அப்சல் குரு தூக்கிலிடப்பட்டு விட்டார். இந்தியாவின் கூட்டு (இந்து) மனசாட்சி திருப்திபடுத்தப்பட்டு விட்டது. சுஷீல்குமார் ஷிண்டே தன்னை இந்துக்களின் நண்பன் என்று நிரூபித்துவிட்டார். இந்நேரம் காங்கிரஸ் கட்சி தனது இந்து ஓட்டு வங்கியை தக்கவைத்த மகிழ்ச்சியில் திண்டாடிப் போயிருக்கலாம். அத்வானி மகிழ்ச்சி ஆரவராத்தில் ஆடிகூட இருக்கலாம். மோடி அப்சல்குருவின் புதை குழியில் இருந்து மண்ணெடுத்து பாரதமாதவிற்கு பாதபூஜை செய்திருக்கலாம்.

 அப்சல் குருவின் உயிர் பறிக்கப்பட்டுவிட்டது. ஆயிரம் வலிகளையும் ரனங்களையும் சுமந்து திரியும் காஷ்மீரிகள் இதை எப்படித் தாங்கிக் கொள்ளப் போகிறார்கள்? இந்தியச் சமூகத்தின் கூட்டு மனசாட்சியை திருப்திபடுத்தப் போகும் அடுத்த பலிகடா யார்?

 இந்தத் தூக்குதண்டனை எந்த வகையிலும் தீவிரவாதத்தை ஒழிக்கப் போவதில்லை. எந்த பாபர் மசூதி இடிப்பும், மும்பை மற்றும் குஜராத் படுகொலைகளும் இஸ்லாமிய இளைஞர்களை தீவிரவாதத்தின் பக்கம் தள்ளியதோ அதை விட பலமடங்கு இஸ்லாமிய இளைஞர்களை தீவிரவாதத்தின் பக்கம் இந்தக் கொலை தள்ளப் போகிறது. அதனால் ஏற்படப் போகும் எல்லா பின்விளைவுகளுக்கும் இந்து மதவெறியை கொண்டாடும் இந்த அரசே பொறுப்பு.

 ஒரு அப்சல் குருவை தூக்கில் போட்டதற்காக நாடு முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்தும் இந்திய அரசு இனி நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான அப்சல் குருக்கள் உருவாகப் போகிறார்களே அதற்கு என்ன செய்யப் போகிறது? ராணுவத்தையும், துப்பாக்கிகளையும், பீரங்கிகளையும் கொண்டு எத்தனை இஸ்லாமியர்களை உங்களால் வீழ்த்த முடியும்? கேவலம் ஓட்டு பொறுக்குவதற்காக ஒரு அப்பாவியை தூக்கில் போட்ட காங்கிரஸ் அரசின் இச்செயல், இஸ்லாமிய இளைஞர்களை மதவாதிகளின் பின்னால் அணிதிரள்வதற்கே அச்சாரம் இட்டுள்ளது. அப்சல் குருவுக்கான விலையை சமூகத்தின் கூட்டு மனசாட்சி தந்தே தீரவேண்டும்.

 இன்னும் எத்தனை அப்சல் குருக்களின் பிணங்களின் மேல் இந்து சாம்ராஜ்யத்தை கட்டியமைக்கப் போகிறீர்கள்? அப்சல் குருவை தூக்கில் போட வேண்டும் என்று ஒட்டுமொத்த இந்திய சமூகமும் எதிர்பார்த்ததாக பா.ஜக கூறுகிறது. இது அப்பட்டமான பொய். பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் பரிவாரங்களின் இந்து மதவெறி உளவியலே இதை எதிர்பார்த்தது.

 காஷ்மீர் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது எந்த வகையிலும் அந்த மக்களின் உணர்வுகளை கட்டுப்படுத்தி விடாது. ஏனெனில் அப்சல் குரு எப்போதும் காஷ்மீர் மக்களின் மாபெரும் நாயகன் ஆவார்.

 அப்சல்குருவை கொன்று விட்டீர்கள்; மோடியையும் அத்வானியையும் என்ன செய்யப் போகிறீர்கள்? உங்களுக்குத் திராணியிருந்தால் அவர்களை கைது செய்து பாருங்கள். சொரனை அற்ற ஈனப்பிறவிகளே! முஸ்லீம்களின் உயிரைக் குடித்த இந்தக் காட்டேரிகளை யார் வேட்டையாடுவது?

 மதவெறி என்னும் நச்சுப் பாம்பு பா.ஜ.க.வின் கையில் இருக்கின்றது. அது காங்கிரஸின் மூளையில் இருக்கின்றது. முன்னதைக் காட்டிலும் பின்னது அபாயகரமானது.

- செ.கார்கி

Pin It