மனிதன் பிறந்தது முதல் இறக்கும் வரை வாழ்வின் பெரும்பகுதியை தேடலுக்காகவே செலவு செய்கின்றான். அதிலே பெரும்பான்மையோரின் தேடலாக கடவுளும், பணமுமே நிறைந்து இருக்கிறது. பல நூறு ஆண்டுகளாக விடை காணப்படாத விவாதமாக நீண்டுகொண்டிருப்பது கடவுள் இருக்கிறாரா? இல்லையா? மனிதனைப் படைத்தது யார்? என்ற விவாதங்களே. கடவுள் மனிதனைப் படைத்தானா? மனிதன் கடவுளைப் படைத்தானா? என்ற கேள்விக்கு எந்த காலத்திலும் எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் பதில் கிடைக்காது; அதற்கு காரணம் பெரும்பான்மை மக்கள் மனமாற்றத்தை விரும்பாதது அல்லது தமக்கிருக்கும் பகுத்தறிவை பயன்படுத்தாதுமே காரணம். இவ்வுலகைப் படைத்தது கடவுள்; அவனுக்கே முழு சக்தியும் இருக்கிறது என்று பெரும்பான்மை மக்கள் நினைக்கிறார்கள். கடவுள் இன்றி அணுவும் அசையாது என்று தீர்க்கமாக மக்களை நம்ப வைத்திருக்கிறார்கள். அதிலே குறிப்பாக தாழ்த்தப்பட்ட மக்கள் தம் மீது திணிக்கப்பட்ட தீண்டாமைக்கும், தம் மீது பிறர் செலுத்தும் ஆதிக்கத்திற்கும் கடவுளே காரணம்; எல்லோருக்கும் பொதுவான, எல்லாம் அறிந்த அவன் செய்தால் அது சரியாகவே இருக்கும் என்று கருத்து நிலவி வந்திருப்பது புரிந்து கொள்ள முடிகிறது. அந்த கருத்து நிலவி வந்ததை என் சொந்த அனுபவத்தின் மூலமே உணர்ந்திருக்கிறேன்.

budha_268நான் எட்டாவது படித்துக் கொண்டிருந்தபோது, உயர்சாதிக்காரர் என்று சொல்லப்படும் பணவசதி மிக்க ஒருவருக்கு என் தந்தை கூலி வேலை செய்து வந்தார். அப்படி ஒரு சூழலில் ஒருநாள் அவசர செய்தியை சொல்ல என் அப்பாவைத் தேடி அவர் வேலை செய்த இடத்திற்குச் சென்றேன். அங்கே அந்த பணக்காரரின் 18 வயது மகன் என் அப்பாவை பெயரைச் சொல்லி ஒருமையில் அழைத்தது என்னை வெகுவாக சங்கடத்தில் ஆழ்த்தியது. வீட்டிருக்கு வந்த பின்பு என் அப்பாவிடம் இதைப்பற்றி கேட்டபோது, "எல்லாம் என் தலையில் எழுதி வாங்கி வந்த விதி" என்று நொந்து கொண்டார். என் அப்பாவின் அந்த தலை எழுத்தைக் கேட்ட அந்த நாள் முதல் நான் கடவுளை நம்புவதும் இல்லை; வணங்கியதும் இல்லை. இப்படி எத்தனையோ பேர் மனம் முழுவ‌தும் வடுக்களுடன் உழன்று கொண்டே எல்லாம் கடவுளின் செயல் என்று நம்பிக் கொடிருப்பார்கள்.
"கடவுள் கற்பனையே" என்பதை புத்தர் முதல் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் வரை பலரும் வலியுறுத்தி பேசி வந்திருக்கிறார்கள். மனித குலத்தின் பரிணாம வளர்ச்சியை ஆய்வு செய்த வெளியிட்ட சார்லஸ் டார்வின் அவர்கள் "எல்லா ஜீவராசிகளும் சிருஷ்டிக்கப்பட்டவை அல்ல; ஒரு சில ஜீவராசிகளின் வம்சம் தான்" என்று மனிதனின் பிறப்புக்கும் கடவுளுக்கும் எள் முனையளவும் சம்ப‌ந்தமில்லை என்பதை தெளிவாக உணர்த்தி இருக்கிறார்.

முதலில் உழைப்பும், பிறகு வார்த்தைகளுமே குரங்கு மனிதனை மனிதனாக்கிறது; இவைகளின் விளைவாக மூளையும் வளர்ந்தது; மூளை வளர, வளர ஐம்புலன்களும் பரிணாம வளர்ச்சி பெற்றது என்பது ஆய்வாளர்களின் முடிவுப்படி தெளிவாகிறது. மனிதனை கடவுள் தான் படைத்தான் என்பதே கடவுள் நம்பிக்கையின் முதல் கூற்றாக இருக்கிறது. மனிதனை கடவுள் படைக்கவில்லை, ஜீவராசிகளின் பரிணாம வளர்ச்சியே மனித குல விருட்சிக்கு காரணம் என்பதை ஆய்வாளர்கள் தெளிவுப்படுத்தி இருப்பது ஒருபுறமிருந்தாலும் கடவுள் நம்பிக்கையின் அடிப்படையில் அல்லது கடவுளின் இருப்பை உறுதி செய்வதற்காகவே மதங்கள் தோற்றுவிக்கப்பட்டிருப்பதால் கடவுளின் பெயரால் மனிதனுக்கு மனிதன் இடையில் உள்ள ஏற்றத்தாழ்வுகளைக் கண்டிக்க அல்லது களைவதற்கு கடவுள் இல்லை என்ற ஆயுதம் தேவைப்பட்டது என்பதை மறுப்பதற்கில்லை. ஏற்றத்தாழ்வுகள் மலிந்து கிடக்கும் இந்தியாவில் பெரும்பான்மை மதம் இந்து மதமே. இந்துமதத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை கண்டும், அனுபவித்தும் பொறுத்துக் கொள்ள முடியாதவர்கள் தான் இசுலாமியர்களாகவும், கிறித்துவர்களாகவும் மாறினார்கள். கடவுள் இருப்பதாக கூறிக்கொள்ளும் கருவறைக்குள் தாழ்த்தப்பட்டவர்கள் நுழைந்துவிட்டாலோ, கடவுள் சிலையைத் தொட்டுவிட்டாலோ அல்லது கண்ணால் கண்டுவிட்டாலோ கடவுளே தீட்டாகிவிடுவார் என்று பல்லாயிரம் ஆண்டுகளாக தாழ்த்தப்பட்டவர்களை கோவிலின் கருவறைக்குள்ளே நுழைய அனுமதிப்பதில்லை.

தாழ்த்தப்பட்டவர்களுக்கும், கடவுளுக்கும் இடையில் உள்ள உறவைப் பற்றி மிகத் தெளிவாக "திருநாளைப்போவாரில் உள்ள நந்தன்" கதை மிகத்தெளிவாக உணர்த்தும். ஆதனூர் சேரியில் வசித்து வந்த நந்தன், வருணாசிரமப்படி நால் வருணத்திற்கு அப்பாற்பட்டவன். அதாவது தீண்டத்தகாதவன் (புலையர்கள்). இவர்கள் சிறுதெய்வ வழிபாட்டுக்குரியவர்கள். முழுமுதற் கடவுளை காணவோ, தரிசிக்கவோ மறுக்கப்பட்டவர்கள். நந்தன் பண்பாட்டு வழியிலும், தொழில் அடிப்படையிலும் அடிமைப்படுத்தப் பட்டவன். அப்படிப்பட்ட நந்தனுக்கு முழுமுதற் கடவுளை தரிசிக்க ஆசை அல்லது பக்தி ஏற்பட்டுள்ளது. தீண்டாமையின் காரணமாக மறுக்கப்படவே அந்தணர் ஒருவரின் கனவிலே கடவுள் வந்து "நந்தன் தீயினில் மூழ்கி முப்புரி நூலோடு என் முன் தோன்றினால் அவன் மீதுள்ள தாழ்ந்த சாதி எனும் இழிவு நீங்கி, என்னை தரிசிக்கவும், பூசிக்கவும் முடியும்" என்றாராம். தீயினில் மூழ்கிய ஒருவன் மீண்டும் எப்படி எழுவான் என்பது ஒருபுறமிருந்தாலும், தாழ்த்தப்படவன் கனவில் வருவதைக்கூட கடவுள் விரும்பவில்லையாம்; அதனால் தான் அந்தணரின் கனவில் வந்து சொன்னாராம்.

இந்தியா முழுமைக்கும் புத்தமதம் பரவி இருந்ததை வரலாறு கூறுகிறது. கி.மு. 450 காலகட்டங்களின் புத்தமதமே பெரும்பான்மை மதமாக இருந்திருக்கிறது. அதற்கு காரணம் இந்து மதத்தில் வர்ணாசிரம அடிப்படையில் தீண்டப்படாதோர் என்று ஒரு சாராரை ஒதுக்கி வைத்து இழிதொழிலை செய்ய வைத்திருந்த சூழலில் புத்தரும் அவரது சீடர்களும் தினசரி வீடு வீடாக சென்று பிச்சை எடுத்து உண்டு வந்திருக்கின்றனர். தம்மைக் கண்டாலே தீட்டு என்று பிறர் ஒதுக்கி வைக்கும்போது தம் கைப்பட சமைத்த உணவை வாங்கி உண்கிறார்களே என்று தீண்டப்படாதோர் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி அதுவே தீண்டப்படாதோர் புத்தமதத்தை தழுவ காரணமாக இருந்திருக்கிறது. அவ்வாறு ஒருமுறை ஆனந்தா என்ற புத்த பிட்சு வழிநடத்திக் கொண்டிருக்கையில் அவருக்கு தாகம் ஏற்பட்டு அருகில் இருந்த கிணற்றை நோக்கிச் சென்றாராம். அங்கே சண்டாலிகா என்ற பெண் தண்ணீர் எடுத்துக் கொண்டிருந்தாளாம்; அவளிடம் எனக்கு தாகமாக இருக்கிறது; அருந்த நீர் கொடுங்கள் என்று கேட்டதும் அந்தப் பெண் "அய்யா மன்னிக்கவும் நான் தீண்டப்படாதவள்" என்றாளாம். அதற்கு அந்த புத்த பிட்சு "நான் தண்ணீர் தான் கேட்டேன்; நீ எந்த சாதி என்று கேட்கவில்லை" என்றாராம். உடனே அவளது கண்களில் இருந்து கண்ணீர் தாரை தாரையாக நீர் வழிந்ததாம். அன்றைக்கு கடவுளையும், சாதி ஏற்றத்தாழ்வுகளையும் கடுமையாக எதிர்த்து வந்த புத்தரின் பிரசங்கத்தினால் பெரும்பாலான தீண்டப்படாத சாதியினர் புத்த மதத்தைத் தழுவினர். பார்ப்பனர்களுக்கு எதிரான பிரச்சாரங்களை மேற்கொண்டதில் புத்தரின் பங்களிப்பு அபரிமிதமானது.

சாங்கிய தத்துவமும் கடவுளை எதிர்த்தது. அது அவசியமற்ற கற்பனை என்றது. புத்தர் கடவுள் கோட்ப்பாட்டை எதிர்த்துப் பேசியதாக அஷ்வகோஷர் என்ற பவுத்தஞானி அவரது நூலில் குறிப்பிட்டு இருப்பது இதோ...

(1) ஈஸ்வரன் இந்த உலகத்தைப் படைத்திருந்தால் மாற்றமும், அழிவும், துன்பமும், இடுக்கண்களும், நல்லதும், கெட்டதும், எதுவுமே இருக்கலாகாது; ஏனெனில் அவன்தான் அனைத்தையும் படைத்திருக்க வேண்டும்.

(2) இன்பமும், துன்பமும், விருப்பும், வெறுப்பும் உணர்வுள்ள அனைவருக்கும் ஏற்படுவதால் கடவுளுக்கும் இன்பமும், துன்பமும், விருப்பும், வெறுப்பும் இருக்க வேண்டும். இவை இருந்தால் அவர் எப்படி குற்றமற்றவராய் இருக்கமுடியும். எப்படி எல்லோருக்கும் பொதுவான நீதிமானாக இருக்க முடியும்?

(3) ஈஸ்வரன் நம்மை படைத்தவனாக இருந்தால், அவன் இன்றி அணுவும் அசையாது அல்லவா, அப்படி இருக்க நாம் நல்லொழுக்கத்தை நாடிச் சென்றாலும் என்ன பயன்? நல்லது, கெட்டதும் அவன் படைத்தததால் அனைத்து நிகழ்வுகளுமே அவனுக்கு ஒன்றே.

(4) துன்பமும், துயரமும் வேறு காரணத்தால் ஏற்படுகிறது என்றால், அவனுக்கு அப்பால் உள்ளது இவற்றை ஏற்படுத்துகிறது என்றால் அனைத்தையும் அது ஏன் ஏற்படுத்தக் கூடாது?

(5) கடவுள் அனைத்தையும் படைத்தார் என்றால் ஏதோ நோக்கத்துடன் அல்லது எவ்வித நோக்கமும் இன்றி படைத்திருக்க வேண்டும். நோக்கத்துடன் இவ்வுலகைப் படைத்திருந்தால் குறைபாடு அற்றவர் என்று கூற முடியாது; என்னில் நோக்கம் என்பதே ஒருவித தேவையை பூர்த்தியடையச் செய்வதே. நோக்கம் இல்லாமல் படைத்தார் என்றால் ஒன்று அவர் பைத்தியக்காரனாக இருக்க வேண்டும்; இல்லை பால்மணம் மாறாத குழந்தையாக இருக்க வேண்டும்.

(6) கடவுள் உலகைப் படைத்தார் என்றால் வினயப்பூர்வமாக அவன் கட்டளைக்கு இணங்கி ஏன் நடக்கவில்லை? துன்பத்தின் போது ஏன் கடவுளைத் தொழ வேண்டும்?

(7) ஒரு கடவுளுக்கு மாறாக ஏன் பல கடவுள்களைத் தொழ வேண்டும்?

இக்கூற்றின் மூலம் புத்தர் கடவுளை கடுமையாக எதிர்த்ததும், கடவுள் நம்பிக்கை பகுத்தறிவிற்கு ஏற்றதல்ல என்று பிரசங்கம் செய்திருப்பதும் நம்மால் புரிந்து கொள்ள முடியும்.

dharmapuri_attack_644

சமகால நிகழ்வுகளின் மூலமாக கூட கடவுள் கற்பனையே என்பதை நம்மால் நிரூபிக்க முடியும். சமீபத்தில் தருமபுரியில் (நத்தம், அண்ணா நகர் கொண்டாம்பட்டி) தாழ்த்தப்பட்டவர்களின் 300 குடியிருப்புகள் சாதி வெறியர்களால் சூறையாடப்பட்டு, கொள்ளையடிக்கப்பட்டு, தீக்கிரையாயின. அந்த சேரிக்குடிகளிலே தம் புகைப்படமோ, அல்லது தம்மைப் பெற்றவர்களின் புகைப்படமோ இருந்ததோ இல்லையோ, ஈஸ்வரன் படமோ முருகன் படமோ பிள்ளையார் படமோ நிச்சயம் இருந்திருக்கும்; சாதி வெறியர்களை விட அந்த கடவுளுக்கு சக்தி இருக்குமானால் அந்த கொடும் நிகழ்வைத் தடுத்திருக்க முடியும் அல்லவா? ஏன் தடுக்க முடியவில்லை? தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிரான, பெண்களுக்கு எதிரான கொடுஞ்செயல்களை விட கடவுளுக்கு எதிரிலே, கடவுளுக்கு எதிரான கொடும் செயல்கள் அதிர்கரித்து விட்டன; அதையெல்லாம் கூட தடுக்க சக்தியில்லாத கடவுளா நாட்டில் நிகழும் வன்முறைகளை தடுக்கப் போகிறார்?

கடவுள் அபிமானிகளிடம் சில கேள்விகளை மட்டுமே கேட்க விரும்புகிறேன்....

(1) கடவுள் இன்றி அணுவும் அசையாது என்பது உண்மையாக இருக்குமானால், நாட்டில் நடக்கும் மதக்கலவரம், சாதிக்கலவரம், வன்புணர்வுக் கொடுமைகள், பசி, பட்டினி, ஊழல், எளியவர்களை வலியவர்கள் தாக்கும் வன்கொடுமை இவை யாவும் கடவுளின் செயல்தானா?

(2) உங்களுக்குப் பிறந்த பிள்ளை கடவுளால் தான் பிறந்தது என்றால், உங்களுக்கு பிள்ளை கொடுக்கவே சக்தி உள்ள கடவுளால் என் மீது, என் அனுமதியே இல்லாமல் திணிக்கப்பட்ட தீண்டாமை எனும் கொடுமையை நீக்க முடியாதா?

(3) கடவுள் இன்றி அணுவும் அசையாது என்று நம்புகிறவர்கள், அவர்களுக்கு நேரும் கொடுமைக்கு மட்டும் ஏன் பொங்கி எழ வேண்டும்? அதுவும் கடவுளின் கிருபை என்று நம்பிக் கொள்ள வேண்டியது தானே?

(4) நாடாளுமன்றத்தை தகர்க்க முயன்றதாகக் கூறி அப்சல் குருவுக்கு தூக்கு தண்டனையை ஏன் நிறைவேற்றினீர்கள்? நாடாளுமன்ற தாக்குதலும் கடவுளின் கிருபை தானே? சங்கரமடத்து குடுமிகள் அரசுக்கு எதிராக ஏன் போராடவில்லை?

(5) தாழ்த்தப்பட்டவர்கள் கருவறைக்குள் சென்றால் கடவுளே தீட்டாகி விடுவார் என்றால், கடவுளின் கட்டளைப்படி தான் அவர்களை உள்ளே அனுமதிக்கவில்லை என்றால் கடவுளும் சாதிப் பிரியரா? அப்படியானால் அவர் எந்த சாதி?

(6) கடவுளால் தான் நான் பிறந்தேன் என்றால் என்னை ஏன் கருவறைக்குள் அனுமதிக்க மறுக்கிறீர்கள்? நானும் கடவுளின் பிள்ளைதானே?

இப்படி பல கேள்விகளை எம்மால் கேட்க முடியும். எந்த பக்தனுக்கும் பதிலளிக்க திராணி இருக்காது; ஏனெனில் இதுபோன்ற பல ஆயிரம் கேள்விகளை புத்தரும், பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரும் கேட்டுவிட்டார்கள். ஆனால் எந்த தீவிர கடவுள்ப் பிரியர்களும் பதில் சொல்லமுடியவில்லை; மாறாக இசுலாமியர்கள் வந்து சொல்வார்கள். "அது இந்து மதத்தின் தவறான கோட்பாடு; சாதிக் கொடுமை தான் உங்களின் கடவுள் மறுப்புக்குக் காரணம் என்றால் நீங்கள் இசுலாமியத்தை ஏற்றுக் கொள்ளுங்கள். அப்போது நிச்சயம் கடவுளை உணருவீர்கள்" என்பார்கள். கடவுளின் பெயரால் சக மனிதர்களை தீண்டாமைக்குள்ளாக்கும் அந்த காவாலிகளைக் கூட இத்தனை ஆண்டுகளாக தண்டிக்க முடியாத கடவுளால் என்னை மனமாற்றம் செய்ய முடியும் என்று நான் நம்பவில்லை.

periyar_250மேலும் கடவுள் கற்பனையே என்று சொல்கிற நாத்திகர்களாகிய நாங்கள் ஒரே அணியில் தான் இருக்கிறோம்; ஒரே கோட்பாட்டில் தான் இருக்கிறாம்; ஆனால் கடவுளை தீவிரமாக நம்புகிற நீங்கள் மட்டும் ஏன் ஒரே கடவுள்தான் என்று ஒரே அணியில் சேரவில்லை? உங்களை ஒன்று சேர்க்கும் சக்தி கூடவா உங்கள் கடவுளுக்கு இல்லை! இசுலாமிய சகோதரர்களே! சிந்தித்துப் பாருங்கள்.... இம்மையில் செய்யும் குற்றங்களுக்கு மறுமையில் நிச்சயம் கடவுள் தண்டிப்பார் என்று முழுமையாக நம்புகிறவர்கள் நீங்கள்; அப்படி இருக்கும் பட்சத்தில், சகோதரி ரிஷானா உண்மையில் குற்றமே செய்திருந்தால், மறுமை என்பது இருக்குமானால் அவளை மறுமையில் நிச்சயம் கடவுள் தண்டிப்பார்! பிறகு ஏன் இப்பொழுது அவளுக்கு தண்டனை கொடுத்தீர்கள்? ஒரு குற்றத்திற்கு இரண்டு தண்டனையா? அப்படியானால் நீங்கள் கடவுளை நம்பவில்லை என்றுதானே பொருளாகிறது!

இந்து கடவுள் பிரியர்கள் கேட்பார்கள், கடவுள் தான் இல்லையே, பிறகு ஏன் கருவறை நுழைவுப் போராட்டம் செய்கிறீர்கள் என்று. அவர்களுக்கு "இந்த நாட்டிலே நீதிமன்றங்களை விட சங்கரமடங்களே சக்தி வாய்ந்ததாக இருக்கின்றன‌; மதங்களைக் காப்பதே சங்கர மடங்களின் தலையாய கடமையாக இருக்கிறது. மதங்கள் கடவுளை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. சாதிகளின் அடிப்படையிலே கடவுளை வழிபடும் உரிமைகளும் இருக்கின்றன. ஆகவே கருவறை நுழைவுப் போராட்டம் என்பது கடவுளின் மீதுள்ள அபரிமிதமான நம்பிக்கையினால் அல்ல; எங்களின் அடிப்படை உரிமையினால்; கடவுளை வணங்க வேண்டுமா? கூடாதா? என்பதையும், நான் கோவிலுக்குள் நுழைய வேண்டுமா? வேண்டாமா? என்பதையும் நான் தான் தீர்மானிக்க வேண்டுமே ஒழிய சங்கரமடத்து குடுமிகள் அல்ல...!

கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் "எல்லாம் கடவுள் செயல்" என்ற அபத்தமான நம்பிக்கையின் மூலம் போராட்டக் குணத்தை இழந்து, வாழ்வின் எதார்த்தத்தை உணர மறுத்து, வாழ்வியல் தத்துவங்களையும் இழந்து வாழ்வில் தோற்றுப் போகிறார்கள்; அவர்களோடு சேர்த்து அவர்களின் சந்ததிகளையும் தோற்கடிக்க முயற்சிக்கிறார்கள் என்பதே எதார்த்தமான உண்மை...! அதை கடவுள் அபிமானிகள் புரிந்து கொள்ள வேண்டும்.

(உதவிய நூல் : ஏ. எஸ்.கே. அவர்களின் சமூகப் போராளி அம்பேத்கரின் வாழ்வும், தத்துவங்களும்) அங்கனூர் தமிழன் வேலு

Pin It