அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- சு.உலோகேசுவரன்
- பிரிவு: தொழில்நுட்பம்
நாம் சில கணினிகள் கதிரொளியால் இயங்குவதாகக் கேள்விப்பட்டிருப்போம். பல பேரிடம் கதிரொளியில் இயங்கும் கணிப்பான்களைப் பார்த்திருப்போம். சில இடங்களில் பெரிய அளவு சூரிய ஒளிப் பலகங்களை(‘Solar panel) யும் பார்த்திருப்போம். இந்தப் பலகங்கள் பல ஃபோடொவோல்டைக் மின்கலங்களின் ஒருங்கிணைப்பாகும். இவை போடொவோல்டைக்கு என்கிற கருத்தாக்கத்தினால் செயல்படுகின்றவை. (போடோ(‘Photo’) என்றால் ஒளி, வோல்டு (‘Volt’) என்றால் மின்கலம்). போடோவொல்டைக்கு எனப்படும் தொழில்நுட்பம் ஒளியிலிருந்து (சூரிய ஒளி) மின் உற்பத்தி செய்யப் பயன்படுவதாகும்.
இந்தத் தொழில்நுட்பம் முற்காலத்தில் விண்ணில் ஏவப்படும் செயற்கைக்கோள்களின் மின் தேவைகளை மட்டுமே ஈடு செய்தது. தற்போது தரையிலும் சீரான வளர்ச்சி கண்டு வருகிறது.
இந்தத் தொழில்நுட்பத்தால் வெறும் கதிரொளியை உள்ளீடாக ஏற்றுக்கொண்டு இலவசமாக (சிறிய ஒருமுறை முதலீட்டுடன்) மின்சாரம் பெற முடியும் என்றால் நம்புவீர்களா? ஒரு சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட சூரிய ஒளிப் பலகையிலிருந்து உச்சி வெயிலில் கிட்டத்தட்ட 1000 வாட்டு மின்சாரம் பெற முடியும்.
கதிரொளியிலிருந்து மின் உற்பத்தி செய்யும் சூரிய ஒளி மின்கலங்கள் 'சிலிகான்', 'சர்மானியம்' போன்ற குறைகடத்திகளால் ஆனவை. குறைகடத்தியின் மீது கதிரொளி பாயும்போது அதன் ஒரு பகுதி குறைகடத்தியால் உள்வாங்கப்படுகிறது. அதாவது, கதிரொளி ஆற்றலின் ஒரு பகுதி குறைகடத்திக்குக் கைமாறுகிறது என்று நாம் புரிந்து கொள்ளலாம். கதிரொளி ஆற்றலால் சிலிகான் குறைகடத்தியுள் இருக்கும் மின்னணுக்கள் பாய்ச்சலுக்குத் துணையாகிறது. இந்த மின்னணுக்கள் கால் போன போக்கில் பாய்கின்றன. ஆனால், மின் உற்பத்திக்கோ மின்னணுக்கள் ஒரே திசை நோக்கி சீராகப் பாய வேண்டும். இதற்காகக் குறைகடத்தியின் இரு முனைகளில் அலுமினியம், செப்பு போன்ற உலோகம் பொருத்தப்படுகிறது. இந்த நிலையில், மின்னணுக்கள் ஒரு முனையிலிருந்து மறுமுனைக்கு ஒரே திசையில் சீராகப் பாயும். இவ்வாறு ஒரே திசையில் சீராகப் பாயும் மின்னணுக்கள் மின்புலத்தை (‘எலக்ட்ரிக் பீல்டு’) உண்டாக்கும். இதுவே, மின் உற்பத்தியின் அடிப்படையாகும்.
எதற்காக 'சிலிகான்' போன்ற குறைகடத்திகள் போடொவோல்டைக்கு மின்கலத்திற்குத் தேவைப்படுகின்றன?
சிலிகானின் சிறப்பு வேதியியல் தன்மை இதற்கு முதன்மைக் காரணம். தூய நிலையில் ஒவ்வொரு சிலிகான் அணுவிலும் 14 மின்னணுக்கள் 2,8,4 என்று வெவ்வேறு ஓடுகளில் சுழன்று கொண்டிருக்கும். இது படிக வடிவம் கொண்டதாகும்.
வெளி ஓட்டினில் சுழலும் 4 மின்னணுக்கள் தனது சுற்றத்திலுள்ள 4 அணுக்களுடன் தனது மின்னணுவைப் பகிர்ந்து கொண்டு பிணைகிறது. இப்பிணைப்பினால், சிலிகான் பாய்ச்சலுக்கு மின்னணுக்கள் இன்றி மின் கடத்த இயலாது.
இதனை ஈடு செய்ய பாசுபரசு, போரான் போன்றவை சேர்க்கப்படுகின்றன. பாசுபரசு அணு (2,8,5) என்று மின்னணுச் சுழற்சி கொண்டது. அதாவது சிலிகானை(2,8,4) விட ஒரு மின்னணு கூடுதலாகக் கொண்டது என்பதைக் கவனிக்கலாம். இதனால் சிலிகான் - பாசுபரசு பிணைப்பு ஒரு கூடுதல் மின்னணுவைப் பாய்ச்சலுக்கு தருகின்றது. இதனால், பாசுபரசு கலக்கப்பட்ட சிலிகான் எதிர்மறை சிலிகான் என்றழைக்கப்படுகிறது.
ஆனால், போரான் அணுவோ (2,3) என்று மின்னணுச் சுழற்சி கொண்டது. அதாவது சிலிகானை விட ஒரு வெளியோடு மின்னணு குறைவாகக் கொண்டது. ஆகவே, சிலிகான் - போரான் பிணைப்பினால் ஒரு மின்னணு பகிர்வின்றிப் பொத்தல் (வெற்றிடம்) உருவாகின்றது. எனவே, போரான் கலப்பட சிலிகான் நேர்மறை சிலிகான் என்று அழைக்கப்படுகிறது.
இந்த இருவகை சிலிகான் குறைகடத்திகளின் சந்திப்பால் அருகிலுள்ள மின்னணுக்கள் எதிர்மறை சிலிகானிலிருந்து நேர்மறை சிலிகான் திசை நோக்கிக் கடக்கும். இதற்கு தேவையான ஆற்றல் கதிரொளியிலிருந்து கிடைக்கின்றது. மிஞ்சியிருக்கும் மின்னணுக்கள் ஆற்றலற்று சந்திப்பைக் கடக்க முடியாமல் தேங்குகின்றன. இந்த சிலிகான் அமைப்பினை 'போடொடையோடு' (‘Photo Diode’) என்று அழைக்கிறோம்.
சிலிகானின் பளபளப்புத் தன்மையால் கதிரொளியின் பெரும்பகுதி எதிரொளிக்கப்பட்டு வீணாகிறது. அதனால், கதிரொளி எதிரொளிப்பை ஓரளவு தடுக்க சிலிகான் குறைகடத்தியின் மீது ஒரு வகை மேல் அங்கி போர்த்தப்படுகிறது.
சூரிய ஒளிப் பலகங்களின் அமைப்பு கதிரொளி வீச்சுக்கேற்ப உயரமும் சாய்வும் கொண்டதாக இருக்க வேண்டும். வடக்கு அல்லது கிழக்குத் திசைகளில் பலக அமைப்பு கதிர்வீச்சுக்கு ஏதுவாக இருக்கும். எல்லாப் பருவங்களிலும் சூரிய ஒளிப் பலகங்களிலிருந்து சீரான மின் உற்பத்தியை எதிர்பார்க்க முடியாது. ஆனால், மின் உற்பத்தி சீராக உள்ள போது மின்சாரத்தை மாறுதிசை மின்னாக்கி (‘இன்வர்டர்') மூலமாகச் சேமித்துக்கொள்ளலாம். மழை, மேகமூட்ட நாட்களில் சூரிய ஒளி மின்சாரம் கை கொடுக்காமல் போகலாம். இந்நிலையில், பொது மின்னிணைப்பு அல்லது மின்னியக்கி(‘Generator’) வாயிலாக மின்சாரம் பெற்றுக்கொள்ளலாம். ஆகவே, சூரிய ஒளி மின்சாரம் உங்களது மின்சாரச் செல்வினை முற்றிலும் ஒழிக்காது. ஆனால், அதனைக் குறிப்பிடத்தகுந்த அளவுக்குக் கட்டுப்படுத்தும்.
நாம் நினைவில் கொள்ளவேண்டிய முதன்மையான செய்தி, நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு 'வாட்டு' சூரிய ஒளி மின்சாரமும் தூய்மையான மின்சாரமாகும். நிலக்கரி எரிக்காமல் கிடைத்த மின்சாரம். புகையற்ற மின்சாரம், சுற்றுச்சூழல் மாசுபடுத்தாத மின்சாரம், எதிர்காலத்தின் மின்சாரம் ஆகும்.
ஆங்கில மூலம்: http://science.howstuffworks.com/environmental/energy/solar-cell1.htm
- விவரங்கள்
- நா.வசந்தகுமார்
- பிரிவு: தொழில்நுட்பம்
ஒரு தனிமத்தில் நேர்மின் அயனி (proton), எதிர் மின்னயனி( electrons), நொதுமி( neutron) ஆகியவை இருக்கும். இவற்றில் எதிர்மின்னயனிகளின் ஓட்டமே மின்னோட்டம் எனப்படும். ஒவ்வொரு தனிமத்திலும் எதிர்மின்னயனிகளின் ஓட்டத்திற்கு ஒரு தடை இருக்கும். இதைத்தான் மின்தடை (resistance) என்கிறோம். இம்மின்தடை அதிகமாக இருக்கும்போது மின்னோட்டம் குறைவாகவே இருக்கும். எனவேதான் மின்தடை குறைவாக உள்ள மாழைகளை (metal) மட்டுமே நாம் மின்சாரத்தைக் கடத்தப் பயன்படுத்துகிறோம். [எ.கா: செம்பு (copper), அலுமினியம்]
மின்சாரத்தை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குக் கடத்தச் செம்பு, அலுமினியம் ஆகிய மாழைகளையே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இம்மாழைகளின் வழியே ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு இரண்டு வாட் மின்சாரத்தைச் செலுத்துகிறோம் என்று வைத்துக்கொள்வோம். 1 வாட் மின்சாரம் மட்டுமே சென்று சேரும். அதாவது, ஏறத்தாழ ஐம்பது விழுக்காடு மின்னிழப்பு ஏற்படுகிறது.
மின் உற்பத்தித் திறன்(2 வாட்) – மின் இழப்பு(1 வாட்) = மின் பயன்பாட்டுத்திறன்(1 வாட்)
இந்த இழப்பைக் குறைப்பதற்காக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மின்னிழப்பே இல்லாமல் மின்சாரத்தைக் கடத்தும் மாழைகள் மீக்கடத்திகள் (super conductors) எனப்படுகின்றன. மின்னிழப்பு மின்தடையினால் ஏற்படுகிறது என்பதை மேலே பார்த்தோம்.
சில தனிமங்கள் மிகக் குறைந்த வெப்ப நிலையில் மின்தடையே இல்லாமல் மின்சாரத்தைக் கடத்துகின்றன. இப்பண்பை மீக்கடத்தும் பண்பு என்கிறோம். மின்தடையே இல்லாததால் மீக்கடத்திகளைப் பயன்படுத்தும்போது மின்னிழப்பு இருக்காது. அதாவது மீக்கடத்தியின் மூலமாக இரண்டு வாட் மின்சாரத்தை ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்குச் செலுத்தினால், இரண்டு வாட் மின்சாரமும் முழுமையாகச் சென்று சேரும்.
இவ்வாறு குறைந்த வெப்பநிலையில் பயன்படும் இம்மீக்கடத்திகளை இயல்பு வெப்பநிலையில் பயன்படுத்துவதற்கான ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இவ்வாராய்ச்சிகளுக்கு வெற்றி கிட்டும்போது, குறைந்தது சென்னையைத் தவிர பிற நகரங்களில் நிலவும் மின்வெட்டுகள் குறையும்.
- வசந்தகுமார் (
- விவரங்கள்
- மு.குருமூர்த்தி
- பிரிவு: தொழில்நுட்பம்
மருத்துவமனைகள் நோயாளிகள் கூடும் இடம் மட்டுமல்ல. நோய்க்கிருமிகள் கூடும் இடமும் அதுதான். மருத்துவமனைக்குள் சென்றுவருபவர்கள் நோய்த்தொற்றுக்கு ஆளாவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. உங்களுடைய நோய் எதிர்ப்பாற்றல் குறைவாக இருந்தால், நீங்கள் மருத்துவமனைவாழ் கிருமிகளின் தாக்குதலுக்கு உள்ளாவது நிச்சயம். குழந்தைகள், முதியவர்கள் இவர்களெல்லாம் மருத்துவமனைக்குள் போய்வருவது ஆபத்தானது. அறுவை சிகிச்சை செய்துகொள்வோரின் உடலில் குழாய்கள் செருகப்பட்டிருக்கும்; தோல் கிழிக்கப்பட்டிருக்கும். நோய்க்கிருமிகள் இவர்களின் உடலில் புகுந்துகொள்வதற்கு இந்த திறப்புகள் எளிதான வழிகளை ஏற்படுத்திக் கொடுக்கின்றன.
MRSA எனப்படும் Staphylococcus aureus எனப்படும் பாக்டீரியாக்கள் எதிர்ப்பு ஆற்றல் மிக்கவை. எளிதில் அழிக்க இயலாதவை. C.difficile என்றழைக்கப்படும் Clostridium difficile பாக்டீரியாக்கள் குடல் நோய்களை ஏற்படுத்தவல்லவை. முதியவர்களை பாதிக்கக்கூடியவை. எனவே, மருத்துவமனனகளில் கிருமியகற்றும் கண்டுபிடிப்புகள் முக்கியமானவை. ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் உள்ள
HINS-light எனப்படும் கண்ணால் காணக்கூடிய ஒளியைக் கொண்டு மருத்துவமனையின் அனைத்து பகுதிகளையும் குளிப்பாட்டுவதன் மூலம் மருத்துவமனைவாழ் நோய்க்கிருமிகளில் பெரும்பகுதியை அழித்தொழிக்க முடியும் என்று ஆய்வுமுடிவுகள் தெரிவிக்கின்றன. இந்த சாதனத்தை உருவாக்குவதில் பல்துறை நிபுணர்கள் கூட்டாக முயன்றுள்ளனர். மின் இயல், நுண்ணுயிரியியல், ஒளி இயற்பியல் ஆகியவற்றில் துறைபோகிய வல்லுநர் குழு இதற்காக இணைந்து பாடுபட்டுள்ளது. நோய்க்கிருமிகளை அழித்தொழிக்கும் இந்த HINS-light ஒளிவெள்ளத்தால் நோயாளிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லையாம். ஒளிவெள்ளத்தின் ஒளிக்கதிர்கள் நோயுண்டாக்கும் பாக்டீரியாக்களின் மூலக்கூறுகளை தாக்கி புதிய வேதிப்பொருட்களை உருவாக்குகின்றன. இந்த வேதிப்பொருட்கள் meticillin-resistant Staphylococcus aureus, (MRSA), Clostridium difficile(C.diff.) இவற்றை அழித்தொழிக்கவல்லவை.
மருத்துவமனைகள் பெருகிவிட்டதால் கிருமியகற்றும் தொழில்நுட்பத்திலும் மாற்றங்கள் தேவைப்படுகிறது. ஆட்களின் துணைகொண்டு செய்யப்படும் பணிகள் திருப்திகரமாக இருப்பதில்லை. HINS-light தொழில்நுட்பம் கருநீல ஒளியை உமிழக்கூடியது. இதனுடன், LED தொழில்நுட்பத்தை இணைத்து இதமான வெப்பத்தை அளிக்கவல்லதும், சாதாரண ஒளி உமிழும் விளக்குகளுடன் இணைந்து செயல்படக்கூடியதுமான சாதனங்கள் இப்போது உருவாக்கப்பட்டுள்ளன.
இன்னும் படிக்க: http://www.sciencedaily.com/releases/2010/11/101114190744.htm
தகவல்: மு.குருமூர்த்தி (
- விவரங்கள்
- மு.குருமூர்த்தி
- பிரிவு: தொழில்நுட்பம்
மின்னாற்றலை சேமிக்கக்கூடிய சேம மின்கலங்களை நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தி வருகிறோம். இவைகளைப் போன்று வெப்ப ஆற்றலை சேமித்து வைத்து மீளவும் பயன்பாட்டிற்கு அளிக்கவல்ல சேம வெப்ப கலங்கள் சாத்தியமா? இதுவரையில் வெறும் வினாவாக இருந்துவந்த இந்த வாக்கியத்திற்கு இப்போது விடை கிடைத்திருக்கிறது. மசாசூஸட்ஸ் தொழில் நுட்பக்கழக அறிவியலாளர்கள் சூரியனிடமிருந்தோ, வேறு வெப்ப மூலங்களில் இருந்தோ வெப்ப ஆற்றலை பெற்று சேமிக்க முடியும் என்றும், நமக்குத் தேவையானபோது மீளவும் பெறமுடியும் என்றும் கண்டறிந்துள்ளனர்.
Ruthenium என்னும் தனிமத்திற்கு ஒளி ஆற்றலை சேமிக்கும் திறன் உண்டு. மிக அரிதாக இந்த தனிமம் கிடைப்பதால் இதன் விலையும் அதிகம். Ruthenium த்தின் கூட்டுப்பொருளான fulvalene diruthenium எனும் கூட்டுப்பொருள் வெப்ப ஆற்றலை சேமித்து வைக்கவும், நாம் வேண்டும்போது வெப்ப ஆற்றலை மீள அளிக்கவும் வல்லது என இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
1996ல் கண்டுபிடிக்கப்பட்ட fulvalene diruthenium எனும் கூட்டுப்பொருள் Ruthenium ஐக்காட்டிலும் விலை குறைவானது. அக்டோபர் 20ல் வெளியாகி உள்ள Angewandte Chemie என்னும் இதழில் இந்த ஆய்வு வெளியிடப்பட்டுள்ளது. சூரிய ஒளியை fulvalene dirutheniumத்தின் மூலக்கூறு ஈர்த்துக்கொள்ளும்போது அணுக்களின் ஆற்றல் மட்டங்கள் உயர்வடைகின்றன. இவ்வாறு உயர்வடைந்த ஆற்றல் மட்டங்கள் நிலையாக இருப்பதால் வெப்ப ஆற்றலை சேமித்தல் சாத்தியமாகிறது. ஒரு சிறு அளவிலான வெப்பத்தையோ, வினை ஊக்கியையோ அளிப்பதன்மூலம் மூலக்கூறு தன்னுடைய பழைய வடிவத்தை அடையும். இந்த நிகழ்வின்போது வெப்ப ஆற்றல் மீள வெளிப்படும். இத்தகைய வெப்ப சேமிப்புக்கலங்களின் மூலம் 200 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரையில் மீளப்பெறமுடியுமாம்.
இந்த வெப்ப நிலையைக்கொண்டு வீட்டின் உட்புறத்தை வெப்பமாக்கலாம். அல்லது ஒரு வெப்ப மின் உற்பத்தி சாதனத்தை இயக்கலாம். வெப்ப ஆற்றலை ஒரு எரிபொருளாக சேமிக்க இயலும்; அதுவும் நீண்ட காலம் சேமிக்க முடியும் என்பதும் கூடுதல் சிறப்புகள். இவை எங்கும் எடுத்துச்செல்லக்கூடியவை.
Ruthenium அரிதாக கிடைக்கக்கூடிய தனிமம் என்பதால் விலையும் அதிகம். ஆனால் rutheniumஐக்கொண்டு மூலக்கூறின் உள்ளே நடக்கும் செயல்பாடுகளை அறிவியலாளர்கள் அறிந்துகொண்டுள்ளனர். இனிமேல் rutheniumஐப்போன்று செயல்படக்கூடிய விலை குறைவான எளிதில் கிடைக்கக்கூடிய தனிமங்களையோ, கூட்டுப்பொருட்களளயோ உருவாக்குவது இந்த ஆய்வின் அடுத்த இலக்கு.
இன்னும் படிக்க: http://www.sciencedaily.com/releases/2010/10/101025161219.htm
தகவல்: மு.குருமூர்த்தி (
- கல்லீரல் புத்துருவாக்கம்
- அரிப்பு நரம்புகள்
- முட்டையா...? கோழியா...?
- செவி பாதுகாப்பிற்கு ஒரு புதிய கருவி
- உணவை பகுத்து ஆராயும் காந்தவியல்
- பிடுங்கிய பல்லில் இருந்து ஸ்டெம் செல்கள்
- பெட்ரோலை ஒழித்துக் கட்டவருகிறது லித்தியவாயு
- மனித மரபணுக்களுக்கும் காப்புரிமை
- ஒளி மின் விளைவு – ஓர் அறிமுகம்
- ஏறுநடை போடும் ஏழை நாடுகள்
- கற்றது நினைவில் நிற்க என்ன செய்யவேண்டும்?
- உடல் தூங்க உள்ளம் விழித்திருக்கிறது.
- மண்டையைப் பிளந்த பிறகும் பேசலாம்
- நினைவு வலுப்பெற மூக்கில் ஸ்ப்ரே
- உயிரி கார்பன்
- கார்பன் டை ஆக்சைடில் இருந்து எரிபொருள்
- நின்றொளிரும் விந்தை
- 2009 ஆம் ஆண்டின் அறிவியல் கண்டுபிடிப்புகள்
- மர எண்ணெயில் கார்கள் ஓடப் போகின்றன
- வைரஸ்களைக் கண்டறிய ஒரு கையடக்கக் கருவி
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.