கீற்றில் தேட...
அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: விண்வெளி
உலோகங்களை உருக்கும் அளவு வெப்பம், நச்சுத் தன்மையுடைய, போர்வை போல மூடியிருக்கும் வளி மண்டலத்தைக் கொண்ட வெள்ளி கோள், சூரிய மண்டலத்தில் உயிர்கள் வாழ இயலாத கோள்களின் பட்டியலில் உள்ளது. ஆனால் விண்வெளியியலாளர்கள் அண்மையில் கண்டுபிடித்த இரண்டு வாயுக்கள் அதன் மேகங்களில் அலைந்து திரிவது அங்கு உயிரின் வடிவங்கள் வாழலாம் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியுள்ளது.வெள்ளியின் மேகங்களில் பாஸ்பின்
இங்கிலாந்து ஹல் (Hull) என்ற இடத்தில் நடந்த தேசிய விண்வெளி அறிவியல் கூட்டத்தில் (national astronomy meeting) சமர்ப்பிக்கப்பட்ட இரண்டு ஆய்வுக் கட்டுரைகள் வெள்ளியில் எரிச்சலை ஏற்படுத்தும் வாசனை உடைய பாஸ்பின் (phosphine) வாயு இருப்பதை வலுவான ஆதாரங்களுடன் உறுதிப்படுத்தியது. இந்த வாயுவின் இருப்பு அதிக சர்ச்சைகளுக்கு உள்ளானது.
பூமியில் உயிரியல் செயல்பாடுகள், தொழில்துறை செயல்முறைகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் அமோனியா வாயு அங்கு இருப்பதை மற்றொரு ஆய்வுக் குழுவினர் கண்டுபிடித்தனர். பாஸ்பின் வாயுவின் இருப்பை வைத்து வெள்ளியில் நாம் முன்பே அறிந்த வளி மண்டலத்தை, புவியின் செயல்கள் போல அங்கும் நிகழக்கூடிய செயல்களைப் பற்றி நம்மால் விவரிக்க முடியாது என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
உயிர்கள் வாழ்வதற்கான அடையாளமாகக் கருதப்படும் இந்த வாயுக்கள் வெள்ளியில் இருப்பதை வைத்து நாம் அதை அந்நிய கிரக வாசத்திற்குத் தகுதியான கோளாகக் கருத முடியாது. ஆனால் இந்த உற்றுநோக்கல்கள் அந்தக் கோள் மீதான ஆர்வத்தை தீவிரப்படுத்தும். அதன் வளி மண்டலத்தின் ஒரு சில இடங்களில் சமீப கடந்த காலத்தில் தற்காலிகமாக உயிர்கள் உருவாகியிருக்கக்கூடிய வாய்ப்புகள் உள்ளன.
“வெள்ளிக் கோள் வெதுவெதுப்பும் ஈரப்பதமும் உள்ள சூழ்நிலையைப் பெற்றிருந்தால் அதன் ஆரோக்கியமான பகுதிகளில் மட்டும் உயிர்கள் தோன்றியிருக்கலாம். இதை வெள்ளியின் மேகங்கள் எடுத்துக் காட்டுகின்றன” என்று இலண்டன் இம்பீரியல் கல்லூரி விண்வெளி இயற்பியலாளர் டாக்டர் டேவ் க்ளமெண்ட்ஸ் (Dr Dave Clements) கூறுகிறார். ஈயம், துத்தநாகம் போன்ற உலோகங்களை உருக்கும் அளவு வெள்ளியின் தரை மேற்பரப்பு 450 டிகிரி செல்சியர்ஸ் வெப்பத்தைக் கொண்டுள்ளது.
இதன் வளி மண்டலத்தின் அழுத்தம், பூமியின் அழுத்தத்தை விட 90 மடங்கு அதிகம். அங்கு சல்ஃபுரிக் அமில மேகங்கள் காணப்படுகின்றன. ஆனால் தரைப்பரப்பிற்கு 50 கிலோமீட்டர்/31 மைல் தொலைவிற்கு மேற்பகுதியில் வெப்பநிலையும் அழுத்தமும் பூமியில் இருப்பது போல உள்ளன. இந்தச் சூழலில் மிகக் கடினமான நுண்ணுயிரிகள் உயிர் வாழ முடியும். பூமியில் பாஸ்பின் வாயு ஆக்சிஜனற்ற சூழ்நிலையில் பேட்ஜர் கட் (badger gut) போன்றவற்றால் உற்பத்தி செய்யப்படுகிறது.
அமோனியா
எரிமலை வெடிப்புகள் போன்ற நிகழ்வுகளால் உயிர்கள் வாழ்வதற்கான அடையாளமாக கருதப்படும் இந்த வாயு போதுமான அளவு உற்பத்தியாவதில்லை. 2020ல் பாஸ்பின் வாயு இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட பின் அது உறுதி செய்யப்படாததால் இது தொடர்பாக பெரும் சர்ச்சைகள் எழுந்தன.
ஆனால் இப்போது கோளின் பகல் இரவு சுழற்சியின் மூலம் பாஸ்பின் வாயு இருப்பதை ஆய்வாளர்கள் ஹவாய் ஜேம்ஸ் க்ளார்க் மேக்ஸ்வெல் விண்வெளி தொலைநோக்கியைப் (James Clerk Maxwell telescope (JCMT)) பயன்படுத்தி உறுதி செய்துள்ளனர். இதனால் இந்த சச்சரவுகள் முடிவிற்கு வந்தன.
“வெள்ளியின் வளி மண்டலம் சூரிய ஒளியின் அதி தீவிர வெப்பத்தால் குளிப்பாட்டப்படும்போது பாஸ்பின் வாயு அழிக்கப்படுகிறது. இந்த வாயு வெள்ளியில் உள்ளது என்பதை மட்டுமே இப்போது நம்மால் கூறமுடியும். இந்த வாயுவை உற்பத்தி செய்வது எது என்று தெரியவில்லை. இதன் பின் உள்ள வேதியியலையும் உயிரின் தோற்றத்தையும் நாம் இன்னும் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை” என்று க்ளமெண்ட்ஸ் கூறுகிறார்.
கார்டிஃப் (Cardiff) பல்கலைக்கழகத்தை சேர்ந்த விண்வெளியியலாளர் பேராசிரியர் ஜேன் க்ரீவ்ஸ் (Prof Jane Greaves) தங்கள் ஆய்வுக் குழுவின் முதன்மை உற்றுநோக்கல்களை கூட்டத்தில் சமர்ப்பித்தார்.
க்ரீன் பேங்க் (Green bank) தொலைநோக்கியைப் பயன்படுத்தி ஆராய்ந்தபோது வெள்ளியில் அமோனியா இருப்பதை இந்த ஆய்வுக் குழுவினர் கண்டறிந்தனர். பூமியில் அமோனியா தொழில்துறை நடவடிக்கைகள் அல்லது நைட்ரஜனை வேதிவினை புரிந்து அமோனியாவாக மாற்றும் பாக்டீரியாக்களால் உற்பத்தி செய்யப்படுகிறது.
“இது கண்டுபிடிக்கப்பட்டாலும் இந்த மாயாஜால நுண்ணுயிரிகள் வெள்ளியில் வாழ்வதற்கான சான்றுகள் எதுவும் இல்லை. அவை அங்கு இப்போது வாழ்கின்றனவா என்பதும் நமக்கு உறுதியாகத் தெரியாது” என்று ஜேன் கூறுகிறார்.
“மூலக்கூறுகள் இணைந்து உயிரைத் தோற்றுவிக்க உதவும் ஆரோக்கியமான சமிஞ்ஞைகள் வெள்ளியில் உள்ளன என்பதை பொதுவான சான்றுகளுடன் இந்த இரண்டு ஆய்வுகளும் வலியுறுத்துகின்றன. இந்த கண்டுபிடிப்புகள் உறுதி செய்யப்பட்டால் இது பற்றி வருங்காலத்தில் மேலும் ஆய்வுகள் நடைபெறும்.பாஸ்பின் மற்றும் அமோனியா வாயுக்கள் உயிர்களின் தோற்றத்திற்கு ஆரோக்கியமான முறையில் உதவும். இதன் மூலம் புதிய தகவல்கள் கிடைக்கும். இது எல்லாமே நேர்மறை நம்பிக்கையின் அறிகுறிகளே” என்று கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விண்வெளி இயற்பியலாளர் பேராசிரியர் நிக்கு மாட்யுஸஃபன் (Prof Nikku Madhusudhan) கூறுகிறார்.
“இந்த கண்டுபிடிப்புகள் பரவசப்படுத்துபவை. ஆனால் இது பற்றி மேலும் தீவிர ஆய்வுகள் நடைபெற வேண்டும். இந்த கண்டுபிடிப்புகள் வெள்ளியில் உயிர்கள் வாழ்வதற்கான அடையாளங்களை அல்லது இது வரை அறியப்படாத வேதியியல் செயல்முறைகளை எடுத்துக் காட்டுகின்றன” என்று ராயல் விண்வெளியியல் சங்கத்தின் துணை செயல் இயக்குனர் டாக்டர் ராபர்ட் மாசி (Dr Robert Massey) கூறுகிறார்.
இந்த ஆய்வு முடிவுகள் எடுத்துக்காட்டும் உண்மைகள் வரும் நாட்களில் நிரூபிக்கப்படும் என்று ஆய்வாளர்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.
** ** **
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: விண்வெளி
விண்வெளி வரலாற்றில் மிகப் புதுமையான, வழக்கத்திற்கு மாறான மரத்தாலான செயற்கைக்கோளை ஜப்பானிய ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர். லிக்னோ செயற்கைக்கோள் விண்கலன் (LignoSat satellite) என்ற இந்த சிறிய செயற்கைக்கோள் மக்னோலியா (Magnolia) வகையைச் சேர்ந்த மரத்தால் செய்யப்பட்டுள்ளது.
விரைவில் அமெரிக்க ஏவுவாகனத்தின் மூலம் விண்வெளிக்கு அனுப்பத் திட்டமிடப்பட்டுள்ள இதன் நிலைத்தன்மையும், விரிசல்கள் ஏற்படாமல் இருக்கும் பண்பும் பன்னாட்டு விண்வெளி ஆய்வுநிலையத்தில் (ISS) பரிசோதித்து கண்டறியப்பட்டது.
எல்லா செயற்கைக்கோள்களும் இப்போது உலோகத்தால் தயாரிக்கப்பட்டு வரும் நிலையில் இவற்றுக்கு மாற்றாக சூழலிற்கு நட்புடைய கலன்களை உருவாக்கும் நோக்கத்துடன் கயோட்டோ (Kyoto) பல்கலைக்கழக ஆய்வாளர்கள் சுமிட்டோமோ வனவியல் மர நிறுவனத்துடன் இணைந்து (Sumitomo Forestry) இந்தப் புதிய செயற்கைக்கோளை உருவாக்கியுள்ளனர்.
பூமியின் வளிமண்டலத்தில் நுழையும்போது இன்றுள்ள செயற்கைக்கோள்கள் அனைத்தும் எரிந்து நுண்ணிய அலுமினா துகள்களை உருவாக்குகின்றன. இத்துகள்கள் மேல் அடுக்கு வளிமண்டலத்தில் பல ஆண்டுகள் மிதக்கின்றன. “இந்தத் துகள்கள் பூமியின் சூழலை வெகுவாகப் பாதிக்கும்” என்று கயோட்டோ பல்கலைக்கழக விண்வெளி பொறியியலாளர் மற்றும் விண்வெளி வீரர் டக்கா டாய் (Takao Doi) சமீபத்தில் எச்சரித்தார்.
இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காண கயோட்டோ ஆய்வாளர்கள் ஏவுதலின்போது ஏற்படும் கடுமையான மாற்றங்கள் பற்றியும் நீண்ட காலம் பூமியைச் சுற்றி வரும்போது மரத்தால் கட்டப்படும் செயற்கைக்கோள்கள் எவ்வாறு தாக்குபிடிக்கின்றன என்பதைப் பற்றியும் கயோட்டோ ஆய்வாளர்கள் பல வகை மரங்களை பயன்படுத்தி பரிசோதித்தனர்.
விண்வெளியில் இருப்பது போன்ற சூழ்நிலை செயற்கையாக ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டு முதல் பரிசோதனைகள் நடந்தபோது மரத்தின் நிறையில் வேறுபாடு ஏற்படவில்லை. மக்குதல் அல்லது சேதம் ஏற்படவில்லை.
காஃபி கோப்பையின் அளவில்
“விண்வெளிச் சூழலை சமாளிக்கும் மரத்தின் திறன் திகைக்க வைக்கிறது” என்று திட்டத்தின் தலைவர் கோஜி முராட்டா (Koji Murata) கூறுகிறார். சோதனைகள் முடிந்த பின் மரத்தின் மாதிரிகள் பன்னாட்டு விண்வெளி நிலையத்திற்கு அனுப்பப்பட்டு ஏறக்குறைய ஓராண்டு காலம் வரை அங்கு வைத்து பரிசோதிக்கப்பட்டன. பிறகு பூமிக்குக் கொண்டு வந்து ஆராயப்பட்டபோது விண்வெளியில் ஆக்சிஜன் இல்லை, விண்வெளியில் அவற்றை அழுகச் செய்ய எந்த உயிரினமும் இல்லை என்பதால் அவற்றில் மிகச் சிறிதளவு சேதம் மட்டுமே ஏற்பட்டிருந்தது.
விண்வெளியில் செயல்படும்விதம் போன்ற பல சோதனைகள் ஜப்பானிய செர்ரி மரம் உள்ளிட்ட பல வகை மரங்களில் நடத்தப்பட்டபோது மக்னோலியா மரமே வலுவுடையது என்று கண்டறியப்பட்டது. செயற்கைக்கோள்கள் விண்வெளியில் வடிவம் மாறுவதை ஆராய்வது இத்திட்டத்தின் முக்கிய நோக்கம். ஒரு திசையில் மரம் உறுதியுடனும் நீண்ட ஆயுளுடனும் இருக்கும் என்றாலும், மற்றொரு திசையில் வடிவ மாற்றத்தை அடைந்து விரிசல்கள் தோன்றும் வாய்ப்பு உள்ளது என்பதால் இத்தகைய பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
விண்வெளி வரலாற்றில் முதல்முறையாக உருவாக்கப்பட்டுள்ள இந்த மர செயற்கைக்கோளை விண்வெளிக்கு எடுத்துச் செல்லும் ஏவு வாகனம் பற்றி இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. இந்த செயற்கைக்கோள் பன்னாட்டு விண்வெளி நிலையத்திற்கு விரைவில் செல்லவிருக்கும் ஆர்பிட்டல் சயன்ஸஸ் சிக்னஸ் விநியோக விண்வெளிக் கப்பல் (Orbital Sciences Cygnus supply ship) அல்லது ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX) நிறுவனத்தின் டிராகன் (Dragon) வாகனத்தின் மூலம் அனுப்பப்படலாம்.
ஒரு காஃபி கோப்பையின் அளவு உள்ள இந்த செயற்கைக்கோள் விண்வெளியில் ஆறு மாதங்கள் வரை செயல்படும். பிறகு மேலடுக்கு வளிமண்டலம் வழியாக பூமியை நோக்கி பயணம் செய்யும். இந்தத் திட்டம் வெற்றி பெறும்போது பல புதிய செயற்கைக்கோள்களை உருவாக்க ஒரு முக்கிய கட்டுமானப் பொருளாக மரம் பயன்படும் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர். வரும் ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட புதிய செயற்கைக்கோள்கள் விண்வெளிக்கு அனுப்பப்படும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
சூழல் நட்புடைய செயற்கைக்கோள்
திரும்பி வரும்போது பூமியின் மேலடுக்கு வளிமண்டலத்தில் இப்போது உள்ள செயற்கைக்கோள்கள் வெளிவிடும் அலுமினியத் துகள்கள் ஏற்படுத்தும் படிவுகள் வருங்காலத்தில் ஒரு முக்கிய சூழல் பிரச்சனையாக மாறும் என்று விஞ்ஞானிகள் அஞ்சுகின்றனர். இந்த அலுமினா படிவுகளால் சூரியனின் புற ஊதாக்கதிர்களிடம் இருந்து பூமியைக் காக்கும் ஓசோன் அடுக்கில் ஓசோன் வாயுவின் அளவு குறையும். வளிமண்டலத்தின் வழியாக பூமிக்கு வரும் சூரியனின் கதிரியக்கக் கதிர்களின் அளவு அதிகமாகும்போது பூமியில் எல்லா உயிரினங்களும் பாதிக்கப்படும்.
ஆனால் லிக்னோ சாட் போன்ற மரத்தால் செய்யப்பட்ட செயற்கைக்கோள்கள் அவற்றின் திட்ட இறுதியில் வளிமண்டலத்திற்குள் நுழையும்போது மக்கக்கூடிய மிக நுண்ணிய சாம்பல் தூளை மட்டுமே உருவாக்கும் என்பதால் இந்த பிரச்சனைகள் ஏற்படுவதில்லை. மனிதச் செயல்பாடுகளால் குப்பை மேடாகி வரும் விண்வெளியின் சூழலைக் காக்க இந்த புதிய மரச் செயற்கைக்கோள்கள் பெருமளவில் உதவும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: விண்வெளி
நிலவின் ஒரு துண்டு என்று கருதப்பட்ட, பூமிக்கு வந்த மினி நிலா பூமியை விட்டு மறைகிறது. சூரியனை நோக்கி தன் பயணத்தைத் தொடங்கியுள்ள, ஸ்கூல் பஸ் அளவுக்கு இருக்கும் 2024 பிடி5 (2024 PT5) என்ற விண்கல் இப்போது பூமியில் இருந்து 2 மில்லியன் மைல் / 3.2 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இது பூமியின் மினி நிலா என்று வர்ணிக்கப்பட்டது. நீண்ட காலத்திற்குப் பிறகே மறையும் இயல்புடைய விண்கல் இது.
விண்கல் மோதிய நிலவு
கடந்த 2024 செப்டம்பர் முதல் விண்வெளியில் உள்ள இது, சூரியனை நோக்கிய தன் மீள் பயணத்திற்கு இப்போது தயாராகி வருகிறது. மீண்டும் இது 2055ல் பூமிக்கு வருகை தரும். பல நூற்றாண்டுகளுக்கு முன்பு நிலவில் ஒரு ராட்சத விண் பாறை மோதியதால் உருவான இது ஒரு பெரிய பாறைத்துண்டு என்று விண்வெளியியலாளர்கள் கருதுகின்றனர். இது இப்போது நிலவில் இருந்து ஒன்பது மடங்கு தொலைவில் உள்ளது.
இதுவரை இந்த விண்கல் பூமியின் ஈர்ப்புவிசை மண்டலத்திற்கு அருகில் வரவில்லை. என்றாலும் விடைபெற்றுச் செல்லும் இதன் பயணத்தின்போது இது பூமிக்கு நெருக்கமாக 1.1 மில்லியன் மைல் தொலைவுக்கு அருகாமையில் வருகை தரும். ஜனவரி 2025ல் சூரியனின் ஈர்ப்பு விசை ஆழ் விண்வெளிப் பரப்பிற்கு இதை வலிந்து இழுக்கும் முன் இதை ஆராய முடியும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
33 அடி அகலம் உள்ள இதன் சிறிய அளவும் தொலைவும் இதை ஒருபோதும் வெறும் கண்களால் மனிதரால் பார்க்க முடியாத நிலையை ஏற்படுத்துகிறது. வலிமை வாய்ந்த தொலைநோக்கிகளால் மட்டுமே இந்த வான் பொருளை பார்க்க முடியும். இதை முதல்முறையாக கடந்த ஆகஸ்ட் 2024ல் தென்னாப்பிரிக்காவை மையமாகக் கொண்டு செயல்படும் ஹவாய் பல்கலைக்கழகத்தின் தொலைநோக்கி கண்டுபிடித்தது.
நாசா இதை தனது ஆழ் விண்வெளி வலையமைப்பின் (Deep Space Network) உதவியுடன் கண்காணித்து வருகிறது. அப்போது முதல் இது பூமியின் ஒரு பங்காளியாக உள்ளது. இது மனிதனால் உருவாக்கப்பட்ட பொருளில்லை என்று ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
“பூமி மற்றும் இதன் இயக்கத்தை ஒப்பிட்டு பார்த்து ஒற்றுமைகளை ஆராய்ந்ததில் நீண்ட காலத்திற்கு முன்பு ஒரு விண்கல் மோதி ஏற்பட்ட தாக்கத்தால் நிலவின் மேற்பரப்பில் இருந்து வெளியேற்றப்பட்ட ஒரு ராட்சத பாறை இது என்று நாசாவின் புவி அருகு பொருட்கள் மைய (NEOs) விஞ்ஞானிகள் கருதுகின்றனர்” என்று விண்வெளி நிறுவனத்தின் கோள் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அலுவலகத் திட்டப் பகுப்பாய்வாளர் ஜாஷ் ஹாண்டல் (Josh Handal) குறிப்பிடுகிறார்.
பூமியை விட்டு அகலும் மினி நிலா
“வரலாற்று நிகழ்வுகளாக கருதப்படும் ஏவு வாகனங்களின் பகுதிகள் பூமியின் சுற்றுவட்டப்பாதை போன்ற இத்தகைய பாதைகளில் காணப்படுகின்றன. ஆனால் இந்த விண்கல்லின் இயக்கம் பற்றிய பகுப்பாய்விற்குப் பிறகு 2024 பிடி5 இயற்கையாகத் தோன்றியதே என்று நம்பப்படுகிறது. இது கடந்த இரண்டு மாதங்களாக பூமியை குதிரை லாட வடிவ வட்டப்பாதையில் சுற்றி வருகிறது.
"சூரியனின் ஈர்ப்புவிசை முழுமையான தாக்கம் செலுத்தும்போது இதன் விசை அதிவேகமாக மாறும். கடந்த 2024 செப்டம்பரில் இருந்ததை விட இதன் வேகம் ஜனவரி 2025ல் இரண்டு மடங்காக அதிகரிக்கும்” என்று மாட்ரிட் கம்ப்ளூட்டன்ஸ் (Complutense) பல்கலைக்கழக விண்வெளி இயற்பியலாளர் ரவுல் டெ லாஃப் வெண்டே மார்க்கோஸ் (Raul de la Fuente Marcos) அசோசியேட்டட் ப்ரஸ் நிறுவனத்திடம் கூறினார்.
கலிபோர்னியா மொஹாவி (Mojave) பாலைவனத்தில் செயல்படும் கோல்டு ஸ்டோன் சூரிய மண்டல ரேடார் ஆண்டெனாவின் (Goldstone solar system radar antenna) உதவியுடன் நாசா ஜனவரி 2025ல் ஒரு வார காலம் இந்த விண்கல்லின் பாதையைக் கண்காணிக்கும். சூரியனை வலம் வந்த பிறகு 2055ல் இந்த விண்கல் திரும்பி வரும்போது மீண்டும் ஒரு முறை இது பூமியை தற்காலிகமாக பகுதியளவு மடிப்புடன் சுற்றி வரும்.
விண்வெளியின் ஆழ் பரப்பில் இருந்து வரும் இத்தகைய அதிசய வான் பொருட்கள் சூரியன் மற்றும் பூமியின் வரலாற்றை அறிய நமக்கு உதவும் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
மேற்கோள்: https://www.theguardian.com/science/2024/nov/25/earth-mini-moon-to-disappear?
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: விண்வெளி
தரைப்பரப்பின் மேற்பகுதியில் காணப்படும் பெரும் தாக்கத்தால் உண்டான பள்ளத்தைக் கொண்டிருப்பதால் சனியின் நிலவுகளில் ஒன்று, ஸ்டார் வார்ஸ் படங்களில் ஒன்றில் வரும் இறந்த நட்சத்திரம் போல காணப்படுகிறது. அதன் உடைக்கப்பட்ட மேலோட்டிற்கு கீழ் ஒரு கடல் மறைந்துள்ளது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
(Photograph: Frédéric Durillon/Animea Studio/Observatoire de Paris/IMCCE)
சனியின் நிலவில் கடல்
எதிர்பாராத இந்த கண்டுபிடிப்பு 250 மைல் அகலமுடய பனிக்கட்டி பந்து போன்ற மிமாஸ் (Mimas) என்ற சனியின் இந்த சிறிய நிலவு சனிக்கோளின் டைட்டன் (Titan), என்சலாடஸ் (Enceladus) மற்றும் வியாழனின் ஈரோப்பா (Europa), கனிமீட் ( Ganymede) ஆகிய தனிச்சிறப்பு மிக்க நிலவுகளின் குடும்பத்தில் ஒரு உறுப்பினராக இணைத்துள்ளது.
இந்நிலவுகளின் தரைப்பரப்பிற்கு கீழ் கடல்கள் உள்ளன. “இக்கண்டுபிடிப்பு வியப்பூட்டும் ஒன்று. மிமாஸ் நிலவின் பரப்பிற்கு கீழ் ஒரு கடல் மறைந்துள்ளது தெரியாத விதத்தில் அமைந்துள்ளது. இது போன்ற அமைப்பை உடைய நிலவு மிக அரிது” என்று பிரான்ஸ் வானியல் மையத்தின் (Observatoire de Paris) விஞ்ஞானி வலேரி லேனி (Valéry Lainey) கூறுகிறார்.
இதன் தனித்துவமான இந்த பண்பிற்கு பனியால் மறைக்கப்பட்ட நீளமான மேலோட்டை பெற்றிருப்பது அல்லது இதனுள் அமைந்திருக்கும் ஒரு உட்கடல் அதன் வெளிப்பகுதியை சுதந்திரமாக மாற அனுமதித்திருப்பது காரணமாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
நாசாவின் கசினி (Cassini) ஆய்வுக்கலனால் அனுப்பப்பட்ட ஆயிரக்கணக்கான பிம்பங்களை பகுப்பாய்வு செய்தபோது ஆய்வுக்குழுவினர் ராட்சச வாயுக் கோளான சனியை வளையமிட்டு சுற்றி வரும் இந்நிலவின் துல்லியமான சுழலும் வேகத்தையும் சுற்று வட்டப் பாதை இயக்கத்தையும் மறுகட்டமைப்பு செய்து ஆராய்ந்தனர்.
மிமாஸின் கடினமான உள்ளமைப்பையும் இதன் வேகத்தையும் சரியான முறையில் விளக்க வழியில்லை என்று லேனி கூறுகிறார். 15 மைல் கனமுடைய பனிப்படலத்திற்கு கீழ் கடலின் அடித்தட்டுக்கு அருகாமை பகுதியில் பல டிகிரி செல்சியர்ஸ் வெப்பமுள்ள, 45 மைல் ஆழமுள்ள கடல் மறைந்திருக்கிறது என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இந்த கடலின் கன அளவு மிமாஸின் கன அளவில் பாதிக்கும் மேல் உள்ளது.
மிமாசில் உயிரினங்கள்
இது குறித்த ஆய்வுக் கட்டுரை நேச்சர் (Nature) இதழில் வெளிவந்துள்ளது. வானியல் அளவுகளின்படி மற்றவற்றுடன் ஒப்பிடும்போது மிமாஸின் கடல், கடந்த 25 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியிருக்கலாம் என்பதால் இது ஒரு இளம் வயதுடைய கடலாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. சனிக் கோளின் வலிமையான அலைகள் பெரும் வேகத்துடன் இந்த நிலவின் மேற்பரப்பை ஒரு ச்குவாஷ் பந்து போல மசாஜ் செய்து வெப்பமுடையதாக மாற்றியுள்ளது.
சூடான இப்பரப்பு அதற்கு மேலிருந்த பனிப்படலத்தால் உருக்கப்பட்டது. இது அங்கு ஒரு கடலை உருவாக்கியது. இதனால் மிமாஸ் நிலவின் மேற்பரப்பு பெரிதும் பாதிக்கப்பட்டது. இதன் விளைவாக ஒரு ராட்சச பள்ளம் உருவானது. இது 1789ல் முதல்முறையாக இந்நிலவை அடையாளம் கண்ட வில்லியம் ஹெர்ஷல் என்ற விண்வெளியியலாளரின் நினைவாக ஹெர்ஷல் பள்ளம் என்று பெயரிடப்பட்டுள்ளது.
சனி மற்றும் வியாழனின் நிலவுகளில் கடல்கள் இருப்பது கண்டுபிடிக்கப்படுவது விண்வெளியியலாளர்களிடையில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலவுகளில் உயிரினங்கள் வாழ்கின்றனவா என்பதை ஆராய பல விண்வெளி ஆய்வு நிறுவனங்கள் முயன்று வருகின்றன. வியாழனின் என்சலாடஸ் நிலவில் நூற்றுக்கும் மேற்பட்ட வெந்நீர் ஊற்றுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இங்கு நீராவி வெடிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. தரை மேற்பரப்பில் விரிசல்கள் உருவாகியுள்ளது. இந்த சின்னஞ்சிறிய நிலவில் முன்பு ஒருவேளை உயிரினங்கள் தோன்றியிருந்தால் அந்நிய இடங்களில் இருந்து வந்திருக்கக் கூடிய நுண்ணுயிரி இனங்கள் வெந்நீர் ஊற்றுகளில் இருந்து வரும் புகைப்படலத்தால் வெளியே தள்ளப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. அவ்வாறு நிகழ்ந்திருந்தால் மிமாஸ் நிலவுக்குச் செல்லும் ஆய்வுக்கலன்கள் அதைக் கண்டுபிடிக்கும்.
“வெப்பமான பாறைகளுடன் தொடர்புடைய நீர் இருப்பதால் மிமாசில் உயிரினங்கள் வாழ்வதற்குரிய சாத்தியக்கூற்றை மறுக்கமுடியாது. ஆனால் மறைந்திருக்கும் கடல் ஒரு சில பத்தாண்டுகளுக்கு முன்பு மட்டுமே தோன்றியதாக இருந்தால் உயிரினங்கள் உருவாக வாய்ப்பில்லை. இதன் வயது பற்றி இன்னும் கண்டறிய முடியவில்லை என்று லேனி கூறுகிறார்.
நம்பிக்கையூட்டும் ஈரோப்பாவும் என்சலாடஸும்
“இந்நிலவில் கடல் தரைப்பரப்பிற்கு கீழ் உள்ளது என்றாலும் இது பூமிக்கு அப்பால் உயிர்களை தேட பெரிதும் உதவும். உயிர்கள் வாழ சாத்தியமான உட்கடலுக்கும் தரைக்கும் தொடர்பு இருப்பதாக தெரியவில்லை. என்சலாடஸில் கண்டுபிடிக்கப்பட்டது போல இங்கு உயிர்கள் உள்ளனவா என்று கண்டரியலாம். ஈரோப்பாவிலும் இது குறித்த ஆய்வுகள் நடக்கின்றன” என்று ஓப்பன் (Open) பல்கலைக்கழக புவிக்கோள் அறிவியல் பிரிவு பேராசிரியர் டேவிட் ராதரி (David Rothery) கூறுகிறார்.
இந்த நிலவில் உயிர்கள் வாழும் வாய்ப்பு இருந்தால் அது 20 கிலோமீட்டர் அளவுள்ள உடையாத பனிக்கட்டியால் மூடப்பட்டதாக இருக்க வேண்டும். இந்த கடல் 25 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு மட்டுமே உருவானது என்றால் உயிர்கள் தோன்ற அது போதுமான காலமாக இருக்காது. ஈரோப்பா மற்றும் என்சலாடஸ் நிலவுகள் மிமாஸை விட நம்பிக்கையூட்டும் நிலவுகளாக உள்ளன என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
பூமிக்கு அப்பால் சூரிய குடும்பத்தில் உள்ள பிற கோல்கள், நிலவுகளில் வாழ இயலுமா என்ற விஞ்ஞானிகளின் தேடலுக்கு மிமாஸ் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கோள்: https://www.theguardian.com/science/2024/feb/07/saturn-death-star-moon-mimas-hidden-ocean?
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- கற்காலத்திற்குப் பிறகு பூமிக்கு வரும் அதிசய விண்கல்
- சனியின் நிலவில் உயிர்கள்!?
- நிலவுக்குச் செல்வது ஏன் கடினமாக உள்ளது?
- பால்வீதியில் ராட்சச நட்சத்திரக் கூட்டத்தின் கண்டுபிடிப்பு
- பூமிக்கு வெளியே ஓர் உயிர்க்கோள்
- விண்வெளியின் தொலைதூரத்தில் இருந்து ஒரு நற்செய்தி
- பூமியில் வந்து விழும் உயர் ஆற்றல் துகள்கள்
- விண்வெளியில் தொழிற்சாலைகள்
- விண்வெளி இரகசியங்களை ஆராய ஒரு மணிஜாடி சோதனை
- ஈர்ப்பு அலைகளை கண்டுபிடித்த பார்க்ஸ் தொலைநோக்கி
- நிலவில் வீதிகள்
- சைக்கியை நோக்கி ஒரு பயணம்
- உலகின் காடுகளைக் காக்க கிடைத்த ஓர் அரிய வாய்ப்பு - ஜெடி
- வியாழனின் நிலவில் கார்பனின் கடல்
- இரும்பு நிலா
- உயிரின் தோற்றத்தை அறிய உதவுமா பெனு?
- நிலவின் கண்ணாடி மணிகளில் நீர்த்திவலைகள்
- பூமிக்கு வந்த 'பெனு'
- பிரபஞ்சத்தின் 'இருண்ட பக்கங்களை' ஆராயும் 'யூக்லிட்'
- கூரை ஏறி வானம் படிக்கும் விஞ்ஞானிகள்