocifaj) கூறுகிறார். “பூமியில் வாழ்வைப் பாதிப்பது எது என்பது பற்றிய கேள்வி வரும்போது, நிலவொளியுடன் ஒப்பிட்டால் இதன் உண்மையான பிரச்சினை பிரகாசமில்லை; மாறாக உயிரியல் செயல்முறைகளால் இதைக் கண்டறிய முடியுமா என்பதே கேள்வி.
- நுண்ணிய உணர்திறன்: மனிதர்கள் உணர்வதை விட மிகக் குறைவாகவே உயிர்க்கடிகாரத்தின் செயல்முறைகள் பிரகாசத்துடனான உணர்திறன் கொண்டதாக உள்ளன. இரவு வானம் நிரந்தரப் பிரகாசத்துடன் இருந்தால், நாம் இன்னும் முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாத சூழல் மண்டலங்களின் விளைவுகளை அது சுருக்கி விடும்” என்று கனடா கால உயிரியல் சங்கத் தலைவரும் கெல்ஃப் (Guelph) பல்கலைக்கழக விஞ்ஞானியுமான பேராசிரியர் டாமி மார்ட்டினோ (Prof. Tami Martino) கூறுகிறார்.
பூமியின் பழமையான கோட்பாடுகளில் ஒன்று
- உடலியல் சார்ந்த பாதிப்புகள்: உயிர்க்கடிகாரத்தில் ஏற்படும் இடையூறுகள் வெறும் ஒரு அசௌகரியம் மட்டும் இல்லை; அது மிக மோசமான ஆரோக்கியப் பாதிப்புகளை ஏற்படுத்தும் உடலியல் ரீதியான செயல்முறை. நாங்கள் விண்வெளி கண்டுபிடிப்புகளுக்கு எதிராக வாதாடவில்லை. பூமியில் ஏற்படும் காலநிலை மாற்றம், கடல் அமிலமாதல் போன்ற மற்ற சூழல் பிரச்சினைகளைப் போலவே இரவு வானை மாற்றுவதையும் தீவிரப் பிரச்சினையாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஒளி மற்றும் இருளின் மாற்றம் வெறும் ஒரு அற்பமான பின்புல வேறுபாடு மட்டும் இல்லை.
- கூட்டு அமைப்புகளின் எச்சரிக்கை: அது பூமியின் ஒருங்கிணைக்கப்பட்ட மிகப் பழமையான கோட்பாடுகளில் ஒன்று என்று உலக உறக்க சங்கம் (World Sleep Society), ஐரோப்பிய உறக்க ஆய்வு சங்கம் (European Sleep Research Society), உறக்கத்திற்கான ஆரோக்கிய அறக்கட்டளை (Sleep Health Foundation), ஆஸ்திரேலிய உறக்க சங்கம் (Australian Sleep Association), ஆஸ்ட்ரலேசியன் கால உயிரியல் சங்கத்தின் (Australasian Chronobiology Society) தலைவர்கள் எழுதியுள்ள மற்றொரு கடிதத்தில் கூறியுள்ளனர்.
- இயற்கை வழிசெலுத்தல் பாதிப்பு: செயற்கைக் கோள்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால், வேகமாக நகரும் செயற்கைப் பொருட்கள் இரவு வானத்தை ஆதிக்கம் செலுத்தும் ஒரு அம்சமாக மாறும் காலமும் இடங்களும் ஒரு நாள் ஏற்படும். பல பறவைகளும் சில பூச்சிகளும் நட்சத்திரங்களை வைத்தே வழி கண்டறிகின்றன. இதனால் மனிதனின் இரவு வான் அனுபவம் மாறும்.
- புதிய வகை ஒளி மாசு: சுற்றுவட்டப் பாதையில் கண்ணாடிகளை வைத்து ஒளியைப் பிரதிபலிக்கும் செயற்கைக்கோள்கள்—குறிப்பாக அவை பிழையாகச் செயல்பட்டால் அல்லது இலக்கைத் தவறவிட்டால் — ஏற்படும் பொதுநல ஆரோக்கியப் பிரச்சினைகளின் விளைவுகள் குறித்து இதுவரை இன்னும் முழுமையாக ஆராயப்படவில்லை. மேலும் இது ஒரு புதிய வகை ஒளி மாசை அறிமுகப்படுத்துகிறது. ஒளிக் கீற்றுகள் நிலப்பகுதிக்குக் குறுக்கே நகர்வதால் கண்களைக் கூசவைக்கும் அல்லது குருடாக்கும் பளிச்சிடும் ஒளி ஏற்பட வாய்ப்பு அதிகம்.
- கவனமாக ஆராய வேண்டும்: இதனால் முன்னெடுத்துச் செல்வதற்கு முன்பு இத்திட்டத்தைப் பற்றி கவனமாக ஆராய வேண்டும் என்று டார்க்ஸ்கை கோருகிறது” என்று ரஸ்கின் ஹார்ட்லி கூறுகிறார். இது பற்றிக் கருத்து தெரிவிக்க ரிஃப்லெக்ட் ஆர்பிட்டல் மறுத்து விட்டது.
கருத்து கூற விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு ஸ்பேஸ்எக்ஸ் பதிலளிக்கவில்லை என்று புகழ்பெற்ற கார்டியன் (The Guardian) செய்தி நிறுவனம் கூறுகிறது.
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: விண்வெளி
பழுதடைந்த செயற்கைக் கோள்களுக்காக நிலவில் இடம் ஒதுக்கப்படவுள்ளது. கடினத் தன்மை வாய்ந்த இந்த செயற்கைக் கோள்களின் பகுதிகள் நிலவின் மேற்பரப்பில் மோதி விழுவதற்கென்று இந்த இடங்கள் பயன்படுத்தப்படும். இந்த இடங்கள் கலாச்சார மற்றும் அறிவியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் இருந்து தொலைதூரத்தில் அமைந்திருக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
நிலவில் குப்பை மேடுகள்
நிலவின் வளமற்ற தரைப்பரப்பில் தளங்கள், சுரங்கப் பணிகள், அறிவியல் ஆய்வுக் கருவிகளை நிறுவுதல் போன்றவற்றிற்காக விண்வெளி முகமைகள், தனியார் நிறுவனங்கள் அனுப்பவுள்ள செயற்கைக்கோள்களின் எண்ணிக்கை வரும் இருபது ஆண்டுகளில் பெருமளவில் அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது. நிலவின் பரப்பில் மேற்கொள்ளப்படும் இத்தகைய பணிகளுக்காக சரியான இடங்களைக் கண்டறிதல், வழி அறிதல் மற்றும் தகவல் தொடர்புக்காக செயற்கைக்கோள் கட்டமைப்புகள் அனுப்பப்பட உள்ளன.
ஆனால் எரிபொருள் தீர்ந்து போகும்போது செயற்கைக்கோள்களை நிலவின் பரப்பில் மோதி விழச் செய்து தரையிறக்குவதைத் தவிர வேறு வழியில்லை. “இந்த செயற்கைக்கோள்கள் தரையில் மோதி உடைந்து துண்டுகளாக சிதறும்” என்று டரம் (Durham) பல்கலைக்கழகத்தின் மூத்த விஞ்ஞானியும் சமீபத்தில் க்ளாஸ்கோ ஸ்பேஸ் காமின் இது குறித்த நிபுணர் குழு கூட்டத்தை நடத்தியவருமான டாக்டர் ஃபியோனாக் தாம்சன் (Dr Fionagh Thomson) கூறுகிறார்.
நிலவின் வெவ்வேறு இடங்களில் பழுதடைந்த செயற்கைக்கோள்கள் விழுந்தால், கட்டிடங்கள், அறிவியல் உபகரணங்கள், நிலவிற்குச் சென்ற முதல் விண்வெளி வீரர் கால் பதித்த இடம் போன்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்கள் மற்றும் அறிவியல் ஆய்வுக்குரிய தூய இடங்கள் போன்றவை சேதமாகும். விநாடிக்கு 1.2 மைல் வேகத்தில் பழுதடைந்த செயற்கைக்கோள்கள் விழும்போது நிலவின் பரப்பில் அது பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தும்.
நிலவில் விஞ்ஞானிகள் நிறுவத் திட்டமிட்டுள்ள உணர் திறன் மிகுந்த கருவிகளுக்கு இவை இடையூறை ஏற்படுத்தும். இந்த மோதல்களால் உருவாகும் பல மீட்டர்கள் தொலைவிற்கு பள்ளங்கள் இருக்கும். இதனால் உருவாகும் தூசு மேகங்கள் தொலைநோக்கிகள், உபகரணங்களை சேதமடையச் செய்யும்.
“நிலவின் பரப்புடன் ஒப்பிடும்போது இது உடனடியாக ஏற்படக்கூடிய ஆபத்து இல்லை. ஆனால் செயற்கைக்கோள்களின் எண்ணிக்கை அதிகமாகும்போது அவை கலாச்சார, அறிவியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் விழ வாய்ப்பு உண்டு. அதனால் இது பற்றிய திட்டமிடல் அவசியம்” என்று பர்க்பெக் (Birkbeck) இலண்டன் பல்கலைக்கழக விஞ்ஞானி பேராசிரியர் இயன் க்ராஃபெர்டு (Prof Ian Crawford) கூறுகிறார். விஞ்ஞானிகள் பொதுவாக பூமியைச் சுற்றிவரும் செயற்கைக்கோள்களை வளி மண்டலத்தைப் பயன்படுத்தி அகற்றுகின்றனர்.
ஆயிரக்கணக்கான இத்தகைய செயற்கைக்கோள்கள் பூமியின் வளி மண்டலத்திற்குள் நுழையும்போது எரிந்து சாம்பலாகின்றன. ஆனால் நிலவில் வளி மண்டலம் என்று எதுவும் இல்லை. அதனால் இதற்கு வேறு தீர்வுகளைக் காண வேண்டும். வரும் இருபது ஆண்டுகளில் நானூற்றிற்கும் அதிகமான நிலவு பற்றிய ஆய்வுகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
நாசாவின் ஆர்ட்டிமிஸ் (Artemis) முகாம், நிலவைச் சுற்றிவரும் லூனார் கேட்வே (Lunar Gateway) நிலையம், சீனாவின் இரண்டாவது நிலவு முகாம் மற்றும் ரஷ்யாவின் நிலவு முகாம் இத்திட்டங்களில் அடங்கும். 2027ல் ஐரோப்பிய விண்வெளி முகமை லூனார் பாத் ஃபைண்டர் (Lunar Pathfinder) செயற்கைக்கோளை அனுப்பவுள்ளது. இது 2030ல் இயங்கவுள்ள மூன் லைட் (Moonlight) செயற்கைக்கோள்களின் கட்டமைப்பிற்கு அடித்தளமாக அமையும்.
நிலவில் செயற்கைக்கோள் கல்லறைகள்
விஞ்ஞானிகள் பழுதடைந்த செயற்கைக்கோள்களை அகற்ற மூன்று வழிகளை ஆலோசிக்கின்றனர். ஒரு உந்துதல் அலகுடன் எரிபொருள் உள்ள ஒரு செயற்கைக்கோளை சூரியனை நோக்கி அனுப்பி அதன் சுற்றுவட்டப் பாதையில் சுழலும்படி செய்யலாம். ஆனால் இதற்கு செலவு அதிகமாகும். மாறாக அதை தொலைவில் உள்ள ஒரு நிலவு சுற்றுவட்டப் பாதைக்கு அனுப்பலாம். ஆனால் நிலவிற்கு பலவீனமான ஈர்ப்பு விசையே உள்ளது. அதனால் இதை செயல்படுத்துவது கடினம்.
மாறாக எச்சரிக்கையுடன் திட்டமிட்டு செயற்கைக் கோள்களை நிலவின் மீது மோதி விழுமாறு செய்யலாம். “நிலவுடன் தொடர்புடைய செயல்பாடுகளுக்கான கலந்தாலோசனை அமைப்பு (Lunar Activities Consultation (Atlac)) மற்றும் விண்வெளிக் குப்பைகளை ஒருங்கிணைக்கும் பன்னாட்டு முகமைகளுக்கு இடையிலான கமிட்டி (Inter-Agency Space Debris Coordination Committee (IADC)) ஆகியவை இதற்குரிய சிறந்த தீர்வுகளை ஆராய்கிறது” என்று இங்கிலாந்து விண்வெளி முகமையின் ஒழுங்குபடுத்தல் அலுவலக தலைவர் சேரா போயல் (Sarah Boyall) கூறுகிறார்.
“பழுதடைந்த செயற்கைக்கோள்களை குறிப்பிட்ட இடங்களை ஒதுக்கி நிலவில் விழச் செய்வதே நடைமுறைக்கு உகந்த தீர்வு. இதன் மூலம் நிலவில் விவேகமற்ற மனித செயல்பாடுகளைத் தடுக்கலாம்” என்று லூனார் பாத்ஃபைண்டர் தயாரிப்பாளர் சர்ரெ லிமிடெட் (SSTL the Surrey-based satellite manufacturer) நிறுவனத்தின் மூத்த திட்ட மேலாளர் பென் ஹூப்பர் (Ben Hooper) கூறுகிறார்.
“இதனால் சரியான நேரம் வரும்போது குப்பையாகும் செயற்கைக் கோள்களை கட்டுப்படுத்தி குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் விழும்படி செய்யலாம்” என்று ஐரோப்பிய விண்வெளி முகமையின் மூன் லைட் திட்ட அலுவலகத் தலைவர் சார்ல்ஸ் க்ரான்ஸ் டவுன் (Charles Cranstoun) கூறுகிறார்.
“செயற்கைக் கோள்கள் மோதும்போது இதனால் பெருமளவில் அதிர்வுகள் ஏற்படும். இதனால் நிலவின் அமைப்பு பாதிக்கப்படும்.. முன் கூட்டியே தெரிந்த நிறை, ஜியோமெட்ரி மற்றும் வேகத்துடன் ஒரு பொருள் விழும்போது அதன் தாக்கம் எந்த அளவிற்கு உண்டாகும் என்பதை நாம் அறிய முடியும்” என்று ஓப்பன் (Open) பல்கலைக்கழக விண்வெளியியல் பிரிவு எமரிட்டஸ் (Emeritus) விஞ்ஞானி ஜான் சானெர்கி (John Zarnecki) கூறுகிறார்.
பழுதடையும் செயற்கைக் கோள்களுக்காக நிலவில் கல்லறைகளை ஏற்படுத்தும் இத்திட்டம் நிலவை பாதுகாக்க உதவும். இதனால் மனித விண்வெளி ஆய்வுகள் புதிய ஊக்கம் பெறும் என்று நம்பப்படுகிறது.
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- வியாழனின் நிலவில் மோதிய விண்கல்
- 128 புதிய நிலவுகள்
- வீட்டின் மீது விழுந்த விண்கல்
- பூமியை நோக்கி வரும் புதிரான விண்வெளிப் பொருள்
- கொதிக்கும் கடல்
- யுரேனஸைத் தேடி
- கிரகணத்தை ஏற்படுத்தி சூரியனை ஆராயும் திட்டம்
- 21ஆம் நூற்றாண்டில் விண்வெளித் துறையில் நிகழ்ந்த மாற்றங்கள் ஓர் அலசல் - 2
- 21ஆம் நூற்றாண்டில் விண்வெளித் துறையில் நிகழ்ந்த மாற்றங்கள் - ஓர் அலசல்
- விண்வெளி வீரர்களின் சிறுநீரை குடிநீராக மாற்ற உதவும் உள்ளாடைகள்
- உயிர்கள் வாழ உதவுமா வெள்ளிக் கோளின் மேகங்கள்...?
- சூழல் காக்க உதவும் மர செயற்கைக்கோள்கள்
- சூரியனை நோக்கி பயணிக்கும் மினி நிலா
- கடலை விழுங்கிய சனியின் நிலவு
- கற்காலத்திற்குப் பிறகு பூமிக்கு வரும் அதிசய விண்கல்
- சனியின் நிலவில் உயிர்கள்!?
- நிலவுக்குச் செல்வது ஏன் கடினமாக உள்ளது?
- பால்வீதியில் ராட்சச நட்சத்திரக் கூட்டத்தின் கண்டுபிடிப்பு
- பூமிக்கு வெளியே ஓர் உயிர்க்கோள்
- விண்வெளியின் தொலைதூரத்தில் இருந்து ஒரு நற்செய்தி
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.