கீற்றில் தேட...
அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: சுற்றுச்சூழல்
காலநிலை ஆய்வாளர்களுக்கு இது அச்சுறுத்தும் சமயமாக உள்ளது. பூமியின் எதிர்காலம் மங்கிக் கொண்டிருக்கிறது என்பதை ஆதாரங்களுடன் அவர்கள் ஒன்றன்பின் ஒன்றாக நிரூபிக்கும்போதே அடுத்தடுத்த பேரிடர்கள் எல்லா பகுதிகளிலும் நிகழ்ந்து பெரும் அச்சத்தை ஏற்படுத்துகிறது. அதிதீவிரப் புயல்கள், கடுமையான வறட்சி, பெருவெள்ளப் பெருக்குகள், பனிப்பாறைகளின் வேகமான அழிவு போன்றவை விஞ்ஞானிகளை மேலும் திகிலடையச் செய்கிறது. விஞ்ஞானிகள் விடும் எச்சரிக்கைகளைக் காட்டிலும் மோசமாக அதைவிட பல மடங்கு நாசத்தை ஏற்படுத்தும் வகையில் அடுத்தடுத்த அழிவுகள் தொடர்கின்றன.
எங்கெங்கு இலாதபடி
இங்கிலாந்தில் நிலவிய 40.3 டிகிரி வெப்பநிலை, நாட்டின் மூன்றில் ஒரு பகுதியை நீருக்குள் மூழ்கடித்த பாகிஸ்தான் பெருமழை, வெள்ளம், சோமாலியாவில் கடந்த நான்காண்டுகளாக நிலவும் கொடும் வறட்சி, அமெரிக்காவில் வீசிய 2021 ஹரிக்கேன் ஐடா போன்றவை சூழல் நாசத்தின் எதிரொலிகளில் ஒரு சில மட்டுமே. எதிர்பார்த்ததை விட புவி வெப்ப உயர்வு ஏற்படுவது மட்டும் இதற்குக் காரணம் இல்லை. இதன் விளைவாக நிகழ்ந்த அழிவுகள் எதிர்பார்த்ததைவிட பேரழிவுகளாக உள்ளன என்பதே பிரச்சனை.வெப்ப உயர்வு குறித்த மாதிரி கணிப்புகளின்படியே புவி வெப்ப உயர்வு இருந்தாலும், காலநிலை மாற்றம் அதிவேகத்தில் நிகழ்வதே இன்றுள்ள அச்சம் என்று அமெரிக்க காலநிலை ஆய்வாளரும், பென்சில்வேனியா பல்கலைக்கழக விஞ்ஞானியுமான மைக்கேல் இ மேன் (Michael E Mann) கூறுகிறார். கணிப்பதைவிட பேரிடர்கள் அதிதீவிரத்துடன் விரைவாக நிகழ்கின்றன என்று ஜெர்மனியின் பாட்ஸ்டம் (Potsdam) காலநிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் ஜோஹன் ராக்ஸ்ட்ரம் (Johan Rockstrom) கூறுகிறார்.
1.2 டிகிரி சூட்டில் சுழலும் பூமி
தொழிற்புரட்சி காலத்தை விட 1.2 டிகிரி அதிக வெப்பநிலையில் பூமி உள்ளபோது இவை நிகழ்கின்றன. சமீபத்தில் நடந்த பன்னாட்டு காலநிலை (IPCC) கூட்டத்தில் வெப்ப உயர்வை 1.5 டிகிரிக்குள் கட்டுப்படுத்த நாடுகள் உறுதியளித்தாலும், 1.5 என்ற அளவு பத்தாண்டுகளுக்குள் எட்டப்படும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
விளைவு இப்போதுள்ளதை விட மோசமான வறட்சி, வெப்ப அலைத் தாக்குதல்கள், பெருவெள்ளம், அதிதீவிர நோய்ப்பரவல் உட்பட உலகம் 1.5 டிகிரி வெப்ப உயர்வை எட்டும்போது இயற்கையின் நான்கு அம்சங்கள் பெரிதும் பாதிக்கப்படும் என்று ஜோஹன் தலைமையில் அமைந்த ஆய்வுக்குழுவின் அறிக்கை கூறுகிறது. கிரீன்லாந்து மற்றும் மேற்கு அண்டார்டிகா பனிப்பாறைகள் உருகுதலால் கடல்நீர் மட்டம் பல இடங்களில் பல மீட்டர்கள் அளவு உயரும்.
கனடா, ரஷ்யாவில் இருக்கும் உறைபனிப்பகுதிகள் உருக ஆரம்பிக்கும்போது அவற்றில் இருக்கும் கார்பன் டை ஆக்சைடை விட பல மடங்கு பாதிப்பை ஏற்படுத்தும் பசுமைக்குடில் வாயுவான மீத்தேன் பெருமளவில் உமிழப்படும். 1.5 டிகிரி வெப்பநிலையில் எல்லா இடங்களிலும் இருக்கும் பவளப்பாறைகள் அழிய ஆரம்பிக்கும்.
பூமியில் வாழத் தகுதியான இடங்கள் இல்லை
நம் குழந்தைகளுக்கும், வரப் போகும் தலைமுறைகளுக்கும் மனிதன் வாழத் தகுதியான இடங்கள் சுருங்கிவிட்ட பூமியையே நம்மால் ஒப்படைக்க முடியும் என்பதே இதன் பொருள். பேரழிவை ஏற்படுத்தும் விளிம்பை நோக்கி பூமி மெல்ல மெல்ல தள்ளாடி தள்ளாடி நகர்ந்து கொண்டிருக்கிறது.
காப்27 உச்சிமாநாடு
எகிப்து ஷெர்ம் எல்-ஷேக் காப் 27 காலநிலை உச்சிமாநாடு ஐநாவின் “உலகம் பூமி 2.8 டிகிரி சி வெப்ப உயர்வை நோக்கி விரைவாக சென்று கொண்டிருக்கிறது” என்ற எச்சரிக்கையுடனேயே நிகழ்கிறது. 2021 க்ளாஸ்கோ மாநாட்டிற்குப் பிறகு ஒரு ஆண்டை உலக நாடுகள் வீணாக்கி விட்டன என்று கிராண்ட்தம் (Grantham) காலநிலை ஆய்வு மையத்தின் கொள்கை வகுப்புப் பிரிவின் இயக்குனர் பாப் வார்டு (Bob Ward) கூறுகிறார். காலநிலை சீரழிவுகளால் ஏழை நாடுகளில் அதிகரித்து வரும் இழப்பு மற்றும் சேதங்களை மேற்கித்திய நாடுகள் உணர வேண்டும்.
1.5 வரையறை
2050ம் ஆண்டிற்குள் சுழி நிலை கார்பன் உமிழ்வுநிலையை அடைய வேண்டுமென்றால் அதை ஆண்டிற்கு 5 முதல் 7% குறைக்க வேண்டும். இப்போது இந்த அளவு ஆண்டிற்கு 1 முதல் 2% வரை உள்ளது. அதனால் கார்பன் உமிழ்வின் குறைப்பு என்பது காப்27 மாநாட்டின் முக்கிய குறிக்கோளாக இருக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். ஆனால் ஏழை நாடுகள் இழப்பு, நஷ்டைஈடு கோருவதையே முக்கிய பொருளாக எடுத்துக் கொள்ளும் என்று நம்பப்படுகிறது.
பழி ஒரு இடம் பாவம் ஒரு இடம்
புவி வெப்ப உயர்விற்கு முக்கிய காரணமாக இருக்கும் பணக்கார நாடுகள் தங்கள் பொருளாதார வசதிக்காக கார்பன் உமிழ்வைக் குறைப்பதில் நாட்டம் காட்டாதபோது வெப்ப உயர்வின் பாதிப்புகளை ஏழை நாடுகளே அதிகம் அனுபவிக்கின்றன. அதனால் நஷ்டஈடு கோருதலே பேசுபொருட்களில் முக்கிய இடம் பெறும் என்று நோக்கர்கள் கருதுகின்றனர். வளரும் நாடுகளின் இந்த கோரிக்கை நியாயமானது என்று ஜோஹன் உட்பட பல விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இதில் பணக்கார நாடுகள் எவ்வாறு நடந்து கொள்ளும் என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும் என்று யு கே வானிலை நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி ஸ்டீபன் பெல்ச்சர் (Stephen Belcher) கூறுகிறார். இனி வெட்டிப் பேச்சுக்கள் பேசி வீணாக்க நேரமில்லை. உடனடியாக செயலில் இறங்க வேண்டும் என்று அவர் புகழ்பெற்ற கார்டியன் நிறுவனத்திற்கு அளித்த நேர்முகத்தில் கூறியுள்ளார்.
அடைபடும் வாய்ப்புகள்
இன்னமும் காலம் இருக்கிறது. ஆனால் தாமதிக்கப்படும் ஒவ்வொரு விநாடியும் பூமியை மீட்பதற்கான வாய்ப்புகள் குறைந்து கொண்டேயிருக்கின்றன. சாளரங்கள் அடைபடுகின்றன என்பதை உணர்ந்து காப்27 உச்சி மாநாட்டில் உலக நாடுகள் செயல்படவேண்டும் என்று விஞ்ஞானிகள் வலியுறுத்துகின்றனர்.
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- பாண்டி
- பிரிவு: சுற்றுச்சூழல்
பத்தாண்டுகளுக்கு முன்னர் ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கம், சுனாமி பேரலை போன்ற இயற்கை பேரிடரால் கிழக்குக் கடற்கரையை ஒட்டியப் பகுதிகளை புரட்டிப் போட்டது.
அதோடு மட்டுமல்லாமல் புகுஷிமா அணு உலைகளில் ஏற்பட்ட விபத்து நவீன வரலாற்றில் நிகழ்ந்த மிகப்பெரிய Industrial disaster - ஆக கருதப்படுகின்றது. ஜப்பானிய மக்கள் இந்த நிகழ்வுகளை 3/12 என்று அதனை நினைவூட்டும் விதமாக அழைக்கின்றனர்.
இப்போது அந்தப் பகுதியின் நிலை என்ன? இந்த கோரச் சம்பவத்தில் இருந்து உலகம் கற்றுக் கொண்ட பாடங்கள் என்ன? மக்கள் அங்கு மீண்டும் குடியேற முடியுமா? என பல்வேறு கேள்விகள் இருக்கின்றன.
சுருக்கமாக அந்த வரலாற்று நிகழ்வுகளைப் பார்ப்போம்,
அணு உலை விபத்து:
2011ஆம் ஆண்டு மார்ச் 11, அதிகாலை 2:46 மணியளவில், ஜப்பானின் Sendai என்ற நகரின் மத்தியில் நிலநடுக்கம் (9.0 magnitude) ஏற்ப்பட்டது. நகரின் பல கட்டிடங்கள் வீடுகள் அதிர்ந்து பாதிப்புக்குள்ளாகின. நிலநடுக்கத்தின் தாக்கம் அந்நாட்டின் வடகிழக்கு கடற்கரையில் அதிகாலை 3:42 மணி அளவில் சுனாமி ஏற்ப்பட்டது.
சுமார் 62 அடி உயரத்தில் கடல் அலைகள் உயர்ந்து வீசியது. சுனாமியின் தாக்குதல் 240 மைல்கள் அளவில் கடற்கரையையும் நிலப்பரப்பையும் சேதப்படுத்தியது. இதில் இருபதாயிரம் மனித உயிர்கள் பலியாகியுள்ளன, சில ஆயிரம் மக்கள் இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை.
மனித உயிர்கள் மட்டுமல்லாமல் பிற உயிரினங்களும் பலியாகின. ஏறத்தாழ 42,000 மக்கள் தங்கள் சொந்த இடங்களை விட்டு குடிபெயர்ந்து இருக்கிறார்கள். பத்தாண்டுகள் ஆகியும் அம்மக்களை மீண்டும் தங்களது சொந்த இடங்களுக்கு திரும்ப அரசு மறுத்திருக்கிறது. ஜப்பானிய வரலாற்றில் இதுபோன்ற மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் இதற்கு முன்னர் பதிவாதியது இல்லை என்றே தரவுகள் தெரிவிக்கின்றன.
சுனாமி பேரலையின் தாக்குதலுக்கு புகுஷிமா - டாய்ச்சி அணுவுலையும் (Fukushima Daiichi nuclear power station) சேதமடைந்தது. அணு உலை அமைந்திருக்கும் இடம் புகுஷிமா மாவட்டத்தில் உள்ள Tomoka - Naraha எனும் இரண்டு நகரங்களின் மத்தியில் கடற்கரை பகுதியில் அமைந்துள்ளது.
சுனாமி ஏற்பட்ட அடுத்தடுத்த நேரத்தில் (அதிகாலை 3:30) அணு உலையின் உள்ளே (Power failure) மின்சாரம் தடைபட்டது. மின்சாரம் தடைப்பட்டால் அணு உலையின் ஜெனரேட்டர்கள் ஓடத் தொடங்கி அவசரகால மின்சாரத்தை கட்டுப்பாடு அறைக்கும் குளிரூட்டும் சாதனங்களுக்கும் செல்லும்.
கடல் நீர் உள்ளே புகுந்ததால் அலகு 1,2 இவ்விரண்டிலும் மின்கலங்கள் மொத்தமாக செயல் இழந்து விட்டது. இதனால், குளிரூட்டும் கருவிகள் செயல் இழந்தது. அணு உலையின் யுரேனியம் சுவர்களில் ஏற்படும் வெப்பம் சுழற்சி முறையில் வெளியேற்றம் நடைபெறவில்லை.
வெளியில் இருந்த Heat exchanger வேலை செய்யும் சூழல் இல்லாததால் Reactors pressure vessel (RPV) களில் அதிகப்படியான நீராவி உருவாகியது இது மேலும் அதிகப்படியான அழுத்தத்தை reactors உள்ளே ஏற்ப்படுத்தியது.
விளைவு அணு உலையின் ஒட்டுமொத்த ஓட்டமும் நின்றுவிட்டது, மிகப் பெரிய விபத்து. (a catastrophic failure) ஆனால், மூன்றாவது அலகில் 30 மணி நேரங்களுக்கு மின்கலங்கள் கட்டுப்பாடு அறைக்கு மின்சாரத்தை கொடுத்திருக்கிறது.
அன்றைய இரவு 7:03 மணி அளவில் அணு உலையில் அவசரகால பிரகடனம் செய்யப்பட்டது. 7:30 மணிக்கு fuel rod வெடித்ததில் வெப்பநிலை 2800°C க்கு உயர்ந்தது. அதனைத் தொடர்ந்து சுற்றுவட்டப் பகுதியில் உள்ள மக்களை வெளியேற அறிவிப்பு வெளியிட்டார்கள். உடனடியாக 20 கிலோமீட்டர் பரப்பளவில் மக்கள் வெளியேற்றப்பட்டனர்.
மார்ச் 12 ஆம் தேதி, நிலநடுக்கம், சுனாமி ஏற்பட அடுத்தநாள் மதியம் 3:30 மணிக்கு அணு உலையின் ஒன்றாவது அலகில் உள்ள reactors containment -ல் ஹைட்ரஜன் வெடித்து சிதறியது. வெடித்து சிதறிய ஹைட்ரஜன் காற்றுடன் கலந்து எரியத் தொடங்கியது.
உலையின் உள்ளே வெப்பநிலை உயர்ந்தது. ஒன்றாவது அலகின் Corium, fuel and control rods முற்றிலுமாக சேதமடைந்தது. இந்த தாக்கம் மே மாதம் வரையில் இதனுள் 1.8 MW அளவில் வெப்பம் உள்ளே இருந்தது. அணு உலை அலகு 2 மற்றும் 3 அதன் உற்பத்தி தடைபட்டு உலைகள் செயலிழந்தது.
இது சமீபத்திய வரலாற்றில் நிகழ்ந்த மிக மோசமான ஒரு அணு உலை விபத்து என்று கூறினார்கள். அதில் மற்ற இரண்டு அலகுகள் 4,5 உடனடியாக நிறுத்தப்பட்டது.
ஜப்பானில் மின்சார சேவைகள் வழங்கும் Tokyo Electric Power Corporation (TEPCO) என்ற அமைப்பு தான் ஜப்பானில் அணு உலைகளை கண்காணித்து வருகிறது. அணு உலை விபத்து தொடர்பான சுயாதீன விசாரணையில், அந்த விபத்துகள் நிலநடுக்கம்/சுனாமியால் ஏற்பட்டது அல்ல அங்கு பணியாற்றிய ஊழியர்கள் தவறாக முறையில் இயக்கியதே காரணம் (as human made error) என்றது. அதன் விளைவு பாதுகாப்பு வழிமுறைகளை சரியாக கையாளவில்லை என்றது.
பாதிப்படைந்த அணு உலையின் உள்ளே 900 டன் சிதைவடைந்த யுரேனியம் இன்னமும் உள்ளே தான் இருக்கிறது. இதன் கழிவுகள் அகற்ற மேலும் முப்பது முதல் நாற்பது ஆண்டுகள் வரை ஆகலாம் என்று கூறுகிறார்கள் நிபுணர்கள். அணு உலையை சுற்றியுள்ள இடிபாடுகளை அகற்றுவதற்கு ஆரம்பத்தில் ஒரு நாளைக்கு 4000 ஊழியர்கள் என்றளவில் பணி அமர்த்தி அகற்றினார்கள்.
அதற்கென கதிர்வீச்சு தாக்காத உடைகள் கால்களில் மூன்று அடுக்காக துணிகள் என்று முழுமையான பாதுகாப்பு முறைமைகள் கையாளப்பட்டது. சிதைவடைந்த யுரேனியம் அங்குள்ள கான்கிரீட் சுவர்கள் மீதும் கலந்திருப்பதால் அவற்றை அகற்றுவது மிகவும் கடினமானச் சவாலாக இருக்கிறது.
இதனை அகற்றுவதற்கு மனிதர்களை உள்ளே அனுப்புவது சிக்கலான காரியமாக இருப்பதால் அங்கே ரோபோக்கள் உதவியுடன் யுரேனியம் கலந்த தண்ணீரை அகற்ற இயந்திரங்களை உள்ளே அனுப்பினார்கள். எனினும் அணு உலையின் கதிர்வீச்சு தண்ணீர் இன்னும் வெளியே எடுக்க முடியவில்லை என்பதே உண்மை.
அணு உலையின் அருகிலுள்ள இடங்களில் எங்கெல்லாம் நிலத்தடி நீரில் கதிர்வீச்சு கலந்திருக்கிறதோ அதை சுமார் 1000 மிகப்பெரிய கன்டெய்னரில் டேங்குகளில் சேமித்து வைத்திருக்கிறார்கள். Advance liquid processing system என்ற முறையில் சுத்திகரிப்பு நடைபெற்றது. இதன் மொத்த கொள்ளளவு 1.34 மில்லியன் டன்கள் ஆகும். இது முழுமையாக நிரப்புவதற்கு 2022 வரை ஆகலாம் என்றால் எவ்வளவு பாதிப்புகள் ஏற்பட்டிருக்கிறது என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியும். இதனை சுத்திகரிப்பு (Water Treatment) செய்திருக்கிறார்கள்.
சேதமடைந்தத தரை கீழ் தளத்தின் கதிர்வீச்சு தண்ணீர் கழிவுநீர் சுவர்கள் உடைப்பினால் அருகில் உள்ள கடல்நீரில் கலந்திருக்கிறது. அந்த கழிவுநீர் சுவர்களை இப்போது மூடியிருக்கிறார்கள். அதுவும் ஆயிரக்கணக்கான மண் மூட்டைகளை வைத்து அடைந்திருக்கிறார்கள். இருந்தபோதிலும் அணு உலையின் கதிர்வீச்சு கசிவு சிறிய அளவில் தொடர்ந்து கடலில் சென்று கொண்டு தான் இருக்கிறது என்றது TEPCO.
அணு உலையில் இருந்து சேகரிக்கப்பட்ட கதிர்வீச்சு தண்ணீரை சுத்திகரிப்பு செய்த பின்னர் அதனை பசுபிக் கடலில் கலக்க திட்டம் வைத்திருக்கிறது ஜப்பானிய அரசு. அதில் குறைந்த அளவான டிரிடியம் மட்டுமே இருக்கும் அது உயிரினங்களுக்கு பாதிப்புகள் ஏற்படாது என்றது அரசு. இருந்தாலும் உள்ளூர் மக்களிடமும் மீனவர்களிடம் இதுகுறித்த அச்சம் நீங்கவில்லை.
ஜப்பானில் மின்உற்பத்தி பெறுவது பெரும்பாலும் அணு உலைகளை சார்ந்தே உள்ளது. இங்கு நிலக்கரி, இயற்கை எரிவாயவு, கச்சா எண்ணெய் போன்றவைகள் அதிகம் இல்லாததால் இவைகளை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறார்கள். 1960 காலங்களிலேயே அணு உலை மின்சார உற்பத்தியில் தன்னிறைவு பெற தொடங்கியது. ஜப்பான் முளுவதும் மொத்தம் 54 அணு உலைகள் இயங்கி வந்தது. இதிலிருந்து 30% மின்சாரத்தை பூர்த்தி செய்கிறார்கள்.
புகுஷிமா அணு உலைகளும் 1971-75 -ல் கட்டி முடிக்கப்பட்டது. இது அமெரிக்காவின் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் GE - boiling water reactors (BWR) என்ற பழைய (year 1960 - design) வகையைச் சார்ந்தது. முறையே ஜப்பானின் Toshiba, Hitachi இரண்டு நிறுவனங்களின் கூட்டு முயற்சியில் நிறுவப்பட்டது ஆகும். அணு உலை அலகு 1 -ன் உற்பத்தி திறன் 460MW. அணு உலை அலகு 2-5 வரை உற்பத்தி திறன் 1100MW ஆகும்.
புவி வெப்பமயமாதல் காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு மக்களிடையே ஏற்பட்டபோது, கரியமில வாயு வெளியேறுவதை (CO2 emissions) தடுக்க வேண்டும் என்ற கொள்கை முடிவுகள் பல்வேறு நாடுகளில் எடுக்கப்பட்டது. மின்சார உற்பத்திக்கு பெரிதும் பயன்பாட்டில் இருக்கும் நிலக்கரியை பயன்படுத்தி இயங்கும் அனல் மின் நிலையங்களை படிப்படியாக குறைத்து மாற்று எரிசக்திக்கு மாறுவது என்ற திட்டங்கள் வகுக்கப்படும் போது அதில் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை முன்னிறுத்துவது அதோடு net zero emissions என்று வகைப்படுத்தப்படும் அணுஉலைகளுக்கு மாறுவது என்பதும் அதிகம் பேசப்பட்டது.
அணு உலைகளில் விபத்து ஏற்பட்டால் அதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும். இதற்கு நம் முன்னே இருக்கும் சாட்சியங்கள் செர்னோபில் நகரில் நடந்த அணு உலை விபத்து, ஜப்பான் புகுஷிமா அணு உலை விபத்துகள் உதாரணமாக இருக்கின்றன.
உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரத்தை கொண்டிருக்கும் ஜப்பான் நாடே அணு உலை விபத்துக்கள் நிகழ்ந்தால் எப்படி கையாள்வது என்பதில் திணறிக் கொண்டிருக்கும் போது. வளர்ந்து வரும் நாடுகளில் இதுபோன்ற விபத்துக்கள் ஏற்பட்டால் இயற்கை / தொழிற்சாலை பேரிடர் மேலாண்மையை எப்படி கையாளப் போகிறோம் என்பது விவாதிக்கப்பட வேண்டிய பொருள்.
புகுஷிமா அணுஉலை விபத்திற்கு பிறகு ஜப்பான் அரசாங்கம் ஏற்கனவே இயங்கிவரும் அணுஉலைகளை படிப்படியாக குறைத்து மாற்று எரிசக்திக்கு மாறப் போகிறோம் அதாவது சூரிய ஆற்றல், காற்றாலை, போன்ற புதுப்பிக்கத்தக்க ஆற்றல்கள் என்கிற கொள்கை முடிவுக்கு வந்திருக்கிறது.
இதேபோல் ஒரு கொள்கை முடிவை ஐரோப்பிய நாடுகளும் மிகத் தீவிரமாக கையாண்டு வருகின்றனர் குறிப்பாக ஜெர்மனி அரசாங்கம் 2022 ஆண்டுக்குள் மொத்தமுள்ள 17 உலைகளில் 8 உலைகளை நிரந்தரமாக மூடப்போகிறது. மீதமுள்ள உலைகளை 2030 க்குள் மூடிவிட திட்டங்கள் வைத்திருக்கிறார்கள்.
சுவிட்சர்லாந்து மற்றும் ஸ்பெயின் நாடுகள் புதிதாக அணு உலைகள் கட்டுவதில்லை என்று முடிவுக்கு வந்திருக்கிறார்கள். இன்னும் இது போன்ற கொள்கை முடிவுகளை பல நாடுகள் எடுத்து வருகிறார்கள்.
எதிர்காலத்தில் அணு உலை விபத்துகள் ஏற்படாமல் இருக்க அதற்கான கொள்கை முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்.
கடந்த ஆண்டு நடைபெறவிருந்த ஒலிம்பிக் போட்டிகள் புகுஷிமா பகுதிகளிலும் நடைபெறுவதாக இருந்தது. ஒலிம்பிக் தீபத்தை அணு உலை விபத்து ஏற்பட்ட பகுதியில் இருந்து டோக்கியோ வரை எடுத்துச் செல்லப்படும் என்ற திட்டம் வைத்திருந்தார்கள். கொரோனா பாதிப்பினால் ஒலிம்பிக் போட்டிகள் நிறுத்திவைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கட்டுரை the world- வானொலி நிகழ்ச்சியில் வந்த செய்திகளின் தொகுப்பிலிருந்து எழுதப்பட்டது.
Reference:
1. World nuclear association
- பாண்டி
- விவரங்கள்
- பாண்டி
- பிரிவு: சுற்றுச்சூழல்
நம் பூமியெங்கும் ஆண்டுதோறும் சுமார் 1°F வெப்பநிலை அதிகரித்து வருகிறது என்பது உண்மை, இதையே புவி வெப்பமடைதல் என்ற கோட்பாட்டின் படி பாரிஸ் ஒப்பந்தம் நிறைவேறியது. வழக்கத்திற்கு மாறாக உயரும் வெப்பநிலையால் பூகோளமே வெப்ப மண்டலமாக உருமாற்றம் பெற்று வருகிறது என்பதை நம் கண்கூடாக பார்க்கிறோம்.
பொதுவாக நமது காலநிலையை நான்கு விதமான பிரிக்கப்படுகிறது. குளிர் காலம், வசந்த காலம், கோடை காலம், இலையுதிர் காலம், இதில் கூடுதலாக 'தீ எரியும் காலம்' என்ற ஒன்றை கலிபோர்னியா மாகாணத்தில் சேர்த்துக் கொள்ளலாம். ஒவ்வொரு ஆண்டும் அங்கு நிகழும் அதிகபட்சமான வெப்பநிலை ஒருபுறம் பதிவாகி அந்தப் பகுதியை வெப்ப மண்டலமாக மாற்றுகிறது, அதே வேளையில் மறுபுறம் காட்டுத் தீ தீவிரமாக உருவெடுத்தது தீயின் கொடூரம் தலை விரித்தாடுகிறது.
பூமியின் அதிகபட்ச வெப்பம்:
100 ஆண்டுகளுக்கு பின்னர் பூமியில் பதிவாகிய அதிகபட்ச வெப்பநிலையான 130° F ஃபேரன்ஹெய்ட் (54.4°C செல்சியஸ்) கலிபோர்னியாவின் மரண பள்ளத்தாக்கில், கடந்த 16ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மதியம் 3:41PM மணிக்கு பதிவாகியது. இது நவீன உலகில் பதிவாகிய அதிகபட்ச வெப்பநிலை என்கிறார்கள் வானிலை ஆராய்ச்சி வல்லுனர்கள்.
1913ஆம் ஆண்டு இதே பகுதியில் தான் 134°F வெப்பநிலை பதிவாகியது. எனினும் 100 ஆண்டுகளுக்கு முன்னர் பதியப்பட்ட இந்த வெப்பநிலையில் சந்தேகம் இருப்பதாக கூறுகிறார் வானிலை ஆராய்ச்சியாளர் Christopher Brut. "1913ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் பதிவாகியாக கூறப்படுவது எப்படி என்று தெரியவில்லை, அந்த காலகட்டத்தில் வெப்பநிலையை அளவிடும் தெர்மோமீட்டரில் 130°F தான் அதிகபட்சமாக இருந்தது.
அப்படி இருக்கும் பட்சத்தில் எப்படி 134°F பதிவாகியிருக்கும்?" என்ற கேளிவியை 2016ஆம் ஆண்டே அவர் எழுப்பினார். ஆனால், 2013ஆம் ஆண்டில் பூமியெங்கும் வீசிய வெப்பக் காற்றில் பல இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளது. குறிப்பாக இதே மரணப் பள்ளத்தாக்கில் 129°F (54°C) வெப்பநிலையும். 2016 ஆம் ஆண்டில் குவைத் நாட்டின் Mitribah என்றப் பகுதியில் 129°F பதிவாகியுள்ளது.
மரணப் பள்ளத்தாக்கு பகுதியை விட பூமியின் பிற்பகுதியிலும் அதிகபட்ச வெப்பநிலை காணப்படுகின்றது. சஹாரா பாலைவனத்தில் தொலைதூர பகுதியில் கூட அதிகமாக வெப்பம் பதியப்பட்டிருக்கலாம் ஆனால், அங்கு வெப்பத்தை அளவிடும் தெர்மோ மீட்டர் கருவிகளையும் வைத்து அளவிடவது சவாலான காரியமாக உள்ளது. மரணப் பள்ளத்தாக்கில் வெப்பநிலையை அளவிட அங்கு தெர்மிஸ்டர் என்ற கருவியை வைத்திருக்கிறார்கள் அதன் தகவல்களை ஒவ்வொரு மணி நேரத்திற்கும் செயற்கைக் கோள்களுக்கு அனுப்பி வைத்து பிறகு வெப்பநிலை கணக்கிடப்படுகிறது.
"மரணப் பள்ளத்தாக்கில் பதியப்பட்ட அதிகபட்ச வெப்பநிலை எந்த ஒரு ஆச்சரியத்தையும் ஏற்படுத்தவில்லை" என்கிறார் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள Loyola Marymount University -ன் சுற்றுச்சூழல் பேராசிரியர் Jeremy Pal. மேலும் அவர் கூறுகையில், "நமது பூகோளம் ஏற்கனவே வெப்பமானதாகத் தான் காணப்படுகிறது. காலநிலை மாற்றத்தால் இப்போது உள்ள வெப்பநிலையை விட எதிர்காலத்தில் அதிகமாக வெப்பம் பதியப்படவும் வாய்ப்புகள் இருக்கிறது" என்றார்.
WMO என்று அழைக்கப்படும் World Meteorological Organization இந்த ஆண்டில் பதியப்பட்ட வெப்பநிலையை உறுதி செய்தது. சரி அதிகபட்ச வெப்பநிலை கலிபோர்னியா மரணப் பள்ளத்தாக்கில் மட்டும் எப்படி பதிவாகிறது? இந்த கேள்விக்கு மரணப் பள்ளத்தாக்கு அமைந்திருக்கும் அமைப்பை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
கடல் மட்டத்திலிருந்து சுமார் 282 அடி ஆழத்தில் அமைந்திருக்கிறது இந்த பள்ளத்தாக்கு. கலிபோர்னியா நெவாடா இரண்டு மாகாணங்களுக்கு இடையே அமைந்திருக்கும் பரந்து விரிந்த பாலைவனம், சுற்றிலும் மலைகள் சூழ்ந்திருக்கும் பகுதி. வெப்பமான காற்று இந்த பள்ளத்தாக்கு பகுதியின் உள்ளேயே சுழற்றி சுழற்றி சுற்றுவதால் மேலும் அது வெப்பத்தை கூட்டுகிறது.
பொதுவாக ஜூலை ஆகஸ்ட் மாதத்தில் இங்கு காற்றின் வேகமும் அதிகமாக இருக்கிறது. இதுவே அதிகப்படியான வெப்பநிலை பதியப்பட காரணமாக இருக்கிறது. இந்தப் பகுதியை ஒரு மிகப்பெரிய சுற்றுலா தளம் கூட. சுற்றுலாக்கு செல்லும் வாகனங்களில் போதிய அளவுக்கு தண்ணீர் இல்லை என்றால், அங்குள்ள அதிகாரிகள் அந்த வாகனத்தை மரணப் பள்ளத்தாக்கின் வழியே பயணம் செய்ய அனுமதிக்க மாட்டார்கள்.
அனல் காற்றுக்கு புதிய பெயர்:
காலநிலை மாற்றத்தால் உயர்ந்து வரும் வெப்பநிலை இந்த ஆண்டும் ஜூலை மாதத்தை வெப்பமான மாதமாக மாற்றியுள்ளது. வெப்பநிலை பரவலாக பாக்தாத்தில் இருந்து ஜப்பான் செர்பியா வரை ஒரு அளவில் பதிவாகியுள்ளது. இயற்கைப் பேரிடர்களில் வெப்பக் காற்றும் ஒரு அபாயகரமான பேரிடராகவே கருதப்படுகிறது.
1998ல் இருந்து 2017வரை அதிகபட்ச வெப்ப நிலையால் நிகழும் மரணங்களை கணக்கிட்டுப் பார்த்ததில் இதுவரை சுமார் 1,66,000 மக்கள் இதற்கு பலியாகியுள்ளனர். அனல் வெப்பநிலை உயர்வு குறித்து நம்மிடையே பரவலான விழிப்புணர்வு இல்லை என்பது தான் கசப்பான உண்மை.
கடலில் ஏற்படும் சூறாவளி காற்றுக்கு எப்படி நாம் ஒரு பெயரை சூட்டி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துகிறோமோ அதே போல் அனல் காற்று வீசும் சமயத்திலும் அதற்கென தனியாக ஒரு பெயரிட்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பட்சத்தில், அதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
கண்களுக்குப் புலப்படாத வைரஸை நாம் 'Invisible killers' என்று எப்படி அழைக்கிறோமோ அதேபோல் வெப்ப அனல் காற்றையும் 'Invisible Killer' என்றே அழைக்க வேண்டும் என்கிறார் Adrienne Arsht-Rockefeller Foundation Resilience Center -ன் இயக்குனர் Kathy Baughman McLeod.
"நம் கண்களால் பார்க்க முடியாத ஒன்றை தீர்த்து வைப்பது மிகவும் சிக்கலான விடயம். இதன் முதன்மையான நோக்கம் என்னவென்றால் மக்களுக்கு வெப்பநிலை அனல் காற்றின் ஆபத்துக்களை குறித்தி எடுத்துக் கூறுவதாகும்" என்றார் அவர். உலக அளவில் ஏற்படும் வெப்பக்காற்று நிகழ்வுகளுக்கு ஒரு பெயரை சூட்ட வேண்டும் என்று இவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
இதையே உலக வானிலை ஆராய்ச்சி மையமும் அமெரிக்காவின் கடல்சார் ஆராய்ச்சி மையமும் பரிசீலித்து வருகிறது. The new heat alliance என்ற அமைப்பில் 30 பேர்கள் கொண்ட ஒரு குழுவில் நம் சென்னனை சேர்ந்த கிருஷ்ணன் மோகன் (Chennai's chief Resilience officer) இடம்பெற்று இருக்கிறார்.
அவர் கூறுகையில் "வெப்பக் காற்று வீசும் என தெரிந்தவுடன் அதற்கென ஒரு பெயரை சூட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தலாம். மக்கள் முன்னேற்பாடுடன் வீடுகளில் இருப்பது அதிகம் தண்ணீர் அருந்துவது மேலும் அவர்கள் அதைப்பற்றி பேசுவதை நாம் ஏற்படுத்தாலாம்" என்றார்.
விரைவிலேயே அனல் காற்றுக்கும் ஒரு பெயரை சூட்டி விழிப்புணர்வு ஏற்படும் காலம் வெகு தொலைவில் இல்லை. அப்படி ஏற்படும் பட்சத்தில் நமக்கும் அது புவி வெப்பமடைதல் குறித்த மிகப்பெரிய விழிப்புணர்வாக இருக்கும். இந்தியாவில் சென்னையும் ஒரு வெப்ப மண்டல பகுதி தான் என்பது குறிப்பிடத்தக்கது.
கலிபோர்னியாவின் காட்டுத்தீ காலம்:
கலிபோர்னியா மாகாணத்தில் கோடைகாலம் வந்தாலே அம்மக்களுக்கு காட்டுத்தீயின் அச்சமும் கூடவே வந்துவிடும். கடந்த ஒரு வார காலமாக வடக்கு கலிபோர்னியாவில் உள்ள காட்டுப் பகுதிகளில் பற்றி எரிந்துக் கொண்டிருக்கும் தீ, இதுவரை சுமார் 1.4 மில்லியன் ஏக்கர் பரப்பளவில் காடுகளை சேதப்படுத்தியது. முறையே இது வெவ்வேறு பகுதிகளில் 7002 தீ (Wildfire) எரியும் சம்பவங்களால் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
தீயணைப்பு வானிலை ஆராய்ச்சி மையத்தின் கணக்கின்படி 1,100 மின்னல்கள் (dry lightings) தாக்கியதால் இந்த தீ விபத்துகள் ஏற்பட்டிருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 300 மின்னல்கள் தாக்கியதால் மேலும் பல பகுதிகளில் தீ பரவிக் கொண்டிருக்கிறது.
மாகாணத்தின் ஆளுநர் கேவின் நீயூசம் (California Gov. Gavin Newsom) கூறுகையில் கடந்த நூறு ஆண்டுகளில் காணப்படாத சம்பவமாக இது மாறிவருகிறது. மாகாணத்தில் நிகழும் தீ சம்பவங்கள் புவி வெப்பமடைதலுக்கு சான்று என்றார். ஏற்கனவே கலிபோர்னியா மாகாணம் என்பது வெவ்வேறு கால நிலைகளை கொண்ட பகுதியாகும்.
சான்டா குரூஸ் மலைப் பகுதிகளில் ஏற்பட்ட தீயினால் ஏழு மனித உயிர்கள் பலியாகியிருக்கிறது. காட்டு விலங்குகளை பற்றிய தகவல்கள் எதுவும் இதுவரை இல்லை. தீயை கட்டுப்படுத்தும் வகையில் 14000 தீயணைப்பு வீரர்கள் களத்தில் இருக்கிறார்கள். எனினும் அருகில் உள்ள மாகாணங்களில் இருந்தும் தீயணைப்பு வாகனங்களுடன் வீரர்களும் வந்து சேர்த்திருக்கிறார்கள்.
கடந்த சில ஆண்டுகளாக இதே போல தீவிபத்து ஏற்பட்டு பல காடுகள் சேதம் அடைந்தது. பல மக்கள் அவ்விடங்களை விட்டு வேறு இடங்களுக்குக் குடிப் பெயர்ந்து விட்டனர். காலநிலை மாற்றம் உள் நாட்டு மக்களையே வெவ்வேறு இடங்களுக்கு குடிபெயர வைக்கிறது என்கிறதை நாம் அறிந்திருக்கிறோம். புவி வெப்பமடைந்து வருகிறது என்பதற்கு இதுவே சான்றுகள் ஆகும்.
கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத்தீ விபத்து குறித்த விசாரணை அறிக்கையை நேற்று வெளிவந்தது. அடுத்த ஆண்டும் இதே போன்ற ஒரு சம்பவம் ஏற்பட்டு நீயூ சவுத் வேல்ஸ் பகுதியை சேதப்படுத்தலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
அதில் குறிப்பிடும்படியாக அவர்கள் மேற்கோள் காட்டியது 'கடுமையான வறண்ட நிலம், வெப்பம், வேகமாக அனல் காற்று மற்றும் பருவநிலை மாற்றம் புவி எறிவதற்கு காரணமாக கருதப்படுகிறது' என்றது அந்த அறிக்கை. ஆஸ்திரேலியா காட்டுத்தீ சம்பவத்தை நினைத்துப் பார்க்கும் போதே மனம் படபடத்தது போகிறது, இனிமேலும் அது போன்ற ஒரு சம்பவம் நிகழாமல் இருக்க வேண்டும்.
நன்றி; https://www.npr.org/2020/08/17/903192396/130-degrees-death-valley-sees-what-could-be-record-heat
- பாண்டி
- விவரங்கள்
- பாண்டி
- பிரிவு: சுற்றுச்சூழல்
இயற்கை எழில் கொஞ்சும் மொரிஷியஸ் தீவுகள், அதன் அழகிய கடற்கரை, தெளிந்த கடல் நீர் இவையெல்லாம் இப்போது ஹைட்ரோகார்பன் நெடி வீசும் எண்ணெய் கடலில் கலந்து, கடற்கரையைக் கருப்பு நிறத்தில் மாற்றி விட்டது. ஆம், ஜப்பானிய எண்ணெய் கப்பல் ஒன்று விபத்துக்குள்ளாகி கச்சா எண்ணெய் மொரிஷியஸ் கடல் பகுதியில் கலந்து விட்டது. இது அந்த நாட்டில் ஏற்பட்ட மிகப் பெரிய பேரிடர் பாதிப்பாகும்.
ஒவ்வொரு ஆண்டும் எண்ணெய்க் கப்பல்கள் ஏதாவது ஒரு கடல் பகுதியில் விபத்துக்குள்ளாகி கடல் பகுதியை நாசப்படுத்தும் நிகழ்வு நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. கடந்த ஜூலை மாதம் 25ஆம் தேதியே இந்தியப் பெருங்கடலில் உள்ள மொரிஷியஸ் தீவுப் பகுதியில் ஜப்பானிய நாட்டு எண்ணெய்க் கப்பலான 'MV Wakashio' இங்குள்ள பவளப்பாறைகளில் சிக்கிக்கொண்டு பழுதாகி நகர முடியாமல் நின்றது.
கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்குப் பின்னர் தான், ஆகஸ்ட் 11ஆம் தேதி கப்பலில் இருந்து எண்ணெய் வெளியேற ஆரம்பித்து. ஏறத்தாழ 1200 மெட்ரிக் டன் எண்ணெய் கடலில் கலந்தது.
சென்னைத் துறைமுக கடற்பகுதியில் கொட்டிய எண்ணையை எப்படி பக்கெட் மூலம் எடுத்துக் கையாண்டார்களோ, அதேபோன்ற நிலைதான் மொரிஷியஸ் கடல் பகுதியில் கொட்டிய எண்ணெயை, நூற்பாலை துணிகள் மற்றும் கரும்பு சக்கையை பெரிய குழாய் போல் வடிவமைத்து கடலில் கலந்த எண்ணெய்யை எடுக்க கையாண்டிருக்கிறார்கள் அங்குள்ள தனியார் நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள்.
மொரிஷியஸ் தீவு பகுதிகளில் அமைந்திருக்கும் மாங்குரோவ் காடுகள், பவளப் பாறைகள், அரியவகை கடல்வாழ் உயிரினங்களுக்கு இது நிச்சயம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தலாம். தற்போது கப்பல் நிற்கும் காட்சியைப் பார்க்கும் போது கப்பல் இரண்டாக உடைவதற்கு வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. அப்படி நிகழும் பட்சத்தில் எண்ணெய்க் கப்பலில் மீதியிருக்கும் 2000 மெட்ரிக் டன் எண்ணெய்யும் கடலில் கலக்கும் ஆபத்து இருக்கிறது.
"ஏற்கனவே சில அரிய வகை உயிரினங்கள் கச்சா எண்ணெயில் சிக்கி உயிரிழந்துள்ளது. பவளப் பாறைகளில் வளர்ந்திருக்கும் செடிகள் மற்றும் கடல் வாழ் உயிரினங்கள் இந்த பாதிப்புகளில் இருந்து மீண்டுவர இன்னும் சில காலங்கள் ஆகலாம்" என்றார் மொரிஷியஸ் கடல் பாதுகாப்பு (Mauritius Marine Conservation Society) தலைவர் Jacqueline Sauzier.
மொரிஷியஸ் பிரதமர் Pravind Jugnauth, கடலில் கலந்து இருக்கும் எண்ணையை அப்புறப்படுத்த பிரஞ்சு நாட்டின் மீட்புக் குழுவை அனுப்பி வைக்குமாறு பிரஞ்சு அதிபரிடம் கேட்டுக் கொண்டார். பிரெஞ்சு நாட்டு மீட்புக் குழுவும் உடனடியாக மொரிஷியஸ் கடல் பகுதிக்கு விரைந்தது. மொரீசியஸ் நாடு பிரெஞ்சு நாட்டு காலனிக்கு உட்பட்ட ஒன்றாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜப்பானிய எண்ணெய் கப்பலை இயக்கி வந்த 'Mitsui OSK lines' என்ற நிறுவனம், "இந்த கப்பல் சீனாவில் இருந்து பிரேசில் நாட்டிற்கு எண்ணெய் எடுத்துக் கொண்டு சென்றது. மோசமான வானிலை காரணமாக கப்பல் வேறு திசையில் திரும்பி பவளப் பாறைகளில் சிக்கி விட்டது. விபத்து நிகழ்ந்தது குறித்து நாங்கள் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம். அதோடு சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்திய இந்த விபத்து குறித்து வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம்." என்றது.
விபத்தாகிய கப்பலில் மீதமிருக்கும் எண்ணெய்யை அகற்ற வேறு மீட்புக் கப்பல்களை அந்த பகுதிக்கு அனுப்பியது. 1000 மெட்ரிக் டன் எண்ணெயை வேறு கப்பலுக்கு மாற்றி விட்டார்கள்.
கப்பல் பழுதாகி நின்ற நாளிலேயே அவர்கள் முறையான தகவல்களை தெரிவித்து இருந்தால் இந்த பேரிழப்பு தவிர்க்கப்பட்டிருக்கும். பல அரிய வகை உயிரினங்களும், சுற்றுச் சூழலும் பாதுகாக்கப்பட்டிருக்கும். மொரீசியஸ் நாட்டின் முக்கிய வருமானமே அதன் சுற்றுலாத் துறையை சார்ந்து தான் உள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பினால் ஏற்கனவே சுற்றுலாத் துறை பாதிக்கப்பட்டு இருக்கிறது. இப்போது ஒட்டுமொத்த நாடுமே அவசர நிலைப் பிரகடனம் செய்திருக்கும் நிலையில் மக்களின் வாழ்வாதாரத்திற்கும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யப்படும் நாடுகளிலிருந்து உலகின் பிற பகுதிகளுக்கு கச்சா எண்ணெய்யை கடல்வழி மார்க்கமாக எண்ணெய் கப்பல்கள் மூலம் அதிகமாக எடுத்துச் செல்லப்படுகிறது. சமீபகாலமாக எண்ணைக் கப்பல்கள் கடலுக்குள் கவிழ்ந்து கச்சா எண்ணெய் கடலில் கலப்பது குறைந்திருந்தது என்று ஓர் ஆய்வறிக்கை கூறுகிறது.
எனினும் சில தவிர்க்க முடியாத சம்பவங்கள் நிகழ்கின்றன. அதில் நாம் குறிப்பிடப்படும்படி சொல்ல வேண்டும் என்றால், சென்னை கப்பல் விபத்து சம்பவத்தை குறிப்பிடலாம். கடந்த 2017ல் சென்னை எண்ணூர் துறைமுகம் பகுதியில் எண்ணெய் கப்பல் ஒன்று மற்றொரு கப்பலுடன் மோதி விபத்துக்குள்ளாகியது. கப்பலில் இருந்த எண்ணெய் முழுவதும் கடல் நீரில் மிதந்தது.
ஆம், மறக்க முடியுமா அந்த எண்ணெய் விபத்து சம்பவத்தை! டிஜிட்டல் இந்தியா, மேக் இன் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா, ஒன் இந்தியா, நியூ இந்தியா இப்படிப் பல்வேறு வகையான இந்தியாக்களை ஒன்றிய அரசு அறிவித்திருந்தாலும். கடைசியில் கடலிலிருந்து எண்ணெய்யை எடுப்பதற்கு என்னவோ bucket India தான் உதவியது. இதற்கு சுற்றுச்சூழல் குறித்த மெத்தனப் போக்கே காரணமாகும்.
கச்சா எண்ணெய் விபத்துச் சம்பவங்களை கண்காணித்து வரும் ITOPF (International Tanker owners Pollution Federation ltd) என்ற நிறுவனம் வெளியிட்ட ஓர் அறிக்கையில். எந்த ஒரு எண்ணெய்க் கசிவு/சிதறல்கள் 700 மெட்ரிக் டன் அளவுக்கு மேல் இருந்தால் அதனை மிகப்பெரிய எண்ணெய் கசிவு சம்பவமாக அட்டவணைப் படுத்துகிறது.
2019ஆம் ஆண்டில் மட்டும் இரண்டு பெரிய எண்ணெய் கசிவு சம்பவங்களை குறிப்பிடுகிறது, முதலில் வட அமெரிக்காவில் உள்ள 'Keystone pipeline - North Dakota' என்ற எண்ணெய்க் குழாய்களில் ஏற்பட்ட விபத்தால் 1500 மெட்ரிக் டன்கள் (4000,0000 gallons of crude oil) எண்ணெய்க் கசிவால் 22,500 சதுர அடி பரப்பளவில் ஈரப்பத நிலத்தை பாதித்தது, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு உருவாக்கியது.
மற்றொன்று இதே ஆண்டில் அக்டோபர் மாதம் பிரேசில் நாட்டின் கடற்கரையில் 2000 மெட்ரிக் டன்கள் கச்சா எண்ணெய் கரை ஒதுங்கியது. ஏறத்தாழ 2400 கிலோ மீட்டர் அளவில் கடற்கரை பகுதிகளில் எண்ணெய் அலை மோதியது. இதில் பல்வேறு கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் பறவைகள் பாதிப்புக்குள்ளாகியது.
இதில் ஆச்சரியப்படத்தக்க நிகழ்வு என்னவென்றால், கடலில் விபத்துக்குள்ளான கச்சா எண்ணெய் எல்லாம் எங்கிருந்து வந்தது என்று இதுவரை யாராலும் கண்டுபிடிக்கப்படவில்லை. எந்த ஒரு நிறுவனமும் அல்லது நாடோ இதற்கு பொறுப்பேற்கவில்லை என்பது தான் புரியாத புதிராக இருக்கிறது.
பிரேசில் அரசாங்கம் வெனிசுவேலா நாட்டின் மீது பழி சுமத்தியது. வெனிசுவேலா நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய் ஐரோப்பிய நாடுகளுக்கும் கப்பல்கள் மூலம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த வழியாக சென்ற ஏதேனும் ஒரு கப்பல் விபத்துக்குள்ளாகி இருக்கும் ஆனால், எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை.
மொரீசியஸ் தீவுக்கு அருகில் ஏற்பட்ட கப்பல் விபத்துக்கு ஜப்பானிய நிறுவனம் பொறுப்பேற்று இருக்கிறது. போர்க்கால அடிப்படையில், விரைவில் கடலில் காணப்படும் எண்ணெய்களை அப்புறப்படுத்தினால் சூழலியலுக்கு நல்லது. விபத்துகள் ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பட்சத்தில் சுற்றுச் சூழலை பாதுகாக்கலாம்.
- பாண்டி
- சுற்றுச் சூழல் தாக்க அறிக்கை 2020 (EIA 2020) ஏன் எதிர்க்கப்பட வேண்டியது?
- இ.ஐ.ஏ 2020 எதிர்ப்புகள் வலுப்பெறுமா?
- சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் போராட்டத்திற்கு மதிப்பளித்த அமெரிக்க நீதிமன்றம்
- 5 டிரில்லியன் பொருளாதாரம்: நாம் கொடுக்கப் போகும் விலை என்ன?
- பிளாஸ்டிக்-ஐ உணவாக உண்டு கரிம உரமாக மாற்றும் காளான்கள்
- சுற்றுச்சூழல் - அறிவியல் அறிஞர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை!
- கனிம எரிபொருள் துறையும், சீரழியும் சுற்றுச்சூழலும்
- பேரழிவினால் நிலை குலைந்திருக்கும் ஆஸ்திரேலியா!
- கிரீன்லாந்தில் வேகமாக உருகும் பனிப் பாறைகள்
- சூழலியல் - நாய் விற்ற காசு குரைக்குமா?
- புவி வெப்பமடைதல் - ஓர் எச்சரிக்கை
- சூழலியல் பேரழிவுக்குத் தொழில்நுட்பத் தீர்வுகள் போதா!
- காஸாவின் பாதிப்புகளால் சுற்றுச்சூழல் ஆபத்துகளை எதிர்நோக்கும் இஸ்ரேல்!
- பருவநிலை மாற்றமும், பேரழிவு புயல்களும்
- பருவநிலை மாற்றத்தால் உலகிற்கு பேராபத்து
- பிளாஸ்டிக்கை ஒழிப்போம்! உயிரினங்களை காப்போம்!
- ஆற்றுநீர் கடலில் கலப்பது வீணானதா?
- அமெரிக்காவில் நீரியல் விரிசல் முறை ஏற்படுத்தியிருக்கும் பாதிப்புகளும், அறிவியல் வல்லுநர் குழுக்கள் கண்டறிந்த படிப்பினைகளும்!
- நதிகளை ஏன் இணைக்கக்கூடாது?
- இந்திய கிராமப்புறங்களில் திறந்தவெளி மலம் கழித்தலைப் புரிந்து கொள்ளல் - தீண்டாமை, மாசு, மலக்குழிகள்