கீற்றில் தேட...
அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- ஆர்.எஸ்.நாராயணன்
- பிரிவு: சுற்றுச்சூழல்
செர்னோபிலில் தொடங்கி புகுஷிமா வரை அழிந்த மனிதர்களின் கதைகள் மூளைச்சலவை செய்யப்பட்ட இந்திய அணு விஞ்ஞானிகளுக்கு எந்தப் பாடமும் புகட்டவில்லை என்றால், பாவம் கூடங்குளத்து மக்கள். புகுஷிமா சுனாமியால் மட்டுமல்ல; சுனாமி ஏற்படாமலிருந்தாலும்கூட அணுமின் கழிவு மூலம் ஆபத்து என்றுமே உண்டென்று முன்பே எச்சரிக்கப்பட்டதாகவும் தகவல் உண்டு. செர்னோபில் விபத்தால் ஏற்பட்ட கதிர்வீச்சில் பலிகொண்ட உயிர்கள் 75,000 இருக்குமென்றும் உயிர் போகாவிட்டாலும் நடைப்பிணமாக வாழ்வோர் சுமார் 75,000 என்றும் நியூயார்க் விஞ்ஞான அகாதெமி கூறுகிறது. செர்னோபிலுக்கு முன்பு பென்சில்வேனியா மாநிலத்தில் த்ரீமைல் ஐலேண்டு விபத்து நிகழ்ந்துள்ளது. விஞ்ஞானத்தில் வல்லவர்கள் என்று பெருமைப்பட்டுக்கொள்ளும் அமெரிக்காவில் மூன்று மைல் தீவில் நிகழ்ந்த 1979 விபத்துக்குப்பின் அமெரிக்க அணுசக்தித்துறை எதுவும் புதிய அணுஉலை ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவில்லை.
உக்ரைனில் நிகழ்ந்த செர்னோபில் விபத்துக்குப் பின் ஐரோப்பிய அணுசக்தித் தொழில் நிறுவனங்கள் அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள் விஞ்ஞான வளர்ச்சியில் முன்னேறியுள்ள ஜப்பானின் புகுஷிமா விபத்தை சுனாமி மீது பழி சுமத்தி அணு விஞ்ஞானிகள் தப்பிக்க இயலாது.
தொழில்நுட்பக் கோளாறுகள் பற்றிய விஷயங்களையும் ஆராய்வது நன்று. புகுஷிமாவில் மிக அடிப்படையான அணுக்கருவின் சிதைவு - ஹைட்ரஜன் வெடித்து உயிரிழந்தவர் எத்தனை லட்சம் என்ற புள்ளிவிவரம் கிட்டவில்லை.
1979-ல் அமெரிக்காவில் மூன்று மைல் தீவு அணுமின் நிலைய விபத்துக்கு முன்பு 1967-ல் இங்கிலாந்தில் விண்ட்ஸ்கேல் விபத்து ஏற்பட்டுள்ளது. அதற்கு முன்பு 1952-ல் கனடாவில் சால்க் நதி விபத்துகள். அணுஉலைகளின் குளிர்நிலை இழப்பால் அணுக்கதிர் கசிவு ஏற்பட்டு மனித உயிர்களைப் பலி வாங்கிய எண்ணிக்கை எவ்வளவு ஆயிரங்களோ. உலகில் உள்ள அனைத்து அணுமின் நிலையங்களிலும் உள்ள அடிப்படைக் கோளாறு எதுவென்றால் அணுஎரிபொருள்களை நீர்வெப்ப - நீராவிச் சாதனங்கள் குறைவாக உட்கொண்டு குறைந்த ஆற்றலில் செயல்பட்டு அதிக மின்கழிவுகளை - கதிர்வீச்சு ஆபத்துக்குரியவற்றை வெளியேற்றுகின்றன. அத்துடன் உள்கட்டமைப்பில் உள்ள இயந்திரக் கோளாறுகள், அவசர சிகிச்சையின்மை, மின்வெட்டு - மின் அழுத்த ஏற்ற இறக்கம் இவ்வளவுக்கும் மேல், பூகம்ப - சுனாமி ஆபத்து என்று ஆயிரம் விஷயங்கள் விஞ்ஞான மூளைக்கும் அப்பாற்பட்டு விடை அறியப்படாமல் உள்ளன.
உலக அணுசக்தித் தொழில் நிறுவனங்கள் கதிர்வீச்சு அபாயத்தைப் பற்றிய மதிப்பீட்டை எச்சரிக்கை உணர்வுடனோ, சிரத்தையுடனோ, மனித உயிர்களை மனத்திற்கொண்டோ செய்யாதது துரதிருஷ்டவசமானது. 1975-ல் ராஸ்முஸ்ஸன் அறிக்கை மிகவும் நம்பகத்தன்மையுள்ள அணுசக்தித் தொழில்நுட்ப ஆய்வு அறிக்கையாக நம்பப்படுகிறது. இன்னமும் அந்த அறிக்கையைத்தான் மூளைச்சலவையான அணுமின் விஞ்ஞானிகள் நம்புகின்றனர். அந்த அறிக்கை அணுமின் நிலையங்களில் உள்ள பாதுகாப்புகளுக்கு 25,000 ஆண்டு உத்தரவாதம் வழங்கியுள்ளது. 25,000 ஆண்டுகளில் அணுஉலைகளில் ஒன்று மட்டும் பழுதுறலாம் என்று கூறியுள்ளது. ஆனால், நான்காவது ஆண்டில் த்ரீமைல் தீவு அணுமின் நிலையத்தில் விபத்து ஏற்பட்டது. பின்னர் செர்னோபில், புகுஷிமா உலகறிந்த கதை.
பெரிய அளவில் இல்லாவிடினும், இதுவரை 440 அணுஉலைகள் பழுதடைந்து விபத்துகள் நிகழ்ந்துள்ளன. புகுஷிமா விபத்துக்குப்பின் அமெரிக்காவில் கொதிநீர் அணுஉலைகள் ஜெனரல் எலக்ட்ரிக்குச் சொந்தமானவை. அதன்மீது கடுமையான பாதுகாப்பு நடைமுறைகளைக் கையாள்வதைக் கண்காணிக்க அரசு முன்வந்துள்ளது. 1990-க்குப்பின் 17 விபத்துகள் அமெரிக்காவில் நிகழ்ந்துள்ளன. ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, சீனா ஆகிய நாடுகள் ஒட்டுமொத்தமாக அணுமின் நிலையத் திட்டங்களைக் கைவிட்டுவிட்டன. ஜெர்மனியில் படிப்படியாக நாட்டில் உள்ள அனைத்து அணுமின் உலைகளை மூடுவிழா செய்ய முடிவு செய்துள்ளது. துருக்கி, சிரியா, ஜோர்டன், போலந்து, எகிப்து, இஸ்ரேல், சவூதி அரேபியா, நைஜீரியா, ஐக்கிய அரபுக் குடியரசு ஆகிய நாடுகள் அணுமின் நிலையத் திட்டத்தில் தலைவைத்துப் படுப்பதில்லை என்று முடிவு செய்துவிட்டன.
உலகிலேயே மிகப்பெரிய அணுசக்தி நிறுவனம் "அரீவா ஆஃப் பிரான்ஸ்''. புகுஷிமா விபத்து காரணமாக, பல்லாயிரம் கோடி டாலர் முதலீடுகள் கொண்ட ஐரோப்பிய அதிசக்தி அணுஉலைத் திட்டம் நீதிமன்ற வழக்கால் முடக்கப்பட்டுவிட்டது. யூரோப்பியன் பிரஷரைஸ்டு அணுஉலைத் திட்டம் பின்லாந்தில் செயல்படுவதாயிருந்தது. அரீவாவின் பிளேமன்வில்ய பிரெஞ்சு நாட்டுத் திட்டமும் அம்போவாகிவிட்டபோது. . . கூடங்குள முதலீடு பெரிய தொகை இல்லை. கூடங்குளத் திட்டத்தில் உள்ள ஆபத்தை மூளைச்சலவை செய்யப்பட்ட இந்திய அணுமின் துறை விஞ்ஞானிகள் ஒப்புக்கொள்ளாத சூழ்நிலை வந்துவிட்டால், தில்லி உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசை எதிர்த்துப் பொதுநல வழக்குத் தொடர்வது நன்று.
உலகில் உள்ள அனைத்து நாடுகளும் புகுஷிமா விபத்தை நல்ல பாடமாக உணர்ந்து புதிய திட்டங்களை ஒத்திவைத்தும், செயல்பாட்டில் உள்ள அணு உலைகளின் பாதுகாப்பு பற்றிய நடவடிக்கைகளில் மறுபரிசீலனைகளையும் செய்யும்போது இந்திய விஞ்ஞானிகள் மிகவும் பொறுப்பற்ற முறையில் பேசுவதுடன் "உலகில் இல்லாத பாதுகாப்புகள் இந்திய அணுஉலைகளில் உள்ளதாகத் தங்கள் முதுகைத் தாங்களே தட்டிக் கொள்கின்றனர்.
இந்திய அணுமின் நிலையத் தலைவர் எஸ். கே. ஜெயின் கூறும்போது, "எங்களிடம் அணுஉலைகள் பற்றிய அறிவு முழுமையாக உள்ளது. இந்தியாவில் நிறுவப்பட்ட அணுஉலைகள் அனைத்தும் எப்படிப்பட்ட பூகம்பத்தையும் எப்படிப்பட்ட சுனாமியையும் தாங்கும் சக்தி படைத்தது'' என்று கூறியுள்ளார். இந்தியாவில் எப்படி அணு உலைகள் பத்திரமாக இயங்கி வரும் லட்சணத்தை அறிவது நன்று. மொத்த மின்சார உற்பத்தியில் 3 சதவீதம் மட்டுமே வழங்கும் அணுசக்தித்துறை விஞ்ஞானிகளின் அலட்டலுக்கு ஒரு குறையுமில்லை. தாராப்பூரில் மட்டும் 1980-களில் தொடங்கி இன்றுவரை சுமார் 400 தொழிலாளர்கள் கதிர்வீச்சால் பாதிக்கப்பட்டுள்ளனர். தில்லியிலிருந்து 200 கி. மீ. தூரத்தில் உள்ள நாரோராவில் தீவிபத்து ஏற்பட்டு அணுஉலை கட்டடம் வரை தீ பரவியது. அப்போது அமைக்கப்பட்டிருந்த அவசரநிலை ஏற்பாடுகள் எதுவும் வேலை செய்யவில்லை. நல்லவேளையாக தீ தானாகவே அணைந்துவிட்டதால் மாபெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. கைகாவில் சோதனையின்போது தவறான வடிவமைப்பால், கட்டுமானம் சரிந்தது - நல்லவேளையாக அப்போது அணுஉலை வேலை செய்யாததால் மாபெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. அவ்வப்போது விஞ்ஞானம் காப்பாற்றாமல் தெய்வம் காப்பாற்றியுள்ளதாம்.
ராஜஸ்தான் அணுமின் நிலையத்தின் கதிர்வீச்சுக் கழிவுகள் 1995-ல் ஏரியில் விடப்பட்டதை மூன்று மாதம் கடந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 2003-ல் கல்பாக்கத்தில் ஆறு தொழிலாளர்கள் கூடுதல் கதிர்வீச்சுக்கு ஆளாகி மடிந்துள்ளனர். இந்திய அணு சக்தி வரலாற்றில் பணியாளர்கள் நேரிடையான கதிர்வீச்சுக்கு ஆளானது - அனுமதிக்கப்படும் அளவுக்குமேல் தாக்கப்பட்டதில் மோசமான ஒன்று.
கைகா அணுமின் நிலையத் தொழிலாளர்களின் சிறுநீர்ப் பரிசோதனையின்போது கூடுதல் அளவில் ட்ரைட்டியம் இருப்பது புலனானதைத் தொடர்ந்து 2009-ல் தொழிலாளர் போராட்டம் வெடித்தது. விசாரணையின்போது தெரியவந்த விவரம் குடிதண்ணீர்த் தொட்டியில் ட்ரைட்டியம் கலந்துள்ளதும் புலனாயிற்று. ட்ரைட்டியம் குருதியில் கலந்தால் புற்றுநோய் ஏற்படும்.
மேலே விவரிக்கப்பட்ட பல்வேறு அணுமின் நிலைய விபத்துகள் - தெய்வச் செயலால் தவிர்க்கப்பட்ட விபத்துகள் எல்லாமே இந்திய அணுமின்சக்தித் துறைச் செயலர் பெருமையுடன் கூறும் கதிர்வீச்சுப் பாதுகாப்பு - அவசரகால பாதுகாப்பின் லட்சணம். எந்த சுனாமியோ, பூகம்பமோ இல்லாத சூழ்நிலையில்கூட இந்தியாவின் அணுசக்தி நிலையக் கழிவுகளின் கதிர்வீச்சுகள் மனிதர்களின் உடற்கூறுகளுக்குச் சென்றவண்ணம் உள்ளன. இந்திய அணுசக்தித்துறை சுதந்திரமாகவும் தன்னிச்சையாகவும் செயல்படுகிறது.
1962-ல் இயற்றப்பட்ட அணு மின்சாரச் சட்டம், அணுசக்தித் துறைக்கு அவர்கள் விரும்பாத விஷயங்களைத் தெரியப்படுத்த வேண்டாம் என்ற சுதந்திரத்தை வழங்கியுள்ளது. உண்மையை மறைக்கும் அதிகாரம் - "நமது அணுசக்தி பலம் பாகிஸ்தானுக்கோ - சீனாவுக்கோ தெரிய வேண்டாம்'' என்பது சரி. ஆனால், இயந்திரக் கோளாறு - அவசரகால பாதுகாப்பு கோளாறு - கட்டுப்படுத்தப்படாத கதிர்வீச்சுக் கழிவு... பற்றிய செய்திகளை எப்படி மூடி மறைக்க முடியும்? எப்படியோ 2ஜி ஊழல்போல் கசிந்து விடுகிறது.
யுரேனியம் தோண்டி எடுப்பதிலிருந்து அணுஉலை செயல்படும்வரை நிகழ்த்தப்படும் அணு எரிசுழற்சியில் - ஒவ்வொரு கட்டத்திலும் கதிர்வீச்சுக் கழிவு ஏற்படுவதைத் தவிர்க்க இயலாது. மண்ணில் சேரும் இக்கழிவின் கதிர்வீச்சு சக்தியின் ஆபத்து ஆயிரம் ஆண்டுகள் நீடிக்கும். அணுமின் கழிவு பற்றிய ஆபத்தைப் பற்றி அணுமின் துறை ஒப்புக்கொள்ளவே மறுக்கிறது.
வங்காள விரிகுடாவில் எந்தவிதமான சுனாமியும் ஏற்படாது என்றோ - கடல்நீர் பெருக்கெடுத்து கடற்கரை நகரை அழிக்காது என்றோ என்ன உத்தரவாதம் உள்ளது? பாண்டியர் துறைமுகம் கொற்கை அழிந்தது. சோழர் துறைமுகம் பூம்புகார் அழிந்தது. பல்லவர் துறைமுகம் மாமல்லபுரமும் அழிந்தது. அப்படி இருக்கும்போது, கல்பாக்கமும், கூடங்குளமும் அழிக்க முடியாத ஆயிரங்காலத்துப் பயிரா என்ன? ஒருக்கால் அப்படி அழியுமானால்... மக்களோ, மரமோ, பயிரோ எஞ்சினால் நமது அதிர்ஷ்டம். இவ்வளவு மக்கள் எதிர்ப்புகளைப் புறந்தள்ளிக் கூடங்குள அணுமின் உலைகள் நிறுவப்படுமானால் வரலாறு நம்மை ஒருபோதும் மன்னிக்கப் போவதில்லை.
- ஆர்.எஸ்.நாராயணன்
(நன்றி: தினமணி)
- விவரங்கள்
- வீராகலை.கண்ணன்
- பிரிவு: சுற்றுச்சூழல்
சுற்றுச்சூழல்
இந்த உலகம் இரண்டு பெரும் பிரிவுகளாக பிரிந்து உள்ளது
ஒன்று:
தாவரம், விலங்குகள், மண், காற்று, நீர், மலைகள், கடல், ஆறுகள், குளங்கள், ஏரிகள், காடுகள், பள்ளத்தாக்குகள், சமவெளிகள்,
இரண்டு: மனிதர்களால் உருவாக்கபட்ட அறிவியல் சமுதாய, நவீன உலகம்.
மேற்சொன்ன இரண்டுமே நம் சுற்றுச்சூழலினுள் வருபவை தான். அதாவது நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் சுற்றுச்சூழல் இவை.
உலகத்தில் மனிதன் ஒரு அங்கம் என்ற நிலை மாறி, மனிதனுக்காக இந்த உலகம் என்ற எண்ணம் மனிதனுக்கு தோன்றிய கணம் முதல் ஒரு பெரும் அழிவுக்கான முதல் படி எடுத்துவைக்கபட்டது. மனிதனுக்குத் தேவையானதை இயற்கையிலிருந்து பெற்றுக் கொள்ளலாம் என்ற விதி தகர்த்தெறியப்பட்டு தனக்குத் தேவையானதைத்தான் இயற்கை தயாரிக்க வேண்டும் என்ற எண்ணத்தை நடைமுறைப்படுத்தத் தொடங்கிய அடுத்த நொடி அழிவின் பாதையை மனிதன் தேர்ந்தெடுத்துக் கொண்டதாக இயற்கை புன்முறுவல் புரிந்தது. மனிதன் இயற்கையை முற்றிலும் புரிந்து கொண்டதாகவும் அதை மாற்றி தனக்கு சாதகமாகப் பயன்படுத்தப் போவதாக கர்ஜித்தான். தனக்குப் பின்னால் ஒரு சவக்குழி தோண்டப்படுவதை மறந்து போனான் (அ) பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்பதே உன்மை. இயற்கையே பெரும் சக்தி. அதை மாற்றவும், வெல்லவும் முடியாது என்று நம்ப மறுக்கிறான். விளைவு, நமக்கு மட்டும் இல்லை, நம்மைச் சுற்றி உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
இயற்கையாக பூமி எப்படி இயங்கும்?
இதற்கு இயற்கையின் அடிப்படையை புரிந்து கொள்வது மிக முக்கியம். நாம் வாழும் பூமி, நிலம், நீர், ஆகாயம், காற்று, நெருப்பு இவைகளால் ஆனது. இதில் நீரும், காற்றும் உயிர் வாழ்க்கைக்கு இன்றியமையாதது. நீரும் காற்றும் அமைந்ததால்தான் இங்கு உயிரினங்கள் தோன்றி, வாழ்கின்றன, பரிணமிக்கின்றன. உயிரினங்கள் வாழ்வதற்கு சூரிய சக்தி மிக முக்கியம். இந்த சூரிய சக்தி அனைத்து கிரகங்களுக்கும் கிடைத்தாலும் பூமிக்கு வடிகட்டி பூமியின் சூழலுக்கு தகுந்தாற்போல் தான் கிடைக்கும். பசுமைகுடில் வாயுக்களான ஓசோன், மீத்தேன், கரிமிலவாயு, நைட்ரஸ் ஆக்சைடு, நீராவி போன்றவை நம் பூமிக்கு மேற்பரப்பில் சுற்றிப் படர்ந்துள்ளன. அதில் ஓசோன் 90% உள்ளது, பிற வாயுக்கள் 10% உள்ளது. இவையாவும் ஒன்று சேர்ந்து சூரிய சக்தியிலிருந்து வரும் புற ஊதாக் கதிர்களை வடிகட்டி பூமிக்கு அனுப்பும். இதுவே பசுமைக்குடில் வாயுக்களின் செயல்பாடு. ஆனால் சமீபகாலமாக நிகழ்ந்து வரும் ஒரு செயல்பாடு வருந்தத்தக்கது. ஏனென்றால் இந்த பசுமைக் குடில் வாயுக்களை மனித இனமே உற்பத்தி செய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக குளிர் சாதனப் பெட்டியிலிருந்து வெளிப்படும் க்ளோரோ ஃபளோரோ கார்பன் போன்றவை ஓசோன் படலத்தின் மீது படர்ந்து வேதிவினை புரிந்து அதை சிறிது சிறிதாக அழிக்கத் தொடங்கி சுருக்கி விட்டன. ஆராய்ச்சியாளர்களின் கருத்துப்படி அண்டார்டிக் பகுதிக்கு நேர் மேலே இருக்கும் ஓசோன் அருகில் விழுந்த துளை, விரிந்து விரிந்து அமெரிக்க கண்டம் அளவுக்குப் பெரிதாகி விட்டது.
புவி வெப்பமயமாதல்
பூமிக்கு என்று ஒரு தன்மையுண்டு. சூரியனில் இருந்து பெறப்படும் புற ஊதாக் கதிர்களோடு சேர்ந்த சூரிய ஒளியை பசுமைக்குடில் வாயுக்கள் வடிகட்டி பூமியின் சூழலுக்குத் தகுந்தாற் போல் சூரிய ஒளியை மட்டும் கொடுக்கும். அப்படி பூமிக்கு வரும் சூரிய ஒளி இங்கு செயல்பட்டு, நம் பூமியை சூடாக்கும். பின் நம் பூமியானது அகச்சிவப்பு கதிர்களை வெளியே அனுப்பும். இந்த சூழற்சி மீண்டும் மீண்டும் நடக்கும். இந்த செயல் ஒரு குறிப்பிட்ட உஷ்ணநிலையில் நம் பூமி இருப்பதற்கு இயற்கை ஏற்படுத்திக் கொண்ட விதி. மேல் சொன்ன சுழற்சிக்கு துணை புரிகின்ற நோக்கில் பூமியில் உள்ள பனிமலையானது முற்றிலும் வெண்மைத் தன்மை காரணமாக சூரிய ஒளியை முற்றிலுமாகத் திருப்பி அனுப்பிவிடும்; உள்ளே வாங்கிக் கொள்ள அனுமதிக்காது. இது போன்ற செயல்பாடுகளால் ஒரு குறிப்பிட்ட உஷ்ணநிலையில், பூமி தன்னை தக்கவைத்துக் கொள்ளும். இப்போது என்ன நடக்கிறது?
தொழிற்புரட்சி என்ற சொல் நம் வாழ்க்கையில் ஒரு பெரும் பாதிப்பை ஏற்படுத்தவே செய்திருக்கிறது. தொழிற்புரட்சியின் காரணமாக ஏற்படுத்தப்பட்ட தொழிற்சாலைகள் மனிதர்களின் வாழ்வுக்காக, வசதிக்காக என்று அனைவரும் கருதினாலும் ஒட்டுமொத்த இனத்தையே அழிக்கும் நோக்கில் இவை சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன என்ற கூற்றை மறுக்கமுடியாது. தொழிற்சாலையிலிருந்து வரும் புகை, கழிவுநீர், வாகனங்களில் இருந்து வெளிவரும் புகை, புதைபடிவப் பொருட்களை எரிப்பதால் ஏற்படும் புகை போன்றவை வெளிவிடும் மீத்தேன், கரியமிலவாயு, நைட்ரஸ் ஆக்சைடு, க்ளோரோ ஃபளோரோ கார்பன் போன்றவை நம் பூமிக்கு மேற்பரப்பில் தங்கிவிட்டன. அதன்காரணமாக பூமி சூடானால் வெளிவிடும் அகச்சிவப்புக் கதிரை வெளியே விடாமல் தடுத்து, மேல் தங்கி உள்ள இந்த வாயுக்கள் மீண்டும் பூமிக்கே அனுப்பி விடுகின்றன. விளைவு பூமி மீண்டும் சூடாகும். இந்த சுழற்சி மீண்டும் மீண்டும் நடப்பதால் பூமி சூடாகிக் கொண்டே வருகிறது.
இது ஒருபுறம் நடக்க, மற்றொருபுறம் தொழிற்சாலையிலிருந்து உற்பத்தி ஆகும் கரும் புகை அனைத்தும், பனிப்பாறையில் படிந்து அதன் வெண்மைத் தன்மையை நீர்த்துப்போகச் செய்துவிடுகின்றன. அதனால் பூமிக்கு வரும் சூரிய ஒளியை தடுத்து வெளியே அனுப்ப முடியாமல் பனிப்பாறைகள் தன்னகத்தே உள்வாங்கிக் கொள்ள, ஏற்கனவே புவிவெப்பமயமாதலால் உருகும் பனிமலைகள் இதனால் மேலும் அதிகமாக உருகுகின்றன. இதன் விளைவால் ஏற்படப்போகும் அபாயம் என்ன தெரியுமா? கடல் நீர் மட்டம் அதிகரித்து ஒட்டுமொத்த உலகமும் நீரால் சூழப் போகிறது என்று எச்சரிக்கிறது அறிவியல்.
முதலாளித்துவ அரசியல் அறிவியல் என்ன சொல்கிறது?
"நாங்கள் உண்மையில் இந்த உலகத்தை செழித்து வளரச் செய்து கொண்டிருக்கிறோம். உலகைக் காப்பாற்ற வந்த தேவதைகள் நாங்கள். எங்களால் தான் பொருளாதாரம் இவ்வளவு செழித்து வளர்ந்து கொண்டிருக்கிறது. சுற்றுச்சூழலியாளர்கள் எங்கள் மேல் கொண்ட பொறாமையினால் ஏதோ பிதற்றுகின்றனர். உண்மையில் புவிவெப்பமயமாவதற்கும் மனிதனுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. மனிதன் தான் காரணம் என்பதை நிருபிக்கவும் இல்லை. இந்த உலகம் பல லட்சம் வருடங்களாக சூடாகிக் கொண்டுதான் வருகிறது. அதற்கு நிறைய ஆதாரங்கள் இருக்கின்றன. 15000 வருடங்களுக்கு முன்னால் எந்த தொழிற்புரட்சியும் ஏற்படவில்லை. ஆனால் அப்போது ஐரோப்பா மற்றும் வடஅமெரிக்க கண்டங்களின்மேல் பெரும் பனிப்பாளங்கள் மூடியிருந்தன. அந்த காலகட்டம் பனிப்பாறை காலம் என்று அழைக்கபட்டது. பிறகு மெதுவாக அந்த பனிப்பாறை உருகி நிலப்பரப்பாக மாறியது. அங்கே இருந்த ஜீவராசிகள் அழிந்து போயின. பின் அதிலிருந்து தப்பித்த ஜீவராசிகள் தங்களைக் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றிக் கொண்டன.
ஐந்தாயிரம் ஆண்டுகளுக்குப் பின் இந்த கண்டங்களில் உயிர்கள் பெருகின. பின் 14ஆம் நூற்றாண்டில் ஒரு குட்டி பனிப்பாறை காலம் தொடங்கியது. பின் மறுபடியும் வெப்பநிலை அதிகரித்து நிலப்பரப்பாக மாறியது. எனவே வெப்பம் அதிகரிப்பதும் வீழ்வதும் நம் கையில் இல்லை. அது இயற்கையின் கையில்தான் உள்ளது. மேலும் மீத்தேன் போன்ற வாயுக்களை மாடுகள் ஏப்பம் விடுவதன் மூலம் வெளிவிடுகிறது. ஒரு மாடு ஒரு நாளைக்கு 280 லிட்டர் மீத்தேனை வெளிவிடுகிறது. நெல் வயல் நம் இந்தியாவில் அதிகம். அதன் மூலமாகவும் டன்கணக்கில் மீத்தேன் வெளிவருகிறது. மேலும் காடுகள் எரிவதால் வெளியாகும் கார்பன்டைஆக்ஸைடு என அனைத்துக்கும் காரணம் இயற்கை தான்; மனிதனில்லை. எனவே மனிதன் தான் காரணம் என்று சொல்லுவது அபத்தம்" என்று முதலளித்துவ அரசியல் அறிவியல் சொல்கிறது.
இந்த உலகம் எதை நோக்கிச் செல்கிறது?
நாம் வாழும் பூமிக்கு பெரும் ஆபத்து காத்துக் கொண்டிருக்கிறது. அது, சூரியனால் அழிவு, புவிசுற்றுப்பாதையிலிருந்து வட்ட விலகல், மனிதனால் ஏற்படும் புவிவெப்பமயமாதலின் விளைவு, விண் கல் பூமியைத் தாக்குவது என காரணங்கள் அடுக்கினாலும் மனிதனால் அழிவு ஏற்படக்கூடாது என்பதுதான் நம் அனைவரது கவலையுமே.
அதைத்தான் நாம் செயல்படுத்த ஆரம்பித்துவிட்டோமே! இப்போதே நம்முடைய கடலோரங்கள் மாறிவருவதாக செயற்கைக்கோள்கள் காட்டுகின்றன. சென்னையில் ஆலங்கட்டி மழை பெய்கிறது. இயற்கையில் வழக்கத்துக்கு மாறாக நடக்கும் ஒன்று, மழை பெய்ய வேண்டிய இடத்தில் பொய்த்து விடுகிறது, வறண்ட இடத்தில் சக்கைப்போடு போடுகிறது. நம் சொந்த நாட்டிலேயே வண்ணத்துப் பூச்சிகளையும், குருவிகளையும், தேனீக்களையும் காணமுடிவதில்லை. மேலும், கடந்த ஒரு நூற்றாண்டில் வெப்பம் ஒரு டிகிரி வரை அதிகரித்துள்ளது. இவை மட்டுமல்ல இன்னும் எத்தனையோ விஷயங்கள் இயற்கை நமக்கு எதிராக திரும்பிக் கொண்டு இருக்கிறது என்பதற்கு சாட்சி.
சுற்றுச்சூழல் பாதிப்பைத் தடுக்க என்ன செய்யலாம்?
தொழிற்சாலைகளை சீர்படுத்துவது, அதன் கழிவுநீர்களை சரியான முறையில் வெளியேற்றுவது, வாகனங்களுக்கு இயற்கையான மாற்று எரிபொருளை உருவாக்குவது, புதைபடிவ எரிபொருட்களை எரித்து அதன் மூலம் இயங்கும் தொழிற்சாலைகளை கட்டுபடுத்துவது, அணுமின் நிலையம், அணுஆயுதம் போன்றவற்றை குறைத்தல் அல்லது தடுத்தல், இவையாவையும் வெகுவிரைவில் செயல்படுத்த வேண்டும் என்றாலும் பொதுமக்களாகிய நாம் இதைச் செய்ய முடியாது. மேல் சொன்ன யாவும் அரசாங்கம் செய்ய வேண்டியவை. ஆனால் பொது மக்களாகிய நாம் அதை விட அதிகமாக செய்ய வேண்டிய கடமை உள்ளது. ப்ளாஸ்டிக் பொருட்களை கண்டிப்பாக உபயோகிப்பதை கைவிட வேண்டும். இந்த ப்ளாஸ்டிக் மக்க, 10000 வருடத்திற்கு மேலாக ஆகும். தலைமுறை தலைமுறையாக கேடு விளைவிக்கும் பொருட்களில் ஒன்று ப்ளாஸ்டிக். வீடுதோறும் செடிகள் வளர்ப்போம். தொட்டிகளில் சின்ன சின்ன செடிகள் இயற்கை முறையில் வளர்ப்பதன் மூலம் நமக்கு அன்றாடத் தேவையான காய்கறிகளை உற்பத்தி செய்ய முடியும். எல்லாவற்றிலும் தன்னிறைவு பெரும் தேசம் தான் வையத் தலைமை கொள்ளும்.
இயற்கையை முழுமையாக பயன்படுத்தவேண்டும். இயற்கையிலிருந்து பெறப்படும் பொருட்களை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். உதாரணம். பெட்ரோல், டீசல் போன்றவை. தேவையான வரை சுற்றுச்சூழலை பாதிக்காத பொருட்களை வாங்குவதும், அதை வாங்கி அதன் வளர்ச்சியை ஊக்குவிப்பதும் நம் கையில் தான் உள்ளது. சமீபத்தில் தைவானைச் சேர்ந்த ஒரு நிறுவனம் கோதுமையினால் ஆன சாப்பிடும் தட்டை கண்டுபிடித்தது. அதில் உணவு உட்கொண்ட பின் அந்தத் தட்டையும் சேர்த்தே சாப்பிட்டு விடலாம். இது கேடு விளைவிக்கும் ப்ளாஸ்டிக் தட்டிற்க்கு சிறந்த மாற்று. சிறு வயது முதல் சுற்றுச்சூழல் தொடர்பான விழிப்புணர்வை குழந்தைகளிடம் ஊட்ட வேண்டியது கட்டாயம். அவர்கள்தான் நாளைய உலகை வழிநடத்தப் போகிறவர்கள். நம் வீட்டை நாம் சுத்தமாக வைத்திருப்பது போலவே நம் தெருக்களையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். ஏனென்றால் சேற்றில் உள்ள கோடிக்கணக்கான பாக்டீரியாக்கள் கூட மீத்தேனை உற்பத்தி செய்யும். இயற்கையின் சிறுசிறு மாற்றங்கள் தான் பெரும் அழிவுக்கோ அல்லது பெரும் துவக்கத்திற்கோ வழிவகுக்கும். அதுபோல நாம் நம்மிடையே செய்யும் சிறு சிறு மாற்றம் கூட நம் தலைமுறையை செழித்து வளரச் செய்யும்.
- விவரங்கள்
- வான்முகில்
- பிரிவு: சுற்றுச்சூழல்
வட அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையத்தில் தலைமைப் பொறுப்பில் இருக்கும் ஜேம்ஸ் ஹேன்ஸன் பருவநிலை மாற்றம், புவி வெப்பமடைதல், அவற்றின் தாக்கங்கள் குறித்து தொடர்ந்து ஆய்வு செய்து வருபவர். புவி வெப்பமடைவதால் ஏற்படும் கடும் விளைவுகள் குறித்து தனது ஆய்வுகளின் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். அவரது ஆய்வின்படி, மிகையான- மிகக் கடுமையான- வெப்பநிலை கொண்ட கோடைப் பருவங்கள் தற் போது மிகவும் அதிகரித்துள்ளன.
பருவநிலை மாற்றங்களால் 1951 முதல் 1980 ஆம் ஆண்டுவரை ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக உலகின் மொத்த நிலப்பரப்பில் 0.1 முதல் 2 விழுக்காடே பாதிப்பிற்குள்ளாயின. ஆனால் தற்போது 10 விழுக்காடு நிலம் பாதிப்பிற்குள்ளா கிறது. கடந்த 50 ஆண்டுகளில் என்றுமில்லாத அளவிற்கு இன்று வடஅமெரிக்காவில் மிகக் கடுமையான வறட்சி நிலை ஏற்பட்டுள்ளது. உணவு உற்பத்தியின் அளவு குறைந்துள்ளது. இத னால் உணவு தானியங்களின் விலை 17 விழுக் காடு அதிகரித்துள்ளது. மேற்கு ஆப்பிரிக்காவின் சாஹேல் பகுதியில் கடும் பஞ்சம் தலைவிரித் தாடுகிறது. உலகின் பல பகுதிகளிலும் வறட்சியால் உணவு உற்பத்தி குறைந்துள்ளது.
பெட்ரோல், டீசல் போன்ற புதைபடிவ எரி பொருளைப் பயன்படுத்தும் மகிழுந்து, துள்ளுந்து போன்ற தானியங்கி வாகனங்களிலிருந்து வெளிப்படும் கரியமிலவாயு புவி வெப்பமடை தலுக்கு ஒரு முக்கியக் காரணியாகும். புவி வெப்ப மடைவதைக் தடுக்க துள்ளுந்து, மகிழுந்துகளின் உற்பத்தியைக் குறைக்க வேண்டும். மிதிவண்டி யின் பயன்பாட்டினை ஊக்குவிக்க வேண்டும். பொதுப் போக்குவரத்து வசதிகளை அதிகப்படுத்த வேண்டும். ஆனால் உலகின் பெரும்பான்மை நாடுகள் தனியாளுக்கான தானியங்கி வாகனங் களின் உற்பத்தியை அதிகரித் துக் கொண்டே இருக்கின்றன.
மேற்குலக நாடுகளின் மிகை நுகர்வால் புவி வெப்பமடைந் துள்ளது. இந்நாடுகள் புவி வெப்பமடைதலைத் தடுக்க பெட்ரோல், டீசலுக்கு மாற்றாக “உயிரி எரிபொருள்” பயன்பாட்டைத் தீர் வாக முன்வைக்கின்றன. கரும்பு, சோயா, சோளம் போன்ற உண வுப் பயிர்களிலிருந்து உயிரி எரிபொருள் உற்பத்தி செய்யப் படுகிறது. இதற்காக வறிய நாடுகளின் வேளாண்மை உயிரி எரிபொருள் பயிர்களுக்குத் திரும்பி விடப்படுகின்றது. மேற் குலக செல்வந்தர்கள் மகிழுந்துகளில் செல்ல மூன்றாம் உலக நாடுகளின் விளைநிலங்களும், உணவுப்பயிர்களும் கொள்ளை போகின்றன.
பணக்கார நாடுகளின் உயிரி எரிபொருள் தேவைக்காக உலகெங்கிலும் விளைநிலங்களின் அபகரிப்பு அதிகரித்து வருகிறது. ஐரோப்பிய கூட்டுக் குழுமங்கள் உயிரி எரிபொருள் உற்பத்திக்காக 125 இலட்சம் ஏக்கர் பரப்புள்ள விவசாய நிலத்தை மூன்றாம் உலக நாடு களிடமிருந்து அபகரித்துள் ளன. இக்குழுமங்கள் கைப் பற்றியுள்ள நிலத்தின் அளவு டென்மார்க் நாட்டின் பரப் பிற்கு சமமானதாகும். காடு களும், மேய்ச்சல் நிலங்களும் “பசுமை எரிபொருள்” உற்பத் திக்காக அழிக்கப்பட்டுள்ளன. உள்ளூர் சந்தைக்காக உற்பத்தி செய்யும் சிறு விவசாயிகள் நிலத் திலிருந்து துரத்தியடிக்கப் பட் டுள்ளனர்.
வட அமெரிக்காவில் மக்காச் சோள உற்பத்தியில் 40 விழுக் காடு உயிரி எரிபொருள் உற்பத் திக்குப் பயன்படுத்தப் பட்டுள் ளது. இந்த ஆண்டு உற்பத்திக் குறைந்துள்ளதால் இன்னும் அதிக விழுக்காடு மக்காச் சோளம் உயிரி எரிபொருள் உற்பத்திக்குப் பயன்படுத்தப்படும். ஐரோப்பிய நாடுகளின், சீனா வின் தேவைக்காக இந்த ஐந்து நாடுகளிலும் மரபின மாற்ற சோயா என்ற ஒற்றைப்பயிர் பயிரிடப்படுகிறது. உள்நாட்டுத் தேவைக்காக உற்பத்தி செய்யும் சிறு விவசாயிகள் நிலத்தை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
மரபீனி மாற்ற சோயா பயிரிடப்படுவதை எதிர்த்த பராகு வாய் அதிபர் பெர்டினாண்ட் டோ லூஹோவின் பதவி பறி போனது. இடதுசாரி சிந்தனை யுள்ள, மக்களால் தேர்ந்தெடுக் கப்பட்ட இவர் பன்னாட்டுக் குழுமங்களின், வல்லரசுகளின் சதியால் பதவி இழந்தார்.
உலகமயம், தாராளமயம் என்ற பெயரில் மூன்றாம் உலக நாடுகளின் அரசியல், பொருளா தார இறையாண்மை மறுக்கப் படுகிறது; அழிக்கப்படுகிறது.
உயிரி எரிபொருள் உற்பத் திக்காக காடுகள், மேச்சல் நிலங்கள் அழிக்கப்படுவதையும், நைட்ரஜன் உரங்களின் பயன் பாட்டையும் கணக்கில் கொண் டால் பெட்ரோல் டீசல் போன்ற புதைபடிவ எரிபொரு ளைக் காட்டிலும், உயிரி எரி பொருள் உற்பத்தியால் வெளிப் படும் “பசுமை இல்ல வாயுக் களின்”அளவு அதிகம் என்பதை ஆய்வுகள் வெளிப்படுத்தியுள் ளன. உயிரி எரிபொருள் உற் பத்தி புவியை மேலும் வெப்ப மடையச் செய்வதோடு உலகில் பட்டினியையும் பஞ்சத்தையும் அதிகரிக்கவே வழி செய்கிறது.
கடந்த முப்பதாண்டுகளில் உலகெங்கிலும் பணக்காரர் களிடம் அதிகப் பணம் குவிந் துள்ளது. ஏழை, பணக்காரர் களிடையே ஏற்றத் தாழ்வு அதிகரித்துள்ளது.பெரிதும் பணக்காரர்களின் தேவைகளுக் காகவே சந்தை உற்பத்தி நடக் கிறது. சந்தையில் எதை உற்பத்தி செய்ய வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் ஓட்டுரிமை பெரும்பான்மை மக்களிடம் இல்லை. பெரும்பான்மை மக் களிடம் வாங்கும்திறன் இல்லை. புதிய தாராளமயமும், உலக மயமும் பொருளாதாரத் தைத் தீர்மானிக்கும் உரிமையை பெரும்பான்மை மக்களிடமி ருந்து முற்றிலுமாகப் பறித்து விட்டது. பணக்காரர்களின் மிகை நுகர்வுக்கும் ஏழை மக்களின் உயிர் வாழ்தலுக்கு மிடையேயான போராட்டமாக வாழ்க்கை மாறிவிட்டது.
மூன்றாம் உலக நாடுகள் தங்களது அரசியல், பொருளாதார இறையாண்மையை இழந்துள்ளன. புவி வெப்ப மாதலும், சூழல் சீர்கேடும் தேசங்களின் பொருளியல் இறை யாண்மைப்பறிப்போடு இணைந்தே நிகழ்கிறது. உல கெங்கிலும் உலகமயத் தாராளமயக் கொள்கைகளுக்கு எதிரான போராட்டங்கள் வலுத்து வருகின்றன. ஆப்பிரிக்க, அரபு நாடுகளிலும், இலத்தீன் அமெ ரிக்க நாடுகளிலும் ஏற்பட்டுள்ள மக்கள் எழுச்சி என்பது அடிப்படையில் ஒரு அரசியல் பொருளாதார இறையாண்மை மீட்புப் போராட்டமே ஆகும்.
ஆதாரங்கள்:
1.Hunger Games by Georgo Monbiot Published in “ Guardian” 4th August 2012.
2. South America: Soy’s Great Homeland, Upside Down world, 6.09.2012.
(தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் நவம்பர் 2012 இதழில் வெளியானது)
- விவரங்கள்
- பரிமளா
- பிரிவு: சுற்றுச்சூழல்
கடந்த ஜுலை மாதம் 23-28, 2012 வரையான ஒரு வார காலம், ஆந்திர கடலோர மாவட்டங்களான விசாகப்பட்டினம், ஸ்ரீகாகுளத்தைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு பத்திரிக்கையாளர் செந்தளிர், புகைப்பட பத்திரிக்கையாளர் ஸ்டீபன் ஆகியோருடன் சென்றிருந்தேன். ஸ்ரீகாகுளம் மாவட்டம், கொவ்வாடா என்ற கிராமத்தில் அமைய உள்ள அணு உலையை எதிர்த்து நடக்கும் மக்கள் போராட்டம் பற்றியும், லக்ஷ்மிபேட்டா என்ற ஊரில் உயர் சாதி இந்துக்களால் ஐந்து தலித் மக்கள் கொல்லப்பட்டது பற்றியும் பதிவு செய்யும் நோக்கத்தோடு இந்தப் பயணம் திட்டமிடப்பட்டது. இறுதியில், அனல், அணு மின் நிலையங்களை எதிர்த்து மக்கள் நடத்தும் போராட்டங்களைப் பற்றி தெரிந்து கொள்ளும் விதமாக சில காரணங்களால் மாற்றப்பட்டது.
குறிப்பாக இந்தப் பயணத்தில் நான் கலந்து கொள்ள இரண்டு காரணம் இருந்தது. கடந்த ஓராண்டாக அரசியல் செயல்பாடு காரணமாக ஹைதராபாத்தில் உள்ள அரசியல் செயற்பாட்டாளர்களை பல முறை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போதெல்லாம் நான் அங்கு கண்ட அந்த மக்களின் அரசியல் எழுச்சியும், போராட்ட குணமும் அம்மக்களின் மீதும், அவர்களின் போராட்டங்களின் மீது இயல்பாகவே ஓர் ஈர்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இரண்டு, கடந்த ஆறு மாதத்திற்கும் மேலாக கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கு கொண்டதின் காரணமாக ஆந்திராவில் அணு உலையை எதிர்த்து மக்கள் நடத்தும் போராட்டத்தைப் பற்றி அறியும் ஆர்வம்.
ஜூலை 23, 2012 அன்று மாலை சென்னையிலிருந்து புறப்பட்டு மறுநாள் காலை 6.30 மணியளவில் விசாகப்பட்டினம் சென்று சேர்ந்தேன். விசாகப்பட்டினத்திற்கு இதுதான் என்னுடைய முதல் பயணம். தொடருந்து நிலையத்தை விட்டு வெளியில் வந்தபோது, லேசான தூறலுடனும் மிதமான குளிருடனும் நகரம் அழகாகத் தோன்றியது. பிறகு, அங்கிருந்து ஒரு ஆட்டோ பிடித்துக்கொண்டு அன்னபூர்ணா என்ற தோழர் வீட்டுக்கு புறப்பட்டுச் சென்றேன். அன்று மாலை, செந்தளிர், ஸ்டீபன் உடன் திரு.ரத்னம் அவர்களை சந்திக்க மூவரும் கிளம்பினோம். திரு.ரத்னம், சூழலியல் மாத இதழ் ஒன்றை நடத்திக்கொண்டு இருப்பவர். களப்பணி செய்து சூழலியல், இயற்கை வளங்கள் பாதுகாப்பு, மக்கள் போராட்டம், அரசின் ஒடுக்குமுறை பற்றி மக்களிடம் தன் இதழ் வாயிலாக விழிப்புணர்வை ஏற்படுத்திக் கொண்டிருப்பவர். எங்களின் ஒரு வார பயணம் வெற்றிகரமாகவும், பயனுள்ளதாகவும் அமைய உதவியவர்களில் ரத்னம் முக்கியமானவர்.
ஜுலை 24, 2012 அன்று மாலை இரண்டு முக்கிய அரசியல், சமூக செயற்பாட்டாளர்களை சந்திக்க ரத்னம் ஏற்பாடு செய்திருந்தார். முதலில் நாங்கள் சந்தித்தது, முன்னாள் இந்திய அரசுப் பணி, திரு. இ.எ.எஸ்.ஷர்மா அவர்களை. இவர் தொடர்ச்சியாக அணு ஆற்றலின் ஆபத்துகள் பற்றி பத்திரிக்கைகளிலும், வலை தளத்திலும் எழுதி வருபவர். அணு உலை எதிர்ப்புப் போராட்டங்களை ஆதரிப்பவர். அவருடன் பேசும்போது, தரமில்லாத மின்பகிர்மான கட்டமைப்பினால் 35-37% மின்சாரம் வீணாவதாகவும், மின்பகிர்மான கட்டமைப்பை தரமானதாக மாற்றுவதன் மூலம் 60,000 மெகா வாட் மின்சாரத்தை சேமிக்க முடியும் என்று கூறினார். மேலும், சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத மாற்று எரிசக்தி சம்பந்தப்பட்ட தொழில்நுட்பங்கள், இந்தியா போன்ற மக்கள் தொகை அதிகம் உள்ள நாட்டிற்கு சாத்தியமாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்ற தன்னுடைய கருத்தை அழுத்தமாகப் பதிவு செய்தார்.
மேலும் அவர், இந்திய அரசு செய்து கொண்டுள்ள அணு உலை சார்ந்த வியாபார ஒப்பந்தங்கள் வழியாக இரண்டாம் அலைக்கற்றைக்கு இணையான மற்றுமொரு ஊழல் நடந்திருக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறினார். கூடங்குளம் மக்கள் தங்கள் அறவழியிலான போராட்டங்களையே தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று மக்கள் போராட்டங்கள் செல்ல வேண்டிய திசை பற்றிய தன்னுடைய கருத்தையும் பகிர்ந்து கொண்டார். இவரின் பதிவுகளை www.eassharma.in என்ற வலை தளத்தில் காணலாம். ஷர்மா அவர்களிடம் இருந்து விடைபெற்று, திரு. கிருஷ்ணா, மனித உரிமை மன்றம் (HRF) அவர்களை சந்திக்கப் புறப்பட்டோம்.
திரு.கிருஷ்ணாவை ஏற்கனவே ஈழத்தில் நடந்த போர்க்குற்றம் பற்றி பேச ஹைதராபாத் சென்றிருந்தபோது சந்தித்த அறிமுகம் இருந்ததால், சிறிது நேரம் ஈழத்து மக்களின் இன்றைய நிலை பற்றி பேசினோம். பிறகு ஆந்திர மக்கள் போராட்டங்கள் பற்றி எங்கள் உரையாடல் நகர்ந்தது. கடற்கரையை ஒட்டிய தொழிற்சாலை பகுதி (Industrial Coastal Corridor) அமைக்க 2005 இல் போடப்பட்ட ஆந்திர அரசின் அரசாணை 34 மூலம், ஆந்திராவின் தெற்கில் நெல்லூரிலிருந்து, வடக்கில் ஸ்ரீகாகுளம் மாவட்டங்கள் வரையான கடற்கரை ஒட்டிய 972 கி.மீ பகுதிகளில் மட்டும் சுமார் 107 அனல் மின் நிலையங்கள் கொண்டு வர மாநில அரசு திட்டம் தீட்டியுள்ளதாகத் தெரிவித்தார். குறிப்பாக நெல்லூர் மாவட்டத்தில் உள்ள இரண்டு மண்டல்களில்(தாலுக்காவை விட சிறிய பரப்பளவை கொண்டவை) மட்டும் 28 அனல் மின் நிலையங்கள் கொண்டு வர உள்ளதாகவும், அதற்காக ஏராளமான விளைநிலங்கள் கையகப்படுத்தும் திட்டம் உள்ளதாகவும், அதனை எதிர்த்து உள்ளூர் மக்களால் வலுவான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.
பெரும் எண்ணிக்கையிலான அனல் மின் நிலையங்கள் சிறிய நிலப்பரப்பில் கொண்டு வரப்பட உள்ளதை கேட்டபோது எனக்கு மிகுந்த அதிர்ச்சியாக இருந்தது. ஒரு லட்சம் மெகா வாட் மின் உற்பத்தி என்ற இலக்குடன், ஆந்திராவின் கடற்கரையோர பகுதிகளில் பெரும் முதலாளிகளுக்கு அனல் மின் நிலையங்கள் அமைக்க ஆந்திர அரசு அனுமதி அளிக்கும் திட்டத்துடன் இருப்பதாகத் தெரிவித்தார். ஆந்திர கடற்கரையோரப் பகுதிகள் தான் ஆந்திராவின் நெற்களஞ்சியங்களாக அறியப்படுகின்றன. இந்தப் பகுதி விவசாயிகள், மீனவர்களை அழித்து விடும் திட்டமாகவே அனல் மின் நிலையத் திட்டங்கள் பார்க்கப்படுகின்றன. மேலும், அடிப்படைத் தேவையான மின்சாரம், ஒரு சந்தைப்பொருளாக மாறுவதையும், அதை தனியார் மயப்படுத்துவதன் மூலம், பெரு முதலாளிகள் தங்கள் லாப வேட்டைக்குத் தயாராவதையும், ஆயிரக்கணக்கான விவசாயிகளின்/மீனவர்களின் வாழ்வாதாரமும், ஆந்திர மாநிலத்தின் அடிப்படை உணவு பாதுகாப்பும் கேள்விகுறியாகப் போவதையும் உணர முடிந்தது. அன்று இரவு கிருஷ்ணா அவர்களின் வீட்டிலேயே தங்கினோம்.
பரவாடா அனல் மின்நிலையத்தின் பாதிப்பு:
ஜூலை 25, 2012 காலை விசாகப்பட்டினத்திலிருந்து சுமார் 40 கி. மீ தொலைவில் அமைந்துள்ள என்.டி.பி.சி.யின் அனல் மின் நிலையத்தை நோக்கி மகிழுந்தில் பயணமானோம். விசாகப்பட்டினத்தைக் கடந்து அதன் புறநகர் பகுதி வழியாக செல்லும்போது பரவலாக தொழிற்சாலைகளைப் பார்க்க முடிந்தது. இரும்புத்தாது மற்றும் உரத்தொழிற்சாலைகளால் அப்பகுதியின் சுற்றுசூழல் மிகுந்த பாதிப்புக்குள்ளாகியிருப்பதைக் காண முடிந்தது. அந்தப்பகுதியில் இருந்த உரத்தொழிற்சாலையை கடந்தபோது ஒரு வித மணத்தை நுகர நேர்ந்தது. அது அமிலத்தன்மை வாய்ந்தது என்று ரத்னம் கூறினார்.
பாதிக்கப்பட்ட சிறுவன் - பரவாடா அனல் மின் நிலையம்
சுமார் ஒரு மணி நேரப் பயணத்திற்குப் பிறகு என்.டி.பி.சி.யின் அனல் மின்நிலையம் அருகில் உள்ள சுயம்புபுரம் என்ற கிராமத்தை அடைந்தோம். சுமார் 140 வீடுகளை கொண்ட சிறிய கிராமம். இக்கிராம மக்களுக்கு விவசாயம் முக்கிய தொழிலாகவும், சிலர் அனல் மின்நிலையத்திற்கு கூலி வேலைக்கும் செல்கின்றனர். இங்குள்ள நிலத்தடி நீர், அனல் மின்நிலையம் வருவதற்கு முன் நல்ல குடிநீராக பயன்பட்டதாகவும், பிறகு சிறிது சிறிதாக மாசுபட்டு, இப்போது குடிநீராகப் பயன்படுத்தமுடியாத நிலையில் உள்ளதாகவும், இக்கிராமப் பெண்கள் தெரிவித்தனர். அனல் மின்னிலையத்திற்குள்ளே சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கிடைப்பதாகவும், தங்களுக்கான குடிநீரை அங்கிருந்து எடுத்து வருவதாகவும் கூறினார். 40 வயதுக்கு கீழ் உள்ள 12 பெண்களுக்கு அதிகப்படியான உதிரப்போக்கு காரணமாக கருப்பை நீக்கப்பட்டதாகவும், நிறைய பெண்களுக்கு கருக்கலைதல் நடப்பதாகவும் கிராமப் பெண்களோடு உரையாடும்போது தெரிவித்தனர்.
இங்கிருந்து அருகில் உள்ள பிட்டவானிபாலம் என்ற மற்றொரு சிறிய கிராமத்திற்கு சென்றோம். இங்கு சுமார் 200 வீடுகள் உள்ளன. இங்கும் குடிநீர் பிரச்சினை உள்ளதாக மக்கள் கூறினார். இங்கு சிலருக்கு சுவாசக்கோளாறு, நுரையீரல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் இருப்பதாக மக்கள் தெரிவித்தனர். மூளைப் புற்று ஏற்பட்டு நடுத்தர வயதுக்காரர் ஒருவர் இறந்துள்ளார். இந்த ஊருக்கு மிக அருகில், அனல் மின்நிலையத்தில் எரிக்கப்படும் நிலக்கரியிலிருந்து உண்டாகும் கழிவான சாம்பல் கொட்டப்படும் மிகப்பெரிய குளம்(Ash Pond) உள்ளது. அந்த குளத்திற்கு வெளியேயும் சாம்பல் கொட்டப்பட்டிருந்ததைக் காண முடிந்தது. இந்த ஊரில் ஏற்படும் சுவாசக்கோளாறு, நுரையீரல், மூளைப் புற்று போன்ற நோய்களுக்கு இந்த சாம்பல் கழிவுதான் காரணம் என்று வாய் மொழியாக மருத்துவர்கள் கூறியதாக மக்கள் கூறுகின்றனர். ஆனால் இந்த காரணங்களை மருத்துவர்கள் தங்கள் மருத்துவ அறிக்கையில் கொடுப்பதில்லை என்று ரத்னம் கூறினார்.
நாங்கள் அங்கு சென்றிருந்த அன்று கூட, நடுத்தர வயதைச் சேர்ந்த ஒருவர் சுவாசக்கோளாறு காரணமாக இறந்துவிட்டதாக மக்கள் கூறினார். நரம்புக் கோளாறு காரணமாக நடக்க முடியாமல் போன ஒரு சிறுவன், ஒரு நடுத்தர வயதுக்காரர், ஒரு பெரியவரைப் பார்த்தோம். ஒரு முதியவருக்கு நரம்புப் பிரச்சினை காரணமாக, கால்களில் ஆங்காங்கு பெரிய தடிப்புகள் இருந்தன. இங்கும் பரவலாக பெண்களுக்கு கருக்கலைதல் நடப்பதாக பெண்கள் கூறினார். ஒரு பெண்ணுக்கு கால்களில் தோல் பிரச்சினை காணப்பட்டது. 20-30 பேர் கண்பார்வை இழந்துள்ளதாக மக்கள் தெரிவித்தனர்.
நரம்புகள் பாதிக்கப்பட்ட முதியவர்
1000 பேருக்கு குறைவான மக்கள் தொகை கொண்ட இந்த கிராமங்களில் இத்தனை உடல் நலக்கோளாறு என்பது சற்று அதிகப்படியானதாகத் தோன்றுகிறது. மேலும் மருத்துவர்கள் அனல் மின் நிலையத்தின் கழிவுகளால் தான் நோய் உண்டாகியிருப்பதாக வாய் மொழியாக மட்டும் மக்களிடம் கூறியிருப்பதை வைத்தே இந்த அனல் மின் நிலையத்தின் கழிவுகளின் பாதிப்பை நாம் உணர முடிகிறது. தொழிற்சாலைகளால் அப்பகுதிகள் வளர்ச்சி அடைவதாக நம்முடைய அரசாங்கங்கள் தொடர்ந்து கூப்பாடு போடுகின்றன. என்.டி.பி.சி. இப்பகுதியில் செய்துள்ள வளர்ச்சிப் பணிகளை பார்த்தால் இதன் உண்மை முகம் தெரியும். இந்த கிராமங்களுக்கு சுடுகாடு கட்டிகொடுக்கப்பட்டுள்ளது. (அவசியம் என்று கருதியிருப்பார்கள் போல!) பள்ளிக் கட்டிடம், பென்ச், நாற்காலி போன்றவை கொடுக்கப்பட்டுள்ளது. அப்பகுதி மக்களை கூலிக்கு பணியில் அமர்த்தியுள்ளனர். இந்த கிராமங்களில் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு, மக்கள் குடிநீருக்காக அவதிப்படுகின்றனர். அனல் மின்நிலையத்தில் வேலை செய்பவர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் என்.டி.பி. சி நிர்வாகம், அதே நீரை குழாய் வழியாக இக்கிராமங்களுக்கு வழங்க ஏன் ஏற்பாடு செய்யவில்லை?
பரவாடா மின் நிலையத்தை ஒட்டி உள்ள கிராமத்தின் தண்ணீர் விநியோகம்
இந்த கிராமங்களின் அடிப்படை கட்டமைப்பான சாலை, கழிவுநீர் வெளியேற்றும் வசதி, குடிநீர் வசதி, கழிப்பிட வசதி போன்ற எதுவுமே முன்னேற்றம் காணவில்லை. இக்கிராமங்களை விட்டு திரும்பும் வழியில் உப்பளங்களைப் பார்த்தோம். இங்கு உற்பத்தி செய்யப்படும் உப்பிலும் அனல் மின்நிலையத்தின் கழிவுகளால் பாதிப்பு ஏற்படுவதாக ரத்னம் கூறினார். இந்த கிராம மக்களிடம் இருந்து விடைபெற்று, மீண்டும் விசாகப்பட்டினம் நோக்கி பயணமானோம்.
புடுமுறு பயணம்:
மறுநாள் ஜூலை 26, 2012 , ஸ்ரீகாகுளம் மாவட்டம், கொவ்வாடா என்ற மீனவ கிராமப் பகுதியில் அமைய உள்ள அணு உலையை எதிர்த்து நடக்கும் மக்கள் போராட்டத்தைப் பற்றி அந்தப் பகுதியில் உள்ள கிராம மக்களிடமும், போராட்டக் குழுவிடமும் கேட்டு அறிவதாகத் திட்டம். விசாகப்பட்டினத்திலிருந்து கொவ்வாடா சுமார் 70 கி.மீ. தொலைவு இருக்கும். அதனால், கொவ்வாடாவிலிருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ள புடுமுறு என்ற ஊரில் ரத்னம் அவர்களின் அமைப்பான மக்கள் போராட்டங்களின் தேசிய கூட்டமைப்பைச் (NAPM) சேர்ந்த திரு. ராமு அவர்களின் வீட்டில் இன்று இரவு சென்று தங்குவதாக முடிவு செய்யப்பட்டது. ரத்னத்திடம் விடைபெற்றுக்கொண்டு மாலை விசாகப்பட்டினத்திலிருந்து புடுமுறுவுக்குப் புறப்பட்டோம். சுமார் 1.30 நேரப் பயணம். அன்று இரவு திரு.ராமுவின் நண்பர் வீட்டில் தங்கினோம். மறுநாள் நிகழ்ச்சி நிரலையும் பேசி முடிவு செய்து கொண்டோம்.
ஜூலை 26, 2012 காலை கொவ்வாடா புறப்படத் தயாரானோம். ராமு கொவ்வாடா பயணத்திற்காக ஒரு ஆட்டோவையும், திரு. கோபால் என்பவரை எங்களுக்கு வழிகாட்டியாகவும் ஏற்பாடு செய்திருந்தார். கொவ்வாடா செல்லும் வழியெல்லாம் முந்திரித் தோட்டங்களும், பனைமரங்களும், சிறுதானிய பயிர்களுமாக பச்சைப் பசேல் என்று இருந்தது. இந்தியாவின் கிராமங்களில் போக்குவரத்து வாகனம் பங்கு தானிகள்தான்(share auto) போலும். எங்கு பார்த்தாலும் தானிகளில், தானியின் மேல் கூரைகளில் என்று மக்கள் பெரும்பாலும் பங்கு தானியிலேயே பயணம் செய்வதைப் பார்க்க முடிந்தது. ஒரு அரசு பேருந்தையும் எங்களால் பார்க்க முடியவில்லை. வழியில் இருந்த கிராமங்களில் அடிப்படை கட்டமைப்பான நல்ல சாலையோ, கழிவு நீர் வெளியேற்றும் வசதியோ காண முடியவில்லை. ஆங்கில வழி தனியார் பள்ளி பேருந்துகளை மட்டும் காண முடிந்தது. குறைந்தது 30-40 நிமிட பயணத்திற்குப் பிறகு பெரிய கொவ்வாடா என்ற மீனவ கிராமத்தைச் சென்றடைந்தோம்.
இடிந்தகரை கிராமத்தையும், மக்களையும் பார்த்து விட்டுச் சென்ற எனக்கு, கொவ்வாடா மக்களின் வாழ்க்கை மிகவும் பின் தங்கிய நிலையில் இருப்பதாகப் பட்டது. இங்கு போரட்டக் குழுவைச் சேர்ந்த திரு.அல்லிபில்லி ராமுடு முன்னாள் கிராமத்தலைவர் (Ex. MPTC, Mandal Parishad Territorial Constituency Member) அவர்களைச் சந்தித்தோம். கொவ்வாடா போராட்டம் பற்றிய அவருடைய கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். ஒரே பஞ்சாயத்தைச் சேர்ந்த பெரிய கொவ்வாடா, சின்ன கொவ்வாடா, ராமச்சந்திரபுரம் என்ற மூன்று கிராமங்களை உள்ளிட்ட 2000 ஏக்கர் நிலம் அணு உலை திட்டத்திற்காக கையகப்படுத்தப்பட உள்ளதாக கூறினார். இந்த மூன்று கிராமங்களில் சுமார் 1250 வீடுகள் உள்ளன.
2011 கணக்குப்படி சுமார் 5000 மக்கள் வசிக்கின்றனர். இவர்களின் நிலங்கள் எதற்கும் பட்டா கிடையாது. 1992லிருந்து போராட்டம் நடப்பதாக கூறுகின்றனர். 2007 தேர்தல் பிரசாரத்திற்காக ரணஸ்தளம் வந்த ஒய். எஸ். ராஜசேகர ரெட்டி புலிவேந்தல் என்ற வேறொரு பகுதியை அணு உலைக்காக தேர்ந்தெடுக்கப் போவதாக வாக்குறுதி கொடுத்துள்ளார். ஆனால் 2009 இல் ரோசையா தலைமையிலான அரசு மக்களிடம் எந்த முன்னறிவிப்பும் கொடுக்காமல் கொவ்வாடா பகுதியில் அணு உலை அமைய இருப்பதாக செய்தித்தாள்களில் அறிவிப்பு செய்துள்ளது. மக்களிடம் எந்த கருத்துக்கணிப்பும் செய்யாமலேயே இந்த பகுதியில் நிலங்கள் அளவீடு செய்யப்பட்டுள்ளன. மக்கள் அதிகாரிகளை அணுகியபோது, குரவிபேட்டா என்ற மற்றொரு கடலோர பகுதிக்கு இவர்களை மீள்குடி அமர்த்துவதாக கூறியுள்ளனர்.
ஏன் அணு உலையை எதிர்க்கிறீர்கள் என்று கேட்டதற்கு, ஒன்று வேறொரு கடலோர பகுதிக்கு மீள்குடி அமர்த்தப்பட்டால் அங்கு மீன்வளம் நிறைந்த பகுதிகள் பற்றி தெரியாது, அதனால் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். இரண்டாவது, இவர்களின் நிலங்களுக்கு பட்டா கிடையாது. எனவே இடப்பெயர்வு செய்யப்பட்டால் இழப்பீடு எதுவும் கிடைக்காது என்று கூறினார். இங்கு அமைய உள்ள அணு உலை பற்றி பரவலாக மண்டல், மாவட்ட அளவில் விழிப்புணர்வுப் பிரச்சாரம் சமூக, அரசியல் செயற்பாட்டாளர்களால் செய்யப்பட்டுள்ளது. ரணஸ்தளம் மண்டலில் உள்ள 30 கிராமங்களில் அணு உலையை எதிர்த்து தீர்மானம் போடப்பட்டுள்ளது. லவேரு, இச்செர்லா, ரணஸ்தளம் ஆகிய மண்டல் அளவிலும், ஸ்ரீகாகுளம் மாவட்ட அளவிலும் தீர்மானங்கள் போடப்பட்டுள்ளன.
அடுத்து, தெலுங்கு தேசம் கட்சியின் மண்டல் செயலர் திரு. மைலபிள்ள போலிசு என்பவரைச் சந்தித்தோம். இவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் அணு உலை திட்டத்திற்காக கையகப்படுத்தப்பட உள்ள நிலங்கள் பற்றிய விவரங்களை தரச் சொல்லி ஸ்ரீகாகுளம் மாவட்ட வட்டாசியரை அணுகியுள்ளார். ஆனால், ஒரு லட்சம் ரூபாய் வங்கிக் கணக்கில் இருந்தால்தான், தகவல் பெற முடியும் என்று வட்டாச்சியரிடம் இருந்து தகவல் அனுப்பப்பட்டுள்ளது. திரும்பவும் இது சம்பந்தமாக மாவட்ட ஆட்சியரை அணுகப்போவதாக கூறினார். இங்கிருந்த மக்களில் 80% பேர் வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்து விட்டதாகவும், மீதம் உள்ள மக்களில் 30% பேர்களுக்கு அரசு வீடுகள் வழங்கி உள்ளதாகவும், 70% மக்கள் குடிசை வீடுகளிலேயே வாழ்வதாகவும் கூறினார். ரணஸ்தள மண்டலில் உள்ள 115 கிராமங்களில், 110 கிராமங்கள் மீனவ கிராமங்கள். இதில், 3 லட்சம் மீனவர்கள் வாழ்கின்றனர். பெரிய கொவ்வாடாவிலிருந்து 1.5 கி.மீ. தொலைவில் 5 கிராமங்கள் உள்ளன. ஸ்ரீகாகுளம் கொவ்வாடாவிலிருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கு கட்டப்படும் அணு உலை உலகில் எங்குமே நடைமுறையில் இல்லாத அமெரிக்க தொழில்நுட்பத்தை பயன்படுத்தப்போகிறது. இந்த தொழில்நுட்பம் ஐரோப்பிய ஒன்றியத்தில் தடை செய்யப்பட்டுள்ளதாக போலிசு கூறினார். மேலும், கொவ்வாடாவில் பிள்ளைகளுக்கு நல்ல கல்வி கிடைப்பதில்லை என்றும், அரசு வேலையில் யாருமே இல்லை என்றும் ஆதங்கப்பட்டார்.
அடுத்ததாக, ராமச்சந்திரபுரம் சென்றோம். இங்கிருந்த பொதுமக்கள் சிலரிடம் உரையாடினோம். கொவ்வாடா பகுதியில் மீன்வளம் சொல்லிக்கொள்ளும் படி இல்லையாதலால், தாங்கள் கூலி வேலையை நம்பி உள்ளதாகக் கூறினர். அரசு மாற்று இடம் கொடுத்தால் போகத் தயாராக இருப்பதாகக் கூறினர். பிறகு, அருகிலிருந்த கடற்கரைப் பகுதியை நோக்கிச் சென்றோம். அங்கிருந்த ஒரு முதியவரிடம் பேசினோம். அவர், கொவ்வாடா மக்களில் ஒரு பகுதியினர், மீன் பிடி தொழிலுக்கு மாற்றாக பிளாஸ்டிக் கயிற்றில் ஊஞ்சல், தொப்பி போன்றவற்றைச் செய்து மற்ற மாநிலங்களுக்குச் சென்று பல மாதங்கள் தங்கி விற்பனை செய்வதாகக் கூறினார். இதனால் அவர்களின் குழந்தைகளின் கல்வி பெருமளவில் பாதிக்கப்படுவதாகக் கூறினார். தமிழகத்தின் சாலையோரங்களில் தொப்பி, ஊஞ்சல் போன்ற பொருட்களை விற்பனை செய்பவர்கள் இந்த கிராம மக்கள்தான் என்றார் அந்த முதியவர். இதனால் இந்த கிராம மக்களில் சிலருக்கு தமிழ் கொஞ்சம் தெரியும் என்றார். இந்த பாரம்பரிய மீனவர்கள் தங்கள் தொழிலை, வாழ்விடங்களை விட்டு இடம்பெயர என்ன காரணம் என வினவினோம். இந்த கடலோர பகுதியில் கடந்த 20 வருடங்களாகவே மீன்வளம் குறைந்து விட்டதாகக் கூறினார். இதற்கு காரணம், இந்த பகுதிக்கு அருகில் உள்ள பைதபீமாவரம் என்ற இடத்தில உள்ள வேதிப்பொருட்கள் தொழிற்சாலைகளிலிருந்து வரும் கழிவுகள் பல ஆண்டுகளாக கடலில் கலக்கப்படுவதுதான் என செயற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.
கடற்கரையில் மக்களோடு பேசிக்கொண்டு இருக்கும்போது, அணு சக்திக் கழகத்தை(NPCIL) சேர்ந்த சில அதிகாரிகள் அங்கு வந்தனர். நாங்கள் அணு உலை மூலம் மின்சாரம் என்ற விளம்பரத்தில்/அரசியலில் உள்ள ஆபத்துக்கள் பற்றிய கேள்விகளை முன்வைக்க, அவர்கள் அணு உலைக்கு ஆதரவான கருத்துக்களை முன்வைக்க, சிறிது நேரம் விவாதம் நடந்தது. பிறகு அவர்கள் எங்களிடம் விடைபெற்றுச் சென்றனர். அவர்கள் சென்றபிறகு, அங்கிருந்து மீனவர்கள், புது வீடு கட்டித்தர ஏற்பாடு செய்வதாகவும், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தருவதாகவும், பிரியாணி அரிசி தருவதாகவும் சொல்லிக்கொண்டு இந்த அதிகாரிகள் அடிக்கடி இந்த கிராமங்களுக்கு வருவதாக கோவத்தோடு கூறினார்கள்.
கொவ்வாடா அணு உலையை எதிர்த்து நடக்கும் மக்கள் போராட்டத்தைப் பற்றி அந்தப் பகுதி மக்களையும், அரசியல், சமூக செயற்பாட்டாளர்களையும் சந்தித்துப் பேசியதில் இருந்து நான் அறிந்துகொண்டது இதுதான். கொவ்வாடா பகுதி மீனவர்களின் மீன்வளம் பல ஆண்டுகளுக்கு முன்பே குறைந்து விட்டது. அதனால், ஒரு பகுதி மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தைத் தேடி வேறு பகுதிகளுக்கு, மாநிலங்களுக்கு குடியேறுகின்றனர். இதனால் அவர்களின் பிள்ளைகளின் கல்வி கேள்விக்குரியாக உள்ளது. ஆனால், ஜப்பானில் புகுஷிமா விபத்துக்குப் பிறகு இங்கு அணு உலை பற்றிய விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. இதற்கு அரசியல், சமூக இயக்கங்களின்/செயற்பாட்டாளர்களின் பிரச்சாரங்கள் முக்கிய காரணம். இதன் காரணமாகவே, ரணஸ்தளம் மண்டலத்தில் 30 கிராமங்களும், லவேறு, இந்தெர்லா மண்டலங்களிலும், ஸ்ரீகாகுளம் மாவட்ட அளவிலும் அணு உலைக்கு எதிரான தீர்மானங்கள் போடப்பட்டுள்ளன. மேலும், அணு உலைத் திட்டம் மிக மிக ஆரம்ப கட்டமான நிலம் கையக்கப்படுத்தல் என்ற நிலையிலேயே இருப்பதால், போராட்டம் இன்னும் தீவிரம் அடையவில்லை என நினைக்கிறேன். கொவ்வாடா பயணத்தை முடித்துக்கொண்டு, அன்று இரவு புடுமுருவில் தங்கி தங்கினோம்.
காக்ராபள்ளி அனல் மின் நிலையத்தை எதிர்த்து நடக்கும் மக்கள் போராட்டம் :
மறுநாள் ஜூலை 27, 2012 காலை திரு. ராமு மற்றும் அவரின் நண்பரின் குடும்பத்தினரிடம் விடைபெற்றுக்கொண்டு காக்ராப்பள்ளி நோக்கி பயணமானோம். ராமு அவர்கள் எங்களுக்கு உதவியாக காக்ராப்பள்ளியில் திரு. சிரஞ்சீவி அவர்களை ஏற்பாடு செய்திருந்தார்.
காக்ராப்பள்ளி அனல் மின் நிலையத்தை ஒட்டி உள்ள விவசாய பூமி
சுமார் இரண்டு மணி நேர பயணத்திற்குப் பிறகு கொட்ட பேட்டா என்ற இடத்திற்கு வந்து சேர்ந்தோம். இந்த பயணத்தில், அனல் மின் நிலையத்தில் வேலை செய்யும் பொறியாளர் ஒருவரைச் சந்தித்தோம். அவரிடம் அனல் மின் நிலையத்திற்கு எதிராக நடக்கும் போராட்டம் பற்றி வினவினோம். அவர் ஒரே ஒரு கிராம மக்கள் மட்டுமே போராடுவதாகவும், மக்கள் தவறாக வழி நடத்தப்படுகின்றனர் என்றும், காக்ராப்பள்ளி அனல் மின் நிலையம் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதால், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு கிடையாது என்று கூறினார். பிறகு அனல் மின் நிலைய நிர்வாகம், மின் நிலையத்தைச் சுற்றியுள்ள விவசாயிகளுக்கு போகத்திற்கு 10,000 ரூபாய் நிறுவனத்தின் - சமூக கடமை(CSR) என்ற நடவடிக்கையின் கீழ் வழங்குவதாகவும் கூறினார். இது பற்றி மக்களிடம் விசாரிக்க மறந்து விட்டோம். கொட்ட பேட்டா பேருந்து நிலையத்தில் சிறிது நேர காத்திருப்பிற்குப் பிறகு, ஒரு தானியில் அனல் மின் நிலையத்தைச் சுற்றியுள்ள கிராமங்களுக்கு திரு.சிரஞ்சீவி எங்களை அழைத்துச் சென்றார். 2640 மெகா வாட் காக்ராப்பள்ளி அனல் மின் நிலையம் ஈஸ்ட் கோஸ்ட் எனெர்ஜி லிமிடெட்(East Coast Energy Limited) என்ற நிறுவனத்திற்குச் சொந்தமானது. இதில் ஜெகன் மோகன் ரெட்டியின் மைத்துனர் ஒரு பங்குதாரராக உள்ளார் என்று இங்குள்ள அரசியல் செயற்பாட்டாளர்கள் ஏற்கனவே கூறி இருந்தனர்.
காக்ராப்பள்ளி அனல் மின் நிலையத்தை ஒட்டி உள்ள உள்ளூர் மீன் பிடி பகுதி
2000 ஏக்கர் நிலம் இத்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் பாதிப்பு அறிக்கையில் இவை தரிசு நிலங்களாக கூறப்பட்டுள்ளது. ஆனால் இவை அனைத்தும் பல்லுயிர் சூழல் கொண்ட வளமான சதுப்பு நிலம் (wetland) என வனத்துறை அறிக்கை அளித்துள்ளதாக கூறுகின்றனர். இங்குள்ள ஒட்டிதன்றா என்ற கிராமத்திற்குச் சென்றோம். இங்குள்ள மீனவ சங்கத்தைச் சேர்ந்தவர்களை சந்தித்து அனல் மின் நிலையத்தை எதிர்ப்பதற்கான காரணத்தை கேட்டோம். மீனவ சங்கத்தின் தலைவர் காருண்ய கெத்று கூறியதிலிருந்து நாங்கள் அறிந்து கொண்டது இதுதான். அனல் மின் நிலையத்திற்காக ஒதுக்கப்பட்ட இடம் நிறைய நீர்நிலைகளை கொண்ட பகுதி. ஒட்டிதான்றா, கொள்ளுறு, சந்தபொம்மாளி போன்ற கிராமங்களைச் சேர்ந்த 6000 மீனவர்கள் பல ஆண்டுகளாக உள்நாட்டு மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். மேலும் பெரும்பான்மையான மக்களுக்கு உப்பளத் தொழில் வாழ்வாதாரமாக உள்ளது. இந்த கையக்கபடுத்தப்பட்ட நிலத்தைச் சுற்றி 2400 ஹெக்டர் விவசாய நிலங்கள் உள்ளது. இங்குள்ள நீர்நிலைகளில் மீன் பிடிக்க மீனவர்களுக்கு 1948லிருந்து மீன்பிடி உரிமம் கொடுக்கப்பட்டு வந்துள்ளது. 2009இல் இந்த உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதை எதிர்த்து மீனவர்கள் ஸ்ரீகாகுளம் மாவட்ட வருவாய் அதிகாரிக்கு மனு கொடுத்துள்ளனர். ஆனால், அரசுத் தரப்பில் எந்த நடவடிக்கையும் இல்லாது போகவே, ஆகஸ்ட் 15, 2009 தொடர் உண்ணாவிரதத்தைத் தொடங்கியுள்ளனர்.
ஆனால், மின் நிலையத்தைச் சுற்றி உள்ள நீர்நிலைகளை மண் கொண்டு நிரப்பியுள்ளனர். இதனால், இங்கிருந்த நீர்நிலைகளின் இயற்கையான நீரின் ஓட்டம் தடைபட்டு வெள்ளம் உண்டாகி 10,000 ஏக்கர் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. இங்கிருந்த நீர்நிலைகளில் இருந்த மீன்கள் நஞ்சு வைத்து அழிக்கப்பட்டுள்ளன. இந்த அனல் மின்நிலையத்திற்கு அருகில் 3.5 கி.மீ தொலைவில் உள்ள தேல்நீலாபுரம் என்ற இடத்தில சிறிய பறவைகள் சரணாலயம் உள்ளது. இங்கு சைபீரிய பறவைகள் உட்பட பல இடங்களில் இருந்து பறவைகள் வருகின்றன. இந்தப் பறவைகளுக்கு இந்தப் பகுதியில் உள்ள மீன்கள் போன்றவையே உணவாகும். ஆனால், இந்த நீர்நிலையைத் தேடி வரும் பறவைகள் துரத்தியடிக்கப்பட்டுள்ளன.
இதனால், கிராமமக்கள் அனல் மின் நிலையத்திற்கு மரக்கட்டைகளை (டிம்பர்) ஏற்றிச் சென்ற லாரிகளை ஜனவரி, 2011 வழிமறித்து போராட்டம் செய்துள்ளனர். இதனால், ஒரு மாதம் அனல் மின் நிலைய வேலை பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சௌம்யா மிஸ்ரா என்ற ஸ்ரீகாகுளம் மாவட்ட ஆட்சியர் இப்பகுதிகளுக்கு பார்வை இட வந்துள்ளார். பிப்ரவரி 16, 2011 அன்று இந்தப்பகுதியில் 144 தடையுத்தரவு போடப்பட்டுள்ளது. பிப்ரவரி 25, 2011 அன்று தேசிய நெடுஞ்சாலையிலிருந்து ஒட்டிதான்றா வரக்கூடிய கொட்ட பேட்டா, தெக்கேலி என்ற கிராமங்களின் சாலை முழுவதும் 3000 காவல் துறையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். அனல் மின் நிலையத்தை ஒட்டிச் செல்லும் ரயில் பாதையில் 250 காவல் துறையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு மக்களை துப்பாக்கி முனையில் நிறுத்தி அனல் மின் நிலையத்திற்கான கட்டுமானப் பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.
காக்ராப்பள்ளி அனல் மின் நிலையத்தை எதிர்த்து நடந்த போராட்டத்தில் சிறையில் வைக்கப்பட்ட மூதாட்டிகள்
இதனால் வெகுண்டெழுந்த கிராமமக்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இந்தப் போராட்டம் பெருமளவிலான பெண்களால் முன்னெடுக்கப்பட்டது என்பது இங்கு குறிப்பிட வேண்டிய செய்தியாகும். பகல் 12 மணிக்கு ஒட்டிதான்றாவில் மின் நிலையத்திற்குச் செல்லும் வாகனங்கள் வழிமறிக்கப்பட்டுள்ளன. காவல் துறைக்கு துப்பாக்கி சூடு நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, கண்ணீர் புகைக்குண்டு வீசப்பட்டுள்ளது. காவல் துறை வீடு புகுந்து ஆண்கள், பெண்கள், வயதானவர்கள், கர்ப்பிணி பெண்கள் என்றும் பாராமல் 100-150 பேர் வரை கைது செய்து கொண்டு சென்றிருக்கிறது. 2000 பேருக்கும் மேலான மக்கள் மீது கொலை செய்ய முயற்சி(307) என்று வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 92 வயது பாட்டி, ஆனந்த மாணிக்கம்மா என்பவர் கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டு ஸ்ரீகாகுளம் சிறையில் 16 நாட்கள் வைக்கப்பட்டுள்ளார் என்ற கேட்ட நொடியில் நாம் அதிர்ச்சியாகி விட்டோம்.
பிப்ரவரி 28, 2011, அனல் மின் நிலையத்தால் தங்கள் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் என்ற காரணத்தால் அருகில் இருந்து ஹனுமந்த நாயுடு பேட்டா என்ற பகுதியில் விவசாய குடிகள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். காவல் துறைக்கு சுடச்சொல்லி உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, இரண்டு பேர் அதே இடத்திலும், ஒருவர் மருத்துவ மனையிலும் இறந்துள்ளனர். சுற்றுபட்டு கிராமங்களின் நெல் சேமிப்பு கிடங்கு ஒன்று காவல் துறையினரால் குண்டு வைத்து தகர்க்கப்பட்டுள்ளது. ஒட்டிதான்றாவில் 25 வீடுகள் குண்டு வைத்து தகர்க்கப்பட்டுள்ளது. (போலீசா, பொறுக்கியா? என்ற கேள்விதான் எழுகிறது) முதலாளிகளுக்கான இந்த ஆட்சி ஒரு கோர தாண்டவத்தை எளிய மக்களின் மீது நடத்தி முடித்திருக்கிறது என்பதை எங்களால் உணர முடிந்தது.
காக்ராப்பள்ளி அனல் மின் நிலையத்தை எதிர்த்து நடந்த மக்கள் போராட்டத்தின் கலவர காட்சி
மீனவ சங்கத் தலைவரோடு பேச்சை முடித்துக்கொண்டு, நாங்கள் ஒட்டிதான்றா சாலை சந்திப்பில் சிறிய பந்தலில் 712 நாளாக நடக்கும் தொடர் உண்ணாவிரதத்தில் பங்குபெற்றிருந்த நான்கு பெண்களை சந்தித்தோம். இவர்கள் கொள்ளுறு, ஒட்டிதான்றா, சந்தபொம்மாளி என்ற கிராமங்களைச் சேர்ந்தவர்கள். முதலாளித்துவத்தின் லாப வேட்டைக்குத் துணை போகும் அரச பயங்கரவாதத்திற்கு மூன்று உயிர்களை பலிகொடுத்த பின்னும், தங்கள் ஜனநாயக உரிமைக்காக, தங்கள் அறவழிப்போராட்டத்தை தொடர்ந்து நடத்திக்கொண்டிருக்கும் இம்மக்களின் மன உறுதியும், போராட்ட குணமும் நிச்சயமாக போற்றத்தக்கது, வரலாற்றில் பதியப்படவேண்டியது. கடைசியாக, தங்களுக்கு மீன்பிடி உரிமம் மீண்டும் கிடைக்கவேண்டும் என்ற கோரிக்கையுடன் உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும், அது இப்போது நிலுவையில் உள்ளதாகவும் மீனவ சங்கத்தினர் கூறினர். மீன்பிடி தொழில் பாதிக்கப்பட்டதால் பெரியவர்கள் வேறு வேலைகளைத் தேடி வெளியூர் சென்று வருவதால், அவர்களின் பிள்ளைகளின் பராமரிப்பு, கல்வி பாதிக்கப்படுவதாகக் கூறினர்.
பிறகு அனல் மின்நிலையத்தை ஒட்டியுள்ள பகுதிகளுக்குச் சென்று பார்த்தோம். இவை நெய்தலும், மருதமும் கலந்த பகுதியாக கண்ணுக்கு எட்டிய தூரமெல்லாம் பசுமையான வயல்களும், நீர் நிலைகளுமாக இருந்தன. நம் சங்ககால இலக்கியங்களில் வயல்களில் மீன்கள் துள்ளித் திரிந்ததாகவும், அல்லி மலர்கள் பூத்திருந்ததாகவும் வரும் வர்ணனைகள்தான் ஞாபகம் வந்தது. துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களுக்கு ஹனுமந்த நாயுடு பேட்டாவில் ஒரு நினைவுத் தூண் எழுப்பி உள்ளனர். இறந்தவர்களுக்கு அரசு எந்த இழப்பீடும் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
காக்ராப்பள்ளி அனல் மின் நிலைய போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகளின் நினைவு தூண்
மாலை தானியில் தெக்கேலி சென்று சேர்ந்தோம். பிறகு, சிரஞ்சீவி மற்றும் தானி ஓட்டுனரிடம் நன்றி கூறி விசாகப்பட்டினம் நோக்கி பயணமானோம். அன்று இரவு ரத்னம் அவர்களின் அலுவலகத்தில் தங்கினோம். மறுநாள் ஜூலை 28, 2012 பிற்பகல், மீண்டும் சில அரசியல் செயற்பாட்டாளர்களுடன் ஒரு சந்திப்பை ரத்னம் ஏற்பாடு செய்திருந்தார். ஆந்திராவில் வளர்ச்சி என்ற பெயரில் தொடங்கப்படும் சுற்றுச்சூழலுக்கு பெரும் கேடு தரும் தொழிற்சாலைகள் பற்றியும், பழங்குடி மக்கள் வாழும் பகுதியில் நடக்கும் பாக்சைட் சுரங்கம் பற்றியும், கடற்கரைப் பகுதியைக் குறிவைத்து தொடங்கப்படும் தொழிற்சாலைகளால் 80 லட்சம் மீனவர்கள் பாதிக்கப்படுவது பற்றியும் செய்திகளை பகிர்ந்து கொண்டனர். மாலையில் லக்ஷ்மிபெட்டா தலித்மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து நடந்த அரங்கக் கூட்டத்திற்குச் சென்றோம். சிறிது நேரம் அங்கிருந்து விட்டு பிறகு, ரத்னம் அவர்களுடன் சென்னைக்கு போகும் பேருந்து நிறுத்தத்திற்கு சென்றோம். மாலை ஆறு மணிக்கு பேருந்து வந்தது. ரத்னம் அவர்களிடம் நன்றி கூறி செந்தளிரும், நானும் பேருந்தில் சென்னையை நோக்கி பயணமானோம்.
விவசாயம், மீன்பிடி, உப்பளம், முந்திரிக்காடு, கால்நடை வளர்ப்பு என்று சுயசார்புடன் உள்ள மக்களின் வாழ்வாதாரங்களை ஒழித்துக் கட்டிவிட்டு, வளர்ச்சி என்ற பெயரில் மக்களின் வாழ்விடங்களை விட்டு துரத்தியடிப்பதும், அடுத்தவரிடம் கைகட்டி நிற்பவராகவும், கையேந்துபவராகவும் மாற்றுவதுதான் இன்றைய இந்தியாவின் வளர்ச்சிக் கொள்கை. இதுதான் தேசிய இனங்களைக் கடந்து, மொழிகளைக் கடந்து இந்திய தேசத்தில் வாழுகிற அனைத்து மக்களும் எதிர்கொள்ளப்போகும் மிகப்பெரிய பிரச்சினை.
- பரிமளா, தமிழர் பாதுகாப்பு இயக்கம் (
- சுற்றுச்சூழல் வழக்குகள்/ஆராய்ச்சிகள் - நிபுணர்களும் விஞ்ஞானிகளும் யார் பக்கம்?
- பூமியைக் காப்பாற்றுவோம்!
- கூடங்குளம் அணுஉலை - ஆதரிப்பதா? எதிர்ப்பதா?
- பருவநிலை மாற்றம்
- உயிர் வாழும் உரிமைக்கு உலை வைக்கும் மரபணு தொழில்நுட்பம்
- ஞெகிழிக் குப்பைகளால் அழியும் மலை வனம்
- புவிவெப்ப உயர்வில் நமது பங்கு
- கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடக் கோருவதற்கான காரணங்கள்
- மக்களைப் பாழ்படுத்தும் புதிய அனல் மின் நிலையங்களை நிறுத்துக
- வேதிக் கழிவுகளால் வெறுமையாகும் கடலூர்!
- காற்றினிலே வரும் மாசு!
- ஞெகிழியா? காகிதமா? எந்தப் பை நல்லது?
- உலகம் முழுவதும் தனக்கே சொந்தம் என்கிற தலைக்கனம்
- இந்தியாவில் அணுஉலை விபத்துகளும் அவசர தயாரிப்பு நிலையும்
- ஜெய்டபூர் அணு மின் நிலையம் - ஆபத்தை விலை கொடுத்து வாங்குகிறோமா?
- குற்றாலத்தில் குளித்தால்... நச்சு ஆறாகும் சிற்றாறு
- ஐ.நா.வின் மின்னணு கழிவு அறிக்கையில் இந்தியாவின் நிலை என்ன?
- ஒலி மாசு
- உயிர் வாங்கும் ஒலி மாசு!
- திருப்பூர் சாய ஆலை பிரச்சனைக்கான தீர்வு என்ன?