கீற்றில் தேட...
அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
பூமியில் வாழும் ஒவ்வொரு உயிரினத்திற்கும் இயற்கையின் சமநிலையை நிலைநிறுத்துவதில் ஒரு முக்கிய பங்கு உண்டு என்பதை உலகம் இப்போது உணரத் தொடங்கியுள்ளது.
டுங்கர்வாடியில் கழுகுகள்
கழுகுகள் மரணத்தின் மறுவடிவமாக மக்களால் கருதப்படுகின்றன. வானில் கழுகுகள் வட்டமிட்டால் இறந்த உடல் அருகில் எங்கோ உள்ளது என்பதன் அடையாளம் அது என்று கருதப்பட்டது. மென்மையான சிறகுகளோ, உரோமமோ இல்லாத தலை, சதையைப் பிய்த்து குத்திக் கிழித்தெடுப்பதற்கு ஏற்ற வகையில் அமைந்திருக்கும் கத்தி போன்ற கூர்மையான அலகு, அதன் வடிவம் போன்றவை பார்ப்பவர்களுக்கு பயத்தை ஏற்படுத்துபவை.
ஆனால் இயற்கையில் இந்தப் பறவைகள் ஆற்றும் பணியை இன்னும் மனிதகுலம் முழுமையாக உணரவில்லை. இறந்த உடல்களை உண்பதன் மூலம் இவை பலதரப்பட்ட நோய்கள் பரவுவதைத் தடுக்கின்றன. தெற்கு மும்பை வழியாக பயணிப்பவர்கள் அந்த மாநகரத்தின் நடுவில் ஒரு அடர்ந்த காடு இருப்பதை கவனிக்காமல் போக முடியாது! மலபார் குன்றுகளில் ஐம்பதிற்கும் மேற்பட்ட ஏக்கரில் டுங்கர்வாடி (Doongerwadi) என்று அழைக்கப்படும் இந்தக் காடு அமைந்துள்ளது.மும்பையில் பார்சி சமூகத்தினரில் இறந்தவர்களின் இறுதிச் சடங்குகள் நடக்கும் புனித இடம் இது. நூற்றாண்டுகளுக்கு முன்பு மேற்காசியாவில் இருந்து பார்சிகள் இந்தியாவுக்கு குடியேறிய காலத்தில் மும்பையில் மலபார் குன்றுகள் முழுவதும் வனப்பகுதியாக இருந்தது என்று “ராஜ்பவன்ஸ் இன் மகாராஷ்டிரா” என்ற நூலில் சதாசிவ் கோரக்ஷகார் (Sadashiv Gorakshakar) கூறுகிறார். 18ம் நூற்றாண்டின் கடைசி வரை புலியும் கழுதைப்புலியும் நரியும் கழுகுகளும் இந்த காட்டில் வாழ்ந்து வந்தன.
பிரிட்டிஷ் இந்தியாவில் 1870ம் ஆண்டிற்குப் பிறகு மலபார் குன்றுகள் மும்பையில் பெரிய செல்வந்தர்களின் குறிப்பாக பார்சிகளின் காலனியாக மாறியது.
1672ல் பார்சிகளின் சவ அடக்கம் நடக்கும் சாந்தி கோபுரம் என்ற பொருள்படும் டோமாஸ் (tower of silence) அல்லது டக்மா (dakhma) டுங்கர்வாடியில் நிறுவப்பட்டது. இறந்தவர்களின் உடலை வல்லூறு அல்லது பிணம் தின்னி கழுகுகளுக்கு உணவாக கொடுக்கும் சோரோஸ்ட்டிரியன் (Zoroastrian) முறை கி.மு ஐந்தாம் நூற்றாண்டு முதல் இருந்தது என்று கிரேக்க வரலாறு கூறுகிறது. ஆனால் இதை ஹிராட்டடஸ் (Herodotus) என்ற கிரேக்க அறிஞர் ஒன்பதாம் நூற்றாண்டில் எழுதிய குறிப்புகளில் முதல்முறையாக ஆவணப்படுத்தினார். பார்சி மத நம்பிக்கையின்படி பார்சிகள் இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய “ஆகாய அடக்கம்” (Sky burriel) என்ற முறையைப் பின்பற்றுகின்றனர். நெருப்பு, நீர் அல்லது மண்ணில் உடல்களை அடக்கம் செய்வது இயற்கையை களங்கப்படுத்தும் என்று பார்சிகள் நம்புகின்றனர்.
உடல்களை இயற்கை வழி அடக்கம் செய்ய எழுப்பப்பட்ட கோபுரங்கள் பெரும்பாலும் ஒரே வடிவமைப்புடன் கட்டப்பட்டன. இவற்றின் மேற்கூரை சமதளமாக இருக்கும். இது மூன்று பகுதிகளை உடையது. இறந்த ஆண்களின் உடல்கள் வெளிப்புற வளையப் பகுதியில் வைக்கப்படுகின்றன. பெண்களின் உடல்கள் நடுப்பகுதியிலும் குழந்தைகளின் உடல்கள் உட்புறப் பகுதியிலும் வைக்கப்படுகின்றன. எலும்புகள் சூரிய ஒளி மற்றும் காற்றால் வெளிரச் செய்யப்படுகின்றன. மீதி மக்கி கரித்தூள், மணலால் சிதைக்கப்பட்டு கடலுக்கு சென்று சேர்கின்றன.
உடலை உயிரினங்களுக்கு உணவாகக் கொடுப்பதே சிறந்தது என்று பார்சிகள் நம்புகின்றனர். மூவாயிரம் ஆண்டு பாரம்பரியம் உள்ள நம்பிக்கையின்படி பார்சிகள் தங்கள் உறவினரின் உடலை கோபுரத்தின் உச்சியில் சவ அடக்கத்திற்காக கிடத்துகின்றனர். உடல்களை உண்ண கழுகுகள் கூட்டமாக வானில் இருந்து வந்து இறங்கும்.
2006ல் மும்பையில் கழுகுகளின் எண்ணிக்கை 97% அளவிற்கு கவலையூட்டும் விதத்தில் குறைந்ததை பாம்பே இயற்கை வரலாற்று சங்கம் (BNHS) ஆவணப்படுத்தியது.
மும்பையில் வானில் இருந்து கழுகுகள் அனைத்தும் ஒட்டுமொத்தமாக ஒரே நேரத்தில் காணாமல் போயின! இதனால் உண்டான பக்கவிளைவுகள் மிகப் பெரியதாக இருந்தது. டுங்கர்வாடியில் நிசப்தமான கோபுரத்தின் உச்சியில் சவங்கள் அனாதையாகக் கிடந்தன. கழுகுகள் ஏறக்குறைய இல்லாமல் போயின. உடல்களைத் தின்ன வரும் பருந்துகள் மற்றும் காக்கைகளின் எண்ணிக்கை அதிகரித்தது. ஆனால் சிறிய பறவைகளான அவற்றால் ஒரு மனித உடலை முழுமையாக உண்ண முடியவில்லை!
பாதி உண்ட நிலையில் கிடந்த உடல்கள் அழுகி துர்நாற்றம் வீசின. சுற்றுப்புறவாசிகள் புகார் கூறினர். பார்சி சமூகத்தினரை இந்த விஷயம் உணர்வுப்பூர்வமாக சங்கடத்தில் ஆழ்த்தியது. ஒரு பிரிவினர் தங்களுக்கு மின் மயானம் போதும் என்று கூறினர். பாரம்பரியவாதிகள் நிம்மதி இழந்தனர். பிரச்சனை பெரிய விவாதமாக மாறியது. பார்சி பஞ்சாயத்து உடல்களை உலர்த்த பெரிய சூரிய ஒளி பிரதிபலிப்பு உலர்த்திகளை நிறுவியது.
ஆனால் மழைக்காலத்தில் இவை போதுமான அளவுக்கு செயல்படவில்லை. பார்சி சமூகத்தினரும் அரசும் சூழல் செயல்பாட்டாளர்களும் பிரச்சனையைத் தீர்க்க வழி தேடி அலைந்தனர். கால்நடைகளின் சிகிச்சையில் பயன்படுத்தப்படும் டிக்ளோஃபெனாக் ((diclofenac) ) என்ற வலி நிவாரணி மருந்தின் பயன்பாடே கழுகுகளின் இன அழிவிற்கு காரணம் என்று அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டது. இந்தியாவில் மட்டும் இல்லாமல் தெற்காசியாவில் இருக்கும் கழுகுகள் மறையத் தொடங்கின.
இது பற்றி ஆய்வுகள் நடந்தன. கால்நடை சிகிச்சையில் வலி நிவாரணி மருந்து ஊசி மூலம் செலுத்தப்பட்டு பிறகு அவைகள் இறந்தபின் அவற்றின் உடலை உட்கொள்ளும் கழுகுகளின் உடலிலும் சென்று சேர்ந்தது. இதனால் கழுகுகளுக்கு ஏற்பட்ட சிறுநீரக நோயால் அவை இறந்தன. 2006ல் இந்த மருந்தின் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டது. 90களில் இலட்சக்கணக்காக இருந்த கழுகுகள் 2006 காலத்தில் வெறும் ஒரு சில ஆயிரங்களாக சுருங்கின!
இந்தியக் கழுகு என்று அறியப்படும் நீண்ட அலகுள்ள வல்லூறு (Long billed vulture), வெந்நிற வல்லூறு (White-backed vulture) ஆகிய இரண்டு இனங்கள் அன்று மும்பையில் சர்வசாதாரணமாக இருந்தன. குளிர்காலத்தில் நகருக்கு வலசை வரும் க்ரிஃபன் வல்லூறு (griffon vulture) என்றொரு இனமும் அப்போது இருந்தது. 2007ல் மும்பையில் 11,000 ஓரியண்ட் வெண்ணிற கழுகுகள், 45,000 நீண்ட அலகுள்ள கழுகுகள் மற்றும் 1000 ஸ்லெண்டர் (slender vulture) கழுகுகள் இருந்தன என்று ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது.
ஆய்வுகளும் பாதுகாப்பு முயற்சிகளும்
2012ல் இந்த இனங்களின் எண்ணிக்கை குறையும் வேகம் மாறியது என்று பாம்பே இயற்கை வரலாற்று சங்கம் கூறியது. 2015ல் மீண்டும் ஆய்வு நடந்தது. அப்போது 6,000 ஓரியன் வெண்ணிற வல்லூறுகள், 2,000 நீண்ட அலகுடைய வல்லூறுகள், 1000 ஸ்லெண்டர் வல்லூறுகள் இருந்தன என்று ஆய்வுகள் மூலம் தெரிய வந்தது. கழுகுகளின் எண்ணிக்கை எதிர்பார்த்த அளவு அதிகரிக்கவில்லை. கவலை தொடர்ந்தது.
மும்பையில் கழுகுகளுக்கு இரண்டு விதமான மரணங்கள் சம்பவித்தன! ஒன்று ஒரு குறிப்பிட்ட பறவையினத்தின் மரணம். இது மனிதன் ஏற்படுத்திய காரனங்களால் நிகழ்ந்தது. மற்றொன்று மூவாயிரம் ஆண்டு நீண்டு நின்ற ஒரு பாரம்பரிய சம்பிரதாயத்தின் மரணம். ஒரு உயிரினத்தின் அழிவு மனிதனின் சமூக வாழ்வை எவ்வாறு நேரடியாகப் பாதிக்கும் என்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டே இது. பார்சி சமூகத்தின் சடங்கு முறை தடைபட்டதையும் கழுகு இனத்தின் அழிவையும் கண்டு டுங்கர்வாடி வனத்தை புதிய கண்ணோட்டத்துடன் பார்க்க ஆரம்பித்தது.
வலிமையான அந்த பார்வைக்கு முன்னால் டுங்கர்வாடியை வட்டமிட்ட ரியல் எஸ்டேட் கொள்ளைக்காரர்கள் நிசப்தமாயினர்! மும்பை நகர சமூகம் தங்களுக்கு பக்கத்தில் இருந்த காட்டை, அதில் வாழும் கோடானுகோடி உயிர்களை பரந்து விரிந்த ஆழமான அர்த்தத்தில் காண ஆரம்பித்தது.
2017ல் மும்பையில் பசுமை கட்டிடங்களை நிர்மாணிப்பது பற்றிய உரையாடலில் ஈடுபட்டிருந்த நியூயார்க் பல்கலைக்கழக பேராசிரியர், நகர்ப்புற சூழலியலாளர், சூழல் மற்றும் சமூகம் என்ற இணைய வாசல் அமைப்பின் விஞ்ஞானியுமான ஆன் ரெய்டுமார்க்கெர் அவர்களுக்கு (Anne Rademacher) மும்பை டுங்கெர்வாடியில் அழிந்து கொண்டிருக்கும் கழுகுகள் பற்றி ஆராய அழைப்பு வந்தது.
“உயிப் பன்மயத் தன்மையின் காவல் கோட்டையே டுங்கெர்வாடி. மும்பை நகரம் வெளிவிடும் கார்பன் டை ஆக்சைடின் பெரும் பகுதியை இந்த காடே உறிஞ்சுகிறது. நகரம் ஏற்படுத்தும் ஒலி மாசைக் குறைக்கிறது. மழை நீரை வீணாக்காமல் தடுத்து மண்ணுக்குள் இறக்குகிறது. காட்டின் பரிசுத்தமான அர்த்தத்துடன் சூழல் முக்கியத்துவத்தை டுங்கெர்வாடி உணர்த்துகிறது” என்று அவர் கூறுகிறார்.
தேசிய செயல் திட்டம்
பார்சி சமூகத்தின் சூழலியலாளரும் சூழல் ஆராய்ச்சி மற்றும் கல்விக்கான அமைப்பின் (Centre for Environment Research & Education) தோற்றுனருமான டாக்டர் ராஷ்னே டுங்கர்வாடியில் நாட்டுப்புற மரங்களையும் குத்து செடிகளையும் வளர்க்கும் திட்டத்தை ஆரம்பித்தார். 2015ல் நடப்பட்ட 7092 மரக்கன்றுகள் இன்று பெரிய மரங்களாக வளர்ந்துள்ளன. வல்லூறுகளை அழிவில் இருந்து மீட்க தேசிய செயல்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
கால்நடைகளுக்காக தயாரிக்கப்படும் புதிய ஸ்டீராய்டு, வீக்கம் ஏற்படுத்தாத மருந்துகள் சந்தைக்கு வருவதற்கு முன்பே அவற்றை கழுகுகளில் பரிசோதிக்க வேண்டும் என்று கழுகுகள் பாதுகாப்பு செயல் திட்டம் அறிவுறுத்தியுள்ளது. பல மாநிலங்களில் இந்த உயிரினங்கள் இனப்பெருக்கம் செய்ய உதவும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. உலகின் முதல் ஆசிய கிங் வல்லூறு பாதுகாப்பு மையம் உத்தரப்பிரதேசத்தில் மஹராஜ்கஞ்ச் (Maharajganj) மாவட்டத்தில் ஜடாயு மையம் என்ற பெயரில் செயல்படுகிறது.
2023 பிப்ரவரியில் மேற்கு வங்காளத்தில் பர்சா புலிகள் சரணாலயத்தில் இருபது கழுகுகள் வளர்க்கப்பட்டு பிறகு காட்டிற்குள் விடப்பட்டன. பாம்பே இயற்கை வரலாற்று சங்கம், வனத்துறை, ஆய்வு நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் இந்த உயிரினங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும் ஆய்வுகள் நடந்து வருகின்றன. 2024 ஜனவரி புள்ளிவிவரங்களின்படி டிசம்பர் 2023ல் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளாவில் 308 கழுகுகள் வாழ்கின்றன என்று தெரிய வந்துள்ளது.
இந்த உயிரினங்களைக் காக்கும் முயற்சிகள் வெற்றி பெற்று காணாமல் போய்க் கொண்டிருக்கும் கழுகுகள் மீண்டும் முன்பு போல வானில் வலம் வரும் காலம் விரைவில் வரட்டும்.
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
இன்னும் இரண்டு மில்லியன் பூஞ்சை உயிரினங்கள் பூமியில் விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட வேண்டியுள்ளது என்று லண்டன் க்யூ (Kew) தாவரவியல் பூங்கா ஆய்வாளர்கள் சமீபத்தில் வெளியிட்ட 2023ம் ஆண்டிற்கான உலக தாவர மற்றும் விலங்குகள் (State of Flora & fauna) நிலை பற்றிய ஆய்வறிக்கை கூறுகிறது.
மனிதனின் கண்டுபிடிப்பு தேடலில் பூஞ்சையினங்கள் காத்திருக்கின்றன. ஆனால் புதிதாகக் கண்டுபிடிக்கப்படும் பெரும்பாலான தாவரங்களும் அழியும் ஆபத்தில் உள்ளவை என்பதால் அவை நிரந்தரமாக அழிந்துவிடும் நிலையில் இருக்கும் உயிரினங்களின் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டும் என்று ஆய்வுக்குழுவினர் வலியுறுத்துகின்றனர்.
கண்டுபிடிக்கப்படும் புதிய உயிரினங்களில் மூன்றில் ஒரு பகுதி உயிரினங்களும் மறையும் ஆபத்தில் உள்ளன. மனித உடலில் வயிற்றுப்பகுதி செரிமான மண்டலத்தில் உள்ள மைக்ரோபியோமில் (gut microbiome) உணவு செரித்தல், ஆற்றல் பெறுதல், நோய் எதிர்ப்பு சக்தி பெற உதவும் பூஞ்சைகள் வாழ்கின்றன.இந்தப் பூஞ்சைகள் முதல் பூமியில் உள்ள மிகப் பெரிய தரைவாழ் பூஞ்சையினம் வரை காணப்படும் உயிரினங்கள் அவற்றின் உயிர்ப்பன்முகத் தன்மையில் முதுகெலும்பற்ற உயிரினங்களுக்கு அடுத்தபடி இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளன.
இவை காற்று, தாவர விலங்குகளுக்குள், மண் மற்றும் கடலில் பல அளவுகளில் பல வடிவங்களில் வாழ்கின்றன. இவற்றில் 90% இன்னமும் அறிவியலால் அறியப்படாதவை என்று க்யூ ராயல் பூங்கா ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
பூமியில் இன்னும் கண்டுபிடிக்கப்பட வேண்டிய 2.5 மில்லியன் பூஞ்சைகள் உள்ளன. 155,000 பூஞ்சை உயிரினங்கள் மட்டுமே இதுவரை கண்டறியப் பட்டுள்ளன. “இது மனிதன் இன்னமும் கால் பதிக்காத எல்லை ப்பகுதி (uncharted territory). கடந்த சில ஆண்டுகளாக உலகெங்கும் நம் வாழ்வின் நிலைத்தன்மை, விவசாயம் போன்றவற்றில் இந்த உயிரினங்களின் முக்கியத்துவம் உணரப்பட்டு வருகிறது. இவை ஒவ்வொன்றிற்கும் மிக உயிர் வாழ்வில் மிக முக்கிய இடம் உள்ளது.
அண்டவெளியில் கரும்பொருட்கள் பூமியில் பூஞ்சைகள்
இப்போது உயர் தர டி என் ஏ பகுப்பாய்வு வசதிகள் உள்ளன. அறியப்படாத பூஞ்சைகள் பற்றிய ஆய்வுகள் சூரியக் குடும்பத்திற்கு அப்பால் இருக்கும் அண்டவெளியை ஆராய்வது போல. விண்வெளி ஆய்வில் கரும்பொருட்கள் போல பூஞ்சைகள் என்று ராயல் பூங்காவின் அறிவியல் பிரிவு இயக்குனர் பேராசிரியர் அலெக்சாண்டர் ஆண்டனெல்லி (Prof Alexandre Antonelli) கூறுகிறார்.
கண்டறியப்படாத புதிய பூஞ்சை உலகம் பற்றிய இச்செய்தி ஆய்வாளர்களுக்கு மகிழ்ச்சி தந்துள்ளது என்றாலும் அவற்றில் பல இனங்கள் அழியும் ஆபத்தில் இருப்பவை என்பது கவலையை ஏற்படுத்தியுள்ளது. 2020ல் அடையாளம் காணப்பட்ட சிறப்பு கடத்து திசுக்களைக் கொண்டுள்ள வாஸ்குலர் தாவரங்களில் 70% ஏற்கனவே விரைவில் அழியும் ஆபத்தான நிலையில் (threatened) உள்ளன.
இந்த வகை உயிரினங்களில் 59% இனங்கள் அழியும் ஆபத்தை (Endangered (EN)) நிலையிலும் 24% இனங்கள் இந்த நிலையை விரைவில் அடையும் ஆபத்திலும் வாழ்கின்றன. பூமியில் இதுவரை 350,000 வாஸ்குலர் வகை தாவரங்கள் உள்ளன என்று அறியப்பட்டுள்ளது. 100,000 இனங்கள் இன்னும் கண்டறியப்பட வேண்டியுள்ளது. இவற்றில் மூன்றில் ஒன்று அழியும் நிலையில் உள்ளது.
புதிய உயிரினங்கள் வேறெந்த நிலையிலும் வாழவில்லை என்பது உறுதி செய்யப்பட்டால் அவை அணைத்தும் அழிவை நெருங்கி விட்டவையாக வகைப்படுத்த வேண்டும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். பொது மக்கள் புதியவற்றை கண்டுபிடிப்பதை உலகம் முழுவதும் ஆய்வாளர்கள் ஊக்குவிக்கின்றனர். புதிய டி என் ஏ மரபணு வரிசைப்படுத்தும் தொழில்நுட்பத்தின் (DNA sequencing technique) புரட்சியால் ஒரு ஸ்பூன் மண்ணில் நூற்றுக்கணக்கான புதிய இனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
நெதர்லாந்தில் மண் பரிசோதனைக்காக ஆய்வகங்களுக்கு அனுப்பும் மண் மாதிரியின் ஒரு ஸ்பூன் மண்ணில் கண்டுபிடிக்கும் புதிய பூஞ்சை ஒன்றிற்கு பெயர் சூட்டும் வாய்ப்பு அதை அனுப்பும் பொது மக்களுக்கு வழங்கப்படுகிறது. 2020 முதல் இத்திட்டத்தின்படி 10,200 புதிய இனங்கள் கண்டுபிடிக்கப்பட்டு பெயரிடப்பட்டுள்ளன. ஆண்டிற்கு 50,000 புதிய இனங்களை அடையாளம் காண முடியும் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
2023ல் க்யூ பூங்கா விஞ்ஞானிகள் பிரேசில் அட்லாண்டிக் பகுதி மழைக்காடுகளில் ஜாம்பி-எறும்புத் தின்னி (zombie-ant fungi) போல trapdoor வகையைச் சேர்ந்த சிலந்தியை உண்ணும் புதிய ஒட்டுண்ணி பூஞ்சையினத்தைக் கண்டுபிடித்துள்ளனர்.
புதிய இனங்கள் கண்டுபிடிப்பதற்கு முன்பே நாம் அவற்றை இழக்க நேரிடும் என்று அஞ்சப்படுகிறது. ”புதியவை கூடுதலாக கண்டுபிடிக்கப்படுவது மருத்துவம், வேளாண்மை, பொறியியல் மற்றும் மனித நோய்களை இன்னும் மேம்பட்ட முறையில் புரிந்துகொள்ள உதவும். தாவர விலங்குகளை விட டி.என்.ஏ. தொழில்நுட்பம் பூஞ்சைகளை அடையாளம் காண பெரிதும் உதவுகிறது.
பூஞ்சைகள் என்றால் ஆரம்பத்தில் நாய்க்குடைகள் மற்றும் லைக்கன்கள் (lichens) எனப்படும் பூக்களற்ற, மஞ்சள் அல்லது சாம்பல் நிறமுடைய, பாறைகள், சுவர்கள், மரங்கள் மீது படர்ந்து வாழும் சிறிய தாவரங்கள் மட்டுமே ஆராயப்பட்டு வந்தன. நம் மைக்ரோபையோமில் ஏராளமான பூஞ்சைகள் உள்ளன என்று இன்று அறியப்பட்டுள்ளது. நமக்கு ஏற்படும் பல நோய்கள் பூஞ்சைகளால் ஏற்படுகின்றன அல்லது சமநிலையற்ற நிலையில் அவை நம் உடலிற்குள் இருப்பதால் தோன்றுகின்றன.
"மண்ணிற்கடியில் வாழும் பூஞ்சைகள் மரங்களை மண்ணோடு பிணைக்கின்றன. மரங்களின் வேர்களுடன் கூட்டுயிரி வாழ்க்கை வாழ்வதற்கான உறவை (symbiotic relationship) இவை ஏற்படுத்திக் கொண்டு பரஸ்பரம் உதவி செய்து வாழ்கின்றன. நீரையும் சத்துப் பொருட்களையும் பகிர்ந்து கொள்கின்றன. இந்த உயிரினங்களின் ஸ்போர்களை இப்போதும் நாம் சுவாசித்துக் கொண்டுதான் இருக்கிறோம்” என்றுராயல் பூங்காவின் மூத்த ஆய்வாளர் எஸ்ட்டர் கயா (Ester Gaya) கூறுகிறார்.
புதிய தாவரங்கள் மற்றும் பூஞ்சையினங்களை அடையாளம் கண்டு அவற்றைப் பற்றி விவரிப்பது உயிர்ப்பன்மயத் தன்மை அறிவியலில் ஒரு முக்கிய சவால். மோசமான அறிவு மற்றும் போதிய விழிப்புணர்வு இடைவெளியுள்ள கொலம்பியா, நியூ கினி போன்ற 32 தாவர உயிர்ப்பன்மயத் தன்மை இருண்ட இடங்கள் (Plant biodiversity dark spots)அடையாளம் காணப்பட்டுள்ளன.
உலகின் பல இடங்களில் போதுமான அளவில் ஏராளமான தாவரங்கள் இது வரை சேகரிக்கப்படவில்லை. ஆராயப்படவில்லை அல்லது அந்த இடங்களின் உயிர்ப்பன்மயத் தன்மையின் ஒரு சிறிய பகுதி மட்டுமே சேகரிக்கப்பட்டு ஆராயப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் இருந்து புதிய உயிரினங்கள் கண்டுபிடிக்கப்பட வாய்ப்புகள் ஏராளம் என்பதால் இவை இருண்ட இடங்கள் என்று அடையாளப் படுத்தப்பட்டுள்ளன.
இன்று நாம் அறியாமல் நம்முடன் வாழும் உயிரினங்கள் அழியும் ஆபத்தில் இருக்கும்போது கண்டுபிடிக்கப் படாதவையும் அவற்றை நாம் அறியும் முன்பே அழிந்துவிடும் என்பது மனிதன் உடனடியாக சூழலைக் காக்க உருப்படியாக அவனால் ஆனதையெல்லாம் செய்ய வேண்டும் என்பதையே வலியுறுத்துகிறது!
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
இந்தியாவைச் சேர்ந்த Common Banded Awl என்ற வண்ணத்துப் பூச்சியினத்திற்கு அபுதாபியில் பாஸ்போர்ட் கிடைத்துள்ளது. கேரளாவைச் சேர்ந்த கிரன் கண்ணன் ஐக்கிய அரபு எமரேட்டில் அபுதாபியில் இதைக் கண்டுபிடித்த கதை இது.
நம்மைச் சுற்றி உயிர்ப் பன்மயத்தன்மையின் பரந்து விரிந்த ஒரு இரகசிய உலகம் இருக்கிறது. நாம் வாழும் இடத்தில் உள்ள பறவை, விலங்குகளில் இவற்றில் சிறிய ஒரு சதவிகிதத்தை மட்டுமே நாம் காண்கிறோம். உற்றுநோக்கும்போது மட்டுமே இவற்றின் விரிவான காட்சிகளை நம்மால் காணமுடியும்.
ஒவ்வொரு இலையின் அடியில், இரவு நேரங்களில், பாலைவனங்களில் மனித நடமாட்டம் இல்லாத கற்களுக்கு இடையில் குட்டிப் புல்வெளிப் பரப்புகளில் எப்போதும் நம்மை வியப்பில் ஆழ்த்தும் எத்தனையோ உயிரினங்கள் வாழ்கின்றன. நம்மைச் சுற்றி இருக்கும் இயற்கையை தெரிந்து கொள்வதே நாம் வாழும் இந்த உலகை அறிய உதவும் முதல்படி. நமக்குள்ளிருக்கும் உயிர்த்துடிப்பு ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு அணுவிலும் ஒரு கண்டுபிடிப்பாளர் வாழ்கிறார்.அபூர்வ வண்ணத்துப்பூச்சியினம்
உலகில் ஒரு சில இடங்களில் மட்டுமே இவ்வகை உயிரினங்கள் வாழ்கின்றன. இந்தியா, தென்கிழக்கு ஆசியா, ஆஸ்திரேலியாவில் மட்டும் காணப்படும் இந்த வகை வண்ணத்துப்பூச்சி ஐக்கிய அரபு எமரேட்டில் கண்டுபிடிக்கப்படுவது இதுவே முதல்முறை. இரண்டு இறக்கைகளை விரித்து வைத்தால் இதன் நீளம் நான்கு முதல் ஐந்து செண்டிமீட்டர் வரை மட்டுமே. இது தவிட்டு நிறமுடையது.
பெரிய கண்களுடன் இருக்கும் இவற்றின் இறகுகளில் வெள்ளை நிற வரிகள் காணப்படுகின்றன. இவை மாலை மற்றும் இரவில் சுறுசுறுப்புடன் செயல்படுகின்றன. பகலில் சுரக்கும் பட்டு இழைகளைக் கொண்டு இலைகளை ஒட்ட வைத்து மடக்கி அதில் ஒளிந்து கொள்கின்றன. ஆபத்து வந்தால் எதிரியிடம் இருந்து மரக்கிளையில் இருந்து கீழே விழுந்து தப்பிக்க இவை இதே பட்டு இழைகளைப் பயன்படுத்துகின்றன. இவற்றை முதல்நோக்கில் பார்த்தால் இரவுப்பூச்சிகள் (moth) போலத் தோன்றும்.
வண்ணமயமான நிறங்கள் இவற்றிற்கு இல்லாததால் பெரும்பாலான வன உயிரியல் புகைப்படக் கலைஞர்களுக்கு இந்த வண்ணத்துப்பூச்சியின் மீது ஆர்வம் இல்லை. கிரன் சமீபத்தில் வழக்கம்போல அபுதாபி மனமகிழ் பூங்காவில் கண்ணுக்குப் புலப்படாத சிறிய உயிரினங்களைத் தேடி நடந்து கொண்டிருந்தார்.
அந்த பூங்காவில் பல வேப்ப மரங்கள் உள்ளன. இந்த மரங்கள் பூக்கும் காலம் அது. எங்கும் வேப்பம்பூக்களின் நறுமணம். திடீரென்று இரவுப்பூச்சி போல ஏதோ ஒன்று பூக்களில் இருந்து பூக்களுக்கு தாவித் தாவி பறப்பதை கிரன் கண்டார். நேரத்தை வீணாக்காமல் உடனே மொபைலில் அதை படமெடுத்தார்.
அந்த சுற்றுவட்டாரம் முழுவதும் நன்கு அறிந்த கிரன் அதற்கு முன் அப்பகுதியில் இது போல ஒன்றைப் பார்த்ததில்லை. இந்த வகை வண்ணத்துப்பூச்சியை காண்பது அதுவே முதல்முறை. இது பற்றிய அறிவும் இதில் நிபுணத்துவம் பெற்ற வளைகுடாப்பகுதியில் சில இன வண்ணத்துப்பூச்சிகளைக் கண்டுபிடித்த அனுபவம் பெற்ற நண்பர் பினிஷ் ரூபஸின் (Binish Roobbas) உதவி கிடைத்தது. அது காமன் பேண்டெட் அவுல் என்று உறுதி செய்யப்பட்டது.
உயிர்ப் பன்மயத்தன்மை பற்றிய விவரங்கள் அடங்கிய இநேச்சரலிஸ்ட் (inaturalist) என்ற தகவல் தளத்தில் கிரன் இது குறித்த விவரங்களைத் தேடினார். வளைகுடாவில் இதற்கு முன்பு வேறொரு இடத்திலும் இவை காணப்பட்டதற்கான பதிவுகள் இல்லை என்று தெரிய வந்தது.
வாழிடப் பரப்பின் விரிவாக்கம்
இந்தியா போன்ற ஆசிய நாடுகளில் காணப்படும் இவை எவ்வாறு வளைகுடாவிற்கு வந்தன? ஒரு குறிப்பிட்ட பகுதியில் வாழும் உயிரினங்கள் மற்ற பகுதிகளுக்கும் தங்கள் வாழிடப் பரப்பை விரிவுபடுத்துகின்றன. இது வாழிட விரிவாக்கம் எனப்படுகிறது. ஒரு உயிரினம் அதன் இயல்பான புவி வாழிடத்தில் இருந்து வேறு ஒரு வாழிடத்திற்கு தங்கள் வாழ்வின் சுற்றுப்புறத்தை விரிவுபடுத்துவதையே இது குறிக்கிறது.
பல சமயங்களிலும் உயிரி ஆக்ரமிப்பு என்ற ரீதியில் பல உயிரினங்கள் படர்ந்து வளர்ந்து நிறைந்து தனது இயல்பான வாழிடத்தில் காலம்காலமாக வாழும் உள்ளூரைச் சேர்ந்த உயிரினங்களை அழிக்க முயல்வதுண்டு. உலகச் சுற்றுச்சூழல் வரலாற்றில் இதற்கு வெங்காயத் தாமரை, ஆப்பிரிக்க ராட்சச நத்தை, பழுப்பு மரப்பாம்புகள் போன்ற பல எடுத்துக்காட்டுகள் உள்ளன.
ஆனால் இது போன்ற எல்லா உயிரினங்களும் ஆக்ரமிப்பு உயிரினங்களாக இருப்பது இல்லை. குடியேறிய வாழிடச் சூழலை சொந்தச் சூழல் போல கருதி அதைப் பாதுகாக்கும் உயிரினங்களும் உள்ளன. இது எந்த விதத்திலும் சூழலிற்குப் பாதிப்பை ஏற்படுத்தாத உயிரினமாக உள்ளது.
அபுதாபி சூழல் முகமையில் (Environment Agency EPA) பூச்சியியல் நிபுணர் டாக்டர் அனிதாவின் பரிந்துரை இந்த வண்ணத்துப்பூச்சிக்கு அபுதாபியில் பாஸ்போர்ட் கிடைக்க உதவியது. இதனைத் தொடர்ந்து கிரனுக்கு ஐக்கிய அரபு எமரேட்டில் இந்த வகை வண்ணத்துப்பூச்சிகள் முன்பு காணப்படவில்லை என்ற அதிகாரப்பூர்வமான உறுதிப்படுத்துதல் கிடைத்தது.
ஆனால் இது பதிவு செய்யப்பட வேண்டுமென்றால் அபுதாபியில் இவை இனப்பெருக்கம் செய்கின்றன, அங்குள்ள சூழலுடன் பொருத்தப்பட்டு வாழ்கின்றன என்பதை ஆதாரங்களுடன் நிரூபிக்க வேண்டும். இவற்றின் வாழிடத்தை அடையாளம் காண்பது கடினம். இவற்றிற்கு வாழ்வு தரும் விருந்தோம்பி தாவரத்தை (host plant) கண்டுபிடிப்பதே இதில் முதல் படி. கிரனுக்கு இதற்கான தீர்வு நண்பர்களிடம் இருந்து கிடைத்தது.
எண்ணெய் மரத்தின் இலைகள்
எண்ணெய் மரம் என்று அழைக்கப்படும் மிலேட்டியா பீனாட்டா (millettia pinnata) என்ற செடியின் இலைகளே லார்வாக்களின் முக்கிய உணவு. இது பொங்கம் மரம் (pongam) என்றும் அறியப்படுகிறது. இத்தாவரம் ஐக்கிய அரபு எமரேட்டில் குடியிருப்பு மற்றும் சாலையோரங்களில் வளர்க்க இறக்குமதி செய்யப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
இது துபாய் தாவரவியல் சவுக் (plant souq) தோட்டத்திலும் உள்ளது. பூங்காவில் வண்ணத்துப்பூச்சி கண்டுபிடிக்கப்பட்ட இடத்துடன் சேர்ந்து இந்த செடியின் நான்கு மரங்கள் இருப்பது தெரிந்தது. ஆனால் இலைகள் தலைக்கு மேல் உயரத்தில் இருந்தன. இதனால் இதை கிரனால் நுணுக்கமாக ஆராய முடியவில்லை.
இடத்தை அடையாளப்படுத்திய கிரன் மறுநாள் முயற்சியைத் தொடர்ந்தார். திடீரென்று எங்கிருந்தோ இரை பிடிக்க வந்த குளவி ஒன்று (wasp) மடங்கியிருந்த இலையைச் சுற்றிலும் எதையோ தேடியது. சாதாரணமாக வண்ணத்துப் பூச்சிகளின் லார்வாக்களைப் பிடிக்க அல்லது அவற்றின் உடலில் துளை போட்டு முட்டையிடவே இரை பிடிக்கும் உயிரினங்கள் இவ்வாறு திரிவதுண்டு.
யுரேகா நிமிடம்
இலையில் ஒரு புழுவின் நிழலை கிரன் பார்த்தார். இலை உயரத்தில் இருந்ததால் அதைப் பறிக்க அவரால் முடியவில்லை. உயரமான ஒருவர் அந்தச் செடியின் கிளையை உடைத்துக் கொடுத்தார். வீட்டிற்குச் சென்று பரிசோதித்தபோதுதான் வண்ணத்துப்பூச்சியின் லார்வாதான் அது என்பது உறுதியாயிற்று. உண்மையில் அது கிரனின் வாழ்வில் ஒரு யுரேக்கா நிமிடம்.
இதன் மூலம் இந்த வகை வண்ணத்துப்பூச்சிகள் ஐக்கிய அரபு எமரேட்டில் இனப்பெருக்கம் செய்து வாழ்கின்றன என்பதை கிரன் நிரூபித்தார். இதன் லார்வாக்களைக் கண்டுபிடிப்பது கடினமான செயல். பகல் நேரத்தில் இலைகளை மடக்கி ஒளிந்து கொண்டிருக்கும் லார்வாக்கள் இரவில் மட்டுமே உணவு உண்ண வெளியில் வருகின்றன. இரண்டு இலைகளைச் சேர்த்து ஒட்டி வைத்திருக்கும் இவை ஒளிந்திருக்கும் இடம் சாதாரணமாக கண்ணில் படுவதில்லை.
ஆபத்து என்று உணர்ந்தால் கீழே இருக்கும் புல்வெளிப் பரப்பில் விழுந்து தப்பித்துக் கொள்ளும். ஒரு புதிய உயிரினம் தன் வாழிட எல்லையை அரேபிய வளைகுடாப் பகுதிக்கு விரிவுபடுத்தியிருக்கிறது என்பதை இது எடுத்துக் காட்டியது. வண்ணத்துப்பூச்சியை கிரன் அபுதாபி சுற்றுச்சூழல் முகமையில் டாக்டர் அனிதாவுக்கு அனுப்பி வைத்தார். முகமையில் இருந்து இதன் ஸ்பெசிமன் மரபணு பரிசோதனைகளுக்காக வெளிநாட்டு ஆய்வகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ஆய்வு முடிவுகள் கிரனின் கண்டுபிடிப்பை உறுதி செய்தது. முகமையின் ஸ்பெசிமன் சேகரிப்பில் இது அங்கீகாரம் பெற்ற வரலாற்றுப் பதிவாக மாறியது. ஹஸாரா க்ரோமஸ் (Hasara chromus) என்ற அறிவியல் பெயருடைய இந்த உயிரினத்தின் இனப்பெருக்கத்தை அரேபிய மண்ணில் முதல்முறையாக பதிவு செய்த பெருமை கிரனுக்குக் கிடைத்தது.
இது மிகப்பெரிய கண்டுபிடிப்பு என்று முகமையின் தரைவாழ் உயிரினங்கள் மதிப்பீடு மற்றும் பாதுகாப்புப் பிரிவின் மேலாளர் டாக்டர் சலீம் ஜேவ்ட் (Dr Salim Javed) கூறுகிறார். இதுவரை எமரேட்டில் உள்நாட்டிற்கு சொந்தமான மற்றும் குடிபெயர்ந்த ஐம்பது வகை வண்ணத்துப்பூச்சிகள் உள்ளன.
கிரன் போன்றவர்கள் சாதாரணமானவர்களிடம் இருந்து எதையும் வித்தியாசமாகப் பார்க்கும் இயல்புடையவர்கள். பார்க்கும் ஒவ்வொன்றைப் பற்றி முறைப்படி ஆராய முயல்கின்றனர். அது பற்றித் தெரிந்தவர்களைத் தொடர்பு கொள்கின்றனர். தீவிரமாக ஆராய்ந்து ஆதாரங்களுடன் புதிய உயிரினங்களைக் கண்டுபிடிக்கின்றனர்.
ஒவ்வொரு நாட்டின் உயிர்ப் பன்மயத் தன்மையின் செழுமைக்கு வளம் சேர்க்கின்றனர் என்று பினிஷ் ரூபஸுடன் இணைந்து ஐக்கிய அரபு எமரேட் வண்ணத்துப்பூச்சிகள் என்ற நூலை எழுதிய இணை முன்னணி ஆசிரியர் ஃப்யூல்னர் (Feulner) கூறுகிறார்.
காலநிலை மாற்றம், அதைத் தொடர்ந்து நிகழும் மாற்றங்கள் இந்த உயிரினங்களை வெகுவாகப் பாதிக்கிறது. ஆனால் இவற்றின் எண்ணிக்கையில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகள், குறைவு பற்றி துல்லியமான ஒரு நிகழ்நிரல் தரவுவிவரம் இல்லை. இந்த வகை உயிரினங்களை காலநிலை மாற்றத்தின் அடையாளமாகக் காண வேண்டும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர். ஒவ்வொரு இன வண்ணத்துப்பூச்சியின் லார்வாவும் ஒவ்வொரு குறிப்பிட்ட செடியின் இலைகளை மட்டுமே உணவாக உண்கின்றன.
உயிர்ப் பன்மயத்தன்மை அழிந்தால் அது இந்த உயிரினங்களின் அழிவிற்கு காரணமாகும். மிதமிஞ்சிய பூச்சிக்கொல்லிகளின் பயன்பாடு, காலம் தப்பிப் பெய்யும் மழை, கடுமையான கோடை, ஆக்ரமிப்பு உயிரினங்கள் போன்றவை இவற்றைப் பாதிக்கின்றன.
தனிமனித முயற்சிகள் இருந்தால் மற்றவர் கண்களுக்குப் புலப்படாத இயற்கையின் பல அதிசயங்கள் நம் கண்களுக்குத் தெரியும். கிரன் போன்றோரின் தேடல்களுக்கு வசதிகள் நிறைந்த ஆய்வுக்கூடங்கள் பரிசோதனைக் கருவிகள் தேவையில்லை. ஆராயும் மனப்பான்மை, ஆர்வம் இருந்தால் நாம் ஒவ்வொருவருமே இயற்கையை ஆராய்ந்து அதில் ஒளிந்துள்ள அற்புதங்களைக் கண்டறிய முடியும். இதன் மூலம் அழியும் இயற்கையை மட்டும் இல்லாமல் சூழல் பேரிடர்களில் இருந்து நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள முடியும்.
** ** **
&
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
இங்கிலாந்தில் தேவாலயங்கள் வௌவால்களுக்கு அடைக்கலம் தரும் இடங்களாக மாறியுள்ளன என்று ஆய்வுகள் கூறுகின்றன. வௌவால் காலனிகளால் ஏற்படும் சேதங்களை சரி செய்ய இங்கிலாந்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட வரலாற்றுப் புகழ்பெற்ற தேவாலயங்களுக்கு ஐந்து மில்லியன் பவுண்டு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
நுழைவாயில்
வடக்கு நார்ஃபெ (Norfolk) பகுதியில் உள்ள தோர்னம் (Thornham) உட்பட பெரும்பாலான தேவாலயங்களில் திருப்பலி நிகழ்வுகளுக்காக அமைக்கப்பட்டிருக்கும் சாயும் வசதியுடைய நீண்ட பெஞ்சுகளை இப்பகுதியில் அதிகமாகக் காணப்படும் பிபிஸ்ட்ரல் (pipistrelle) வகை வௌவால்கள் தங்கள் வீடாக்கிக் கொண்டுள்ளன. தேவாலயங்களில் சுவர்கள் சேரும் பகுதியில் இருக்கும் மூலை முடுக்குகள், சிறிய விரிசல்கள் இந்த சிறகுள்ள பாலூட்டிகளுக்கு நுழைவாயிலாக அமைந்துள்ளன.
பிபிஸ்ட்ரெலஸ் பிபிஸ்ட்ரெலஸ் (Pipistrellus pipistrellus) என்ற அறிவியல் பெயருடைய இவற்றின் உடல் பெருவிரல் அளவே உள்ளது. நாள்தோறும் வெதுவெதுப்பான மாலையில் இருள் படரும்போது இவை உத்திரங்களில் இருந்து வெளிவருகின்றன. “இந்த உயிரினங்கள் தேவாலயங்களை விரும்புகின்றன” என்று ஒரு தேவாலயத்தின் வார்டன் ஜானெட் நீடம் (Janet Needham) கூறுகிறார்.“தேவாலயம் வௌவால்களுக்கு பாதுகாப்பான இடமாக உள்ளது. அங்கு இவை முக்கிய உணவான பூச்சிகளை உணவாகப் பெறுகின்றன. எதிரிகளின் பயமின்றி இங்கு வாழ்கின்றன. மழையால் பாதிப்பு இல்லை. தேவாலயங்கள் இருள் நிறைந்தது. இதனால் இவை இங்கு விருப்பத்துடன் வாழ்கின்றன” என்று கிழக்கு ஆங்கிலியா (East Anglia) பகுதிக்கான தேவாலயங்களில் வாழும் வௌவால்களைப் பாதுகாக்கும் பொறுப்பு அலுவலர் டயானா ஸ்பென்சர் (Diana Spencer) கூறுகிறார்.
பாலிதீன் உறைகள்
தோர்னம் (Thornham) உட்பட இங்கிலாந்தில் உள்ள எல்லா செயிண்ட் தேவாலயங்களில் நீண்ட பெஞ்சுகளில் விழும் வௌவால்களின் கழிவுகள் பாலிதீன் உறைகளைப் பயன்படுத்தி சேகரித்து அகற்றப்படுகிறது. பழம் பெருமை மிக்க சில தேவாலயங்களில் இவற்றின் கழிவு மற்றும் சிறுநீரால் ஏற்பட்ட குழப்பம் தேவாலயங்களை மூடும் அச்சுறுத்தலை உருவாக்கியது.
கழிவுகள் பெருகின. தேவாலயங்களில் இருந்த இங்கிலாந்து நாட்டின் மறு உருவாக்கம் பற்றிய எட்டாவது ரோமன் காலத்தைச் சேர்ந்த பழமை மிகுந்த ஆவணங்கள் சேதமாகத் தொடங்கின. இந்நிலையில் தேவாலயங்களில் வௌவால்களைப் பாதுகாக்கும் திட்டத்தின் கீழ் (Bats in the Churches scheme) தோற்றுவிக்கப்பட்ட ஐந்து மில்லியன் பவுண்ட் நிதியுதவியிலிருந்து நிதி வழங்கப்பட்டது.
இத்திட்டம் 2019ல் தொடங்கப்பட்டது. நார்ஃபெல்க் பேனின்ஹம் (Banningham) பகுதியில் செயிண்ட் பாடல்ஃப்ஸ் (St Botolph) உள்ளிட்ட தேவாலயங்களில் வௌவால்களால் ஏற்பட்ட குழப்பம் அதிகரித்தது. இதனால் ஏற்பட்ட மனித விலங்கு மோதலால் உண்டான சேதத்தை சரிசெய்ய இத்திட்டம் உதவியது. “மக்கள் தேவாலயங்களில் வாழும் இந்த சிறிய உயிரினங்களை வெறுக்கவில்லை. அவற்றால் உருவாகும் குழப்பத்தையே விரும்பவில்லை” என்று ஸ்பென்சர் கூறுகிறார். கோடைகாலம் உச்சத்தில் இருக்கும்போதே இவை இனப்பெருக்கம் செய்கின்றன. அப்போது தேவாலயத்தில் வழக்கமாக மேற்கொள்ளப்படும் சேவைகளை நடத்துவது கடினமாக இருந்தது.
ஆனால் இப்போது வௌவால் பெட்டிகள், உயரத்தில் வெதுவெதுப்பாக சூடு தரும் வகையில் அமைக்கப்பட்டுள்ள உட்புறக் கூரைகள் போன்றவற்றால் இந்த இறகுள்ள பாலூட்டிகள் தேவாலயத்தின் முதன்மைப் பகுதிக்கு வருவது குறைக்கப்பட்டுள்ளது. வௌவால் பாதுகாப்பு நிதியைப் பயன்படுத்தி மிக மோசமாக பாதிக்கப்பட்ட தேவாலயங்கள் சுத்தப்படுத்தப்பட்டன.
வௌவால் பாதுகாப்பு அறக்கட்டளை, இங்கிலாந்தின் தேவாலயங்கள் அமைப்பு (The Church of England), இயற்கை இங்கிலாந்து (Natural England), வரலாற்று இங்கிலாது (Historic England) மற்றும் தேவாலய பாதுகாப்பு அறக்கட்டளை (The Churches Conservation Trust) ஆகிய ஐந்து அமைப்புகள் ஒன்றுசேர்ந்து இத்திட்டத்தை செயல்படுத்தி வருகின்றன. இதன் மூலம் இரண்டு தேவாலயங்கள் மூடாமல் பாதுகாக்கப்பட்டன.
ஒரு டஜனுக்கும் மேற்பட்ட பழமையான மேற்கூரைகள் இது வரை இத்திட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்டுள்ளன. தேவாலயங்களில் மகத்தான அரியவகை நீண்ட சாம்பல் நிற காதுகளைக் கொண்ட வௌவால் இனம் அழியாமல் பாதுகாக்கப்படுகின்றது. ஆயிரம் என்ற எண்ணிக்கையில் மட்டுமே வாழ்வதாகக் கருதப்படும் இவை இப்போது சம்மர்செட் (Somerset) தேவாலயத்தில் வாழ்வது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
விதானங்கள் மற்றும் பாதுகாப்பு உறைகள் சேதப்படாமல் இருக்க வெற்றிட சுத்திகரிப்பு கருவிகள், தூரிகைகள் போன்றவை இத்திட்டத்தின் கீழ் தேவாலயங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இதற்காக 743 தேவாலயங்கள் ஆய்வு செய்யப்பட்டதில் இங்கிலாந்தில் இருக்கும் 18 இன வௌவால்களில் 12 இனங்கள் இந்த இடங்களில் வாழ்வது கண்டுபிடிக்கப்பட்டது. எண்ணிக்கை குறைந்ததால் இவை சட்டப்படி பாதுகாக்கப்படுகின்றன. இதனால் இப்போது தேவாலயங்கள் தேசிய அளவில் வௌவால்களின் எண்ணிக்கை, வாழிடம் பற்றிய முக்கிய விவரங்களை தரும் இடங்களாக மாறியுள்ளன.
இதன் மூலம் கடந்த ஐந்தாண்டுகளில் இந்த உயிரினங்களைப் பற்றி மிக அதிக அளவில் அறிய முடிந்தது என்று ஸ்பென்சர் கூறுகிறார். மத்திய நூற்றாண்டு காலத்தைச் சேர்ந்த தேவாலயங்கள் அதிகம் உள்ள நார்ஃபெல்க்யில் குறிப்பாக தோர்னம் என்ற இடத்தில் சூழலியலாளர், வௌவால் தன்னார்வலர் மற்றும் தேவாலயங்களில் வௌவால்களின் நடவடிக்கைகளை ஆராயும் ஃபில் பார்க்கர் (Phil Parker) வௌவால்களின் எண்ணிக்கையை அறிய வௌவால் பெட்டிகளில் கேமராக்களைப் பொருத்தி ஆராய்ந்தார்.
பல நாட்கள் இவர் தேவாலயங்களில் இரவு முழுவதும் தங்கி ஆய்வுகளை நடத்துவதுண்டு. இங்கு உள்ள தேவாலயங்களில் சப்ரானோ பிபிஸ்ட்ரெல் (soprano pipistrel), long-eareds, பொது பிபிஸ்ட்ரெல் (common pipistrelles) மற்றும் செரட்டின்கள் (serotines) என்னும் நான்கு வகை வௌவால்கள் காணப்படுகின்றன. வளர்ச்சியடைந்தவை மேற்கூரைக்கு அருகில் உயரமாகப் பறக்கும்போது இளம் வௌவால்கள் பெஞ்சுகளின் மீது தாழ்வாகப் பறக்கும்.
புரிந்து கொண்டால் இந்த அற்புத உயிரினங்கள் நம் அருகில் வந்து அமர்ந்து நம்மைப் பார்க்கும். அருகாமையில் இவற்றைப் பார்ப்பதே இயற்கை நமக்கு அளிக்கும் மிகப் பெரிய மரியாதை. ஒரு காலத்தில் பாழடைந்த இடங்களில் மட்டுமே வாழ்ந்து வந்த இவை இன்று வாழிட அழிவு, வெப்ப உயர்வு போன்ற பல்வேறு காரணங்களால் மனித நடமாட்டம் அதிகமுடைய ஆலயங்கள் போன்ற இடங்களில் குடியேறி வாழத் தொடங்கி விட்டன.
சூழல் சமநிலையில் முக்கியப்பங்கு வகிக்கும் இவற்றை பாதுகாக்க இங்கிலாந்து தேவாலயங்கள் மேற்கொண்டுள்ள இந்த முயற்சிகள் உயிரினப் பாதுகாப்பில் உலகிற்கு ஒரு முன் மாதிரி.
- கொலையாளித் திமிங்கலங்கள்
- ஒரு மனிதன் ஒரு குளம் ஒரு சில தவளைகள்
- பூமிக்கு சம்பவிப்பது எல்லாம் பூமி புத்திரர்களுக்கும் சம்பவிக்கும்
- அழிவின் விளிம்பில் கானமயில்
- நஞ்சு உண்ணும் சீல்கள் மனிதருக்கு உதவுமா?
- அன்று வேட்டையாடும் கிராமம், இன்று காவல் கிராமம்
- இயற்கையின் ஆயுதங்கள்
- ஆழ்கடலில் ஓர் அதிசய உயிரினம்
- தாவரங்கள் பேசுகின்றன
- அழிவில் இருந்து மீண்டு வந்த வண்ணத்துப் பூச்சி
- திமிங்கல வேட்டை
- யானைகளுக்கு ஏன் புற்றுநோய் வருவதில்லை?
- யார் காப்பாற்ற வருவார் இந்த உயிரினங்களை?
- மீண்டும் பறக்குமா குவாமின் மீன்கொத்திப் பறவை?
- கடலின் மழைக் காடுகளைக் காப்பாற்றும் கலைச் சிற்பங்கள்
- கரடிகள்
- மண்ணிற்கடியில் ஒளிந்திருக்கும் விலையுயர்ந்த பூஞ்சை
- நுண் பிளாஸ்டிக் உண்ணும் நுண்ணுயிரிகள்
- ஆண் துணையில்லாமல் முட்டையிட்ட உலகின் முதல் கன்னி முதலை
- சிங்க வேட்டை