கீற்றில் தேட...
அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
நகரத்தின் ஆரவாரங்களுக்கு நடுவில் தங்கள் சொந்தக் குரலைக் கேட்க வைக்க பறவைகள் பாடுபடுகின்றன! சுற்றுவட்டாரத்தில் இருக்கும் சத்தங்களை விட உரத்த குரலில் சில பறவைகள் பாடிப் பார்க்கின்றன. சுற்றுப்புறம் சிறிது நிசப்தமாகும்போது மட்டும் பாடும் பறவைகளும் உண்டு. பாட்டின் சுருதியை மாற்றும் பறவைகளும் உள்ளன.
நகரங்களில் மனிதர்களால் ஏற்படும் ஒலி மாசு (anthropogenic noise) பறவைகளின் பாடல்களை நிசப்தமாக்குகிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன. இது பாடல் மறைத்தல் (song masking) என்று அழைக்கப்படுகிறது. இதனால் பறவைகளின் சத்தங்களுக்கு அவற்றுக்குரிய பலன் கிடைக்காமல் போகிறது. இணையைக் கவர முடியாமல் இனப்பெருக்கத் திறன் பாதிக்கப்படுகிறது. இதனால் அவை பாடும் பாடல்கள், அழைப்புகளின் பாணியை மாற்றி இதற்குத் தீர்வு காண முயல்கின்றன.
இப்பிரச்சனையைத் தவிர்க்க ஐரோப்பிய ராபின் பறவைகள் இரவு நேரத்தில் மட்டும் பாடும் வழியைத் தேர்ந்தெடுக்கின்றன. பலதரப்பட்ட அழுத்தங்கள் மூலம் நகரங்களில் மனிதர்கள் அனுபவிக்கும் பிரச்சனைகளை மற்ற உயிரினங்களும் அனுபவிக்கின்றன. கவனித்துப் பார்த்தால் நகரங்களில் ஒரு சில இடங்களில் காடு என்பதே சாலையோரத்தில் நிற்கும் ஒற்றை ஆலமரமாக மட்டுமே இருக்கும்.மறையும் நகரத்துப் பறவைகள்
படர்ந்து விரிந்த இலை கிளை பொந்துகளில் பறவைகள், அணில்கள் உட்பட நமக்குத் தெரியாத பல உயிரினங்களும் குடியிருக்கின்றன. சுற்றுவட்டாரத்தில் இருந்து பறவைகளின் பாடல்களும் சிறகடிக்கும் ஓசைகளும் காணாமல் போவதை நாம் உணர்வதில்லை. பதுங்கிப் பதுங்கி நடந்த மைனாக்கள், சலசலவென்று ஓசையெழுப்பி அங்குமிங்கும் பறந்து கொண்டிருந்த குருவிகள், கிளிகள் போல பல பறவைகள் எங்கே போய் மறைந்தன என்று நாம் ஆராய்வதில்லை.
நகரத்தில் இயற்கைக்கு என்ன வேலை? அது அங்கு காட்டிலும் மேட்டிலும் அல்லவா இருக்கிறது என்று நாம் நினைப்பதுண்டு. ஆனால் புதிய ஆய்வுகள் இத்தகைய கருத்துக்களை தவறு என்று நிரூபித்துள்ளன. வன உயிரினங்களின் பாதுகாப்பில் நகரங்களுக்கும் முக்கிய பங்கு உண்டு என்று கோர்னெல் (Cornell) பறவையியல் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வுகள் கூறுகின்றன.
நகரங்கள் பறவைகளுக்கு எந்த அளவு முக்கிய வாழிடமாக உள்ளது என்பதை அறிய பல காலகட்டங்களில் இ-ஃபேர்ட் (Ebird) அமைப்பின் தரவுகள் ஆராயப்பட்டன. காலநிலை மாற்றத்தின் கெடுதிகளைக் குறைக்க காடுகள் தவிர நகர வனங்களை அமைக்க வேண்டும் என்ற கருத்து தோன்றியது. பிராந்தியரீதியில் உயிர்ப் பன்மயத் தன்மையைக் காக்கும் தாவரங்களைக் கொண்ட மியாவாக்கி வனங்கள் உருவாக்கப்பட்டன.
ஒரு காலத்தில் பெங்களூர் நகரத்தில் சமையலறைகளில் சிதறியிருந்த தானியங்களைப் பொறுக்கி உண்டு வாழ்ந்து வந்த அங்காடிக் குருவிகள் மெல்ல மெல்ல காணாமல் போயின. நீர்நிலைகள் அடுக்குமாடிக் குடியிருப்புகளாயின. வீட்டு முற்றங்கள் டைல்ஸ் கற்களால் மூடப்பட்டன. மிச்சம் மீதி உணவுகள் வெளியில் இடப்படாமல் குப்பைக் கிடங்குகளில் கொண்டு போய் கொட்டப்பட்டன.
இது இந்த சின்னஞ்சிறிய பறவைகளின் வாழ்வைக் கேள்விக்குறியாக்கியது. நகரம் மாநகரமாக வளர்ச்சி அடைந்தபோது இவை வீட்டு முற்றங்களையும் தெருக்களையும் விட்டுவிட்டு சர்வதேச விமான நிலையத்திற்குக் குடிபெயர்ந்தன. 2013ல் இந்திய அறிவியல் ஆய்வுக்கழகத்தின் சூழலியல் மையத்தைச் சேர்ந்த ஆய்வாளர் ஹரீஷ் பட் நடத்திய ஆய்வில் பெங்களூர் கெம்பகௌடா விமான நிலையத்தில் நானூற்றிற்கும் மேற்பட்ட அங்காடிக் குருவிகள் வாழ்வது தெரிய வந்தது.
ஒரு காலத்தில் திறந்தவெளி உணவகங்களில் மேசைகள் சுத்தப்படுத்தப்படுவதற்கு முன்பே நகரில் வாழ்ந்துவந்த குருவிகள் சிந்தியிருக்கும் உணவுத்துணுக்குகளை பொறுக்கி உண்ண ஓடிவந்தன. ஆனால் இன்று அவை வாழ இடமில்லாமல் விமான நிலையத்திற்குப் போய்க் குடியிருக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. விமான நிலையத்தில் குருவிகள் தவிர புல்வெலியில் சுதந்திரமாக ஓடியாடும் வேறு சில சிறிய உயிரினங்களும் இப்போது வாழ்ந்து வருகின்றன.
கெம்பகௌடா விமான நிலையத்தில் புதிதாக இரண்டாவது முனையம் ஆரம்பிக்கப்பட்டபோது கட்டிடங்கள் சுற்றுப்புறம் அனைத்தும் சூழலிற்கு நட்புடைய விதத்தில் வடிவமைக்கப்பட்டன. அங்கு உருவாக்கப்பட்ட பூந்தோட்டம், நீர்வீழ்ச்சி, தடாகம் இவை வெறும் அழகிற்காக மட்டும் உருவாக்கப்படவில்லை. உயிர்ப் பன்மயத் தன்மையைப் பாதுகாப்பதையும் அது நோக்கமாகக் கொண்டிருந்தது.
நிலத்தில் கூடு கட்டும் பறவைகள்
நிலத்தில் கூடு கட்டும் பறவைகளையே நகரமயமாக்குதல் பெரிதும் பாதிக்கிறது. நிரந்தரமாக நிர்மானப் பணிகள் நடக்கும் இடங்களில் இத்தகைய பறவைகளால் வாழ முடிவதில்லை. ஆனால் கட்டடங்கள், மரங்களில் கூடு கட்டி வாழும் பறவைகள் இந்த சூழலுடன் பொருந்தி வாழ்கின்றன. நகர வாழ்க்கையுடன் பொருந்தி வாழத் திறமையுடைய பறவைகளே நகரங்களில் தொடர்ந்து வாழ்கின்றன.
ஒவ்வொரு இனப் பறவையின் உணவு, அது கிடைக்கும் அளவு, வாழ அவசியமான இயற்கைச் சூழல் ஆகியவை அவற்றின் வாழ்வின் முக்கிய தேவை. காய்கறிகளையும், இறைச்சியையும் ஒரே மாதிரி சாப்பிடும் பறவைகள், பழங்களை மட்டுமே உண்டு வாழும் பறவைகளை விட நகர வாழ்க்கையுடன் பொருந்தி வாழ்கின்றன. நகரப் பறவைகள் புதிய வகை உணவு கிடைக்கும்போது தயக்கமில்லாமல் அதை சோதித்துப் பார்த்து உண்கின்றன. மனிதர்களுடன் அவற்றிற்கு பயம் குறைவாக உள்ளது.
ஆனால் இவற்றிற்கு மற்ற பறவைகளுடன் போட்டி மனப்பான்மை அதிகம். கட்டடங்களின் கட்டுமான முறையில் ஏற்பட்ட மாற்றங்களும், விவசாய இடங்களில் ரசாயனப் பொருட்களின் பயன்பாடும், ஒலி, காற்று மாசும் குருவிகளின் எண்ணிக்கை குறைய முக்கிய காரணங்கள்.
கேரளாவில் குருவிகளின் பாதுகாப்பிற்காக சமூக வனத்துறையால் சந்தைகள், கடைத்தெருக்களில் கூடுகள் அமைக்கப்பட்டன. ஆட்டோ டிரைவர்கள், சுமை தூக்கும் தொழிலாளர்கள், அங்காடிகளில் பொருட்கள் வாங்க வருபவர்களின் உதவியுடன் இவை அமைக்கப்பட்டன. கூடுகளுக்கு அருகில் குருவிகளுக்கு உணவும் நீரும் வைக்கப்பட்டது. இதனால் பறவைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று ஆய்வுகள் கூறுகின்றன.
நகரங்கள் வனங்களை விழுங்கியபோது
நகரங்கள் வனங்களை விழுங்கியபோது அங்கு உள்ள சூழ்நிலையோடு மனிதர்களின் கூட்டங்களோடு ஒலி ஒளி மாசுடன் கூடிய போக்குவரத்து நெரிசல்களோடு பறவைகளும் மற்ற உயிரினங்களும் பொருந்தி வாழப் பழகிக் கொண்டன. நகரங்களில் வாழும் பறவைகளுக்கு பொதுவாக உடல் அளவு சிறியது.
நீண்ட தூரம் பறக்கும் திறன் பெற்றவை. எல்லா விதமான உணவுகளையும் உண்கின்றன. ஒரு பிரசவத்தில் அதிக முட்டைகளை இடுகின்றன. காட்டிலும் கிராமப்புறங்களிலும் வாழும் பறவைகளை விட இப்பறவைகளுக்கு ஆயுட்காலம் அதிகம் என்று கரண்ட் பையாலஜி என்ற ஆய்விதழில் வெளியிடப்பட்ட சமீபத்திய நகரத்துப் பறவைகள் குறித்த ஆய்வு கூறுகிறது.
கான்க்ரீட் காடுகளாக உள்ள இந்திய மாநகரங்களான மும்பை மற்றும் டெல்லியில் நகரப் பசுமையை அதிகரிக்க மியாவாக்கி வனங்கள் உருவாக்கும் முயற்சிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. ஐநாவின் தலைமையில் உலக மர நகரங்கள் (World Tree city) 2022ம் ஆண்டின் பட்டியலில் மும்பை இரண்டாவது முறையாக இடம்பிடித்தது. உலக நகரங்களில் நடக்கும் சூழல் பாதுகாப்பு செயல்பாடுகளுக்கு உள்ள அங்கீகாரமே உலக மர நகரங்கள் பட்டியல்.
நகரங்கள் வளர்ந்து கொண்டே இருக்கும். அதனுடன் சேர்ந்து சூழல் நாசமும். 2030ல் உலகம் முழுவதும் உள்ள நகரங்களின் நிலப்பரப்பு 1.2 மில்லியன் சதுர கிலோமீட்டர் அளவிற்கு அதிகரிக்கும் என்று ஆய்வுகள் கணித்துள்ளன. இப்போது இருக்கும் பசுமை இடங்களையும் நீர்நிலைகளையும் பாதுகாப்பதுடன் உயிர்ப் பன்மயத் தன்மையைப் பாதுகாக்கும் வகையில் உருவாக்கப்படும் வளர்ச்சித் திட்டங்களே நகரங்களை நாளை மனிதர்கள் வாழ்வதற்குரிய இடங்களாக மாற்றும்.
மேற்கோள்கள்: https://www.mathrubhumi.com/environment/columns/what-can-cities-do-for-birds-nature-future-column-1.8702995
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
ஈ… பறக்க முடியாத ஈ! பூச்சியியல் நிபுணர்கள் அரிய வகை ஈக்கள் குடும்பத்தைச் சேர்ந்த பெண் ஈயின் மாதிரியை லெசோட்டோ (Lesotao) நாட்டின் ஆஃஃப்ரிஸ்க்கி (Afriski) மலைத்தொடரில் கண்டுபிடித்துள்ளனர். இது வளர்ச்சி குன்றிய இறக்கைகளுடன் உள்ள, பறக்க முடியாத ஈயின் மாதிரி. தென்னாப்பிரிக்க ஆய்வாளர்கள் ஜான் மிஜ்லி (John Midgley) மற்றும் பெர்கர்ட் முல்லெர் (Burgert Muller) ஆகியோர் இணைந்து இதைக் கண்டுபிடித்துள்ளனர்.
ஈயின் மாதிரியைத் தேடி ஒரு பயணம்
2021 டிசம்பரில் பூச்சியியலில் ஈக்கள் பற்றி ஆராயும் விஞ்ஞானிகளான (dipterologists (entomologists specialising in flies)) மிஜ்லி மற்றும் பெர்கர்ட் ஆகியோர் இதன் மாதிரியைச் சேகரிக்கும் ஆய்வுப் பணிக்காக உலக வரைபடத்தில் மிக உயரமான இடத்தில் தனித்துவமாகக் காணப்படும் லெசோட்டோவிற்குச் சென்றனர். இந்த நாட்டின் மொத்த நிலப்பரப்பும் ஆயிரம் மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.
“லெசோட்டோவின் உயரமான வடகிழக்கு பீட பூமிப் பகுதியை ஆராய்வது சுவாரசியமானது. சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து ஒரு தீவு நிலப்பரப்பால் துண்டிக்கப்பட்டு தனியாக அமைந்திருந்தால் அங்கு அதிசயிக்கத்தக்க உயிரினங்கள் வாழ்வது இயல்பு. இப்பகுதியும் அது போன்றதே. விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் மட்டுமே இங்கு ஆய்வுகள் நடந்துள்ளன” என்று மிஜ்லி கூறுகிறார்.முதலில் இந்த ஆய்வுகள் 3050 மீட்டர் உயரத்தில் இருக்கும் ஆஃப்ரிஸ்க்கி மலை வாசஸ்தலத்தில் நடந்தன.
துரதிர்ஷ்டவசமாக ஆய்வாளர்கள் தங்கியிருந்த அன்று முழுவதும் பெய்த மழையால் பூச்சிகள் பறக்கும்போது அவற்றைச் சேகரிக்க ஆய்வாளர்கள் பயன்படுத்தும் பொறிகள் செயல்படவில்லை. மழையால் பூச்சிகள் அரிதாகவே பறந்தன. வலிமையான வலைகளைப் பயன்படுத்தி புதர்களில் மறைந்திருக்கும் வித்தியாசமான பூச்சிகளை அவர்கள் சேகரித்தனர்.
இரண்டாவது நாள் சேகரிப்பில் கிடைத்த ஒரு மாதிரியை இத்தகைய உயரமான இடங்களில் வாழக் கூடிய இறக்கையில்லாத அந்திப்பூச்சி (moth) இனத்தைச் சேர்ந்த ஒன்று என்று பெர்கர்ட் கருதினார். அவர் அதை தன் உபகரணத்தால் உறிஞ்சி எடுத்து சேகரிப்பு பாட்டிலில் பத்திரப்படுத்தினார்.
பெண் ஈயினத்தின் மாதிரி கண்டுபிடிப்பு
அன்று மாலை அதை உற்றுநொக்கி ஆராய்ந்தபோது பறத்தலின்போது பின் இறக்கைகளால் உடலை சமநிலைப்படுத்த உதவும் உறுப்புடன் கூடிய (halters) உறுதியான சிறிய இறக்கைகளைக் கொண்ட ஒரு ஈயின் மாதிரியே அது என்பது தெரிய வந்தது. அதன் தலைப்பகுதி ஒரு ஈயின் தலை போலவே தெளிவாக இருந்தது. இந்த ஆய்வுகள் தென்னாப்பிரிக்கப் பகுதியில் உயிர்ப் பன்மயத் தன்மை செழுமையுள்ள மகரந்தச் சேர்க்கை செய்யும் ஈ இனங்களை (Diptera) ஆராயும் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டது.
ஆத்தரிமோர்ஃபா லாட்டைபெனிஸ் (Atherimorpha latipennis) என்ற இந்த அதிசய ஈயினத்தைக் கண்டறிய ஆய்வாளர்கள் தங்களுடன் நுண்ணோக்கியை எடுத்துச் சென்றனர். இந்த இனத்தைச் சேர்ந்த ஆண் ஈ 1950களில் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் இதன் பெண் இனம் இதுவரை அறியப்படாமலிருந்தது. இப்போதே கண்டுபிடிக்கப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த ஈயின் குடும்பத்தில் இதற்கு முன் எந்த மாதிரியும் கண்டறியப்படவில்லை. இப்போது சேகரிக்கப்பட்டது பெண் மாதிரியே என்பது மலையடிவாரத்தில் உள்ள பையெட்டமேரிட்ஸ்பெர்க் (Pietermaritzburg) என்ற இடத்தில் இருக்கும் இந்த வகைக் குடும்பத்தைச் சேர்ந்த உயிரினங்களுக்கான மாதிரிகள் உள்ள க்வாஜூலூ நேட்டல் அருங்காட்சியகத்திற்கு (KwaZulu-Natal Museum) கொண்டுசெல்லப்பட்டது. அங்குள்ள மாதிரிகளுடன் ஒப்பிட்டு ஆராயப்பட்டது.
புதிய மாதிரி பாதுகாப்புடன் வைக்கப்பட்ட பின் ஆய்வாளர்கள் அடுத்த இரண்டு வாரங்கள் லெசோட்டோ முழுவதும் இருக்கும் பன்மயச் செழுமையுள்ள ஆறு இடங்களுக்குச் சென்று ஆராய்ந்தனர். இந்த இனத்தின் ஆண் பூச்சி பெண் ஈக்கு மாறாக நரம்புகளுடன் கூடிய பெரிய செயல்படும் இறக்கைகளைக் கொண்டுள்ளது. இந்த இறக்கைகள் ஆண் ஈக்களுக்கு விரிவான பரப்பில் பெண் ஈக்களைத் தேட உதவுகின்றன.
பெண் ஈயின் உருவ அமைப்பு மாறுபட்டிருந்தாலும் வாய்ப்பகுதி மற்றும் அதன் உணர்வு நீட்சிகள் முன்பு சேகரிக்கப்பட்ட ஆண் ஈக்களைப் போலவே உள்ளன. இந்த உருவவியல் மாறுபாடுகள் இதன் தனிச்சிறப்புப் பண்புகள் என்று முந்தைய ஆய்வாளர்கள் கண்டுபிடித்திருந்தனர். புதிய மாதிரியை டிஎன்ஏ பகுப்பாய்வு செய்தால் இருக்கும் ஒரே ஒரு மாதிரி சேதமாகி விடும் என்பதால் அவ்வாறு செய்யவில்லை.
உயிரினங்களில் “செயல்திறனுள்ள பறத்தல் என்னும் பண்பில் பரிணாம மாற்றம் கடந்த 3 பில்லியன் ஆண்டுகளில் நான்கு முறை மட்டுமே நடந்துள்ளது. இதனால் ஒரு இனம் அதன் பறக்கும் திறனை இழப்பது பற்றி ஆராய்வது சுவாரசியமானது. என்றாலும் பறக்க இயலாத இது போன்ற உயிரினங்கள் வியப்புக்குரியவை இல்லை. ஆனால் ஒரு குடும்பத்தில் பறத்தல் திறன் பெண் பாலைச் சேர்ந்த உயிரினத்திற்கு இல்லாமல் போனது இதுவே முதல் முறை” என்று கலிபோர்னியா உணவு மற்றும் வேளாண் பிரிவின் பறக்கும் உயிரினங்கள் பற்றிய மூத்த ஆய்வாளர் மார்ட்டின் ஹாஸர் (Martin Hauser) கூறுகிறார்.
இந்த ஈயினத்தின் வாழ்க்கைச் சுழற்சி பற்றி எதுவும் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதால் விஞ்ஞானிகள் பெண் இனத்தின் பறத்தல் திறன் இழக்கப்பட்டது பற்றிய ஊகங்களை மட்டுமே வெளியிட முடியும். “பறத்தலால் பல நன்மைகள் உள்ளன. குறிப்பாக 0.05 செண்டிமீட்டர் நீண்ட கால்களைப் பெற்றுள்ள உயிரினங்கள் நடப்பதை விட பறத்தல் அவற்றுக்கு வேகமாக செயல்களைச் செய்யும் ஆற்றலைத் தருகிறது. எதிரிகளிடம் இருந்து தப்பிக்கவும் பறத்தல் உதவுகிறது.
ஆனால் பறத்தலில் ஈடுபட அதிக ஆற்றல் தேவைப்படுகிறது. இறக்கைகளை இந்த உயிரினங்கள் வளர்க்க வேண்டும். நடப்பதை விட பறத்தலுக்கு அதிக ஆற்றல் செலவாகிறது. பல்வேறு உயிரினங்களில் பறத்தல் மூலம் கிடைக்கும் ஆற்றல் பயன்பாடு வேறுபடுகிறது” என்று மிஜ்லி கூறுகிறார். “பல பெண் உயிரினங்களுடன் இணை சேர ஒரே ஒரு ஆண் உயிரினம் இருந்தால் போதும்” என்று ஹாஸர் கூறுகிறார்.
“பறக்கும் திறன் பெற்றவை பறவைகள், இரை பிடி உயிரினங்களின் அச்சுறுத்தலுக்கு ஆளாகலாம். இதனால் மலைப்பகுதியில் உயிர் தப்ப ஓடும் இவை பெண் உயிரினமே இல்லாத பகுதியில் சென்று சேர்ந்துவிடும் அபாயம் உள்ளது. இதனால் காடுகள், குகைகளில் பெண் இனங்கள் இறக்கைகள் இல்லாமல் தோன்றியிருக்கலாம். அங்கு பறத்தல் இவற்றிற்கு உதவுவதில்லை.
பரிணாமம் நாம் கருதுவது போல செயல்படுவதில்லை. விரைவான திடீ ர்மாற்றங்களுடனேயே பரிணாம மாற்றங்கள் தொடங்குகின்றன. அதில் இருந்து இயற்கைத்தேர்வு தோன்றுகிறது. இதனால் பல உயிரினங்களிலும் பறத்தல் பண்பை நம்மால் காண முடிவதில்லை” என்று மிஜ்லி கூறுகிறார். பறத்தலை பூச்சி வகையைச் சேர்ந்த உயிரினங்கள் மட்டும் இழக்கவில்லை.
நெருப்புக் கோழிகள், கிவிகள் மற்றும் ஈமுக்கள் போன்ற தட்டையான மார்பெலும்புகள் உடைய பறக்கும் திறனற்ற (ratites – flightless birds) பறவைகள் டைனசோர்களின் இன அழிவிற்குப் பிறகு தங்கள் வாழிடத்தை நிலப்பரப்பிற்கு விரிவாக்கின.
இவற்றை வேட்டையாட பெரிய எதிரிகள் என்று எந்த உயிரினமும் இல்லை. அதனால் பறத்தல் இந்த உயிரினங்களில் மிகச் சில பயன்களையே தருகிறது.
பெங்குயின்கள் இப்போதும் நீரில் நீந்த மட்டுமே தங்கள் இறக்கைகளைப் பயன்படுத்துகின்றன. பறத்தலை தக்க வைத்துக் கொள்ள உயிரினங்கள் அதிக ஆற்றலை செலவழிக்க வேண்டியுள்ளது. பஃபின் (Puffins) போன்ற பறவைகள் நீரிலும் காற்றிலும் பறக்கக் கூடியவை. என்றாலும் அவை பெங்குயின்கள் போல பறப்பதில் திறமைசாலிகளோ சூப்பர் சுறுசுறுப்பானவையோ இல்லை.
“இவ்வகை உயிரினங்களைப் பற்றி புரிந்து கொள்ள இந்த கண்டுபிடிப்பு உதவும். சூழல் மாற்றங்களுக்கேற்ப இவை எவ்வாறு பதில் வினை புரிகின்றன என்பதை எல்லை வரையறுக்கப்பட்ட இது போன்ற உயிரினங்களின் உருவவியல் மூலம் நம்மால் கணிக்க முடியும்” என்று மிஜ்லி கூறுகிறார். காலநிலை மாற்றத்திற்கேற்ப சுலபமாக இடம்பெயர்ந்து செல்லும் இந்த ஈயின் ஆண் உயிரினத்தின் அமைப்புடன் ஒப்பிட்டு பெண் உயிரினத்தின் அமைப்பை கணிக்க முடியும்.
என்றாலும் இது அழியும் ஒரு சூழல் மண்டலத்தைப் பாதுகாக்க உதவாது. “பரிணாமத்தில் பெரிய கேள்விகளை ஆராயும்போது இது போன்ற எடுத்துக்காட்டுகளை நம்மால் புதிதாகக் கண்டுபிடிக்க முடியும். இது பல செங்கற்களால் கட்டப்பட்ட ஒரு வீடு போன்றது. ஒவ்வொரு தனிச்செங்கலும் முக்கியமானதில்லை. ஆனால் செங்கற்கள் இல்லாமல் ஒரு வீடு உருவாக முடியாது” என்று ஹாஸர் கூறுகிறார்.
ஒவ்வொரு சூழல் மண்டலத்திலும் உயிரினங்கள் அனைத்தும் முக்கியமானவை. அந்த வகையில் பறக்க முடியாத இந்த பெண் ஈயின் கண்டுபிடிப்பு உயிரினங்கள் பற்றிய மனிதனின் புரிதலில் ஒரு திருப்புமுனை.
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
உலகம் ஆகஸ்ட் இருபதாம் தேதியை அடையாளப்படுத்துவது பூமியின் வரலாற்றில் மிக அதிக மனித மரணங்களுக்கு காரணமான ஓர் உயிரினத்தின் பெயரிலேயே! நம் சுண்டு விரல் நகம் அளவிற்கு மட்டுமே வளரும் கொசுக்களே அந்த பயங்கர உயிரினங்கள்! பூமியில் இதுவரை தோன்றிய மனித உயிர்களில் பாதியை அதாவது 5,200 கோடி மனித உயிர்களைக் கொன்றொடுக்கியது கொசுக்கள் பரப்பிய நோய்களே என்று கருதப்படுகிறது.
இலண்டன் சுரங்கப் பாதை கொசுக்கள்
கொசுக்கள் பூமியில் தோன்றி இருபது கோடி ஆண்டுகள் ஆகியிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர். வாழும் சூழலுக்கேற்ப பல பரிணாம வழிகளில் பயணித்து மூவாயிரத்திற்கும் அதிகமான உயிரினங்களாக நூறு இலட்சம் கோடி கொசுக்கள் பூமியில் இன்று நம்முடன் சுகமாக வாழ்கின்றன. ஆனால் இவற்றில் க்யூலெக்ஸ் மொலெஸ்ட்டஸ் (Culex molestus) என்ற ஓர் இனத்தின் பரிணாம வரலாறு அசாதாரணமானது. இலண்டன் சுரங்கப்பாதை கொசுக்கள் (London underground mousquitos) என்று அறியப்படும் இவற்றின் கதை சுவாரசியமானது.இரண்டாம் உலகப் போர் நடந்த காலத்தில் 1940 செப்டம்பர் 7 முதல் 1941 மே 11 வரை ஹிட்லரின் தலைமையில் படைகள் இலண்டன் நகரத்தில் தி ப்ளிட்ஸ் (The blitz) என்ற பெயரில் குண்டு மழை பொழிந்தது. தாக்குதல் தொடங்கிய நாள் முதல் தொடர்ச்சியாக 57 நாட்கள் மக்கள் வாழ்ந்த இடங்களிலும் முக்கிய கட்டிடங்களின் மீதும் ஒரு இலட்சம் குண்டுகள் வீசப்பட்டன.
இலண்டன், காவெண்ட்ரி (Coventry), பர்மிங்ஹாம், லிவர்பூல், மான்செஸ்ட்டர் போன்ற மாநகரங்களில் மரணத்தின் பெரு விளையாட்டு! பக்கிங்ஹாம் அரண்மணை, செயிண்ட் பால் கதீட்ரல் தேவாலயம், பாலங்கள், அருங்காட்சியகங்கள், பள்ளிகள், சாலைகள் அழிந்தன. எட்டாயிரம் வீடுகள், அதே அளவிற்கு குழந்தைகள், நாற்பதாயிரம் மனித உயிர்களின் பேரிழப்பு! கூரைக்கு கீழ் நிம்மதியாக படுத்துறங்க முடியாமல் மனிதர்கள் கூட்டம் கூட்டமாக இலண்டனின் புகழ்பெற்ற சுரங்கப் பாதைகளில் அடைக்கலம் புகுந்தனர்.
இலண்டன் சுரங்கப் பாதை இரயில் அமைப்பு பூமிக்கடியில் அந்த காலத்தில் விரிவான வசதிகளுடன் உருவாக்கப்பட்டிருந்தது. சுரங்கப் பாதைகளில் மக்கள் தஞ்சம் புகுந்தது பற்றிய புகைப்பட வடிவ ஆதாரங்களை இன்றும் இம்பீரியல் போர் அருங்காட்சியகங்களில் காணலாம். மனிதர்கள் மட்டும் இல்லாமல் கொசுக்களும் குண்டுகளின் நெருப்பு மழையில் இருந்து தப்ப சுரங்கப் பாதைகளில் தஞ்சமடைந்தன.
க்யூலெக்ஸ் மொலெஸ்டஸ் பரிணாமமும் உடலமைப்பும்
க்யூலெக்ஸ் மொலெஸ்ட்டஸ் என்ற புவியின் வட கோளப்பகுதியில் காணப்படும் சாதாரண வீட்டுக் கொசுக்களில் ஓர் இனம் அப்போது நிலவிய சாதக பாதக சூழ்நிலைகளில் பக்குவமடைந்து க்யூலக்ஸ் பிப்பியன்ஸ் (Culex pipiens CX Pipiens) என்ற பொதுப்பெயரில் இரண்டு சூழல் தனித்துவம் மிக்க நோய் பரப்பும் புதியதொரு இனம் பரிணாமமடைந்தது. தரைக்கு மேல் வாழும் பிப்பியன்ஸ் டயாபாஸஸ் (pipiens diapauses) என்ற இனம் குறிப்பாக குளிர்காலத்தில் பறவைகளைக் கடிக்கின்றன.
தரைக்குக் கீழ் வாழும் மற்றொரு இனமான மொலஸ்ட்டஸ் ட்ரைப்ஸ் (molestus thrives) சுரங்கப் பாதைகள், அடித்தளங்கள் மற்றும் மனிதனால் எழுப்பப்பட்ட நிலத்தடி வாழிடப்பகுதிகளில் காணப்படுகின்றன. இவை பாலூட்டிகளைக் கடிக்கின்றன. இரத்தம் குடிக்காமல் இவை முட்டையிடுகின்றன. இந்த இரு இனங்களும் சில இடங்களில் மட்டும் மரபணு மாற்றம் அடைந்துள்ளன. இதனால் இவை இரண்டையும் கணிப்பது கடினம். மேலும் தரைக்குக் கீழ் வாழும் இந்த இனத்தின் தோற்றம் இப்போதும் சர்ச்சைக்குரியது.
என்றாலும் விரைவான, நகரமய வாழ்க்கை தகவமைப்பிற்கு உயிரினங்களுக்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. இது பற்றிய நூறாண்டுக்கும் மேற்பட்ட மரபணு மற்றும் சூழல் ஆய்வுகளில் இருந்து இவை வட ஐரோப்பாவில் இப்போது காணப்படும் இனம் உருமாறிய, வட ஆப்பிரிக்க இனங்களுடன் கலந்ததால் தோன்றியுள்ளது என்று நம்பப்படுகிறது. மேலும் தரைக்கு மேல் வாழும் இனத்தில் இருந்தே தரை கீழ் வாழும் இனம் பரிணாமம் அடைந்தது என்ற வாதம் தவறு என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
உண்மையில் இலண்டன் சுரங்கப் பாதை கொசுக்களின் இனம் மத்திய கிழக்கு பகுதியில் பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உண்டான மனிதர்களைக் கடிக்கும் இனத்தில் இருந்து மாற்றம் அடைந்து உருவாகியிருக்கலாம் என்று அமெரிக்க தேசிய மருத்துவ நூலக அமைப்பைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இவை கடிப்பதால் தாங்க முடியாத வலி ஏற்படுகிறது.
பொதுவாக மற்ற வகை கொசுக்கள் இனப்பெருக்கம் செய்ய மனித இரத்தம் அவசியம். ஆனால் இவை அவ்வாறு இல்லை. மாலை வேளையில் மட்டுமே சாதாரண கொசுக்கள் கடிக்கும்போது இவை இரவு பகல் வேறுபாடு இல்லாமல் கடிக்கின்றன. பல பத்தாண்டுகளாக ஐரோப்பாவில் வெஸ்ட்நைல் போன்ற நோய்கள் ஏற்பட இவையே காரணம் என்று நம்பப்படுகிறது.
சுரங்கப் பாதை கொசுக்களின் வேறுபட்ட பண்புகள்
க்யூலெக்ஸ் மொலஸ்ட்டஸ் கொசுக்கள் இப்போதும் நகரப்பகுதிகளில் கழிவுநீர் உள்ள இடங்கள், கட்டிடங்களின் அடித்தளங்கள் போன்றவற்றில் பெரும் எண்ணிக்கையில் காணப்படுகின்றன. மனிதர்களைத் தாக்குகின்றன. மற்ற இனங்களுடன் ஒன்றுசேர்ந்து புதிய தலைமுறைகளை உருவாக்கும் இனப் பண்பு (speciation) இவற்றிடம் இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பொதுவாக பருவ காலங்களில் மட்டுமே மற்ற இனத்தைச் சேர்ந்த கொசுக்கள் இனப்பெருக்கம் செய்கின்றன. நம் ஊர்களில் மழைக்காலங்களில் மட்டுமே கொசுக்கள் முட்டையிட்டு பெருகுகின்றன.
மேலைநாடுகளில் கொசுக்களின் இனப்பெருக்கம் குளிர்காலத்தில் நடைபெறுவதில்லை. ஆனால் இந்த கதையின் கதாநாயகனான மொலஸ்ட்டஸ் கொசுக்கள் எல்லா காலங்களிலும் முட்டையிட்டு பெருகுகின்றன. இரயில் சுரங்கப் பாதைகளில் கோடையும் குளிரும் இலையுதிர்காலமும் வசந்தமும் இல்லை. எப்போதும் ஒரே காலநிலை. வெளிச்சம் குறைவு. ஏராளமான மனித இரத்தம். இவற்றின் ஆக்ரோஷம் மிக்க வேதனை தரும் கடியில் இருந்து மனிதர்கள் எங்கே தப்பியோடுவது?
இவை பரிணாமம் அடைந்து உண்டான சுரங்கப் பாதைகளில் பறவைகள் இல்லை. அதனால் பறவைகளைக் கடிப்பதில்லை. இரத்தத்தைக் குடிப்பதில்லை. பூமியின் சில நிலப்பகுதிகளில் தனித்துவமான சூழ்நிலைகளில் ஒற்றைப்பட்டு வாழ நேரிடும் உயிரினங்களின் பரிணாம கதைகளுக்கு வடக்கு கேரளாவில் செங்கல் குன்றுகளில் கிணறுகள், அவற்றை இணைக்கும் நீர் மூலங்களில் மட்டுமே காணப்படும் விசித்திர மீனினங்கள், காலப்பகோஸ் தீவில் பயமில்லாமல் வாழும் குருவிகள், கழுத்து நீண்ட ஆமைகள், பல வகை குகை மீன்கள் போன்ற எடுத்துக்காட்டுகள் உலகம் முழுவதும் உள்ளன.
கடந்த ஒரு நூற்றாண்டில் மொலஸ்ட்டஸ் கொசுக்கள் பரிணாம வேறுபாடு அடைய மனிதனும் ஒரு சாட்சி என்பதால் இவை தெற்கு வடக்கு அமெரிக்கா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, ஆசியா, ஆஸ்திரேலியாவில் எல்லா இடங்களிலும் இந்த இந்த இனம் வாழ்கிறது.
போர் முடிந்தது… ஆனால்…
ஜெர்மனியின் ப்ளிட்ஸ் குண்டுத் தாக்குதலில் சகலமும் நஷ்டப்பட்டு இலண்டன் இரயில்வே சுரங்கப் பாதைகள், மற்ற இடங்களில் அபயம் தேடிய மனிதர்களுக்கு அன்று “அமைதியாக இருங்கள். தொடர்ந்து செல்லுங்கள்” (Keep calm and carry on) என்ற ஒரு முழக்கம் நம்பிக்கையளிக்கும் பிரபல வாசகமாக இருந்தது.
பிரிட்டிஷ் தெருக்கள், விமான நிலையங்கள், பரிசுப் பொருட்கள் விற்கும் இடங்கள், சாவி கொத்துகள், காஃபி கோப்பைகள், T ஷர்ட்களில் அச்சிடப்பட்ட இலண்டனின் நம்பிக்கை நட்சத்திரமான அந்த புகழ் பெற்ற முழக்கம் இப்போதும் அங்கு நடைமுறையில் உள்ளது. இரத்தக்களறியான இரண்டாம் உலகப்போர் முடிந்தது. மக்கள் மறைவிடங்களில் இருந்து வெளியில் வந்து வாழத் தொடங்கினர். ஜெர்மன் சாம்ராஜ்யம் வீழ்ந்தது.
ஆனால்… கொசு என்ற பயங்கர உயிரினத்துடன் நாம் நடத்தும் தீவிர போர் இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. எடி செயிலர் Eddie Seiler), சால் மார்க்கஸ் (Sol Marcus), பெனி பெஞ்சமின் (Bennie Benjamin) ஆகிய இசைக்கலைஞர்கள் இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வர வேண்டும் என்ற நம்பிக்கையுடன் எழுதிய ஒரு பாடல் புகழ் பெற்றது.
“உலகம் முழுவதும் விளக்குகள் மீண்டும் அணைக்கப்படும்போது
சிறுவர்கள் அனைவரும் மீண்டும் வீடு திரும்பிய பிறகு
மேலிருக்கும் வானில் இருந்து மழையோ பனியோ மீண்டும் பெய்யும்போது
ஒரு முத்தம் என்பதற்கு பொருள் விடைபெறுவதில்லை …
மாறாக அது அன்பிற்கு ஹலோ சொல்வதே”
“When the lights go on again all over the world
And the boys are home again all over the world
And rain or snow is all that may fall from the skies above
A kiss won't mean "Goodbye" but "Hello to love”
ஆனால் கொசுக்களின் முத்தம் மரணத்திற்கான முத்தம்! நினைவில் வைத்துக் கொள்வோம்.
** ** **
மேற்கோள்கள்: https://www.mathrubhumi.com/environment/features/about-all-you-need-to-know-about-culex-molestus-and-blitz-1.8839705
&
https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC9108678/
&
https://rarehistoricalphotos.com/london-blitz-underground-photos/
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- ரமேஷ் தங்கமணி
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
பகுத்தறிவும் மூடநம்பிக்கையும் ஒரு காந்தத்தின் இருவேறு துருவங்கள் போன்றது; இரண்டும் இணைய வாய்ப்பென்பது இல்லவே இல்லை. பகுத்தறிவு எதையும் கேள்விக்கு உள்ளாக்கும் காலத்திற்கு தகுந்தாற் போல் தன்னை புதுப்பித்துக்கொள்ளும். மூடநம்பிக்கையோ கண்மூடித்தனமாக எதையும் நம்பும் அதையே பரப்பவும் செய்யும். பகுத்தறிவாதிகள் ஒரு மனத்தினராக தன்னம்பிக்கையோடு செயல்படுவர். ஆனால் மூடநம்பிக்கை உடையவர்களோ; ஒருபுறம் தாங்கள் நம்புகின்ற ஒரு நம்பிக்கையை கடவுள் நிலைக்கு உயர்த்தி கொண்டாடுவார்கள் மறுபுறம் அதனை துன்புறுத்தி கீழான நிலைக்கு கொண்டு செல்லவும் துணிவர். மூடநம்பிக்கையாளர்களின் இத்தகைய இருநிலை போக்கானது பெண்களை மிகவும் பாதிப்புக்குள்ளாக்கியது. எவ்வாறெனில் பெண்களை சக்தி வடிவமாக கொண்டாடும் கூட்டமே பெண்களுக்கு எதிரான சுரண்டல், குடும்ப வன்முறை, பலாத்காரம் போன்ற கீழான செயல்களில் ஈடுபடுகின்றனர். இந்த இருநிலை மனத்தினரால் பாதிப்புக்குள்ளாவது மனித இனம் மட்டுமின்றின் சில விலங்கினங்களும் தான், அவ்வாறு பாதிப்புக்கு உள்ளாகிக் கொண்டிருக்கும் உயிரினங்களில் முதன்மையானவை பாம்புகள்.மனித இனம் பூமியில் தோன்றுவதற்கு முன்னே தோன்றிய "மூத்த குடி" உயிரினம் பாம்புகள். பாம்புகள் இயற்கையை சமநிலையில் வைத்திருப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. மனித இனம் பரிணமித்த போது பாம்பிற்கும் மனிதனுக்குமான மோதல் தொடங்கியிருக்கலாம். ஆதி மனிதர்களின் உள்ளத்தில், பாம்பு கடியால் இறக்கும் சக மனிதர்களைக் கண்டு, பாம்பின் மீது ஒருவித பயமும் வெறுப்புணர்வும் தோன்றியிருக்கக் கூடும். பாம்பின் மீதுள்ள பயத்தின் காரணமாக இயற்கையை வணங்கும் மக்கள் கூட்டம் பாம்புகளை கடவுளாக வணங்கத் தொடங்கியது. இந்திய, மேற்குலக மற்றும் பழங்குடியின கலாச்சாரங்களில் பாம்புகளின் தாக்கம் வெகுவாகக் காணப்படுகிறது. யூத மற்றும் கிறிஸ்தவ வேதங்கள் பாம்பினை சாத்தான் எனும் தீமையின் வடிவமாக சித்தரிக்கின்றன. இஸ்லாமிய மார்க்க வழிகாட்டியான ஹதீசில் (திர்மிதி) பாம்புகளை எங்கு கண்டாலும் கொல்லுங்கள் என்று பதியப்பட்டுள்ளது. அதே யூத, கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய வேதங்கள் மோசஸ் (மூஸா) அவர்கள் அற்புதம் நடத்திய ஒரு கருவியாக பாம்புகள் பயன்பட்டதாக உயர்த்தி கூறுகின்றன.
இந்தியா என்றாலே ஒரு காலத்தில் மேலை நாட்டினரின் பார்வையில், பாம்புகளும் பாம்பாட்டிகளும் நிறைந்த ஏழை நாடு என்ற மதிப்பீடே இருந்தது. பெரும்பான்மை இந்தியர்கள் பாம்புகளை தெய்வமாக வழிபாடும் பழக்கம் உடையவர்களாக இருக்கின்றனர். இந்தியாவில் காணப்படும் ஆதி பழங்குடி வாழிபாடுகளில் தொடங்கி முக்கிய வேத இதிகாசங்கள் மற்றும் பவுத்த மரபுகள் அனைத்திலும் பாம்பு வழிபாடு குறித்த குறிப்புகள் கணக் கிடைக்கின்றன. இந்தியர்களால் வணங்கப்படும் பெரும் தெய்வங்களான சிவன் தன்னுடைய கழுத்தில் பாம்பினை அணிந்து காட்சியளிக்கிறார், விஷ்ணுவோ தன்னுடைய படுக்கையாகவே பாம்பினை கொண்டுள்ளார். தவிர நாகர் சிலை வழிபாடு மற்றும் புற்று கோவில் வழிபாடு என்பது தென்னிந்தியாவில் பரவலாக காணப்படும் ஒரு வழிபாட்டு நம்பிக்கையாகும். திருமண தோஷம் நீங்குதல் மற்றும் குழந்தை வரம் வேண்டி நாகர் வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது. வாசுகி, ஆதிசேஷன், காளிங்கன், மானசா, ராகு, கேது போன்ற பாம்புகள் இந்திய ஆன்மீக வெளியில் முக்கிய பாத்திரங்களாக விளங்குகின்றன. குணமடைதல், ஞானம் மற்றும் யோகா குண்டலினி சக்தியின் சின்னமாக பாம்புகள் உருவகப்படுத்தப்படுகின்றன. இவ்வாறு சமூகத்தில் உயர்வான இடத்தில் பாம்புகளை வைத்து கொண்டாடும் "நம்பிக்கையாளர்கள்" பலர், பாம்புகளைக் குறித்த பல பொய்யான அறிவியல் ஆதாரமற்ற புரளிகளை பரப்பி, அதன்காரணமாக பாம்புகளைக் கண்டால் அடித்து கொல்லவும் செய்கின்றனர்.
இந்திய சமூகப் பரப்பில் பாம்புகளைக் குறித்த மூடநம்பிக்கைகள், கட்டுக்கதைகள் அறிவியல் சாராத தகவல்கள் அதிகம். பாம்புகளை குறித்த மூட நம்பிக்கைகளில் முக்கியமானது மந்திரித்தல் மூலம் பாம்பு கடி விஷத்தை முறிக்க முடியும் என்பதாகும், ஆனால் இது ஒரு தவறான நம்பிக்கை. பாம்புக்கடிக்கு சரியான முதலுதவி சிகிச்சை மேற்கொண்டு உடனடியாக மருத்துவரை அணுகி பாம்புக்கடிக்கு உரிய எதிர்ப்பு மருந்தினை எடுத்துக்கொள்வதன் மூலம் மட்டுமே உயிர் பிழைக்க முடியும். பாம்புகள் குறித்து திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்கள் மூலம் பரப்பப்படும் மூடநம்பிக்கையானது பாம்புகள் பழிவாங்கும் தன்மை கொண்டவை என்பதாகும். ஆனால் பாம்புகளின் மூளை-நரம்பு மண்டலமானது மனிதர்களையோ அவர்களின் செயல்களையோ நினைவில் வைத்துக்கொள்ளும் அளவுக்கு வளர்ச்சி அடையவில்லை என்பதே உண்மை. இதன்மூலம் பாம்பு ஜோடிகளில் ஒன்றை கொன்றால் மற்றோரு பாம்பு துணையானது தேடிவந்து பழிவாங்கும் என்பது அப்பட்டமான பொய் என அறிவியல் கூறுகிறது. சில பாம்புகள் (தண்ணீர் பாம்பு அல்லது மண்ணுளி பாம்பு) மனித உடலில் பட்டால் வெண்குஷ்டம் போன்ற சரும நோய் ஏற்படும் என்பது அறிவியலுக்கு ஒவ்வாத மூடநம்பிக்கையாகும். நாகப்பாம்புகள் யாரையும் கடிக்காமல் தன்னுடைய விஷத்தை நீண்ட நாட்கள் பயன்படுத்தாமல் வைத்திருந்தால் நாளடைவில் அந்த விஷமானது நாகமணியாக மாறும் என்பது கடைந்தெடுத்த மூடநம்பிக்கை. ஏனெனில் பாம்பின் விஷம் என்பது மனித உடலில் சுரக்கும் எச்சில் மற்றும் இந்திரியம் போன்ற ஒரு திரவ வடிவ சுரப்பே ஆகும்.
பாம்புகளை குறித்த பழமையான மூடநம்பிக்கை, பாம்புகள் (மகுடி) இசைக்கு மயங்கும் தன்மை கொண்டவை என்பது. பாம்புகளால் பெரிய சத்தம், வெப்பம் மற்றும் அதிர்வினை மட்டுமே உணர்ந்து கொள்ள இயலும். எனவே பாம்புகள் தலை அசைத்து சீறுவது மகுடி ஓசைக்காக அல்லாமல், அதனை இசைப்பவரின் கைகளின் அசைவிற்கே ஆடுகின்றன என்பதே உண்மை. பாம்புகள் பால் குடிக்கும் என்று கருதி மக்கள் புற்று கோவிலில் பால் ஊற்றுவார்கள் ஆனால் பாம்புகள் பால் குடிக்கும் வழக்கம் கொண்ட உயிரினங்கள் இல்லை. இவ்வாறு பாம்புகளைக் குறித்த பல்வேறு மூடநம்பிக்கை தகவல்களானது அறிவியல் தொழிநுட்பம் வளர்ந்த இந்த காலகட்டத்திலும் கூட மக்கள் மத்தியில் உலவுகின்றது.
பாம்புகளை இறைவன் என்கிற நிலைக்கு உயர்த்தும் சமூகமானது, பாம்புகளைக் கண்டால் கல்லால் அடித்து துன்புறுத்தவும் கொல்லவும் முற்படுகின்றது. இத்தகைய முரணான செயல்பாட்டிற்கான காரணங்களாவன; அதீத மூடநம்பிக்கை மற்றும் போதிய அறிவியல் விழிப்புணர்வு இல்லாததேயாகும். உண்மையில் பாம்புகள் பயந்த சுவாபம் கொண்ட உயிரினங்களாகும். பாம்பினக்களில் மிகக் குறைவானவை மட்டுமே விஷம் கொண்டவையாக கண்டறியப்பட்டுள்ளன. இவை இரையை வேட்டையாடுவதற்கும் தற்பாதுகாப்பிற்காக மட்டுமே மற்ற விலங்கினங்களையோ மனிதர்களையோ தாக்குகின்றது. உயிர் மண்டலத்தில் கொல்லுதல் மற்றும் கொல்லப்படுதல் என்ற உயிர்சங்கிலியின் முக்கிய கண்ணியாக பாம்புகள் விளங்குகின்றன. பாம்புகளிலிருந்து எடுக்கப்படும் விஷமானது புற்றுநோயை குணப்படுத்தும் தன்மை கொண்டது. பாம்புகளானது; பயம், மருந்து தயாரிப்பு மற்றும் தோல் பொருட்கள் தயாரிப்பிற்காக தொடர்ச்சியாக கொல்லப்படுகின்றது. இவற்றில் பயத்தின் காரணமாக பாம்புகள் கொல்லப்படுவதை போதிய விழிப்புணர்வின் மூலமே தடுக்கமுடியும். இறுதியாக, பாம்புகளை தெய்வநிலைக்கு உயர்தவிட்டாலும் பரவாயில்லை, குறைந்தபட்சம் அவற்றை தேவையின்றி கொல்லாமல் இருப்பது உயிர்சூழலை சமநிலையில் வைப்பதற்கும் பூமியில் மனித இனம் நிலைபெற்று வாழ்வதற்கும் உறுதுணையாக இருக்கும் என்பதே பகுத்தறிவாதிகளின் வேண்டுகோள்.
(16 சூலை - உலக பாம்புகள் தினம்)
- Dr. ரமேஷ் தங்கமணி, விஞ்ஞானி, ஜி.எஸ். கில் ஆய்வு நிறுவனம், வேளச்சேரி - 42
- இலை வெட்டும் எறும்புகள்
- காடு காக்க உதவும் கறுப்பு மரங்கொத்தி
- மனிதனைக் கொல்ல வந்தவை அல்ல பாம்புகள்!
- காடு காக்கப் போராடும் பெண்கள்
- காணாமல் போகும் கழுகுகள்
- இன்னும் இரண்டரை மில்லியன் பூஞ்சைகள்
- இந்தியாவின் வண்ணத்துப் பூச்சிக்கு அரேபியாவில் பாஸ்போர்ட்
- வௌவால்களுக்கு அடைக்கலம் தரும் தேவாலயங்கள்
- கொலையாளித் திமிங்கலங்கள்
- ஒரு மனிதன் ஒரு குளம் ஒரு சில தவளைகள்
- பூமிக்கு சம்பவிப்பது எல்லாம் பூமி புத்திரர்களுக்கும் சம்பவிக்கும்
- அழிவின் விளிம்பில் கானமயில்
- நஞ்சு உண்ணும் சீல்கள் மனிதருக்கு உதவுமா?
- அன்று வேட்டையாடும் கிராமம், இன்று காவல் கிராமம்
- இயற்கையின் ஆயுதங்கள்
- ஆழ்கடலில் ஓர் அதிசய உயிரினம்
- தாவரங்கள் பேசுகின்றன
- அழிவில் இருந்து மீண்டு வந்த வண்ணத்துப் பூச்சி
- திமிங்கல வேட்டை
- யானைகளுக்கு ஏன் புற்றுநோய் வருவதில்லை?