தொலைக்காட்சி விவாதங்களில் பேசி வரும் சில பா.ஜ.க.வினர், மண்டல் பரிந்துரையை நியமித்தது தங்கள் கட்சி தான்; அதை ஆதரித்ததும் தங்கள் கட்சி தான் என்றும் வாதிட்டு வருகிறார்கள். இது அப்பட்டமான பொய்.

மொரார்ஜி தேசாய் தலைமையில் ஜனதா கட்சி ஆட்சி வந்தபோது ஜனதாவில் ஜன சங்கமும் தன்னை இணைத்துக் கொண் டிருந்தது. அந்த அமைச்சரவையில் வாஜ்பாய் வெளிநாட்டுத் துறை அமைச்சர், உள்துறை அமைச்சர் சரண்சிங், ஜாட் சமூகத்தைச் சார்ந்த விவசாயியான சரண்சிங், பிற்படுத்தப் பட்டோர் உரிமைகளில் மிகவும் ஈடுபாடு கொண்டவர். அவரது முயற்சியால் அமைக்கப்பட்டது தான் மண்டல் ஆணையம். தொடர்ந்து மொரார்ஜி ஆட்சி கவிழ்ந்து சரண்சிங் பிரதமராக சில மாத காலம் நீடித்தபோது பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டுக்கு அரசாணை பிறப்பிக்கும் முயற்சிகளில் சரண்சிங் ஈடுபட்டார். பார்ப்பன அதிகாரவர்க்கம் அந்த முயற்சியை முறியடித்தது.

1980இல் மண்டல் பரிந்துரை அரசிடம் வழங்கப்பட்டது. ஆட்சிக்கு வந்த இந்திரா, மண்டல் பரிந்துரையை கிடப்பில் போட்டார். 1990ஆம் ஆண்டு தான் வி.பி. சிங், பிரதமராக வந்த பிறகு ஆகஸ்ட் 7ஆம் தேதி மண்டல் பரிந்துரையில் ஒரு பகுதியை மட்டும் 27 சதவீத இடஒதுக்கீட்டை அரசுப் பதவிகளில் ஒதுக்கீடு செய்யும் ஆணையைப் பிறப்பித்தார். அப்போது வி.பி.சிங் ஆட்சிக்கு பா.ஜ.க.வும் இடதுசாரி கட்சிகளும் வெளியிலிருந்து ஆதரவு தெரிவித்தன. வி.பி.சிங் அமைச்சரவை யில் இடம் பெறவில்லை. பா.ஜ.க. ஆதரவைத் திரும்ப பெற்றுக் கொண்டால், வி.பி.சிங் ஆட்சிக்கு பெரும்பான்மை பலம் இருக்காது என்ற நிலை இருந்தது.

வி.பி.சிங் அறிவிப்பை ஆவேசமாக எதிர்த்தது ஆர்.எஸ்.எஸ். ‘இந்து தேசத்தை’ப் பிளவுபடுத்துகிறார் என்று கூறிய ஆர்.எஸ்.எஸ்., அதன் அதிகாரபூர்வ ஏடான ‘ஆர்கனைசர்’ பத்திரிகையில் முதல் பக்கத்தில் ‘ராஜாவின் (வி.பி.சிங்கின்) ஜாதி யுத்தம்’ என்ற தலைப்பிட்டு கீழ்க்கண்டவாறு எழுதியது:

“150 ஆண்டுகால அன்னிய ஆட்சியான பிரிட்டிஷ் ஆட்சி சாதிக்க முடியாத ஒன்றை ஒரே ஆண்டில் சாதித்துக் காட்டுவேன் என்று வி.பி.சிங் மிரட்டுகிறார். இந்து சமூகத்தை ஒற்றுமைப்படுத்த விவேகானந்தரும், தயானந்த சரசுவதியும், மகாத்மா காந்தியும் டாக்டர் ஹெட்கேவரும் மேற்கொண்ட மாபெரும் முயற்சிகளை சிதைக்கத் துடிக்கிறார் வி.பி.சிங். சமூகத்தை மண்டல் மயமாக்கி, வி.பி.சிங் சாதிக்க விரும்புவ தெல்லாம் இந்து சமூகத்தை, முன்னேறி யவர்கள், பிற்படுத்தப்பட்டோர், அரிஜன் என்பதாகக் கூறு போட வேண்டும் என்பது தான்” என்று ‘ஆர்கனைசர்’ ஏடு எழுதியது.

(V.P. Singh threatens to achieve in one year what the British could not do in these 150 year long alien rule.......... He wants to undo the great task of uniting Hindu society from the days of Vivekananda, Dayananda Saraswathi, Mahathma Gandhi and Dr. Hedgewar...... what V.P. Singh through Mandalisation of the society intends to achieve is a division of Hindus on forward, backward and Harihjan lives......... (‘Organisar’ 26, Aug. 1990. Page 1)

மண்டல் பரிந்துரையை அமுலாக்கியதை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ். வெளியிட்ட கருத்து இது தான். வி.பி.சிங் தான், ‘இந்து’ சமூகத்தை ஜாதி அடிப்படையில் கூறு போட்டாரா? ‘வர்ணாஸ்ரம’ காலந்தொட்டு, இந்து சமூகத்தைப் பிளவுப்படுத்தி உயர்வு தாழ்வை நிலை நிறுத்திய பார்ப்பனியக் கொடுமைகளை இவர்கள் மறைத்தாலும், வரலாறு மறக்குமா? அந்த ஏற்றத் தாழ்வை சரி செய்வதற்காகவே வந்த சமன்பாட்டுக் கொள்கை எப்படி, இந்து சமூகத்தைப் பிளவுபடுத்தும்?

மண்டல் பரிந்துரைக்குப் பிறகுதான் இந்து சமூகத்தில் ஜாதியே வந்ததா? பதில் சொல்லட்டும். இடஒதுக்கீடு என்பதே இந்து சமூகத்தைக் கூறு போடுவது என்பது இவர்கள் கருத்து என்றால் இப்போது முன் னேறிய ஜாதியினருக்கு இட ஒதுக்கீட்டைக் கொண்டு வந்திருக்கிறார்கள். ஆர்.எஸ்.எஸ். கருத்தைப் பொருத்திப் பார்த்தால், பா.ஜ.க. ஆட்சி இந்து சமூகத்தைக் கூறுபோட்டு, இந்துக்களுக்கு துரோகம் இழைத்திருக்கிறது; அப்படித் தானே? பதில் சொல்வார்களா?

வி.பி. சிங், 27 சதவீத இடஒதுக்கீட்டை அறிவித்தவுடன் அயோத்தியில் இராமன் கோயில் கட்ட இரதயாத்திரைப் புறப்பட் டார், அன்றைய பா.ஜ.க. தலைவர் அத்வானி. பல இடங்களில் கலவரம் வெடித்தது. இந்து மதவெறியை ஊதி விட்டது இந்த இரத யாத்திரை. பீகார் மாநிலத்துக்குள் இந்த யாத்திரை நுழைய அன்றைய முதல்வர் லல்லு பிரசாத் யாதவ் அனுமதிக்கவில்லை. லல்லு பிரசாத், வி.பி.சிங் அணியில் இருந்தார். உடனே வி.பி.சிங் ஆட்சிக்கு வெளியிலிருந்து வழங்கிய ஆதரவைத் திரும்பப் பெற்று, வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்க்க வழி வகுத்தது பா.ஜ.க. இவர்கள்தான் மண்டல் பரிந் துரையை ஆதரித்ததாக வெட்கப் படாமல் பொய் பேசுகிறார்கள். வி.பி.சிங் மண்டல் பரிந்துரையை அமுல்படுத்தியதால் தான் இராமன் கோயில் கட்டும் பிரச்சினையை உடனே கையில் எடுத்ததாக அத்வானியே ஒப்புக் கொண்டிருக்கிறார். அத்வானி அப்போது தந்த பேட்டி இது.

27 சதவீத இடஒதுக்கீட்டுக்கு எதிராக வி.பி.சிங் ஆட்சியை எதிர்த்து டெல்லியில் மாணவர்கள் கலவரம் செய்தனர். இராஜீவ் கோஸ்வாமி என்ற உயர்ஜாதி மாணவர் உடலுக்கு தீ வைத்துக் கொண்டார் (இது திட்டமிட்டு நடந்த எரிப்பு என்ற குற்றச் சாட்டும் எழுந்தது). 55 சதவீத தீப்புண் காயத்துடன் புதுடெல்லி சப்தர்ஜங் மருத்துவ மனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அந்த நிலையில் அத்வானி, ‘இந்துஸ்தான் டைம்ஸ்’ நாளேட்டுக்கு ஒரு பேட்டி அளித்தார். அந்தப் பேட்டி, அத்வானியின் இடஒதுக்கீடு எதிர்ப்பை அப்படியே வெளிச்சப்படுத்து கிறது. இதோ, அந்தப் பேட்டி:

“புதுடெல்லியில் இடஒதுக்கீட்டை எதிர்த்து மாணவர்கள் தீக்குளித்து வருகிறார்கள். ஒவ்வொரு நாளும் மாணவர்களின் பெற்றோர்கள் என்னை, வீடு தேடி வந்து சந்திக்கிறார்கள். இன்னும் ஏன் இந்த ஆட்சிக்கு ஆதரவு தருகிறீர்கள்? ஆதரவைத் திரும்பப் பெறுங்கள்” என்று வற்புறுத்தி வருகிறார்கள். மண்டல் பிரச் சினையைக் காரணம் காட்டி, ஆதரவைத் திரும்பப் பெற்றால், அது அரசுக்கு பெரும் பயனைத் தேடிக் கொடுத்து விடும் என்றே நான் உணர்ந்தேன். என்னைத் தேடி வந்த பெற்றோர்களிடம் நான் கூறினேன்:

“நீங்கள் சொல்லும் கருத்தில் எனக்கு முழு உடன்பாடு உண்டு. இந்த அரசு (இட ஒதுக்கீடு பிரச்சினையில்) மிக மோசமாக செயல்பட்டு வருகிறது என்பது உண்மை தான். உரிய நேரத்தில் நாங்கள் அரசுக்கு எதிரான நடவடிக்கையை எடுப்போம்.”

(New Delhi, where the self immolation had taken place, parents used to come to my place daily. “Why are you supporting the government? Withdraw your support”. I felt that withdrawing our support on the issue of Mandal would be of an enormous benefit to the government. I said ‘ I agree with you that the government is behaving very badly but we will take action at the appropriate time’. - Advani - Hindustan Times, 21 Sep. 1990)

அத்வானி தந்த விளக்கம் இது. இதுதான் பா.ஜ.க. - வி.பி.சிங் கொண்டு வந்த இடஒதுக்கீடு உத்தரவை ஆதரித்ததன் அடையாளமா? தொலைக்காட்சியில் பேசும் ‘பூணூல்’களே? இதற்கு பதில் உண்டா?

தன் மீதான நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை துணிவோடு எதிர் கொண்டார் வி.பி.சிங். அவரே நம்பிக்கைக் கோரும் தீர்மானத்தைக் கொண்டு வந்து, நாடாளுமன்றத்தில் பேசினார்.

“27 சதவீத இடஒதுக்கீட்டை ஆதரிப்போர் யார்? எதிர்ப்போர் யார்? இதை இந்த ஓட்டெடுப்பு வழியாக மக்கள் அறிந்து கொள்ளட்டும். என்னுடைய ஆட்சி வீழ்த்தப் பட்டாலும், நான் அமர்ந்திருந்த பிரதமர் இருக்கையில் யார் வந்து அமர்ந்தாலும் 27 சதவீத இடஒதுக்கீட்டை ஒழித்து விட்டு, இந்த நாற்காலியில் ஒரு நிமிடம்கூட உட்கார முடியாது” என்று வி.பி.சிங் நாடாளு மன்றத்தில் கம்பீரமாக முழக்கமிட்டார்.

ராஜிவ் காந்தி இடஒதுக்கீட்டுக்கு எதிராக தண்ணீரைக் குடித்துக் கொண்டே நீண்ட நேரம் பேசினார். பா.ஜ.க.வும், இடஒதுக் கீட்டுக்கு ஆதரவு தரவில்லை. அப்போது எதிர்கட்சி அணியிலிருந்து கொண்டே வி.பி.சிங்குக்கு ஆதரவாக வாக்களித்த ஒரே உறுப்பினர், தமிழ்நாட்டைச் சார்ந்த முஸ்லிம் லீக் கட்சி உறுப்பினர் அப்துல் சமது ஒருவர் மட்டும் தான். வாக்கெடுப்பில் வி.பி.சிங் ஆட்சி கவிழ்ந்தது. சமூக நீதி சரித்திரத்தில் அந்த இலட்சியத்துக்காக தனது பிரதமர் பதவியையும் தூக்கி எறிந்த ஒரே வரலாற்று நாயகர், வி.பி.சிங் தான்.

இந்த வரலாறுகளை எல்லாம் மூடி மறைத்து, மண்டல் பரிந்துரையை ஆதரித்ததாக வரலாற்றுக்கு மாறான அப்பட்டமான பொய்யுரைகளை பா.ஜ.க.வினர் பேசிக் கொண்டிருக்கிறார்கள். நாம் சுட்டிக்காட்டிய அத்வானி பேச்சுகளை பா.ஜ.க.வால் மறுக்க முடியுமா? சவால் விடுகிறோம்!

Pin It