கீற்றில் தேட...
அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
திமிங்கலங்களை வணிக நோக்கங்களுக்காக வேட்டையாடும் ஒரு சில நாடுகளில் ஐஸ்லாந்தும் ஒன்று. இந்நாடு இப்போது 2024ம் ஆண்டுடன் இதை முழுவதும் கைவிடத் தீர்மானித்துள்ளது. திமிங்கல இறைச்சியின் மீதுள்ள மக்களின் ஆர்வம் குறைந்ததே இதற்குக் காரணம் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். நார்வே மற்றும் ஜப்பான் ஆகியவை இதுபோல திமிங்கலங்களை வேட்டையாடும் மற்ற உலக நாடுகள்.
2019-2023 காலகட்டத்தில் நீலத் திமிங்கலங்கள் தவிர அளவில் பெரிய 209 பின் இனத்தைச் சேர்ந்த திமிங்கலங்களையும், அளவில் மிகச் சிறிய இனமான 217 மிங்க் வகை திமிங்கலங்களையும் வேட்டையாட அரசு ஒதுக்கீடு செய்து அனுமதி அளித்தது. இது இக்காலகட்டத்திற்குரிய வருடாந்திர ஒதுக்கீடு. ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளாக வேட்டைக்காக உரிமம் பெற்றிருந்த இரண்டு கம்பெனிகள் வேட்டையாடுவதை நிறுத்திக் கொண்டன.இந்த காலகட்டத்தில் 2021ல் ஒரே ஒரு மிங்க் திமிங்கலம் மட்டுமே வேட்டையாடப்பட்டது. இந்த வேட்டையாடல் காரணமாக கடல்வாழ் உயிரினங்களில் மிகப் பெரிய பாலூட்டிகள் வகையைச் சேர்ந்த திமிங்கலங்களின் பாதுகாப்பிற்காக இங்கிலாந்து நாட்டைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படும் சர்வதேச திமிங்கல பாதுகாப்பு சங்கத்தின் (International Whaling Commision IWC) உறுப்பினர் பதவியையும் ஐஸ்லாந்து ராஜினாமா செய்தது.
வணிக நோக்கங்களுக்காக இந்த உயிரினங்களை வேட்டையாட அனுமதி கிடைத்ததுடன் மக்களிடையில் இவற்றின் இறைச்சிக்கான தேவையும் குறைந்தது. 2006ல் அரசு முதல் முதலில் திமிங்கலங்களை வேட்டையாட அனுமதி அளித்தது. அதுமுதல் ஒவ்வொரு ஆண்டும் ஒதுக்கீடு செய்யப்படும் எண்ணிக்கையில் இவை வேட்டையாடப்பட்டன.
சூழலியலாளர்களின் கடும் எதிர்ப்பு காரணமாக மீன் பிடி தடை உள்ள கடலோரப் பிரதேசங்களின் (no fishing coastal zones) பரப்பு அதிகமானது. இதனால் திமிங்கலங்களைப் பிடிக்க வெகுதூரம் செல்ல வேண்டியதாயிற்று. இது வேட்டைக்கான செலவை அதிகரித்தது.
ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் தர மதிப்பீடு உயர்த்தப்பட்டதுடன் இந்த உயிரினங்களின் இறைச்சி ஏற்றுமதியும் குறைந்தது.
இதனால் இப்போது அங்கு இந்த அற்புத உயிரினங்களின் வேட்டை முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.
தப்பிப் பிழைத்தன திமிங்கலங்கள்!
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
மழைக் காடுகள் மண்டிக் கிடக்கும் பிரேசில் நாட்டின் தலைநகரான ரியோ டி ஜெனீரோ நகரத்தில் முதலைகளையும் பாம்புகளையும் குரங்குகளையும் தெருக்களில் பார்ப்பது சாதாரண காட்சியாகி வருகிறது. நம் ஊர்த்தெருக்களில் நாய்களும், மாடுகளும் அலைந்து திரிவது போல இங்கு வனவிலங்குகள் தெருவில் அலைந்து திரியும் பரிதாபக் காட்சியை சாதாரணமாகக் காணலாம்.
தெருவிலங்குகளாகும் வனவிலங்குகள்
வனங்களில் வாழும் விலங்குகள் இங்கு தெருவிலங்குகளாக்கப்படும் அவலம் நடந்து வருகிறது. ஆண்டிற்கு ஆண்டு இவ்வாறு தெருக்களில் அலையும் விலங்குகளின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டிருக்கிறது. நகரத்திற்கு அருகில் இருக்கும் நீர் இடுக்குகள், நதிகளில் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட முதலைகள் வாழ்கின்றன என்று ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது.வாழ இடமில்லை உண்ண உணவில்லை
நகரமயமாக்குதலும், வனப்பிரதேசங்களின் ஆக்கிரமிப்புமே தெருக்களில் இவை அதிகமாக நடமாடக் காரணம் என்று கருதப்படுகிறது. இதனால் மனித வனவிலங்கு மோதல் சம்பவங்கள் ரியோ டி ஜெனீரோவில் அதிகரித்து வருகிறது. இதற்கு சூழல் சீரழிவும், மாசுபடுதலும் ஒரு காரணம். மாசுபட்ட சூழ்நிலையில் வனவிலங்குகளின் இயல்பான உணவு ஆதாரங்கள் மறைந்து விட்டன.
அழியும் பன்மயத்தன்மை
மாசுபடுதல் மூலம் பிரதேசத்தில் காலம் காலமாக இருந்து வந்த உயிர்ப்பன்மயத்தன்மை நாசமாகி வருகிறது.
2020ல் தீயணைப்புப் படையினர் 2,419 வனவிலங்குகளை மனிதர்கள் நெருக்கமாக வாழும் பகுதிகளில் இருந்து பிடித்தனர். 2021ல் இந்த எண்ணிக்கை 3,534 ஆக அதிகரித்தது. முதலைகள் தவிர குரங்குகள், பாம்புகள், பறவைகள் போன்றவையும் பிடிக்கப்பட்டன. 2022ல் முதல் மூன்று மாதங்களில் மட்டும் 1,203 வனவிலங்குகள் நகரத் தெருக்களில் இருந்து பிடிக்கப்பட்டன.
பூமியில் மனிதகுலம் நலமுடன் வாழ பாக்டீரியா முதல் காண்டாமிருகம் வரை அனைத்து உயிரினங்களும் நலமுடன் வாழ வேண்டும். இதை உணராமல் அழிவு வேலையைத் தொடரும் மனிதன் தன் சவப்பெட்டிக்கு தானே ஆணி அடித்துக் கொண்டிருக்கிறான்.
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- வி.களத்தூர் பாரூக்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
இந்தியாவின் தேசிய விலங்கு புலி. பூனை குடும்பத்தின் மிகப்பெரிய உறுப்பினராக புலி இருக்கிறது. புலியின் சராசரி ஆயுட்காலம் 11 ஆண்டுகள் ஆகும். கடந்த காலங்களில் 9 வகையான புலிகள் இருந்து வந்த நிலையில் தற்போது 6 வகையான புலிகள் மட்டுமே உள்ளன. புலிகளுக்கு வரலாற்றில் எப்போதும் தனித்த ஓர் இடம் இருந்தே வந்திருக்கின்றன. பண்டைய சிந்து நாகரிகத்தின் முத்திரைகளில் புலிகள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. தமிழகத்தில் சோழர்களின் கொடியில் புலி உருவம் பொறிக்கப்பட்டிருக்கின்றன. இந்து புராணங்களில் துர்காதேவியின் வாகனமாக புலி அடையாளப் படுத்தப்பட்டிருக்கிறது. புலியை கடவுளாக கருதும் சமூகங்களும் இந்தப்புவியில் வாழ்ந்து வந்திருப்பதாக வரலாற்றில் அறிய முடிகிறது.
சீன நாட்காட்டியின் ஒவ்வொரு 12 ம் ஆண்டும் புலியின் ஆண்டாக குறிப்பிடப்படுகின்றது. அந்த ஆண்டுகளில் பிறப்பவர்கள் அதிர்ஷ்டசாலிகள் என சீனர்கள் கருதுகின்றனர். உணவுச் சங்கிலியில் புலி முக்கிய இடத்தை வகிக்கின்றது. புலியின் எச்சங்கள் தான் பூஞ்சை காளான்களை உருவாக்கி பல்லுயிர் பெருக்கத்திற்கு வழிவகுக்கின்றது. புலிகள் ஒரு காட்டின் ஆரோக்கியத்தை நிர்ணயிப்பதில் முக்கிய இடத்தை வகுக்கின்றன. தாவர உண்ணிகளின் எண்ணிக்கையை கட்டுக்குள் வைப்பதால், காட்டின் பல்லுயிர் பெருக்கத்தை சமநிலைப்படுத்துவது மட்டுமின்றி காடுகளின் உற்பத்தியாகும் நதிகளையும் காப்பாற்றுகிறது.
புலி பசித்தால் மட்டுமே வேட்டையாட வேண்டும், வயிற்றில் குட்டி உள்ள எதையும் வேட்டையாட கூடாது என்ற கட்டுப்பாட்டை தனக்குள் வைத்திருக்கும் ஓர் அழகிய உயிரினம் புலி. உலகில் புலி தோன்றி ஒரு இருபது இலட்சம் ஆண்டுகள் இருக்கலாம் என்று ஆராய்சியாளர்கள் சொல்கிறார்கள். ஆசியா முழுவதும், துருக்கி முதல் தூர கிழக்கில் ஓகோட்ஸ்க் கடல் வரை, சுமத்ரா, ஜாவா மற்றும் பாலி தீவுகளில்கூட புலிகள் வாழ்ந்ததாக அறிய முடிகிறது. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உலகப் புலிகளின் எண்ணிக்கை ஒரு இலட்சம் என மதிப்பிடப்பட்டது. ஆனால் இன்று புலிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டன.
உலகில் உள்ள புலிகளின் எண்ணிக்கையில் இந்தியாவில் மட்டுமே சுமார் 70 விழுக்காடு புலிகள் இருப்பதாக புள்ளி விவரங்கள் சொல்கின்றன. இதன்மூலம் உலகில் அதிகமான புலிகள் இருக்கும் நாடாக இந்தியா இருந்து வருகிறது. 2018 ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 2,967 புலிகள் இருக்கின்றன. இவற்றில் 35 விழுக்காடு புலிகள் சரணாலயத்திற்கு வெளியே வாழ்கின்றன.
அழிந்து கொண்டிருந்த புலிகளை காப்பதற்காக இந்தியாவில் 1973 ம் ஆண்டில் ப்ராஜெக்ட் டைகர் எனும் அரசின் அமைப்பின் மூலம் 9 தேசிய புலிகள் சரணாலயம் அமைக்கப்பட்டது. தற்போது 51 சரணாலயங்கள் தேசிய புலிகள் பாதுகாப்பு வாரியத்தின் கீழ் செயல்பட்டு வருகின்றன.
புலிகள் வசிக்கும் நாடுகளின் தலைவர்கள் ரஷ்யாவில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் 2010 ம் ஆண்டு ஒன்றுகூடி, 2022 ம் ஆண்டிற்குள் உலகில் உள்ள புலிகளின் எண்ணிக்கையை இரண்டு மடங்காக பெருக்குவது என்ற பிரகடனத்தில் கையெழுத்திட்டனர். இது செயின்ட் பீட்டர்ஸ்பர்க் பிரகடனம் என்று அழைக்கப்படுகிறது. இந்தக் கூட்டத்தின் முடிவின்படியே ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 29 உலகப் புலிகள் தினமாக கொண்டாடப்படுகிறது. புலிகளின் எண்ணிக்கையை இரு மடங்காக பெருக்க வேண்டும் என்ற இலக்கில் இந்தியா வென்றிருக்கிறது. இது ஒரு மகிழ்ச்சியான செய்தியாகும். ஆனால் இந்த மகிழ்ச்சி நீண்டநேரம் நீடித்திருக்கவில்லை. காரணம் இந்தியாவில் புலிகள் இறப்பு எண்ணிக்கை முன்பை காட்டிலும் அதிகரித்து வருவதுதான்.
2021 ம் ஆண்டில் மட்டும் மொத்தம் 127 புலிகள் இறந்துள்ளதாக தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.கடந்த 10 ஆண்டு கால தரவுகளில் 2021 ம் ஆண்டு தான் அதிக அளவில் புலிகள் இறப்பு பதிவாகியுள்ளது. 2012 முதல் 2021 வரையிலான காலகட்டத்தில் 987 புலிகள் இறந்துள்ளன என்று புள்ளிவிவரங்கள் சொல்கின்றன.
புலிகள் எண்ணிக்கை குறைவதற்கு அதன் வாழ்விட இழப்பு ஒரு முக்கியமான காரணமாக இருந்து வருகிறது. காடழிப்பு என்பது புலிகளின் சூழலை மட்டுமல்லாமல், அவற்றின் இரையின் சூழலையும் அழித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மனிதன் தனது சுயநலத்திற்காக காடுகளை துண்டாடியும், அழித்தும் வருகிறான். காடுகளின் குறுக்கே சாலைகள், காடுகளின் நடுவே கட்டடங்கள் என காடுகள் தனது இயற்கையான அழகை இழந்து நிற்கின்றன.
'புலிகள் மட்டுமின்றி அனைத்து காட்டுயிர்களும் வாழ்விடம் அழிக்கப்படுவது, துண்டாடப்படுவது போன்ற சிக்கல்களில் இத்தகைய பிரச்சனைகளை எதிர்கொள்கின்றன. ஒரு காட்டை ஊடுருவிச் செல்லும் சாலையை இரவு நேரத்தில் ஒரு மணி நேரத்திற்கு மூடி வைத்தாலே காட்டுயிர்கள் மிகவும் மகிழ்ச்சியாக உணர்கின்றன. பந்திப்பூரில் அதுதான் நடந்தது. இரவு நேரங்களில் பயணிப்பதை தடை செய்தார்கள். அந்த நேரத்தில் புலிகள் மிகவும் செழித்திருக்க தொடங்கின' என்கிறார் புலிகளின் ஆராய்ச்சியாளர் முனைவர் குமரகுரு.
அதேபோல் புலிகள் சந்திக்கும் இன்னொரு சவால் மின்சார வயர்கள். தங்கள் நிலங்களில் உள்ள பயிர்களை பன்றி உள்ளிட்ட உயிரினங்கள் சேதப்படுத்துவதை தடுக்க மின்சார வயர்கள் போடப்படுகின்றன. பல இடங்களில் இதில் சிக்கியும் புலிகள் இறந்துவிடுகின்றன. தங்கள் வாழ்வாதாரமான மாடுகளை புலிகள் அடித்து கொன்று விடுவதால், புலிகளுக்கு விஷம் வைத்து கொன்று விடும் போக்கும் நிலவுகிறது. கோவா போன்ற மாநிலங்களில் இது அதிகம் நடக்கிறது. வேட்டைக்காக புலிகளை சுட்டுக் கொல்லும் நிலையும் பல இடங்களில் நிலவுகிறது.
புலி - மனிதன் மோதல் அதிகரித்து வருவதை பல செய்திகள் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது. கோடை காலங்களில் தண்ணீர் தேடியும், இரை தேடியும் வெளியில் வரும் புலி கண்ணில்படுபவர்களையெல்லாம் தாக்குகிறது. இதனால் புலிகளால் மனித உயிருக்கு ஆபத்து என்றும், புலிகளை சுட்டுக் கொல்ல வேண்டும் என்றும் பலர் பேசுவதை காண்கிறோம். நான்கு மாதங்களுக்கு முன்பு கூடலூரில் நான்கு நபர்களை கொன்ற புலியை சுட்டுக் கொல்ல வேண்டும் என்று பொதுமக்கள் போராடியது நம் நினைவுக்கு வரலாம். இது மிகவும் தவறான ஒரு பார்வையாகும்.
புலிகளின் இடத்தைத்தான் மனிதன் ஆக்கிரமித்திருக்கிறானே தவிர, மனிதனின் இடத்தை புலிகள் ஆக்கிரமிக்கவில்லை. பொதுவாகவே புலிகள் 50 முதல் 1,000 ச.கி.மீ. வரையில் தங்களது வாழ்விடத்தை அமைத்துக்கொள்ளும் என்று சொல்கிறார்கள். துரதிஷ்டவசமாக அதுபோன்ற காடுகள் இன்று அரிதாகிக் கொண்டு வருகின்றன. காடுகள் துண்டாடப்பட்டு வருகின்றன. 'புலிகளின் வாழ்விடங்கள் சுருங்கி விடுகின்றன. விலங்குகள் நடமாட்ட பாதைகள் துண்டு துண்டாக ஆக்கப்படுகின்றன. புலிகளுடன் மற்ற வன விலங்குகள் நடமாடுவதற்கு இடமே இல்லாமல் போய்விட்டது. இப்படியிருக்கையில் மோதல் நடக்காமல் என்ன செய்யும்?' என கேள்வி எழுப்புகிறார் மகாராட்டிரத்தின் முதன்மை தலைமை வன பாதுகாவலர் அசோக்குமார் மிஸ்ரா.
புலிகளை காப்பது பற்றியும், காடுகளின் சமநிலையை பேணுவது பற்றியும் அதிகமான விழிப்புணர்வு இன்று தேவைப்படுகிறது. காடுகளை காப்பதைப்போல இந்த உலகத்தையும் காத்து நிற்பதில் புலிகளுக்கு தனித்த இடம் இருப்பதை உணர்வது அவசியமாகும்.
- வி.களத்தூர் பாரூக்
- விவரங்கள்
- கவிஜி
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
புலி உள்ள காடே வளமான காடு. வளம் உள்ள காடுகளால் தான் நிலத்திலுள்ள மனிதன் வாழ்கிறான்.
இங்கு எல்லாமே சுழற்சி. ஒன்றிலிருந்து தொடங்குவது தான் இன்னொன்று. அதன் நீட்சி தான் மானுடம் தழைக்கச் செய்த மந்திரமாகி இருக்கிறது. எங்கோ படபடக்கும் பட்டாம்பூச்சியின் அசைவில் இருந்து தான் வேறெங்கோ நிகழும் பூகம்பத்தின் தொடர்ச்சி நிகழ்கிறது என்று சொல்லும் கேயாஸ் தியரி தான் இந்த உலகம். பிரபஞ்சத் துகள் பூமி என்றால் பூமிக்குள் நிகழும் எல்லாமும் துகள்களின் அசைவு தான்.
காடு.. புலி.... பல்லுயிர்.... என்று சூழலியல் பற்றிய சிந்தனை தொடர்ந்து ஓடுவதால்.... புலி பற்றிய சில பகிர்தல்கள் இங்கே.
சிறுத்தை மீது எப்போதும் வசீகரம் இருந்தாலும் புலி மீது வியப்பிருக்கிறது. யானைகள் காட்டின் பிரம்மாண்டம் என்றால் புலிகள் காட்டின் வேலிகள். புலி இயல்பிலேயே கூச்ச சுபாவம் உடையவை. அவை பசித்தால் மட்டுமே வேட்டையாடும். அதுவும் வயிற்றில் குட்டிகள் கொண்ட எதையும் தாக்காது என்பது மிருக விதி போல. மீறாது தான் போல.
எத்தனை பசித்தாலும்... எந்த குட்டிகளையும் அது ஒன்றும் செய்வதில்லை. ஒரு காணொளியில் கூட மான் குட்டியைத் தூக்கிக் கொண்டே செல்வதையும்...... கிட்டத்தட்ட அது தான் அதை வளர்ப்பதையும் கண்டோம். அதன்பிறகு வேறொரு பார்வை புலி மீது கொண்டோம். புலியை இன்னும் கொஞ்சம் விரட்டி நெருங்கி கவனிக்க...... இந்த புலி இனம் உலகிலேயே மிகப்பெரிய பூனை வகைமையைச் சார்ந்த இனம் என்று தெரிய வருகிறது. 3.3 மீட்டர் நீளமும் 670 பவுண்ட் எடையும் சராசரியாக இருக்கும் என்று ஆய்வு சொல்கிறது. ஒரு புலியின் வாழ்நாள் சராசரியாக 20 இருந்து 26 வருடம் இருக்குமாம். இந்த புலி இனம் பூமியில் தோன்றி 20 லட்சம் ஆண்டுகள் இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
அப்படிப்பட்ட புலி ஒன்று உயிர் வாழ 1000 சதுர மீட்டர் காடு வேண்டும் என்கிறது புள்ளி விபரம். காடுகளின் வாழ்வு புலி என்னும் வேலியில் தான் இருக்கிறது. ஒவ்வொரு புலியும் ஒரு மைல்கல் காடுகளுக்கு. அது எப்படி புலிக்கும் காடுக்குமான தொடர்பு என்றால்... சுவாரஷ்யங்களின் கூட்டு தான் இந்த பூமியின் சுழற்சி. முன்பே சொன்ன கேயாஸ் தியரி தான் இங்கும் மிக மெலிதாக தன்னை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. மேற்கு தொடர்ச்சி மலையில் ஒரு புலி இறந்தால் தஞ்சை டெல்டாவில் பத்தாயிரம் ஏக்கர் நிலம் தரிசாக போய் விடும் என்று "பூவுலக நண்பர்க"ளில் ஒருவர் எழுதிய- ஒரு கட்டுரையில்- இந்த சொற்றொடர் தூக்கி வாரிப் போட்டது. அதன் நீட்சியில் அந்த கட்டுரை சொல்லும் செய்திகள் மூலம்... புலி வால் பிடித்த கதை தான் இங்கே நடக்கும் எல்லாக் கதைகளும் என்று புரிய நேர்ந்தது.
முன்பே சொன்னது போல இந்த உலகம் உயிக்ச் சங்கிலியின் வழியாகத்தான் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. ஒன்றிலிருந்து முளைக்கும் இன்னொன்று. ஒன்றின் வினையால் ஏற்படும் இன்னொன்றின் எதிர்வினை. இங்கு இது இருப்பதால் தான் அங்கு அது இருக்கிறது போன்ற சமன்பாடுகள்... அப்படி... ஒவ்வொரு புலியும் காடுகளின் காவலாளி என்றால் மிகை இல்லை.
வேட்டை சமூகத்தில் இந்த மானுடம் இருந்த போது தண்ணீரின் தேவை மிகக் குறைவாக இருந்தது... அதுவே அவன் உழைத்து விதைத்து வாழத் தொடங்கிய பிறகு.... தேவைக்கதிகமான நீரை அபகரிக்க ஆரம்பித்தான். முன்பு சொன்ன சுழற்சியில் நீரின் பங்கு தான் முக்கால்வாசி என்றறிவோம். நீரின்றி அமையாது உலகு என்று வள்ளுவன் சொன்ன வலுவான செய்தி தான் காலத்துக்கு காலர் தூக்கி நிற்கிறது. சுழலும் பூமியின் சூத்திரம் இது தான். தீதும் நன்றும் பிறர் தர வாரா என்ற ‘பூங்குன்றன்’ கொளுத்திப் போட்ட புதிர் தான் புலிக்கும் மனிதனுக்குமான சங்கிலி; யானைக்கும் நமக்குமான பந்தம்; நீருக்கும் நெருப்புக்குமான இணக்கம்; காற்றுக்கும் வெளிக்குமான விசேஷம்; நமக்கும் நமக்குமான இடைவெளி.
எல்லா உயிரினங்களுக்கும் ஆதாரம் நீர். அந்த நீர் எப்படி உருவாகும். ஒரே வழி மழை. அந்த மழைக்கு எது காரணம்... வெயில். அந்த வெயிலுக்கும் மழைக்குமான இடைவெளியை இட்டு நிரப்பும் சில பல வேலைகளில் பங்கெடுத்துக் கொள்ளும் புலிகளை நாம் சாக விடலாமா? எப்படி அதன் பங்கென்று பார்த்தோமானால்... காடுகளில்... தாவரத்தை தின்று உயிர் வாழும் பன்றி... முயல்... மான் என்று சில சிறிய விலங்குகளுக்கு வேலையே வயிறு முட்டத் தின்பதும்.... இனப்பெருக்கத்தில் ஈடுபடுவதும் தான். அப்படி ஈன்றெடுக்கும் குட்டிகள் மீண்டும் உணவுக்கு தாவரங்களைத் தான் தின்னும். தாவரங்கள் தான் காடு. அவையே காலியானால் ஒரு முறை உருவான காடு மீண்டும் உருவாக காலக்கணக்கில் ஆகி விடும். ஒவ்வொரு காடும் சாதாரணமாக உருவானது இல்லை. அதில் பறவைகளின்.... தேனீக்களின்...... அயராத உழைப்பிருக்கிறது. முன்பே சொன்ன...... இங்கு இது நிகழ்ந்தால் தான்.... அது அங்கு நிகழும் என்பது. அப்படி ஒவ்வொரு பறவையும் ஒரு மரத்தை தூக்கிச் சென்று விதைக்கிறது. மகரந்த சேர்க்கை என்ற மகத்துவம் தேனீக்கள் இல்லை என்றால் எப்படி நிகழும். தேனீக்கள் இல்லாத உலகில் நான்காண்டுகளில் மானுட இனமே அழிந்து போகும் என்கிறது அறிவியல்.
ஆக....... தாவரப் பட்சிகள் தாவரங்களை பெருமளவு உண்டு தீர்க்காமல் பார்த்துக் கொள்ளும் பொறுப்பு புலிகளுக்கு உண்டு. அவைகளை புலிகள் அடித்துத் தின்று விடுவதால்... தாவரங்கள் காக்கப்படுகின்றன. மேற்குத் தொடர்ச்சி மலையில் வீழும் அத்தனை அருவிகளும் எங்கிருந்து வருகின்றன? மழைக்காலங்களில் ஸ்பாஞ் போல இருக்கும் புல்வெளிகள் உறிந்து கொண்ட நீர்த் துளிகள் தான் கொஞ்ச கொஞ்சமாக எல்லாக் காலங்களிலும் உருட்டி விடப்பட்டு...... அது ஓடையாக...... வாய்க்காலாக..... சிறு நதியாக.... அருவியாக விழுகிறது. ஆக...... நீரை அடை காக்கும் புற்களை மான்கள் மேய்ந்து விட்டால்...... நீர் எப்படி சேகரமாகும்? நீண்ட நெடிய தோற்றத்துக்கு அதன் ஓட்டம் எங்ஙனம் நடக்கும்? ஆறு இல்லாத சமூகத்தில்...... நாகரீகம் எங்ஙனம் பிறக்கும்?
பொதுவாகவே தாவரப் பட்சிகள் மரத்திற்கு ஊடாக இருக்கும் செடி கொடி கிழங்குகளைத் தின்ன வேண்டும். அப்போது தான்.. அடர்ந்த மரங்களுக்கிடையே உருவாகும் இடைவெளியில்... சூரிய ஒளி புகுந்து பூஞ்சைக்காளான்...... சிறு செடி..... கொடிகளுக்கு உயிர் அளிக்க முடியும். அப்படித்தான் வனம் உயிர்ப்பிக்கப் பட்டுக் கொண்டே இருக்கிறது என்று அந்த பூவுலக நண்பரின் கட்டுரை விரிகிறது. அளவுக்கு மிஞ்சினால் தாவரப் பட்சிகளும் ஆப்பு தான் என்பது இயற்கைக்கு தெரிந்திருக்கிறது. அதனால் தான் அதை விட பெரிய அகப்பையை புலி வடிவத்தில் உலவ விட்டது இயற்கை. அதன் நீட்சியில் மானுடம் என்ற வகைமை பூமியில் தழைத்தோங்க முடிந்தது.
நரி, சிறுத்தைகள் எல்லாமே புலியோடு சேர்ந்து வசிக்க பல கால கட்டங்களில் புலி அனுமதிக்கும் என்ற செய்தி அதன் மீதான வியப்பை இன்னும் இன்னும் அதிகப்படுத்துகிறது. பிறந்த புலிக்குட்டிகளுக்கு ஒன்றிலிருந்து இரண்டு வாரங்களுக்கு கண்கள் தெரியாது... என்பது நம் கண்களை அகல திறக்கும் செய்தி. ஒரு புலியின் வேகம் ஒரு மணி நேரத்துக்கு 65 கி மீ வேகம் என்பது திக் திக் செய்தி. எல்லாம் தாண்டி புலியைப் பற்றிய இன்னொரு செய்தி ஆச்சரியப்படுத்தியது. எப்படி நமக்கு காதில் சுரக்கும் ஒரு வகை லிக்யுட் தான் நம்மை சரிந்து விடாமல் நிற்கச் செய்கிறதோ அப்படி புலியின் வால் தான் அதனை சமநிலையில் வைத்திருக்க உதவுகிறதாம். புலி பிறந்து 6 மாதங்களிலேயே எப்படி வேட்டையாடுவது என்று கற்றுக் கொள்ளுமாம். வேட்டை அதன் ரத்தத்தில் இருக்கிறது. வேகம் அதன் யுத்தத்தில் காணலாம். பல புலி இனங்கள் அழிந்து விட்ட இக் கால கட்டத்தில் இருக்கும் புலிகளையாவது காத்துக் கொள்ள வேண்டும் என்பது தான் இக்கட்டுரையின் செய்தி.
ஏன் கோவில்களில் முதல் சிற்பமென புலியின் சிற்பம் இருக்கிறது என்று இப்போது புரிகிறதா? திருவிழாக்களில் ஏன் ஆட்டங்களில் முதல் ஆட்டம் புலி ஆட்டம் என்று இப்போது தெரிகிறதா? தஞ்சை தொல்குடிகள் புலியை கடவுளாக வணங்கினார்கள்....... என்றால் ஓடும் ஒவ்வொரு நதிக்குப் பின்னும் புலிகளின் உழைப்பிருக்கிறது. நாம் குடிக்கும் ஒவ்வொரு சொட்டு நீருக்குப் பின்னும் புலியின் வியர்வை இருக்கிறது... என்பதை அவர்கள் புரிந்து வைத்திருந்தார்கள். நாமும் புரிந்து கொள்ள வேண்டும். காட்டில் என்ன இருக்கிறது என்று என்றோ கேட்ட நண்பனுக்கும் இது தான் பதில்.... காட்டில் தான் எல்லாம் இருக்கிறது.
நீருக்கு ஆதாரம் செடி, கொடி, புல், பூண்டு, மரங்கள். நீரின் அவதாரம் அவைகளைக் காக்கும் புலிகள். ஆக... காடுள்ள நாடே வளமாகும். அதற்கு வளமான காடே பலமாகும்.
- கவிஜி
நன்றி : செய்திகள் - பூவுலக நண்பர்கள் மற்றும் இணையம்
- இலையுதிர் காலத்தின் இலைகளின் நிற மாற்றம்
- தேனீ எனும் தோழன்!
- பத்துக் கோடி ஆண்டுகளாக உயிரை கையில் பிடித்து வைத்திருந்த நுண்ணுயிரிகள்
- வெளவால்கள் பலவிதமான வைரஸ்களுக்கு ஓம்புயிரிகளாக இருந்தும் அவை நோய்வாய்ப்படுவதில்லை - ஏன்?
- வேடந்தாங்கல் எல்லைக் குறைப்பு - நமக்கு நாமே வைக்கும் கொள்ளி
- ஆட்டுக் குட்டிகளில் இறப்பைத் தடுக்கும் வழிமுறைகள்
- மாறிவிட்ட யானையின் வலசைத் தடங்கள்!
- புவி வெப்பமடைதலால் அழிந்து வரும் பம்பிள் தேனீக்கள்
- அழிந்து வரும் கழுதைகள் மற்றும் புதலிகள்
- காட்டுத் தீ பரவுவதைத் தவிர்க்க கால்நடைகளைப் பயன்படுத்தும் கலிபோர்னியா
- பாம்புக்கு நடுங்க வேண்டுமா?
- புயலையும் தாங்கி நிற்கும் பனை மரம்
- அரசியலால் அழியும் அமேசான் காடுகள் - மிரட்டும் முதலாளிகள், துரத்தப்படும் பூர்வகுடிகள்...
- தேரியில் குடியிருக்கும் ஒரு கொல்லாமரத்தின் தாகம்
- பசுவினங்களும் பால் உற்பத்தியும்: நேற்று, இன்று, நாளை
- விலங்குகளில் செயற்கை முறை கருவூட்டல்
- இன்றைய வணிகக் கோழி உருவான அறிவியல்
- சீமைக் கருவேல மர அழிப்பில் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மைகள்!
- நாம் ஏன் யானைகளை நேசிக்கிறோம்?
- திசைகாட்டி தாவரம் தெரியும்?