கீற்றில் தேட...
அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- முனைவர் க.மணி
- பிரிவு: சுற்றுச்சூழல்
மில்லியன் கணக்கில் மனிதர்கள் வாழும் நகரங்களில் ஏற்படும் சுற்றுச்சுழல் சீர்கேட்டின் அளவை சொல்லி முடியாது. எத்தனை கார்கள், எவ்வளவு மின்சாரம், எத்தனை கழிவுகள்...?
எல்லாருடைய வீட்டின் கூரைகளையும் பசுமையாக்கினால் ஆண்டுக்கு 55000 டன் கரியமில புகையை காற்றிலிருந்து பிடித்து நீக்கலாம் என்று மிச்சிகன் ஸ்டேட் பல்கலை ஆசிரியர் தெரிவிக்கிறார்.
வீட்டுக் கூரையில் புல்தரை விரிப்பது, செடிகளை வளர்த்தால் அது அழகுக்கு அழகையும், பில்டிங்கை குளிர்ச்சியாகவும் வைக்கும். இதனால் குளிர்சாதனங்களின் மின்சாரம் சேமிப்பாகும். மழை நீர் வீணாகமல் பயன் அடையும். காய்கறிகளை வளர்த்தால் பணம் மிச்சமாகும். மருந்தடிக்காத காய்கறியும் கிடைக்கும். ஒரு வேளை மழை அதிகம் கிடைத்தாலும் கிடைக்கும். செய்தால் என்ன?
- முனைவர் க.மணி
- விவரங்கள்
- மருத்துவர் அ.உமர் பாரூக்
- பிரிவு: சுற்றுச்சூழல்
கனடாவில் சட்பரி, அமெரிக்காவில் சௌடன் சுரங்கம், ஜப்பானில் மி-ஓகா, இத்தாலியில் கரேன் சாஜோ மலை, இந்தியாவில் கோலார் பகுதியைத் தொடர்ந்து நியூட்ரினோ ஆய்வகத்திற்கான தேடுதல் வேட்டை தமிழகத்தில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
நியூட்ரினோ என்பது சூரியன் மட்டுமல்லாது விண்மீன்களிலிருந்தும் வெளிப்படும் அணுத்துகள்களாகும். கனமற்ற இத்துகள்கள் விண்வெளியிலிருந்து கீழிறங்குகின்றன. பல கோடி நியூட்ரினோக்கள் பாய்ந்த வண்ணம் இருந்தாலும் அவற்றை ஈர்த்து, ஆய்வு செய்வது கடினம். இந்த அணுத்துகளைப் பிடித்து அதனை ஆய்வு செய்தால் சூரியன் குறித்த ரகசியங்களையும், விண்வெளியின் ஆற்றல் பற்றியும் பூமியின் பிறப்பு குறித்தும் தெரிந்து கொள்ளலாம் என்ற நோக்கத்துடன் நியூட்ரினோ ஆய்வு முயற்சி 1930களில் இருந்து தொடங்கியது. நியூட்ரினோ துகள்களை ஒரு கருவி மூலம் ஈர்த்து அவற்றை ஆய்வு செய்வதுதான் நியூட்ரினோ ஆய்வகத் திட்டம்.
இதில் பிரச்சினை என்னவென்றால், இந்த நியூட்ரினோ ஆய்வகத்தை சாதாரண தரைத்தளத்தில் அமைக்கமுடியாது. கருங்கல் (சார்கோநைட்) பாறைப்படிவம் நிறைந்த செங்குத்தான மலைப்பகுதியில், அதுவும் மழைப்பொழிவு அதிகமில்லாத நிலையான புவியியல் அமைப்பைக்கொண்ட பகுதியில் தான் ஆய்வகத்தை அமைக்கமுடியும். 10 மீட்டர் அகலமும், 250 மீட்டர் (2.5 கிலோ மீட்டர்) நீளமும் உள்ள இந்த நியூட்ரினோ ஆய்வகமானது மலையிலிருந்து சுரங்கம் அமைத்து ஆழத்தில் அமைக்கப்படவேண்டும். இந்த அமைப்பு முறையே நியூட்ரினோ ஆய்வுக்கான அடிப்படை வசதியைத் தரும்.
இப்படி ஒரு ஆய்வு மையத்தை இங்கு அமைக்க இமாச்சல பிரதேசம் மணாலி, சிக்கிம் ராமன் நீர் மின் திட்ட பகுதிகள் என ஆய்வு செய்த நியூட்ரினோ ஆய்வுக்குழுவினர் இறுதியாக தமிழகத்தில் நீலகிரி சிங்காரா மலைப்பகுதியைத் தேர்வு செய்தார்கள். கோவை மாவட்ட இயற்கை ஆர்வலர்கள், சூழலியல் சிந்தனையாளர்கள், புலிகள் சரணாலய நலம் விரும்பிகள் என அனைவரும் இத்திட்டத்தை எதிர்க்க, ஒரு வழியாக இந்திய புலிகள் ஆணையத்தலைவர் ராம் கோபால் வர்மாவின் பரிந்துரையின் பேரில் சிங்காரா திட்டம் கைவிடப்பட்டது. தொடர்ந்த ஆய்வில் தேனி மாவட்ட மேற்குத் தொடர்ச்சி மலையில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க தேர்வுசெய்யப்பட்டிருக்கிறது.
நியூட்ரினோ ஆய்வு என்பது இயற்கையைப் பற்றிய புரிதலுக்கான அடிப்படை ஆய்வு என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்பில்லை. ஆனால் இத்திட்டம் குறித்த எதிர்மறையான கருத்துக்களோடு இரண்டு தரப்புகள் மோதிக்கொள்கின்றன. ஒன்று - கண்மூடித்தனமான எதிர்ப்பு, இன்னொன்று கண்மூடித்தனமான ஆதரவு. இத்திட்டத்தின் பயன், அதன் நம்பகத்தன்மை, அதனால் ஏற்படும் உடனடி அல்லது நீண்டகால விளைவுகள் போன்றவற்றை கவனமாக பரிசீலிக்க இரண்டு தரப்புமே தயாராக இல்லை.
“நியூட்ரினோ என்பது அணுத்துகள், எனவே ஆய்வில் அணுசக்தி வெளிப்படும்” என்ற பாமரத்தனமான வதந்தி ஒருபுறம். விஞ்ஞானிகள் பக்கமோ “வளர்ச்சிக்கட்டத்தில் ஏற்படும் சூழல் பாதிப்பு என்பது தவிர்க்கமுடியாதது. எனவே பாதிப்புகளை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்” என்றும் விவாதங்கள் தொடர்கின்றன.
புவி வெப்பமயமாதல், நிலத்தடி நீர் பற்றாக்குறை, பருவகால மாறுதல்கள் என்று பலவித நெருக்கடிக்குள்ளாயிருக்கிற இந்தச் சூழலில் எதிர்மறையான கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து பரிசீலிப்பது அவசியமானது. நியூட்ரினோ ஆய்வகம் அமைப்புப் பணியில் ஏற்படும் சூழலியல் பாதிப்புகள் மற்றும் ஆய்வகம் இயங்கும் நிலையில் ஏற்படும் பாதிப்புகள் ஆகியவை முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியவை. ஆய்வகம் அமைப்பதற்கான அளவீடுகளின்படி விஞ்ஞானப்பூர்வமான கணக்கின் அடிப்படையில் மலையைக்குடைவதால் கிடைக்கும் சுமார் ஆறு லட்சத்து முப்பதாயிரம் டன் கழிவுகளை நீக்குதல், கட்டுமானத்திற்காக பயன்படுத்த வேண்டிய ஏழு லட்சத்து அறுபதாயிரம் டன் கட்டுமான பொருட்களை கொண்டு சேர்த்தல், 130 கனரக வாகனங்களின் பயன்பாடு போன்றவை அடர் காடுகளில் என்ன விதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயமாகும்.
நீலகிரி சிங்காரா திட்டம் ஏன் கைவிடப்பட்டதோ அதே அளவிற்கான முக்கியக் காரணங்களை தேனி மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலையும் கொண்டுள்ளது. இங்கு அமைந்துள்ள மேகமலை யானைகள் மற்றும் காட்டு எருதுகளுக்கான சரணாலயமாக இப்போதுதான் அறிவிக்கப்பட்டிருக்கிறது. பெரியாறு புலிகள் காப்பகம், ஸ்ரீவில்லிபுத்தூர் மலை அணில் காப்பகத்திற்கான உயிர் பாதுகாப்பு வளையமாக சுருளியாறு காடுகள் அமைந்துள்ளன. ஆய்வகத்தின் கட்டுமான காலத்தில் பயன்படும் வெடிமருந்துகள், கிரஷர்கள், ஒலி மாசுபாடு போன்றவையும் கருத்தில் கொள்ளப்பட வேண்டியவையாகும். மேற்கண்ட பிரச்சினைகளுக்கு மாற்று வழி கிடையாது.
அடுத்தது - ஆய்வகத்தின் இயங்கும் காலத்தில் ஏற்படும் பாதிப்புகள். நியூட்ரினோ ஆய்வில் எந்த விதமான ரசாயணப் பொருட்களும் பயன்படுத்தப்படாது, எனவே எந்த விதமான விளைவுகளும் இல்லை என்று விஞ்ஞானிகள் கூறிவருகின்றனர்.
இத்தாலி கரோன் சாஜோ மலையில் அமைந்துள்ள நியூட்ரினோ ஆய்வகத்தில் (The Gran Sasso National Astro physics Laboratory) கடந்த 2002 ஆம் வருடம் ரசாயனக் கசிவு ஏற்பட்டதாகக்கூறி அங்குள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் போராட்டத்தில் இறங்கினார்கள். நியூட்ரினோ திறனறியும் கருவியில் பயன்படுத்தப்பட்ட ரசாயன எண்ணெய் தவறுதலாகக் கையாளப்பட்டதில் 50 லிட்டர் அளவிற்கு வெளியேறியதாகவும், அதில் 1,2,4-trimethylbenzene என்ற ரசாயனம் இருப்பதாகவும் அதனால் பாதிப்பு சிறிய அளவில்தான் இருக்குமென்றும் விஞ்ஞானிகள் தரப்பில் சொல்லப்பட்டது. இறுதியில் இத்தாலிய இயற்பியல் மற்றும் அணுசக்தித்துறை தலைவர் லாரோகி இந்த ரசாயனக்கசிவு கவனக்குறைவால் ஏற்பட்டது என்றும், இதன் விளைவுகள் மக்கள் மீதும், காட்டுயிர்கள் மீதும், நிலத்தடி நீர் மீதும் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறி, அந்த நியூட்ரினோ ஆய்வகத்தை 2003 ஆம் ஆண்டு தற்காலிகமாக மூட பரிந்துரைத்தார். 2003 ஆம் ஆண்டு ஆய்வகம் மூடப்பட்டது.
பாதிப்புகள் பற்றி பேசும் விஞ்ஞானிகள் தம் ஆய்வின் மீது கொண்ட காதலினால் பாதிப்புகளைக் குறைத்து மதிப்பிடுகின்றனர் அல்லது குறைத்துச் சொல்கின்றனர். ஆய்வகக்கட்டுமானமும், அதன் பின்னான ஆய்வின் போது ஏற்படும் விளைவுகள் பற்றியும் வெளிப்படையாகப் பேசினால் மட்டுமே நியூட்ரினோ ஆய்வக விஷயத்தில் ஒரு தீர்வை எட்ட முடியும். இவ்வளவு சிக்கலான, இயற்கையின் மீதான சில விளைவுகளை ஏற்படுத்தப்போகும் இந்த ஆய்வின் பலன் என்னவாக இருக்கும் என்பதே இதற்கான முடிவாகவும் அமையும்.
உலக அளவில் 1930களில் மிக மெதுவாகத் துவங்கிய நியூட்ரினோ ஆய்வுகள் 1960களில் வேகமடைந்தது. 1965 ஆம் ஆண்டில் கர்நாடக மாநிலம் கோலாரில் அமைக்கப்பட்ட இந்திய நியூட்ரினோ ஆய்வகம் இந்த 2010 ஆம் ஆண்டு வரையில் என்னவிதமான கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியிருக்கிறது என்பதும், உலக நியூட்ரினோ ஆய்வுகள் இந்த 70 வருடங்களில் எந்த அளவிற்கு முன்னேறியிருக்கிறது என்பதும் கேள்விக்குள்ளாக்க வேண்டிய விஷயங்களாகும்.
மக்களின் அடிப்படைத்தேவைகளே நிறைவடையாத இந்தியா போன்ற ஒரு தேசத்தில் அத்தியாவசியமான ஆய்வுகளில், உடனடி பலன் மக்களின் மீது பிரதிபலிக்கக்கூடிய விஷயங்களில் கவனம் செலுத்துவதே காலத்தின் தேவையாக இருக்கிறது. செயற்கைக்கோள் அனுப்புகிற பட்ஜெட்டில் உணவுத்தேவையை நிறைவுசெய்ய முடியுமா என்று யோசித்த கடந்த காலமும் நமக்கு உண்டு.
அறிவியல் ஆராயப்படுவதும், நவீன கண்டுபிடிப்புகள் வெளிப்படுவதும் மனித அறிவின் வளர்ச்சிதான். அதன் விளைவுகளுக்கும் , பலன்களுக்கும் உள்ள வேறுபாட்டைப் பொருத்து ஆய்வுகளின் தேவை இறுதி செய்யப்படவேண்டும். பிரபஞ்ச ரகசியங்களை அறியும் அடிப்படை ஆய்வுகளின் மேல் நமக்கு ஆர்வம் இருப்பது உண்மைதான் என்றாலும், பொருளாதாரத்தில் முன்னேறிய நாடுகள் அவ்வாய்வுகளை முன்னெடுத்துச்செல்ல வழிவிடலாம்.
இந்திய விஞ்ஞானிகள் - அமெரிக்க விஞ்ஞானிகளின் தொடர்ச்சியாகவோ, உலக விஞ்ஞானிகளின் தொடர்ச்சியாகவோ இருக்க வேண்டும் என்பதில்லை. இந்தியத்தேவைகளைக் கருத்தில் கொண்டு விஞ்ஞானத்தை முன்னெடுத்துச் செல்பவர்களாக இருப்பார்களேயானால் மக்களின் ஆதரவு விஞ்ஞானத்திற்கு என்றும் இருக்கும்.
- மருத்துவர் அ.உமர் பாரூக் (
- விவரங்கள்
- தேவா
- பிரிவு: சுற்றுச்சூழல்
தீபாவளித் திருநாள். எங்கும் கோலாகலம். காலையிலேயே பட்டாசுகளை எடுத்துக் கொண்டு குழந்தைகள் வெடிக்கக் கிளம்பிவிடுவார்கள். தீபாவளி தினம் பெரும் சப்தத்துடன்தான் விடிகிறது. அதற்கு அடுத்த நாள் காலை தெருவெங்கும் பட்டாசு வெடித்த தாள் குப்பைகள் சிதறிக் கிடக்கும்.
பட்டாசும், வெடியும் எரியும் அந்த நிமிட நேரத்தோடு மறைந்து போய் விடுகின்றன. ஆனால் அதற்குப் பின்னுள்ள பயங்கரம் பற்றி அறிந்தால், சற்று பயமாகவே இருக்கிறது. மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிக்கை ஒன்றின்படி சந்தையில் கிடைக்கும் 95 சதவீத பட்டாசுகள், மத்தாப்புகள் ஒலி, காற்று மாசுபாட்டு விதிமுறைகளை மீறுபவையே.
பட்டாசு வெடிப்பதால் கடுமையான தூசுப் புகை, நைட்ரஸ் ஆக்சைடு, சிறு துகள்கள் வெளியிடப்படுகின்றன. வண்ண வண்ண ஒளியை உமிழும் மத்தாப்புகளும், புஸ்வானங்களும் நச்சுத்தன்மை மிகுந்த கனஉலோகங்களான காரீயம், காட்மியம், தாமிரம், மாங்கனீசு, துத்தநாகம் போன்றவற்றைக் கொண்டுள்ளன. அத்துடன் பட்டாசுகளில் சேர்க்கப்படும் ஆர்சனிக், பாதரசம், குரோமியம், இரும்பு ஆக்சைடுகள் எரிக்கப்பட்டவுடன் நச்சு வாயுக்களை வெளியிடுகின்றன.
குழந்தைகளின் மென்மையான சுவாசப் பாதைகள் பட்டாசுப் புகைக்கு எளிதில் பாதிக்கப்பட வாய்ப்புண்டு. அவர்கள் பெரும்பாலும் வாய் வழியாகவே சுவாசிக்கிறார்கள். இது நச்சுக்காற்றை வடிகட்டுவதில்லை. இதனால் சிறு துகள்கள் எளிதில் அவர்களது நுரையீரல்களைச் சென்றடைந்து விடுகின்றன. அவர்களது நுரையீரல்கள் வளரும் தன்மையுடன் இருப்பதால் பாதிக்கப்பட வாய்ப்புகள் அதிகம். ஆஸ்துமா, சுவாசக் கோளாறுகளுக்கு பாதிப்புகளில் முதலிடம்.
தீபாவளி தினத்தன்று காதைச் செவிடாக்கும் 120 டெசிபல் ஒலி வெளிப்படுவதாக மாசு கட்டுப்பாட்டு வாரிய கணக்கீடுகள் கூறுகின்றன. பெரும்பாலான பட்டாசுகளின் ஒலி காதை பதம் பார்க்கிறது. பட்டாசு வெடிக்கும்போது எழும் சப்தத்தால் இதயத் துடிப்பும், அட்ரீனலின் சுரப்பும் அதிகரிக்கின்றன. ரத்தக் குழாய் சுருங்குதல், கண் கருவிழி வீங்குதல் உள்ளிட்ட பாதிப்புகளும் ஏற்படுகின்றன. தொடர் பட்டாசு சப்தத்தால் குழந்தைகள், முதியவர்கள் அச்சமடைகிறார்கள்.
நிம்மதியாகத் தூங்குவது அனைவரது அடிப்படை உரிமை என்பதற்கு உத்தரவாதம் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள உச்ச நீதிமன்றம், இரவு 10 மணிக்கு மேல், காலை 6 மணி வரை பட்டாசு வெடிப்பதைத் தடை செய்துள்ளது. ஆனால் உள்ளூர் காவல்துறையின் அலட்சியத்தால் இந்தச் சட்டம் முறையாக நடைமுறைப்படுத்தப் படுவதில்லை. குட்டி ஜப்பான் என்றழைக்கப்படும் சிவகாசியில் பட்டாசு தயாரிப்பில் இருந்து குழந்தைத் தொழில் ஒழிக்கப்பட்டு விட்டதாகக் கூறப்பட்டாலும், வேலையை பிரித்துக் கொடுத்து சம்பந்தப்பட்டவர்களின் வீடுகளில் வைத்தே செய்ய வைப்பதால், மறைமுகமாக குழந்தை உழைப்பு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. மிக மோசமான, ஆபத்தான நிலைகளில் அவர்கள் பணிபுரிகின்றனர்.
எனவே, மேற்கண்ட காரணங்கள் அடிப்படையில் பட்டாசுகளை மறுப்பதன் மூலம் நமது உடல்நலத்தை பத்திரமாகப் பார்த்துக் கொள்லாம். அதோடு குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிரான செயல்பாடாகவும் இது அமையும்.
- தேவா
(பூவுலகு நவம்பர் 2009 இதழில் வெளியான கட்டுரை)
- விவரங்கள்
- பேராசிரியர் த.முருகவேள்
- பிரிவு: சுற்றுச்சூழல்
நம் வீட்டின் சமையல் அறைகள் பெருந் தொழிற்சாலைகளின் சிறிய பகுதிகள் போன்றவை. இவை செயல்படும் முறை சூழலுக்கு இணக்கமாகவோ, எதிராகவோ அமையலாம். சமையல் அறைகள் உணவு தயாரிப்பதற்கு மட்டுமானவை என்று நினைத்துவிடக் கூடாது. அவைதான் நமது உடல்நலத்தையும், பூமியின் உடல்நலத்தையும் ஒரு சேரப் பாதுகாக்கக் கூடியவை.
சமையல் அறையில் எரிபொருளையும், தண்ணீரையும் நாம் பெருமளவு சேமிக்க முடியும்.
வீட்டுக்குள்ளே நாம் மிக அதிகமாக எரிபொருள் செலவு செய்யும் விஷயங்களில் ஒன்று கேஸ் ஸ்டவ் அல்லது ஏதாவது ஒரு வகை அடுப்பு. எரிவாயு நன்கு, முழுமையாக எரியும் திறன் கொண்ட எரிபொருள் என்பதால், கேஸ் ஸ்டவ்வை சிம் நிலையில் வைத்தே சமைக்கலாம். எப்பொழுதும் பர்னரை முழுமையாக எரிய விடத் தேவையில்லை. சமைக்க வேண்டிய பொருள் தேவையான கொதி நிலைக்கு வந்த பின், தீயின் அளவைக் குறைப்பதால் 40 சதவீத எரிவாயுவை மிச்சம் பிடிக்கலாம். திரவப் பொருள் என்றால் கொதி நிலை வந்தவுடனும், திடப் பொருட்கள் என்றால் வெந்தவுடனும் தீயை அணைத்து விடவும். குறிப்பாக காய்கறிகளை முழுமையாக வேக வைக்காமல், பாதி வெந்தாலே போதும், முழுமையாக வேக வைக்கும்போது அவற்றிலுள்ள சத்துகள் காணாமல் போய்விடும்.
பாத்திரத்தில் சமைப்பதற்கு பதிலாக பிரஷ்ஷர் குக்கரில் சமைப்பதால் 75 சதவீத எரிபொருளை மிச்சம் பிடிக்கலாம். சமைப்பதற்கு ஆகும் நேரமும் குறையும். பிரஷ்ஷர் குக்கரின் கேஸ்கட் இறுக்கமாக இருக்கிறதா, வெயிட் சரியாக இருக்கிறதா என்பதை அடிக்கடி பரிசோதித்துக் கொள்ளவும். இல்லையென்றாலும் எரிபொருள் வீணாகும்.
அதேபோல் தட்டையான, அடி அகன்ற பாத்திரத்தில் சமைப்பதால் தீ முழுமையாக பயன்படுத்தப்பட்டு வெப்பம் அதிகமாகக் கிடைக்கிறது. மேலும் எதை சமைக்கும்போதும் பாத்திரத்தை மூடி வைக்கவும். இதனாலும் எரிபொருள் மிச்சமாகும்.
குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக அமர்ந்து கூட்டாகச் சாப்பிடுவதால் அந்நியோன்னியம் கூடும். உணவை பல முறை சூடாக்குவதையும் தவிர்க்கலாம். எப்பொழுதும் தேவையைக் கணக்கிட்டே சமைக்க வேண்டும். சமைத்த உணவை அடிக்கடி பிரிட்ஜில் வைத்து, மீண்டும் சூடாக்குவதால் இரண்டுக்குமே எரிபொருள் செலவாகிறது என்பதை மனதில் கொள்ள வேண்டும்.
பொருட்கள் வாங்கக் கடைக்குச் செல்லும்போது கட்டாயம் துணிப்பை எடுத்துச் செல்வோம். சாலையோர கடையில் முன்பெல்லாம் இலையில் கட்டி பூவை கொடுத்துக் கொண்டிருந்தார்கள். இன்று அங்கும்கூட பிளாஸ்டிக் பையே தரப்படுகிறது. பூக்கடை, மளிகைக் கடை, ஜவுளிக் கடை, ஓட்டல் என எதுவென்றாலும் பிளாஸ்டிக் பை தராத பட்சத்தில் நாமே கேட்டு வாங்குகிறோம். ஒரு காலத்தில் வாழை இலை, மந்தாரை இலையில் சுருட்டிக் கொடுத்தது மட்டுமின்றி, அவற்றில் சாப்பிட்ட காலமும் மலையேறி விட்டது.
பிளாஸ்டிக் பையால் ஏற்படும் பிரச்னைகள் நம் அனைவருக்கும் நன்றாகத் தெரியும். இருந்தாலும் துணிப் பை எடுத்துச் செல்லத் தயங்குகிறோம். இந்தத் தயக்கத்தை ஒழிக்க வேண்டும். கடைகளுக்குச் செல்லும் முன்னரே என்னவெல்லாம் வாங்க வேண்டும் என்று யோசித்துக் கொள்ள வேண்டும். இதனால் பல முறை செல்வதைத் தவிர்க்கலாம். அத்துடன் ஒவ்வொரு முறை செல்வதற்கான நேரம், எரிபொருள் இழப்புகளையும் குறைக்கலாம்.
வெவ்வேறு கடைகளுக்குச் செல்ல வேண்டிய பட்சத்தில், முன்கூட்டியே திட்டமிட்டு வரிசையாக ஒவ்வொரு கடைக்கும் சென்று வாங்குவதாலும் மேற்கண்ட இழுப்புகளை குறைக்க முடியும். திட்டமிட்டு செயல்படுவதால் நேரம், எரிபொருள் மிச்சம் அடைவது மட்டுமின்றி நம் அலைச்சலும் குறைகிறது, காசு சேமிக்கப்படுகிறது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
-பேராசிரியர் த. முருகவேள்
(பூவுலகு நவம்பர் 2009 இதழில் வெளியான கட்டுரை)
- அணுக்கூடத்தை எதிர்த்து தேவாரத்தில் போராட்டம்
- அவசரக் கத்திரி - அறிவியல் அநீதி
- அழிவின் விளிம்பில் பவளப் பாறைகள்
- BPA என்னும் நஞ்சு
- பிளாஸ்டிக் எமன் - சில அதிர்ச்சிகர உண்மைகள்
- உண்டி கொடுத்து உயிர் பறிப்போரே!
- ஆல்கா பெட்ரோல்
- வளிமண்டலத்தை தூய்மைப்படுத்தும் மழைக் காடுகள்
- சாகிறதா சாக்கடல்?
- கொள்ளை போகும் தண்ணீர்
- சூழல் சேதிகள்... வாசிப்பது கரிச்சான்
- காலநிலை மாற்ற பேச்சுவார்த்தைகள் - தர்மசங்கடமான உண்மைகள் சமரசங்கள் தீர்வைத் தருமா?
- எலும்புகள்
- இணையத்தை துண்டித்த கேபிள் இணைப்பு
- உடல் பருமனாகிப் போவதற்கு காரணம் என்ன?
- நீரில் இருந்து நிலத்திற்கு.
- வேளாண்மையின் பகைவன்
- டிஜிட்டல் படுதாக்களில் ஜிலுஜிலுக்கும் சீமான்கள்
- நிலை குலைந்துவரும் மலைத் தொடர்கள்
- என்ன சொல்லப் போகிறோம் யானைகளுக்கு?