இளைஞர்களிடையே, குறிப்பாக இணையத்தில் தமிழ்ப் பற்றுடன் வளையவரும் இளைஞர்களிடையே மிக அதிகமாக பரப்பப்பட்டு வரும் சொல் ‘தமிழ்த் தேசியம்’! ஒரு காலத்தில் பழ.நெடுமாறன் அய்யா போன்றோர் மட்டுமே ‘தனித் தமிழ்த் தேசியத்தை’ முன்வைத்தபோது, அத்தமிழ்த் தேசியமானது கிட்டத்தட்ட ஒரு தீவிரவாதம் (பயங்கரவாதம்) என்றே வெகுஜன ஊடகங்களாலும், சராசரி மக்களாலும் பார்க்கப்பட்டு, ஒதுக்கப்பட்ட ஒரு கொள்கையாகவே, புரட்சியாகவே இருந்தது. இப்படியாகப் பார்க்கப்பட்ட ஒரு கொள்கையை நிறைவேற்ற அல்லது நடைமுறைப்படுத்த தற்போதைய தமிழ்த் தேசியவாதிகள் என்ன செய்கிறார்கள் எனப் பார்க்கும் கடமை, 'தமிழ்த் தேசியம், தமிழ்த் தேசியம்' என்ற அவர்களின் முழக்கத்தை தினமும் காதுகளில் ஏற்றிக் கொள்ளும் நமக்கு இருக்கிறது!

seeman_300தமிழீழப் போராட்டத்தின் தற்காலிகத் தோல்விக்குப் பின்னர், தமிழகத்தில் ‘தமிழ்த் தேசியத்தை’ முன்னெடுத்திருப்போரான நாம் தமிழர் இயக்கத்திற்கு, அக்கொள்கையை கடைசி குடிமகன் வரை சென்று சேர்த்த பெருமை உண்டு. அதுவரையிலும் தீவிரவாதமாய் சித்தரிக்கப்பட்ட ஒரு சொல், கடைசி குடிமகன் காதிலும் கொள்கையாய் சென்று சேர்ந்ததின் பின்புலத்திலும் சீமானே தனியொரு ஆளாக கம்பீரமாய் நிற்கிறார். அதேபோல் தைரியமாக, தனிமனிதனாக அரசுக்கு எதிராக செயல்பட்டும், பேசியும், துணிவாய் எதிர்த்து சிறை சென்ற அவரின் தைரியத்தையும் நாம் கண்டிப்பாய் பாராட்டவே வேண்டும்.

நாம் தமிழர் கட்சி உண்மையில் 'தமிழ்த் தேசிய'த்தை முன்மொழிபவர்களாய் இருந்தால் அவர்களும் அவர்களை இன்னும் நம்பி, தமிழ்த் தேசியம் 'இதோ வந்துவிடும், அதோ வந்துவிடும்' என்று நம்பும் 'வெகுசில' உண்மையான உணர்வுள்ள இளைஞர்களும் ஒன்றைத் தெளிவாய்ப் புரிந்துகொள்ள வேண்டும். தமிழ்த் தேசியம் என்பது ஆட்சியாளர்களை எதிர்த்துப் பெறக் கூடிய ஒன்றல்ல. தமிழ்த் தேசியம் என்பது ஆட்சியாளர்களையும் கூட ஆட்சி செய்யும் 'இந்திய அரசியல் அமைப்பு'ச் சட்டத்தை எதிர்த்துப் பெறப்படவேண்டியதே ஆகும். அதாவது தமிழ்த் தேசியத்தின் உண்மையான எதிரி கலைஞரோ, ஜெயலலிதாவோ, சோனியாவோ அல்ல. அது இந்திய அரசியல் அமைப்புச் சட்டம்!

இதை இன்னும் சற்றுத் தெளிவாய் விளக்க வேண்டுமென்றால் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் எழுதப்பட்ட பின்புலத்தைப் பார்க்க வேண்டும்! இரண்டு வகையாக ஒரு நாட்டின் சட்டத்தைச் சொல்வார்கள். எப்போதுமே அடிமைத்தனத்தையே சந்தித்திராத இங்கிலாந்து போன்ற நாடுகள் தங்கள் சட்டங்களை 'Flexible constitution' (நெகிழும் சட்டம்) ஆக வைத்திருக்கின்றன. இது போன்ற நாடுகளில் சட்டத்திருத்தங்கள் செய்ய ரொம்ப மெனக்கெட வேண்டாம். அடிமைத் தனத்தைச் சந்தித்து, போராட்டத்தால் விடுதலை பெற்ற அமெரிக்கா போன்ற நாடுகள், இனி உள்நாட்டுப் பிரச்சினைகளும், போராட்டங்களும் வெடிக்கவே கூடாது என்பதற்காக தங்கள் சட்டங்களை 'Rigid constitution' (நெகிழா சட்டம்) ஆக வைத்திருக்கின்றன! இந்நாடுகளில் சட்டத்திருத்தங்கள் என்பது மகாப்போராட்டம்! சாதாரணமாக தனிமனித சுதந்திரம் சம்பந்தப்பட்ட 'ஓரினச் சேர்க்கை' பிரச்சினைக்கு சட்டத்திருத்தம் செய்யவே அம்மக்கள் எவ்வளவு போராடினார்கள் என்பதே இதற்கு நல்ல உதாரணம்!

ஆனால் இந்தியா இந்த இரண்டிலுமே சேராமல், 'பகுதி நெகிழா-பகுதி நெகிழும்' சட்டத்தை தன்னகத்தே கொண்டுள்ள ஒரு நாடு. அதாவது ஒன்றுக்கும் உதவாத சட்டத் திருத்தங்களை எல்லாம் சுலபமாக கொண்டு வரமுடியும். ஆனால் மாநிலத்தைப் பிரிப்பது, சுயாட்சி, இனவிடுதலை போன்ற மிகமுக்கிய விஷயங்கள் சம்பந்தப்பட்ட சட்டத் திருத்தங்களை எப்பாடுபட்டாலும் கொண்டு வரவே முடியாது! ஒருவேளை முயன்றால், அது இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு எதிரானதாகிவிடும். உடனே அந்தப் போராளி தீவிரவாதி எனக் கொல்லப்படுவான் அல்லது சிறைதான்!  அவசர நிலைப் பிரகடனம் செய்யக் கூட அதிகாரம் இருக்கும் இந்திய ஜனாதிபதியை ஒரே ஒரு விஷயத்திற்காக மட்டும்தான் பதவி இறக்கம் செய்ய முடியும். அவர் இந்திய அரசியல் சட்டத்திற்குப் புறம்பாக செயல்பட்டால் மட்டுமே! இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் அவ்வளவு மகாபலம் பொருந்தியது என்பதற்கு இதுவே சான்று.

தங்கள் முன் இருக்கும் இத்தகைய பலம் பொருந்திய எதிரியை வீழ்த்த தமிழ்த் தேசியவாதிகள் என்னவெல்லாம் செய்யவேண்டியிருக்கும், ஆனால் அவர்கள் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை சற்று சிந்தித்துப் பாருங்கள்.

எதற்கும் அடங்காமல் இருப்பதற்கு சக்தியுடையதாய் இருந்த தங்கள் 'இயக்கத்தை', சட்டத்துக்குக் கட்டுப்பட்ட கட்சியாய் மாற்றுகிறார்கள். மாற்றியதும் அல்லாமல் 'ஒரு' கூட்டணிக்கு தங்கள் ஆதரவு எனச் சொல்கிறார்கள். பின் பத்தே நாளில் 'இல்லை'யெனக் கதறி வேறு ஒரு விளக்கமளிக்கிறார்கள். இவர்களா சகலபலமும் பொருந்திய ஜனாதிபதியின், பிரதமரின் கழுத்தையே நெறிக்க வல்லமை பொருந்திய இந்திய சட்டங்களை எதிர்த்து தமிழ்த் தேசியம் வாங்கப் போகிறார்கள்? அதிமுகவில் எப்படி சம்பந்தமேயில்லாமல் 'திராவிடம்' ஒட்டிக் கொண்டிருக்கிறதோ, அதுபோல் தான் இவர்கள் மேல் இன்னும் 'தமிழ்த் தேசியவாதிகள்' சாயம் ஒட்டிக்கொண்டிருக்கிறது!

இவர்கள் ஏன் இன்னும் தமிழ்த் தேசியவாதிகள் போல தங்களைக் காட்டிக்கொள்கிறார்கள்? வெளிப்படையாய் இந்திய அரசியல் அமைப்புக்கு உட்பட்டு இயங்கும் தமிழக அரசியல்வாதிகளாகவே தங்களைக் காட்டிக் கொள்ளலாமே! 

அவர்கள் கூட்டிய கூட்டம் எல்லாம், பெரியாரியம் பேசி, நமக்கு சிங்களன் எதிரி என ஆரம்பித்து, பின் மெதுவாக தெலுங்கன், மலையாளத்தான், கன்னடத்தான் ஆகியோர் எல்லாருமே நம் எதிரிகள் என்பதை ஒரு சுற்று சுற்றி, கடைசியில் பெரியார் முன்வைத்த திராவிடம் தான் நம் முழுமுதற் எதிரி, அதனால் தான் நாசமாய்ப் போனோம் என உணர்ச்சிகரமாய் உரையை முடித்து கூட்டிய கூட்டம். அந்த உணர்வான இளைஞர்கள், இவர்கள் தமிழ்த் தேசியக் கொள்கையை உதறினால் களைந்து போக வாய்ப்புண்டு.

தமிழ்த் தேசிய அரசியலுக்கு வந்த பின்னும், அனைத்து தெலுங்கர்களையும், மலையாளிகளையும், கன்னடர்களையும் தமிழனுக்கு எதிரியாக சித்தரிக்கிறார்கள். மீனவன் சுடப்படும்போதெல்லாம் நாம் இந்திய அரசை குற்றம் சாட்டும் நேரத்தில், தேர்தல் அரசியலுக்காக இந்திய சட்டத்துக்கு உட்பட்ட அரசியல் கட்சியாக மாறி, எப்படி இந்திய அரசுடன் கூட்டு வைக்கலாம்? (அரசியல் அமைப்புக்குக் கட்டுப்பட்டுவிட்டாலே அது சட்டத்துடன் வைக்கிற கூட்டுதான் என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை) அப்படியே இந்த தேர்தல் அரசியலால் ஈழத்தமிழர்களுக்கு ஏதேனும் நல்லது நடந்தால் கூட நாமும் ஏற்கலாம். ஆனால் தற்போது இவர்கள் மூன்றாவது அரசியல் கூட்டணியை மக்கள் முன்பு முன்வைக்காத காரணத்தால் இவர்களின் காங்கிரஸ் எதிர்ப்பு பிஜேபி ஆதரவாகவும், திமுக எதிர்ப்பு அதிமுக ஆதரவாகவுமே பார்க்கப்படும்!

ஒருவேளை இவர்கள் தங்கள் பரப்புரையில் வெற்றி பெற்று திமுகவையும், காங்கிரசையும் விரட்டி விட்டால், நாளை மத்தியிலும், மாநிலத்தில் இவர்கள் ஆதரிக்கும் கட்சிகளே (பாஜக, அதிமுக) ஆட்சிக்கு வரும், அப்போது கண்டிப்பாக ஈழத்தமிழ்த் தேசியமாவது அமையுமா என இவர்களால் சொல்ல முடியுமா? எந்த ஒரு ஆட்சியாளரும் அவ்வளவு சுலபமாக ஈழத்தைப் பெற்றுத்தர முடியாது. தமிழ்த் தேசியத்திற்கு இந்திய அரசியல் சட்டம் எவ்வளவு பெரிய எதிரியோ, ஈழத் தேசியத்திற்கும் அது அவ்வளவு பெரிய எதிரிதான். இவர்களின் தேர்தல் அரசியலுக்காக லட்சக்கணக்கான மக்கள் உயிர் கொடுத்து, ஒரு இனத்தலைவன் தன் உயிரைக் கொடுத்து பெற முற்பட்ட விடுதலையையே கொச்சைப்படுத்தி, தமிழக அரசியல் சாக்கடையில் அதையும் கலக்கப் பார்க்கிறார்களேயன்றி, கருத்து வேறில்லை.

“போர் என்றால் சாகத்தானே செய்வார்கள்” என்று மிகச்சாதரணமாகச் சொல்லி இதுவரை உலக வரலாற்றில் கலிங்கப் போரில் ஆரம்பித்து, வியட்நாம் போர், ஈழப்போர் என அனைத்து போர்களிலும் கொல்லப்பட்ட கோடிக்கோடிக்கணக்கான அப்பாவி மக்களையெல்லாம் அஃறிணையாக்கிப் போனவர் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வார் என்பது குழந்தைக்கு கூடத் தெரியும். அவரா  ஈழ மக்களுக்கு ஈழம் வாங்கித் தருவார்? நிலைமை இப்படியிருக்கும்போது இந்திய அரசியலமைப்புக்கு உட்பட்ட கட்சியாய் இருக்கவேண்டிய தேவை சீமானுக்கு என்ன?

வேறு ஒரு பதிலும் வைத்திருக்கிறார்கள்! அதாவது கலைஞர் செய்த தவறுக்கு அவரை பழிவாங்க வேண்டுமாம்! என்னே ஒரு லாவகமான புரட்சிகரமான சிந்தனை! இந்த தடவை கலைஞரைப் பழி வாங்க ஜெயலலிதாக்கு ஓட்டு போட்டுவிடலாம்! கண்டிப்பாக ஜெயலலிதா தன் வேலையைக் காண்பிப்பார்! பின் ஜெயலலிதாவை பழிவாங்க கலைஞருக்கு ஓட்டுப் போட்டுவிடலாம்... பின் அடுத்த.......... இப்படியே சுத்தி வருவதுதான் புரட்சியா? எனக்குப் புரியவில்லை!

புரட்சி என்றால் ‘மாற்று’ என்றல்லவா இந்நாள் வரை நினைத்துக் கொண்டிருந்தேன்! புரட்சி என்றால் ‘மாற்றி மாற்றி உட்கார வைப்பது!’ என்ற ‘புதிய புரட்சி’ அறியாத மூடனாக அல்லவா இருந்துவிட்டேன் நான்! யாரைப் பழி வாங்குவதாய் நினைத்து யாரைப் பழி வாங்குகிறார்கள் இவர்கள்? ஈழம் அமைய தற்போதைக்கு இருக்கும் சூழ்நிலைகளைவிட நாளை இவர்களால் (அமைந்தால்) அமையப் போகும் அரசியல் சூழ்நிலை ஈழத்திற்கு இன்னும் ஆபத்தாகவே முடியும்!

ஒரு 'system'ஐ திருத்த வேண்டுமானால் அந்த 'system'த்திற்குள் இருக்க வேண்டும். ஒரு 'system'த்தை உடைக்க வேண்டுமானால் கண்டிப்பாக அந்த 'system'த்திற்கு வெளியில் நின்றால் தான் அது முடியும். உலகில் அடிமைப்பட்டிருந்த இனங்களின் விடுதலைப் போராட்டங்கள் அனைத்தும் நமக்கு சொல்லிக்கொடுப்பது இதைத்தான். உள்ளே நின்று கொண்டு "உடைப்பேன், திருப்பி அடிப்பேன், மடக்கிக் குத்துவேன்" என முழங்கினால் உள்ளே தள்ளுவார்கள் அல்லது பின்னால் நகைப்பார்கள். இதைத்தான் தற்போது தமிழ்த் தேசியவாதிகள் என்ற போர்வையில் இருக்கும் இந்திய-தமிழக தமிழ்த் தேசியவாதிகள் செய்து கொண்டிருக்கிறார்கள்.

தமிழ்த் தேசியத்தை செயல்படுத்துவதற்கான சூழ்நிலை மாற்றம் மக்கள் மனநிலையிலும், அரசியல் நிலைமையிலும் ஒரே தேர்தலில் ஏற்பட்டுவிடாது. பல வருட அர்ப்பணிப்பும், எதையும் எதிர்பாராத லட்சியவெறியும், தணியா கொள்கையும் மக்கள் நலனையே மனதில் கொண்ட தொடர் போராட்டங்களும், விளக்க உரைகளும், தொடர் புரட்சியும் தேவை. வெற்றி பெற பல காலம் பிடிக்கும்.

அதுமட்டுமல்லாது பெரியாரிடம், அம்பேத்கரிடம், பிரபாகரனிடம் இருந்தது போன்ற தன்னமில்லா கொள்கையும் தேவை! அதை விடுத்து இவனைப் பழி வாங்க அவன்; அவனைப் பழி வாங்க இவன் என அரசியல் செய்தால் தமிழனுக்கு இந்தியாவில் இருக்கும் கொஞ்சநஞ்ச மதிப்பும் மரியாதையையும் கூட அது குலைந்து விடும்.

இப்படிப்பட்டதான ஒரு சந்தர்ப்பவாத அரசியலை முன்னெடுக்கும் தமிழ்த் தேசியவாதிகளால் நமக்கு கனவில் ஒரு 'தமிழ்த் தேசியம்' கிடைத்தாலும் கூட அது அய்யா நெடுமாறனோ, பெரியாரோ கனவு கண்ட மானமிக்க, அறிவுமிக்க, நாகரீகம் மிக்க ஒரு சமூகமாய் இராது.

மேலுள்ள பத்திகளில் இருக்கும் கேள்விகளையும், குமுறல்களையும் இணையத்திலோ வேறெங்கோ எழுதினால் 'இவன் திமுக, அதிமுக, முமுக, மதிமுக, வி.சி, பு.த, பா.ம.க' போன்ற முத்திரைகள் தான் இதுவரைக்கும் குத்தப்பட்டு வந்தது. சமீபத்தில் "நீ தெலுங்கனா, கன்னடனா, மலையாளியா?" என்று கேட்க ஆரம்பித்திருக்கிறார்கள். அதனால் என்னை வேறு மொழிக்காரனாய் ஆக்க ஆசையாய் இருந்தால் உங்கள் கருத்தைச் சொல்லிப் போங்கள்! நான் காலையில் தான் என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளின் சூடு தாங்காமல், ஈழப்போராட்டத்திற்கு பெரு உதவி செய்த எம்.ஜி.ஆரின் இனமான மலையாளி இனத்துக்குத் தாவிவிட்டேன். அதனால் இது ஒரு மலையாளியின் கதறல்!

- இரா.இளவரசன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Comments

14 comments

14
elangovan anban
இந்த கட்டுரையில் மிகப்பெரிய காமெடியே. நெடுமாறன் கனவுகண்ட தமிழ்தேசியம் என்பதுதான்.

மற்றபடி. தமிழ்த்தேசியம் குறித்த எந்த கருத்தியல் ஆழமும் இல்லாத, தான் குற்றம்சாட்டவேண்டும் என்று வரிந்து கொண்ட ஒருவருக்கெதிரான செய்திக் கோர்வை மட்டுமே.
அசோகன் முத்துசாமி
நீங்கள் என்ன காரணத்திற்காக இப்போது திமூக-காங்கிரஸ் கூட்டனியை எதிர்ப்பவர்களை விமரித்தாலும் அது மக்கள் விரோத திமுக-காங்கிரஸ் கூஉடனிகும் ஆதரவாகாத்தான் முடியும். அதாவது, உங்கள் நோக்கம் ஒரு வேளை உயர்வாக இருந்தாலும், அதன் விளைவு மோசமாகத்தான் இருக்கும். உணமையிலேயே புரட்சிகர்ர்மான இயக்கம் மக்களிடமிருந்து ஒரே ஒர்ரூ படிதான் முன்னே இருக்கும் என்பது லெனின் கூற்று.
டான் அசோக்
தமிழ்த்தேசியம் குறித்த எந்த கருத்தியல் ஆழமும் இல்லாத, தான் குற்றம்சாட்டவேண்டும் என்று வரிந்து கொண்ட ஒருவருக்கெதிரான செய்திக் கோர்வை மட்டுமே. ///

தமிழ்தேசியம் பற்றிய நாம் தமிழரின் 'கருத்தாளமிக்க' ஒரே ஒரு கட்டுரையையோ, அறிக்கையையோ காண்பியுங்களேன்! வெட்டித்தனமாக 'தமிழ்தேசியம் தமிழ்தேசியம்' எனப் பேசிக்கொண்டிருக்கிறார்களே ஒழிய அதை அடைய வேண்டிய வழிகள் என்ன?, அதில் உள்ள சட்டசிக்கல்கள் என்ன? உன்மையில் அதற்கு வரும் பிரச்சினைகள் என்ன என்பதை எங்காவது பேசியிருக்கிறார்களா?

பாஸ்போர்ட் இல்லாதவன், நாளை மதியமே வெளிநாடு செல்ல எத்தனிப்பதைப் போல்தான் இதுவும்!
Melwin
யாருக்கு ஆதரவாக முடிந்தாலும், நியாயம் பேசித்தானே ஆகவேண்டும். மக்கள் விரோத கூட்டணியா ? நல்ல காமெடி, அடுத்து. அரச்ச மாவையே அரைக்க வெறுப்பா இல்லையா ?
Tamilkural.in
சீமான் சாதிக் கட்சித் தலைவராக முழுத் தகுதியுடையவர்...

தம்பி படத்தில் முத்துராமலிங்கத் தேவர் படத்தைக் காட்டியது தன்னையறியாமல் நடந்த தவறு என்றவர், அவரது நினைவிடம் சென்று வந்ததும், முத்துராமலிங்கத் தேவரைப் போராளி என்றதும் யாருடைய தவறு எனச் சொல்லவில்லை...

மற்றபடி தமிழ் தேசியம் என்பதெல்லாம் ரொம்ப ஓவர் என நினைக்கிறேன்..
பிரபாகரன் அழகர்சாமி
நல்ல கட்டுரை. இணையத்தில் தொடர்ந்து "சீமான் மாயை"யை தகர்த்துவரும் இளவரசனுக்கு வாழ்த்துக்கள்.

சீரியஸா பல விசயங்களை சொல்லிக்கொண்டே வந்து கடைசில "நெடுமாறன் கனவு கண்ட தமிழ்தேசியம்" என்று காமெடி பண்ணிட்டீங்க.

சீமானுக்கு முன்னோடி பழ.நெடுமாறன். ஆர்.எஸ்.எஸ்'சின் பெரிய ஸ்பான்சரான் பொள்ளாச்சி நா.மகாலிங்கந்திற்கு "உலகத் தமிழர்" விருது கொடுத்து மகிழ்ந்தவர் நெடுமாறன். சாதி அமைப்பை பாதுகாத்துக் கொண்டே தமிழ்தேசியம் அமைப்பதென்பது அய்யாவின் தியரி.
இரசீத்நாத்திகன்
நல்ல கருத்து. சில மாற்றுச்சிந்தனை இருக்கலாம் என்றாலும் விவாதிக்கத்தக்கது. நம்மவரில் சிலர் விமர்சனம் என்ற பெயரில் குப்பையைக் கிளரி வேடிக்கைப் பார்க்கவும் தன் முதுகைத்தான் தட்டிக் கொள்வதிலும் தன்னை அறியாமலே புதைத்துக் கொள்கிறார்கள். சராசரி தமிழன் புரிந்துக்கொள்ள என்ன செய்தோம் என யாரும் சிந்திக்கவே இல்லை என்பது என் கருத்து. 1938களிலிருந்து பெரியார் தனித்தமிழ் நாடு அறிவித்தார். பின் மிகச்சில காலம் திராவிடம் பேசினார். பின் கடைசிவரை தனித்தமிநாடுதான் என்றார். அது மட்டுமல்ல இந்திய அரசமைப்புச் சட்டம் என்பது நாங்கள் பிரதினிதித்துவப்படாத சட்டம் ,எனவே அது எங்களைக் கட்டுப்படுத்தாது ,என்று சொல்லியுல்லார். இந்திய அரசியலமைப்புச் சட்டம் அதனை ஒத்துக்கொண்ட கட்சி அமைப்புகள் பெரிய விளைவுகளை ஏற்படுத்த முடியாது என்பது உண்மை. இன்று தமிழ் தேசியம் பேசும் யாவரும் "தனித்தமிழர்" என்ற இருபக்கம் கூறுல்ல கத்தியைப் பிடித்துப் போராடுவது போலாகும். மற்றவரைக் குறை சொல்ல முனைவதை விட்டுவிட்டு எதிரிகளை விமர்சிப்பதில் ஓராண்டு செலவழித்துப் பாருங்கள். சொல்லைவிட தொலை நோக்குடன் செயல் களம் காணுவதில் தான் தமிழரின் வெற்றியுள்ளத்கு.
elangovan anban
//தமிழ்தேசியம் பற்றிய நாம் தமிழரின் 'கருத்தாளமிக்க' ஒரே ஒரு கட்டுரையையோ, அறிக்கையையோ காண்பியுங்களேன்! வெட்டித்தனமாக 'தமிழ்தேசியம் தமிழ்தேசியம்' எனப் பேசிக்கொண்டிருக்கிறார்களே ஒழிய அதை அடைய வேண்டிய வழிகள் என்ன?, அதில் உள்ள சட்டசிக்கல்கள் என்ன? உன்மையில் அதற்கு வரும் பிரச்சினைகள் என்ன என்பதை எங்காவது பேசியிருக்கிறார்களா? பாஸ்போர்ட் இல்லாதவன், நாளை மதியமே வெளிநாடு செல்ல எத்தனிப்பதைப் போல்தான் இதுவும்!//

தமிழ்த்தேசியம் குறித்த கருத்தாளம் மிக்க ஒரு கட்டுரையை தாங்களே முன்வைக்கலாம். நாம்தமிழர் இயக்கம் குறித்து நான் பதில் சொல்ல இயலாது. ஆனால் என்னைப்போல் பாஸ்போர்ட் இல்லாமல் நாளையே வெளிநாடு செல்ல நினைப்பவர்களை நீங்கள் தெளிவுபடுத்தலாம். சட்டவாதமாகவோ? மற்றொருவரைப்பற்றிக் குற்றம் சாட்டுவதற்கான செய்திக்கோர்வையாகவோ இல்லாமல் அப்படியொரு விளக்கத்தை முன்வையுங்கள் அதுவே ஆக்கவழியிலான விமர்சனத்திற்கு வழிசெய்யும். அப்படியல்லாதபோது உங்களின் தமிழ்த்தேசியப் பற்றும்கூட திடீரெனத் தோன்றிய சந்தப்பவாதமாகவே அறிந்துகொள்ளப்படும்.
elangovan anban
குறைந்தபட்சம், பெரியார் கனவுகண்ட தமிழ்தேசியம் குறித்தோ, அல்லது பழ.நெடுமாறன் கனவுகண்ட தமிழ் தேசியம் குறித்தோ, விரிவான பதிவை முன்வைத்தீர்களேயானால், என்னைப் போன்றவர்கள் நாம் தமிழர் இயக்கத்தின் *** தமிழ்த்தேசியத்தோடு அது ஒட்டிவருகிறதா என்பதை ஒப்பிட்டு புரிந்துகொள்ள வாய்ப்பாயிருக்கும்.
Tamizhdesian
inthiyaaa muzhuvathum desiya ena ezhuchchi uruvaahi varuvaavathai karuththil kollavendum. Srinagaril desiyakkodiyai erra mudiyavillai. Inthiya arasial sattathai aatchchiyalarkale udaikkirarkal. Vada kizhukku maanilangakalil nadappanavatrai makkalidam koorungal. Tamizh desiam sariyana thisaiyil sellum.i
SAMARAN BALA
இன்றைய அரசியல் சமூக சூழ்நிலையில் சீமானின் நடவடிக்கைதான் சிறப்பானது. எந்த ஒரு தமிழ் தேசிய தலைவரும் கட்டி அமைக்காத தமிழ் இளைஞர்களின் அமைப்பை கட்டி எழுப்பி ஒரு மாற்று அரசியலுக்கான விதையை விதைத்திருக்கிறார். இளவரசன் என்ன எல்லோரையும் துப்பாக்கி கொண்டு தமிழ் தேசியம் அமைக்கச் சொல்கிறாரா? முதலில் மக்களிடைய தமிழ் தேசியத்தை பரப்பவேண்டும் . சீமானின் வழிகள் சரியானது. சரியில்லை என்பவர்கள் மாற்று வழிகளை முன்னேடுக்கலாமே? இடம் கிடைத்தால் எதை வேண்டுமானாலும் எழுதலாம்! ஆனால் அது மருந்துக்கு கூட உதவாது. தமிழன் தானும் செய்யமாட்டான். செய்கிறவர்களையும் செய்ய விடமாட்டான்!
புரவி
தோழர் அசோகன்,
இன்னும் அவர் சொன்னார் இவர் சொன்னார் என்றுதான் சொல்கிறீர்களே தவிர அவரை மாதிரி நடக்க முயற்சிக்க மாட்டேன்கிறீர்களே?
ஊழல் பேர்வழி செயலலிதாவுடன் கூட்டணியை வைத்து கொண்டு எதை நீங்கள் இங்கு சாதிக்க போகிறீர்கள்?
ஈரோட்டுப்பேராற்றல்
இன்றைய அரசியல் சமூக சூழ்நிலையில் சீமானின் நடவடிக்கைதான் சிறப்பானது. எந்த ஒரு தமிழ் தேசிய தலைவரும் கட்டி அமைக்காத தமிழ் இளைஞர்களின் அமைப்பை கட்டி எழுப்பி ஒரு மாற்று அரசியலுக்கான விதையை விதைத்திருக்கிறார். இளவரசன் என்ன எல்லோரையும் துப்பாக்கி கொண்டு தமிழ் தேசியம் அமைக்கச் சொல்கிறாரா? முதலில் மக்களிடைய தமிழ் தேசியத்தை பரப்பவேண்டும் . சீமானின் வழிகள் சரியானது. சரியில்லை என்பவர்கள் மாற்று வழிகளை முன்னேடுக்கலாமே? இடம் கிடைத்தால் எதை வேண்டுமானாலும் எழுதலாம்! ஆனால் அது மருந்துக்கு கூட உதவாது. தமிழன் தானும் செய்யமாட்டான். செய்கிறவர்களையும் செய்ய விடமாட்டான்!
vinayagam.r
தமிழன் தானும் செய்யமாட்டான். செய்கிறவர்களையும் செய்ய விடமாட்டான்!

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.