கீற்றில் தேட...
அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- மகிழ்நன்
- பிரிவு: சுற்றுச்சூழல்
தேனி மாவட்டம் தேவாரம் ஏலமலையில் நியூட்ரினோ அணுத்துகள் ஆய்வகம் என்னும் மனித குல அழிப்பு ஆலை ஒன்றை அமைக்க இந்திய அரசு முனைந்துள்ளது. இதில் ஏற்படும் கதிர்வீச்சால் இலட்சக் கணக்கான மக்களும் மற்ற உயிரினங்களும் அழிந்து போகும் ஆபத்து உள்ளது. இந்த அணுத்துகள் ஆய்வகம் அமைப்பதை எதிர்த்து “தேவாரம் விவசாயிகள் சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சங்கம்” மக்களைத் திரட்டிப் போராடி வருகிறது.
இந்த ஆலை அமைப்பதற்கான நிலத்தை ஆய்வு செய்யவந்த அதிகாரிகளைத் திரும்பிப் போகச் சொல்லி 19.12.2009 சனிக்கிழமை மேற்படி சங்கத்தினர் முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்குத் தலைமை தாங்கிய தேவாரம் விவசாயிகள் சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சங்கச் செயற்குழு உறுப்பினர் திரு.மு. தனராசு அவர்களிடம் இப்போராட்டம் குறித்துக் கேட்டபோது அவர் சொன்னார் : “இந்த அணுத்துகள் ஆய்வகம் மிகமிக ஆபத்தானது. சிறுகசிவு ஏற்பட்டு, கதிர்வீச்சு வெளி வந்தால் இலட்சக் கணக்கான மக்கள் உயிரிழப்பார்கள். மற்ற உயிரினங்களும் சாகும்.
“இந்த ஆலையை முதலில் நீலகிரி மலையில் அமைக்கத் திட்டமிட்டனர். அங்கு மக்கள் எதிர்த்ததால் பிறகு கம்பம் சுருளியாற்றுப் பகுதியில் அமைக்கத் திட்டமிட்டனர். அங்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பினர் எதிர்த்தனர். அதன் பிறகு இப்போது தேவாரம் ஏலமலைப்பகுதியில் நியூட்ரினோ ஆலை அமைக்க முடிவு செய்தனர். இத்திட்டத்தை எதிர்த்துத்தான் நாங்கள் போராடுகிறோம்.
“அனைவரையும் உள்ளடக்கிய தேவாரம் விவசாயிகள் சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சங்கம் அமைத்துள்ளோம். இதன் தலைவர் திரு.ஏ.பி.எம். வெள்ளைச்சாமி. இதன் செயலாளர் திரு. புகழேந்தி. மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் இருக்கிறார்கள்” என்றார்.
நியூட்ரினோ ஆய்வு என்பது என்ன ஆய்வென்று சொல்லமுடியாத ஒன்று. அணுத்துகள்களின் ஆற்றல் குறித்து அறிவதற்கு நடத்தும் ஆய்வு என்கிறார்கள். நியூட்ரினோ பற்றி யாராவது கண்டுபிடித்து அறிவித்தால் அவருக்கு நோபல் பரிசு வழங்கவும் தயாராக இருக்கிறார்கள்.
கனடா, வடஅமெரிக்கா, இத்தாலி, ஜப்பான், ஆகிய நாடுகளில் நியூட்ரினோ ஆய்வு நடந்து கொண்டிருக்கிறது. அந்நாடுகளில் கனிமப் பொருட்கள் எடுப்பதற்காக வெட்டப்பட்டு காலியான அல்லது கைவிடப்பட்ட சுரங்கம் போன்றவற்றில் நியூட்ரினோ ஆய்வகங்கள் அமைத்துள்ளனர். நிலத்தடியில் சற்றொப்ப ஒன்றரை கிலோமீட்டர் முதல் இரண்டு கிலோமீட்டர் வரை ஆழமுள்ள சுரங்கங்களின் அடியில் நியூட்ரினோ ஆய்வு கருவிகள் வைக்கப்பட்டுள்ளன. ஆனால் இதுவரை நியூட்ரினோ செயல்பாடுகள் என்னவென்று கண்டுபிடிக்கப்படவில்லை.
இந்த நிலையில் நிலத்தடி ஆழ சுரங்கமில்லாத தமிழ்நாட்டில் நியூட்ரினோ ஆய்வுக்காகப் புதிதாக சுரங்கம் தோண்ட உள்ளார்கள். தேவாரம் பகுதியில் ஐந்தாயிரம் முதல் ஏழாயிரம் அடி வரை சுரங்கம் தோண்டப் போகிறார்களாம். இச்சுரங்கத்தின் அகலம் நூறு முதல் இருநூறு அடி வரை இருக்குமாம். இதனால் நிலத்தடி நீரோட்டத்தில் பல்வேறு கேடுகள் வரும். நியூட்ரினோ ஆய்வகத்தைச் சுற்றி ஆயிரம் மீட்டர் சுற்றளவுக்கு பாறைகள் இருக்க வேண்டுமாம். சில ஆயிரம் அடி தோண்டிய பின்னர் அவ்வாறு கரும்பாறை இல்லை என்றால் அதை அப்படியே கைவிட்டு விடுவார்கள்.
முழுவதுமாக சுரங்கம் தோண்டப்பட்டால் அப்புறப்படுத்த வேண்டிய பாறைத் துகள்கள் ஐந்தரை இலட்சம் டன்கள் இருக்குமென்று கூறுகிறார்கள். இவ்வளவு பெரிய பாறைத் துகள் குவியல்களை எங்குபோய்க் கொட்டுவது?
இந்தப் புழுதியையும் பாறைத் துகள்களையும் இரண்டரை இலட்சம் கன மீட்டர் உயரத்திற்கு நிறுத்தலாம் என்கிறார்கள்.
மு. தனராசு சொல்கிறார் : “இவ்வளவு பெரிய சுரங்கம் தோண்டும் அதிர்வினால் நிலத்தடி நீரோட்டங்கள் அனைத்தும் மாறிவிடும். அதனால் நிலத்தடி நீரைக் கொண்டு நடைபெறும் வேளாண் சாகுபடி முற்றிலும் பாதிக்கப்படும்.
“சுரங்கம் தோண்டும் அதிர்வினால் தேவாரம் முதல் கிழக்கே சங்கராபுரம், நாகலாபுரம் வரையிலும் சிலமலை சில்லமரத்துப்பட்டியிலிருந்து தெற்கே கோம்பை வரையுள்ள வீடுகள் எத்தனை எஞ்சி நிற்கும் என்று யாராலும் சொல்ல முடியாது. ஏழு அங்குலம் விட்டமுள்ள ஆழ்துளைக் கிணறு தோண்டவரும் ரிக்குகள் போய் வருவதற்கு நம் ஊர்ச்சாலைகள் போதுமானதாக இல்லை. இருநூறு அடி விட்டமுள்ள சுரங்கம் தோண்ட வரும் பெரும் பெரும் இயந்திர வண்டிகள் வருவதற்குப் புதிய சாலைகள் போட வேண்டி வரும். இதில் எத்தனை ஊர்களும், எத்தனை வீடுகளும் காலி செய்யப்படுமோ?
இந்தச் சுரங்கத்தை நிலை நிறுத்த ஐம்பத்து மூன்றாயிரம் டன் இரும்பு, நாலாயிரம் டன் உருக்கு, பன்னிரெண்டாயிரம் டன் சிமெண்டு, மூவாயிரத்து ஐநூறு டன் மணல் ஆகியவை தேவை என்கிறார்கள். இந்தப் பொருள்கள் எல்லாம் வந்து சேருவதற்கு அநேகமாக தேனிக்கும் சுரங்கத்திற்கும் இடையில் எந்த ஊருமே இருக்கமுடியாமல் போகலாம்” என்று முடித்தார் தனராசு.
இவ்வளவு பேரிழப்புகளை ஏற்படுத்திவிட்டு வரும் இந்த நியூட்ரினோ சுரங்கத்தில் அப்பகுதி மக்களுக்கு - பல்லாயிரக் கணக்கானோருக்கு வேலை கிடைக்குமா என்றால் அதுவும் கிடைக்காது. உயர் தொழில்நுட்பக் கல்விகற்ற நூற்றுக்கும் குறைவானவர்களுக்கே வேலை கிடைக்கும். அவர்களும் வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள்.
இத்தனை அழிப்பு வேலைகளையும் முடித்தபின் உருவாகும் அச்சுரங்கத்தில் நடைபெறும் ஆராய்ச்சியினால் உண்டாகக் கூடிய அழிவுகள் கொஞ்சநஞ்சமல்ல. வானத்தில் சூரியனிலிருந்து வரும் நியூட்ரினோ அணுத்துகள்களையும் நிலத்தினடியில் சுரங்கத்தில் பாறைகளை உடைத்து உண்டாக்கிய அணுத்துகள்களையும் மோதவிட்டு மோதவிட்டு அதனால் உண்டாகும் கதிரியக்கத்தைக் கணக்கிடப் போகிறார்களாம்.
அணுக்கதிர் வீச்சால் உண்டான பாதிப்புகளை உலகம் ஏற்கெனவே கண்டிருக்கிறது. ஜப்பானில் ஹிரோசிமா, நாகசாகி, ரஷ்யாவில் செர்னோபில், வடஅமெரிக்காவில் பிக்கினித் தீவு, தமிழ்நாட்டில் கல்பாக்கம் போன்றவை இதற்கான எடுத்துக்காட்டுகள்.
பேரழிவுகளை ஏற்படுத்த வாய்ப்புள்ள அணுஉலைகளை, அணு ஆராய்ச்சிக் கூடங்களை இந்திய அரசு திட்டமிட்டு தமிழ்நாட்டில் நிறுவி வருகிறது. இதற்கான நோக்கத்தைத் தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும். கல்பாக்கத்திலுள்ள அணு உலைகள் மின்சாரம் தயாரிக்க மட்டுமல்ல. அணுஆயுத ஆராய்ச்சிக்கானவையும் ஆகும். நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் எட்டு அணுமின் உலைகள் ரஷ்ய உதவியுடன் நிறுவப்படுகின்றன. தமிழ்நாட்டின் வடக்கு எல்லை ஓரமாக ஆந்திர மாநிலத்தின் தெற்குப் பகுதியில் ஸ்ரீஅரிகோட்டா விண்கல ஏவுதளம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கேயும் அணு ஆற்றல் பயன்படுத்தப்படுகிறது. தமிழகத்தின் தெற்கு எல்லை ஓரத்தில் நாகர்கோயிலை ஒட்டி கேரளப் பகுதியில் தும்பா என்ற இடத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைத்துள்ளார்கள். இங்கேயும் அணு ஆற்றல் பயன்படுத்தப்படுகிறது.
ஆபத்து இல்லாத அணு ஆற்றல் பயன்பாடு இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. எனவே அணுக்கதிர் வீச்சுக் கசிவால் அழிவு ஏற்பட்டால் அது தமிழ்நாட்டில் ஏற்படட்டும், வடமாநிலங்களில் ஏற்படக் கூடாது என்ற ‘தொலைநோக்கோடு’தான் இந்தியா தமிழ்நாட்டை அணுக்கிடங்காக மாற்றிக் கொண்டிருக்கிறது.
எனவே, தேவாரப் பகுதி மக்களை மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் இந்தியா அணு ஆபத்துக்குள் சிக்கவைப்பதைத் தமிழ்மக்கள் இனம்கண்டுகொள்ள வேண்டும். நியூட்ரினோ அணுத்துகள் ஆய்வகத்தை வரவிடாமல் தடுக்கத் தேவாரம் பகுதி மக்கள் நடத்தும் போராட்டத்தைத் தமிழகம் தழுவிய போராட்டமாக மாற்ற வேண்டும்.
- மகிழ்நன்
(இக்கட்டுரை தமிழ்த் தேசத் தமிழர் கண்ணோட்டம் ஜனவரி 2010 இதழில் வெளியானது)
- விவரங்கள்
- பாமயன்
- பிரிவு: சுற்றுச்சூழல்
“வரகரசிச் சோறும் வழுதுணங்காய் வாட்டும்” என்று அவ்வைப் பிராட்டி குறிப்பிடுகிற வழுதுணங்காய் என்பது நாம் அன்றாடம் பயன்படுத்தும் கத்தரிக்காய் ஆகும். இது பல்லாயிரம் ஆண்டுகளாக நமது மண்ணில் சுவைக்கப்படுகின்ற உணவுப் பொருள்களில் ஒன்றாகும். இந்த பாரம்பரியம் மிக்க கத்தரிக்காய்க்கு இப்போது ஆபத்து ஏற்பட்டுள்ளது. அதாவது மரபீனி மாற்றம் என்ற பெயரில் கத்தரிக்காயின் மரபியல் கூறுகளில் மாற்றம் செய்து அதை வணிகச்சிறையில் பூட்ட முனைந்துள்ளன பன்னாட்டு வணிக நிறுவனங்கள்.
இன்று கணினித்துறையைவிட எதிர்காலம் மிகுந்த துறையாக இந்த உயிரிநுட்பவியல் துறை மாறி வருகிறது. இதில் பன்னாட்டுக் கும்பணிகள் பலகோடி டாலர்களை தொடர்ந்து முதலீடு செய்து வருகின்றன. குறிப்பாக வேளாண்மைத் துறையிலும், மருத்துவத்துறையிலும் இவர்களது ஆதிக்கம் பெருகி வருகிறது. மீண்டும் முளைக்க இயலாத முடிவிப்பு விதைகளையும் (Terminator Seeds), விதைத்த விதை நன்கு வளர குறிப்பிட்ட வளர்ச்சி ஊக்கியை தெளித்தால்தான் வளர முடியும் என்ற அளவில் உள்ளுக்குள் குறிப்பிட்ட நஞ்சைப் பொதிந்து வைக்கும் மடிவிப்பு விதைகளையும் (Verminator Seeds) இன்று சந்தையில் புழக்கத்திற்கு விடுவதில் மும்முரமாக உள்ளனர்.
இந்த அடிப்படையில் வந்த மான்சாண்டாவின் பாசில்லஸ் துரிஞ்சியன்சஸ் பருத்தி விதைகளும், சின்ஜெண்டாவின் பொன்னரிசி விதைகளும் உலக அளவில் கடும் எதிர்ப்புக்கு உள்ளாயின. பல்வேறு நாடுகளில் இப்படிப்பட்ட மரபீனி மாற்ற உணவுப் பொருட்களுக்கு தடை உள்ளது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இதில் முனைப்பாக உள்ளன. ஆனால் அமெரிக்கா மரபீனி மாற்றப் பயிர்களை அதிகம் விளைவித்து வருகிறது.
அங்குள்ள மக்களுக்கு அடையாளம் தெரிவதற்காக மரபீனி மாற்ற உணவு என்ற முத்திரை பதித்து விற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் அங்கு பல்வேறு அமைப்பினர் இதை எதிர்த்துக் குரல் கொடுத்து வருகின்றனர். ஆனால் இந்தியாவில் இந்த வகையான எந்தக் கட்டுப்பாடும் இன்றி மரபீனி மாற்ற மலட்டு விதைகளை விற்க வழிவகை செய்யப்பட்டு வருகின்றன. இதற்கு மக்களின் வரிப்பணத்தில் ஊதியம் பெறும் அரசுப் பல்கலைக்கழக அறிவியல் அறிஞர்களும் துணை போவது தான் வேதனை மிகுந்த வேடிக்கை.
இந்தியா போன்ற உயிரியல் பன்மயம் (Biological Diversity) மிக்க நாடுகளில் வேளாண்மை மட்டுமல்லாது உணவுப் பழக்கங்களும் பன்மயம் மிக்கது. இதை அழிப்பதில் முதன்மைப் பங்கு வகித்தது பசுமைப் புரட்சி முறையாகும். எண்ணற்ற நெல் வகைகளும் பிற புஞ்சைத் தவசங்களும் நமது மண்ணில் நிறைந்து காணப்பட்டது. 60 நாட்களில் விளையும் ‘அறுபதாம் குறுவை’, ‘அவசரக் கார்’ முதல் வெள்ளத்திலும் வளரும் ‘மடுமுழுங்கி’ வரை ஆயிரக்கணக்கான வகைகள் அதுவும் பகுதிக்கேற்ற வகையில், இராமநாத புரத்தில் பயன்படுத்திய நெல் தஞ்சாவூரில் பயன்படுத்தப் படவில்லை.
இந்த வேளாண் பருவநிலைத் தன்மை (Agro climatic condition) அன்று பின்பற்றப்பட்டு வந்தது. ஆனால் பசுமைப் புரட்சி இன்று ஐந்தாறு வகை நெல்வகைகளை மட்டுமே தமிழகம் முழுவதும் பயன்படுத்த வேண்டிய சூழலுக்கு ஆளாக்கி இருக்கிறது. இப்போது அதைவிடத் தீமை பயக்கும் புதிய நுட்பத்திற்கு ஆட்சியாளர்கள் அழைத்துச் செல்கிறார்கள். மரபீனிப் பொறியியல் (Genetic Engineering) நுட்பத்தின் வழி புதிய விதைகள் உருவாக்கப் படுகின்றன. இவ்வாறு பருத்தியில் பா-து (ஙிt) விதைகளை அறிமுகம் செய்த மாண்சாண்டா வகையறாக்கள் இந்தியாவில் பெரும் தோல்வியைச் சந்தித்தனர். அதன் பின்னர் இப்போது கத்தரியில் தங்களது கைங்கரியத்தைக் காட்டியுள்ளனர்.
கத்தரிச் செடியைத் தாக்கும் தண்டுத்துளைப்பான் புழுவைக் கொல்லும் புரதத்தைக் கொடுக்கக் கூடியது புதிய பா-து பருத்தி. அதாவது பா-து குச்சிலத்தின் உள்ள புரதம் அந்த தண்டுத்துளைப்பானுக்கு ஒவ்வாத நஞ்சாக மாறுகிறது. ஆனால் அது மக்களுக்கும் கால்நடைகளுக்கும் நஞ்சாக இருக்குமா? இருக்காதா என்ற நீண்டதொரு ஆய்வு நடக்கவே இல்லை.
மரபீனி மாற்றம் செய்யப்பட்ட விதைகளை பன்னாட்டுக் கும்பணிகள் அறிவுச் சொத்துரிமை (Intellectual Property Rights) என்ற பெயரில் கைப்பற்றி வைத்துக் கொள்கின்றனர். இதன் மூலம் இவர்கள் வைத்ததுதான் விலை. எடுத்துக்காட்டாக 2006-07ஆம் ஆண்டளவில் ஒரு கிலோ சாதாரண பருத்தி விதையின் விலை ரூ.70 என்று இருந்தது. ஆனால் 450 கிராம் பா.து விதை ரூ.1050-க்கு விற்றது. அதுவும் அவை இரண்டாம் தலைமுறை விதைகள். எனவே பன்மடங்கு உயர்த்தப்பட்ட விலை உழவர்களின் தலையில் விடிகிறது.
இது ஒருபுறம் இருக்க இதுவரை உணவுப் பயிர்களில் எந்த வகையிலும் மரபீனி மாற்றப் பயிர்களை அனுமதிக்கமாட்டோம் என்று கூறிவிட்டு இப்போது மரபீனி மாற்றக் கத்தரிப் பயிரை உலகிலேயே முதன் முறையாக இந்தியா அனுமதித்துள்ளது. இதை மிகக் கடுமையாக சூழலியளார்கள் மட்டுமல்லாது உழவர்கள், அறிவியல் அறிஞர்களும் எதிர்க்கின்றனர். ‘இது அறிவியலே அல்ல’ என்கிறார் சில்லஸ் எரிக் செராணி என்ற அறிஞர். மரபீனி மாற்றப் பயிர்களில் 99.9 விழுக்காடு நச்சுத்தன்மையுள்ள கொல்லிகள் உள்ளன. இவற்றைக் கும்பணிகள் வெளிப்படையாகச் சொல்வதில்லை. மூடி மறைக்கின்றன. இதன் தகுதிப்பாட்டை ஆய்வு செய்யாமல் அரசாங்கள் அனுமதி வழங்குகின்றன.
மரபீனி மாற்ற கத்தரிப் பயிருக்கு ஒப்புதலுக்காக வழங்கிய அறிக்கை 105 பக்கங்கள் கொண்டது. இதை மூன்று அமைப்புகள் தயாரித்து அளித்துள்ளன. இதில் முதல் அமைப்பு மகைகோ கும்பணி (Maharashtra Hybrid Seeds Company Ltd.(Mahyco), Mumbai) அடுத்தவை தார்வாட் வேளாண்மைப் பல்கலைக் கழகம், நமது தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம். பருத்திக்குப் பயன்படுத்திய அதே முறையைத்தான் இதிலும் பின்பற்றியுள்ளனர். அதாவது மரபீனி மாற்றம் செயல்பாட்டில் மூன்று முகாமையான கூறுகள் பயன்படுத்தப் படுகின்றன. அவை குறிப்பிகள் (Markers) சுமப்பிகள் (Carriers) ஊக்கிகள் (Promoter) போன்றவையாகும்.
இவை உயிரினங்களில் நோயை உருவாக்கும் நச்சுயிரிகள், நுண்ணுயிரிமீளில் இருந்தே பெறப்படுகின்றன. குறிப்பாக 35 எஸ் காலிபிளவர் மொசைக் நச்சுயிரி (35 Sca Mv) என்ற நச்சுயிரி, ஏறத்தாழ எச்.ஐ.வியையும் (மஞ்சள் காமாலை) ஹெப்பாட்டிட்டஸ்-பி-ஐயும் போன் றது ஊக்கியாகப் பயன்பட்டுள்ளது. அரதப் பழசான பயனற்ற இந்த நுட்பத்தை மகைகோ தனது தாய் நிறுவனமான மாண்சாண்டாவிடம் இருந்து வாங்கியுள்ளது என்கிறார் செராலினி.
குறிப்பாக தண்டு மற்றும் காய்த்துளைப்பானாக உள்ள ஒரு புழுவைக் கொல்வதற்குத்தான் இத்தனை ஏற்பாடு. பூச்சி இனத்தைச் சேர்ந்த Leucinodes orbonalis என்ற உயிரினம் பெருமளவு கத்தரியில் தாக்குதலைச் செய்கிறது. இதற்கு இயற்கைமுறையில் நிறைய கட்டுப்பாட்டு முறைகள் உள்ளன. குறிப்பாக முட்டையிடும்போதே அவற்றை அழிக்கக் கூடிய முட்டை ஒட்டுண்ணிகள் உள்ளன. புழுப் பருவத்தின் அவற்றைத் தாக்கக் கூடிய புழு ஒட்டுண்ணிகள் உள்ளன. அத்துடன் இயற்கைப் பூச்சிவிரட்டிகளும் உள்ளன.
இவற்றை எல்லாம் கவனிக்காது மரபீனி மாற்ற விதைகளுக்கு முன்னுரிமை தருவது நமது வேளாண்மையை பன்னாட்டுக் கும்பணிகளுக்கு அடகு வைப்பதாகும். விதைகளை முழுமையாகக் கட்டுப்படுத்தும் கும்பணிகள் தமது வணிக விருப்பங்களுக்கு ஏற்ப சந்தையில் விளையாட முடியும். ஏனெனில் இந்த விதைகளை மறுபடி விதைக்க முடியாத அளவிற்கு மலட்டு தன்மையுள்ளதாக முடிவிப்பு (Terminator) மரபீனிகளைக் கொண்டு ஆக்கியுள்ளனர். மரபீனி மாற்றம் செய்யப் பட்ட விதைகளை விதைக்கும்போது அதிலிருந்து வரும் மகரந்தத்தூள் சாதாரண கத்தரிச் செடியில் இணையும்போது அதுவும் மலடாகும் வாய்ப்புகள் உள்ளன.
மலட்டுத்தன்மையுள்ள காய்களைத் தொடர்ந்து உண்பதால் மலட்டுத் தன்மை வருமா என்பது பற்றிய ஆய்வுகள் இல்லை. அரசு இப்படிப்பட்ட பரிசோதனைகளுக்கு வெறும் 90 நாட்கள் மட்டும் எடுத்துக் கொள்ளப்படுகின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் குற்றஞ் சாட்டுகின்றனர். மேலும் ஒரு கும்பணியே தனக்கான ஆராய்ச்சியை தானே செய்து அதற்கு ஒப்புதலை அதுவே பெற்றுக் கொள்வது என்பது அறிவியலுக்கும் நீதிக்கும் முரணானது. மேலும் இந்த ஆய்வறிக்கையில் ஆய்வில் ஈடுபட்ட அறிவியல் அறிஞர்கள் யாரும் கையொப்பம் இடவில்லை என்றும் இதில் மிக மோசமான கொல்லிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்றும் செராலினி கூறுகிறார். அதுமட்டுமல்லாது இந்தக் கத்தரியானது எதிர்உயிர்மிகளை (Antibiotics) எதிர்கொள்ளும் எதிர்ப்பாற்றல் திறன் பெற்றுள்ளதாக இருக்கும். அதாவது நோய்க்குக் கொடுக்கும் எதிர்உயிர்மிகள் செயல்பட முடியாதவாறு செய்துவிடும். இந்தக் காயை உண்μம் மக்களுக்கும் கால்நடைகளுக்கும் எதிர்உயிர்மிகளை எதிர்க்கும் ஆற்றல் வந்துவிட்டால் பிறகு சாதாரண எதிர்உயிர்மி மாத்திரை மருந்துகளை எடுத்துக்கொள்ள முடியாது போகலாம். எலிகளுக்கு இதைக் கொடுத்துப் பார்த்ததில் அவற்றுக்கு வயிற்றுப் போக்கு எடைக்குறைவு போன்ற துன்பங்கள் ஏற்பட்டதாக தெளிவாகிறது.
அதுமட்டுமல்லாது இந்தியா முழுமைக்கும் 2000க்கும் மேற்பட்ட கத்தரி வகையினங்கள் உள்ளன. இந்தப் உயிரிப்பன்மயத்திற்கு (Biodiversity) ஆபத்து ஏற்பட்டு விடும். அதாவது மலட்டுக் கத்தரிக்காயின் மகரந்தம் இணைந்து மரபீனிய மாசுபாடு ஏற்பட்டால் இந்த வளமான மரபீனிய வளம் பாதிக்கும். இதனால் இப்போது ஏற்பட்டுவரும் பருவநிலை மாறுபாடுகளுக்கு ஏற்ற பயிரினங்கள் அழிந்துபோக வாய்ப்பு ஏற்படும். ஏனெனில் அமெரிக்காவில் பன்றிகளுக்குக் கொடுக்கும் மக்காச் சோளத்தில் தடுப்புமருந்து கொடுப்பதற்கான மரபீனியை இணைத்துவிட்டனர். இதன் விளைவாக ஐந்து லட்சம் டன் சோயா மொச்சை மாசுபட்டது.
மரபீனி மாற்றப் பயிர்களால் ஏற்படும் மற்றொரு ஆபத்து அதனால் உருவாக்கும் மீமிகைக் களைகள் (Super Weeds) இவை எந்தவிதமான பூச்சிகளுக்கும் கட்டுப்படாமல் வளரலாம். இதனால் பிற பயிரினங்களைச் சாகுபடி செய்ய முடியாமல் போகும் நிலை ஏற்படும். ஏற்கெனவே ஆந்திரா போன்ற மாநிலங்களில் BT பருத்திச் சாகுபடியாளர்கள் கடுமையான பொருளியல் நெருக்கடியால் தற்கொலைக்கு ஆளாயினர். இப்போது கத்தரிச் சாகுபடியாளர்களைக் குறிவைத்து காய்களை நகர்த்துகின்றனர். பா-து பருத்தியின் தோல்வி பற்றிய எவ்வித வெள்ளை அறிக்கையும் கொடுக்காமல் கத்தரிக்குத் தாவியுள்ள ஒப்பேற்புக் குழுவின் நடவடிக்கைகளை என்னவென்று சொல்வது?
சுற்றுச்சூழல் அமைச்சர் மரபீனிப் பொறியியல் ஒப்பேற்புக் குழுமத்தின் ஏற்புக்கு பின்பு அறிவியலாளர்கள், தன்னார்வ அமைப்புகள் உழவர் அமைப்புகள் போன்ற அனைத்துத் தரப்பினரின் கருத்துக்களைக் கேட்டறிந்து பின்னர் முடிவெடுப்பதாக அறிவித்துள்ளார். மக்கள் மீதும் மண்ணின் மீதும் அக்கறை கொண்டோர் அனைவரும் இந்த அறிவியல் அநீதிக்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டும்.
- பாமயன்
இக்கட்டுரை தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் ஜனவரி 2010 இதழில் வெளியானது)
- விவரங்கள்
- மு.குருமூர்த்தி
- பிரிவு: சுற்றுச்சூழல்
பவளப்பாறகள் அழிந்து போவதற்கான காரணங்கள் வெளிச்சத்துக்கு வரத்தொடங்கியுள்ளன. புவிவெப்பமடைவதும் கடல்நீரில் அமிலத்தன்மை கூடுவதும் பவளப்பாறைகளின் அழிவுக்கு முக்கியமான காரணங்கள் என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. பவளப்பாறைகளை அழியாமல் காப்பது எப்படி என்பதும்கூட இந்த ஆய்வுகளில் அடங்கும்.பவளங்கள் என்பவை மிகச்சிறிய உயிரினங்கள். மரபியல் ரீதியாக ஒத்த உருவமுடையவை. இவை தாவர உயிரிகளை உண்டு வாழக்கூடியவை. பவளங்கள் தங்களைத் தாங்களே காப்பாற்றிக் கொள்ளக்கூடியவை. வளர்சிதை மாற்றத்தின்போது கால்சியம் கார்பனேட் என்னும் வேதிப்பொருளை இவை சுரக்கின்றன. கால்சியம் கார்பனேட் படிவுகளின்மீதுதான் பவளங்கள் அமர்ந்துகொள்கின்றன. இவ்வாறு தோன்றும் படிவுகள் நீண்டகாலம் நிலைத்து பவளப்பாறைகளாக உருவெடுக்கின்றன. இந்த பவளப்பாறைகளில் சுமார் 4,000 வகையான கடல்வாழ் உயிரினங்கள் குடியிருக்கின்றன.
பவளங்கள் தம்முடைய உணவை தாமே தயாரித்துக் கொள்வது இல்லை. பவளங்களுக்குள் வாழும் ஆல்காக்கள் தங்களுடைய பச்சையத்தின் உதவியாலும் சூரிய ஒளியின் உதவியாலும் ஒளிச்சேர்கை செய்து குளுக்கோஸை உற்பத்தி செய்கிறது. இந்த ஆல்காக்களின் குளுக்கோஸ் உற்பத்தி செய்யும் திறன் அபாரமானது. ஆல்காக்கள் உற்பத்தி செய்யும் குளுக்கோஸை உண்டு பவளங்கள் செழிக்கின்றன. மாறாக, பவளங்களில் இருந்து வெளியாகும் நைட்ரஜன் கழிவுகள் ஆல்காக்களுக்கு உணவாக பயன்படுகிறது. கடல் நீரில் நைட்ரஜன் கிடைப்பது அரிது. பவளங்கள் வெளிப்படுத்தும் கழிவுகளில் இருந்து ஆல்காக்களுக்கு தேவையான நைட்ரஜன் கிடைப்பது இயற்கையின் விந்தைகளுள் ஒன்று.,
மனித உடலைப்போன்றே பவளங்களிலும் சிக்கலான மரபியல் கூறுகள் உள்ளன. சுற்றுப்புறத்தில் ஏற்படும் மாற்றங்கள் இந்த மரபியல் கூறுகளை பாதிப்படையச் செய்கின்றன. 250 மில்லியன் ஆண்டுகள் இந்த பவளப்பாறைகள் தங்களுடைய வாழ்க்கைப் பயணத்தை நிறைவு செய்து விட்டன. ஆனால் இப்போது ஏற்பட்டுவரும் சுற்றுப்புற மாற்றங்களால் இந்த பவளப்பாறைகளில் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கிவிட்டன. இவற்றுள் பவளப்பாறைகள் வெளுக்கத் தொடங்கியதும் அடக்கம். நெடுங்காலம் ஆபத்தின்றி வாழ்ந்துவிட்ட பவளப்பாறைகளுக்கு மனிதன் எதிரியாகிப் போனது அவமானகரமான செய்தி அல்லவா?
புவி வெப்ப மாறுபாடுகளால் பவளப்பாறைகள் அழிவை எதிர்நோக்கி வருவதாக ஓரிகான் மாகாண பல்கலைக்கழக விலங்கியல் பேராசிரியர் வர்ஜீனியா வீஸ் கூறுகிறார். பவளப்பாறைகள் எதிர்நோக்கியுள்ள சிக்கல்கள் ஏராளம். கடல்நீரின் வெப்பநிலை உயர்வு, கடல்நீர் மாசுபடுதல், வரைமுறையற்ற மீன்பிடித்தம், வண்டல் படிவு, அமிலத்தன்மை அதிகரிப்பு ஆகியவற்றால் பவளப்பாறைகள் அழிந்து வருகின்றன. ஏறத்தாழ 20 சதவீத பவளப்பாறைகள் ஏற்கனவே அழிந்துவிட்டதாகவும், இன்னும் 24 சதவீத பவளப்பாறைகள் அழிவை எதிர்நோக்கியிருப்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கடல்நீரின் அமிலத்தன்மை கூடுவதால் அடுத்த நூற்றாண்டில் பவளப்பாறைகள் உருவாவது 50 சதவீதமாக குறையும் என்றும், இருக்கும் பவளப்பாறைகளும் அமிலத்தன்மையால் கரையத் தொடங்கும் என்றும்கூட ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.
- தகவல்: மு.குருமூர்த்தி
- விவரங்கள்
- மு.குருமூர்த்தி
- பிரிவு: சுற்றுச்சூழல்
BPA என்பது bisphenol A எனப்படும் வேதிப்பொருள்ஆகும். இந்த வேதிப்பொருளைக் கொண்டு கடினமான பாலிகார்பனேட் பிளாஸ்டிக் பாட்டில்களும், மழலையர்களுக்கான பீடிங் பாட்டில்களும் தயாரிக்கப்படுகின்றன.மனித உடலில் மிகுதியாகச் சேரும் BPA இரத்தக்குழாய் சம்பந்தமான நோய்களையும் நீரிழிவு நோயையும் ஏற்படுத்தவல்லது. இந்த பாலிகார்பனேட் பிளாஸ்டிக் பாட்டில்களை தொடர்ச்சியாக ஒரு வாரத்திற்கு பயன்படுத்துவோரின் சிறுநீரில் BPA ன் அளவு 69 சதவீதம் அதிகரிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. இது தொடர்பான ஆய்வுகளை Harvard School of Public Health (HSPH) ஐச்சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் செய்துள்ளனர். பாலிகார்பனேட் பாட்டில்களை மாணவர்கள் அதிக அளவில் பயன்படுத்துகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வகையான பாட்டில்களுக்கு மறுசுழற்சி எண் 7 தரப்பட்டுள்ளது. மேலும் இந்த BPA நஞ்சு பல்மருத்துவத்தில் பயன்படும் கூட்டுப்பொருள்களிலும், உணவையும் பானங்களையும் அடைக்கப் பயன்படும் அலுமினியக் குப்பிகளின் உட்பூச்சாகவும் பயன்படுத்தப்படுகிறது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.
BPA நஞ்சு உடலில் சேருவதால் பாலுணர்வு மழுங்குதல், பால்சுரப்பிகளில் மாற்றங்கள், விந்து உற்பத்திகுறைதல் ஆகிய குறைபாடுகள் தோன்றுகின்றன என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. குளிர்ந்த பாட்டில்களை பயன்படுத்துவதைவிட சூடான பாட்டில்களை பயன்படுத்தும்போது விளைவுகள் இன்னும் மோசமாக இருக்கின்றன. HSPH ஐச்சேர்ந்த ஜென்னி கார்வில் என்னும் ஆராய்ச்சி மாணவர் ஏப்ரல் 2008ல் 77 மாணவர்களை இதுசம்பந்தமான ஆய்விற்கு உட்படுத்தினார். இந்த மாணவர்களுக்கு ஏழுநாட்களுக்கு எவர்சில்வர் பாத்திரத்தில் குடிப்பதற்கான பானங்கள் வழங்கப்பட்டன. அவர்களின் சிறுநீரில் BPA ன் அளவும் சோதிக்கப்பட்டது. அடுத்த ஒரு வாரத்திற்கு அவர்களுக்கு இரண்டு பாலிகார்பனேட் பாட்டில்களில் பானங்கள் கொடுக்கப்பட்டன. ஆய்விற்கு உட்பட்டவர்களின் சிறுநீரை மீண்டும் சோதித்தபோது BPAன் அளவு 69 சதவீதம் அதிகரித்திருந்தது கண்டறியப்பட்டது.
2008 ஆம் ஆண்டு கனடாவில் குழந்தைகளுக்கான பாலிகார்பனேட் பாட்டில்களில் BPA பயன்படுத்தப்படுவது தடைசெய்யப்பட்டுவிட்டது. சில உற்பத்தியாளர்கள் தாமாகவே முன்வந்து பாலிகார்பனேட் பாட்டில்களில் BPA ன் பயன்பாட்டை முற்றிலும் நீக்கிவிட்டனர். இந்த ஆய்வு இன்னும் தொடரப்படவேண்டும் என்றும் BPA ன் தாக்கத்தால் ஏற்படும் மார்பக புற்றுநோய், இனப்பெருக்கக் குறைபாடு இவற்றை ஆராயவேண்டும் என்றும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
- தகவல்: மு.குருமூர்த்தி
- பிளாஸ்டிக் எமன் - சில அதிர்ச்சிகர உண்மைகள்
- உண்டி கொடுத்து உயிர் பறிப்போரே!
- ஆல்கா பெட்ரோல்
- வளிமண்டலத்தை தூய்மைப்படுத்தும் மழைக் காடுகள்
- சாகிறதா சாக்கடல்?
- கொள்ளை போகும் தண்ணீர்
- சூழல் சேதிகள்... வாசிப்பது கரிச்சான்
- காலநிலை மாற்ற பேச்சுவார்த்தைகள் - தர்மசங்கடமான உண்மைகள் சமரசங்கள் தீர்வைத் தருமா?
- எலும்புகள்
- இணையத்தை துண்டித்த கேபிள் இணைப்பு
- உடல் பருமனாகிப் போவதற்கு காரணம் என்ன?
- நீரில் இருந்து நிலத்திற்கு.
- வேளாண்மையின் பகைவன்
- டிஜிட்டல் படுதாக்களில் ஜிலுஜிலுக்கும் சீமான்கள்
- நிலை குலைந்துவரும் மலைத் தொடர்கள்
- என்ன சொல்லப் போகிறோம் யானைகளுக்கு?
- தாவரங்களின் இனப்பெருக்கம்
- சுவையறிய உதவும் வாயில் வாழும் பாக்டீரியாக்கள்
- பூச்சிகளை விழுங்கும் தாவரம்
- பூமி வெப்பம் அடைவது ஏன்?