1995ஆம் ஆண்டில் மார்ச் மாதத்தில் ஒரு நாள் இலண்டன் பல்கலைக் கழகத்தின் வளர்ச்சித் திட்டத் துறையில் (Development Planning Unit) பொருளாதாரமும் அரசியல் கோட்பாட்டியலும் பட்ட மேற்படிப்பு (M.Sc. in Economics and Political Science) வகுப்பில் படித்துக் கொண்டு இருந்த இருபத்தைந்து மாணவர்களும் வியப்பில் மூழ்கி இருந்தனர். கடந்த ஆறு மாதங்களில் எப்பொழுதுமே ஒரு வகுப்பு கூடத் தவறாமல் அரை மணி நேரம் முன்னதாகவே வந்து, முதல் வரிசையில் அமர்ந்து, மிக்க ஆர்வத்துடன் பாடம் கேட்கும் சங்கர பாண்டி அன்று வகுப்புக்கு வராதது உடன் படிக்கும் மாணவர்களை மட்டும் அல்லா­மல், வகுப்பு எடுக்கும் ஆசிரியர்களையும் வியப்பில் ஆழ்த்தியது. ஆசிரியர்கள் ஒருவர் விடாமல் “சங்கர பாண்டிக்கு என்ன ஆயிற்று?” என்று விசாரித்தனர்.

அன்றைய வகுப்புகள் முடிந்த பின் இராபர்ட் சுதா (Robert Chutha) என்ற கென்ய நாட்டு மாணவனும், அலிசன் திர்க்கல் (Allyson Thirkell) என்ற இங்கிலாந்து மாணவியும், ஜி பும் ஹாங் (Gi Bum Hong) என்ற தென் கொரிய மாணவனும், கன்சாலோ ரியாஸ் (Gonzolo Rios) என்ற பெரு நாட்டு மாணவனும் சங்கர பாண்டியை நேரில் பார்த்து விசாரிப்பது என்று முடிவு செய்தனர். சங்கர பாண்டி கல்லூரியில் இருந்து 300 மீட்டர் தொலைவிலேயே இருந்த இந்திய இளம் ஆடவர்கள் கிருத்துவர் சங்கம் ((Indian YMCA = Indian Young Men Christian Association) நடத்திக் கொண்டு இருக்கும் விடுதியில் தங்கி இருந்தான். எட்டு நிமிடங்களில் நடந்து போய் விடலாம்.

நான்கு நண்பர்களும் அங்கு சென்று அவன் தங்கி இருக்கும் அறைக் கதவைத் தட்டினார்கள். சிறிது நேரத்தில் சங்கர பாண்டி கதவைத் திறந்தான். அவனைக் கண்டதும் நால்வருடைய முகங்களும் அதிர்ச்சியில் கருத்துப் போயின. அவனுடைய முகம் அழுது அழுது வீங்கியும் சிவந்தும் போய் இருந்தது. அவனுடைய நெருங்கிய உறவினர் யாராவது இறந்து போய் இருக்க வேண்டும் என்று அவர்கள் நினைத்தார்கள். சங்கர பாண்டி முகத்தைத் துடைத்துக்

கொண்டே வெளியே வந்து அனைவரையும் வரவேற்பு அறைக்கு அழைத்துச் சென்றான். அந்த விடுதியில் தங்கி இருக்கும் ஆணோ பெண்ணோ தங்கள் எதிர்பாலின நண்பர்களைத் தங்கள் அறைக்குள் அழைத்துப் பேசக் கூடாது என்றும், வரவேற்பு அறையில் சந்தித்துத் தான் பேச வேண்டும் என்றும் ஒரு விதியை விடுதியின் பொதுச் செயலாளர் முத்தையா கண்டிப்புடன் செயல் படுத்திக் கொண்டு இருந்தார். இந்தியாவில் இருந்து தங்கள் பெண்களை நம்பிக்கையுடன் வெளி நாட்டுக்கு அனுப்பும் பெற்றோர்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக இருப்பதற்கு இந்த விதி முதன்மையானது என்பது அவருடைய நிலைப்பாடு. வரவேற்பு அறைக்கு வந்ததும் நண்பர்கள் பதற்றத்துடன் என்ன நடந்தது என்று விசாரித்தனர்.

தனக்கு நண்பர், தத்துவ வழிகாட்டி, ஆசானாக விளங்கும் இரு பெண்கள் விமான விபத்தில் இறந்து விட்டதாகக் கூறி விம்மி விம்மி அழத் தொடங்கினான். சிறிது நேர அழுகைக்குப் பின் கன்சாலோ ரியாஸ், சங்கர பாண்டிக்கு மிக அருகில் சென்று அவன் முதுகைத் தடவிக் கொண்டே “எந்த ஒரு துன்பம் என்றாலும் அதைத் தாங்கிக் கொண்டு தானே ஆக வேண்டும்? மனதைத் திடப் படுத்திக் கொள்” என்று அன்புடன் கூற, மற்ற நண்பர்களும் அதையே கூறினார்கள். சிறிது நேர அமைதிக்குப் பின் நால்வரும் “அந்த இரு பெண்கள் யார்? அவர்கள் எப்படி விமான விபத்தில் சிக்கினார்கள்?” என்று முழு விரங்களைக் கூறுமாறு கேட்டார்கள். சங்கர பாண்டியும் கூறத் தொடங்கினான்.

நான் சிறு வயதில் ஒழுங்காகப் படிக்க மாட்டேன். மனம் போன போக்கில் திரிந்தும் விடலைப் பருவக் கோளாறினால் பெண்களைக் கேலி செய்து கொண்டும் இருந்தேன். நான் ஒன்பதாவது வகுப்பு படித்துக் கொண்டு இருந்த போது கலா, மாலா என்ற இரு பெண்கள் என் வகுப்பில் இருந்தனர். அவர்கள் இருவரும் மதுரை (கிழக்கு) தொடர் வண்டி நிலையத்திற்கு அருகே உள்ள ஒரு குடிசைப் பகுதியில் வாழ்ந்து கொண்டு இருந்தார்கள். மிகவும் நன்றாகப் படிப்பார்கள். உலக நடப்புகளைப் புரிந்து கொள்வதிலும் அபாரமான திறமைசாலிகள். அது மட்டும் அல்ல; பள்ளி நேரம் போக மிகுதி நேரங்களில் தங்கள் உடன் படிக்கும் மாணவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பார்கள். எங்கள் மொழியில் ‘கழுதைக்குத் தெரியுமா கற்பூர மணம்’ என்று ஒரு பழமொழி உண்டு. அதைப் போல் அவர்களுடைய பெருமை அறியாமல் நான் அவர்களைச் சீண்டி வந்தேன். அதே நேரத்தில் நான் சரியாகப் படிக்கவில்லை என்பதற்காக என் தந்தை கோபத்தில் என்னை மிகவும் பலமாக அடித்து விட்டார். அவர் ஒரு காவல் துறை அதிகாரி. அவர் அடியை என்னால் தாங்க முடியவில்லை. இச் செய்தி எங்கள் பள்ளியில் பரவி அனைவரும் என்னைக் கேலி செய்தார்கள். ஆனால் கலாவும் மாலாவும் ஆறுதல் கூறி எனக்குத் தனியாகப் பாடம் சொல்லிக் கொடுத்தார்கள். அன்று முதல் என் குறும்புத்தனம் முடிவுக்கு வந்தது. நான் நன்றாகப் படிக்கத் தொடங்கினேன். எனக்கு ஒரு செய்தி நன்றாகப் புரிந்தது, அதாவது படிப்பதும் படிக்காமல் கெட்டுப் போவதும் அவரவர்கள் கைகளில் தான் இருக்கிறது. பிறர் எவ்விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள் என்று. படிக்காத நான் நன்றாகப் படித்து ஆசிரியர்களிடம் நல்ல பெயர் எடுக்கத் தொடங்கி விட்டேன். அந்த இரு பெண்களையும் நான் நண்பர்களாக, தத்துவ வழிகாட்டிகளாக, ஆசான்களாக மனதார ஏற்றுக் கொண்டு விட்டேன்.

எங்கள் இந்தியச் சமூகத்தில் ஒரு மிகப் பெரிய நோய் உண்டு. அது தான் சாதி என்பது. பார்ப்பனர்கள் என்பவர்கள் மிக உயர்ந்த சாதி என்று சொல்லிக் கொள்வார்கள். எங்களைப் போன்ற சிலர் - சிலர் அல்ல பலர் சூத்திரர்கள் - இடைநிலைச் சாதியினர் இருக்கிறார்கள். கலாவும் மாலாவும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள். எங்களுக்கு எல்லாம் தொழில்கள் அது போலவே அமையும். அதாவது பார்ப்பனர்கள் உயர்நிலை வேலைகளைப் பெறுவார்கள்; எங்களைப் போன்றோர் இடைநிலை வேலைகளைப் பெறுவோம். தாழ்த்தப்பட்ட வகுப்பு மக்கள் கீழ் நிலை வேலைகளைச் செய்ய வேண்டும். இதற்கு எதிராக நடந்த நீண்ட நெடிய போராட்டங்களின் விளைவாக இடைநிலைச் சாதியினரிலும், தாழ்த்தப் பட்ட வகுப்பினரிலும் சிலர் உயர் நிலை வேலைகளைப் பெற முடிந்து இருக்கிறது. இதைக் கண்டு பொறாத பார்ப்பனர்கள் அதற்கு எதிராகப் பலவிதமான சதிச் செயல்களைச் செய்து கொண்டு இருக்கிறார்கள்.

கலாவும் மாலாவும் பள்ளியிலேயே மிகவும் அறிவுத் திறன் கொண்ட மாணவிகள் என்று பெயர் எடுத்து இருப்பது பார்ப்பனர்களுக்கு எரிச்சலாக இருந்தது. அவ்விருவரும் மற்ற ஒடுக்கப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கும் பாடம் சொல்லிக் கொடுத்து நன்றாகப் படிக்க வைப்பது அவர்களுக்கு மேலும் எரிச்­சலாக இருந்தது. பதின்மப் பருவத்தில் தோன்றும் ஆசை­களில் அவ்விருவரையும் மயக்கி, படிப்பில் கவனம் செலுத்த விடாமல் தடுக்க, அவர்கள் செய்த முயற்சிகள் அனைத்தும் தோல்வி அடையவே, பார்ப்பனர் கள் எரிச்சலின் உச்ச நிலையையே அடைந்து விட்டனர்.

எப்படியாவது அந்த இரு பெண்களின் வளர்ச்சியைத் தடுத்து நிறுத்தியே தீர வேண்டும் என்று முடிவு செய்து இருந்தார்கள் போலும். ஒவ்வொரு மாணவனுக்கும் பள்ளி இறுதித் தேர்வு வாழ்வின் முதன்மையான படிக்கல் அதில் பெறும் வெற்றி தோல்வி, அதில் பெறும் மதிப்பெண் தான் ஒருவனுடைய கல்விப் பயணத்தின் திசையை முடிவு செய்யும். அந்தத் தேர்வு வந்தது.

தேர்வு அறைக்குள் நுழையும் முன் ஒவ்வொரு மாணவ மாணவியையும் அவர்கள் தங்களுடன் ஏதாவது துண்டுச் சீட்டு வைத்துக் கொண்டு உள்ளார்களா என்று சோதித்துப் பார்க்கும் பழக்கம் இருக்கிறது. அதில் பெண்களைச் சோதித்துப் பார்க்கும் பணிக்கு பிரீத்தி சர்மா, ரேஷ்மா சேமையா என்ற இரு பார்ப்பன ஆசிரியைகள் வேறு பள்ளியில் இருந்து வரவழைக்கப் பட்டுப் பணி அமர்த்தப்பட்டு இருந்தார்கள். அவர்கள் அனைவரையும் பரிசோதித்து இருக்கைகளில் அமர அனுமதித்தார்கள். கலா மாலா இருவரை மட்டும் மிகக் கடுமையாகச் சோதித்தார்கள். அதாவது அவர்கள் இருவரையும் அனைவர் முன்னிலையிலும் உடைகளைக் களைந்து நிர்வாணமாக நிற்க வைத்து அதன் பின் அனுமதித்தார்கள்.

இதைச் சங்கர பாண்டி சொல்லிக் கொண்டு இருக்கும் போதே “இது என்ன அயோக்கியத்தனம்? ஒரு பெண் அதுவும் ஆசிரியையாக இருப்பவர் இத்தகைய கீழ்த் தரமான குற்றங்களையும் இழைக்க முடியுமா?” என்று அலிசன் திர்க்கல் தன்னை மறந்து கத்தி விட்டாள். அவர்களில் சற்று முரடன் என்று பெயர் பெற்ற இராபர்ட் சுதாவின் கண்களில் நீர் வழிந்து கொண்டு இருந்தது. மற்ற இரு நண்பர்களும் கருத்து கூற முடியாத அளவில் அதிர்ச்சி அடைந்து இருந்தார்கள். சங்கர பாண்டி தொடர்ந்தான்.

நானும் சில நண்பர்களும் ஆட்சேபம் தெரிவித் தோம். ஆனால் எங்களைப் புறம் தள்ளி விட்டு அந்த ஆசிரியைகள் அமைதியாகத் தங்கள் வேலையைச் செய்தனர். அவமானத்திலும் அதிர்ச்சியிலும் உறைந்து போன கலாவும் மாலாவும் தேர்வு எழுதாமலேயே வீட்டிற்குச் சென்று விட்டனர். தேர்வு முடிந்த உடன் நானும் சில நண்பர்களும் நேராக என் தந்தையைப் பார்த்து விவரத்தைக் கூறி அந்த ஆசிரியைகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டோம். முழு விவரத்தைக் கேட்ட அவர், அந்த ஆசிரியைகள் பார்ப்பனர்கள் என்று தெரிந்து கொண்ட உடன் நடவடிக்கை எடுக்கத் தயங்கினார். எங்களுக்கு அதிர்ச்சியாகவும் அவமானமாகவும் இருந்தது. அன்றிலிருந்து நான் தந்தை சொல் கேளாத முரடன் ஆகி விட்டேன். என் தந்தை என்னைப் பொறியியல் படிக்கச் சொன்னார். நான் பொருளாதாரம் படித்தேன். பட்டப் படிப்பு முடிந்த பின் பட்ட மேற்படிப்பு படிக்கச் சொன்னார். நான் படிக்க மறுத்து விட்டேன்.

அவமானத்தில் குன்றிப் போன கலாவும் மாலாவும் சில காலம் கழித்து அதிர்ச்சியில் இருந்து மீண்டார்கள். இனி முழு நேரமும் மக்களுக்குத் தத்தவப் பயிற்சி வகுப்புகள் நடத்த முடிவு எடுத்து அதன் படியே அம்பேத்கர் - பெரியார் தத்துவப் பள்ளி என்ற பெயரில் ஒரு பயிற்சிக் கூடத்தை நடத்தி வந்தார்கள். நான் பட்டப் படிப்பை முடித்த உடன் அவர்களுடன் போய்ச் சேர்ந்து கொண்டேன். என் தந்தை வேலைக்குப் போக வேண்டும் என்று சொன்னதையும் நான் கேட்கவில்லை. வேலைக்குப் போகா விட்டால் யார் திருமணம் செய்து கொள்வார்கள் என்று என் தந்தை கேட்ட போது இனி நான் பொதுச் சேவையில் காலம் கழிக்கப் போவதாகவும் திருமணம் செய்து கொள்ளும் உத்தேசம் இல்லை எனவும் சொல்லி விட்டேன். இவ்வாறு இருக்கும் நிலையில் தான் என் தந்தை இலண்டன் பல்கலைக் கழகத்தில் இந்தப் படிப்பு படிக்கச் சொல்லி வற்புறுத்தினார்.

கலா, மாலாவை ஓராண்டு பார்க்காமல் இருந்தால் என்னுடைய பொது வாழ்வு ஈடுபாட்டில் பிடிமானம் தளரும் என்று அவர் நினைப்பதாக என் தாயார் மூலம் நான் அறிந்து கொண்டேன். நான் ஒப்புக் கொள்ளவில்லை. ஆனால் இதைக் கேள்விப்பட்ட கலாவும் மாலாவும் நான் இலண்டன் பல்கலைக் கழகப் படிப்பை ஏற்பது நல்லது என்று அறிவுறுத்தினார்கள். தங்கள் பயிற்சிக் கூடத்தில் இலண்டன் பல்கலைக் கழகப் பட்டதாரி ஒருவர் இருந்தால் அது பயிற்சிக் கூடத்தின் மதிப்பை உயர்த்தும் என்றும், அதில் இணைந்து கற்கப் பலர் முன் வருவார்கள் என்றும் அவர்கள் கூறினார்கள். உடனே ஒப்புக் கொண்டு இப்பொழுது இங்கு வந்து படித்துக் கொண்டு இருக்கிறேன் என்று தன் பேச்சை முடித்தான்.

நண்பர்கள் நடுவில் ஓர் இறுக்கமான அமைதி நிலவியது. அமைதியை உடைத்துக் கொண்டு வாருங்கள் நாம் தேநீர் அருந்தலாம்“ என்று கூறி, சங்கர பாண்டி தன் நண்பர்களை உணவுக் கூடத்திற்கு அழைத்துச் சென்றான். தேநீர் அருந்திக் கொண்டு இருக்கும் போது கலாவும் மாலாவும் சென்ற விமானம் விபத்துக்கு உள்ளானதைப் பற்றி ஜி பும் ஹாங் விசாரித்தான். சங்கர பாண்டி அதைப் பற்றி விரிவாகக் கூறினான்.

முன் காலத்தில் இந்தியாவில் இருந்து அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளுக்கு உயர் கல்வி கற்கவோ, வேலை வாய்ப்பு பெறவோ பெரும்பாலும் பார்ப்பனர்களால் மட்டுமே முடிந்தது. பெரியார், அம்பேத்கர் ஆகியோரின் சீரிய முயற்சியினால் ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களுக்கும் அவ்வாய்ப்புகள் கிடைக்கத் தொடங்கி உள்ளன. இதைக் கண்டு வயிற் றெரிச்சல் கொண்ட பார்ப்பனர்கள், ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்கள் இது போன்ற வாய்ப்புகளில் ஊக்கம் பெற்று விடக் கூடாது என்று, அயல் நாட்டு வாழ்க்கையில் முதலில் நிம்மதி போய்விடும் என்றும், நம் பண்பாட்டை மறந்து விடுவோம் என்றும் பிரச்சாரம் செய்து பார்த்தனர். ஆனால் அவர்களுடைய பிரச்சாரத்தையும் மீறி ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்கள் தங்களுக்குக் கிடைத்த அயல் நாட்டு வாய்ப்புகளை விடாமல் பயன் படுத்திக் கொண்டனர்.

அயல் நாடுகளில் ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களின் எண்ணிக்கை பொருட்படுத்தத்தக்க அளவு உயர்ந்த பின், இந்தியாவில் கையாண்டு வரும் ஒடுக்குமுறை உத்திகளை அங்கும் நடைமுறைப்படுத்தத் தொடங்கினர். அதாவது தங்கள் ஆளுகைக்குக் கீழ் வரும் ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களைச் சரியாக வேலை செய்ய விடாமல் இடையூறு செய்வது, திறமை அற்றவர்கள் என்று பொய்யாக முத்திரை குத்துவது, மேலதிகாரிகளிடம் கோள் மூட்டி விடுவது போன்ற உத்திகளைக் கையாண்டனர். இதனால் அயல் நாடுகளில் வாழும் ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இந்தியர்கள், பார்ப்பனர்களுக்கு எதிராக ஒன்று திரள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விட்டது. ஆங்காங்கே பல குழுக்களும் தோன்றி விட்டன. அப்படித் தோன்றிய குழுக்களில் ஒன்று தான் சான் ஃபிரான்சிஸ்கோ நகரில் உள்ள அம்பேத்கர் கிங் படிப்பு வட்டம்.

இந்தியாவில் சாதியக் கொடுமைகளுக்கு எதிராகப் பெரும் போராட்டத்தை முன்னெடுத்துப் பல முனைகளில் வெற்றி கண்டவர் பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர். அமெரிக்காவில் இன ஒதுக்கலுக்கு எதிராகப் பெரும் போராட்டத்தை முன்னெடுத்து வெற்றி கண்டவர் மார்ட்டின் லூதர் கிங். இருவருமே வன்முறையைக் கையில் எடுக்காமல் அமைதி வழியில் உறுதியாகப் போராடி மாபெரும் வெற்றியைக் கண்டவர்கள். இந்த மாபெரும் போராளிகளின் பெயரில் உள்ள இந்த அமைப்பின் மூலம் தங்களைச் சுற்றி உள்ள மக்களுக்கு நாடு, இனம், மொழி என எந்த வேறுபாடும் பாராமல் ஒடுக்குமுறைக்கு எதிரான கருத்தியலைப் பரப்பும் பணியைச் செய்து கொண்டு இருக்கின்றனர். இதன் ஒரு பகுதியாக ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடும் சிறந்த போராளிகளை அழைத்து அங்கு உள்ள மக்களிடையே பேச வைக்கின்றனர். அந்த முறையில் சில நாட்களுக்கு முன்பு கலாவையும் மாலாவையும் அழைத்துப் பேச வைத்து இருக்கின்றனர்.

கலாவும் மாலாவும் மிகவும் இளையவர்களாக இருந்தாலும் உயர்ந்த அறிவுத் திறத்துடன் பேசுவதாக ஒரு கருத்து பரவி இருந்ததால் அவர்களுடைய பேச்சைக் கேட்பதற்குப் பெரும் கூட்டம் கூடி இருக்கிறது. மேலும் அவர்கள் பேசுவதாக மட்டும் இல்லாமல், கூட்டத்திற்கு வருபவர்கள் கேட்கும் வினாக்களுக்கு விடை அளிப்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்ததால் மாற்றுக் கருத்து கொண்டவர்களும் மிகுந்த எண்ணிக்கையில் வந்து இருக்கிறார்கள். முதலில் கலா பேசி இருக்கிறாள்.

சாதியக் கொடுமைகளின் முதன்மையான பிரச்சினையே சாதி அடிப்படையில் தொழில் அமைவது தான். திறமை இருக்கிறதோ இல்லையோ பார்ப்பனர்கள் உயர் நிலை வேலைகளை ஆக்கிரமித்துக் கொள் கிறார்கள். மற்ற வகுப்பு மக்களோ எவ்வளவு திறமை வாய்ந்தவர்களாக இருந்தாலும் அடுத்த நிலை வேலைகளைத் தான் பெற முடிகிறது. இவ்வாறு திறமை மிகுந்த ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்கள் கீழ் நிலை வேலைகளைச் செய்ய நேர்வதால் மனித வளம் கொடூரமான அளவில் வீணாகிறது. அதை விட ஆபத்தானது திறமைக் குறைவான பார்ப்பனர்கள் உயர் நிலை வேலைகளில் ஆக்கிரமிப்பது தான். அவர்களுடைய திறமைக் குறைவினால் உயர் நிலை வேலைகளில் நிகழும் சிறு தவறும் அனைத்து நிலைகளிலும் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி நாட்டின் முன்னேற்றத்திற்குப் பெரும் தடைகள் ஏற்படக் காரணமாகி விடுகிறது. இதைத் தவிர்க்க ஒரே வழி, பொதுப் போட்டி முறையை முற்றிலும் ஒழித்து விட்டுத் தனியார்த் துறை உட்பட அனைத்துத் துறைகளிலும் கீழ் நிi­லயில் இருந்து மேல் நிலை வரை அனைத்து நிலை வேலைகளையும் பார்ப்பனர்கள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தாழ்த்தப்பட்ட வகுப்பினர், பழங்குடி மக்கள், மத சிறுபான்மையினர் ஆகியோருக்கு அவரவர் மக்கள் தொகை விகிதத்தில் பிரித்துக் கொடுப்பது தான்.

கலா இவ்வாறு பேசிக் கொண்டு இருக்கும் பொழுது ஒருவர் இடைமறித்து வினாக்களைத் தொடுக்கத் தொடங்கினார். தொடுக்கப்பட்ட வினாக்களுக்குக் கலாவும் மாலாவும் மாறி மாறி விடை அளித்தார்கள்.

“பொதுப் போட்டியை ஒழித்து விட்டால் திறமை சாலிகளுக்கு வாய்ப்பு இல்லாமல் போய் நிர்வாகம் கெட்டுப் போய் விடுமே? நிர்வாகம் கெட்டுப் போனால் அனைத்தும் கெட்டுப் போகும் அல்லவா?”

“அப்படியா? சரி! அறிவும் திறமையும் ஏதோ ஒரு வகுப்பு மக்களுக்கு மட்டுமே உரியதா? அல்லது அனைத்து வகுப்பு மக்களுக்கும் உரியதா?”

“.........”

“இப்படி மவுனம் சாதித்தால் எப்படி? விடை கூறுங்கள். ”

“அனைத்து வகுப்பு மக்களுக்கும் உரியது தான். ”

“அது மாற்ற முடியாத இயற்கை நியதி என்பதையும் ஒப்புக் கொள்கிறீர்களா?”

“ம்“

“அப்படி என்றால் பொதுப் போட்டி முறையில் ஏன் அனைத்து வகுப்பு மக்களும் தேர்ந்து எடுக்கப் படுவது இல்லை?”

திறமைசாலிகள் மற்றும் கடுமையாக உi­ழப்பவர்கள் தான் தேர்ந்து எடுக்கப் படுகிறார்கள். தேர்ந்து எடுக்கப் படாதவர்களுக்குத் திறமை இல்லை என்றும் அவர்கள் கடுமையாக உழைக்கவில்லை என்றும் புரிந்து கொள்ள வேண்டும்“

“முன்னுக்குப் பின் முரணாக ஏன் பேசுகிறீர்கள்? அனைத்து வகுப்பு மக்களிலும் அனைத்து நிலைத் திறமை உடையவர்கள் இருப்பதாகவும், அது மாற்ற முடியாத இயற்கை நியதி என்றும் ஒப்புக் கொண்டீர்கள் அல்லவா? அந்த இயற்கை நியதியின்படி அனைத்து வகுப்பு மக்களும் அனைத்து நிலைகளிலும் தேர்ந்து எடுக்கப்பட வேண்டும் அல்லவா? அப்படி நடக்கவில்லை என்றால் போட்டி முறையில் ஏதோ சூது பின்னிப் பிணைந்து உள்ளது என்று புரிந்து கொள்வதில் இருந்து உங்களை எது தடுக்கிறது?”

“.........”

“உங்கள் மவுனம் பொதுப் போட்டி முறையில் சூது பின்னிப் பிணைந்து உள்ளதை உங்களால் மறுக்க முடியவில்லை என்பதையே காட்டுகிறது. அப்படிப்பட்ட சூது நிறைந்த முறையை ஒழித்துக் கட்டுவதில் என்ன தவறு?”

“நீங்கள் பேசுவது கற்பனை செய்யத் தான் நன்றாக இருக்கும். நடைமுறையாக்கி விட்டால் அதன் விளைவுகள் விபரீதமாக இருக்கும். ”

“அப்படியா? இந்தியாவில் தமிழ் நாட்டில் இட ஒதுக்கீடு முறை நன்றாகச் செயல்பட்டு இருக்கிறது என்பதையும், மற்ற மாநிலங்களில் குறிப்பாக வட மாநிலங்களில் முறையாகச் செயல் படுத்தப் படவில்லை என்பதையும் அறிவீர்கள் அல்லவா?”

“ஆம். அதற்காக நாங்கள் தமிழ் நாட்டு நண்பர்களைப் பல முறை கேலி செய்ததும் உண்டு. ”

“அப்படியா? மிக்க நன்றி. மற்ற மாநிலங்களை விட அனைத்துத் துறைகளிலும் தமிழ்நாடு வளர்ச்சி மிகுந்த மாநிலமாக உள்ளதே? எப்படி? மருத்துவத்

துறையை எடுத்துக் கொள்வோம். தமிழ் நாட்டில் அனைத்து வகுப்பைச் சேர்ந்தவர்களும் மருத்துவர் களாக உள்ளனர். மற்ற மாநிலங்களில் பெரும்பாலும் பார்ப்பனர்களும் மற்ற உயர் சாதியினருமே மருத்து வர்களாக உள்ளனர். இன்று உலகம் எங்கிலும் இருந்தும் மக்கள் சிகிச்சை பெறுவதற்காகத் தமிழ் நாட்டிற்கு வருகின்றனர். உயர் சாதிக் கும்பலினரே மருத்துவர்களாக உள்ள வட மாநிலங்களை நோக்கி யாருமே போவது இல்லை. இதில் இருந்து என்ன தெரிகிறது?”

“உயர் சாதியினரில் இருந்து மட்டுமே மருத்துவப் படிப்புக்கு மாணவர்களைத் தேர்ந்து எடுப்பதால் அவர்களில் உள்ள திறமைக் குறைவானவர்களையும் தேர்ந்து எடுத்தே தீர வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது என்பதும், இப்படிப் பட்ட திறமைக் குறைவானவர்கள் மருத்துவர்கள் ஆகிறார்கள் என்றும், அதனால் மருத்துவச் சிகிச்சையின் தரம் குறைகிறது என்றும் தெரிகிறது அல்லவா? ஆனால் தமிழ் நாட்டில் இட ஒதுக்கீடு செயல்படுத்தப்படுவதால், வட மாநிலங்களில் செய்வது போல் ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களிடையே உள்ள திறமைசாலிகளைப் புறம் தள்ளி விட முடிவது இல்லை. இதனால் தமிழ் நாட்டில் மருத்­துவப் பணியின் திறன் மிகுந்து வட மாநிலங்களில் இருந்து மட்டும் அல்லாமல் உலகின் பல பகுதிகளில் இருந்தும் மருத்துவச் சிகிச்சைக்காகத் தமிழ் நாட்டிற்கு மக்கள் வருகிறார்கள் என்று புரியவில்லையா? இந்தப் பட்டறிவு பொதுப் போட்டி மூலம் திறமைசாலிகளைத் தேர்ந்து எடுக்க முடிவது இல்லை என்றும், ஆகவே அது ஒழித்துக் கட்டப்பட வேண்டும் என்றும் உணர்த்த வில்லையா?”

“நன்றாக இருக்கிறதோ அதற்காக நாங்கள் பொதுப் போட்டி முறையை ஒழிக்க உங்களுடன் ஒத்துழைக்க வேண்டும் என்றா எதிர்பார்க்கிறீர்கள்? இது உங்களுக்கே வேடிக்கையாகத் தோன்றவில்லையா?”

“நமக்கு நல்லது அல்லது கெட்டது எது வேண்டுமானாலும் நாம் உழைத்துத் தான் பெற வேண்டும் என்றும் தெரியும்; பிறர் தந்து பெற முடியாது என்றும் தெரியும். நம் நலன்களுக்காக நாம் போராடுகிறோம். அதற்கான விழிப்புணர்வையும் பொதுக் கருத்தையும் ஏற்படுத்த முயல்கிறோம். மூன்று தலைமுறைக்கு முன் எங்கள் மக்கள் எழுதப் படிக்கவே தெரியாமல் இருந்தார்கள். ஆனால் இன்று நம்மில் பொறியாளர்கள், மருத்துவர்கள், நிர்வாக அதிகாரிகள் இன்னும் பல உயர் நிலைப் பணிகளில் இருக்கிறோம். அது மட்டும் அல்ல, பல முன்னேறிய வகுப்பு மக்களை விட நாங்கள் தான் திறமைசாலிகள் என்று பல இடங்களில் மெய்ப்பித்தும் இருக்கிறோம். இந்த உயர்வு எல்லாம் எங்கள் உழைப்பினால் கிடைத்ததே ஒழிய மற்றவர்கள் தந்து கிடைக்கவில்லை. ”

கேள்வி கேட்டவர் மவுனமாக அமர்ந்து விட்டார். அப்பொழுது ஒரு இந்தியர் தன் கருப்பின நண்பரின் காதில் ஏதோ கூற, அந்த நண்பர் எழுந்து நீங்கள் இந்து மதத்தை மட்டுமே எதிர்க்கிறீர்களாமே? கிருத்துவ இஸ்லாம் மதங்களை எதிர்த்துப் பேச அச்சப் படுவீர்களாமே?” என்று கேட்டார்.

உடனே மாலா “அது பொய் நாங்கள் அனைத்து மத மூட நம்பிக்கைகளையும் வெளிப்படையாகவே எதிர்க்கிறோம். எங்கள் மீது குறை சொல்லியே ஆக வேண்டும் என்று ஆசைப் படும் எங்கள் நாட்டு நண்பர்கள் இந்து மத எதிர்ப்பை மட்டுமே வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றனர். சரி! அது ஒரு புறம் இருக்கட்டும். உங்களுக்கு பெர்ட்ரண்ட் ரஸ்ஸலைத் (Bertrand Russel) தெரியுமா?”

“தெரியும்“

“அவர் ஏன் கிருத்துவ மதத்தை மட்டுமே எதிர்த்தார்? என்று உங்கள் இந்திய நண்பரைக் கேளுங்களேன். ”

“அவரை என்ன கேட்பது? எனக்கே தெரியும். அவர் வாழ்ந்த சமூகச் சூழலில் ஆதிக்கம் செலுத்தியது கிருத்துவ மதமே. ஆகவே அவர் கிருத்துவ மதத்தை மட்டுமே எதிர்த்தார். ”

“உங்களுக்கு தஸ்லிமா நஸ்ரினைத் தெரியுமா?”

நீங்கள் என்ன கேட்க வருகிறீர்கள் என்று புரிகிறது. அவர் ஏன் இஸ்லாம் மதத்தை மட்டுமே எதிர்த்தார் என்று தானே? அவர் இஸ்லாம் மதத்தினால் தான் பாதிக்கப் பட்டார். ஆகவே இஸ்லாம் மதத்தை மட்டும் எதிர்த்தார். ”

“அது போல நாங்கள் அதிகமாக - அதிகமாக என்பது சரியான சொல்லாக இருக்காது; கொடூரமாகப் - பாதிக்கப் படுவது இந்து மதத்தினால் தான். ஆகவே அதனை மற்ற மதங்களை விடக் கடுமையாக எதிர்க்க வேண்டி உள்ளது. ”

அந்தக் கருப்பின நண்பர் சிரித்துக் கொண்டே அமர்ந்து விட்டார். அப்பொழுது ஒருவர் எழுந்து ஈவேரா பிள்ளையார் சிலையை உடைத்தார். அதை நீங்கள் வரவேற்கிறீர்கள். ஆனால் நாங்கள் ஈவேரா சிலையையோ அம்பேத்கர் சிலையையோ உடைத்தால் மட்டும் ஏதோ மகா பாவம் செய்வது போல் கூக்குரல் இடுகிறீர்களே ஏன்?” என்று கேட்டார்.

“பெரியார் தன் கைக்காசு செலவு செய்து, பிள்ளையார் சிலையை வாங்குகிறார். பின் இந்தச் சிலையில் எந்த ஒரு அருளும் இல்லை ; ஆற்றலும் இல்லை; வெங்காயமும் இல்லை; இதற்குள் மந்திர சக்தி இருப்பதாகப் பொய்ப் பிரச்சாரம் செய்து வைத்து இருக்கிறார்கள்; இது வெறும் கல் தான்; இதை உடைப்பதனால் யாருக்கும் எந்தக் கெடுதலும் ஏற்படாது; இதோ பாருங்கள் உடைக்கிறேன், என்று கூறி விட்டு அனைவரும் அறிய அதை உடைக்கிறார். நீங்கள் என்ன செய்கிறீர்கள்? மற்றவர்கள் செய்து வைத்த சிலையை, ஏன் உடைத்தார் என்ற காரணம் தெரியாம லேயே, யாருக்கும் தெரியாமல் உடைத்து விட்டுப் போகிறீர்கள். நீங்களும் உங்கள் கைக்காசு செலவு செய்து பெரியார் சிலையையோ அம்பேத்கர் சிலையையோ வாங்கி, அதை ஏன் உடைக்கிறோம் என்று காரணம் சொல்லி, அனைவரின் முன்னிலையிலும் உடையுங்களேன். ”

அப்படிச் செய்தால் நீங்கள் சும்மா இருப்பீர்களா?”

“அதெப்படி சும்மா இருக்க முடியும்? ஏன் உடைக்கிறீர்கள் என்று நீங்கள் சொல்லும் காரணம் சரியாக இல்லை என்றால், அது சரியில்லை என்று எடுத்துக் காட்டத் தான் செய்வோம். ”

“நான் அதைக் கேட்கவில்லை . அது உங்கள் மனதைப் புண் படுத்தாதா? சிலை உடைத்தது தவறு என்று சண்டைக்கு வர மாட்டீர்களா?”

“அது வெறும் கல் தான் என்று எங்களுக்குத் தெரியும். ஆகவே நீங்கள் செலவு செய்து வாங்கிய சிலையை நீங்கள் உடைத்தால் அதற்கு நாங்கள் ஏன் சண்டைக்கு வரப் போகிறோம்?”

அது வெறும் கல் என்று புரிந்தும், அவ்வப்போது அந்தக் கல்லுக்கு நீங்கள் ஏன் மாலை அணிவித்துப் பூசை செய்கிறீர்கள்? நாங்கள் கடவுளுக்கு மாலை அணிவித்துப் பூசை செய்தால் மட்டும் கேலி செய்கிறீர்கள். இது முரண்பாடாக இருக்கிறதே?”

“நாங்கள் பெரியார் சிலைக்கும், அம்பேத்கர் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செய்வது உண்மை தான். அது மனித ஆற்றலுக்கு அப்பாற்பட்ட ஏதோ ஒன்று கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அல்ல. அவர்கள் நமக்கு ஆற்றிய பணிகளை நினைவு கொள்வதற்கும், அவர்கள் சொல்லி விட்டுச் சென்ற பாதையில் நடை போடுவதற்கான மன உறுதியை வலுப்படுத்திக் கொள்வதற்கும் தான். ஆனால் நீங்கள் என்ன செய்கிறீர்கள்? அந்தச் சிலைகளுக்கு மாலை அணிவிப்பதாலும், பூசை செய்வதாலும், மனித ஆற்றலுக்கு அப்பாற்பட்டு ஏதோ கிடைக்கும் என்ற நம்பிக்கையைத் திணித்தும் வளர்த்தும் மனித முயற்சிகளைச் சிதைக்கிறீர்கள். இது போல் மனித ஆற்றலுக்கு அப்பாற்பட்டு ஏதோ நடக்கும் என்ற நம்பிக்கைகளைத் திணிப்பதையும் வளர்ப்பதையும் தான் நாம் எதிர்க்கிறோம். ”

இவ்வாறு கலாவும் மாலாவும் விடை கூறிய பின் சிறிது நேரம் அமைதி நிலவியது. வேறு ஏதாவது வினாக்கள் உண்டா என்று கேட்ட போது அனைவரும் அமைதியாகவே இருந்தனர். அப்பொழுது ஒரு வெள்ளை இன அமெரிக்கர் எழுந்து, தான் கிருத்துவ மத நம்பிக்கை கொண்டவன் என்றும், ஆனால் இன ஒதுக்கலை ஏற்றுக் கொள்ளாதவன் என்றும் மார்ட்டின் லூதர் கிங் அவர்களின் விடுதலை உணர்வையும், வன்முறை தவிர்த்த அறவழிப் போராட்ட முறையையும் ஆராதிப்பவன் என்றும் கூறினார். அன்று இரு இளம் பெண்களின் பேச்சைக் கேட்டு அம்பேத்கர் பற்றியும், பெரியார் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆர்வம் ஏற்பட்டு இருப்பதாகவும், அவர்களுடைய பேச்சைக் கேட்க வாய்ப்பு அளித்த அம்பேத்கர் கிங் படிப்பு வட்டத்திற்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறி அமர்ந்தார். அவரைத் தொடர்ந்து சில கருப்பின அமெரிக்கர்களும் கலா, மாலா இருவரையும் பாராட்டி, நன்றி கூறி அம்பேத்கரையும் பெரியாரையும் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலை வெளியிட்டனர். பின் கூட்டம் முடிந்ததாக அறிவிக்கப் பட்டது.

இரண்டு நாட்கள் கழித்து கலாவும் மாலாவும் இந்தியாவிற்குப் புறப்பட்டார்கள். அவர்களுடைய பயணம் சான் ஃபிரான்சிஸ்கோவில் இருந்து புது தில்லிக்கும், அங்கிருந்து மதுரைக்கும் செல்லுமாறு திட்டமிடப்பட்டு இருந்தது. அவர்கள் புது தில்லிக்குப் போய்ச் சேர்ந்த பின் அங்கிருந்து மதுரைக்குப் புறப்பட்ட விமானம் தான் விபத்துக்கு உள்ளாகி இருக்கிறது.

சங்கர பாண்டியின் நண்பர்கள் இவ்வளவு விவரங்களையும் கேட்டு விட்டு, அவனுக்கு எப்படி ஆறுதல் சொல்வது என்று தெரியாமல் அமைதியாக இருந்தார்கள். அப்பொழுது விடுதியின் ஒலி பெருக்கியில் சங்கர பாண்டிக்கு ஒரு தொலைப் பேசி அழைப்பு வந்து இருப்பதாக அறிவிப்பு வந்தது. மன வலி பொறுக்க முடியாத நிலையில் இருந்த சங்கர பாண்டி மெதுவாகச் சென்று தொலைப் பேசியைக் கையில் எடுத்தான். தொலைப் பேசியில் “சங்கர பாண்டி! நான் மாலா பேசுகிறேன்“ என்ற குரலைக் கேட்டு அவன் அதிர்ச்சி அடைந்தான். அது இன்ப அதிர்ச்சியாகவே இருந்தாலும் அவனால் தொடர்ந்து பேச முடியாமல் தத்தளித்தான்; வெகு விரைவில் தன் உணர்வு நிலைக்குத் திரும்பிய அவன் மேற்கொண்டு விவரத்தைக் கேட்டான். கலாவும் மாலாவும் புது தில்லி விமான நிலையத்திற்குச் சென்ற போது, ஒருவர் தன் தந்தை மதுரையில் இறந்து விட்டதாகச் செய்தி வந்து அவரும் அவருடைய மனைவியும் அவசரமாக மதுரை செல்ல விமான நிலையத்திற்கு வந்து இருந்தார்கள். ஆனால் விமானத்தில் இடம் கிடைக்காமல் திண்டாடிக் கொண்டு இருந்தார்கள். இதைக் கேள்விப்பட்ட கலாவும் மாலாவும் தங்கள் இடத்தை விட்டுக் கொடுத்து அந்த இணையரின் பயணத்திற்கு வழி செய்து கொடுத்து இருக்கிறார்கள். அதனால் விமான விபத்தில் சிக்காமல் அவர்கள் தப்பித்து விட்டார்கள்.

மிக மிக ஆழ்ந்த துயரத்தில் மூழ்கி இருந்ததால் சங்கர பாண்டிக்கு இந்த மகிழ்ச்சியான செய்தி கேட்ட பிறகும், அந்தத் துயர மனநிலையில் இருந்து மீள ஓரிரு நிமிடங்கள் பிடித்தன. பின் முகத்தில் மகிழ்ச்சி பொங்க, தன் நண்பர்களைப் பார்த்து முழு விவரங்களையும் கூறினான். அவனுடைய நண்பர்களும் இனி கவலை இல்லாமல் ஓய்வு எடுத்துக் கொள்ளும்படி கூறி விட்டுச் சென்றார்கள்.

(இக்கதையில் தேர்வு எழுத வந்த மாணவிகளின் உடைகளை உருவிச் சோதனை செய்த நிகழ்வு அதீத கற்பனையாகத் தோன்றலாம். ஆனால் 15. 3. 2012 அன்று மத்தியப் பிரதேச மாநிலத்தில் நடந்த உண்மையான நிகழ்வு தான் இக்கதையில் புனையப்பட்டு உள்ளது. ஐயம் கொள்பவர்கள் இணையத்தில் சரி பார்த்துக் கொள்வதற்காகவே அந்த அருவருப்பான செயலைச் செய்த ஆசிரியை களின் பெயர்களே இக்கதையிலும் பயன்படுத்தப்பட்டு உள்ளது).

- வாலாசா வல்லவன்

Pin It