கீற்றில் தேட...
அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- இரா.சிவசந்திரன்
- பிரிவு: புவி அறிவியல்
வளங்களின் வரையறை, வகைப்பாடு, வள அபிவிருத்தி என்பதன் பொருள் மற்றும் தமிழர் நிலத்தின் வளங்களும் பயன்பாடும்.
1.0 மனித வாழ்வுக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ பயன்படுபவை யாவற்றையும் வளங்கள் எனலாம். இயற்கையாகக் கிடைப்பவற்றை மனிதன் தன் அறிவாலும் தெழில்நுட்ப விருத்தியாலும் பயன்பாட்டிற்கு உட்படுத்தும் போது அவை வளங்களாகக் கருதப்படுகின்றன. மனிதனது தேவைகள் அளப்பரியன. அவற்றை நிறைவு செய்வதற்கு மனிதன் பல்வேறுபட்ட வளங்களை பயன்படுத்த வேண்டியுள்ளது. தனி மனித தேவைகள் போன்றே ஒரு நாட்டினதும் பிரதேசத்தினதும் சமூகத்தினதும் தேவைகள் வரையறை அற்றவை. ஆனால் வளங்கள் வரையறைக்கு உட்படுபவை. இதனால் பொருளியலாளர்கள் வளங்கள் அருமை, தெரிவு, பரிமாற்றம் எனும் அம்சங்களைக் கொண்டுள்ளன என்பர்.
1.1 பொதுவாக வளங்களை இரு பெரும் பிரிவாகப் பிரிக்கலாம்.
01) பௌதிகவளம் அல்லது இயற்கை வளம் (Physical resource or Natural Resource)
02) மனித வளம் அல்லது பண்பாட்டு வளம் (Human Resource or Cultural Resource)
1.2 பௌதிக வளத்தை இரசாயனவியலாளர்கள்
01) உயிரியல் வளம் (Organic Resource)
உதாரணம்:- (காடுகள்,விலங்குகள்)
02) உயிரற்ற வளம் (Inorganic Resource)
உதாரணம்:- (நீர், கனிமங்கள்)
என வகுப்பர்
1.3 பொருளியலாளர்கள் வளங்களை நுகர்வுத்தன்மை அடிப்படையில்
01) புதுப்பிக்கக் கூடிய வளம் (Renewable Resource)
உதாரணம:-(நீர்,வளி)
02) புதுப்பிக்க முடியாத வளம் (Non-renewable Resource)
உதாரணம்:- (கனிமம்,காடுகள்)
என வகைப்படுத்துவர்.
1.4 சூழலியலாளர்கள் பௌதிகவளத்தை
01) நில மண்டல வளம் (Lithosphere Resource)
உதாரணம் (மண்,கனிமம்)
02) நீர் மண்டல வளம் (Hydrosphere Resource)
உதாரணம்:- (ஏரி,சமுத்திரம்)
03) வளிமண்டல வளம் (Atmosphere Resource)
உதாரணம்:-(காற்று,மழை)
04) உயிர் மண்டல வளம் (Biosphere Resource)
உதாரணம்:-(காடுகள்,விலங்குகள)
என வகைப்படுத்துவர்.
பௌதிக வளங்களும்(சூழல்), பண்பாட்டு வளங்களும்
2.0 புவியியலாளர்கள் மனித இனத்தின் வளர்ச்சி வரலாறானது சூழலுக்கும் மனிதனின் அறிவு வளர்ச்சிக்குமிடையே நிகழ்ந்த போராட்ட வரலாறு என்று கூறுவதோடு சூழலை முதன்மைப்படுத்தும் சூழலாதிக்கவாதக் கோட்பாடுகளையும் மனித நடவடிக்கைகளை முதன்மைப்படுத்தும் மானிடஆதிக்கவாத கோட்பாடுகளையும் முன் வைக்கின்றனர். மனித இனத்தின் அறிவு, தொழில்நுட்ப வளர்ச்சி படிப்படியாக எவ்வகையில் வளத்தைப் பயன்பாட்டிற்கு உட்படுத்தி வந்ததென்பதையும் வருகின்றதென்பதையும் முறைப்படி விளக்குகின்றனர். புவியியலாளர் சூழலை அமைவு, அமைப்பு, தரைத்தோற்றம், காலநிலை, மண், இயற்கைத்தாவரம், விலங்கினவாழ்வு என வகைப்படுத்தி மனிதன் இவற்றில் செல்வாக்கு செலுத்துவதனையும் இவற்றால் மனிதன் செல்வாக்கிற்கு உட்படுத்தப்படுவதனையும் விபரிப்பதோடு இரண்டிற்கு இடைப்பட்ட நிலையும் உண்டு எனவும் விளக்குகின்றனர்.
3.0 பண்பாட்டு வளம் (மனித அறிவும் தொழில்நுட்பமும்)
வளங்கள் பற்றி விபரிக்கும் அறிஞர்கள் பலர் மனித வளமே உலகிலே கிடைக்கும் எல்லா மூல வளங்களையும் விடச் சிறந்தது என்கின்றனர். வளம் என்பது அறிவியல் கலாசாரத்தின் செயற்பாடே என சில அறிஞர்கள் குறிப்பிடுகின்;றனர். புவியில் பரந்துள்ள இயற்கை நிலைமைகளை வளங்களாக மாற்றுவதற்கு மனிதஅறிவு வளர்ச்சி இன்றியமையாதது. மனிதஅறிவு எனும் போது கல்விகற்ற தொழில்நுட்ப அறிவு கொண்ட சமூகத்தை குறித்து நிற்கின்றது. ஒரு நாடு அபிவிருத்தியடைய அந்நாட்டு மக்கள் இயற்கைவளங்களை எவ்வாறு பயன்படுத்தலாம் என்ற அறிவு கொண்டவர்களாக இருத்தல் அவசியம். இல்லாதுவிடின் அந்நாட்டில் காணப்படும் வளங்கள் மறைவளங்கள் (LATENT RESOURCES) என்ற நிலைமையிலேயே காணப்படும். உதாரணமாக, கிறீஸ்துவுக்கு முற்பட்ட காலத்திலேயே பெற்றோலியம் பற்றிய குறிப்புகள் உள்ளன. ஆனால் தொழில்நுட்ப விருத்தியால் பெற்றோல் வடிகட்டும் முறைகள் கண்டுபிடிக்கப்பட்ட பின்னரும் வாகனங்கள் இயக்குவதற்கு அதனை எரிபொருளாக பயன்படுத்தலாம் என்ற தொழில்நுட்ப அறிவின் விருத்தியின் பின்னருமே அவை வளமாக மாற்றப்பட்டன.
இறப்பர் மரம் அமேசன் காடுகளில் இயற்கையாக வளரும் தாவரம். இறப்பர் மரத்திலிருந்து பால் பெற்று தொழில்நுட்ப முறைகளைப் புகுத்தி ரயராக, ரியூப்பாக பயன்படுத்தலாம் என்ற அறிவு வளரும் வரை அவை மறைவளமாகவே இருந்துள்ளன. இவ்வாறு இன்றும் பல வளங்கள் எமது அறிவு விருத்தியின்மையால் பயன்பாட்டிற்கு உட்படாது இருத்தல் கூடும். எதிர்காலத்தில் மேலும் வளர்ந்து வரும் அறிவியல், தொழில்நுட்பங்களால் அவற்றின் பயன்பாடு கண்டுபிடிக்கப்படலாம். அது வரை அவ்வளம் ஒரு மறைவளமாக அல்லது உள்ளார்ந்த வளமாகவே இருக்கும். இதிலிருந்து மனித அறிவு, தெழில்நுட்ப விருத்தி என்பனவே முக்கியமான வளம் என்பது பெறப்படுகின்றது. ஒரு நாட்டின் அபிவிருத்தி அந்நாட்டில் வாழ்கின்ற மக்களின் வாழ்க்கைத்தர நிலமைகளைக் கொண்டும் அளவிடப்படுகின்றது. இதன்படி பின்வரும் சூத்திரம் மக்களின் வாழ்க்கைத் தரத்தினை வளத்துடனும் தொழில்நுட்ப அறிவுடனும் இணைந்த கலாசார மேம்பாட்டுடன் தொடர்புபடுத்தி விளக்குகின்றது.
SL = RxC / P
இதில் R என்பதில் விவசாயம், கைத்தொழில், சேவைகள் என்பவற்றின் அபிவிருத்திக்குரிய வளங்கள் உள்ளடங்குகின்றன. C என்பது தெழில்நுட்பத்தின் இணைந்த மனித கலாசாரத்தைக் குறிக்கின்றது. P என்பது நாட்டின் மொத்த மக்கள் தொகையையும் SL என்பது தனிநபர் வாழ்க்கைத்தரத்தையும் குறிக்கின்றது. புதிய வளங்கள் கண்டுபிடிக்கப்பட்டாலோ, புதிய தொழில்நுட்பங்கள் புகுத்தப்பட்டாலோ மொத்த உற்பத்தி அதிகரிக்கும் என்பதைச் சூத்திரம் விளக்குகின்றது.
3.1 மனிதன் வளங்களின் உற்பத்தியாளனாகவும், நுகர்வோனாகவும் விளங்குகின்றான். இயற்கை, வளமாக மாறவேண்டுமாயின் மனிதனின் உழைப்பு இன்றியமையாதது. அவ் உழைப்பு உளஞ் சார்ந்ததாகவோ, உடல் சார்ந்ததாகவோ அமையலாம். உழைப்பினால் பெறும் அனுபவங்கள் உற்பத்தியை வினைத்திறன் மிக்கதாக்கின்றன. இவ்வாறே மனித நாகரிகங்கள் வளர்ந்துள்ளன. நாகரிக வளர்ச்சியில் மனித உடல் உழைப்புக் குறைய உள உழைப்பே அதிகரித்து வந்துள்ளதை காண்கின்றோம். உள சக்திவள அதிகரிப்பிற்கு உடல் உறுதியானதாகவும் ஆரோக்கியம் உள்ளதாகவும் இருத்தல் அவசியம். உள ஆரேக்கியத்துக்குக் கல்வியும் தொடர்ந்த பயிற்சிகளும் அவசியம். மனித வள அபிவிருத்தியானது மனிதனின் நல் ஆரோக்கியத்திலும் முறையான கல்வியிலுமே தங்கியுள்ளது.
3.2 மனிதன் உழைப்பது நுகர்வுக்காகவே. எனவே மனிதனின் தேவைகளை இரு வகையாகப் பிரிக்கலாம்.
01) அடிப்படைத் தேவைகள்
02) ஏனைய தேவைகள்
அடிப்படைத் தேவைகள் எனும் போது உணவு, உடை, உறையுள் என்பனவாக அமையும். இவ் அடிப்படை தேவைகளுடன் மனிதன் திருப்தியடைவதில்லை. மனிதனுக்கு ஆடம்பரமாகவும், வசதியாகவும் வாழும் விருப்பு உண்டு. மனித அறிவு வளர வளர இதுவும் வளரும். “அடிப்படைத் தேவைகள் நிறைவுற்றதும் மனித மனம் மேலதிக தேவைகளை உருவாக்கிக் கொள்ளும்” என்கிறார் ஒரு அறிஞர். இதனாலேயே மனிதன் தனது அறிவை மேலும் விருத்திசெய்து வினைத்திறனுள்ள வளஉற்பத்தியாளனாக மாறுகின்றான். இவ்வாறே உற்பத்தி நுகர்வு என்பவற்றின் இயக்கம் ஒரு தொடர்சங்கிலி போன்றதே - இதனை மனிதஅறிவின் வளர்ச்சியே துரிதப்படுத்துகின்றது.
4.0 பௌதிக வளமும் குடித்தொகையும்
குடித்தொகையின் தரத்திற்கு (Ouality) முக்கியத்துவம் கொடுக்கும் போது அதனை மனிதவளம் எனவும், தொகையைக்; (Quantity) கணக்கெடுக்கும் போது அதனைக் குடித்தொகை எனவும் கூறலாம். மேற்படி குடித்தொகையை பௌதிக வளங்களுடன் ஒப்பிடும் போது உலகளாவிய ரீதியில் அல்லது நாடு பிரதேசம் என்ற ரீதியில் மூன்று குடித்தொகை நிலமைகள் உருவாகின்றன. அவையாவன.
01) மிதமான குடித்தொகை (OPTIMUM POPULATION)
02) குறைவான குடித்தொகை (UNDER POPULATION)
03) மிகையான குடித்தொகை (OVER POPULATION)
குடித்தொகையின் அளவு, பரம்பல், அமைப்பு, கல்விநிலை, தொழில்நுட்பம், என்ற அம்சங்கள் ஒரு நாட்டின் குடித்தொகை எனும் போது கவனம் கொள்ள வேண்டியவையாகும். ஒரு நாட்டின் குடித்தொகை எவ்வாறு அந்த நாட்டிலுள்ள பௌதிக வளத்தைப் பயன்படுத்துகின்றது என்பதைப் பொறுத்தே அந்த நாடானது மிதமான, குறைந்த, மிகையான குடித்தொகை நிலையைக் காட்டுகின்றதா என்பதைத் தீர்மானிக்க முடியும்;.
மிதமான குடித்தொகையெனில் நாட்டிலுள்ள மொத்தக் குடித்தொகை நல்ல வாழ்க்கைத் தரத்தைப் பெற்று வாழக் கூடிய அளவிற்கு அந்நாட்டின் வளங்களைப் பயன்படுத்தி வரும் நிலையினைக் குறிப்பதாகும். இம்மிதமான தன்மை புதிய வளங்களை கண்டுபிடிக்கும் போது அல்லது தொழில்நுட்பத்தின் தரம் அதிகரிக்கும் போது மாற்றத்திற்கு உட்படும். வளமும் தொழில்நுட்பமும் நிலையாக இருக்கும் போது குடித்தொகை அதிகரிப்பின மக்கள் வாழ்க்கைத் தரம் குறையும். இது மிகையான குடித்தொகை நிலையைத் தோற்றுவிக்கும். வளங்கள் புதிதாக கண்டுபிடிக்கப்பட தொழில்நுட்பமும் வளரந்துவர அதற்கேற்ப குடித்தொகை அதிகரிக்காது விடின் அது குறைவான குடித்தொகை நிலையைத் தோற்றுவிக்கும். அதாவது அந்நாடு இருப்பதைவிட கூடிய குடித்தொகையைத் தாங்கக் கூடியதான நிலமையில் இருக்கும்.
(உதாரணம்:- பிறேசில், கனடா, அவுஸ்ரேலியா. போன்ற நாடுகள் பெருமளவு வளங்களைப் பயன்படுத்தக் கூடிய அளவுக்கு குடித்தொகை அளவினைக் கொண்டிருக்கவில்லை.)
மேற்படி நிலமைகள் ஒரு நாட்டிற்கு மாத்திரம் உரியனவல்ல. நாட்டிற்குள்ளேயுள்ள பிரதேசம், குறிச்சி போன்ற சிறு அலகுகளுக்கும் பொருந்தும்.
5.0 மனிதனும் அபிவிருத்தியும்
அபிவிருத்தியின் அடிப்படைகள்
மைக்கேல் ரொறாடோ (Michal Torado) எனும் பொருளியல் அறிஞர் உண்மையான அபிவிருத்தியெனில் பின்வரும் மூன்று அம்சங்களில் கவனம் கொள்ள வேண்டுமென்கிறார்.
01) வாழ்வின் தேவை (LIFE SUSTENANCE)
மனிதனுக்குச் சில அடிப்படைத்தேவைகள் நிறைவு பெறவேண்டும். இவை இன்றி அவன் வாழ முடியாது. அவையாவன உணவு, உடை, உறையுள், சுக நலன், பாதுகாப்பு என்பனவாகும். இவை இல்லை எனில் அல்லது குறைவாக இருப்பின் அங்கு குறைவிருத்தி நிலவுகின்றதென்றே கூற வேண்டும். இவற்றை முதலாளித்துவ நாடு என்றால் என்ன? சோஷலிச நாடு என்றால் என்ன? கலப்புப் பொருளாதார நாடு என்றால் என்ன? மனிதனுக்கு வழங்கியே தீர வேண்டும் என்றார். இவ்வாறான அடிப்படை பொருளாதார தேவைகளை வழங்க முடியாத எந்த ஓர் நாடும் அபிவிருத்தி அடைந்ததாக கொள்ளமுடியாது.
02) சுய மதிப்பு (SELF RESPECT)
ஒருநாடோ, தனிமனிதனோ இருக்கும் சூழலில் சுயமதிப்பு, கௌரவம், (RESPECT, DIGNITY, HONOUR) நிலவவேண்டும். இவை இல்லையெனில் அபிவிருத்தி இல்லையென்றே கொள்ளவேண்டும் எனவும் வலியுறுத்துகின்றார்.
03) சுதந்திரம் (FREEDOM)
இது குறிப்பது அரசியல் கருத்துச் சுதந்திரத்தையாகும். சமூக நெருக்குதல், அறியாமை, மேலாதிக்கம் என்பன இல்லாதிருத்தல் வேண்டும். மேலும் எந்தச் சித்தாந்தத்தையும் பின்பற்றும் சுதந்திர உரிமை நாட்டிற்கும் மனிதனுக்கும் இருக்;கவேண்டும். இவை இல்லையாயின் அங்கு அபிவிருத்தி இல்லை என்றே கொள்ள வேண்டும்.
மேற்படி அம்சங்களையும் மனிதவள அபிவிருத்தி பற்றிப் பேசுவோர் கவனத்தில் கொள்ள வேண்டும் என மக்கேல் ரொடாறோ வலியுறுத்திக் கூறுகின்றார்.
டட்லி சியர்ஸ்;]; (Dudely Seers )எனும் பொருளியல் அறிஞர் அபிவிருத்தி பற்றி பிரஸ்தாபிக்கும் போது பின்வரும் கேள்விகளை முன்வைக்கின்றார்.
ஒரு தேசம் அபிவிருத்தி அடைந்துள்ளதெனக் கருதுவதாயின் அங்கு
1. வறுமையைப் போக்க என்ன நடந்தது?
2. வேலை இன்மையைப் போக்க என்ன நடைபெற்றது?
3. அங்கு நிலவும் பல்வேறுபட்ட சமமின்மையான நிலமைகளை நீக்குவதற்கு என்ன நடந்தது?
என்ற கேள்விகளை எழுப்பவேண்டுமென்றும் கணிசமான அளவில் இவை குறைவடைந்து வந்தால் சந்தேகத்திற்கிடமின்றி அந்நாடு அபிவிருத்திப் பாதையில் செல்கின்றதென்று கூறலாம் எனக் கூறுகின்றார். இவற்றுள் ஒன்றோ, இரண்டோ பாதகமாக இருக்குமாயின் அந்த நாட்டின் தலா வருமானம் இரண்டு மடங்காக உயர்ந்திருந்தாலும் அந்நாடு அபிவிருத்தி அடையவில்லையென்றே கூற வேண்டும் என்கிறார். இதன் மூலம் தனியே பொருளாதார வளர்ச்சி அபிவிருத்தி அல்ல. அபிவிருத்திக்கு பல்பரிமாணம் உண்டு என வலியுறுத்துகின்றார்.
பிலிப்ஸ் எச்.ஹோம்ஸ் (Philip. H.Coombs)
01) பொது அல்லது அடிப்படைக்கல்வி விருத்தி
(எழுத்தறிவு பெறுதல், ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர் கல்வியை அபிவிருத்தி செய்தல்.)
02) கல்வியால் குடும்ப மேம்பாடு காணல்(குடும்ப வாழ்வின் தரத்தை உயர்த்துதல், சுகநல வாழ்வு, ஊட்டச்சத்து மேம்பாடு, மனைப்பராமரிப்பு, குழந்தைப்பராமரிப்பு, குடும்பத்திட்டமிடல்)
03) சமூக மேம்பாட்டு கல்விவளர்ச்சி
(உள்ளுர், சர்வதேச நிறுவனங்களின் வளர்ச்சி, அரசாங்க அரசசார்பற்ற நிறுவனங்களின் வளர்ச்சி, கூட்டுறவு வளர்ச்சி, சமூக மேம்பாட்டுத் திட்டங்கள்)
04) தொழில்சார் கல்வி வளர்ச்சி
(பயிற்சி அதிகரித்தல், கருத்தரங்குகள், பயிலரங்குகள், தொழில்சார் பயிற்சிகளை பல மட்டங்களிலும் வழங்குதல்)
கல்வி அபிவிருத்தியின் ஊடான அபிவிருத்தி அம்சங்களில் ஒரு நாடோ பிரதேசமோ கவனம் செலுத்தும் போ மனித வள அபிவிருத்தி ஏற்படுமென எச்.ஹோம்ஸ் வலியுறுத்துகின்றார்.
தமிழர் நிலத்தின்; வளங்களும் பயன்பாடும்.
விவசாயத்திற்குரிய பௌதிக வளம்.
நிலவளம், நீர்வளம், மண்வளம் போன்றன விவசாயப் பயன்பாட்டிற்கு இன்றியமையாத பௌதிக வளங்களாகும். தமிழர் பாரம்பரியப் பிரதேசத்தின் தரைத்தோற்றம் அதிக உயர வேறுபாடற்ற சமநிலமாகவே காணப்படுகின்றது. மத்திய மலைநாட்டிலிருந்து படிப்படியாக உயரத்திற் குறைந்துவரும் இலங்கையில் வடசமவெளி மற்றும் கிழக்கு சமவெளிகளிற் பெரும்பாகத்தை இப் பிரதேசம் அடக்கியுள்ளது. பொதுவாக இப்பிரதேசத்தின் தரைத்தோற்றத்தை கரையோரத் தாழ்நிலமென்றும் உள்ளமைந்த மேட்டுப்பாங்கான நிலமென்றும் பிரிக்கலாம். கரையோரத் தாழ்நிலம் ஏறத்தாழ 100 அடிக்குட்பட்ட உயரத்தைக் கொண்டு இப்பிரதேசத்தின் பரந்த பரப்பை அடக்கியுள்ளது. உள்ளமைந்த மேட்டுநிலம் 100 அடிக்கு மேற்பட்டும் 300 அடிக்கு உட்பட்டும் காணப்படுகிறது. இது வடக்கே அகன்றும் கிழக்கே ஒடுங்கியும் உள்ளது. இம் மேட்டுநிலத்தில் குறிப்பிடக்கூடிய மலைகள் இல்லாவிடினும் ஆங்காங்கே பல எச்சக்குன்றுகளும் வெளியரும்பு பாறைகளும் காணப்படுகின்றன.
தரைத்தோற்ற அமைப்புக்கேற்ப உயர்ந்த பகுதிகளிலிருந்து உற்பத்தியாகிவரும் ஆறுகள் வடமேற்கு, வடக்கு, வடகிழக்கு, கிழக்குத் திசைகளை நோக்கிப் பாய்கின்றன. இப்பிரதேசத்தில் 61 ஆறுகள் காணப்பட்ட போதிலும் மகாவலி கங்கையைத் தவிர ஏனையவற்றில் வருடம் முழுவதும் நீரோட்டம் இருப்பதில்லை. இங்கு காணப்படும் ஆறுகளில் பெரும்பாலானவற்றில் மழைகால நீரோட்டம் காணப்படுவதால் இவை பருவகால ஆறுகளென வழங்கப்படுகின்றன. இதனாலேயே ஆற்றை மறித்து அணைகட்டி நீர்த்தேக்கங்கள் உருவாக்கி விவசாயத்திற்கு பயன்படுத்தும் பாசனமுறை இப்பகுதிகளில் பல நூற்றாண்டுகளாக நிலவி வருகின்றது. அண்மைக்காலங்களில் பழைய குளங்கள் பல புனரமைக்கப்பட்டும், புதிய குளங்கள் பல உருவாக்கப்பட்டும் இப்பகுதிகளில் விவசாய குடியேற்றத் திட்டங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறான அபிவிருத்திக்குரிய வாய்ப்புகள் அம்பாறை, திருகோணமலை, வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் நிறைய உள்ளன.
இப் பிரதேசத்திலே யாழ்ப்பாணக்குடாநாடு உள்ளடக்கிய வடமேற்கு பகுதியின் புவி அமைப்பு மயோசின் கால சுண்ணாம்புப் பாறைப்படையைக் கொண்டுள்ளதால் தரைக்கீழ் நீர்வளம் மிக்க பகுதியாக அமைந்துள்ளது. யாழ்ப்பாணக் குடாநாட்டில் குடித்தொகை செறிவாக இருப்பதற்கு தரைக்கீழ் நீர்வளமே பிரதான காரணமாகும். வருடம் முழுவதும் கிணற்று நீர் பெற்று இங்கு விவசாயம் செய்தல் நீண்ட காலமாக இடம்பெற்று வருகின்றது. இப்பிரதேசத்தின் பிரதான நிலப்பகுதியின்(வன்னி) கிழக்கு,மேற்கு கரையோர மணற்பாங்கான பகுதிகளிலும் உள்ளமைந்த வண்டல்மண் பகுதிகளிலும் ஓரளவு தரைக்கீழ் நீர்வளம் காணப்படுகின்றது. யாழ்ப்பாணக் குடாநாடு போலன்றி குளங்களில் நீர் இருக்கும் காலங்களிலேயே வன்னியில் ஓரளவு தரைக்கீழ் நீரை பெறமுடிகிறது.பெருமளவுக்கு குடிநீர் பெறுவதற்கே இவை பயன்படுத்தப்படுகின்றன.
தமிழர் பாரம்பரியப் பிரதேசம், வருடம் ஏறத்தாழ 1800 மி.மீ (75 அங்குலம்) இற்கு குறைந்த மழைவீழ்ச்சி பெறும் வறண்ட வலயத்தின் பெரும் பாகத்தை உள்ளடக்கியுள்ளது. பொதுவாக இங்கு வருடம் முழுவதும் சராசரியாக உயர்வான வெப்பநிலையான 28 பாகை சென்ரிகிறேட் அளவு நிலவுகிறது. வருடாந்த வெப்ப ஏற்றத்தாழ்வு 21 – 32 பாகை செ.கி ஆக அமைகின்றது. இங்கு வருடத்தின் நான்கு மாதங்களுக்கே குறிப்பிடக்கூடிய மழைவீழ்ச்சியும் கிடைக்கப்பெறுகின்றது. இப்பிரதேசத்தின் வருட சராசரி மழைவீழ்ச்சி 1500 மி.மீ ஆகும். மழைவீழ்ச்சிப் பரம்பலில் பிரதேச வேறுபாடுகள் உள. மன்னார், அம்பாறை மாவட்டங்களின் தென்பகுதிகள் குறைந்தளவிலான 1200 மி.மீ தொடக்கம் 1500 மி.மீ வரை மழை பெற, அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டத்தின் மேற்குப் பகுதிகள் உயர்ந்தளவான 1800 மி.மீ அளவு மழையைப் பெறுகின்றன. எனினும் 1200 மி.மீ தொடக்கம் 1800 மி.மீ வரை மழைபெறும் பரப்பளவே அதிகமாகும். யாழ்ப்பாணம், வவுனியா, திருகோணமலை, மாவட்டங்கள் முழுவதும் மன்னார், அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களிற் பெரும்பாகமும் 1200 மி.மீ தொடக்கம் 1500 மி.மீ மழை பெறும் பகுதிகளாக உள்ளன. யாழ்ப்பாணம், வவுனியா, திருகோணமலை, மாவட்டங்கள் முழுவதும் மன்னார், அம்பாறை, மட்டக்களப்பு, மாவட்டங்களிற் பெரும்பாகமும் வருடத்திற்கு சராசரியாக 1200 மி.மீ தொடக்கம் 1800 மி.மீ மழை பெறும் பகுதிகளாகவே அமைகின்றன.
இப் பிரதேசம் வடகீழ் மொன்சூன் காற்றினாலும், சூறாவளி நடவடிக்கைகளினாலும் ஒக்டோபர் முதல் ஜனவரி வரையான காலப்பகுதியிலேயே அதிகளவு மழைவீழ்ச்சியைப் பெறுகின்றது. வருடம் முழுவதும் கிடைக்கப்பெறும் மொத்த மழைவீழ்ச்சியின் 70வீதம் நான்கு மாத காலத்தினுள்ளேயே பெறப்படுவது முக்கிய அம்சமாக உள்ளது. இம் மழைவீழ்ச்சியே இப் பிரதேசத்தின் காலபோக விவசாயச் செய்கைக்கு உதவுகின்றது. மார்ச் முதல் மே வரை மேற்காவுகையினாலும் குறைந்தளவு சூறாவளி நடவடிக்கையினாலும் சிறிதளவு மழைவீழ்ச்சி கிடைக்கின்றது. சிறுபோகச் செய்கைக்கு இம் மழைவீழ்ச்சி ஓரளவுக்கு உதவுகின்றது. யூன் முதல் ஆகஸ்ட் வரை இங்கு அதிக வறட்சி நிலவுகின்றது. இக் காலத்தே வீசும் தென்மேற்கு மொன்சூன் இலங்கையின் ஈரவலயத்திற்கு மழையைக் கொடுத்து இப்பகுதிகளில் வறண்ட காற்றாக வீசுகின்றது. இவ் வறண்ட காற்றை வடக்கே சோழகக் காற்று என்றும் கிழக்கே சோழகக்கச்சான் காற்று என்றும் வழங்குவர்.
இப் பிரதேசத்தில் யாழ்ப்பாணக்குடாநாடு தவிர ஏனைய பகுதிகளில் பெரும்பாகத்தில் வறண்ட பிரதேசத்தின் முறையான மண் வகையான செங்கபில நிற மண் பரந்துள்ளது. இம் மண் வகை தொல்காலப் பாறைகளிலிருந்து விருத்தியடைந்ததாகும். விவசாயச் செய்கைக்குப் பொருத்தமான வளமான மண்ணான இது மன்னார், மட்டக்களப்பு மாவட்டங்களில் ஓரளவுக்கும் வவுனியா, திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களில் பெருமளவுக்கும் பரந்துள்ளது. மன்னாரிலிருந்து முல்லைத்தீவு வரை கரையோரத்திற்கு சிறிது உள்ளாக சிவந்த மஞ்சல் லட்சோல் மண், செங்கபில நிறமண் என்பன உள்பரப்பிற்கும் கரையோரப் பகுதிக்கும் இடையே பரந்துள்ளன. யாழ்ப்பாணக்குடாநாட்டின் மத்திய பகுதியிலும் பரந்துள்ள இம்மாதிரியான மண்வகை செம்மண் என வழங்கப்பட்டு குடாநாட்டில் வளமான மண்ணாக கருதப்படுகின்றது. மன்னார் தொட்டு முல்லைத்தீவுக்கு கரையோரமாகவும், யாழ்ப்பாணக்குடாநாட்டின் கரையோரமாகவும் உவர்மண் பரந்துள்ளது. புல் வளருவதற்கே பொருத்தமான இம் மண்வகை விவசாயத்திற்குப் பயன்பட அதிக இரசாயன உரம் பயன்படுத்தப்பட வேண்டும். மட்டக்களப்புக்கு வடக்கேயும் திருகோணமலைக்குத் தெற்கேயும் சுண்ணாம்புக்கலப்பற்ற கபில நிற மண் பரந்துள்ளது. வளம் குறைந்த இம்மண் பரந்தளவு புல் வளர்ச்சிக்கு ஏற்றதாகும். இவை தவிர வடக்கேயும், கிழக்கேயும் காணப்படும் ஆற்றுப்படுக்கைகளிலும் அவற்றின் வெள்ளச்சமவெளிகளிலும் வளம் மிக்க வண்டல் மண் படிவுகள் பரந்துள. மன்னார்தீவு, பூனகரிமுனை, யாழ்ப்பாணக்குடாநாட்டின் கிழக்குப்பகுதி, முல்லைத்தீவிலிருந்து பொத்துவில் வரையான கிழக்கு கரையோரப் பகுதி ஆகியவற்றில் அண்மைக்கால மணற்படிவுகள் பரந்துள்ளன. பொங்குமுகப் படிவுகளான இவை தென்னைச் செய்கைக்குப் பொருத்தமானவை.மணற் குவியலாகக் காட்சி தந்த இவை கட்டுமான வேலைக்காக பெருமளவு அகழப்பட்டுவருவதால் கடல்நீர் தரையினுள் புகும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளன.
நிலப்பயன்பாடு
தமிழர் பாரம்பரியப் பிரதேசத்தில் உழைக்கும் மக்களில் 60வீதத்தினர் விவசாயத்தையே பிரதான தொழிலாகக் கொண்டுள்ளனர். இப்பகுதிகளில் பாரம்பரியமாக விவசாயமே முக்கிய பொருளாதார நடவடிக்கையாக இருந்து வருகின்றது. விவசாயத் துறையில் புகுத்தப்பட்ட புதிய தொழில்நுட்ப முறைகள் இப்பகுதி விவசாயிகளிடையே வேகமாகப் பரவியுள்ளன. இப்பிரதேசம் அடங்கியுள்ள வடக்கு கிழக்கு மாகாணங்களின் நிலப்பயன்பாட்டை இரு பெரும் பிரிவாகப் பிரிக்கலாம். தோட்டச்செய்கையோடு தொடர்பான நிலப்பயன்பாடு எனவும், நெற்செய்கையோடு தொடர்பான நிலப்பயன்பாடு எனவும் இவற்றை வகைப்படுத்தலாம்.
இப்பிரதேசத்தின் மொத்த நிலப்பரப்பில் 6.1 வீதத்தையும் மொத்தக் குடித்தொகையில் 36 வீதத்தையும் உள்ளடக்கிய யாழ்ப்பாணக்குடாநாட்டுப் பகுதியே தோட்டச் செய்கை அதிகளவுக்கு வளர்ச்சி பெற்ற பகுதியாக உள்ளது. யாழ்ப்பாணக் குடாநாட்டில் கிடைக்கப்பெறும் தரைகீழ் நீர் வளத்தைப் பயன்படுத்தி இப்பகுதி வாழ் மக்கள் வருடம் முழுவதும் பயிர் செய்கின்றார்கள். மிகவும் சிறிய அளவிலான துண்டு நிலங்களில் செறிவான முறையில் தோட்டப் பயிரச் செய்கை இங்கு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இலங்கையின் வேறு எப்பாகத்திலும் இவ்வகையான செறிந்த பயிர்ச்செய்கை முறை மேற்கொள்ளப்படுவதில்லை. இதன் காரணமாக யாழ்ப்பாணக்குடாநாட்டுப் பகுதி செறிவான குடித்தொகையை கொண்டுள்ளது. தோட்ட நிலங்கள் அதிகளவு கொண்ட பகுதிகளில் சதுரமைலுக்கு 3000 இற்கு மேற்பட்டோர் வாழ்கின்றனர்.
யாழ்ப்பாணக் குடாநாடு ஏறத்தாழ 1025 சதுர கி.மீ பரப்பைக் கொண்டது. இதில் 60 வீதமான பகுதியே மக்கட் பயன்பாட்டிற்கு ஏற்றதாக அமைகின்றது. ஏனைய 40 வீதமான பகுதி மணல், பாறை ஆகியவற்றையும் சதுப்பு நிலங்களையும் கொண்டுள்ளதால் பயன்பாட்டிற்கு ஏற்றதாக அமையவில்லை. மக்களுக்குப் பயன்படுகின்ற 60 வீதமான நிலப்பகுதியில் மூன்றிலொரு பகுதி குடியிருப்பு நிலங்களாக உள்ளன. பனை, தென்னை ஆகிய மரப்பயிர்கள் மற்றொரு மூன்றிலொரு பகுதியிற் காணப்படுகின்றன. எஞ்சிய பகுதியே நெற்பயிரும், தோட்டப் பயிரும் செய்கை பண்ணப்படும் விவசாயப்பகுதியாகும். அண்மைக்காலங்களில் விவசாய நெல்வயல் நிலங்கள் தோட்டநிலங்களாக மாற்றப்பட்டு வருகின்ற போக்கினையும் தோட்ட நிலங்கள் குடியிருப்பு நிலங்களாக மாற்றப்பட்டு வருகின்ற போக்கினையும் அவதானிக்க முடிகின்றது.
இப்பகுதித்தோட்டங்களில் புகையிலை, மிளகாய், வெங்காயம், உருளைக்கிழங்கு, காய்கறிகள், திணை வகைகள், வாழை ஆகியன பெருந்தொகையாக விளைவிக்கப்படுகின்றன. இலங்கையின் உபஉணவுத் தேவையின் கணிசமான பங்கு யுத்தத்திற்கு முன்னர் யாழ்ப்பாணக்குடாநாட்டு உற்பத்தியாலேயே பூர்த்தி செய்யப்பட்டது. உதாரணமாக இலங்கையில் வெங்காயச் செய்கைக்குட்பட்ட பரப்பளவில் 38 வீதத்தையும், மிளகாய்ச் செய்கைக்குட்பட்ட பரப்பளவில் 15 வீதத்தையும் யாழ்ப்பாணக்குடாநாடே உற்பத்திசெய்தது. யாழ்ப்பாணக் குடாநாட்டின் விவசாயிகள் புதிய தொழில்நுட்ப முறையினை புகுத்துவதில் பேரார்வம் கொண்டவர்கள். தோட்டச்செய்கைக்கு நீர் இறைக்கும் இயந்திரம,; செயற்கை உரம், கிருமிநாசினி என்பனவற்றை பெருமளவு பயன்படுத்தி விவசாய உற்பத்தியை அதிகரித்துள்ளார்கள். குடித்தொகை அதிகரிப்பும், தோட்டச் செய்கை அதிகரிப்பும் தரைக்கீழ் நீர் வளத்தை மிகையாகப் பயன்படுத்த வேண்டிய தேவையை ஏற்படுத்தியுள்ளன. தரைக்கீழ் நீரின் மிகையான பயன்பாட்டினால் யாழ்ப்பாணக் குடாநாட்டின் பல பாகங்களிலும் உவர்நீர் பகுதிகள் அதிகரித்து வருகின்றன. தரைக்கீழ் நீர்வளத்தை பேணுவதற்கு கிடைக்கும் மழை நீரில் பெரும்பகுதி தரையின் கீழ் செல்வதற்கு வழி காணவேண்டும். இதற்கு இப்பகுதிகளின் நீர்த் தேக்கங்கள் ஆழமாக்கப்படுதலும், நீர்த்தேக்கங்களில் தூர் அகற்றுதலும், புதிய நீர்த்தேக்கம் உருவாக்கப்படுதலும் அவசியம். மேலும் இங்கு காணப்படும் பல கடனீரேரிகள் நன்னீர் ஏரிகளாக மாற்றப்படுவதாலும் நற்பயன் விளையும். இந்நடவடிக்கையால் நீர், நிலவளம் அதிகரிக்கும் வாய்ப்பு உண்டு.
யாழ்ப்பாணக் குடாநாடு தவிர்ந்த ஏனைய பகுதிகளின் (வன்னி) நிலப்பயன்பாட்டை தாழ்நிலப்பயன்பாடு மேட்டுநிலப்பயன்பாடென வகைப்படுத்தலாம். மேட்டுநிலப்பயன்பாடு இப்பகுதியில் அதிகம் விருத்தியடையவில்லை. தாழ்நிலப்பயன்பாட்டில் நெற்செய்கையே முக்கிய இடத்தை வகிக்கின்றது. ஆற்றுவடிநிலப்பகுதிகளிலும் நீர்த்தேக்கத்தினை அண்டிய பகுதிகளிலும் வண்டல்மண், களிமண் படிவுகள் காணப்படும் தாழ்வான பகுதிகளிலும் நெற்செய்கை மேற்கொள்ளப்படுகின்றது. இப்பகுதிகளில் பழைய பாரம்பரிய கிராமிய விவசாய நிலப்பயன்பாடும், புதிய குடியேற்றத்திட்ட நிலப்பயன்பாடும் வௌ;வேறான பண்புகளைக் கொண்டமைந்துள்ளன. மன்னார், முல்லைத்தீவு, திருகோணமலை,மட்டக்களப்பு பகுதிகளின் கரையோரமாக பழைய விவசாய நிலப்பரப்புகள் பரந்துள. முன்னர் காடு சூழ்ந்திருந்து நில அபிவிருத்தி மேற்கொள்ளப்பட்ட உள்ளமைந்த பகுதிகளில் குடியேற்றத்திட்டங்கள் அமைக்கப்பட்டு அபிவிருத்தி அடைந்துள்ளன.
1935ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட நில அபிவிருத்திச் சட்டத்தின் பின்னர் இப்பகுதிகளில் குடியேற்றத்திட்டங்கள் ஏற்படுத்தப்பட்டன. பலநோக்கு குடியேற்றத்திட்டம், பாரிய குடியேற்றத்திட்டம், கிராமவிஸ்தரிப்புத் திட்டம், மத்தியவகுப்பார் குடியேற்றத்திட்டம், இளைஞர் குடியேற்றத்திட்டம் ஆகியனவாக இவை அமைக்கப்பட்டுள்ளன. குடியடர்த்தி மிக்க பகுதிகளில் இருந்து மக்களை நகர்த்தவும் நிலமற்றோருக்கு நிலமளிக்கவும் வேலையற்றிருப்போருக்கு வேலைவாய்ப்பு வழங்கவும் குடியேற்றத்திட்ட உருவாக்கம் ஓரளவு உதவியுள்ளது. அம்பாறையில் கல்லோயாத்திட்டம், மட்டக்களப்பில் உன்னிச்சைக் குளத்திட்டம், மன்னாரில் கட்டுக்கரைக்குளத்திட்டம், கிளிநொச்சியில் இரணைமடுக்குளத்திட்டம், வவுனியாவில் பாவற்குளத்திட்டம், என்பன மாவட்டத்திற்கொன்றான உதாரணங்களாகும். இப்பகுதிகளிலே படித்த இளைஞர்களுக்கென உப உணவு உற்பத்தித் திட்டங்கள் பல ஏற்படுத்தப்பட்டுள்ளன. முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்த முத்தையன்கட்டு இளைஞர்திட்டம் கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்த விஸ்வமடு, திருவையாறு இளைஞர் திட்டங்கள் என்பன குறிப்பிடத்தக்கன. ஏனைய குடியேற்றத்திட்டங்கள் போலன்றி இளைஞர் திட்டங்கள் பொருளாதார ரீதியில் திருப்தியைத் தருவதாக விருத்தியடைந்துள்ளன. பொதுவாக இப்பிரதேசத்திலே குள நீர்ப்பாசன அடிப்படையில் குடியேற்றத்திட்டங்கள் ஏற்படுத்தி விவசாய உற்பத்தியை அதிகரிக்கக் கூடிய வாய்ப்புகள் நிறைய உள. இந் நடிவடிக்கைகள் குடியடர்த்தி மிக்க யாழ்ப்பாணக்குடாநாடு, மற்றும் வன்னிக் கரையோரப் பகுதிகளிலிருந்து இப்பகுதிகளுக்கு மக்களை நகர்த்தவும் உதவும்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நெற்செய்கை மேற்கொள்ளப்படும் மொத்த நிலம் ஏறத்தாழ 202 977 (2007) கெக்டர் ஆகும். இது இலங்கையின் மொத்த நெல் விளைபரப்பில் 25வீதமாக அமைகின்றது. இப்பிரதேசத்தின் மொத்தநெல் விளைபரப்பில் 75 வீதத்தைக் கிழக்கு மாகாணம் உள்ளடக்கி உள்ளது. மொத்த நெல்விளைநிலத்தில் 44.4 வீதம் பருவகால மழையை நம்பிய மானாவாரி நிலங்களாக உள்ளன. ஏனையவை நீர்ப்பாசன வசதியுடைய குளங்களை அடுத்துள்ளன. பாசனவசதியுடைய நிலங்களில் வருடத்தில் இரு தடவை நெல் விளைவிக்கப்படும். இவ்வாறான விளை நிலப்பரப்பு 28 வீதமாக அமைகிறது. பொதுவாக இப்பிரதேசத்தில் அதிகளவு நெல்விளைபரப்பு பருவமழையை நம்பியதாகையால் பருவமழை பிழைத்துவிடும் காலங்களில் நெல் விளைச்சல் பெரிதும் பாதிக்கப்படுகின்றது. நெற்செய்கையில் நிலவும் இந்த நம்பிக்கையற்ற நிலையை மாற்றவும் சிறு போகத்தின்போது அதிகளவு நெல்லை விளைவிக்கவும் ஏலவேயுள்ள விளைநிலப்பரப்பிற்கு பாசனவசதிகள் அதிகரிக்கப்படுதல் அவசியம்.
இப்பகுதி நெற்செய்கையில் புதிய தொழில்நுட்ப முறைகள் புகுத்தப்பட்டுள்ளன. இப்பிரதேசங்களில் உழவு இயந்திரப் பாவனையே பெருமளவு நிலவுகின்றது. சிறந்த கலப்பின உயர் விளைச்சல் தரும் நெல்லினங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அத்துடன் இரசாயன உரம், கிருமிநாசினி, களைகொல்லி, என்பனவற்றின் உபயோகம் நிறைய உள்ளது. விவசாயிகளின் நலனை உத்தேசித்து அரசாங்கமும் பல உதவிகள் அளித்து வருகின்றது. கடன் உதவி, உத்தரவாத விலைத்திட்டம், சந்தைப்படுத்தும் வசதி, விவசாய ஆலோசனை பெறக்கூடிய அமைப்புகளை உருவாக்குதல் என்பன இவற்றுட் குறிப்பிடத்தக்கன. இவை காரணமாக இப்பகுதிகளில் நெல் விளைச்சல் வருடாவருடம் அதிகரித்து வருகின்றது. சராசரி நெல் விளைச்சல் ஏக்கருக்கு 42 புசலேயாகும்.
மன்னாரில் ஏக்கருக்கு 60 புசல் வரை கிடைக்கின்றது. பொலனறுவையில் ஏக்கருக்குரிய சராசரி உற்பத்தி 80 புசலாக உள்ளது. பாசன வசதிகள் அதிகரிக்கப்படுவதாலும் புதிய தொழில்நுட்ப முறைகளைக் கடைப்பிடிப்பதனால் விளையக்கூடிய பயன்களை விவசாயிகளுக்கு உணரவைப்பதாலும் ஏக்கருக்குரிய உற்பத்தியை இரண்டு மூன்று மடங்காக அதிகரிக்க இயலும். இப்பிரதேச விவசாய செய்கையில் நீர்ப்பற்றாக்குறையே முக்கிய பிரச்சினையாக உள்ளது. இதனைத் தீர்ப்பதற்கு புதிய நீர்த்தேக்கங்கள் வாய்ப்பான இடங்களில் அமைக்கப்படுதலும் தூர்ந்த நிலையிலுள்ள குளங்களை புனரமைத்தலும் ஏலவேயுள்ள குளங்களின் நீர்க் கொள்ளளவை கூட்டுதலும் அவசியம். மகாவலி திசைதிருப்புத் திட்டம் கிழக்கே மாதுறுஓயா சார்ந்த பகுதிகளின் விருத்திக்கு வாய்ப்பாக அமையும். வடக்கே திசை திருப்ப திட்டமிட்டுள்ள மகாவலிகங்கை நீர் வடபகுதி நிலங்களுக்கும் கிடைக்கக் கூடிய வாய்ப்பு ஏற்படுமாயின் இப்பகுதிகளின் விவசாயம் பெருமளவு விருத்தியுறும் என்பதில் ஜயமில்லை.
கனிப்பொருள் வளம்.
இலங்கையில் கனிப்பொருள் வளம் பொதுவாகக் குறைவாகவே காணப்படுகின்றது. இதனைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முயற்சிகளும் குறைவே, தமிழர் பாரம்பரியப்பிரதேசத்தைப் பொறுத்தவரையில் சில வாய்ப்பான நிலைமைகள் காணப்படுகின்றன. இப்பிரதேசத்தில் சுண்ணக்கல், களி, உப்பு, இல்மனைற் - மொனசைற், சிலிக்கா, மணல் முதலான கனிப்பொருட்கள் காணப்படுகின்றன. நிலநெய் பெறக்கூடிய சாத்தியக் கூறும் ஆராயப்பட்டு வருகின்றது. புத்தளம் தொடக்கம் பரந்தன் முல்லைத்தீவை இணைக்கும் கோட்டிற்கு வடமேற்கேயுள்ள பகுதிகள் மயோசின் காலத்தே தோன்றிய சுண்ணக்கல் படிவுகளைக் கொண்டு காணப்படுகின்றன. ஏறத்தாழ 2000 கி.மீ பரப்பில் பரந்துள்ள இப்படிவுகள் பலநூறு மீற்றர் ஆழம் வரை காணப்படுகின்றன. புத்தளம், மன்னார் யாழ்ப்பாணக் குடாநாட்டின் வடக்குப் பகுதிகளில் இவை மேற்பரப்புப் படிவுகளாக அமைந்துள்ளன. இச் சுண்ணக்கல் படிவுகள் பெருந்தொகையாக அகழப்பட்டு காங்கேசன்துறை, புத்தளம் ஆகிய இடங்களில் அமைந்துள்ள ஆலைகளில் சீமேந்து உற்பத்திக்குப் பயன்படுத்தப்பட்டன.
யுத்தத்திற்கு முன் நாட்டின் மிகப்பெரிய சீமேந்து ஆலை காங்கேசன்துறையிலேயே அமைந்திருந்தது. சீமேந்து உற்பத்தி தவிர கண்ணாடி உற்பத்தி, கடதாசி உற்பத்தி, சீனி சுத்திகரிப்பு, நீர் சுத்திகரிப்பு, தோல் பதனிடல் போன்றவற்றுக்கும் சுண்ணக்கல் பயன்படுகின்றது. இப்பிரதேசத்தில் பெருந்தொகையாகக் காணப்படும் இன்னொரு கனிப்பொருள் களியாகும். ஆற்றுப்பள்ளத்தாக்குகள், குளங்களை அண்டிய பகுதிகள், கழிமுகங்கள் ஆகிய பகுதிகளில் களிப்படைகள் பரவலாக உள. செங்கட்டி, ஓடு முதலியவற்றை உற்பத்தி செய்யவும், சீமேந்து உற்பத்திக்குரிய துணைப்பொருளாகவும் களி பயன்படுத்தப்படுகின்றது. முல்லைத்தீவு கல்லோயா ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள ஆலைகள்; செங்கட்டி, ஓடு ஆகியவற்றை உற்பத்தி செய்து வருகின்றன. களியைப் பயன்படுத்தி மட்பாண்டப் பொருட்களும் குடிசைத்தொழில் அடிப்படையில் பரவலாகப் பல கிராமங்களில் உற்பத்தி செய்யப்படுகின்றன.
இப்பிரதேசம் நெடிய கடற்கரையையும் பல குடாக்களையும் கடலேரிகளையும் கொண்டிருப்பதோடு வறண்ட பகுதியாகும், நாட்டின் வேறு எப்பாகத்திலுமில்லாதவாறு பல உப்பளங்கள் இப்பிரதேசத்தில் பரந்துள. ஆனையிறவு, நிலாவெளி, சிவியாதெரு, இருபாலை, கரணவாய், கல்லுண்டாய், முல்லைத்Pவு முதலிய இடங்களில் உப்பு உற்பத்தி செய்யமுடியும். இப்பகுதியிலுள்ள உப்பளங்களில் ஆனையிறவு உப்பளமே மிகப் பெரியதாகும். இவ் உப்பள உற்பத்தியை அடிப்படையாகக் கொண்டு பரந்தனில் இரசாயனத் தொழிற்சாலை ஒன்றும் இயங்குகிறது. இல்மனைற் படிவுகளும் ஓரளவு மொனசைட், றூரைல், சேர்க்கன் படிவுகளும் புல்மோட்டை, குதிரைமலை, திருக்கோவில் முதலிய கடற்கரையோரப் பகுதி மணற் பரப்புகளில் பரந்துள்ளன. இவை அகழப்பட்டு அங்குள்ள ஆலையில் சுத்தம் செய்யப்பட்டு ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்யப்படும் நிகழ்வு நீண்டகாலமாக இடம்பெற்று வருகிறது. இல்மனைற் படிவுகளோடு சிறிதளவு றூரைல் சேர்க்கன் படிவுகள் கலந்து காணப்படுகின்றன. சிலிக்காமணல் சாவகச்சேரியிலும் பருத்தித்துறை தொட்டு திருகோணமலை வரை கடற்கரையோரமாகப் பரந்தும் காணப்படுகின்றது.
சிலிக்கா மணலைப் பயன்படுத்தி கண்ணாடிப் பொருட்கள் உற்பத்தி செய்யும் ஆலை ஒன்று நாகர் கோயிலில் அமைக்கப்படுவதற்கான ஆரம்ப ஆய்வு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவை தவிர கட்டிடத் தேவைக்கு வேண்டிய கல், மணல் முதலியன இப்பகுதிகளில் பெருமளவுக்குப் பெறக்கூடியதாக உள்ளது. யாழ்ப்பாணம், மன்னார் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட புவிச்சரித ஆய்வுகள் இப்பகுதிகளில் நிலநெய்வளம் இருக்கக்கூடிய சாத்தியக் கூறுகள் உண்டென தெரிவிக்கின்றன. அரசாங்கமும் வெளிநாட்டு நிறுவனம் ஒன்றும் சேர்ந்து இதற்கான அகழ்வாராய்ச்சி களை அண்மைக்காலத்தில் ஆரம்பித்துள்ளன. இவ் ஆய்வுகள் வெற்றியளிப்பின் எதிர்காலத்தில் நாட்டின் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசமாக இது அமையக்கூடும்.
மேலே குறிப்பிட்ட கனிப்பொருட்களை அடிப்படையாகக் கொண்ட சீமேந்துக் கைத்தொழில், இரசாயனக் கைத்தொழில், மட்பாண்டக் கைத்தொழில், ஓட்டுக் கைத்தொழில், கண்ணாடிக் கைத்தொழில் ஆகியவற்றை விஸ்தரிப்பதற்கும், அபிவிருத்தி செய்வதற்கும் இன்னும் பல பகுதிகளில் புதிய ஆலைகள் அமைப்பதற்கும் நிறைய வாய்ப்புகள் இப்பிரதேசத்தில் உள்ளன.
இப் பிரதேசத்தில் விவசாய வள அடிப்படையிலான பல கைத்தொழில்களும் நிறுவப்படலாம். வாழைச்சேனை கடதாசி உற்பத்தி ஆலை, கந்தளாய், கல்லோயா சீனி உற்பத்தி ஆலைகள், திருகோணமலை மா அரைக்கும் ஆலைகள் என்பன குறிப்பிடத்தக்கன. யாழ்ப்பாணக் குடாநாடு சுருட்டுக் கைத்தொழிலுக்கு பெயர் பெற்ற இடமாக நீண்ட காலமாக விளங்கி வருவதும் குறிப்பிடத்தக்கது. இங்கு பனை, தென்னை, வளங்களைப் பயன்படுத்தி கிராமங்கள் தோறும் குடிசைக்கைத்தொழில் அடிப்படையில் பலவகையான பாவனைப் பொருட்களும், அலங்காரப் பொருட்களும் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.
இலங்கையில் தென்னைச் செய்கைக்குட்பட்ட நிலப்பரப்பில் 6வீதத்தை வடக்கு, கிழக்கு மாகாணங்கள் உள்ளடக்குகின்றன. யாழ்ப்பாணம், மட்டக்களப்பு ஆகிய இரு மாவட்டங்களும் இப்பிரதேசத்தின் தென்னைச்செய்கைக்குட்பட்ட நிலப்பரப்பில் 60வீதத்தை அடக்கியுள்ளன. பனைவளம் இப்பிரதேசத்தின் முக்கிய வளங்களுள் ஒன்றாக அமைகின்றது. இலங்கையில் மொத்தம் 70,000 ஏக்கர் பரப்பில் பனைவளம் உள்ளது. இதில் தமிழர் பாரம்பரியப் பிரதேசம் 57,00 ஏக்கர் (82 வீதம்) பரப்பைக் கொண்டுள்ளது. யாழ்ப்பாணக் குடாநாட்டுப் பகுதியில் மாத்திரம் 42,000 ஏக்கர் பரப்பில் (60 வீதம்) பனைவளம் காணப்படுகிறது. யாழ்ப்பாணக்குடாநாட்டு பகுதிவாழ் மக்கள் பாரம்பரியமாக பனை வளத்திலிருந்து அதிக பயன் நுகர்ந்து வருகின்றனர்.
வளமற்ற நிலங்களில் வளரக்கூடிய இப்பனையில் இருந்து 80 இற்கு மேற்பட்ட பயன்கள் பெறலாமென தாலவிலாசம் எனும் நூல் கூறும். அக்கால மக்களின் உணவு, குடிபானத் தேவைகளின் ஒருபகுதியை பனைமரம் பூர்த்தி செய்தது. வீடு கட்டுவதற்கு மரமும் ஓலையும் பனைமரத்திலிருந்தே பெறப்பட்டன. விறகாயும் இதுவே பயன்பட்டது. ஆகவே அன்றைய யாழ்ப்பாணத்துக் கிராம மக்கள் பனையுடன் ஒன்றித்த வாழ்வை மேற்கொண்டிருந்தனர். பிற்காலத்தில் ஓரளவுக்கே பனைவளம் பயன்படுத்தப்பட்டு வந்தது. பனைவளப் பயன்பாட்டினை விருத்தி செய்வதற்காக இலங்கை அரசு பனம்பொருள் அபிவிருத்திச் சபை என்றதோர் அமைப்பினைத் தோற்றுவித்துள்ளது. இவ் அமைப்பு பனைவளப்பயன்பாடு தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்வதோடு பல வேலைத்திட்டங்களை கிராமங்கள் தோறும் உருவாக்கி வருகின்றது. பனைவள அடிப்படையிலான குடிசைக்கைத்தொழில் வளர்ச்சிக்கு இந் நிறுவனம் பெரும் பணியாற்றும் என எதிர்பார்க்கலாம். பனைவளத்தைப் பயன்படுத்தி கைவண்ணப் பொருள் உற்பத்தி, சீனி உற்பத்தி, மதுபான உற்பத்தி, போன்றன அண்மைக்காலத்தில் நன்கு விருத்தியடைந்து வருகின்றன.
கடல் வளம்
கடல் வளத்தைப் பல்வேறு வகையில் பயன்படுத்தலாமாயினும் இங்கு மின்பிடித்தலுக்காகவே இவ்வளம் பெரிதும் பயன்படுத்தப்படுகின்றது. எதிர்காலத்திலே மனிதனின் உணவுத் தேவையில் கணிசமான பங்கினை கடல் வளமே அளிக்குமென நம்பப்படுகின்றது. இலங்கையின் மீன்பிடித்தொழிலின் விருத்திக்கு அடிப்படையான பௌதிக வாய்ப்புகளை வடக்கு கிழக்கு மாகாணங்களே பெருமளவு கொண்டுள்ளன. 1100 மைல் நீள நெடிய கடற்கரையோரத்தை கொண்ட இலங்கையின் கண்டத்திட்டின் பரப்பளவு 12,000 சதுரமைல்களாகும். இதில் 73 வீத பரப்பளவு வடகிழக்கு மாகாணம் சார்ந்துள்ளது. தென்னிந்தியா வரை பரந்துள்ள வடபகுதி கண்டத்திட்டு மட்டும் நாட்டின் மொத்தக் கண்டத்திட்டுப் பரப்பளவில் 57 வீதத்தைக் கொண்டுள்ளது. வட கண்டத்திட்டில் அமைந்துள்ள பேதுரு கடல்மேடை, முத்துக் கடல்மேடை, உவாட்ஸ் கடல்மேடை, என்பன மீன்வளம் மிக்க பகுதிகளாகும். ஆழமற்ற இக்கடல் மேடைகளில் சூரிய ஒளி அடித்தளம் வரை ஊடுருவிச் செல்ல இயல்வதால் மீனுணவான நுண்ணுயிர்களின் வளர்ச்சி இப்பகுதிகளில் அதிகமாகும். இதுவே மீன்வளம் அதிகளவு காணப்படுவதற்குக் காரணமாய் அமைகின்றது. இப்பிரதேசக் கடற்கரையோரங்கள் குடாக்களையும், கடனீரேரிகளையும், பெருமளவு கொண்டுள்ளதால் மீன்பிடித்துறைமுகங்கள் ஏற்படுத்தவும் வசதியை அளிக்கின்றன. தென்மேற்கு மொன்சூன் வேகமாக வீசும் திசைக்கு ஒதுக்குப்புறமாக இப்பிரதேசம் அமைந்துள்ளதாலும் வடக்கு மொன்சூன் மென்மையாக வீசுவதாலும் வருடம் முழுவதும் இப்பகுதிகளில் மீன்பிடித்தல் இடம்பெறுவதற்குரிய சாதகமான நிலை உண்டு.
தமிழர் பாரம்பரியப் பிரதேசத்தில் வருடத்திற்கு 12,56980 அந்தர் உடன் மீனும் 1,10099 அந்தர் பதனிடப்பட்ட மீனும் பெறப்படுகின்றது. இலங்கையின் மொத்த உடன் மீன் உற்பத்தியில் இப்பிரதேசம் 52வீதத்தையும் பதனிடப்பட்ட மீன் உற்பத்தியில் 90வீதத்தையும் யுத்த காலத்திற்கு முன்னர் வழங்கிற்று. மீன்பிடித்தொழில் தவிர மன்னாரில் முத்துக்குளித்தலும், மட்டக்களப்பு பகுதிகளில் இறால் பிடித்தலும, யாழ்ப்பாணப் பகுதிகளில் கடலட்டை பதனிடுதலும் குறிப்பிடக்கூடிய வருமானத்தையளித்து வருகின்றன. கடலுணவு உற்பத்தியிலும் மீன்பிடித் தொழிலுக்கு வேண்டிய உபகரண உற்பத்தியிலும் காரைநகரில் அமைந்துள்ள சீநோர் நிறுவனம் குறிப்பிடத்தக்க பணியாற்றி வருகின்றது.
இப்பிரதேசத்தில் மீன்பிடித் தொழிலின் புராதன முறைகளே இன்றுவரை பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவை நவீனமயப்படுத்தப்படின் மீன்பிடித் தொழில் பெருமளவு விருத்தியடையக் கூடிய வாய்ப்புகள் உள்ளன. இயந்திர வள்ளங்களின் பாவனையை அதிகரித்தல், மீன்பிடித்தலில் புதிய முறைகளை பயிற்றுவித்தல், புதிய மீன்பிடி உபகரணங்களை மீன்பிடி தொழிலாளர்கள்; இலகுவில் பெற வழிவகை செய்தல், மீன்பிடித் துறைமுகங்களை அதிகரித்தல், மீனைப் பழுதடையாது பாதுகாக்கும் வசதிகளையும் போக்குவரத்து வசதிகளையும் அதிகரித்தல் போன்ற நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்படின் மீன்பிடித் தொழில் இப்பகுதியின் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்ததோர் தொழிலாக அபிவிருத்தியுறுமென்பது திண்ணம். இது தவிர விலங்கு வேளாண்மையை அபிவிருத்தி செய்வதற்கான வாய்ப்புகள் நிறைய உள. பால் உற்பத்தி, இறைச்சி உற்பத்தி, தோல் பதனிடுதல் போன்ற தொழிற்றுறைகள் வடக்கு கிழக்குப் பகுதிகளில் அதிகளவு விருத்தியடையக் கூடிய வாய்ப்புகள் உள்ளன.
தமிழர் பாரம்பரியப் பிரதேசத்திலே கல்வித்திறன், தொழில்நுட்ப ஆற்றல் கொண்ட பண்பாட்டில் சிறந்த மக்கள் வாழ்கின்றார்கள். இவர்கள் இப்பிரதேசம் கொண்டுள்ள பொருளாதார வளங்களைத் திட்டமிட்ட முறையில் முறையாகப் பயன்படுத்தினால் விவசாயமும், கைத்தொழிலும் பெருமளவு விருத்தியுறும். தமிழர் தம் பிரதேச அபிவிருத்தியில் ஆர்வம் கொண்டு அயராது உழைப்பார்களேயாயின் தமிழர் பாரம்பரியப் பிரதேசத்தை சுயநிறைவுப் பொருளாதார வளம் கொண்ட பகுதியாக மாத்திரமன்றி பல்வேறு மேலதிக உற்பத்திகளை ஏற்றுமதி செய்யக்கூடிய பூமியாக மாற்ற முடியும்.
ஆக்கம்: பேராசிரியர் இரா.சிவசந்திரன்
(புவியியற்றுறை பேராசிரியர்)
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்,
யாழ்ப்பாணம்
E-mail:
Mobile: 0777 266075
- விவரங்கள்
- இரா.சிவசந்திரன்
- பிரிவு: புவி அறிவியல்
சூழலைப் பேணுவதற்குரிய புதுப் பொருளாதார ஒழுங்கினை உலகலாவிய ரீதியில் கடைப்பிடிக்க வேண்டுமென்பது அண்மைக்காலத்தில் சூழலியலாளர்கள் வலியுறுத்தும் சிந்தனையாக உள்ளது. இச்சிந்தனைக்கான அடிப்படைக் காரணிகளையும், புதுப்பொருளாதார ஒழுங்கமைப்பில் விவசாயத்துறையிலே இயற்கை வேளாண்மை முறையைப் பின்பற்றக்கூடிய சாத்தியப்பாட்டையும் எமது பிரதேச சூழலில் இதனைப் பின்பற்றும் ஏதுநிலை பற்றியும் இக்கட்டுரை ஆராய்கிறது.
உலக சூழல் பிரச்சனைகள் எனும் போது பொதுவாக சுற்றுப்புறம் பற்றியும், சுற்றுப்புற சுகாதாரம் பற்றியும் பலர் பேசுவதுண்டு. ஆனால் சூழல் பிரச்சனைகளை புவிக்கோளம் சார்ந்த உலகளாவிய ரீதியில் அணுகுதல் வேண்டும். இவற்றைத் தெளிவாகப் புரிந்து கொள்வதற்கு புவிக்கோளம் சார்ந்த சூழல் அம்சங்கள் பற்றிய விளக்கங்கள் முதற்கண் அவசியம்.
சூழற்பாகுபாடும் பிரச்சனைகளும்.
புவிச்சூழலை கற்கும் வசதிகருதி நான்கு பெரும் பிரிவாக வகைப்படுத்தலாம் நிலமண்டலம் (Lithosphere)> நீர்மண்டலம் (Hydrosphere), வளிமண்டலம் (Atmosphre), உயிரியல் மண்டலம் (Bioshpre) என்பன அவையாகும். இவை ஒவ்வொன்றும் சில துணைப்பிரிவுகளையும் கொண்டுள்ளன. நிலமண்டலத்தினுள் புவிச்சரிதம்(Relief), மண்(Soil), ஆகியனவும், நீர்மண்டலத்தில் மேற்பரப்பு நீர்(Surface water), தரைக்கீழ் நீர்(Under ground water), சமுத்திரங்கள்(Oceans) ஆகியனவும் அடங்கும். வளிமண்டலம் எனும்போது அதனுள் வானிலை காரணிகளும் (Climate) அடங்கும். உயிரியல் மண்டலத்தினுள் இயற்கைத்தாவரம் (Natural Vegetation), விலங்கினங்கள், பறவையினங்களின் வாழ்க்கை (Animals life) ஆகியனவும் மனிதனின் வாழ்வும் அடங்கும்.
உயிரினப் பாரம்பரியத்தின் பரிணாமத்தில் இன்றைய நிலையில் உள்ள மனிதன் தோற்றம் பெற்று மனித வாழ்வை ஆரம்பித்ததிலிருந்து புவித்தொகுதியின் சகல கூறுகளின் மேலும் அவன் தன் ஆதிக்கத்தைச் செலுத்திவருகின்றான். மனித வாழ்வின் வரலாற்றுப் போக்கில் ஒவ்வொரு காலகட்டத்திலும் அவன் வெவ்வேறுபட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியே புவித்தொகுதிக் கூறுகளை தன் தேவைக்குரிய வளங்களாக மாற்றிப் பயன்படுத்தி வந்தமையை அறியமுடிகின்றது. புவித்தொகுதியும் மனித தேவைக்குரிய வளங்களை நீண்ட நெடுங்காலமாக அவனது வாழ்வுக்காக எப்பிரச்சனையுமின்றி வழங்கி வந்தது. மனித குலத்தின் இயற்கைக்கு மாறான அதிகரிப்பும் அவனது பேராசைக்குரிய தொழில்நுட்ப வளர்ச்சியும் புவித்தொகுதி வளங்களை பெருமளவு சுரண்டின. வீண்விரயமாக்கின. இதனால் வளங்கள் அழிந்தன. தேவைக்கு அதிகமாக வளங்கள் பயன்படுத்தப்பட்டதால் வளப்பற்றாக்குறை ஏற்பட்டது.
முறையற்ற வளப்பாவனையும் வீண் விரயமும் புவித்தொகுதிகளின் சகல கூறுகளையும் சிறிதுசிறிதாகப் பாதித்து புவித்தொகுதிச் சூழல் மாசடையும் நிலையை தோற்றிவித்தது. இம் மாசடைபு நிலை கி.பி 1700 முதல் கி.பி 1900வரை மேற்குலகில் ஏற்பட்ட கைத்தொழில் புரட்சிக்காலத்தே துரித கதியில் அதிகரித்தது. நவீனயுகத்தின் ஆரம்பம் என பலராலும் கூறப்படும் கைத்தொழில் புரட்சிக்காலத்திலே தான் சூழல் மாசடைதல் மனித வரலாற்றில் என்றுமில்லாத வகையில் துரிதப்பட்டதென்பதிலிருந்து நவீனயுகத் தொழில்நுட்பத்தின் பல்வேறு கூறுகள் சூழலின் எதிரி என்பது புலனாகும். இதனால் அண்மைய சூழலியல் வாதிகள் சூழலுக்கு ஊறுவிளைவிக்காத சூழல் நட்பார்ந்த தொழில்நுட்பமே எதிர்கால உலகிற்கு அவசியம் என வலியுறுத்தி வருகின்றார்கள். குறிபப்பாக மனித வாழ்வை மாத்திரமல்ல, உயிரின வாழ்வையே நிலைநிறுத்துவதற்கான 21ஆம் நூற்றாண்டிற்கான தொழில்நுட்பம், சூழலைப் பேணுகின்ற அதனைப் பெருமளவு பாதிக்காத தொழில்நுட்பமாக விளங்கவேண்டுமென உலக சமூகத்திடம் விண்ணப்பித்து வருகின்றார்கள். இக் கோரிக்கைகள் உலக சூழல்மாநாடுகள் ஊடாக முன்வைக்கப்பட்டு வருகின்றன.
புவிஉச்சி மாநாடு
சூழல் பற்றிய பன்முகப்பார்வையை ஜ.நாவின் கிளை நிறுவனங்கள் பல உலகளாவிய ரீதியில் ஏற்படுத்தி வருகின்றன. இந்தவகையில் 1992இல் இடம்பெற்ற புவிஉச்சி மாநாடு முக்கியத்துவம் பெறுகின்றது. இம்மாநாடு 1992 ஆம் ஆண்டு ஜுன் மாதம் பிறேசில் நாட்டின் றியோடிஜெனிரோ நகரில் இடம்பெற்றது. இவ் உச்சி மாநாட்டிற்கு முன்னோடியாக சுவீடன் தலைநகரான ஸ்ரொக்காமில் 1972இல் ஒரு மாநாடு இடம்பெற்றது. இதிலே 113 நாடுகள் பங்குகொண்டன. 1992இல் இடம்பெற்ற றியோ மாநாட்டில் 160 உலகநாடுகள் பங்குகொண்டன. 18.000 இற்கு மேற்பட்டோர் பங்குபற்றுனர்களாக கலந்துகொண்ட இம் மாநாட்டில் ஏறத்தாழ 400.000 பேர் பல்வேறு நவீன தொலைத்தொடர்பு ஊடகங்கள் வழியாக பார்வையாளர்களாகப் பங்கு கொண்டனர். 8000ற்கு மேற்பட்ட பத்திரிகைகள் இம்மாநாடு பற்றி எழுதின. இம்மாநாட்டின் இறுதியில் செயற்றிட்டம் -21 (Agenda-21) எனும் நிகழ்ச்சித்திட்டம் முன்வைக்கப்பட்டது.
21ஆம் நூற்றாண்டில் உலக சூழலைப் பேணுவதற்கு உலக நாடுகள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் பற்றி இது விரிவாக குறிப்பிடுகின்றது. மேற்படி மாநாடு வலியறுத்திப் பல்வேறு விடயங்களைச் சுருக்கமாக தொகுத்து நான்கு தலைப்புகளின் கீழ் ஆராயலாம்.
01. உயிரியல் பன்முகத் தன்மையைப் பேணுதல்
02. உயிரினங்களுக்கு ஆதாரமான காடுகளைப் பேணுதல்
03. பச்சைவீட்டுத் தாக்கமுள்ள வாயுக்களின் வெளியேற்றத்தைத் தடுப்பதற்கான சர்வதேச சட்டங்களை இயற்றுதலும் அவற்றை நடைமறைப்படுத்துதலும்.
04. உலகில் புதிய பொருளாதார ஒழுங்கை உருவாக்குதல்.
உயிரியல் பன்முகத் தன்மையைப் பேணுதல் எனும் போது விரைவாக அழிவடைந்துவரும் புவியிலுள்ள விலங்குகளை மற்றும் தாவர ஜீவராசிகளை அழியவிடாது பேணிப்பாதுகாப்பதை வலியுறுத்துவதாக அமைகின்றது. உலகின் ஏறத்தாழ 50-100 இலட்சம் வரையிலான உயிரின வகைகள் உள்ளனவெனக் கணிப்பிடப்பட்டுள்ளது. இன்றைய விஞ்ஞானயுகத்துள் இவற்றுள் 10 வீதமான உயிரினவகைகளே ஆய்வுக்குட்பட்டுள்ளன. இவற்றுள் 1 வீதமானவையே நுண்ணாய்வுக்குட்பட்டவை. ஏனையவை மறைவளங்களாக (Latent Resource) உள்ளன. எதிர்கால சந்ததியினர் இவற்றை முறையாக ஆராய்ந்து பல்வேறு பயன்பாட்டிற்கு உட்படுத்த முடியம். ஆய்விற்குட்படாமலேயே இவை அழிவடைந்துவிடின் எதிர்கால மனித குலத்திற்கு இன்றைய மனிதன் துரோகமிழைத்தவனாவான். மேலும் உயிரினங்களின் பாரம்பரிய மரபுக்கூறுகளைப் பிரித்தெடுத்து தேவையான வகையில் வளர்க்கும் மரபுக்கூற்றுப் பொறியியல் அண்மைக்காலங்களில் துரிதமாக வளர்ச்சியடைந்து வருகின்றது. உலகம் எதிர்நோக்கும் உணவு நெருக்கடிக்கு இத்துறை வளர்ச்சி தீர்வாக அமையுமென விஞ்ஞானிகள் நம்புகின்றார்கள். உயிரினப் பன்முகத் தன்மையை இன்றைய மனிதகுலம் பேணிக்காத்திடல் இன்றியமையாத தேவை எனலாம்.
புவிஉச்சி மாநாடு வலியுறுத்திய இரண்டாவது அம்சம் உலகின் காடுகளைப் பேணுவதாகும். உலகை பசுமையாக வைத்திருப்பது: மழையை வருவிப்பதற்கும் வெப்பத்தை மட்டுப்படுத்தி புவியை பாலைவனமாகாது பாதுகாப்பதற்கும் உயிர்மண்டலத்தை பேணுவதற்கும் அவசியமாகும். மண்-தாவரம் ஏனைய உயிரினவாழ்வு என சூழலியல் முறைமை செயற்படுகின்றது. உலகில் காடுகள் இயற்கையாகவும், செயற்கையாகவும் தினம் தினம் பெருமளவு அழிவடைந்து வருகின்றன. மேலும் உலக நிலப்பரப்பில் இன்று 6வீத பரப்பளவில் பரந்துள்ள அயனக்காடுகளில் உலகின் மொத்த உயிரின வகைகளில் 60 வீதமானவை காணப்படகின்றன. இத்தரவுகள் காடுகளைப் பேணவேண்டிய தன் அவசியத்தை உணர்த்தப் போதுமானவை.
பச்சைவீட்டுத் தாக்கமுள்ள வாயுக்களின் வெளியேற்றம், கைத்தொழில் புரட்சியை தொடர்ந்து அதிகரித்துவந்து இன்று புவியை ஒரு ஆபத்தான கட்டத்திற்கு இட்டுச் சென்றுள்ளது. புவியின் வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. எடுத்துக்காட்டாக குளோரோ புளோரோ காபன் எனும் வாயு வெளியேற்றத்தால் வளிமண்டலத்தில் 15 -30 மைல் உயரத்திலுள்ள ஓசோன் வாயுப்படையில் துவாரங்கள் உருவாகியுள்ளன. புவியில் தீங்குவிளைவிக்குமென கருதப்படுகின்ற புறஊதாக் கதிர்வீச்சுத் தாக்கத்தை ஓசோன் படையே பாதுகாக்கின்றது. புவியில் தற்போது புறஊதாக் கதிர்த்தாக்கம் அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால் தான் சருமநோய்கள், புற்றுநோய்கள் என்பனவும் இனம்காணமுடியாத வேறுநோய்களும் அதிகளவில் காணப்படுகின்றன என மருத்துவவியலாளர்கள் எச்சரிக்கை செய்கின்றார்கள். பச்சைவீட்டுத் தாக்கமுள்ள நச்சுத்தன்மை வாய்ந்த 85வீத வாயுக்களை கைத்தொழில் நாடுகளே வளியில் பரவவிடுகின்றன. உலகில் 30வீதக் குடித்தொகையைக் கொண்ட இந்நாடுகளின் வர்த்தக நோக்கம் கொண்ட அபரிமிதமான தொழில் உற்பத்திகளின் விளைவாக புவியின் வளிமண்டலம் முழுவதும் நச்சுப்புகையால் கனத்துவருகின்றதெனலாம்.
விவசாயம், கைத்தொழில் சேவைகள் எனும் பொருளாதார உற்பத்தி துறைகளில் சூழல் நட்பார்ந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி எதிர்கால அபிவிருத்தியை மேற்கொள்ளவேண்டுமென்பதே சுருக்கமாகப் புதுப் பொருளாதார ஒழுங்கின் அடிப்படை எனலாம். இவை பொதுவாக நிலைத்துநிற்கக்கூடிய அல்லது பேண்தகு அபிவிருத்தியாக (Sustainable Development) விளங்கவேண்டுமென்பதே சூழலியலாளர்களின் எதிர்பார்ப்பாகும். இவர்கள் கைத்தொழில்துறையின் எரிசக்தியாக சூழலைப் பேணுவதும் நிலைத்துநிற்கக்கூடியதுமான ஞாயிற்றுச் சக்தி, காற்றுச்சக்தி, அலைசக்தி போன்றவற்றைப் பயன்படுத்துவதை விரும்புகின்றார்கள். விவசாயத்துறையைப் பொறுத்தவரையில் இரசாயன உள்ளீடுகளைத் தவிர்த்து நிலைத்து நிற்கும் வேளாண்மை அபிவிருத்தியை அல்லது இயற்கை வேளாண்மை அபிவிருத்தியை வேண்டிநிற்கின்றார்கள்.
இயற்கை வேளாண்மை
பசுமைப்புரட்சியால் விவசாயத்துறையில் துரிதஎழுச்சி ஏற்பட்டுக்கொண்டிருக்க அதன் எதிர் விளைவாக உயிர் சூழல்மண்டலம் நஞ்சாகிக் கொண்டிருந்தது. பசி பட்டினியால் உலகில் சிவப்புப்புரட்சி ஏற்பட்டுவிடும் என்ற அச்சம் நிலவியபோது மூன்றாம் உலகின் உணவு உற்பத்தியை அதிகரிக்க மேற்குலகத்தால் பசுமைப்புரட்சி அவசரமாக புகுத்தப்பட்டது எனவும் விமர்சிப்பர். றொக்பெல்லர் போட் ஆகிய பல்தேசிய நிறுவனங்கள் பசுமைப்புரட்சி என்ற நடவடிக்கைகளுக்கு உதவிவந்தமை இவ் ஜயுறவை வலியுறுத்தும். இவ் ஆய்வின் பெறுபேறான பசுமைப்புரட்சியின் வித்தான புதிய இனவிதைகளைக் கண்டுபிடித்தமைக்காக 1970 ஆம் ஆண்டில் நோர்மன் போர்லாங் அவர்களுக்கு நோபல்பரிசு கிடைத்தது.
பசுமைப்புரட்சி நடவடிக்கைகள் விவசாயத்துறையில் இரசாயனத்தொழில்நுட்ப மாற்றங்களையும் பொறிமுறைத் தொழில்நுட்ப மாற்றங்களையும் புகுத்தின. இவை மூன்றாம் உலக நாடுகளுக்குப் புதியன என்பதோடு இந்நாடுகளின் பாரம்பரிய விவசாயத்துறையை மேற்கு நாடுகளின் நவீன உற்பத்திகளின்றி வெற்றிகரமாக மேற்கொள்ளமுடியாத நிலைமைகளையும் தோற்றுவித்தன. இரசாயன உரப்பாவனை, களைகொல்லிப் பாவனை, கிருமிநாசினிப் பாவனை என்பன மண், நீர் நிலைகள், தாவரம் என்பனவற்றையும் நஞ்சாக்கிற்று. இதனால் எழுபதுகளில் உச்சம்பெற்றிருந்த பசுமைப்புரட்சி நடவடிக்கைகள் எண்பதுகளில் விமர்சனத்தை எதிர்நோக்கி தொண்ணூறுகளில் மாற்றத்தை வலியுறுத்தி நிற்கின்றன. இதனாலேயே இன்று உலகம் மீண்டும் இயற்கைவேளாண்மை பற்றி சிந்திக்கத் தலைப்பட்டுள்ளது.
இயற்கைவேளாண்மையை நிலைத்துநிற்கக்கூடிய வேளாண்மை, நிலையான வேளாண்மை, பேண்தகு வேளாண்மை என்று பலவாறு வழங்குவர். இயற்கை வேளாண்மை பழமைக்குத் திரும்புதல் எனப் பொதுவாக கூறப்பட்டாலும் இன்றைய உலக நிலவரங்களை அதாவது குடித்தொகை அதிகரிப்பு, உணவுப் பற்றாக்குறை, சூழல் நெருக்கடி என்பனவற்றை மனங்கொண்டு புதுப்பொருளாதார ஒழுங்கின் அடியாகச் சிந்தித்ததன் விளைவே இது எனலாம். இயற்கை வேளாண்மையின் தந்தை என ஜப்பானியக் காந்தி மாசானபு ஃபுகாகோ (Masanabu Fukuoka)வைத் தரிசிக்கலாம். இவர் இயற்கைவேளாண்மையை வலியுறுத்தி எழுதிய “ஒற்றை வைக்கோல் புரட்சி” (One Straw Revolution -1975) என்ற நூலும் “இயற்கைக்கான வழி” (The road to nature – 1977) என்ற நூலும் மிகவும் பிரபலமானவை. இந்நூல்கள் பலமான ஆதரவையும் கடும் விமர்சனத்தையும் எதிர்கொண்டவை. இவர் வழியில் இன்றும் பலர் சிந்தித்து வருகின்ற போதிலும் பில் மோலீசின் (Bill Mollision) டேவிட் ஹம்ரன் (David Homton) ஜே.ஜே றோடேல் (J.J.Rodale) என்பவர்களும் மூன்றாம் உலகைச் சேர்ந்த இன்னும் சிலரும் முக்கியமானவர்களாகக் கருதப்படுகின்றனர்.
மாசானபு ஃபுகாகோ இயற்கை வேளாண்மை பற்றி வெறும் போதனை செய்யவில்லை. அதன் சிறப்பை செயல்முறையூடாகக் காட்டுகின்றார். ஜப்பானில் ஹிகோதீவின் மலைச்சாரலில் இவரது 15 ஏக்கரளவான விவசாயப் பண்ணை அமைந்துள்ளது. இது முற்றுமுழுதான இயற்கை விவசாயப் பண்ணையாக விளங்குகின்றது. நுண் உயிரியலாளராகவும் விவசாய சுங்க அதிகாரியாகவும் பணியாற்றி இவர், 25 வயதில் அவற்றைத் துறந்து இயற்கை வழி விசாயத்தில் நாட்டம் கொண்டார். இவர் ஒரு பொளத்த மதத்தினராக விளங்கியமையும் இயற்கையில் அதிகம் நாட்டம் கொள்ள வைத்ததெனலாம். அவரது இயற்கை நேசிப்பினை அவரது நூலில் விரவிவரும் பின்வரும் கூற்றுக்களால் உணர்ந்து கொள்ளமுடியும்.
மனிதர்களால் எதையும் அறிந்துகொள்ளமுடியாது என்பதையும் இயற்கையைப் புரிதல் மனித அறிவிற்கு அப்பாற்பட்ட விடயம் என்பதையும் இறுதியில் அறிவதற்காகவே நாம் கடினமாக கற்கவேண்டியுள்ளது,
வாழ்க்கை என்பது இயற்கையிலிருந்து விலகிய ஒன்றாக இருக்கக்கூடாது. வேளாண்மையின் இறுதி இலட்சியம் பயிர்களை வளர்ப்பதல்ல. மனித இனத்தை வளர்த்து முழுமையடையச் செய்வதே….
மனிதன் தனது சொந்த விருப்பத்தைவிட்டு, இயற்கையோடு ஒன்றி வாழ்ந்தால் இயற்கை அவனுக்குச் சகலதையும் அளிக்கும். மக்கள் இயற்கை உணவை விட்டு எப்போது செயற்கை உணவைத் தேர்ந்தெடுத்தார்களோ அன்றே அவர்கள் தம் அழிவுக்கான தேதியைக் குறித்துவிட்டார்கள்.
Masanobu Fukuoka,(1975) one straw Revolution.
இயற்கை வேளாண்மையை ‘ஒன்றும் செய்யாமல் ஒரு வேளாண்மை’ என்று குறிப்பிடும் மாசானபு ஃபுகாகோ தான் தன் வயலில் வேலை செய்யும் போது ‘இதனையும் செய்யாமல் இருந்தால் என்ன?’ என்ற கேள்வியைத் தன் மனதில் கேட்டுக்கொண்டே செய்வதால் இயற்கை வழியில் அனைத்தையும் விட்டுவிட முடிகின்றது என்கிறார். தன் பண்ணையில் உலாவரும் போது இயற்கையாக வளர்ந்த நெற்கதிர் ஒன்று நவீமுறையில் பயிராகும் நெல்லைவிட மிக்க ஆரோக்கியமாகவும், அதிக கதிர்களைக் கொண்டதாகவும் விளங்கியதைக் கண்டே தான் இயற்கைவழி விவசாயத்தின்பால் அக்கறை கொண்டதாக கூறும் இவர், புவியிலிருந்து வரும் அனைத்தும் புவிக்கே திரும்பிவிட வேண்டும். நெற்கதிர்களை எடுத்துக்கொண்டு ஏனையவற்றை அப்படியே விட்டுவிட வேண்டும் எனக் கூறுகின்றார். அவர் முன்வைக்கும் இயற்கை வேளாண்முறையில் நான்கு அம்சங்கள் முக்கியமானவை.
மண்வளம் பேணுதல் பற்றிக் கூறும் போது பயிர்வளர்ச்சிக்கு பண்ணையை உழ வேண்டியதில்லை. தாவரங்களின் வேர்களும், மண் புழுக்கள், முயல் மற்றும் ஏனைய சிறு விலங்கினங்கள் என்பன இயற்கையாகவே மண்ணை உழுகின்றன. உக்கவைக்கும் நுண்ணங்கிகளின் பெருக்கம் மண் வளத்தையும் பெருக்கும் என்கின்றார்.
பயிர் வளர்ச்சிக்குரிய உரம் பற்றிக் குறிப்பிடும் போது நிலத்தை அதன் போக்கில் விடுவோமாயின் இயற்கையாகவே அது மண்ணில் உரச்சத்தை நிர்வகித்துக்கொள்ளும். பண்ணையில் வளரும் மிருகங்களும், பறவையினங்களும் இயற்கையாக உரத்தை வழங்கும். வைக்கோலை வெளியேற்றாது விட்டால் அது உக்கி உரத்தை வழங்கும் எனக் கூறும் அவர், காட்டில் செழித்து வளரும் மரங்களுக்கு நாம் உரமிடுகின்றோமா? என்ற கேள்வியையும் எழுப்புகின்றார்.
களைகளின் வளர்ச்சி இயற்கை சமச்சீர்த்தன்மையைப் பேணும் ஒரு நடவடிக்கையே. அதனை உழுது அழிக்க எண்ணினால் அது பெருகுமேயன்றிக் குறையாது. பருவப்பயிர்களுக்கிடையே ஊடுபயிர்களை வளர்ப்பது வைக்கோலால் நீண்டகாலம் வயல் பரப்பை மூடிவைத்துக் கொள்வது போன்ற நடவடிக்கைகள் களையைக் கட்டுப்படுத்தும் என்கின்றார்.
பூச்சிக்கட்டுப்பாடு பற்றிக் குறிப்பிடும் போது மாசானபு ஃபுகாகோ இயற்கையான சுற்றுச் சூழலில் வளரும் பயிர்க்ள் ஆரோக்கியமானவையே. இயற்கையில் பூச்சிகளுக்கு எதிர்ப் பூச்சிகள் உண்டு. நாம் கிருமிநாசினி தெளிப்பதால் அனைத்துப் பூச்சிகளும் அழிந்து இயற்கைச்சமநிலை அற்றுப்போகின்றது. சிலந்திவலை பின்னி என் பண்ணை முழுவதையும் பாதுகாப்பதை நீங்கள் நேரில் வந்தால் பார்க்க முடியம். எனது பண்ணை சிலந்திவலைப் பரவலால் மின்னிக்கொண்டிருப்பதை பார்ப்பீர்கள். மயிர் கொட்டிகளை செம்பகம் அழிக்கும். எலிகளை ஆந்தைகள் அழிக்கும். தவளை, தேரை என்பனவும் பூச்சிகளிலிருந்து பயிர்களைக் காக்கும். இயற்கையின் விந்தைகளை எம்மால் பூரணமாக விளக்க முடியாது என்று வலியுறுத்துகின்றார்.
மாசானபு ஃபுகாகோவின் பண்ணையின் பெரும்பரப்பு பல்வகை பழ மரங்களைக் கொண்டதே. இவை ஒன்றுடன் ஒன்று இயற்கையாக இணைந்து அற்புதமாக வளர்ந்துள்ளன. இங்கு உற்பத்தியாகும் பழங்கள் இயற்கையாக ஒழுங்கற்ற வடிவங்களில் காணப்படும். சில சுருக்கம் விழுந்தும் வாடியும் இருக்கும். இவ் இயற்கைப்பழங்களுக்கு நவீனமுறையில் உற்பத்தியாகும் பழங்களைவிட ஜப்பானில் நல்ல சந்தை வாய்ப்புகள் உண்டு. நவீமுறையில் உற்பத்தியாகும் பழங்கள் கவர்ச்சியாக இருப்பதற்காக மெழுகு கூடப் பூசுகின்றார்கள். வாடாது இருக்க இரசாயன கலவைகளைத் தெளிக்கின்றார்கள். இவை எல்லாம் மக்களின் உணவை நஞ்சாக்கும் நடத்தைகள் என மாசானபு ஃபுகாகோ சாடுகிறார்.
இவரது பொருளாதார சிந்தனைகள் நவீனபொருளிளயலாளரது சிந்தனையிலிருந்து மாறுபட்டவை. விவசாய நடவடிக்கைகளில் குறைந்தளவு மக்கள் இருப்பது ஒரு அபிவிருத்தி குறிகாட்டியென நவீன பொருளியலாளர் கூற இவர் 80-90 வீத மக்கள் விவசாயத்தில் ஈடுபட வேண்டுமெனக் கூறுகின்றார். பொருளாதார வளர்ச்சி வீத அதிகரிப்பைப் பற்றி அலட்சியப்படுத்தும் இவர் வளர்ச்சி வீதம் 0 ஆக இருப்பதே நிலையான பொருளாதார வளர்ச்சி என வாதிடுகின்றார். மாசானபு ஃபுகாகோ நவீன உலகில் பழமையைப் பேணுவதன் மூலம் புதுப்பொருளாதார ஒழுங்கை உருவாக்கமுடியுமென்று சொல்லாலல்ல செயல்மூலம் நிரூபித்து வருகின்றார்.
சூழலுக்கு ஊறுவிளைவிக்காத நிலைத்து நிற்கும் வேளாண்மை பற்றிய கருத்துக்களை உலகிற்கு பரப்பி வரும் இன்னொரு முக்கியமானவர் பில் மோலீசன் (Bill Mollisipon) ஆவார் இவரும் டேவிட் ஹோம்ரன் என்பவரும் இணைந்து ‘ஃபோமா கல்சர்’ என்ற நூலை 1978 இல் வெளியிட்டனர். இதன் அர்த்தம் நிலைத்துநிற்கும் பயிர்ச்செய்கை (Permnanent Culture) என்பதாகும். இவர்கள் இந்நூலில் மாசானபு ஃபுகாகோ சிந்தனைகளால் கவரப்பட்டுள்ளமை நன்கு வெளிப்படுகின்றது. ஆஸ்திரேலியாவில் நியூசவுத் வேல்ஸ் மாகாணத்தில் டயால்கம் (Taylgum) என்ற இடத்தில் நிலைக்கும் பயிர்ச்செய்கை நிறுவனம் (Perma Culture Institute) என்ற அமைப்பினை நிறுவி அதனூடாக மேற்படி வேளாண் முறைகளை உலகிற்குப் பரப்பி வருகின்றார்கள். உலகில் இவர்களுக்கு 54 நாடுகளில் கிளை நிறுவனங்கள் உண்டு. இந் நிறுவனங்களின் மூலம் நிலைக்கும் வேளாண்மையை மேம்படுத்துவதற்கான பயிற்சிகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. முறையான பாடத்திட்டம் மூலம் வழங்கப்படும் இப்பயிற்சியில் விவசாயச் செய்முறை அத்துடன் இணைந்த தோட்டக்கலை, கட்டிடக்கலை, போக்குவரத்து, நிதி, சமூக அபிவிருத்தி திட்டங்கள், விரயமற்ற உற்பத்தி, சுற்றுவட்ட முறையில் வளங்களைப் பயன்படுத்துதல். உள்ளுர் பாரம்பரிய தாவர வித்துக்களை மீண்டும் அறிமுகப்படுத்துதல், தரிசான நிலங்களை வேளாண்மைச்செய்கை மூலம் சீர்செய்தல் என்பன அடங்கும். இவற்றை ஒழுக்கநெறியுள்ள திட்டமிட்ட விஞ்ஞானமாகக் கொண்டே பயிற்றிவிக்கின்றார்கள்.
நிலைக்கும் பண்பு புவியின் பாதுகாப்புக் குறித்த ஒழுக்கநெறி மாத்திரமன்றி மனிதபாதுகாப்புக்குறித்த ஒழுக்கநெறியுமாகும். இவர்களது போதனையில் நுகர்வது போக எஞ்சிய அனைத்தும் மறுமுதலீடாக புவிக்கே திரும்பி விடவேண்டும். புவியைப் பேணும் ஒழுக்க நெறி தார்மீக நெறியாகவும் கல்வி நெறியாகவும் போற்றப்படவேண்டும் என்பது இவர்களது வேண்டுகோளாகும். எந்த ஒரு அரசுக்கும் அல்லது அரசியல் அமைப்புக்கும் அழிந்துவரும் புவிபற்றி அக்கறையே இல்லை. நிலம் என்றால் அதில் எந்தளவு பணம் பெறலாமென்றே திட்டமிடுகின்றார்கள் என இவர்கள் சாடுகின்றார்கள்.
பில் மோலீசின் நவீன விவசாயத்தை இறந்து கொண்டிருக்கும் விவசாய முறை என சாடுவதோடு நவீன விவசாயம் வர்த்தக நோக்கத்தைக்கொண்ட, அழிவுக்கு வழிகோலும் முறைகளை உள்ளடக்கிய, எரிபொருளை வீணடிக்கின்ற விவசாயம் என்கின்றார். மேலும் அவர் நவீன விவசாயம் முட்டாள் தனமான நோக்கங்களுக்காக தேவையற்ற பயிர்களை வளர்க்கின்றது. சோயா பயிர் உற்பத்தி கால்நடைக்கு உணவாகின்றது. மீனைப் பொடிசெய்து பன்றிகளை வளர்க்கின்றார்கள். மாட்டிறச்சி வர்த்தகத்தால் உலகின் புல் நிலங்கள் அழிந்து பாலைநிலம் பரவி வருகின்றது என்கிறார். மேலும் நவீன விவசாயச் செய்கை தொழிற்சாலை உற்பத்திக்கான மூலப்பொருளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டதே தவிர மக்களுக்கு உணவு வழங்குவதையல்ல. புவியின் மொத்த நிலப்பரப்பில் 4வீத பரப்பளவில் உணவு உற்பத்தி முறையாகச் செய்யப்பட்டாலே உலகில் உணவுப் பஞ்சம் ஏற்படமாட்டாது என உறுதிபடக் கூறுகின்றார்.
நவீன முறையில் விவசாயம் செய்தவர்கள் இம் மாற்றுமுறைக்கு வரும் போது ஆரம்பத்தில் உற்பத்தி குறையும் என்றாலும் பின்னர் உற்பத்தி படிப்படியாக அதிகரிக்கும். நவீனமுறையில் இரசாயனப் பொருட்களை அதிகளவில் பயன்படுத்தி வந்ததன் காரணமாக 5 ஆண்டுகள் நிலைமாறும் நிலை நிலவும். ஆறாவது ஆண்டிலிருந்து உற்பத்தி இருமடங்காக உயரும். வேளாண்மையுடன் காடுவளர்ப்பும் இணைந்துள்ளதால் நைட்ரசன் சத்து நிலங்களுக்கு ஊட்டத்தை வழங்கும். தானியங்கள், பழங்கள், காய்கறிகள், கூடவே மரக்கறிகள் நிறைந்த வேளாண்பண்ணை முறைகளையே பில் மோவீசின் குழுவினர் வலியுறுத்துகின்றனர். இவர்களது பண்ணை சுயநிறைவு கொண்டது. உரத்தின் தேவையோ, களை பூச்சி நாசினிகளின் தேவையோ எழுவதில்லை. இவர்களது பயிர்ச்செய்கை முறை பரந்துபட்டு பயிர்ச்செய்கை முறை (Extensive Agriculture) ஆகும்.
எவ்வளவு மோசமான தரிசு நிலம் என்றாலும் அந்நிலத்தை பசுமையாக்கக்கூடும் என கூறும் இவர்கள் பாறை நிலம், அதிக ஈரம் கொண்டநிலம், உவர்நிலம், வரண்ட பாலைநிலம், என்பனவற்றில் வேளாண் பண்ணைகளை உருவாக்கி வெற்றி கண்டுள்ளனர். ஜ.நாவின் உணவு விவசாய நிறுவனத்தின்( F.A.O) பயிற்சியாளர் தொகையைவிட தங்கள் நிறுவனத்தின் பயிற்சியாளர் தொகை அதிகமென பெருமைப்படும் பில் மோலீசன் இந்தியாவில் மட்டும் ஏறத்தாழ 1000 கிராமங்களில் ஃபேமாகல்சர் பயிற்சியாளர்கள் பணியாற்றி வருகின்றார்கள் என்கின்றார். ஏறத்தாழ ஒரு இலட்சம் இந்திய விவசாயிகள் பில் மோலிசனின் பண்ணைத்திட்ட முறைகளைப் பின்பற்றி பயனடைந்து வருகின்றார்கள். மூன்றாம் உலக நாடுகளுக்கு இவரது வேளாண் முறைகள் பொருத்தமானவை என கருதப்படுகின்றது. நிலைத்து நிற்கக்கூடிய இவ்வகை வேளாண்முறைகள் மீது நிஜமான அக்கறை செலுத்தும் காலம் வருமெனக்கூறும் இவர் 2000 ஆம் ஆண்டின் பின் நவீன விவசாய முறை மெல்லமெல்ல இறந்து நிலைத்துநிற்கும் விவசாயமே நிலைபெறும் என சூளுரைக்கின்றார்.
அமெரிக்காவிலிருந்தும் ஒரு குரல் இயற்கை வேளாண்மையில் அக்கறை கொண்ட ஒலிப்பு ஆச்சரியத்தை அளிப்பதே. அக்குரல் “றோடேல் நிறுவனத்தின்” குரலாகும். ஜே.ஜே. றோடேல் அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்நிறுவனத்தை அவரது மகன் ஜோன் றோடேல் தற்போது நடத்தி வருகின்றார். அமெரிக்காவில் பென்சில்வேனியா மாநிலத்தில் எம்மாமவுஸ் என்ற இடத்தில் இத்தொண்டு நிறுவனம் அமைந்துள்ளது. இயற்கை வேளாண்மையின் சிறப்பை உலகிற்கு பரப்புவது மாத்திரமன்றி மூன்றாம் உலக வசதிகுறைந்த ஏழைமக்களின் வாழ்வை மேம்படுத்துவதற்கான சமூகநலத் திட்டங்களையும் இந்நிறுவனம் நடைமுறைப்படுத்தி வருகின்றது.
சூழலுக்கு ஊறுவிளைவிக்காத வேளாண் செய்கையை அடிப்படையாகக்கொண்ட சுயநிறைவு பெறத்தக்க அபிவிருத்தித்திட்டங்களிற்கு இந்நிறுவனம் உதவி வழங்கி வருகின்றது. மூன்றாம் உலகநாடுகளில் உள்ள வறுமைக்கோட்டின் கீழ் வாழ்ந்துவரும் மக்கள் பயன்பெறும் பொருட்டே பெரும்பாலும் இவ் உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
றோடேல் நிறுவனத்தினர் உலகில் பரப்பிவரும் வேளாண்முறைக்கு “புனர் ஜென்ம வேளாண்மை” (Rebirth Agriculture) என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இவர்களது நிறுவனமே மாசானபு ஃபுகாகோவின் ஒரு வைக்கோல் புரட்சி ( One Straw Revolution) என்ற நூலையும் இயற்கைக்கான வழி (The Road to nature) என்ற நூலையும் ஆங்கில மொழியில் மொழிபெயர்த்து வெளியிட்டதன் மூலம் நூலாசிரியரை அனைத்துலகத்திற்கும் அறிமுகமாக்கியது.
றோடேல் நிறுவனம் நிலைத்து நிற்கும் வேளாண்மைப் பண்புகளை உலகத்தவர் அறிதல் பொருட்டு “உயிர்ப்பு வேளாண்மை” (Organic Farming) என்ற சஞ்சிகையினையும், புதிய பண்ணை (New Farm) என்ற செய்திப்பத்திரிகையையும் வெளியிட்டு வருகின்றது. மேலும் இயற்கை வேளாண்மையை மேம்படுத்தத்தக்க பல்வேறு நூல்களையும் இந்நிறுவனம் காலத்துக்கு காலம் வெளியிட்டு வருவதோடு சர்வதேச கருத்தரங்குகளையும் ஒழுங்கு செய்து வருகின்றது.
இயற்கை வேளாண்மை பற்றி முதலாம் உலக நாட்டைச் சேர்ந்தவர்களைவிட மூன்றாம் உலகநாட்டினரே கூடிய அக்கறை கொள்ளவேண்டும். யதார்த்த நிலை கவலை தருவதாக உள்ளது. அரசாங்க மட்டத்தில் திட்டமிடுவோரும் இதுபற்றி அலட்சியமாகவே இருக்கின்றார்கள். இங்குள்ள அரசசார்பற்ற நிறுவனங்களும் நிதி நெருக்கடியாலும் நிபுணத்துவக் குறைபாட்டாலும் இவ்விடயம் தொடர்பாக அதிகளவில் அக்கறை செலுத்த முடியாதுள்ளது. இருப்பினும் இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் நிலைத்து நிற்கும் வேளாண்மையால் சில நிறுவனங்கள் கவனம் கொள்கின்றன.
இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் அகமதபாத் நகரில் கலாநிதி அனில்குப்தாவின் நிறுவனம் குறிப்பிடத்தக்க பணியாற்றி வருகின்றது. இவர்கள் ‘நம்வழி வேளாண்மை’ என்ற மகுடவாசகத்தை முன்வைத்து சூழல்பேண் வேளாண் அபிவிருத்தியை முன்னெடுத்து வருகின்றார்கள். இந்நிறுவனத்தின் கிளைகள் தமிழ்நாட்டில் மதுரை, ஒரிஸ்ஸாவில் புவனேஸ்வர், கேரளாவில் கோட்டயம், பூட்டானில் திம்பு, உத்தரப்பிரதேசத்தில் சஹாரன்பூர் ஆகிய இடங்களில் அமைந்துள்ளன. இவர்கள் காந்திய நிறுவனங்களுடனும் இணைந்தும் பணியாற்றி வருகின்றார்கள். அனில் குப்தாவின் நிறுவனத்தினர் நம்வழி வேளாண்மை பற்றி பிரசாரம் செய்யும் அளவிற்கு மாதிரிப்பண்ணைகளை அமைத்து செயல்முறையில் காட்டும் தன்மை குறைவாகவே உள்ளது.
தமிழ்நாட்டில் மனீந்தர்பால் என்பவர் பாண்டிச்சேரியில் அரவிந்தர் ஆசிரமத்தின் துணையுடன் நடத்தும் 100 ஏக்கர் பரப்பளவுள்ள குளோரியாப்பண்ணை, புதுவையில் அமைந்துள்ள ஏ.எஸ் சட்டார்ஜியின் இயற்கைப்பண்ணை, கீரானூரில் நாம்மாழ்வார் நடத்தும் லெய்சா (Leisa) பண்ணை, உடுமலைப்பேட்டையில் சி.ஆர் ராமநாதனின் விவசாய காட்டியல் (Agro Forestry) பண்ணை, எம்.எஸ் சுவாமிநாதன்ஆராய்ச்சி நிறுவனத்தினர் நடத்தும் சில பண்ணைகள், வீரனூர் சுற்றுச்சூழல் சங்கப் பண்ணை என்பன இந்தியாவில் இயற்கை வேளாண்முறைகளை முன்னெடுப்போருக்க வழிகாட்டும் பண்ணைகளாக விளங்குகின்றன.
இலங்கையில் கலாநிதி ஆரியரத்தினாவின் சர்வோதய இயக்கம் நடத்தும் சில விவசாயப் பண்ணைகளும் மன்னாரிலுள்ள “ஸ்கந்தபாம்” எனும் பண்ணையும் இயற்கை வேளாண்வழியை பின்பற்றத் தூண்டுதலளிக்கும் எம்மவரின் முயற்சியெனக் குறிப்பிடலாம்.
முடிவுரை
எமது பிரதேசத்தில் கடந்த மூன்று தசாப்தங்களாக நிலவிவந்த யுத்த நெருக்கடியால் நாம் பல இன்னல்களை எதிர்நோக்கினாலும் சில நன்மைகளும் விளைந்துள்ளன. எரிபொருள் உரம், களை நாசினி, கிருமிநாசினி என்பவற்றின் தட்டுப்பாட்டால் எமது விவசாய நிலங்கள் நஞ்சாகாது பேணப்பட்டு வந்துள்ளமை குறித்துரைக்கத்தக்க நல்விளைவுகளாகும். இந்நிலங்கள் நிலைத்துநிற்கும் பண்பு கொண்ட இயற்கை வேளாண்மைக்குரிய அடிப்படைகளை கொண்டுள்ளன. வலிகாமத்தில் வடபகுதிச்செம்மண் வலயம், தீவுப்பகுதி பிரதேசம் என்பன மக்கள் புலம்பெயர்ந்ததால் இரு தசாப்தங்களாக பலவழிகளில் இயற்கைவழி மாற்றத்தி;றகுள்ளாகி சீர்பெற்றுள்ளன. இவ் இடங்களில் புனர்வாழ்வு, புனர்நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளும் இக்காலகட்டத்தில் அரசும், அரசசார்பற்ற நிறுவனங்களும் 21ஆம் நூற்றாண்டுக்குரிய சூழல்பேண் இயற்கைவேளாண் வழிமுறைகளை மேற்குறித்த பகுதிகளில் அறிமுகப்படுத்துதல் அறிவுடைமையாகும்.
பொதுவாக யாழ்ப்பாண விவசாய மக்கள் மூன்று தசாப்தங்களாக நீடித்த யுத்தகாலத்தில் உரம், நாசினிப்பாவனையின்றி அதிகளவு விவசாய உற்பத்திகளைப் பெற்றமை கவனத்திற்குரியது. தீவுப்பகுதியை பொறுத்தவரையில் மீள்குடியமர்ந்தோர் குறைவு. ஆனால் விவசாய நிலங்கள் அதிகம் உள. இச்சூழ்நிலையைப் பயன்படுத்தி சூழல்பேண் இயற்கை வேளாண் பண்ணைகளையும், விலங்கு வளர்ப்பு பண்ணைகளையும் அங்கு உருவாக்குதல் சாத்தியமே. இக்கட்டுரையாளர் தீவுப்பகுதியை சேர்ந்த வேலணைக்கிராமத்தில் “இராசரத்தினம் உருக்குமணி” பசுமைக்கிராமம் ஒன்றை உருவாக்கி வருவதையும, அங்கு இயற்கை வேளாண்மை முறையில் உபஉணவு உற்பத்தியில் ஈடுபட்டு வருவதையும் முன்னுதாரணமாக கொள்ளலாம்.
யாழ்ப்பாண நகரச்சந்தையில் உடன் விற்பனை செய்யக்கூடிய காய்கறி உற்பத்தி, விலங்கு வேளாண் உற்பத்தி, மீன்பிடி உற்பத்தி என்பனவற்றை தீவுப்பகுதியில் மேற்கொள்ள உதவி வழங்குவதன் மூலம் தீவுப்பகுதியை அபிவிருத்தி செய்வதோடு யாழ்ப்பாண நகர மக்களில் ஒருபகுதியினரின் உணவுத் தேவையினையும் பூர்த்தி செய்ய முடியும்.
பொதுவாக வடகீழ் மாகாண புனர்வாழ்வு, புனர்நிர்மாணம் என்பவற்றிற்காகத் திட்டமிடுவோரும் ஆலோசனை வழங்குவோரும் இப்பிரதேசங்களில் நிலைத்து நிற்கும் பண்பு கொண்ட 21ஆம் நூற்றாண்டிற்குரிய சூழல் பேண் வேளாண் அபிவிருத்தியை முன்னெடுத்தல் பயன்தருமா என்பது பற்றியும் எவ்வெவ் இடங்களில் எந்தெந்த வழிகளில் இதனை அமுல் நடத்த முடியுமென்பது பற்றியும் ஆய்வுகளை மேற்கொண்டு தெளிந்த நல்லறிவைப் பெறுதல் வேண்டும்.
ஆக்கம்:- பேராசிரியர் இரா.சிவசந்திரன்
E mail –
- விவரங்கள்
- இரா.சிவசந்திரன்
- பிரிவு: புவி அறிவியல்
விவசாயத் தொழிற்றுறை எனும் போது, அது ஒரு பக்கத்தில் விவசாய உற்பத்திக்கு அடிப்படையான (உள்ளீடுகள், உழவு இயந்திரங்கள், களஞ்சியம் போன்றன) கைத்தொழில்களையும் மறுபக்கத்தில் விவசாய உற்பத்திகளை மூலப்பொருளாகக் கொண்ட கைத்தொழில்களையும் குறிக்கும். இவ் ஆய்வு விவசாய உற்பத்தியை மூலப்பொருளாக கொண்ட கைத்தொழில்கள் பற்றியே ஆராய்கிறது.
வடக்கு, கிழக்கு மாகாணத்தின் பொருளாதாரம் நீண்டகால பாரம்பரியம் மிக்க விவசாயத்தையே அடிப்படையாகக் கொண்டு அமைந்துள்ளது. ஆயினும் ஒரு விவசாய தொழிற்றுறை நோக்கிய விரிவாக்கம் இங்கு குறிப்பிடும் படியாக அபிவிருத்தியுறவில்லை எனலாம். அதாவது, விவசாய உற்பத்தி மூலப்பொருளானது அதிக வருமானந்தரத்தக்க விவசாய அடிப்படையிலான கைத்தொழில் துறை நோக்கி இன்றுவரை சரியாகத் திசை திருப்பப்படவில்லை என்பதே இதன் கருத்தாகும். இலங்கையில் நூற்றாண்டிற்கு மேற்பட்ட வளர்ச்சியைக் கண்ட பெருந்தோட்ட விவசாயத்துறை கூட பண்ட உற்பத்திக் கண்டத்திலிருந்து பதனிடுதல் கட்டத்திற்குக் கூட இங்கு முறையாக அபிவிருத்தி பெறவில்லை என்பது கசப்பான உண்மையாகும்.
இப்பிரதேசத்தில் அதிகம் பரந்துள்ள விவசாயக் கைத்தொழில் நெல்லரைக்கும் ஆலைத்தொழிலாகும். பாரம்பரியவகை ஆலை, ஓரளவு நவீனவகை ஆலை, நவீன வகை ஆலை என இவை கிராமம் தொட்டு நகரம் வரை பரந்துள்ளன. மொத்த நெல் ஆலைகளில் 80 வீதமானவை பாரம்பரிய ஆலைகளே. நெல்லை அரிசியாக மாற்றும் ஒரு சிறுபதனிடல் முயற்சியை மேற்கொள்ளும் இப்பாரம்பரிய ஆலைகள் அதிக தீமையையே விளைவிக்கின்றன. அவையாவன:
அரிசி அதிகளவுக்கு உடைக்கப்படுகின்றது.
அரிசியில் அசுத்தங்கள் காணப்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது.
தவிடு சரியாக நீக்கப்படுவதில்லை.
பெருமளவு புழுங்கல் அரிசியை மட்டுமே இவை அரைக்கின்றன.
ஆலையை இயக்கும் வலு நுகர்வில் சிக்கனம் இல்லை.
நவீன வகை ஆலைகள் மேற்படி குறைகளை நிவர்த்திக்கவல்லன. எனவே இங்கு நெல்லரைக்கும் ஆலைகள் நவீனமயப்படுத்துதல் அவசியமாகும். தமிழர் பாரம்பரியப் பிரதேசமாகிய வடகீழ் மாகாணத்தில் நெல் 202977 கெக்டர் பரப்பில் (2007) விளைவிக்கப்படுகின்றது. இது இலங்கையின் மொத்த நெல்விளைபரப்பில் 24.8 வீதமாகும். (மொத்தம் 100 எனில் 68 வீதம் கிழக்கு மாகாணம் 32 வீதம் வடமாகாணம்) இதனால் நெல்லரைக்கும் ஆலைகளை எவ்வகையிலே விரைவாக நவீன மயப்படுத்தலாம் என்பது பற்றி நாம் அதிக கவனமெடுத்தல் வேண்டும்.
அரிசியை எவ்வாறு அதிகலாபம் தரும் கைத்தொழிலாக மாற்றலாம் என்பதற்கு “நெசில்ஸ்” உற்பத்திகளாக வரும் நெஸ்டம்; (Nestum) பாளின்;(Forline) ஆகிய குழந்தை உணவுப்பொருட்களே தகுந்த எடுத்துக்காட்டுகளாகும். மேற்படி உணவுப்பொருட்களில் இருகைப்பிடியளவான அரிசியோ, கோதுமையோ தான் மூலப்பொருளாக உள்ளது. அத்துடன் சில ஊட்டச்சத்துக்கள் சேர்க்கப்பட்டுள்ளன. ஆனால் அதனைப் பெறுவதற்கு அதிக விலை கொடுக்க வேண்டியுள்ளது. இவ் அதிக மதிப்பை அப் பொருள் பெறுவதற்கு அது கைத்தொழில் மயப்படுத்தப்பட்டு பொதியிலடைக்கப்பட்டு சந்தைக்கு வருவதே காரணமாக அமைகின்றது. எனவே விவசாய உற்பத்திகளை கைத்தொழில் மயப்படுத்தும்போது நாம் அதிக வருமானம் பெறமுடியும்.
தெங்குத் தொழில் ஒப்பீட்டளவில் கைத்தொழில் மயமாக்கப்பட்டுள்ளதெனலாம். தேங்காய்த் துருவல், தேங்காய்ப்பால், தேங்காய் எண்ணெய், சவர்க்காரம், மாஜரீன், வினாகிரி போன்ற உற்பத்திகளும், தும்புத் தொழில் பேன்ற தொழில் மயமாக்கப்பட்ட உற்பத்திகளும் தேசிய மட்டத்திலே ஓரளவு அபிவிருத்தியை எய்தியுள்ளன. ஆனால் வடக்கு, கிழக்குப் பிரதேசங்களில் இவை குறிப்பிடும்படியான அபிவிருத்தியை இன்னும் எட்டவில்லை. தெங்குத்தொழில் அபிவிருத்தியானது கிராம மட்டங்களிலே இடம்பெறுவதால் அதிக பயனை விளைவிக்கத்தக்கவை. முக்கியமாக கிராம மட்டத்தில் பலருக்கு வேலை வாய்ப்புகளை அளிக்க முடியும். தெங்கு உற்பத்தியினைத் தொழில் மயப்படுத்துவதோடு அதனை நவீனமுறைக் கைத்தொழில் உற்பத்திகளாக மாற்றுதலும் அவசியமாகும்.
இப்பிரதேசத்தில் உற்பத்தி செய்யத்தக்க இன்னோர் முக்கிய விவசாய அடிப்படையிலான தொழிற்றுறை சீனி உற்பத்தியாகும். கரும்பு, சில கிழங்கு வகைகள், பனை ஆகிய வளங்களிலிருந்து சீனி உற்பத்தி செய்யப்படலாம். இப்பிரதேசத்தில் காணப்படும் கந்தளாய், கல்லோயா கரும்புச்சீனி உற்பத்தியாலைகளை புனருத்தாரணம் செய்து உற்பத்தியை அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன. தேசிய மட்டத்தில் இறக்குமதியாகும் சீனியை இவ் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் குறைக்க முடியும். பொதுவாக வறண்ட வலயத்தில் கரும்புச் செய்கையினை நல்லமுறையில் மேற்கொள்ளக்கூடிய வசதிகள் உள்ளன. இப்பிரதேசங்களில் பாசன வசதிகள் அமைக்கப்பெற்றால் வருடம் முழுவதும் கரும்பு பயிரிடப்படலாம். அத்துடன் இப்பிரதேசத்தில் சீனி உற்பத்திக்கான பொருத்தமான கிழங்கு வகைகள் எவையென ஆராய்ந்து அறிந்து அவற்றினைப் பயிரிட்டு சீனி உற்பத்தியை அதிகரிக்க முடியும். மேலும் இப்பிரதேசத்தின் முக்கிய பாரம்பரிய வளமான பனை வளத்தைச் சீனி உற்பத்திக்கு பயன்படுத்துவோமாயின் அதிக வருமானமும் வேலை வாய்ப்பும் ஏற்படுமென கருதுகின்றனர்.
பனஞ்சீனி உற்பத்தியானது அதிக உற்பத்திச் செலவை வேண்டுகின்றது. முக்கியமாக எரிபொருட் செலவே அதிகமாக உள்ளது. சூரிய சக்தியை பயன்படுத்துவதன் மூலம் இச்செலவைக் குறைக்கமுடியுமாயின் உற்பத்திச் செலவு குறைத்து பனை வளத்திலிருந்து இலாபகரமான முறையில் சீனியை உற்பத்தி செய்தல் சாத்தியமே. சீனி உற்பத்தியுடன் இணைவாக மதுபான உற்பத்தியும் அதிகரிக்கப்படலாம், குறிப்பாக ஏற்றுமதிக்கேற்ற தரத்தில் சாராய உற்பத்தியை அதிகரிக்கலாம்;. பனைவள அபிவிருத்திச் சபை போன்ற அமைப்புகளும், சமூக நலன் விரும்பிகள் சிலரும் பனைவள உற்பத்திகளை அபிவிருத்தி செய்வதற்கு அண்மைக்காலங்களில் அதிக முயற்சிகளை மேற்கொண்டு வெற்றி கண்டு வருகின்றனர். பனைவளத்திலிருந்து பல வகையான அழகுப் பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. வளர்ந்து வரும் சுற்றுலா தொழில் வளரும் போது இவ்வாறான உற்பத்திகள் அதிக வருமானத்தை ஈட்டித் தருமென நம்பலாம்.
எமது பிரதேசத்தில் அதிகளவு அபிவிருத்தி வாய்ப்பைக் கொண்ட இன்னோர் தொழிற்றுறை விலங்கு வேளாண்மையாகும். வடக்கு, கிழக்குப் பிரதேசங்களில் நல்ல முறையில் திட்டமிட்டு இவை மேற்கொள்ளப்படலாம். புல்லினங்களை வளர்த்து அதனை விலங்குகளுக்கு கொடுத்து பாலாக, இறைச்சியாகப் பெறுவதில் அதிக வருமானம் உண்டு. திணை வகைகளை கோழிகளுக்குக் கொடுத்து முட்டையாக, இறைச்சியாக நுகர்வதில் அதிக பயன் உண்டு. புல்லும் திணை வகைகளுமே மேற்படி உற்பத்திகளின் விவசாய மூலவளங்களாகும். ஆடு, எருமை,பன்றி,முயல், இறைச்சிக்கான மாடு போன்றனவும் நல்ல முறையிலே எமது பிரதேசங்களில் விரிவாக்கம் செய்யப்படலாம். கிராமம் ஒன்றில் மந்தை வளர்ப்பில் ஈடுபடும் ஒரு நவீன விவசாயி அதன்மூலம் பல நன்மைகளைப் பெறலாம். அவர் தனது வீட்டுத் தேவைக்கான உயிர் வாயுவை (Biogas) உற்பத்தி செய்யலாம். பயிர்களுக்கு உரம் பெறலாம், பால், இறைச்சி பெறலாம். இப்படி ஒன்றுடன் ஒன்று இணைவாக அபிவிருத்தியுறத்தக்க வகையில் ஒருங்கிணைக்கப்பட்ட கிராமப் பண்ணைத்திட்ட விருத்தியின் மூலம் அதிக பயன்பெற முடியும்.
இதற்கு சிறந்த உதாரணமாக மன்னார் வவுனியா போன்ற பிரதேசங்களில் அமைந்துள்ள தனி நபர் விவசாய பண்ணைகள் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும். இவை ஒருங்கிணைக்கப்பட்ட விவசாய பண்ணைகளாக இயங்கிவருகின்றன. மேற்படி ஒருங்கிணைப்புப் பண்ணை அபிவிருத்தியானது பலருக்கு வழிகாட்ட வல்லது. விலங்கு வேளாண்மை எமது பிரதேசத்தில் இன்று வரை மிகவும் குறைந்த கவனிப்பையே பெற்றுள்ளது. இதனை ஒவ்வொரு கிராமமட்டத்திலும் அபிவிருத்தி செய்ய உழைத்தல் வேண்டும். வீட்டுக்கு ஒரு மாடு, சிறு கோழிப்பண்ணை, ஆடு என்பன வளர்க்க ஊக்கமளிக்கப்படுதல் வேண்டும். நல்ல தரமான இனங்களை அறிமுகம் செய்தல் வேண்டும். எமது கிராமங்களில் உள்ள வேலிகளை மதில்களாக மாற்றுவதை விடுத்து குழைதரக்கூடிய மரங்களை வேலிகளில் நாட்டி அதன்மூலம் விலங்கு வேளாண்மையை அதிகரிக்கச் செய்ய வேண்டும். ஒவ்வொரு கிராமங்களிலும் சுயநிறைவுப் பொருளாதார வளமுள்ள கிராமக் குடும்ப அலகுகளை ஏற்படுத்துவதற்கு இவை பெரிதும் உதவும்.
பால் உற்பத்தியை இன்னும் நவீன தொழிற்றுறை உற்பத்தியாக மாற்ற வேண்டுமாயின் அதனைப் புட்டிப்பால், பால்மா, பட்டர், சீஸ், ஜஸ்கிறீம், யோக்கட், போன்றனவாக மாற்றி உற்பத்தி செய்யலாம். இவை அதிக வருமானத்தை அளிக்கவல்ல உற்பத்திகளாகும். புல் வளர்ப்பில் இருந்து ஆரம்பமாகும் இத் தொழிற்றுறையின் விரிவாக்கமானது சந்தையின் விரிவுக்கேற்ப அதிக வருமானம் தரும் உற்பத்திகளாக வளர்ச்சி பெறத் தக்கவையாகும்.
வடகீழ் மாகாணத்திலே 6.1 வீத நிலப்பரப்பைக் கொண்டதும், அப்பிரதேச மொத்தக்குடித்தொகையில் 36 வீதத்தை உள்ளடக்கியதுமான யாழ்ப்பாணக்குடாநாட்டுப் பகுதியே தோட்டச் செய்கை நன்கு வளர்ச்சியடைந்துள்ள பகுதியாக அமைந்துள்ளது. இப்பகுதியில் இலங்கையில் வேறு எப்பாகத்திலும் இல்லாதவாறு செறிந்தமுறைப் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படுகின்றது. இங்குள்ளோர் நவீன விவசாயிகள் என கூறத்தக்கவர்கள். யாழ்ப்பாணக்குடாநாட்டு விவசாயிகளைப்போல் நாட்டின் வேறு எங்கும் மிக விரைவாக நவீன அம்சங்களை பின்பற்றும் விவசாயிகளைக் காண்பதரிது. பாரம்பரிய முறையை உடனடியாக விட்டு நவீனமுறையை பின்பற்றக் கூடிய மனப்பாங்கு இங்குள்ள பெரும்பாலான விவசாயிகளிடம் காணப்படுகின்றது. இதனால் நவீனத்துவ முறைகள் இங்கு புகுத்துதல் எளிதாகும்.
யாழ்ப்பாணக் குடாநாட்டிலே உள்ள தோட்டங்களில் புகையிலை, மிளகாய், வெங்காயம், உருளைக்கிழங்கு, காய்கறிகள், பழங்கள், திணை வகைகள் என்பன பெருமளவில் விளைவிக்கப்படுகின்றன. இலங்கையின் உப உணவு உற்பத்தியில் கணிசமான பங்கினை யாழ் குடாநாட்டு விவசாயிகளே உற்பத்தி செய்கின்றனர். எடுத்துக்காட்டாக இலங்கையில் வெங்காயச் செய்கைக்கு உட்பட்ட பரப்பளவில் 38 வீதமும், மிளகாய்ச் செய்கைப் பரப்பளவில் 15 வீதமும் யாழ் குடாநாட்டிற்குள் அடங்குகின்றது. எனவே இவ் உற்பத்திகளை விவசாய அடிப்படையிலான கைத்தொழில் உற்பத்திகளாக விரிவாக்கம் செய்வது பற்றி நன்கு சிந்தித்து திட்டமிடதல் இம் மண்ணை நேசிக்கும் அனைவரினதும் கடமையாகும். எடுத்துக்காட்டாக புகையிலை மூலவளத்தைக் கொண்டு சுருட்டுக் கைத்தொழில் விரிவாக்கத்துடன் மாத்திரம் நின்றுவிடாது, அதனை நவீன முறையிலே சிகரெட் உற்பத்தியாக மாற்றி ஏற்றுமதி செய்ய முடியும். இதற்கான நவீன இயந்திரங்களைத் தருவித்து, சிகரெட், புகையிலை உற்பத்தியையும் ஊக்குவித்து விவசாய தொழிற்றுறை விரிவாக்கம் செய்யப்படலாம்.
இப் பிரதேச விவசாய உற்பத்தியில் குறிப்பாக யாழ்குடாநாட்டு உற்பத்தியில் உணவு பதனிடுதல் தொழிற்றுறை நல்ல பயனை நல்குமெனலாம். இவற்றில் முக்கியமாக பழங்கள் காய்கறிகளை பதனிடல், தகரத்திலடைத்தல், பொதிசெய்தல்; என்பனவற்றின் விரிவாக்கம் பற்றி அதிகம் சிந்திக்கலாம். சில பருவ காலங்களிலேயே சில பழங்களும், காய்கறிகளும் அதிகம் விளைகின்றன. அக்காலத்தில் இவற்றின் உற்பத்திகள் அதிக நிரம்பலை ஏற்படுத்துகின்றன. இதனால் அவற்றின் கேள்வி குறைந்து பழங்கள், காய்கறிகள் பெருமளவு பழுதடையும் நிலையும் தோன்றுகின்றது. எனவே பழங்களையும் காய்கறிகளையும் பாதுகாப்பாக வைப்பதற்கும், நீண்ட நாட்களுக்கு இன்னோர் வழியில் காப்புச்செய்து வைத்து பயன்படுத்துவதற்கும் சிறப்பான சில தொழில்நுட்ப உத்திகள் பயன்படுத்தப்படலாம். அவற்றுள் சில பின்வருமாறு.
01. பாதுகாப்பாக நீண்டகாலம் வைத்திருக்கக் கூடிய களஞ்சியங்களை உருவாக்குதல். (மெழுகு பூசுதல் போன்ற நுட்பங்கள் மூலம் பாதுகாப்பளித்தல்)
02. உறையச் செய்வது அல்லது இரசாயனப் பாதுகாப்புச் செய்வது.(உ- ம்: பழங்கள், பழச்சாறு, பழக்கூழ் வடிவிலோ, பல்வேறு வகைப் பழம் பானங்களாக உருமாற்றியோ பாதுகாக்கலாம்)
03. ஊறவைக்கும் பாதுகாப்பு முறைகளைப் பயன்படுத்துதல்.(ஊறுகாய்)
04. உலர்த்துவதன் மூலம் பாதுகாத்தல்.(வற்றல் போடுதல்)
மேற்படி பாதுகாப்புமுறைத் தொழில்நுட்பங்கள் பல்வேறு நாடுகளில் நன்கு வளர்ச்சி பெற்றுள்ளன. அவற்றினைப் பின்பற்றி எமது பிரதேசத்திற்கு ஏற்றதான பொருத்தமான தொழில்நுட்ப முறைகளைப் பின்பற்றி உணவுபதனிடுதல் தொழிற்றுறையை விரிவாக்குதல் வேண்டும். எமது பிரதேசத்தில் பேணிப்பாதுகாத்து சந்தைப்படுத்தக்கூடிய பழங்களென மாம்பழம்,பலாப்பழம், தக்காளி, பப்பாசி, எலுமிச்சை, தோடை, முந்திரிகை, விளாம்பழம், வாழைப்பழம், அன்னாசி, பனம்பழம் என்பனவற்றை குறிப்பிடலாம். இவற்றை எவ்வழிகளில் பாதுகாத்தல் லாபகரமானது என்பதற்கு ஆய்வுகள் அவசியம். ஒவ்வொரு பழவகையின் பாதுகாப்புப் பற்றியும் தனித்தனி ஆய்வுகள் நிகழ்த்தப்படவேண்டும். பாதுகாத்து பயன்படுத்துவது லாபம் தரத்தக்கது என்பதை நிச்சயித்த பின்னரே இம் முயற்சிகள் மேற்கொள்ளப்படவேண்டும்.
பழச்சாற்றினை அடிப்படையாகக் கொண்ட விவசாயத்தொழிற்றுறை உற்பத்திகளில் பானங்கள், தகரத்தில் அடைக்கப்பட்ட பழச்சாறுகள், நெக்டர் போன்றன உடனடியாகப் புருகத்தக்கவையாகும். பழக்கூழினை அடிப்படையாகக் கொண்டவற்றில் ஜாம், ஜெலி, சட்னி, பழக்குழம்பு என்பனவும் முழுதாக அல்லது வெட்டப்பட்ட பழங்களை அடிப்படையாகக் கொண்ட உற்பத்திகளில் தகரத்தில் அடைக்கப்பட்ட பழவகைககள், ஊறுகாய் வகைகள் என்பனவும் அடங்கும். எமது பிரதேசத்திலுள்ள பல கிராமங்களிலே சில பருவங்களின் போது பழங்கள், காய்கறிகள் பெருமளவில் உற்பத்தியாகின்றன. தேவைக்கதிகமான இப்பருவகால உற்பத்திகளின் பெரும் பங்கின வீணடிக்கப்படுகின்றன. பருவகாலமற்ற காலங்களில் இவை அருமையாகவுள்ளதால் அதிக விலையாக உள்ளன. எனவே மேற்படி உற்பத்திகளின் நிரம்பலை ஒழுங்குபடுத்துவதற்கு, பாதுகாப்பு முறைகளை பயன்படுத்துவது இன்றியமையாததாகும். இதற்குப் பொருத்தமான, மலிவான பாதுகாப்புத் தொழில்நுட்ப முறைகளை விருத்தி செய்தல் அவசியம். இதற்கான பல ஆய்வுகளும், செய்திட்டங்களும் விரைவில் மேற்கொள்ளப்படுதல் நற்பலனை விளைவிக்கும் எனலாம்.
பொதுவாக எமது பிரதேச விவசாய உற்பத்தியை அதிகரிக்கும் அதே நேரத்தில், அவ் உற்பத்திகளை அதிக வருமானம் தரத்தக்கவையாக நவீனத்துவம் கொண்டவையாக மாற்றுவதற்கு விவசாய தொழிற்றுறை விரிவாக்கம் பற்றி நாம் அதிகம் சிந்திக்க வேண்டியவர்களாக உள்ளோம். ஒரு நாடோ ஒரு பிரதேசமோ ஒரு கிராமமோ அபிவிருத்தியுறுவதற்கு மேற்படி அபிவிருத்திக்குரிய வழிமுறை சுருக்கமான தந்திரோபமாயமாகும். ஒரு விவசாய உற்பத்தியை சில செயன்முறைக்கு உட்படுத்தி வேறோர் உற்பத்தியாக அல்லது பலவாக மாற்றுதல், அவ் உற்பத்திகளை இன்னமும் சில செயன்முறைக்கு உட்படுத்தி இன்னும் பலவாக மாற்றுதல் போன்ற தொழில்நுட்ப நடவடிக்கைகளே விவசாயத் தொழிற்றுறை விரிவாக்கத்தின் பரிணாமமாகும். இதன் விளைவாக அதிக வருமானம் லாபம் கிடைப்பதோடு வேலை வாய்ப்புகளும் அதிகரிக்கும். எனவே விவசாயப் பொருளாதார அடிப்படையை கொண்ட நம் பிரதேசமும் நாடும் எம் போன்ற நாடுகளும் விருத்தியுற மேற்படி அபிவிருத்தித் திறமுறையின்பால் அதிக அக்கறையும், ஆர்வமும் காட்டவேண்டும்.
- பேராசிரியர் இரா.சிவசந்திரன் (புவியியற் பேராசிரியர்)
- விவரங்கள்
- இரா.சிவசந்திரன்
- பிரிவு: புவி அறிவியல்
முகவுரை:-
தமிழர் பாரம்பரியப் பிரதேசம் வரலாற்று ஆதாரங்களின் படி இலங்கையின் வடக்கு-கிழக்கு மாகாண எல்லைப்பரப்பை விடப் பரந்ததெனினும் இங்கு ஆய்வு நோக்கம் கருதி இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணம் என்றே கொள்ளப்படுகின்றது. வடகீழ் மாகாணம் 18,333 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பையும் 558 சதுரகிலோமீற்றர் உள்நாட்டு நீர்ப்பரப்பையும் உள்ளடக்கிய பிரதேசமாகும். இலங்கையின் மொத்த நிலப்பரப்பில் இது 28.8 வீதமாக அமைகின்றது. இவை எட்டு மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா, முல்லைத்தீவு என்பன வடமாகாணத்தினுள்ளும், திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை என்பன கிழக்கு மாகாணத்தினுள்ளும் அமைகின்றன.
தமிழர் பாரம்பரியப் பிரதேசத்தின் உழைக்கும் மக்களில் 60 வீதத்தினர் விவசாயத்தையே பிரதான தொழிலாகக் கொண்டுள்ளனர். இப்பிரதேசத்தில் விவசாயமே பாரம்பரியப் பொருளாதார நடவடிக்கையாக, நீண்டகாலமாக பெரு மாற்றங்கள் எதுவுமின்றி இருந்து வருகிறது. பிற்காலத்தில்; விவசாயத்துறையில் புகுத்தப்பட்ட புதிய நுட்ப முறைகள் இப்பகுதி விவசாயிகளிடையே வேகமாகப் பரவி உள்ளன. இதில் மாற்றுவிவசாயம், விவசாய உள்ளீடுகள், நீர்ப்பாசனம், நீர் முகாமைத்துவம் தொடர்பான நுட்ப முறைகள் குறிப்பிடத்தக்கவை.
நிலப்பயன்பாடு:-
தமிழர் பாரம்பரியப் பிரதேசம் அடக்கியுள்ள வடக்கு – கிழக்கு மாகாணங்களின் விவசாய நிலப்பயன்பாட்டை இரு பெரும் பிரிவாக வகைப்படுத்தலாம்.
01) தோட்டச்செய்கையோடு தொடர்பான விவசாய நிலப்பயன்பாடு
02) நெற்செய்கையோடு தொடர்பான விவசாய நிலப்பயன்பாடு
இப் பிரதேசத்தின் மொத்த நிலப்பரப்பில் 5.43 வீதத்தையும் மொத்தக் குடித்தொகையில் 35.4 வீதத்தையும் உள்ளடக்கிய யாழ்ப்பாணக்குடாநாட்டுப் பகுதியே தோட்டச் செய்கை அதிகளவுக்கு வளர்ச்சி பெற்ற பகுதியாக உள்ளது. யாழ்ப்பாணக் குடாநாட்டில் கிடைக்கப்பெறும் தரைக்கீழ் நீர்வளத்தைப் பயன்படுத்தி இப்பகுதி வாழ் மக்கள் வருடம் முழுவதும் பயிர் செய்கின்றார்கள். மிகவும் சிறிய அளவினதான துண்டு நிலங்களில் செறிவான முறையில் தோட்டப் பயிரச்செய்கை இங்கு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இலங்கையின் வேறு எப்பாகத்திலும் இவ்வகையான செறிந்த பயிரச்செய்கை முறை மேற்கொள்ளப்படுவதில்லை. இதன் காரணமாக யாழ்ப்பாணக்குடாநாட்டுப் பகுதி செறிவான குடித்தொகையை கொண்டுள்ளது. தோட்ட நிலங்கள் அதிகளவு கொண்ட பகுதிகளில் சதுர மைலுக்கு 3000க்கு மேற்பட்டோர் வாழ்கி;ன்றனர்.
யாழ்ப்பாண குடாநாடு 1025 சதுர கிலோமீற்றர் பரப்பளவைக் கொண்டது. இதில் 60 வீதமான பகுதியே மக்கட் பயன்பாட்டிற்கு ஏற்றதாக அமைகின்றது. ஏனைய 40 வீதமான பகுதி மணல், பாறை ஆகியவற்றையும் சதுப்பு நிலங்களையும் கொண்டுள்ளதால் பயன்பாட்டிற்கு ஏற்றதாக அமையவில்லை. மக்களுக்கு பயன்படுகின்ற 60 வீதமான நிலப்பகுதியில் மூன்றிலொரு பகுதி குடியிருப்பு நிலங்களாக உள்ளன. பனை, தென்னை ஆகிய மரப்பயிர்கள் மற்றொரு மூன்றிலொரு பகுதியிற் காணப்படுகின்றன. எஞ்சிய பகுதியே நெற்பயிரும், தோட்டப்பயிரும் செய்கை பண்ணப்படும் விவசாயப்பகுதியாகும். அண்மைக்காலங்களில் நெல்வயல் நிலங்கள் தோட்டநிலங்களாக மாற்றப்பட்டு வருகின்ற போக்கினையும் தோட்ட நிலங்கள் குடியிருப்பு நிலங்களாக மாற்றப்பட்டு வருகின்ற போக்கினையும் அவதானிக்க முடிகின்றது.
இப்பகுதித் தோட்டங்களில் புகையிலை, மிளகாய், வெங்காயம், உருளைக்கிழங்கு, காய்கறிகள், திணை வகைகள், பழ வகைகள் என்பன பெருந்தொகையாக விளைவிக்கப்படுகின்றன. இலங்கையின் உப உணவுத்தேவையின் கணிசமான பங்கு யாழ்ப்பாணக்குடாநாட்டு உற்பத்தியாலேயே யுத்தத்திற்கு முன்னர் பூர்த்தி செய்யப்பட்டது. உதாரணமாக இலங்கையில் வெங்காயச் செய்கைக்கு உட்பட்ட பரப்பளவில் 38 வீதத்தையும், மிளகாய்ச் செய்கைக்குட்பட்ட பரப்பளவில் 15 வீதத்தையும் யாழ்ப்பாணக் குடாநாடே அடக்கியிருந்தது. யாழ்ப்பாணக் குடாநாட்டின் விவசாயிகள் புதிய தொழில் நுட்பமுறையினை புகுத்துவதில் பேரார்வம் கொண்டவர்கள். தோட்டச்செய்கைக்கு நீர் இறைக்கும் இயந்திரம், செயற்கை உரம், களைநாசினி, கிருமி நாசினி என்பன பெருமளவு பயன்படுத்தப்பட்டு விவசாய உற்பத்தி உயர்வடைந்த நிலை காணப்பட்டது.
யாழ்ப்பாணக் குடாநாடு தவிர்ந்த பிரதான நிலப்பகுதியின் நிலப்பயன்பாட்டை தாழ்நிலப்பயன்பாடு, மேட்டு நிலப்பயன்பாடு என வகைப்படுத்தலாம். மேட்டு நிலப் பயன்பாடு இப்பகுதியில் அதிகம் விருத்தி அடையவில்லை. தாழ்நிலப் பயன்பாட்டில் நெற்செய்கையே முக்கிய இடத்தை வகிக்கின்றது. ஆற்று வடிநிலப் பகுதிகளிலும் நீர்த்தேக்கத்தினை அண்டிய பகுதிகளிலும் வண்டல்மண், களிமண் படிவுகள் காணப்படும் தாழ்வான பகுதிகளிலும் நெற்செய்கை மேற்கொள்ளப்படுகின்றது. இப்பகுதிகளில் பழைய பாரம்பரிய கிராமிய விவசாய நிலப்பயன்பாடும் புதிய குடியேற்றத்திட்ட நிலப்பயன்பாடும் வௌ;வேறான பண்புகளைக் கொண்டமைந்துள்ளன. மன்னார், முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு பகுதிகளின் கரையோரமாகப் பழைய விவசாய நிலப்பரப்புகள் பரந்துள்ளன. முன் காடுகளாக இருந்து தற்போது நில அபிவிருத்தி மேற்கொள்ளப்பட்டு வரும் உள்ளமைந்த பகுதிகளில் குடியேற்றத்திட்டங்கள் அமைக்கப்பட்டன.
1935 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட நில அபிவிருத்திச் சட்டத்தின் பின்னர் இப்பகுதிகளில் குடியேற்றத்திட்டங்கள் ஏற்படுத்தப்பட்டன. பல நோக்கு குடியேற்றத்திட்டம், பாரிய குடியேற்றத்திட்டம், கிராம விஸ்தரிப்புத் திட்டம், மத்திய வகுப்பார் குடியேற்றத்திட்டம், இளைஞர் திட்டம் ஆகியனவாக இவை அமைக்கப்பட்டுள்ளன. குடியடர்த்தி மிக்க பகுதிகளில் இருந்து மக்களை நகர்த்தவும், நிலமற்றோருக்கு நிலமளிக்கவும், வேலையற்றிருந்தோருக்கு வேலை வாய்ப்பு வழங்கவும், குடியேற்றத்திட்ட உருவாக்கம் ஓரளவு உதவியுள்ளது. கிளிநெச்சியில் இரணைமடுக்குளத்திட்டம், மன்னாரில் கட்டுக்கரைக்குளத்திட்டம், வவுனியாவில் பாவற்குளத்திட்டம், திருகோணமலையில் கந்தளாய் குளத்திட்டம், மட்டக்களப்பில் உன்னிசசைக்குளத்திட்டம், அம்பாறையில் கல்லோயாத்திட்டம் என்பன மாவட்டத்திற்கொன்றான உதாரணங்களாகும். பிற்;காலங்களில் இப்பகுதிகளிலே படித்த இளைஞர்களுக்கென உபஉணவு உற்பத்தித் திட்டங்கள் பல ஏற்படுத்தப்பட்டு வந்துள்ளன. இவை மேட்டு நிலப்பயிர்களை ஊக்குவிப்பனவாகவும், ஏற்று நீர்ப்பாசன வசதியுடன் கூடிய விவசாய அபிவிருத்தி திட்டங்களாகவும் அமைந்தன.
இவற்றில் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்த முத்தையன் கட்டு இளைஞர் திட்டம், கிளிநெச்சி மாவட்டத்தில் அமைந்த விஸ்வமடு, திருவையாறு, இளைஞர் திட்டங்கள் என்பன குறிப்பிடத்தக்கன. ஏனைய குடியேற்றத்திட்டங்கள் போலன்றி இளைஞர் திட்டங்கள் பொருளாதார ரீதியில் திருப்தியைத் தருவனவாக விருத்தியடைந்திருந்தன. வடக்கு கிழக்கு மாகாணங்களில் நெற்செய்கை மேற்கொள்ளப்படும் மொத்த நிலம் ஏறத்தாழ 156692 ஹெக்டேயர் ஆகும். இது இலங்கையின் மொத்த நெல் விளைபரப்பில் பரப்பில் 31.3 வீதமாக அமைகின்றது. இப் பிரதேசத்தின் மொத்த நெல் விளை பரப்பில் 62 வீதத்தைக் கிழக்கு மாகாணம் உள்ளடக்கியுள்ளது. மொத்த நெல் விளை நிலத்தில் 33 வீதம் பருவ கால மழையை நம்பிய மானாவாரி நிலங்களாக உள்ளன. ஏனையவை நீர்ப்பாசன வசதியுடைய குளங்களை அடுத்துள்ளன. பாசன வசதியுடைய நிலங்கள் சிலவற்றிலே வருடத்திற்கு இருதடவை நெல் விளைவிக்கப்படுகின்றது. வருடத்திற்கு இரு தடைவ நெல் விளைவிக்கப்படும் விளைபரப்பு 28 வீதமாக அமைகின்றது.
பொதுவாக இப்பிரதேசத்தில் அதிகளவு நெல் விளைபரப்பு பருவ மழையை நம்பியதாகையால் பருவமழை பெய்துவரும்; காலங்களில் நெல் விளைச்சல் பெரிதும் பாதிக்கப்படுகின்றது. நெற்செய்கையில் நிலவும் இந் நம்பிக்கையற்ற நிலையை மாற்றவும் மிகுதி 72 வீதமான நிலப்பரப்பில் இருபோகச் செய்கையை மேற்கொள்ளவும் ஏற்கனவே பயிர்செய் பரப்பாகப் பயன்பட்டு வரும் நிலப்பரப்பிற்கு நீர்ப்பாசன வசதியை அதிகரித்தல் வேண்டும். இவற்றில் தெளிவு பெறுவதற்கு இப்பிரதேசத்திலுள்ள நீர்வளம், பாசன வாய்ப்புகள் பற்றி தெளிவு அவசியமாகும்.
நீர்வளமும் நீர்ப்பாசனமும்
தமிழர் பாரம்பரியப் பிரதேசத்தின் விவசாயச் செய்கை பெருமளவுக்கு மழை வீழ்ச்சியை நம்பியதாகவே அமைந்துள்ளது. வருடம் 2000 மில்லி மீற்றருக்கு (75 அங்குலம்) குறைந்த மழைவீழ்ச்சி பெறும் இலங்கையின் வரண்ட வலயத்தின் பெரும்பாகத்தை உள்ளடக்கியுள்ள தமிழர் பாரம்பரியப் பிரதேசத்தின் வருடச் சராசரி மழைவீழ்ச்சி 1250 மி.மீ ஆகும். மழைவீழ்ச்சிப் பரம்பலில் பிரதேச வேறுபாடுகள் உள்ளன. மன்னார், அம்பாறை மாவட்டங்களின் தென் பகுதிகள் குறைந்தளவான 750 மி.மீ முதல் 1000 மி.மீ வரை மழை பெற, அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களின் மேற்குப் பகுதிகள் உயர்ந்தளவான 2000 மி.மீ மேற்பட்ட மழைவீழ்ச்சியை பெறுகின்றன. எனினும் 1000-2000 மி;மீ வரை (50- 75 அங்குலம்) மழை பெறும் பரப்பளவே தமிழர் பாரம்பரியப் பிரதேசத்தில் அதிகமாகும். அதாவது யாழ்ப்பாணம், கிளிநெச்சி, வவுனியா, திருகோணமலை மாவட்டங்கள் முழுவதும் மன்னார், அம்பாறை ,மட்டக்களப்பு மாவட்டங்களின் பெரும் பாகமும் 1000 மி.மீ முதல் 2000 மி.மீ வரை மழை பெறும் பகுதிகளாக அமைகின்றன.
இப்பகுதி வடகீழ் மொன்சூன் காற்றினாலும், சூறாவளி நடவடிக்கைகளினாலும் ஒக்டோபர், முதல் ஜனவரி வரையிலான காலப்பகுதியிலேயே அதிகளவு மழைவீழ்ச்சியைப் பெறுகின்றது. இப்பகுதியில் வருடம் முழுவதும் கிடைக்கப்பெறும் மொத்த மழைவீழ்ச்சியின் 70 வீதம் மேற்படி நான்கு மாத காலத்திற்குள்ளாகவே பெறப்படுகின்றது. இவ்வாறு பெறப்படும் மழை நீரில் 20-25 வீதம் புவி மேற்பரப்பு ஓடு நீராகக் கடலையடைகின்றதெனவும் 40–45 வீத நீர் ஆவியாக்கம், ஆவியுயிர்ப்பினால் இழக்கப்படுகின்றதெனவும், எஞ்சிய நீரே பயன்பாட்டிற்குரியதாக அமைகின்றதெனவும் சில கணிப்பீடுகளிலிருந்து தெரிகின்றது. இவ்வளவு குறைந்த காலத்தில் மழைவீழ்ச்சியினால் மாத்திரம் கிடைக்கும் நீர் வளத்தைப் புவி மேற்பரப்பு நீராகவும் தரைக்கீழ் நீராகவும் சேமித்துப் பாசனப் பயன்பாட்டிற்கு உட்படுத்தும் போதே இப்பிரதேசத்தின் விவசாய உற்பத்தியை அதிகரிக்க முடியும்.
தமிழர் பாரம்பரியப் பிரதேசத்தில் பாசனத்திற்குக் கிடைக்கக் கூடிய நீர் வளங்களை இரு பெரும் பிரிவுகளாக வகைப்படுத்தலாம்.
01) புவி மேற்பரப்பு நீர்வளம்
02) தரைக்கீழ் நீர்வளம்
புவி மேற்பரப்பு நீர்வளம்
புவி மேற்பரப்பு நீர் வளமே யாழ்ப்பாணக்குடாநாடு தவிர்ந்த பிரதான நிலப்பகுதியில் பாசனத்திற்குப் பயன்படும் வளமாய் உள்ளது. தரைக்கீழ் நீர்வளம் முக்கியமாக யாழ்ப்பாணக் குடாநாட்டின் பாசனத்திற்குப் பயன்படுகின்றது.
புவிமேற்பரப்பு நீர்வளம் என்னும் போது ஆறுகள், குளங்கள் என்பவற்றில் தேக்கப்படும் நீரினைக் குறிக்கும். இப்பிரதேசத்தில் மகாவலி தவிர ஏனையவை வறண்ட பிரதேசத்தில் ஊற்றெடுக்கும் ஆறுகளேயாகும். பருவ காலங்களில் மழை வீழ்ச்சியால் கிடைக்கும் நீர் வளத்தையே இவை கொண்டுள்ளன. இவ்வகை ஆறுகளையோ கிளை ஆறுகளையோ அவற்றின் வடிநிலப்பரப்பில் தடுத்து அணைகட்டி குளங்களாக உருவாக்கியுள்ளனர். ஒரு சில ஆறுகள் திசைதிருப்ப்பட்டிருக்கின்றன. இவ்வாறான பாசன நாகரிகம் கிறீஸ்து காலத்திற்கு முன்பாகவே தமிழர் பிரதேசங்களில் பரவியிருந்தமையை மகாவம்சமே குறிப்பிடுகின்றது. குவேனி விஜயனைச் சந்தித்தபோது இவ்வாறான குளமொன்றின் அணைக்கட்டில் நூல்நூற்றுக் கொண்டிருந்தாள். எனவும், அக்குளம் மன்னார் பிரதேசத்தில் அமைந்திருந்ததெனவும் மகாவம்சத்தில் காணப்படும் குறிப்புகள் சிலவற்றிலிருந்து தெரிய வருகின்றது.
தமிழர் பாரம்பரியப் பிரதேசத்தின் பிரதான நிலப்பகுதியிற் காணப்படும் குளங்களை மூன்று பிரிவுகளாக வகைப்படுத்தலாம்.
01) சிறு குளங்கள்( இவை 200ஏக்கர் பரப்பளவுக்கு உட்பட்டவை)
02) நடுத்தரக் குளங்கள்(200-1500 ஏக்கர் பரப்பளவுக்கு இடைப்பட்டவை)
03) பாரிய குளங்கள் ( 1500 ஏக்கர் பரப்பளவுக்கு மேற்பட்டவை)
இவற்றுள் சிறு குளங்களின் பராமரிப்பு அவ்வப்பிரதேச கமநல சேவை நிலையத்திடம் உள்ளது. ஏனையவை நேரடியாக நீர்ப்பாசனத்திணைக்களத்தின் பொறுப்பில் உள்ளவையாகும். 1900 ஆண்டில் இலங்கையில் நிறுவப்பட்ட நீர்ப்பாசனத் திணைக்களமே இந் நாட்டின் விவசாய அபிவிருத்திக்கு உதவும் பொருட்டு நீர்ப்பாசனத்திட்டங்கள் பலவற்றை உருவாக்கி வருகின்றது.
1959 இல் நீர்ப்பாசனத்திணைக்களம் இலங்கைத்தீவின் உள்ளார்ந்த நீர்வளம் பற்றிய குறிப்புகளுடன் படம் ஒன்றினை வெளியிட்டது. இதில் இலங்கையிலுள்ள 103 ஆற்று வடிநிலங்கள் பலவற்றில் பெருந்தொகையான நீர்த்தேக்கங்கள், கால்வாய்கள், அமைத்து பாசன அபிவிருத்தி செய்யக்கூடிய சாத்தியக் கூறுகள் விபரமாக எடுத்துக் காட்டப்பட்டுள்ளன. மேற்படி 103 ஆற்று வடிநிலங்களில் 61 வடிநிலங்கள் வடக்கு கிழக்கு மாகாணங்களில் காணப்படுவது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
நீர்ப்பாசனத்திணைக்களம், வடிகால் விருத்தியையும் நீர் வெளியேறும் அளவையையும் கருத்தில் கொண்டு ஒரு சதுரமைல் பிரதேசத்தில் கிடைக்கப்பெறும் நீரின் ஆண்டுச் சராசரி அளவை மதிப்பிட்டுப் படம் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி வவுனியாவையும் ஆனையிறவையும் இணைக்கும் கோட்டிற்கு மேற்காக ஒரு சதுரமைல் பிரதேசத்தில் கிடைக்கும் நீரின் அளவானது 500 ஏக்கர் அடி நீரில் இருந்து 300 ஏக்கர் அடி நீராகக் குறைந்து செல்வதையும் கோட்டிற்கு கிழக்காக முல்லைத்தீவு, கொக்கிளாய்ப் பிரதேசம் வரை 500 முதல் 650 ஏக்கர் அடியாக அதிகரித்துச் செல்வதையும் படம் காட்டுகின்றது. கிழக்கு மாகாணத்தில் ஒரு சதுரமைல் பிரதேசத்தில் கிடைக்கும் நீரின் ஆண்டுச் சராசரி அளவு 1000 முதல் 1500 ஏக்கர் அடியாக அதிகரித்துக் காணப்படுகின்றது. இதிலிருந்து வடமாகாணத்தை வடகிழக்கு மாகாணம் நீர்வளம் அதிகம் கொண்ட பிரதேசமாக அமைந்துள்ளதைக் காணலாம். இவ்வாறு பெறக்கூடிய நீரின் அளவும், பல்வேறு விதமாக இழக்கப்படும் நீரின் அளவும் கணிக்கப்படின், தேக்கிப் பயனபடுத்தத்தக்க நீர்வளத்தின் அளவை மதிப்பிட்டு பாசனத்தை அபிவிருத்தி செய்தல் இலகுவானதாகும்.
பொதுவாக தமிழர் பாரம்பரியப் பிரதேசம் பாசன அபிவிருத்திக்கு உள்ளார்ந்த நீர் வளங்களைப் பெருமளவு கொண்டுள்ளது. இவ்வடிகால் வளங்களில் சிலவற்றிலேயே நீர்த்தேக்கங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இன்னும் அபிவிருத்தியை வேண்டியிருக்கும் சிறு, நடுத்தரக் குளங்கள் தவிர பாரிய குளங்களின் எண்ணிக்கை வட மாகாணத்தில் 10 ஆகவும், கிழக்கு மாகாணத்தில் 15 ஆகவும் அமைந்துள்ளது. இப்பாரிய குளங்களில் பல இன்னும் பெருப்பிக்கக் கூடியனவாயும் பல குளங்கள் ஒன்றுடன் ஒன்றை இணைந்து நீர் கொள்ளளவை அதிகரிக்கக்கூடிய அமைப்புக்களுடனும் காணப்படுகின்றன. இவ் இணைப்பானது ஒரு வடிகாலுடன் இன்னோர் வடிகால் இணைக்கும் வகையிலும் அமைக்கப்படலாம். இப்பிரதேசத்தின் தரைத்தோற்றம் பரந்த தாழ்நிலத்தையும் அலைவடிவான தரைத்தோற்ற அமைப்பினையும் கொண்டுள்ளதால் இங்கு இவ்வாறான அபிவிருத்திக்குரிய வாய்ப்புகள் உள்ளன.
தமிழர் பாரம்பரியப் பிரதேசத்தின் பிரதான நிலப்பகுதியிலேயே எதிர்காலத்தில் விவசாய அபிவிருத்தி செய்யக்கூடிய உள்ளார்ந்த வாய்ப்புகள் நிறைய உண்டு. இங்கு இரு வழிகளில் விவசாய அபிவிருத்தியை முன்னெடுக்கலாம்.
01) ஏலவேயுள்ள விளை நிலங்களில் விளைவை அதிகரித்தல்
02) புதிய நிலங்களை விளை நிலங்களாக மாற்றுதல்
ஏலவேயுள்ள விளைநிலங்களின் விளைவை அதிகரிப்பதற்கு பசுமைப்புரட்சி அளித்த நவீன விவசாய அபிவிருத்தி செய்முறையினை நல்ல முறையில் பரவச் செய்தல் வேண்டும் நவீன விவசாய முறைகள் வெற்றியளிக்க வேண்டுமாயின் பாசன வசதி பெறத்தக்க நிலங்களாக விளைநிலங்கள் மாற்றப்படுதல் அவசியம். புதிய உயர் விளைச்சல் தரும் நெல்லினங்களின் அக்கறையான விஞ்ஞானப+ர்வமான முறையிலான கவனிப்புகளுக்கு பாசன வசதியுடன் கூடிய நிலங்களே அவசியமானவை.
விளைவை அதிகரிப்பதற்கு இன்னோர் வழி வருடத்தில் இரண்டு அல்லது மூன்று போகங்கள் நெற்செய்கை மேற்கொள்வதாகும். இது நீர்ப்பாசன வசதிகள் அதிகரிக்கப்பட்டால் சாத்தியமாகும். பெரும்போகம், சிறு போகம், இடைப்போகம் என வருடத்தில் மூன்று போகங்கள் நெற்பயிர் செய்து இப்பகுதியில் பலர் வெற்றி கண்டுள்ளனர்.
புதிய நிலங்களை விளைநிலங்களாக மாற்றுவதற்குரிய நிலவளம் யாழ்ப்பாணக் குடாநாடு தவிர்ந்த ஏனைய பகுதிகளில் நிறையவே உண்டு. ஒரு நாட்டின் மொத்த நிலத்தில் 25 வீதம் காடாக இருக்கவேண்டும் என்ற கருத்தை மனதிற் கொண்டு திட்டமிட்ட முறையில் புதிய விவசாய குடியேற்றத்திட்டங்களை இப் பகுதிகளில் ஏற்படுத்தலாம். ஏலவேயுள்ள குடியேற்றத்திட்டப் பகுதிகளை விஸ்தரித்தலிலும் சாத்தியமே. இந் நடவடிக்கைகளுக்கு நீர்ப்பாசன வசதிகளைத் திட்டமிட்ட முறையில் விருத்தி செய்தல் வேண்டும். இப்பிரதேசத்தில் ஏலவே அபிவிருத்தி செய்யப்பட்ட நீர்ப்பாசனக்குளங்களின் கொள்ளளவை அதிகரிப்பதன் மூலமும், வடிநிலத்திலுள்ள பாரிய, நடுத்தர, சிறு குளங்களை இணைப்பதன் மூலமும், முடிந்தால் வடிநிலத் திசைதிருப்பத்தை ஏற்படுத்துவதன் மூலமும் நீர்ப்பாசன வளங்களை அதிகரித்து விவசாய நிலப்பரப்புகளை அதிகரிக்கக்கூடிய வாய்ப்புகள் உள்ளன. மேலும் இங்குள்ள 60 வடிநிலங்களில் சிலவே இதுவரை பயன்படுத்தப்பட்டுள்ளன. பல பயனபடுத்தக்கூடிய உள்ளார்ந்த வளங்களைக் கொண்டுள்ளன.
எடுத்துக்காட்டாக வவுனியாவில் ஊற்றெடுத்து மன்னார் இலுப்பைக் கடவையில் சங்கமமாகும் பறங்கியாறு இதுவரை பாசன வசதிக்காக முறையாகப் பயனபடுத்தப்படவில்லை. இவ் வடிநிலத்தில் இரணைமடு நீர்த்தேக்கம் போன்ற பாரிய இன்னோர் நீர்த்தேக்கத்தை அமைக்கலாம் என நீர்ப்பாசனவியலாளர்கள் கருத்துகின்றனர். இதுபோன்றே வவுனிக்குளத்திட்டத்தின் கீழ் உள்ள பாலியாற்றிலும் இன்னோர் நீர்த்தேக்கத்தை அமைக்கலாம் எனவும் கருத்துத் தெரிவிக்கப்படுகின்றது. எனவே தமிழர் பாரம்பரியப் பிரதேச பிரதான நிலப்பகுதியில் முறையான திட்டமிடல் நடவடிக்கைகள் மூலம் பாரம்பரிய நீர்ப்பாசனத் திட்டங்களை அமைத்து விவசாய அபிவிருத்தி செய்தல் சாத்தியமே.
தரைக்கீழ் நீர்வளம்
தரைக்கீழ் நீர்வளம் யாழ்ப்பாணக் குடாநாட்டின் மனித வாழ்வுக்கும் வளத்திற்கும் வரலாற்றுக்காலம் முதல் அடிப்படையாக இருந்து வருகின்றது. வட மாகாணத்தின் மொத்தக் குடித்தொகையில் 70 வீதத்தினர் யாழ்.குடாநாட்டில் செறிந்திருப்பதற்கும் குடாநாடு செறிந்த பயிர்ச்செய்கைப் பிரதேசமாக விளங்குவதற்கும் இங்கு கிடைக்கும் தரைக்கீழ் நீர்வளமே காரணமாகும்.
புத்தளத்தில் இருந்து பரந்தன், முல்லைத்தீவை இணைத்து வரையப்படும் கோட்டிற்கு வடமேற்காகவுள்ள பகுதிகள் மயோசின்காலச் சுண்ணாம்பு பாறையமைப்பைக் கொண்டுள்ளன. இப்படிவுகள் தரைக்கீழ் நீரைப் பெருமளவு சேமித்து வைக்கக் கூடிய தன்மை வாய்ந்தவையாகும். சுண்ணக்கல்லை அடிப்படையாகக் கொண்ட செம்மண், செம்மஞ்சள் மண்கள் நீரை உட்புகவிடும் இயல்பை அதிகளவு கொண்டவையாகவும் அமைந்துள்ளன. மழையால் பெறப்படும் நீர் இப்பகுதிகளில் இலகுவாக உட்புகுந்து தரைக்கீழ் நீராகத் தேங்குகின்றது. உண்மையில் இவ்வாறு செல்லும் நீர் நன்னீர் வில்லையாக உவர்நீரின் மேல் மிதந்து கொண்டிருக்கின்றது. குடாநாட்டின் கரையோரப் பகுதிகளிலிருந்து மையப் பகுதியை நோக்கிச் செல்லும் போது இவ் வில்லையின் தடிப்பு அதிகரித்துச் செல்லுகின்றது. ஆகக்கூடிய தடிப்பு 100 அடி முதல் 110 அடி வரை உள்ளது. இந்த வில்லையானது யாழ்ப்பாணக் குடாநாட்டின் நடுவேயுள்ள உவர் நீர் ஏரிகளினால் துண்டுகளாக்கப்பட்டுள்ளன. இந்த உவர்நீர் ஏரிகளை நன்னீர் ஏரிகளாக மாற்றினால் துண்டுபடும் நன்னீர் வில்லை துண்டுபடாது தொடராக அமையும்.
சுண்ணக்கற் பாறைப் படிவுகள் பிரதான நிலப்பகுதியில் ஆழமாகக் கீழ் பாகத்திலும் யாழ்ப்பாணக் குடாநாட்டுப் பகுதியில் ஆழமற்று மேற்பாகப் பகுதியிலும் காணப்படுகின்றன. இதனால் அதிகம் ஆழமற்ற கிணறுகளை தோண்டுவதன் மூலம் யாழ்ப்பாணப் பகுதியில் நீரைப் பயன்பாட்டிற்காக இலகுவாக மேலே கொண்டுவர முடிகின்றது. மாறாக புத்தளம், பரந்தன், முல்லைத்தீவை இணைக்கும் கோட்டிற்கு தெற்காக உள்ள பிரதான நிலப்பகுதியில் சுண்ணக்கற்படை ஆழமானதாகக் காணப்படுகின்றது. இதனால் இப்பகுதிகளில் அதிக செலவில் குழாய்க் கிணறுகள் அமைத்தே தரைக்கீழ் நீரைப் பாசனத்திற்கு பயன்படுத்த முடியும்.
கிறிஸ்துவிற்கு முற்பட்ட காலத்திலேயே யாழ்ப்பாணத்தில் கிணறுகள் தோண்டப்பட்டன. யாழ்ப்பாணத்தில் மனித குடியிருப்பின் வரலாறு கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே ஆரம்பமாகிறது. அக்காலத்தில் இருந்தே கிணறுகள் தோண்டி தரைக்கீழ் நீரைக் குடிப்பதற்காகவும், விவசாயத்திற்காகவும் மக்கள் பயன்படுத்தி வந்துள்ளமைக்கான சான்றுகள் நிறைய உண்டு. கிணறுகளில் இருந்து மனித சக்தியால் குறிப்பாக துலா மூலமும், உள்ளுர் சூத்திர முறையாலும் நீரானது பாசனத்திற்குப் பெறப்பட்டு வந்துள்ளது. இவ்வாறு வளர்ச்சியடைந்துள்ள பாசன முறையிலான விவசாயச் செய்கை பிற்பட்ட கால கட்டங்களில் உப உணவுச் செய்கை எனும் சிறப்பானதும் செறிவானதும் நவீனத்துவமானதுமான பயிர்ச்செய்கை முறையாக மாறிய பின்னர் நீர் இறைக்கும் இயந்திரத்தின் பாவனை யாழ் குடாநாட்டின் சகல கிராமங்களிலும் அதிகரித்து வந்துள்ளது.
இவற்றினால் அண்மைக் காலங்களில் குடாநாட்டின் பல பகுதிகளில் தரைக்கீழ்நீர் உவர்நீராதல் போன்ற பிரச்சனைகள் தோன்றியுள்ளன. இது அபாயகரமானதோர் நிலைமை என்பதில் சந்தேகமில்லை. இச்சவாலை நல்லமுறையில் எதிர்கொள்வதற்கு யாழ்ப்பாணக் குடாநாட்டில் உள்ளார்ந்த தரைக்கீழ் நீர்வளம், அதன் பாவனை, அவற்றின் முகாமைத்துவம், அபிவிருத்தி என்பவைகள் பற்றி நுண்ணாய்வுகள் பல செய்யப்படுதல் வேண்டும். 1965 இல் இங்கு அமைக்கப்பட்ட நீர்வளசபை வடபகுதி தரைக்கீழ் நீர் உவர் நீராதல் பற்றியும் குழாய்க்கிணறு தோண்டி பாசன விருத்தி செய்யும் வாய்ப்புகள் பற்றியும் சில ஆய்வுகளை மேற்கொண்ட போதிலும் இன்றுவரை அவை முறையாக வெளியிடப்படவில்லை. யாழ்ப்பாணக் குடாநாட்டின் நீர்வளம் எதிர்நோக்கும் பிரச்சனைகளையும் அவற்றைத் தீர்ப்பதற்கான வழிமுறைகள் பற்றியும் முன்னெப்போதுமி;ல்லாதவாறு இன்றைய காலகட்டத்தில் மிக அக்கறையுடன் சிந்திக்க வேண்டியவர்களாகவுள்ளோம். திட்டமிட்ட முறையில் அபிவிருத்தியை மேற்கொள்ள வேண்டிய தேவையும் உண்டு. மேல் விபரித்த அம்சங்கள் அனைத்தையும் மனங்கொண்டு நாம் செய்ய வேண்டிய பணிகள், ஆலோசனைகள் என்பன இங்கு அனைவரதும் அக்கறையான கவனத்திற்கு முன்வைக்கப்படுகிறது.
சில அபிவிருத்தி ஆலோசனைகள்
யாழ்ப்பாணத்தில் விவசாயமும் நீர்ப்பாசனமும் எனும் போது அவற்றின் அபிவிருத்தி அம்சமே முன்னுரிமை பெறுகின்றது. யாழ்ப்பாணக்குடாநாட்டில், இனிமேலும் நாம் விவசாய விரிவாக்கத்தை: முக்கியமாக விளைபரப்பை அதிகரித்து மேற்கொள்ள வேண்டுமென்று எண்ணுவது தவறாகும். இது “உள்ளதையும் கெடுக்கும்” ஆபத்தான நிலையை உருவாக்கக் கூடும். இங்கு தற்போது காணப்படும் விவசாயச் செய்கையை மிகவும் நவீன முறையிலானதாக மாற்றுவதோடு நீர்ப்பாசன முறைகளிலும் நவீனத்துவத்தை கையாண்டு நல்ல முறையில் பாசன முகாமைத்துவத்தைப் பேணி வீண் விரயமாதலைத் தடுத்து ஏலவே உள்ள விவசாய நிலப்பயன்பாட்டை உச்ச வருமானம் தரத்தக்கதாக மாற்றி அமைப்பதே சிறந்த வழியாகும்.
யாழ்ப்பாணக் குடாநாட்டின் நிலப்பயன்பாடு சிறப்புத்தேர்ச்சி பெற்றதாக மாற்றப்பட வேண்டும். அதிக செலவில் விவசாயம் செய்யும் இப்பகுதியில் ஒவ்வொரு அங்குல நிலமும் உச்ச பயன் தரத்தக்கதாக அமைதல் வேண்டும். விவசாய அபிவிருத்தி விவசாய வர்த்தக முறையிலமைந்ததாக அமையப்பெற வேண்டும். யாழ்ப்பாணக் குடாநாட்டுப் பகுதிகளில் நெற்பயிர்ச்செய்கை தவிர்க்கப்பட்டு அதிக வருமானம் தரத்தக்க பணப்பயிர்ச்செய்கை விருத்தி செய்யப்பட வேண்டும். உப உணவு, காய்கறி, பழச்செய்கை, பானப்பயிர் செய்கை, எண்ணை வித்துப் பயிரச்;செய்கை போன்றனவாக இவை அமைய வேண்டும். உற்பத்திகளில் சில விவசாய கைத்தொழில்துறை விருத்திக்கு மூலப்பொருள்களை வழங்குபவையாகவும் இருக்கவேண்டும். உண்மையில் இப்பகுதியில் புகையிலை செய்கை, காய்கறி செய்கை, திராட்சைப் பழச்செய்கை என்பன ஊக்குவிக்கப்படுதல் வேண்டும். ஏனெனில் இவை செய்கையாளருக்கு குறைந்த நிலத்தில், குறைந்த நீர் வளத்தைப் பயன்படுத்தி அதிக லாபம் தருவதோடு விவசாய கைத்தொழில் விரிவாக்கத்திற்;கும் உதவுவதாகும். தேயிலை, இறப்பர் ஏற்றுமதியில் இலங்கை அந்நியச்செலாவணி பெறுவது போல் நாம் இவற்றால் அந்நியச்செலாவணியை பெறலாம்.
நகரங்களைச் சூழவுள்ள கிராமப் பகுதிகளில் விவசாயச் செய்கை நகரச் சந்தையின் தேவைக்குரியவற்றை உற்பத்தி செய்யக்கூடிய வகையில் ஒழுங்குபடுத்தப்படுதல் வேண்டும். சந்தை நிலமைக்கேற்பவும் யாழ்ப்பாண விவசாயம் மாற்றமுறுதல் வேண்டும். இவ்வகையான நிலப்பயன்பாட்டு மாற்றமே யாழ்ப்பாண பகுதியில் வேண்டப்படுவதாகும்
மழை நீரை தேக்குதலும் குளங்களின் தூர் அகற்றுவதும்.
யாழ்ப்பாணக் குடாநாடு தரைக்கீழ் நீரின் மீள்நிரப்பும் தன்மையை அதிகரிக்க வேண்டும் என்பதில் பலர் ஒருமித்த கருத்தைக் கொண்டுள்ளனர். இங்கு குறுகிய காலத்திற் கிடைக்கப்பெறும் ஒரே ஒரு மீள் நிரப்பியான மழை வீழ்ச்சியால் கிடைக்கும் நீரை மேற்பரப்பில் ஓடி வீணே கடலை சென்றடைய விடாது தடுத்து அவற்றைத் தரைக்கீழ் நீராகச் சேமிப்பதற்கு சகல வழிகளிலும் நாம் முயலுதல் வேண்டும். யாழ்ப்பாணக் குடிhநாட்டின் சுண்ணக்கற் புவியமைப்பின் காரணமாக சுண்ணக்கற் கரைசலால் ஏற்பட்ட 1050 குளங்கள் காணப்படுகின்றன. இக்குளங்களில் நிறையும் தண்ணீரில் பெரும்பகுதி தரையின் கீழ்ச் சென்று நீர்வளத்தை அதிகரிக்கச் செய்கின்றது. இவ்வாறான குளங்கள் குப்பை, கூழங்கள் கொட்டப்படுவதாலும் தூர் சேர்ந்தமையாலும் நீரினை உட்செலுத்தும் தன்மையில் குறைவடைந்து காணப்படுகின்றன. இவ்வாறான குளங்களைத் துப்புரவு செய்தலும் தூர் அகற்றுதலும் அவசியம.; இங்கு இவ்வறான முயற்சிகள் அரிதாகவே இடம்பெறுகின்றன.
தோட்டங்களை இணக்குவதற்கு குளங்களின் மண், மக்கி, எடுக்க அனுமதிக்கும் முறை இங்கு உண்டு. இதில் மிக்க அவதானம் தேவை. குளங்களைத் தரைக்கீழ் நீர்ப்பீடம் வெளித்தெரியக் கூடியளவிற்கு ஆழமாக்க விடுதல் கூடாது. இவ்வாறு நிகழின் குளங்கள் மூலம் தரைக்கீழ் நீர் பெருமளவு ஆவியாக வெளியேறிவிடும். எனவே குறிப்பிட்ட ஆழம் வரையே மண் எடுக்க அனுமதிக்க வேண்டும்.
யாழ்ப்பாணக் குடாநாட்டில் சில பகுதிகளில் சுண்ணக்கல் நிலத்தோற்றத்தில் ஒன்றாக தரைக்கீழ் நீர் ஓடும். குகைகள் சில மேற்பரப்பு இடிந்த நிலையில் காணப்படுகின்றன. நிலாவரைக்கிணறு, குரும்பசிட்டி பேய்க்கிணறு, புன்னாலைக்கட்டுவன் குளக்கிணறு, கீரிமலைக் கேணி, அல்வாய் மாயக்கைக் குளம், கரவெட்டி குளக்கிணறு, ஊறணிக்கிணறுகள், யமுனா ஏரி என்பன இவ்வகையில் அமைந்த குகைப் பள்ளங்கள் ஆகும். இவற்றில் சில பாசனத்திற்காக பயன்படுத்தப்படுகின்றன. இன்னும் சில ஆய்வுகள் மேற்கொண்ட பின் பயன்படுத்தத்தக்க வாய்ப்புகளைக் கொண்டுள்ளன.
நிலாவரைக்கிணற்றில் மேற்கொண்ட ஒரு ஆய்வின்படி நாள் ஒன்றிற்கு 10 மணித்தியாலங்களில் 30,000 – 40,000 கலன் நீர் தோட்டப் பாசனத்திற்காக அக் கிணற்றில் இருந்து எடுக்கக்கூடிய தன்மை தெரிய வந்தது. இவற்றைப் பாசனத்திற்காக மாத்திரமன்றி, மழைக்காலங்களில் பெருமளவு நீரைத் திட்டமிட்ட அடிப்படையில் தரைக்கீழ்நீர் மீள் நிரப்பியாக உட்செலுத்துவதற்கும் பயன்படுத்த இயலும். இது இப்பகுதிகளின் தரைக்கீழ் நீர்வளத்தை பெரிதும் அதிகரிக்கக்கூடியதாக அமையும் என துணியலாம்.
தரைக்கீழ் நீர் குகைவழிகள் மூலம் நீரானது கடலைச் சென்றடையும் நிலையும் இங்கு காணப்படுகின்றது. கீரிமலைக் கேணிக்கு குகை ஊடாக வரும் நீர் இதற்கு உதாரணம் ஆகும். தரைக்கீழ் நீரைக் கடலில் கலக்க வைக்கும் குகை வழிகள் எல்லாப் பகுதிகளிலும் கண்டறியப்பட்டு அவற்றை நிலத்தின் கீழாக அணைகட்டித் தடுக்கவேண்டும். இவ்வாறான முயற்சிக்கான ஆலோசனைகள் ஏலவே முன்வைக்கப்பட்டிருப்பினும் செயல்முறையில் இவ்வகை முயற்சிகள் ஒன்றும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.
நன்னீர் ஏரித்திட்டம்
யாழ்ப்பாணக் குடாநாட்டின் எதிர்கால வாழ்வுக்கும் வளத்திற்கும் இன்றியமையாத திட்டம் பற்றி அக்கறையுடன் நோக்கும் எவரும் இங்குள்ள கடல் நீரேரிகளை நன்னீர் ஏரிகளாக மாற்றும் திட்டம் பற்றிச் சிந்திக்காதிருக்க முடியாது. நன்னீரேரித் திட்டங்களால் யாழ்ப்பாணத்தின் தரைக்கீழ் நீர்வள சேமிப்பு அதிகரிப்பதோடு வீணே கடலை அடையும் நீர் தரைக்கீழ் நீரின் மீள் நிரம்பியாக மாறும். குடாநாட்டுத் தரைக்கீழ் நீர் வில்லைகள் துண்டுபடாது தொடராகவே இருக்கும். குடாநாட்டின் உவர்நீராதல் பிரச்சனைகள் கணிசமான அளவு குறையும். உவர் நிலங்கள் வளமுள்ள விளை நிலங்களாக மாறும். குடாநாட்டின் நிலப்பரப்பும் நன்னீர் பரப்பும் அதிகரிக்கும். இவ்வாறு பல நன்மைகள் நன்னீர் ஏரியாக்கும் திட்டம் எமக்கு வழங்குமெனத் துணியலாம். உண்மையில் இப்பகுதிக் கடல்நீரேரிகளை நன்னீரேரியாக்கும் திட்டம் பற்றிய சிந்தனை நூறு வருடம் பழமை வாய்ந்தது. 1922இல் இரணைமடுக் குளத்தேக்கம் பாரிய அணை கட்டி உருவாக்கப்பட்டபோது ஆனையிறவுக் கடல் நீரேரியை நன்னீரேரியாக்கும் திட்டம் பற்றியும் கூறப்பட்டிருந்தமை மனங்கொள்ளத்தக்கது.
யாழ்ப்பாணக் குடாநாட்டில் நீண்டகாலத் திட்டத்தின் அடிப்படையில் நன்னீரேரிகளாக மாற்றப்படக்கூடிய 13 கடனீரேரிகளும் நடைமுறையிலுள்ள 33 உவர்நீர்த்தடுப்புத் திட்டங்களும் உள்ளன. மேற்படி 13 கடனீரேரிகளில் நான்கு கடனீரேரிகளை அதிக செலவின்றி நன்னீரேரிகளாக மாற்றமுடியும். அவையாவன.
01) ஆனையிறவு மேற்கு கடனீரேரி
02) ஆனையிறவு கிழக்கு கடனீரேரி
03) உப்பாறு மற்றும் தொண்டைமானாறு கடனீரேரி
மேற்படி கடனீரேரிகளை நன்னீரேரிகளாக மாற்றும் திட்டங்கள் பல உருவாக்கப்பட்டு அவற்றில் சில பகுதிகள் செயற்படுத்தப்பட்டுமுள்ளன. உப்புநீர் மீன்பிடிக்கு உதவுமென்று எண்ணும் மக்கள் ஏதோ வழிகளில் கடல்நீரை உள்ளே வர விடுவதனால் இத்திட்டங்கள் பூரண வெற்றியை அளிக்காதுள்ளன. இத் திட்டங்களை நல்ல முறையில் செயற்படுத்துதல் இன்றியமையாததாகும். அத்துடன் குடாநாட்டைச் சூழவுள்ள ஏனைய சில கடனீரேரிகளையும் அதிக பொருள் செலவின்றி நன்னீரேரியாகக் கூடிய வாய்ப்பு உண்டு. உதாரணமாக மண்டை தீவையும் வேலணையையும் பிரிக்கும் கடனீரேரியை சுலபமாக நன்னீரேரியாக மாற்றலாம். மற்றும் பண்ணைத் தாம்போதியையும் அராலித் தாம்போதியையும் முற்றாக மூடுவதன் மூலம் யாழ்.நகரத்தின் தென்மேற்குப் பகுதியில் பாரிய நன்னீரேரித் தேக்கத்தை ஏற்படுத்தலாம். இவ்வாறான திட்டங்களால் நன்னீர் வளம் பெருகுவதோடு நிலப்பரப்புகளில் உவர்த்தன்மை நீக்கப்பட்டு அவற்றை வளமான விளைநிலங்களாக மாற்றமுடியும். இது நில, நீர் பற்றாக்குறையால் அல்லல்படும் யாழ்ப்பாணத்திற்கு ஒரு வரப்பிரசாதமாக அமையுமெனலாம்.
கடல் நீரேரிகளை நன்னீரேரிகளாக மாற்றும் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர்கள் முக்கியமாக இரு பிரச்சினைகளை முன்வைக்கின்றனர்.
01) சூழல் மாசடைதல் தொடர்பானது
கடல் நீரேரிகளில் நீர்வரத்து தடைப்பட்டு நீரேரிகள் முற்றாக வற்றும் காலங்களில் குடியிருப்புப் பகுதிகள் மீது வேகமாக வீசும் காற்றினால் (சோழக்காற்று) புழுதி வாரி வீசப்படுமென்றும் இதனால் இத்திட்டம் சுற்றுப்புறச் சூழல்மாசடையும் அபாயத்தை கொண்டுள்ளதெனவும் சுட்டிக்காட்டுகின்றார்கள். இந்த அபாயத்தை இலகுவாக சமாளிக்கலாம். நன்னீரை வற்றாத அளவுக்கு தேக்கி வைப்பதன் மூலமாகவும் முற்றாக நீர்வற்றும் பகுதிகளைக் கண்டறிந்து அப்பகுதிகளில் திட்டமிட்ட அடிப்படையில் புல் வளர்ப்பதன் மூலமாகவும் இம் மாசடைதல் பிரச்சனையைச் சமாளிக்கலாம். ஒல்லாந்து தேசத்தில் கடல் நீரேரிப் பரப்புகள் பெருமளவு மீட்கப்பட்டு புல் வளர்ப்பிற்கு உட்படுத்தப்பட்டு விலங்கு வேளாண்மை விருத்திக்குப் பயன்படுத்தப்பட்டு வருவதை இதற்கு உதாரணமாகக் காட்டலாம்.
02) கடல் நீரேரிகளில் மீன்பிடித் தொழில் மேற்கொள்ளும் மக்களின் தொழிற்துறை பாதிப்புறும் என்ற கருத்து
இத்திட்டத்தால் பாதிப்புறும் மக்களைக் கண்டறிந்து அவர்களுக்குப் பொருத்தமான வேறு கரையோரப்பகுதிகளில் குடியிருப்புகளை அமைத்துக் கொடுப்பது இயலக்கூடியதே. குடாநாட்டு பரவைக் கடற்பரப்புகளில் மீன்பிடித் தொழில் ஈடுபடுவதைவிட ஆழ்கடல் மீன்பிடியில் அவர்களை ஈடுபட வைப்பது பொருளாதார அபிவிருத்தி நோக்கில் அதிக நன்மை விளைவிப்பதாக அமையும். எனவே பாதிப்புறும் மக்களை குடாநாட்டின் அல்லது பிரதான நிலப்பகுதியின் கிழக்கு கரையோரமாகக் குடியேற்றி ஆழ்கடல் மீன்பிடியை ஊக்குவிக்கலாம். இம்மாற்றமானது குறுங்கால நோக்கில் கடினமாக அமைந்தாலும் நீண்ட கால பிரதேச அபிவிருத்தி நோக்கில் அதிக நன்மை பயக்குமென நம்பலாம்.
பயிர்களுக்கு மிதமிஞ்சிய நீர்ப்பாவனை
யாழ்ப்பாணப் பகுதிகளில் நீரிறைப்பு இயந்திரமயப்படுத்தப்பட்ட பின்னர் பயிர்களுக்கு மிதமிஞ்சிய நீர் பாய்ச்சப்படுவதாக கருதப்படுகின்றது. உவர்நீராதல் பிரச்சனைக்கு இதுவும் ஒரு காரணமாகும். உண்மையில் இன்ன பயிருக்கு இன்ன பிரதேசத்தில் இன்ன காலத்திற்கு இவ்வளவு நீர் தேவை என்பதை விவசாயிகளுக்கு நல்ல முறையில் அறிவுறுத்தல் வேண்டும். மேலும் இங்கு காணப்படும் பாசன முறைமை நீர் ஆவியாக்கத்தைக் அதிகரிக்கச்செய்கின்றது. இதனை தடுப்பதற்கு இஸ்ரேல் நாட்டில் காணப்படும் பாசன முறைகளான விசிறல் பாசன முறைமை, பல குழாய் வழி இணைப்புகள் மூலம் பயிருக்கு அடியில் நீரைச் செலுத்துதல், ஆவியாக்கம், ஆவியுயிர்ப்பை தடுப்பதற்கு சில இரசாயணங்களை நீரில் மிதக்கவிடல் போன்ற முறைகளைப் பின்பற்றி ஒருதுளி நீரும் வீணாகாமல் பாசன முகாமைத்துவ முறைகளை மக்கள் பின்பற்றும்படி செய்தல் வேண்டும்.
நீர்வள அபிவிருத்தி தொடர்பான திட்டமிடலுக்கு பல்வேறு தரவுகள் தேவை. இதற்கு புவியியல், பொருளியல், புவிச்சரிதவியல், மண்ணியல், பொறியியல், விவசாய அறிவயல் போன்ற துறை சார் அறிஞர்கள் ஒன்று சேர்ந்து ஒரு அமைப்பாக இயங்க வேண்டும். தமிழர் பாரம்பரிய பிரதேசங்கள் நீர்வள நிலையங்களாக முதலில் வகுக்கப்படுதல் வேண்டும். ஆறுகள், குளங்கள், கிணறுகள் என்பவற்றை அவதானித்து நீர்ப்பீட ஆய்வு செய்து அவற்றின் உவர்த்தன்மை, ஆவியாக்கம், ஆவியுயிர்ப்பு, ஊடுவடித்தல், போன்ற அம்சங்கள் யாவும் கணிக்கப்பட்டு நீர் வள வலயங்கள் நிர்ணயிக்கப்பட வேண்டும். இந்த அடிப்படைத் தரவுகளின் துணையுடனேயே அபிவிருத்தித் திட்டங்கள் உருவாக்கப்படுதல் வேண்டும். இந்த அடிப்படைகளைக் கொண்டு ஆரம்பிக்கப்படும் திட்டங்கள் வெற்றி பெறுமென நம்பலாம்.
பிரதான நிலப்பகுதி நீர்வள ஆய்வுகள் இன்னும் சரியாக ஆராயப்படவில்லை. இப்பகுதிக் காடுகளிலே பழைய குளங்கள் பல தூர்ந்த நிலையில் காணப்படுகின்றன. இவை புனருத்தாரணம் செய்யப்படுதல் வேண்டும். பயன்பாட்டிலுள்ள குளங்களின் கொள்ளளவைக் கூட்டலாம். தெளிவான ஆய்வுகள் மேற்கொண்டு சூழல் நிலமைகள் பாதிக்கப்படாதவகையில் புதிய நீர்த்தேக்கங்களை உருவாக்கலாம். 1980-81 இல் கனகாம்பிகைக் குளம், பிரமந்தலாறு, புதுமுறிப்புக் குளம், போன்றவற்றின் கொள்ளளவை அதிகரிக்கும் நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டன. பறங்கியாறு, பாலியாறு, என்பவற்றைப் பொருத்தமான இடத்தில் மறித்துக் கட்டி புதிய நீர்த்தேக்கங்கள் நிர்மாணிக்கக்கூடிய வளவாய்ப்புகள் பற்றி நீரியலாளர்களால் ஆராயப்பட்டுள்ளது.
பிரதான நிலப்பகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட குளங்களில் ஏற்று நீர்ப்பாசன வளங்களை அதிகரிப்பதன் மூலம் அங்கு உபஉணவுச் செய்கையை ஊக்குவிக்கலாம். வடபகுதிக் குடியேற்றத் திட்டங்களில் ஏற்று நீர்ப்பாசன வசதிகளுடன் உப உணவு உற்பத்திக்கு முதலிடம் வழங்கிய இளைஞர் திட்டங்களே பெருமளவுக்கு வெற்றியைத் தந்த திட்டங்களாக உள. (உ.ம் முத்தையன் கட்டு, விசுவமடு, வவுனிக்குளம்) இவ்வாறான ஏற்று நீர்ப்பாசன திட்டங்களில் பணப்பயிர் செய்கைகளே ஊக்குவிக்கப்படுதல் வேண்டும். ஏற்று பாசனமுறை அதிக செலவிலமைக்கப்படுவதால் பணப்பயிர்ச் செய்கையே அதிக வருமானத்தை தரத்தக்கதாக அமையும்.
முடிவுரை
தமிழரின் பாரம்பரியப் பிரதேச நீர்வள அபிவிருத்தியை எமக்கு வேண்டுவதான அபிவிருத்தியாக முன்னெடுத்துச் செல்வதற்கும் இவ்வள அபிவிருத்தி தொடர்பான கொள்கைகள், திட்டங்களை உருவாக்குவதற்கும் அவற்றை நிர்வகிப்பதற்கும் அப்பிரதேசங்கள் அவ்வப் பகுதி வாழ் மக்களின் நிர்வாகத்தினுள் வருதல் வேண்டும். அப்போது தான் தங்கு தடையின்றி உள்நோக்கம் எதுவும் அற்ற விவசாய பாசனஅபிவிருத்தி திட்டங்களை உருவாக்கலாம். இதனால் விவசாய உற்பத்தியில் நாம் தன்னிறைவு பெறுவது மாத்திரமன்றி மிகை உற்பத்தி செய்தலும் சாத்தியமாகும்.
- இலங்கையின் தமிழர் பாரம்பரியப் பிரதேசத்தில் மாற்றுச் சக்தி வளங்கள்
- வானம் ஏன் நீல நிறத்தில் தோற்றமளிக்கின்றது?
- மார்கழி மாதம் ஓசோன் ரகசியம் - உங்களுக்குத் தெரியுமா?
- நிலாவினால் பூமியில் நிலநடுக்கம்
- 'கடி' மன்னன் மனிதனே
- பூகம்பம் வருவதை முன்கூட்டியே அறியும் தவளைகள்
- சூறாவளி எப்படி உருவாகிறது?
- நிறம் காண திணறும் மூளை
- ஏறு பூட்டாமல் சோறு சாப்பிடலாம்
- வெறுங்கால் ஓட்டம்.....வேகமான ஓட்டம்
- மனிதன் தோன்றியது எப்படி?
- ஆணா... பெண்ணா... வேறுபடுத்தி அறிவது எப்படி?
- இனிக்கும் ஒயினில் கசக்கும் மூலிகை
- சுவைகள் ஆறு அல்ல இருபத்தைந்து
- சமையலும் இரசாயன மாற்றமும்
- வாயில் வாழும் பாக்டீரியாக்கள்
- உரோமம் நரைப்பது ஏன்?
- உறக்கமும் நினைவாற்றலும்
- நினைவாற்றல்
- கடல்மட்டம் தாழ்வாக இருந்தது உண்மையா?