கீற்றில் தேட...
அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- கணியூர் சேனாதிபதி
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
நாட்டிலுள்ள காடுகளையும், இயற்கை வளங்களையும் என் கண்ணின் இமைகளைப் போல பாதுகாப்பேன் என்று கூறும் தலைவர்களுக்கு மத்தியில், நான் ஆட்சிக்கு வந்தால் அமேசான் காடுகளின் வளங்களை வணிகமாக்கி, நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவேன் என்று கூறி ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தவர் தான் தற்போதைய பிரேசில் அதிபர் ஜெய்ர்போல்சனாரோ.
அமேசான் காடுகளில் கடந்த நான்கு வாரங்களாக கொழுந்து விட்டு எரியும் காட்டுத் தீ உலகையே அச்சுறுத்தி வருகிறது. ஏனெனில், பூமிப் பந்தின் மொத்த பிராண வாயுவில் 20 சதவீதம் இங்குதான் உற்பத்தியாகிறது. அதேபோல, உற்பத்தியாகும் கார்பன் டை ஆக்ஸைடை பெருமளவில் உட்கொள்வதும் இந்தக் காடுகள்தான். அதனால் தான் அமேசானில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ பிரேசிலை மட்டுமில்லாது, உலக நாடுகள் அனைத்தையும் பாதிக்கும் என்பதால் தான், பிரான்ஸில் நடைபெற்ற ஜி7 மாநாட்டில் அமேசானில் எரிந்து வரும் தீயை அணைக்க 20 மில்லியன் டாலர் வழங்குவதற்கு அனைத்து நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன.
எரியும் தீக்குப் பின்னர் ஒரு பெரிய வணிக அரசியல் உள்ளது என்று பிரேசில் நாட்டு சூழலியலாளர்களே கூறுவதை அவ்வளவு எளிதில் கடந்து போக முடியாது. அது என்ன என்பது குறித்து இனி விரிவாகப் பார்ப்போம்...
அமேசான் காடுகளின் வளங்களை வணிகமாக்கி நாட்டின் பொருளாதாரத்தை வளர்த்தெடுப்போம் என 2018ம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தல் பிரசாரத்தின் போது ஜெய்ர்போல்சனாரோ கூறியது தான், இன்று எரியும் அமேசான் காட்டுத்தீக்கு காரணம் என்கின்றனர்.
இவரின் கவர்ச்சியான வாக்குறுதி, விவசாயிகள், கால்நடை வளர்ப்பவர்கள், வன வளங்களை வேட்டையாடும் மாஃபியா கும்பல்கள், பூமியைக் கிழித்து எண்ணெய் எடுக்கக் காத்திருக்கும் பெரும் முதலாளிகள் எனப் பலரையும் கவர்ந்திருந்தது. பிரேசிலிலிருந்து பெருமளவில் மாட்டிறைச்சி ஏற்றுமதி நடக்கிறது. இந்த மாடுகளை வளர்ப்பதற்கான மேய்ச்சல் நிலங்களுக்கு அமேசான் காடுகள் அவர்களுக்குத் தேவைப்பட்டது. இப்படியான பேராசைகளிலிருந்துதான் பிரச்சினை தொடங்கியது.
2019 ஜனவரியில் பிரேசிலின் புதிய அதிபராகப் பதவியேற்ற ஜெய்ர்பொல்சானேரோ, அமேசானின் ஏராளமான இயற்கை வளங்களை வைத்துக் கொண்டு யாரோ சில பூர்வகுடி மக்கள் எதிர்ப்பதால் அவற்றை வீணாக்கி விடக்கூடாது என்று சொல்லி, வனச் சுரண்டலுக்கான அச்சாரமிட்டார். 20 வருடங்களுக்குப் பின்பு, அமேசான் காடுகளில் சுரண்டல் மீண்டும் தலை தூக்கியது. இவரது திட்டங்கள் குறித்து சில முக்கிய ஆவணங்கள் கசிந்ததாக ஓப்பன் டெமாக்ரசி மற்றும் இண்டிபெண்டென்ட் ஆகிய இரண்டு இதழ்களும் செய்திகள் வெளியிட்டன. அதில் அமேசான் காடுகளை அழிப்பதே ஜெய்ர்போல்சனாரோவின் திட்டம் என்பதை சூழலியலாளர்கள் ஆமோதிக்கின்றனர்.
மேலும், இந்த ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் பொதுவாகவே காட்டுத் தீ ஏற்படுவது வழக்கம் தான். ஆனால், இம்முறை மனித நடவடிக்கைகளால் நடந்ததாகவே தெரிகிறது. எப்போதையும் விட இந்த வருடம் காட்டுத் தீ பாதிப்புகள் காணப்படுகின்றன. இதைப் பிரேசில் நாட்டின் விண்வெளி ஆராய்ச்சி மையமே (INPE) உறுதி செய்கிறது. இந்தக் காட்டுத் தீ பாதிப்புகள் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 84% அதிகம் என்கிறது அந்த அமைப்பு. ஜெய்ர்போல்சனாரோ ஆட்சிக்கு வந்த பிறகு பெருமளவில் காடுகள் அழிக்கப்பட்டிருப்பதையும் இந்த அமைப்பு கடந்த மாதம் சுட்டிக் காட்டியது. இதற்காக, இந்த அமைப்பின் இயக்குநரான ரிக்கார்டோ கால்வோவை பணி நீக்கம் செய்தது பிரேசில் அரசு.
ஈக்வடார் நாட்டிலிருக்கும் அமேசான் காட்டுப் பகுதியில் வாழும் வாவோரணி என்ற பழங்குடியின மக்கள் அந்தக் காட்டைச் சார்ந்து பல தலைமுறைகளாக வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் கடந்த மே மாதம், ஏழு மில்லியன் ஏக்கர் வனப்பகுதியை ஆக்கிரமித்து எண்ணெய் எடுக்கத் திட்டமிட்டிருந்த நிறுவனத்திற்கு எதிராகப் போராடித் தங்கள் உரிமைகளை மீட்டெடுத்தார்கள். அந்த நிறுவனம் எண்ணெய் எடுப்பதற்கு சாதகமாக வரவிருந்த சட்டத்தை நிறைவேற்ற விடாமல் வெற்றி கண்டனர். 'அது நடந்த சில நாட்களிலேயே அமேசான் காடு முழுக்கக் காட்டுத்தீ ஏற்பட்டிருட்டிருக்கிறது, அது மனிதர்களால் ஏற்பட்டது தான்' என்றும், 'அமேசான் மழைக் காடுகள், கோடை காலத்தில் கூட அவ்வளவு எளிதில் தீ பற்றக் கூடியவை அல்ல. கலிபோர்னியா, ஆஸ்திரேலியா போன்ற பகுதிகளிலுள்ள வறண்ட காடுகளைப் போல் இவை இல்லை. அதிகபட்சம் அடர்த்தியான ஈரப்பதம் மிக்க காடுகளைக் கொண்டது. அங்கு காட்டுத் தீ ஏற்படக் காரணம் மனிதர்களே' என்கிறார்கள் சூழலியலாளர்கள்.
அமேசான் மழைக் காடு கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கிறது. லட்சக்கணக்கான மரங்கள் சாம்பலாகி விட்டன. இதற்குக் காரணம், பண்ணையாளர்களும், பெருவிவசாயிகளும் தான். அவர்கள் இதைப் பிரச்னையின்றி செய்வதற்குத் தகுந்த வகையில் சட்டத்தை எளிமையாக்கியுள்ளார்கள். அதன் விளைவாகக் கட்டுப்பாட்டை மீறி காட்டுத் தீ வளர்ந்து விட்டது. அவர்கள் பற்ற வைத்த நெருப்பினால் உண்டான கோபம் அமேசானுக்கு இன்னும் அடங்கவில்லை என்று பிரேசிலைச் சேர்ந்த பழங்குடியினப் பெண்மணி கூறியுள்ளார்.
ஆனால், அதிபர் ஜெய்ர்போல்சனாரோவின் எண்ணம் காடழிப்பு அல்ல! அமேசான், AAA திட்டத்தின் கீழ் சென்றுவிடக்கூடாது என்பதுதான். AAA திட்டம் என்பது, இயற்கைப் பாதுகாப்பு திட்டம். அமேசான் காடுகள் தொடங்கி அண்டெஸ், அட்லாண்டிக் கடல் வரை 135 மில்லியன் ஹெக்டேர் நிலப்பரப்பை இந்தத் திட்டம் பாதுகாக்கும். இந்தத் திட்டத்தை Gaia Amazonas என்ற அமைப்புடன் பல NGO- மற்றும் பிற நாட்டு அரசுகள் முன்னெடுத்துள்ளனர். இவர்களிடம் அமேசான் சென்று விடக்கூடாது என்பதில் நிலையாக நிற்கிறது ஜெய்ர்போல்சனாரோவின் அரசு. அதனால் தான், அமேசான் நதிப் படுகையில் ஒரு நீர்மின் ஆலை, ஒரு பெரிய பாலம், BR-163 தேசிய நெடுஞ்சாலையின் நீட்டிப்பு போன்ற வளர்ச்சித் திட்டங்கள் கொண்டு வரப்பட வேண்டும். அப்போதுதான் அந்தப் பகுதியை எந்த ஒரு பிரச்சினையும் இன்றி பிரேசில் தேசிய எல்லைக்குள் பாதுகாப்பாக வைத்திருக்க முடியும். இல்லையேல் AAA திட்டத்திற்காக உலக நாடுகள் தரும் அழுத்தத்தை பிரேசிலால் சமாளிக்க முடியாது என்று கூறப்படுகிறது.
ஆனால், நேரில் களமிறங்கிய ஊடகவியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் பெரும்பாலும் ஜெய்ர்போல்சனாரோவின் ஆதரவு விவசாயிகள் மற்றும் முதலாளிகள் தான் இதற்குக் காரணம் என்று தெரிவிக்கின்றனர். சிறிய பகுதிகளை கைவசப்படுத்திக் கொள்ள பற்ற வைக்கப்பட்ட சிறிய நெருப்பு கட்டுக்கடங்காமல் இப்போது பெரும் நெருப்பாக எரிகிறது என்கின்றனர்.
ஒரு நாட்டை உருவாக்கி விடலாம், ஆனால் காட்டை உருவாக்க முடியாது என்ற இயற்கையின் நியதியை அறியாத அடிமுட்டாள்களா இவர்கள்?
பிரேசிலில் காடழிப்புக்கு எதிராக உள்ள சட்டங்கள்
1965-ல் கொண்டு வரப்பட்ட பிரேசிலின் காடுகள் கொள்கையின்படி (Brazil’s Forest Code of 1965) விவசாயிகள் அமேசான் காடுகளில் நிலங்களை வாங்கி சொந்தம் கொண்டாட முடியும். ஆனால், அதில் 20 சதவிகித நிலத்தில் மட்டுமே விவசாயம் செய்ய முடியும். இந்த சட்டத்தைக் கொண்டு வந்த ராணுவ சர்வாதிகார அரசு 1988-ல் முடிவுக்கு வந்தது.
அதன் பிறகு அமலான புதிய அரசியலமைப்புச் சட்டம் மூலம் அமேசானில் வாழும் பூர்வகுடி மக்களுக்கு அவர்களின் நிலத்தின் உரிமை திருப்பிக் கொடுக்கப்பட்டது. மேலும், அந்த இடங்களில் வளர்ச்சித் திட்டங்கள் வருவதை விரும்பாவிட்டால், அதை மறுக்கும் உரிமையும் அம் மக்களுக்கு அளிக்கப்பட்டது. ஆனால், இந்த காலகட்டத்திற்குள் பல பாதிப்புகள் நிகழ்த்தப்பட்டு விட்டன.
2012-ல் மீட்டெடுக்கப்பட வேண்டிய காடுகளின் அளவைக் குறைத்தும், காடழிப்புக் குற்றங்களுக்குத் தண்டனைகள் குறைக்கப்பட்டும் சட்டத் திருத்தம் ஒன்று கொண்டு வரப்பட்டது. இதைப் பிரேசிலின் உச்ச நீதிமன்றம் 2018-ல் உறுதி செய்தது.
இந்தியரின் பெருமை!
அமேசான் நதியில் எண்ணெய் வளம் இருப்பதை அறிந்து அங்கு எண்ணெய்க் கிணறுகள் தோண்டும் பணி கடந்த 1970ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது. அப்போது நதிக்கு அடியில் மற்றொரு பெரிய நதி ஓடுவது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து எண்ணெய் வளம் குறித்த ஆய்வுப் பணிகள் நிறுத்தப்பட்டு, மற்றொரு நதியைப் பற்றி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இது 'வாலியாஹம்சா' என்னும் இந்திய ஆய்வாளர் தலைமையில் நடைபெற்றது. அமேசான் நதிக்கு அடியில் ஒடும் மற்றொரு நதி சுமார் 6 ஆயிரம் கி.மீ. நீளமுடையது என்று கண்டறியப்பட்டது. சுமார் 13 ஆயிரம் அடி ஆழத்தில் ஓடும் இந்த நதிக்கு இந்திய ஆய்வாளரின் பெயரே சூட்டப்பட்டு, 'ஹம்சா நதி’ என்று அழைக்கப்படுகிறது.
- கணியூர் சேனாதிபதி
- விவரங்கள்
- சுதேசி தோழன்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
கொல்லாமரம் என பேச்சு வழக்கில் அழைக்கப்படும் முந்திரி மரமானது, தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள பிரேசிலை பூர்வீகமாகக் கொண்டது. 1560 ஆம் ஆண்டில், போர்த்துக்கீசியரால் இந்தியாவில் உள்ள கோவாவுக்கு எடுத்து வரப்பட்ட மரம் இது.
பொதுவாக வெப்பமண்டல நாடுகள் பலவற்றில் இம்மரம் வளரும் தன்மை உடையது.
தமிழ்நாட்டில் கடலூர், அரியலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் அதிக அளவில் வணிக ரீதியாக பயிரிடப்படுகிறது.
Anacardium - அனகார்டியம் என்பது கொல்லாம்பழம் எனப்படும் முந்திரிப்பழத்தின் உருவத்தை விளக்கும் பெயராகும். Ana – என்பதற்கு மேல்நோக்கிய என்று அர்த்தம். Cardium என்பது இதயத்தைக்குறிக்கிறது. தலைகீழான அல்லது மேல்நோக்கிய இதயத்தின் அமைப்புடைய பழம் உள்ள மரம் என்று பொருள் தருகிறது.
கொல்லாம்பழம் ஒரு வகையான போலிப்பழமாகும். இது பச்சைநிற காயாக இருந்து பின்னர் மஞ்சள் மற்றும் சிகப்பு வண்ணங்களில் பழுக்க கூடியது. உண்பதற்கு சுவையானது மற்றும் நீர்ச்சத்து மிகுந்தது.
பல இடங்களில் நட்டு வளர்த்து லாபம் சம்பாதிக்கும் வெறும் வணிகப் பொருளாக மாறிவிட்ட கொல்லாமரம் சாகுபடி. அத்தகைய கொல்லாமரம் இயற்கையாக தேரியில் குடியேறி செழித்து வளர்ந்து பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் இருந்தாலும், பாதுகாப்பற்ற முறையில் அழிந்து வரும் இடமாக உள்ளது தேரிக்குடியிருப்பு என்ற கிராமத்தில்தான்.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது குதிரைமொழி என்ற தேரிக்குடியிருப்பு கிராமம்.
இக்கிராமத்தில் முன்னோர் வழிபாட்டு முறையில் கற்குவேல் அய்யனார் கோவில் அமைந்துள்ளது. இங்கு வருடந்தோறும் நடைபெறும் கள்ளர் வெட்டு திருவிழாவும், பங்குனி உத்திர திருவிழாவும் வெகுஜன உழைக்கும் மக்கள் மத்தியில் பிரசித்தி பெற்றது. உழைக்கும் வர்க்க மக்கள் எப்போதுமே தன் முன்னோர்களை நினைவில் வைத்து கொண்டாடுபவர்கள் என்பதற்கு இத்திருவிழாக்களே சாட்சி.
இக்கிராமத்தின் தனித்துவமான பழக்க வழக்கங்கள் எல்லோரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துபவை. பிறந்த குழந்தைகளுக்கு எப்போதும் இக்கிராமத்தில் மக்கள் தொட்டில் கட்டுவது இல்லை.
திருமண நாட்களில் வீடுகளில் நடைபெறும் முகூர்த்த அரிசி அளக்கும் நிகழ்ச்சியில், நாழியில் அளக்கப்படும் அரிசி அங்குள்ள தேரிச்சாமி (தேரி என்ற மணல் பகுதியை சாமியாக வணங்குதல்) கோவிலில் வைத்து சமைத்து ஊர் மக்கள் அனைவருக்கும் சமபந்தி போஜனம் இன்றளவும் நடைபெறுகிறது.
தேரி மணல்தான் தெய்வம் என்று வாழும் மக்கள் உள்ள இக்கிராமத்தில் கொல்லாமரங்களே நிலத்தடி நீரின் சேமிப்பு கலனாக விளங்குகின்றன.
Reserved forest எனப்படும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுததியாக தேரிக்குடியிருப்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள தேரிக்காட்டுப்பகுதி அமைந்துள்ளது.
இங்கு தேரிமணல் பனைமரம் உயரத்திற்கு குவிந்து கிடக்கிறது. இம்மணல் குன்றின் மேல் தக்கிமுக்கி ஏறி உயரத்திலிருந்து சறுக்கினால் அதுவே ஒரு அலாதியான விளையாட்டாக சிறுவர்களுக்கும் பெரியவர்களுக்கும் மாறிவிடும் தன்மையது. தேரி என்ற மணல் தாய் தன் பிள்ளைகளை எப்போதும் அணைத்துக் கொள்வதால் நம் உடல் சிவப்பாகும், உள்ளம் செம்மையாகும்.
பார்ப்பதற்கு பாலைவனம் போல் தெரிந்தாலும் இது நிலத்தடி நீர் நிறைந்த செம்மண் நிலம் என்பதே உண்மை. இரண்டு தேரிமணல் குன்றுகளின் நடுவில், செழுமையான செம்மண் சமவெளிப்பகுதியும் அமைந்துள்ளது.
இப்பகுதியை பார்க்கும்போது அதன் நிலஅமைப்பு வித்தியாசமாகவும், பனைமர உயர தேரிமணலின் மீது வளர்ந்து நிற்கும் கொல்லாமரம் வியப்பையும் தருகிறது.
உற்ற நண்பன் விராலிச்செடி:
கொல்லாமரங்கள் நிற்கும் இடமெங்கும் அதன் உற்ற தோழனாக நிலைத்து நிற்பது விராலிச்செடி. இதன் வேர்கள் மிகவும் உறுதியாக தேரிமணலைப் பற்றியிருக்கின்றன. தேரிக்காட்டில் மணல் அரிப்பைத் தடுக்கும் தோழர்கள் கொல்லாமரமும், விராலிச்செடியும் என்று சொன்னால் அது மிகையல்ல.
சிகப்பு பழம்:
கொல்லாமரத்தின் பூ காய்க்க ஆரம்பித்தவுடன் முதலில் முந்திக்கொண்டு வருவது (முந்திரிக் கொட்டை போல முந்தாதே என்ற சொல் வழக்கு இந்நேர்வில் நாம் அறிந்து கொள்வது) அதன் விதை ஆகும். இவ்விதை பச்சையாக இருக்கும்போது ‘அண்டி” என அழைக்கின்றனர் இக்கிராம மக்கள். அதன்பிறகு அண்டிக்கும், காம்புக்கும் இடையில் கொல்லாம்பழம் உருவாகிறது. தலைகீழாக தொங்கும் வவ்வாலைப்போல காற்றினில் அழகாக அசைந்தாடும் கொல்லாம்பழத்தை பார்க்க பார்க்க அழகு.
முதலில் பச்சை நிற காயாக இருந்து பின்னர், மஞ்சள் மற்றும் சிகப்பு வண்ணங்களில், பழமாய் கிடைக்கிறது கொல்லாம்பழம் .
மஞ்சள் நிற கொல்லாம்பழங்கள் காய்க்கும் மரங்கள் எண்ணிக்கையில் அதிகமாக தேரிப்பகுதியில் உள்ளது.
ஒரு மஞ்சள் நிற பழத்தை பிழிந்தால், ஒரு டம்ளர் சாறு கிடைக்கும் அளவிற்கு பெரியது இம்மஞ்சள் நிற பழங்கள். எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும் கோடையை தாக்குப்பிடித்து வளரும் சிகப்பு பழம் காய்க்கும் மரங்கள் அதீத சுவை கொண்ட கொல்லாம்பழங்களை தருகிறது. சிகப்பு என்றாலே மக்களுக்கு அதிகம் நன்மை தரக்கூடியது என்பதற்கு கொல்லாமரங்களும் ஓர் சாட்சி.
இக்கிராமத்தை முக்கால்வாசி தேரிமணல் சூழ்ந்து கொண்டுள்ளது. தேரிமணலால் சூழப்பட்ட தீபகற்பம் போல் தேரிக்குடியிருப்பு கிராம வரைபடம் உள்ளது. இதன் மத்தியிலே தார் பாலைவனம் போல் பரந்து விரிந்து கிடப்பது தான் பாதுகாக்கப்பட்ட வனப்பரப்பு.
பெரும்பாலான வீடுகளின் ஒருபக்கம் பாதியளவு தேரிமணலில் மூழ்கிப்போயிருப்பதை நாம் நேரில் காண இயலும். இங்கு இருக்கும் ஒரு மேல்நிலைப் பள்ளியும் தேரிப்பகுதியிலேயே அமைந்துள்ளது.
தேரிமணலில் வயதானவரும், இளைஞர்களும் குழந்தைகள் போல, தத்தக்கா… பித்தக்கா நடைநடந்து தாழம்போட்டு தான் கடந்துவரஇயலும். மணலின் அடர்த்தியில் இருகால்களும் புதைந்து கொள்ளும்.
எந்த நிற ஆடை உடுத்தி தேரிமணலில் உலா வந்தாலும், ஆடைகள் அனைத்தும் செம்மையாக சிகப்போடு ஐக்கியமாகி விடுகின்றன.
தற்போதைய நிலை:
தேரியில் மக்கள் குடியிருந்ததால் தேரிக்குடியிருப்பு என பெயர் பெற்றது இக்கிராமம். தற்போது, மழையின் அளவு குறைந்ததால் தேரிமணலில், நிலத்தடி நீராதாரம் குறைந்து வரும் சூழ்நிலையிலும், இக்கிராமத்தில் சுவையான நிலத்தடி நீர் குறைந்த அளவு குடிநீராக கிடைத்து வருகிறது. ஆனால் அது குடிநீருக்கும், விவசாயத்திற்கும் போதுமானதாக இல்லை.
இங்கே உள்ள பொட்டல்குளத்திற்கு தண்ணீர் வந்தே பலவருடமாகிறது. தேரிப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குளங்களும் வாய்க்கால்களும் வானம் பார்த்தபடி ஏங்கிக் கிடக்கின்றன.
மண் அரிப்பைத் தடுத்து, நிலத்தடி நீருக்கு அரணாய் இருந்த விராலிச் செடிகளும், கொல்லாமரங்களும் பெருமளவில் சமூக விரோதிகளால் அழிக்கப்பட்டு வருவதாலும், அதிலும் குறிப்பாக விராலிச்செடிகள் வேரோடு பிடுங்கப்பட்டு மூலிகை விற்பனை என்ற பெயரில் எடுத்துச் செல்லப்படுவதாலும் இங்குள்ள சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளது. மிகப்பெரிய குடிநீர்ப் பஞ்சத்தை எதிர்கொள்ளும் சூழ்நிலைக்கு தேரிக்குடியிருப்பு மற்றும் அதன் சுற்று வட்டார கிராம மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
வனத்துறையும் தமிழக அரசம் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியான தேரிக்காட்டை மணல் மாபியாக்களிடமிருந்து பாதுகாக்கவும் ( திருநெல்வேலி மாவட்டத்தின் பல பகுதிகளில் தேரிமணல் பெருமளவில் தோண்டப்பட்டு தேரிப்பகுதியே கட்டாந்தரையாக மாற்றப்பட்டுள்ளது) மீண்டும் நிறைய கொல்லாமரங்களை நட்டு பராமரித்து, தேரிமணலை நிலைநிறுத்தவும், நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே இக்கிராம மக்களின் குரலாய் ஒலிக்கிறது.
தேரிக்காட்டு கொல்லாம்பழத்திற்கு மணப்பாடு மல்லிகையான மீன்கள் இன்றளவும், பண்டமாற்று முறையில் பரிமாறிக் கொள்ளப்படுகின்றன.
ஏற்கனவே தவறான இடத்தில் அதாவது நீர்பிடிப்பு பகுதியான உடன்குடி தருவைக்குளத்தில் மணலை நிரப்பி அதன் மேற்பரப்பில் அனல்மின்நிலைய கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதால், குளத்தை மண்போட்டு மூடிவிட்ட நிலையில் நிலத்தடி நீராதாரம் திருச்செந்தூர் வட்டார கிழக்கு பகுதி கிராமங்களில் இல்லாமலே போய்விட்டது.
இந்நிலையில் கடற்கரையிலிருந்து பல கிலோமீட்டர் தொலைவில் மேற்கே அமைந்துள்ள தேரிக்குடியிருப்பு போன்ற கிராமங்களிலும் குளங்களில் வறட்சி என்பது, நீர்; மேலாண்மை என்ற ஒன்று ஆளும் அரசுகளால் கடைப்பிடிக்கப்படுகிறதா என்ற ஐயம் எழுகிறது.
ஏற்கனவே தூத்துக்குடி கோவை போன்ற நகரங்களில் தண்ணீர் விநியோகத்தை தனியார் நிறுவனங்களுக்கு தாரை வார்த்த ஆளும் அரசாங்கம் கிராமங்களை பாலைவனமாக்காமல் விடமாட்டோம் என கங்கனம் கட்டிக்கொண்டு அழிவுப்பூர்வமான ஆட்சியை நடத்துகிறது.
தோழர் தமிழ்ச்செல்வனின் ‘ஜிந்தாபாத் ஜிந்தாபாத் “ எனும் புத்தகத்தில் வரும் வரிகள் இந்த தேரிக்காட்டு கொல்லாமரங்களுக்கும் பொருந்தும்.
"60 ஆண்டு கால இந்திய சுதந்திரம் தொழிலாளிகளுக்கு இந்திய திருநாட்டின் அச்சாணி நாம்தான் என்கிற பெருமித உணர்வை ஏற்படுத்தவில்லை. பிரச்சனை பண்ணாம ஒழுங்கா சட்டப்படி வேலை செய்யாட்டி வேலை போயிடும். குழந்தை குட்டிகள் தெருவிலே நிற்கும் என்கிற அச்ச உணர்வையே இந்திய சுதந்திரம் அனைத்து உழைக்கும் மக்களுக்கும் வாரி வழங்கியிருக்கிறது”.
அச்ச உணர்வு மனிதனை வேண்டுமானால் எளிதில் பீடித்துக்கொள்ளலாம். ஆனால் மரங்களை அவ்வுணர்வால் ஏதும் செய்ய முடியாது என்றே இக்கிராம மக்களும் நினைத்திருந்தனர். ஆனால் அவர்களின் கண்முன்னே பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் பத்திரமாக வளர்வதாக நினைத்த, நிலத்தடி நீருக்கு நாம்தான் ஆதாரம் என்று பெருமிதம் கொண்ட கொல்லாமரங்கள் மழையின்றியும், நீரின்றியும் மணல் கொள்ளையாலும் வதங்கிப் போய் நிற்கின்றன.
ஆம், ஒரு கொல்லாமரம் கொலை செய்யப்படுகிறது நம் கண்முன்னே. அதாவது சுதந்திர இந்தியாவில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் வளரும் கொல்லாமரம்.
- சுதேசி தோழன்
- விவரங்கள்
- செந்தமிழ்ச் செல்வன்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
‘வணிகமுறை பால் உற்பத்திக்கு கலப்பினப் பசு தான் சிறந்தது. நாட்டுப் பசுவினங்களைக் கொண்டு அதிக பாலை உற்பத்தி செய்ய முடியாது. ஆகவே தான் நாட்டுப் பசுவினங்கள் பெரும்பாலான மக்களால் புறக்கணிக்கப்படுகிறது. இது தான் இன்றைய காலத்தின் கட்டாயம்’ என துறைசார் வல்லுநர்களே கூட ஆதங்கப்படுவதும் பின்னர் “ஒர் இனம் அழிவதும் (Extinction), மற்றொரு இனம் உருவாவதும் (Speciation) பரிணாமத்தின் (Evolution) ஓர் அங்கமே” என தங்களை தாங்களே ஆற்றுப்படுத்திக் கொள்வதையும் வெவ்வேறு தருணங்களில் காண முடிகிறது. சீமை மற்றும் கலப்பினப் பசுக்கள் மட்டும் அதிகமாக பாலை சுரப்பது ஏன்? நாட்டுப் பசுவினங்களையும் சீமை மற்றும் கலப்பினப் பசுக்களைப் போல அதிக பாலை சுரப்பவையாக மாற்ற முடியாதா? அப்படி மாற்ற முடிந்தால் நாட்டுப் பசுவினங்களையும் மக்கள் ஆர்வமாக வளர்ப்பார்கள் தானே? நாட்டுப் பசுவினங்களும் அழியாமல் இம்மண்ணில் நீடித்திருக்கமுடியும் தானே? வாருங்கள் ஒவ்வொன்றாய் அறிந்து கொள்வோம்.
நாட்டுப் பசுவினங்களை விட சீமை மற்றும் கலப்பின பசுவினங்கள் அதிகமாக பாலை சுரக்கிறதே! ஏன்?
ஒரு பசுவினத்தின் பால் உற்பத்திக்கும் (Milk Production) அதன் வளர்சிதை மாற்றத் திறனுக்கும் (Metabolic Rate) இடையே ’மரபணு ரீதியான நேர்மறை சார்புத் தன்மை’ (Genetically Positive Correlation) உள்ளது. நாட்டுப் பசுவினங்களை விட சீமை மற்றும் கலப்பின பசுவினங்களுக்கு வளர்ச்சிதை மாற்றத் திறன் அதிகம். எனவே தான் நாட்டுப் பசுவினத்தை விட சீமை மற்றும் கலப்பின பசுவினங்கள் அதிகமாக பாலை சுரக்கிறது. அது சரி வளர்ச்சிதை மாற்றத் திறன் என்றால் என்ன? என்று தானே கேட்கிறீர்கள். ஒரு உயிரினத்தால் உட்கொள்ளப்படும் உணவு, அவற்றை செரிக்கும் திறன், செரித்த உணவை உறிஞ்சும் திறன், உறிஞ்சிய உணவிலிருந்து உயிர்வேதி வினைகள் மூலம் வெளிப்பட்ட ஆற்றலை பயன்படுத்தும் திறன் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு தொகைப் பண்பே (Complex Trait) அவ்வுயிரினத்தின் வளர்ச்சிதை மாற்றம் எனப்படுவது.
சீமை மற்றும் கலப்பினப் பசுவினங்களுக்கு நாட்டுப் பசுவினங்களை விட அதிக வளர்ச்சிதை மாற்ற திறன் உள்ளதற்கு என்ன காரணம்?
சீமை மற்றும் கலப்பின பசுவினங்களின் பரம்பரை பரம்பரையாக (Generation after Generation) சந்ததிகள் (Ancestors) மூலம் கடத்தப்பட்டு (Inherited) வந்த மரபுத் திறனே (Genetic Potential) காரணமாகும். அப்படியென்றால் சீமையின பசுக்களுக்கு ‘ஆதியிலேயே’ அதிகளவு பாலை சுரக்கும் மரபுத் திறன் இருந்ததா? இல்லவே இல்லை. சில நூறு வருடங்களுக்கு முன்னர் சீமைப் பசுக்களும் நாட்டுப் பசுவினங்களைப் போல மிகக் குறைந்த அளவிலேயே பாலை சுரந்தன. சீமைப் பசுக்களும், சீமை பொலிக் காளைகளும் தொடந்து பல சந்ததிகளாக பால் உற்பத்திக்காக மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டு (Selection) இனவிருத்தி (Breeding) செய்யப்பட்டன. அதாவது அதிகமாக பால் சுரக்கும் பசுக்களையும் (High Milk Yielding Cows), அதிகமாக பால் சுரக்கும் பசுக்களால் பெற்றெடுக்கப்பட்ட காளைகளையும் (Bull of High Milk Yielding Cow) மட்டுமே அடுத்தடுத்த சந்ததிகளை பெற்றெடுக்க அனுமதிக்கப்பட்டன. மந்தையிலுள்ள மற்ற குறைந்த திறனுள்ள பசுக்களும், காளையும் கழித்துக் கட்டப்பட்டன (Culled). இப்படி அதிக பால் உற்பத்தி செய்யும் மாடுகளை மட்டுமே தேர்ந்தெடுத்து அவைகளை மட்டுமே இனவிருத்திக்கு பயன்படுத்தியதன் விளைவாக ஒவ்வொரு சந்ததிகளிலும் உள்ள பசுக்கள் மற்றும் காளையின் பால் உற்பத்தி சார்ந்த மரபுத் திறன் (Genetic Potential for Milk Production) மேம்படுத்தப்பட்டது. பால் உற்பத்தியை கணிசமாக உயர்த்தவும் முடிந்தது. இன்னமும் அது தொடர்கிறது. அதே காலகட்டத்தில் நம் நாட்டின பசுக்களும், பொலிக் காளைகளும் வேளாண் வேலைக்காக (Draught Power) தேர்ந்தெடுக்கப்பட்டு இனவிருத்தி செய்யப்பட்டன. எளிமையாக சொல்வதென்றால் நமக்கும், மேலை நாட்டவர்க்கும் தேவைகள் (Demand) வெவ்வேறாக இருந்ததால் மாடுகளை இனவிருத்தி செய்வதன் நோக்கமும் (Breeding Goal) வெவ்வேறாக இருந்தது. அவர்களுக்கு பால். நமக்கு வேலைத் திறன்.
குளிர் தட்பவெப்ப காலநிலை (Cold Climate), பரந்த மேய்ச்சல் நிலம் (Extensive Grass Land), பெரிய அளவிலான பண்ணைய முறை (Large Scale Farming System), திட்டவட்டமான இனவிருத்திக் கொள்கைகள் (Planned Breeding Policies)… போன்ற பல காரணிகள் ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட குளிர் பிரதேச நாடுகளில் (Temperate Countries) உள்ள பசுவினங்களை அதிக பால் உற்பத்தியை நோக்கி மேலும் மேலும் பரிணமிக்க வைத்தன. அதைப் போலவே கோடை தட்பவெப்ப காலநிலை (Hot Climate), பரந்த சாகுபடி நிலம் (Extensive Cultivable Land), மிகமிகச் சிறிய அளவிலான பண்ணைய முறை (Micro and Small Scale Farming System) போன்ற பல காரணிகள் இந்தியா உள்ளிட்ட வெப்ப மண்டல நாடுகளில் (Tropical Countries) உள்ள பசுவினங்களை அதிக வேலைத் திறன் நோக்கி மேலும் மேலும் பரிணமிக்க வைத்தன. இப்படி ஆதி காலத்து மாட்டு மந்தைகள் தான் வாழும் சூழல் (Ecosystem) சார்ந்து பாலுக்காகவும், வேலைக்காகவும் என இருவேறு கிளைகளாக பரிணமித்தன (Evolved). இன்றளவும் பரிணமித்துக் கொண்டிருக்கின்றன. இது ஒரு தொடர் இயற்கை நிகழ்வாகும்.
ஆதியில் வெவ்வேறு நிலப்பரப்புகளில் மேய்ந்து திரியும் மாட்டு மந்தைகளாக மட்டுமே அறியப்பட்ட கூட்டங்களெல்லாம் கால ஓட்டத்தில் பாலுக்கான மந்தைகளாகவும், வேலைக்கான மந்தைகளாகவும், இறைச்சிக்கான மந்தைகளாகவும் மாற்றப்பட்டன. பால், இறைச்சி போன்றவை வணிக பண்டங்களாக்கப்பட்ட (Commercial Commodity) பின் அவற்றின் உற்பத்தி ’தேவையின் அடிப்படையில்’ (Demand Based) அமையாமல் ‘லாபத்தின் அடிப்படையில்’ (Profit Based) மாற்றியமைக்கப்பட்டது. பெரிய பெரிய கறவைப் பண்ணைகள் முளைக்க ஆரம்பித்தன. பண்ணை முதலாளிகள் ஒன்று சேர்ந்து உற்பத்தியை மேலும் மேலும் பெருக்குவதற்கு திட்டத்தை வகுத்தனர். தொழில்நுட்பத்தையும் புகுத்த ஆரம்பித்தனர்.
மாட்டு மந்தைகள் பால் உற்பத்தி திறன் அடிப்படையில் பிரித்து வைக்கப்பட்டு தனித்தனியாக இனவிருத்தி செய்யப்பட்டன. இவ்வாறு பல சந்ததிகள் தொடர்ந்து செய்யும் போது ஒவ்வொரு மாட்டு மந்தையும் தங்களுக்குள் ஒரே அளவிலான பால் உற்பத்தியையும், ஒரே மாதிரியான தோற்றத்தையும் பெற்றன. அவைகளுக்கு அவை வாழும் இடம் சார்ந்து ஒரு ‘பெயரும்’ சூட்டப்பட்டன. அப்பெயரே பிற்காலத்தில் இனத்தின் பெயராக (Breed Name) அறியப்பட்டது. இன்றளவும் அறியப்படுகிறது. இப்படி பெரும் பண்ணை முதலாளிகளால் தோற்றுவிக்கப்பட்டது தான் ‘இனம்’ எனும் கருத்துரு (Breed Concept). ஆக இனம் எனும் கருத்துரு பால் மற்றும் இறைச்சி வணிகமயப்படுத்த ஆரம்பித்த பிறகு தோற்றுவிக்கப்பட்ட ஒன்றேயாகும். ஒவ்வொரு இனத்தையும் வணிக ரீதியாக மேம்படுத்தும் நோக்கத்திற்காக பண்ணை முதலாளிகளால் ஏற்படுத்தப்பட்ட ஒரு கூட்டமைப்பு தான் “இனச் சங்கம்” (Breed Association) என்பது. இதன் முக்கிய நோக்கம் அது சார்ந்த இனத்தை பற்றிய உடல் தோற்றம், வளர்ச்சி, பால் உற்பத்தி, தீவனம் உட்கொள்ளும் அளவு, நோய் எதிர்ப்பாற்றல் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் முறையாக பதிவு (Recording) செய்வதும், அவற்றை அடிப்படையாகக் கொண்டு இனவிருத்தியை மேற்கொள்ள ஆலோசனைகளை (Breeding Consultancy) வழங்குவதுமே ஆகும். இப்படியெல்லாம் சில நூறு வருடங்களாக செயல்பட்டுக் கொண்டுள்ள ”இன மேம்பாட்டு திட்டம்” (Breed Improvement Programme) எனும் மிக நீண்ட திட்டத்தினால் விளைந்ததே இன்று நாம் கண்டு அதிசயிக்கும் ஹோல்ஸ்டீன் ஃப்ரீஷியன் (Holstein Friesian), ஜெர்சி (Jersey), ப்ரௌன் ஸ்விஸ் (Brown Swiss), ரெட் டேன் (Red Dane) போன்ற பால் உற்பத்திக்கு பிரசித்திப் பெற்ற சீமை பசுவினங்களெல்லாம்.
வேலை திறனுக்கு பிரசித்திப் பெற்ற நாட்டு மாட்டினங்களை சீமை பசுவினங்களைப் போல அதிக பாலை சுரப்பவையாக மாற்ற முடியுமா?
முடியும். நாட்டுப் பசுவினங்களின் பால் உற்பத்தி திறனை சீமை பசுவினங்களைப் போல அப்படியே மாற்ற முடியாவிட்டாலும் கணிசமாக (Significantly) கண்டிப்பாக உயர்த்த முடியும். ஒரு இனத்தின் பால், இறைச்சி உள்ளிட்ட உற்பத்தியை அதிகரிக்க வேண்டுமெனில் நாம் தொடர்ந்து செயல் படுத்த வேண்டியதெல்லாம் ”இன மேம்பாட்டு திட்டம்” எனும் திட்டமே ஆகும். குறைந்தபட்சம் சில நூறு வருட பொறுமையும், உழைப்புமே இதற்கு அடிப்படை. மனமிருந்தால் மார்க்கமுண்டு.
இன மேம்பாட்டு திட்டத்திற்கும், கலப்பினச் சேர்க்கை திட்டத்திற்கும் (Cross Breeding Programme) உள்ள வித்தியாசம் என்ன?
இன மேம்பாட்டு திட்டமென்பது ஒரு இனத்திற்குள்ளாகவே சிறந்த பசுக்களையும் காளைகளையும் தேர்ந்தெடுத்து பல சந்ததிகளுக்கு இனவிருத்தி செய்யப்படுவது. பல சந்ததிகளுக்குப் பிறகு இனத்தின் உற்பத்தி சார்ந்த மரபுத் திறன் கணிசமாக உயர்த்தப் படுகிறது. அதே சமயத்தில் இனத்தின் புறத் தோற்றத்தில் (Phenotypic Appearance) மாறுபாடு ஏற்படுவதில்லை. ஆனால் கலப்பினச் சேர்க்கை என்பது சீமை காளையையும் நாட்டு பசுவையும் இனச்சேர்க்கைக்கு உட்படுத்தி கலப்பின மாடுகளை பெறுவதாகும். கலப்பின பசுவானது சீமை மற்றும் நாட்டு மாட்டினங்களின் பண்புகளை ஒருங்கே (Combined) பெற்றிருக்கும். கலப்பின மாடு தோற்றத்தில் நாட்டு மாட்டினத்தைப் போல் இருக்காது. ஆகவே இங்கு நாட்டின மாடுகள் அழிக்கப்படுவதாக பொருள் கொள்ள வேண்டியிருக்கிறது. நாட்டு மாடினங்கள் பரிணமித்த இந்திய சூழலில் கலப்பின மாடுகளால் ஒரு போதும் பிரகாசிக்க முடியாது. இந்த முரண்பாடு தான் வர்த்தக கறவை பண்ணைகளின் பெரும்பாலான பிரச்சினைகளுக்கு மூலமாக இருக்கிறது.
இந்தியா பால் உற்பத்தியை பெருக்குவதற்காக ’இன மேம்பாட்டு திட்டத்தை’ கைக்கொள்ளாமல் ‘கலப்பினச் சேர்க்கை திட்டத்தை’ தேர்ந்தெடுத்தது ஏன்?
கலப்பினச் சேர்க்கை மூலம் பால் உற்பத்தியை குறுகிய காலத்திலேயே பெருக்க முடியும் என்பதால் தான். மேலும் கலப்பினச் சேர்க்கைக்கு தேவையான சீமை காளைகள் உறைவிந்து (Frozen Semen) வடிவில் மிக எளிதாக ’உலகமய’ சந்தையில் கிடைத்ததும் மற்றொரு காரணம். வீடுகள் தோறும் சிதறிக் காணக்கிடந்த நாட்டின பசுக்கள், அவற்றை பற்றிய தகவல்களை சேகரிப்பதில் இருந்த கள பிரச்சினைகள், அன்று நிலவிய சமுதாய-பொருளாதார சூழல் உள்ளிட்ட காரணிகள் ‘இன மேம்பாட்டு திட்டத்தை’ கைக்கொள்வதை ஆதரிக்க வில்லை. கலப்பினச் சேர்க்கை திட்டத்தை களத்தில் அமல்படுத்தும் போது தெரிந்தோ தெரியாமலோ இழைத்த சில தவறுகளால் நாட்டு பசுவினங்களை இன்று நாம் கணிசமாக இழந்திருக்கிறோம். மறுப்பதற்கில்லை. அதை உணர தொடங்கியதன் விளைவு தான் இன்று நாட்டு மாட்டினங்களின் மீது நாம் காட்டும் கரிசனம் என்பது.
இழந்த நாட்டு மாட்டினங்களை மீண்டும் மீட்டெடுக்க முடியுமா?
முடியும். ஆனால் முடியாது.
புரியவில்லையே?
இழந்த நாட்டு மாட்டினங்களை கலப்பினச் சேர்க்கை மூலமே மீட்டெடுக்க முடியும். ஆச்சரியமாக இருக்கிறதா? ”கலப்பினச் சேர்க்கையால் தானே நாட்டு மாட்டினங்களை தொலைத்தோம். பிறகெப்படி அதே கலப்பினச் சேர்க்கை தொலைந்துப் போன நாட்டு மாட்டினங்களை மீட்டெடுக்கும்?” என்று தானே கேட்கிறீர்கள். இன்றுள்ள கலப்பினப் பசுக்களை நாட்டு மாட்டின காளைகளுடன் தொடர்ந்து ஆறு சந்ததிகளுக்கு இனச் சேர்க்கைக்கு உட்படுத்தும் போது ஏழாவது சந்ததிகள் 100% நாட்டு மாட்டினமாக மாற்றமடைந்திருக்கும். இழந்த நாட்டு மாட்டினத்தை மீட்டெடுத்திருப்போம். எனவே தான் ’முடியும்’ என்றேன்.
ஆனால் ஏழாவது சந்ததி பசுக்களின் பால் உற்பத்தி இன்றைய கலப்பின பசுக்களைப் போன்று அதிகமாக இருக்காது. நாட்டு மாட்டின பசுக்களை போன்று குறைவாகத் தான் இருக்கும். இதை நாம் விரும்புவோமா? மாட்டோம் தானே? கண் திறந்தது முதல் கண் மூடும் வரை பால் தானே நம் மூச்சு. எனவே தான் ’முடியும் ஆனால் முடியாது’ என்றேன்.
முடியுமா, முடியாதா என்பதெல்லாம் நம் கையில் தான் உள்ளது! கறவைப் பசுக்களில் நாட்டுப் பசு, சீமைப் பசு, கலப்பினப் பசு என்பதெல்லாம் ஒரு வகையான ஒப்பீட்டு சொல்லேயாகும். அதை தவிர உள்ளார்ந்த, மாற்ற முடியாத, மாற்றத்திற்குட்படாத பொருள் என்று எதுவுமில்லை.
- செந்தமிழ்ச் செல்வன்
- விவரங்கள்
- செந்தமிழ்ச் செல்வன்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
பொதுமக்களில் சிலர் செயற்கை முறை கருவூட்டல் இயற்கைக்கு எதிரானது என்பது போல கருதுகிறார்கள். பொதுவாக அதிக பால் உற்பத்தித் திறனுக்கான மரபணுக்களைக் கொண்டிருக்கும் காளைகளின் எண்ணிக்கை மிகக் குறைவே ஆகும். இவைகளை மட்டும் கொண்டு இயற்கை முறையில் இனவிருத்தி செய்வது என்பது முடியாத காரியம் ஆகும். இதன் பொருட்டு வந்தது தான் செயற்கை முறை கருவூட்டல் என்பது. இதில் சில எண்ணிக்கையிலான காளைகளின் விந்துக்கள் சேகரிக்கப்பட்டு அவைகள் பல பசுக்களை கருத்தரிக்கப் பயன்படுத்தப்படுகிறது.
இது தவிர காளைகளை இயற்கை முறை கருவூட்டலுக்காகப் பயன்படுத்தும் போது குறைந்த மரபுத் திறனுள்ள சந்ததிகளை உருவாக்கி விடும் வாய்ப்புள்ளது. ஆனால் செயற்கை முறை கருத்தரிப்பில் காளைகள் முதலில் சந்ததி சோதனைக்கு உட்படுத்தப்பட்டு பின்னர் அவைகளின் விந்துக்கள் பயன்படுத்தப்படுவதால் எதிர்கால சந்ததிகளின் உற்பத்தித் திறன் பாதிக்கப்படுவதில்லை. இன்றளவும் இந்தியா பால் உற்பத்தியில் முதலாவது இடத்தில் இருப்பதற்கு இந்தத் தொழில்நுட்பம் ஒரு மிக முக்கிய காரணமாகும்.
காளைகளிடமிருந்து விந்தணுக்களை சேகரிப்பதற்காக பிரத்தியோக பொலிகாளைப் பண்ணைகளை அரசாங்கமே அமைத்துள்ளது. அங்கு காளைகளின் விந்து சேகரிக்கப்பட்டு அவைகளின் தரத்தை ஆய்வு செய்த பின்னர் அவைகளை முறையாக செயற்கைமுறை கருத்தரிப்பில் கால்நடை மருத்துவர்கள் பயன்படுத்துகிறார்கள்.
விவசாயத்தில் எந்திரமயமாக்கலால் காளை மாடுகளுக்கு வேலை இல்லாமல் போய் விட்டது. இது மேலும் காளைகளின் பங்கை சமுதாயத்தில் குறைத்து விட்டது. ஒரு பக்கம் அதிக பால் தேவை, மறுபக்கம் காளைகளுக்கு வேலையின்மை. இவையிரண்டும் சேர்ந்து காளைகளின் மேல் ஒரு வித பச்சாதாபத்தை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாகத் தான் பொதுமக்களில் சிலர் செயற்கை முறைக் கருவூட்டலை இயற்கைக்கு எதிராகப் பாவித்து, அது தவறு எனப் பொருள் கொள்கிறார்கள். செயற்கை முறை கருவூட்டல் தொழில்நுட்பம் உலகெங்கிலும் பயன்பாட்டில் உள்ள ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
பொலிகாளைப் பண்ணைகளில் காளைகளின் விந்தணுக்களின் கருத்தரிப்புத் திறனை உறுதி செய்வது ஒரு சவாலான காரியமாகும். ஏனெனில் இங்கு விந்தணுக்களை காளையிடமிருந்து சேகரித்து அதை ஆய்வகத்தில் முறையாக உறைவிந்து குச்சியில் அடைத்து கால்நடை மருத்துவமனைகளுக்கு அனுப்ப வேண்டியிருக்கிறது. இதன் காரணமாக விந்துக்களை நாம் கையாள வேண்டியிருக்கிறது. இதனால் தான் செயற்கை முறைக் கருவூட்டலில் இயற்கைமுறை கருவூட்டலை விட கருத்தரிப்புத் திறன் குறைவாக உள்ளது. இதை அதிகப்படுத்துவது தான் அறிஞர்களின் முன் உள்ள சவாலாகும்.
பசுக்களில் செயற்கைமுறை கருவூட்டல்
காளைகளிடமிருந்து விந்துவை சேகரிக்கும் போது மிகவும் கவனமாக சேகரிக்கப்பட வேண்டும். மேலும் காளைகளை பசுவிடமிருந்து பிரித்து பராமரிக்கப் படவும் வேண்டும். இதைக் காரணம் காட்டி பொது மக்களில் சிலர் இது இயற்கைக்கு எதிரானது என கூறுகின்றனர். காளைகள் முறையாகப் பராமரிக்கப்பட்டு கையாளப்பட வேண்டும் என்பதே அறிஞர்கள் உள்ளிட்ட அனைவரது விருப்பமும் ஆகும்.
- செந்தமிழ்ச் செல்வன்
- இன்றைய வணிகக் கோழி உருவான அறிவியல்
- சீமைக் கருவேல மர அழிப்பில் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மைகள்!
- நாம் ஏன் யானைகளை நேசிக்கிறோம்?
- திசைகாட்டி தாவரம் தெரியும்?
- வேப்பமரத்தில் பால் வடிவது அம்மன் சக்தியாலா?
- மரத்தை வெட்டு எனும் முழக்கம் ஏன்?
- தூக்கணாங்குருவியின் சமூக வாழ்க்கை
- நம் உயிராதரங்களான காடுகளைப் பாதுகாக்க வாருங்கள்!
- சுற்றுப்புற வளமையில் காகத்தின் பங்கு
- இன்றைய உலகில் அயன மழைக் காடுகளின் சீரழிவும் பிரச்சினைகளும்
- பாரம்பரியத்தை பறைசாற்றும் பனைமரம் பாதுகாக்கப்படுமா?
- வானகமே... இளவெயிலே... மரச்செறிவே...!
- மேற்குத் தொடர்ச்சி மலை பாதுகாப்பு - செய்ய வேண்டியவை என்ன?
- தாவரங்களுக்கு உணர்வு உண்டா?
- தூக்கணாங்குருவி
- அழிவை நோக்கி நீலகிரி அறிக்குருவி (Nilgiri Pipit)
- தேசம் எங்கும் நாசகாரி பயிர்கள்!
- பிஞ்சு வெளவாலுடன் ஓர் இரவு
- மஞ்சள் தொண்டைசிட்டு
- கானமயிலைத் தொலைத்தோம்!