கூரை வீடு பிடிக்குமெனக் கேட்ட ஷிவனிதா
அதன் உச்சியில் எப்போதும் ஒரு சேவலை
நிற்கச் சொல்லி
வளைந்திருந்த வாலின் மீது வானவில்லை தீட்டுகிறாள்.
தென்னை ஓலைகளின்
பின்னலை
தன் ஒற்றை ஜடையை ஒத்ததென உள்ளங்கைகளில்
செல்ஃபி எடுத்து
ஒளித்துக் கொள்கிறாள்.
பனையோலை குடில்களை கொஞ்சிவரும் வரை
அவற்றை பத்திரமாக்கும் பொறுப்பு என்
சட்டைப் பையினுடையது.
ஒற்றை நிலவை
நட்சத்திரங்களாய் சிதறச்செய்யும்
கூரையின் ஓட்டைகளை அதிசயிப்பவள்
சூரியனை மட்டும்
மொழிபெயர்க்க வேண்டாமென
அவ்வப்போது கோபித்துக் கொள்கிறாள்.
அணில் விளையாடும் விட்டத்திலிருந்து
தவறி விழுமென
குருவிக் குஞ்சுகளுக்கான பிரார்த்தனைகளை
சுமந்தபடியே பள்ளி செல்பவள்
பருவத்துக்கு ஏற்றபடி மறக்காமல் வேண்டிக் கொள்வாள்..
மழையில் நனையாதிருக்க ஒரு கூரையையும்
கூரை எரியாதிருக்க ஒரு மழையையும்.

- ந.சிவநேசன்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.