வனம் தணிந்து
பறவையெல்லாம்
வந்து மீண்டும் சேர்ந்திடனும்
தன் காட்டில்... தன் கூட்டில் ....
அகமகிழ்ந்து வாழ்ந்திடனும்

எட்ட நின்று சூசகமாய்
எரியவிட்டுப் பார்ப்போரெல்லாம்
எவ்வுயிரும் தம்முயிராய்
எண்ணும் மனம் பெறவேண்டும்

வயல் தூர்ந்து திடலான
நிலம் மீண்டும் செழித்திடனும்
இளம் நாற்றும் பூங்காற்றும்
உரையாடிக் களித்திடனும்

தத்தளிப்போர் கரைசேர
கரையிலுள்ள கல்நெஞ்சோர்
மனத்துடுப்பு இடவேண்டும்
தன் நாட்டில் தன் மக்கள்
உடனிருக்கும் நிலை வேண்டும்

வனம் தணிந்து
பறவையெல்லாம்
வந்து மீண்டும் சேர்ந்திடனும்
தன் காட்டில்... தன் கூட்டில்...!
அகமகிழ்ந்து வாழ்ந்திடணும்

- கவிஞர் இளம்பிறை

Pin It