அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- மு.குருமூர்த்தி
- பிரிவு: தொழில்நுட்பம்
கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக ஏராளமானோர் காத்திருக்கும் நிலையில், கல்லீரலை கொடையாக வழங்கக்கூடியவர்கள் போதுமான எண்ணிக்கையில் இல்லை. இந்த சிக்கலைத் தீர்ப்பதற்கான கண்டுபிடிப்பு ஒன்று அண்மையில் நிகழ்த்தப்பட்டுள்ளது.
இந்த ஆய்வில், விலங்குகளின் கல்லீரலில் உள்ள அனைத்து செல்களும் மென்மையான டிட்டர்ஜண்ட் உதவியால் அகற்றப்பட்டன. ஆனால் செல்களை தாங்கிப்பிடிக்கும் அடிப்படைக் கட்டமைப்பு மட்டும் அப்படியே இருக்குமாறு செய்யப்பட்டது. இந்த நிகழ்வு decellularization என்றழைக்கப்படுகிறது. Decellularization காரணமாக ஏற்பட்ட வெற்றிடத்தில் முதிர்ச்சியடையாத நிலையில் உள்ள மனிதசெல்கள் (progenitors) நிரப்பப்பட்டன. இரத்தக்குழாய்களை உருவாக்கும் endothelial செல்களும் இந்த வெற்றிடங்களில் நிரப்பப்பட்டன. இந்த அமைப்பு முழுவதும் ஒரு உயிரி உலையினுள் (bioreactor) வைக்கப்பட்டது. உயிரி உலைகள் உறுப்பு முழுமைக்கும் ஆக்சிஜனையும் உயிரூட்டப் பொருட்களையும் வழங்கவல்லவை. ஒரு வாரம் கழித்து உருவான மனித திசுக்கள் ஆராயப்பட்டபோது அவற்றில் மனித கல்லீரலின் செயல்பாடு காணப்பட்டது. ஆய்வுக்கூடத்தில் இதற்கு முன்பாக விலங்குகளின் கல்லீரல்கள் உருவாக்கப்பட்ட போதிலும் மனித கல்லீரலை உருவாக்கும் முயற்சியின் தொடக்கநிலை வெற்றி இது.
உயிரி தொழில்நுட்பத்தால் விளைந்த கல்லீரலைக்கொண்டு புதிதாகக் கண்டுபிடிக்கப்படும் மருந்துகளின் செயல்பாடுகளைக்கூட ஆராய முடியும். ஆய்வுக்கூடத்தில் சிறுநீரகம், பித்தப்பை போன்ற உறுப்புகளை புத்துருவாக்கம் செய்வதற்கான வழிவகைகளை அறிவதற்கு இந்த ஆய்வு உதவக்கூடும் என்கிறார்கள் அறிவியலாளர்கள்.
தகவல்: மு.குருமூர்த்தி
இன்னும் படிக்க: http://www.sciencedaily.com/releases/2010/10/101030111057.htm
- விவரங்கள்
- க.மணி
- பிரிவு: தொழில்நுட்பம்
கடந்த 10 ஆண்டுகளாகவே நரம்பியல் வல்லுநர்கள் உடம்பு அரிப்பதற்குக் காரணம் என்பதைப் பற்றி தலையைப் பிய்த்துக் கொண்டிருந்தனர். ஒரு சிலர் வலிக்குக் காரணமான நரம்புகள்தான் அரிப்பு உணர்வுக்கும் காரணம் என்று பிரச்சனைக்கு முற்றுப் புள்ளி வைத்து வேறு வேலைக்குச் சென்றுவிட்டனர்.
வாஷிங்டன் பல்கலையின் மருத்துவப் பிரிவின் நரம்பியல் வல்லுநர் சென் என்பவர் எலிகளின் ஜீனோமை ஆராய்ந்தபோது கேஸ்ட்ரின் ரிலீசிங் பெப்டைட் ரிசப்டார் (GRPR Gastrin Releasing Peptide Receptor) என்றொரு ஜீனைச் செயல்படுத்தும் நரம்பு செல்கள்தான் அரிப்பிற்குக் காரணமான தகவல்களை மூளைக்கு அனுப்புகிறது என்றும் அவை முதுகுத்தண்டில்தான் செயல்படுகின்றன என்றும் கண்டுபிடித்துள்ளார்.
பாம்பெசெரின் என்ற நரம்பு விஷத்தைப் பயன்படுத்தி மேற்கூறிய ஜிஆர்பிஆர் புரதத்தைத் தாங்கிய நரம்பு செல்களை பரிசோதனை முறையில் எலிகளிடம் நீக்கியபிறது அதற்கு அரிப்பே ஏற்படவில்லை என்பதை நிரூபித்தார் திரு சென். அரிப்பை உண்டு பண்ணும் பொருளை தோலில் போட்டுத் தேய்த்தாலும் அந்த எலிக்கு அரிப்பு ஏற்படவில்லையாம்.
இனி எரிச்சலூட்டும் அரிப்பை நீக்க மருந்து கண்டுபிடிப்பதுதான் பாக்கி.
- முனைவர் க.மணி (
- விவரங்கள்
- மு.குருமூர்த்தி
- பிரிவு: தொழில்நுட்பம்
முட்டையில் இருந்து கோழி வந்ததா? கோழியில் இருந்து முட்டை வந்ததா? என்ற கேள்விக்கு பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் விடை கண்டுபிடித்திருக்கிறார்கள். கோழிதான் முதலில் வந்ததாம். இந்த கண்டுபிடிப்பு கணினியின் உதவியோடு நிகழ்த்தப்பட்டிருக்கிறது. ஷெஃப்பீல்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகளின் முடிவின்படி முட்டையின் ஓட்டில்தான் ரகசியம் பொதிந்திருக்கிறது. முட்டை ஓடு உருவாவதில் கோழிக்குஞ்சின் புரதம் பெரும் பங்கு வகிக்கிறது. vocledidin-17 (OC-17) எனும் புரதம் முட்டை ஓட்டினை உருவாக்குவதில் பெரும் பங்கு வகிப்பது ஏற்கனவே அறிவுலகம் அறிந்த ஒன்று.
கணினியின் துணைகொண்டு ஒரு செயற்கையான வேதிவினை நிகழ்த்தப்பட்டது. இந்த வேதிவினையில் கால்சியம் கார்பனேட் துகள்களின் மீது vocledidin-17 (OC-17) புரதம் ஒட்டிக்கொண்டு படிகங்களை உருவாக்கின. காலப்போக்கில் படிகத்தின் உட்கரு தன்னைத்தானே வளர்த்துக்கொள்ளும் அளவிற்கு பெரிதானதும் vocledidin-17 (OC-17) துகள்கள் உதிர்ந்துவிட்டன. அதாவது vocledidin-17 (OC-17) ன் பங்கு ஒரு கிரியா ஊக்கி என்பதோடு சரி. இவ்வாறு உதிர்ந்த vocledidin-17 (OC-17) புரோட்டின் துகள்கள் மீண்டும் கால்சியம் கார்பனேட் படிகங்களை உருவாக்கும் பணியில் ஈடுபடுகிறது. இந்த வினையின் விளைவாக குறைந்தகாலத்தில் முட்டை ஓடு உருவாகிறது.
தகவல்: மு.குருமூர்த்தி (
இன்னும் படிக்க: http://news.discovery.com/tech/computer-simulation-cracks-chicken-egg-puzzle.html#mkcpgn=rssnws1
- விவரங்கள்
- மு.குருமூர்த்தி
- பிரிவு: தொழில்நுட்பம்
மனிதருடைய செவி வெளிச்செவி, நடுச்செவி, உட்செவி என மூன்று பாகங்களைக் கொண்டிருக்கிறது. வெளிச்செவி கண்ணால் காணக்கூடியது. வெளிச்செவியில் காணப்படும் துளை நடுச்செவிவரையில் நீண்டிருக்கும். நடுச்செவி ஒருபுறம் அடைபட்டுள்ள காற்று நிரம்பிய அறையாகும். நடுச்செவியையும், வெளிச்செவியையும் செவிப்பறை பிரிக்கிறது. வெளிச்செவிக்கும் நடுச்செவிக்கும் இடையே Eustachian எனும் குழாய் காற்றோட்டம் ஏற்படுத்துகிறது. புறச்செவியின் உள்ளே இருக்கும் காற்றழுத்தைவிட நடுச்செவியில் காற்றழுத்தம் அதிகரிக்கவோ, குறைவுபடவோ செய்யும்போது காதுகேளாமை, காதுவலி, சீழ் உருவாதல் ஆகிய நோய்கள் தோன்றுகின்றன. உட்காதில் காணப்படும் நுண்ணிய ஒலிஉணர் நரம்புத்தொகுதிகள் அதிர்வுகளை மூளைக்கு எடுத்துச் செல்கின்றன. ஒலிஅதிர்வுகளை மூளை ஒலியாக உணர்ந்து கொள்ளும்.
நடுக்காதில் நீண்டகால நோய்த்தொற்று ஏற்படும்போது சீழ் உருவாகி விடுகிறது. மழைக்காலங்களில் நோய்க்கிருமிகள் எளிதில் பல்கிப் பெருகுகின்றன. இதனால் 75 சதவீத குழந்தைகள் காது நோய்களால் பாதிக்கப்படுகிறார்கள். எதிர் உயிரிகளைக் கொண்ட மருந்துகளால் இந்த சீழ்வடியும் நோய் குணமாக்கப்பட முடியாமல் போகும்போது அறுவை சிகிச்சை நிபுணரால் மயக்கமருந்தின் உதவியால் காற்றோட்டக்குழாய்கள் நடுக்காதுக்குள் செலுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஒவ்வோர் ஆண்டும் சராசரியாக ஏழு லட்சம் குழந்தைகள் இந்தவகையான நோயால் பாதிக்கப்படுகிறார்கள். இவ்வாறு செருகி வைக்கப்படும் குழாய்கள் நான்கு முதல் ஏழு மாதங்களுக்குள் கழன்று விழுந்துவிடுவதால் சீழ்வடியும் நோய் மீண்டும் உருவாகிவிடுகிறது.
காதில் வலி ஏற்படுதல், சீழ்வடிதல் போன்ற நோய்கள் சாதாரணமாக எல்லா வயதினருக்கும் ஏற்படக்கூடியவை. இந்நோய்களை விரைவாக குணப்படுத்த துருப்பிடிக்காத எஃகினாலான ஒரு சாதனத்தை காதுநோய் நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த புதிய கண்டுபிடிப்பு அளவில் சிறியது; உள்ளீடற்ற ஒரு உலோகத்தண்டினால் ஆனது. இதன் ஒரு முனை அகலமாக இருக்கும்படி அமைக்கப்பட்டுள்ளது. உலோகத்தண்டின் ஒரு முனையை அறுவை சிகிச்சை நிபுணர் காதுக்குள் செலுத்தி நடுக்காதில் தேங்கியுள்ள சீழ்போன்ற திரவங்களை உறிஞ்சி எடுத்துவிடுவார்.
வழக்கமாக செய்யப்படும் அறுவை சிகிச்சையில் மூன்று சாதனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. மூன்று தனித்தனி சாதனங்களை ஒருங்கிணைப்பதும், செயல்பாடு வெற்றிகரமாக இருப்பதும் இந்த புதிய சாதனத்தின் சிறப்புகள் ஆகும்.
ஒரே ஒரு முறை அறுவை சிகிச்சை நிபுணர் நடுச்செவிக்குள் இந்த சாதனத்தை நுழைப்பதால் நோயாளியின் மயக்கநிலை நேரம் குறைகிறது. செவிக்குள் அதிக எண்ணிக்கையிலான கருவிகளை பலமுறை செலுத்தும்போது உட்செவியின் மெல்லிய தோல் சுவர்கள் சேதமடைய வாய்ப்பு உள்ளது. சில சமயங்கள் இந்த சேதத்தின் விளைவாக இரத்தம் கசியவும் வாய்ப்பு உள்ளது. இரத்தக்கசிவை பார்க்கும் வாய்ப்பு இல்லாததால் அறுவை சிகிச்சை மேலும் சிக்கலாகிவிடுகிறது.
ஆதாரம்: http://english.farsnews.com/newstext.php?nn=8901070101
தகவல்: மு.குருமூர்த்தி (
- உணவை பகுத்து ஆராயும் காந்தவியல்
- பிடுங்கிய பல்லில் இருந்து ஸ்டெம் செல்கள்
- பெட்ரோலை ஒழித்துக் கட்டவருகிறது லித்தியவாயு
- மனித மரபணுக்களுக்கும் காப்புரிமை
- ஒளி மின் விளைவு – ஓர் அறிமுகம்
- ஏறுநடை போடும் ஏழை நாடுகள்
- கற்றது நினைவில் நிற்க என்ன செய்யவேண்டும்?
- உடல் தூங்க உள்ளம் விழித்திருக்கிறது.
- மண்டையைப் பிளந்த பிறகும் பேசலாம்
- நினைவு வலுப்பெற மூக்கில் ஸ்ப்ரே
- உயிரி கார்பன்
- கார்பன் டை ஆக்சைடில் இருந்து எரிபொருள்
- நின்றொளிரும் விந்தை
- 2009 ஆம் ஆண்டின் அறிவியல் கண்டுபிடிப்புகள்
- மர எண்ணெயில் கார்கள் ஓடப் போகின்றன
- வைரஸ்களைக் கண்டறிய ஒரு கையடக்கக் கருவி
- ஆர்டரின் பேரில் உடல் உறுப்புகள்
- பளபளக்கும் நிக்கல் - டங்ஸ்டன்
- செயற்கையாக ஓர் உயிரினம்
- உலோக ரப்பர்
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.