கீற்றில் தேட...
அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- பரிதி
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
2007 - 2012 காலகட்டத்தில் இந்தியாவில் கழுதைகளின் எண்ணிக்கை 23 விழுக்காடு வீழ்ச்சி அடைந்தது. 2012 - 2019 ஆண்டுகளில் அது மேலும் 61.23% வீழ்ந்து, இப்போது வெறும் 1,20,000 கழுதைகள் மட்டுமே உள்ளன.
இது உலகளாவிய போக்காக உள்ளது. சீனாவில் பாரம்பரிய மருந்து உற்பத்தி செய்வதற்கென உலகம் முழுவதிலும் இருந்து கழுதைகள் திருட்டுத்தனமாகவும், நேரடியாகவும் கடத்தப் படுகின்றன.
சீனாவில் ஆண்டுக்குச் சுமார் 48 லட்சம் கழுதைத் தோல்கள் தேவைப்படுகின்றன. சீனாவில் 1992-இல் ஒரு கோடியே பத்து லட்சம் கழுதைகள் இருந்தன; இப்போது வெறும் 26 லட்சமாகச் சுருங்கி விட்டன.
உலகெங்கும் ஒடுக்கப்பட்ட பிரிவினர் - குறிப்பாகப் பெண்கள் - உடைய வாழ்வாதாரத்துக்குக் கழுதைகள் பேருதவியாக உள்ளன. தண்ணீர் கொண்டு செல்லுதல், உடல்நலம் குறைந்தோரை மருத்துவமனைகளுக்கும், குழந்தைகளைப் பள்ளிக்கும் கொண்டு செல்லுதல் போன்றவற்றுக்குக் கழுதைகள் பயன்படுகின்றன.
கடத்திச் செல்லப்படும் கழுதைகள் மிக மோசமான முறையில் நடத்தப் படுகின்றன. அதன் விளைவாக ஐந்தில் ஒரு பங்குக் கழுதைகள் வழியில் இறந்து விடுகின்றன.
https://thewire.in/environment/is-indias-donkey-population-falling-prey-to-chinese-ejiao-producers
---------------------
உலகின் காடுகள், புல்வெளிகள், 'தரிசு' நிலப் பகுதிகள், பனிப் பாறைப் பகுதிகள், சதுப்பு நிலங்கள் ஆகியவற்றில் சுமார் 4,35,000 வகையான புதலிகள் இருப்பதாக அறிவியலாளர்கள் கணிக்கின்றனர்.
பசுங்குடில் வளி வெளியீடு, புவி சூடேறுதல், காடழிப்பு உள்ளிட்ட செயற்பாடுகளின் விளைவாக மேற்கண்ட நிலப் புதலிகளில் (அதாவது, நீர் நிலைகளில் அல்லாது நிலத்தில் வளரும் செடி, கொடி, மர வகைகள்) நாற்பது விழுக்காடு அழியுந் தருவாயில் உள்ளன!
நம் மிதமிஞ்சிய நுகர்வு, அதைத் தொடர்ந்து ஊக்குவிக்கும் ('முதலாளித்துவம்' எனப்படும்) முதலாண்மைப் பொருளாதார முறைமை ஆகியவையே இந்தப் பேரழிவுக்குக் காரணங்கள்.
நமக்கு உணவாகப் பயன்படுகின்ற புதலிகளின் 'உறவுகளும்' அழிந்து வரும் புதலியினங்களில் அடங்கும். இது நம் வருங்கால உணவு உற்பத்தியைக் கடுமையாகப் பாதிக்கக்கூடும். (இப்போது நாம் விளைவிக்கும் பயிர்கள் புதுப் புது நோய்களால் தாக்கப்படல், சூழல் மாறுபாட்டால் விளைச்சல் குன்றுதல் போன்ற சிக்கல்களை எதிர்கொள்கையில் அப்பயிர் வகைகளின் 'உறவு'களில் இருந்து வலு மிக்க புதுப் பயிரினங்களை உருவாக்கும் வாய்ப்பு அதிகமுள்ளது. ஆனால், அப்படி உறவாகும் உயிரினங்கள் அழிந்து விட்டால் புது ரகங்களை உருவாக்குவது மிகக் கடினமாகிவிடும்.)
- பரிதி
- விவரங்கள்
- பாண்டி
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
கிராமப் புறங்களில் ஆடு வளர்ப்பு என்பது இயல்பானதாக இருக்கும். ஏனெனில், அதற்குப் பிரத்தியேகமாக ஏதும் செலவு செய்து தீவனம் வாங்கத் தேவையில்லை. வயக்காட்டு ஓரங்களில், குளங்களை ஒட்டிய காடுகளில், ஆற்றுப் படுகைகளில், உடைமரம் அதிகம் இருக்கும் பகுதிகளில் உள்ள புற்களை மேய்ந்து விடும், பின்னர் அதுவே செரிமானமாகி வெளிவரும் ஆட்டுப் பழுக்கைகள் சூழலியலுக்கு ஏற்றதாக மாறிவிடும்.
எங்கள் ஊர்ப் பகுதிகளில் பெரிய ஆட்டு மந்தைகள் வைத்திருக்கும் குடும்பங்களைப் பார்த்திருக்கிறேன். அவர்கள் ஆடுகளை வெவ்வேறு வயக்காட்டுப் பகுதிகளுக்கு அழைத்துச் சென்று 'ஆட்டுக் கிடை' அமைப்பார்கள். பகல் முழுவதும் ஆடுகள் காட்டுப் பகுதியில் மேய்ச்சல் செய்துவிட்டு, இரவில் அந்த கிடைகளில் தட்டி வைத்து உறங்க வைத்து விடுவார்கள். காலையில் அவை படுத்திருந்த இடங்கள் முழுவதும் ஆட்டுப் புழுக்கைகளாக இருக்கும். அடுத்த நாள் வேறு இடத்திற்கு மாற்றி விடுவார்கள். இப்படிச் செய்வதால் நுண்ணுயிர்கள் பெருகும், இயற்கை உரம் அந்த மண்ணில் கால்நடைகள் மூலமாகக் கிடைத்துவிடும்.
அமெரிக்காவிலும் இந்த முறையைக் கையாளுகின்றனர். இயற்கை உரத்திற்காக அல்ல. காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் ஒரு பகுதியாக - ஆடுகளை மலையோர காட்டுப் பகுதிகளில் இருக்கும் காய்ந்த புற்களை மேய்வதற்காக!
'கலிபோர்னியா' என்றால் முதலில் நம் நினைவுக்கு வருவது 'ஹாலிவுட்' இல்லை என்றால் 'சிலிக்கான் பள்ளத்தாக்கு' (Silicon valley). ஆனால், அமெரிக்க மக்களைக் கேட்டால் வேறு விதமாக 'Shake, Bake & Spin' எனச் சொல்வார்கள்.
ஆம், கலிபோர்னியாவில் ஆண்டுதோறும் கோடை காலத்தில் ஏதாவது ஒரு மலைக் காடுகளில் தீ எரிவது வழக்கமாக உள்ளது. 2018ல் வடக்கு கலிபோர்னியாவில் உள்ள பேரடைஸ் பள்ளத்தாக்குப் பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீ, (camp fire) அந்தப் பகுதியையே சாம்பல் காடாக்கியது. ஒரு வாரத்திற்கு மேலாகத் தொடர்ந்து எரிந்த காடுகள், பல மனித உயிர்களையும் வன விலங்குகளையும் பலி கொண்டது. இதில் தோராயமாக 600,000 ஏக்கர் பரப்பளவில் வனக் காடுகள் எரிந்தது.
கடந்த ஆண்டு அதேபோல் லாஸ் ஏஞ்சல்ஸ் அருகில் உள்ள காட்டுப் பகுதியிலும், மாலிபு பள்ளத்தாக்கிலும் ஏற்பட்ட காட்டுத் தீ (Woolsey fire), சுமார் 100,000 ஏக்கர் பரப்பளவில் காடுகளை சாம்பலாக்கியது.
2017, 2018 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட காட்டுத் தீ, கலிபோர்னியா வரலாற்றில் மிகவும் தீவிரமான அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது ஆகும்.
2019 ஆம் ஆண்டும் காட்டுத் தீ, கலிபோர்னியா மாகாணத்தை மிகக் கொடூரமாக சேதப்படுத்தியது. இவையனைத்தும் புவி வெப்பமயமாதலுடன் தொடர்பு உடையது என்பதும் குறிப்பிடத் தக்கது.
கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள தீயணைப்புத் துறையினரும், சில நகரங்களில் அரசுத் துறையினரும் காட்டுத் தீ பரவுவதைத் தவிர்க்க, புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதில் ஒன்றுதான் கால்நடைகளை புற்கள் அதிகம் உள்ள பகுதியில் மேய்ச்சலுக்குப் பயன்படுத்துவது. இது அந்த நகரத்தில் உள்ள மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு தென்கிழக்குப் பகுதியில் உள்ள அனாகிம் நகரின் நகராட்சி நிர்வாகம். காட்டுத் தீ பரவாமல் இருக்க ஒரு திட்டமாக (Anaheim, City Hall) ஆட்டு மந்தைகளைப் பயன்படுத்தலாம் என்று ஒரு தனியார் நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளனர். புகழ் பெற்ற 'டிஸ்னி லேண்ட்' இந்தப் பகுதியில் தான் உள்ளது.
Deer Canyon Park பகுதிகளில் இருக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட மலைக் குன்றுகளில் இருக்கும் காய்ந்த புற்களை மேய்வதற்கு, கால்நடைகள் குறிப்பாக ஆடுகளை அதிகளவில் ஈடுபடுத்த முயற்சிகள் செய்திருக்கிறார்கள். இதனால் அதிகளவில் காட்டுத் தீ பரவுவதைத் தடுக்கலாம். "காடுகளில் ஏற்படும் தீயானது, தொடர்ந்து பரவி அதிகமாக விரிவடைய காய்ந்த புற்கள் அதற்கு 'Fuel' ஆக மாறி விடுகிறது. காய்ந்த புற்களை ஆடுகள் தின்று, செரிமானமாகிய அதன் புழுக்கைகள் நுண்ணுயிர்களுக்கு உணவாக அமையும், அதே வேலையில் தீயையும் கட்டுப்படுத்தலாம். ஒரு வகையில் இது ஒரு சூழலியல் முறை (ecology) தான்" என்கிறார் Environmental Land Management மேலாளர் ஜானி ஹோன்சாலேஸ்.
பேராசிரியர் Bethany Bradley, professor of environmental conservation at UMass Amherst and co-author of the study, "மழை பொழியும் பருவ காலங்களிலும் காட்டுத் தீ ஏற்படுவதைத் தடுக்க முடியவில்லை, எனினும் அடுத்த பருவம் (Spring) தொடரும் போது இளம் புற்கள் வளர ஆரம்பித்து விடும். இந்த உயிரியல் சுழற்சி தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கும். இப்படி வளரும் புற்களை உண்டு உயிரியலை சுழற்சி முறையைக் காக்க, ஆடுகள் ஆகச் சிறந்த வேலையை செய்கின்றன. ஆடுகள் புற்களை நல்ல மேய்ந்து தின்னும், ஆனால் அதில் உள்ள சிக்கல் என்னவென்றால், அவைகளை வைத்து ஒருமுறை மட்டும் இப்படி செய்தால் போதாது. தொடர்ந்து காட்டில் உயிரியல் சுழற்சி நடைபெற கால்நடைகள் ஒவ்வொரு முறையும் ஈடுபடுத்தப்பட வேண்டும்." (https://www.npr.org/2020/01/05/792458505/california-cities-turn-to-hired-hooves-to-help-prevent-massive-wildfires)
கால்நடைகளைக் கொண்டு மேற்கொள்ளும் இந்த முறையானது, தீ பரவுவதைப் தவிர்க்க பரவலாக சூழலியல் ஆர்வலர்களால் முன்வைக்கும் முறையில் ஒன்று. இதை மறுப்பவர்களும் உண்டு. அதாவது, "ஆடுகளை எல்லா இடத்திலும் கொண்டு போக முடியாது. ஆடுகள் போக முடியாத இடங்களில், பல மடங்கு உயரத்தில் புற்கள் வளர்ந்து இருக்கும். அவைகளை எப்படி அகற்ற முடியும்?" என்கிறார்கள்.
பொதுவாக தீ எந்த இடத்தில் ஏற்பட்டாலும் அது தொடர்ந்து எரிய மூன்று இன்றியமையாத காரணிகள் உண்டு. அதை 'Fire triangle' என அழைப்பார்கள். அதாவது Heat, Fuel, Oxygen. இதில் ஒன்றைத் தடுத்து நிறுத்திவிட்டால் தீ தானாகவே அணைந்து விடும். காடுகளில் தீ தொடர்ந்து எரிவதற்க்கு 'Fuel' ஆக காய்ந்த புற்கள், இலை, தழைகள் அமைந்து விடுகிறது.
ஆதலால் காட்டுத் தீ ஏற்பட்டால் அதிக பரப்பளவில் படராமல் இருக்க கால்நடைகளைப் பயன்படுத்தும் முயற்சியும் வரவேற்க்கத் தக்கது.
- பாண்டி
- விவரங்கள்
- பரிதி
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
உலகளவில் பாம்புக்கடியால் இறப்போரில் பாதிப்பேர் இந்தியர்கள். ஆண்டுதோறும் சுமார் 46,000 இந்தியர்கள் பாம்புக் கடிபட்டுச் சாகிறார்கள். அதைவிட மும்மடங்கினர் உடற்குறையால் வாழ்க்கை முழுக்க அல்லற்படுகிறார்கள்.
இந்தியாவில் சுமார் முந்நூறு வகைப் பாம்புகள் உள்ளன. அவற்றில் பதினைந்து வகை மட்டுமே மனிதர்களைக் கொல்லுமளவு நஞ்சுள்ளவை. தமிழ்நாட்டில் உள்ள பாம்புகளில் நாகப் பாம்பு, கட்டு விரியன், கண்ணாடி விரியன், சுருட்டை விரியன் ஆகிய நான்கு மட்டுமே நஞ்சுள்ளவை. சாரை, கொம்பேறி, பச்சைப் பாம்பு, மண்ணுளிப் பாம்பு ('இரண்டு தலைப் பாம்பு') உள்ளிட்ட பிற பாம்புகள் நஞ்சற்றவை.
ஏழைகளே பாம்புக் கடியால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக, ஊர்ப் புறங்களில் வாழ்வோர்; அதிலும் குறிப்பாக உழவர்கள். ஆனால், கூடுதல் விழிப்புடன் இருப்பதன் மூலம் பாம்புக் கடியால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையைப் பெருமளவு குறைக்க முடியும்.
(நான்கு நாள்களுக்கு முன்னர் வீட்டுக்கு வெளியில் ஒரு சிறு பெட்டியில் (10 செ.மீ. விட்டம், 7 செ. மீ. ஆழம்) இரண்டு (நஞ்சில்லாத) பாம்புகள் சுருண்டு படுத்திருந்தன. அந்தப் பெட்டியில் எரிவளி அடுப்பு 'வால்வுகள்' ஏழு உள்ளிட்ட சில இரும்புச் சாமான்கள் ஏற்கெனவே இருந்தன!
பெட்டியைக் கையில் எடுத்து ஒரு வாளியில் வைத்து வீட்டில் இருந்து சுமார் அறுபது மீட்டர் தொலைவில் கொண்டுபோய் விட்டோம். அதுவரை அசையாமல் இருந்த பாம்புகள் நாங்கள் அங்கிருந்து அகன்றபின் அவை காட்டுக்குள் சென்று விட்டன.)
உலகில் பாம்புக் கடியால் இறப்போர் அல்லது முடமாவோர் எண்ணிக்கையை 2030-க்குள் பாதியாகக் குறைக்க வேண்டும் என்பது உலக நலக் கழகத்தின் (World Health Organization (WHO)) எதிர்பார்ப்பு. இந்தியாவைப் பொருத்தவரை நடுவணரசும் மாநில அரசுகளும் அதிக அக்கறை காட்டினால் மட்டுமே இது நிறைவேறும்.
வீடுகளின் கதவுகள், சன்னல்கள் ஆகியவற்றுக்கு வலைப் பின்னல்களுள்ள கதவுகளைப் பொருத்துவதன் மூலம் பாம்புகள் மட்டுமின்றி நம்மைப் பல நோய்களுக்கு உள்ளாக்கும் கொசுக்களில் இருந்தும் பாதுகாக்கலாம். பொருளாதார வசதி குறைந்த குடும்பங்களுக்கு அரசு உதவி செய்ய வேண்டும். இதை உடனடியாகச் செய்வது நாட்டுக்கு நல்ல பலன் தரும்! (ஆனால், செய்து முடித்ததாக வெற்றிக் 'கணக்குக் காட்டுவதையும்' இடைத் தரகர்கள் பணம் கறப்பதையும் தவிர்க்க வேண்டும்!)
அதுபோலவே, உழவர்கள், உழவுத் தொழிலாளர்கள் ஆகியோருக்கு முழங்கால் வரை பாதுகாப்புத் தரும் மூடணிகளையும் ('பூட்சு') மலிவு விலையில் அல்லது இலவயமாக அரசு தருவது மிகுந்த பலனளிக்கும்.
நஞ்சுமுறிப்பு (anti-venom) மருந்து தான் பாம்புக்கடிக்கு இந்தியாவில் பயன்படுத்தப்படும் ஒரே தீர்வு. நாம் முன்னர் குறிப்பிட்ட நான்கு வகை நச்சுப் பாம்புகளின் நஞ்சுகளை ஒன்று சேர்த்து அதிலிருந்து நஞ்சுமுறிப்பு உருவாக்கப்படுகிறது. இந்தியா முழுவதும் பயன்படுத்தப்படும் நஞ்சுமுறிப்பு தமிழ்நாட்டில் மட்டும் தயாரிக்கப்படுகிறது. அதில் இருளர் கூட்டுறவு அமைப்புகள் பெரும்பங்கு வகிக்கின்றன. (இருளர்கள் இந்தியாவின் தொல்குடிகள்; ஆனால் தாழ்த்தப்பட்டவர்கள் / ஒடுக்கப்பட்டவர்கள்.)
இதில் சிக்கல் என்னவெனில், ஒரே வகைப் பாம்பின் நஞ்சு இந்தியா முழுவதிலும் ஒரே மாதிரி இருப்பதில்லை. எடுத்துக்காட்டாக, சிந்துப் பகுதியில் வாழும் கட்டுவிரியனின் நஞ்சு பிற கட்டுவிரியன்களின் நஞ்சைக் காட்டிலும் ஐந்து மடங்கு வீரியமுள்ளது! ஒற்றைச் சக்கர நாகப் பாம்பைப் பொருத்தவரை, மேற்கு வங்கத்தில் உள்ளவற்றின் நஞ்சும் அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ளவற்றின் நஞ்சும் வெவ்வேறு வேதிப் பொருள்களைக் கொண்டவை!
இந்தக் காரணத்தாலும் இருளர் சங்கங்களின் நஞ்சுமுறிப்பு உருவாக்கும் முறைகள் நவீனப்படுத்தப்படாத காரணத்தாலும் தமிழ்நாட்டில் தயாரிக்கப்படும் நஞ்சுமுறிப்புகள் இந்தியா முழுமையிலும் பயன்படுத்தத் தக்கன அல்ல என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இருளர்களின் செயல்முறைகளை நவீனப்படுத்துவதில் தமிழக அரசு உடனடியாக கவனஞ் செலுத்த வேண்டும் என்கிறார் இருளர் கூட்டுறவுப் பண்ணைகளைத் தொடங்கியதில் பங்கு வகித்த ரோமுலஃச் விட்டேகர் (Romulus Whitaker).
இயற்கையின் படைப்பில் பாம்புகளுக்கும் முதன்மையான இடமுள்ளது. எலிகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதில் பாம்புகளின் பங்கு குறிப்பிடத்தக்கது. எலிகள் பெருகினால் நமக்கு உணவுத் தட்டுப்பாடு, எலியால் பரவும் நோய்கள் ஆகியவை பெருகும் (ப்ளேக் - plague உள்ளிட்ட சுமார் பத்து வகை நோய்கள்; இவற்றில் சில நோய்கள் அணில்களாலும் பரவும். விவரங்களுக்கு: https://www.cdc.gov/rodents/diseases/direct.html.
எலிகளால் இந்தியாவில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள உணவு தானியங்கள் ஆண்டுதோறும் வீணாகின்றன. வீணாவது பணம் மட்டுமன்று; அந்த உணவு தானியங்களை உற்பத்தி செய்வதற்குப் பயன்படுத்திய உழைப்பு, மின்னாற்றல் உட்படப் பிற ஆற்றல்கள், உற்பத்தியால் நேர்ந்த சூழல் கேடுகள் ஆகிய அனைத்தும் தேவையற்றவை ஆகின்றன.
ஆனால், பாம்பைப் பார்த்தவுடன் அஞ்சி ஓடுவது அல்லது அதை அடித்துக் கொல்வதுதான் நம் உடனடிச் செயல்களாக உள்ளன. எந்தப் பாம்பும் தானாக நம்மைத் துரத்தவோ, கொத்தவோ செய்யாது. அதை நாம் மிதித்தால் அல்லது தாக்கினால் மட்டுமே திருப்பித் தாக்கும். இல்லையேல் நம்மிடமிருந்து தப்பி மறைவதற்கே முயலும்.
எலிகளைக் கட்டுப்படுத்துவதற்குப் பூனை வளர்க்கலாம் என்பது பரவலான கருத்து. ஆனால் பூனைகள் பல வகைப் பறவைகளையும் ஒழித்துவிடும். (வளர்ப்பு நாய்களும், பூனைகளும் பறவையின அழிப்பில் பெரும்பங்கு வகிப்பது ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.) பறவைகள் நமக்கும் பயிர்களுக்கும் தீங்கு செய்யும் புழு பூச்சிகளைக் கட்டுப்படுத்துகின்றன; பூந்தூள் ('மகரந்தம்') சேர்க்கையில் முதன்மைப் பங்கு வகிக்கின்றன என்பதை நாம் மனத்தில் கொள்ள வேண்டும்.
பாம்புகளை மட்டுமின்றி, வீட்டருகே வரும் தவளைகளையும் பலர் கொன்று விடுகின்றனர்; அவற்றைப் பிடிப்பதற்குப் பாம்பு வரும் என்கிற காரணத்தால். ஆனால், தவளைகள் நமக்கும் பயிர்களுக்கும் தீங்கு செய்யும் பூச்சிகளை உண்பதன் மூலம் நமக்கு மிகவும் நன்மை செய்கின்றன.
உலகில் இயற்கையாகத் தோன்றி வளரும் அனைத்து உயிரினங்களுக்கும் உயிர் வாழும் உரிமையும் இயற்கைச் சுழற்சிகள், உணவு வளையங்கள் போன்றவற்றில் பங்கும் உள்ளது. இவை நமக்குப் பல்வேறு விதங்களில் அளப்பரிய உதவி செய்கின்றன. இவற்றைப் பற்றி நாம் அறிந்தது கைம்மண் அளவு; கல்லாதது உலகளவு. ஆனால், நம் செயல்பாடுகளால் நாள்தோறும் நூற்றுக் கணக்கான வகை உயிரினங்களைப் பூண்டோடு ஒழித்து வருகிறோம் என்றும், இதன் விளைவுகள் நம் இருப்பைக் கேள்விக்குள்ளாக்கி விட்டன என்றும் சூழலியல் அறிஞர்கள் தொடர்ந்து எச்சரிக்கின்றனர்.
எடுத்துக்காட்டாக, நாம் வெறுக்கும் உயிரினங்களில் கொசுவும் ஒன்று. உலகிலுள்ள 3,500 வகையான கொசு வகைகளில் ஒரு சில மட்டுமே - குறிப்பாக, அந்தச் சில வகைகளின் பெண் கொசுக்கள் மட்டும் - நம்மைக் கடிப்பதிலும் அதன் மூலம் நோய்களைப் பரப்புவதிலும் பங்கு வகிக்கின்றன. ஆனால், (1) மீன்கள், தட்டான்கள், தவளைகள், சில வகைப் பறவைகள் போன்றவற்றுக்கு உணவாவதன் மூலம் இயற்கையின் உணவு வளையத்தைப் பேணுதல், (2) பல வகை மலர்ச் செடிகளின் பூந்தூள்ச் சேர்க்கையில் முதன்மைப் பங்கு வகித்தல், (3) உயிரியத் தொகுதியை (biomass) நீர் நிலைகளில் இருந்து தரைப் பகுதித் திணைக் களங்களுக்கு (terrestrial ecosystem) மாற்றுதல் போன்றவற்றில் கொசுக்களுக்குப் பங்குள்ளது. [உயிரித் தொகுதியை மாற்றுதல் என்பதன் விளக்கம்: கொசுவின் தோற்றுவளரிகள் - 'லார்வாப்' புழுக்கள் - நீர் நிலைகளில் வளர்கையில் அவற்றிலுள்ள அழுகிய புதலிகளை ('தாவரங்களை') உட்கொள்கின்றன. பின்னர், அவை கொசுவாக மாறிப் பறந்து செல்வதால் நீர் நிலைகளில் இருந்த அழுகிய உயிரிப் பொருள்கள் வேறு வடிவில் தரைப் பகுதிக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. உலகளவில் இவ்வாறு கொசுக்களால் மாற்றப்படும் பொருள்களின் எடை சில கோடி கிலோ இருக்கும்!]
சூழல் கேடுகளால் வேளாண்மை பல வகைகளில் மிக அதிகம் பாதிக்கப்படுகிறது. இது பின்னர் அனைத்து மக்களையும் பாதிக்கும் என்பது வெளிப்படை. பொருளாதார வசதி அதிகம் உள்ளோர் சூழலைக் கெடுப்பதில் அதிகப் பங்கு வகிக்கின்றனர். உழவர்களும் வேதி நஞ்சுகளையும் உரங்களையும் பயன்படுத்துவதன் மூலமும் பிற வகைகளிலும் உயிரினப் பன்மயத்தை ஒழித்தல், நில - நீர் வளங்களை மாசுபடுத்துதல் ஆகிய சூழல் கேடுகளுக்குக் காரணிகளாக உள்ளனர்.
ஆனால், இவையனைத்துக்கும் அடிப்படைக் காரணம் முதலாண்மைப் பொருளாதார முறைமையே என்பது தெளிவு. ஆகவே, அதை அடியோடு மாற்றாதவரை நம் துன்பங்கள் அதிகரிக்குமேயொழியக் குறைய மாட்டா!
பாம்புகள் பற்றிய பல தகவல்களுக்கு மூலக் கட்டுரை: Aathira Perinchery, "India Has a Big Problem: Its Snake Anti-Venoms May Not Work Properly", The Wire, 2019 Dec 06, https://thewire.in/the-sciences/snakebites-anti-venom-irula-cooperative-cobra-krait-viper-romulus-whitaker.
கொசுக்கள் பற்றிய தகவல்களுக்கு மூலக் கட்டுரை: Daniel AH Peach, "The secret world of mosquitoes reveals their larger role in our environment", Scroll, 2019 Dec 04, https://scroll.in/article/945673/the-secret-world-of-mosquitoes-reveals-their-larger-role-in-our-environment
- 'பரிதி' (ராமகிருச்ணன்), சத்தியமங்கலம், ஈரோடு (மா)
- விவரங்கள்
- வி.களத்தூர் பாரூக்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
"திணைத்துணை நன்று செயினும் பனைத்துணையாகக்
கொள்வார் பயன்தெரி வார்"
நன்றியின் பயனை பனையின் பயனோடு ஒப்பிட்டு எழுதியிருக்கிறார் நம் வள்ளுவர். தென்னை மரம் கிபி 2ம் ஆண்டிற்கு பின்தான் இங்கு அறிமுகமானது. ஆனால் பனை மரம் அதற்கு முன்பிருந்தே பயன்பாட்டில் இருந்து வருகிறது.
"தென்னையை விதைத்தவன் தின்றுவிட்டுச் சாவான்
பனையை விதைத்தவன் பார்த்துவிட்டுச் சாவான்"
கிராமங்களில் புழங்கும் சொல்வழக்கு இது. பனைமரங்கள் பண்டைய காலம்தொட்டே தமிழர்களின் வாழ்வியலோடு ஒன்றெனக் கலந்திருக்கின்றன. பனைமரத்தில் இருந்து ஏதாவது ஒரு பொருள் மனிதனுக்கு எப்படியாவது பயன்பட்டு வருகிறது. அந்த அளவில் அதிக பயன்களை அது கொண்டிருக்கிறது. பண்டைய இலக்கியங்களை ஓலைச்சுவடிகள் மூலம் பாதுகாத்தது முதல் கோடை காலங்களில் நாம் விரும்பி சாப்பிடும் நுங்கு வரை பனை மரங்களில் இருந்தே கிடைக்கப் பெறுகின்றன.
நிலத்தடி நீரை சேமித்து வைப்பதில் பனைமரங்கள் சிறந்து விளங்குகின்றன. பயிரிடப்படாமல் இயற்கையிலேயே தானாக வளரும் தன்மையை பனை மரம் பெற்றிருக்கிறது. பனை வளர்ந்து முதிர்ச்சியடைவதற்கு 15 ஆண்டுகளை எடுத்துக் கொள்கிறது. இளம் பனைகள் வடவி என்று அழைக்கப்படுகிறது. அமெரிக்கா, ஜப்பான், இத்தாலி, பிரிட்டன் போன்ற நாடுகளுக்கு பனைப் பொருட்கள் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதன் வர்த்தக மதிப்பு ரூ. 200 கோடி ஆகும்.
முளைத்து கிழங்குவிட்ட பனை விதை மிகச் சிறந்த சிற்றுணவாகப் பயன்படுகிறது. அதில் அதிக அளவு நார்ச் சத்துகள், தாதுப் பொருட்கள் உள்ளன. பனையிலிருந்து கிடைக்கப் பெறும் பதநீர் ஒரு குளிர்ச்சி தரும் பானமாக இருக்கிறது. பதநீரைக் காய்ச்சினால் பனைவெல்லம் என்று சொல்லக்கூடிய கருப்பட்டி கிடைக்கிறது. இது சிறந்த மருத்துவ குணம் கொண்ட இனிப்புப் பொருளாக இருக்கிறது.
அதேபோல் பனஞ்சோறு உடல் நலம் தரும் நீராகாரம். இதில் கொழுப்பு, புரதம், கனிமங்கள், உயிர்ச் சத்துக்கள், சுண்ணாம்பு, இரும்பு, கரிநீரகி ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது எலும்புருக்கி நோயைக் குணப்படுத்தும் என்று சொல்கிறார்கள். இதுபோக நுங்கு, பதநீர், பனங்கற்கண்டு போன்றவைகளும் பனையிலிருந்து கிடைக்கின்றன. பனை ஓலைகளைக் கொண்டு கூடைகள், தொன்னைகள், குதிர்கள், பெட்டிகள், பாய்கள் போன்றவற்றை செய்யலாம். பனை ஓலையில் வைக்கப்படுகின்ற பொருட்கள் எளிதில் கெட்டுப் போகாது என்பது அதற்கு கூடுதல் சிறப்பைத் தருகிறது.
மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் பல உயிரினங்களுக்கும் வாழ்வைத் தருகிறது பனைமரம். காடுகள் அழிந்து வருவதால் பல உயிரினங்களின் ஆதாரமாக பனைமரம் விளங்குகிறது. பனையின் வேர்ப் பகுதியில் எறும்புகளும், பூச்சிகளும் பல சிறு செடிகளும் வாழ்கின்றன.
பனையின் வேர்ப்பகுதியில் விழும் தாவரங்களின் விதைகள் பனையை சுற்றியே வளர்கின்றன. இயற்கையிலேயே அரச மரங்கள், ஆலமரங்கள் பெரும்பாலும் பனையை ஒட்டியே வளர்கின்றன. பனையின் நடுப்பகுதியில் ஓணான்களும், பல்லிகளும் வாழ்கின்றன. பனையின் கழுத்துப் பகுதி மற்றும் பனையின் ஓலைகளில் பல வகையான வௌவால்களும், சிறு சிறு குருவிகளும் வாழ்கின்றன. ஒரு வௌவால் ஒரு இரவுப் பொழுதில் பல நூற்றுக்கணக்கான ஈக்களையும், கொசுக்களையும் பிடித்து உண்டு வருவதால் அதனால் விவசாயம் செழிக்க உதவுகிறது. இதுபோக அணில்கள், பருந்துகள், தூக்கணாங்குருவி போன்றவைகள் கூடுகட்டி வாழ்வதற்கான இடமாக பனைமரம் இருக்கின்றது.
இதுபோன்று பனைமரங்களின் பயன்களை அடுக்கிக் கொண்டே போகலாம். அதனால்தான் தமிழர்களின் மரமாக பனை மரம் இருக்கிறது. தமிழர்களின் இலக்கியங்களிலும், சித்த மருத்துவத்திலும் பிரதான இடத்தை அது பெற்றிருக்கிறது. பனையின் பெயரைக் கொண்டு பல கிராமங்கள் தமிழகத்தில் இருக்கின்றன. பனங்குடி, பனையூர், பனைமரத்துப்பட்டி ஆகியவைகளை உதாரணமாகக் கொள்ளலாம். வழிபாட்டிற்குரிய மரமாகக்கூட சில இடங்களில் பனை மரங்கள் விளங்குகின்றன.
தமிழர்களோடு இணைந்து பிணைந்திருந்த பனை மரத்தை தமிழர்கள் கைவிட்டு விட்டார்கள் என்பது வருத்தத்திற்குரிய செய்தியாக இருக்கிறது. சமீபத்தில் ருத்ர தாண்டவம் ஆடிய கஜா புயல் இதை நன்கு உணர்த்தியுள்ளது. புயலின்போது நிறைய மரங்கள் வீழ்ந்தன; வேரோடு சாய்ந்தன. தொலைத்தொடர்பு கோபுரங்கள், மின் கம்பங்கள் என எந்த ஒன்றையும் கஜா புயல் விட்டு வைக்கவில்லை. ஆனால் பனை மரங்கள் அந்த புயலைத் தாண்டியும் சாயாமல் நின்றதைப் பார்க்க முடிந்தது. எத்தனை பெரிய காற்றையும் தாங்கி நிற்கும் ஆற்றலை பனை மரம் பெற்றிருக்கிறது. புயல் பாதித்த மாவட்டங்களில் அதிகளவு பனை மரங்களை வளர்த்திருந்தால் அல்லது முன்பு இருந்த மரங்களை வெட்டாமல் இருந்திருந்தால் புயலால் இந்த அளவிற்கு பாதிப்புகள் ஏற்பட்டிருக்காது.
இனி வரும் காலங்களிலாவது பனை மரங்களை வளர்ப்பதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அப்போதுதான் அழியும் நிலையில் இருக்கும் பனை மரங்களைப் பாதுகாக்க முடியும்.
- வி.களத்தூர் பாரூக்
- அரசியலால் அழியும் அமேசான் காடுகள் - மிரட்டும் முதலாளிகள், துரத்தப்படும் பூர்வகுடிகள்...
- தேரியில் குடியிருக்கும் ஒரு கொல்லாமரத்தின் தாகம்
- பசுவினங்களும் பால் உற்பத்தியும்: நேற்று, இன்று, நாளை
- விலங்குகளில் செயற்கை முறை கருவூட்டல்
- இன்றைய வணிகக் கோழி உருவான அறிவியல்
- சீமைக் கருவேல மர அழிப்பில் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மைகள்!
- நாம் ஏன் யானைகளை நேசிக்கிறோம்?
- திசைகாட்டி தாவரம் தெரியும்?
- வேப்பமரத்தில் பால் வடிவது அம்மன் சக்தியாலா?
- மரத்தை வெட்டு எனும் முழக்கம் ஏன்?
- தூக்கணாங்குருவியின் சமூக வாழ்க்கை
- நம் உயிராதரங்களான காடுகளைப் பாதுகாக்க வாருங்கள்!
- சுற்றுப்புற வளமையில் காகத்தின் பங்கு
- இன்றைய உலகில் அயன மழைக் காடுகளின் சீரழிவும் பிரச்சினைகளும்
- பாரம்பரியத்தை பறைசாற்றும் பனைமரம் பாதுகாக்கப்படுமா?
- வானகமே... இளவெயிலே... மரச்செறிவே...!
- மேற்குத் தொடர்ச்சி மலை பாதுகாப்பு - செய்ய வேண்டியவை என்ன?
- தாவரங்களுக்கு உணர்வு உண்டா?
- தூக்கணாங்குருவி
- அழிவை நோக்கி நீலகிரி அறிக்குருவி (Nilgiri Pipit)